Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

நீலத்தாமரை - Page 12

neela-thaamarai

பகல்:

ஹரிதாசன் அறையில் அவளை எதிர்பார்த்து உட்கார்ந்திருக்கிறான்.

குஞ்ஞிமாளு அங்கு வருகிறாள். அவன் அவளை இறுக கட்டிப்பிடித்து தன்னுடன் இருக்க வைக்க முயல்கிறான். அவள் அவன் பிடியை விட்டு, விலகி நிற்கிறாள்.

“அய்யோ... அம்மா எப்போ கூப்பிடுவாங்கன்னே சொல்ல முடியாது!”

அவன் மீண்டும் அவளைக் கட்டிப் பிடிக்க முயற்சிக்கிறான்.

குஞ்ஞிமாளு:    வேண்டாம்... இப்போ எதுவுமே வேண்டாம்.

ஹரிதாசன்:     பிறகு எப்போ?

அவள் விலகி நின்று தலை குனிந்தவாறு புன்னகைக்கிறாள்.

ஹரிதாசன்:     இனி வேலை விஷயம் வேற சரியாக வேண்டியதிருக்கு. அதுக்கு உன் கையில ஏதாவது ஸ்பெஷல் வழிபாடு இருக்கா என்ன?

குஞ்ஞிமாளு:    நான் கடவுள்கிட்ட வேண்டுகிறேன் (சிறிது நிறுத்தி) ஒரு ரூபா தர்றீங்களா?

ஹரிதாசன்:     எதுக்கு?

குஞ்ஞிமாளு:    தேவைப்படுது.

அவன் சுவரில் தொங்கிக் கொண்டிருந்த தன்னுடைய சட்டை பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுக்கிறான். அவளிடம் ஐந்து ரூபாய் நோட்டு ஒன்றை நீட்டுகிறான்.

குஞ்ஞிமாளு:    இது எனக்கு எதுக்கு? ஒரு ரூபா போதும்.

ஹரிதாசன் ஒன்றுமே புரியாமல் அவளைப் பார்க்கிறான். அடுத்த நிமிடம் ஒரு ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து அவளிடம் தருகிறான். அவள் திரும்பி நடக்க முயல-

ஹரிதாசன்:     (மெதுவாக) ராத்திரி...

அவனின் குரல் அவள் முகத்தில்-

தெளிவற்ற நிலையிலிருந்த தெளிவான நிலைக்கு வரும் தாமரைக் குளம். அதில் ஒரு சிறிய நீலத்தாமரை.

கரையில் குஞ்ஞிமாளு.

அதிகாலை நேரம்.

குஞ்ஞிமாளு கண்களை மூடி தொழுகிறாள்:

“கடவுளே!”

அவளுக்கு நிம்மதி. திரும்பி நடக்க முயலும்போது, அவளுக்கு முன்னால் அம்மிணி. அம்மிணியின் முகத்தில் இலேசான கவலை தெரிகிறது. குஞ்ஞிமாளுவின் முகத்தில் மகிழ்ச்சியும் புன்னகையும்.

அம்மிணி: உன்னோட பிரார்த்தனை எப்பவுமே பலிக்குமா?

குஞ்ஞிமாளு:    கடவுள் என்ன நினைக்கிறாரோ அது நடக்கும்.

அம்மிணி: நான் கடவுள்கிட்ட பிரார்த்தனை செஞ்சு பார்த்தேன். நான் நினைச்ச மாதிரி எனுக்கு எதுவுமே நடக்கல.

அவளின் குரலில் கவலை தெரிகிறது. அதைப் பார்த்து சிறிது கலக்கத்துடன் குஞ்ஞிமாளு!

“என்ன அம்மிணி?”

அம்மிணி: (தன் கவலையை அடக்கிக்கொண்டு, புன்னகைத்தவாறு) ஒண்ணுமில்ல...

ஆலமரத்துக்குக் கீழே அமர்ந்திருக்கும் கிழவர் என்னவோ முணுமுணுத்துக் கொண்டிருக்கிறார்.

கிழவர்:    நளினீதலகதஜலமதி தரளம்

                        தத்வஜ்ஜீவித மதிசயசபலம்

                        வித்திவ்யாத்யமிமானக்ரஸ்தம்

                        லோகம் சோகஹதம் ச சமஸ்தம்

இளம்பெண்கள் அருகில் வந்ததும் தான் சொல்லிக் கொண்டிருக்கிற சுலோகத்தை அவர் நிறுத்துகிறார். அவர்களையே அர்த்தம் நிரம்பிய பார்வையுடன் உற்று நோக்குகிறார். என்னவோ சொல்ல நினைத்த அவள், அதைச் சொல்லாமல் ஒதுக்கி வைத்து, ‘ஒன்றுமில்லை’ என்ற அர்த்தத்தில் தலையை ஆட்டியவாறு தனக்குத்தானே ஏதோ சிந்தனையில் ஆழ்ந்து போகிறார்.

39

வாசல் திண்ணையில் சாய்ந்து உட்கார்ந்தவாறு புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறான் ஹரிதாசன். வாசலில் ஈரத் துணிகளை காயப் போட்டுக் கொண்டிருக்கும் குஞ்ஞிமாளுவை இங்கிருந்தே அவனால் பார்க்க முடிகிறது. அவளைச் சிறிது நேரம் உற்றுப் பார்த்த அவன் மீண்டும் புத்தகம் படிப்பதில் ஈடுபடுகிறான். அவள் அவனைக் கடந்து நடந்துபோகும்போது அவன் கடைக் கண்ணால் அவளைப் பார்க்கிறான். அவனின் மடியில் ஒரு நீலப் பூ விழுகிறது. அவன் வியப்புடன் அதைப் பார்த்துக் கொண்டிருக்க, திரும்பிக்கூட பார்க்காமல் அவள் நடந்து உள்ளே செல்கிறாள்.

அவன் அந்த மலரைக் கையால் எடுத்துப் பார்க்கிறான். (முகர்ந்து பார்க்கவில்லை) பிறகு என்னவோ நினைத்தவாறு அவன் புன்னகை தவழ அந்த மலரைப் புத்தகம் கொண்டு மூடுகிறான்.

அப்போது படியைக் கடந்து வரும் கருப்பு நிற இளைஞனை அவன் பார்க்கிறான். அந்த இளைஞனின் காலில் செருப்பு கிடையாது. மடித்துக் கட்டப்பட்ட வேஷ்டியும், அரைக் கைச் சட்டையும் அணிந்திருக்கிறான். கிராமிய மணம் அவனின் தோற்றத்தில் தெரிகிறது.

அவன் ஹரிதாசனுக்கு அருகில் வந்து நிற்கிறான். அவனை ஹரிதாசன் ‘யார்’ என்ற கேள்வி மனதில் எழ பார்க்கிறான்.

அப்புக்குட்டன்:  நான் அக்கரையில் இருந்து வர்றேன்.

ஹரிதாசன்:     அப்படியா?

அப்புக்குட்டன்:  (கூச்சம் எதுவும் இல்லாமல்) என்னோட சொந்தக்காரப் பொண்ணு இங்கே வேலை பார்க்குது. நான் அதைப் பார்க்கணும்.

ஹரிதாசன்:     (அவனைக் கூர்ந்து பார்த்தவாறு) ம்...

அப்புக்குட்டன்:  எனக்கு நேரம் கிடைக்கிறதே பெரிய விஷயம். டவுண்ல பேக்கரியில வேலை பார்க்குறேன். நான் உடனே போய் ஆகணும். அதுக்கு முன்னாடி சில வீட்டு விஷயங்களைச் சரி பண்ண வேண்டியதிருக்கு...

ஹரிதாசன் எதுவுமே பேசாமல் அமைதியாக உட்கார்ந்திருக்கிறான்.

அப்புக்குட்டன்:  நான் உடனே கிளம்பணும்.

ஹரிதாசன் ஆர்வமே இல்லாமல் உள்ளே போகிறான்.

வந்திருக்கும் இளைஞன் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் கண்களால் அளந்தவாறு, தூசியைத் தட்டி திண்ணையில் அமர்கிறான்.

சமையலறையில்:

அம்மாவும் குஞ்ஞிமாளுவும்.

குஞ்ஞிமாளு:    எனக்கு இங்கே வேலை இருக்கு. அம்மா, நீங்க சொல்லி அனுப்பிடுங்க...

அம்மா:    போய் என்னன்னு கேளு. நீ பார்க்க முடியாதுன்னு நான் எப்படிச் சொல்ல முடியும்? (அன்பான குரலில்) ஒரு வேளை அந்த ஆளு உன்னைப் பொண்ணு பார்க்குறதுக்காக வந்திருக்கலாம்.

குஞ்ஞிமாளு:    (கொஞ்சம் கூட விருப்பமில்லாத குரலில்) யாரும் அப்படி என்னைப் பார்க்க வர வேண்டிய அவசியமில்ல...

அம்மா:    பொதுவா எல்லா பொண்ணுகளுமே ஆரம்பத்துல இப்படித்தான் சொல்லுவாங்க. போ... அவனுக்குச் சாயாவோ, வேற ஏதாவதோ கொடு, சாப்பிடுறதா இருந்தா சாப்பாடு போடு...

அம்மா வெளியே செல்கிறாள்.

40

வாசல். அப்புக்குட்டன் அமர்ந்திருக்கிறான். குஞ்ஞிமாளு அவனிடம் வருகிறாள். குஞ்ஞிமாளுவைப் பார்த்ததும், அவன் மனதில் ஒருவித திருப்தி உண்டாகிறது. அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் இலேசாகச் சிரித்தவாறு-

அப்புக்குட்டன்:  குஞ்ஞிமாளு, நான் உன்னைப் பார்க்கத்தான் வந்தேன்.

குஞ்ஞிமாளு:    ம்...

அப்புக்குட்டன்:  இங்கே நீ நல்லா இருக்கேல்ல?

அவள் ‘ஆமாம்’ என்று தலையை ஆட்டுகிறாள்.

அப்புக்குட்டன்:  ஆமா... இங்கே யார் யார் இருக்குறது?

குஞ்ஞிமாளு:    அதிகமா யாரும் கிடையாது. அம்மா... பிறகு அம்மாவோட மகன்.

அப்புக்குட்டன்:  ஓ... இப்ப பார்த்தேனே அந்த ஆளா?

இரண்டு பேரும் பேசாமல் அமைதியாக இருக்கின்றனர்.

அப்புக்குட்டன்:  அங்கே எனக்கு நாளொண்ணுக்கு பதினஞ்சு ரூபா சம்பளம். சில நேரங்கள்ல இருபது ரூபா கிடைக்கிறதும் உண்டு. ஆனா, இனி அந்த வேலைக்குப் போக வேண்டாம்னு கிழவி சொல்லுது.

குஞ்ஞிமாளு எதுவுமே பேசாமல் நின்றிருக்கிறாள்.

அப்புக்குட்டன்:  உன்னோட கருத்து என்னன்னு சொல்லு.

குஞ்ஞிமாளு வாய் திறக்காமல் இருக்கிறாள்.

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version