Lekha Books

A+ A A-

வீடு - Page 2

Veedu

மூச்சு விட முடியாத நிலை... எந்தச் சமயத்திலும் அழுதிராத அந்த கண்கள் இன்று நிறைந்து நின்றிருப்பதை அவள் பார்த்தாள்.

அவன் பிள்ளையார் கோவிலின் கருங்கல் படியில் தலையை வைத்து மோதுவதைப் பார்த்தாள். தடுக்கவில்லை. தலையை உயர்த்தியபோது, பிள்ளையாரின் குங்குமம் அணிந்த முகத்தைப் போலவே அவனுடைய முகமும் இரத்தம் படிந்து சிவந்திருந்தது. தாடியில் இங்குமங்குமாக காணப்பட்ட சிறிய உரோமங்களுக்கு மத்தியில் இரத்தம் படிந்து வழிந்து கொண்டிருந்தது.

அருகில் சென்று பார்த்துவிட்டு அவன் எதுவும் பேசாமல் நின்றிருந்தான். அவள் சுட்டு விரலால் அந்த இரத்தத்தைத் தொட்டு தன்னுடைய நெற்றியில் பூசினாள்.

எதுவும் கேட்கவில்லை.

எதுவும் கூறவுமில்லை.

சிறிது நேரம் கழித்து முருகச்சாமி சுமையை எடுத்து தோளில் வைத்தான். பிறகு... மெதுவாக கேட்டான்:

'வர்றியா புள்ளை?'

'எங்கே?'

முருகச்சாமி பதில் கூறவில்லை.

'நட... நான் வர்றேன்.'

அவன் கம்பி வளையமிட்ட பாத்திரத்தை எடுத்துக் கொண்டு நடந்தான். மெதுவாக... மெதுவாக... கோட்டைச் சுவரைத் தாண்டினான்.

அப்போது, ஒரு சிறகை இழந்த பெண் பருந்தை கண்ணம்மா நினைத்துப் பார்த்தாள்.

பிள்ளையார் கோவிலின் அருகில்தான் அது வந்து விழுந்தது. கண்ணம்மா அதை மடியில் எடுத்து வைத்து தடவினாள். முருகச்சாமி அதற்கு இட்லித் துண்டுகளையும் உடைக்கப்பட்ட எள்ளுருண்டையையும் கொடுத்தான். அது எதையும் தின்னவில்லை. ஒரு நாள் காலையில் அது இறந்து விட்டது.

கண்ணம்மா கடற்கரைக்குக் கொண்டு சென்று அதை மணலுக்குள் புதைத்து மூடினாள். புட்டியில் நீர் கொண்டு வந்து, குழி  பறித்த இடத்தில் ஊற்றினாள். பிறகு சூரியனைப் பார்த்தாள்: 'நல்ல வழியே போ.'

முருகச்சாமியின் நடை அந்த பெண் பருந்தை ஞாபகப்படுத்துகிறது. வெளியே வந்த அழுகையைத் தொண்டையில் தடுத்து நிறுத்தினாள்.

முருகச்சாமியைப் பார்த்த காலமும் அப்போது ஞாபகத்தில் வருகிறது. பிள்ளையார் கோவிலுக்கு அருகில்தான் முதல் தடவையாக பார்த்தாள். யாரிடமும் எதுவும் கூறுவதில்லை. பொழுது புலர்வதற்கு முன்பே குழாய்க்கு அருகில் நின்று கொண்டு குளிப்பான். சுமையில் இருந்து திருநீறை எடுத்து பூசுவான். பிள்ளையாரை வணங்குவான். பிறகு பாத்திரத்தை எடுத்துக் கொண்டு எங்கேயோ செல்வான்.

அப்படி ஒரு ஆள் இருக்கிறான் என்று யாருமே பொருட்படுத்தவில்லை. கடந்து செல்லும்போது, கண்ணம்மா அழைப்பாள்.

'முருகண்ணா!'

வெற்றிலைக் கறை படிந்த பற்களைக் காட்டியவாறு முருகச்சாமி சற்று சிரிப்பான்... போவான்.

திரும்பவும் வருவது எப்போது என்று நிச்சயமில்லை. ரங்காயியும், எச்சுமியும், கமலமும், மீனாச்சியும் முருகண்ணனை மதித்தார்கள்.

ஒரு மாலை நேரத்தில் எல்லோரும் திரும்பி வந்து, மைதானத்தில் மூன்று கற்களை வைத்து நெருப்பு மூட்டினார்கள். அரிசி கொதித்தது. கருவாடு சுடும் வாசனை. அப்போதுதான் ஆரவாரம் ஆரம்பித்தது. ரங்காயியின் பேன் எடுக்கும் சீப்பு காணாமல் போய் விட்டது. அவள் சாபமிட்டாள்.... வாய்க்கு வந்ததையெல்லாம் கூற ஆரம்பித்தாள். கமலமும் மீனாச்சியும் அவளைப் பார்த்து கண்டபடி பேசினார்கள். 'கோட்டைச் சுவருக்குப் பக்கத்துல இருக்குற உன்னோட நொண்டிக் காலன் இருக்கிறானே, அவன்கிட்ட கேளு.'

'உன் கதை தெரியும்...'- பிறகு அவளுடைய கதையைச் சற்று விளக்கி கூறினாள். பல இரவு வேளை கதைகள் கண்டபடி பேசியதில் வெளியே வந்தன.

மக்கள் சிரித்து, கைகளைத் தட்டி உற்சாகப் படுத்தினார்கள்.

தான் மைதானத்தின் அரைச் சுவரின் மீது ஏறி கால்களை இணைத்து தொங்க விட்டிருக்கிறோம் என்பதை கண்ணம்மா நினைத்துப் பார்த்தாள்.

திடீரென்று இருட்டுக்குள்ளிருந்து முருகச்சாமி கடந்து வந்தான். 'இந்தா, புள்ளே... சத்தம் போட்டது போதும்'- ஒரு சீப்பை எடுத்து ரங்காயியிடம் நீட்டினான். ரங்காயி எதுவும் பேசாமல் வாங்கியதும், முருகச்சாமி இருட்டிற்குள் திரும்பிச் சென்றான்.

ஆரவாரம் நின்றது. எல்லோரும் தெருவின் மூலைகளை நோக்கி தலையை நீட்டினார்கள். அப்போது கண்ணம்மா நினைத்துப் பார்த்தாள். சாமிக் கடையிலிருந்து வாங்கிய இரண்டு பீடிகள் கையில் இருக்கின்றன. சாப்பாடும் குடியும் முடிந்த பிறகு, தலை முடியை நெற்றியில் விழும்படி சீவி முடித்த பிறகு, உதடுகள் சிவக்க சற்று வெற்றிலை போட வேண்டும் என்று நினைத்தாள். பிறகு, வாயால் பாட்டை முணுமுணுத்துக் கொண்டே சிறிது நேரம் அமர்ந்திருக்க வேண்டும்.

ஆனால், ரங்காயியின் சீப்புச் சத்தம் எல்லா சுவாரசியங்களையும் நாசமாக்கியது.

வெற்றிலையைக் கடித்து மென்று கொண்டே அவள் நினைத்தாள்-

படுத்து வசிப்பதற்கு வீடு இருந்தால், இப்படியெல்லாம் எதுவுமே நடக்காது என்று.

வீட்டில் வசித்த மங்கலான ஞாபகம் மட்டுமே இருக்கிறது. அந்த வீட்டிற்கு மினுமினுப்பான ஒரு தூண் இருந்தது. அதைப் பிடித்து வட்டம் போட்டு சுற்றி விளையாடுவதற்கு மிகவும் சுவாரசியமாக இருந்தது. அவளுடைய தாய் மூங்கிலால் ஆன பாயால் மறைவு உண்டாக்கி, சமையலறையில் அரிசியை வேக வைத்துக் கொண்டிருந்தபோது, அவள் தூணில் வட்டம் சுற்றிக் கொண்டிருந்தாள். மீனாச்சியம்மாவைப் பற்றிய ஒரு பாட்டும் இருந்தது. அதெல்லாம் மறந்து போய் விட்டது.

அப்போதுதான் அவளுடைய தந்தை வீட்டிற்குள் வந்தார். கள்ளின் வாசனை முன்பே வரும். பிறகு ஒரே ஆரவாரம்தான்... அடிக்கும் உதைக்கும் பயந்து போய் கயிற்று கட்டிலுக்கு அடியில் ஒளிந்து படுத்திருப்பாள். சில நேரங்களில் அதே நிலையில் படுத்து உறங்கியும் போவாள்.

எனினும், வீடென்ற ஒன்று இருந்தபோது எவ்வளவு சந்தோஷமாக இருந்தது! ஓட்டை விழுந்த, வைக்கோல் வேய்ந்த வீட்டின் வழியாக வெயில் தரையில் வந்து விழும். ஒரு காலை தூக்கி அந்தப் புள்ளியை மிதிக்கும்போது, வெயில் கால் மீது வந்து விழும்.

எல்லாம் போய் விட்டன.

அவளுடைய அன்னை இறந்து விட்டாள்... தந்தை காணாமல் போய் விட்டார்.

பிறகு... நடைதான்.

கண்ணம்மா சுற்றிலும் பார்த்தாள். வெறுமை... பெட்டிகள், குடிசைகள் அனைத்தும் போய் விட்டன.

மைதானத்தில் இடுப்பு சுருங்கி, வயிறு வீங்கிய நிலையில் உடு துணி இல்லாமல் சில குழந்தைகள் அலைந்து கொண்டிருந்தன.

கீழே பார்த்தபோது, மயிலிறகின் கண்கள், கண்களை விழித்தவாறு மடியில் கிடந்தன. அவை வெறித்துப் பார்த்தன.

முருகச்சாமியின் கண்கள் மனதிற்குள் தெளிவாக தோன்றின. அவை எப்போது கவனத்தில் வந்தன என்பதை நினைத்துப் பார்த்தாள். ஓ... அப்படியொரு நாள் எதையும் நினைவுபடுத்திப் பார்க்க முடியவில்லை.

ஒரு நாள் சாயங்கால வேளையில் நீளமான ஒரு மரக் கொம்புடன் அந்த மனிதன் வந்தான். அதை பிள்ளையார் கோவிலின் மறைவில் சாய்த்து வைக்கும்போது, கண்ணம்மா கேட்டாள்:

 

+Novels

Popular

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

நிராசை

May 24, 2012,

உறவுகள் பிரிவதில்லை

March 22, 2013,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel