Lekha Books

A+ A A-

பூவினும் மெல்லிய பூங்கொடி! - Page 14

poovinum mellia poongodi

மழை வலுத்தது. நனைந்தாள். அதன்பின் எங்காவது ஒதுங்கலாமே என்று இடம் தேடினாள். எதிரே ஓர் உருவத்தைப் பார்த்தாள்.

'யாரோ வர்றாங்களே ரங்கநாயகியோ? சச்ச... ஏதோ ஒரு ஆள் மாதிரியில்ல இருக்கு? ரங்கநாயகி யாரையாவது அனுப்பியிருப்பாளோ... நல்லதாப் போச்சு. இனி பயமில்லாம போகலாம்' நின்றாள்.

எதிரே வந்தவன் ஒரு குடிகாரன். இரவில் ஏகமாய் குடித்துவிட்டு விடியும் தறுவாயில் போதை முழுமையாகத் தெளியாமல் தள்ளாடி வந்துக் கொண்டிருந்தான். மதுவின் அரைகுறை போதையில், மங்கலான வெளிச்சத்தில் மழையில் முழுவதும் நனைந்து போன உடையுடன் காட்சி அளித்த அழகிய மாதுவைக் கண்டதும் மதி மயங்கினான். கவிதாவின் அருகே வந்தான். முரட்டுத்தனமாக அவளை அணைத்தான்.

"ஐயோ... ஹெல்ப்... ஐயோ..." அலறிய கவிதாவின் வாயைத் தன் கையால் மூடினான். அவனது அதிரடியான நடவடிக்கையை எதிர்த்துப் போராடியும் சமாளிக்க முடியாத கவிதா தடுமாறிக் கீழே விழுந்தாள். அதிர்ச்சியில் அரைகுறை மயக்கத்தில் ஆழ்ந்த கவிதாவின் மேல் படர்ந்தான் அவன். போதையில் மிருகமாகிவிட்ட அந்த மனிதனால்

கவிதாவின் கற்பு, காற்று பட்ட கற்பூரமாய் கரைந்து போனது.

15

"ஐய்யோ ஓடி வாங்களேன், ஒரு பிள்ளை மயங்கிக் கிடக்கு. வாங்க." தண்ணீர் எடுப்பதற்காக குடம் எடுத்து சென்ற பெண்மணி ஒருத்தி கவிதா மயங்கிக் கிடப்பதைப் பார்த்துக் கத்தினாள்.

சுற்றும், முற்றும் வயக்காட்டு வேலைக்குப் போய்க் கொண்டிருந்த பெண்கள் ஓடி வந்தனர்.

"பார்த்தா பட்டணத்துப் பிள்ளை மாதிரி இருக்கே? யாரா இருக்கும்?"

"அசலூராத்தான் இருக்கும்."

"அட! ஆளாளுக்கு பேசிக்கிட்டே இருந்தா?... முகத்துல தண்ணி தெளிச்சுப் பாருங்க."

தண்ணீர் தெளித்ததும், கவிதா லேசாகக் கண் விழித்தாள். விழித்ததும் பயத்தில் 'வீல்' என்று அலறினாள்.

"பாவம்.. காத்து கருப்பு பட்டிருக்கு போலிருக்கு, ஏம்மா, வயசுப் பொண்ணு தனியா இருட்டுக்குள்ள எதுக்காக வந்தே? நீ யாரு?"

மலங்க மலங்க விழித்தாள் கவிதா.

"நிதானமா சொல்லு தாயி, நாங்க இந்த ஊர்க் காரங்கதே, பயப்படாதே. பார்த்தா படிச்ச பிள்ளையா தெரியுது. இப்பிடி பயந்துக்குதே."

"இதுக்கு முன்னால இந்த ஊர்ல இந்தப் பிள்ளையை பார்த்தது கூட இல்லையே? யார் வீட்டுக்கு, யாரைப் பார்க்க வந்துச்சோ? பட்டணத்துல பட்டப்படிப்பு படிச்சுட்டா தனியா எங்க வேண்ணாலும் கிளம்பிடுதுங்க."

"என்னம்மா நீங்க, பயத்துல வாயடைச்சுக் கிடக்கற பிள்ளைகிட்ட சாவகாசமா விசாரிக்காம மடமடன்னு கேள்வி மேல கேள்வி கேட்டுக்கிட்டு... முதல்ல குடிக்கறதுக்கு ஏதாவது குடுங்க. அந்த திண்ணைக்குக் கூட்டிட்டு போய் உட்கார வைங்க." பெரிய மனிதர் ஒருவர் சொன்னார்.

கவிதாவை கைத்தாங்கலாக கூட்டிச் சென்று திண்ணையில் உட்கார வைத்தனர். பானகம் கரைத்து வந்து கொடுத்ததும், தாகத்தில் மடமடவென்று குடித்தாள்.

அதன்பிறகு, மறுபடியும் அவள் யார்? ஏன்று கேட்க ஆரம்பித்தனர். கவிதா அழுதாள், சிரித்தாள், பயத்தில் அலறினாள். இவற்றையே மாறி மாறி செய்தாள்.

"ஐயய்யோ, இந்தப் பிள்ளை பைத்தியம் போலிருக்கு. இந்தப் பிள்ளையோட பையை எடுங்க. விலாசம் ஏதாவது இருக்கான்னு பார்ப்போம்" பெரியவர் சொன்னதும் கவிதாவின் பையைப் பிரித்துப் பார்த்தனர். அதில் ரங்கநாயகியின் முகவரி எழுதப்பட்டு இருந்தது. கூட்டத்தில் நின்றிருந்த படித்த வாலிபன் ஒருவன் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த விலாசத்தை, தமிழில் எடுத்துச் சொன்னான்.

"அட, நம்ம பஞ்சாயத்து தலைவர் அருணாசலம் ஐயா வீட்டு விலாசமில்ல எழுதியிருக்கு? அவுக வீட்டுக்கு வந்த பிள்ளை.. இருட்டுல எதையோ கண்டு மிரண்டிருக்கு. கூட்டிட்டுப் போய் அவுக வீட்டில விட்டுரலாம். அம்மன் கோயில் பூசாரி ஒரு தட்டு தட்டினார்னா இந்த பயம் எல்லாம் போயிடும்."

ரங்கநாயகியின் வீட்டுக்குக் கவிதாவை அழைத்துச் சென்றனர்.

16

"அம்மா... இந்தப் பிள்ளை வயக்காட்டுப் பக்கம் மயக்கமா கிடந்தா. மயக்கம் தெளிஞ்சப்புறம் யாரு என்னன்னு கேட்டா எதுவும் சொல்ல மாட்டேங்குது. எதையோ கண்டு மிரண்டிருக்கு. இவ பையில உங்க விலாசம் இருந்துச்சு."

பெரியவர், கவிதாவை ரங்கநாயகியின் தாய் புவனேஸ்வரியிடம் ஒப்படைத்து விடை பெற்றார்.

தன் கிராமத்து வீட்டின் ஒரு ஓரமாய் கயிற்றுக் கட்டிலில் வேப்பிலை தூவப்பட்ட படுக்கையில் படுத்திருந்த ரங்கநாயகி, கவிதாவின் நிலை கண்டு திடுக்கிட்டாள்.

"அம்மா, இவதாம்மா என் ஃபிரண்டு கவிதா. ஸ்டேஷனுக்கு வர்றதா சொல்லி இருந்தேன். ஐய்யோ... ஏம்மா இவ இப்பிடி இருக்கா? கவிதா... கவி..." ரங்கநாயகி எழுந்திருக்க முயற்சி செய்தாள்.

"நீ எழுந்திருக்காத கண்ணு, நான் கூட்டிட்டு வரேன்."

"வாம்மா கவிதா. உன்னைக் கூப்பிடறதுக்கு ஸ்டேஷன் போகணும்னு ரங்கநாயகி சொல்லிக்கிட்டிருந்தா. ஆனா ஆத்தா முத்து போட்டுடுச்சு. அவுக ஐயாவும் ஊர்ல இல்லை. அதான் உனக்கு தகவல் குடுக்க முடியலை." புவனேஸ்வரி பேசியது எதுவுமே கவிதாவை பாதிக்கவில்லை. ரங்கநாயகியின் அருகே கவிதாவை உட்கார வைத்தாள் புவனேஸ்வரி.

"நான் போய் காபித்தண்ணி கொண்டாரேன்."

"கவிதா... கவி... என்ன ஒண்ணுமே பேச மாட்டேங்கற? கோபமா? ஸாரிடி. எனக்கு உடம்புக்கு முடியாததுனாலதான் உன்னைக் கூப்பிட ஸ்டேஷனுக்கு வர முடியலை... கவிதா.. கவி..." ரங்கநாயகியின் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் கவிதா சிரித்தாள். அழுதாள். அவளது நடவடிக்கைகளைப் பார்க்கும் பொழுது ஒரு குழந்தை போல இருந்தது.

"ஐயோ கவிதா..." ரங்கநாயகி கத்தியதும், புவனேஸ்வரி ஓடி வந்தாள்.

"என்ன கண்ணு, என்ன ஆச்சு?"

"அம்மா... கவிதாவைப் பாருங்கம்மா, அவளுக்கு என்னமோ ஆயிடுச்சு."

கவிதா தொடர்ந்து சிரிப்பதும் அழுவதுமாய் இருந்தாள். இரட்டைப் பின்னலைப் பிரித்தாள். மீண்டும் போட்டாள். சம்பந்தம் இல்லாமல் என்னென்னவோ உளறினாள்.

"ஐயய்யோ, என்ன கண்ணு, இந்தப் பிள்ளையைப் பார்த்தா பித்துப் பிடிச்ச பிள்ளை மாதிரியில்ல இருக்கு?"

"ஆமாம்மா, எனக்கு அவளைப் பார்க்கவே பயம்மா இருக்கும்மா."

"உங்க ஐயா இன்னிக்கு ராத்திரி வந்துருவாரு. வந்ததும் மொத வேலையா இந்தப் பிள்ளையை அவுக ஊர்ல அவுக அம்மா, ஐய்யாகிட்ட ஒப்படைக்க சொல்லணும். தாயே கருமாரி, இதென்னம்மா சோதனை?" புவனேஸ்வரி புலம்புவதும், ரங்கநாயகி அழுவதும் கவிதாவை சிறிதும் பாதிக்கவில்லை. அவள் ஒரு சிறுமியைப் போல தனக்குத்தானே பேசி விளையாடிக் கொண்டிருந்தாள்.

அவளது மாறுபட்ட நடவடிக்கைகளைக் கண்டு பயந்து போன புவனேஸ்வரி, தன் உறவுக்காரப் பெண்மணியை ரங்கநாயகிக்குத் துணையாக இருக்கச் செய்தாள். கவிதாவை அழைத்துக் கொண்டு கிளம்பினாள். சிங்காரம்பிள்ளையிடமும், விஜயாவிடமும் கவிதாவை ஒப்படைக்கப் புறப்பட்டாள்.

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

சமையலறை... நெருப்பு பிடித்த இரவு

March 9, 2012,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

கௌரி

கௌரி

January 30, 2013

மாது

May 16, 2018

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel