Logo

தங்கம்மா

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 7103
thangamma

புகை ஆகாயத்தை நோக்கி உயர்ந்து, காற்றில் சிதறிப் பறந்தது. மனித மாமிசம் கரிந்த வாசனை நான்கு பக்கங்களிலும் பரவியது. பாதையில் சென்றவர்கள் மூக்கைப் பொத்திக் கொண்டார்கள்.

தங்கம்மா வேலியருகில் நின்று சுடுகாட்டையே பார்த்துக் கொண்டிருந்தாள். வீட்டு வாசலில் நின்று கொண்டு நாணி உரத்த குரலில் அழைத்தாள்:

“இங்கே வாடீ... நீ எதற்குடி அங்கே போய் நின்னுக்கிட்டு இருக்கே?”

தங்கம்மா மெதுவாக நடந்து வீட்டின் வாசலுக்கு வந்தாள். நாணி கேட்டாள்:

“நீ எதுக்குடி பிணத்தைச் சுடுற இடத்துக்குப் போய் பார்த்துக்கிட்டு இருக்கே?”

“பார்த்து நின்னா என்ன?”

“பார்த்து நின்னா என்னன்னா கேக்குறே? செத்தவனின் பிணத்தைப் பார்த்துக்கொண்டு நின்னவங்க மேல அது ஏறும்.”

“ஏறி?”

“நெரித்துக் கொல்லும்.”

எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு நின்றிருந்த பங்கி சொன்னாள் :

“நெரிச்சுக் கொல்லும்னு அப்பனும் சொன்னாரு.”

வீட்டின் தெற்குப் பகுதியில் நின்றிருந்த வேலாயுதன் அழைத்தான்:

“அடியே நாணி?”

நாணி வேலாயுதன் இருக்கும் இடத்திற்கு வந்தாள். தங்கம்மா பங்கியிடம் சொன்னாள் :

“செத்தவங்களோட உயிர் புகையாக மேலே போவும்டி பங்கி. அது பார்த்து நிக்கிறவங்களுக்குள்ளே நுழையிறதெல்லாம் இல்ல.”

“மேலே போனால் எங்கே போகும்? சொர்க்கத்திற்கா, நரகத்திறகா?”

“சிலரோட உயிர் சொர்க்கத்திற்குப் போகும். சிலரோட உயிர் நரகத்திற்குப் போகும்.”

“சொர்க்கத்திற்குப் போகணுமா, நரகத்துக்குப் போகணுமான்னு யார் முடிவு செய்றது? எமன்தானே?”

“இல்லடி... அதைக் கடவுள்தான் முடிவு செய்றாரு. சாகுற மனிதன் புகையாக மாறி கடவுள் முன்னால் போய் நிற்பான். சொர்க்கத்துக்குப் போகணுமா, நரகத்துக்குப் போகணுமான்னு கடவுள் சொல்வாரு.”

“அக்கா, உங்கக்கிட்ட இந்த விஷயங்களை யார் சொன்னது?”

“சொன்னதா? சொன்னது...” தங்கம்மா தலையைக் குனிந்து கொண்டாள்.

“ம்... எனக்குப் புரிஞ்சிடுச்சு... குமாரன் அண்ணன்தானே?” - அவள் அர்த்தத்துடன் புன்னகைத்தாள்.

“குமாரன் அண்ணன் அறிவுள்ள மனிதர். ராமாயணம், பாகவதம் எல்லாவற்றையும் வாசிப்பார்.”

“குமாரன் அண்ணன் உங்களைக் கல்யாணம் பண்ணப் போறாருல்ல அக்கா?”

“அப்படின்னு உன்கிட்ட யார் சொன்னது?”

“யாரும் சொல்ல வேணடாம். எனக்குத் தெரியும்.”

பக்கத்து வீட்டுக்காரி பாரு அங்கே வந்து கேட்டாள்:

“அந்த எரியிற பிணம் யாரோடதுன்னு தெரியுமா?”

“யாரோடது?” - தங்கம்மா கேட்டாள்.

“ராமன் குட்டின்னு கேள்விப்பட்டிருக்கியா? வழிப்பறிக்காரன் ராமன்குட்டி! அந்த ஆளோட பிணம்தான் இப்போ எரிஞ்சிக்கிட்டு இருக்கு. வெட்டு, குத்து, வழிப்பறி... இவைதான் அவனோட வேலைகள். கடைசியில என்ன ஆனது? இதோ... எரிஞ்சிக்கிட்டு இருக்கான். புøகாய போய்க்கிட்டு இருக்கான். பாவம் செய்தால்...”

“புண்ணியம் செய்தாலும் கடைசியில் இப்படித்தானே போகணும் பாரு அக்கா? புண்ணியம் செய்தவர்கள் செத்தாலும் நெருப்பை மூட்டி எரிய வைக்கத்தானே செய்வாங்க? அவங்களோட பிணம் எரியாதா? புகையாதா?”

“வித்தியாசம் இருக்குடி தங்கம்மா. என்ன வித்தியாசம்னா... புண்ணியம் செய்தவங்க செத்துட்டா உடனடியாக அவங்களோட ஆன்மா சொர்க்கத்துக்குப் போயிடும். பாவம் செய்தவங்களாக இருந்தால் ஆன்மா பிணத்தோடவே இருக்கும். பிணம் எரியிறப்போ, ஆன்மாவிற்கு வேதனை உண்டாகும்.”

நாணி அருகில் வந்து பாருவிடம் சொன்னாள்:

“நான் அங்கே வரணும்னு நினைச்சிக்கிட்டு இருந்தப்போ, நீ இங்கே வந்துட்டே.”

“ஏன் நாணி அக்கா?”

“இன்னைக்கு பொழுது விடிஞ்ச பிறகு, இங்கே நெருப்புப் புகை உண்டாகல. நேற்று ராத்திரி சேம்பு அவிய வைத்து சாப்பிட்டுப் படுத்தது.... இன்னும் ரெண்டு நாழி அரிசி நீ எனக்குத் தா. முன்னால் வாங்கியதையும் சேர்த்து ஒண்ணா நான் தந்திடுறேன்.”

“வேலாயுதன் அண்ணன் இப்படி வேலை எதுவும் செய்யாமலே இருந்தால், நீங்க எப்படி வாழ்வீங்க?”

“தொழுவத்துல கட்ட வேண்டாம். பட்டினி கிடந்து சாகலாம்”- தங்கம்மாதான் அப்படிச் சொன்னாள்.

பாரு சிரித்துக்கொண்டே சொன்னாள்:

“யானையாக இருந்தது அந்தக் காலத்துலதானே நாணி அக்கா? இப்போ எறும்புதானே.... எறும்பு. எறும்பைப்போல வாழணும். இங்கே சுற்றி இருப்பவர்களெல்லாம் கூலி வேலை செய்து வாழ்பவர்கள்தானே? வேலாயுதன் அண்ணன் கூலி வேலைக்குப் போறதுனால என்ன குறைச்சல் வந்துடப் போகுது?”

“பழக்கமில்லைடி பாரு... பழக்கமில்ல.”

“கூலி வேலை செய்பவர்களெல்லாம் பழகிக்கிட்டா செய்றாங்க? வேலை செய்றப்போ பழக்கமாயிடும். அப்படித்தான் எல்லாரும்.”

“அப்படியென்றால் நான் உட்கிட்ட மனம் திறந்து சொல்லலாம். நான் ஒவ்வொரு நாளும் சொல்வேன் - வேலைக்குப் போங்க. வேலைக்குப் போங்கன்னு. நானும் கயிறு பிரிக்கும் வேலைக்குப் போறேன்னு சொல்லுவேன். சம்மதிக்க மாட்டாருடி.... சம்மதிக்க மாட்டாரு. யானை மெலிந்தால் தொழுவத்துல கட்டிடுவாங்களான்னு கேட்டுக் கொண்டிருப்பாரு.”

“சகோதரி எதுவும் தர்றதில்லையா?”

“சகோதரி கொடுத்துக் கொண்டுதான் இருந்தாள். இப்போ கொஞ்ச நாட்களாக தர்றது இல்லை. எப்போதும் கூட பிறந்த ஆளுக்கும் பிள்ளைகளுக்கும் செலவுக்குக் கொடுத்துக் கொண்டே இருக்க முடியுமா பாரு?”

“வேலிக்கு மேலே எட்டிப் பார்க்குறது யாருடா?” - வேலாயுதனின் கேள்விதான் அது.

எல்லாரும் சுற்றிலும் பார்த்தார்கள்.

“நான் தினமும் இதைப் பார்த்துக்கிட்டு இருக்கேன். அவன் என் கையால வாங்கப் போறான்” - வேலாயுதன் வடக்குப் பக்கமாக ஓடினான்.

வடக்குப் பக்கமிருந்த வேலிக்கு மேலே தெரிந்த தலை மறைந்தது.

“வேலிக்கு மேலே பார்த்தது யாரு நாணி அக்கா?” - பாரு கேட்டாள்.

தங்கம்மா அங்கேயே நின்றிருந்தாள்.

நாணி பாருவின் கேள்விக்கு பதில் கூறவில்லை. பங்கி சொன்னாள்:

“நான் சொல்றேன். குமாரன் அண்ணன்தான் பார்த்தாரு. அதற்கு அப்பன் எதற்கு சண்டை போட வேண்டும்?”

“குஞ்ஞாண்டியோட மகன் குமாரனா? அவன் ஒரு நல்ல பையனாச்சே நாணி அக்கா! தங்கம்மாவுக்குப் பொருத்தமான பையன் அவன்.”

“அவனும் தங்கம்மாவும் ஒருத்தரையொருத்தர் விரும்புறாங்கடி. பாரு. அப்பனுக்கு அவனைப் பார்த்த உடனே வெறி வந்திடும்.”

“அது ஏன்?”

“அவன் கூலி வேலை பார்க்குறவனாம்.”

“பிறகு... வேலை செய்யாமல் பட்டினி கிடக்குறவனா இருக்கணுமா?”

“பெரிய பணக்காரனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு ஆசை.”


“பொண்ணு பணக்காரியா இருந்தால், பணக்காரன் கல்யாணம் பண்ண வருவான். இல்லாவிட்டால் கூலி வேலை பார்க்குறவன்தான் வருவான்.”

“அவள் பேரழகியாம்... அழகைப் பார்த்துப் பணக்காரன் வருவான்னு அவர் சொல்றாரு.

“பணமில்லாத பொண்ணுகிட்ட அழகு இருந்தால் பணக்காரன் வருவான். கல்யாணம் பண்ணுவதற்கு இல்லை. அப்போதைய காரியத்தை நிறைவேத்திக்கிறதுக்கு... நாணி அக்கா, நீங்க அவர்கிட்ட சொல்லுங்க.”

“நான் சொன்னால் அவர் கேக்குறது இல்லடி பாரு.”

வேலாயுதன் அவர்கள் நின்றிருந்த இடத்திற்கு வந்தான். அவன் கேட்டான்:

“அவள் எங்கேடீ?”

“அவள் அந்தப் பக்கம் போயிட்டா” - நாணி சொன்னாள்.

“அவளுக்கு கூலி வேலைக்காரன் தேவையில்லைன்னு அவள்கிட்ட சொல்லு." "ஓ! வருவான்... பணக்காரன் வருவான்!” - நாணி கடுமையான வெறுப்புடன் சொன்னாள்.

“வருவாங்கடீ... அவளுக்குப் பணக்காரர்கள் வருவாங்க... அவளைப் பார்த்தால் குபேரனே வருவான்.”

“ம்... குபேரன் வருவான்! இன்னைக்கு பட்டினி... நான் போய் பாருக்கிட்ட இரண்டு நாழி அரிசி வாங்கிட்டு வர்றேன்... வா பாரு!”

நாணியும் பாருவும் நடந்தார்கள். வேலாயுதன் நாணியைத் தடுத்தான்.

“அங்கேயே நில்லுடி! பாருவின் இரண்டு நாழி அரிசி வேண்டாம். அரிசி வேற இடத்துல இருக்கும்.”

“எங்கே இருக்கும்?”

“இருக்கும்டி... இருக்கும்.”

“அப்படின்னா நான் போறேன் நாணி அக்கா.” - பாரு போனாள்.

“அவளோட அரிசி நமக்கு வேண்டாம்டி நாணி. நம்முடைய பட்டினி, கஷ்டங்கள் எல்லாம் இல்லாமல் போகும். என் மகள் அதிர்ஷ்டம் உள்ளவள். நீ அங்கே கொஞ்சம் பாரு.”

ஒரு பெரிய கூடையைச் சுமந்து கொண்டு ஒரு ஆள் வந்து கொண்டிருந்தான். நாணி கேட்டாள்:

“அது என்ன?”

“வா.... காட்டுறேன்” எல்லாரும் வீட்டை நோக்கி நடந்தார்கள்.

வீட்டின் முன் பக்கத்தில் இருந்த வராந்தாவில் வந்த மனிதன் சுமையை இறக்கி வைத்தான். வேலாயுதன் சுமையைத் தூக்கி வந்தவனிடம் கேட்டான்:

“ஏதாவது சொல்லி விட்டாரா?”

“இல்லை.”

“அப்படின்னா நீ போ.”

சுமையைத் தூக்கிக் கொண்டு வந்தவன் அங்கிருந்து கிளம்பினான். நாணி கூடையில் என்ன இருக்கிறது என்று பார்த்தான். அரிசி இருந்தது. உப்பு, மிளகாய் என்று பல பொருட்களும் இருந்தன. காய்கறிகள் இருந்தன. நாணி ஆச்சரியத்துடன் கேட்டாள்:

“இது எங்கேயிருந்து வந்தது?”

“அந்த விஷயத்தைப் பிறகு சொல்றேன். இனிமேல் இந்த வீட்டில் பட்டினியும் கஷ்டங்களும் இருக்காது.”

2

ல வருடங்களாக இருக்கும் ஒரு மண்ணாலான வீடு அது. இரண்டு அறைகளும் சமையலறையும் முன் பக்கத்தில் ஒரு வராந்தாவும் இருந்தன. முப்பத்தைந்து சென்ட் பரப்பளவு கொண்ட ஒரு தென்னந்தோப்பில் அந்த வீடு இருந்தது.

ஒரு செட்டிதான் அந்த வீட்டுக்கும் நிலத்திற்கும் உரிமையாளர். செட்டிக்கு கொஞ்சம் கடன் இருந்தது. கடனைத் தீர்ப்பதற்காக அவர் சீட்டு பிடிக்கும் பைலி முதலாளியின் சீட்டில் ஒரு ஆளாகச் சேர்ந்து ஏலம் எடுத்தார். நிலத்தையும் வீட்டையும் அடமானம் வைத்துப் பணம் வாங்கிக் கடனை அடைத்தார். ஆனால், பிறகு தவணைப் பணத்தை முறைப்படி கட்டாமல் பாக்கி வைத்தார். பைலி முதலாளி வழக்கு தொடுத்து தீர்ப்பும் சொல்லப்பட்டது. நிலத்தையும் வீட்டையும் அவர் ஏலத்தில் எடுத்தார். செட்டியும் குடும்பத்தினரும் அங்கிருந்து வெளியேறினார்கள்.

அதற்குப் பிறகுதான் வாடகைக்கு இருப்பவர்கள் என்ற முறையில் வேலாயுதனும் குடும்பமும் அங்கு வந்து வசிக்க ஆரம்பித்தார்கள். பைலி முதலாளி நிலத்தைப் பார்ப்பதற்காக வருவது வழக்கமில்லை. முதலாளியின் கணக்குப் பிள்ளைதான் தேங்காய்களை வெட்ட வருவான். இரண்டு மாமரங்களும் ஒரு பலா மரமும் அங்கு இருந்தன. அதில் உண்டாகக் கூடிய மாங்காய்களையும் பலாப்பழத்தையும் வேலாயுதனே பொதுவாக எடுத்துக் கொள்வான்.

வேலாயுதன் மிகவும் நல்ல நிலைமையில் வாழ்ந்த ஒரு மனிதன். அவனுடைய தந்தை குஞ்ஞுராமன் நிலங்களையும் வீடுகளையும் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்யும் ஆளாக இருந்தான். அவனுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் மட்டுமே இருந்தார்கள். மகள்மீது அவனுக்கு அளவற்ற அன்பு இருந்தது.

குஞ்ஞுராமன் வரவைத் தாண்டி செலவு செய்யக்கூடிய மனிதனாக இருந்தான். அதனால் குத்தகைப் பணம் கொடுக்காமல் பாக்கி நின்றது. நிலங்கள், வீடுகள் ஆகியவற்றின் உரிமையாளர்கள் குஞ்ஞுராமனிடமிருந்து குத்தகையை மீட்டு விட்டார்கள். அதற்குப் பிறகு தனக்கு சொந்தமாக இருந்த இரண்டு சிறிய வீடுகளில் கிடைத்த பணத்தைக் கொண்டு வாழ வேண்டிய சூழ்நிலை அவனுக்கு உண்டானது.

மகன் வேலாயுதனுக்கும் மகள் அம்மிணிக்கும் திருமணம் முடிந்து விட்டிருந்தது. மகளுடைய கணவன் கஷ்டப்பட்டு உழைக்கக் கூடிய ஒரு கொப்பரை வியாபாரியாக இருந்ததால், அவர்கள் பொருளாதார ரீதியாக எந்தவிதப் பிரச்சினையும் இல்லாதவர்களாக இருந்தார்கள். மகன் விஷயத்தை எடுத்துக் கொண்டால், அவனுக்கு ஒரு தொழிலும் தெரியாது. அவனும் எந்தவிதத் தொழில் செய்யவும் ஆர்வம் இல்லாதவனாக இருந்தான். அவனையும் அவனுடைய மனைவியையும் பிள்ளைகளையும் காப்பாற்ற வேண்டிய சுமை குஞ்ஞுராமன்மீது வந்து விழுந்தது. அந்த வகையில் தன்னுடைய வயதான காலத்தில் அவன் மிகவும் சிரமப்பட்டான்.

இறுதியில் குஞ்ஞுராமனுக்கு குடல் சம்பந்தப்பட்ட நோய் வந்து சேர்ந்தது. சிகிச்சை செய்வதற்காக இரண்டு வீடுகளில் ஒன்றை விற்று சிகிச்சை செய்தும் குஞ்ஞுராமன் மரணத்தைத் தழுவிவிட்டான்.

வேலாயுதனும் குடும்பமும் அனாதைகள் ஆனார்கள். பட்டினி கிடக்கக்கூடாது என்பதற்காக வாழ்ந்து கொண்டிருந்த வீட்டையும் நிலத்தையும் விற்றுவிடலாம் என்று அவன்  முடிவெடுத்தான். ஆனால் அவனுடைய சகோதரியும் வீட்டிற்கும் நிலத்திற்கும் உரிமை உள்ளவளாக இருந்தாள். தன் சகோதரியிடம் கெஞ்சிக் கேட்டுக்கொண்டு, அவளுடைய உரிமையை வேலாயுதன் எழுதி வாங்கினான். பிறகு அந்த நிலத்தை விற்றுப் பணத்தை வாங்கினான்.

அதற்குப் பிறகுதான் வேலாயுதனும் குடும்பமும் சீட்டு நடத்தும் பைலி முதலாளியின் வீட்டில் வசிக்க வந்தார்கள். வீட்டை விற்ற பணத்தைக் கொண்டு கொஞ்ச காலம் வாழ்க்கையை ஓட்டினார்கள். அதற்குப் பிறகு வாழ முடியாது என்ற சூழ்நிலை உண்டானபோது, வேலாயுதன் சகோதரியிடம் போய் நின்றான். சகோதரிக்கு நான்கு பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டியிருந்தது. எனினும், தன்னுடைய சகோதரனுக்கு அவ்வப்போது அவள் உதவிகளைச் செய்து கொண்டுதான் இருந்தாள்.

தந்தையின் வழியிலும் தாயின் வழியிலும் நிறைய உறவினர்கள் இருந்தார்கள். வேலாயுதன் அந்த உறவினர்களிடம் உதவி கேட்பான். சிலர் எப்போதாவது முடிந்த உதவிகளைச் செய்வார்கள். அடுத்த நேரத்திற்கான உணவு இருக்கிறதா இல்லையா என்பதைப் பற்றி தீர்மானிக்க முடியாத நிலையில் நாட்களை அவன் ஓட்டிக்கொண்டிருந்தான்.


ஒருநாள் வேலாயுதன் நகரத்திற்குப் போனான். பல இடங்களிலும் அலைந்து திரிந்த அவன் இறுதியில் ஒரு வெற்றிலைப் பாக்கு கடைக்கு முன்னால் போய் உட்கார்ந்தான். அங்கு வேறு இரண்டு மூன்று ஆட்கள் உட்கார்ந்திருந்தார்கள். கடைக்காரனும் அவர்களும் பணம் சம்பந்தப்பட்ட சில விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். வேலாயுதன் பெஞ்சில் எதுவும் பேசாமல் உட்கார்ந்திருந்தான்.

இப்போது அங்கு வேறொரு மனிதன் வந்தான். கறுத்து மெலிந்த ஒரு ஆள். ஆனால் அவன் சில்க் சட்டையும் ஜரிகை போட்ட வேட்டியும் அணிந்திருந்தான். அவன் ஒரு பாக்கெட் சிகரெட்டும் ஒரு தீப்பெட்டியும் வாங்கி, பாக்கெட்டிற்குள்ளிருந்து சில நோட்டுகளை எடுத்தான். ஒரு பத்து ரூபாய் நோட்டைக் கடைக்காரனின் கையில் கொடுத்துவிட்டு மீதியைத் தரும்படி சொன்னான். கடைக்காரன் மீதியைத் தந்தான். வந்த மனிதன் பாக்கியை வாங்கிவிட்டு, ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தவாறு அங்கிருந்து கிளம்பினான்.

கடையில் உட்கார்ந்திருந்தவர்களில் ஒரு மனிதன் கடைக்காரனிடம் கேட்டான்:

“அந்த ஆளைத் தெரியுமா?”

“தெரியாது. யார் அது?”

“அதுவா? ஊர்வசி மாதவியோட கணவன்.”

“கணவனா? கூட்டிக் கொடுப்பவன்னு சொல்லு” - இன்னொரு மனிதன் சொன்னான்.

“முதலில் மாதவியின் கணவனாக மட்டும்தான் இருந்தான். அப்போ பிச்சை எடுக்குறதுதான் வேலை. அதற்குப் பிறகு கூட்டிக் கொடுக்குறவனா ஆயிட்டான். அப்போ பணக்காரனா ஆயாச்சு. பாக்கெட்ல இருந்து நோட்டுகளை எடுக்குறதைப் பார்த்தேல்ல?”

மூன்றாவது ஆள் சொன்னான்:

“அப்போ இந்த ஆளு தாடி வளர்த்துக் கொண்டு, கிழிஞ்ச சட்டையைப் போட்டுக் கொண்டு கச்சேரி சந்திப்பில் நின்று கொண்டிருப்பதை நான் பார்த்திருக்கேன். சில நேரங்களில் குட்டன் நாயரின் தேநீர்க் கடையில் போய் உட்கார்ந்திருப்பான். சில வேளைகளில் குட்டன் நாயர் ஒரு தேநீர் தருவார். அப்படிப் பிச்சை எடுத்துக் கொண்டு திரிஞ்ச ஆளை இப்போ பார்த்தப்போ எனக்கே அடையாளம் தெரியல...”

“பார்க்குறதுக்கு அழகா இருக்குற ஒரு பெண் கையில இருந்தால்...” - கடைக்காரன் முழுமையாகக் கூறாமல் சிரித்தான்.

“அப்படிச் சொல்லு... அழகு இருந்தால் எந்தக் காரியத்தையும் சாதிக்கலாம்” - முதலாவது ஆள் சொன்னான்.

“அழகு இருந்தால் மட்டும் போதாதுடா. அழகை விற்பனை செய்றதுக்கும் தெரிஞ்சிருக்கணும்.”

“வாழ்றதுக்காக எதை வேணும்னாலும் விற்கலாம்னு நீ சொல்றியா? - மூன்றாவது ஆள் கேட்டான.

“முதல்ல வாழணும். அதற்குப் பிறகுதான் மற்ற எல்லா விஷயங்களும். பசியால சாகுற சூழ்நிலை வர்றப்போ கையில இருக்குறது எதுவாக இருந்தாலும் எடுத்து விற்பேன்டா. வாழணும்ன்ற ஆசை எல்லாருக்கும் இருக்கும்.”

வேலாயுதன் எழுந்து நடந்தான். ஏதோ ஒரு வெளிச்சம் கிடைத்ததைப்போல அவனுடைய முகம் பிரகாசமாக ஆனது.

இரவு உணவு சாப்பிட்டு முடித்து தங்கம்மாவும் பங்கியும் படுத்தார்கள். வேலாயுதன் வராந்தாவில் உட்கார்ந்திருந்தான். நாணி கேட்டாள் :

“படுக்கலையா?”

“கொஞ்ச நேரம் ஆகட்டும். நீ இங்கே வந்து உட்காரு.”

“வௌக்குல மண்ணெண்ணெய் கொஞ்சம்தான் இருக்கு” - நாணி அருகில் வந்து உட்கார்ந்தாள்.

“அரிசியும் சாமான்களும் கொண்டு வந்தது எங்கே இருந்துன்னு உனக்குத் தெரியுமா?”

“எங்கேயிருந்துன்னு நான் கேட்டதற்கு பதிலே சொல்லலையே! பிறகு சொல்றேன்னுல்ல சொன்னீங்க.”

“அப்படின்னா இப்போ சொல்றேன். சங்கரன் முதலாளியோட கடையில இருந்து...”

“கடனுக்கா?”

“கடனுக்கு இல்லைடி... அந்த ஆளு கொடுத்து விட்டிருக்காரு.”

“அந்த ஆளு யாருக்கும் எதையும் வெறுமனே கொடுக்குறவர் இல்லையே!”

“முதலாளியின் கணக்குப்பிள்ளை இங்கே வருவான். அவன் சொல்லுவான்.”

வெளியே நின்றிருந்த ஒரு மனிதர் வராந்தாவிற்கு வந்தார். வேலாயுதன் சந்தோஷமான குரலில் சொன்னான்:

“நாணு, உன்னைப் பற்றி இப்போத்தான் சொல்லிக்கிட்டு இருந்தேன். அதற்குள் நீ வந்துட்டே உட்காரு நாணு” - வேலாயுதன் ஒரு பலகையை நீட்டினான்.

நாணு உட்கார்ந்தான். கையிலிருந்த பொட்டலத்தை வேலாயுதனுக்கு முன்னால் வைத்தான். வேலாயுதன் கேட்டான் :

“இது என்ன?”

“கொஞ்சம் வெற்றிலையும் புகையிலையும்.”

வேலாயுதன் பொட்டலத்தை எடுத்து நாணியின் கையில் கொடுத்தான். நாணி கேட்டாள்:

“முதலாளி நல்ல இருக்காருல்ல?”

“நல்லா இருக்காரான்னு கேட்டால்... நல்லா இருக்காருன்னு சொல்லணும்... இல்லைன்னும் சொல்லணும்.”

“முதலாளிக்கு என்ன குறைச்சல்? பணத்தை வாரி வாரி சேர்க்குறார்ல?”

“பணத்தை வாரி வாரி சேர்த்தால் சந்தோஷம் கிடைச்சிடுமா?”

“பிறகு என்ன வேண்டும்? மனைவி இருக்காங்க. ஒரு குழந்தையும் இருக்கு.”

“மனைவியைப் பார்த்திருக்கீங்களா?”

“நான் பார்த்தது இல்ல.”

“நீங்க ஒரு தடவை பார்க்கணும். அப்போத்தான் சங்கரன் முதலாளியின் சுகத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியும். ”

“அழகா இருப்பாங்கள்ல? கிட்டன் முதலாளியின் மகள் தானே?”

“முதலாளியின் மகளாகிவிட்டால் அழகா இருப்பாங்கன்னு சொல்லிட முடியுமா? இரண்டு காதுகளையும் மோதிக்கொண்டு இருக்குற வாய்.... இரண்டு வரிசைப் பற்களும் வெளியே நீட்டிக்கிட்டு இருக்கும். கடுகு அளவுக்கு இருக்குற கண்கள்... தலைமுடியைக் கட்டி வச்சால், ஒரு வெங்காயம் அளவுக்கு இருக்கும்.”

“அப்படின்னா பிறகு எதுக்கு சங்கரன் முதலாளி கல்யாணம் பண்ணினாரு.”

“கல்யாணம் பண்ணினதா? கல்யாணன் பண்ணினதுனாலதான் சங்கரன், சங்கரன் முதலாளியா ஆனாரு. நாலு ராட்டு இருந்தன. அவற்றில் கயிறு பிரித்து விற்று வாழறப்போத்தான் கல்யாண விஷயம் அவரைத் தேடி வந்தது. பத்தாயிரம் ரூபாய்களும் ஒரு ஏக்கர் தென்னந்தோப்பும் கிடைத்தன. கிடைக்குமா? யாராவது கொடுப்பாங்களா?”

“கிட்டன் முதலாளிகிட்டத்தான் இருக்கே! பிறகு கொடுத்தால்தான் என்ன?”

“மற்ற இரண்டு பொண்ணுகளை ஐயாயிரம் ரூபாய் கொடுத்து கல்யாணம் பண்ணி வச்சிருக்காரு. இந்தப் பொண்ணு யாருக்கும் தேவைப்படாமல் இருந்ததால் இந்தத் தொகை கிடைச்சது.”

“அதற்கென்ன? இப்போ சங்கரன் முதலாளியைவிட பெரிய முதலாளி யார் இருக்கா?”

“பணம் மட்டுமே போதுமாடீ நாணி?” - வேலாயுதன் ஒரு கேள்வி கேட்டான்.

“அதற்காக இப்போ என்ன செய்ய முடியும்?”

“முதலாளிக்கு ஒரு யோசனை...” - நாணு சொன்னான்.

“இன்னொரு கல்யாணம் பண்ணிக்கலாம்னா?”

“அதேதான். அதற்காகத்தான் நான் இப்போ இங்கே வந்திருக்குறதே...”


நாணி அமைதியாக இருந்தாள்.

“என்ன? யாரும் எதுவும் பேசாம இருக்கீங்க?”

“சொல்ல வேண்டியது நான் இல்லையே! சொல்ல வேண்டியவங்க சொல்லட்டும்” - நாணி சொன்னாள்.

“வேலாயுதன் அண்ணன் சம்மதம் சொல்லிட்டாரு. நாணி அக்கா, இனி உங்க சம்மதம்தான் வேணும்.”

நாணி ஆச்சரியத்துடன் கேட்டாள்:

“அப்படின்னா கல்யாண விஷயத்துக்கு சம்மதம் எல்லாம் கொடுத்து முடிச்சாச்சா? எனக்கு இந்த விஷயமே தெரியாதே!”

“நாணு வந்து சொல்லட்டுமேன்னுதான் நான் சொல்லாமல் இருந்தேன். உனக்கு சம்மதமான்னு நாணுக்கிட்ட சொன்னால் போதும்.”

“அவளுக்கு சம்மதமான்னு தங்கம்மாவிடம் கேட்க வேண்டாமா?”

“தந்தையும் தாயும் சம்மதிச்ச பிறகு அவள்கிட்ட எதுக்கு கேட்கணும்?”

“கல்யாணம் பண்ணப்போறது அவள்தானே?”

“கல்யாணம் பண்ணுற நேரம் வர்றப்போ சொல்லிக்கலாம். அதற்கு முன்னால சொல்ல வேண்டாம். உனக்கு சம்மதமான்னு சொல்லு.”

சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு நாணி சொன்னாள்:

“ம்... சம்மதம்தான்.”

“நாணு, நீ போய் முதலாளிகிட்ட சொல்லு... நல்ல நேரம் பார்த்து கல்யாணத்தை நடத்தலாம்னு...”

“அப்படின்னா நான் புறப்படட்டுமா? வேலாயுதன் அண்ணே... நாளைக்கு அந்தப் பக்கமா வர்றீங்களா?”

“வர்றேன்...”

நாணு அங்கிருந்து கிளம்பினான்.

3

வேலாயுதனுக்கும் கணக்குப் பிள்ளை நாணுவுக்கும் இடையில் நல்ல அறிமுகம் இருந்தது. நாணு சங்கரன் முதலாளியின் நம்பிக்கைக்கு உரியவனாக இருந்ததால் யாருக்கும் தெரியாத முதலாளியின் கவலைகள் அவனுக்கு நன்கு தெரிந்திருந்தன.

வேலாயுதன் சில நேரங்களில் நாணுவின் வீட்டிற்குச் செல்வான். நாணு வேலாயுதனுக்குச் சிறு சிறு உதவிகளைச் செய்வது வழக்கம். அவர்களுக்கிடையே பேசிக் கொண்டிருக்கும்போது, நாணு சங்கரன் முதலாளியின் திருமண வாழ்க்கையைப் பற்றிப் பேசுவதும் வழக்கம். வேலாயுதன் அந்த விஷயத்தைப் பரிதாப உணர்ச்சி உண்டாக கேட்டுக் கொண்டிருப்பான்.

அப்படி இருக்கும்போதுதான் வேலாயுதன் ஒரு நாள் நகரத்திலிருந்த வெற்றிலைப் பாக்குக் கடையைத் தேடிச் சென்றான். தன் மனைவியைக் கூட்டிக் கொடுத்துப் பணம் சம்பாதிக்கும் கணவனை அங்கு அவன் பார்த்தான். வெற்றிலைப் பாக்குக் கடையில் இருந்தவர்கள் அந்தக் கணவனைப் பற்றிப் பேசிய உரையாடல் வேலாயுதனுக்கு ஒரு புதிய வெளிச்சத்தைத் தந்தது!

‘பார்க்குறதுக்கு அழகா இருக்குற பெண் இருந்தால் எந்த காரியத்தையும் சாதிக்கலாம்’ - அதுதான் வேலாயுதனுக்குக் கிடைத்த புதிய வெளிச்சம். மகள் தங்கம்மா பார்ப்பதற்கு அழகாக இருக்கும் பெண்தான். அந்த விஷயத்தில் வேலாயுதனுக்கு சந்தேகமே இல்லை. அவளை வைத்துக் காரியங்களைச் சாதிக்க வேண்டும். வறுமைக்கும், பட்டினிக்கும் அவளை வைத்துப் பரிகாரம் காண வேண்டும். வேலாயுதன் முடிவெடுத்தான்.

அடுத்த நாள் வேலாயுதன் நாணுவின் வீட்டுக்குச் சென்றான். பல விஷயங்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருப்பதற்கு இடையில் வேலாயுதன் கேட்டான்:

“நான் ஒரு விஷயத்தைக் கேட்கட்டுமா நாணு?”

“என்ன விஷயம்?”

“சங்கரன் முதலாளி பெரிய பணக்காரர். இன்னொரு கல்யாணத்தைப் பண்ணிக்கிட்டா என்ன?”

நாணு சிரித்து கொண்டே கேட்டான்:

“வேலாயுதன் அண்ணே, உங்க மகளைக் கொடுப்பீங்களா?”

“என் மகள் முதலாளிக்கு வேணும்னா கல்யாணம் பண்ணிக் கொண்டு போகட்டும்.”

“அப்படின்னா, வேலாயுதன் அண்ணே... உங்கக்கிட்ட மனம் திறந்து பேசலாம். நான் இந்த விஷயத்தை உங்கக்கிட்ட கேட்கணும்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்.”

“நாணு, முதலாளி என்கிட்ட கேட்கச் சொல்லி உன்னிடம் சொன்னாரா?”

“சொல்லலைன்னாலும் முதலாளிக்கு விருப்பம் இருக்கும்னு எனக்குத் தெரியும்.”

“நாணு, அப்படின்னா முதலாளிக்கிட்ட விஷயத்தைச் சொல்லு.”

“நான் சொல்றேன். பிறகு... வேலாயுதன் அண்ணே, நாளைக்கு இங்கே வாங்க...”

“நான் வர்றேன்” - வேலாயுதன் அங்கிருந்து புறப்பட்டான்.

அடுத்த நாள் வேலாயுதன் நாணுவின் வீட்டுக்குச் சென்றான். அன்று நாணு வேலாயுதனுக்கு தேநீர் கொடுத்தான். எப்போதும் இல்லாத மரியாதையைக் காட்டினான்.

“முதலாளிக்கிட்ட சொன்னியா?”

“சொன்னேன்.”

“அதற்கு முதலாளி என்ன சொன்னாரு?”

“முதலாளி ரொம்பவும் சந்தோஷப்பட்டாரு. வேலாயுதன் அண்ணே, இது முதலாளி ஆசைப்பட்டதுதான். அப்படி இருக்குறப்போ சந்தோஷப்படாமல் இருப்பாரா? வேலாயுதன் அண்ணே, நீங்க ஒரு தடவை தன்னை வந்து பார்க்கணும்னு முதலாளி சொன்னாரு. என்ன விஷயம்னா... நான் சொல்லல. முதலாளியே சொல்வாரு.”

“சொல்லு நாணு... என்ன விஷயம்னு சொல்லு.”

நாணு தயங்கித் தயங்கி சொன்னான்:

“என்ன விஷயம் என்றால்... முதலாளி கல்யாணம் ஆன பிறகுதான் முதலாளியா ஆனார். பார்க்குறதுக்கு அழகா இல்லை என்றாலும் அந்த அம்மா ஐஸ்வர்யம் உள்ளவங்க. அதிர்ஷ்டம் உள்ளவங்க. இனி ஒரு பெண்ணைக் கல்யாணம் பண்ணி அங்கே கொண்டுபோய் குடித்தனம் நடத்த முடியுமா? அதுனால என்ன விஷயம்னா...”

“சொல்லு நாணு.... சொல்லு.”

“நான்கு பேர்களுக்குத் தெரிந்து இனியொரு கல்யாணம் பண்ண அவரோட மனைவி சம்மதிப்பாங்களா? மனைவியின் வீட்டைச் சேர்ந்தவர்கள் சம்மதிப்பார்களா? நிலைமை அப்படி இருக்குறப்போ என்ன செய்யலாம்னா..”

“சொல்லு நாணு... சொல்லு.”

“யாருக்கும் தெரிய வேண்டாம். வேலாயுதன் அண்ணே, தினமும் இரவு நேரத்துல முதலாளி அங்கே வருவார். அவளுக்குத் தேவையான அனைத்தையும் முதலாளி தருவார். உங்களுக்கும் உதவுவார். அது போதாதா வேலாயுதன் அண்ணே?”

“அதற்கு நான் சம்மதிக்கலாம் நாணு. ஆனால் தாயும் மகளும் சம்மதிக்க வேண்டாமா?”

“நீங்க சொன்னா அவங்க ஒத்துக்குவாங்க.”

“அந்தப் பெண் ஒரு பிடிவாதக்காரிடா நாணு.”

“ஓ! பெண் பிள்ளைகளின் பிடிவாதம் எவ்வளவு நேரத்துக்கு இருக்கும் வேலாயுதன் அண்ணே? பெண் பிள்ளைகளின் பிடிவாதம் ஊதினா பறந்துவிடக் கூடியது!”

“நான் கொஞ்சம் சொல்லிப் பார்க்குறேன்.”

“வேலாயுதன் அண்ணே. நீங்க முதலாளியை ஒரு தடடிவை வந்து பார்க்கணும். சாயங்காலம் ஆயிட்டா கணக்கு எழுதுறவங்க எல்லாரும் போயிடுவாங்க. பிறகு முதலாளி தனியா உட்கார்ந்து கொஞ்சம் குடிப்பாரு. முதலாளியைப் பார்க்குறதுக்கு அதுதான் நல்ல நேரம்.”

“நான் நாளைக்கு சாயங்காலம் வர்றேன்” - வேலாயுதன் அங்கிருந்து கிளம்பினான்.

இரவு நீண்ட நேரம் ஆன பிறகுதான் வேலாயுதன் வீட்டிற்கு வந்தான். நாணி மண்ணெண்ணெய் விளக்கை வைத்துக்கொண்டு வராந்தாவில் காத்திருந்தாள். நாணி எழுந்து நின்று கொண்டு கேட்டாள்:

“இவ்வளவு நேரமா எங்கே போயிருந்தீங்க?”

“ஆண்கள் பல இடங்களுக்கும் போவார்கள்.”


“மிடுக்கா இருக்குற மாதிரி இருக்கு?”

“ஆண்களுக்கு மிடுக்கும் இருக்கும்.”

“ஓஹோ! கள்ளு குடிச்சிருக்கீங்களா?”

“ஆண்கள் கள்ளும் குடிப்பாங்க.”

“இதை யாரு வாங்கித் தந்தாங்க?”

“எனக்கு வாங்கித் தர்றதுக்கு பெரிய ஆளுங்க இருக்காங்கடீ.” மடிக்குள்ளிருந்து ஒரு பேப்பர் பொட்டலத்தை எடுத்து நீட்டியவாறு கேட்டான் :

“இது என்னன்னு சொல்ல முடியுமா?”

“எனக்குத் தெரியாது.”

“உனக்குத் தெரிய வேண்டாம். இதை பெட்டியில வச்சு மூடு.”

நாணி பொட்டலத்தை வாங்கி அவிழ்த்துப் பார்த்துவிட்டு ஆச்சரியத்துடன் சொன்னாள்:

“அடடா! இது நோட்டாச்சே!”

“நூறு இருக்கடீ... நூறு இருக்கு.”

“இது எங்கேயிருந்து கிடைச்சது?”

“சொல்றேன்டி... பிள்ளைகள் படுத்துட்டாங்களா?”

“அவங்க தூங்கிட்டாங்க.”

“அப்படின்னா சொல்றேன். உட்காரு...”

இரண்டு பேரும் உட்கார்ந்தார்கள். வேலாயுதன் சொன்னான் :

“நான் சங்கரன் முதலாளியைப் பார்த்தேன்.”

“அங்கேயா கள்ளு குடிச்சீங்க?”

“கள்ளு இல்லைடி... விலை அதிகமான பிராண்டி...”

“நோட்டு முதலாளி தந்ததா?”

“இப்போது இது இருக்கட்டும் என்று சொல்லிட்டு தந்தாரு. இனியும் தருவார். எவ்வளவு வேணும்னாலும் தருவார்.”

“அவளுடைய அதிர்ஷ்டம்...”

“எவ்வளவு பெரிய ஆளும் அவளைப் பார்த்துட்டா, கையில் இருக்குற எல்லாவற்றையும் தந்திடுவான். பிறகு முதலாளி ஒரு விஷயம் சொன்னாரு.”

“அது என்ன?”

“அது என்னன்னா... இந்த விஷயம் யாருக்கும் தெரியக் கூடாதுன்னு சொன்னாரு.”

“யாருக்கும் தெரியாமல் எப்படிக் கல்யாணத்தை நடத்த முடியும்?”

“விஷயம் தெரிந்தால் முதலாளியின் மனைவியும், மனைவியின் வீட்டைச் சேர்ந்தவர்களும் வந்து பிரச்சினைகள் பண்ணுவாங்கன்னு அவர் சொல்றாரு.”

“அப்படின்னா பிறகு என்னதான் பண்றது?”

“கல்யாணம் வேண்டாம்னு முதலாளி சொல்றாரு. தினமும் இரவு நேரத்துல முதலாளி இங்கே வருவாராம். அவளுக்கும் நமக்கும் தேவைப்படுறதை முதலாளி தருவாராம்.”

“அப்படின்னா... அவள் முதலாளியின் வைப்பாட்டியா இருக்கணும்னு சொல்றீங்களா?”

“வைப்பாட்டியா இருந்தால் என்னடீ? நாம பட்டினி இல்லாம வாழலாம்... அவள் வைப்பாட்டியாக இருந்தால்...”

“அவளுக்கு குமாரனே போதும்னு சொல்றா...”

அதைக் கேட்டு வேலாயுதனின் முகமே மாறிவிட்டது. அவன் கோபத்துடன் சொன்னான் :

“அவன் இனிமேல் வேலிப்பக்கம் வந்தால், அவனை நான் மிதிப்பேன்.”

“மிதிக்கவும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம். நாளைக்கு நான் அவள்கிட்ட சொல்லிப் பார்க்கிறேன். நாம படுப்போம்.”

“ம்... படுப்போம்.”

“சோறு வேண்டாமா?”

“வேண்டாம்.”

இரண்டு பேரும் அறைக்குள் வந்து படுத்துத் தூங்க ஆரம்பித்தார்கள். பக்கத்து அறையிலிருந்து பங்கி அழைத்தாள்:

“அம்மா... அம்மா...”

நாணியும் வேலாயுதனும் கண் விழித்தார்கள். நாணி கேட்டாள்:

“என்னடீ? என்ன...?”

“அக்கா எங்கே? அக்காவைக் காணோம்.”

நாணி விளக்கைப் பற்ற வைத்தாள். வேலாயுதன் நடுவில் இருந்த கதவைத் திறந்து அறைக்குள் நுழைந்தான். விளக்கை எடுத்துக் கொண்டு நாணியும் சென்றாள். நாணி சொன்னாள்:

“அவள் சிறுநீர் கழிக்கப் போயிருப்பாள்.”

“சிறுநீர் கழிக்கப் போறதுன்னா, நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்துதானே போவோம்”-பங்கி சொன்னாள்.

பின்பக்கக் கதவு அடைக்கப்பட்டிருந்தது. வேலாயுதன் கதவைத் திறந்து வெளியே ஓடினான். விளக்கை எடுத்துக் கொண்டு நாணியும் பங்கியும் வெளியே சென்றார்கள்.

மேற்குப் பகுதியிலிரந்த மாமரத்திற்குக் கீழே ஒரு உரத்த சத்தமும் ஒரு அடியும் கேட்டன. தொடர்ந்து ஒரு முனகலும் ஒரு ஓட்டமும்.

“என்ன அது? என்ன?” - நாணி மாமரத்திற்குக் கீழே சென்றாள்.

“நான் வந்தப்போ, அவன் இவளைக் கட்டிப் பிடித்துக் கொண்டு நிக்கிறான்” - வேலாயுதன் கோபத்தில் நடுங்கினான்.

“யார்? குமாரனா?”

“அவனேதான்... அவன் இனிமேல் வேலிக்குள்ளே வந்தான் என்றால், அவனை நான் இரண்டு துண்டுகளா ஆக்கிடுவேன்.”

தங்கம்மா முகத்தைக் குனிந்துகொண்டு எந்தவித அசைவும் இல்லாமல் நின்றிருந்தாள். நாணி தன் மகளின் கையைப் பிடித்துக் கொண்டு சொன்னாள் :

“வா மகளே.... உள்ளே போகலாம்.”

மகளையும் அழைத்துக் கொண்டு நாணி நடந்தாள். வேலாயுதனும் பங்கியும் அவர்களைப் பின்தொடர்ந்தார்கள்.

வேலாயுதன் உறுதியான குரலில் சபதம் போட்டான்: “நான் உயிருடன் இருக்குறப்போ, என் மகள் அவனுக்குக் கிடைக்க மாட்டாள்.”

“கொஞ்சம் பேசாமல் இருக்கீங்களா? அவள்கிட்ட நான் சொல்லிக்கிறேன்” - நாணி உறுதியான குரலில் சொன்னாள்.

நாணியும் தங்கம்மாவும் பங்கியும் அறைக்குள் சென்றார்கள். வேலாயுதன் பக்கத்து அறைக்குள் சென்றான். நாணியும் தங்கம்மாவும் கட்டிலில் உட்கார்ந்தார்கள். பங்கி தரையில் உட்கார்ந்தாள். நாணி சொன்னாள்:

“மகளே, இந்தக் குடும்பத்தைக் காப்பாற்றவும் அழிக்கவும் உன்னால் முடியும்” - நாணி அழுதாள்.

“குமாரன் அண்ணன் இல்லாமல் வேறு யாரும்...” - தங்கம்மா ஏங்கி ஏங்கி அழ ஆரம்பித்தாள்.

“நாணி, நீ இங்கே வா. அவளிடம் இப்போ எதையும் சொல்ல வேண்டாம்” - பக்கத்து அறையில் இருந்தவாறு வேலாயுதன் சொன்னான்.

நாணி எழுந்து சென்றாள்.

4

குமாரன் ஒரு இசை கற்கும் மாணவன். நகரத்தில் இருந்த ஒரு பாகவதர் அவனுக்கு இசை கற்பித்துக் கொண்டிருந்தார். இசை விஷயத்தில் ஓரளவுக்கு அவன் பயிற்சி பெற்றிருந்தான். பாகவதர் இசைக் கச்சேரிக்கு செல்லும்போது குமாரனையும் அழைத்துக் கொண்டு செல்வது வழக்கம். பாகவதருடன் சேர்ந்து அவன் பாடவும் செய்வான்.

குமாரனின் தந்தை கொச்சு குட்டன் ஒரு மரவள்ளிக் கிழங்கு வியாபாரி. வேலாயுதனின் தந்தை குஞ்ஞுராமனின் வீட்டிற்கு அருகில் இருந்த சாயங்கால சந்தையில்தான் கொச்சு குட்டனின் மரவள்ளிக் கிழங்கு வியாபாரம் நடந்தது. இரண்டு வீட்டைச் சேர்ந்தவர்களும் மிகவும் நெருங்கிய நட்புடன் இருந்தார்கள்.

கொச்சு குட்டனின் மூத்த மகனாகிய குமாரனும் வேலாயுதனின் மூத்த மகளான தங்கம்மாவும் ஒன்றாகவே விளையாடி வளர்ந்தவர்கள். குமாரனைவிட தங்கம்மா நான்கு வயது இளையவள். தங்கம்மாவின் வீட்டிற்கு குமாரன் போவான். குமாரன் வரவில்லையென்றால் தங்கம்மா குமாரனின் வீட்டிற்குப் போவாள். அந்த அளவிற்கு அவர்கள் ஒருவரையொருவர் பிரியாமல் விளையாடி வளர்ந்தார்கள்.


எல்லாவற்றையும் இழந்து வேலாயுதனும் குடும்பமும் அங்கிருந்து வேறு இடத்திற்கு இருப்பிடத்தை மாற்றியபோது குமாரனும் தங்கம்மாவும் அழுதார்கள். சுடுகாட்டிற்கு அருகில் இருந்த புதிய இருப்பிடத்திற்கு குமாரன் தங்கம்மாவைப் பார்ப்பதற்காக தினமும் ஒரு தடவை வருவான். இருப்பிடத்தை மாற்றி சில நாட்கள் ஆனபோது, அந்தக் குடும்பம் பட்டினி கிடக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளானது. அந்த விஷயத்தைத் தெரிந்திருந்த காரணத்தால், குமாரன் தான் வரும்போது தின்பதற்கு எதையாவது கொண்டு வந்து யாருக்கும் தெரியாமல் தங்கம்மாவிற்குத் தருவான்.

சில நாட்கள் கடந்த பிறகு குமாரன் இசையைக் கற்பதற்காக நகரத்திற்குப்போக ஆரம்பித்தான். சுடுகாட்டிற்கு அருகில் இருந்த வழியேதான் அவன் நகரத்திற்குப் போயாக வேண்டும். போகும் போதும் வரும்போதும் குமாரன் தங்கம்மாவின் வீட்டிற்குச் செல்வான்.

காலப்போக்கில் வேலாயுதனுக்கு அந்த அன்பான உறவில் சந்தேகம் தோன்ற ஆரம்பித்தது. தங்கம்மாவிற்கு பதினேழு வயது முடிந்தது. இனிமேலும் அவளும் குமாரனும் அந்த மாதிரி அருகருகில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பதை அனுமதிக்கலாமா? குமாரன் பாட்டு பாடுவான். தங்கம்மா அந்தப் பாட்டில் தன்னை மறந்து ஈடுபட்டிருப்பாள். அது அப்படியே தொடர்ந்து கொண்டிருப்பதை வேலாயுதன் விரும்பவில்லை. ஒருநாள் வேலாயுதன் கறாரான குரலில் சொன்னான்:

“டேய் குமாரா, நீ பாட்டு பாடி அவளை மயக்கப் பார்க்குறியா? நடக்காதுடா... அந்த விஷயம் இங்கே நடக்காது. எழுந்து போ. இனிமேல் நீ இங்கே வரக்கூடாது.”

குமாரன் எழுந்து போய்விட்டான். தங்கம்மா அதிர்ச்சியடைந்து உட்கார்ந்திருந்தாள். நாணி சொன்னாள்:

“அவர்கள் ஒன்றாகச் சேர்ந்து வளர்ந்தவர்கள்தானே? அவனிடம் அப்படிச் சொல்லலாமா?”

“விளையாடக்கூடிய வயசு முடிஞ்சிடுச்சேடீ! இனிமேல் விளையாடினால் நிலைமை மோசமாகிவிடும். தெரியுதா?”

“அவன் அவளை...”

“சொல்லு... சொல்லுடீ... அவன் அவளை என்ன செய்யப் போறான்? கல்யாணம் பண்ணப் போறானா?”

“கல்யாணம் பண்ணினா என்ன?”

“மரவள்ளிக் கிழங்கு வியாபாரம் பண்ணுறவனோட மகனுக்கு என்னுடைய மகளைக் கொடுக்கணுமாடீ? உனக்கு அது சம்மதமாடீ?” - வேலாயுதன் கோபத்தில் அதிர்ந்தான்.

“பிறகு யாருக்குக் கொடுப்பீங்க? பெரிய பணக்காரன் வருவானா? மகளைக் கொண்டு போறதுக்கு...”

“வருவான்டீ.. வருவான். அவளைப் பார்த்தால் பெரிய பணக்காரன் வருவான்.”

தன்னுடைய மகளின் அழகின்மீது அந்த அளவிற்கு வேலாயுதன் மதிப்பு வைத்திருந்தான். அவள் வாசலில் நிற்கும்போது, பாதையில் செல்பவர்கள் அவளைப் பார்த்துக் கொண்டே செல்வதை வேலாயுதன் பார்ப்பதுண்டு. யாராவது ஒரு பணக்காரன் அவள்மீது ஆசை வைத்து, திருமணம் செய்வதற்காக வருவான் என்று அவன் உறுதியாக எதிர் பார்த்தான். நாணி வேலாயுதனிடம் ரகசியமாகச் சொன்னாள்:

“அவளுக்கு அவனே போதுமாம்.”

“அவள் அவன்கூட போனால் பட்டினி கிடந்து செத்துடுவா... அவன் பாட்டு பாடிக்கிட்டுத் திரிஞ்சா அவளுடைய பசி அடங்கிடுமா?”

“அவள் அவன்கூட போய் விட்டாள்னா, நீங்க என்ன பண்ணுவீங்க?”

“நான் அவளையும் கொல்வேன். அவனையும் கொல்வேன்.”

குமாரன் தங்கம்மாவின் வீட்டிற்கு வருவதை நிறுத்திக் கொண்ட பிறகு சாயங்காலம் ஆகிவிட்டால் தங்கம்மா வடக்கு பக்க முற்றத்தில் வடக்கு திசையைப் பார்த்துக் கொண்டு தினமும் நின்றிருப்பாள். அந்த வடக்குப் பக்க வேலியின் மேற்பகுதி வழியாகத் தங்கம்மாவைப் பார்ப்பான். அந்த வகையில் அவர்கள் தினமும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வார்கள்.

“மகளே, இந்த ஊரிலேயே சங்கரன் முதலாளிதான் பெரிய பணக்காரர்” - நாணி தங்கம்மாவிடம் தந்திரம் கலந்த குரலில் சொன்னாள்.

“ம்...” தங்கம்மா அலட்சியமாக முனக மட்டும் செய்தாள்.

“அவர் இன்னும் ஒண்ணோ ரெண்டோ கல்யாணம் கூட பண்ணிக்கட்டும்.”

“அவருக்கு உன்னைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசை.”

“அவர் ஆசைப்பட்டுக்கிட்டே இருக்கட்டும்” - தங்கம்மா எழுந்து போக முயற்சித்தாள்.

நாணி அவளுடைய கையைப் பிடித்துக்கொண்டு சொன்னாள் :

“மகளே, உட்காரு. நான் சொல்றதை முழுசா கேளு” – தங்கம்மாவை  பலத்தைப் பயன்படுத்தி உட்கார வைத்தாள்.

“நீ குமாரன்கூட போனால்...”

“போனால் என்ன?”

“பட்டினி கிடந்து செத்துடுவே. அவன் பாட்டு பாடினால் உன் வயிறு நிறைஞ்சிடுமா?”

“நான் பட்டினி கிடந்துக்குறேன். இப்போக்கூட எப்போதாவது தானே கஞ்சி குடிக்கிறோம்?”

“நம்முடைய பட்டினியும் கஷ்டங்களும் தீர்ந்திடும் மகளே. நீ அவனுடைய பாட்டைக் கேட்டு மயங்காமல் நான் சொல்றபடி கேளு மகளே.”

“அம்மா, குமாரன் அண்ணனின்...”

“அவனை மறந்துடு மகளே... மறந்துடு...”

தங்கம்மா அங்கிருந்து எழுந்து போனாள்.

அன்று சாயங்காலம் தங்கம்மா வடக்குப் பக்கத்திலிருந்த முற்றத்தில் வடக்கு திசையைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள். வடக்குப் பக்க வேலிக்கு மேலே குமாரனின் தலை தெரிவதை அவள் பார்த்தாள். குமாரன் கையைக் காட்டி தங்கம்மாவை அழைத்தான். தங்கம்மா வேலியின் அருகில் ஓடிச் சென்றாள். குமாரன் சொன்னான்:

“இனி நாம ஒருவரையொருவர் பார்க்க முடியாது.”

“ஏன் அப்படிச் சொல்றீங்க?”

“இனி நாம இன்னொரு உலகத்தில் சந்திப்போம்.”

“என்னடா அங்கே? அங்கே யாருடீ?” வேலாயுதன் உரத்த குரலில் கத்தியவாறு ஓடி வந்து கொண்டிருந்தான். குமாரனின் தலை மறைந்தது. வேலாயுதன் தங்கம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு கேட்டான்.

“நீ இங்கே யார்கிட்டடீ பேசிக்கிட்டு இருந்தே? உன்னை நான் அளவுக்கு அதிகமா செல்லம் கொடுத்து வளர்த்ததுனாலதானடீ நீ இப்படி உன் விருப்பப்படி நடந்துக்கிட்டு இருக்கே! போ... வீட்டுக்குப் போ!” -  தங்கம்மாவைப் பிடித்து அவன் தள்ளினான்.

தங்கம்மா வீட்டுக்குள் சென்று அறைக்குள் நுழைந்து படுத்துக் கொண்டாள். பங்கி அவளுக்கு அருகில் சென்று கேட்டாள்:

“அக்கா, நீங்க அங்கே போய் நின்னுக்கிட்டு குமாரன் அண்ணனிடம் ஏன் பேசினீங்க?”

“இல்லடீ... நாங்கள் ஒருவரையொருவர் பார்க்கப் போறது இல்ல. பேசப்போறது இல்ல...” - தங்கம்மா தேம்பித் தேம்பி அழுதாள்.

நாணி வேலாயுதனின் அருகில் சென்று கேட்டாள்:

“அவளை அடிச்சீங்களா?”

“நான் அவளை அடிக்கலடீ... லேசா தள்ளினேன். அவ்வளவுதான்...”

“அவன் அங்கே நின்று கொண்டு கையைக் காட்டி அழைச்சதுனாலதான் அவள் போனாள்.”

“அவன் அழைச்சான்னா இவள் போகலாமான்னுதான் நான் கேக்கறேன். நாம இவளை அளவுக்கு அதிகமா செல்லம் கொடுத்து வளர்த்ததன் விளைவுதான்டீ இதெல்லாம்... அடிச்சு வளர்த்திருந்தா போட்ட கோட்டுல நின்னுருப்பா.”


“அடிக்கவெல்லாம் வேண்டாம். நான் அவளுக்கு இன்னும் கொஞ்சம் புத்திமதி சொல்றேன்.”

தங்கம்மா படுத்த இடத்தைவிட்டு சிறிதும் அசையவில்லை. இரவு உணவு சாப்பிட பங்கி வந்து அழைத்தாள். தங்கம்மா பேசவே இல்லை. பங்கி வற்புறுத்தி அழைத்ததற்கு தங்கம்மா சொன்னாள்:

“எனக்கு வேண்டாம். எனக்குப் பசி இல்ல...”

நாணியும் வேலாயுதனும் வந்து அவளை அழைத்தார்கள். தங்கம்மா அசையவே இல்லை. பேசவில்லை. நாணி சொன்னாள்:

“அவள் சரியான பிடிவாதக்காரின்னு நான் சொன்னேன்ல?”

“அவளுடைய பிடிவாதம் அவளுக்கே கெடுதலா அமையப் போகுதுடீ...”

“புத்திமதி சொல்லணும். கோபப்பட்டால் அவளுடைய பிடிவாதம் மேலும் அதிகமாகும்.”

“நீ புத்திமதி சொன்னேல்ல? அதற்குப் பிறகு என்ன ஆச்சு?”

“நாம பொறுமையா இருக்கணும். திரும்பத் திரும்ப புத்திமதி சொல்லணும்...”

“நீ புத்திமதி சொல்லு.”

இரவு உணவு சாப்பிட்டு முடித்து எல்லோரும் படுத்தார்கள். நேரம் நள்ளிரவு ஆனது.

“அம்மா... அம்மா!...” பங்கி அழைத்தாள்.

“என்னடீ?” - நாணி கேட்டாள்.

“அக்காவைக் காணோம்.”

“அப்படின்னா அவன் வந்திருப்பான்” - வேலாயுதன் எழுந்தான்.

நாணி விளக்கைப் பற்ற வைத்தாள். வேலாயுதனும் நாணியும் பக்கத்து அறைக்குச் சென்றார்கள். வெளியே செல்லும் வாசல் கதவு சாத்தப்பட்டிருந்தது. வேலாயுதன் ஒரு அரிவாளை எடுத்தான்.

“இப்போ நான் அவனை...” - வேலாயுதன் வெளியே ஓடினான்.

நாணியும் பங்கியும் அவனுடன் சேர்ந்து ஓடினார்கள். நிலவு காய்ந்து கொண்டிருந்த இரவு நேரமது. வேலாயுதன் வீட்டில் பின்பக்கத்தில் போய்ப் பார்த்தான். அங்கு எந்த இடத்திலும் தங்கம்மா இல்லை. தெற்குப் பக்கமாக போய் பார்த்தான். அங்கு இருந்த பலா மரத்திற்கு கீழே ஒரு சிறிய முனகல் சத்தம் கேட்டது. வேலாயுதன் அருகில் சென்று பார்த்தான்.

தங்கம்மா ஒரு கூடையைக் கவிழ்த்துப் போட்டுவிட்டு அதன் மீது ஏறி நின்று கொண்டிருந்தாள். பலா மரத்தின் கிளையில் ஒரு கயிறு கட்டப்பட்டிருந்தது. கயிறின் நுனியில் ஒரு முடிச்சு போடப்பட்டிருந்தது.

“மகளே... மோசம் பண்ணடிடாதே மகளே!” - வேலாயுதன் வடைக்கு மேலே இருந்து தங்கம்மாவை பிடித்து இறக்கினான்.

நாணியும் பங்கியும் தங்கம்மாவைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அழுதார்கள். வேலாயுதன் பலா மரத்தின் கிளையில் கட்டப்பட்டிருந்த கயிறை அரிவாளால் அறுத்தெறிந்தான்.

நாணி தங்கம்மாவைப் பிடித்து வீட்டுக்குக் கொண்டு போனாள். தங்கம்மா படுத்துக் கொண்டாள். மற்றவர்கள் அவளுக்கு அருகில் உட்கார்ந்திருந்தார்கள். நாணி சொன்னாள் :

“இவளுக்கு அவனே போதும் என்றால், அவனே இருந்துட்டு போகட்டும்.”

“இதுதான் இவளோட விதின்னா, பிறகு நாம தடுத்தா அதை நிறுத்த முடியும்?”

“அவனைக் கூப்பிட்டு சொல்லிடுங்க - இவளைக் கல்யாணம் பண்ணி அழைச்சிட்டுப் போகச் சொல்லி...”

“நான் சொல்றேன். அவனிடமும் அவனோட அப்பாக்கிட்டயும் சொல்றேன்.”

5

ந்தச் செய்தி பொழுது புலர்ந்த வேளையில் ஊர் முழுவதும் பரவியது - மர வள்ளிக்கிழங்கு வியாபாரி கொச்சுக் குட்டனின் மகன் குமாரன் தூக்கில் தொங்கிவிட்டான் என்பதுதான். அந்தச் செய்தியை வேலாயுதனின் வீட்டிற்குக் கொண்டு வந்தவள் பக்கத்து வீட்டைச் சேர்ந்த பாரு. பாரு போனபோது நாணி தூக்கத்திலிருந்து எழுந்து வராந்தாவில் வந்து உட்கார்ந்திருந்தாள். பாரு கேட்டாள் :

“நாணி அக்கா, விஷயம் தெரியுமா?”

“என்ன?”

“குமாரன் தூக்குல தொங்கி செத்த விஷயம்..”

“தூக்குல தொங்கி செத்துட்டானா? எப்போ?”

“நேற்று இரவு...”

“யார் தொங்கிச் செத்தது?” என்று கேட்டவாறு வேலாயுதன் வராந்தாவிற்கு வந்தான்.

“குமாரன்தான் தூக்குல தொங்கிச் செத்துட்டான்... நேற்று இரவு...” - நாணி சொன்னாள். நாணி கூறியதில் அவள் கூறியதைவிட அர்த்தம் இருந்தது. அது வேலாயுதனுக்குப் புரிந்தது. வேலாயுதன் தலையைக் குனிந்து கொண்டு மவுனமாக நின்றிருந்தான்.

“போலீஸ்காரர்களை அழைச்சிட்டு வர்றதுக்கு ஆளுங்க போயிருக்காங்க.” - பாரு சொன்னாள்.

“போலீஸ்காரர்களை எதற்காக அழைச்சிட்டு வரணும்?”

“அது அப்படித்தான். தூக்குல தொங்கிச் செத்தா போலீஸ்காரர்கள் வரணும்?”

“தூக்குல தொங்கிச் செத்தது குமாரன் அண்ணனா?” - பங்கியும் வராந்தாவிற்கு வந்தாள்.

“அவன் எதற்காகத் தூக்குல தொங்கி இறந்தான் பாரு?” வேலாயுதன் கேட்டான்.

“எதற்கு என்று கேட்டால்... வேலாயுதன் அண்ணே, உங்களுக்குத் தெரியலைன்னா எனக்கும் தெரியாது” - பாரு தனக்கு வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டாள்.

"அவன் எதற்காக தூக்குல தொங்கி இறந்தான்னு எனக்கு எப்படித் தெரியும்?" "அப்படின்னா எனக்கு எப்படித் தெரியும் வேலாயுதன் அண்ணே?" “அவன் எதற்காக தூக்குல தொங்கி இறந்தான்னு அவனுக்குத் தெரியும். நமக்கு எப்படித் தெரியும்?” நாம ஏன் தெரிஞ்சிக்கணும்? நீ போ பாரு...” - நாணி எழுந்தாள்.

பாரு அங்கிருந்து கிளம்பினாள். நாணி பங்கியிடம் கேட்டாள்:

“அவள் எழுந்திருக்கவில்லையாடீ?”

“இங்கே பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டுக்கிட்டே படுத்திருக்காங்க.”

“அவன் தூக்குல தொங்கி இறந்துட்டான்றதைக் கேள்விப்பட்டு...”

“முகத்துல எந்தவொரு மாறுதலும் இல்லை. முகம் கல்லைப் போல இருக்கு...”

“நீ அவளுக்கு அருகில் போய் இரு...”

பங்கி எழுந்து சொன்றாள்.

வேலாயுதன் குரலைத் தாழ்த்திக் கொண்டு கேட்டான்:

“குமாரனும் தங்கம்மாவும் ஒருத்தரையொருத்தல் விரும்பினாங்கன்ற விஷயம் பாருவுக்குத் தெரியுமா?”

“எல்லா விஷயங்களும் பாருவிற்குத் தெரியும். இங்கே நடக்ககுற எல்லா விஷயங்களையும் அவள் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும்தான் இருக்குறா...”

“இவள் தனக்குக் கிடைக்கலைன்ற காரணத்தாலதான் அவன் தூக்குல தொங்கி இறந்துட்டான்னு பாரு எல்லா இடங்களிலும் சொல்லிக்கிட்டுத் திரிவாள்.”

“நான் அவள்கிட்ட யாரிடமும் சொல்லக்கூடாதுன்னு சொல்றேன்.”

“எனக்கு இன்னொரு சந்தேகம்...”

“என்ன?”

“அவனும் அவளும் ஒருத்தர்கிட்ட ஒருத்தர் சொல்லிக் கொண்டுதானே தூக்குல சாக முயற்சி பண்ணினாங்க?”

“அதுல என்ன சந்தேகம் இருக்கு? பாதையில் நின்று கொண்டு அவர்கள் பேசிக் கொண்டது அதுதான்.”

“இது நமக்கு நல்லதுடி நாணி!”

“நமக்கு எந்த வகையில் நல்லது?”

“அவன் செத்துட்டான்ல... அந்தத் தொல்லை ஒழிஞ்சதுல்ல...”

“இனிமேலும் அவள்...”

“இல்லைடீ... ஒரு தடவை பிழைச்சாச்சுன்னா, அதற்குப் பிறகு தூக்குல தொங்கி சாக முடியாது. நீ போய் அவள்கிட்ட பேசிக்கிட்டு இரு.”


நாணி உள்ளே சென்றாள்.

போலீஸ் குமாரனின் இறந்த உடலைக் கொண்டுபோய் போஸ்ட்மார்ட்டம் செய்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தார்கள். சாயங்கால நேரம் ஆனபோது பிணத்தைச் சுடுகாட்டுக்குக் கொண்டுவந்து சிதையில் நெருப்பு பற்ற வைத்தார்கள். புகை ஆகாயத்தை நோக்கி உயர்ந்தது.

சுடுகாட்டிலிருந்து உயர்ந்த புகையைப் பார்த்தவாறு தங்கம்மா நின்றிருந்தாள். பங்கி அருகில் வந்து கேட்டாள்:

“அக்கா, எதற்காக இங்கே வந்து நின்னுக்கிட்டு இருக்கீங்க?”

“இங்கே நின்னால் என்ன?” - தங்கம்மா கோபத்துடன் அந்தக் கேள்வியைக் கேட்டாள்.

“அக்கா, உங்களுக்கு ஏன் இந்த அளவுக்கு கோபம் வருது?”

“நீ எதற்காக இப்போ இங்கே வந்தே?”

“நீங்க ரெண்டு பேரும் இங்கே எதற்காக வந்து நிக்கிறீங்க? பிணம் எரியிறதைப் பார்க்குறதுக்காக வந்து நிக்கிறீங்களா?” - இப்படிக் கேட்டவாறு பக்கத்து வீட்டைச் சேர்ந்த பாரு வந்தாள்.

அதற்குத் தங்கம்மா எதுவும் பதில் சொல்லவில்லை. பங்கி சொன்னாள் :

“அக்கா இங்கே நிக்கிறதைப் பார்த்து நான் வந்தேன்.”

“தூக்குல தொங்கி இறந்தவனின் புகையைப் பார்க்கக்கூடாது.”

“பார்த்தால் என்ன?” - தங்கம்மா கேட்டாள்.

“தெய்வத்தின் கோபத்திற்கு ஆளாவோம்.”

“புகையைப் பார்த்தால் ஏன் தெய்வம் கோபப்படணும்?”

“தூக்குல தொங்கி சாகுறது தெய்வத்திற்கு எதிரான செயலாச்சே!”

“மனிதர்கள் தூக்குல தொங்கி இறந்தால் அதை ஏன் தெய்வம் எதிர்க்கணும்?”

“எப்போ சாக வேண்டும் என்று தெய்வம் முடிவு பண்ணி வச்சிருக்கு. அதற்கு முன்னால் செத்தால் கடவுளின் பகை உண்டாகும். நரகத்திற்குக் கொண்டு போயிடும்.”

“வாழ்வது நரகமாக இருந்தால் தூக்குல தொங்கி இறந்த பிறகு தெய்வம் என்ன செய்யும்?” - தங்கம்மா உறுதியான குரலில் கேட்டாள்.

“வாழ்வது நரகமாவது எப்போது? கிடைக்காததை விரும்பும்போதுதான் அது நரகமாக மாறுகிறது. எது கிடைக்க வேண்டும் என்றும்; எது கிடைக்கக்கூடாது என்றும் கடவுள் முடிவு பண்ணி வச்சிருக்கு. கடவுள் முடிவு பண்ணின எல்லாம் கிடைக்கும். கிடைக்காதது கடவுள் தர வேண்டும் என்று முடிவு செய்யாதது. அது தேவையில்லை என்று நினைத்துக் கொள்ள வேண்டும்.”

“அப்படிச் சொல்லுங்க பாரு அக்கா!” - பங்கி சொன்னாள்.

சங்கரன் முதலாளியின் கணக்குப் பிள்ளை நாணு வெளியிலிருந்து வந்துகொண்டே கேட்டான்:

“அங்கே வேலாயுதன் அண்ணன் இருக்காரா?”

“வீட்டுல இருக்கார்” - பங்கி சொன்னாள்.

நாணு அருகில் வந்து தங்கம்மாவைப் பார்த்தவாறு கேட்டாள்.

“எல்லாரும் இங்கே வந்து ஏன் நிற்கிறீங்க?”

“சும்மா நிற்கிறோம்” - தங்கம்மா தலையைக் குனிந்து கொண்டு பதில் சொன்னாள்.

“சுடுகாட்டைப் பார்த்துக் கொண்டு இப்படி நிற்காதீங்க” - நாணு வீட்டை நோக்கி நடந்தான்.

“அவர் சொன்னது சரிதான். நாம போகலாம். வா தங்கம்மா” - பாரு தங்கம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு வீட்டை நோக்கி நடந்தாள். பங்கியும் கிளம்பினாள்.

வேலாயுதனும் நாணுவும் நாணியும் ஒன்றாக வராந்தாவில் உட்கார்ந்து பேசிக்சொண்டிருந்தார்கள். நாணு சொன்னான்:

“வேலாயுதன் அண்ணே, நீங்க வர்றேன்னு சொல்லிட்டு வரவில்லை. முதலாளி உங்களை எதிர்பார்த்தார். ஏன் வரவில்லை?”

“இன்னைக்கு இல்லாவிட்டால் நாளைக்கு அங்கே வரலாம்னு நான் நினைச்சுக்கிட்டு இருக்குறப்போ நீ வந்துட்டே நாணு. முந்தாநாள் வர்றதா நான் முதலாளிக்கிட்டே சொன்னேன். ஏன் வரவில்லையென்றால் எல்லா விஷயங்களையும் முடிவு செய்து விட்டுத்தானே முதலாளியை வந்து பார்க்கணும்?”

“முடிவு செய்றதுக்கு இந்த அளவுக்குத் தாமதம் ஏன்? தங்கம்மாவறிகு ஒருவேளை சம்மதம் இல்லையா என்ன?”

“அவளுக்கு சம்மதம் இல்லாம ஒண்ணும் இல்ல. சங்கரன் முதலாளியின் பெயரைச் சொன்னப்போ அவளுக்குச் சந்தோஷம்தான். பிறகு என்ன விஷயம் என்றால்...”

“சொல்லுங்க வேலாயுதன் அண்ணே. முதலாளி எதைக் கேட்டாலும் செய்வார்.”

“நான்கு பேரை அழைத்து அவளுடைய கழுத்தில் தாலி கட்டினால் போதும்.”

“அது நடக்காத விஷயம் வேலாயுதன் அண்ணே. அதற்கான காரணங்களை நான்தான் சொன்னேனே? தாலி கட்டவில்லை என்றாலும், நான்கு ஆட்களுக்குத் தெரியவில்லை என்றாலும் அவள் முதலாளியின் மனைவியாக இருப்பாள்.”

நாணு உறுதியான குரலில் சொன்னான்.

“அவளை நான் சம்மதிக்க வைக்கிறேன். முதலாளி நாளையோ நாளை மறுநாளோ ஒரு நல்ல நேரம் பார்த்து இங்கே வந்தால் போதும்.”

“நான் போய்ச் சொல்றேன். அவளுக்குக் கொடுக்குறதுக்கு முதலாளி என்னென்னவோ வாங்கி வச்சிருக்கார்.”

“முதலாளி எப்போ வருவார்னு எங்களுக்கு முன்கூட்டியே சொல்லிடணும்” - வேலாயுதன் சொன்னான்.

“வேலாயுதன் அண்ணே, நாளைக்கே நீங்க முதலாளியைப் போய் பார்க்கணும்.”

“பார்க்குறேன்.”

“பிறகு... பிறகு ஒரு விஷயம்...”

“சொல்லு நாணு... என்ன விஷயம்...”

“குமாரன் ஏன் தூக்குல தொங்கி செத்தான்?”

“ஏன் என்று எங்களுக்கு எப்படி தெரியும்?”

“அவன் இங்கே வர்றது உண்டா?”

“முன்னாடி வந்துக்கிட்டு இருந்தான். அப்போ அவன் ஒரு சின்ன பையனா இருந்தான். பெரியவனான பிறகு அவன் வர்றது இல்லை. இவற்றையெல்லாம் ஏன் கேட்கணும்?”

“குமாரனும் தங்கம்மாவும் ஒருத்தரையொருத்தர் விரும்பினார்கள் என்றும்; அவர்கள் திருமணம் செய்து கொள்ள... வேலாயுதன் அண்ணே, நீங்க சம்மதிக்காததுனாலதான் குமாரன் தூக்குல தொங்கி இறந்துட்டான்னும் என்னிடம் ஒரு ஆள் சொன்னான்.”

“இந்த அளவுக்குப் பச்சை பொய்யை யார் சொன்னது?”

“சொன்னது யார்னு நான் சொல்ல மாட்டேன். அதுல உண்மை ஏதாவது இருக்கா என்பதைத் தெரிந்து கொள்வதற்காகத்தான் நான் கேட்டேன்.”

“அதுல கொஞ்சமும் உண்மை இல்லை நாணு. தூக்குல தொங்கி இறந்ததற்கு ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்ல வேண்டாமா? ஒவ்வொருத்தரும் அவங்கவங்களுக்குத் தோணினதைச் சொல்லத்தான் செய்வாங்க.”

நாணி கோபத்துடன் சொன்னாள்:

“என் மகள் அப்படிப்பட்டவள் இல்லை நாணு. அவள் யாரையும் இதுவரை விரும்பினது இல்லை. அப்படி விரும்புவதை நாங்க ஒத்துக்கவும் மாட்டோம்.”

நாணு வருத்தப்படுகிற குரலில் கூறினான்:

“நான் கேள்விப்பட்டதை இங்கே வந்து சொன்னேன். அவ்வளவுதான். சொல்லாம இருந்திருக்கலாம்னு இப்போ நினைக்கிறேன்.”


“பொண்ணுங்க வயசுக்கு வந்து நிக்கிறப்போ, பலருக்கும் கண்கள் துடிக்கத்தான் செய்யும் நாணு. அவர்கள் இப்படி மனசுக்குத் தோணியதை சொல்லிக்கிட்டுத்தான் இருப்பாங்க” - வேலாயுதன் சொன்னான்.

“அது இருக்கட்டும் வேலாயுதன் அண்ணே நான் அந்த விஷயத்தைப் பற்றிப் பேசவே இல்லைன்னு வச்சுக்கோங்க. நீங்க முதலாளியை எப்போ பார்க்க வர்றீங்க?”

“நாளைக்கு சாயங்காலம்.”

“அப்படின்னா நான் போகட்டுமா?”

“சரி... போ நாணு.”

“வேலாயுதன் அண்ணே, உங்களுக்கு ஏதாவது வேணும்னா...” - நாணு ஒரு தாள் பொட்டலத்தைக் கையில் எடுத்தான்.

“ஏதாவது இருந்தால்...”

தாள் பொட்டலத்தை வேலாயுதனின் கையில் கொடுத்துவிட்டு நாணு அங்கிருந்து கிளம்பினான்.

6

“வாழணும் மகளே. எப்படியும் வாழணும்... பிறந்ததே வாழ்வதற்குத்தான்...” - வேலாயுதன் முழு பலத்தையும் பயன்படுத்தி தங்கம்மாவிடம் கூறினான்.

தங்கம்மா அதைக் கேட்டுப் புன்னகைத்தாள். பல நாட்களுக்குப் பிறகு அவள் முதல் தடவையாக அப்போதுதான் புன்னகைக்கிறாள். வேலாயுதன் தொடர்ந்து சொன்னான்:

“பிறந்தது இறப்பதற்காக அல்ல மகளே. வாழறதுக்காகத்தான் பிறப்பதே...”

“வாழுங்க... நீங்க வாழுங்க...” - தங்கம்மா அலட்சியமான குரலில் சொன்னாள்.

“மகளே, நீ வாழணும். நாங்களும் வாழணும்.”

“உங்களுக்காக நானும் வாழறேன் அப்பா.”

“அப்படிச் சொல்லக்கூடாது மகளே. உனக்காக நீ வாழணும். அப்போது நாங்களும் வாழுவோம். நீ வாழணும் மகளே.”

“வாழறேன் அப்பா.”

“அப்படின்னா மகளே... நீ போய் குளி. நான் தந்த பொட்டலத்தைப் பிரிச்சுப் பாரு.”

“ம்... நான் குளிக்கிறேன்” - தங்கம்மா அங்கிருந்து எழுந்து சென்றாள்.

“அவளுடைய அறிவு தெளிஞ்சிருச்சிடீ நாணி...” - வேலாயுதன் மகிழ்ச்சியான குரலில் சொன்னான்.

“அவளுடைய கஷ்டகாலம் முடிஞ்சிடுச்சு.”

“நம்முடைய கஷ்ட காலமும் முடிஞ்சிடுச்சு. அவளுக்கு முதலாளி ஒரு பொட்டலத்தைக் கொடுத்து அனுப்பினாரு. நீ அதுல என்ன இருக்குன்னு போய்ப்பாரு.”

நாணி எழுந்து உள்ளே சென்றாள். தங்கம்மாவும் பங்கியும் பொட்டலத்தைப் பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். நாணியும் அங்கு சென்றாள்.

முண்டும் ரவிக்கையும் ஜரிகை போட்ட மேற்துண்டும் இருந்தன. சோப், கண்மை, சாந்து, ஹேர் ஆயில், குங்குமம் ஆகியவையும் இருந்தன. நாணி சொன்னாள்:

“மகளே, இந்த சோப்பை எடுத்துக்கொண்டு போய் குளிச்சிட்டு வா.”

தங்கம்மா சோப்பை எடுத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

அன்றும் சுடுகாட்டில் ஒரு பிணத்தை எரித்துக் கொண்டிருந்தார்கள். புகை ஆகாயத்தை நோக்கி உயர்ந்து கொண்டிருந்தது. தங்கம்மா அதைப் பார்க்கவில்லை. அவள் குளத்தில் இறங்கிக் குளித்தாள். பக்கத்து வீட்டுக்காரி பாரு குளத்தின் படித்துறைக்கு வந்து கேட்டாள்:

“தங்கம்மா, இன்னைக்கு என்ன சாயங்கால நேரத்துல குளிக்கிறே?”

“எனக்கு களைப்பா இருந்தது. குளிச்சா சரியாயிடும்னு நினைச்சு குளிக்கிறேன்.”

“என்ன ஒரே வாசனையா இருக்கு? சோப்பா?”

“அப்பா கடைக்குப் போனப்போ எனக்காக ஒரு சோப் வாங்கிட்டு வந்திருக்காரு.”

“ம்...ம்... எனக்குத் தெரியும்.”

“என்ன தெரியும்?”

“தெரியும் தங்கம்மா தெரியும்” - பாரு அங்கிருந்து கிளம்பினாள். நாணி குளத்தின் படித்துறைக்கு வந்து தங்கம்மாவிடம் கேட்டாள்:

“மகளே, பாரு வந்து என்ன கேட்டாள்?”

“சாயங்கால நேரத்துல குளிக்கிறதுக்குக் காரணம் என்னன்னு பாரு அக்கா கேட்டாங்க. நான் சொன்னேன் களைப்பா இருக்குதுன்னு. பாரு அக்கா சொன்னாங்க சோப் வாசனை அடிக்குதுன்னு. நான் சொன்னேன் அப்பா வாங்கிட்டு வந்தாருன்னு. அப்போ பாரு அக்கா எல்லாம் எனக்குத் தெரியும்னு சொன்னாங்க.”

“அவளுக்கு என்ன தெரியும்?”

“யாருக்குத் தெரியும்?”

“அவள் திருடி... அவளுடைய கண்ணும் காதும் எப்பவும் இங்கேதான் இருக்கும். ஊர் முழுக்க சொல்லிக்கிட்டுத் திரிவா.”

“சொல்லித் திரியட்டும்.”

“மகளே, அதனால் உனக்குத்தான் கேடு.”

“எனக்கு ஒரு கேடும் இல்லை.”

“நீ சீக்கிரம் குளிச்சிட்டு வா மகளே” - நாணி அங்கிருந்து கிளம்பினாள்.

தங்கம்மா குளித்து முடித்து வந்தபோது, வராந்தாவில் ஒரு குத்து விளக்கு எரியும் வண்ணம் வைக்கப்பட்டிருந்தது. வேலாயுதன் சொன்னான்:

“வணங்கிட்டுப் போ மகளே.”

தங்கம்மா விளக்கை வணங்கிவிட்டு உள்ளே சென்றாள். அறையில் ஒரு புதிய லாந்தர் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. கட்டிலில் ஒரு புதிய விரிப்பு விரிக்கப்பட்டிருந்தது. தங்கம்மா அறைக்குள் நுழைந்ததும் பங்கி அங்கிருந்து வெளியேறினாள். தங்கம்மா கேட்டாள்:

“நீ எங்கே போறேடீ?”

“அக்கா, இது உன்னோட அறை. நான் இனிமேல் இந்த அறைக்குள் வரமாட்டேன்.”

அதைக் கேட்டு தங்கம்மா சிரித்தாள். அவள் ஈரமான முண்டை அவிழ்த்துப் போட்டுவிட்டு, புதிய முண்டையும் ரவிக்கையும் எடுத்து அணிந்தாள். முழங்கால்வரை தொங்கிக் கொண்டிருந்த கூந்தலை தன்னுடைய விரல்களால் கோதிவிட்டுக் காய வைத்தாள். முகத்தில் பவுடர் பூசினாள். கண்களில் மை பூசினாள். பொட்டு வைத்தாள். நாணி வாசலில் வந்து நின்றுகொண்டு சொன்னாள்:

“அந்த ஜரிகை போட்ட மேற்துண்டையும் எடுத்து அணிஞ்சுக்கோ மகளே.”

தங்கம்மா ஜரிகை போட்ட மேற்துண்டையும் எடுத்து அணிந்தாள்.

பின்னால் நின்றுகொண்டு வேலாயுதன் சொன்னான்:

“இவளை இப்போ பார்த்தால் தேவதைன்னு சொல்லுவாங்கல்லடீ...?”

“இப்படி அழகுபடுத்திக் கொள்ளாமல் இருந்தால்கூட என் மகள் தேவைதைதான்.”

ஒரு இருமல் சத்தம்!

வேலாயுதன் கேட்டான்.

“யார் அது?”

“நான்தான்... குஞ்ஞுண்ணி...”

“நீ எதற்காக இப்போ இங்கே வந்தே?” - வேலாயுதன் கோபத்துடன் கேட்டான்.

கொம்பை ஊன்றிக் கொண்டு நொண்டியவாறு குஞ்ஞுண்ணி அருகில் வந்து வராந்தாவில் உட்கார்ந்தான்.

“நீ இங்கே உட்கார வேண்டாம். எழுந்து போ...” - வேலாயுதனின் குரல் பெரிதானது.

“இன்னைக்கு ஏன் இப்படிச் சொல்றீங்க? பல நேரங்கள்ல நான் இங்கே வந்திருக்கேன். எனக்கு ஏதாவது கொடுப்பீங்க. சில நேரங்களில் இரவு நேரத்துல நான் இங்கேயே படுக்குறதும் உண்டு.”

“இனிமேல் இங்கே எதுவும் தர்றதா இல்ல. நீ இங்கே படுக்கவும் வேண்டாம்.”

“எனக்கு எதுவும் தர வேண்டாம். நான் இங்கே படுக்கப் போறதும் இல்ல. நான் இங்க கொஞ்சம் உட்கார்ந்திருக்கேனே!”


“உட்கார வேண்டாம்... எழுந்து போ என்று நான் சொல்றேன்ல...”

“ம்...” - குஞ்ஞுண்ணி ஊன்றுகோலை ஊன்றியவாறு மிகவும் சிரமப்பட்டு எழுந்தான்.

“அப்படின்னா நான் போறேன்” - குஞ்ஞுண்ணி இன்னொருமுறை உரத்த குரலில் முனகினான். ஊன்றுகோலை ஊன்றியவாறு நொண்டி நொண்டி அவன் நடந்தான்.

குஞ்ஞுண்ணி வேலை செய்து வாழ்ந்து கொண்டிருந்தவன். வாதம் உண்டாகி ஒரு கால் பலம் இல்லாமல் போய்விட்டது. ஒரு கையும் சுய உணர்வு இல்லாமல் ஆகிவிட்டது. அதற்குப் பிறகு அவன் ஊன்றுகோலை ஊன்றியவாறு நொண்டி நொண்டி பிச்சை எடுக்க ஆரம்பித்தான். சில நேரங்களில் வேலாயுதனின் வீட்டிற்கு இரவு வேளைகளில் வருவான். இருப்பதில் ஒரு பகுதியைக் கொடுப்பார்கள். அங்கேயே அவன் படுத்து உறங்குவான். மறுநாள் காலையில் அங்கிருந்து அவன் கிளம்பிப் போய்விடுவான்.

அன்று அங்கிருந்து போகச்சொன்ன விஷயம் குஞ்ஞுண்ணியை மிகவும் வேதனை கொள்ளச் செய்தது. அவனை அந்தச் செயல் கோபப்பட வைத்தது.

இரவு ஒன்பது மணி தாண்டிவிட்டது. எல்லோரும் வராந்தாவில் உட்கார்ந்திருந்தார்கள். ஒரு டார்ச் விளக்கின் ஒளி தெரிந்தது. நடக்கும் ஓசையும் கேட்டது.

“முதலாளி வர்றாரு” - வேலாயுதன் சொன்னான்.

எல்லோரும் எழுந்து நின்றார்கள். வேலாயுதனும் நாணியும் பங்கியும் வடக்குப் பக்கத்தில் இருந்த அறைக்குள் போனார்கள். தங்கம்மா அங்கேயே நின்றிருந்தாள்.

சங்கரன் முதலாளி சிரித்துக்கொண்டே வராந்தாவிற்கு வந்தார். தங்கம்மா முகத்தைக் குனிந்துகொண்டு நின்றிருந்தாள். முதலாளி தங்கம்மாவைப் பிடித்தார். தன்னுடன் அவளை நெருக்கமாக இருக்கும்படிச் செய்தார். தங்கம்மா ஓரக் கண்களால் பார்த்தாள். முதலாளி கேட்டார்:

“எனக்காகக் காத்துக் கொண்டு நின்றிருந்தாயா?”

“ஆமா...”

சங்கரன் முதலாளி தங்கம்மாவைப் பிடித்து அறைக்குள் கொண்டு சென்றார். படுக்கையில் இருவரும் கட்டிப் பிடித்துக் கொண்டு படுத்திருந்தபோது, முதலாளி கேட்டார்:

“நான் யார்?”

“யாருன்னா கேட்கிறீங்க? இது என்ன கேள்வி?”

“நான் யார்? எனக்கு நீ யார்? புரியுதா? நீ என்னுடைய எல்லாமும். நீ என்னுடைய எல்லாமும்...”

“மனைவியா?”

“ஆமா...”

“மனைவின்னா கழுத்துல தாலி கட்ட வேண்டாமா?”

“தாலி கட்டவில்லையென்றால்கூட மனைவிதான்.”

“அப்படியா?”

“ஆமா...”

“என் கணவர்...” - அவள் இறுக அணைத்துக் கொண்டாள்.

பதினொரு மணி தாண்டியது. முதலாளி சொன்னார் :

“விளக்கை எரிய வை.”

தங்கம்மா எழுந்து விளக்கை எரிய வைத்தாள். முதலாளி எழுந்து சென்று சட்டையை எடுத்து அணிந்தார். தங்கம்மா கேட்டாள்:

“இப்போ எதற்காக ஆடையை எடுத்து அணியிறீங்க?”

“நான் போகணும்...”

“இப்போவா? பொழுது விடிஞ்ச பிறகு போனால் போதாதா?”

“இப்போ போய் ஆகணும். இன்னைக்கு வந்த நேரத்தில் நான் நாளைக்கு வர்றேன்.”

அதற்குப் பிறகு தங்கம்மா எதுவும் சொல்லவில்லை. சங்கரன் முதலாளி அங்கிருந்து கிளம்பினார்.

பொழுது புலர்ந்த நேரத்தில் தங்கம்மா நாணியிடம் சென்றாள்.

“அம்மா, முதலாளி பாதி இரவு வர்றதுக்கு முன்னாடியே போயிட்டாரு.”

“பொழுது விடிஞ்ச பிறகு போனால் போதும்னு நீ சொன்னியா மகளே?”

“நான் சொன்னேன். அப்பவே போய் ஆகணும்னு அவர் சொல்லிட்டாரு.”

“முதலாளி இங்கே வர்றதும் போறதும் யாருக்கும் தெரியக் கூடாதுடீ...” - வேலாயுதன் சொன்னான்.

“யாருக்கும் தெரியாமல் வந்தும் பார்த்துட்டாங்களே!” - தங்கம்மா சொன்னாள்.

“யார் பார்த்தது?”

“முதலாளி இங்கே நுழைஞ்சப்போ, ஒரு முனகல் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தப்போ ஒரு ஆளு அங்கே உட்கார்ந்திருந்தாரு. முதலாளி இந்த அறைக்குள் வந்தப்போ, அந்த முனகல் சத்தம் திரும்பவும் கேட்டது.”

“அது யார்?”

பக்கத்து வீட்டுக்காரி பாரு வேகமாக வந்து நாணியிடம் கேட்டாள்:

“நேற்று இரவு நொண்டி குஞ்ஞுண்ணி இங்கே வந்திருந்தானா நாணி அக்கா?”

“வந்திருந்தான்.”

“அவனுக்கு எதுவும் கொடுக்கலையா?”

“இல்ல...”

“அதற்குப் பிறகு அவன் வழியில போய் உட்கார்ந்துட்டான். சங்கரன் முதலாளி இங்கே வந்ததை அவன் பார்த்துட்டான்.”

“சங்கரன் முதலாளி இங்கே வரவே இல்லையே! பிறகு எப்படி அவன் பார்க்க முடியும்?” - வேலாயுதன் உரத்த குரலில் சொன்னான்.

“பொழுது விடியிற நேரத்துல அவன் எங்க வீட்டுப் பக்கம் வந்தான். சங்கரன் முதலாளி ராத்திரி இங்கே யாருக்கும் தெரியாமல் ரகசியமா வந்ததைத் தான் பார்த்ததா அவன் சொன்னான்.”

“பொய்... பொய்... பச்சைப் பொய்” - வேலாயுதன் உறுதியான குரலில் சொன்னான்.

7

ங்கரன் முதலாளி ஒன்பது மணி கடந்த பிறகு வருவார். பதினொரு மணி தாண்டியதும் அங்கிருந்து கிளம்பிவிடுவார். அந்த வருகைக்கும் போவதற்கும் ஒரு வாரம் கடந்த பிறகு மாறுதல் வந்தது. தினந்தோறும் அவர் வரமாட்டார். ஒருநாள் விட்டு ஒருநாள் வருவார். தங்கம்மா கவலை கலந்த குரலில் கேட்டாள்:

“நேற்று ஏன் வரல?”

“சில நேரங்களில் நள்ளிரவு நேரம்வரை வேலை இருக்கும். அது முடிஞ்சவுடனே வீட்டுக்குப் போயிடுவேன்.”

“வேலை முடிஞ்சதும் இங்கே வந்தால் என்ன? இதுவும் வீடுதானே?”

“சாப்பிட வேண்டாமா?”

“இங்கே சாப்பிடலாமே!”

“அங்கே போய் சாப்பிடலைன்னா பெரிய பிரச்சினை ஆயிடும்.”

“இங்கேயும் பிரச்சினையாகும்...” அவள் சிரித்தாள்.

“பிரச்சினை உண்டாக்காமல் இருப்பதுதான் உனக்கும் எனக்கும் நல்லது...” அவரும் சிரித்தார்.

சங்கரன் முதலாளி இரவு வேளையில் வேலாயுதனின் வீட்டிற்குச் செல்கிறார் என்பதையும் முதலாளியின் வைப்பாட்டியாக தங்கம்மா ஆகிவிட்டாள் என்பதையும் ஊரில் உள்ள பலரும் தெரிந்து கொண்டார்கள். தங்கம்மாவால்தான் குமாரன் தூக்கில் தொங்கி இறந்தான் என்பதையும் எல்லோரும் தெரிந்து கொண்டார்கள். தங்கம்மா ஊரில் எல்லோராலும் பேசப்பட்டாள். ஒரு பல சரக்குக் கடையில் உட்கார்ந்துகொண்டு ஒருவன் சொன்னான்:

“குமாரனுக்கும் தங்கம்மாவுக்கும் இடையில் இருந்த காதல் உண்மையான காதலாகவே இருந்தது.”

“தங்கம்மாவின் காதல் விற்பதற்காக வைத்திருந்த காதல்டா. அதனால்தானே சங்கரன் முதலாளி கிடைத்தவுடன் குமாரனை வீசி எறிஞ்சிட்டா?”

“சங்கரன் முதலாளி கொடுப்பார். வாரிவாரிக் கொடுப்பார்.”

அதைக்கேட்டுக் கொண்டிருந்த இன்னொரு ஆள் சொன்னான்:


“முதலாளியின் வீட்டுக்கு விஷயம் தெரிஞ்சிடுச்சு. வீட்டுக்காரி வரைஞ்ச கோட்டுல சங்கரன் முதலாளி நிற்பாரு. முதலாளின்னு பேரு மட்டும்தான். சம்பாதித்தவை எல்லாம் பொண்டாட்டியின் பேர்லதான் இருக்கு.”

“குட்டன் முதலாளி தன் மகளின் பெயரில்தான் எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறார். சங்கரன் முதலாளியின் பெயரில் கூட அவர் எதையும் கொடுக்கவிலலை.”

“சங்கரன் முதலாளி வேலாயுதன் வீட்டுக்குப் போகிறார் என்ற விஷயத்தை முதலாளியின் வீட்டில் போய் சொன்னது நொண்டி குஞ்ஞுண்ணிதான்.”

“பிச்சை எடுத்துத் திரியிறவன் எதற்கு கண்டதையும் கேட்டதையும் தேவையில்லாமல் போய் சொல்லணும்?”

“முதலாளி அவனுக்கு எதுவும் கொடுக்காமல் இருந்திருப்பாரு.”

அந்த உரையாடல் அதற்குப் பிறகும் நீண்டு கொண்டிருந்தது. அதே மாதிரியான உரையாடல் வேறு பல இடங்களிலும் நடந்து கொண்டிருந்தது.

ஒரு இரவு நேரத்தில்  சங்கர் முதலளியும் தங்கம்மாவும் படுத்திருந்தபோது, வெளியே யாரோ நடக்கும் சத்தம் கேட்டது. தங்கம்மா எழுந்து அருகில் இருந்த அறையை நோக்கி அழைத்தாள்.

“அம்மா... அம்மா...”

“என்ன மகளே?” - நாணி கேட்டாள்.

“வெளியே யார் வந்தது?”

நாணி விளக்கை எரிய வைத்தாள். வேலாயுதனும் நாணியும் சேர்ந்து வெளியே வந்தார்கள். யாரோ ஒரு ஆள் முற்றத்திலிருந்து ஓடினான். வேலாயுதன் அவனுக்குப் பின்னால் ஓடினான் என்றாலும் ஓடிய ஆளை நெருங்கவும் அவன் யார் என்பதைத் தெரிந்து கொள்ளவும் அவனால் முடியவில்லை. நாணி சொன்னாள்:

“நமக்கு ஒரு நாய் வேண்டும் என்று நான் சொன்னேன்ல?”

“நாளைக்கே நாயைக் கொண்டு வரன்டீ. கடிக்கிற நாயையே கொண்டு வர்றேன்.”

வெளியே ஆள் வந்ததையும் ஓடிப் போனதையும் தெரிந்து கொண்ட சங்கரன் முதலாளி தங்கம்மாவிடம் கேட்டார்:

“இரவு நேரத்தில் இங்கே எதற்காக ஆள் வரவேண்டும தங்கம்மா?”

“எதற்கு என்று எனக்கு எப்படித் தெரியும்? திருடுவதற்காக இருக்கலாம்.”

“திருடுவதற்காகவா?  வேறு காரணத்துக்காக...” - முதலாளி தான் கூற வந்ததை முழுமையாகக் கூறவில்லை.

“சொல்லுங்க... வேறு எதற்காக?”

“உன்னை பார்ப்பதற்காக வந்திருக்கலாமோ?”

“என்னைப் பார்ப்பதற்கா? என்னை எதற்காகப் பார்க்க வேண்டும்?” - தங்கம்மா மூச்சு அடைக்கக் கேட்டாள்.

“எதற்கு? நீயே சொல்...”

“அப்படியென்றால்... எனக்கு வேறு ஆட்களும் இருக்கிறாங்கன்னு நீங்க சொல்றீங்க.”

“இருக்கிறாங்களான்னு நான் கேட்கிறேன்...”

அதற்குப் பிறகு தங்கம்மா எதுவும் பேசவில்லை.

மறுநாள் காலையில் தங்கம்மா நாணியிடம் சொன்னாள்:

“நேற்று இரவு யாரோ இங்கே வந்துட்டு ஓடிப் போனாங்கல்ல அம்மா?”

“நாங்க விளக்கை எடுத்துக் கொண்டு போனதும் ஆள் ஓடியாச்சு...”

“அப்போ முதலாளி என்கிட்ட கேட்டாரு...”

“என்ன கேட்டார் மகளே?”

“அந்த ஆள் என்னைப் பார்க்குறதுக்காகத்தானே வந்திருக்கான் என்று அவர் கேட்டார். நான் கேட்டேன் - என்னை எதற்குப் பார்க்கணும்னு. அப்போ முதலாளி சொன்னாரு - நானே சொல்லணுமாம்.”

“நீ என்ன சொன்னே மகளே?”

“நான் எதுவும சொல்லல...”

அதைக் கேட்டுக் கொண்டிருந்த வேலாயுதன் சொன்னான்:

“மகளே, நீ என்ன சொன்னாலும் முதலாளி நம்ப மாட்டாரு. என்ன காரணம்னா...”

“என்ன காரணம்?”

“அவர் பார்த்தும் பதுங்கியும்தான் உன்னைப் பார்ப்பதற்காக வருகிறார்? வர்றவங்களெல்லாம் உன்னைப் பார்க்குறதுக்குத்தான் வர்றாங்கன்றது அவரோட நினைப்பு.”

“முதலாளி பார்த்தும் பதுங்கியும் வந்தால் போதும் என்று சொன்னது யாரு? நீங்கதானே அப்பா?”

“இல்லாட்டி அவர் வரமாட்டார்.”

“வரவேண்டாம்.”

“வரவில்லையென்றால் நாம எல்லாரும் பட்டினி கிடந்து சாக வேண்டியதுதான்.”

“இனிமேலும் ஒவ்வொருத்தரா பார்த்தும் பதுங்கியும் வந்தால்...”

“வரட்டும் மகளே.”

“அப்படி ஒவ்வொருத்தரும் வந்தால், அதற்கு பிறகு முதலாளி வருவாரா?”

“அவர் வரமாட்டார் மகளே. கொஞ்ச நாட்கள் கடந்தால் அவர் வரமாட்டார் என்ற விஷயம் எனக்குத் தெரியும். அவர் வரலைன்னா வேண்டாம். வேறு ஆட்கள் வருவாங்க.”

“வேறு ஆட்கள் வர்றப்போ...” தங்கம்மா தான் கூற வந்ததை முழுமையாகக் கூறாமல் அங்கிருந்து கிளம்பினாள்.

வேலாயுதன் ஒரு நாயைக் கொண்டு வந்தான். கடிக்கக் கூடிய நாய். நாயை வாசலில் கட்டிப் போட்ட வேலாயுதன் சொன்னான்:

“குரைச்சா போதும்... கடிக்க வேண்டாம்.”

சிறிது நேரம் சென்றதும் நாய் குரைத்தது. வேலாயுதன் வெளியே வந்து பார்த்தான். சேலிக்கரை கிருஷ்ணன் அங்கு வந்திருந்தான். சில்க் சட்டை அணிந்து சிகரெட்டைப் புகைத்துக் கொண்டு அவன் நின்றிருந்தான்.

வந்து நின்று கொண்டிருந்த மனிதனைக் கடிப்பதற்காக வேகமாகப் பாய்ந்து கொண்டிருந்த நாயை வேலாயுதன் தடுத்து நிறுத்தினான். சேலிக்கரை கிருஷ்ணன் கேட்டான்:

“நேற்று இந்த நாய் இங்கே இல்லையே!”

“இல்லை. இதை இன்னைக்குத்தான் கொண்டு வந்தேன். நேற்று இந்த நாய் இங்கே இல்லை என்ற விஷயம் எப்படித் தெரியும் கிருஷ்ணா?”

“நேற்று நான் இங்கே வந்தேன்.”

“எப்போ?”

“ராத்திரி...”

“பிறகு?”

“உள்ளே சங்கரன் முதலாளி இருந்தாரு. அதனால் நான் போயிட்டேன்.”

“உள்ளே இருந்தது சங்கரன் முதலாளி என்று உனக்கு எப்படித் தெரியும்.”

“கண்களை மூடிக் கொண்டு பால் குடிக்காதீங்க... இங்கே நடக்கும் விஷயங்கள் எல்லாருக்கும் தெரியும்.”

“கிருஷ்ணா வா, வந்து உட்காரு” - வேலாயுதன் கிருஷ்ணனின் கையைப் பிடித்துக் கொண்டு வாசலுக்கு வந்தான்.

சேலிக்கரை கிருஷ்ணன் மலேஷியாவில் இருந்து வந்து மூன்று மாதங்கள் கடந்து விட்டன. அவன் நிறைய பணத்துடன் வந்திருந்தான். ஒரு விசாலமான இடத்தை விலைக்கு வாங்கினான். அதில் வீடு கட்டும் வேலைகளை ஆரம்பித்தான். மூன்று மாதங்கள் ஆன பிறகு அவன் மலேஷியாவிற்குத் திரும்பச் சென்று விடுவான்.

சேலிக்கரை கிருஷ்ணன் மலேஷியாவிற்குப் போவதற்கு முன்பே வேலாயுதனுக்கு அவனைப் பற்றித் தெரியும். மலேஷியாவில் இருந்து வந்த பிறகு இரண்டு மூன்று தடவை அவனை வேலாயுதன் பார்க்கவும் செய்தான். அப்படிப்பட்ட நிலையில் சிறிதும் எதிர்பார்க்காமல் அவன் வீட்டிற்கு வந்ததைப் பார்த்து வேலாயுதன் மனதில் மகிழ்ச்சி அடைந்தான்.

வாசலில் ஒரு பாயில் கிருஷ்ணனை உட்கார வைத்துவிட்டு வேலாயுதன் சொன்னான்:


“கிருஷ்ணா, உன்னை இங்கே அழைச்சிக்கிட்டு வரணும்னு நான் நினைச்சிருந்தேன்.”

“இங்கே ஒரு தடவை வரவேண்டும் என்று கொஞ்ச நாட்களாகவே நானும் நினைச்சிக்கிட்டுத்தான் இருக்கேன். பல வேலைகளும் இருந்ததால் நேரம் கிடைக்கல. நேற்று இரவு நேரத்துல வந்தப்போ...”

“எனக்கு ஆளை அடையாளம் தெரியல. ஓடிப் போறதைப் பார்த்தேன்.”

“நான்தான் வந்தேன் என்ற விஷயம் சங்கரன் முதலாளிக்குத் தெரியக்கூடாது. அதனால்தான் ஓடிப்போயிட்டேன்.”

எங்கேயோ போயிருந்த நாணி வந்தாள். வேலாயுதனுக்குப் பின்னால் நின்றுகொண்டு கேட்டாள்:

“இங்கே வர்றதுக்கு வழி தெரியுமா?”

“தெரியாத வழியைக் கேட்டுத் தெரிந்து கொண்டு வரணும். அப்படித்தான் வந்தேன்.”

“தங்கம்மாவை இங்கே வரச்சொல்லுடீ நாணி. கிருஷ்ணன் வந்திருக்கப்போ, அவள் ஏன் மறைஞ்சு நிக்கணும்?”

“மகளே... தங்கம்மா! இங்கே வந்திருக்குறது யாருன்னு தெரியுதா? இங்கே வா மகளே!”

தங்கம்மா வாசலுக்கு வந்தாள். வேலாயுதன் சொன்னான்:

“இங்கே உட்கார்நதிருக்குறது யாருன்னு தெரியுதா மகளே? சேலிக்கரை கிருஷ்ணன்... பெரிய பணக்காரன்... குபேரன். நம்மளைப் போன்ற ஏழைகளின் வீட்டில் வந்து உட்காரக் கூடிய ஆள் இல்லை சேலிக்கரை கிருஷண்ணன்.”

“இங்கே வரணும்னு தோணினது நம்முடைய அதிர்ஷ்டம்... ” நாணி சொன்னாள்.

“நான் வந்ததே தங்கம்மாவைப் பார்ப்பதற்குத்தான்”- கிருஷ்ணன் தங்கம்மாவை வேட்கையுடன் பார்த்தவாறு சொன்னான்.

“என்னை எதற்காக பார்க்கணும்?”

“அப்படி கேட்காதே மகளே” - வேலாயுதன் சிறிது திட்டுகிற மாதிரியான குரலில் சொன்னான்.

“மகளே, உன்மீது விருப்பம் உண்டானதுனாலதான் உன்னைப் பார்க்கவே கிருஷ்ணன் வந்திருக்கு... உன்மேல பிரியம் உண்டானால் பதிலுக்கு உனக்கும் உண்டாகணும்” - நாணி பயமுறுத்தினாள்.

“ம்...” தங்கம்மா முனகினாள்.

“பிறகு நான் வர்றேன் வேலாயுதன் அண்ணே” - கிருஷ்ணன் எழுந்தான். “நான் ராத்திரி வரட்டுமா?”

“ராத்திரி வரணும்...”

“வேறு யாராவது...”

“யாரும் இருக்க மாட்டாங்க. நீ வா கிருஷ்ணா..”

கிருஷ்ணன் பர்ஸைத் திறந்து கொஞ்சம் நோட்டுக்களை எடுத்து வேலாயுதனின் கையில் கொடுத்தான்.

“இப்போதைக்கு இது இருக்கட்டும் வேலாயுதன் அண்ணே. நான் ராத்திரி எட்டு மணிக்கு வர்றேன்” - கிருஷ்ணன் வெளியேறி நடந்தான்.

தங்கம்மா கேட்டாள்:

“சங்கரன் முதலாளி வந்துட்டார்னா?”

“நேற்றுதானே வந்தார்? இன்னைக்கு வரமாட்டார்” - வேலாயுதன் உறுதியான குரலில் சொன்னான்.

8

சீட்டு நடத்தும் முதலாளியின் கணக்குப் பிள்ளை வந்தான். வீட்டுப் பக்கம் நடந்து சோதித்துப் பார்த்தான். வேலாயுதனும் கணக்குப் பிள்ளையுடன் சேர்ந்து நடந்தான். இறுதியில் கணக்குப் பிள்ளை கேட்டான்:

“சில அசிங்கமான விஷயங்கள் காதுல விழுந்துச்சே வேலாயுதா?’

“என்ன கேள்விப்பட்டீங்க? யார் அசிங்கமா நடந்தது?”

“இரவு நேரங்களில் இங்கே பலரும் வந்து கொண்டு இருக்காங்கன்னு கேள்விப்பட்டேன். நீங்க மரியாதையனவங்கன்னு நினைச்சுத்தான் இங்கே தங்கிக் கொள்ளவே உங்களை முதலாளி அனுமதிச்சாரு. முதலாளி இங்கே வரப்போறதா சொன்னாரு.”

“அப்படின்னா உண்மையான விஷயத்தை நான் சொல்றேன். இங்கே ஒரு நொண்டி குஞ்ஞுண்ணி இருக்கான். பிச்சை எடுத்துத் திரியிறவன். அவன் ஒருநாள் இரவு நேரத்துல இங்கே வந்தான். இரவு வேளையில இங்கே தங்கலாம்னு அவன் வந்தான். நான் அவனை வெளியே போகச் சொல்லிட்டேன். அவன் சொன்ன பொய்யான செய்திதான் இது - இரவு நேரங்களில் இங்கே ஆட்கள் வர்றாங்கன்றது...  நாங்க மோசமானவங்கன்னு...”

“சொல்ல வேண்டிய எல்லாத்தையும் முதலாளிகிட்ட சொன்னால் போதும்.”

“முதலாளி எப்போ வருவார்?”

“இன்னைக்கோ நாளைக்கோ வருவார்.”

“வரட்டும்... நான் சொல்லிக்கிறேன்.”

பைலி முதலாளியைப் பற்றி வேலாயுதன் பல வகைகளிலும் கேள்விப்பட்டிருக்கிறான். பெண் விஷயத்தில் பைலி முதலாளி மிகவும் பலவீனமானவர். சீட்டுப் பணத்தை வாங்குவதற்கென்றே ஆட்களை வேலைக்கு வைத்திருந்தாலும், சில வீடுகளில் சீட்டுப் பணத்தை வாங்குவதற்குத் தானே போக வேண்டும் என்பதில் முதலாளி பிடிவாதமாக இருப்பார். அப்படிப் பணம் வாங்குவதற்காகச் சென்றிருந்த ஒரு வீட்டில் முதலாளிக்கு அடி கிடைக்கவும் செய்திருக்கிறது.

இந்த விஷயங்கள் அனைத்தையும் தெரிந்திருந்த வேலாயுதன் நாணியிடம் சொன்னான்:

“பைலி முதலாளி இங்கே வரப் போகிறாராம்.”

“எதற்கு?”

“நம்ம மோசமானவங்களாம்... இங்கே இரவு நேரங்கள்ல ஆட்கள் வர்றாங்களாம்... நம்மை இங்கே தங்க வைக்கப் போறதில்லையாம்...”

“அப்படின்னா நாம எங்கே போறது?”

“நீ பயப்பட வேண்டாம்டீ நாணு. அவர் எதற்காக வர்றாருன்னு உனக்குத் தெரியுமா?”

“எதற்கு?”

“வர்றப்போ தெரிஞ்சிக்கோ அவர் எதற்காக வர்றாருன்னு. முதலாளி வர்றப்போ பக்கத்துல இருந்துக்கிட்டு பேசணும்னு நீ தங்கம்மாக்கிட்ட சொல்லிடு.”

“அப்படின்னா... நாம மோசமானவங்கன்னு சொன்ன பைலி முதலாளியும் மோசமானவர்தான்... அப்படித்தானே?”

“மோசமா இல்லாதவங்க யாருடீ? எல்லாரும் மோசமானவங்கதான். எல்லாம் திருடிப் பிழைக்க நடந்து திரிபவர்கள்தான். தயாராக இருக்கும்படி நீ போய் அவளிடம் சொல்லு.”

நாணி தங்கம்மாவிடம் போய் சொன்னாள்:

“மகளே, நாம இங்கே இருந்து போகணும்னு பைலி முதலாளி சொல்றாரு.”

“எதற்காக அவர் அப்படிச் சொல்றாரு அம்மா? நாம அவருக்கு என்ன கெடுதல் செய்தோம்?”

“நாம மோசமானவர்களாம்.”

“அதனால் அவருக்கு என்ன கேடு வந்துச்சு?”

“அவருடைய வீட்டில் மோசமான ஆளுங்க இருக்கக்கூடாதாம். இன்னைக்கு அவர் வரப் போறாராம்.”

“நம்மை இங்கே இருந்து வெளியே போகணும்ன்றதை சொல்றதுக்கா வர்றாரு?”

“அப்படித்தான் தகவல். ஆனால் மகளே... நீ அவர்கூட பேசினா, அவர் நம்மை வெளியே போகச் சொல்ல மாட்டாரு.”

“நான் கெட்ட பெண்ணாச்சே! நான் அவர்கிட்ட போய் ஏதாவது பேசினால், அவருக்குக் கோபம் வராதா?”

“இல்ல மகளே... நீ பக்கத்துல போய் ஏதாவது பேசுறதைத்தான் அவர் விரும்புவாரு.”

“அப்படின்னா...”

“அவரும் கெட்டவர்தான் மகளே.”

“அப்படின்னா... நான் அவருடன்...”

“அவரை சந்தோஷப்படுத்தணும் மகளே.”

“ஒரு ஆள்... இரண்டாவது ஆள்... இனி மூணாவது ஆள் வந்தால்...”

“நாம வாழ வேண்டாமா மகளே?”

“நீங்க வாழறதுக்கு நான் அழியணும்னுல்ல சொல்றீங்க?”


“மகளே, நீ வாழ்ந்தால் நாங்களும் வாழ்வோம்.”

“இல்லம்மா... நான் நாசமாயிடுவேன்... நான் சாக முயற்சித்தப்போ என்னை நீங்க விடல. இனிமேல் நீங்க என்னைச் சாகடிப்பீங்க...” தங்கம்மாவின் தொண்டை இடறியது.

“அப்படிச் சொல்லாதே மகளே. நீ இல்லை என்றால் நாங்களும் இல்லை.”

தங்கம்மா திரும்பி நடந்தாள். நாணி சொன்னாள்:

“பைலி முதலாளி வர்றப்போ நீ உன்னை அழகுபடுத்திக் கொண்டு தயாராக இருக்கணும் மகளே.”

“ம்... வரட்டும்... நான் அழகு படுத்திக்கிறேன்.”

மாலை நேரம் கடந்ததும் வாசலில் கட்டப்பட்டிருந்த நாய் குறைத்தது. வேலாயுதன் ஓடிப்போய்ப் பார்த்தான். ஒரு பையுடன் ஒருவன் அங்கு வந்தான். பையை வேலாயுதனின் கையில் கொடுத்துவிட்டு அவன் சொன்னான்:

“பைலி முதலாளி கொடுத்து அனுப்பினார். முதலாளி பிறகு வர்றாராம்” - அவன் போய்விட்டான்.

வேலாயுதன் பையை எடுத்துக் கொண்டு நாணியிடம் சென்றான்.

“பைலி முதலாளி கொடுத்து விட்டிருக்காரு.” அவன் பையில் இருந்து ஒரு புட்டியையும் ஒரு பொட்டலத்தையும் வெளியே எடுத்தான்.

“புட்டியில என்ன இருக்கு?” நாணி கேட்டாள்.

“அது பிராந்திடீ... பெரிய முதலாளிமார்கள் குடிக்கிறது.”

“இங்கே கொண்டு வந்தால்...”

“முதலாளி இங்கே இருந்துகொண்டு குடிக்கிறதுக்காக இருக்கும்” - வேலாயுதன் பொட்டலத்தை அவிழ்த்துப் பார்த்தான்.

“இது கறி வறுவல்... உள்ளே கொண்டு போய் வை.”

நாணி புட்டியையும் பொட்டலத்தையும் பைக்குள் வைத்து உள்ளே போனாள்.

நாய் குறைத்தது. வேலாயுதன் ஓடிச்சென்று பார்த்தான். பைலி முதலாளி வந்து கொண்டிருந்தார். முதலாளியை மரியாதையுடன் அவன் வரவேற்று அழைத்துக் கொண்டு வந்தான்.

“மகளே, இங்கே வந்திருக்கிறது யாருன்னு பாரு” - வேலாயுதன் அங்கிருந்து நகர்ந்தான்.

முதலாளி வாசலில் நின்றிருந்தார். தங்கம்மா அறைக்குள்ளிருந்து வாசலுக்கு வந்தாள். முதலாளி கேட்டார்:

“என்னைத் தெரியுமா?”

“தெரியும்... இங்கே வந்து கட்டிலில் உட்காருங்க.”

முதலாளி அறைக்குள் நுழைந்தார். தங்கம்மா கதவை அடைத்துத் தாழ்ப்பாள் போட்டாள். முதலாளி கட்டிலில் உட்கார்ந்தார். தங்கம்மாவைப் பிடித்து உட்கார வைத்த அவர் கேட்டார்:

“என்னைப் பிடிச்சிருக்கா?”

“என்னைப் பிடிச்சிருக்கா?”

“பிடிச்சிருக்குறதுனாலதானே நான் வந்திருக்கேன்.”

“நான் கெட்டவள்.”

“எனக்கு நல்லவள் வேண்டாம்.”

அவர்கள் கட்டிப்பிடித்துக் கொண்டார்கள். தங்கம்மா கேட்டாள்.

“அந்தப் பையை யாருக்கு கொடுத்து விட்டீங்க?”

“உனக்கு...”

“நான் குடிக்க மாட்டேனே?”

“இன்னைக்கு நீயும் நானும் சேர்ந்து குடிக்கணும். அதை எடு.”

தங்கம்மா கட்டிலில் ஒரு பாயை விரித்தாள். புட்டியையும் பொட்டலத்தையும் ஒரு குவளையையும் கொண்டு வந்து வைத்தாள். முதலாளி பாயில் உட்கார்ந்தார்.

“ரெண்டு குவளைகள் வேணும்.”

“இங்கே ஒண்ணுதான் இருக்கு.”

“அப்படின்னா இதுவே போதும்.”

முதலாளி புட்டியைத் திறந்து குவளையில் ஊற்றிக் குடித்தார். மீண்டும் குவளையில் ஊற்றித் தங்கம்மாவிடம் நீட்டினார்.

“எனக்கு வேண்டாம்.”

“குடி...” முதலாளி வற்புறுத்தினார்.

தங்கம்மா குடிக்கவில்லை. முதலாளி அவளுடைய வாயில் குவளையை வைத்தார். அவள் கூச்சத்துடன் குடித்தாள்.

வெளியே நாய் குரைத்தது. வேலாயுதன் ஓடிச் சென்றான்.

“யார் அது? முதலாளியா?”

முதலாளி வீட்டிற்குள் நுழைய முயன்றார். வேலாயுதன் சொன்னான்:

“அங்கே போக வேண்டாம் முதலாளி. அவளுக்குக் காய்ச்சல்.. அவள் தூங்கிட்டா...”

“தூங்கட்டும்... எழுப்ப வேண்டாம்...” - மிடுக்கான குரலில் அவ்வாறு கூறிய முதலாளி திரும்பி நடந்தார்.

“முதலாளி, கோபப்பட்டு போறீங்களா?” வேலாயுதன் பதைபதைப்புடன் கேட்டான்.

முதலாளி அதற்கு பதிலெதுவும் கூறவில்லை. திரும்பி பார்க்கவும் இல்லை.

வேலாயுதன் நாணியிடம் வந்து சொன்னான்:

“முதலாளி கோவிச்சுக்கிட்டு போயிட்டாரு.”

“உள்ளே ஆள் இருக்குற விஷயம் அவருக்குத் தெரிஞ்சிருக்குமா?”

“பைலி முதலாளி குடிச்சிட்டுப் பேசிக்கொண்டு இருந்தார்.”

“அப்படின்னா சங்கரன் முதலாளி கோவிச்சுக்கிட்டுத்தான் போயிருப்பாரு. இனி அனேகமா அவர் வரமாட்டார்.”

“இதெல்லாம் இப்படித்தான்டீ நடக்கும்... கொஞ்ச நாட்கள் பழகுவாங்க. பிறகு... தேவையில்லைன்னு தோணும். அதற்குப் பிறகு நமக்கு புதுசா யாராவது வருவாங்க..”

“அதேதான்... போறவங்க போகட்டும்...”

பைலி முதலாளி பத்து மணி ஆனபோது அங்கிருந்து புறப்பட்டார். அவர் வேலாயுதனை அழைத்துச் சொன்னார்:

“நீ என் கூட வா... என்னை வீட்டில் கொண்டுபோய் விடணும்.”

“போகலாம் முதலாளி.”

அவர்கள் புறப்பட்டார்கள். தங்கம்மா நாணியிடம் கேட்டாள்:

“இங்கே யாரும்மா வந்தது?”

“சங்கரன் முதலாளி...”

“பிறகு?”

“உள்ளே இருக்குற விஷயம் அவருக்குத் தெரிஞ்சிடுச்சு...”

“பிறகு?”

“கோபப்பட்டு போயிட்டாரு...”

“ம்... போகட்டும்...”

9

ங்கம்மாவின் வீட்டின் மேற்குப் பகுதியில் ஒரு ஒற்றையடிப் பாதை இருக்கிறது. தெற்கு திசையிலிருந்து வரும் அந்தப்பாதை சுடுகாட்டுக்கு முன்னால் கிழக்கு மேற்காகக் கிடக்கும் பெரிய பாதையில் போய்ச் சேரும்.

தெற்கு திசையிலிருந்து அந்த ஒற்றையடிப்பாதை வழியாக ராமகிருஷ்ணன் வருவதையும் பெரிய பாதையில் இறங்கி கிழக்கு நோக்கிப் போவதையும் தங்கம்மா பார்த்துக் கொண்டிருப்பாள்.  ஏழு அல்லது எட்டு வருடங்களாகப் பார்க்காமல் இருந்த ராமகிருஷ்ணனை மீண்டும் அவள் பார்க்கிறாள். வீட்டிற்குப் பின்னாலிருக்கும் முற்றத்தில் தங்கம்மா நின்று கொண்டிருப்பதை ராமகிருஷ்ணனும் பார்ப்பதுண்டு. இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வார்கள்.

ராமகிருஷ்ணனின் வீட்டில் பால், மோர் ஆகியவற்றின் வியாபாரம் நடக்கும். அன்றும் - தங்கம்மா மோர் வாங்குவதற்காக அங்கு போவதை வழக்கமாகக் கொண்டிருந்தாள். அப்போது தங்கம்மாவிற்கு பதினான்கு அல்லது பதினைந்து வயது இருக்கும்.

தங்கம்மா மோர் வாங்குவதற்காகச் செல்லும் போது ராமகிருஷ்ணனைப் பார்ப்பதுண்டு. வாசலில் ஒரு கேன்வாஸ் நாற்காலியைப் போட்டு உட்கார்ந்து கொண்டு ராமகிருஷ்ணன் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருப்பான். தங்கம்மாவும் ராமகிருஷ்ணனும் சிரித்துக் கொள்வதும் ஒருவரோடொருவர் பேசிக்கொள்வதும் எப்போதும் நடக்கக்கூடிய ஒன்றுதான்.

ஒருநாள் ராமகிருஷ்ணன் அங்கு இல்லை. தங்கம்மா வீட்டில் இருந்தவர்களிடம் கேட்டாள். ராமகிருஷ்ணன் எங்கு போனான் என்ற விஷயம் வீட்டில் இருந்தவர்களுக்கும் தெரியவில்லை. அதற்குப் பிறகு ஏழு வருடங்கள் கடந்தோடிய பிறகு, தங்கம்மா ராமகிருஷ்ணனைப் பார்க்கிறாள்.


அவனுடன் பேசவேண்டும் என்ற ஆவல் தங்கம்மாவிற்கு இருக்கிறது. ராமகிருஷ்ணனுக்கும் பேச வேண்டும் என்ற ஆசை இருக்கலாம். ஆனால் என்ன காரணத்திற்காக ராமகிருஷ்ணன் வீட்டுப் பக்கம் வரவில்லை? அவள் மிகவும் கேவலமானவள், விலைமாது என்று அவன் தெரிந்து கொண்டிருக்கலாம். அவனுக்கு அவள் மீது வெறுப்பு உண்டாகி இருக்கலாம். ஆனால் அவன் அவளைப் பார்க்கும்போது வெறுப்பான அடையாளம் எதுவும் தெரியவில்லை.

ஒருநாள் ராமகிருஷ்ணன் தெற்கு திசையிலிருந்து வருவதைப் பார்த்துக் கொண்டு தங்கம்மா ஒற்றையடிப் பாதைக்கு அருகில் நின்றிருந்தாள். ராமகிருஷ்ணன் அருகில் வந்தபோது இருவரும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக் கொண்டார்கள். ராமகிருஷ்ணன் கேட்டான் :

“என்னைத் தெரியுதா?”

“தெரியுதான்னு நான்தான் கேட்கணும்.”

“கேட்டால் தெரியும் என்பதுதான் பதில்.”

ராமகிருஷ்ணன் சிறிது நடந்துவிட்டுத் திரும்பிக் கேட்டான்:

“நான் அங்கே வரட்டுமா?”

“எப்போ?”

“ராத்திரி?”

“ம்...”

ராமகிருஷ்ணன் நடந்து சென்றான்.

இரவு எட்டு மணி தாண்டியது. வெளியே நாய் குரைத்தது. வேலாயுதன் ஓடிச் சென்றான்.

“யார் அது?”

ராமகிருஷ்ணன் எதுவும் பேசாமல் நின்றிருந்தான். வேலாயுதன் அருகில் சென்று பார்த்தான்.

“இப்போ எதற்காக இங்கே வந்தே?”

“நான் சொல்லித்தான் வந்திருக்காரு” - பின்னால் நின்று கொண்டு தங்கம்மா அழுத்தமான குரலில் சொன்னாள்.

வேலாயுதன் அதிர்ச்சியடைந்து விட்டான். தங்கம்மா அருகில் சென்று ராமகிருஷ்ணனின் கையைப் பிடித்துக் கொண்டு அவனை உள்ளே அழைத்துச் சென்றாள்.

நாணியும் பங்கியும் வேலாயுதனின் அருகில் சென்றார்கள். நாணி கேட்டாள் :

“யார் அது?”

“ராமகிருஷ்ணன்... அவள் சொல்லித்தான் அவன் வந்திருக்கான்.”

“இன்னைக்கு மத்தியானம் அவங்க பேசிக் கொண்டு இருந்ததை வேலியின் மேற்பகுதி வழியாக நான் பார்த்தேன்.”

“வேலையோ தொழிலோ எதுவும் இல்லாமல் புத்தகங்களைப் படித்துக் கொண்டு திரியறவன் அவன்.”

“அவள் எதற்காக அவனை அழைக்கணும்?”

“அதைத்தான் நானும் கேட்கிறேன். அதற்குப் பிறகு அவள் என்ன செய்தாள் தெரியுமா?” - வேலாயுதனின் குரல் உயர்ந்தது: “நான் இங்கே நின்னுக்கிட்டு இருக்குறப்போ அவள் அவனுடைய கையை பிடிச்சிக்கிட்டு உள்ளே போறாள்.”

“மெதுவாகச் சொல்லுங்க... அவள் கேட்டுறக் கூடாது.”

“என்னை மீறுற அளவுக்கு அவளுக்கு தைரியம் வந்திருச்சான்னு நான் கேட்கிறேன்.”

“மெதுவா பேசுங்க...” - நாணி வேலாயுதனின் வாயைக் கையால் மூடினாள்.

“அவள்கூட சண்டை போடக் கூடாது. சண்டை போட்டால் ஆபத்து.”

வேலாயுதன் குரலைத் தாழ்த்திக் கொண்டு சொன்னான்:

“வீடு பட்டினி கிடந்திடும்டீ... உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? நான் வறீது குட்டிக்கிட்ட கொஞ்சம் பணம் கேட்டேன். அவர் தர்றேன்னும் சொல்லிட்டாரு. அவர் பணத்துடன் இன்னைக்கு வருவார். நான் என்ன சொல்வேன்? அவனை அங்கேயிருந்து வெளியேற்றணும்னு நீ போய் அவள்கிட்ட சொல்லு.”

நாய் குரைத்தது. யாரோ வந்து கொண்டிருந்தார்க்ள.

வேலாயுதன் கேட்டான்:

“யார் அது?”

“நான்தான். என்னைத் தெரியலையா?” - மிடுக்கான குரலில் பதில் வந்தது.

வேலாயுதன் அருகில் சென்று பார்த்தான்.

“குட்டப்பனா? நீ ஏன் இந்த இரவு நேரத்துல இங்கே வந்தே?”

“இங்கே இரவு நேரங்களில் பலரும் வர்றாங்கள்ல! அப்படி இருக்குறப்போ நான் வந்தால் என்ன?”

“இங்கே பலரும் வர்றாங்கன்னு உன்கிட்ட யார் சொன்னது?”

“என்கிட்ட யாரும் சொல்ல வேண்டாம். நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். இரவு நேரங்கள்ல யார் யார் இங்கே வர்றாங்கன்ற விஷயம் எனக்கு நல்லா தெரியும்.”

நாணி வேலாயுதனின் காதில் என்னவோ சொன்னாள். வேலாயுதன் குட்டப்பனின் கையைப் பிடித்துக் கொண்டு சொன்னான்:

“வாடா குட்டப்பா! நாம கள்ளுக்கடைவரை போயிட்டு வருவோம்.”

அவர்கள் இருவரும் வெளியேறினார்கள்.

வாய் சவடால் அடிக்கக் கூடியவன் குட்டப்பன். எதிர்த்துப் பேசினால் நிலைமை பெரிதாகிவிடும். அதனால் சமரசம் செய்துகொண்டு அவனை அங்கிருந்து அழைத்துப் போகும்படி நாணி அறிவுறுத்தினாள்.

சட்டம் பேசும் குட்டப்பனைச் சரி செய்வதற்கு ஒரே ஒரு வழி தான் இருக்கிறது. கள்ளு வாங்கிக் கொடுப்பதே அது. அந்த வகையில் வேலாயுதன் குட்டப்பனை அழைத்துச் சென்றான். பங்கி சொன்னாள்:

“அம்மா, அக்கா இப்படி ஆரம்பித்தால் நாம பட்டினி கிடக்க வேண்டியது வருமே?”

“அக்காவைப் போல நீயும் அழகா இருந்தால்...?”

“நான் அழகா இல்லாமல் போனதற்கு நானா குற்றக்காரி?”

நாய் குரைத்தது. நாணி கேட்டாள்:

“யார் அது?”

“நான் இன்னைக்கு வர்றதா சொல்லியிருந்தேன்” - வறீது குட்டி சொன்னார்.

“நாங்க இங்கே எதிர்பார்த்து நின்னுக்கிட்டு இருக்கோம். விஷயம் என்னன்னா... அவளுக்கு தலைவலி...”

“வேலாயுதன் எங்கே?”

“வைத்தியரைப் பார்க்கப் போயிருக்காரு. எங்களை இங்கே இருக்கச் சொல்லிட்டு போனாரு. வந்த பிறகு சொல்றேன். பிறகு என்னவோ கொண்டு வருவீங்கன்னு சொன்னாரு.”

“இப்போ நான் போறேன். தலைவலி சரியான பிறகு வர்றேன்.” வறீது குட்டி திரும்பி நடந்தார்.

“உனக்கு தர்றதுக்கு நான் எதையும் கொண்டு வரல” - தங்கம்மாவிற்கு மிகவும் நெருக்கமாக அமர்ந்துகொண்டு ராமகிருஷண்ன் சொன்னான்.

“எனக்கு ஏதாவது தரணும்னு நான் சொன்னேனா?”

“தராதவர்களை இங்கே உள்ளே நுழைய விடமாட்டார்கள் என்ற விஷயம் எனக்குத் தெரியும்.”

“என்னைப் பற்றிய எல்லா விஷயங்களும் தெரியுமா?”

“என்மேல விருப்பம் இருந்ததாலா இங்கே வரலாமான்னு என்கிட்ட கேட்டீங்க?”

“நீ இப்போ இருக்குறதைவிட சின்ன பிள்ளையா இருக்குறப்பவே உன்மீது எனக்கு விருப்பம் வந்திடுச்சு. இப்போ நீ ரொம்பவும் மாறிட்டே. இருந்தாலும் இப்போவும் விருப்பம் இருக்கத்தான் செய்யுது. என்மேல விருப்பம் இருப்பதாலா நான் வர்றதுக்கு நீ சம்மதிச்சே?”

“எனக்கு விருப்பம் இல்லாதவர்கள் யாரும் இங்கே வர நான் சம்மதிச்சது இல்லை.”

“அப்படின்னா... இங்கே வர்றவங்க எல்லாரும் நீ விருப்பப்பட்டவங்க... அப்படித்தானே தங்கம்மா?”

“அவர்கள் யாரும் நான் சம்மதித்து வருபவர்கள் இல்லை” - தங்கம்மா தலையைக் குனிந்து கொண்டாள்.

“நீ சம்மதிக்காமல் வருவார்களா? அப்படி வந்தால் நீ அவர்கள் சொன்னபடி கேட்பியா?”


“என் அப்பாவுக்காகவும் அம்மாவுக்காகவும் தங்கச்சிக்காகவும்...” தங்கம்மா தனக்குள் உண்டான தவிப்பை அடக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டாள்.

ராமகிருஷண்ன் ஒரு நீண்ட பெருமூச்சை விட்டான். சிறிது நேர மவுனத்திற்குப் பிறகு ராமகிருஷ்ணன் கேட்டான்:

“நான் இங்கே வந்த விஷயம் அவங்க யாருக்கும் பிடிக்கல... அப்படித்தானே?”

“பிடிக்கல...”

“அவங்களுக்குப் பிடிக்கணும்னா, அதுக்கு நான் என்ன செய்யணும்?”

“பணம் கொடுக்கணும்.”

“என் கையில் பணம் இல்ல...”

“பணம் இல்லைன்னா அவங்களுக்குப் பிடிக்காது.”

“தங்கம்மா உன்மேல இருக்குற விருப்பமும்...”

“பணத்தின் மீது வைத்திருக்கும் விருப்பம் மட்டுமே.”

வெளியே வாசலில் நின்று கொண்டிருந்த வேலாயுதன் ஒரு கேள்வியைக் கேட்டான் :

“அவன் இதுவரை போகலையாடீ?”

தங்கம்மா தலையை வேகமாகத் திருப்பினாள். அவளுடைய முகத்தில் கோபம் நிழலாடியது. அவள் எழுந்து கண்களை மூடிக் கொண்டு உதடுகளை அமர்த்தினாள். அப்படியே அவள் சிறிது நேரம் நின்றிருந்தாள்.

அவள் கண்களைத் திறந்து சுற்றிலும் பார்த்தாள். அவள் உட்கார்ந்தாள். ராமகிருஷ்ணன் கேட்டான்:

“நான் போகட்டுமா தங்கம்மா? ஆமா... நான் வெளியே போறேன்.”

“நாம படுப்போம்” ... அவள் விளக்கை அணைத்தாள். பொழுது புலர்வதற்கு முன்னால் தங்கம்மா ராமகிருஷ்ணனை எழுப்பினாள்.

“போக வேண்டாமா?”

“போகணும்... போகணும்...” - ராமகிருஷண்ன் எழுந்தான். பாதை வரை தங்கம்மா அவனுடன் சென்றாள். அவள் கேட்டாள்:

“ராத்திரி எப்போ வருவீங்க?”

“வரணுமா?”

“வரணும். நேற்று வந்த நேரத்திற்கு இன்னைக்கும் வரணும்?”

“மற்றவர்கள்...”

“நான் சொல்லித்தான் நீங்க வர்றீங்க. என்னைப் பார்க்குறதுக்காக வர்றீங்க. வரணும். வருவீங்களா?”

“வர்றேன்.”

ராமகிருஷ்ணன் அங்கிருந்து கிளம்பினான்.

10

“நாணி, இன்னைக்கு வறீது குட்டி வர்றாருன்னு அவள்கிட்ட சொல்லு. அவள் அழகுபடுத்திக் கொண்டு தயாரா இருக்கணும்.”

“ஒரு வேளை இன்னைக்கு சேலிக்கரை கிருஷ்ணன் வரலாம்.”

“அவளுக்கு தலைவலின்னு சொல்லிட வேண்டியதுதான்.”

“இன்னைக்கும் ராமகிருஷ்ணன் வந்தால்...?”

“வந்தால் அவனை அடிச்சு வெளியேத்துவேன்” - வேலாயுதன் அழுத்தமான குரலில் சொன்னான்.

“இன்னைக்கு பொழுது விடியிற நேரத்துல அவள் அவனை வழியில கொண்டு போய் விட்டுட்டுத்தான் வந்தாள்.”

“அவனை இங்கே வர வைக்கக் கூடாதுன்னு நீ அவள்கிட்ட இன்னைக்கு சொல்லிடு.”

“நான் சொன்னேன். ஆனால் அவள் வெறுமனே கேட்டுக்கொண்டு இருந்தாள். கடைசியில் ஒரு முனகல் முனகிட்டு எழுந்து போயிட்டா...”

“ரெண்டு நாட்களாக அவளிடம் ஒரு மாற்றம் தெரியுதேடீ நாணி?”

“மாற்றம் இருக்கு. பெரிய மாற்றம் இருக்கு...” நாணி உறுதியான குரலில் சொன்னாள்.

“ம்... நானும் மாறுறேன்.”

அன்று தங்கம்மா அதிக நேரம் அறைக்குள்ளேயே இருந்தாள். சாயங்கால நேரம் ஆனபோது பக்கத்து வீட்டுக்காரி பாரு வந்தாள். அவள் எல்லாவற்றையும் தெரிந்துகொண்டுதான் வந்தாள். வாசலில் வேலாயுதனும் நாணியும் பங்கியும் மவுனமாக நின்றிருந்தார்கள். பாரு கேட்டாள் :

“இன்னைக்கு என்ன இந்த வீடு சாவு நடந்த வீட்டைப் போல இருக்கு?”

“அவளுக்கு ஒரு திமிர்! எங்க யார் கூடவும் எதுவும் பேசாமல் அறைக்குள்ளேயே உட்கார்ந்துக்கிட்டு இருக்கா.”

“அந்த ராமகிருஷ்ணன் இங்கே வந்தானா நாணி அக்கா?”

“வந்தான்.”

“அவன் பொம்பள பசங்களை மயக்கித் திரியிறவன். அவன் வந்து அவளை மயக்கிட்டான்.”

“நீ போய் அவள்கிட்ட சொல்லு பாரு. அவன் இங்கே வந்தான் என்றால், அவளும் நாசமாகப் போயிடுவா, நாங்களும் அழிஞ்சிடுவோம்னு சொல்லு.”

“நான் சொல்லுறேன் நாணி அக்கா. ஆனால், நான் சொன்னால் அவள் கேட்பாளா?”

பாரு தங்கம்மா இருக்கும் இடத்திற்குச் சென்றாள். தங்கம்மா கட்டிலில் தலையைக் குனிந்து கொண்டு உட்கார்ந்திருந்தாள். பாரு கேட்டாள்:

“தங்கம்மா, நீ ஏன் இப்படி கவலையா இருக்கே?”

“நான் கவலையில இருக்கேன்னு உங்கக்கிட்ட யாரு சொன்னது பாரு அக்கா?”

“யாராவது சொல்லணுமா? பார்த்தாலே தெரியாதா? இப்படி தனியா அறைக்குள்ளே பிறகு எதற்கு இருக்கணும்?”

“பாரு அக்கா, உங்களுக்கு இப்போ என்ன தெரிஞ்சிக்கணும்?”

“ராமகிருஷ்ணனை இங்கே எதற்காக வரவைக்கணும்?”

“அது என்னுடைய விருப்பம்.”

“உன் விருப்பத்திற்கு நடப்பது உனக்கும் மற்றவர்களுக்கும் நல்லதா?”

“பிறகு யாருடைய விருப்பத்துக்கு நடக்குறது நல்லது?”

“உன் அப்பா, அம்மாவோட விருப்பப்படி நீ நடக்கணும்.”

“அப்படின்னா...?”

“சொல்லு தங்கம்மா... சொல்லு.”

“என்னை விற்றுப் பணம் வாங்கி அவங்க சுகமா வாழணும். அதுதானே அவங்களோட விருப்பம்! அது என்னுடைய விருப்பமில்லை பாரு அக்கா.”

“அப்படின்னா...?”

“முடியாது... பாரு அக்கா. அவங்க அழைச்சிட்டு வர்றவங்ககூடவெல்லாம் படுக்குறது என்னால முடியாது.”

“நீ இப்படிப் பிடிவாதம் பிடிச்சா எல்லாரும் பட்டினி கிடக்க வேண்டியது வருமே தங்கம்மா?”

“பட்டினி கிடந்து சாவோம். அதுதான் நல்லது... பாரு அக்கா, நீங்க போங்க...” தங்கம்மா திரும்பி நின்றாள்.

பாரு அங்கிருந்து கிளம்பினாள்.

இரவு எட்டு மணி தாண்டியது.

நாய் குரைத்தது. வேலாயுதன் ஓடிச் சென்றான். தங்கம்மாவும் வாசலுக்கு வந்தாள். யாரோ வந்து கொண்டிருந்தார்கள். வேலாயுதன் கேட்டான்:

“ராமகிருஷ்ணனா அது?”

பதில் இல்லை. வேலாயுதன் அருகில் சென்றான். பின்னால் தங்கம்மாவும் வந்தாள். வேலாயுதன் கோபத்துடன் சொன்னான்:

“ராமகிருஷ்ணன் இங்கே வரக்கூடாதுன்னு நான் நேற்றே சொன்னேன்ல?”

“நான் சொல்லித்தான் வந்திருக்கார்” - தங்கம்மா அழுத்தமான குரலில் சொன்னாள்.

“வெளியே போடா ராமகிருஷ்ணா...” - வேலாயுதன் கோபத்தில் விறைத்துக் கொண்டு நின்றான்.

தங்கம்மா ராமகிருஷ்ணனின் கையைப் பிடித்தாள். நாணியும் பங்கியும் அங்கு ஓடி வந்தார்கள்.

“போறியா என்ன?” - வேலாயுதனின் கை உயர்ந்தது.

தங்கம்மா ராமகிருஷ்ணனைப் பிடித்திருந்ததை விட்டு, மேலே உயர்ந்த வேலாயுதத்தின் கையைப் பிடித்துக் கொண்டு கர்ஜனை செய்யும் குரலில் கேட்டாள்:

“அடிப்பீங்களா?”

வேலாயுதனின் கை இறங்கவில்லை.

தங்கம்மா ராமகிருஷ்ணனிடம் சொன்னாள் :


“திரும்பிப் போங்க... என்னை மன்னிச்சிடுங்க...”

ராமகிருஷ்ணன் திரும்பி நடந்தான்.

தங்கம்மா வீட்டிற்குள் போனாள். நாணி சொன்னாள் :

“அடிக்க கை ஓங்கியது...”

“அப்போத்தான் அவள் அடங்கினாள். இல்லாவிட்டால் அவள் அவனைப் பிடிச்சிக்கிட்டு உள்ளே போயிருப்பா... அவனுக்கு எங்கே அடி விழுந்துடப் போகுதோன்னுதான் அப்போ அவள் அடங்கிட்டா...”

“இனிமேல் அவன் வரமாட்டான்.”

“இனி வந்தால் அடி விழும். இன்னைக்குத்தான் அவள் என்னோட தனி நிறத்தைப் பார்த்திருக்கா.”

அவர்கள் வாசலில் போய் நின்றார்கள். வேலாயுதன் நாணியிடம் சொன்னான்:

“வறீது குட்டி வருவார். அழகுபடுத்திக் கொண்டு தயாரா இருக்கும்படி நீ அவள்கிட்ட போய்ச் சொல்லு.”

எல்லோரும் வீட்டிற்குள் சென்றார்கள். தங்கம்மாவின் அறை அடைக்கப்பட்டிருந்தது. உள்ளே தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. நாணி கதவைத் தட்டி அழைத்தாள். கதவு திறந்தது. நாணி உள்ளே போனாள்.

சிறிது நேரம் கழித்து நாணி வெளியே வந்து வேலாயுதனிடம் சொன்னாள்:

“இது என்ன இப்படி..?”

“எப்படி?”

“அவளுக்கு ஒரே சந்தோஷம்! புதையல் கிடைத்ததைப்போல சந்தோஷம்?”

“அப்படின்னா... அப்படின்னா... இதுல ஏதோ ரகசியம் இருக்குடீ நாணி. வறீது குட்டி இன்னைக்கு வருவார்ன்னு நீ அவள்கிட்ட சொன்னியா?”

“சொன்னேன். எப்போ வருவாருன்னு அவள் கேட்டாள். கொஞ்ச நேரம் கடந்த பிறகு அவர் வருவார்னு நான் சொன்னேன். பணம் தந்துட்டாரான்னு அவள் அப்போ கேட்டாள். நான் சொன்னேன். வர்றப்போ தருவாருன்னு.”

“அப்போதும் அவளுக்கு சந்தோஷம்தானா?”

“சந்தோஷம்தான்... அவள் அழகுபடுத்திக் கொண்டு இருக்கா...”

“அப்படின்னா அவளுக்கு சந்தோஷம்தான்டீ... ரகசியம் எதுவும் இல்லை.”

“என் மகளுடைய கண்கள் தெளிவாயிடுச்சு...”

“நம்மளை தெய்வம் காப்பாத்திடுச்சு.”

நாய் குரைத்தது. வேலாயுதன் ஓடிச் சென்றான். வறீது குட்டியையும் அழைத்துக் கொண்டு அவன் வாசலுக்கு வந்தபோது, தங்கம்மா அங்கு எதிர்பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். அவள் வறீது குட்டியின் கையைப் பிடித்துக் கொண்டு உள்ளே அழைத்துக் கொண்டு சென்றாள். கதவு அடைக்கப்பட்டது.

வேலாயுதன் நாணியிடம் சொன்னான்:

“வறீது குட்டியுடன் நான் அங்கே போனப்போ, அவள் எதிர்பார்த்து நின்னுக்கிட்டு இருக்கா. அவரைக் கையைப் பிடிச்சு உள்ளே அழைச்சிட்டு போனாள்.”

“தெய்வம் கண்களைத் திறக்க வச்சிடுச்சு... பணம் தந்தாரா?”

“ம்...”

அவள் விளக்கை அணைத்து விட்டுப் படுத்தாள்.

நள்ளிரவு தாண்டியபோது வறீது குட்டி அங்கிருந்து கிளம்பினார். தங்கம்மாவின் அறையில் இருந்த விளக்கும் அணைந்தது.

காக்கை கத்தியது. பொழுது விடிய ஆரம்பித்தது. வெளியேயிருந்து பக்கத்து வீட்டுக்காரி பாரு அழைத்தாள்:

“நாணி அக்கா... நாணி அக்கா!”

நாணியும் வேலாயுதனும் பங்கியும் எழுந்து வெளியே வந்தார்கள். நாணி கேட்டாள்:

“என்ன பாரு... இந்தப் பொழுது விடியிற நேரத்துல...?”

“எனக்கு ஐந்து ரூபாய் தர முடியுமா? நாளையோ நாளை மறுநாளோ திருப்பித் தந்துடுறேன்.”

“எதுக்கு இப்போ ஐந்து ரூபாய்?”

“நான் ஒரு கல்யாணத்துக்குப் போகணும்.”

நாணி வேலாயுதனிடம் சொன்னாள்.

“பாருவுக்கு ஐந்து ரூபாய் கொடுங்க. வாங்கினால், அவள் திருப்பித் தர்றவள்தான்.”

வேலாயுதன் உள்ளே போய் பணத்தைக் கொண்டுவந்து கொடுத்தான். பாரு கிளம்பினாள்.

“அக்கா எழுந்திரிக்கல...” - பங்கி சொன்னாள்.

“அவள் உறங்கட்டும்...” வேலாயுதன் சொன்னான்.

பாருவின் உரத்த சத்தம்:

"நாணி அக்கா! ஓடிவாங்க... ஓடி வாங்க..." எல்லோரும் ஓடிச் சொன்றார்கள். பலா மரத்தைச் சுட்டிக் காட்டியவாறு பாரு சொன்னாள்:

“தூக்குல தொங்கிக் கிடக்குறது யாரு?”

எல்லோரும் பலா மரத்தின் அடியை நோக்கி ஓடினார்கள்.

தங்கம்மாவின் இறந்த உடல் பலா மரத்தின் கிளையில் தொங்கிக் கொண்டிருந்தது.

“மோசம் பண்ணிட்டியே மகளே!” - நாணி இறந்த உடலின் காலை இறுகப் பிடித்துப் கொண்டாள்.

“நம்மளைப் பட்டினி கிடக்க விட்டுட்டு அவ போயிட்டாடீ... போயிட்டா...!” வேலாயுதன் நெஞ்சில் அடித்துக் கொண்டான்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.