Lekha Books

A+ A A-

மந்திரப் பூனை - Page 27

mandhira-poonai

இந்த உயிரினங்கள் உணவுக்காக யாரைப் பார்த்துக் கேட்கும்? இவர்களுக்கு வாயைப் படைச்ச கடவுள் இரையையும் கிடைக்கவே செய்யிறாரு. இந்த விஷயத்துல இந்த உயிரினங்களுக்கு திருப்தியே. சந்தோஷமே. ஆனா, பிறவிகளிலேயே உயர்ந்த பிறவின்னு எல்லாரும் சொல்லிக்கிற இரண்டு கால் மாடுகளான மனிதர்களுக்கு மட்டும் ஏன் இந்த உணவுப் பிரச்சினைன்றது பெரிய ஒரு விஷயமா இருக்கு?''

“ஜனத்தொகைப் பெருக்கம். குறைவான உணவு உற்பத்தி!''

“ஜனத்தொகை அதிகமாவதைக் குறைக்கணும்; உணவு உற்பத்தியை அதிகப்படுத்தணும். இந்த ரெண்டும் நடந்திருச்சின்னா, இந்தப் பிரச்சினை தீர்ந்த மாதிரிதான்!''

“பிரச்சினை தீராது, சுவாமிஜி. மதங்கள் இருக்கே! இந்துக்கள், ஜைனர்கள், புத்தமதத்தவர்கள், பார்ஸிகள், யூதர்கள், கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், அஹம்மதியாக்கள், வஹ்ஹாபிகள், தாருஸி கள், கத்தோலிக்கர்கள், புதுமை விரும்பிகள், ஆர்ய சமாஜக்காரர்கள்- இவங்க எல்லாருமே குழந்தை பிறப்புத் தடையை மிகப்பெரிய ஒரு பாவமா நினைச்சாங்கன்னா...?''

“அவங்க அப்படி நினைச்சாங்கன்னா ஒண்ணு செய்யலாம். இதுவரை பிறந்த குழந்தையைக் கொல்ல வேண்டிய அவசியம் இல்ல. இனி பிறக்கப்போகும் குழந்தை விஷயத்தில் கொஞ்சம் கட்டுப்பாடா இருக்கலாமே!''

“இது நடைமுறையில் சாத்தியமா சுவாமிஜி? இதுபத்திப் பேசினா, "நாங்க அப்பாவி. வாழ்க்கையில இது சர்வ சாதாரணமா நடக்கக்கூடிய ஒண்ணு. குழந்தைகள் பிறக்குறதுன்றது கடவுளோட ஆசியால நடக்குறது"ன்னு அவங்க சொல்லலாம் இல்லியா?''

“அப்படிச் சொன்னாங்கன்னா, அதுக்கும் பரிகாரம் இருக்கு. பல்லாயிரம் வருடங்களா இந்த பூமி எந்தவித விரிவாக்கமும் இல்லாம அப்படியே இருந்துக்கிட்டு இருக்கு. இதுக்கு ஒரு விரிவாக்கம் வேணும். இதுக்கு நீளமும் அகலமும் கட்டாயம் இருக்கும்ல! மனிதர்கள் வசிப்பதற்கு இடம் கிடைச்ச மாதிரியும் ஆச்சு. விவசாயம் செய்யவும் அதிகமா நிலம் வந்த மாதிரியும் இருக்கும்!''

“இது எப்படி சாத்தியம் சுவாமிஜி?''

“கடவுள்கிட்ட கேட்க வேண்டியதுதான். மதத்தை நம்பக்கூடிய எல்லாருமே ஒண்ணு சேர்ந்து தெய்வத்துக்கிட்ட வேண்டிக்கணும். இந்த பூமியின் பரப்பளவை இன்னும் பெரிசாக்கணும்னு கேட்கணும்!''

இது ஒரு அருமையான விஷயம்தான். காரியங்கள் நடக்கிற போக்குல, இதை யாரும் எதிர்க்கவும் மாட்டாங்க...

சந்நியாசி சொன்னார்:

“நான்தான் சொன்னேனே... எனக்கு உணவுன்றது ஒரு பிரச்சினையே இல்லைன்னு. கட்டாயம் சோறுதான் சாப்பிடணும்னு ஏதாவது இருக்கா என்ன? சப்பாத்தியோ ரொட்டியோ பூரியோதான் சாப்பிடணும்னு கூட எதுவும் இல்லை. பால் என்பது ஒரு திருட்டுப் பொருள்ன்றதுனாலயும், அதைச் சாப்பிடுவது ஒரு பாவச்செயல்னு நினைக்கிறதாலயும் நான் அதைக் குடிப்பது இல்லை. பச்சை இலைகள், பயறு வகைகள், கிழங்குகள், பழங்கள்- இவற்றை நான் சாப்பிடுறேன். இவை வெந்திருக்கணும்ன்ற கட்டாயம் இல்ல. உப்பு போட்டிருக்கணும்ன்ற அவசியமும் இல்ல. அந்த ரெயில்வே பாலம் முதல் அங்கே இருக்குற தார் ரோடு வரை ரெண்டு பக்கமும் ரெண்டு மூணு லட்சம் செடிகள் இலைகள் சகிதமா நின்னுக்கிட்டு இருக்கு. அவற்றின் இலைகளை மனிதன் ஏன் சாப்பிடுவதில்லைன்னு பலமுறை நான் சிந்திச்சுப் பார்த்திருக்கேன். இதைப்பத்தி ஆச்சரியமும் பட்டிருக்கேன். சிலருக்கு அரிசி மட்டுமே வேணும். சிலருக்கு கோதுமை! இப்படி ஒவ்வொரு விஷயத்திலயும் பிடிவாதம் பிடிச்சிக்கிட்டு இருந்தா எப்படி? ஒவ்வொருத்தரையும், அவங்களால உற்பத்தி செய்ய முடிகிற உணவுப் பொருட்களை அவங்களே உற்பத்தி செய்யணும்னு சொன்னால், அவங்க அதைக்கேட்டு அதன்படி நடப்பாங்களா?''

நாங்கள் இருவரும் தலா ஒரு அவுன்ஸ் பால் கலக்காத தேநீர் குடித்தோம். நான் கொஞ்சம் தேநீரை சிமெண்ட் திண்ணையில் ஊற்றினேன். அதை நீலகண்டன் என்ற இந்துப் பூனை அருகில் வந்து நக்கிக் குடித்தது. “உண்மையிலேயே இது மந்திரப் பூனைதான்.'' எனக்குள் நானே சொல்லிக்கொண்டேன்.

இருவரும் எழுந்து சிறிது நேரம் நிலத்தில் நடந்தோம். எங்களுடன் ஒயிட் லெகான் சேவலும், நீலகண்டனும் சேர்ந்து நடந்து வந்தார்கள். ஆண்களுடன் ஆண்கள் சேர்ந்து நடந்து வருகிறார்கள். இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? சிறிது நேரத்தில் நாங்கள் பலா மரத்திற்குக் கீழே, நிழலில் நின்றிருந்தோம்.

சந்நியாசி சொன்னார்:

“உலக மக்களோட உணவுப் பிரச்சினையை எடுக்கிறப்போ, அதை இரண்டு பிரிவா பிரிக்க வேண்டியதிருக்கு. சைவம் சாப்பிடுகிறவர்கள், அசைவம் உண்பவர்கள்.''

“சைவம், அசைவம்- ரெண்டையும் சாப்பிடுபவர்களை?''

“நான் சொன்னது- அசைவம் மட்டுமே சாப்பிடுகிறவர்கள் என்ற அர்த்தத்தில் அல்ல...''

“சுவாமிஜி, தொண்ணூத்தொம்பதரை சதவிகிதம் அசைவம் மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழ்றவங்களும் இங்கே இருக்கத்தான் செய்றாங்க!''

“எங்கே?''

“பனிப் பிரதேசங்கள்ல...''

“ஓ... எஸ்கிமோக்களைச் சொல்றீங்களா? சரிதான்...''

“அங்கே தண்ணீர் உறைஞ்சு போய் பனிக்கட்டியாய் கிடக்கு. கடல்... பனிமலைகள். அவங்க பனிக்கட்டிகளால ஆன குகைகள்ல வசிச்சுக்கிட்டு இருக்காங்க. சில காலங்கள்ல அவங்களுக்கு பகலே கிடையாது. எப்பவுமே இருட்டுதான். அதுவும் மாசக் கணக்குல. சில காலங்கள்ல மாசக்கணக்கா பகல் மட்டுமே. மீன்கள், கடல் யானைகள், கடல் பன்றிகள், கடல் குதிரைகள், ஓநாய்கள், கரடிகள்- இவற்றை பச்சையா அவங்க சாப்பிட்டு தங்கள் நாட்களை ஓட்டுறாங்க. அவங்களுக்குன்னு பிரத்யேக மத நம்பிக்கைகளும் இருக்கு!''

“அவங்களையும் நாம கணக்குல எடுக்கத்தான் செய்யணும். காட்டுல வாழ்றவங்களையும் நாம கணக்குல எடுக்கணும். மொத்தத்துல பார்த்தால், மனித இனத்தோட உணவுன்னு எடுத்துக்கிட்டா, எதை எதைச் சொல்லலாம்?''

“கோதுமை, அரிசி, சோளம், தினை, கேழ்வரகு, கிழங்குகள், பழங்கள், கடல்வாழ் உயிரினங்கள், காய்கறிகள், பால், நெய், தயிர், தேன்...''

“நடக்குறதும் பறக்குறதும்கூட மனிதனோட உணவுதானே?''

“ஏன்... ஊர்ந்து போறதையும் சேர்த்துக்கலாமே! நான் எல்லாத்தையும் சொல்றேன். ஆடு, கோழி, முயல், வவ்வால்கள், காக்கா, மைனா, குருவிகள், மயில்...''

“மயில் தேசியப் பறவையாச்சே!''

“காளை, எருமை, பசு, காட்டெருமை, ஒட்டகம், காட்டு ஆடு, யாக்...''

“யாக் திபெத்ல இல்ல இருக்கு? அதை அங்க இருக்குறவங்க சாப்பிடுறாங்களா என்ன?''

“மான், காட்டுப் பன்றி, நாட்டுப்பன்றி, நாய்கள், எலிகள், உடும்பு, ஆமை, திமிங்கிலம், வெட்டுக்கிளிகள், நண்டு, தவளை, யானை...''

“யானையை யார் உணவா சாப்பிடுறாங்க?''

“காங்கோ நாட்டுல இருக்குற அடர்ந்த காடுகள்ல வசிக்கிற பிக்மிகள்ன்ற காட்டு ஜாதி மக்கள் யானையைச் சாப்பிடுறாங்க. அவங்களுக்கும் ஒரு மத நம்பிக்கை இருக்கவே செய்யுது. சுவாமிஜி, அவங்களைப் பத்தி நீங்க படிச்சது இல்லியா?''

“இல்ல..''

“பிக்மிகளோட மத நம்பிக்கையைப் பத்தி எனக்கு இப்போ சரியா ஞாபகத்துல இல்ல. எல்லா காட்டுவாழ் மக்களைப் போலவே அவங்களுக்கும் மரணத்துக்கு பிறகு இருக்குற வாழ்க்கையில நம்பிக்கை இருக்கு.

அவங்களைச் சேர்ந்தவங்க யாராவது இறந்துட்டாங்கன்னா, அவங்களோட ஆத்மா இருக்கும் இடத்தை சொர்க்கம்னு நினைக் கிறாங்க அந்தக் காட்டுவாழ் மக்கள். வேட்டையாடுறதுல அவங்களுக்கு விருப்பம் அதிகம். பிக்மிகள் அதிகமா வேட்டையாடுறது யானைகளைத்தான். அவங்க ரொம்பவும் உயரம் குறைவானவங்க. மூணுல இருந்து மூணரை அடி உயரம்தான் அவங்களுக்கு. யானையோட சாணத்தை தண்ணீர்ல கலக்கி, அதை அவங்க தங்களோட உடம்பு முழுக்க நல்லா மேல இருந்து கீழே வரை தேய்ச்சிக்குவாங்க. பிறகு மரத்துண்டுகளைக் கூர்மையா சீவி கையில வச்சிக்கிட்டு யானைக்குப் பின்னாடி ஓடுவாங்க. யானைக்கு ஒரு சந்தேகமும் வராது. அவங்க யானையைக் குத்தி காயம் உண்டாக்கு வாங்க. யானை திரும்பிப் பார்க்கும். ஆனா, அவங்க உயரம் கம்பியா இருக்குறதால, யானையோட கண்கள்ல அவங்க பட மாட்டாங்க. காயங்கள் அதிகமானவுடன் யானையால் அதுக்கு மேல நடக்க முடியாது. அப்படியே என்ன பண்றதுன்னு தெரியாம, நின்னுடும். உணவு சாப்பிடாம, நாளடைவுல உடல் தளர்ச்சியடைஞ்சு, அது செத்து கீழே விழுந்திடும். அதுக்குப்பிறகு என்ன? விருந்துதான், பாட்டுதான், கூத்துதான்... ஆடை விஷயத்துல அவங்க ஆர்வமே எடுத்துக்குறது இல்ல...''

“யானையை விட்டா, அவங்க வேற என்னெல்லாம் சாப்பிடுவாங்க?''

“முயல், மீன்கள், நத்தை, சிலந்திகள், முட்டை, ஈசல், எறும்புகள், தவளை, குதிரை, கழுதை, புழுக்கள், பாம்புகள்...''

“பாம்புகளைப் பிடிச்சுத் தின்னுவாங்களா என்ன?''

“தின்னுவாங்க, சுவாமிஜி. நல்ல பாம்புகள், ராட்டிள் ஸ்னேக், மலைப் பாம்புகள், சாரைப் பாம்புகள், தண்ணீர்ப் பாம்பு- எல்லாத்தையும் ரொம்ப ரொம்ப விரும்பிச் சாப்பிடுவாங்க!''

“விஷம்?''

“விஷம் இப்போ அவங்களோட உணவுப்பொருளா ஆயிடுச்சா என்னன்னு தெரியல!''

“நல்ல பாம்பை எப்படிச் சாப்பிடுறாங்க?''

“பாம்புகளை காட்டுவாழ் மனிதர்களும், பல மேல் நாட்டுக்காரர்களும் சாப்பிடத்தான் செய்றாங்க. தவளை, எலி, பாம்புகள்- எல்லாமே அவங்களோட ருசியான உணவுப் பட்டியல்ல இருக்கு. இப்போ நாம கிழக்கத்திய நாடுகள் எதுக்காவது போய் அங்கே இருக்குற பெரிய ஒரு ஹோட்டலுக்குப் போறோம்னு வச்சுக்கோங்க. நமக்கு ஏதாவது குடிக்கணும்போல இருக்கு. ஏதாவது சாப்பிடணும். என்ன சாப்பிடுறது? அங்கே கோழி வளர்க்குற நிலையங்கள் இருக்கு. மற்ற பறவைகளும் அங்கே நிறையவே இருக்கு. மீன்களுக்கும், பாம்புகளுக்கும் பஞ்சம் இல்ல. மணல் பரப்பப்பட்ட பெரிய சிமெண்ட் குழிகளுக்குள் உணவு கொடுத்து பாம்புகளை அங்கே வளர்க்கிறாங்க. இரும்பு வலைகள் போட்டு அந்தப் பாம்புகளை மூடியிருப்பாங்க. ராத்திரி நேரங்கள்ல விளக்குகள் எரிஞ்சுக்கிட்டு இருக்கும். படம் விரிச்சு கோபமா ஆடிக்கிட்டு இருக்கிற ஒரு நல்ல பாம்பை நமக்குப் பிடிக்குதுன்னு வச்சுக்குவோம். நாம அதனோட விலையைப் பேசி பிரச்சினை முடிஞ்சிருச்சின்னா, அடுத்த நிமிஷம் ரப்பர் கையுறை அணிஞ்ச பரிசாரகன் வலையை உயர்த்தி, நீளமான ஒரு கம்பியால அந்த அழகான நல்ல பாம்பைப் பிடிச்சுத் தூக்கி தலையைப் பிடிப்பான். தன்னோட ரப்பர் கையுறையில் அந்தப் பாம்பைச் சுத்துவான். வலையைத் திரும்பவும் மூடிட்டு, நம்மகூட ஒரு அறைக்குள்ள வருவான். நாம கேக்குற மது அடுத்த நொடியில வருது. ஐஸ் கட்டிகள் வருது, ஐஸ்கட்டிகள் ரெண்டோ மூணோ எடுத்து கண்ணாடி டம்ளருக்குள் போட்டு, மதுக்குப்பியைத் திறந்து ரெண்டு பெக் வீதம் அதுல ஊத்துறோம். நல்ல பாம்போட தலையையும், உடலையும் தனித்தனியா பிரிச்சு, இரத்தத்தை மது ஊத்தப்பட்டிருக்குற கண்ணாடி டம்ளர்கள்ல பரிசாரகன் வழிய விடுறான். தலையையும் உடலையும் எடுத்துக்கிட்டு அவன் போறான். நாம மதுவை ருசிச்சுப்பார்த்து, சிகரெட்டைப் புகைத்து, படைப்புன்ற உலகத்தோட மிகப்பெரிய விஷயத்தைப் பத்திப் பேசிக்கிட்டு இருக்கோம். அப்போ நல்ல பாம்போட தோலை உரிச்சு, பச்சை வாழைக்காயை நறுக்குறது மாதிரி நல்லா நறுக்கி, உப்பும், மிளகாயும், மசால் சாமான்களும் கலந்து, பசுவோட நெய்ல நல்ல முறையில வறுத்து, ரெண்டு தட்டுகள்ல அதை பரிசாரகன் நமக்காக எடுத்துட்டு வர்றான். தக்காளிப் பழத்தை அறுத்து, பச்சை மிளகாய், உப்பு, வெங்காயம் சேர்த்து பக்கத்துலயே வைச்சிருப்பான். சிம்ப்ளி க்ராண்ட்! நாம் உட்கார்ந்து சாப்பிடுறோம். குடிக்கிறோம். நல்லபாம்பைச் சாப்பிட்டு முடிச்சதும், ஒரு சின்ன மலைப்பாம்பையும் சாப்பிடலாம்னு...''

“பூனையை அவங்க சாப்பிடுறது உண்டா?''

“தின்பாங்க, சுவாமிஜி. கருப்புப் பூனைன்னா உயிர்...''

“நீலகண்டனைப்போல உள்ள வெள்ளைப் பூனையையும் தின்பாங்களா?''

“நல்லாவே தின்பாங்க.''

“அப்ப மனிதர்களுக்கு இதுகூட ஜீரணமாகும்னு சொல்லுங்க!''

“ஜீரணமாகுறதா? நீண்ட காலம் எந்தவித குறைபாடும் இல்லாம, நல்ல ஆரோக்கியத்தோட வாழ்றாங்கன்னு வச்சுக்கோங்க...''

“அப்ப... நீங்க சொல்றபடி பார்த்தா, மனசுக்கு எது பிடிக்குதோ, அதை அவங்க சாப்பிடுறாங்க. இரத்தம், பால், பாம்பு, திமிங்கிலம், பூனை- எல்லாமே மனிதப் பிறவிகளோட உணவுகள்தாம். இப்படிப் பார்த்தா, மனிதர்களோட உண்மையான உணவுதான் எது?''

“ஒரு மனிதனையே இன்னொரு மனிதன் சாப்பிடுறான். இப்பவும் இது நடக்குது. மனிதனை புலி, சிங்கம், மலைப்பாம்பு, சுறா ஆகியவை சாப்பிடுது.''

பேசிக்கொண்டிருந்தபோது, பயங்கரமான ஒரு சீறல் சத்தம்! ஒரு குரைப்பு! ஒரு கோழியின் கொக்கரிப்பு! நாய், நீலகண்டனைப் பிடித்துத் தின்னப் பார்க்க... ஆனால், நீலகண்டன் நாயை ஒரு கடி கடித்துவிட்டு, ஓடிச்சென்று பலா மரத்தின் மேல் ஏறி, நகத்தால் இறுகப் பற்றியவாறு உட்கார்ந்திருக்கிறான். நாய் பலாமரத்துக்குக் கீழே நின்று, மேலே பார்த்தவாறு பெரிய சத்தத்தில் குரைத்துக் கொண்டிருக்கிறது. ஒயிட் லெகான் சேவல் இரண்டு பேரையும் பார்த்துக் கொக்கரிக்கிறான்.

நான் போய் ஒரு கயிறை எடுத்துக்கொண்டு வந்து நாயைப் பிடித்துக் கட்டிவைத்துவிட்டுத் திரும்பி வந்தேன். அப்போது சந்நியாசி நீலகண்டனைக் கையில் வைத்துக்கொண்டு பாசத்துடன் தடவிக் கொண்டிருந்தார்.

“பரவாயில்ல... நீலகண்டா! நீ ஒரு புனிதப் பூனைன்னோ, மந்திரப் பூனைன்னோ நாய்க்குத் தெரியாதுல்ல! சரியான சந்தர்ப்பம் கிடைச்சா, உன்னைச் சாப்பிடலாம்னு நாய் பார்த்துச்சு. நீ அந்த நாய்ப் பயலை...''

“நாய்ப் பெண்!''

“மன்னிக்கணும்.'' சந்நியாசி நீலகண்டனை என் கையில் தந்தவாறு சொன்னார்: “நான் இந்த ஊரை விட்டே போகப்போறேன், சுவாமிஜி. இது நான் ஏற்கனவே முடிவு பண்ணின விஷயம்!''

“எப்போ புறப்படுறதா இருக்கு, சுவாமிஜி?''

“சொல்றேன்.''

அவர் அந்த இடத்தை விட்டு அகன்றார்.

அவர் சொல்ல வந்ததை முழுமையாக முடித்தாரா? படைப்புகளின் உண்மையான உணவுதான் எது?

அடுத்த நாள் நான் நகரத்திற்குப் போய் ஒரு போர்வையும், ஜமுக்காளமும் வாங்கிக் கொண்டு, பாலத்தின் அடிப்பக்கத்தை நோக்கிப்போனேன். சந்நியாசி அப்போது அங்கே இல்லை.

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

சமையலறை... நெருப்பு பிடித்த இரவு

March 9, 2012,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

ஒட்டகம்

ஒட்டகம்

February 23, 2012

மீசை

மீசை

April 2, 2012

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel