Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

நீலத்தாமரை - Page 19

neela-thaamarai

ரத்னம்:    உனக்குன்னு சுயமா ஒரு முடிவெடுக்கவும் தெரியாதா?

குஞ்ஞிமாளு:    (சிரித்தவாறு) என்னைப்போல உள்ளவங்க ஒரு முடிவு எடுத்து என்ன பிரயோஜனம்?

ஒரே நிசப்தம். ரத்னம் சிந்தனையில் ஆழ்ந்து விடுகிறாள்.

61

வாசல்.

அச்சுதன் நாயர் திண்ணையில்.

அம்மாவும், ஹரிதாசனும் வாசலில்.

ரத்னம் அங்கு வருகிறாள்.

“என்ன முடிவு பண்ணினீங்க?”

ஹரிதாசன்:     நாளைக்குப் புறப்படுவோம். அம்மா சொல்றாங்க நாளைக்கு நாள் நல்லா இருக்குதுன்னு.

ரத்னம்:    அச்சுதன்நாயர், குஞ்ஞிமாளுவோட வீட்ல சொல்லிடுங்க... ஒண்ணுமே சொல்லாம அங்கே இவளைக் கூட்டிட்டுப் போனா நல்லா இருக்காது. நான் இவளை எர்ணாகுளத்துக்குக் கூட்டிட்டுப் போறேன்.

ரத்னம் உள்ளே போகிறாள்.

62

றையில்.

ரத்னம் வர, அவளுக்குப் பின்னால் ஹரிதாசன்.

ஹரிதாசன்:     நமக்கு அங்கே வேற யாராவது வேலை செய்ய கிடைப்பாங்க. இவளை எதுக்கு தேவையில்லாம அங்கே கூட்டிட்டுப் போகணும்? அது நமக்கு சரிப்பட்டு வராது.

ரத்னம்:    (இலேசாக சிரித்தவாறு) அது பாவம் இல்லியா?

ஹரிதாசன்:     போறப்போ அவளுக்கு ஏதாவது கொடு. அது போதும்.

ரத்னம்:    எவ்வளவு கொடுக்கணும்?

ஹரிதாசன்:     பழைய புடவைகளை ஏற்கனவே கொடுத்திருக்கேல்ல! இப்போ பத்தோ இருபத்தஞ்சோ கொடு.

ரத்னம்:    அது போதுமா?

ஹரிதாசன்:     தாராளமா போதும்.

ரத்னம்:    அவள் செய்த சேவைக்கு என்னோட நாலு பழைய புடவைங்க, உங்களோட இருபத்தஞ்சு ரூபா. இது போதுமா?

அவள் சொன்னதை விரும்பாத ஹரிதாசன்:

“பிறகு என்னதான் கொடுக்கணும்னு சொல்ற, ரத்னம்? இந்த அளவுக்கு நாம கருணை காட்டினா போதும்னு நினைக்கிறேன்.”

ரத்னம்:    நமக்கு வேண்டியது கிடைச்சிருச்சுன்னா, இவங்களை எங்கேயாவது பார்க்க வேண்டிய சூழ்நிலை வந்தா என்னவோ போல இருக்கும்ல?

ஹரிதாசன்:     என்ன...என்ன சொல்ற நீ?

ரத்னம்:    எது சரி, எது சரியா இருக்காதுன்ற விஷயம்...

ஹரிதாசன்:     இவளுக்கு இங்கே ஏதோ கல்யாண ஆலோசனை வந்திருக்குன்னு நீயும் கேள்விப்பட்டிருப்பே இல்லே! நாம ஏன் தேவையில்லாம அவளை கஷ்டப்படுத்தணும்?

ரத்னம்:    ம்... அது ஒரு காரணம்! ஆனா, தாஸ் அத்தான் - நீங்க பயங்கர புத்திசாலி. க்ளவர்... ஒரு ஆபத்தும் உண்டாக்கல இல்ல? குற்றச்சாட்டு, சத்தியாகிரகம், மிரட்டல்... யு ஆர் க்ளவர்... வெரி வெரி க்ளவர்...

ஹரிதாசன்:     ரத்னம்... டோண்ட் டாக் நான்சென்ஸ்.

ரத்னம்:    நான் பல நேரங்கள்ல ஆண்களைப் பற்றி சிந்திச்சுப் பார்க்குறது உண்டு. சும்மா வாதத்துக்காக சொல்லட்டுமா?

ஹரிதாசன்:     படிச்ச விஷயத்தை எங்கே வைக்கணுமோ அங்கேயே நிறுத்திக்கணும். அதை விட்டுட்டு கண்ட இடத்துல தூசு தட்டி அதைப் பார்த்தா...

ரத்னம்:    என்ன சொல்றீங்க? இப்படி நினைச்சுப் பாருங்க... நம்மோட முதல் இரவு அன்னைக்கு நான் ஒரு கன்னிப்பெண் இல்லைன்னு தாஸ் அத்தான், உங்களுக்குத் தெரிய வருதுன்னு வச்சுக்கங்க... அப்ப நீங்க எப்படி நடப்பீங்க?

ஹரிதாசன் நடுங்கி நிற்கிறான்.

ரத்னம்:    அவ வேலைக்காரி. என்ன சொன்னாலும் சரின்னு கேட்கக் கூடிய அப்பாவிகள் சிலரும் இருக்கத்தான் செய்றாங்க. நான் சொல்றது உண்மைதானே? ‘உன் கனவில் ஒரு மொட்டு கருகினால் என் இதயத்தில் குருதி வழியும்’னு ஒரு கவிதை இருக்கே? நீங்கதானே அந்தக் கவிதையைச் சொன்னீங்க? அதை எழுதினதே நீங்கதானா?

ஹரிதாசன்:     இருக்கலாம் அதுக்காக?

ரத்னம்:    (சிரித்தவாறு) சும்மா கேக்குறேன்...

ஹரிதாசன்:     (குரலை உயர்த்தி) தேவையில்லாம என் தலையில ஏறி உட்காரலாம்னு நினைக்காதே.

ரத்னம்:    (கிண்டலாக) பணிவாகவும், அடிமையாகவும் இருக்குற தாசிகளை மட்டுமே நீங்க பார்த்திருக்கீங்க... (குரலை மாற்றி) யூ... மிஸரபில் ஹிப்போக்ரட்...

அவன் அவளின் கன்னத்தில் ஒரு அறை கொடுக்கிறான்.

அம்மாவின் குரல்:

“தாஸா!”

அம்மா அங்கு வருகிறாள்.

ஒரே நிசப்தம்.

சில நொடிகளுக்குப் பிறகு

ஹரிதாசன்:     அம்மா... நான்...

ரத்னம் கோபப்படவில்லை. வருத்தப்படவும் இல்லை. அடி வாங்கிய பிறகும் வெற்றி பெற்றவளைப்போல அவள் நின்றிருக்கிறாள்.

அம்மா:    (மெதுவான குரலில்- யாருக்கும் கேட்காமல்) இப்பவே இப்படி சண்டை போட ஆரம்பிச்சிட்டீங்கன்னா, பின்னாடி இது எதுல போய் முடியும் தெரியுமா?

இரண்டு பேரும் வாய் திறக்காமல் மவுனமாக நின்றிருக்கிறார்கள்.

அம்மா:    நான் வீட்டை பூட்டிட்டு, உங்க கூட வந்துறப்போறேன். வேலைக்காரங்க விஷயத்தைப் பற்றி யாரும் இங்கே ஒரு வார்த்தை கூட பேசக் கூடாது. ரெண்டு பேருக்கு சமையல் பண்ணிப் போட இப்போக்கூட என்னால முடியும்.

அம்மா வெளியே போவதற்காக ஏணியில் இறங்க ஆரம்பிக்கும்போது, ஏணிக்குக் கீழே குஞ்ஞிமாளு நின்று கொண்டிருப்பதைப் பார்க்கிறாள். மேலே நடந்த சண்டை அவள் காதிலும் விழாமல் இல்லை. அம்மா ஏணியில் இறங்குகிறாள்.

அம்மா இப்போது சமநிலை அடைந்த மனதுடன் இருக்கிறாள். கீழே அம்மாவும் குஞ்ஞிமாளுவும்.

அம்மா:    குஞ்ஞிமாளு, நான் இவங்க கூட போறேன். நீ உன் வீட்டுக்குப்போ. எப்போதாவது ஆள் தேவைப்படுதுன்னு வர்றப்போ, நான் அச்சுதன் நாயரை அங்கே அனுப்பி வைக்கிறேன். இன்னைக்கு கணக்கு எவ்வளவுன்னு பார்த்து தீர்த்திடுவோம்.

குஞ்ஞிமாளுவின் பதில் என்ன என்பதையே எதிர்பார்க்காமல் அம்மா சமையலறைப் பக்கம் போகிறாள்.

63

காலை நேரம்.

சமையலறைக்கு வந்த ரத்னத்தினம்-

அம்மா:    அந்தப் பொண்ணைக் காணோமே! போயிட்டாளா என்ன?

ரத்னம்:    ராத்திரி ஒண்ணுமே சொல்லல. காலையில போறதா இருந்தா, ஒரு வார்த்தை சொல்லாம போக மாட்டா.

அம்மா:    அவளோட துணியும், சாமான்களும் இங்கேதான் இருக்கு. காசு கூட இன்னும் வாங்கல.

ரத்னம்:    அப்படின்னா குளிக்க போயிருப்பா.

அம்மா:    பாத்திரங்களை தேய்ச்சிப் போட்டுட்டு, தண்ணீர் நிரப்பி வச்ச பிறகுதான் பொதுவா அவ குளிக்கப் போவா.

ஒரு சத்தம்:

“அம்மா...”

முற்றத்தில் காளி நின்றிருக்கிறான்.

அங்கிருந்தவாறே-

காளி:     கோயில் குளத்துல ஒரு பெண்ணோட பிணம் மிதக்குதாம்.

அம்மாவும், ரத்னமும் நடுங்கிப் போகிறார்கள்.

ரத்னம் நடுக்கத்தை கட்டுப்படுத்திக் கொண்டு உள்ளே போகிறாள். படுக்கையை விட்டு எழுந்து வந்த ஹரிதாசன் முன்னால் அவள் நிற்கிறாள்.

ரத்னம்:    உங்களுக்கு விஷயம் தெரியுமா?

ஹரிதாசன்:     என்ன?

ரத்னம்:    கோயில் குளத்துல ஒரு பெண் பிணம் மிதக்குதாம்.

ஹரிதாசன்:     (பதைபதைப்புடன்) யார்? யார் பிணம்?

ரத்னம்:    (பரபரப்பை மறைத்துக் கொண்டு) கொஞ்சம் விசாரிச்சுப் பாருங்க. படிச்சவங்க எப்பவும் எச்சரிக்கையா இருப்பாங்கன்னு நான் நினைச்சேன். தாஸ் அத்தான், உங்க விஷயத்துல ஏதோ தப்பு நடந்திருச்சோ?

அவன் அதற்கு என்ன பதில் வைத்திருக்கிறான் என்பதை எதிர்பார்க்காமலே அவள் உள்ளே போகிறாள்.

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version