Logo

அவன் வரவில்லை

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 6225
avan-varavillai

“நான் ஒரு விஷயம் சொல்லணும்னு நினைக்கிறேன்.”

கொச்சுகல்யாணி உள்ளே நுழைந்து சிறிது நேரம் கழித்து கொச்சுராமன் கூறினான். அவனுடைய தொண்டை இடறிக்கொண்டிருந்தது. உண்மையிலேயே கூறுவதாக இருந்தால், குரல் வெளியே வரவில்லை. உள்ளே இருந்த கொச்சுகல்யாணி அதை தெளிவாகக் கேட்கவில்லை. அவள் உள்ளேயிருந்தவாறு கேட்டாள்:

“என்ன சொல்றீங்க கொச்சுராமன் அண்ணே?”

இந்த முறை கொச்சுராமனின் குரல் மேலும் சற்று உயர்ந்து ஒலித்தது. குரலில் தடுமாற்றம் அந்த அளவிற்கு இல்லை. எனினும், நாக்கு வறண்டுவிட்டிருந்தது.

“நான் ஒரு விஷயம் சொல்லணும்னு நினைக்கிறேன்.”

“என்ன?”

உண்மையிலேயே கொச்சுகல்யாணிக்கு எந்தவொரு சந்தேகமுமில்லை. சாதாரணமாகப் பேசும்போது எப்படி பேசுவோமோ, அந்த மாதிரியே கேட்டாள்.

கொச்சுராமன் சிறிது நேரம் எதுவும் பேசவில்லை. என்ன சொல்ல வேண்டும் என்று அவனுக்குத் தெரியவில்லை.

மீண்டும் கொச்சுகல்யாணி கேட்டாள்:

“என்ன கொச்சுராமன் அண்ணே?”

“புரியலையா?”

கொச்சுராமன் சற்று பற்களை இளித்துக் கொண்டே கண்களைச் சிமிட்டிக் காட்டினான்.

“இல்லை…”

அவன் பிரார்த்தனை செய்து கொண்டே கூறினான்:

“எத்தனையோ நாட்களா எனக்குள் இருக்கும் ஆசை இது…”

அவன் மனதில் என்ன சொல்ல நினைத்துக் கொண்டிருக்கிறான் என்பதை கொச்சுகல்யாணி புரிந்து கொண்டதைப் போல தோன்றியது. அவள் எதுவும் பேசவில்லை.

“நான் தினமும் இரவு நேரத்தில் இந்த வீட்டைச் சுற்றி ஐந்தாறு முறை நடந்து கொண்டிருப்பேன்.”

கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் ஒரு சிறு சலசலப்பு உண்டாவதை கொச்சுகல்யாணி உணர்ந்திருக்கிறாள். அது யாரென்று அவளுக்குப் புரிந்துவிட்டது!

கொச்சுராமன் சற்று அதிகமாக பேசும் நிலைக்கு வந்தான்.

“என் ஆசை அது. என்னைக் கைவிட்டு விடாதே. யாருக்கும் தெரியப் போறதில்லை. என் கையில் ஒரு ரூபாய் இருக்கு. அதைத் தர்றேன். ஒரு ஆபத்தும் வராது.”

இவ்வாறு அவன் கூறிக் கொண்டிருக்கும்போது அவனுடைய கையும் காலும் நடுங்கிக் கொண்டிருந்தன. யாராவது வருகிறார்களா என்று நான்கு திசைகளையும் அவன் பார்த்துக் கொண்டும் இருந்தான். தான் இவ்வாறு அங்கு நின்று கொண்டிருப்பதை பக்கத்து வீடுகளில் இருப்பவர்கள் பார்த்து விட்டால், அது சரியாக இருக்காது என்ற புரிதல் அவனுக்கும் இருந்தது. எனினும், அவன் பேசிக் கொண்டிருந்தான்.

“இங்க பாரு…. இந்த ரூபாயை வாங்கிக்கோ. சாயங்காலம்… இரவில் இன்னும் இரண்டு ரூபாய் கொண்டு வர்றேன். நல்லா இருட்டின பிறகு போதும்… இந்தா ரூபாய்!”

கொச்சுகல்யாணி கேட்டாள்.

“இது சரியான காரியமா கொச்சுராமன் அண்ணே?”

கொச்சுராமனால் உடனடியாக பதில் கூற முடியவில்லை. எனினும் அவன் சொன்னான்.

“யாருக்கும் தெரியப் போறதில்லை. ஒரு ஆபத்தும் வராது.”

கொச்சுகல்யாணி சிறிது நேரம் கழித்துச் சொன்னாள்:

“கொச்சுராமன் அண்ணே, உங்க மனசுல இருந்த நினைப்பு இதுதானா? நான் இதை நினைக்கவே இல்லை.”

அதைக் கேட்டு கொச்சுராமன் நெளிந்தான். அப்படி நெளிய வேண்டிய அவசியமில்லை என்று அவனுக்குத் தோன்றியது. அனைத்தும் தாழ்வான விஷயங்களாக ஆகிவிட்டன. அவன் மிகவும் மோசமான மனிதன் என்று அவள் முடிவு செய்துவிட்டாள். அங்கிருந்து கிளம்பினால் போதுமென்று அவன் நினைத்தான். ஆனால், எப்படிப் போவான்? அவன் மரத்துப் போய் நின்றிருந்தான். இனி அவளுடைய முகத்தை அவன் எப்படிப் பார்ப்பான்? அவள் வேறு யாரிடமாவது விஷயத்தைக் கூறிவிட்டால்…? வெட்கக் கேடு! ஆனால். அவன் ஒரு நல்ல வார்த்தையை நாக்கால் வெளியிட்டான்:

“இந்தப் பிறவியில் நான் வேறொரு பெண் மீது பிரியம் வைக்கமாட்டேன். என்னுடைய ஆசை இது. கொச்சுகல்யாணி, என்னைக் கைவிட்டு விடாதே.”
“ஓ… காரியம் நிறைவேறணும்ங்கறதுக்காக எல்லாரும் சர்க்கரை… சர்க்கரைன்னு சொல்லத்தான் செய்வாங்க.”

மீண்டும் கொச்சுராமன் நிறைய பேசுவதற்குத் தயாரானான் : “அம்மாமீது ஆணையாக… கொடுங்கல்லூர் பகவதிமீது ஆணையாக… நான் உண்மையைச் சொல்றேன்… வேறொரு பெண்ணுடன்…”

அந்த வார்த்தை முழுமையடைவதற்கு முன்பே கொச்சுகல்யாணி கூறினாள் : “நீங்க என்ன பேசுறீங்க? தூர இடத்துக்குப் போயிருக்குற ஒருத்தன் எனக்குன்னு இல்லையா? அப்படியெல்லாம் சொல்லாதீங்கன்னு சொல்றேன். அந்த ஆளுக்குத் தெரிஞ்சா என்னைக் கொன்னுடுவான்.”

“யாருக்கும் தெரியாது கொச்சுகல்யாணி.”

“இருந்தாலும் அது சரியான விஷயமா கொச்சுராமன் அண்ணே?”

“என் கொச்சு கல்யாணி, என்னைக் கைவிட்டுடாதே!”

“அந்த ஆளு போய் ஆறு மாசமாயிருச்சு. ஏதாவது தப்பு நடந்துட்டா…”

“நடக்காது… அதுக்கு வழி இருக்கு!”

சிறிது நேரத்திற்கு யாரும் எதுவும் பேசவில்லை.

“கொச்சுகல்யாணி!”

அவள் எதுவும் பேசவில்லை. மீண்டும் கொச்சுராமன் அழைத்தான்: “கொச்சுகல்யாணி!”

அவள் சொன்னாள்: “கொச்சுராமன் அண்ணே, இப்போ போங்க. நான் செய்யக் கூடாததை செய்ததில்லை.”

அந்தச் சிறிது நேர பேரமைதி உண்மையிலேயே கூறுவதாக இருந்தால் மிகவும் கனமான ஒன்றாகவே இருந்திருக்க வேண்டும். அந்த மனைவி தர்மசங்கடமான அந்த சூழ்நிலையைக் கடக்க வேண்டுமென்று நினைத்தாள். அவள் சொன்னாள் : “பட்டினியில் கிடந்தாலும் நான் நேர்மையாத்தானே வாழ்ந்துகிட்டிருக்கேன். கொச்சுராமன் அண்ணே? இந்தக் குழந்தைகளெல்லாம் அவனுக்குப் பொறந்ததுதான்… பிறகு… அந்த ஆளோட கையில எதுவுமே இல்லாமப் போச்சுன்னா… எல்லாத்துக்கும் காரணம் என் தலைவிதி!”

கொச்சுராமனின் ஆசை குறைந்தது. அவனால் பதிலெதுவும் கூற முடியவில்லை. அவனும் நாக்கை அடக்கிக் கொண்டு சிறிது நேரம் நின்றிருந்தான்.

 “என் மனதில் இருக்கும் ஆசை கொச்சுகல்யாணி. இந்தப் பிறவியில் இருக்கும் ஆசை…”

மீண்டும் பேரமைதி.

“நான் கிளம்பட்டுமா, கொச்சுகல்யாணி?”

பதில் இல்லை.

“நான் காதலிக்கிறேன்.”

மீண்டும் பேரமைதி.

“நான் புறப்படட்டுமா… கொச்சுகல்யாணி?”

“நான் என்ன சொல்லணும், கொச்சுராமன் அண்ணே?”

கொச்சுராமனின் சாம்பல் படர்ந்த ஆசை மீண்டும் ஒளிர்ந்து பிரகாசித்தது. போகும்படி அவள் கூறவில்லை.

“நான் பாதி ராத்திரியானதும் வர்றேன். தூங்கிடாதே. கதவை மெதுவாத்தான் தட்டுவேன்.”

“அய்யோ! பகல் மாதிரி நல்ல நிலவு வெளிச்சம் இருக்கும். யாராவது பார்த்துடப் போறாங்க.”

ஆசை அதிகரித்தது.

“இல்லைன்னு சொல்றேன்ல! நான் ரொம்ப கவனமா இருக்கேன். இந்தா… இதை எடுத்துக்கோ!”

அவன் ஒரு வெள்ளி நாணயத்தை உள்ளே எறிந்தான். ‘த்தினம்’ என்று அது விழுவது காதில் விழுந்தது. அந்த நாணயம் வெளியே எறியப்படவில்லை.

“ராத்திரி வர்றப்போ மேலும் ரெண்டு ரூபாய் கொண்டு வர்றேன். தூங்கிடாதே… ஒரு வாசனை சோப்பும் கொண்டு வர்றேன். ஒரு முறைதான் கதவைத் தட்டுவேன்.”

அவள் எதுவும் பேசவில்லை. நீண்ட நேரமாக வெளியே நின்று கொண்டிருக்கிறோம் என்பதை அவன் நினைத்துப் பார்த்தான். பக்கத்து வீடுகளில் இருப்பவர்களில் யாராவது பார்த்துவிட்டால்…!


“நான் கிளம்புறேன்… தெரியுதா?”

அவன் எதுவும் பேசவில்லை.

அவன் சிறிது தூரம் நடந்துவிட்டு திரும்பி வந்தான்.

“தூங்கிடாதே… பிள்ளைகளை முன்கூட்டியே தூங்க வச்சிடு.”

மீண்டும் அவன் திரும்பி வந்தான்.

“ஒரு முறைதான் கதவைத் தட்டுவேன். தெரியுதா?”

அவள் மெதுவாக ‘உம்’ கொட்டாவிட்டால்தான் என்ன? அவள் மறுக்கவில்லை. மெளனம் சம்மதத்திற்கு அறிகுறிதானே?

சாயங்காலம் அப்போதுதான் கடந்திருந்தது. ஒரு தகரத்தால் செய்யப்பட்ட மண்ணெண்ணெய் விளக்கின் வெளிச்சத்தில், அந்தச் சிறிய குடிசையின் திண்ணையில் கொச்சுகல்யாணியும் அவளுடைய பிள்ளைகளும் அமர்ந்து கயிறு திரித்துக் கொண்டிருந்தார்கள். பொன்னப்பன் மட்டையை எடுத்துப் போட்டுக் கொண்டிருந்தான். இரவு நேரத்தில் அவனுக்கு கண் பார்வை தெரியாது. பித்தசூலம்! வயிறு உள்ளே போய், காலும் கையும் மெலிந்து, கன்னம் வீங்கி, கண்கள் இலக்கற்று விழிக்க ஒரு சிலையைப் போல அவன் அமர்ந்திருந்தான். இளைய பெண் குழந்தை மடியில் படுத்து தாய்ப்பாலைக் குடித்துக் கொண்டே உறங்கிக் கொண்டிருந்தது. கயிறு நீண்டு நீண்டு போய்க் கொண்டிருந்தபோது, கொச்சுகல்யாணி அப்படி எதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பாள்?

பொன்னப்பன் சொன்னான்.

“நாம இன்னைக்கு ஐந்து முடி கயிறு திரிக்கணும் சரியா அம்மா?”

கொச்சுகல்யாணி மெதுவாக ‘உம்’ கொட்டினாள். மீண்டும் அந்தக் கயிறு நீண்டு நீண்டு போய்க் கொண்டிருந்தது.

மண்ணெண்ணெய் விளக்கில் திரி கரிந்து எரிந்து கொண்டிருந்தது.

பொன்னப்பன் கேட்டான்: “எப்படிம்மா கயிறு திரிக்க முடியும்? விளக்குல மண்ணெண்ணெய் இல்லையே!”

திடீரென்று அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது.

“நல்ல நிலவு வெளிச்சம்… நாம் முற்றத்துல உட்கார்ந்து கயிறு திரிக்கலாம்.”

கொச்சுகல்யாணி உள்ளே பாயை விரித்து குழந்தையைப் படுக்க வைத்தாள். அப்போது முற்றத்தில் கோணியை விரித்து, பொன்னப்பன் மட்டைகளைப் போட ஆரம்பித்தான். கயிறு நீண்டு நீண்டு போய்க் கொண்டிருந்தது.

பொன்னப்பன் தன் தாயிடம் கேட்டான்:

“இந்தக் கயிறை வித்து காலைக்குத் தேவையான கப்பையையும் சர்க்கரையையும் வாங்கிடலாம். மதியம் எப்படிம்மா?”

கண்களால் வெறித்தபடி சம்மணம் போட்டு அமர்ந்திருந்த தங்கப்பன் சொன்னான்:

“அண்ணே, நாளைக்கு மதிய சாப்பாட்டுக்கு அம்மா பையில் ஒரு ரூபாய் இருக்கு!”

பொன்னப்பனின் முகம் பிரகாசித்தது: “எங்கேயிருந்து அம்மா கிடைச்சது?”

கொச்சுகல்யாணி சற்று அதிர்ச்சியடைந்து விட்டாள். அவள் ஒரு பதிலைக் கூறியாக வேண்டும். என்ன பதில் கூறுவாள்? ஒரு சிறுவனின், கதை இல்லாத கேள்வியாக அது கொச்சுகல்யாணியின் காதுகளுக்கும் ஒலிக்கவில்லை. அவள் கட்டாயம் பதில் கூறியே ஆகவேண்டும் என்ற வகையில் கேட்கப்பட்ட மிடுக்கான கேள்வி! ‘அந்த ரூபாய் எங்கிருந்து கிடைத்தது?’ என்று கேட்டுவிட்டு, அந்த கேள்வி கேட்டவன் அவளுடைய முகத்தையே கண்களை விரித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறான். உரிமை உள்ளவன் கேட்கிறான்.

மீண்டும் பொன்னப்பன் கேட்டான்.

“எங்கிருந்து அம்மா ரூபாய் கிடைச்சது?”

ஒரு கரிய நிழலை தனக்கு முன்னாலிருந்து பலமாக அடித்து அகற்றுவதைப்போல கொச்சுகல்யாணி சொன்னாள்:

“உன் வேலையைப் பாருடா.”

பொன்னப்பன் அதிர்ந்து போய்விட்டான். ஏதோ ஒரு பெரிய தவறை தான் செய்து விட்டதைப்போல அவன் உணர்ந்தான். தான் அதைக் கேட்டிருக்கக் கூடாது என்று அவன் நினைத்தான்.

கொச்சுகல்யாணி இரண்டு உள்ளங்கைகளையும் சேர்த்துச் சேர்த்து கயிறு திரிக்க, கயிறின் நீளம் கூடிக்கொண்டே இருந்தது.

இப்போது அவள் என்ன சிந்தித்துக் கொண்டிருப்பாள்? பொன்னப்பன் தன்னுடைய தவறு என்ன என்பதைக் கண்டுபிடிப்பதற்கு முயற்சித்துக் கொண்டிருப்பான் அல்லவா? கண்களை சிமிட்டியபடி சிறையைப் போல அமர்ந்திருக்கும் தங்கப்பன் மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கும்?

அங்கு தாயும் மகனும் சேர்ந்திருக்கும் ஒரு கயிறு திரிக்கும் இயந்திரம் பலமாக செயல்பட்டுக் கொண்டிருந்தது. யாரும் யாருடனும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.

அந்த ஒரு ரூபாய்க்கான வரவு கணக்கை அவன் கேட்டான். அவள் அந்தக் கணக்கை கூறுவதற்குக் கடமைப்பட்டவள். ஒரு திட்டுதலின் மூலம் அவள் அவனுடைய வாயை அடைத்தாள். எனினும், அந்தக் கேள்வி எஞ்சி நிற்கத்தான் செய்தது. இந்த இடத்திலிருந்து இந்த வகையில் அந்தப் பணம் கிடைத்தது என்று கூறவேண்டிய அவளுடைய கைகள் இரண்டையும் சேர்த்துப் பிடித்துக் கொண்டு, அவளுடைய முகத்தில் கை முஷ்டியை பலமாக வைத்துக் கொண்டு, ‘இந்த ரூபாய் எங்கிருந்து வந்தது?’ என்று, அவளால் விலகி ஓட முடியாத அளவிற்கு - அவளுடைய மனச்சாட்சியை நோக்கி கேள்வி கேட்பதற்கு உரிமை படைத்தவர்கள் இருக்கிறார்கள். அவள் அந்தக் கேள்வியைப் பார்த்து பயப்படலாம். அப்போது அவள் என்ன பதில் கூறுவாள்?

அவள் மனைவியாக இருப்பவள். அது ஒரு குடும்பம். அந்த ஒரு ரூபாய் எப்படி வந்தது என்பதற்கான கணக்கை அவள் கூறியாக வேண்டும்.

பார்வையின்றி விழித்துக் கொண்டிருந்த தங்கப்பன் தனக்குள் கூறிக் கொண்டான்:

‘இப்போ அப்பா அரிசியையும் உளுந்தையும் ஆட்டிக் கொண்டிருப்பார்.’

ஒரு நொடி கழிந்து, அவன் கேட்டான்:

“இல்லையாம்மா?”

அன்னை எதுவும் கூறவில்லை. மீண்டும் அவன் சொன்னான்.

“இப்போ என் அப்பா நல்ல தடியா இருப்பாரோ என்னவோ?”

அதற்குப் பிறகும் அவனே தொடர்ந்து சொன்னான்.

“அப்பா தோசையும் இட்லியும் சாப்பிட்டு நல்லா… தடியா இருப்பார்.”

பொன்னப்பன் சொன்னான்:

“ஓ… அப்பா அப்படியொண்ணும் தடியாக இருக்கமாட்டார்.”

யாரும் எதுவும் பேசவில்லை. தங்கப்பனின் முகம் மிகவும் பிரகாசமாக இருப்பது அந்த நிலவு வெளிச்சத்தில் நன்கு தெரிந்தது. அவன் தன்னுடைய தந்தையை நினைத்து நினைத்து ஆனந்தத்தில் திளைத்துக் கொண்டிருந்தான். பொன்னப்பனும் தன் தந்தையை நினைத்துக் கொண்டிருந்திருக்க வேண்டும். தங்கப்பன் மீண்டும் கூறினாள்:

“அப்பாவைக் கொஞ்சம் பார்க்க முடிஞ்சா எவ்வளவு நல்லா இருக்கும்! அம்மா, அப்பாவோட ஒரு கடிதத்தை எடுத்துட்டு வந்து படி..  என்னைப் பத்தி என்ன சொல்லியிருக்கார்? கொஞ்சம் படிம்மா.”

பொன்னப்பன் கேட்டான்.

“நிலவு வெளிச்சத்துல எப்படி கடிதத்தை வாசிக்க முடியும்?”

அது சரிதான்… தங்கப்பனுக்குப் புரிந்தது. மீண்டும் மலர்ந்த முகத்துடன் அவன் ஞாபகங்களில் மூழ்கினான். தொடர்ந்து அவனுடைய இதயத்திற்குள்ளிருந்து அவனையும் மீறி சிந்தனைகள் வெளியேறிக் கொண்டிருந்தன.

“பாவம் அப்பா… எங்கெங்கியோ போய் அரிசி ஆட்டிக் கொண்டிருக்கிறார்னா, அது மருந்து வாங்கறதுக்கும் எல்லாரும் சோறு சாப்பிடறதுக்கும்தான்… இல்லையாண்ணே?”

பொன்னப்பன் அதற்கு உடனடியாக பதில் சொன்னான்.

“பிறகு… நமக்கு எப்படி வாழ முடியும்?”


தன் கைகளைக் குவித்து தலையில் வைத்துக் கொண்டு, மேலே நின்று கொண்டிருந்த முழு நிலவை நோக்கி முகத்தைத் திருப்பி வைத்துக் கொண்டு தங்கப்பன் பிரார்த்தித்தான்:

“என் கடவுளே! என் அப்பாவுக்கு எந்தவொரு நோயும் வராம பார்த்துக்கோ.”

அந்த சிறுவன் தலைகுனிந்து வணங்கினான்.

“என் அப்பா ஒரு முறை இங்க வந்தா எப்படியிருக்கும்? எனக்கு பார்க்கணும்போல இருக்கு.”

அதை ஏற்றுக் கொண்டு பொன்னப்பனும் சொன்னான்:

“எனக்கும் அப்பாவைப் பார்க்கணும்னு ஆசையா இருக்கு! அப்பா போயி எவ்வளவு நாளாச்சு!”

அந்தப் பெண் குழந்தையும் கண் விழித்திருந்தால், அதுவும் ஒரு வேளை இவ்வாறு கூறியிருக்கும்.

‘எனக்கும் அப்பாவைப் பார்க்கணும்போல ஆசையா இருக்கு.’

அப்படியென்றால் அந்தக் குடும்பத்தில் அம்மாவுக்கு மட்டும் அப்பாவை ஒருமுறை பார்க்க வேண்டும் என்ற ஆசை இல்லையா? எவ்வளவோ தூரத்திலிருக்கும் காப்பி கடையில் அவன் பெரிய குழவியைப் பிடித்துக் கொண்டிருக்கிறான் என்றால், அது அவளுக்கும் சேர்த்துதானே!

திடீரென்று கொச்சுகல்யாணி கயிறு திரித்துக் கொண்டிருப்பதை நிறுத்தினாள். அவள் பொன்னப்பனை மட்டையை எடுத்துப் போடுவதை நிறுத்தும்படி கூறினாள். அவன் குறைப்பட்டுக் கொண்டான்.

“அம்மா, ரெண்டு முடி கயிறு திரிக்கல… பிறகு எப்படி நாளைக்கு சர்க்கரையும் கப்பையும் வாங்க முடியும்?”

-       அம்மா சொன்னாள்:

“நேரம் ரொம்பவும் இருட்டிருச்சு… பக்கத்து வீடுகள்ல இருக்கறவங்க எல்லாரும் தூங்கிட்டாங்க. படுப்போம்.”

கொச்சுகல்யாணி ஒரு பதைபதைப்புடன் இருந்தாள்.

நார், தென்னை மட்டை, கயிறு, கோணி – எல்லாவற்றையும் உள்ளே வைத்துவிட்டு, கொச்சுகல்யாணியும் பிள்ளைகளும் உள்ளே வந்து கதவை அடைத்து, பத்திரமாக தாழ்ப்பாள் போட்டார்கள். மேற்குப் பக்க மண் சுவரிலிருந்த சிறிய சாளரத்தையும் அவள் அடைத்து தாழ்ப்பாள் போட்டாள்.

“அம்மா! காத்து வராது…” என்று பொன்னப்பன் கூறியதை அவள் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை.

“எனினும்… கொச்சுகல்யாணி, நான் பிரியம் வச்சிருக்கேன்.”

கொச்சுராமன் தன் கவலையை வெளிப்படுத்தவில்லை. அதற்குப் பிறகும் பிரார்த்தித்துக் கொண்டிருந்தான்.

அவள் செயலற்ற நிலையில் சொன்னாள்:

“கொச்சுராமன் அண்ணே, நீங்க ஏன் இப்படிப் பேசுறீங்க? கொஞ்சம் நினைச்சுப் பாருங்க. அந்தப் பாசம் ஆம்பளை எங்கோ ஆட்டுக்கல் பிடிச்சும் காய்கறி வெட்டியும்தான் நானும் பிள்ளைகளும் வாழ்ந்து கிட்டிருக்கோம்.”

கொச்சுராமன் எதுவும் கூறவில்லை. முழுமையான ஆசையுடன் அவன் கொச்சுகல்யாணியையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அது அவனுடைய வாழ்க்கையில் இருக்கும் ஒரே ஒரு விருப்பம் என்ற விஷயம் அவளுக்குத் தெரியும். அவன் எவ்வளவு நாட்களாக அவளுக்குப் பின்னால் நடந்து கொண்டிருக்கிறான்! மிகவும் சிரமப்படும்போது, அவன் அவளுக்கு உதவி செய்வதுண்டு, அந்த உதவிகளைப் பெறாமல் இருக்க வேண்டுமென்று அவள் நினைப்பதுண்டு. ஆனால், மூன்று பிள்ளைகளை வைத்துக் கொண்டு அவள் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். பட்டினியால் அந்தப் பிள்ளைகள் தளர்ந்து போய் கிடக்கும்போது, அவள் ஒரு ரூபாயோ, ஒரு படி அரிசியோ, கால் வீசை கப்பையோ அவனிடமிருந்து வாங்கிக் செல்வாள். தங்கப்பன் முழுமையாக படுத்த படுக்கையில் கிடந்தான். அவனுக்கு மருந்து வாங்கிக் கொடுத்தது அவன்தான். அவன் இல்லாமல் போயிருந்தால், இந்த நேரம் அவன் இறந்து போயிருப்பான். அவள் அவனுடைய முகத்தைப் பார்த்து ‘முடியாது’ என்று எப்படிக் கூறுவாள்? அவளால் முடியாது. அவளைக் காப்பாற்றுவதற்கு அவளுடைய பதில் போதாது.

எது எப்படி இருந்தாலும், கொச்சுராமன் மரியாதைக்காரன். அவன் எல்லையைக் கடந்து ஒரு அடிகூட முன்னால் வைத்ததில்லை. ‘உனக்கு விருப்பமில்லைன்னா வேண்டாம்’ என்று கூறிவிட்டுச் செல்வான் அவ்வளவுதான். அவன் அப்படி நடந்து செல்வதைப் பார்க்கும்போது, அவளுக்கு மனதில் வருத்தம் உண்டாகியிருக்கிறது. எனினும், அதற்குப் பிறகும் வருவான்.

“கொச்சுகல்யாணி, இது என்னுடைய ஆசை.”

யாருக்கும் எந்தவித சந்தேகமும் தோன்றாத அளவிற்கு அவன் இந்த மாதிரி எவ்வளவு நாட்களாக சுற்றிச் சுற்றி நடந்து கொண்டிருக்கிறான்!

மாதவனின் – அவளுடைய கணவனின் கடிதம் வந்தது. ஏழு ரூபாய் அனுப்பி வைத்திருந்தான். வைத்தியரைப் பார்த்து தங்கப்பனுக்கு மருந்து வாங்கிக் கொடுக்க வேண்டும். தற்போது வருவதற்கு வாய்ப்பில்லை. வரும்போது பொன்னப்பனுக்கும் தங்கப்பனுக்கும் குழந்தைக்கும் ஆடைகள் எடுத்துக் கொண்டு வருகிறேன். நான் நலமாக இருக்கிறேன். அங்குள்ள நீங்கள் எல்லாரும் நலமாக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.’ இதுதான் அந்தக் கடிதத்திலிருந்த வாசகங்கள். கடிதத்தை வாசித்து முடித்த போது, கொச்சுகல்யாணிக்கு அழுகையும் கோபமும் உண்டாயின.

தங்கள் அன்னை ஏன் அழுகிறாள் என்பதற்கான காரணம் பிள்ளைகளுக்குத் தெரியவில்லை. தங்கப்பன் சொன்னான்:

“அம்மா ஏன் அழறாங்கன்னு எனக்குத் தெரியும். அப்பா வரலைன்றதுக்காகத்தான்…”

பொன்னப்பன் கேட்டான்:

“அப்படின்னா அம்மா ஏன் கோபப்பட்டு மிகப் பெரிய பாவின்னு கத்துறாங்க.”

“அப்பா வரலைன்றதுக்காகத்தான்…”

கொச்சுகல்யாணி ஒரு நீளமான கடிதத்தை எழுதி அனுப்பி வைத்தாள். அதில் அவள் ஏராளமான விஷயங்களைப் பற்றி எழுதியிருந்தாள். குழந்தைக்கு மருந்து வாங்கிக் கொடுப்பதாக அதில் அவள் எழுதியிருந்தாள். அவன் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறான் என்பதை அறிந்து தனக்கு மிகவும் சந்தோஷமே என்று எழுதியிருந்தாள். அவள் சந்தோஷமாக இருப்பாள் என்ற அவனுடைய நம்பிக்கையைப் பற்றி அவனுக்கு சில விஷயங்களைக் கூற வேண்டியதிருந்தது. அவள் தன்னுடைய கஷ்டங்களையும் துயரங்களையும் விளக்கி அதில் எழுதியிருந்தாள். கொச்சுராமனிடம் கடனாக வாங்கிய ஒரு பெரிய தொகையை அடைக்க வேண்டியதிருப்பதை அவள் தெரியப்படுத்தியிருந்தாள். ‘சீக்கிரம் இங்குவந்து எல்லாவற்றையும் தீர்த்து வைத்துவிட்டு திரும்பிச் செல்ல வேண்டும். இல்லாவிட்டால் என்னால் சகித்துக் கொண்டிருக்க முடியாது’ என்று அந்தக் கடிதத்தில் அவள் எழுதியிருந்தாள்.

தொடர்ந்து அவள் அவனை எதிர்பார்த்துக் காத்திருந்தாள்.

அவன் வருவான். வராமல் இருக்க மாட்டான். அந்த அளவிற்கு கோபத்துடன் அவள் எழுதியிருந்தாள். அந்தக் கடிதத்தை வாசித்தபிறகு, அங்கு வராமலிருக்க அவனால் முடியாது என்று அவள் முழுமையாக நம்பினாள். பிள்ளைகள் வழியையே பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். விரல்களால் எண்ணிவிட்டு பொன்னப்பன் கூறுவான்.

“அப்பா இன்னைக்கு வருவார்.”

தங்கப்பன் கூறுவான்.

“இல்லை… நாளைக்கு காலையில் வருவார்.”

அதற்குப் பிறகு அவர்களுக்கிடையே வாதங்களும், எதிர்வாதங்களும் உண்டாகும். தங்களின் தந்தை எப்போது வருவார் என்பதை உறுதியாகக் கூற வேண்டும் என்று அவன் கூறுவான்.

தங்கப்பன் தனக்குத்தானே கூறிக் கொண்டான்:

“அப்பா வர்றப்போ அப்பம் கொண்டு வருவாரோ என்னவோ!”

அப்போது பொன்னப்பன் சொன்னான்:


“அப்பம் கொண்டு வந்தாலும், உனக்குத் தரமாட்டார். நீ மருந்து குடிக்கணும்.”

அது உண்மைதான். எனினும், தன் தந்தை தனக்கு அப்பம் தருவார் என்று உறுதியாக தங்கப்பன் நம்பினான்.

எது எப்படி இருந்தாலும் கொஞ்ச நாட்களாகவே கொச்சுகல்யாணி இரவு வேளைகளில் ஒரு ஆள் சாப்பிடக் கூடிய அளவிற்கு சாதத்தையும், குழம்பையும் தயார் பண்ணி வைத்துக் கொண்டிருந்தாள். பொன்னப்பனுக்கும் தங்கப்பனுக்கும் பெண் குழந்தைக்கும் இரவு உணவைப் பரிமாறும்போது, அவர்கள் கூறுவார்கள்.

“அம்மா, அப்பா வந்தாருன்னா அவருக்கு சோறு இருக்கணும்.”

கொச்சுராமன் தன்னுடைய வாழ்க்கையிலிருக்கும் அந்த ஒரே ஒரு ஆசையுடன் ஒவ்வொரு நாளும் ஒரு முறை ஆசையுடன் ஒவ்வொரு நாளும் ஒருமுறை அவளை வட்டமிட்டுக் கொண்டிருந்தான்.

அவன் கேட்பான்:

“நான் இன்னைக்கு இரவில் வரட்டுமா?”

“அய்யோ! என்னை கொலை செய்யப்பட வச்சிடாதீங்க! பிள்ளைங்களோட அப்பா எப்போ வருவாருன்னு சொல்ல முடியாது.”

இவ்வாறு அவனை எதிர்பார்த்துக் காத்திருந்து நாட்கள் கடந்து கொண்டிருந்தன. அவன் வரவில்லை. வர இயலவில்லை என்று கடிதம் வந்தது. கொச்சுராமனிடம் வாங்கியிருக்கும் கடனை தான் வரும்போது திரும்பிக் கொடுத்து விடுவதாக அவன் எழுதியிருந்தான். குழந்தைகளை மிகவும் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருந்தான். கையில் கிடைக்கும்போது பணம் அனுப்பி வைப்பதாகத் தெரிவித்திருந்தான்.

பக்கத்து வீடுகளிலிருந்த பெண்களிடம் கொச்சுகல்யாணி கண்ணீருடன் தன் கஷ்டங்களைக் கூறினாள்.

“மூணு சின்னப் பிள்ளைகளை வச்சுக்கிட்டு நான் தனியா வாழ்ந்துட்டு இருக்கேன். நான் என்ன செய்வேன்?”

வயதான பாட்டி அவளைத் தேற்றினாள்:

“உங்களுக்கு நாழி அரிசி வேணுங்கறதுக்குத்தானே அவன் போயிருக்கிறதே! ஆசைப்பட்டா வந்துட முடியுமா என்ன?”

அவள் ஏன் அழுகிறாள்?

கொச்சுகல்யாணி தொடர்ந்து சொன்னாள்:

“பட்டினி கிடந்தாலும், கூட இருந்தால் எதையும் சகிச்சிக்க முடியும்.”

வாழ்க்கை என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொண்டிருந்த கிழவி சொன்னாள்.

“அது இப்போ நடக்குமா?”

மீண்டும் கொச்சுகல்யாணிக்கு கூறுவதற்கு விஷயம் இருந்தது.

“நானும் குழந்தைகளும் இரவு வேளைகளில் தனியாகவே இருக்க வேண்டியதிருக்கு.”

பொன்னப்பனும் தங்கப்பனும் மிகுந்த ஏமாற்றத்தில் இருந்தார்கள்.

அன்றும் கொச்சுராமன் கொச்சுகல்யாணியின் வீட்டிற்கு வந்தான். அவனும் அவளைத் தேற்றினான். எப்போதும் இருக்கக் கூடிய அந்த வேண்டுகோளை அவன் அன்று அவளிடம் வைக்கவில்லை. அன்று தங்கப்பனுக்கு கஷாயத்திற்கான மருந்து வாங்கியாக வேண்டும். அவள் கூறாமலே, கொச்சுராமன் அதை வாங்கி வந்து கொடுத்தான்.

அன்று அவன் கேட்டான்.

“மாதவன் அண்ணன் வரமாட்டார் இல்லையா? இன்னிக்கு ராத்திரி நான் வரட்டுமா?”

அவள் எதுவும் பேசவில்லை. குனிந்து உட்கார்ந்து தேங்காய் மட்டைகளை எடுத்துப் போட்டுக் கொண்டிருந்தாள்.

கொச்சுராமன் தொடர்ந்து சொன்னான்:

“நல்ல இருட்டு இருக்கும்!”

அதற்குப் பிறகும் அவள் வாயைத் திறக்கவில்லை.

கொச்சுராமன் கெஞ்சினான்.

“கொச்சுகல்யாணி, உன்னிடம் நான் எவ்வளவு நாட்களா கெஞ்சிக் கேட்டுக்கிட்டு இருக்கேன்!”

அதற்குப் பிறகும் கொச்சுகல்யாணி எதுவும் பேசவில்லை.

“என்ன… எதுவுமே சொல்லாமல் இருக்கே?”

கொச்சுராமன் பதிலை எதிர்பார்த்து நின்றிருந்தான். கொச்சு கல்யாணி பதிலாகக் கூறுவதற்கு எதுவுமே இல்லையா? அப்படியே இருந்தாலும், அவள் என்ன பதில் கூறுவாள்?

“நான் வரட்டுமா?”

வரவேண்டாம் என்று அவள் கூறவில்லை.

“என்ன? நான் வரட்டுமா கொச்சுகல்யாணி?”

தொடர்ந்து அவன் ஏமாற்றம் கலந்த குரலில் கூறினான்.

“முடியும்… இல்லன்னா முடியாதுன்னு முடிவா சொல்லிடு… நாயைப் போல நான் எவ்வளவு நாளா நடந்துக்கிட்டிருக்கேன்.”

பொறுமையை இழந்து அவன் கூறிய வார்த்தைகள் அவை. அதற்குப் பிறகும் அவள் எதுவும் கூறவில்லை. என்ன பதில் கூறலாம் என்பதைப் பற்றி அவள் தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டிருக்கலாம். அந்த வேண்டுகோளை ஏற்றுக் கொள்வது… இல்லாவிட்டால் முடியாது என்று மறுத்துவிடுவது! அது ஒரு சிந்திக்க வேண்டிய விஷயம்தான்!

கொச்சுராமனும் நாயைப்போல வாசனை பிடித்து அவளுக்குப் பின்னால் நடந்து திரிந்து பொறுமையை இழந்துவிட்டான்.

“நான் ராத்திரி வரட்டுமா கொச்சுகல்யாணி?”

“இன்னைக்கு எனக்கு தலைவலியா இருக்கு!”

அவனுடைய உள் மனதில் ஒரு பிரகாசம் உண்டானது.

“அப்படின்னா… நாளைக்கு ராத்திரி… அப்படித்தானே?”

அதற்கு பதில் இல்லை. கொச்சுராமன் கேட்டான்.

“இல்லைன்னா நாளை மறுநாளா?”

சிறிது நேரம் கழித்து அவன் தொடர்ந்து கேட்டான்.

“அப்படின்னா… நாளை மறுநாள் போதும்… என்ன?”

அவள் எதுவும் கூறவில்லை.

“நாளை மறுநாளும் நல்ல இருட்டு இருக்கும். பிள்ளைகள் எல்லாரும் தூங்கின பிறகு வர்றேன். என்ன?”

அவள் மெதுவாக முனகினாள்:

“ம்…”

கொச்சுராமனின் காதில் அந்த முனகல் சத்தம் கேட்டது. ‘உம்’ கொட்டுவதை அவன் கேட்டான். அவனுக்கு நம்பிக்கை உண்டானது.

“நாளைக்கு மூணு ரூபாய் தர்றேன்.”

கொச்சுகல்யாணி மாதவனுக்கு தினமும் கடிதங்கள் எழுதிக் கொண்டே இருந்தாள். ஓராயிரம் பொய்களை அவள் கடிதத்தில் எழுதினாள். தங்கப்பன் இறக்கும் நிலையில் படுத்த படுக்கையாகக் கிடக்கிறான் என்பது வரை அவள் எழுதிவிட்டாள். அவனை வரவைப்பதற்காக அவள் பல வகைகளிலும் முயற்சி செய்தாள்.

ஆனால். மாதவன் வரவில்லை. தற்போதைக்கு அவனால் வரமுடியவில்லை. ஒரு வேளை தினமும் கடிதங்கள் வருவதைப் பார்த்து, அதுவும் காரணங்கள் மாறி மாறி கூறப்பட்டிருப்பதைப் பார்த்து… அவனுக்கு அவை அனைத்தும் பொய் என்று தோன்றியிருக்க வேண்டும். எது எப்படி இருந்தாலும், அவன் வரவில்லை.

நான்கைந்து நாட்களாக கொச்சுராமனை பார்க்க முடியவில்லை. கொச்சுகல்யாணி பதைபதைப்பு அடைந்து கொச்சுராமனை எதிர்பார்த்து உட்கார்ந்திருந்தாள். அவனைக் காணவே காணோம்… அதன்பின் இரண்டு நாட்கள் கழித்து ஒரு மாலை வேளையில் கிழக்கு திசையிலிருந்த பாதையின் வழியாக கொச்சுராமன் போய்க் கொண்டிருப்பதைப் பார்த்து, அவள் அழைத்தாள்.

“கொச்சுராமன் அண்ணே!”

அவன் கேட்டான்:

“என்ன? இப்போ வர்றேன்…”

அந்த பதில் அவளை மேலும் சற்று பைத்தியம் பிடிக்கச் செய்தது. அவள் தன் மனதிற்குள் என்னென்னவோ நினைத்து குழம்பிக் கொண்டிருந்தாள்.

சாயங்காலம் கடந்த பிறகு கொச்சுராமன் வந்தான்.

அவன் ஊரிலேயே இல்லை. அதனால்தான் வராமல் இருந்திருக்கிறான்.

“அப்படி என்ன முக்கியமான விஷயம்?”

அவன் கேட்டான்.

“என்ன முக்கியமான விஷயம்னா கேக்குறீங்க? சரிதான்… நான் என் உயிரையே விட்டுடுவேன். இந்த வீட்டைச் சுத்திச்சுத்தி திரிஞ்சிட்டு, இப்போ என்ன முக்கியமான விஷயம்னு கேக்குறீங்க! எப்படி பார்த்தாலும்… இந்த ஆம்பளைகளே இப்படித்தான்…”

“இந்த அளவுக்கு கோபப்படுறதுக்குக் காரணம் என்ன?”

அவள் சொன்னாள்:


“எனக்கு ஆபத்து வந்திடுச்சுன்னு தோணுது. கடிதங்கள் எழுதியாச்சு…. பிள்ளைகளோட அப்பன் வரவே இல்லை.”

கொச்சுராமன் அதிர்ச்சியடைந்து, அசையே இல்லாமல் நின்று விட்டான். கொச்சுகல்யாணி கேட்டாள்:

“என்ன முடிவு செய்திருக்கீங்க ஆம்பளை?”

கொச்சுராமன் எதுவும் கூறவில்லை.

அவள் தொடர்ந்து கேட்டாள்:

“பிள்ளைகளோட அப்பன் வந்தால், என்ன சொல்லுவேன்?”

அழுதுகொண்டே கொச்சுகல்யாணி குற்றம் சுமத்தினாள்.

“காலில் தோலே இல்லாமல் நடந்து திரிஞ்சு, பொன்னே… பொடியேன்னு அழைச்சு, என்னை மோசம் பண்ணிட்டீங்க… என்னோட போதாத காலம்… நான் என்ன சொல்றது?”

அவனுடைய முகத்தைப் பார்த்துக் கொண்டே அவள் கேட்டாள். அவன் எந்த பதிலும் கூறவில்லை.

“பிள்ளைகளோட அப்பன் வந்தால், என்னைக் கொன்னுடுவான். அதற்கு முன்னாடியே நான் சாகப் போறேன்.”

பாவம்… கொச்சுராமன் அதற்கு என்ன பதில் கூற வேண்டும்? அவள் கூறியவை அனைத்துமே சரிதான். ஆபத்து வராது என்று அவன் உறுதியான குரலில் கூறியிருந்தான். அப்படியே வந்தாலும், தான் துணைக்கு இருப்பதாக அவன் வாக்களித்திருந்தான். தான் அவளைக் காதலிப்பதாக அவன் சத்தியம் செய்து கூறினான். எல்லாமே சரிதான்… ‘என்னை ஏமாற்றி விடாதீர்கள்’ என்று அவள் கெஞ்சிக் கேட்டுக் கொண்டபோது, ‘இல்லை’ என்று அவன் வாக்குறுதி கொடுத்தான். அவளுக்கும் பிள்ளைகளுக்கும் உணவு அளித்து காப்பாற்றுவதற்காக வேற்றூருக்குப் போயிருக்கும் அந்த அப்பாவி மனிதனுக்கு தான் துரோகம் பண்ணுவதாக அவள் கூறியதற்கு, ‘பரவாயில்லை’ என்று கூறி அவன் அந்தப் பெரிய உண்மையை மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொண்டான். எனினும், அவன் என்ன கூற வேண்டும்?

தான் அவளைக் காப்பாற்றுவதாக அவன் கூற வேண்டுமா? அவ்வளவு சீக்கிரம் அதைக் கூறுவதற்கு யாரால் முடியும்? இன்னும் சொல்லப் போனால் அந்த விஷயத்திலிருந்து தப்பித்து ஓடுவதற்கான வழியெதுவும் இருக்கிறதா என்று பார்ப்பதுதான் முதல் சிந்தனையாக இருக்கும்.

சிறிது நேரம் அங்கேயே நின்று கொண்டிருந்துவிட்டு, கொச்சுராமன் அங்கிருந்து புறப்பட்டான்.

“எதுவுமே சொல்லாமல் போறீங்க?”

“இல்லை… நான் வர்றேன்.”

அவள் தனியாக அந்தக் கவலையை அனுபவிக்க வேண்டும்.

அன்றிரவு தங்கப்பன் பொன்னப்பனிடம் கூறினான்.

“என்னண்ணே…. அப்பா ஏன் வரலை?”

பொன்னப்பன் சொன்னான்.

“அப்பாவுக்கு அங்கே வேலை இருக்குறதுதான் காரணம்…”

 “நான் சாகப் போறேன்னு எழுதியும், அப்பா வரலையே!”

சிறிது நேரத்திற்குப் பேரமைதி.

தங்கப்பன் தொடர்ந்து சொன்னான்:

“அப்பாவுக்கு என்மேல விருப்பம் இல்லாமப் போயிருக்கும். நான் செத்தால் அப்பாவுக்கு என்ன?”

மேலும் சிறிது நேரம் கடந்த பிறகு, அந்தச் சிறுவன் தொடர்ந்து சொன்னான்:

“எது எப்படி இருந்தாலும், என் அப்பாவைப் பார்க்கணும்னு எனக்கு ஆசையா இருக்கு!

அந்தப் பிள்ளைகளுக்கு இரவு வேளையில் தூக்கம் வருமா? வருவதற்கு வழியில்லை. அவர்கள் தங்களின் தந்தையை மனதில் நினைத்துக் கொண்டே படுத்திருந்தார்கள்.

வெளியே அவர்களின் அன்னை யாருடனோ பேசிக் கொண்டிருந்தாள். கொச்சுகல்யாணிக்கு கூறுவதற்கு விஷயங்கள் இருந்தன. அதைக் கேட்பதற்கு கடமைப்பட்ட ஆளும் உண்டு. கொச்சுராமன் கேட்டான்.

“அதுக்கு நான் மட்டுமா குற்றவாளி! நீயும்தானே! ஆபத்து வராம நீயும் கவனமாக இருந்திருக்கணும்.”

இடி விழுந்ததைப்போல கொச்சுகல்யாணி அதிர்ச்சியடைந்து விட்டாள்.

“அய்யோ… மகாபாவி! என்ன இப்படி பேசுறீங்க! நான்… நான்… உங்க முன்னால பிள்ளைகளைக் கொன்னுட்டு உங்க முன்னால செத்துப் போவேன்.”

தங்கப்பன் கேட்டான்.

“யாரும்மா அது?”

அவள் எதுவும் கூறவில்லை. பொன்னப்பன் மெதுவாக எழுந்து வாசலின் வழியாக வெளியே பார்த்தான். தன் தாயும் கொச்சுராமன் அண்ணனும் பேசிக் கொண்டிருப்பதை அவன் பார்த்தான்.

தங்களின் தாயிடம் அந்த பிள்ளைகள் சில விஷயங்களைப் பற்றி கேட்க வேண்டும் என்று நினைத்தார்கள். தங்கப்பன் தன் அனையிடம் கேட்டான்.

“கொச்சுராமன் அண்ணன் எதுக்கும்மா அரிசியையும் கப்பையையும் இங்கே வாங்கிட்டு வந்து தரணும்?”

அந்தத் தாயின் நாக்கைச் செயல்பட விடாமல் செய்த ஒரு கேள்வி அது. அவன் தொடர்ந்து கேட்டான்.

“அப்பா அனுப்பி வைக்கிற சக்கரத்தை (திருவிதாங்கூர் நாணயம்) கொச்சுராமன் அண்ணனுக்குக் கொடுத்திடுவோம். இல்லையாம்மா?”

அந்தக் கேள்வி கொச்சுகல்யாணிக்கு ஆறுதலாக இருந்தது. அவள் சொன்னாள்:

“ஆமா, மகனே!”

இதற்கிடையில் ஒரு மணியார்டர் வந்தது. கொச்சுகல்யாணி அந்த மணியார்டரை வாங்கவில்லை. அதைத் திருப்பி அனுப்பினாள்.

தங்கப்பன் கேட்டான்.

 “அப்பா அனுப்பி வைத்த பணத்தை எதுக்கும்மா வாங்காம இருந்தே?”

அதற்கு அந்தத் தாய் பதில் கூறாமல் இருக்க, அவன் மீண்டும் கேட்டான்.

“என் அப்பாவுடன் எதுக்கும்மா கோபமா இருக்கே?”

“பேசாம இருடா…”

அது ஒரு திட்டுதலாக இருந்தது. அதற்குப் பிறகு அவன் வாயைத் திறக்கவேயில்லை.

அண்ணனும் தம்பியும் சகோதரியும் சேர்ந்து தனியாக உட்கார்ந்து தங்களின் தந்தையைப் பற்றி பேசிக் கொண்டிருப்பார்கள். தங்களின் தந்தை இனிமேல் வரமாட்டார் என்று பொன்னப்பன் கூறுவான். அதைக் கேட்டதும், தங்கப்பன் அழ ஆரம்பிப்பான்.

“அப்பா ஏன்ணே இன்னும் வராம இருக்காரு?”

எல்லாம் தெரிந்தவனைப் போல பொன்னப்பன் கூறுவான்:

“அது அப்படித்தான்…”

“என் அப்பா… என் தங்க அப்பா… கொஞ்சம் இங்கே வரணும்… நான் பார்க்கணும்…”

அதற்குப் பிறகு அவர்கள் தங்களின் தாயிடம் தங்களின் தந்தையைப் பற்றி எதுவும் கேட்பதே இல்லை.

தங்களின் அன்னையின் வீங்கிக் கொண்டு வரும் வயிற்றின்மீது, அன்பு கொண்ட தங்கப்பன் முத்தமிட்டான். அங்கு தன்னுடைய ஒரு குட்டித் தம்பி படுத்துக் கிடக்கிறான் என்ற விஷயம் அவனுக்குத் தெரியும். தொடர்ந்து அவன் தன் தாயிடம் கேட்டான்.

“நமக்கு ஒரு குட்டித் தம்பி வரப் போறான்ற விஷயம் அப்பாவுக்குத் தெரியாது… அப்படித்தானேம்மா?”

தாயால் பதில் கூற முடிகிற ஒரு கேள்வியாக அது இருக்கவில்லை.

“குழந்தை பிறக்குறப்போ அப்பா வருவாரில்லம்மா? தம்பிக்கு சட்டை… எனக்கு பலகாரம்… எல்லாத்தையும் அப்பா வாங்கிட்டு வருவாரு.”

பாவம்… கதை என்னவென்று தெரியாத குழந்தை!

அன்று மாமரத்திற்குக் கீழே இருக்கும்போது, அவனைவிட விஷயங்கள் தெரியக்கூடிய பொன்னப்பன் தங்கப்பனிடம் கேட்டான்.

“நீ எதுக்கு அம்மாவோட வயித்துல முத்தம் கொடுத்தே?”

“ம்… என்ன? நான் என்ன குட்டித்தம்பிக்கு முத்தம் கொடுத்தேன். தங்கச்சி வயித்துல இருக்குறப்போ, அப்பா அந்த மாதிரி அம்மாவோட வயித்துல முத்தம் கொடுத்தாரு.”

பொன்னப்பன் ஒரு உண்மையை தங்கப்பனிடம் கூறினான்:

“அது நம்ம அப்பாவோட மகன் இல்லை.”


தங்கப்பன் பதைபதைப்புடன் கேட்டான்.

“பிறகு… அண்ணே, நீ பொய் சொல்றே.”

பொண்ணப்பன் கூறுவதற்கு பதில் இருந்தது.

“அதனால்தான் நான் சொன்னேன்- அப்பா வரமாட்டார்னு.”

சில நாட்கள் கழித்து மீண்டும் பொன்னப்பன் தங்கப்பனிடம் ஒரு விஷயத்தைச் சொன்னான்.

“அப்பா ஏன் வரலைன்னு தெரியுமா! அப்பாவுக்கு அங்கே பிள்ளைகள் இருக்காங்க…”

“அப்படின்னா… அப்பாவுக்கு நம்மளை வேண்டாம்.”

“வேண்டாம இருக்கும்… அம்மாதான் சொன்னாங்க…”

அங்கு தங்களின் தந்தைக்கு பிள்ளைகள் இருக்கும் பட்சம். அவர்கள் மீதும் அன்பு செலுத்த தங்கப்பன் தயாராகவே இருந்தான். அப்பா ஏன் வராமல் இருக்க வேண்டும்?

அந்த ஊரிலிருந்து யாருக்கோ மாதவனின் ஒரு கடிதம் வந்தது. அவன் எல்லா விஷயங்களையும் தெரிந்து கொண்டான். அவன் வரப்போகிறான். அந்தக் கடிதம் பற்றிய தகவலை கொச்சுகல்யாணியும் அறிந்தாள்.

அவள் கொச்சுராமனிடம் விஷயத்தைக் கூறினாள்.

“என்ன செய்றது ஆம்பளை? அந்த காளைமாடன் வந்தால், நம்ம ரெண்டு பேரையும் கொன்னுடுவான்.”

கொச்சுராமன் பதைபதைப்புடன் சொன்னான்:

“என் பேரைச் சொல்லாதே. காரணம் நான் இல்லைன்னு சொல்லிடு.”

அவளுக்கு வெறிபிடித்தது.

“பிறகு… யாரோட பேரைச் சொல்லணும்? நீங்க என்ன சொல்றீங்க?”

“பிரசவத்திற்குப் பணம் தர்றேன். பிறகு…. கையில் கிடைப்பதை தர்றேன்.”

“பிறகு… ‘குழந்தைக்கு நான் அப்பா இல்லை’ன்னு சொல்லிக்கிட்டு திரிஞ்சீங்க, அதற்குப் பிறகு இருக்குது விஷயம்…”

அவன் அங்கிருந்து அடுத்த கணமே கிளம்பினான்.

கோபம். கவலை ஆகியவற்றால் ஆக்கிரமிக்கப்பட்டு, அசையவே முடியாமல் அவள் அவனையே கண்களை விரித்துப் பார்த்த வண்ணம் நின்றிருந்தாள்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.