Lekha Books

A+ A A-

பாத்தும்மாவின் ஆடு - Page 25

paathummaavin aadu

உம்மா கேட்டாள்: “நீ எந்திருச்சிட்டியா?”

நான் சொன்னேன்: “நான் படுத்திருக்கேன். என்ன விஷயம்?”

உம்மா சொன்னாள்: “உன்கிட்ட காசு இருந்தா எனக்கு ஒரு ரூபா தா. யாருக்கும் தெரியக் கூடாது.”

“நேற்றுத்தானே நான் தந்தேன்?”

“அது எல்லாத்தையும் அப்துல்காதர் வாங்கிக்கிட்டான். அவன் தானே வீட்டைப் பார்த்துக்கறான்? எவ்வளவு விஷயங்களுக்கு செலவுக்குத் தரவேண்டியதிருக்கு! ஒவ்வொரு நாளுக்கும் எவ்வளவு ரூபா வேணும்னு நீ கொஞ்சம் யோசிச்சுப் பாரு...”

“நீங்க உங்க வேலையைப் பாருங்க. இதுக்கு மேல பேசினா நான் இப்பவே இங்கேயிருந்து கிளம்பிடுவேன்.”

உம்மா அதற்குப் பிறகு எதுவும் பேசவில்லை. நான் அசையாமல் படுத்திருந்தேன். சில நாட்களுக்கு முன்னால் நான் வந்தபோது நடந்த ஒரு சம்பவத்தை நினைத்துப் பார்த்தேன்.

அப்போது நான் இருந்தது, நான் எப்போதும் இருக்கக்கூடிய சிறிய வீட்டில்.

வந்தது ஒரு ஸ்பெஷல் காரில். கார் கட்டிடத்தின் முன்னால் வந்து நின்றதும், அங்கு ஆட்கள் கூடிவிட்டார்கள். நான் டாக்ஸி ஓட்டுநருக்கு நோட்டுகள் எண்ணிக் கொடுப்பதை எல்லாரும் பார்த்தார்கள்.

அன்று இரவு சாப்பாடு முடிந்து நான் படுத்திருக்கும்பொழுது அப்துல் காதரும் உம்மாவும் ஹனீஃபாவும் என்னிடம் வந்தார்கள். வந்த உடனே அப்துல் காதர் சொன்னான்: “அண்ணே… பணம் கையில இருந்தா இங்கே வைக்க வேண்டாம். அதை இங்கே தாங்க. திருடர்கள் யாராவது வருவாங்க. வந்து அடிச்சு கொன்னுடுவாங்க.”

நான் ஐந்நூறு ரூபாயை உம்மா பார்க்க, எண்ணி அவனுடைய கையில் தந்தேன். திருடர்கள் வந்து அடித்து கொல்லட்டும். பணம் போகாதே! எல்லாரும் திருப்தியுடன் அந்த இடத்தைவிட்டு நகர்ந்தார்கள். நான் நிம்மதியாகப் படுத்துக்கொண்டே ஒரு பீடியைப் பற்ற வைத்தேன். அப்போது யாரோ ஒரு ஆள் இருட்டில் வீட்டிற்குள் இருப்பதைப் போல் நான் உணர்ந்தேன். வெட்டரிவாளுடன் என்னைக் கொன்றுவிட்டு பணத்தை எடுத்துக்கொண்டு போவதற்காக வந்த திருடனாக இருக்குமோ? இலேசான பயத்துடன் நான் கேட்டேன்: “யார் அது?”

“நான்தான்டா” -உம்மா மெதுவான குரலில் சொன்னாள்: “யாருக்கும் தெரியாம நான் வந்தேன்.”

“என்ன விசேஷம்?”

“டேய், யாருக்கும் தெரியக்கூடாது” -உம்மா சொன்னாள்: “எனக்கு நீ இருபத்தஞ்சு ரூபா தா.”

உம்மாவாயிற்றே! பெற்று, பால் கொடுத்து, வளர்த்ததாகக் கூறும் தாய் ஆயிற்றே! நான் அந்த நிமிடமே இருபத்தைந்து ரூபாயை எடுத்துக் கொடுத்தேன். பிறகு நிம்மதியாக நான் உறங்கினேன். மறுநாள் முதல் கடன் வாங்குபவர்கள் வந்த வண்ணம் இருந்தார்கள். அதிகமாக வந்தவர்கள் பெண்கள்தான். எல்லாரும் முஸ்லீம் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. இருந்தாலும், எல்லாரிடமும் நான் பால் குடித்திருக்கிறேன். “அதை நீ மறந்துட்டியா? ஒரு ரெண்டு ரூபா எனக்குத் தா” என்று வந்து நிற்பார்கள்.

நான் இப்படி இரண்டு, நான்கு, ஐந்து என்று கொடுக்கத் தொடங்கினேன். நூறு ரூபாயை நெருங்கிய போது “இல்ல... நான் யார்கிட்டயும் பால் குடிக்கல” என்று சத்தம் போட்டு கூறிக்கொண்டு நான் உட்கார்ந்திருப்பேன். இதற்கிடையில் ஒரு தமாஷான சம்பவம் நடந்தது. உம்மா அபியையும் பாத்துக்குட்டியையும் தூக்கிக் கொண்டு என்னிடம் வந்தாள்.

“இந்தக் குழந்தைகளுக்கு ஏதாவது கொடுடா.”

அதோடு நிற்கவில்லை. “டேய் நீ, இப்போ இங்கே இருக்கலாம்னு வந்திருக்கே. உன்னைப் பார்க்குறதுக்கு உன்னோட நண்பர்கள் வருவாங்கள்ல? நாம அவங்களுக்கு எதுல சாதம் தர்றது?”

“இலையில...”

“அது நல்லா இருக்காதுடா... கொஞ்சம் தட்டும், கிண்ணமும் டம்ளர்களும் நாம வாங்கணும்.”

“என் கையில காசு இல்ல.”

“அப்படின்னா நான் அந்த யானைப் பறம்பில் கடையில் போயி நீ சொன்னேன்னு வாங்கிட்டு வந்திர்றேன்.

உம்மா கட்டாயம் அப்படி செய்யக் கூடியவள்தான்! யானைப் பறம்பில் வர்க்கிக்குஞ்சிற்குப் பெரிய ஸ்டேஷனரி கடை இருக்கிறது. மேற்படி ஆள் என்னுடைய நண்பன். அங்கு உம்மா போவதாக இருந்தால், அந்தக் கடையில் இருக்கும் பொருட்கள் முழுவதையும் எடுத்துக்கொண்டு வருவதற்குச் சிறிதும் தயங்க மாட்டாள். நான் சொன்னேன்: “உம்மா, நீங்க போக வேண்டாம் நான் போயி வாங்கிக் கொண்டு வர்றேன்.”

நான் போய் ஒரு சுமை பாத்திரங்களை வாங்கி ஒரு ஆள் மூலம் வீட்டிற்குக் கொண்டுவந்தேன். இப்படி நிம்மதியுடன் இருக்கும்பொழுது உம்மா சொன்னாள்: “டேய், இப்போ நீ எப்படியோ இங்கே இருக்குறதுன்னு வந்துட்டே உன்னோட நண்பர்கள் வந்தா அவங்க எங்கே தூங்குவாங்க? நீ கொஞ்சம் பாயும் தலையணைகளும் வாங்கு.”

“சும்மா போங்க உம்மா...”

எதற்கு? தொந்தரவு வேண்டாம் என்று நான் அவற்றையும் வாங்கிக் கொடுத்தேன். அப்போது உம்மா ஒரு செம்பு அண்டா வேண்டும் என்று சொன்னாள். நெல் கிடைத்தால் அதில் வேக வைக்கலாம். குளிப்பதற்கு நீர் ஊற்றி வைக்கலாம். நியாயமான ஒன்றுதானே!

நான் நினைத்தேன்: ‘செம்பு’ அண்டா வாங்கிய பிறகு மாட்டு வண்டி! அதையும் வாங்கிவிட்டால் மோட்டார் கார்! ம்ஹும்!

பெட்டியையும் படுக்கையையும் எடுத்துக் கொண்டு நான் கிளம்பிவிட்டேன். வர்க்கலயைத் தாண்டி சென்னை அது இதுவென்று சுற்றிவிட்டு வந்தேன். பிறகும் போனேன். பிறகு வந்தேன். அப்படி வந்ததுதான் இப்போது வந்திருப்பது. ஹனீஃபா பட்டாளத்திற்குப் போவதாகக் கூறுவது மாதிரி அல்ல; நான் போவதாகச் சொன்னால் கட்டாயம் போவேன். அதனால் உம்மா அசையாமல், பேசாமல் படுத்திருந்தாள். நான் எழுந்து சென்று பெட்டியைத் திறந்து மீதியிருந்த காசு முழுவதையும் எடுத்து உம்மாவிடம் தந்தேன்.

நான் சொன்னேன். “இனி பயப்பட வேண்டாம். நான் போறேன்னு சொன்னாகூட போக முடியாது. வழிச் செலவுக்கு என்கிட்ட பணம் எதுவும் இல்ல. இனி என்னை நீங்கதான் பார்த்துக்கணும்.”

நினைவுகள் இப்படிப் போய்க் கொண்டிருந்தன.

நாட்கள் சில கடந்தன.

அப்போது ஒரு விநோதமான சம்பவம் நடந்தது. பெண் ரத்தினங்களின் அழகான செயல்கள்! பாத்தும்மாவின் ஆட்டை இரண்டு ஆனும்மாமார்களும் அய்ஸோம்மாவும் உம்மாவும் சேர்ந்து மீண்டும் கறந்து பால் எடுத்து தேநீர் குடித்தார்கள்! குட்டி இல்லாமலேதான். ஒரு தடவை அல்ல. தினந்தோறும் பால் திருட்டு! குட்டி இல்லாமல் ஆடு பால் சுரக்காது என்ற உண்மையான நம்பிக்கையுடன் சுகமாக, நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருந்தாள் பாத்தும்மா!

சும்மா ஒரு தமாஷுக்காக அபியையும் பாத்துக்குட்டியையும் ஆட்டுக்குட்டியாக மாற்ற நினைத்தார்கள். முடியவில்லை. கடைசியில் ஸுபைதாவும் ரஷீதும் ஆட்டுக்குட்டிகளாக மாறி ஆட்டின் காம்புகளைச் சப்பி பால் குடித்தார்கள்.

சும்மா ஆட்டுக் குட்டிகள்! இந்த விநோதமான விஷயத்தைப் பாத்தும்மா அறிந்தாள். அவள் தன்னுடைய நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுதாள்.

“நீங்க மனிதர்களா? நீங்க இப்படி பண்ணிட்டீங்கள்ல! வேண்டாம். நான் உங்களுக்குப் பால் தர்றேன்.”

மறுநாள் முதல் பாத்தும்மாவிடமிருந்து அரை புட்டி பால் வீட்டிற்கு முடங்காமல் வர ஆரம்பித்தது.

ஸுபைதா, ரஷீத், அபி, ஆரிஃபா, லைலா, பாத்துக்குட்டி- எல்லாருக்கும் சந்தோஷமோ சந்தோஷம். ஆனும்மாமார்களுக்கும் அய்ஸோம்மாவிற்கும் உம்மாவிற்கும் பால் கலந்த தேநீர்!

இப்போது ஆட்டுடன் குட்டியும் வருகிறது. அவற்றுடன் அரை புட்டி தண்ணீர் சேர்க்காத சுத்த பாலுடன் கதீஜா! இப்படி இரண்டு வகைப்பட்ட பால் வீட்டிற்குக் கிடைக்கிறது. ஒன்று அழகாகத் திருடுவது! இன்னொன்று உண்மையான உணர்வுடன், கனிவான மனதுடன் பாத்தும்மா கொடுப்பது! பாவம், பாத்தும்மா! அவள் என்ன செய்வாள்?

ஒரு ரகசியத்தை மட்டும் இப்போதும் என்னால் தெரிந்து கொள்ள முடியவில்லை. இந்த அறிவு பெண்களில் யாருக்கு முதலில் தோன்றியிருக்கும்?

சுபம்!

Page Divider

 

+Novels

Popular

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

உறவுகள் பிரிவதில்லை

March 22, 2013,

சமையலறை... நெருப்பு பிடித்த இரவு

March 9, 2012,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

ஞாபகம்

May 29, 2014

டைகர்

டைகர்

March 9, 2012

கயிறு

July 1, 2017

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel