Logo

அறியாத பெண்ணின் அஞ்சல்

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 10605
Ariyatha Pennin Anjal

சுராவின் முன்னுரை

லகப் புகழ் பெற்ற ஜெர்மன் எழுத்தாளரான ஸ்டெஃபான் ஸ்வைக் (Stefan zweig) 1922ஆம் ஆண்டில் எழுதிய ‘Letter from an unknown woman’ என்ற புதினத்தை ‘அறியாத பெண்ணின் அஞ்சல்’ என்ற பெயரில் மொழி பெயர்த்திருக்கிறேன்.

ஒரு மிகப் பெரிய எழுத்தாளரின் மீது தீவிர ஈடுபாடு கொண்ட ஒரு இளம் பெண் வாசகியை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை இது. காலப் போக்கில் அந்த எழுத்தாளருக்கும் அந்த இளம் பெண்ணுக்குமிடையே உடல் ரீதியான உறவு கூட உண்டாகி விடுகிறது. அதற்குப் பிறகு அவளுடைய வாழ்க்கை என்ன ஆனது?

உயிரோட்டத்துடன் எழுதப்பட்டிருக்கும் இந்நாவல் 1947ஆம் ஆண்டில் ‘Letter from an unknown woman’ என்ற பெயரிலேயே திரைப்படமாகவும் வந்திருக்கிறது.

உலகப் புகழ் பெற்ற இந்த புதினத்தை இணையதளத்தில் வெளியிடும் லேகாபுக்ஸ்.காம் (www.lekhabooks.com)  நிறுவனத்திற்கு நன்றி.

அன்புடன்,

சுரா(Sura)


ஜெர்மன் இலக்கியத்தில் முத்திரைபதித்தவரும் உலகப் புகழ் பெற்ற எழுத் தாளருமான ஸ்டெஃபான் ஸ்வைக் எழுதிய 'Letter From An Unknown Woman' என்ற புதினத்தை 'அறியாத பெண்ணின் அஞ்சல்'என்ற பெயரில் மொழி பெயர்த்திருக்கிறேன்.

1920-லிருந்து 1930-க்குள் ஜெர்மன் இலக்கியத்தில் பெரிய அளவில் பெயர்பெற்று எல்லாராலும் வாசிக்கப்பட்ட ஸ்டெஃபான் ஸ்வைக், 1881-ஆம் ஆண்டில்வியன்னாவில் பிறந்தவர். நிறைய நாவல்களையும் சிறுகதைகளையும் வாழ்க்கைவரலாறுகளையும் அவர் எழுதியிருக்கிறார். 1934-ஆம் ஆண்டு ஜெர்மனியின்ஆதிக்கத்தை ஹிட்லர் பிடித்தவுடன், அவர் ஆஸ்ட்ரியாவிற்குச் சென்றுவிட்டார்.பிறகு இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் வாழ்க்கையை நடத்தினார். 1941-ல்பிரேசிலுக்குச் சென்றார். 1942-ஆம் ஆண்டு தன் இரண்டாம் மனைவி ஷார்லட்எலிஸபெத் அல்ட்மேனுடன் சேர்ந்து அங்கு தற்கொலை செய்து கொண்டார்.

ஸ்டெஃபான் ஸ்வைக் எழுதிய படைப்புகளில் The Love of Erika Ward, Rear, TheEyes of My Brother- Forever, The Invisible Collection, The Refugee,Beware of Pity, Letter From An Unknown Woman ஆகியவை குறிப்பிடத் தக்கவை.

1922-ஆம் ஆண்டில் எழுதப்பட்ட ‘A Letter From An Unknown Woman ' அதே பெயரில் 1947-ஆம் ஆண்டில் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டது.இந்தக் கதையை ஆங்கிலத்தில் படித்தபோதே இதைத் தமிழில் மொழி பெயர்க்கவேண்டும் என்று தீர்மானித்து விட்டேன்.

ஸ்டெஃபான் ஸ்வைக் இந்தக் கதைக்காகப் பயன்படுத்தியிருக்கும் உத்தி எனக்குமிகவும் பிடித்திருந்தது. இதில் கடிதம் எழுதும் அந்த இளம் பெண்ணையும்,எழுத்தாளரையும் நம்மால் எவ்வளவு வருடங்களானாலும் மறக்க முடியாது என்பதேஉண்மை. இப்படிப்பட்ட ஒரு இளம்பெண் நமக்குக் காதலியாகக் கிடைக்க மாட்டாளாஎன்று எந்த ஆணும் ஏங்குவான்.


புகழ் பெற்ற எழுத்தாளரான “ஆர்” சில நாட்களாக ஒரு சிறு பயணத்தில் இருந்தார். இந்த குளிர் நிறைந்த புலர்காலைப் பொழுதில் தான் அவர் வியன்னாவிற்குத் திரும்பி வந்தார். புகைவண்டி நிலையத்தில் பத்திரிகையை வாங்கிய போதுதான் அன்றைய தேதியே அவருக்கு ஞாபகத்தில் வந்தது. அன்று அவருடைய 41-ஆவது பிறந்த நாள். அதைப் பற்றி அவருக்கு சந்தோஷமோ வருத்தமோ எதுவும் தோன்றவில்லை. புகைவண்டி நிலையத்தில் வாடகைக் காரைப் பிடித்து அவர் நேராக வீட்டிற்கு வந்தார். குளித்து முடித்தவுடன், சூடான காப்பியுடன் வேலைக்காரன் அவருக்கு அருகில் வந்தான். நாளிதழ்களும் கடந்த நாட்களில் அவருக்கு வந்த அஞ்சல்களும் மேஜை மீது இருந்தன. அந்த நாட்களில் அவருக்கு வந்த தொலைபேசி அழைப்புகள் பற்றிய விவரங்களை அறிவித்து விட்டு வேலைக்காரன் அறையை விட்டு வெளியேறியவுடன், ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தவாறு நாற்காலியில் சாய்ந்தார்.

அஞ்சல்களை அலட்சியமாக அலசிப் பார்த்து, முக்கியம் என்று தோன்றியவற்றைப் பிரித்து கண்களை அவற்றில் ஓட்டினார். மீதி இருந்தவற்றை ஓரத்தில் வைத்து விட்டு பத்திரிகைகளை வாசிப்பதற்காகத் திரும்பினார். அலட்சியமான வாசிப்பிற்கு மத்தியில் தன்னை ஈர்த்த சில செய்திகளை முழுமையாக வாசித்தார். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு, அதற்குப் பிறகும் எஞ்சியிருந்த அஞ்சல்களை வாசிப்பதற்காக அவர் திரும்பி வந்தார். அந்தக் கடிதங்களின் கூட்டத்தில் சாதாரணமாக இருப்பதை விட கனமாக இருந்த ஒரு கவரை அப்போதுதான் பார்ப்பதைப் போல, கவனமே இல்லாமல் எடுத்துப் பிரித்தார்.

அது ஒரு சிறிய புத்தகத்தின் கையெழுத்துப் பிரதியைப் போல தோன்றியது. உள்ளே இருந்த விஷயங்கள் ஏராளமான பக்கங்களில் இருந்தன. ஒரே பார்வையிலேயே அந்த எழுத்துகள் பெண்ணால் எழுதப்பட்டவை என்பது தெரிந்தது. கவரை கீழே போடுவதற்கு முன்னால் அதற்குள் இருந்தவற்றை அவர் மீண்டும் சோதித்துப் பார்த்தார் - தகவல்களுடன் ஒரு “கவரிங் லெட்ட”ரும் இருக்கும் என்ற எண்ணத்துடன். ஆனால், அது “கவரிங் லெட்டர்” எதுவும் இல்லாமல் இருந்தது.

“எந்தச் சமயத்திலும் என்னை அறிந்திராத என்னுடைய உங்களுக்கு....” என்று ஆரம்பமாகும் அசாதாரணமான தொடக்கத்தை வாசித்தபோது அவருக்கு அந்தக் கடிதத்தில் ஒரு ஆர்வம் தோன்றியது. எனினும், தனக்குத்தானா....அப்படியென்றால் யார் எழுதியதாக இருக்கும் என்ற சந்தேகத்தைத் தீர்ப்பதற்காக அவர் குப்பைக் கூடைக்குள் எறிந்த கவரை திரும்பவும் எடுத்தார். பெறுநர் முகவரி அவருடையதுதான். ஆனால், அதில் எந்தவொரு இடத்திலும் அனுப்பிய ஆளின் பெயரோ முகவரியோ இல்லை.

மேலும் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்து விட்டு, அவர் வாசிப்பைத் தொடர்ந்தார்.

“அன்பிற்குரியவரே, துயரம் நிறைந்த மூன்று இரவு, பகல்களுக்குப் பிறகு நேற்று என்னுடைய மகன் மரணத்தைத் தழுவி விட்டான். அவனுடைய உயிருக்காக நான் தெய்வத்திடம் எவ்வளவோ கெஞ்சி மன்றாடினேன். எனினும்... இன்ஃப்ளூவென்ஸா என் தங்கச் செல்லத்தை சுட்டெரித்து விட்டது. அவன் நடுங்கும்போது, பனிக்கட்டிகளால் அவனுடைய நெற்றியைக் குளிரச் செய்ய முயற்சித்தவாறு நீளமான நாற்பது மணி நேரங்கள் கண்களை மூடாமல் நான் அவனுக்கு அருகிலேயே உட்கார்ந்திருந்தேன். அந்த இரவு, பகல் வேளைகளில் நடுங்கிக் கொண்டிருந்தபோதிலும், அவனுடைய மென்மையான கைகளை நான் என்னுடைய உள்ளங்கைகளுக்குள் வைத்துக் கொண்டு அவனுக்கு அருகிலேயே உட்கார்ந்திருந்தேன். மூன்றாவது இரவு ஆகும் போது நான் மிகவும் களைத்துப் போயிருந்தேன். என்னுடைய கண் இமைகள் கனமாகி, என்னையே அறியாமல் மூடிக் கொண்டிருந்தன. அவனுடைய படுக்கைக்கு அருகில் “சொறசொற”வென்று இருந்த ஸ்டூலில் உட்கார்ந்தவாறு நான் தூங்கி விட்டிருக்க வேண்டும். மூன்று நான்கு மணி நேரங்கள்... இதற்கிடையில் எப்போதோ இரக்கமே இல்லாத மரணம் அவனை என்னிடமிருந்து தட்டிப் பறித்துவிட்டது... என் உயிராக இருந்த என்னுடைய அன்பான தங்கச் செல்லக் குழந்தையை...

இதோ... நான் இதை எழுதும்போதுகூட அவன் அந்தக் கட்டிலில் அதே கிடப்பில் கிடக்கத்தான் செய்கிறான். ஒளிவீசிக் கொண்டிருக்கும் அந்த சின்னஞ்சிறிய கண்களை மெல்ல மூடிக் கொண்டு, கைகளை மார்பில் கோர்த்து வைத்துக் கொண்டு அமைதியாகத் தூங்கிக் கொண்டிருப்பதைப்போல... அந்தக் கட்டிலின் நான்கு மூலைகளிலும் எரிய வைக்கப்பட்டிருந்த மெழுகுவர்த்திகளின் நெருப்பு நாக்குகள் அறைக்குள் இருந்த சிறிய காற்றில் அசைந்தாடும்போது உண்டாகும் நிழலாட்டத்தில், அவனுடைய உடலுறுப்புக்கள் அசைவதைப் போல தோன்றின. தேவையில்லாமல் நினைக்கிறேன் என்று தோன்றினாலும், அவன் இறக்கவில்லை, தூங்கிக் கொண்டிருக்கிறான் என்று அப்போது நினைத்தேன். இந்த உறக்கம் முடிந்தபிறகு அவன் சாதாரணமாக கண் விழித்து எழுந்து என்னைக் கொஞ்சிக்கொண்டே அழைப்பான் என்று...

தேவையில்லாமல்கூட இப்படி எதிர்பார்ப்பதற்காகவும் கடுமையான ஏமாற்றத்தால் மூச்சடைத்துப் போவதற்காகவும் நான் இனிமேல் அந்தப் பக்கம் பார்க்கமாட்டேன்; அப்படி எதுவும் நடக்காது என்பதும் அவன் என்றென்றைக்குமாக என்னை விட்டுப் பிரிந்து சென்று விட்டான் என்பதும் எனக்குத் தெரியும்.


என் உயிரான அவன் இனிமேல் கண் விழிக்கப் போவதில்லை. எந்தச் சமயத்திலும் என்னை அழைக்கப் போவதில்லை. என்னிடம் கொஞ்சிக் குழையப் போவதில்லை. இந்தஉலகத்தில் எனக்கு இனிமேல் உங்களைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள்...?”

அவர் கடிதத்தில் இருக்கும் விஷயம் தெரியாமல் ஆர்வத்தால் சூழப்பட்டார்.அவர் தான் புகைத்து முடித்த சிகரெட்டை ஆஸ்ட்ரே யில் போட்டார். மேலும் ஒருசிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு, வாசிப்பைத் தொடர்ந்தார்.

“வாழ்க்கையை நசுக்கி மிதித்து மனித மனதைப் பந்தாடி மகிழ்ச்சியடைபவரும்,என்னை எந்தச் சமயத்திலும் அறிந்திராத வருமான மனிதர்தான் நீங்கள். எனினும், நான் எப்போதும் உங்களை, உங்களை மட்டும் காதலித்துக் கொண்டிருந்தேன். அதனால்தான் என் மகன் இறந்து கிடக்கும் இந்த நிமிடத்தில் நான் இதை உங்களுக்கு எழுதுகிறேன். இதயத்தைப் பிளக்கக்கூடிய என்னுடைய இந்த தனிப்பட்ட துக்கத்தை என்னால் யாரிடமாவது கூறாமல் இருக்க முடியாது. அதற்கு எனக்கு இந்த உலகத்தில் என் அன்பிற்குரியவரே, உங்களைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள்?

நான் யார் என்பதை உங்களுக்கு ஞாபகம் வருகிற அளவிற்குத் தெளிவாக உணர்த்துவதற்கு ஒரு வேளை, என்னால் முடியாமல் போகலாம். சில நேரங்களில் ஒரு சதவிகிதம் கூட நீங்கள் என்னைப் பற்றி ஞாபகத்தில் வைத்திருக்கவில்லை என்ற நிலையும் வரலாம். அதுதானே எப்போதும் என்னுடைய அனுபவமாக இருந்திருக்கிறது!

எனக்கு என்னுடைய உடல் பனியின் காரணமாக குளிர்ச்சியாக இருப்பதைப் போல தோன்றுகிறது. தலைக்குள் தாங்க முடியாத அளவிற்கு கனம் இருப்பதைப் போல தோன்றுகிறது. உடம்பு முழுவதும் வலி பரவுகிறது. எனக்கும் இன்ஃப்ளூவென்ஸா காய்ச்சல் வந்திருக்க வேண்டும். இந்தப் பகுதியெங்கும் இந்த தொற்று நோய்பரவி விட்டிருக்கிறது. எனக்கு சிறிதுகூட பயம் தோன்றவில்லை. காரணம்- ஒருதற்கொலை இல்லாமல் அது என்னை என் மகனுடன் கொண்டு போய் சேர்க்குமென்றால்,எனக்கு அந்த விஷயத்தில் சந்தோஷம்தான்.

இப்போது எல்லா விஷயங்களையும் உங்களிடம் கூறுவதற்கு நான் ஆசைப்படுகிறேன்-முதலிலிருந்து இறுதி வரை நடைபெற்ற எல்லாவற்றையும் உங்களிடம் மட்டுமே கூறவேண்டும் என்று. அதற்குக் காரணம்- என்னுடைய வாழ்க்கை எப்போதும் உங்களுக்குச் சொந்தமானதாக மட்டுமே இருந்திருக்கிறது. ஆனால், இந்த வாழ்க்கையைப் பற்றி நீங்கள் எதுவுமே தெரிந்திருக்கவில்லையே! அதனால்தான் உங்களுக்காக இருக்கும் என்னுடைய இந்த வாழ்க்கையை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்று நான் மிகவும் ஆசைப்படுகிறேன்.

எனினும், என்னுடைய மரணத்தைத் தவிர நீங்கள் எதையும் தெரிந்திருக்கப் போவதில்லை- இந்தக் காய்ச்சல் என்னுடைய இறுதி மூச்சை எடுத்த பிறகு மட்டுமே. இல்லாவிட்டால் விதியின் கொடுமையால் நான் இனிமேலும் வாழ நேர்ந்தால், இந்தக் கடிதத்தை நானே அழித்துவிடுவேன். அதற்குப் பிறகு இதுவரை நான் உங்களிடம் காட்டி வந்த மௌனத்தைத் தொடர்வேன். அதனால் இந்தக் கடிதம் உங்கள் கையில் கிடைத்து விட்டால், நான் மரணமடைந்து விட்டேன் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மரணத்தின் இறுதி நிமிடம் வரை உயிரின் ஒவ்வொரு அம்சத்திலும் உங்களை மட்டுமே காதலித்து, உங்களுக்குச் சொந்தமானவளாக மட்டுமே இருந்த ஒருத்தியின் துக்கங்கள் நிறைந்த கதை இது என்பதை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள்.

இன்னொரு விஷயத்தையும் கூறுகிறேன். இந்தக் கடிதம் எந்தவொரு காரணத்தைக் கொண்டும் உங்களை பயமுறுத்துவதற்காக இருப்பது அல்ல. காரணம்- இனிமேல் எனக்கு எதுவுமே தேவையில்லையே ! அன்போ இரக்கமோ ஆறுதலோ காதலோ எதுவும்... எனினும், நான் விரும்புவது ஒன்றே ஒன்றைத்தான். கேட்டுக் கொள்வதும் அதைத்தான். மிகுந்த கவலையுடன் நான் கூறும் ஒரு வார்ததைகூட பொய்யானது அல்ல என்பதையும், இவை முழுவதும் உண்மையானவை என்பதையும் நீங்கள் நம்பவேண்டும். எந்தவொரு தாயும் தன்னுடைய குழந்தையின் மரணத்திற்கு அருகில் அமர்ந்து கொண்டு பொய்கூற மாட்டாள் அல்லவா? என்னை நம்புங்கள்...

என் வாழ்க்கை ஆரம்பமானதே உங்களைச் சந்திக்க நேர்ந்த பிறகுதான். அதுவரை இருந்து வந்ததை எப்படி வாழ்க்கை என்று கூற முடியும்? உங்களைச் சந்திப்பதற்கான பேரதிர்ஷ்டம் கிடைத்த அந்த புண்ணிய நாளுக்கு முன்பு இருந்த நாட்களைப் பற்றிய ஞாபகம் மூடுபனியால் மூடப்பட்டிருக்கும் காட்சிகளைப் போல இருக்கிறது. அந்த அளவிற்கு அதுவரை இருந்த வாழ்க்கை எனக்கு வெறுப்பைத் தருவதாக இருந்தது.

என்னுடைய பதின்முன்றாவது வயதில்தான் அன்பிற்குரியவரே, நீங்கள் எனக்கு முன்னால் தோன்றுகிறீர்கள். இன்று என்னுடைய இந்தக் கடிதத்தை வாசித்துக் கொண்டிருக்கும் ஃப்ளாட்டில்தான் அப்போது நான் வசித்தேன். நானும் நீங்களும் ஒரே மாடியில் வேறு வேறு இடங்களில் வசித்தோம். உங்களுடைய வீட்டுக் கதவிற்கு நேர் எதிரில் எங்களுடைய வீட்டின் கதவைத் திறந்து போட்டிருப்போம். எனினும், நீங்கள் எங்களை ஞாபகப்படுத்திப் பார்க்கிற அளவிற்கு சிறப்பாகக் கூறுமளவிற்கு எந்தக் காரணமும் இல்லை.

கவலைகளால் சூழப்பட்ட ஒரு அக்கவுண்டன்டின் விதவையான மனைவியும் அவளுடைய வெளிறிப் போய்க் காணப்படும் வளர்ச்சி அதிகமில்லாத சிறுமியான மகளும். யாருடைய கவனத்தையும் ஈர்க்க முடியாத அளவிற்கு அமைதியான ஒரு வாழ்க்கையை நாங்கள் வாழ்ந்து கொண்டிருந்தோம். ஆதரவற்ற குடும்பத்தை வறுமை எந்த அளவிற்கு ஒதுக்கி ஒரு வழி பண்ணியிருக்குமோ, அதைப் போலத்தான் இயல்பாக நாங்கள் அங்கு வாழ்ந்து கொண்டிருந்தோம். எங்களுக்கு விருந்தாளிகள் என்று யாருமில்லை. இன்னும் சொல்லப் போனால், கதவில் வீட்டின் பெயரையோ குடும்பத்தின் பெயரையோ எழுதி வைத்திருக்கவும் இல்லை. அதனால் அந்த விஷயமும் உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அந்த காலம் பதினைந்தோ பதினாறோ வருடங்களுக்கு முன்பு இருந்தது. இப்போது நீங்கள் அவற்றையெல்லாம் நினைத்துப் பார்க்கிற அளவிற்கு எந்தவொரு கட்டாயமும் இல்லை. எனினும், நான் நினைத்துப் பார்க்கும் ஒவ்வொன்றும்...உங்களை முதன் முதலாகப் பார்த்த நாள், நேரம், நிமிடம் அனைத்தும்... எல்லா விஷயங்களும் இப்போதுதான் கடந்து சென்ற நிமிடத்தில் நடந்ததைப் போல என் கண்களுக்கு முன்னால் காட்சி அளிக்கின்றன. அப்படியே இல்லையென்றாலும், நான் அவை எல்லாவற்றையும் எப்படி மறக்க முடியும்? எனக்கு மட்டுமே என்று இருக்கக்கூடிய ஒரு கனவு உலகத்தை... முழுமையாக அந்த அழகும் வசீகரமும் உன்னதமும் கொண்ட நிமிடங்களை... அந்தக் காலத்தை நான் மறப்பதற்கு முயற்சித்தால் கூட, என்னால் அதைச் செய்வதற்கு முடியவில்லையே!


நான் அவை ஒவ்வொன்றையும் ஆரம்பத்திலிருந்து இறுதி வரை கூறுகிறேன். அதை வாசிப்பதற்கு நீங்கள் எந்தச் சமயத்திலும் பொறுமை இல்லாதவராக ஆகிவிடமாட்டீர்களே ! இந்த வாழும் காலம் முழுவதும் இடைவெளிகளே இல்லாமல் உங்களைக் காதலித்து, இந்த நிமிடம் வரை சோர்வே அடையாதவளாக நான் இருக்கிறேன்.

எங்கள் வீட்டிற்கு மிகவும் அருகில் நீங்கள் வந்து வசிப்பதற்கு முன்னால், அங்கு இருந்தவர்கள் தொந்தரவுகள் தரக்கூடியவர்களாக இருந்தார்கள். முழுமையான குடிகாரனான ஒரு மனிதரும் அவருடைய குடும்பமும். அவர்கள் மிகவும் வறுமையின் பிடியில் சிக்கியவர்களாக இருந்தார்கள். எனினும், எங்களுடைய பலவீனமான விஷயங்களை கிண்டல் பண்ணிக் கொண்டிருந்தார்கள். மது அருந்திவிட்டு வந்து மனைவியை உதைத்துக் கொடுமைப்படுத்துவது என்பதும் வீட்டில் இருக்கும் சாமான்களை எறிந்து உடைப்பது என்பதும் அவருடைய நிரந்தர செயல்களாக இருந்தன. ஃப்ளாட்டின் பேரமைதியையும் சாந்தமான சூழ்நிலையையும் பாழடையச் செய்துகொண்டு அடிகளும் அட்டகாசங்களும் அங்கு உரத்துக் கேட்டுக் கொண்டிருக்கும்.

ஒரு நாள் அக்கிரமங்களைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அவருடைய மனைவி ரத்தம் வழிய, அவிழ்த்து விடப்பட்ட கூந்தலுடன் படிகளில் ஓடி ஏறினாள். கெட்டவார்த்தைகள் நிறைந்த திட்டுதல்களை உரத்த குரலில் கூறியவாறு அவர் பின்னால் ஓடி வந்தார். அங்கு வசித்துக் கொண்டிருந்த எல்லாரும் கூட்டமாகக் கூடிநின்றிருந்தார்கள். தொடர்ந்து போலீஸ்காரர்களை அழைக்கப்போகிறோம் என்று பயமுறுத்திய பிறகுதான் அவர் சற்று அடங்கினார்.

அவர்களுடன் எந்தவிதமான பழக்கத்தையும் என் தாய் கொண்டிருக்கவில்லை. அதுமட்டுமல்ல- அங்குள்ள குழந்தைகளுடன் விளையாடுவதற்கும் நட்புடன் பழகுவதற்கும் போகக்கூடாது என்று என்னை தடுத்து நிறுத்தி வைக்கவும்செய்தார். இந்த விலகி நிற்பதன் மீது கொண்ட எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக இருக்க வேண்டும்- அந்தக் குழந்தைகள் சந்தர்ப்பம்கிடைக்கும் போதெல்லாம் என்னை வாய்க்கு வந்தபடி திட்டுவதும் தாக்குவதுமாக இருந்தார்கள். ஒருநாள் பனிக்கட்டியால் எறிந்ததில் என்னுடைய நெற்றியில் ஒருகாயம் உண்டாகி விட்டது.

அந்த ஃப்ளாட்டில் இருந்த எல்லாரும் அவர்களை வெறுத்தார்கள். ஒரு நாள் ஒருதிருட்டுக் குற்றத்திற்காக அந்த இல்லத்தின் தலைவர் கைது செய்ப்பட்டதைத் தொடர்ந்து, அந்தக் குடும்பம் வீட்டை விட்டு வெளியேறியது. ஃப்ளாட்டில் இருந்த எல்லாருக்கும் அது ஒரு நிம்மதியை அளிக்கக்கூடிய விஷயமாக இருந்தது. அதற்குப் பிறகு அந்த வீட்டின் வாசலில் “வாடகைக்குக் கொடுக்கப்படும்” என்ற அறிவிப்பு தொங்கிக் கொண்டிருந்தது. ஆனால், அந்த அறிவிப்பு அதிக நாட்கள் அங்கு தொங்கிக் கொண்டிருக்கவில்லை. அந்த வீட்டை புகழ் பெற்ற ஒருஎழுத்தாளர் வாடகைக்கு எடுத்திருக்கிறார் என்ற தகவலை அங்கு பாதுகாப்பாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தவர் மூலம் என்னால் தெரிந்துகொள்ள முடிந்தது. எது எப்படியோ... புதிதாக வரப்போகும் மனிதர் ஒரு தொந்தரவுதரக்கூடியவராக இருக்க மாட்டார் என்ற விஷயம் அதைத் தொடர்ந்து உறுதியானது.

நான் வாழ்க்கையில் முதல் தடவையாக அன்றுதான் உங்களின் பெயரையே கேள்விப்படுகிறேன்.

அடுத்து வந்த நாட்களில் புதிதாக வரப்போகும் மனிதருக்காக வீட்டைச் சுத்தம்பண்ணும் வேலைகள் நடப்பதைப் பார்த்தேன். சிறு சிறு பணிகளைச் செய்வோர், வர்ணம் பூசுபவர்கள் ஆகியோரின் ஆரவாரங்கள் நிறைந்தனவாக அந்த நாட்கள்இருந்தன. எல்லா ஆரவாரங்களின் இறுதிதான் அந்தக் கொண்டாட்டங்கள் என்று என்தாய் சொன்னாள்.

வீடு வசிப்பதற்கு ஏற்ற வகையில் தயாரானது. அங்கு வரவேண்டிய பொருட்கள் கொண்டு வரப்பட்டபோது அவற்றுடன் நீங்கள் வரவில்லை. எல்லா விஷயங்களையும் மேற்பார்வை பார்த்துக் கொண்டு, சற்று நரை விழ ஆரம்பித்திருந்த, மரியாதை செலுத்த வேண்டும் என்று தோன்றக் கூடிய குணத்துடனும் செயலுடனும் இருந்த மிடுக்கான ஒரு மனிதர் இருந்தார். அவருடைய நடவடிக்கைகளைப் பார்க்கும்போது நாகரீகமான குடும்பங்களில் பணி செய்த பழக்கத்தைக் கொண்டவர் என்பதைப் போலதோன்றியது. அவருடைய பெயர் ஜான் என்பதை நான் தெரிந்து கொண்டேன். ஒழுங்குடனும் திட்டமிடலுடனும் செயல்களைச் செய்து கொண்டிருந்த ஜானின் மிடுக்கும் நடந்து கொண்ட முறையும் அங்கு இருப்பவர்களிடம் ஒரு தனிப்பட்ட மதிப்பை உண்டாக்கின. காரணம்- நகரத்தின் எல்லையில் வசித்துக் கொண்டிருந்த எங்களுக்கு, அந்த அளவிற்கு நேர்த்தியாக செயல்பட்டுக் கொண்டிருந்த ஒரு பணியாளர் புதுமையான ஒரு மனிதராகத் தெரிந்தார்.

ஃப்ளாட்டில் இருந்த பிற பணியாட்களுடன் ஜான் நட்பு காட்டிக்கொண்டிருக்கவில்லை. எனினும், யாரிடமும் வெறுப்பைக் காட்டுவதும் இல்லை. ஜான் என் தாய்க்கு தனிப்பட்ட முறையில், ஒரு இல்லத்தரசியிடம் காட்ட வேண்டிய பணிவையும் மரியாதையையும் அக்கறையையும் வெளிப்படுத்துவதை நான் கவனித்தேன். உங்களைப் பற்றிக் கூற நேரும்போது, அந்தப் பெயரை உச்சரிக்கும் போதே ஜான் காட்டிய பணிவில் இருந்து, உங்கள் மீது அவருக்கு இருக்கும் மரியாதையும் அன்பும் தெரிந்தன. இன்னும் சொல்லப்போனால் ஜான் உங்களின் வெறும் ஒரு பணியாளாக மட்டுமே இருக்க வாய்ப்பில்லை என்றும், ஒருவேளை அவர் ஏதாவது தூரத்து உறவினராக இருக்கலாம் என்றும் கூட தோன்றியது. எனக்கு ஜான் மீது ஈடுபாடு உண்டானதற்கு அதுதான் காரணமாக இருக்கவேண்டும். எப்போதும் உங்களைப் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் பணி செய்வதற்கும் அதிர்ஷ்டம் உண்டான ஆளாயிற்றே என்பதால் ஜான் மீது எனக்குப்பொறாமை தோன்றியது.

முக்கியமே இல்லாத, மிகவும் சாதாரணமான இந்த விஷயங்களையெல்லாம் நான் எதற்காகக் கூறிக் கொண்டிருக்கிறேன் என்று நீங்கள் நினைக்கலாம். கூறுகிறேன். பொதுவாகவே கூச்சப்படும் குணம் கொண்டவளாகவும் காரணமே இல்லாமல் எல்லாவற்றையும் பயத்துடன் அணுகக் கூடியவளாகவும் அந்தக் காலத்தில் நான் இருந்தேன். சிறுமித்தன்மை அப்போதுகூட விடை பெறாமல் இருந்த எனக்குள் நீங்கள் உண்டாக்கிய, என்னால் வார்த்தைகளால் கூற முடியாத பாதிப்பு எந்த அளவிற்குப் பெரியது என்பதை ஒரு குறிப்பாகவாவது என்னுடைய விளக்கம் உணர்த்தாதா என்று நினைத்துத்தான் நான் இவை அனைத்தையும் உங்களிடம் கூறுகிறேன்.

எது எப்படி இருந்தாலும், முதன் முதலாகப் பார்ப்பதற்கு முன்பே உங்கள் மீது பயபக்தி, மரியாதைகள், அன்பு ஆகியவை கலந்த ஒரு தோற்றத்தை என் மனதில் நான் உருவாக்கி வைத்திருந்தேன். அதைப் பற்றி நான் ஆச்சரியமும் சந்தோஷமும்  அடைந்தேன். படிப்பின் மீதும், நிறைய படித்திருப்பவர்கள் மீதும் நகரத்தின் எல்லையில் வசித்துக் கொண்டிருப்பவர்கள் எல்லாருக்கும் பொதுவாகவே ஒரு வகையான வழிபாடு இருந்தது. அந்தக் காரணத்தால் உங்களின் வரவிற்காக அங்கு உள்ள எல்லாரும் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தனர்.

ஒரு மாலை நேரத்தில் நான் பள்ளிக்கூடம் விட்டு வந்தபோது, வீட்டுச்சாமான்களை ஏற்றிக் கொண்டு வந்த ஒரு வண்டி ஃப்ளாட்டையொட்டி இருந்த சாலையில் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தேன். அந்தச் சமயத்தில் உண்டான என்னுடைய ஆர்வத்தையும் சந்தோஷத்தையும் இப்போது விளக்கிக் கூறுவதற்கு என்னால் முடியாது. வண்டியில் கொண்டு வரப்பட்டிருந்த முக்கியமான சாமான்கள் அனைத்தும் அந்த நேரத்தில் மாடியை அடைந்து விட்டிருந்தன. அவை என்னென்ன? எப்படிப்பட்டவை? எல்லாவற்றையும் சற்று காண வேண்டும் என்று மனம் அதிகமாகத்துடித்தது. அதற்காக நான் அந்த வாசலிலேயே நின்றிருந்தேன்.

அந்த வீட்டுச் சாமான்கள் பெரும்பாலும் நான் இதுவரை பார்த்திருந்தவற்றிலிருந்து மிகவும் வேறுபட்டவையாக இருந்தன. அந்தப்பொருட்களின் கூட்டத்தில் இத்தாலிய சிற்பங்களும் அழகான வண்ண ஓவியங்களும் இந்திய விக்கிரகங்களும் இருந்தன. வாசலில் புத்தகங்களின் ஒரு குவியல்இருந்தது.

புத்தகங்களை அக்கறையுடன் தூசு தட்டி, துடைத்து ஜான் எடுத்து வைப்பதை நான் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன். நான் அப்படி அங்கு நின்று கொண்டிருப்பதில் அவருக்கு தனிப்பட்ட முறையில் எதிர்ப்போ உடன்பாடோ- அப்படி ஏதாவது இருப்பது மாதிரியும் தெரியவில்லை. அந்தப் புத்தகங்களை எடுத்து சற்று தொட வேண்டும், தடவிப் பார்க்க வேண்டும் என்று எனக்கு ஆசை உண்டானது என்றாலும், ஏதோ ஒரு உள்பயம் காரணமாக நான் அவற்றை வெறுமனே பார்த்துக் கொண்டு மட்டும் நின்றிருந்தேன். என் கண்கள் அந்தப் புத்தகங்கள் மீது பரவிச் சென்றன. பற்பல அளவுகளிலும், பற்பல மொழிகளிலும் உள்ள புத்தகங்கள் அந்தக் குவியலில் இருந்தன. ஃப்ரெஞ்ச் மொழியிலும் ஆங்கிலத்திலும்... பிறகு...எனக்குத் தெரியாத வேறு பல மொழிகளில் இருந்த புத்கங்களும் இருந்தன. நான் அவற்றையே சற்று நேரம் பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன். எவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டு நின்றாலும் போதும் என்று தோன்றாத நிலையில் அங்கு நின்றுகொண்டிருந்த போது, என் தாய் அழைத்தாள். மனமில்லா மனதுடன் நான் அப்போது அங்கிருந்து நகர்ந்தேன். இன்னும் பார்த்திராத உங்களைப் பற்றி மட்டுமே நான் அன்று முழுவதும் சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

பயன்படுத்திக் கிழிந்த வெளி அட்டைகளைக் கொண்ட சில புத்தகங்கள் மட்டுமே எனக்கென்று சொந்தமாக இருந்தன. வேறு எதை விடவும் அந்தப் புத்தகங்கள் மீது நான் அதிக பிரியம் வைத்திருந்தேன். அவை ஒவ்வொன்றையும் நான் எவ்வளவோ தடவைகள் திரும்பத் திரும்ப வாசித்திருக்கிறேன். உங்களைப் பற்றி நினைத்த போது ஆச்சரியத்தில் உறைந்து போய் விட்டேன்.

எப்படிப்பட்ட புத்தகங்கள்? நீங்கள் அந்தச் சமயத்தில் எவ்வளவு புத்கங்களைப் படித்திருப்பீர்கள்! அதுவும் பல்வேறு மொழிகளில். முழுமையான பண்டிதத் தன்மை கொண்ட மனிதர்! அப்படியெல்லாம் எனக்குள் உண்டான எல்லையைக் கடந்த வழிபாட்டுணர்வால் எந்தச் சமயத்திலும் பார்த்திராத உங்களை நான் மனதிற்குள் கற்பனை செய்து பார்த்தேன். எங்களுடைய பூகோளவியல் ஆசிரியரைப் போல நரைத்த தாடியும் கண்ணாடியும் உள்ள, கருணை மனமும் அமைதியான குணமும் கொண்ட ஒருவயதான மனிதரை நான் மனதில் கற்பனை பண்ணினேன். எனினும், அழகான முகத்தைக்கொண்ட மனிதராக இருப்பீர்கள் என்றுதான் நான் நினைத்தேன். என்னால் அப்படி எப்படி நினைக்க முடிந்தது என்பதற்கான காரணம் எனக்குத் தெரியவில்லை. அன்று இரவு நான் அப்படி உங்களைப் பற்றி ஒவ்வொன்றையும் நினைத்தவாறே தூங்கிவிட்டேன். அந்தத் தூக்கத்தில் நான் உங்களைக் கனவு காணவும் செய்தேன்.

மறுநாளில் இருந்து நீங்கள் அங்கு தங்க ஆரம்பித்து விட்டீர்கள் என்றாலும், அன்று பார்ப்பதற்கான அதிர்ஷ்டம் எனக்குக் கிடைக்க வில்லை. அன்றுமட்டுமல்ல- அதற்கடுத்த நாளும் பார்ப்பதற்கு முடியவில்லை. பார்க்க ஆசைப்பட்டும் நிறைவேற முடியாமற் போன ஏமாற்றம் எனக்குள் இருந்த ஆர்வத்தின் ஆழத்தை அதிகமாக்கியது. இறுதியில் மூன்றாவது நாள்தான் உங்களைச் சற்று என்னால் பார்க்க முடிந்தது. அந்தக் காட்சி என்னை எந்த அளவிற்கு ஆச்சரியம் கொள்ளச் செய்தது தெரியுமா? காரணம்- நான் மனதில் கற்பனை பண்ணி வைத்திருந்த அனைத்தையும் தகர்த்துக் கொண்டு எனக்கு முன்னால் தோன்றிய உங்களின் உருவம் ஒரு வயதான மனிதரின் உருவமாக இல்லை. பிரகாசமான முகத்தையும் அழகான தோற்றத்தையும் கொண்ட ஒரு மனிதரின் உருவமாக இருந்தது.


அன்றும் நீங்கள் இப்போது இருப்பதைப் போலவேதான் பார்ப்பதற்கு இருந்தீர்கள். கடந்து சென்ற காலத்திற்கு உங்களுடைய அந்த அழகிற்கு ஒரு சிறிய அளவில் கூட குறைபாடு உண்டாக்க முடியவில்லை. நான் பார்க்கும்போது தவிட்டு நிறத்தைக் கொண்ட சூட் அணிந்து மிகவும் வேகமாக, அலட்சியமாகப் படிகளில் சற்று இடைவெளிவிட்டு மிதித்து நீங்கள் ஃப்ளாட்டை நோக்கி ஏறிச் சென்று கொண்டிருந்தீர்கள். நீங்கள் தொப்பியைக் கழற்றி கையில் பிடித்திருந்ததால் என்னால் முகத்தைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. உங்களுடைய பிரகாசமான அந்த முகமும் அதற்கேற்ற உங்களின் உருவமும் என்ன காரணத்தாலோ என்னிடம் வார்த்தைகளால் விளக்கிக் கூற முடியாத அளவிற்கு ஏதோ ஒரு உணர்ச்சி வசப்படக் கூடியநிலையை உண்டாக்கின.

வசீகரிக்கக் கூடிய அந்த உருவ அமைப்பும் உற்சாக குணமும் இரண்டு தன்மைகளின் அழகான சங்கமம் என்று என் மனதிற்குள் தோன்றியது. காரணம்- ஒரே நேரத்தில் சாகசச் செயல்களிலும் விளையாட்டிலும் ஆர்வம் கொண்டிருக்கும் உற்சாகமான ஒரு ஆள் இலக்கியக் கலையின் தனிமையும் இனிமையும் உள்ள உலகத்தில் படைப்புத்தன்மை கொண்ட மனிதராகவும் இருந்ததுதான். பொதுவாக, நீண்ட காலம் மிகவும் நெருக்கமாகப் பழகும்போது மட்டுமே புரிந்து கொள்ள முடியக் கூடியது என்றாலும், உங்களுடைய குணத்தின் இந்த இரண்டறக் கலந்த ஒருமைத் தன்மையையும் தனிமை வாழ்க்கையையும் அதன் உண்மையான ஆழத்துடனும் முழுமையுடனும் புரிந்துகொள்ள முடியாத நிலை இருந்தது என்றாலும், எனக்கு ஏதோ புரிந்ததைப் போலதோன்றியது.

உங்களுடைய தனித்துவத்தின் ஒரு பகுதியை மட்டுமே வெளியே காட்டினீர்கள். இன்னொரு பகுதி அப்போதுகூட யாருக்கும் தெரியாத அளவிற்கு ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. அது உங்களுக்கு மட்டுமே தெரியக் கூடிய சொந்தமான பொருளாக இருந்தது. எனினும், அந்த வசீகரிக்கக் கூடிய வெளி அழகிற்குள் இருந்த அழகற்ற விஷயங்களை அன்று ஒரு சிறுமியாக மட்டுமே இருந்த என்னால் புரிந்து கொள்ள முடிந்தது என்பதுதான் என்னுடைய ஆச்சரியமான கண்டு பிடிக்கக்கூடிய ஆற்றல். அந்த நிலையை இப்போது உங்களால், ஒரு நீண்ட காலகட்டத்திற்குப் பிறகு புரிந்து கொள்ள முடிகிறதா? அது எனக்கு எந்த அளவிற்கு ஆச்சரியத்தை அளிக்கக் கூடிய விஷயமாக இருந்தது தெரியுமா? அனைவராலும் விரும்பப்பட்ட, மதிக்கப்பட்ட புகழ் கொண்டவரும் பேரழகு படைத்தவரும் மொத்தத்தில் இளைஞருமான ஒரு எழுத்தாளர் எனக்கு சுயத்துடன் தெரிகிறார் என்ற விஷயம்!

எதுவாக இருந்தாலும் என்னுடைய மிகவும் சிறிய உலகத்தின் தலைவராக நீங்கள் மட்டுமே இருந்தீர்கள் என்பதை நான் தனியாக எடுத்துக் கூற வேண்டியதில்லையே! எனக்குப் பின்னால் நான் விரும்பக் கூடிய ஒரே ஒரு விஷயம், நீங்கள் மட்டுமே என்றாகி விட்டது. என்னுடைய வாழ்க்கை இப்படி உங்களைச் சுற்றி வட்ட மிட்டுக்கொண்டிருந்தபோது, உங்களை, உங்களுடைய செயல்களை, உங்களுடன் தொடர்பு கொண்டவை என்று தோன்றிய எல்லாவற்றையும் கூர்ந்து பார்த்துக் கொண்டிருப்பதுதான் அதற்குப் பிறகு என்னுடைய வேலை என்றாகிவிட்டது. அவை அனைத்தும் உங்கள் மீது நான் கொண்டிருந்த அளவற்ற ஈடுபாட்டை அதிகரிக்கச் செய்தன.

உங்களைப் பார்ப்பதற்கு பல வகைப்பட்ட மனிதர்களும் வந்தார்கள். வருபவர்களின் கூட்டத்தில் இளைஞர்களும் இளம் பெண்களும் மாணவர்கள் என்று தோன்றக் கூடியவர்களும் முக்கிய நபர்களும் இருந்தார்கள். ஒரு நாள் ஒரு ஆப்பரா இசையமைப்பாளரும் உங்களைப் பார்ப்பதற்காக வந்திருந்தார். துடிதுடித்துக் கொண்டிருக்கும் இளமை நிறைந்து ததும்பிக் கொண்டிருக்கும் அழகான கமர்ஷியல் பள்ளி மாணவிகளும் உங்களைப் பார்ப்பதற்காக வந்தனர். நாணம் கொண்டவர்களைப் போல முகத்தைக் குனிந்து கொண்டு அவர்கள் ஃப்ளாட்டை நோக்கி ஏறிச் செல்வதைக்காண முடிந்தது. பார்க்க வருபவர்களில் பெரும்பாலோர் பெண்களாக இருந்தார்கள் என்ற விஷயம் கவனத்தை ஈர்க்கக் கூடியதாக இருந்தது. ஆனால், அந்த விஷயங்கள் எதுவும் என்னை ஆச்சரியம் கொள்ளச் செய்யவில்லை. எது எப்படியிருந்தாலும் வந்திருந்த ஒவ்வொரு பார்வையாளருக்கும் ஏற்றபடி நீங்கள் நடந்து கொண்டீர்கள்.

ஒருநாள் நான் பள்ளிக் கூடத்திற்குப் புறப்படும்போது, குடும்பப் பெண் என்று தோன்றக்கூடிய ஒரு பெண் முகம் முழுவதையும் மறைத்துக் கொண்டு உங்களுடையஃப்ளாட்டிலிருந்து இறங்கி வருவதைப் பார்த்தேன். அப்போதுகூட எனக்கு தனிப்பட்ட முறையில் எதுவும் தோன்றவில்லை. என்னுடைய வயதும் அதுதானே?

நான் இப்படி எப்போதும் கூர்ந்து பார்த்துக் கொண்டிருப்பதற்கு உந்துசக்தியாக எனக்குள் இருந்த மோகம், என் மனதில் அரும்பி விட்டிருந்த முதல் காதலின் துடிப்பு என்பதை நான் அறிந்திருக்கவில்லை.

அந்த நிமிடத்தை நான் இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன். சுய உணர்வுடன் நான் என்னுடைய இதயத்தை உங்களிடம் சமர்ப்பித்த நிமிடம். என்னுடைய ஒரு தோழியுடன் சாயங்கால நேரத்தில் வெறுமனே நடந்து விட்டு வரலாம் என்று வெளியே சென்றேன். நடை முடிந்து திரும்பி வந்து எங்களுடைய வீட்டின் வாசலில் நின்றுபேசிக் கொண்டிருந்தபோது, நீங்கள் ஒரு காரில் வந்து இறங்கினீர்கள். உற்சாகத்துடன் நீங்கள் ஃப்ளாட்டிற்குச் செல்லும் படிகளில் ஏறினீர்கள்.ஃப்ளாட்டின் கதவைத் திறந்து, உங்களுக்கு வணக்கம் கூறவேண்டும் என்று எனக்குதோன்றியது. அதற்காக உங்களுக்கு முன்னால் வேகமாக ஓடியபோது, நம்முடையஉடல்கள் ஒன்றோடொன்று உரசின. அன்பு நிறைந்த ஒரு அழகான பார்வையால் நீங்கள் என்னை பாதத்திலிருந்து தலைவரை சற்று கூர்ந்து பார்த்தீர்கள். ஆனால், அது ஒரு வெறும் பார்வையாக இருக்கவில்லை. மிகமிக மென்மையாக கைகளுக்குள் என்னை வைத்திருப்பதைப் போன்ற இன்ப உணர்வை நான் அனுபவித்தேன்.

கதவைத் திறந்து விட்ட என்னை காதல் உணர்வுடன்... அப்படி கூறுவதுதான் சரியாக இருக்கும்- பார்த்தவாறு மிகவும் விருப்பமான ஒரு ரகசியத்தைக் கூறுவதைப் போல இனிமையுடனும் மென்மையுடனும் நீங்கள் கூறினீர்கள்: “நன்றி... மிகவும் நன்றி!”

அந்த இனிய வார்த்தைகளில் நான் முழுமையாக குளிர்ந்து போய் விட்டேன்.

என்னுடைய தோழி நீங்கள் யாரென்று கேட்டாள். ஆனால், அதற்கு நான் என்ன பதில் கூறுவேன்? என்னுடைய ஆழமான புனித மந்திரமாக ஆகிவிட்ட அந்தப் பெயரைக் கூறுவதற்குக் கூட அப்போது நான் இயலாதவளாக இருந்தேன். “அந்த வீட்டில் வசிப்பவர்” என்று அவளிடமிருந்து தப்பிப்பதற்காகக் கூறினாலும், நீங்கள் என்னைப் பார்த்தபோது என் கன்னங்கள் என்ன காரணத்திற்காக இந்த அளவிற்கு சிவந்தன என்பது அவளுடைய அடுத்த கேள்வியாக இருந்தது. அந்த வார்த்தைகளில் இருந்தது சாதாரண ஒரு சிறுமியின் ஆர்வம் மட்டுமல்ல- அவள் என்னுடைய வாழ்க்கையின் ரகசியங்களுக்குள் நுழைந்து செல்கிறாள் என்பதாக எனக்குத் தோன்றியது. ஆனால், அப்போதும் உங்களைப் பற்றி நினைத்து, எனக்கு நேராக நீங்கள் பார்த்த அந்தப் பார்வையையும் காதல் உணர்வுடன் கூறிய அந்த வார்த்தைகளையும் நினைத்து என் முகம் வண்ணமயமாக ஆனது.

அவள் அப்போது குலுங்கிக் குலுங்கி சிரித்தாள். அந்தச் சிரிப்பில் ஒருகிண்டல் கலந்திருப்பதைப்போல தோன்றியது. அவளை அப்போது கொல்ல வேண்டும் போல எனக்கு இருந்தது. ஆனால், கோபத்தை வெளிப்படுத்த முடியாத அந்தச் சூழ்நிலையில் என்னுடைய தவிப்பு கண்களை பனிக்கச் செய்தன. அவளை அங்கேயே விட்டுவிட்டு, நான் வேகமாக உள்ளே சென்றேன்.

காதல் உணர்வுடன் நீங்கள் என்னை கண்களால் தழுவிய அந்த நிமிடத்திலிருந்துநான் உங்களுக்கு மட்டுமே சொந்தமானவளாக ஆகி விட்டேன். மிகவும் சிறிய காலஅளவு மட்டுமே நீடித்திருந்தது என்றாலும், மனதை மயங்கச் செய்த உங்களின் அந்த அருள் பார்வை துடிப்பும் உற்சாகமும் மென்மைத்தனமும் கொண்டதாக இருந்தது. இறுக அணைத்துக் கொண்டு, உடல் கூசக்கூடிய அளவிற்கு ஆடைகள் ஒவ்வொன்றையும் சிறிது சிறிதாக அவிழ்ப்பதைப்போல, அந்தப் பார்வைகூர்மையானதாக இருந்தது. கன்னித்தன்மை கொண்ட ஒரு இளம் பெண்ணின் கற்பைக்கவர்வதைப்போல... எனினும், கடையில் உங்களுக்கு பொருட்களைத் தரும் இளம்பெண்களுக்கும், கதவைத் திறந்து விடும் பணியாட்களுக்கும், அதேபோல உங்களுடன் தொடர்பு கொண்ட எல்லா பெண்களுக்கும் நீங்கள் அணைப்பைப் போல சுகத்தை அளிக்கும் அந்தப் பார்வையைப் பரிசாகத் தருவதுண்டு என்பதை தாமதிக்காமல் நான் புரிந்து கொண்டேன். அதற்காக அவர்கள் எல்லாரின் உடல்களுடன் சம்பந்தப்பட்ட காம தாகத்தைத் தீர்ப்பதற்கு நீங்கள் விரும்பினீர்கள் என்று நான் அர்த்தப்படுத்தவில்லை. அளவற்ற ஈர்ப்பை உண்டாக்கக் கூடிய பெண்மைத் தனம் உங்களுடைய கண்களை, பார்க்கக் கூடிய நிமிடங்களிலெல்லாம் இனியவையாகவும் உணர்ச்சி வசப்பட்டவையாகவும் மாற்றிவிட்டன என்பதுதான் உண்மை.

பால பருவம் அப்போதும் விடை பெற்று விட்டிராத அந்த பதின்மூன்றாவது வயதில், இப்போது கூறுவதைப் போன்ற இனிய உணர்வுகள் எதுவும் எனக்குத் தெரியாமல் இருந்தன. அதற்கு நேர் மாறாக உங்களுடைய அந்தப் பார்வை நெருப்பால் சுடுவதைப்போல இருந்தது என்றாலும், இனிமையான ஒரு அனுபவத்தை என்னிடம் அது உண்டாக்கியது. அந்த சுகமான கருணை எனக்கு மட்டும்தான் என்று உண்மையாகவே நான் நினைத்தேன்.

முக்கியமான அந்த நிமிடத்தில்தான் என்றென்றைக்கும் உங்களுக்கு மட்டுமே சொந்தமான எனக்குள், சிறுபிள்ளை பிராயத்தின் கள்ளங்கபடமற்ற தன்மையிலிருந்து முற்றிலும் வேறுபட்டதும் வளர்ச்சித் தன்மை கொண்டதுமான பெண்மையின் இன்னொரு நிலைக்கு இதழ் விரித்துக் கொண்டிருந்தது.

அழகான எத்னையோ இளம்பெண்கள் உங்களிடம் காதலை வெளியிட்டிருப்பார்கள். அதைக்கேட்டு உங்களுடைய காதுகள் மரத்துப்போய் விட்டிருக்கும். நானும் உங்களைக் காதலித்தேன். ஆனால், இன்று வரைக்கும் யாரும் உங்களைக் காதலிக்காத அளவிற்கு. தன்னுடைய எஜமான்மீது ஒரு நாய் எந்த அளவிற்கு ஆழமான அன்பை வைத்திருக்கிறதோ... அந்த அளவிற்கு! அடிமையாக இருக்கும் ஒரு மனிதனுக்கு தன்னை உரிமை கொண்டாடும் மனிதரிடம் தோன்றுவதைப் போல குருட்டுத்தனமாக...அதைவிட எவ்வளவோ அதிகமாக.... உங்களை இப்படி இந்த அளவிற்கு வேறு யாரும் காதலித்திருக்க மாட்டார்கள் என்பதை மட்டும் என்னால் உறுதியாகக் கூறமுடியும்.

முற்றிலும் ஒரு சிறுமியின் ஏற்றுக் கொள்ளப்பட்டிராததும் எதிர்பார்த்திராததுமான காதல்... அதில் நிறைய வழிபாட்டுத் தன்மை இருந்தது. அந்தக் காதல் பலம் மிக்க உணர்ச்சிகள் நிறைந்ததாக இருந்தது. பக்குவம் வாய்ந்த ஒரு பெண்ணின், பலவற்றையும் திரும்ப எதிர்பார்க்கும் தன்மை நிறைந்த காதலைவிட புனிதமும் ஆழமும் கொண்ட காதல்.

தனிமையில் இருக்கும் ஒரு இளம் பெண்ணால்தான் அப்படிக் காதலிக்க முடியுமே தவிர, வேறு யாராலும் அப்படிக் காதலிக்க முடியாது. காரணம்- மற்ற இளம்பெண்கள் தங்களுடைய உணர்வுகளை மற்றவர்களுடன் பழகுவதன் மூலம் வெளியே தள்ளிவிடுவார்கள். அவர்களுடைய தனிமைச் சிந்தனைகள் அனைத்தும் அப்படிப்பட்ட ரகசியசிந்தனைகளையும் உணர்வுகளையும் கூறிக் கூறி வெளியேற்றப்படுகின்றன. காதலைப்பற்றி வாசித்தும், கேள்விப்பட்டும், கூறியும், எழுதியும் உண்டான அறிமுகம்அவர்களுக்கு இருக்கும். இயல்பாகவே அவர்களுக்கு அப்போது புனிதமான காதல்என்பது, யாருக்கும் எப்போதும் கிடைக்கக் கூடிய ஒரு விளையாட்டு பொம்மை என்பதைத் தாண்டி எதுவும் இல்லை. அதனால்தான் முதன்முதலாக புகைக்கக் கூடிய சிகரெட்டை பிறர் பார்க்க வேண்டும் என்பதற்காக உயர்த்திப் பிடிக்கும் ஒரு சிறுவனைப்போல அந்த காதல் வயப்பட்டவர்கள் ஆடிக் குதிக்கிறார்கள்.

என்னுடைய விஷயம் அவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது. காதலைப்பற்றி நான் அதுவரை எதுவும் படித்ததில்லை. அதைக் கூறி என் தாய் என்னைத் திட்டிய சூழ்நிலையும் உண்டாகவில்லை. எனக்கோ ரகசியங்களைப் பங்கு போட்டு வைத்துக் கொள்வதற்காக மட்டும் என்று கூறக் கூடிய அளவிற்கு மிகவும் நெருக்கமான சினேகிதிகளும் இல்லை. என் தலையில் எழுதப் பட்டிருக்கும் எழுத்துகளை வரவேற்றுக் கொள்வதைப்போல நான் துள்ளிக் குதித்தேன். எனக்குள் சலனங்கள் உண்டாக்கிய அனைத்தும், எனக்குள் நடந்து கொண்டிருப்பவை அனைத்தும் உங்களிடம் மையம் கொண்டதாகவும், உங்களுடன் தொடர்பு கொண்டவையாகவும் இருந்தன.


என் தந்தை இறந்ததிலிருந்து மிகவும் சிறிய அளவில் கிடைத்துக் கொண்டிருந்த பென்ஷன் பணத்தை வைத்துக் கொண்டு என் தாய் வாழ்க்கைச் செலவுகளைப் பார்த்துக் கொள்ளக் கூடிய சூழ்நிலையில் இருந்தாள். அந்தக் கஷ்டங்களுக்கு மத்தியில் என்னுடைய வளர்ச்சியைப் பற்றியோ உணர்வுகளைப் பற்றியோ சிறிதும் கவனம் செலுத்துவதற்கு என் தாய்க்கு நேரமும் சூழ்நிலையும் அமையவில்லை. தோழிகளின் விஷயத்தை எடுத்துக் கொண்டால், எனக்கு கூறக் கூடிய அளவிற்கு ஆழமான உறவு உண்டாகிற மாதிரி ஒரு தோழிகூட அன்று இல்லை. பிறகு.... உடன்படித்தவர்கள். அவர்களோ தங்களுடைய சூழ்நிலைக்கேற்றபடி பாதியளவு ஊதாரித்தனம் கொண்டவர்களாகவும், விஷயங்களை எந்த அளவிற்குத் தீவிர அக்கறையுடன் தெரிந்து கொள்ள வேண்டுமோ அந்த அளவிற்கு தீவிரமாகத் தெரிந்து கொள்ளக் கூடியவர்களாக இல்லாமலிருந்தார்கள்.

எனக்குள் அரும்பிய தூய்மையான அந்த இளம் உணர்வை சபலமாகவும் சிறுபிள்ளைத்தனமானது என்றும் அவர்கள் கணக்குப் போட்டார்கள். அந்த காரணத்தால் தனிப்பட்ட முறையில் நான் அவர்களை விரும்பவேயில்லை. எனக்குள்துள்ளிக் குதித்துக் கொண்டிருந்த உணர்வுகளும் கனவுகளும் சம வயதைக் கொண்டஇளம் பெண்களைப் போல, வயதிற்கென்றே இருக்கும் வேறு அர்த்தங்களைத் தேடி விலகிச் சென்று விடாமல், நீங்கள் என்ற மையப் புள்ளியில் மட்டும் அழுத்தமாகத் தங்கி நின்றன.

எப்படி, என்ன என்று நான் என்னுடைய மனதில் இருக்கும் அந்த உணர்வைப் பற்றிகூறுவேன்? எந்த உவமை அல்லது வடிவம் உங்களுக்கு அதைப் புரியவைக்கக் கூடிய வல்லமை கொண்டது? ஒன்று மட்டுமே எனக்குத் தெரிகிறது. என் வாழ்க்கை முழுவதும் நீங்கள் மட்டுமே இருந்தீர்கள். இன்னொரு வகையில் கூறுவதாக இருந்தால், என்னுடைய வாழ்க்கையே நீங்கள்தான். உங்களுடன் தொடர்பு கொள்ளாதஎதுவும் என்னைப் பொறுத்த வரையில் நிரந்தரமானவை அல்ல.

என்னுடைய வாழ்வை, என்னையே நீங்கள் புரட்டி மாற்றி விட்டீர்கள். படிப்புஎன்பது எனக்கு அந்த அளவிற்கு முக்கியத்துவம் இல்லாததாகவும், பொதுவாகவே அலட்சியத்தின் உடன் பிறப் பாகவும் இருந்த இடத்தில் நிலைமை முற்றிலும் வேறு மாதிரி ஆகிவிட்டது. நான் படிப்பில் முழுமையான அக்கறை செலுத்த ஆரம்பித்து, வகுப்பில் முதலிடத்தைப் பிடித்தேன். உங்களுக்கு புத்தகங்கள் மீது உள்ள பிரியம், என்னை நள்ளிரவு வரை படிக்கக் கூடியவளாக ஆக்கியது. உங்களுக்கு பியானோமீது இருந்த ஈடுபாடு என்னை அதைப் படிப்பதற்குத் தூண்டியது. உங்களுடைய பார்வையில் அழகாகத் தோன்ற வேண்டும் என்பதற்காக நான்என்னுடைய நிற்பது, நடப்பது, ஆடைகள் அணிவது எல்லாவற்றையும் அழகாகஆக்குவதற்கு முயற்சித்துக் கொண்டிருந்தேன். என் தாயின் ஆடைகளைச் சிறியனவாக ஆக்கியவைதான் நான் பள்ளிக் கூடத்திற்குச் செல்லும்போது அணியும் ஆடைகள். அதில் இருந்த கிழிசலைத் தைத்திருந்தது என்னை அமைதியற்றவளாக ஆக்கியது.அதைப் பார்க்க நேர்ந்தால் உங்களுக்கு என்மீது வெறுப்பு தோன்றி விடுமோ என்ற பயம்தான் அதற்குக் காரணம். நான் அந்த தைக்கப் பட்டிருக்கும் கிழிசல்களை புத்தகப் பையால் மறைத்து வைத்திருப்பேன். குறிப்பாக போகும் போதும், வரும் போதும், ஃப்ளாட்டின் சூழ்நிலைகளில் இருக்கும்போதும்.

அன்று உங்களின் அந்த கண்களால் ஆன அணைப்பை ஏற்ற நிமிடத்திலிருந்து நான் ஒட்டு மொத்தமாக மாறி புரண்டு போய் விட்டாலும், அதற்குப் பின்னால் நீங்கள் என்னைச் சற்று பார்க்கக் கூட இல்லை.

உங்களுடைய ஒவ்வொரு செயல்களையும் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்பதும், உங்களை இரவும் பகலும் எதிர்பார்த்துக் கொண்டு அமர்ந்திருப்பதும் என்னுடைய வேலையாகி விட்டது. உங்களின் வீட்டின் கதவைப் பார்க்கும் விதத்தில்எங்களுடைய கதவில் ஒரு இடைவெளி இருந்தது. அதன் வழியாக நான் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருப்பேன். இதைக் கேட்கும்போது உங்களுக்கு சிரிப்புவரலாம். எனினும், என்னைக் கேலி செய்யக்கூடாது. எங்களுடைய உள்ளறையின்குளிர்ச்சியைப் பொருட்படுத்தாமல், நான் அந்த வாசலில் வந்து நின்றேன். என்தாய்க்கு எங்கே சந்தேகம் தோன்றிவிடப் போகிறதோ என்ற தாங்க முடியாத உள் பயம்இருந்தது. அதனால் நான் கையில் எப்போதும் ஒரு புத்தகத்தைத் திறந்துவைத்திருப்பேன். அந்த மறைந்து கொண்டே பார்க்கும் பழக்கம் ஒருநாள் மட்டும்இருக்கவில்லை. பல வருடங்களாக நான் அதைத் தொடர்ந்து கொண்டிருந்தேன்.எனினும், உங்களை எதிர் பார்த்து கொண்டு அமர்ந்திருந்த அந்த மணித்துளிகளை நினைத்துப் பார்க்கும்போது இப்போதுகூட எனக்கு வெட்கம் உண்டாகவில்லை.

உங்களை எதிர்பார்த்து எதிர்பார்த்து உட்கார்ந்திருக்கும்போது படிகளில்அந்த பூட்ஸின் சத்தம் கேட்கும். அது என்னுடைய காதுகளுக்கு சங்கீதமாகஇருந்தது. உங்களைப் பொறுத்தவரையில் அந்த நிமிடங்கள் எதுவும் வாழ்க்கையில்முக்கியத்துவமான நேரமாகவோ, காலமாகவோ இல்லாமலிருக்கலாம். ஆனால், உங்களின் வாழ்க்கையில், உங்களுக்கு சிறிதளவுகூட விலை மதிப்பற்ற அந்த நிமிடங்கள்என்னை எந்த அளவிற்கு சந்தோஷம் கொண்டவளாக ஆக்கி விட்டிருந்தன! உங்களுடையகைக் கடிகாரத்தின் ஸ்பிரிங்கின் துடிப்பை அறிந்திருந்த அளவிற்குகூடஎன்னுடைய மனதின் துடிப்பை நீங்கள் அறிந்திருக்க வாய்பில்லை. எனினும்,உங்களுடைய ருசி வேறுபாடுகள் அனைத்தையும், உங்களுடன் தொடர்புள்ளஎல்லாவற்றையும் நான் தெரிந்து வைத்திருந்தேன். அணியக் கூடிய ஆடைகள்,அவற்றின் நிறங்கள்... எதற்கு...? ஷூ வரை... பிறகு... உங்களைப்பார்ப்பதற்காக இடையில் அவ்வப்போது வரக்கூடிய நண்பர்களைப் பற்றிகூட எனக்குஒரு மதிப்பீடு இருந்தது.

அந்தக் கால கட்டங்களில், அதாவது- என்னுடைய பதின் மூன்றாவது வயதிலிருந்துபதினாறு வயது வரைக்கும் உள்ள காலத்தில் நான் என்னவெல்லாம் செய்தேன்தெரியுமா? உங்களுடைய அழகான கைகளால் தொட்ட அந்தக் கதவின் கைப்பிடியைத்திரும்பத் திரும்ப முத்தமிடுவது... அந்த உதடுகளுக்கு நடுவில் இருந்துகொண்டு உங்களுடைய முத்தங்களைப் பெற்றவை ஆயிற்றே என்று நினைத்து நீங்கள்புகைத்து வீசி எறிந்த சிகரெட் துண்டுகளைச் சேகரித்து காணக் கிடைக்காதபொருட்களைப் போல பத்திரமாகப் பாதுகாத்து வைப்பது... இப்படி பைத்தியம்பிடித்துவிட்டதோ என்று பிறருக்குத் தோன்றுகிற மாதிரி பல விஷயங்கள்...சாயங் காலத்திற்குப் பிறகு எத்தனையோ முறை ஏதாவது காரணங்களை உண்டாக்கிக்கொண்டு நான் தெருவை நோக்கி வெறுமனே வெளியேறுவேன். எதற்குத் தெரியுமா? உங்களுடைய அறையின் வெளிச்சத்தைப் பார்ப்பதற்காக மட்டுமே.

அப்படி இருக்கும்போது சில வேளைகளில் ஜான் உங்களுடைய சூட்கேஸுடன் கீழேஇறங்கி வந்து கொண்டிருப்பதைப் பார்ப்பேன். அப்போது நீங்கள் ஏதோ தூர இடத்திற்குப் பயணம் புறப்படு கிறீர்கள் என்பதாக நான் நினைப்பேன். அதுஎன்னை எந்த அளவிற்கு கவலைப்படச் செய்தது தெரியுமா? அப்போது இதயம் ஓடாமல்நின்று விட்டதைப் போல எனக்குத் தோன்றும். நீங்கள் அங்கு இல்லாத நாட்களில்என்னுடைய வாழ்க்கையே அர்த்தமற்றதாகவும், தாங்கிக் கொள்ள முடியாததாகவும்,கனம் கொண்டதாகவும் எனக்குத் தோன்றும். என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிஒரு வடிவமும் இல்லாமல் ஏமாற்றத்தின் ஆழமான அறைக்குள் கரைந்து விட்டமனதுடன், நான் அந்த நாட்களில் அலைந்து திரிந்து கொண்டிருப்பேன். என்னுடைய சோர்வையும் எப்போதும் கண்ணீர் நிறைந்து காணப்படும் கண்களையும் என் தாய்பார்த்து விடாமல் காப்பாற்றிக் கொண்டிருப்பதற்கு நான் படாதபாடு பட்டேன்.

என்னுடைய இந்த உணர்வுகள் சம்பந்தப்பட்ட விளக்கங்கள் உங்களுக்கு தரம் தாழ்ந்தவையாகப் படலாம். உங்களைப் பொறுத்த வரையில் அவை எதுவுமே நடந்திராதஒரு காலத்தின் மிகைப் படுத்தப்பட்ட விளக்கங்கள் மட்டுமே. உங்களுக்கு நான்யார் என்பதைப் பற்றிய ஒரு வடிவமே இல்லையென்றாலும், உங்களுடன் செலவழித்தமதிப்புமிக்க அந்த நாட்களும் அதன் ஒவ்வொரு நிமிடங்களும் எனக்கு எந்தஅளவிற்கு மிகவும் விருப்பமானவை தெரியுமா? அந்தக் காலத்தைப் பற்றி எனக்குநினைத்துப் பார்ப்ப தற்கு என்னவெல்லாம் இருக்கின்றன தெரியுமா? அதற்குப் பிறகு நான் அந்த அளவிற்கு உணர்ச்சி வசப்பட்டு இருந்ததேயில்லை. அந்தஅளவிற்கு இனிமையான ஒரு காலத்தைப் பற்றி எதை வேண்டு மானாலும், எத்தனைமுறைகள் வேண்டுமானாலும் கூறினாலும் எனக்குப் போதும் என்றே தோன்றாது. எதைக்கூறினாலும், கூறி முடிக்கவே முடியாது.

உங்களுடைய அந்தக் கால வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் போக்கையும் என்னால்கூற முடியும். எனினும், நான் அவற்றை யெல்லாம் கூறி சோர்வு உண்டாகும்படிச்செய்யவில்லை. ஒரு விஷயத்தை மட்டும் கூறிகிறேன். இதைக் கேட்கும்போது உங்களுக்கு மிகவும் சாதாரணமாகத் தோன்றலாம். எனினும், என்னை கிண்டல்பண்ணக்கூடாது என்பது மட்டும்தான் நான் உங்களிடம் கேட்டுக் கொள்ளும்வேண்டுகோள். காரணம்- என் வாழ்க்கையைப் பொறுத்தவரை விலை மதிப்பற்றதும்நிகரற்றதுமான ஒரு இன்ப உணர்வைப் பற்றி நான் கூறுகிறேன்.

நீங்கள் வீட்டில் இல்லாமலிருந்த ஒரு ஞாயிற்றுக்கிழமை நாள் என்று நினைக்கிறேன். ஜான் உங்களுடைய போர்வையையும் கம்பளி களையும் வெளியே எடுத்துக் கொண்டு வந்து தூசிகளைத் தட்டி விட்ட பிறகு, உள்ளே கொண்டு செல்வதற்கு அவர் மிகவும் சிரமப்படுவதாகத் தோன்றியது. நான் அப்போது உதவுவதாகக் கூறி ஜானின் அருகில் சென்றேன். ஜான் எந்தச் சமயத்திலும் அதை எதிர்பார்க்க வில்லை யென்றாலும்கூட, மறுக்காமல் என்னுடைய உதவியை ஏற்றுக் கொண்டார். உங்களுடைய அந்த வீட்டிற்குள் நான் முதல் தடவையாக நுழைகிறேன். எனக்கு அது ஒரு அற்புத உலகமாக இருந்தது. உங்களுடைய எழுதும் மேஜை, மேஜையில்நீல நிறத்தில் இருந்த பூப்பாத்திரத்தில் நிறைத்து வைக்கப்பட்ட பூக்கள்,சுவரில் தொங்க விடப்பட்டிருந்த மிகவும் அழகான ஓவியங் கள், அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்கள்.... சிறிதும் எதிர்பாராமல் எனக்கு அந்தஅதிர்ஷ்ட தரிசனம் கிடைத்தது. அங்கு பார்த்த ஒவ்வொன்றின் மீதும் எனக்கு ஒருவகையான பக்தி கலந்த ஈடுபாடு உண்டானது. அந்த அரிய அனுபவத்தை உங்களிடம்விளக்கிக் கூறுவதற்கு என்னால் முடியவில்லை. ஜானிடம் கேட்டிருந்தால்,எல்லாவற்றையும் நல்ல முறையில் பார்ப்பதற்கு ஒருவேளை அவர் எனக்கு அனுமதிஅளித்திருப்பார். எனக்குள் ஏதோ ஒரு பயம் இருந்தது காரணமாக இருக்கலாம்...ஆனால், நான் கேட்கவில்லை. ஊணிலும் உறக்கத்திலும் இருந்த என்னுடைய முடிவற்றகனவுகளுக்கு மேலும் உரம் கிடைக்கப் பெற்றேன்.

நான் இந்த அளவிற்குக் கூறுவதற்குப் பின்னால் ஒன்றே ஒன்று இருக்கிறது.இன்று வரை என்னைப் புரிந்து கொண்டிராத நீங்கள் என்னுடைய வாழ்க்கையைஇப்போதாவது புரிந்து கொள்ளக் கூடாதா என்ற ஆசையே அது. காரணம்- என் வாழ்க்கைஎன்ற படரும் கொடிகள் உங்களின் வாழ்க்கை என்ற பெரிய மரத்துடன் இனிமேல் சிறிதும் பிரிக்க முடியாத அளவிற்கு இறுகப் பிணைந்து கிடப்பதுதான்.


உங்களிடம் அந்த இனிய நிமிடங்களைப் பற்றியும், தொடர்ந்து தாமதிக்காமல் வந்தபயத்தைத் தந்த மணிகளைப் பற்றியும் கூறுவதற்கு நான் விரும்பினேன்.

உங்களிடம் ஈடுபாடு கொண்டு, உங்களை மட்டுமே கனவு கண்டு நான் மீதிஎல்லாவற்றையும் மறந்து விட்டேன். என்னுடைய வீடோ என் அன்னையோ நானோ என்னுடைய சிந்தனையின் பகுதியாக இல்லை.

அந்தக் காலத்தில் என் தாயின் ஒரு தூரத்து உறவினரான ஃபெர்டினன்ட் என்றமனிதர் இடையில் அவ்வப்போது எங்களு டைய வீட்டிற்கு வருவார். நடுத்தர வயதைச்சேர்ந்தவரும் மிடுக்கான தோற்றத்தைக் கொண்டவருமான ஒரு மனிதர். இன்ஸ்ப்ரக்கில் அவர் வியாபாரியாக இருந்தார். வீட்டிற்கு வந்தால் எங்களுடன்நீண்ட நேரத்தை அவர் செலவிடுவார். சில நேரங்களில் என் தாயை நாடகங்களைப்பார்ப்பதற்காக அழைத்துச் செல்வார். அப்படிப் பட்ட நேரங்களில் நான் அதிகமானசுதந்திரத்துடன் இருப்பேன் என்பதால், அந்த விஷயத்தில் எனக்கு மிகுந்தசந்தோஷம் இருந்தது. நான் அந்த வகையில் சுதந்திரம் நிறைந்த நிமிடங்களில் உங்களைப் பற்றிய கனவுகளில் மூழ்கி இருப்பேன். அப்போது வேறு எதுவும் என்னைஅலட்டியதே இல்லை.

ஒருநாள் என் தாய் முக்கியமான ஒரு விஷயம் என்ற முன்னறிவிப்பு டன் என்னிடம்பேசினாள். முதலில் என்னுடைய உயிரின் தங்கச் சுரங்கமான உங்களைப் பற்றிய என்ரகசியத்தை என் தாய் கண்டு பிடித்து விட்டாளோ என்று நான் பதைபதைத்துப் போய்விட்டேன். ஆனால், என் தாய் கூற நினைத்தது அது எதுவுமில்லை. சற்றுதயக்கத்துடன் என் தாய் தன்னுடைய அந்த உறவினரைப் பற்றி என்னை இறுகஅணைத்துக் கொண்டு பாசத்துடன் முத்தமிட்டவாறு கூறினாள்.

“அவருடைய மனைவி மரணமடைந்து விட்டாள். இப்போது என்னிடம் திருமண விஷயமாகப்பேசியிருக்கிறார். நான் அதை ஏற்றுக் கொள்வது என்று தீர்மானித்து விட்டேன்.என்னைவிட உன்னை மனதில் நினைத்துத்தான் நான் இந்த தீர்மானத்தையேஎடுத்தேன்.”

என் தாய் அதைக் கூறியவுடன் என்னுடைய மனம் முழுவதும் அமைதியற்றதாக ஆகிவிட்டது. ஆனால், என் தாய் அந்த மனிதரைத் திருமணம் செய்யத் தீர்மானித்ததால் அது உண்டாகவில்லை. அதற்கு மாறாக, உங்களுடன் தொடர்பு கொண்ட சிந்தனையின் விளைவாக உண்டானதுதான் என்னுடைய அப்போதைய அமைதியற்ற நிலை!

“நாம் எப்போதும் இங்கேதானே இருப்போம்?”

நான் பதைபதைப்புடனும் திக்கித் திக்கியும் அதைக் கேட்டேன். என் தாய் கூறியபதில் என்னுடைய கேள்வியையே இல்லாமற் செய்து கண்களில் இருட்டைக் கொண்டுவந்து நிறைக்கவும் செய்தது. காரணம்- திருமணத்திற்குப் பிறகு நாங்கள்ஒன்றாக ஃபெர்டினன்டின் இன்ஸ்ப்ரக்கில் உள்ள வீட்டில் போய் வசிக்கப்போகிறோமாம். நான் சுய உணர்வை இழந்து கீழே விழுந்து விட்டேன். அந்தநினைவுகள் இப்போதும் எனக்குள் ஒரு வகையான நடுக்கத்தை உண்டாக்கிக்கொண்டிருக்கின்றன.

அங்கிருந்து மாறி வசிப்பதைப் பற்றி என்னால் முடிந்த வரைக்கும் நான்எதிர்ப்பைக் காட்டினேன். ஆனால், என்ன காரணத்திற்காக எதிர்க்கிறேன் என்றஎன் தாயின் கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. அதற்கு என்ன காரணம் என்பதைக்கூற என்னால் முடியாதே! அதனால் என்னுடைய எதிர்ப்பு வெறும் ஒருசிறுபிள்ளையின் பிடிவாதம் என்று நினைத்துப் புறக்கணிக்கப்பட்டு விட்டது.

மறுநாளில் இருந்தே வேக வேகமாக வீட்டை மாற்றுவதற்கான ஏற்பாடுகள்ஆரம்பமாயின. ஒவ்வொரு நாள் மாலை நேரத்திலும் பள்ளிக் கூடத்தை விட்டு வீட்டிற்கு வரும்போதெல்லாம் ஒவ்வொரு பொருளும் வீட்டைவிட்டு எடுத்துச் செல்லப்பட்டிருக்கும். அவற்றில் சிலவற்றை ஃபெர்டினன்டின் இன்ஸ்ப்ரக்கில் இருக்கும் வீட்டிற்குக் கொண்டு போயிருப்பார்கள். சிலவற்றை விற்றிருப்பார்கள். நான் நாளாக நாளாக அதிகமான கவலையில் மூழ்கினேன்.

இறுதியில் ஒருநாள் நான் பள்ளிக் கூடத்தை விட்டு வந்தபோது, வீடு காலியாகக் கிடந்தது. முக்கியமான பொருட்கள் நிறைந்த ஒரு இரும்புப் பெட்டியையும்நானும் என் தாயும் தூங்குவதற்குப் பயன்படுத்தும் பொருட்களையும் தவிர மீதிஅனைத்துப் பொருட் களும் வீட்டிலிருந்து கொண்டு போகப்பட்டிருந்தன. அந்த இரவு எங்களுக்கு அங்கு இறுதி இரவாக இருந்தது. பொழுது புலர்ந்தவுடன்புறப்பட வேண்டும்.

என்னைப் பொறுத்த வரையில், நான் வாழ்க்கையே நொறுங்கிப் போனவளைப் போலஆகிவிட்டேன். உங்களின் அண்மை இல்லாமல் என்னால் வாழ முடியாது என்பதுதான் என்னுடைய நிலையாக இருந்தது. காரணம்- என்னுடைய உலகம் என்பதே நீங்கள்தான்.என் மனதில் அப்போது என்ன இருந்தது என்பதை, அந்த உணர்வை உங்களுக்குக் கூறிப் புரிய வைப்பதற்கு என்னால் முடியவில்லை. அதுவல்ல- என் மனதிற்குள் என்ன இருந்தது என்பது எனக்கே தெரியாது என்று கூறுவதுதான் சரியானதாக இருக்கும். ஏமாற்றத் தின் ஆழங்களுக்குள் மூழ்கிப் போன என் மனம் எதையாவது சிந்திப்பதற்குக் கூட முடியாத அளவிற்கு வெறுமையாகி விட்டதைப் போல, அதைப் பற்றி நினைக்கும்போது இப்போது எனக்குத் தோன்றுகிறது- எங்களுடைய அந்த வீட்டைப்போல.

அந்த சாயங்கால நேரத்தில், எதற்காகவோ என் தாய் வெளியே போயிருந்த தருணத்தில் நான் என்னுடைய பள்ளிக்கூட ஆடையி லேயே உங்களுடைய ஃப்ளாட்டின் வாசல் கதவைநோக்கி நடந் தேன். அது ஒரு நடையாக இல்லை. ஒரு வகையில் கூறப்போனால், ஓட்டம்என்றே அதைச் சொல்லலாம். என்னுடைய கைகளும் கால்களும் சோர்வடையப் போவதைப் போலவும் நடுங்குவதாகவும் எனக்கு தோன்றின. இதயம் அசாதாரணமான முறையில்துடித்தது. அந்தக் கால்களில் விழுந்து, வெறும் ஒரு தாசியாகவாவது என்னைஏற்றுக் கொள்ளுங்கள் என்று கெஞ்சிக் கேட்டுக் கொள்ள என் மனம் துடித்தது. நான் அப்படிச் செய்யும்போதுகூட, அதை பதினைந்து வயதுகளே ஆன ஒரு சிறுமியின் பைத்தியக்காரத்தனமான செயல் என்று நீங்கள் கிண்டல் பண்ணுவீர்கள் என்றுமனதிற்குள் பயமாக இருந்தது. ஆனால், என் மனதின் அப்போதைய துடிப்பையும் வேதனையையும் சிறிதளவிலாவது உங்களால் புரிந்து கொள்ள முடிந்தால், எந்தச் சமயத்திலும் நீங்கள் கேலி பண்ண மாட்டீர்கள் என்பதையும் நினைத்தேன்.

பாதி சுய உணர்விலும் பாதி சுய உணர்வற்ற நிலையிலும் இருந்த அந்த சூழ்நிலையில் நான் கதவின் பெல்லை விரல்களால் அழுத்தினேன். உள்ளே பெல் அடிப்பதால் உண்டான அந்த சத்தம் இப்போதும் என் காதுகளில் கேட்டுக் கொண்டிருக்கிறது. அந்த பேரமைதியில் சுவாசத்தை அடக்கிப் பிடித்துக் கொண்டு கதவிற்கு அப்பால் உங்களுடைய காலடிச் சத்தம் கேட்கிறதா என்று நான் காதுகளைத் தீட்டி வைத்துக் கொண்டு நின்றிருந்தேன். என் ரத்தம் நரம்புகளில் உறைந்து விட்டதைப்போல உணர்ந்தேன். மொத்தத்தில் நான் செயலற்றவளாகஆகிவிட்டேன். நிறைய நிமிடங்கள் கடந்து சென்றன. ஆனால், யாரும் கதவைத் திறக்கவில்லை. நீங்கள் வெளியில் எங்காவது போய் விட்டிருக்கலாம். ஜானும்அங்கு இல்லாமல் இருக்க வேண்டும். எது எப்படி இருந்தாலும், ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல வேண்டிய சூழ்நிலை எனக்கு உண்டானது. உங்களு டைய ஃப்ளாட்டிலிருந்து எங்களுடைய ஃப்ளாட்டிற்கு இருக்கும் சிறிய தூரத்தைஅப்போது என்னால் நடந்து கடக்க முடியாததைப் போல தோன்றியது. நான் அந்த அளவிற்கு மிகவும் களைத்துப் போய் விட்டிருந்தேன். திரும்பி வந்து அறையின் ஒரு மூலையில் நான் விழுந்து கிடந்தேன். அப்போதும் என்னுடைய மனதில் பலமான ஒரு தீர்மானம் இருந்தது. என்னை இன்ஸ்ப்ரக்கிற்கு அழைத்துச் செல்வதற்கு முன்பு உங்களை வந்து பார்த்து கெஞ்சிக் கேட்டுக் கொள்ள வேண்டும் என்றஉறுதியான முடிவு...

நான் ஒரு விஷயத்தை இப்போதும் உறுதியாகக் கூறுகிறேன். அப்போது எனக்கு காமஇச்சை கொண்ட உணர்ச்சிகள் எதுவும் இல்லை. அப்படிப்பட்ட ஒரு உணர்ச்சியைப் பற்றி எனக்கு அன்று எதுவுமே தெரியாது என்பதுதான் உண்மை. என் மனதிலும் கனவுகளிலும் நீங்கள் மட்டுமே இருந்தீர்கள். அதைத் தாண்டி எதுவுமே இல்லை.

அன்று இரவு என்னைப் பொறுத்த வரையில் மிகவும் மோசமான இரவாக இருந்தது. என்தாய் தூங்கியாகி விட்டது என்பதை உறுதிப்படுத்திய பிறகு நான் எங்களுடைய வீட்டிற்குள் உட்கார்ந்து கொண்டு, கதவின் இடைவெளி வழியாக நீங்கள்வருகிறீர்களா என்று பார்த்துப் பார்த்துக் காத்திருந்தேன். ஜனவரிமாதத்தின் கடும் குளிரின் கீற்றுகள் கதவுக்கு மத்தியில் இருந்த இடைவெளிகள் வழியாக உள்ளே நுழைந்து வந்து கொண்டிருந்தன. நடுங்கி நடுங்கி நான் முழுமையாகத் தளர்ந்து போய் வெறும் தரையில் விழுந்து விட்டேன். காரணம்-குளிரில் இருந்து தப்பிப்பதற்கு இருந்த ஒரே விஷயம் அணிந்திருந்த ஆடை மட்டுமே. எனினும், உள்ளே போய் போர்த்திக் கொண்டு படுக்க வேண்டும் என்றுஎனக்குத் தோன்ற வில்லை. நான் உறங்கி விட்டால், நீங்கள் வருவதைப் பார்க்கவோதெரிந்து கொள்ளவோ முடியாமல் போய் விடுமோ என்பதுதான் என்னுடைய பிரச்சினையாகஇருந்தது. அந்த தனிமைச் சூழலில் ஒரு உள் பயம் ஆட்டிப் படைத்தது என்றாலும்,நான் இடையில் அவ்வப்போது எழுந்து பார்த்துக் கொண்டிருந்தேன். தீர்மானிக்கப்பட்ட வாழ்க்கையின் முடிவுக்கான ஒரு காத்திருப்பு...

அந்தக் காத்திருத்தல் எவ்வளவு நேரம் நீண்டு போய்க் கொண்டிருந்தது என்பது தெரியவில்லை. எனினும், நேரம் நள்ளிரவைத் தாண்டி விட்டது என்பது மட்டும்உறுதியாகத் தெரிந்தது. இரவின் அந்த இறுதி ஜாமத்தில் எப்போதோ உங்களுடையகாலடிச் சத்தம் கேட்டது. அப்போது என்னுடைய உடலின் குளிர்ச்சி திடீரென்று இல்லாமல் ஆகி விட்டதைப் போல தோன்றியது. உடலில் வெப்பம் உண்டாவதைப் போல...மனம் என்னுடைய கட்டுப்பாட்டை விட்டு விலகி ஓடுகிறது- அந்தக் கால்களில்விழுந்து என்னைக் கைவிட்டு விடாதீர்கள் என்று கெஞ்சுவதற்காக. நான் அப்போதுஎன்ன செய்யப் போகிறேன் என்பதைப் பற்றி எனக்கே கூறத் தெரியவில்லை. நான்மெதுவாக கதவைத் திறந்து பார்த்தேன்- நீங்கள்தான் ஏறி வருகிறீர்கள் என்பது உறுதியாகத் தெரிந்தாலும்.

மேலே ஏறி வந்தது நீங்கள்தான் என்றாலும், நான் முழுமையாக நொறுங்கிப் போய்விட்டேன். காரணம்- உற்சாகம் நிறைந்த ஒரு இனிமையான கவர்ச்சிக்குரலையும், சிரிப்பையும், அதற்கு உங்களின் மெல்லிய வசீகரமான சத்தத்தில்இருந்த பதில்களையும், அணிந்திருந்த ஆடைகள் ஒன்றோடொன்று உரசியதால் உண்டான ஓசையையும் நான் கேட்டேன்.

என் அன்பிற்குரியவரே, உங்களுடன் ஒரு பெண்ணும் இருந்தாள்.


நள்ளிரவைக் கடந்த அந்த இரவின் மீதமிருந்த நேரத்தை நான் எப்படிச்செலவிட்டேன் என்பதை இப்போது என்னால் விளக்கிக் கூற முடியாது. அந்த அளவிற்கு தாங்கிக் கொள்ள முடியாததாகவும் வேதனை நிறைந்ததாகவும் வெறுப்பைஅளிக்கக் கூடியதாகவும் அந்த இரவு எனக்கு இருந்தது.

காலையிலேயே நாங்கள் இன்ஸ்ப்ரக்கிற்குப் புறப்பட்டோம். என்னைக் கொண்டு போனார்கள் என்று கூறுவதுதான் பொருத்தமாக இருக்கும். எதிர்த்து நிற்பதற்கு என்னால் முடியாது அல்லவா?

நான் என் தாயுடனும் சித்தப்பாவுடனும் நீண்ட இரண்டு வருடங்கள் இன்ஸ்ப்ரக்கில் வசித்தேன். அங்கு எனக்கு நானே ஒரு சிறைக் கைதியைப் போலத்தான் வாழ்ந்தேன். தெரியாமல் செய்துவிட்ட ஏதோ தவறுக்குப் பிராயச்சித்தம் செய்வதைப் போல என் தாய் என்னுடைய எந்த வகையான விருப்பங்களையும் நிறைவேற்றித் தருவதற்குத் தயாராக இருந்தாள். என்னை தனிகவனம் செலுத்திப் பார்த்துக் கொள்பவளாகவும் அங்கு என்னுடைய தேவைகளை நிறைவேற்றித் தருவதில் எப்போதும் அக்கறை உள்ளவளாகவும் அவள் இருந்தாள். பொதுவாகவே அமைதியான குணத்தைக் கொண்டவராகவும் மிகவும் குறைவாகவே பேசக்கூடியவராகவும் இருந்த சித்தப்பா என்னிடம் அன்புடனும் பாசத்துடனும் நடந்துகொண்டார்.

இன்ஸ்ப்ரக்கில் பலரும் என்னிடம் நட்புடன் இருப்பதில் விருப்பத்தை வெளிப்படுத்தினாலும், அவர்களிடம் நான் காரணமே இல்லாமல் கோபத்துடன் நடந்துகொண்டேன். அவர்களை நான் வேண்டுமென்றே அவமரியாதையுடன் நடத்தினேன். வேறொன்றுமில்லை. அவர்கள் என்னிடமிருந்து விலகி இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கமாக இருந்தது. காரணம்- உங்களை விட்டு விலகி இருந்தபோது நான் எந்தச் சமயத்திலும் சந்தோஷத்துடன் இருக்க வேண்டும் என்று விரும்பியதே இல்லை. அதற்கு பதிலாக என்னை நானே துன்பப்படுத்திக் கொண்டும் தனிமையில் இருந்து கொண்டும் வாழ்க்கையை ஓட்டினேன்.

என் தாயும் சித்தப்பாவும் எனக்காக வாங்கிய விலை மதிப்பு கொண்ட ஆடைகள் எதையும் நான் அணியவேயில்லை. அவர்கள் தொடர்ந்து அழைத்தும், இசை நிகழ்ச்சிகளுக்கோ நாடகங்களைப் பார்ப்பதற்கோ உல்லாசப் பயணங்களுக்கோ நான் எந்தச் சமயத்திலும் போனதே இல்லை. மிகவும் அரிதாகவே நான் வீட்டை விட்டுவெளியே செல்வேன். எதற்கு... ? நீங்கள் நம்புவீர்களா என்று தெரியாது. நான் இரண்டு வருடங்கள் வாழ்ந்த இன்ஸ்ப்ரக்கில் விரல்களால் எண்ணக் கூடிய அளவிற்கே தெருக்களை நான் பார்த்திருக்கிறேன்.

உங்களைப் பார்க்க முடியவில்லையே என்ற கடுமையான கவலையில் எல்லாவிதமான சந்தோஷங்களையும் தியாகம் செய்து, பெரும்பாலான நேரங்களில் அழுது கொண்டும் மனதிற்குள் வேதனைப்பட்டுக் கொண்டும் இருப்பதுதான் என்னுடைய பொழுது போக்கு என்றாகி விட்டது. அப்படி நடந்து கொள்வதில் மட்டும் தான் நான் அப்போது சந்தோஷத்தைக் கண்டேன். உங்களுக்காகவே வாழ்வது என்பதுதான் என்னுடைய வாழ்வின் விருப்பமாக இருந்தது. அதிலிருந்து எந்த சக்தியாலும் என்னைப் பிரிப்பதற்கு முடியவில்லை. இன்னும் சொல்லப் போனால்- நான் அதற்கு அனுமதிக்கவில்லை. நானே உண்டாக்கிக் கொண்ட என்னுடைய தனிமைச் சூழலில் இருந்து கொண்டு உங்களைப் பற்றிய நினைவு களில், அது அர்த்தமே இல்லாதது என்பதைத் தெரிந்திருந்த போதும், அந்த நினைவுகளில் உங்களைப் பார்த்துக்கொண்டே வாழ்ந்த ஒவ்வொரு நிமிடத்தையும் மனதில் திரும்பத் திரும்பஉயிர்ப்புடன் கொண்டு வந்தேன். அவை அனைத்தும் நேற்று நடந்தவை போல இருந்தன.

இன்ஸ்ப்ரக்கில் உங்களுடைய புத்தகங்கள் அனைத்தையும் நான் வாங்கிவாசித்தேன். ஒரு முறை அல்ல. பல முறைகள். அப்படி திரும்பத் திரும்ப வாசித்தகாரணத்தால், எப்படிப்பட்ட உறக்கத்திலிருந்து எழுப்பிக் கேட்டாலும்,உங்களுடைய எந்தப் புத்தகத்திலிருந்தும் எந்தப் பகுதியை வேண்டுமானாலும் என்னால் கூற முடிகிற அளவிற்கு அனைத்து விஷயங்களும் எனக்கு மனப்பாடங்களாகஆயின. உங்களுடைய வார்த்தைகள் எனக்கு பைபிளின் வசனங் களாக இருந்தன. இந்தநீண்ட பதின்மூன்று வருடங்களுக்குப் பிறகும் அது அப்படியேதான் இருக்கிறது.அன்று உங்களின் பெயர் ஏதாவது பத்திரிகையில் பிரசுரமாகியிருப்பதைப் பார்க்கநேர்ந்தால், நான் சந்தோஷத்தில் மதி மறந்து விடுவேன்.

இப்போது நீங்கள் அந்தப் படிகளில் வேகமாகவும் உற்சாகத்து டனும் மிதித்துஏறிக் கொண்டிருப்பீர்கள். இப்போது அந்த வாசல் கதவின் கைப் பிடியைப்பிடித்துத் திருப்பிக் கொண்டிருப்பீர்கள். இப்போது உள்ளே இருக்கும் ஹாலில் போடப்பட்டிருக்கும் அழகான இருக்கையில் அமர்ந்து கொண்டிருப்பீர்கள். இப்படிநானே படைத்துக் கொண்ட என்னுடைய தனிமைச் சூழலில் உட்கார்ந்து கொண்டு,வியன்னாவில் இருக்கும் உங்களின் ஒவ்வொரு நிமிடத்தையும் பற்றி கற்பனைபண்ணிக் கொண்டே இருந்தேன்.

என்னுடைய எல்லையற்ற காதலையும் மரியாதையும் அன்பையும் அடையாளம் கண்டுபிடிக்காத- என்னுடைய கவலை, ஏக்கம் ஆகிய வற்றில் ஆழத்தை ஒரு கனவில்கூட எந்தச் சமயத்திலும் அறிந்திராத உங்களிடம் நான் எதற்காக இவற்றையெல்லாம் கூறுகிறேன் என்று எனக்கே தெரியவில்லை.

இன்ஸ்ப்ரக்கில் யுகங்களைக் கடந்ததைப் போன்ற இரண்டு வருடங்கள் கடந்து சென்றபிறகு, நான் அந்த பழைய சிறுமியாக இருக்கவில்லை. நான் அப்போது இனிய பதினேழுவயதைத் தாண்டி, பதினெட்டை அடைந்து விட்டிருந்தேன். வழியில் இளைஞர்கள்என்னையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டி ருப்பார்கள். ஆனால், அந்த விஷயம் என்னிடம் எந்தச் சமயத்திலும் சந்தோஷத்தை அளிக்கவில்லை என்பது மட்டுமல்ல-அமைதியற்ற தன்மையை உண்டாக்கவும் செய்தது. மற்ற இளம் பெண்களைப் போல என்னால் எப்படி அதையெல்லாம் ரசித்துக் கொண்டிருக்க முடியும்? அப்படி இருப்பதைத்தவிர, யாரையாவது காதலிக்கவோ மனதில் நினைத்துக் கொண்டிருக்கவோ என்னால் எப்படி முடியும்? என்னுடைய உயிரையும் ஆன்மாவையும் உங்களிடம் அர்ப்பணித்து விட்டவள் அல்லவா நான்? அதனால் யாராவது என்னிடம் காதல் உணர்வுகளை வெளிப்படுத்தினால், அவை என்னைப் பொறுத்த வரையில், பொறுத்துக் கொள்ள முடியாத விஷயங்களாகத் தோன்றின. எந்தச் சமயத்திலும் மன்னிப்பு அளிக்கமுடியாத குற்றத்தை அவர்கள் என்னிடம் செய்வதாக நான் உணர்ந்தேன்.

உங்கள் மீது நான் கொண்டிருந்த காதலுக்கு உயர்வோ தாழ்வோ எதுவும் உண்டாகவில்லை. முதலிலேயே அது உச்ச நிலையை அடைந்து விட்டது அல்லவா? அப்போதுஎன்னுடைய உடல் வளர்ச்சி, அதுவரையில் எனக்குத் தெரியாமலிருந்த உணர்ச்சிகளை என்னிடம் கிளர்ந்தெழச் செய்யத் தொடங்கியது. அப்போது புத்தம் புது இளமை பக்குவமடைந்து தளிர் விட்டு வளரச் செய்த, உடல் சம்பந்தப்பட்ட காமத்தின் வெளிப்பாடுகளை நான் அறிந்தேன். அது இளம் பெண்ணும் புத்துணர்ச்சி கொண்டவளுமாக இருந்த ஒருத்தியின் காமம் கலந்த உள் தாகத்தை என்னிடமும்உண்டாக்கியது.

முன்பு அந்தச் சிறுமிக்கு, உங்களைப் பார்ப்பதற்காக கண்களை விழித்துக்கொண்டும், உங்களுடைய வீட்டு வாசல் கதவில் மணிச் சத்தம் எழுப்பமுயற்சித்துக் கொண்டும், ஏமாற்றமடைந்து கொண்டும் இருந்த ஒரு இளம்பெண்ணுக்கு புரிந்து கொள்ள முடியாமலிருந்த காம இச்சைகள், அப்போது என்னுடையசந்தோஷம் தரும் மிகப் பெரிய மோகங்களாக ஆயின. நான் என்னுடைய அழகான உடலைநீங்கள் பார்க்க வேண்டும் என்று ஏங்கினேன். என்னுடைய தோழிகளைப் பொறுத்தவரையில், வெறும் ஒரு கூச்ச குணம் கொண்ட பெண்ணாக இருந்த என்னை, என்னுடைய மனதிற்குள் உண்டாக் கிய உறுதியான முடிவு, உங்களுடன் உடலுறவு கொள்ள வேண்டும் என்ற என்னுடைய அந்த லட்சியத்திற்குள் குதிக்கச் செய்தது.

லட்சியத்தை நிறைவேற்றுவதற்காக நான் வியன்னாவிற்கு திரும்பவும் வந்தாகவேண்டும். ஆனால், அந்தத் திரும்ப வருதல் அந்த அளவிற்கு எளிதாக இல்லை.காரணம்- என் தாய், சித்தப்பா ஆகியோரின் பார்வையில் நான் திரும்பிச் செல்லவேண்டிய அவசியமில்லை என்றிருந்தது. என் மனதிற்குள் இருக்கும் விஷயங்கள்அவர்களுக்குத் தெரியாதே! அதனால் நான் அறிவே இல்லாமல் பிடிவாதம் பிடித்துக் கொண்டிருக்கிறேன் என்று அவர்கள் கூறினார்கள். ஆனால், நான் என்னுடைய நிலையிலிருந்து பின் வாங்கவில்லை. எனக்கென்று ஒரு தொழில் செய்து வாழவேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பமென்றும், என்னுடைய அந்த முடிவில்நான் உறுதியாக நின்று கொண்டிருக்கிறேன் என்றும் நான் அவர்களிடம் கூறினேன்.அதற்காக நான் வியன்னாவிற்கு திரும்பச் செல்ல வேண்டுமென்று அவர்களிடம் கூறினேன். தேவைக்கு பணக்காரரான சித்தப்பா இருக்கும்போது ஒரு தொழில் செய்துநான் வாழ வேண்டிய அவசியமில்லை என்பது அவர்களுடைய எண்ணமாக இருந்தது.இறுதியில் என்னுடைய கடுமையான பிடிவாதத்திற்கு அவர்கள் தலையாட்டவேண்டியதிருந்தது. அதைத் தொடர்ந்து தன்னுடைய ஒரு உறவினருக்குச் சொந்தமாக வியன்னாவில் இருந்த ஆடைகள் உற்பத்தி செய்யப்படும் தொழிற்சாலையில் எனக்குசித்தப்பா ஒரு வேலையை ஏற்பாடு செய்து தந்தார்.

ஒரு குளிர்காலத்தில் வியன்னாவிற்கு நான் திரும்பவும் வந்தேன். இரண்டுவருடங்கள் நீடித்திருந்த கடுமையான விரகதாபத்திற்கும், துயரத்திற்கும்,ஏக்கங்களுக்கும் இறுதியாக மூடுபனி திரைச்சீலை அணிவித்த ஒரு மாலை வேளையில்நான் வியன்னாவில் கால்களை வைத்தேன். அங்கு முதலில் நான் எங்கு வந்தேன்என்று உங்களால் நினைக்க முடிகிறதா? புகை வண்டி நிலையத்திலிருந்து நான் வேகமாகப் புறப்பட்டேன். அங்கு நான் பயணம் செய்தபோது, ட்ராம் எந்த அளவிற்குமெதுவாக நகர்ந்து கொண்டிருக்கிறது என்று எனக்குத் தோன்றியது. அந்தஅளவிற்கு நான் அவசரத்தில் இருந்தேன். உடலுக்கு முன்பே மனம் அங்கு அடைந்துவிட்டிருந்தது. நம்முடைய அந்த ஃப்ளாட்கள் இருந்த தெருவை நான் நெருங்கிக்கொண்டிருந்தேன். தூரத்தில் நின்று கொண்டே உங்களுடைய அறையில் பார்த்தவெளிச்சம் என்னுடைய மனதில் சந்தோஷம், ஆனந்தம் நிறைந்த ஆயிரம் திரிகள்கொண்ட விளக்கை ஏற்றி வைத்தது.

அதுவரை நான் வாழ்ந்த, எனக்கு முற்றிலும் அறிமுகமில்லாத நகரமும் சந்தோஷமற்றவாழ்க்கையும் அந்தக் கணமே மறைந்து போய் விட்டன. அங்கு வாழ்ந்த வருடங்களில்நான் இழந்த அன்பும் சந்தோஷமும் திரும்பவும் வந்து விட்டதைப்போல நான்உணர்ந் தேன். என்னிடம் அதுவரை இல்லாமலிருந்த உயிரின் துடிப்புகள் எழுவதைப்போல எனக்குத் தோன்றியது.

நீங்கள் உடல் ரீதியாக மிகவும் அருகில் இருக்கிறீர்கள் என்ற உண்மை அளித்தசந்தோஷத்தை நான் மீண்டும் உணர்ந்தேன். அது என்னைத் திரும்பவும் பிறக்கச்செய்தது. என்னுடைய விழிகளுக்கும் உங்களுக்குமிடையே வெறும் ஒரு கண்ணாடித்துண்டின் தூரம் மட்டுமே இருக்கிறது என்ற சூழ்நிலை வந்தபோது, அதுவரை நான்உங்களிடமிருந்து எந்த அளவிற்கு விலகி இருந்திருக்கிறேன் என்பதைத் தாங்கமுடியாத பயம் கலந்த எண்ணங்களுடன் நான் நினைத்துப் பார்த்தேன். அதேநேரத்தில், அந்தத் தூரங்களைப் பற்றி நான் உடனடியாக மறக்கவும் செய்தேன்.காரணம்- இப்போது நான் உங்களுக்கும், நீங்கள் எனக்கும் நெருக்கமாகஇருப்பதுதான்.

அதோ தெரிவது உங்களுடைய வீடு. அங்கு என்னுடைய அன்பிற்குரிய நீங்கள்இருக்கிறீர்கள். நானோ இமைகளை மூடாமல் அந்த இடத்தில் பார்த்துக் கொண்டுநின்றிருப்பதே புண்ணியமான ஒரு விஷயம் என்ற ஒரு ஆனந்த நினைப்புடன்இருந்தேன். என்னைப் பொறுத்த வரையில் அதைத் தாண்டி வேறு என்ன வேண்டும்?

வெளியே மூடுபனியின் குளிர் நிறைந்த போர்வையும் மேலே வானத்தின் கரும்போர்வையும் இருந்த அந்த இரவு வேளையில் உங்களின் அறையில் விளக்கு அணைவதுவரை அங்கேயே அமைதியாக நான் பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன். அதற்குப்பிறகுதான் நான் தங்கக் கூடிய இடத்தைத் தேடியே புறப்பட்டேன்.

ஆடைகள் உற்பத்தி செய்யப்படும் தொழிற்சாலையில் என்னுடைய வேலை நேரம்சாயங்காலம் ஆறு மணி வரை என்றிருந் தது. அங்கு நிலவிக் கொண்டிருந்த சத்தங்கள் நிறைந்த சூழ்நிலை என்னுடைய மன ஓட்டங்களுக்கு திரை பிடிப்பதற்குஉதவியாக இருந்தது. அந்த காரணத்தால் நான் அந்த வேலை செய்யும் இடத்தைவிரும்பினேன். வேலை நேரம் முடிந்தவுடன் நான் நீங்கள் இருக்கும் இடத்தைநோக்கி ஓடி வந்தேன். வேறு எதற்காகவும் இல்லை என்றா லும், உங்களைச் சற்றுபார்க்க முடியாதா என்ற தவிப்புடன். அவ்வளவுதான். உங்களுடையஃப்ளாட்டிலிருந்து அப்படியொன்றும் தூரமில்லாத இடத்தில் நின்று கொண்டு நான்அப்படியே பார்த்துக் கொண்டு இருப்பேன். அந்த மாதிரி நிற்பது என்ற விஷயம்எல்லா சாயங்கால வேளைகளிலும் என்னுடைய வழக்கமான செயலாக ஆனது- ஒரு தவத்தைப்போல.

நிலைமை அப்படி இருக்கும்போது, ஒரு வாரம் கடந்த பிறகுதான், சிறிதுகூட எதிர்பாராமல் நான் உங்களைப் பார்த்தேன். நான் என்னுடைய வழக்கமான செயலாக இருந்த “பார்த்துக் கொண்டு நிற்பதில்” உங்களுடைய சாளரத்தை நோக்கிக் கண்களைச் செலுத்தியவாறு நின்று கொண்டிருந்தேன். அப்போது சாலையில் சற்றுதூரத்தில் தெருவைக் கடந்து நீங்கள் வந்து கொண்டிருப்பதை நான் பார்த்தேன்.உங்களைப் பார்த்த நிமிடத்தில், பலவகைப்பட்ட உணர்ச்சிகளின் உந்துதலில் என்னசெய்வது என்று தெரியாத நிலைக்கு நான் ஆளாக்கப்பட்டு விட்டேன். ஒரு நிமிடத்தில் நான் அந்த பதின்மூன்று வயது சிறுமியாக மாறிவிட்டதைப் போல எனக்குத் தோன்றியது. என் கன்னங்கள் சிவந்து விட்டன. உடம் பெங்கும் மெல்லியஒரு நடுக்கம் பரவுவதைப்போல நான் உணர்ந்தேன்.

அந்தக் கண்களைச் சற்று பார்க்க வேண்டும் என்று நான் விரும்பி னாலும்,என்னால் முடியவில்லை. நான் தலையைக் குனிந்து கொண்டி ருந்தேன். அப்போதுஉங்களைக் கடந்து நான் மிகவும் வேகமாக நடந்தேன். ஆனால், அப்படி நடந்துகொண்டதை நினைத்து பிறகு எனக்கு கவலையும் வெட்கமும் உண்டாயின. எனக்கு என்னவேண்டும் என்பது மனதிற்குள் இருந்த தாகத்திற்கும் மோகத்திற்கும்தெரியுமென்றாலும், அதற்குப் பொருத்தமற்ற விதத்தில் நடந்து கொண்டதற்காகநான் என்னையே திட்டிக் கொண்டேன்.

எது எப்படி இருந்தாலும், ஒரு விஷயத்தில் நான் மிகவும் உறுதியாக இருந்தேன். நீண்ட இந்தப் பிரிவிற்குப் பிறகும் என்னை நீங்கள் அடையாளம் கண்டு, தெரிந்து கொள்ள வேண்டும். அதைத் தொடர்ந்து காதலிக்க வேண்டும். அது என்னுடைய ஆன்மாவின் மோகமாக இருந்தது. ஆனால், அதற்குப் பிறகு வந்த நாட்கள் ஒவ்வொன்றிலும், உடலைத் துளைத்துக் கொண்டு எலும்புகளில் குத்திக் கொண்டிருக்கும் குளிர்ந்த காற்றில்கூட நான் அதே இடத்தில் நின்றிருந்தாலும், நீங்கள் என்னைப் பார்த்ததேயில்லை. அந்த மாதிரி காத்துக்கொண்டும் பார்த்துக் கொண்டும் நின்றிருந்தாலும் பல நேரங்களில் நான்நின்றிருந்தது வீண் என்றாகிப் போனது. காரணம்- நீங்கள் நண்பர்களுடன்இறங்கிச் செல்வதைத்தான் பெரும்பாலும் பார்பபேன். ஒன்றிரண்டு முறைகள்உங்களுடன் ஒரு இளம்பெண்ணும் இருந்தாள். அவள் உங்களுடைய கைகளைத் தன்னுடையகையில் சேர்த்து வைத்துக் கொண்டு, சற்று மிடுக்குடன் உங்களுடன் சேர்ந்துநடந்த அந்தக் காட்சி என்னை அமைதியற்றவளாக ஆக்கியது. சாதாரணமாக எனக்குஅப்படித் தோன்ற வேண்டிய அவசியமே இல்லை. ஏனென்றால், அதைப் போன்ற எத்தனையோபெண்கள் உங்களைப் பார்ப்பதற்காகவும் வருவதையும் போவதையும் நானேபார்த்திருக்கிறேன். ஆனால், அன்று பார்த்த அந்தக் காட்சியை என்னால்பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தாங்க முடியாத ஒரு வேதனையும் அந்தப்பெண்ணிடம் இனம் புரியாத ஒரு பகையுணர்வும் எனக்கு உண்டானது. அவளுடையநடவடிக்கைகள், உங்களுடன் அவளுக்கு இருக்கும் உடல் ரீதியான தொடர்பால்உண்டான சுதந்திரத்தை வெளிப்படுத்துவதாகத் தோன்றின.


முந்தைய நாட்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது அப்படி யெல்லாம்தோன்றியதற்குக் காரணம் உண்மையிலேயே எனக்குத் தெரியும். உங்கள்மீது எனக்குஇருக்கும் உணர்வின் அடுத்த கட்ட வளர்ச்சியே அது. அந்தக் காட்சி உண்டாக்கியகாயத்தின் எதிர் விளைவு என்பதைப்போல, சாயங்காலம் நான் போய் நிற்பதைஒருநாள் வேண்டாம் என்று தீர்மானித்தேன். ஆனால், அந்த எதிர்ப் பைக்காட்டியது என்னை எந்த அளவிற்கு நொறுங்கச் செய்தது தெரியுமா? அங்கு நான்போய் நிற்காத அந்த மாலைநேரம் என்னிடம் உண்டாக்கிய வெறுமை அந்த அளவிற்குஇதயத்தைப் பாதிக்கக் கூடியதாக இருந்தது. தாங்கிக் கொள்ள முடியாத அந்தசாயங்கால நேரத்திற்குப் பிறகு மீண்டும் அடுத்த நாள் வழக்கம்போல நான் அங்குசென்றேன். முந்தைய நாள் நான் வெளிப்படுத்திய எதிர்ப்பையொட்டி எனக்குள் ஒருவகையான குற்றவுணர்வு உண்டானது.

அன்றும் வழக்கம்போல் ஏமாற்றங்கள் மட்டுமே பதிலுக்கு கிடைக்கக்கூடிய அந்த”நின்று கொண்டிருத்தலில்” நான் நின்று கொண்டிருந்தேன். தூரத்திலிருந்துநீங்கள் நடந்து வருவதைப் பார்த்தேன். அந்த நேரத்தில் மனதில் உண்டானசலனங்களைக் கடப்பதற்கு நான் மிகவும் சிரமப்பட வேண்டியதிருந்தது. என்றாலும், நான் அங்கிருந்து நகராமல் நின்றிருந்தேன். என்னுடைய மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு வாகனம் சாலையை அடைத்துக் கொண்டுநின்றிருந்த காரணத்தால், எனக்கு மிகவும் அருகில் கடந்து செல்ல வேண்டியசூழ்நிலை உங்களுக்கு உண்டானது. அப்போது இயற்கையாகவே உங்களுடைய கண்கள்என்மீது சற்று திரும்பின. அது எந்தச் சமயத்திலும் நீங்கள் என்னை அடையாளம்கண்டு கொண்டதால் நடந்த ஒன்றல்ல. மாறாக, மற்ற பெண்களை நீங்கள்பார்க்கக்கூடிய விதத்தில், சதைக்குள் ஆழமாக இறங்கக்கூடிய ஒரு பார்வை-அவ்வளவுதான். ஆனால், எனக்குள் அந்தப் பார்வை பழைய நினைவுகளின் மின்னல்வெளிச்சத்தை உண்டாக்கியது.

சில வருடங்களுக்கு முன்பு, உங்களுடைய ஒரு பார்வைதான் ஒரு பதின்மூன்று வயதுகொண்ட சிறுமியின் மனதைத் தொட்டு எழச் செய்து, அவளை ஒரு பெண்ணாகவும்காதலியாகவும் ஆக்கியது. பெண்ணின் மென்மையான உணர்ச்சிகளைத் தட்டி எழச்செய்து, அவளை இறுக அணைத்துக் கொண்டு, அணிந்திருக்கும் ஆடைகள்ஒவ்வொன்றையும் மெதுவாக... மெதுவாக... அவிழ்த்தெடுப்பதைப் போன்ற இன்பஉணர்வை வாரி இறைக்கக்கூடிய பார்வை.

உங்களுடைய அந்த பொன்னென ஒளிர்ந்து கொண்டிருந்த கண்கள் சற்று என்னைப் பார்த்துக் கொண்டிருக்க, நான் என்னு டைய கண்களை பின்னோக்கி இழுக்க முயற்சித்துக் கொண்டிருந்தேன். குறிப்பிட்டுக் கூறக்கூடிய வகையில் எதுவும் நடக்காததைப் போல நீங்கள் நடந்து மறையும்போதும் என்னுடைய இதயம் வேகமாகத்துடித்துக் கொண்டிருந்தது. அதனால் நான் என்னுடைய வேகத்தைக் குறைக்கவேண்டியதிருந்தது. எனினும், திரும்பிப் பார்க்காமல் இருக்க என்னால் முடியவில்லை. பார்க்கும்போது, நீங்கள் அங்கே நின்றவாறு என்னையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தீர்கள். அந்த முக வெளிப்பாட்டிலிருந்து நான் ஒருவிஷயத்தைப் புரிந்து கொண்டேன். உங்களுக்கு என்னை அடையாளம் கண்டு பிடிக்கமுடியவில்லை. அப்போது மட்டுமல்ல. பிறகு எந்தச் சமயத்திலும் நீங்கள் என்னைஅடையாளம் காணவே இல்லையே!

எனக்கு அப்போது தோன்றிய கடுமையான ஏமாற்றத்தின் ஆழத்தைப் பற்றி இப்போதுநான் என்ன கூறுவது? அந்த அளவிற்கு அது ஆழமாக இருந்தது. எப்போதும் என்னுடைய வாழ்வின் போக்குகளின் கிடைக்கும் பலவகைப்பட்ட அனுபவங்களின், எண்ணற்ற ஏமாற்றங்களின் வெறுமொரு ஆரம்பம்.

நான் இன்ஸ்ப்ரக்கில் இருந்தபோது உங்களைப் பற்றி மட்டுமே உள்ள சிந்தனைகளில் சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தேன் என்று கூறினேன் அல்லவா? அப்போதைய என்கனவுகளில் முக்கியமானது வியன்னாவில் நடைபெற்ற நம்முடைய சந்திப்பைப்பற்றியதுதான். மனதின் அவ்வப்போதைய நிலைகளுக்கு ஏற்றாற்போல சிந்தனைகளும்மாறிக் கொண்டே இருந்தன. சில நேரங்களில் பைத்தியக் காரத்தனமானசிந்தனைகள்... வேறு சில நேரங்களில் எதிர்பார்ப்புகள் மலர்ந்துநின்றிருக்கும். மனம் முழுக்க சந்தோஷம் நிறைந்த சிந்தனைகளும் கனவுகளுமாகஇருக்கும்.

மிகவும் கவலை நிறைந்த சில நேரங்களில் நாம் ஒருவரையொருவர் சந்திக்கும் நிமிடத்தில் நீங்கள் என்னை வெறுப்புடன் அடித்து விரட்டி விடுவீர்கள் என்றுநான் நினைத்தேன். இல்லாவிட்டால் என்னுடைய அழகில் திருப்தி அடையாத காரணத்தாலோ, நான் மிகவும் சாதாரணமாக இருப்பதாலோ நீங்கள் என்னைப் பொருட்படுத்தாமல் இருப்பீர்கள் என்று நினைத்தேன். ஆனால், அப்படிப்பட்டநேரங்களில் என் இதயத்தை நூறு துண்டுகளாக அறுத்து எறியக் கூடிய ஒருவிஷயம்... நான் என்ற ஒருத்தியை நீங்கள் ஏற்றுக் கொண்டதில்லை என்ற உண்மைஎன் மனதில் தோன்றவேயில்லை. என்னை ஏற்றுக் கொண்டிருந்தால், நீங்கள் என்னைஎந்தச் சமயத்திலும் அடையாளம் தெரிந்து கொள்ளாமல் போயிருக்க மாட்டீர்களே!

அந்த அடையாளம் தெரியாத தன்மை இன்று... இப்போது... இந்த கடிதத்தைவாசிக்கும் நிமிடத்திலும் உங்களுடன் சேர்ந்து இருக்கும். எந்தச்சமயத்திலும் உங்களால் அடையாளம் தெரிந்து கொள்ளப் படாமலேயே, நான் மரணத்தைத்தழுவுவேன்.

ஒரு ஆணைப் பொறுத்தவரை ஒரு இளம்பெண்ணின் முகம், அவள் ஒரு முழுப்பெண்ணாகஆவதற்கு இடையில் பல வகை களிலும் மாறுபட்டுக் கொண்டே இருக்கும். நிலைக் கண்ணாடியிலிருந்து பிம்பம் மறைந்து போவதைப்போல அது மாறிக் கொண்டேயிருக்கும். அது மட்டுமல்ல- அந்த மாற்றம் மிகவும் வேகமாகவும் நடக்கும்.இப்போது எனக்குத் தெரியும். ஆணின் மனதிலிருந்து பெண் மிகவும் வேகமாக மறைந்து விடுவாள். அவள் அணிந்திருக்கும் ஆடைகள்கூட அவளுடைய உடலை வேறுமாதிரி காட்டும்- வேறு ஏதோ பெண்ணைப் போல... அந்தச் சமயத்தில் பக்குவப்பட்டஅறிவுடன் அவள் செய்ய வேண்டியது- அனைத்தும் விதியின்படி நடக்கின்றன என்பதைநம்புவது மட்டுமே.

நீங்களும் இடையில் அவ்வப்போதாவது என்னைப் பற்றி சிந்தித்துப் பார்க்கவும்நினைக்கவும் எனக்காகக் காத்திருக்கவும் செய்வீர்கள் என்று என்னுடையகுழந்தைத்தனமான மனம் நினைத்துக் கொண்டிருந்தது. ஆனால் என்ன காரணத்திற்காகநீங்கள் என்னை மறந்து போய் விட்டீர்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை. நீங்கள் என்னை ஒரு நிமிடம்கூட நினைத்துப் பார்ப்பதே இல்லைஎன்பதையும், அதற்கான தகுதி எனக்கு இல்லை என்பதையும், உங்களைப் பொறுத்தவரையில் நான் உங்களுக்கு யாருமே இல்லை என்பதையும் அன்றே நான் புரிந்து கொண்டிருக்கும் பட்சம், ஒருவேளை இந்த வாழ்க்கையை என்னால் தாங்கிக் கொண்டிருக்க முடியும்.

அன்றைய சாயங்காலத்தின் அந்தப் பார்வை எனக்கு ஒரு விஷயத்தைப் புரியவைத்தது. நம்முடைய வாழ்வை இணைத்து வைக்கக்கூடிய எதுவும், ஒரு அணுவின் அளவிற்குக்கூட உங்களுடைய பக்கம் இல்லாமலிருந்தது என்ற உண்மையே அது. அந்தவிஷயம் உண்மைகளின் கடினமான யதார்த்தத்திற்குள் என்னை மூழ்கச் செய்தது.உங்களின் அந்தப் பார்வையில் என்னுடைய தலைவிதியின் ஒரு முன்னறிவிப்புவெளிப்பட்டது என்பதே பின்னால்தான் எனக்குத் தெரிந்தது.

எனக்குள் வேதனை உண்டாக்கியதும் நீங்கள் என்னை அடையாளம் கண்டு பிடிக்காமல்போனதுமான அந்த மாலை நேரத்திற்குப் பிறகு இரண்டு நாட்கள் கழித்து மீண்டும்நாம் சந்தித்தோம். ஆனால், அப்போது ஒரு அறிமுகத்தை ஆரம்பிப்பதற்கு விருப்பப் படுவதைப்போல நீங்கள் என்னைப் பார்த்தீர்கள். மெதுவாக சற்று சிரித்தீர்கள். அந்தப் பார்வையும் புன்சிரிப்பும், உங்களுடைய பார்வையால் வயதிற்கு வந்த பெண்ணாக ஆக்கப்பட்ட அந்தப் பழைய சிறுமியை அடையாளம் தெரிந்துகொண்டதன் வெளிப்பாடு அல்ல என்ற விஷயம் அப்போதும் எனக்குத் தெரியும்.அதற்கு மாறாக நேற்று பார்த்த அந்த அழகான ஒரு பெண்ணை நீங்கள் நினைத்தீர்கள்.

பாதி வெளிப்படையாகவும் பாதி திருட்டுத் தனமாகவும் இருந்த ஒரு சிரிப்புடன்,நீங்கள் எனக்கு அருகில் கடந்து சென்றீர்கள். எனினும், கடந்து சென்ற நாளைப் போலவே நடையின் வேகத்தைக் குறைத்தீர்கள். அப்போது விலகிச் செல்ல முயற்சிக்காமல், நானும் என்னுடைய நடையை மெதுவாக ஆக்கினேன். வெளியே ஒருநடுக்கம் இருந்தாலும், என் மனதிற்குள் சந்தோஷம் அலையடித்துக் கொண்டிருந்தது. வாழ்க்கையில் முதல் முறையாக நீங்கள் என்னை கவனித்ததாக எனக்குத் தோன்றியது. நீங்கள் எதையாவது என்னிடம் கூறுவதைக் கேட்பதற்கு என்மனம் ஏங்கியது.

எதிர்பார்த்திராத ஒன்று என்று கூற முடியுமா என்று தெரிய வில்லை. எனக்குப் பின்னால் உங்களுடைய காலடிச் சத்தம் கேட்பதை நான் உணர்ந்தேன். துடித்துக் கொண்டிருந்த மனதுடன் நான் காத்திருந்தேன். உங்களுடைய அந்த இனிமையானகுரல்... இதயத்தின் துடிப்பு அதிகமானதன் காரணமாக நடக்க முடியாமலிருந்த நான் நிற்கும் இடத்திலேயே நிற்கவேண்டிய சூழ்நிலை வந்துவிடுமோ என்றுபயந்தேன்.

உண்மையாகக் கூறப்போனால் நான் யார் என்பதையும் என்னுடைய வாழ்க்கைக் கதைஎன்ன என்பதையும் நீங்கள் எந்தச் சமயத்திலும் தெரிந்து கொண்டிருக்கவில்லை. எனினும், நீண்ட காலமாக நன்கு தெரிந்த ஒரு சினேகிதியுடன் உரையாடுவதைப்போலநீங்கள் என்னுடன் நட்புணர்வுடன் பேசினீர்கள்.

மிகுந்த சாதுர்யத்துடன் எளிமையாகவும் ஈர்க்கக்கூடிய விதத்திலும் நீங்கள்உரையாடினீர்கள். அதனால் பதைபதைப்பு இல்லாமல் என்னால் உங்களுடன் உரையாடமுடிந்தது. அப்படியே நாம் அந்த பெரிய பாதையின் வழியாகப் பேசிக் கொண்டேநடந்தோம்.

“இன்று நாம் இருவரும் சேர்ந்து இரவு உணவைச் சாப்பிட்டா லென்ன?” நீங்கள்என்னிடம் கேட்டீர்கள். நான் அதை சந்தோஷத் துடன் ஏற்றுக் கொண்டேன்.அதுவல்ல... நீங்கள் எதைக் கேட்டா லும், எதையும் என்னால் மறுக்க முடியாதே!

அன்று நாம் ஒரு சிறிய ரெஸ்ட்டாரென்டில் அமர்ந்து உணவு சாப்பிட்டோம்.உங்களுக்கு அது ஞாபகத்தில் இருக்காது. உங்களின் வாழ்க்கையில் அப்படிப்பட்டஒன்று அபூர்வமானது இல்லையே! ஆனால், எனக்கு அப்படியில்லை. வாழ்கையில் அபூர்வமானதும் இனியதுமான ஒரு சம்பவம் அது. நான் கொஞ்சமாகவே பேசினேன். வெறுமனே எதையாவது பேசியும் கேட்டும் அந்த விலை மதிப்புள்ள பொன்னான நேரத்தைவீணாக்க நான் விரும்பவில்லை. ஆனந் தத்தின் எல்லையில், உங்களுக்கு அருகில்அமர்ந்து கொண்டு அந்த இனிய குரலை நான் கேட்டுக் கொண்டிருந்தேன்.

நீண்ட ஐந்து வருடங்களாக நான் என்னுடைய மனதில் வைத்துக் காப்பாற்றியகனவுகளுக்கு மலர் அணிவித்த அந்த நிமிடங்களுக்காக நான் என்றென்றைக்கும்உங்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறேன். அப்போதைய என்னுடைய அந்த சந்தோஷத்தின்பரப்பைப் புரிந்து கொள்ள உங்களால் முடியுமா?

உங்களுடைய பேச்சிலும் நடவடிக்கைகளிலும் அவசரமோ பதைபதைப்போ இல்லை. சபலங்கள்எதையும் வெளிப்படுத்தாமல், நீங்கள் முழுமையான நட்புணர்வுடன் பேசிக்கொண்டிருந்தீர்கள். பல வருடங்களாக நான் உங்களுக்கு சொந்தமானவளாக இல்லாமற்போயிருந்தாலும் ஒருவேளை என்னை வசீகரிப்பதற்கு, ஈர்க்கக் கூடியவார்த்தைகளுக்கும் நடவடிக்கைகளுக்கும் இயன்றிருக்கும் என்று எனக்குத்தோன்றியது.

நாம் சிறிது நேரம் அந்த ரெஸ்ட்டாரெண்டில் இருந்தோம். இரவு மிகவும் இருட்டிவிட்டிருந்தது. திரும்பவும் வெளியே வந்தபோது நீங்கள் சற்று தயங்கிக்கொண்டே என்னிடம் சொன்னீர்கள்:

“போவதற்கு அவசரமில்லையென்றால், நாம் மேலும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்திருக்கலாம்.” ஒரு நிமிடம் நிறுத்தி விட்டு, என்னைச் சற்றுபார்த்தவாறு உங்களின் வீட்டிற்கு வருவதற்கு ஆட்சேபணை உண்டா என்றுகேட்டீர்கள். முற்றிலும் அறிவை இழந்துவிட்ட அந்த நிமிடத்தில், நான்என்றென்றைக்கும் உங்களுக் குச் சொந்தமானவள் என்பதை உங்களிடம் எப்படித்தெரிவிப்பது என்று தெரியாமல் மூச்சை அடக்கிக் கொண்டிருந்த என் மனம் எனக்கேதெரியாமல் வெளியே குதித்தது.

“எனக்கு அவசரமொன்றுமில்லை... நான் வருகிறேன்!”

உண்மையாகச் சொல்லப் போனால் உடனடியாக நான் வருவதற்கு ஒப்புக் கொண்ட விஷயம் உங்களிடம் ஆச்சரியத்தை உண்டாக்கியது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. உங்களுடைய மனதில் அப்போது இருந்த சிந்தனையை இன்று என்னால் புரிந்து கொள்ள முடியும். என்னவென்றால், ஒருத்தி தன்னை ஒரு ஆணுக்கு சமர்ப்பித்து சந்தோஷம் அடைவதற்கு தானே மனதில் ஏங்கிக் கொண்டிருப்பவளாக இருந்தால்கூட, அப்படிப் பட்ட ஒரு சந்தர்ப்பத்தில் சற்று குழப்ப மடையாமல்இருக்க மாட்டாள். மன எதிர்ப்பையும் சில நேரங்களில் உரிமை கலந்தகோபத்தையும் அவள் இயல்பாகவே வெளிக் காட்டினாலும் காட்டலாம். அவளைவ சீகரிப்பதற்கு அன்பான வார்த்தைகளும் புகழுரைகளும் மட்டும் போதாது. சிலநேரங்களில் அந்த மனதைச் சரி செய்வதற்கு தொடர்ச்சியான கெஞ்சல்களும் கபடம் நிறைந்த வாக்குறுதிகளும்கூட தேவைப்படும். அப்படி எதுவும் இல்லாமல் ஒருபெண் எந்தவொரு தயக்கமும் இல்லாமல் அழைப்பை ஏற்றுக் கொள்ளத் தயாராகிறாள் என்றால், ஒன்று- அவள் பக்குவம் அடைந்திராத ஒருத்தியாக இருக்க வேண்டும்.இல்லாவிட்டால் விலை மாதுவாக இருக்க வேண்டும் என்பதுதான் பொதுவான கருத்தாகஇருக்கும்.


ஆனால், என் மனதைப் பற்றி உங்களுக்குத் தெரியாதே? நான் எண்ணற்றநாட்களாகவும், வருடக் கணக்காகவும் மனதில் வைத்து காப்பாற்றியஎதிர்ப்பார்ப்புகளும் கனவுகளும் நிறைவேறுவதற்கு திடீரென்று ஒரு நேரம்வந்து முன்னால் நிற்கும்போது, மனதிற்குள் அடக்கி வைத்திருந்த சந்தோஷத்தின் அளவற்ற பிரவாகம்தான் என்னுடைய அந்த எதிர்ப்பின்மையும் உடனடியாக வருவதற்குஒப்புக் கொண்டதற்குக் காரணமும் என்ற விஷயம் உங்களுக்குத் தெரியாதே!நீங்களோ என்னுடைய அந்த சம்மதத்திற்கான காரணம் தெரியாமல் ஆச்சரியத்தில்மூழ்கி விட்டிருந்தீர்கள். வீட்டிற்கு நாம் நடந்து போய்க்கொண்டிருப்பதற்கு மத்தியில் என்னுடைய மனதிற்குள் இருப்பதைத் தெரிந்து கொள்வதற்கு நீங்கள் முயற்சிப்ப தாக எனக்குத் தோன்றியது. நம்முடையஎதிர்பாராத சந்திப்புகளுக்கும் என்னுடைய அலட்சியமான சம்மதத்திற்கும்பின்னால் ஏதோ ஆழமாக இருக்கிறது என்று நீங்கள் சிந்தித்திருக்க வேண்டும்.உங்களுடைய சில கேள்விகள் அந்த ரகசியத்தை வெளிக் கொண்டு வரகேட்கப்பட்டவைபோல தோன்றின. ஆனால், என்னுடைய அந்த ரகசியங்கள் அப்போதுவெளியே தெரிவதைவிட, நான் ஒரு முட்டாள் என்றோ பக்குவமில்லாதவள் என்றோ நினைப்பதுதான் எனக்குப் பிடித்திருந்தது. அதனால்தான் என்னுடைய பதில்கள்பிடி கொடுக்காத வண்ணம் சுய உணர்வுடன் கூறியவையாகவும் மிகவும் யோசித்துச்சொல்லப்பட்டவையாகவும் இருந்தன.

உங்களை நான் முதன் முதலாகப் பார்த்த அதே படிகளில் நான் உங்களுடன் சேர்ந்து ஏறும்போது, என் மனமும் உடலும் உணர்ச்சி வசப்பட்டன. அந்த நிலையை உங்களால்புரிந்து கொள்ள முடியாது என்று நான் நினைப்பதைப் பற்றி அன்பிற்குரியவரே,என்மீது நீங்கள் கோபப்படாதீர்கள். உணர்ச்சிவசப்பட்டு அப்போது பைத்தியம் பிடிக்கப் போவதைப் போன்ற நிலையில் நான் இருந்தேன். என்னிடம் கண்ணீர்சிறிதும் வற்றியிராத இன்றும் அந்த நினைவுகள் என்னை ஆனந்தக் கண்ணீர் வழியச்செய்கிறது.

அந்த வீடும் அதன் ஒவ்வொரு பொருட்களும் எனக்கு எப்போதும் பிரியமானவையாகஇருந்தன. என்னுடைய இளமைக் கால எதிர் பார்ப்புகளின் சின்னங்கள். உங்களைச்சற்று பார்க்க வேண்டும் என்பதற்காக அந்த வாசல் கதவைப் பார்த்துக் கொண்டேநான் எவ்வளவு நாட்கள் காத்திருந்திருக்கிறேன்! காதுகளைத் தீட்டி வைத்துக்கொண்டு உங்களின் பாதத்தின் சத்தங்களை மணியோசை யென எழச் செய்த படிகள்...நீங்கள் வருவதையும் போவதையும் நான் ஒரு திருடியைப் போல பதுங்கியிருந்துபார்த்த அந்த இடம்... உங்களுடைய வருகையை அறிவிப்பதைப் போல மெல்லியசத்தத்தில் திரும்பக் கூடிய சாவித் துவாரம்... இப்படி ஒரு காலத்தில்என்னுடைய வாழ்க்கை கடந்து வந்த மையப் புள்ளிகள்... எனக்குள் அந்த நினைவுகள் அனைத்தும் அப்போது வந்து மோதின. இப்போது என்னுடைய கனவுகள் அனைத்தும் நிறைவேறப் போகின்றனவே என்பதை நினைத்து நான் சந்தோஷப்பட்டேன்.அந்த சந்தோஷத்துடன் நான் நம்முடைய- என்னை மன்னிக்க வேண்டும்- நான் அப்படிசற்று கூறுகிறேனே... வீட்டிற்குள் வலது காலை வைத்து நுழைந்தேன்.

அவற்றையெல்லாம் எப்படி விளக்கிக் கூறுவது என்று எனக்குத் தெரியவில்லை.இன்னொரு வகையில் கூறுவதாக இருந்தால், வார்த்தைகளால் கூறமுடியாத வகையில்அவை இருந்தன. அந்த வாசற்படியுடன் என்னைப் பொறுத்த வரையில் உண்மையான உலகம் முடிவடைந்து விட்டது. அங்கிருந்து எனக்கு இன்னொரு உலகம் ஆரம்பமாகிறது.இன்னொரு வாழ்க்கையும். எனக்கு அந்த நிமிடங்கள் எந்த அளவிற்குஇனிமையானதாகவும் அரிதானதாகவும் சந்தோஷத்தை அளிக்கக் கூடியதாகவும் இருந்ததுஎன்பதை நீங்கள் மட்டுமல்ல- வேறு யாராலும் கற்பனை பண்ணிக்கூட பார்க்கமுடியாது.

அன்று நாம் ஒரு மெத்தையில் ஒன்றாகச் சேர்ந்து உறங்கினோம். அதுவரை எந்தவொருஆணும் பார்த்தோ தொட்டோ இராத என்னுடைய உடலையும் அனைத்தையும் நான்உங்களுக்கு அளித்த போது, ஆணின் ஸ்பரிசத்தின் சுகம் என்றால் என்னவென்றே தெரியாதவள் நான் என்ற உண்மை உங்களுக்குத் தெரியாது. காரணம்- எந்த ஒருவிஷயத்திற்கும் நான் சிறிதுகூட மறுப்பு கூறவில்லை என்பது மட்டுமல்ல-உங்களுக்குக் கீழ்ப்படியும்போது, என்னுடைய காதல் ரகசியம் வெளிப்பட்டுவிடக்கூடாது என்ற விஷயத்தில் மிகுந்த கவனம் செலுத்திக் கொண்டிருந்தேன்.உடலும் ஆன்மாவும் ஒன்றாகி நாம் ஒருவரையொருவர் இறுக அணைத்துக் கொண்டுகிடந்தபோது, பேரின்பத்தின் உச்சநிலையில் நான் மூழ்கிவிட்டிருந்தேன்.எனினும், நான் என்னைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தேன். அதனால் ஒரு ஆணின்வெப்பத்தையும் உணர்ச்சி யையும் முதலில் ஏற்றுக் கொண்ட போது, எந்தவொரு பெண்ணுக்கும் இயல்பாகவே உண்டாகக் கூடிய வெட்கத்தையும் கூச்சத்தையும் உணர்ச்சிவசப்படுதலையும் நான் கடித்து அழுத்திக் கொண்டேன். என்னுடையரகசியங்கள் உங்களை ஏதாவது விதத்தில் கவலைப் படவோ அமைதியற்றவராகவோஆக்கிவிடுமோ என்று நினைத்து என்னுடைய உடலின் அனைத்து வெளிப்பாடுகளையும்நான் அடங்கி இருக்குமாறு பார்த்துக் கொண்டேன். சிறிதும் சிரமப் படாமல்கிடைக்கக் கூடிய இன்பங்களில்தான் உங்களுக்கு விருப்பம் இருந்தது என்பதைநான் அன்றே புரிந்து கொண்டேன். மனம் கவலைப்படக் கூடிய விஷயங்களிலும் யாராவது உங்களுக்காக தியாகம் செய்வதிலும் நீங்கள் யாருக்காகவாவது தியாகம் செய்வதிலும் உங்களுக்குச் சிறிதுகூட விருப்பம் கிடையாது.

அந்த வகையில் அன்று ஒரு பெண் தன்னுடைய வாழ்க்கையிலேயே மிகவும் விலைமதிப்பு உள்ளதாக நினைக்கும் எல்லாவற்றையும் நான் உங்களுக்குஅர்ப்பணித்தேன். இதைக் கூறும்போது.... அன்பிற்குரியவரே, என்னைத் தவறாகநினைக்கக் கூடாது. நான் குற்றம் சாட்ட வில்லையே! அதற்கு நீங்கள் என்னை ஏமாற்றவோ பலத்தைப் பயன்படுத்தவோ இல்லையே! நானே விருப்பப்பட்டு அந்தகரங்களுக்குள் என்னை சமர்ப்பணம் செய்து கொண்டேன்.

மங்கலான வெளிச்சம் மட்டுமே சூழ்ந்து நின்றிருந்த அந்த இருட்டில் நான் கண்களைத் திறந்தபோது, காதல் வசப்பட்டு என்னை இறுகக் கட்டிப் பிடித்துக்கொண்டு, உடலுடன் சேர்த்து ஒட்டிக் கொண்டு நீங்கள் தூங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். அந்த நிமிடத்தில் பூமியில் இல்லையென்றும், ஆகாயத்திற்கு அப்பால் ஏதோ சொர்க்கத்தில் இருப்பதாகவும் எனக்குத் தோன்றியது.

உங்களுடன் ஒட்டிக் கொண்டு படுத்திருந்தபோது, உங்களுடைய அந்த மூச்சு என்உடலில் இளம் வெப்பத்துடன் விழுந்து கொண்டிருந்தது. அது என்னை உணர்ச்சிவசப்படச் செய்தது.

வார்த்தைகளால் வரைய முடியாத அந்த இரவு நேரத்தில், நீங்கள் அளித்த சந்தோஷத்திற்கு நான் என்றென்றைக்கும் உங்களுக்கு நன்றி உள்ளவளாக இருப்பேன். என் உயிரின் உயிரே, அன்று என்னை முழுமையாக நான் உங்களுக்கு சமர்ப்பணம் செய்ததில் எந்தச் சமயத்திலும் எனக்கு வருத்தம் என்பதே இல்லை என்பதையும் நான் கூறிக் கொள்கிறேன்.

உங்களுடைய பணியாள் வருவதற்கு முன்பே போய்விட வேண்டுமென்ற விருப்பம் எனக்கு இருந்ததால், மறுநாள் அதிகாலையிலேயே நான் அங்கிருந்து கிளம்பி விட்டேன். பிறகு நான் வேலைக்கு வேறு போக வேண்டியிருந்ததே!

வெளியேறுவதற்கு முன்பு என்னை கைகளுக்குள் ஒதுக்கி வைத்துக் கொண்டு நீங்கள் என்னுடைய கண்களையே இமைகள் மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தீர்கள். அப்போது முழுமையாக இல்லையென்றாலும் உங்களுடைய மனதிற்குள் ஞாபகத்தின் ஒரு கீற்றாவது தோன்றியதா? இல்லை... அப்படி நடந்திருக்க வாய்ப்பில்லை. கடந்த இரவு வேளையில், சபலத்தின் சந்தோஷம் என் முக அழகை மேலும் கவர்ச்சி நிறைந்ததாக ஆக்கியது காரணமாக இருக்க வேண்டும். நீங்கள் நீண்ட நேரம் என்னையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தீர்கள். தொடர்ந்து என்னுடைய உதடுகளைச் சற்றுவேதனைப்படுத்திக் கொண்டு அழுத்தமாக முத்தமிட்டீர்கள். பிறகு... என்னவோ சிந்தித்ததைப்போல, எழுதக் கூடிய மேஜைமீது இருந்த தூய வெள்ளை வண்ணம் கொண்டரோஜா மலர்களை எடுத்து என்னிடம் நீட்டினீர்கள்.

அந்த மலர்களை விலை மதிக்க முடியாத பொக்கிஷத்தைப் போல, ஒவ்வொரு இதழிலும்முத்தமிட்டவாறு அதன் இறுதி இதழும் வாடிக் கரிந்து விழும்வரை நான் பத்திரமாக வைத்திருந்தேன்.

அன்று நாம் பிரியும்போது மேலும் ஒரு இரவு ஒன்றாகச் சேர வேண்டும் என்று உறுதிப்படுத்தினோம். அந்த இரவும் முதலிரவைப் போலவே சந்தோஷத்தில் நீராடியதைப் போல இருந்தது. அதற்குப் பிறகு மேலும் ஒரு இரவிலும் அதுதிரும்ப நடந்தது. அந்த வகையில் நடந்த மூன்றாவது இரவில் சந்திக்கும் போது நீங்கள் சிறிது காலத்திற்கு வியன்னாவை விட்டு ஒரு பயணம் செல்லவேண்டியதிருக்கிறது என்று என்னிடம் சொன்னீர்கள். என் இதயத்தைப் பிளக்கச்செய்த வார்த்தைகளாக அவை இருந்தன.

முன்பும் உங்களின் பயணங்களை நான் எந்த அளவிற்கு வெறுத்திருந்தேன்! அவை எனக்கு எந்த அளவிற்கு கவலையைத் தரக்கூடியனவாக இருந்தன தெரியுமா? பிரிவினால் உண்டாகக் கூடிய கவலை என் இதயத்தை அரித்துத் தின்ற நிமிடமாக அதுஎனக்கு இருந்தது.

திரும்ப வந்தவுடன் எனக்குத் தகவல் தெரிவிப்பதாக நீங்கள் எனக்கு உறுதி அளித்தீர்கள். அன்றும் நீங்கள் எனக்கு மலர்களைப் பரிசாகத் தந்தீர்கள்.

அந்தப் பிரிவு மிகவும் நீண்டதாக இருந்தது. அந்த இரண்டு மாதங்கள் நான் எப்படி வாழ்ந்தேன் என்பதையோ அப்போதைய என்னுடைய ஏமாற்றங்கள், இதயத்தில் இருந்த கவலைகள் ஆகியவற்றின் ஆழம் என்ன என்பதையோ விளக்கிக் கூற என்னால்முடியவில்லை.

எது எப்படி இருந்தாலும் நீங்கள் இரண்டு மாதங்கள் முடிவதற்கு முன்பே திரும்பி வந்து விட்டீர்கள். உங்களின் இருப்பிடத்தின் அந்த சாளரங்களுக்கு அப்பால் இருந்த வெளிச்சம் எனக்கு அதை உணர்த்தியது. ஆனால், திரும்பி வந்த தகவலை நீங்கள் எனக்கு எழுதவில்லை. நான் என்னுடைய வாழ்க்கையையே சமர்ப்பித்த என்னுடைய அன்பிற்குரியவரே, என் வாழ்க்கையின் இந்த இறுதி நிமிடத்தில் எனக்கு நிம்மதி அளிப்பதற்கும் நினைத்துப் பார்ப்பதற்கும் உங்களுடையது என்று ஒரு கடிதம் வந்து, அந்த கையால் எழுதப்பட்ட ஒரு வரிகூட என் கையில்இல்லை. எனினும், எனக்கு உங்கள் மீது குற்றச்சாட்டு இல்லை. அதற்கு மாறாக, நான் காதலித்துக் கொண்டிருந்தேன்- இப்போதும் காதலித்துக் கொண்டே இருக்கிறேன். நீங்கள் மறந்துவிடக் கூடியவராகவும், நம்பிக்கை மோசம் செய்யக்கூடியவராகவும், உணர்ச்சிகளுக்கு அடிமைப்படக் கூடியவராகவும் இருக்கும் அதேநேரத்தில் பரந்த மனம் கொண்டவர் என்பதும் எனக்குத் தெரியுமே! அவற்றையெல்லாம் அறிந்து கொண்டுதானே நான் உங்களைக் காதலித்தேன்!

நான் காத்து... காத்துக் கொண்டு இருந்தாலும் நீங்கள் எனக்குக் கடிதம் எழுதவில்லை. என்னை அங்கு அழைக்கவுமில்லை. ஆசையில் மண் விழுந்ததில், என் இதயம் வேதனையில் புகைந்து கொண்டிருந்தது. அன்பிற்குரியவரே, நம்முடைய அந்த அபூர்வமான இனிய மூன்று ஆனந்த இரவுகளில் ஏதோ ஒன்றில் நீங்கள் எனக்குப் பரிசாகத் தந்தீர்கள். உங்களுடைய மகன்தான் நேற்று இறந்து விட்டான். என்கண்களுக்கு முன்னால் எந்தவித சலனமும் இல்லாமல் கிடக்கும் இந்தக்குழந்தை... ஆமாம்... இவன் உங்களுடைய மகன்தான்...

நம்முடைய மகனின் பிறப்பு வரை நான் உங்களுக்கு மட்டுமே சொந்தமானவளாக இருந்தேன். உங்களுடைய அந்த கைகள் கொண்டு தொடப்பட்டதால் புனிதமடைந்த என்னை எந்தவொரு ஆணும் தொடுவதை என்னால் மனதில் கற்பனை பண்ணிக்கூட பார்க்க முடியவில்லை. உங்களுக்குத் தெரியாவிட்டாலும், அன்பாலும், எனக்கு நன்கு தெரிந்து நான் உங்கள்மீது கொண்டிருந்த ஆழமான காதலாலும் நமக்குப் பிறந்தமகன் இவன். அவன் நேற்று இந்த உலகத்திடமிருந்து விடை பெற்றுக் கொண்டான்.

நான் இப்போது கூறும் விஷயம் உண்மையாகவே உங்களை ஆச்சரியப்படச் செய்வதைவிடபதைபதைப்படையச் செய்யாமல் இருக்காது என்பது எனக்குத் தெரியும். உங்களுடையமனதில் இப்போது கேள்வியும் குழப்பமும் நிறைந்திருக்கும். நான் இதுவரைஉங்களிடம் இந்த விஷயத்தை ஏன் கூறாமல் இருந்தேன் என்றும், இப்போது இறுதியாகஎதற்கு இவள் இதைக் கூறுகிறாள் என்றும் நீங்கள் மனதில் குழப்பத்துடன்இருப்பீர்கள்.

உண்மைதான். ஆனால், உங்களைப் பொறுத்தவரையில் யார் என்று தெரியாத ஒரு பெண்நான். தன்னுடைய பெயரைக்கூட ஒழுங்காகக் கூறியிராத ஒருத்தி. மூன்றே மூன்றுஇரவுகளில் உங்களுடன் இன்ப விளையாட்டுகளில் மூழ்கவும், அதற்கு எந்த வொருமறுப்பையும் கூறாமல் தயாராகவும் இருந்தவள்... அழகிய பெண்களை வசீகரித்துகைக்குள் போட சிறிதும் தயங்காத உங்களுடைய சொந்தமாக நான் இருந்தேன் என்றுசொன்னால், நீங்கள் அதை நம்ப மாட்டீர்கள். பிறகு எப்படி நான் என்னுடைய குழந்தையின் தந்தை நீங்கள்தான் என்று கூறுவேன்? இன்னொரு வகையில் கூறுவதாக இருந்தால், நீங்கள் என்னுடைய வார்த்தைகளைத் தற்போதைக்கு ஏற்றுக் கொண்டாலும், பிறகு இருக்கும் வாழ்நாள் முழுவதும் உங்களுடைய மனம் என்னைப்பற்றி சந்தேகப்பட்டுக் கொண்டே இருக்கும். இன்னொரு மனிதனுக்கு என்னிடம் பிறந்த குழந்தையுடன் உங்களின் சொத்துக்களைக் கைப் பற்றுவதற்காக வந்திருப்பவளாக நான் இருப்பேனோ என்றும், அதற்காக உண்டாக்கிய கட்டுக்கதைகள்தான் நான் கூறும் அனைத்தும் என்றும் உங்களுடைய மனதில் சந்தேகம் உண்டாகும். அந்த வகையில் உங்களுடைய நம்பிக்கையின்மைக்குப் பாத்திரமாக ஆகக்கூடிய நிலையை என்னால் பொறுத்துக் கொள்ளவே முடியாது. அது மட்டுமல்ல-இன்னும்

சொல்லப் போனால்,உங்களை நீங்கள் புரிந்து கொண்டிருப்பதைவிட அதிகமாகப் புரிந்துகொண்டிருப்பவள் நான். எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடிய மனம் கொண்ட நீங்கள் பெரிய பொறுப்புகள் எதையும் ஏற்றுக் கொள்வதற்கு ஆர்வ மில்லாதவர் என்பதும், சொந்த மன சந்தோஷத்திற்காக மட்டுமே வாழவும் ஆனந்தத்தில் திளைக்கவும் விரும்பக் கூடியவர் என்பதும் எனக்குத் தெரியும். எங்கும்பிடித்துக் கட்டப்படாமல் சுற்றித் திரிய விரும்பும் நீங்கள், ஒரு தந்தை என்ற உண்மையை திடீரென்று அறிய நேரிட்டால், அந்த மனதில் என் மீதும் நம்முடைய மகன் மீதும் அன்பு அல்ல- வெறுப்புதான் வேகமாகப் பரவும்.உங்களுடைய மனதில் அரை நிமிடம்கூட வெறுக்கப்பட்டவளாக ஆவது என்பதை என்றென்றைக்குமாக என்னை உங்களுக்காக சமர்ப்பித்த என்னால் எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்?நான் இந்த விஷயத்தைக் கூறுவதால், உங்களுக்கு நான் ஒரு கடமைப்பட்டவளாகவோ, சுமையாகவோ ஆவதையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது உயிரின் இறுதி மூச்சு வரை உங்களுக்கு ஒரு தொல்லையாகவோ அமைதியைக் கெடுக்கக் கூடியவளாகவோ இருக்கக் கூடாது என்று நான் ஆசைப்பட்டேன். அதனால் நம் மகனுடைய எல்லா பொறுப்புகளையும் நானே ஏற்றுக் கொண்டேன்.


அந்த மனதில், உங்களுடன் நெருங்கிப் பழகி உங்களுக்குக் கீழ்ப்படிந்த பெண்களில், நீங்கள் அதிகமாக இனிமையாகவும் காதல் உணர்வுடனும் நினைத்துப் பார்க்கப்படுபவர்களில் நான் இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய எப்போதும் உள்ள பிரார்த்தனைகளாக இருந்தன. ஆனால், எந்தச் சமயத்திலும்...எந்தவொரு நேரத்திலும்... என்னைப் பற்றி நீங்கள் சிறிதும் நினைத்துப் பார்த்ததில்லையே. அன்பிற்குரியவரே... அந்த மனதில், மறதியின் ஆழத்திற்குள் நான் ஆழ்ந்து போய் விட்டதுதானே நடந்தது!

என்னை மன்னிக்க வேண்டும். நான் குற்றம் கூறவோ புகார் கூறவோ இல்லை. சபிக்கப்பட்ட சில நிமிடங்களில் என்னுடைய வார்த்தைகள் கோபத்துடன் இருக்கும்பட்சம், நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும். நான் இங்கு நம்முடைய மகனின் அசைவற்ற உடலுக்கு அருகில் அமர்ந்து கொண்டு எழுதும்போது, தெய்வத்தையே வாய்க்கு வந்தபடி திட்டிவிடக் கூடிய என்னுடைய மன நிலையை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது அல்லவா?

உங்களை எனக்குத் தெரியும்- எப்போது வேண்டுமானாலும் உதவி செய்யக் கூடிய உங்களின் குணத்தை. அறிமுகமே இல்லாதவர்கள் கேட்டாலும் முடியும்வரை நீங்கள் உதவி செய்வீர்கள். ஆனால், அந்த உதவிகளும் தாராளங்களும் உங்களுடைய மனதில் இருக்கும் குற்ற உணர்வால் உண்டானவைதானே! அதைத் தாண்டி இரக்கத்தாலோ உதவிசெய்வதால் உண்டாகக் கூடிய மன சந்தோஷத்தாலோ அல்லவே நீங்கள் யாருக்கும் உதவிசெய்வது? அன்று ஒருநாள் உங்களுக்கு அருகில் நான் வசித்தபோது, ஒருபிச்சைக்காரனுக்கு நீங்கள் பிச்சை போடுவதை நான் பார்த்திருக்கிறேன். கஞ்சத்தனம் இல்லாமல் பிச்சை போட்டீர்கள் என்றாலும், அந்தச் செயல் மிகவும்வேகமாக நடந்தது. பிச்சைக்காரன் முன்னால் நின்றிருந்ததை எவ்வளவு வேகமாக இல்லாமற் செய்ய முடியுமோ, அவ்வளவு அவசரம் அந்த வேகமான நடவடிக்கையில் வெளிப்பட்டது. அதனால் அந்த மனிதனை சரியாகப் பார்ப்பதற்குக் கூட நீங்கள் முயற்சிக்கவில்லை.

இந்தக் காரணங்களால்தான் நான் உங்களிடம் உதவி கேட்கத் தயாராக இல்லாமலிருந்தேன். என்னுடைய மகன் உங்களுக்குச் சொந்தமானவன் என்பதில் சந்தேகம் எஞ்சி நின்றால்கூட, சில நேரங்களில் நீங்கள் எனக்கு உதவிசெய்தாலும் செய்யலாம். ஆனால், அது அன்பு கொண்டதாகவோ மன்னிப்பு கேட்டோ இருக்காது. அதற்கு மாறாக, ஒரு பிரச்சினையில் சிக்கிக் கொள்ளாமல் தப்பிக்கும் ஆர்வத்துடன் அதைச் செய்வீர்கள். நான் உங்களின் குழந்தையைக் கர்ப்பம் தரித்திருக்கிறேன் என்ற உண்மையை நீங்கள் அறிந்திருந்தால், அந்தகர்ப்பத்தை அழித்து விடும்படி நீங்கள் கூறியிருப்பீர்கள் என்ற விஷயம் எனக்குத் தெரியும். நான் அதற்கு மிகவும் பயப்படவும் செய்தேன். காரணம்-நீங்கள் எதைக் கேட்டாலும் நான் அதற்கு சம்மதிக்கவே செய்வேன். ஆனால்,எனக்கு உங்களிடமிருந்து கிடைத்த என்னுடைய சொத்து- என் மகன். அவன் என்னுடையஅனைத்துமாக இருந்தான். எனக்கு அவன் யாரென்றால், என்னுடன் சேர்ந்து நிற்காதஉங்களுக்கு பதிலாக- உங்களின் அதே முகச் சாயலில் நீங்களே எனக்குள் மறுபிறவி எடுத்திருக்கிறீர்கள். அதனால் அதே நிலையில் ஏற்றுக் கொண்டு, எனக்குள் பத்திரமாகக் காப்பாற்றி வளர்த்ததில் நான் வெற்றி பெற்றேன். அந்த விஷயத்தில் நான் ஆனந்தம் அடையவும் செய்தேன்.

என்னுடன் வந்து சேர்ந்த நீங்கள்... உங்களால் நான் கர்ப்பிணியாக ஆன சந்தோஷம், என்னை காலிலிருந்து தலைவரை உணர்ச்சி வசப்படச் செய்தபோதும் நான்அந்த ரகசியத்தை உங்களிடமிருந்து மறைத்துக் காப்பாற்றி வைத்ததற்குக் காரணம் கூட அதுதான்.

உங்களை முழுமையாக எனக்குச் சொந்தமாக ஆக்கிவிட்டாலும், என்னுடைய அந்த நாட்கள் சந்தோஷத்தில் திளைத்துக் கொண்டிருந்த வையாக இருந்தன என்று நினைத்து விடாதீர்கள். காத்திருந்த அந்த மாதங்களில், குறிப்பாக இறுதி மாதங்களில் எனக்குள் குழப்பங்களும் பதைபதைப்பும் அளவுக்கும் அதிகமாகஇருந்தன. என்னுடைய வயிறு, கர்ப்ப ரகசியத்தை வெளியே காட்டக் கூடிய நிலை வந்ததிலிருந்து நான் வேலைக்குச் செல்வதை நிறுத்திக் கொள்ளவேண்டியதிருந்தது. காரணம்- அங்கிருந்த சித்தப்பாவின் உறவினர்கள் விவரத்தை வீட்டிற்குக் கூறி விடுவார்கள் என்று எனக்கு பயமாக இருந்தது. வேலையும் கூலியும் இல்லாமலிருந்த அந்த காலத்தில் நான் என்னுடைய தாயிடமிருந்துகூடஒரு பைசா உதவியை எதிர்பார்க்கவில்லை. என்னுடைய நகைகளை விற்று அந்தவிடுமுறைக் காலம் முதல் பிரசவம்வரை அதை செலவுக்கு வைத்துக் கொண்டேன்.

பொதுவாகவே கவலைகள் நிறைந்த அந்தக் காலத்தின் இறுதிப் பகுதி என்னுடைய தலைவிதியால் மேலும் துயரம் நிறைந்ததாக ஆனது. பிரசவத்திற்கு ஒருவாரத்திற்கு முன்பே, எனக்கு வீட்டு வேலைகளில் உதவுவதற்காகவும் துணிகளைச் சலவை செய்வதற்கும் இருந்த பெண், என் கையில் எஞ்சியிருந்த பணத்தைச் சிறிது கூட மீதம் வைக்காமல் திருடிக் கொண்டு ஓடிவிட்டாள். உதவிக்கு யாருமில்லாமல் பொது மருத்துவமனையில் அழுக்கடைந்த பொது வார்டில், கெட்ட நாற்றங்களுக்கும் ஆதரவற்ற சில ஏழைகளுக்கும் நடுவில் நம்முடைய மகன் பிறந்துவிழுந்தான். அந்த மருத்துவமனை நாட்கள் கவலைகளும் நரக வேதனைகளும் நிறைந்தவையாக இருந்தன. நெருங்கி நிறைந்திருந்த ஆட்களும் வெறுப்பை உண்டாக்கக் கூடிய சூழலுமாக அந்த இடம் இருந்தது. மனிதர்களை ஒருவரையொருவர் இணைத்தவை ஒரே மாதிரி இருந்த இல்லாமைகளும் துயரங்களும்தான். கெட்ட இரத்தம், க்ளோரோஃபார்ம் ஆகியவற்றின் வாசனை நிறைந்து நின்ற சூழ்நிலையில், அடக்கிவைத்திருந்த வேதனைகளுக்கு நடுவில், பெரும்பாலும் கூப்பாடுகளால் அந்த இடம் நிறைந்திருந்தது. பெரும்பாலானவர்கள் தனிமையில் இருப்பவர்களாகவும் அதே மாதிரி யாருடனும் பழகாதவர்களாகவும் இருந்தார்கள். இன்னும் சொல்லப்போனால், அந்த மருத்துவமனையின் பதிவேட்டில் பெயர்களை நீக்கி விட்டுப்பார்த்தால் பெரும்பாலானவர்கள் சொந்தமென்று கூற ஒரு தனித்துவம்கூடஇல்லாதவர்களாக இருந்தார்கள். டாக்டர்களை எடுத்துக் கொண்டால், ஒவ்வொருபடுக்கையிலும் இருந்த நோயாளிகளும், அவர்களுடைய சோதனைப் பாடங்களுக்கானவெறும் மாமிசத் துண்டுகளாக இருந்தார்கள் என்று தோன்றும்.

என்னுடைய கவலைகளையும் துயரங்களையும் வேதனை களையும் பற்றிக் கூறியதுஉங்களுக்கு வெறுப்பை உண்டாக்கினால், என்னை மன்னிக்க வேண்டும். நீண்டபதினோரு வருடங்கள் மௌனமாக இருந்த நான் இனியும் எதையும் கூறப்போவதில்லை. யாருமற்ற அனாதையான நான் என்றென்றைக்கும் மௌனியாக இருப்பதற்கு இனி அதிகநேரம் ஆகாது. எனினும், இப்போது கையை விட்டுப் போய்விட்ட நம்முடைய இந்த தங்க மகனைப் பெறுவதற்கு வாழ்க்கையில் நான் கொடுத்த விலை அதிகம். மீண்டுமொருமுறை நான் கூறுகிறேன்.

என் அருமையான குழந்தையின் விளையாட்டுச் சிரிப்பும் கொஞ்சலும் அந்த துயரம் நிறைந்த காலம் பற்றிய நினைவுகளை என்னிடமிருந்து விரட்டியடித்தன. ஆனால், அவன் என்னுடைய வாழ்க்கையிலிருந்தும், இந்த உலகத்திலிருந்தும் விடைபெற்றபோது அந்த கடந்த காலத்தின் வலியும் வேதனையும் என்னிடம் திரும்பவும்வந்து சேர்ந்திருக்கின்றன.

எந்தவித காரணத்தைக் கொண்டும் நான் என்னுடைய அன்பிற்குரியவரான உங்களை எதிர்க்கவோ குற்றம் செய்தவன் என்று கூறவோ இல்லை. என்னை இப்படிப் படைத்து,தாங்க முடியாத அளவிற்கு கவலைகளையும் வேதனைகளையும் என்மீது கொண்டு வந்து சுமத்திய தெய்வத்தின் மீதுதான் எனக்கு எதிர்ப்பு. சொல்லப் போனால் உங்கள் மீது சிறிதளவுகூட எனக்கு கோபம் உண்டாகவில்லை. பொறுத்துக் கொள்ளமுடியாத பிரசவ வலியின் உச்சத்தில்கூட காதலின் முதல் இறுதி நிலைகளின் இனிமையை அனுபவிக்க சந்தர்ப்பம் அளித்த உங்கள்மீது அன்பு மட்டுமே இருந்தது. இப்போதும் அன்பு மட்டுமே இருக்கிறது, என் உள்ளம் முழுவதும்.

உங்களைச் சந்தித்து, உங்களுடன் சேர்ந்து வாழ்ந்து, வாழ்க்கையில் கிடைத்தவசதிகளைத் திரும்பவும் பெற்று, அந்த வாழ்க்கையிலும் இப்படித்தான் நடக்கும்என்ற புரிதல் இருந்தாலும், நான் அதற்கு சந்தோஷத்துடன் தயாராகவே இருப்பேன்-எவ்வளவு முறைகள் வேண்டுமானாலும். அவ்வளவுதான். அன்பிற்குரியவரே, அந்தஅளவிற்கு நான் உங்களைக் காதலிக்கிறேன்.

பிரசவத்திற்குப் பிறகு நான் உங்களைப் பார்க்காமல், அதற்காக முயற்சிக்காமல் வாழ்ந்தேன். பார்க்க வேண்டும் என்ற அடங்காத மோகத்தின் அளவு சற்று குறைந்துவிட்டிருந்தது. முன்பைப் போல உணர்ச்சி வசப்படாமலேயே நான் உங்களைக் காதலித்தேன். அப்படித்தான் நான் அதைப் புரிந்து கொண்டிருந்தேன்.

அப்போது உங்கள்மீது கொண்டிருந்த காதல் வேதனையாகத் தோன்றவில்லை. ஆறுதலாக இருப்பதற்கு என்றால், என்னுடன் உங்களுடைய குழந்தை இருந்தான் அல்லவா? தந்தை, மகன் என்று பிரிக்க நான் விருப்பப்படவில்லை. அதனால்தான் உங்களுக்கு கீழ்ப் படிவதற்கும் வசீகரிக்கப்படுவதற்கும் எனக்குத் தயக்கமே தோன்ற வில்லை.

நம்முடைய மகன் வாழ வேண்டுமென்றால் நான் இல்லாமல் முடியாதே! நீங்களோ சுதந்திரமானவராகவும் சந்தோஷத்தில் திளைத்திருப்பவராகவும் இருந்தீர்கள். நான் அவனைக் கொஞ்சியும் செல்லம் கொடுத்தும் வாழ்ந்தேன். அவனுக்காக வாழவேண்டிய வாழ்க்கை. அப்போது உங்களுக்காக எனக்குள் இருந்த அடங்காததாகத்திலிருந்து நான் விடுபட்டு விட்டதைப் போல எனக்குத் தோன்றியது. உங்களை எனக்குள்ளேயே மறுபிறவி எடுக்கச் செய்ததைப்போல எனக்கு அவன் பிறந்ததைத்தொடர்ந்து, நடக்க இருந்த பல அழிவுகளில் இருந்தும் எனக்கு விடுதலை கிடைத்துவிட்டதைப்போல நான் உணர்ந்தேன். பிறகு அபூர்வமாக மட்டுமே நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த வீட்டைப் பற்றியும் உங்களைப் பற்றியும் என்னுடைய சிந்தனைகள் இருந்திருக்கின்றன.

எனினும், என்றென்றைக்கும் என்னுடைய அன்பிற்குரியவரான உங்களுடைய ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் மறக்காமல் ஒரு கொத்து ரோஜா மலர்களை உங்களுக்கு அனுப்பிவைப்பேன். அன்று நம்முடைய அந்தக் காதல் சங்கமத்தின் நினைவாக நீங்கள் எனக்குத் தந்த வெள்ளை நிற ரோஜா மலர்களைப் போல. ஆனால், கடந்த பதினோருவருடங்களாக ஒரு பிறந்த நாளைக்கூட விடாமல் உங்களுக்கு இந்தப் பரிசைஅனுப்பிக் கொண்டிருப்பவள் யார் என்று எந்தச் சமயத்திலாவது விசாரித்திருக்கிறீர்களா? சிந்தித்திருக்கிறீர்களா? அது எனக்குத் தெரியாது. அந்த விஷயத்தைப் பற்றி நினைத்து கலங்காமலேதான் அந்த மலர்களை ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் உங்களுக்கு அனுப்பி வைத்துக் கொண்டேயிருந்தேன்.அது எனக்கு மகிழ்ச்சியை அளித்த விஷயமாக இருந்தது.

நம்முடைய மகன் இன்று இங்கே அசைவே இல்லாமல் கிடக்கிறான். நம்முடைய இந்த தங்கக் குழந்தையை உங்களிடமிருந்து மறைத்து வைத்ததற்காக இப்போது நான் என்னையே சபித்துக் கொள்கிறேன்.

நம்முடைய பிஞ்சுக் குழந்தை... அவன் இப்போது இதோ எனக்கு அருகில் சலனமற்றுக் கிடக்கிறான். இங்கு படுத்திருக்கும்போதும் உயிர் இருப்பதைப்போல....நீங்கள் அவனை ஒருமுறைகூட பார்த்தது இல்லையே! என்ன ஒரு செல்லப் பிள்ளைதெரியுமா? நம்முடைய மகனைப் பார்த்தால், யாருக்கும் சற்று கொஞ்ச வேண்டும்என்று தோன்றும். அவனிடம் உங்களைத்தான் பிரதி பிம்பமாக நான் பார்த்தேன்.அதே சிரிப்பு, அதே குரல்... நீங்களே ஒரு குழந்தையாக வடிவமெடுத்ததைப் போல,அவனுடைய ஒவ்வொரு சிறிய வெளிப்பாடுகளிலும்கூட அந்த ஒற்றுமை துடித்துநின்றது.

நீங்கள் வாழ்க்கையைச் சந்திக்கும் லாவகத்துடன் அவன் விளையாட்டுகளில் ஈடுபட்டான். விளையாட்டு முடிந்தால், உங்களைப் போல அவனும் புத்தகங்களை வாசிப்பான். உங்களுடைய தனித்துவமான அந்த குணம் இருக்கிறதே, விளையாட்டுஎது- காரியம் எது என்று வித்தியாசம் பார்க்கத் தெரியாத குணம்... அதேகுணத்தை நம்முடைய மகனிடமும் நான் பார்த்திருக்கிறேன். உங்களின் பலகுணங்கள் அவனிடம் இருப்பதைப் பார்த்தபோது, எனக்கு அவன் மீது இருக்கும்அன்பின் அளவு பல மடங்குகள் அதிகமாகிவிட்டது என்றுகூட கூறலாம். படிப்பிலும்அவன் முதல் ஆளாக இருந்தான். அவனுடைய அழகான கையெழுத்தைப் போலவோ சுத்தமாக வைக்கப்பட்டிருக்கும் நோட்டுப் புத்தகங்களோ அவனுடைய நண்பர்களில் யாரிடமும்இல்லை.

நாங்கள் கோடை காலங்களில் கடற்கரையில் இருக்கும் ஓய்வு மையங்களிலும் குளிர்காலங்களில் ஸெம்மரிங்கிலும் தங்கினோம். அங்கு இருக்கும்போது நம்முடையமகனையும் அவனுடைய விளையாட்டுக்களையும் பார்ப்பவர்கள், குறிப்பாகக் கூறவேண்டுமானால் பெண்கள், ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டு நிற்பார்கள். பெரும்பாலானவர்கள் அவனை இறுக அணைத்துக் கொண்டு கொஞ்சுவார்கள். அந்த அளவிற்கு அவனிடம் சுறுசுறுப்பும் அழகும் இருந்தன. எனினும், அவன் உங்களைப்போல ஒரு அமைதியான குணம் கொண்டவனாகவே இருந்தான்.

சென்ற வருடம்தான் மேற்கொண்டு படிப்பதற்காக போர்டிங் பள்ளிக் கூடத்தில்போய் அவன் தங்கினான். அங்கு அவன் அரச குடும்பத்தினர் அணியக்கூடிய ஆடைகளை ஞாபகப்படுத்தக் கூடிய விதத்தில் இருந்த சீருடைகளை அணிந்திருப்பான்.அவனுக்குத் தேவையான அனைத்தையும், ஒரு செல்வந்தரின் மகனுக்குகிடைப்பதைப்போல கிடைக்கும்படி செய்திருந்தேன். அவனுக்கு நான் எப்படி இந்தஅளவிற்கு எல்லாவற்றையும் வாங்கிக் கொடுக்க முடிந்தது என்று நீங்கள்இப்போது சிந்திக்கலாம். நான் அதைக் கூறும்போது, உயிர் நாயகனே... என்னைநீங்கள் எந்தச் சமயத்திலும் வெறுக்கக் கூடாது... எனக்கு வேறு வழிகள்எதுவுமே தெரியவில்லை. அவனுக்காக... நம்முடைய மகனுக்காக நான் என்னையேவிற்று விட்டேன். எனினும், அன்பிற்குரியவரே... நான் எந்தச் சமயத்திலும் ஒரு தெரு விலை மாதுவாக இருந்ததில்லை. வசதி படைத்த காம வயப்பட்டமனிதர்களுக்கு நான் என்னுடைய உடலை மட்டும் கொடுத்தேன். முதலில் நான் அவர்களைத் தேடிச் சென்றேன். பிறகு, அவர்கள் என்னைத் தேடி வந்தார்கள்.


நீங்கள் என்றைக்காவது அப்படி நினைத்தீர்களா என்று எனக்குத்தெரியாவிட்டாலும், மற்றவர்களின் கண்களில் நான் ஒரு அழகியாக இருந்தேன். என்காதலர்களாக வந்தவர்கள் என்னை கண்ணை மூடிக்கொண்டு காதலிக்கவும். வழிபடவும் செய்தார்கள். அவர் களுக்கு என்மீது உணர்ச்சி வசப்பட்ட காதல் இருந்தது.

நான் என்னுடைய இந்தச் செய்திகளை வெளிப்படையாகக் கூறியவுடன், உங்களுக்கு என் மீது இப்போது என்ன தோன்றியது? நீங்கள் எந்தச் சமயத்திலும் என்னைவெறுக்க மாட்டீர்கள் என்றும், அதற்கு மாறாக ஏற்றுக் கொள்வீர்கள் என்றும்,என்னுடைய நிலைமைகளைப் புரிந்து கொள்வீர்கள் என்றும் நான் நம்புகிறேன்.நான் அப்படியெல்லாம் நடந்து கொண்டதற்குக் காரணம்- உங்களுடைய, நம்முடைய மகனுக்காக மட்டும்தானே!

நான் அப்படியெல்லாம் நடக்காமல் எப்படி இருக்க முடியும்? ஒரு நாள் அவனைப்பெற்றெடுப்பதற்காக நுழைந்த மருத்துவமனைக்குள் வறுமை மிகவும் மோசமான வடிவத்தில் அதன் அனைத்துபயங்கரத்தனத்துடனும் எனக்கு முன்னால் வந்து நின்றது. அதே நிலையில்தொடர்ந்தால் நம்முடைய மகன், நல்ல உணவு, வசதியான வீடு, ஆடைகள், கல்வி-இவற்றில் எதுவுமே கிடைக்காத வனாக ஆகிவிடுவான். அவனுடைய இளமையான உடலும்பிஞ்சு மனமும் நொறுங்கிப் போவதற்கும் சோர்வடைந்து போவதற்கும் வறுமைகாரணமாகிவிடும். உங்களுடைய மகன் அவன். பணத்தால் பெறக்கூடிய சுகங்களும்வசதிகளும் அவனுக்குக் கிடைத்தாக வேண்டும். உங்களைப்போல ஒரு பெரிய மனிதனாகவர வேண்டிய வன் அவன். என்னுடைய இந்த சிந்தனைகளுக்கு முன்னால் ஒழுக்கம்பற்றிய சிந்தனைகளும் மரியாதை உணர்வுகளும் எனக்கு அர்த்தமற்றவையாகத் தோன்றின.

நான், என்னுடைய உடலையும் மனதையும் சமர்ப்பணம் செய்த உங்களுக்கு மட்டுமே சொந்தமானவளாக இருந்தேன். ஆனால், நீங்கள் எந்தச் சமயத்திலும் அன்பு செலுத்தியிராத என் உடல் எப்படி ஆனால் என்ன? எனினும், என்னுடைய உடலைக்கட்டி யணைத்தவர்களின் கைகளுக்கோ முத்தங்களுக்கோ அவர்களுடைய அறிவு கெட்டகாதல்களுக்கோ எதனாலும் என் இதயத்தையோ மனதையோ சிறிது கூட தொட்டுப் பார்க்க முடியவில்லை. என்னுடைய அனுபவங்கள், அவர்களின் நிறைவேறாத காதல் செயல்களால் என்னை அவர்கள்மீது இரக்கம் கொண்டவளாக ஆக்கிய போதுகூட, மனதால் நான் எப்போதும் உங்களுக்கு மட்டுமே சொந்தமானவளாகவே இருந்தேன்.

என் காதலர்களாக வந்தவர்கள் எல்லாரும் என்னிடம் மிகுந்த அன்புடனும்ஆதரவுடனும் நடந்து கொண்டார்கள். அது மட்டு மல்ல- என்னுடைய எப்படிப்பட்டதேவைகளையும் நிறைவேற்றித் தருவதற்கு அவர்கள் எப்போதும் தயாராக இருந்தார்கள். அவர்கள் எனக்கு பரிசுப் பொருட்களை அள்ளித் தந்தார்கள்.

டைராலில் உள்ள வசதியான குடும்பத்தில் பிறந்த ஒரு மனிதரும் என்னுடைய காதலராக இருந்தார். அவருடைய மனைவி இறந்து போய் விட்டாள். அவருக்கு என்மீது ஆழமான காதல் இருந்தது. நம்முடைய மகனை தன் சொந்த மகனைப்போல அவர் பாசம்செலுத்தினார். உயர்ந்த குலத்தையும் ஜாதியையும் மட்டுமே சேர்ந்தவர்கள்படிக்கக் கூடிய பள்ளிக்கூடத்தில் அவனுக்குப் படிப்பதற்கு ஏற்பாடு செய்தவர்அவர்தான். அதற்காக எல்லாவிதமான செல்வாக்குகளையும் அவர் பயன்படுத்தினார்.அவர் என்னிடம் பல தடவைகள் திருமண விஷயமாகப் பேசினார். ஆனால், எந்தச்சமயத்திலும் நான் சம்மதிக்கவில்லை. நான் அவரைத் திருமணம் செய்திருந்தால்,செல்வங்களுக்குத் தலைவியாக இருக்கும் ஒரு வசதி படைத்த பெண்ணைப்போல நான்வாழ்ந்திருப்பேன். என் மகனுக்கு அன்பையும் பாசத்தையும் அள்ளித் தரக்கூடியஒரு தந்தையும் கிடைத்திருப்பார். ஆனால், நான் அதை மறுத்துவிட்டேன். அன்றுநான் அதை ஏற்றுக் கொண்டிருந்தால், பாதுகாப்பான ஒரு வாழ்க்கை எனக்கும் என்மகனுக்கும் கிடைத்திருக்கும். இப்போது நான் மகனை நான் இழந்திருக்கவேண்டியதில்லை.

நான் ஏன் அதை வேண்டாமென்று கூறினேன் என்று உங்களுக்குத் தெரியுமா? இந்தஇறுதி நிமிடத்தில் நான் அதை உங்களிடம் கூறுகிறேன். நான் எந்தச்சமயத்திலும் யாருக்கும் கீழே வாழ விரும்பியதில்லை. காரணம்- நான் என்னுடைய சுதந்திரத்தைக் காப்பாற்ற வேண்டியதிருந்தது. ஏனென்றால், உங்களை நினைத்துதான். என் மனதில் உங்களுடன் சம்பந்தப்பட்ட பழைய காலங்கள் மீண்டும் ஓடிக் கொண்டேயிருந்தன. அப்படிப்பட்ட நேரங்களில் நான் கனவு கண்டேன்.காத்திருந்தேன்- என்றாவது ஒரு நாள் நீங்கள் என்னைத் திரும்ப அழைப்பீர்கள்என்று. அது சிறிது நேரத்திற்கே என்றாலும்கூட, எந்தவித தடையும் இல்லாமல்உங்களுக்கு அருகில் ஓடி வருவதற்கு அன்று நான் என்னுடைய சுதந்திரத்தைப்பாதுகாத்து வைத்திருக்க வேண்டியதிருந்தது. அதற்காக நான் என்னுடையவாழ்க்கையை ஒரு பிணைப்பிலும் சிக்க வைத்துக் கொள்ளாமல் கவனமாக இருந்ததுடன்வேறு எதுவுமே தேவையில்லை என்பதிலும் உறுதியாக இருந்தேன்.

உண்மையாக சொல்லப் போனால், எனக்குள் பெண்மைத்தனம் என்ற ஒன்றுதோன்றியதிலிருந்து என் வாழ்க்கை முழுவதும் ஒரே ஒரு காத்திருப்புதானே!உங்களுக்கான நீண்ட காத்திருப்பு!

நாடக அரங்கங்கள், இசை அரங்கங்கள் ஆகியவற்றைப் போன்ற ஏராளமான இடங்களில்நான் உங்களைப் பல நேரங்களிலும் பார்த்திருக்கிறேன். பார்க்கும் நேரங்களில் என்னுடைய இதயம் வேகமாகத் துடித்துக் கொண்டிருந்தது. வீண்... வீண்.. என்றுதெரிந்து கொண்டே, நீங்கள் என்னை அடையாளம் தெரிந்து கொள்வீர்கள் என்று நான் எதிர்பார்த்தேன். ஆனால், எந்தவொரு நேரத்திலும் அது அப்படி நடக்கவில்லை.முற்றிலும் யாரென்று தெரியாதவர் களுக்கு மத்தியில் நடந்து செல்வதைப் போல நீங்கள் கடந்து செல்வீர்கள். அப்படியே இல்லையென்றாலும், நீங்கள் எப்படி என்னை அடையாளம் தெரிந்து கொள்ள முடியும்? நான் தோற்றத் தில் எவ்வளவோமாறிப் போய் விட்டிருந்தேன். முன்பு சுற்றிலும் வட்டமிட்டுப் பறந்து கொண்டிருந்த ஆர்வம் நிறைந்த கண்களுடனும், பயம் கலந்த கூச்சத்துடனும் நின்றிருந்த அந்தச் சிறுமியாகவோ, பிறகு உங்களுக்காக கன்னித் தன்மையைச் சமர்ப்பணம் செய்த வெட்கப்படக் கூடிய இளம் பெண்ணாகவோ நான் அப்போது இல்லையே! வழிபாடு செய்யக் கூடியவர்களால் வழிபடப்பட்டு, நன்கு ஆடைகள் அணிந்து காட்சியளித்த ஒரு இளம் பெண்ணாயிற்றே நான்.

சில நேரங்களில் என்னுடன் உங்களுக்கு நன்கு தெரிந்தவர்களும் இருப்பார்கள். நான் உங்களையும், நீங்கள் அவர்களையும் வணங்குவதும், பதில் வணக்கம்பெறுவதும் நடக்கும். அபூர்வமாக பேசினோம் என்பதும் நடக்கும். அப்போதுஅவர்களுடன் இருக்கக் கூடிய என்னை நீங்கள் சாதாரணமாகப் பார்ப்பதுண்டு.ஆனால், அந்தப் பார்வைகள் எதிலும் என்னை யாரென்று தெரிந்து கொண்டதற்கான ஒருசிறு சலனம்கூட இருந்ததை நான் பார்த்ததே இல்லை. அப்படி நடக்கவே நடக்காதுஎன்று தெரிந்து கொண்டே நான் வெறுமனே ஓரக் கண்களால் அந்த முகத்தையேபார்ப்பேன். ஆனால், அந்தக் கண்களில் சிறிதும் யாரென்று தெரியாது என்றவெளிப்பாடு இருக்கும்.

ஒரு நாள் மிகவும் கடுமையான வேதனையை உண்டாக்கிய ஒரு சம்பவம் நடந்தது. ஆப்பரா ஹாலில் அன்றைய என்னுடைய காதலருடன் நான் அமர்ந்திருந்தேன். மிகவும்அருகில் இருந்த நாற்காலியில் அறிமுகமில்லாத மனிதரைப் போல நீங்கள் உட்கார்ந்திருந்தீர்கள். அப்போது என் மனம் துடிக்க ஆரம்பித்தது. ஆப்பராஹாலின் விளக்குகள் அணைந்தபோது, முகத்தைப் பார்க்க முடியாத இருட்டில் நான் உங்களுடைய மூச்சு சத்தத்தைக் கேட்டேன்- அன்று ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்த இரவு நேரத்தில் நடந்ததைப்போல எனக்கு முழுமையாக ஒரு இக்கட்டான சூழ்நிலையாக அது இருந்தது. அமர்ந்திருந்த இடத்தில், என் கையை வைத்திருந்த இடத்திற்கு மிகவும் அருகில்உங்களுடைய, என்னை இறுக அணைக்கவும் தழுவவும் செய்த அந்த அழகான கை இருந்தது. என்னுடைய கட்டுப்பாட்டை இழந்துவிட்டதைப் போல, அந்தக் கையில் சற்றுஅழுத்தி முத்தமிட என் மனம் துடித்தது. நான் என்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள படாதபாடுபட்டேன். அதற்குப் பிறகும் எனக்குள் உங்கள் மீது இருந்தஅளவற்ற மோகங்கள் உணர்ச்சிகளுடன் வந்து மோதுவதை அறிந்தபோது, தாங்கிக்கொள்ள முடியாமல், ஆப்பராவின் முதல் காட்சி முடிந்தவுடன் நான் வெளியேறிவிட்டேன். என்றென்றைக்கும் என்னுடைய அன்பிற்குரியவரான நீங்கள் எனக்கு அருகில் ஒரு அறிமுகமில்லாத மனிதரைப்போல உட்கார்ந்திருக்கும் அந்த மோசமான சூழ்நிலையில் அங்கு உட்கார்ந்திருப்பதை என்னால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை.

அந்த வகையில் இறுதியில் ஒருநாள் என்னுடைய காத்திருத்தலுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் பலன் உண்டானதைப்போல அந்த இனிய நிமிடம் வந்து சேர்ந்தது. அன்றும் என்னை நீங்கள் யார் என்று அடையாளம் கண்டுபிடிக்கவில்லையென்றாலும்... அன்று மட்டுமில்லையே! வாழ்க்கையின் எந்தவொரு நேரத்திலும் உங்களுக்காக மட்டுமே வாழ்ந்த என்னை நீங்கள் யார் என்று தெரிந்து கொள்ளவே இல்லையே!

உங்களுக்குச் சொந்தமானது எதுவும் எனக்கு விருப்பமானதுதான். உங்களுடன் சேர்ந்து இருக்கும் நிமிடங்கள்கூட அளவில் பெரியவைதான். அப்படிப்பட்ட ஒருவிலை மதிப்புள்ள நிமிடம் என் இளம் வயதில் அந்த சங்கமத்திற்குப் பிறகு உண்டானது. அது நீண்ட காலத்திற்கு முன்பு நடந்த ஒன்றல்ல. உங்களுடைய கடந்துசென்ற பிறந்த நாளன்றுதான். ஒரு வருடத்திற்கு முன்புதான். சாதாரணமாக இருப்பதைவிட என் மனமும் சிந்தனைகளும் உங்களுடன் கலக்கக் கூடிய ஒருசந்தர்ப்பமாக அது இருந்தது. உங்களுடைய எல்லா பிறந்த நாட்களும் எனக்குத் திருவிழாக்களாக இருந்தன. அன்றும் எப்போதும்போல உங்களுக்கான பிறந்தநாள் பரிசாக வெள்ளை நிற ரோஜா மலர்களை வாங்கி அனுப்பினேன். சாயங்காலம் நம்முடைய மகனுடன் ஒரு சிறிய உல்லாசப் பயணத்திற்கும், இரவில் நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து ஒரு நாடகம் பார்க்கவும் சென்றோம். என்ன விஷயம் என்று கூறாவிட்டாலும், வாழ்க்கையில் மிகவும் முக்கியமான நாள் என்று நான் அவனிடம்சொன்னேன்.

அந்தக் காலத்தில் நான் ப்ரன்னனில் மிகவும் வசதி படைத்த ஒரு இளைஞருடன் சேர்ந்து வாழ்ந்தேன். அவர் என்னுடன் இரண்டு வருடகாலம் சேர்ந்து வாழ்ந்தார். என்மீது கொண்ட ஆழமான காதல் காரணமாக, மற்ற பலரையும்போல,தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி அவர் என்னை வற்புறுத்திக்கொண்டிருந்தார். ஆனால், எப்போதும் செய்வதைப் போலவே அவருடைய வேண்டுகோளையும் நான் மறுத்து விட்டேன். எனினும், என்மீதும் நம்முடைய மகன் மீதும்அவர் காட்டிய அன்பும் ஆதரவுகளும் என்னுடைய பரிதாபத்திற்கு அவரைப் பாத்திரமாக ஆக்கின.

அன்று உங்களுடைய அந்த பிறந்த நாளன்று ஒரு இசை நிகழ்ச்சியைக் கேட்பதற்காகப் போயிருந்தோம். அங்கு எங்களின் சில நண்பர்களும் இருந்தார்கள். நாங்கள் எல்லாரும் சேர்ந்து ஒன்றாக உணவு சாப்பிட்டுக் கொண்டே உரையாடிக் கொண்டும் நேரத்தைச் செலவிட்டுக் கொண்டும் இருந்தபோது, நான் ஒரு கருத்தைச் சொன்னேன்:

“நாம் எல்லாரும் சேர்ந்து நடன அரங்கத்திற்குச் செல்வோம்!”

அது ஒரு கருத்தாக இல்லை. விருப்பமாக இருந்தது. சாதாரணமாகவே எனக்கு நடனஅரங்குகள் பிடிக்காது என்பது மட்டுமல்ல- தாங்க முடியாத மன அமைதிக் குறைவு அங்கு உண்டாகும். காரணம்- மூக்கு நுனி வரை மது அருந்திக் கொண்டும் புகைபிடித்து இழுத்துக் கொண்டும் மனிதர்கள் அந்த மாதிரியான இடங்களில் சுயஉணர்வே இல்லாமல்தான் ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் இருப்பார்கள்.போதையின் உச்சத்தை வெளிப்படுத்தும் அந்த சந்தோஷம் என்ன காரணத்தாலோ எனக்கு மிகுந்த வெறுப்பை அளிக்கக் கூடியதாக இருந்தது. அதனால் சூழ்நிலையின் கட்டாயம் உண்டாகும்போது மிகவும் அபூர்வமாக மட்டுமே நான் நடன அரங்கிற்குச் செல்வேன். ஆனால், அன்று என் மனதிற்குள் பலமான ஒரு உள் கட்டளை பிறந்ததைப் போல, அங்கு ஏதோ என்னை எதிர்பார்த்துக் காத்திருப்பதைப் போல எனக்குத் தோன்றியது. அதனால்தான் நானே அப்படிப்பட்ட ஒரு வேண்டுகோளை வைத்தேன். எப்போதும் என்னுடைய எப்படிப்பட்ட கருத்துக் களுக்கும் விலைகற்பிப்பதற்கும் எந்த விருப்பங்களாக இருந்தாலும் அவற்றை நிறைவேற்றிவைப்பதற்கும் என்னுடைய நண்பர்கள் அவசரப்படுவார்கள். எப்போதும் போல அன்றும் எல்லாரும் என்னுடைய கருத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார்கள்.


அன்று அந்த நடன அரங்கில் இருந்தபோது நான் ஒயின் குவளைகளை பல முறைகள் காலிபண்ணினேன். போதை தலைக் கேறி ஆடியவர்களுக்கு மத்தியில் அன்று நானும்பாடவும் ஆடவும் செய்தேன். சோர்வே தெரியாமல் நான் நடனமாடினேன். திடீரென்று என்னுடைய இதயத்தை ஒரு சிற்பத்தைப்போல அசைவே இல்லாமல் ஆக்கி விட்டு, அந்தக்காட்சி கண்களில் பட்டது. நான் நடனம் ஆடிக் கொண்டிருந்த இடத்திற்கு அதிக தூரத்தில் அல்லாத மேஜைக்கு அருகில் நீங்கள் ஒரு நண்பருடன்உட்கார்ந்திருந்தீர்கள். அந்தக் கண்கள் என்னையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தன. ஆமாம்... முதன் முதலாக நான் பார்த்த அதே பார்வை. என்னை காம உணர்ச்சிக்கு ஆளாக்கி, ஆடைகளை அவிழ்த்து இறுக அணைத்துக் கொள்வதைப் போன்ற அந்தப் பார்வையில் காலிலிருந்து தலை வரை நான் புத்துணர்வு பெற்றதைப் போலஉணர்ந்தேன். அப்போது என்னுடைய உணர்ச்சி வசப்பட்ட வெளிப்பாடுகளை வேறுயாராவது பார்த்து விடுவார்களோ என்ற பதைபதைப்பு எனக்கு உண்டானது. ஆனால்,மற்ற எல்லாரும் பாட்டிலும் ஆட்டத் திலும் மூழ்கிப் போய் விட்டிருந்தனர்.

எனக்குள் நெருப்பு படர்வதைப்போல பார்வைகள் பற்றி எரிந்து கொண்டிருந்தன. நீங்கள் என்னை யார் என்று அடையாளம் கண்டு பிடிக்கவில்லை. அதற்கு மாறாகஎன்னுடைய உடலின் வடிவமும் உடலமைப்பும் உறுப்புக்களின் முழுமையும் உங்களிடம் காமத்தைக் கிளர்ந்தெழச் செய்திருக்க வேண்டும் என்ற விஷயம் எனக்கு அப்போதே தெரியும். துடித்துக் கொண்டிருந்த அந்த நிமிடங்கள் உங்களுக்குப் புரியாமல் இருக்காது. உங்களுடைய கண்கள் என்னிடம் உண்டாக்கிய மோகம்...

அப்போது நீங்கள் வேறு யாருடைய கவனத்திலும் படாமல் தலையை ஆட்டிக் கொண்டே என்னிடம் ஒரு சைகை காட்டியவாறு, நண்பரிடம் விடைபெற்று விட்டுவெளியேறினீர்கள். அந்த தலை ஆட்டலின் மவுன மொழி “கொஞ்சம் வெளியே வரமுடியுமா?” என்பதாக இருந்தது என்பதை நான் யூகித்தேன். கதவைக் கடக்கும்போதுமீண்டும் திரும்பிப் பார்த்த உங்களின் கண் அசைவுகளில் என்னை எதிர்பார்த்து காத்து நிற்பீர்கள் என்ற ஒரு அறிவிப்பு வெளிப்பட்டது.

அங்கிருந்து வெளியேறி உங்களை எப்படிப் பின் தொடர்வது என்ற ஒருதர்ம சங்கடமான நிலை எனக்கு முன்னால் நின்று கொண்டிருக்கும் போது, அதிர்ஷ்டத்தின் பார்வைபட்டது. எல்லாருடைய கவனத்தையும் ஈர்த்துக் கொண்டுஇரண்டு கறுப்பினத்தைச் சேர்ந்தவர்கள் கரடுமுரடான குரலில் ஏதோ பழமையான பாட்டைப் பாடியவாறு நடனமாட ஆரம்பித்தார்கள். உடனே திரும்பி வருவதாக என்னுடைய பண வசதி படைத்த ப்ரன்னன் காதலரிடம் கூறிவிட்டு, நான் வேகமாக உங்களைப் பின் தொடர்ந்தேன்.

என் மனம் துடித்துக் கொண்டிருந்தது. ஒருவேளை, நீங்கள் என்னை யார் என்று அடையாளம் கண்டு பிடித்து விட்டீர்களோ? அப்படியென்றால், கதை எப்படிஇருக்கும்?

நான் வெளியே வந்தபோது, நடன அரங்கிற்கு வெளியே இருந்த வராந்தாவில் பணிவுடன், அதே நேரத்தில் பொறுமை இல்லாமல் நீங்கள் என்னை எதிர்பார்த்துக்கொண்டு நின்றிருந்தீர்கள். என்னைப் பார்த்தவுடன் அந்த முகம் சாதாரணமாக இருப்பதைவிட பிரகாசமாக ஆனது. பிறகு என்னைப் பார்த்து வசீகரமும் மெல்லியதுமான அந்தச் சிரிப்பைச் சிரித்தார்கள். அப்போதும் நீங்கள் என்னை யார் என்று அடையாளம் தெரிந்து கொண்டிருக்கவில்லை. உங்களைப் பொறுத்த வரையில் அந்த இணை சேரல் புதிய ஒரு காதலியுடன் உள்ள முதல் சங்கமம் மட்டுமே. உங்களுடன் சேர்ந்து சிறிது நேரத்தைச் செலவழிப்பதற்கு எனக்கு ஆட்சேபணை இருக்கிறதா என்று தயங்கி நின்று கொண்டிருக்காமல் என்றாலும், ஒரு ரகசியத்தைக் கூறுவதைப் போல நீங்கள் அப்போது என்னிடம் கேட்டீர்கள்.

நான் எப்போதும் காதுகளைத் தீட்டி வைத்துக் கொண்டிருக்கும் அந்தக் கேள்விக்குச் சாதகமாக அல்லாமல் நான் என்ன பதில் கூறுவேன்? அப்போது நான்வேறு என்ன செய்ய முடியும்? எனினும், அப்போது நீங்கள் என்னை வெறுமொரு விலைமாதுவாக நினைத்து விட்டீர்கள் என்ற விஷயம் எனக்குள் தாங்க முடியாத வேதனையை உண்டாக்கியது. கேள்வி கேட்ட அடுத்த நிமிடமே வந்த என்னுடைய சம்மதத்தை வெளிப்படுத்திய பதில், அன்று நம்முடைய முதல் சந்திப்பின்போது ஒருஎதிர்ப்பும் கூறாமல் என்னுடைய சம்மதத்தைச் சொன்னபோது உங்களிடம் அதுஉண்டாக்கிய அதே ஆச்சரியமும் சந்தோஷமும் அந்தக் கண்களில் தெரிவதை என்னால் பார்க்க முடிந்தது. எனினும், எனக்கு எப்போது வசதியாக இருக்கும் என்று நீங்கள் மரியாதையுடன் கேட்டீர்கள்.

“உங்களுடைய விருப்பம்போல... எப்போது வேண்டுமானாலும்...”

அந்த திகைப்பின் அலைகள் முழுவதும் மறையாமலே, நீங்கள் எப்போது நடக்கவேண்டும் என்ற மனக் குழப்பத்தில் மூழ்கி விட்டதைப்போல சிறிது நேரம் நின்றுவிட்டீர்கள். பிறகு, கேட்டீர்கள்:

“இப்போது முடியுமா?”

“நிச்சயமாக...” நான் எந்தவொரு தயக்கமும் இல்லாமல் சம்மதித்தேன்.

என்னுடைய வெளியே அணியும் ஆடையை என்னுடன் வந்திருந்த காதலர், நண்பர்கள் ஆகியோர்களின் கோட்டுகளுடன் ஆடைகள் வைக்கப்படும் அறையில் ஒன்றாக இருக்கட்டும் என்று அவர் ஒப்படைத்திருந்தார். அதற்கான டோக்கன் அவருடைய கையில் இருந்தது. அப்போது அதைச் சென்று வாங்க முடியாதே! உங்களுடன் வராமல் இருக்க என்னால் சிறிதும் முடியாது. காரணம்- நான் ஆசைப்பட்டு மோகம் கொண்டுகாத்திருந்த செல்வம்... பல வருடங்களாக உள்ள என்னுடைய காத்திருப்பின் பலன்... அதை நான் இழந்துவிடக் கூடாது.

அந்தச் சூழ்நிலையில் நான் உங்களுடன் வரும் பட்சம், என்மீது கொண்ட அளவற்றகாதலால் மூச்சு விட முடியாமல் இருக்கும் ப்ரன்னனைச் சேர்ந்த என்னுடையஅந்தக் காதலரை நான் அவமானப் படுத்தியவளாக ஆவேன். என் செயலின் விளைவாக அவர் மற்றவர்களுக்கு முன்னால் அவமானப்பட்டு நிற்பார். யாருடன் வேண்டுமானாலும்எப்போது வேண்டுமானாலும் வெளியேறிப் போகக்கூடிய ஒருத்தியைத்தான் இதுவரை தன்னுடன் வைத்துக் கொண்டு நடந்து திரிந்திருக்கிறார் என்று நிச்சயமாக அவர் கிண்டல் செய்யப்படுவார். அது மட்டுமல்ல- என்னுடைய நன்றி கெட்ட அந்தச் செயல், அவர் என்னை என்றென்றைக்குமாக உதறி விடுவதற்கும் காரணமாக இருக்கும். அது என்னுடைய வாழ்க்கையையும், நம்முடைய மகனின் வாழ்க்கையையும் மோசமான விதத்தில் பாதிக்கவும் செய்யும். இந்த விஷயங்கள் அனைத்தையும் புரிந்திருந்தாலும், நான் முன் வைத்த காலை பின்னால் எடுக்கத் தயாராக இல்லை. உங்களுடன் இருக்கக் கிடைத்திருக்கும் பேரதிர்ஷ்டம் சிறிது நேரத்திற்குத்தான் என்றாலும் கூட என்னால் அதை நிராகரிக்க முடியவில்லை. எதை இழக்க நேரிட்டாலும், அதற்கு இணையாக வேறெதுவும் வராது- வாழ்க்கை கூட.

உங்கள் மீது எனக்கு இருக்கும் காதலின் ஆழமும் பரப்பும் எந்த அளவிற்குப் பெரியவை என்பதை உங்களுக்குப் புரிய வைக்கக்கூடிய தயார் நிலையின் பகுதியான ஒரு முயற்சியாக இந்த விளக்கத்தை கணக்கில் எடுத்துக் கொண்டால் போதும். என்னுடைய மரணப் படுக்கையில் இருக்கும்போது நீங்கள் என்னை அழைத்தாலும், உயிரின் துடிப்பு எஞ்சியிருந்தால், நான் உங்களின் விருப்பத்தை நிறைவேற்றக்கூடியவளாக இருப்பேன். அதற்கான தைரியம் எனக்கு என்ன காரணத்தாலோ எனக்குள் இருக்கிறது என்று எனக்குத் தெரியும்.

அப்படித்தான் ஒரு வாடகைக் காரில் நாம் உங்களின் வீட்டை அடைந்தோம். பயணத்திற்கு மத்தியில் உங்களுக்கு அருகில் உட்கார்ந்து கொண்டு நான் அந்த இனிய பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தேன். அந்த சமீப இருத்தலும் பேச்சும் சேர்ந்து இருந்ததால் நான் அதிகமாக உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தேன். பத்து வருடங்களுக்கு முன்பு நான் உங்களுடன் சேர்ந்து ஏறிய அந்தப்படிகள்... கடந்த காலமும் நிகழ்காலமும் எனக்குள் ஒரு இந்திர ஜாலத்தைஉண்டாக்கிக் கொண்டிருந்தன. நான் இரண்டு காலங்களிலும் ஒரே நேரத்தில் வாழ்வதைப் போல எனக்கு அப்போது தோன்றியது. சுவரில் சில புதிய படங்களையும்மேலும் சில புத்தகங்களையும் தவிர, கடந்து சென்ற பத்து வருடங்கள் அந்த அறைக்குள் பெரிய அளவில் மாறுதல்கள் எதையும் உண்டாக்கியிருக்கவில்லை. அந்த வீட்டிற்குள் எனக்கு மிகுந்த நெருக்கமும் நன்கு பழகிய உணர்வும் உண்டாயின.

மேஜை மீது இருந்த பூப்பாத்திரத்தில் முந்தைய நாள் நான் உங்களுக்குப் பிறந்தநாள் பரிசாக அனுப்பி வைத்திருந்த வெள்ளை நிற ரோஜா மலர்கள் இருந்தன.அப்போதும் வாட்டத்தின் நிழல் படியாமல், சிரித்துக் கொண்டிருப்பதைப்போல அவைஇருந்தன. எப்போதும் உங்களை வழிபடும், உங்களுக்கு மட்டுமே சொந்தமான, அந்தநிமிடத்தில் நீங்கள் காதல் வசப்பட்டு கட்டிப் பிடித்துக் கொண்டுநின்றிருந்த இந்த நான்தான் அந்த மலர்களை உங்களுக்கு அனுப்பிவைத்திருக்கிறேன் என்ற விஷயமே உங்களுக்குத் தெரியாதே! எனினும், என்னுடையஅந்தப் பரிசுப் பொருட்களை நீங்கள் கவனம் செலுத்திப் பாதுகாத்துவைத்திருப்பதைப் பார்த்த வுடன், எனக்கு அந்த மலர்களை உங்களுக்கு அனுப்பிவைப்பதற்கு முன்பே, அதிலிருக்கும் ஒவ்வொன்றின் இதழ்களையும் எத்தனை முறைகள்நான் முத்தமிட்டிருப்பேன் தெரியுமா?

அந்த இரவு முழுவதும் நாம் உடலோடு உடல் சேர்ந்து உடலுறவில் கிடைக்கும் சொர்கங்களைத் தேடிக் கொண்டிருந்தோம். என்னுடைய ஒவ்வொரு உறுப்பிலும் நீங்கள் உதட்டை வைத்து அழுத்தி முத்தமிட்டீர்கள். உணர்ச்சிப் பெருக்கில் எனக்குள் காமத்தின் நெருப்பு படர்ந்து பிடித்தது. ஆனால், உங்களுடைய காம இச்சைகளுக்கு ஒரு விலைமாதுவையும் காதல் வசப்பட்டு பரவச நிலையில் இருக்கும் காதலியையும் வேறுபடுத்திப் பார்க்கத் தெரியவில்லையே என்பதைப் பற்றி அப்போது கூட நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். உங்களுடைய இரண்டு மாறுபட்ட குணநிலைகள் என்னை ஆச்சரியப்படச் செய்தன. என்னுடைய இளம் வயதில் உங்கள் மீது என்னை ஈடுபாடு கொள்ள வைத்த அந்த சிறப்புத் தன்மை.... அறிவுப்பூர்வமாகவும் உடல் ரீதியாகவும் உள்ள உணர்ச்சி களின் காமக் கலக்கல்... வாழும் நிமிடங்களின் சந்தோஷத்தில் மூழ்கி, அதன் அனைத்து சுகங்களையும் அனுபவிக்கக்கூடிய சிறப்புத் தன்மை உங்களிடம் இருந்த அளவிற்கு வேறு யாரிடமும் நான் பார்த்ததில்லை அந்த நிமிடங்களில் மட்டுமே மனதை முழுமையாகக் கரைந்து இருக்கும்படி செய்து, மீதி எல்லா விஷயங்களையும் மறந்து விடுவது... அந்த சுகமான நிமிடங்கள் முடிந்து விட்டால், அதையும் மனிதத் தன்மை சிறிதும்இல்லாமல் மறந்து விடுவது... ஒரு நூலிழையின் தொடர்புகூட இல்லாமல்!

உண்மையாகக் கூறப்போனால், நானும் அப்போது அதே மாதிரியான ஒரு நிலையில்தான் இருந்தேன். உங்களுடைய அந்த உடலை இறுகக் கட்டிப் பிடித்துக் கொண்டு, உடலின் வெப்பத்தையும் உணர்ச்சிப் பெருக்கையும் ஏற்றுக் கொண்டு, ஒரு களைப்பு நிறைந்த உச்ச நிலையில் கண்களை மூடிப் படுத்திருக்கும்போது நானும் மறந்து விட்டேன். என்னுடைய நேற்றுகள், இளைமைக் காலம், உங்களின் குழந்தையின் தாய்என்ற விஷயம்... இப்படி அனைத்தையும். ஆனந்தத்தின் அலை மோதலில் வேகமாக நடக்கும் போது, அந்த இரவு எந்தச் சமயத்திலும் முடியவே முடியக்கூடாது என்று நான் என் மனதிற்குள் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தேன். ஆனால், காலத்தைக் கயிறால் கட்டி வைப்பதற்கு யாரால் முடியும்? எவ்வளவு வேகமாக இரவு முடிவடைந்து விட்டது என்று மனதில் வருத்தம் உண்டானது.

இன்ப விளையாட்டுகள் இரவின் பிற்பகுதியிலும் நீண்டு நின்றதாலோ, சுகமான அந்த இரவின் மந்திரத் தன்மையாலோ நன்றாக உறங்கி விட்டேன். காலையில் சற்றுதாமதமாகவே கண் விழித்தேன். நான் புறப்படுவதற்காகத் தயார் பண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால், காலை உணவு சாப்பிடாமல் போகக் கூடாது என்ற உங்களின் வற்புறுத்தலுக்கு, பிற தேவைகளுக்கு “சரி” சொன்னதைப் போல சம்மதிப்பதைத் தவிர எனக்கு வேறு வழியில்லையே! காலை உணவு சாப்பிடுவதற்கு மத்தியில் நீங்கள் சர்வசாதாரணமான முறையில் தமாஷான உரையாடலில் ஈடுபட்டீர்கள். ஒருவிஷயம் என்னவென்றால் என்னுடைய விளக்கங்களை முன்பு ஒன்றாக இருந்தபோது உள்ளதைப்போலவே, அதிகமாகத் தெரிந்து கொள்வதற்கு நீங்கள் ஆர்வம் காட்டவில்லை. வீட்டைப் பற்றியோ ஊரைப் பற்றியோ எதுவும் கேட்கவில்லை.உங்களுக்கு அப்போது கூட நான் ஒரு ஊரும் பெயரும் இல்லாத பெண்ணாகவே இருந்தேன். அந்த உரையாடலுக்கு மத்தியில் என்னை சோர்வடையச் செய்யக் கூடிய ஒருசெய்தியை நீங்கள் என்னிடம் சொன்னீர்கள். பல மாதங்கள் நீடித்திருக்கும் ஒருஆஃப்ரிக்க பயணத்திற்கான ஏற்பாட்டில் நீங்கள் இருப்பதாகக் கூறினீர்கள். என்மனம் அந்த செய்தியைக் கேட்டவுடன், துடித்துப் போய்விட்டது.எல்லாவற்றையும்கூறி அந்த கால்களுக்கு கீழே விழுந்து குலுங்கிக் குலுங்கிஅழ வேண்டுமென்று நான் மிகவும் ஆசைப்பட்டேன். அதற்குப் பிறகு உங்களிடம்கூறவேண்டும்:

“என் அன்பிற்குரியவரே, இனியாவது நீங்கள் இங்கு இருப்பவளை யார் என்றுதெரிந்து கொள்ள வேண்டும். பல வருடங்களாக நீடித்தி ருக்கும் இந்தக்காத்திருத்தலுக்கும் சோதனைகளுக்கும் இறுதியிலாவது நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ள வேண்டும்!”

ஆனால் எனக்குள் இருந்த சுய மரியாதையும் கோழைத்தனமும் என்னை எதுவும் கூறவிடவில்லை. அதற்கு பதிலாக நானே அறியாமல் என்னுடைய உதட்டிலிருந்து வெளியேவந்தது “கஷ்டம்...” என்ற வார்த்தையாக இருந்தது.

“என்ன வருத்தமாக இருக்கிறதா?” -வசீகரமான ஒரு புன்சிரிப்புடன் காதல்உணர்வு மேலோங்க நீங்கள் என்னிடம் கேட்டீர்கள். உண்மையாகக் கூறப்போனால்,வருத்தத்தால் எனக்கு பைத்தியம் பிடித்து விடுவதைப்போல தோன்றியது. உங்களையே இமைகளை மூடாமல் பார்த்துக் கொண்டே நான் சொன்னேன்:

“என் அன்பிற்குரியவரே, நீங்கள் எப்போதும் பயணத்தில்தான்...”

சொல்லி முடித்தபோது, இதோ... இப்போது... இந்த நிமிடத்தில்... நீங்கள் என்னையார் என்று கண்டு பிடித்து விடுவீர்கள்... அதற்குப் பிறகு என்னை வாரிஅணைத்து முத்தங்களால் மூடப்போகிறீர்கள் என்று எனக்குத் தோன்றியது. நான்என்னுடைய இதயத்தை அடக்கிக் கொண்டு நின்றிருந்தேன்.

“சிறிது காலம் கடந்த பிறகு, திரும்பி வருவேன்.” என்னைசமாதானப் படுத்துவதைப்போல மெல்லிய ஒரு சிரிப்புடன் நீங்கள் சொன்னீர்கள். மனக் கவலையுடன், “வருவீர்கள். ஆனால், அந்தச் சமயத்தில் என்னை மறந்து விட்டிருப்பீர்கள். அவ்வளவுதான்” என்று நான் கூறிவிட்டேன். என்னுடைய வாக்குகளில் இருந்த தடுமாற்றத் தையும் முகத்திலிருந்த வேதனையையும் புரிந்து கொண்டோ என்னவோ கருணையுடன் என்னைப் பார்த்தவாறு நீங்கள் என்னுடையதோளைப் பிடித்தீர்கள்.

“இல்லை.... மனதில் அழகாகத் தோன்றும் எதையும் மறக்க முடியாது. எந்தச் சமயத்திலும் நான் உன்னை மறக்க மாட்டேன்.” அதைக் கூறியபோது அந்தக் கண்கள் என்னை காலில் இருந்து தலைவரை கூர்ந்து ஆராய்ந்து கொண்டிருந்தன. அந்தப் பார்வையின் மூலம், மனதிற்குள் என் உருவத்தை, என்னையே அள்ளி எடுப்பதைப் போல எனக்குத் தோன்றியது. ஒரு நிமிடம் நான் தவிப்புடன் இருந்தேன். நீங்கள்என்னை அடையாளம் கண்டு பிடிக்கிறீர்கள்... சுவாசத்தை அடக்கிக் கொண்டு நான்காத்து நின்றிருந்தேன். ஆனால், எதுவும் நடக்கவில்லை. அப்படி நின்று கொண்டிருக்கும் போது என்னை இறுக அணைத்துக் கொண்டு நீங்கள் என்னைஅடுத்தடுத்து விடாமல் முத்தமிட்டீர்கள். அது எறிந்து கொண்டிருக்கும் உணர்ச்சிகளின் வெப்பத்தை எனக்குள் பரவச் செய்தது.

உங்களுடைய அந்த அணைப்பின் வேகத்தில் அவிழ்ந்து தாறுமாறாகி விட்ட என்னுடையகூந்தலைக் கட்டி சீர் செய்வதற்காக நிலைக் கண்ணாடிக்கு முன்னால்போய் நான்நின்றேன். அப்போது கண்ணாடியில் நான் பார்த்த காட்சி இதயத்தை வேதனைப்படுத்துவதாக இருந்தது. கழற்றி வைத்திருந்த என்னுடைய மஃப்ளரில் நீங்கள்கொஞ்சம் பண நோட்டுக்களைத் திணித்து வைத்துக் கொண்டிருந்தீர்கள்- ஒரு விலைமாதுவின் இன்பப் பங்காளியாக இருந்ததற்கான கூலி? உங்கள்மீது எனக்குஎந்தவொரு நேரத்திலும் தோன்றாத வெறுப்பு எனக்குள் தோன்றி மேலே வந்தது. அணையை உடைத்துக் கொண்டு பாய்வதற்காக இருந்த அழுகையை அடக்கி நிறுத்துவதற்குநான் படாத பாடு பட்டேன். அந்தக் கன்னத்தில் ஓங்கி ஒரு அடி கொடுக்க வேண்டும் என்றுகூட நான் நினைத்தேன்.

நீங்கள் என்னை அவமானப்படுத்தி விட்டீர்கள். வாழ்க்கை முழுவதும் திரும்பஎதையும் எதிர்பார்க்காமல் உங்களுக்குச் சொந்த மானவளாக வாழ்ந்தவளும்,உங்களுடைய மகனைப் பெற்றெடுத்தவளுமான என்னை நீங்கள் அடையாளம் தெரிந்துகொள்ள வில்லை என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். உங்களை உயிரைவிட அதிகமாகக்காதலித்தவளை ஒரு விலை மாதுவாக நினைத்து ஒரு இரவுக்கான கூலியைத் தருவதுஎன்பது...!

அதற்குப்பிறகு அங்கு ஒரு நிமிடம்கூட என்னால் நின்று கொண்டிருக்க முடியவில்லை. எவ்வளவு வேகமாக அங்கிருந்து புறப் பட முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அங்கிருந்து போய்விட வேண்டும் என்று நான் மனதில் நினைத்தேன். அதற்காக நான் என்னுடைய தொப்பியைத் தேடினேன். எங்கே இருக்கிறது என்று இங்குமங்கும் பார்த்தேன். மேஜைமீது ரோஜா மலர்கள் வைக்கப் பட்டிருந்த பூப்பாத்திரத்திற்கு அருகில் இருந்தது. அப்போது அந்த வெள்ளை நிற ரோஜா மலர்களைப் பார்த்தபோது, நினைவின் வெளிச்சத்தை நோக்கி உங்களைத் தட்டிஎழுப்பக் கூடிய இன்னொரு இறுதி முயற்சியைச் செய்து பார்க்க வேண்டும் என்றுஎனக்குத் தோன்றியது.

“இந்த மலர்களை எனக்குத் தருவதற்கு ஆட்சேபணை உண்டா?” நான் கேட்டேன். நீங்கள் அந்த மலர்களை ஒன்றாக எடுத்து என்னிடம் நீட்டினீர்கள்.”எடுத்துக்கோ...”

“இல்லை... உங்களுடைய காதலிகளில் யாராவது கொடுத்ததாக இருக்குமே! அப்போது...” நான் பாதியில் நிறுத்தினேன்.

“சில நேரங்களில் இருக்கலாம்... ஆனால், இதை யார் அனுப்பினார்கள் என்று தெரியவில்லை. அதனால்தான் இந்தப் பூக்கள்மீது எனக்கு ஒரு பிரியம்...”

“ஒருவேளை நீங்கள் மறந்துபோய் விட்ட ஏதோ அதிர்ஷ்டமில்லாத பெண்ணாக  இருக்கலாம்...” அந்த முகத்திலிருந்து கண்களை எடுக்காமலே நான் சொன்னேன்.

உங்களுடைய கண்களில் ஆச்சரியத்தின் நிழலாட்டம்... அப்போதாவது நீங்கள்என்னைப் புரிந்து கொள்வீர்கள் என்று நான் கருதினேன். என் மனம் அந்த நிமிடத்திற்காக காதுகளைத் தீட்டி வைத்துக் கொண்டு இருந்தது. ஆனால், அது நடக்கவில்லை. அதற்கு பதிலாக சற்று புன்சிரிப்புடன் நீங்கள் என்னை மீண்டும்அருகில் சேர்த்து வைத்துக் கொண்டு, அணைத்து என் உதட்டில் அழுத்தி முத்தமிடமட்டும் செய்தீர்கள். நிறையத் தொடங்கிய என்னுடைய கண்கள் ததும்புவதற்குமுன்பே உங்களிடமிருந்து அதை மறைக்க வேண்டும் என்பதற்காக, நான் வேக வேகமாக வாசலைக் கடந்தேன். திடீரென்று வேகமாக வந்ததில் வாசலுக்கு அருகில் உங்களின் அந்தப் பழைய பணியாள் ஜான்மீது நான் மோதி விட்டேன். ஜான் ஒரு நொடிப் பொழுதுஎன்னைப் பார்த்தார். பிறகு, வேகமாக விலகி நின்றார். கண்ணீர் திரைச் சீலையின் வழியாக என்றாலும், ஜான் என்னை அடையாளம் கண்டு கொண்டார்என்பதை அவருடைய முகத்தில் நீண்ட பல வருடங்களுக்குப் பிறகு நிமிட நேரத்தில்ஒரு மின்னலைப் போல கண்ட காட்சியில் அவர் என்னை யார் என்று தெரிந்து கொண்டார்! அவருடைய கண்களில் அப்போது இரக்க உணர்வு உண்டானதைப் போலதெரிந்தது. ஆனால், நீங்கள் என்னை அடையாளம் தெரிந்து கொள்வதற்கான வாய்ப்புகளில் ஆயிரத்தில் ஒரு பகுதிகூட இல்லாமலிருக்கும் அவர் என்னைச்சரியாக புரிந்து கொண்டதாக எனக்குத் தேன்றியது. என் மனம் ஜானின்மீது கொண்ட நன்றியால் நிறைந்து ததும்பியது. அவருக்கு முன்னால் முழங்காலிட்டு அமர்ந்து அந்த கைகளில் முத்தமிட வேண்டும்போல எனக்குத் தோன்றியது. என் இதயத்தைக் காயப்படுத்திக் கொண்டு நீங்கள் என்னுடைய மஃப்ளருக்குள் திணித்து வைத்தஅந்தப் பண நோட்டுகளை நான் ஜானின் கையில் ஒப்படைத்தேன்.

அன்பிற்குரியவரே, எனக்கு வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என்று அனைவரும் என் மீது கருணையைப் பொழிகிறார்கள். அன்பால் என்னை மூடுகிறார்கள். என்னை அடையாளம் தெரிந்து கொள்கிறார்கள். என்றும் எனக்கு விருப்பமான நீங்கள்மட்டும் ஒரு முறைகூட எனக்கு யார் என்று அடையாளம் கண்டு பிடிக்கவே இல்லையே!ஒருமுறைகூட என்னைப் புரிந்து கொள்ளவில்லையே!


இப்போது என்னுடைய ஒரே ஆறுதலாக இருந்த நம்முடைய மகனும் என்னை விட்டுப்பிரிந்து விட்டிருக்கிறான். இனி என்மீது அன்பு செலுத்த எனக்கு யாருமேஇல்லை. இந்த பிரபஞ்சத்தில் நான் தனிமைப்பட்டு நிற்கிறேன்.

ஒரு வாழ்க்கைக் காலம் முழுவதும் நான் காத்திருந்தும், நீங்கள் என்னைஎந்தச் சமயத்திலும் புரிந்து கொள்ளவோ யார் என்று தெரிந்து கொள்ளவோ இல்லை. உங்களுடைய தெளிவற்ற நினைவு களில்கூட நான் இல்லை. கால்களுக்கும் கீழே இருக்கும் புற்களை அழுத்தி மிதித்து நடந்து விலகிச் செல்வதைப்போல நீங்கள் என்னிடமிருந்து விலகி விலகிச் சென்றுவிட்டீர்கள். இந்தக் கண்ணீர் குளத்தில் நான் மட்டும் தனியாக எஞ்சி இருக்கிறேன்.

நம்முடைய குழந்தை பிறந்தபோது, அவன் மூலமாக நான் உங்களை எனக்குச் சொந்தமாக்கிக் கொண்டு விட்டேனே என்று நான் நினைத்தேன். ஆனால், இப்போது அவனும் என்னைத் தனியாக விட்டுவிட்டுப் போய்விட்டான். அவன் உங்களுடைய மகனாயிற்றே! இந்த தனிமையை நான் எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்?

இப்போது நான் இந்த வாழ்க்கையை முடித்துக் கொள்வதற்கு நினைக்கிறேன்.இறப்பதற்கு உள்ளுக்குள் விருப்பப்படுவதில் என்ன தவறு இருக்கிறது? யாருக்காக நான் என்னுடைய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தேனோ, அந்த நீங்கள் எந்தச் சமயத்திலும் என்னைப் புரிந்து கொள்ளவில்லை. அந்த நினைவில்ஒரு இடத்திலும் நான் இல்லை. உங்களுடையது என்று கூறிக் கொள்ளும் வகையில்ஒரு வரி குறிப்புகூட எனக்கு கிடைக்கவில்லை. யாராவது சந்தர்ப்பசூழ்நிலையில் என்னுடைய பெயரைக் கூறினாலும் உங்களுக்கு அது கேள்வியேபட்டிராத யாருடைய பெயர் மட்டுமாகவே இருக்கும். உங்களுக்குச் சொந்தமான நம்முடைய பொன்னான மகன்... அவனும் என்னிடம் விடை பெற்றுக் கொண்டு விட்டான். நீங்களோ என்றோ என்னிடமிருந்து விலகிச் சென்று விட்டீர்கள். பிறகு நான் யாருக்காக வாழ வேண்டும்?

நான் உங்களைக் குற்றம் சொல்லவில்லை. என்னால் எந்தச் சமயத்திலும் அதைச்செய்ய முடியாது. சந்தோஷம் நிறைந்த உங்களுடைய வாழ்க்கையில் என்னுடைய கவலைகளின் கருநிழல் படச் செய்வதில்லை. இந்த விஷயங்களையெல்லாம் கூறி நான்இனிமேலும் உங்களுக்கு மன அமைதியைக் கெடுக்கக் கூடியவளாக இருக்க மாட்டேன்.இப்போது, என்னுடைய மகனும் என்னிடமிருந்து பிரிந்து சென்றிருக்கும் வேதனை நிறைந்த இந்தச் சூழ்நிலையில், நான் என்னுடைய கவலைகளை வெளிப்படுத்தியதற்காக எந்தவொரு காரணத்தைக் கொண்டும் நீங்கள் என்மீது கோபப்படக்கூடாது. என்னைவெறுக்கக்கூடாது. நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும். இதுவரை நான் பின்பற்றிய என்னுடைய மவுனத்தை நோக்கி நான் செல்கிறேன். இனி எந்தவொருநேரத்திலும், இந்த உயிரின் இறுதி வரைக்கும் என்னுடைய வருத்தங்களை நீங்கள் கேட்க மாட்டீர்கள்.

வாழ்க்கை முழுவதும், வேறு யாருக்கும் முடியாத அளவிற்கு, உங்களை மட்டுமே காதலித்துக் கொண்டு, உங்களுடைய ஒரு அழைப்பைக் கேட்பதற்கு காத்து...காத்துக் கொண்டு இருந்தவள் நான். இங்கு இருப்பவளின் இறுதிக் குறிப்பு இது.இந்தக் குறிப்பு கையில் கிடைக்கும்போது, ஒருவேளை நீங்கள் என்னைஅழைக்கலாம். ஆனால், அப்போது மட்டும் என் வாழ்க்கையில் முதல் தடவையாக நான் நீங்கள் கூறியபடி நடக்க மாட்டேன். காரணம்- என்னுடைய மரணத்திற்குப் பிறகுதான் இந்தக் குறிப்பு உங்களை வந்து அடையும். மரணத்தின் குளிர்ந்தநீர் நிலைக்குள் வாழ்க்கையின் சத்தங்களும் கனவுகளும் எந்தச் சமயத்திலும்இறங்கிச் செல்ல முடியாதே! உங்களுடைய அழைப்பை என்னால் கேட்க முடியாதே!

என்னை ஞாபகப்படுத்திக் கொள்வதற்காக நான் எதையும் தரவில்லை. நீங்களும்எனக்கு எதையும் தரவில்லையே- உங்களுக்கே தெரியாமல் பரிசாகத் தந்த நம்முடையமகனைத் தவிர! இன்னொரு வகையில் கூறுவதாக இருந்தால், அதனால், இனிகுறிப்பிட்டுக் கூறும்படி எதுவும் இல்லையே! இதுவரை நீங்கள் என்னை யார்என்று தெரிந்து கொண்டதில்லை. இனி என் மரணத்திற்குப் பிறகும் அது அப்படியேஇருக்கட்டும். இப்போது... இந்த இறுதி நிமிடத்தில் ஒரு ஆறுதல் மொழியைக் கேட்பதற்காகக் கூட உங்களை அழைக்கவில்லை. என் உண்மையான பெயரையும் ஊரையும்அனைத்தையும் கூறாமலேயே நான் விடைபெறுகிறேன்.

துயர விதிகளின்படி மட்டுமே வாழ்ந்து முடித்த எனக்கு இப்போது இறப்பதில் சிறிதும் சிரமம் தோன்றவில்லை. ஆனால், என்னுடைய இந்த முடிவு உங்களை வேதனைப்படச் செய்யும் பட்சம், எனக்கு இந்த பூமியையும் உங்களையும் விட்டுப்போவதற்கு மிகவும் சிரமமாக இருந்திருக்கும். ஆனால், இப்போது என்னுடைய வேதனைகள் உங்களுக்குத் தெரியாதே!

என் தலை கனக்கிறது. கை கால்கள் குழைவதைப் போல இருக்கின்றன. உடலெங்கும் வெப்பம் தகிக்கிறது. இனியும் தொடர்ந்து எழுத முடியவில்லை. இப்போதாவது விதி என்னிடம் கருணை காட்டும் பட்சம், எல்லாம் உடனடியாக முடிவுக்கு வந்துவிடும். அப்படியென்றால், நான் தரையிலும் தலையிலும் வைக்காமல் செல்லம்கொடுத்து வளர்த்த நம்முடைய தங்க மகனை யாரோ அலட்சியமாக, புதைப்பதற்காகக்கொண்டு போவதைப் பார்க்காமல் இருக்கக்கூடிய அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தமாதிரி இருக்கும்.

என்றும் என்னுடைய அன்பிற்குரியவரே, இந்த இறுதி நிமிடத்தில் கூட எனக்குள்உங்கள்மீது உள்ள காதல் நிறைந்து வழிந்து கொண்டிருக்கிறது என்பதைத்தெரிந்து கொள்ளுங்கள். எல்லாவற்றையும் இப்போதாவது உங்களிடம் கூறமுடிந்ததில் எனக்கு சந்தோஷமும் திருப்தியும் உண்டாகின்றன.

இப்போதாவது, முழுமையான ஆழத்துடன் இல்லையென்றாலும், எனக்கு உங்கள்மீது உள்ள காதலின் அளவற்ற தன்மையை நீங்கள் புரிந்துகொள்ளாமல் இருப்பீர்களா? எனினும் எதுவுமே... என்னுடைய மரணம்கூட உங்களுடைய வாழ்க்கைக்கு பாதிப்பு உண்டாக்காது என்ற விஷயம் எனக்கு மிகவும் சந்தோஷத்தைஅளிக்கவும் நிம்மதியைத் தரவும் செய்கிறது.

காதலின் அனைத்து நறுமணங்களையும் கொண்ட வெள்ளை நிற ரோஜா மலர்களைப் பிறந்தநாள் பரிசாக இனி யார் உங்களுக்கு அனுப்புவார்கள்?

வாழ்க்கையில் முதலாவதாகவும் இறுதியாகவும், என்னுடைய இந்த இறுதிநிமிடத்தில் நான் ஒன்றைக் கேட்டுக் கொள்ளட்டுமா? நீங்கள் அதை அலட்சியம்செய்ய மாட்டீர்கள் என்று கருதுகிறேன். நான் முத்தங்களால் ஒவ்வொரு இதழிலும்காதலின் முத்திரையைப் பதித்த அந்த வெள்ளை நிற ரோஜா மலர்களைக் கொண்டு, உங்களுடைய வீட்டின் உட்புறங்களை நறுமணம் இருக்கும்படி செய்த அந்தபூப்பாத்திரம் உங்களுடைய பிறந்த நாளன்று எந்தச் சமயத்திலும் வெறுமனே இருக்கக்கூடாது. இறந்தவர்களின் ஆன்மாக்களுக்காகச் செய்யப்படும் புண்ணிய செயலைப் போல நீங்கள் அதில் அந்த நாளன்று பூக்களைக் கொண்டு நிறைக்கவேண்டும். அப்படிச் செய்வீர்கள் அல்லவா? செய்ய வேண்டும். உங்களை மட்டுமே நான் நம்புகிறேன். காதலிக்கிறேன். உங்கள் மூலம் வாழ்வதற்கே எனக்கு விருப்பம். நீங்கள் வெள்ளை நிற ரோஜா மலர்களை நிறைக்க வேண்டும்.

எல்லாவற்றிற்கும் நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். நன்றி...அன்பிற்குரியவரே... நன்றி... என்னைவிட, வேறு எதையும்விட நான் உங்களைக் காதலிக்கிறேன்... நான் காதலிக்கிறேன்... நான் காதலிக்கிறேன்... நான் காதலி...

விடை தாருங்கள்... அன்பிற்குரியவரே... என்றென்றைக்குமாக விடை...”

அவருடைய பலவீனமான கைகளில் இருந்து அந்த கடிதம் கீழே விழுந்தது. அவர் நீண்ட, ஆழமான சிந்தனையில் மூழ்கினார். தெளிவற்ற சில நினைவுகள் மனதில்இருந்தன- பக்கத்து வீட்டில் இருந்த ஒரு சிறுமியின், ஹாலில் நடனமாடும் ஒருபெண்ணின், தெளிவற்ற நினைவுகள். ஆனால், எங்கோ இருந்து, பாய்ந்து கொண்டிருக்கும் அருவியின் அடித்தட்டில், அசைந்து கொண்டும் வடிவமற்றும் இருக்கும் கல்லின் தோற்றத்தைப் போல அந்த நினைவுகள் அனைத்தும் மங்கலாகவும் தெளிவில்லாமலும் இருந்தன. நிழல்கள் ஒவ்வொன்றாக அவருடைய மனதின் குறுக்கேகடந்து சென்றன.

அவை எதுவும் ஒரு ஓவியமாக வடிவம் பெறவில்லை. உணர்ச்சிகள் நிறைந்த உலகத்தில் நினைவுகளின் அலையசைவு இருந்தது. எனினும், எதையும் தெளிவாக நினைத்துப் பார்க்க முடியவில்லை. தான் அந்த வடிவங்களைப் பற்றி கனவில் பார்த்திருக்கலாம் என்று அவருக்குத் தோன்றியது. தெளிவாக மேலும் மேலும் கனவுகளைக் கண்டிருக்கலாம். எனினும், அவை அனைத்தும் கனவுகளின் ஆவிகள் என்றுதான் அவருக்குத் தோன்றியது. அவருடைய கண்கள் எழுத்து மேஜையின் மீதுஇருந்த நீல நிறப் பூப்பாத்திரத்தில் போய் நின்றது. அது காலியாக இருந்தது.பல வருடங்களாகத் தன்னுடைய பிறந்த நாளன்று அது இப்படி காலியாக இருந்ததேயில்லை. அவருக்கு ஒரு உள் நடுக்கம் உண்டானது. அந்த அறையின் பாதுகாப்பிற்கு இன்னொரு உலகத்திலிருந்து வந்த குளிர்ந்த காற்று வீசும் ஒரு கண்ணுக்குத் தெரியாத கதவு தனக்கு முன்னால் திடீரென்று திறக்கப்பட்டதைப்போல அவர் உணர்ந்தார். மரணத்தின் அறிவிப்பு, மரணமில்லாத காதலின் அறிவிப்பு அவரைத் தேடி வந்தது. மனதிற்குள் என்னவெல்லாமோ நிறைந்து மூடின. இறந்துவிட்ட பெண் ணைப் பற்றிய நினைவுகள் இரைச்சலிட்டன. எங்கோ தூரத்திலிருந்து கேட்கும் இசையைப் போல... உடலற்ற... ஆனால், பலம் கொண்டஉணர்ச்சிகளுடன்...

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.