Lekha Books

A+ A A-

நீ எங்கே? என் அன்பே ! - Page 27

கடுமையாக அவர் கேட்டதும் அவள் மேலும் பயந்தாள்.

“இன்னிக்கு வேலை ஒண்ணும் இல்லைன்னு பக்கத்துத் தெரு பெட்டிக்கடையிலதான் காலைல இருந்து உக்காந்திட்டிருக்கார். “ஏ பொம்மி, உங்க அப்பனை கூட்டிட்டு வாடி.” பரட்டைத் தலை சிறுமிகளில் ஒருத்தியை அனுப்பிவிட்டு மீண்டும் பேச ஆரம்பித்தாள்.

“ஐயா, அவரைப் புடிச்சிக்கிட்டு போயிடாதீங்கய்யா. அவரு சம்பாத்தியம் இல்லைன்னா நாங்க பட்டினிதான்யா கிடக்கணும்.”

கையில் பையுடன் ஒரு கிழவி வந்தாள். “ஏம்மே? உனக்கு அறிவு இருக்கா? எதுக்குமே இப்படி கத்தி கத்தி சாகற? கம்முனு கெடம்மே” அதட்டியதும் வாயை மூடிக் கொண்டாள் கமாலியின் மனைவி.

இதற்குள் கமாலியை சிறுமி அழைத்து வந்தாள்.

சல்யூட் அடித்தான் கமாலி. குணாளன் விசாரணையை ஆரம்பித்தார்.

“நீதான் கமாலியா?”

“ஆமா சார்.”

“எங்க வேலை பார்க்கற?”

“நிரந்தரமான வேலை கிடையாது சார். ஸ்டுடியோவில் அப்பப்ப கிடைக்கற வேலை செய்வேன் சார்.”

“ஸ்டுடியோவில் உனக்கு என்ன வேலை?”

ஒரு நிமிடம் மெளனம் சாதித்த கமாலி, “சில சினிமா கம்பெனிகளுக்கு ஆர்ட்டிஸ்ட் அரேன்ஜ் பண்ணிக் குடுப்பேன் சார்.”

“சினிமா கம்பெனிகளுக்கா? இல்லை... சினிமா நடிகர்களுக்கா?”

“சார்...” திகைத்தான் கமாலி.

“இங்க பாரு, உன்னைப் பத்தின எல்லா உண்மைகளும் எங்களுக்குத் தெரிஞ்சாச்சு. உண்மையைச் சொல்லலைன்னா முட்டியைப் பேத்துடுவோம். நிரஞ்சனை உனக்கு ரொம்ப பழக்கமோ?”

“நிரஞ்சன்... நிரஞ்சன் சாரா சார்?” இழுத்தான்.

வார்த்தைகள் சரளமாக வெளிவராமல் மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டன.

“சார்... சார்... அது... வந்து... வந்து நிரஞ்சன் சாருக்குப் பொண்ணுங்களை அறிமுகப்படுத்தி வைப்பேன் சார்.”

“அறிமுகப்படுத்தியா?”

“வந்து... சார் அவர் கூட வெளியூர் தங்கறதுக்கு ரெண்டு மூணு தடவை பொண்ணுகளை அனுப்பி இருக்கேன் சார்.”

 “இதுதான் அறிமுகமா? இதுக்கு நிரஞ்சன் கிட்ட பணம் வாங்குவியா?”

“ஆமா சார்.”

“அப்போ உன் பொழைப்பே இதுதான்னு சொல்லு.”

“அ... அ... ஆமா சார். சில ப்ரொட்டியூசருங்க, நடிகருங்க அழகான பொண்ணுகளை அனுபவிக்கணும்னு கேப்பாங்க. பப்ளிக்குக்கு தெரியாத முகமாகவும் இருக்கணும்பாங்க. அதை நான் ஏற்பாடு... செய்வேன்...”

“நிரஞ்சனைக் கடைசியா நீ எப்போ பார்த்த?”

“சுமாரா ஒரு மாசம் இருக்கும் சார். ஊட்டிக்குப் போறதா சொன்னார். ஒரு பொண்ணை அனுப்பி வச்சேன் சார்.”

குணாளன், ஷீலாவும் நிரஞ்சனும் இருந்த படத்தைக் காண்பித்தார். கமாலி வாங்கிப் பார்த்தான்.

“இந்தப் பொண்ணா நீ அனுப்பி வைச்சது?”

“இது இல்லை சார்.”

“ஏய் பொய் சொல்லாத. ஜாக்கிரதை.”

“இல்லை சார். சத்தியமா இந்தப் பொண்ணை எனக்குத் தெரியாது சார். இதுக்கு முன்னால நான் இவளைப் பார்த்ததே கிடையாது சார். என்னை நம்புங்க.”

“சும்மா பொய் சொல்லாத மேன். லாக்-அப்ல தள்ளினாத்தான் உண்மையைச் சொல்லுவியா? ம்...?”

குணாளன் மிரட்டினார்.

“நான் பொய் சொல்லலை சார். எனக்கு இவளைத் தெரியவே தெரியாது சார்” பேசிக் கொண்டே சட்டைப் பையில் இருந்து ஒரு சின்ன டைரியை எடுத்தான். பயத்தில் பொடித்திருந்த வியர்வையை வழக்கம் போல அழுக்குத் துண்டினால் துடைத்துக் கொண்டு, டைரியை குணாளனிடம் காண்பித்தான்.

“இங்க பாருங்க சார். இதுலதான் சார் பொண்ணுக அட்ரஸ், ரேட் எல்லாம் எழுதி வச்சிருக்கேன்.”

குணாளன் டைரியை வாங்கி அதன் பக்கங்களைப் புரட்டினார். சீதா, மாலா, ரீடா, சுனிதா என்று எழுதி அதன் கீழே விலாசமும் அதற்கு நேராக ரேட்டும் எழுதி வைத்திருந்தான். அது போக சில சினிமா கம்பெனிகளின் விலாசங்களைக் குறித்து வைத்திருந்தான். ஷீலாவின் விலாசமோ, பெயரோ அதில் இல்லை.

“இங்க பாரு. டைரியைக் காண்பிச்சு தப்பிச்சுட்டமேன்னு நினைக்காத. வீட்டுக்குள்ள பார்க்கணும்.”

“கான்ஸ்டபிள்ஸ். இவன் வீட்டுக்குள்ள போயி, ஏதாவது டைரி, அட்ரஸ், போட்டோ கிடைக்குதான்னு நல்லா, தரோவா சோதனை போடுங்க.”

வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கூட்டத்தை, கட்டுப்படுத்திக் கொண்டிருந்த போலீஸ்காரர்கள் இருவர் கமாலியின் வீட்டிற்குள் நுழைந்து சோதனை போட்டனர். அவன் மனைவி வாய் ஓயாமல் புலம்பிக் கொண்டே இருந்தாள்.

“சார், எதுவும் இல்லை சார்.” போலீஸ்காரர்கள் வெளியே வந்து குணாளனிடம் அறிவித்தார்கள்.

“ஏ, மேன் ஊரைவிட்டு எங்கேயும் போயிடாத. தெரியுதா? விசாரணைக்கு கூப்பிட்டனுப்பிச்சா உடனே ஸ்டேஷன் வந்து சேரணும் புரிஞ்சுதா?”

“சரி சார்.”

“ஏன் சார், பெரும்பாலும் நிரஞ்சனுக்கு இவன்தான் பொண்ணுகளை அறிமுகப்படுத்தி இருக்கான். இந்தப் பொண்ணை மட்டும் தெரியலைங்கறானே?”

“எனக்கும் இதே சந்தேகம்தான். இவன் மேல எப்பவும் ஒரு கண் இருக்கணும். கான்ஸ்டபிள் ஒருத்தரை மஃப்டியில் இவனைக் கண்காணிக்கச் சொல்லணும்.”

“சார், இந்த ஷீலாவோட அட்ரஸ் கிடைச்சுட்டா, நமக்கு ஏறக்குறைய கேஸ் முடிஞ்சது போலத்தான்.”

செபாஸ்டியன் சொன்னதை ஆட்சேபித்த குணாளன், “நாம இப்ப அந்த போட்டோ கிராஃபர் அருணை போய்ப் பார்க்கலாம். செபாஸ்டியன், அட்ரஸ் சொல்லுங்க.”

“பாளையக்காரன் தெருவில் பதினாலாம் நம்பர் சார்.” செபாஸ்டியன் டைரியைப் பார்த்து சொன்னார்.

“ஓ, இங்க பக்கத்துல தான். டிரைவர், பாளையக்காரன் தெருவுக்கு விடு.”

பாளையக்காரன் தெருவில் பதினாலாம் நம்பர் வீட்டின் முன் ஜீப் நின்றது. கீழே இறங்கினார்கள், இருவரும். வாசலில் ஒரு பெரியவர் நின்றிருந்தார்.

“சார், இங்க ஒரு போட்டோ கிராஃபர், பேர் அருண். அவர் இருக்காரா?” போலீஸ் சீருடையில் ஆட்களைப் பார்த்ததும் புருவங்களைச் சுருக்க, நெற்றியில் முடிச்சுகளை உண்டாக்கிய பெரியவர், “அருண் மாடியில இருக்கான்” ரத்தினச் சுருக்கமாக பதில் கூறிவிட்டு உள்ளே சென்று கதவைத் தாழ்போட்டுக் கொண்டார்.

மாடிப்படிகளில் ஏறிச் சென்று அழைப்பு மணியை ஒலிக்கச் செய்தார் செபாஸ்டியன். குணாளனும் பின் தொடர்ந்தார்.

கதவு திறந்திருந்தது. முப்பது வயது மதிக்கத்தக்க ஒருவன் வந்து நின்றான். ஊதினால் பறந்து விடுவான் போன்ற மெல்லிய தேகம். தாடிக்கு நடுவில் முகம்.

“சாரே... நீங்க...”மலையாளத்தில் பொழிந்தான்.

“ஒரு மர்டர் கேஸ் விஷயமா விசாரிக்க வந்திருக்கோம்.” செபாஸ்டியன் சொன்னான்.

“மர்டர் கேஸா? எண்டே குருவாயூரப்பா?” அதிர்ந்தவன், நெஞ்சில் கை வைத்து குருவாயூரப்பனைக் கூப்பிட்டான். பின் சுதாரித்து, “உள்ள வெரணும் சாரே.” அழைத்தான். உள்ளே சென்றார்கள்.

குணாளன் ஆரம்பித்தார், “மிஸ்டர் அருண், நீங்க போட்டோ, டிரான்ஸ்பரன்ஸி எல்லாம் எடுத்து விற்பனை செய்றதுண்டா?”

“அதன்னே என்டே பிஸினஸ்.”

“இந்தப் படத்தைப் பாருங்க.”

அருண் வாங்கிப் பார்த்தான்.

“ஈ பிக்சர் ஞான் எடுத்ததல்லோ?”

“எங்கே எடுத்தீங்க?”

“கோவாவில எடுத்து.”

“என்ன? கோவாவிலயா?”

 

+Novels

Popular

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

உறவுகள் பிரிவதில்லை

March 22, 2013,

சமையலறை... நெருப்பு பிடித்த இரவு

March 9, 2012,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel