Lekha Books

A+ A A-

செல்க்காஷ் - Page 2

selkkash

கைகளைப் பின்னால் வைத்துக் கொண்டு தேய்த்துக் கொண்டிருந்த அவன் தன்னுடைய வளைந்த கை விரல்களை ஒன்றோடொன்று கோத்து இழுத்துக் கொண்டிருந்தான். அங்கு நிறைய முரட்டுத்தனமான ஆட்கள் இருந்தாலும் மெலிந்துபோன உடம்பையும், கழுகின் முகத்தையும், ஏதோ இலக்கு வைத்துள்ள நடையையும் கொண்டிருந்த அவனை எல்லாரும் உற்றுப் பார்த்தார்கள். 

நிலக்கரிக் கூடைகள் அடுக்கப்பட்டிருந்த இடத்தின் நிழலில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த சுமை தூக்கும் தொழிலாளிகளை நெருங்கியபோது, பருக்கள் நிறைந்த சொரசொரப்பான முகத்தையும், சமீபத்தில் நடந்த சண்டையின் சுவடுகள் பதிந்திருந்த கழுத்தையும், பருமனான தேகத்தையும் கொண்டிருந்த ஒரு சுமை தூக்கும் தொழிலாளி செல்க்காஷைப் பார்த்து எழுந்து வந்தான். அவனுடன் நடந்து கொண்டே சுமை தூக்கும் தொழிலாளி மெதுவான குரலில் சொன்னான்: "ரெண்டு கட்டு துணி காணாமல் போயிட்டதா கப்பல் துறையில இருக்குற காவலாளிகள் கண்டுபிடிச்சிருக்காங்க. அவங்க தேடிக்கிட்டு இருக்காங்க."

"அதுனால என்ன?" அமைதியாக அவனை உற்றுப் பார்த்தவாறு செல்க்காஷ் கேட்டான்.

"அதுனால என்னன்னா கேக்குற? நீ என்ன நினைச்சே? அவங்க உன்னைத் தேடிக்கிட்டு இருக்காங்க. அதைத்தான் நான் உன்கிட்ட சொன்னேன்."

"அவங்ககூட நானும் தேடுறதுக்காக போவேன்னு நீ நினைச்சியா?"

செல்க்காஷ் புன்னகைத்தவாறு பண்டக சாலையைப் பார்த்தான்.

"நீ போய்த் தொலைடா."

அந்தச் சுமை தூக்கும் தொழிலாளி திரும்பி நடந்தான். "டேய், கொஞ்சம் நில்லு. உனக்கு யார்டா இந்த அழகான அடையாளங்களைத் தந்தது? உன் தலைக்குக் கீழே இப்படியொரு விஷயம் நடந்ததை நினைச்சா மனசுக்குக் கஷ்டமாத்தான் இருக்கு. சரி... அது இருக்கட்டும். நீ மிஷ்காவைப் பார்த்தியா?"

"அவனை நான் பார்த்து நிறைய நாட்கள் ஆயிடுச்சு..." - சுமை தூக்கும் தொழிலாளர்கள் இருக்கும் இடத்தை நோக்கி நடந்து கொண்டே அந்த ஆள் சொன்னான்.

செல்க்காஷைப் பார்த்தவர்கள் ஒவ்வொருவரும் அவனிடம் குசலம் விசாரித்தார்கள். ஆனால், எப்போதும் மிகவும் உற்சாகமாக இருக்கும் அவன் இன்று சிறிது கவலையில் இருப்பதைப் போல் தோன்றியது. அவனுடைய பதில்கள் மிகவும் சாதாரணமாக இருந்தன.

மலையெனக் குவிக்கப்பட்டிருந்த பொருட்களுக்குப் பின்னால் ஒரு கஸ்டம்ஸ் காவலாளி தெரிந்தான். அடர்த்தியான பச்சை நிறத்தில் சீருடை அணிந்திருந்த அந்தக் காவலாளி தைரியமாக செல்க்காஷுக்கு முன்னால் வந்து நின்றான். அவனுடைய இடது கை கத்தியின் கைப்பிடியைப் பிடித்துக் கொண்டிருக்க வலது கை செல்க்காஷின் கழுத்தை நோக்கி நீண்டது.

"நில்லுடா... நீ எங்கே போற?"

செல்க்காஷ் ஒரு அடி பின்னால் வைத்தான். காவலாளியின் சிவந்து துடித்துக் கொண்டிருக்கும் முகத்தைப் பார்த்து மிகவும் அமைதியாக அவன் புன்னகைத்தான்.

முகத்தில் அமைதி தெரிந்தாலும் சிறிது பயம் இருப்பதைப் போல் காட்டிக் கொள்ள நினைத்தான் செல்க்காஷ். அவனுடைய கன்னங்கள் வீங்கின. சிவந்தன. புருவங்கள் சுருங்கின. கண்கள் விரிந்தன. மொத்தத்தில் அவன் ஒரு முழு கோமாளியாக மாறினான்.

"இந்தத் துறைமுகம் பக்கமே உன் முகம் தெரியக் கூடாதுன்னு நான் பல தடவைகள் சொல்லிட்டேன். அதைக் கேட்காம திரிஞ்சா, நான் உன் இடுப்பெலும்பை ஒடிக்கிறதைத் தவிர வேறவழி இல்ல. இந்த விஷயம் நல்லா தெரிஞ்சும் நீ திரும்பவும் இந்தப் பக்கம் வந்திருக்கே... அப்படித்தானேடா?"- காவலாளி உரத்த குரலில் கத்தினான்.

"நல்லா இருக்கீங்களா ஸெமியோனிச்? உங்களைப் பார்த்து எவ்வளவு நாட்களாச்சு?"- தன் வலது கையை முன்னால் நீட்டியவாறு செல்க்காஷ் அலட்சியமான குரலில் சொன்னான்.

"இனி ஒரு ஐம்பது வருடங்களுக்கு உன்னை நான் பார்க்கலைன்னாகூட, அதுக்காக நான் அழ மாட்டேன். போ... சீக்கிரமா இந்த இடத்தை விட்டுப் போ!"

ஆனால், அவன் நீட்டிய கையைக் காவலாளி பிடித்துக் குலுக்கினான்.

"நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்" உருக்கைப் போன்ற விரல்களால் நட்பை வெளிப்படுத்தும் விதத்தில் காவலாளியின் கையைப் பிடித்துக் குலுக்கியவாறு செல்க்காஷ் கேட்டான்.

"மிஷ்காவை எங்கேயாவது பார்த்தீங்களா?"

"எந்த மிஷ்கா? எந்த ஒரு மிஷ்காவையும் எனக்குத் தெரியாது. இடத்தைப் பாழ் பண்ணாதே, மனிதா. நீ தேவையில்லாம எதையாவது பேசிக்கிட்டு நிக்காதே. கப்பல் துறை காவலாளிகள் உன்னைப் பிடிச்சு உள்ளே போட்டுடுவாங்க."

"காஸ்ட்ரோமோவில் என்கூட வேலை செய்த அந்தச் சிவப்பு தலைமுடியைக் கொண்ட மிஷ்கா..." செல்க்காஷ் அப்போதும் விடுவதாக இல்லை.

"உன்கூட சேர்ந்து திருடின ஆளைப் பற்றித்தானே நீ விசாரிக்கிறே? அவன் மருத்துவமனையில இருக்கான். இரும்புக் கம்பியால அடி வாங்கிக் காலொடிஞ்சு படுத்த படுக்கையா கிடக்குறான். நீ இப்போபோறியா இல்லியா? நான் கழுத்தைப் பிடிச்சு தள்ளுறதுக்கு முன்னாடி இங்கேயிருந்து போறது உனக்கு நல்லது."

"இதென்ன கூத்து? மிஷ்காவைத் தெரியவேதெரியாதுன்னுல்ல முதல்ல நீங்க சொன்னீங்க. ஸெமியோனிச், உங்களுக்கு என்ன ஆச்சு?"

"உன்கிட்டத்தான் நான் சொன்னேன். அதிகமா பேசிக்கிட்டு இருக்காதே. சீக்கிரமா இடத்தை காலி பண்ணு."

காவலாளிக்குக் கோபம் வந்தது. அவன் சுற்றிலும் பார்த்தான். தன்னுடைய கைகளை விடுவிக்க அந்த ஆள் முயற்சி செய்தாலும், அடர்த்தியான புருவங்களுக்கு இடையிலிருந்த கண்களால் சாந்தமாக அவனைப் பார்த்துக் கொண்டிருந்த செல்க்காஷ் அந்தக் கைகளை இறுகப் பிடித்திருந்தான். "என்ன இவ்வளவு அவசரம்? நாம கொஞ்சம் பேசினபிறகு, போனால் போதாதா? என்ன விசேஷங்கள்? மனைவியும் பிள்ளைகளும் என்ன சொல்றாங்க? சுகமா இருக்காங்களா?"

செல்க்காஷின் கண்கள் பிரகாசித்தன. கேலிச் சிரிப்பின் பகுதியாக அவனுடைய பற்கள் பளிச்சென்று இருந்தன. அவன் தொடர்ந்து சொன்னான்: "கொஞ்ச நாட்களாகவே உங்களை நான் பார்க்கணும்னு விருப்பப்பட்டேன். ஆனா, அதற்கு நேரம்தான் கிடைக்கல. இந்தத் துறைமுகத்துல..."

"பேசக் கூடாதுன்னு உன்கிட்டதானே நான் சொன்னேன்? டேய், எலும்பு... மந்த புத்திப் பயலே... உன் தமாஷ் வேலைகளெல்லாம் என்கிட்ட வேண்டாம். நான் சொன்னது புரிஞ்சதுல்ல? வேற யாராவது ஆளோட வீட்டை உடைக்கிறதுக்கோ பிக் பாக்கெட் அடிக்கிறதுக்கோ திட்டம் போட்டு வச்சிருக்கியா?"

"ச்சே... நான் எதுக்கு அதையெல்லாம் செய்யணும்? நம்ம ரெண்டு பேரையும் ஒரு பிறவி முழுவதும் ஓய்வு ஒழிச்சல் இல்லாத ஆளுங்களா வச்சிருக்கிறதுக்கு இதை விட்டா வேற எத்தனையோ விஷயங்கள் இங்கே இருக்கு. உண்மையாகவே சொல்றேன், ஸெமியோனிச். ஆனா, நான் கேள்விப்பட்டது நீங்க ரெண்டு கட்டு துணியைக் களவாடிட்டீங்கன்னு... கவனமா இருந்துக்கங்க. இல்லாட்டி, தேவையில்லாத பிரச்சினைகள்ல நீங்க மாட்டிக்குவீங்க."

ஸெமியோனிச் கோபம் கொண்டு விரைத்து நின்றான். பேச முயற்சித்தபோது, அவனுடைய வாய்க்குள்ளிருந்து எச்சில் தெறித்தது. செல்க்காஷ் அவனுடைய கையை விட்டு அமைதியாக துறைமுகத்தின் நுழைவாயிலை நோக்கி நடந்தான். அவனைத் திட்டிக் கொண்டே காவலாளி முன்னோக்கி நடந்தான்.

 

+Novels

Popular

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

நிராசை

May 24, 2012,

உறவுகள் பிரிவதில்லை

March 22, 2013,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel