Lekha Books

A+ A A-

சிங்கிடி முங்கன் - Page 4

singdi mungan

இனிதான் சிங்கிடி முங்கனோட அற்புதங்களை உங்களுக்கு நான் சொல்லப் போறேன்.'' கரியாத்தன் சிகரெட்டை இழுத்து, இருமியவாறு சொன்னான்: "இதை எவ்வளவு இழுத்தாலும், தீரவே மாட்டேங்குது.''

"சிகரெட்டுக்கு நீளம் அதிகம்.'' அப்துல் ரசாக் கூறினான்: "ஆமா... அப்படி என்ன அற்புதங்கள்? சொல்லு..''

கரியாத்தன் சொன்னான்: "ம்... சொல்றேன். ஒருநாள் தெய்வமான சிங்கிடி முங்கன் கீழே பாக்குறப்போ பூமியில் அக்கிரமம் நடக்குது... மேல்ஜாதிக்காரர்கள்னு சொல்லிக்கிற நம்பூதிமார்களும், நாயர்களும், கொங்கிணிகளும், பட்டர்களும், முஸ்லிம்களும், கிறிஸ்துவர்களும், திய்யர்களும், ஈழவர்களும் ஒண்ணு சேர்ந்து புலையர், பறையர், உள்ளாடன்மார்கள் முதலான பாவப்பட்டவங்களை அடிச்சு மிதிச்சு அடிமைகள் ஆக்கிக்கிட்டு இருக்காங்க. உண்மையிலேயே கொடூரமான நிகழ்ச்சிதான்! சிங்கிடி முங்கனால் இதைச் சகித்துக் கொள்ள முடியுமா?''

கரியாத்தன் தன் பேச்சை சிறிது நேரம் நிறுத்தினான். ஏதோ சிந்தனை வயப்பட்டு சில நிமிடங்கள் அமர்ந்திருந்தான். பிறகு ஒரு டண்ஹில்லை எடுத்து உதட்டில் வைத்துப் புகைத்து, இருமியவாறு தொடர்ந்தான்: "அதான்... ஆதிபுலையலரான நாங்க... புலையர்களோட ராஜான்ற சரித்திர உண்மைகளைச் சொன்னேனே! ஒருநாள் ஒரு புலையப் பெண்- எங்களோட மூதாட்டி புல்லறுக்கப் போனாள். புல்லறுத்துக்கிட்டு இருக்கிறப்போ காட்டில் ஒரு நீண்ட கல்லைப் பார்த்தாள். கருங்கல். அதுல மூதாட்டி கையில இருந்த அரிவாளைத் தேய்ச்சுத் தேய்ச்சு தீட்டி இருக்கா. அப்பத்தான் அந்த அற்புதம் நடந்தது!''

"என்ன அற்புதம்?'' ஆயிஷா பீபி ஆவலுடன் கேட்டாள்.

கரியாத்தன் சொன்னான்: "ரத்தம்...''

"ரத்தமா?'' அப்துல் ரசாக் கேட்டான்.

"ஆமா... கருங்கல்ல இருந்து சிவப்பா ரத்தம் வழியுது. நிற்காமல் தொடர்ந்து ரத்தம் கொட்டிக்கிட்டே இருக்கு. மூதாட்டி பயந்துபோய் வீட்டுக்கு ஓடி வந்து பெரியவங்ககிட்டே விவரத்தைச் சொன்னாள். என்னவா இருக்கும்னு அவங்க அலசி ஆராயிறப்போதான் அவங்களுக்கே தெரிய வருது அந்த அற்புதங்களின் அற்புதத்தைப் பற்றி. உலக நன்மைக்காக வந்த அவதாரத்தைப் பற்றி அப்போதுதான் தெரிய வருது. அந்த அவதாரம்தான் சிங்கிடி முங்கன்! உக்கிரமூர்த்தி... முன்கோபி... சுயம்பு!''

கரியாத்தன் தன் பேச்சை நிறுத்தினான். சில நிமிடங்கள் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தான். பிறகு பக்திப் பெருக்கோடு கூறினான்:

"ஹர ஹர சிங்கிடி முங்கன்!''

"அதுக்குப் பிறகு...?'' ஆயிஷா பீபியும் அப்துல் ரசாக்கும் ஒரே குரலில் கேட்டார்கள். கரியாத்தன் சொன்னான்:

"பிறகு என்ன? எல்லாமே வேகவேகமாக நடக்க ஆரம்பிருச்சு. நைவேத்தியம், மந்திர உச்சரிப்புகள், ஸ்ரீகோவில், கற்பூர தீபங்கள், தங்க சிம்மாசனம்- கோவில் உண்டாக்கிப் பிம்ப பிரதிஷ்டை நடத்தணும். மேல்ஜாதிக்காரங்கன்னு சொல்றவங்க இடம் தருவாங்களா? உடனே ஆதிபுலையரான நாங்க ஒண்ணு சேர்ந்து பணம் தயார் பண்ணி மேல்ஜாதிக்காரங்கன்னு சொல்லித் திரிகிறவங்களோட வயல்ல ஒரு பகுதியை விலைக்கு வாங்கி கோவில் கட்டி பிம்ப பிரதிஷ்டையும் செஞ்சாச்சு. ஹர ஹர சிங்கிடி முங்கன்!''

"நாங்க என்ன செய்யணும்?''

"விஷயத்தைதான் நான் ஏற்கெனவே சொல்லிட்டேனே! பக்தி வேணும். எளிமை வேணும். நம்பிக்கை வேணும். கோவிலுக்குப் போகலாம். கீர்த்தனைகள் சொல்லலாம். தெய்வத்தைத் தொழலாம். நம்ம பிரச்சினை என்னன்னு சொல்லலாம். ஒரு குழந்தை வேணும்னு கடவுள்கிட்ட கெஞ்சி நிற்கலாம். குழந்தைக்குச் சரிசமமா தராசுல மீன் வச்சு தெய்வத்துக்குத் தரலாம். ஒரு பானைக் கள்ளு தரலாம். என்ன சொல்றீங்க?''

இதில் சிந்திக்க என்ன இருக்கிறது? அப்துல் ரசாக்கும் ஆயிஷா பீபியும் கரியாத்தனும் கோவிலை நோக்கி கிளம்பினார்கள். ஒரு காரில்தான். மதிய நேரம் ஆனபோது காரை சாலை ஓரத்தில் நிறுத்தினார்கள். கோவிலுக்கு சிறிது தூரம் கால்நடையாக நடந்து செல்ல வேண்டும். போகிற வழியில் நிறைய வீடுகள். எல்லாம் கிட்டத்தட்ட குடிசைகள்தாம். அந்தக் குடிசைகளுக்கு மத்தியில் அவர்கள் நடந்து சென்றார்கள். நிறைய நாய்கள், நிறைய பூனைகள், நிறைய பன்றிகள், நிறைய கோழிகள், நிறைய ஆடுகள். இவை எல்லாவற்றையும் தாண்டி, வயலின் வழியே நடந்து சென்று அவர்கள் கோவிலை அடைந்தார்கள். ஓலையில் வேயப்பட்ட- இன்றோ நாளையோ என்று சிதிலடைந்துபோய்க் காணப்பட்ட ஒரு சிறிய கட்டடம். அதுதான் கோவில். மரக்கம்புகளை ஆங்காங்கே தூணாக நிறுத்தி இருந்தார்கள். சுற்றிலும் ஓலையால் மறைக்கப்பட்டிருந்தது.

கோவிலைப் பார்த்த ஆயிஷா பீபிக்கும் அப்துல் ரசாக்கிற்கும் பெரிய அற்புதம் ஒன்றும் மனதில் தோன்றவில்லை.

கயிறு கொண்டு கட்டப்பட்ட வாசல் கதவின் கட்டை அவிழ்த்து கரியாத்தன் உள்ளே நுழைந்தான். அவனைத் தொடர்ந்து அப்துல் ரசாக்கும் ஆயிஷா பீபியும் நுழைந்தார்கள். உள்ளே நல்ல இருட்டு. வெளிக் காற்று உள்ளே வராததால், ஒரு வகை வாசனை அங்கு வியாபித்து நின்றது. இருட்டோடு இருட்டாய் சங்கமமாகி நின்று கொண்டிருக்கிறபோது, ஆயிஷா பீபிக்கும் அப்துல் ரசாக்கிற்கும் தெய்வ தரிசனம் கிடைத்தது. கரியாத்தன் தீப்பெட்டியை உரசி உண்டாக்கிய வெளிச்சத்தில் கோவிலுக்குள் இருந்த தெய்வச் சிலை தெரிந்தது. சாட்சாத் சிங்கிடி முங்கன்தான்!

தங்கத்தாலான சிம்மாசனமோ கருவறையோ எதுவுமே அங்கு இல்லை. கரியாத்தன் தீக்குச்சியால் உண்டாக்கிய வெளிச்சம் தீர்ந்தவுடன், மீண்டும் ஒரே இருட்டு. எல்லாரும் இருட்டில் கரைந்து போய் நின்றிருந்தார்கள். கண்களோ, மூக்கோ, வாயோ, காதுகளோ, தலையோ, கையோ, காலோ ஒன்றையும் பார்க்க முடியவில்லை. மொத்தத்தில் பார்த்தது கறுத்துப்போன- கிட்டத்தட்ட எடை குறைந்த நீளமான கருங்கல் ஒன்றைத்தான். வெறும் நிலத்தில் குழி தோண்டி நிறுத்தி இருக்கிறார்கள்.

கைகளால் தொழுது மனதிற்குள் தியானம் செய்தவாறு வேண்ட நினைப்பதை வேண்டும்படி கேட்டுக் கொண்டான் கரியாத்தன். எங்கோ இருந்து மணி ஒன்றைத் தேடிப் பிடித்துக் கொண்டு வந்து கரியாத்தன் அதை ஆட்டினான். ஆயிஷா பீபியும் அப்துல் ரசாக்கும் ஒன்றாக நின்று பிரார்த்தித்தார்கள்.

"எங்களுக்கு ஒரு குழந்தையைத் தரணும். குழந்தை எடைக்கு எடை மீன் தர்றோம். ஒரு பானைக் கள்ளும் தர்றோம்.''

கரியாத்தனும் ஆயிஷா பீபியும் அப்துல் ரசாக்கும் ஒன்றாக நின்று பக்தியுடன் வேண்டினார்கள்.

"ஹர ஹர சிங்கிடி முங்கன்! ஹர ஹர சிங்கிடி முங்கன்! ஹர ஹர சிங்கிடி முங்கன்!''

மனம் வேண்டுவதை சிங்கிடி முங்கனிடம் கூறி முடித்தவுடன் அப்துல் ரசாக் கேட்டான்:

"கரியாத்தா, கோவிலுக்கு நாங்க என்ன கொடுக்கணும்?''

"கோவிலுக்கு ஒண்ணும் தர வேண்டாம். பிரதிஷ்டைக்கு ஏதாவது கொடுத்தா போதும். பிரியப்படறது...''

அப்துல் ரசாக் ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்தான். அதை கரியாத்தனிடம் கொடுத்தான். கரியாத்தன் சொன்னான்:

"இதை வாங்க எனக்கு அதிகாரமில்லை. சிங்கிடி முங்கன் பயங்கர முன்கோபி. அங்கே கொடுத்தா போதும்.''

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

மகாலட்சுமி

March 22, 2013,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

கடிதம்

கடிதம்

September 24, 2012

கடல்

கடல்

September 24, 2012

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel