Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

நீலத்தாமரை - Page 15

neela-thaamarai

ரத்னம்:    அதுனால என்ன? ஆறரை மணி பஸ்ஸுக்குப் போனா போதும். ரூமுக்குப் போயி குளிச்சு ட்ரெஸ் போட்டுட்டு போறதுக்கு தாராளமா நேரம் இருக்கு.

உள்ளே நுழைந்து கொண்டிருக்கும் மாமாவைப் பார்த்ததும் ஹரிதாசன் எழுந்து நிற்கிறான்.

அப்புமேனன்:    நீ வந்துட்டியா? உட்காரு...

ரத்னம்:    போறேன்னு நிக்கிறாரு. நான்தான் சொன்னேன் நாளைக்குப் போகலாம்னு.

அப்புமேனன்:    கொஞ்சம் பிஸின்றது மாதிரிதான் காட்டிக்கணும். பிஸியாகவே இல்லைன்னாலும், அப்படி காட்டிக்கிறதுதான் இந்தக் காலத்துல ஃபேஷன்.

சிரித்தவாறு உள்ளே போகிறார்.

ரத்னம்:    இப்போ அவசரம் இல்லியே! வாங்க... மேலே போய் இருக்கலாம். ஸ்டீரியோல ஏதாவது நல்ல பாட்டு வச்சு கேட்கலாம்.

ஸ்டீரியோவில் இருந்து ஒரு இசை. பாதி கவனத்தைப் படிப்பதிலும், மீதி கவனத்தை இசையிலும் செலுத்தியவாறு ஹரிதாசன் தனியாக அமர்ந்திருக்கிறான்.

ரத்னம் அங்கு வருகிறாள். ஒரு நாற்காலியை எடுத்து அவனுக்கு மிகவும் நெருக்கமாகப் போட்டு அதில் அமர்ந்தவாறு ஸ்டீரியோவின் ஒலியைக் குறைக்கிறாள்.

ரத்னம்:    என்ன தீர்மானிச்சிருக்கீங்க?

ஹரிதாசன்:     மாமா எல்லா விஷயங்களையும் சொன்னாரு.

ரத்னம்:    உங்களோட முடிவு என்ன?

ஹரிதாசன்:     நேரம் வர்றப்போ சொல்றேன்.

ரத்னம்:    எனக்கு ஒண்ணும் அவசரமில்ல...

ஹரிதாசன்:     எனக்கும்தான். அத்தைதான். ரொம்ப அவசரப்படுறாங்க.

அத்தை அப்போது அங்கு வந்து மகளிடம்-

“தாசனுக்கு தெற்குப் பக்கம் உள்ளே படுக்கையை விரிச்சுப் போடு. குழந்தைங்க ரெண்டும் பக்கத்து அறையில கீழே விரிச்சுப் படுக்கட்டும். தெற்குப் பக்கம் காத்து நல்லா வீசும் (ஹரிதாசனிடம்) அவசரம் ஒண்ணுமில்ல. படுக்கணும்னு தோணுறப்போ படுத்தா போதும். உன்னோட மாமாவைப் பொறுத்தவரை பத்து மணி அடிச்சிட்டா, படுத்திடணும்... நாங்க படுக்குறதுக்கு கொஞ்ச நேரம் ஆகும்.

அத்தை வெளியே போகிறாள்.

ரத்னம்:    சீக்கிரம் எந்திரிச்சிடுவீங்களா? வேணும்னா அஞ்சுக்கோ அஞ்சரைக்கோ நான் வந்து எழுப்புறேன்.

ஹரிதாசன்:     எழுப்ப வேண்டிய அவசியமில்ல. சில நேரங்கள்ல நான் உறங்கவே மாட்டேன்.

ரத்னம்:    காதல் நோய்ல சிக்கிக்கிட்டவங்கதான் அப்படி இருப்பாங்க. நாம என்ன அப்படியா?

சிரித்தவாறு வெளியே செல்கிறாள்.

46

ரிதாசன் படுக்கையறையில்.

பெட்ரூமின் விளக்கொளி.

அவன் எழுந்து உட்காருகிறான். வேஷ்டியும், பனியனும் அணிந்திருக்கிறான். சிகரெட்டை எடுத்து பற்ற வைக்கிறான். சிகரெட்டைப் பிடித்தவாறு என்னவோ சிந்திக்கிறான். பிறகு... எழுந்து நிற்கிறான்.

மங்கலான வெளிச்சம்.

சாத்தப்பட்டிருக்கும் ஒரு சதவை அவன் திறக்கிறான். அறையில் இருக்கும் வெளிச்சத்தில் அவள் கட்டிலில் படுத்துக் கிடக்கிறாள்.

கீழே ஒரு படுக்கையில் இரண்டு குழந்தைகள். அவன் உள்ளே நுழைந்து கட்டிலுக்குப் பக்கத்தில் அமர்ந்து அவளை ஓசையில்லாமல் எழுப்புகிறான். அவள் கண்களைத் திறந்து பார்க்கிறாள்.

அறைக்கு வெளியே இருக்கும் பகுதிக்கு ஹரிதாசனும் ரத்னமும் வருகிறார்கள். அவர்கள் இருட்டில் நின்றிருக்கிறார்கள்.

ரத்னம்:    தாஸ் அத்தான், உங்களோட பழைய நோய் இன்னும் உங்களை விட்டு போகலியா? சின்ன வயசுல கனவுல நடக்குற பழக்கம்...

ஹரிதாசன்:     வா... அந்த ரூமுக்குப் போகலாம்.

ரத்னம்:    குழந்தைங்க எந்திரிச்சிடக் கூடாதுன்னுதான் நான் இங்கே வந்தேன். போங்க... போய் படுங்க.

ஹரிதாசன்:     நீயும் வா...

ரத்னம்:    அதுக்குன்னு நேரம் வரட்டும். தாஸ் அத்தான், போய் படுங்க. விருந்துக்கு இலை அறுக்குறப்போ யாராவது சமையலறைக்குள்ள நுழைஞ்சு திருட்டுத்தனமா திருடிச் சாப்பிடுவாங்களா?

அவள் திரும்பவும் அறைக்குள் போகிறாள். அவன் நிழலைப் போல தான் படுத்திருக்கும் அறையைத் தேடி போகிறான்.

47

கல்.

கிழக்கும்பாட்டெ வீட்டின் வாசலில் நின்றவாறு அப்புமேனனும் வேறு இரண்டு நடுத்தர வயது மனிதர்களும் விடைபெறுகிறார்கள். அச்சுதன்நாயர், திண்ணையில் குட்டி சங்கர மேனன்.

அப்புமேனன்:    தங்கச்சி, நான் வர்றேன். நாம இதுக்கு மேல விரிவா பேசுறதுக்கு என்ன இருக்கு? (உடன் இருப்பவர்களுடன் சிரித்தவாறு) பழைய காலமா இருந்தா ஹரிதாசன் கையில ரெண்டு வேஷ்டிகளைக் கொடுத்து நீ அங்கே அவனை அனுப்பி விட்டுடலாம். என்ன நான் சொல்றது சரிதானே? காலை சாப்பாடு முடிஞ்சு வேனிலோ காரிலோ அங்கேயிருந்து வந்திட வேண்டியதுதான். இங்கே விருந்து எதுவும் வேண்டாம். எதுக்கு தேவையில்லாம செலவு?

அதற்குப் பதில் உணர்ச்சிகள் குட்டிசங்கர மேனனின் முகத்தில் -

அப்புமேனன்:    சரி... நாங்க புறப்படுறோம்.

அவர்கள் எல்லோரும் படிகளில் இறங்குகிறார்கள் - குட்டி சங்கர மேனன் தவிர.

குட்டிசங்கரன்:  அது அவ்வளவு நல்லா இருக்காது.

அம்மா:    என்ன சொல்றீங்க?

குட்டி சங்கரன்: இங்கே விருந்து எதுவும் வேண்டாம்னா, ஹரிதாசன் என்ன சாதாரண ஒரு ஆளோட மகனா?

அம்மா:    ஹரிதாசன் கூடவே நீங்க போங்க. அங்கே பிரமாதமான விருந்து கிடைக்கும்.

குட்டிசங்கரன்:  (தயங்கிவாறு) வெளியே போக தாட்சாயணி சம்மதிக்க மாட்டா.

அம்மா உள்ளே போகிறாள்.

அம்மா உள்ளே நுழையும்போது, குஞ்ஞிமாளு திரும்பிப் போய்க் கொண்டிருப்பதைப் பார்க்கிறாள்.

அம்மா:    சாப்பாட்டுக்கு அரிசி போட்டுட்டியா குஞ்ஞிமாளு?

குஞ்ஞிமாளு:    (திரும்பியே பார்க்காமல்) ம்...

அம்மா:    கன்னுக்குட்டி தண்ணி, புல்லு, வைக்கோல் எதுவுமே சாப்பிடாம நின்னுக்கிட்டு இருக்கு. அதுக்கு என்ன ஆச்சு?

அவள் திரும்பிப் பார்க்கிறாள். அவளின் கண்கள் இலேசாக கலங்கியிருக்கின்றன.

குஞ்ஞிமாளு:    கொஞ்சம் கஞ்சித் தண்ணி குடிச்சிச்சே!

அம்மா:    ஆமா... உன் கண்ணுல என்ன?

குஞ்ஞிமாளு:    தீ ஊதுறப்போ புகை கண்ணுல பட்டுருச்சு...

அவள் வேகமாக திரும்பி நடக்கிறாள்.

48

குஞ்ஞிமாளு - கோவில் பகுதியில்.

ஆலமரத்துக்குக் கீழே கிழவர் படுத்துக் கிடக்கிறார்- கண்களைத் திறந்தவாறு. அவள் ஆலமரத்திற்கு அருகில் வந்து நிற்கிறாள்.

குஞ்ஞிமாளு: என்ன, உடம்புக்கு சரியில்லையா?

கிழவர் எழுந்து நிற்கிறார். 'ஒன்றுமில்லை' என்று தலையை ஆட்டுகிறார்.

கிழவர்:    உனக்கு விஷயம் தெரியுமா?

அவள் 'என்ன' என்பது மாதிரி பார்க்கிறாள்.

கிழவர்: பாகவதருக்கு நேற்று கொஞ்சமும் முடியாமப் போச்சு. தண்ணீர் கொடுத்து எழுந்து உட்கார வச்சா, ஒரு சத்தம் கூட வரல...

கிழவர் சொன்ன செய்தியைக் கேட்டதும், அவள் சிந்தனையில் மூழ்கிவிடுகிறாள்.

கிழவர்:    இனி பாக்கி இருப்பது நான் மட்டும்தான். சத்தம் வரலைன்னா, பாகவதர் செத்துப் போயிட்டாருன்னு அர்த்தம். எனக்கு பைத்தியம்தான் பிடிக்கும். முழு பைத்தியம்... அதுக்கு முன்னாடி(கைகளால் கூப்பியவாறு) என் கடவுளே... என் கடவுளே... என்னை அங்கே கூப்பிட்டுடு...

அவர் கைகளை உயர்த்தியவாறு அமர்ந்திருக்கிறார். அவள் நடக்கிறாள்- மனம் முழுக்க வேதனையுடன்.

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version