Lekha Books

A+ A A-

உன் மனதை நான் அறிவேன் - Page 29

Unn Manadhai Naan Ariven

தான் கற்றுக் கொண்ட அழகுக் கலை பயிற்சியின் மூலம் மெள்ள... மெள்ள... சரிதாவின் வீட்டிற்கு வந்து கொண்டிருந்த பாவனா, அதன்பின் அடிக்கடி அங்கே செல்வதை வழக்கமாகக் கொண்டதோடு அல்லாமல் சரிதாவின் மனதிலும் இடம் பிடித்துக் கொண்டாள்.

பாவனாவின் கைவண்ணத்தில், அவளது அபார திறமையில் தன் அழகும், பொலிவும் மெருகு ஏறியதைக் கண்டுணர்ந்த சரிதாவிற்கு பாவனா மீது நம்பிக்கையும், ஒருவித அன்பும் ஏற்பட்டது. பாவனாவின் சேவையில் மனம் மயங்கினாள். அதன் விளைவாய் பாவனாவிற்கு புதிய மொபைல் ஃபோன் வாங்கிக் கொடுத்தாள்.

அன்று வெள்ளிக்கிழமை. பாவனாவை வீட்டிற்கு வரவழைத்தாள் சரிதா. பாவனா வந்தாள். வத்சலாம்மாவை அழைத்து, பாவனாவிற்கு காபி போட்டுத் தரும்படி பணித்தாள். மணக்கும் ஃபில்ட்டர் காபியை ரஸித்து, ருசித்து குடித்தாள் பாவனா.

''இன்னிக்கு ஃப்ரூட் ஃபேஷியல் பண்ணலாமா மேடம்?''

''ஓ... பண்ணலாமே... ஆனா எல்லா ஃப்ரூட்சும் ஃப்ரிட்ஜில இருக்கான்னு தெரியலியே...?''

''அந்தக் கவலையே உங்களுக்கு வேண்டாம். ஃபேஷியலுக்கு தேவையான எல்லா பழங்களையும் நானே வாங்கி கொண்டு வந்துட்டேன்.''

''தேங்க்யூ பாவனா... '' 

''நான் சமையல் கட்டுக்குப் போய் வெள்ளரிக்கா, கேரட்டை துறுவிட்டு, பழத்தையெல்லாம் கழுவி, சீவலா போட்டு எடுத்துட்டு வரேன். ஐஸ் கட்டியையும் எடுத்துட்டு வந்துடறேன். அதுக்குள்ள நீங்க, புடவையை மாத்தி நைட்டி போட்டு ரெடியா இருங்க.''

''ஓ.கே.'' சரிதா எழுந்து நைட்டியை எடுப்பதற்காக, பீரோவை திறந்து மூடினாள்.

அதே சமயம் பாவனா, சமையலறையில் ஃப்ரிட்ஜை திறந்து காய்கறிகளை எடுத்தபின் மூடினாள்.

சமையல்காரம்மாவிடம் காய்கறி துறுவும் சாதனத்தைக் கேட்டு வாங்கி, காய்கறிகளை துறுவலாக சீவினாள். பழங்களையும் சீவலாக செய்து கொண்டாள். கிண்ணங்களில் காய்கறிக் கலவை, பழச்சீவல் கலவை, ஐஸ் கட்டிகள் இவற்றை எடுத்துக் கொண்டு சரிதாவின் அறைக்குப் போனாள். அங்கே மிக நவீனமான, விலையுயர்ந்த, அழகான நைட்டி அணிந்திருந்த சரிதாவைப் புகழ்ந்து பேசினாள்.

''எந்த ட்ரெஸ் போட்டாலும் உங்களுக்கு ரொம்ப அழகா இருக்கு...'' என்று கூறியபடியே சரிதாவின் கழுத்துக்குக் கீழ்ப்பகுதியைத் தொட்டாள்.

''இதோ இந்த நிறம்தான் உங்களோட இயற்கையான, நீங்க பிறந்தப்ப இருந்த நிறம். உங்க முகத்தையும் இந்த நிறத்துக்குக் கொண்டு வரேன் பாருங்க. வெய்யில் படாத இடத்துல உள்ள நிறம் மாதிரி உங்க முகத்தையும், கைகள் ரெண்டையும் மாத்திக்காட்டறேன்...''

''நிஜம்மாவா?'' வியப்பில், விழிகள் விரிய கேட்டாள் சரிதா.

''சத்தியமா...'' சிரித்துக் கொண்டே ஃபேஷியலின் ஆரம்பக்கட்ட வேலையான, முகத்தை சுத்தப்படுத்தும் செயலை ஆரம்பித்தாள் பாவனா.

முகத்தை சுத்தப்படுத்தும் க்ரீமை, பஞ்சினால் எடுத்து சரிதாவின் முகத்தை மென்மையாக அழுத்தி துடைத்தாள். அதன் பின்னர் 'ஸ்க்ரப்' எனப்படும் க்ரீமை எடுத்து, முகம் முழுவதும் தடவி, தன் விரல்களால் சுற்றி, சுற்றி மேற்புறமாகத் தேய்த்தாள். மறுபடியும் பஞ்சினால் முகத்தைத் துடைத்துவிட்டு வெள்ளரிக்காய், தக்காளி, பழங்கள் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக எடுத்து சரிதாவின் முகம் முழுவதும் தேவையான அழுத்தம் கொடுத்து தேய்த்துவிட்டாள். அவள் தேய்த்துவிடும் சுகத்தில் கண்மூடி லயித்து அனுபவித்தாள் சரிதா.

சரிதா அவ்விதம் லயித்திருக்கும் நேரங்களில், அவளிடம் தன் மனதை திறந்து பேசுவது போல் பேசும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட பாவனா, சரிதாவின் மனக்கதவைத் திறக்க முற்படுவாள். தன் சொந்தக் கதைகளை வெளிப்படையாகக் கூறுவது போல் நாடகமாடி சரிதாவின் மனதில் தன்னைப் பற்றிய நம்பிக்கை விதையை விதைத்தாள்.

அந்த விதை, வேரூன்றி வளரும் வகையில் தனது பேச்சையும், செயல்பாடுகளையும் அமைத்துக் கொண்டாள்.

ஒவ்வொரு முறையும் சரிதாவின் மனதை ஊடுருவது போல பேசும் பாவனா, அன்றும் அது போல பேச ஆரம்பித்தாள்.

''மேடம்... அபிலாஷ் ஸார் மேல உயிரையே வச்சிருக்கேன்னு அடிக்கடி சொல்லுவீங்களே... அவரும் அப்பிடித்தானே?!''

''நிச்சயமா அப்பிடித்தான். அவரும் என் மேல உயிரையே வச்சிருக்கார். அது சரி... உனக்கென்ன அதில சந்தேகம்? அவரும் அப்பிடித்தானேன்னு ரொம்ப சாதாரணமா கேட்டுட்ட?''

''அதுக்கு சரியான காரணம் இருக்கு மேடம். ஆம்பளைங்க கொஞ்சம் 'அப்பிடி' 'இப்பிடி' இருப்பாங்கள்ல்ல? மனைவிகிட்ட 'உன் மேல உயிரையே வச்சிருக்கேன்?.. நீதான் என் உயிர். நீ மட்டுமே உன் உயிர்'ன்னு டையலாக் விடுவாங்க. இந்த டையலக்கை வேற எவ எவகிட்டயெல்லாம் விடுவாங்களோ....? பெரும்பாலான ஆண்கள் அப்பிடிப்பட்டவங்கதான். வீட்ல ராமனா நடிப்பாங்க, வெளியில கிருஷ்ணனா லீலை பண்ணுவாங்க. அந்த லீலா வினோதங்களை மறைச்சு, பூசி மெழுகறதுக்குதான் ரெடிமேடான வசனங்களை அள்ளி வீசுவாங்க. இந்த மனைவிமார்கள் பாவம்! 'ஆகா... என் புருஷனைப் போல யோக்யசிகாமணி இந்த உலகத்துலயே வேற யாரும் கிடையாது'ன்னு பெருமிதத்துல மிதப்பாங்க. ஏகபத்தினி விரதன்னு மனைவி நம்பிக்கிட்டிருக்க, அவனோ... ஏகப்பட்ட பேருக்கு விரதனா... சுகபோகமா இருப்பான். புருஷனோட மறுபக்கம் தெரியாம, ஏமாளியா... இளிச்ச வாய்களா எத்தனையோ பெண்கள் இருக்காங்க... ப்யூட்டி பார்லருக்கு வர்ற எத்தனை பெண்கள் தங்களோட கணவரைப்பத்தி என்கிட்ட புலம்பி இருக்காங்க தெரியுமா?

'பலநாள் திருடன். ஒருநாள் அகப்படுவான்'னு சொல்லுவாங்க. திடீர்னு புருஷனோட தப்புக்களைப்பத்தி... சரியா புரிஞ்சுக்கும்போதுதான்  அந்தப் பொண்ணுகளுக்கு இத்தனை நாளா புருஷன் தங்களை ஏமாத்தினது தெரியவரும். அதுக்குள்ள பிள்ளை, குட்டிகள்னு குடும்பம் வளர்ந்திருக்கும். அதனால அவனைத் தட்டிக் கேட்கவும் முடியாம எட்டிப் போகவும் முடியாம 'இது என் தலைவிதி'ன்னு வாழற பொண்ணுங்கதான் இப்ப நிறைய. கண் கெட்ட பிறகு சூர்யநமஸ்காரம் பண்ணி... பலன் இல்லாம கண்ணீர் வடிக்கற பெண்களை சந்திக்கற அனுபவம் எனக்கு பார்லர்ல கிடைச்சிருக்கு...''

''வேற பெண்களோட கணவர் வேணும்ன்னா அப்பிடி நாடகமாடி இருக்கலாம், வேஷம் போடலாம். முகமூடியை மாட்டிக்கிட்டு மனைவியோட முகத்துக்கு முன்னால ஒண்ணு பேசி அவளோட முதுகுக்கு பின்னால வேற விதமா நடந்துக்கலாம். கண்ல பார்க்கற பொண்ணுகளோட கை கோர்த்து கொண்டாட்டம் போடலாம், தகாத உறவு கொண்டு தங்களோட மனைவியை ஏமாத்தலாம். ஆனா... என்னோட அபிலாஷ் அப்பிடிப்பட்டவர் இல்லை. அவருக்கு என்னைத் தவிர வேற ஒரு உலகம்ன்னு ஒண்ணு இருக்குன்னா... அது ம்யூஸிக்தான். சம்சார சந்தோஷத்துக்கு நான்... சங்கீத சாம்ராஜ்யத்துக்கு அவரோட இசை. இதைத் தவிர வேற எதுவுமே அவரோட கண்ணுக்கும் தெரியாது. கருத்துக்கும் தெரியாது. உண்மையிலேயே என்னோட அபிலாஷ்... உத்தமப் புருஷன்தான்...''

''அப்பிடின்னா... நூத்துல ஒருத்தர் உங்களோட அபிலாஷ் ஸார்...''

''இல்லை... இல்லை... ஆயிரத்துல ஒருத்தர்...''

''சரி மேடம்... லட்சத்துல ஒருத்தர்னே வச்சிக்கிடுவோம்... உங்க நம்பிக்கை அது. ஆனா... சில பேர், தடம் மாறி போறதுக்கு வாய்ப்புகளே இருக்காது. ஆனா... சந்தர்ப்பங்களும், சூழ்நிலைகளும் சாதகமா இருந்தும் மனசு தடம் புரளாம இருக்கறதுதான் பெரிய விஷயம். வேற பெண்களை நாடிப் போறதுக்கு சினிமா சம்பந்தப்பட்ட எத்தனையோ வாய்ப்புகள் இருந்தும் அவர் ஒழுக்க சீலரா வாழறார்ங்கற பட்சத்துல, உண்மையிலேயே அபிலாஷ் ஸார் நல்லவர்தான். ஆனா... மேனகாங்கற கந்தர்வப் பொண்ணு, மௌன தவத்துல மூழ்கி இருந்த விசுவாமித்திர முனிவரையே அவளோட மோக வலையில் விழ வச்ச புராணக் கதை இருக்கு. அந்த மாதிரி எந்தப் பெண்ணும் அபிலாஷ் ஸாரோட மனசைக் கலைக்காம இருப்பாங்களா?!... பஞ்சும் நெருப்பும் பத்திக்கறதுக்கு ஒரே ஒரு நிமிஷம் போதும் மேடம்...'' என்று பேசி, பற்ற வைத்த பாவனா தொடர்ந்தாள்.

''ஆண்களோட புத்தி... அவசரப்புத்தி, சட்ன்னு சபலப்படற புத்தி.''

சரிதாவின் முகத்திற்கு நைஸாக மஸாஜ் செய்து அவளை அந்த சுகத்தில் திளைக்கச் செய்தபடி, அவளது மனதைக் கலைத்தாள் பாவனா. தூபம் போடுவதை மேலும் தொடர்ந்தாள்.

''அபிலாஷ் ஸார்... திரைப்பட விழாக்கள், திரைப்பட பூஜைகள் இப்பிடி பல பொது இடங்களுக்கு போறவர். அங்கே சினிமா நடிகைகள், மீடியா பெண்கள் இப்பிடி... பலதரப்பட்ட பெண்களை சந்திக்கக் கூடிய வாய்ப்புகள் அதிகம். அவரோட ரிக்கார்டிங்ல பாடறதுக்கு பொண்ணுக வர்றாங்க...? பத்திரிகையில இருந்தும், டி.வி. சேனல்கள்ல்ல இருந்தும் பேட்டி எடுக்க பெரும்பாலும் பெண்கள்தானே வர்றாங்க. நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஸாரை, லதா ரஜினிகாந்த் அவங்களோட காலேஜ்க்காக பேட்டி எடுக்க போனப்பதான் அங்க ரெண்டு பேரும் காதல் லயப்பட்டாங்க. அதுக்கப்புறம் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க.''

பாவனா பேசப் பேச... சரிதாவின் வயிற்றில் புளியைக் கரைத்தது. அமிலம் சுரந்தது. இதயம் படபடப்பாக... அவளும் படபடவென பேசினாள்.

''சூப்பர் ஸ்டாருக்கு அப்போ கல்யாணம் ஆகலை. அதனால காதலிச்சார். கல்யாணம் பண்ணிக்கிட்டார். அதில தப்பு இல்லையே...?''

''தப்புன்னு நான் சொன்னேனா? கல்யாணம் ஆனவங்கன்னா... சபலப்பட மாட்டாங்களா? யாரையும் நம்ப முடியாது மேடம். இப்ப உள்ள காலம் அப்பிடி. முன்ன மாதிரி லேடீஸ் வீட்ல இருக்கறதில்லை. வெளியில... வேலைக்கு வர்றாங்க. பொருட்கள் விக்கற கடைகள், தையல் கடை, இப்பிடி ஏகப்பட்ட சுய தொழில் செய்யறாங்க. அவ்ளவு ஏன்? இப்போ... ஹோட்டல்ல இருக்கற கல்லாவுல கூட பெண்கள் உட்கார்ந்திருக்காங்களே. இதையெல்லாம் ஏன் சொல்றேன்னா... பெண்கள் தடம் புரண்டு போறதுக்குரிய சூழ்நிலைகள்... இப்பிடி வெளியே போறதுனாலயும் ஏற்படுது. ஆண்களை மட்டுமே ஒட்டுமொத்தமா குறை சொல்ல முடியாது. சில பெண்களும் தப்பு பண்றாங்க. தப்பு பண்ற பொண்ணுங்ககிட்ட மாட்டிக்கும்போது நல்ல மனிதர்கள் கூட ஒழுக்கம் தவறிப் போயிடறாங்க. மனசை அலைபாய விடற பெண்களும் இதுக்குக் காரணம். தேடிப் போகாட்டாலும்... தானாகவே... வலிய ஒரு பெண்ணோட நட்பும், அவளோட புதிய அன்பும் ஆணை... தடுமாற வைக்கும். கல்யாணம் ஆன ஆண்கள்கூட இதுக்கு விதி விலக்கு இல்லை. சில பேர் இப்பிடிப்பட்ட நட்பை 'டைம் பாஸிங்' நட்பா எடுத்துக்கிட்டு விளையாட்டுத்தனமா விட்டுடுவாங்க. சில பேர் அந்த தகாத தொடர்பை தீவிரமா மதிச்சு, தொடர்ந்து தப்பு பண்ணிக்கிட்டே இருப்பாங்க. இதனால குடும்பத்துல குழப்பம் ஏற்பட்டு ரெண்டுங் கெட்டானா வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுடுது. சில ஆண்கள் எத்தனையோ பெண்கள் கூட பழக்கம் இருந்தாலும்.. மனைவிக்கு தங்களோட மனசுக்குள்ள ஒரு உயர்ந்த இடம் குடுத்துருப்பாங்க. இப்படிப்பட்ட ஆண்கள்கிட்ட பழகும் பெண்கள்ல்ல ஒருத்தி 'நீங்க உங்க மனைவியை விட்டுட்டு என்கிட்ட வந்துடுங்க'ன்னு சொன்னா... அந்த புதிய பெண்ணோட தொடர்பையே நிறுத்திக்குவாங்களே தவிர, தங்களோட மனைவியை விடத் தயாரா இருக்க மாட்டாங்க. பெண்களில் பல ரகம்! ஆண்களில் பலவிதம்! சில பெண்கள் ரொம்ப உஷார் மேடம்... தங்களோட கணவர்கூட எந்தப் பொண்ணும் பழகறதுக்குரிய வாய்ப்புகளை தவிர்த்துடுவாங்க. அதாவது... கணவர்கூட எந்தப் பெண்ணும் பழகவே அனுமதிக்காம, அதற்குரிய சந்தர்ப்பமே ஏற்படாம ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி வச்சிருப்பாங்க. ஃப்ரெண்ட்ஸ், உறவுப் பெண்கள் இப்பிடி எந்தப் பெண்ணையுமே தங்கள் கணவர் பக்கம் நெருங்க விடாம ஜாக்கிரதையா இருந்துப்பாங்க...'' நீளமாக பேசிக் கொண்டிருந்த பாவனாவை இடைமறித்து பேசினாள் சரிதா.

''என்ன சொன்ன? ஃப்ரெண்ட்ஸா? அவங்களைக் கூடவா அந்த லிஸ்ட்ல சேர்த்துக்கற...?''

''பின்ன? அவங்களையும் சேர்த்துதான் சொல்றேன்...''

ஃபேஷியலில் முடிவுக் கட்டத்தில் போடப்படும் முகக்கவசப் பசையை சரிதாவின் முகத்தில் தடவியபடியே பதில் கூறிய பாவனா... மேலும் தொடர்ந்தாள்.

''முக்கியமா ஃப்ரெண்ட்ஸ்தான் மேடம்... நாளடைவில, இல்லற வாழ்க்கைக்கே போட்டியாளரா ஆகிடறாங்க. இந்த விஷயத்தை நான் கொஞ்சம் டீஸெண்ட்டா சொல்றேன். பச்சையா... கொச்சையா சொல்றதுன்னா சக்களத்திகளா ஆகிடறாங்க...''

இதைக் கேட்டு விருட்டென்று எழுந்தாள் சரிதா.

''மேடம்... 'ஃபேஸ் பேக்' இன்னும் காயலை மேடம். படுத்துக்கோங்க...'' மெதுவாக சரிதாவை மீண்டும் படுக்க வைத்தாள் பாவனா. கண்மூடி படுத்துக் கொண்ட சரிதாவின் கண்ணுக்குள் அபிலாஷ் மீது கொட்டிவிட்ட குழம்பை, கயல்விழி துடைத்துவிட்ட காட்சி தோன்றியது. அபிலாஷுடன் கயல்விழி சிரித்துப் பேசுவதும், அரட்டை அடிப்பதும் ஒரு திரைப்பட 'ஃப்ளாஷ் பேக்' போல தெரிந்தது.

'கயல்விழி நல்லவள்தான். ஆனா பாவனா சொல்ற மாதிரி வாய்ப்புகள் உருவானால், என் கணவர் அபிலாஷேரட மனசும் மாறிடுமோ? கயல்விழி எனக்குத்தானே தோழி?! என் கணவரோட அவளை ஏன் நான் பழக விடுகிறேன்? என் தலையில நானே மண்ணை அள்ளிப் போட்டுக்கறேனா?... என் உயிர்த்தோழி கயல்விழி நல்லவ. என் கணவரும் நல்லவர். ஆனா... சூழ்நிலைகள் இரண்டு பேரையும் மாத்திட்டா? என் உயிர் அபிலாஷ், மலர்விட்டு மலர் தாவிடுவாரா? என்னை மறந்துடுவாரா? அல்லது என் கூட வாழும் போதே இன்னொருத்தியையும் சேர்த்துக்குவாரா? ஐயோ கடவுளே... பாவனா சொல்றதையெல்லாம் கேட்கும்போது இப்பிடியெல்லாம் நடந்துடுமோன்னு பயம்மா இருக்கே...'

வழக்கமாக ஃபேஷியலின் முடிவில் தன்னை மறந்து, ஆழ்ந்து தூங்கிவிடும் சரிதா, அன்று குழப்பமான மனநிலையில் எண்ண அலைகளில் நீந்தியபடி தவித்தாள்.

'நான் மூட்டிய சிறு நெருப்பு, மேடத்தோட மனசுல பெருந்தீயாக கனன்று எரியுதே...' தூங்காமல் தவிக்கும் சரிதாவைப் சரிதாவைப் பார்த்து தனக்குள் நினைத்துக் கொண்டாள் பாவனா.

படிப்படியாக, அதன்பின் அங்கே வரும் ஒவ்வொரு முறையும், அழகுப் பராமரிப்பு கொடுக்கும் பொழுதெல்லாம் சந்தேகம் எனும் நஞ்சை சரிதாவின் நெஞ்சில் கொஞ்சம் கொஞ்சமாக 'ஸ்லோ பாய்ஸன்' போல ஏற்றினாள் பாவனா.

தன்னுடைய வார்த்தை ஜாலத்தாலும், அழகுக்கலைத் திறமை எனும் வசியத்தாலும் சரிதாவின் நிர்மலமான மனதை சந்தேகக்குணம் நிரம்பும் நிர்மூலமாக ஆக்கினாள். அவளது மனசாட்சி உறுத்தினாலும். சுதாகர் கொடுக்கும் பெரும் தொகையை எண்ணி, அவள் நடிப்பதற்கு ஏற்றுக் கொண்ட கதாபாத்திரமாகவே உருமாறி, மிக இயற்கையாக நடித்தாள். எறும்பு ஊற கல்லும் தேயும். தேய்ந்தது சரிதாவின் மனது. அடி மேல் அடி  அடித்தால் அம்மியும் நகரும். நகர்ந்தது சரிதாவின் மனது மட்டுமல்ல... தகர்ந்தது அவளது வாழ்வின் நம்பிக்கை எனும் அஸ்திவாரமும் கூட.

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

மகாலட்சுமி

March 22, 2013,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

பார்

பார்

February 15, 2012

மருதாணி

மருதாணி

February 15, 2012

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel