Logo

இதோ இங்கு வரை

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 6579
Itho Ingu varai

ரண்டாவது நாள் வந்தபோதுதான் விஸ்வநாதனுக்கே அதிர்ச்சியுடன் தெரியவந்தது தான் வந்து சேர்ந்திருப்பது தன்னுடைய சொந்த இடம்- தான் பிறந்து வளர்ந்த கிராமம் என்ற உண்மை.

ஒருமுறைகூட இங்கு வரவேண்டுமென்று அவன் மனதில் நினைத்ததேயில்லை. வாழ்க்கையே இங்கிருந்து தப்பிப்பதாக இருந்தது. பத்து வயது நடக்கிறபோது இந்த இடத்தைவிட்டு அவன் விடைபெற்றான். போகும்போது மனதில் இலக்கு என்ற ஒன்று இருந்தது.

அதை அடையும் வரை அலையோ அலையென்று அலைய வேண்டியதிருக்கும் என்பது அவன் எதிர் பார்த்ததுதான். ஆனால், பிறகு இலக்குகள் மாறி விட்டன. நோக்கங்கள் ஒவ்வொரு நாட்களின் வரையறைக்குள் ஒடுங்கிப் போய்விட்டன கடைசியில். நாளொன்றுக்கு ஒரு இலக்கு என்ற கணக்கில் அது போய் முடிந்திருந்தது.

இருபது வருடங்களில் ஊரில் பெரிய மாற்றங்கள் எதுவும் உண்டாகவில்லை. வயல்களும், ஆறுகளும் குளங்களும் இப்போதும் வயல்களாகவும் ஆறுகளாகவும் குளங்களாகவும்தான் இருந்தன. மூலையில் ஒன்றிரண்டு புதிய கடைகள் வந்து சேர்ந்திருந்தன. வானத்திற்குக் குறுக்கே கோடுகள் போட்டுக் கொண்டு மின் கம்பிகள் தெரிந்தன. பரந்து கிடக்கும் வயல்களுக்கு அந்தப் பக்கம் எங்கோயிருந்து அவ்வப்போது வரும் டாங்கர்களின் இரைச்சல் சத்தம் கேட்டது. ஆற்றன் அக்கரையில் இருக்கும் திரைப்படக் கொட்டகையிலிருந்து மாலை நேரக்காட்சிக்கு முன்னால் ஒலிக்கும் கிராமஃபோனின் ‘கரகர’ சத்தம் கேட்டது. இவையெல்லாம் புதியவை. மீதி அனைத்தும் முன்பு இருந்ததைப் போலத்தான்.

பழைய கிளிகள், பழைய கிண்டல்- கேலிகள், பழைய சாராயக் கடைகள், பழைய மனிதர்கள்.

விஸ்வநாதனுக்கு அவை எதுவுமே புதியவில்லை. மனிதர்களின் முகங்களை அவன் உற்றுப் பார்க்கவேயில்லை. உற்றுப் பார்த்து, அப்படிப் பார்த்த முகத்தை ஞாபகமென்னும் பழைய செப்புப் பெட்டகத்திலிருந்து தோண்டி எடுத்துப் பார்த்தால் ஒருவேளை அவனுக்குப் புரிந்திருக்கலாம். ஓ... பாச்சுநாயர்! பாலன் பிள்ளை! வர்க்கிச்சன்! வஹீது மாப்பிள்ளை... அப்படிச் செய்வதாக இருந்தால், அதனால் ஏதாவது பிரயோஜனம் இருக்கவேண்டும். நோக்கம் இருக்க வேண்டும்.

இங்கு அப்படி எதுவுமே இல்லை. இந்த ஊருக்குத் திரும்பி வருவது என்பதுகூட ஒரு அவசியமாக இருக்கவில்லை. பிறகு எதற்குத் தேவையில்லாமல் கஷ்டப்பட வேண்டும்? வேறு எந்த இடத்தை அடைந்தாலும் இங்கு வரவேண்டும் என்றோ இங்கு வந்து தங்க வேண்டும் என்றோ மனதில் தோன்றியதே இல்லை. அலட்சியமாக, எந்தவிதமான குறிக்கோளும் இல்லாத மனதுடன் போய்க் கொண்டிருக்கும் அவன் எதற்கு இங்கு வந்து தங்க வேண்டும்? தன்னுடைய சொந்த ஊர் இதுதான் என்பதைத் தெரிந்து கொண்டதாலா? அப்படி இருக்கும் என்று தோன்றவில்லை. காரணம்- பயணத்திற்கு முடிவு இருக்கிறபோதும் ஒரு இரவில் கிராமத்தின் காற்றை சுவாசிக்கிற போதும் அந்த ஒரு உண்மையை அவன் அறிந்திருக்கவே இல்லையே!

படகு மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. இரண்டு நாட்களாக அதே படகில்தான் அவன் இருக்கிறான். ஏரிகளையும், ஆறுகளையும் தாண்டி படகு பயணித்துக் கொண்டிருந்தது.

விரித்து விடப்பட்டிருந்த பாய்க்குள் காற்று நுழையும்போது பலநேரங்களில் படகின் போக்கு மாறியது. படகோட்டி வேகமாக எழுந்து துடுப்பை எடுக்க முயற்சித்தபோ, அவன் தடுத்தான்.

“வேண்டாம்... அது எவ்வளவு தூரம் போகும்னு தெரியும்.”

“அய்யோ... வந்த வழியிலேயே திரும்பவும் போகுது”- படகோட்டி சொன்னான்.

“போகட்டும்...”

மற்றொரு காற்று வரும். மீண்டும் பயணம் தொடரும்.

படகோட்டிக்கு ஆச்சரியம் தோன்றியிருக்க வேண்டும். இவன் என்ன மனிதன்! பைத்தியம் ஏதாவது பிடித்திருக்கிறதா இவனுக்கு என்று முதலில் சந்தேகம் உண்டாகியிருக்க வேண்டும். இந்தக் காலத்தில் யார் இவ்வளவு தூரம் படகில் பயணம் செய்கிறார்கள்?

அவனுடைய பயத்தைப் புரிந்து கொண்ட அவன் சொன்னான்: “எனக்கு பைத்தியம் கியித்தியம் எதுவும் பிடிக்கல. நான் ஒரு ஓவியன். இந்த ஊர், இதுல இருக்குற நீர் நிலைகள்... இவற்றோட அழகை நான் இதுவரை பார்த்தது இல்ல. எனக்குப் போதும்னு தோணுறது வரை இந்தப் பயணம் தொடரும். உங்களுக்குத் தோணுறப்போ ஓய்வு எடுத்துக்கலாம். அப்படியொண்ணும் அவசரம் இல்ல. ஒவ்வொரு நாளுக்கும் எவ்வளவு கூலி வேணுமோ அதை நான் தந்திருக்கிறேன். ஒருவேளை ரெண்டே நாட்கள்ல என் பயணம் முடிஞ்சாலும் முடிஞ்சிடலாம். சில வேளை அதுவே ரெண்டு வாரங்கள் வரை நீடிக்கலாம். என் கூட இருக்குற நாட்கள்ல உங்களுக்கு என்ன வேணுமோ அதை நான் தர்றேன்!”

இவ்வளவு விஷயங்களையும் கூறுவதற்கு அவனுக்கு நேரம் கொஞ்சம் அதிகமானது. ஒவ்வொன்றையும் கூறும்போது படபோட்டிக்கு நூற்றுக்கணக்கான சந்தேகங்கள் தோன்றின. பொழுது புலர்வதற்கு முன்னால் வந்து தட்டியெழுப்பி இப்படியெல்லாம் கூறிக்கொண்டிருக்கும் ஒரு மனிதனைப் பற்றி சந்தேகம் தோன்றாமல் இருந்தால்தான் ஆச்சரியம். இந்த மனிதன் பைத்தியமாக இருப்பானோ? கொலைகாரனாக இருப்பானோ? யாராலும் பிடிக்க முடியாத மனிதனாக இருப்பானோ? கள்ளக்கடத்தல் செய்யக் கூடியவனாக இருப்பானோ?

படகோட்டியின் குரலில் இந்தச் சந்தேகங்களெல்லாம் இருந்தன. எனினும், வந்திருக்கும் மனிதனின் விலை மதிப்பு கொண்ட ஆடைகளையும் வீங்கியிருக்கும் பாக்கெட்டையும் பார்த்தபோது அவனுக்கு எதையும் கேட்பதற்கான தைரியம் வரவில்லை. “நான் வர்றேன்”- கடைசியில் அவன் சம்மதித்தான். “ஒரு வாரத்திற்குள் திரும்பி வந்திடலாம், வா”- அவன் சொன்னான். மனதிற்குள் அவன் முணுமுணுத்தான்: “உன்னை நான் விடமாட்டேன்- நீ என்ன சொல்லி என்கிட்ட இருந்து தப்ப நினைச்சாலும். அதனால் ஒரு பிரயோஜனமும் இருக்காது.”

அதை அவன் புரிந்து கொண்டிருக்க வேண்டும். கடைசியில் கையில் கிடைத்த ஆள் என்ற முறையில் அவனுடைய தேவை அவசியமாக இருந்தது.

“ஒரு வாரம் நான் வீட்டுல இல்லைன்னா இங்கே பல பிரச்சினைகள் உண்டாகிடும். சம்பாத்தியம்னு எதுவுமே இல்லாத ஆளுங்க நாங்க.”

அவனுடைய முட்டாள்தனமான சிரிப்பை வெறுப்புடன் பார்த்துக் கொண்டிருந்தபோது என்ன விஷயம் என்பது புரிந்தது. முன் பணம்!

குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை. எப்படி நம்பி அவன் வருவான்? ஒரு நூறு ரூபாய் நோட்டில் அவனுடைய சந்தேகங்களும் பயங்களும் முழுமையாக மறைந்தன.

இதுதான் ஆரம்பம். இன்னொரு புதிய அனுபவம். கணக்கில் அடங்காத பயணங்களின் தொடர்ச்சியில் இன்னொரு புதிய பயணம்.

காலை நேரங்களில் நீர் எழுவதையும் மெலிதாக அசைவதையும் கேட்டான். மதிய நேரத்தில் உஷ்ணம் தகிக்கிறபோது, நிழல்கள் வழியாகப் படகு பயணித்தது.

நிழல்களில் ஒதுங்கியிருக்கும் மீன்கள் படகைச் சுற்றி வளையமிட்டு தங்களின் இருப்பைத் தெரிவிக்கும். அவ்வப்போது அவற்றுக்கு நடுவில் எச்சிலைத் துப்பியபோது உணவுக்காக அவை பண்ணும் போராட்டத்தைப் பார்க்க முடிந்தது.


ஏரியின் நடுவில் இப்படியும் அப்படியுமாக அசைந்தவாறு நகர்ந்து கொண்டிருக்கும் படகுகளின் கைப்பிடிகளின் வழியாகத் தெரிந்த மனிதர்களின் களைத்துப் போன முகங்களைப் பார்த்து அவன் சிரித்தவாறு கைகளை அசைத்தான். வழியில் பார்க்கும் படகுத் துறைகளில் கிடைக்கும் உணவை வாங்கிச் சாப்பிட்டான். நீருக்கு மேலே சூரியன் மூக்கைப் பொத்திக் கொண்டு மூழ்குவதையும் நீர் வளையங்கள் அதில் குளித்துக் கொண்டிருப்பதையும் பார்த்தான். நீரின் மேற்பரப்பில் நிலவு உயிர்த்துடிப்புடன் வந்து தெரிந்து கொண்டிருந்ததையும் அவன் பார்த்தான்.

பசியெடுத்து சாப்பிட்டு உறங்கினான்.

மாலை நேரம் வந்துவிட்டால் ஏதாவதொரு படகுத்துறையை அடைவார்கள். படகோட்டியை கரைக்குப் போகச் சொல்லிவிட்டு, படகுத் துறையிலேயே அவன் இருந்து விடுவான். அருகிலிருக்கும் கடைகள், இல்லாவிட்டால் தென்னை மரங்கள், அடர்ந்து நின்றிருக்கும் இடத்தையொட்டி இருக்கும் படகுத்துறை, அதுவும் இல்லாவிட்டால் எப்போதோ பயன்படுத்தி இடிந்து போய்க் கிடக்கும் படகுகள் நிறுத்தும் இடம்- இவற்றில் ஏதாவதொரு இடத்தில் அவன் ஒதுங்கியிருப்பான். படகோட்டி திரும்பி வரும்போது தன் இடுப்பில் சாராயப் புட்டியுடன் வருவான்.

படகு நகர்ந்து கொண்டிருக்கும் பொழுது நிலவு தன் முகத்தைக் காட்டியது. சுய உணர்வு படிப்படியாக விடை வாங்கிக் கொண்டிருந்தது. ஏரியின் நடுப்பகுதியில் ஒளிர்ந்து கொண்டிருந்த சந்திரனின் முகத்தை நோக்கி புட்டியை வேகமாக வீசியெறிந்த அவன் உரத்த குரலில் பாடினான். படகோட்டி தெளிவற்ற குரலில் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தவாறு தலையை இப்படியும் அப்படியுமாக ஆட்டிக் கொண்டிருந்தான். வாய்க்கு வந்தபடி பாடிக் கொண்டிருந்த பாட்டுகளுக்கு மத்தியில் விஸ்வநாதன் தன்னை மறந்து தூங்கி விட்டான். மீண்டும் பொழுது புலர்கிற நேரத்தில் கண்களை விழித்தபோது இதற்கு முன்பு பார்த்திராத ஒரு படகுத் துறையை விட்டு படகு மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது.

மூன்றாவது நாள் காலையில் இங்கு வந்து சேர்ந்தான். அதற்கு முந்தைய நாள் போதை அதிகமாகி விட்டிருந்தது. அவன் மட்டும் தனியாக ஒரு புட்டி குடித்தான். காலையில் கண்விழித்தபோது தலைக்குள் யாரோ பழுக்க வைத்த கம்பிகளால் என்னவோ செய்வதைப் போல அவனுக்கு இருந்தது. தலையை உயர்த்துவதற்கே மிகவும் சிரமமாக இருந்தது. சரியாகப் பார்க்க முடியவில்லை. கண் இமைகள் எந்த நிமிடத்திலும் கீழே இறங்குவதற்குத் தயாராக இருந்தன.

“நேற்று கொஞ்சம் அதிகமாயிடுச்சு...”- படகோட்டி சொன்னான்.

“அதை நீ சொல்ல வேண்டாம்”- என்று அவன் பதிலுக்குக் கூறியிருக்க வேண்டும். ஆனால், இப்போது அதற்காக மனநிலையில் அவன் இல்லை.

அவன் கரையையே பார்க்கவில்லை. மல்லாந்து படுத்தவாறு வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். தூங்குகிறானா என்றால் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். இதைப் போன்று காலை வேளைகளில் அவனால் தூங்க முடியாது. தளர்ச்சி... சோர்வு சோர்வால் உண்டான தளர்ச்சியில் பிறந்த தூக்கநிலை... அதற்குப் பிறகு எதுவுமே முடியாது. சத்தங்கள் காதுகளில் வந்து விழுந்து கொண்டேயிருக்கும். வந்து விழும் சத்தங்கள் அங்கேயே நின்று கொண்டிருக்கும். மூளைக்கு எதுவும் கடந்து செல்லாது.

அப்படிப் படுத்துக் கொண்டே காற்று நீரின் மீது வேகமாக வந்து பாய்வதையும் நீ பதைபதைத்துப் போய் முணுமுணுப்பதையும் அவன் கேட்டான். தூக்கம் கலைந்து எழும் நீர் உதடுகளை விரித்து விசில் அடிப்பதைப் போல காற்றை முத்தமிடுவதையும் அவன் கேட்டான். துள்ளிக் கீழே விழுந்து கொண்டிருக்கும் காலை மீன்களின் சந்தோஷத்தின் தாளத்தை அவனால் உணர முடிந்தது. அத்துடன் படகோட்டியின் சத்தமும் கேட்டது. அவன் நாக்கை வளைத்துக் கொண்டு ஸ்... ஸ்... என்று கூறி அழைத்துக் கொண்டிருந்தான். முதலில் அந்த அழைப்பைக் கேட்டபோது ஒருவகை மெல்லிய வெறுப்பு மனதில் தோன்றினாலும் இப்போது அது தோன்றவில்லை. ஒரு மனிதன் இன்னொரு மனிதனை எந்தச் சத்தத்தைப் பயன்படுத்தியும் அழைக்கலாம். அழைப்பைக் கேட்கும் மனிதன் அதைப் புரிந்து கொள்ள வேண்டும். அதுதான் முக்கியம்.

படகோட்டி மீண்டும் அழைத்தான். அவனுடைய குரலில் அவசரம் தெரிந்தது. அக்கறை இருப்பதை உணர முடிந்தது. அது தெரிந்ததும் அவன் கண்களைத் திறந்து பார்த்தான். படகு நின்று கொண்டிருந்தது. துடுப்பைச் சுற்றி நீர் வளையமிட்டுக் கொண்டிருந்தது.

“சார், பார்த்தீங்களா?”

“என்ன?”

அவன் கரையை நோக்கிக் கண்களைக் காட்டினான். அவனுடைய கண்களில் இருந்த ஆர்வத்தையும் தளர்ந்து போன கன்னங்களில் தெரிந்த ஆபாசமான சிரிப்பையும் பார்த்து அவன் தன்னை மறந்து அங்கு பார்த்தான்.

கரையில், படகுத் துறையில் ஒரு பெண் குளித்து முடித்து ஏறிக் கொண்டிருந்தாள். அதைப் புரிந்து கொள்வதற்கு முன்பு அவன் தன்னை மறந்து எழுந்தான். நனைந்து ஒட்டியிருந்த துணிக்குள் அந்தப் பெண்ணின் பொன் நிறத்தில் இருந்த கால்கள் தெரிந்தன. ஆடை எதுவும் இல்லாத மார்பகங்கள் மீது லட்சக்கணக்கான சூரியன்கள் வந்து விழுந்து கொண்டிருந்தார்கள். அதிர்ச்சியில் உறைந்து போன அவன் படகை முழுமையாக மறுந்துவிட்டான். படகோட்டியை மறந்துவிட்டான். பிரபஞ்சத்தையே மறந்துவிட்டான். “நான் ஒரு சூரியனாக இருக்கக் கூடாதா?”  என்று தன்னை மீறி அவன் ஆசைப்பட்டான்.

பிறகு எல்லாமே பூமியில் நடக்கக் கூடிய விஷயங்கள்தான். அந்த இளம்பெண் தன் தலைமுடியைத் துணியால் துவட்டி பின்பக்கம் இட்டாள். சிவந்து காணப்பட்ட அவளுடைய கையிடுக்கிலிருந்து அவன் தன் கண்களால் அவளுடைய வெறித்துப் பார்க்கும் கண்களைப் பார்த்தான். அப்படிப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்து ஓடிவிடுவாள் என்று அவன் நினைத்தான். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் அவன் துணியை நீருக்குள் நனைத்துப் பிழிந்து கரையில் ஏறி நின்று துணியை மாற்றினாள். பிறகு ஜாக்கெட்டை தலைவழியாக நுழைத்து அணிந்தாள். மார்பிலிருந்து நழுவி துணி கீழே விழும் நிமிடத்திற்காகக் காத்திருந்த இளைஞன் உணர்ச்சிவசப்படும் வண்ணம் படுவேகமாக அவள் ஜாக்கெட்டை அணிந்தாள். நனைத்துப் பிழிந்து வைத்திருந்த துணிகளைக் கையில் எடுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தபோது, திடீரென்று திரும்பி தன்னைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தவர்களின் முகத்தில் துப்புவதைப்போல அவள் நீரின் மீது காறித் துப்பிவிட்டு, கரையில் மறைந்து போனாள்.

“சரக்கு எப்படி?”- படகோட்டி கேட்டான்.

“பரவாயில்ல...”

“வருவாள்னு தோணுது.”

“எதை வச்சு சொல்றீங்க?”

“அவளுக்குக் கொஞ்சமாவது வெட்கம் இருக்கான்னு பார்த்தீங்களா? ரெண்டு ஆம்பளைங்க தன்னைப் பார்க்குறாங்கன்னு தெரிஞ்சும் அவள்கிட்ட கொஞ்சமாவது சலனம் இருந்ததா?”

அதைக்கேட்டு உரத்த குரலில் அவனால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. அந்தச் சிரிப்பு அலைகளுக்கு மத்தியில் நீர் மீண்டும் ஓட ஆரம்பித்தது. சிரிப்புச் சத்தம் உண்டாக்கிய உற்சாகத்தில் அவன் துடுப்பை வேகமாகப் போட்டான்.


எனினும், மனம் அந்தப் படகுத் துறையிலேயே நின்றுவிட்டிருந்தது. முன்னோக்கி நகரும் ஒவ்வொரு அடியும் வாழ்க்கையின் சகல அதிர்ஷ்டங்களிலிருந்தும் தன்னைத் தூரத்திற்குக் கொண்டு செல்வதைப் போல அவன் உணர்ந்தான்.

படகுத்துறை பின்னால் ஒரு சிறு துரும்பைப் போல தெரிந்தது. வேறொரு பெண் படகுத் துறையில் இறங்கிவிட்டிருந்தாள். அவர்கள் துடுப்புப் போடப்போட விலகிப் போய்க் கொண்டேயிருந்தார்கள். அந்தப் படகுத்துறையின் புனிதத்தன்மை இழக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

“அடுத்த படகுத் துறையில படகை நிறுத்துவோம்”- விஸ்வநாதன் சொன்னான். சொல்லி முடித்தபோது அவன் மனதிற்குள் நினைத்தான். “நான் ஏன் அப்படி சொன்னேன்? காதல் உணர்வு மனதில் தோன்றிவிட்டதோ?”

அதெல்லாம் இல்லை. அவன் எத்தனையோ இளம்பெண்களைப் பார்த்திருக்கிறான். வாழ்க்கையின் எத்தனையெத்தனையோ துறைகளைச் சேர்ந்த இளம்பெண்கள் அவர்கள்! விலைமாதர்கள், அறிவாளிகள், நவீன ஓவியம் வரையும் பெண்கள், பணக்காரிகள், ஹிப்பிப் பெண்கள், பல மொழிகள் பேசக்கூடிய, பல கலாசாரங்களைக் கொண்ட, பல சமுதாயங்களின் சட்டங்களைப் பின்பற்றி வாழும் எத்தனையெத்தனை பெண்கள். அவர்கள் யாரிடமும் தோன்றாத உணர்ச்சி ஒன்றும் இப்போது பார்த்த பெண்ணிடம் தோன்றிவிடவில்லை. வெறுமனே இன்னொருமுறை பார்த்தால் என்ன என்றொரு தோணல்... அவ்வளவுதான். படகோட்டி கூறியதைப்போல அந்தப் பெண் ஒத்துவரக் கூடியவளாக இருந்தால், ஒரு இரவு அவளுடன் சேர்ந்து தூங்கினால் என்ன என்றொரு வெறி... இறுக அணைத்துப் படுக்க வைத்து பயணத்தில் புதிய ஒரு அனுபவத்தின் கனமான துளிகள் விழுந்து முடியும்போது, வெற்றி வீரனைப் போல மிடுக்காக நடக்க வேண்டும் என்றொரு விருப்பம்...

படகு மெதுவாகப் படகுத்துறையை நோக்கி நகர்ந்தது. அதிகபட்சம் அதை அடைவதற்கு இரண்டு ஃபர்லாங் தூரம் இருக்கும்.

“அவ அங்கேயிருந்து போகமாட்டான்னு எனக்குத் தெரியும்”- படகோட்டி பெருமை மேலோங்கக் கூறிய வார்த்தைகளை அவன் கேட்டான்: “சரக்கு அப்படி...”

புதியதோர் படகுத்துறை. புதியதோர் இடம். படகுத்துறைக்கு அருகில் இருந்த ஒரு தேநீர்க்கடையிலிருந்து மெதுவாகக் கிளம்பி ஒலிக்கும் ரேடியோவின் சத்தம்... அதிகாலை வேளை... ஒரு ஊர்... சில மனிதர்கள்...

2

மூன்று நான்கு வருடங்கள் தொடர்ந்து வாழ்ந்த ஒரு நகரத்திற்கு ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு போனபோது, அங்கு ஒரு பாதை கூட தெரியாமல் நின்றுபோன ஒரு அனுபவம் அவனுக்கு ஏற்கெனவே உண்டாகியிருக்கிறது. அதைப்போல எத்தனையெத்தனையோ அனுபவங்களை அவன் மனதில் நினைத்துப் பார்க்கலாம். முன்பு வசித்துக் கொண்டிருந்த அறைக்கு முன்னால் சில நாட்களுக்குப் பிறகு ஒரு புதிய மனிதனைப்போல நடந்து போகவே அவனுக்கு எப்போதும் முடிந்திருக்கிறது. உடனிருக்கும் யாராவது கூறி புரிய வைக்கும்போதுதான் வெட்கத்துடன் அவனே புரிந்து கொள்வான்- அய்யோ... “இந்த இடத்தில்தானே நான் வசித்தேன். இந்தப் பாதைகள் வழியாக நான் எத்தனை தடவைகள் இங்குமங்குமாக நடந்திருக்கிறேன்” என்பதையே.

ஆரம்ப காலத்தில் தன்னுடைய ஞாபகக் குறைவைப் பற்றி அவனுக்கொரு குறை இருந்தது. அதற்குப் பிறகு அவனுக்கே புரிந்துவிட்டது... அதைப் பற்றிப் பெரிதாகக் கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை என்பது விஸ்வநாதன் என்றும் எப்போதும் ஒரு புதிய மனிதனாகவே இருந்து வந்திருக்கிறான். அவனை ஏமாற்றுவதற்காகப் பூமியின் எல்லா பகுதிகளிலும், மூலைகளிலும் மனிதர்கள் என்றும் ஏதாவது காரியங்கள் செய்து கொண்டேயிருக்கிறார்கள். ஒரு புதிய வீடு, ஒரு புதிய கடைவீதி, ஒரு புதிய சுவர்... இப்படி ஏதாவதொன்று.

இங்கும் அதுதான் நடந்தது. ஒரு பகலிலும் ஒரு இரவிலும் சுற்றியும் கூட அது தன்னுடைய ஊர்தான் என்பதை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவனைச் சுற்றிக் குழுமிய மனிதர்கள் அனைவரும் அவனை ஒரு விநோதமான பிறவியைப் பார்ப்பது போல வெறித்துப் பார்த்தார்கள். அவர்களின் பார்வையைப் புரிந்து கொண்டதால் யாருடைய முகங்களையும் அவன் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை.

அவர்களுக்கு விஸ்வநாதன் யாரென்று தெரியவேண்டும். தான் ஊர் ஊராகச் சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு ஓவியன் என்பதை அவர்களுக்குப் புரிய வைப்பதே மிகவும் சிரமமான ஒரு காரியமாக இருந்தது விஸ்வநாதனுக்கு. விஸ்வநாதன் எதற்காக அந்த ஊரில் வந்து தங்குகிறான் என்பதற்கான காரணம் அவர்களுக்குத் தெரிந்ததாக வேண்டும். அவனுக்கு அந்த ஊரை மிகவும் பிடித்திருந்தது. அங்கு இரண்டோ, நான்கோ நாட்கள் தங்கியிருந்து ஏதாவது உபயோகமாகச் செய்யவேண்டும் என்ற விருப்பத்தில் இருந்தான் விஸ்வநாதன். எவ்வளவு சொல்லியும் அவர்களுடைய சந்தேகங்கள் தீர்வமாகத் தெரியவில்லை. அவர்களின் நம்பிக்கையின்மை தன்னைச்சுற்றி இப்போதும் ஆரோக்கியமற்ற ஒரு வாசனையைப் போல சூழ்ந்து நிற்பதை அவனால் உணரமுடிந்தது.

பக்கத்து அறைகளில் சாராயம் குடித்துக் கொண்டிருக்கும் முரட்டுத்தனமான மனிதர்கள் குரலைத் தாழ்த்தி வைத்துக் கொண்டு பேசுவது அவனைப் பற்றித்தானோ? வராந்தாவில் நடந்து போய்க் கொண்டிருக்கும் மனிதர்கள் வாசல் பலகைகளுக்கு மேலே எட்டிப் பார்ப்பது அவனுடைய அசைவுகளைப் பார்ப்பதற்காகத்தானே இருக்க வேண்டும்.

காலையில் படகுத்துறையில் இருந்த தேநீர்க்கடையில் ஆரம்பித்த அவர்களின் ஆர்வம் இப்போது மாலை வரை விடாது சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கிறது.

விஸ்வநாதனுக்கு கிராமங்கள் மீது வெறுப்பு தோன்றியது. நகரங்கள் மீது அதே நேரத்தில் விருப்பமும். அங்கு யாரும் யாரைப் பற்றியும் தெரிந்து வைத்திருக்க மாட்டார்கள். மக்கள் மத்தியில் அழுது கொண்டு கிடந்தாலும் திரும்பிப் பார்ப்பதற்கோ கை கொடுத்துத் தூக்குவதற்கோ யாரும் வரமாட்டார்கள்.

“இந்த ஊரில் அஞ்சாறு மாதங்கள் தங்குவதற்கு அங்காவது வசதியான இடம் இருக்குமா?”

 காலையில் தன்னைச் சந்தேகத்துடன் பார்த்துக் கொண்டு நின்றிருந்த மனிதர்களின் சந்தேகங்களை நீக்குவதற்காக அவன் ஒரு கேள்வியைக் கேட்டான்.

அந்த மனிதர்கள் தங்களுக்குள் ஒருவரையொருவர் அப்போது பார்த்துக் கொண்டார்கள். ஆவி மேலே வந்து கொண்டிருந்த புட்டுத்துண்டுகளுக்கு மத்தியில் அவர்கள் மீண்டும் மூழ்கி விட்டார்கள். “வசதியான இடம்னா எப்படி?”- வாயல் ஜிப்பாவும் லுங்கியும் அணிந்து தலைவன் என்று தன்னைக் கூறிக் கொண்டிருக்கும் ஒரு மனிதன் அதிகாரத் தொனியில் கேட்டான்.

“வசதியான இடம்னா... எந்தவிதப் பிரச்சினையும் இல்லாம உட்கார்ந்து கொஞ்சம் வேலை செய்யிறதுக்கான ஒரு அறை.”

“வசதியான இடம். இந்தப் பகுதியில எந்த இடத்துலயும் வெளியில இருந்து வர்றவங்க தங்குற அளவுக்கு ஹோட்டல் இல்ல”- அந்த ஆள் சொன்னான். அவனுடைய குரலில் விருப்பமின்மை, வெறுப்பு இரண்டும் அடியோட்டமாகக் கலந்திருந்தது நன்றாகவே தெரிந்தது.

“ஹோட்டல் வேணும்னு அவசியம் இல்ல. ஏதாவது காலியா இருக்குற கடை அறையோ இல்லாட்டி சின்ன ஒரு வீடோ...”


தலைவன் “எனக்குத் தெரியாது” என்று கூறிவிட்டு மீண்டும் புட்டு, கடலை ஆகியவற்றில் மூழ்கிப் போனான். உண்மையாகச் சொல்லப் போனால் விஸ்வநாதன் வெறுமனே கேட்டான். அவ்வளவுதான். ஒரு இரவைவிட அதிகமாக இங்கு இருக்கும் அளவிற்கு அவனிடம் எந்தவொரு திட்டமும் இல்லை. மனதில் நினைத்திருக்கும் காரியம் நடைபெறுவதாக இருந்தால், இந்த இரவிலேயே அது நடக்கும். அப்படி நடக்கவில்லையென்றால், அவள் அப்படிப் பட்டவள் அல்ல என்று உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான். படகோட்டி திரும்பத்திரும்பக் கூறுகிறானே தவிர, அவனைப் பற்றி அப்படி நினைப்பதற்கு எந்தவித நியாயமும் இருப்பதாகத் தெரியவில்லை. எது எப்படியிருந்தாலும், அவன் இழப்பதற்கு எதுவுமில்லை. எங்கும் அவசரமாகப் போக வேண்டியதுமில்லை. யாரும் எங்கும் அவனுக்காகக் காத்திருக்கவுமில்லை. நடப்பதாக இருந்தால் நடக்கட்டும். ஆனால் அதுதான் நோக்கம் என்று உரத்த குரலில் கூறுவதாக இருந்தால், விருப்பமில்லாத பல விஷயங்களுக்கு நடக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகலாம். எதற்குத் தேவையில்லாமல்...

ஹோட்டலை விட்டு வெளியே வரும்போது, மேஜைக்குப் பின்னால் உட்கார்ந்திருந்த, உடம்பு முழுக்க ரோமத்தைக் கொண்ட, நெற்றியில் சந்தனக்குறி வைத்திருந்த கரடி கேட்டது. “சார், உங்களுக்கு வீடு கட்டாயம் வேணுமா?”

“ஆமா...”- இல்லை என்று கூறமுடியாதே.

“அப்படின்னா நான் ஒண்ணு செய்யிறேன். இங்கே பக்கத்துல ஒரு சின்ன வீடு இருக்கு. ஆள் இல்லாததால், கவனிப்பே இல்லாம அந்த வீடு கிடக்குது. நான் ஒரு ஆளைவிட்டு அந்த வீட்டை விசாரிக்கிறேன்.”

“ரொம்ப நன்றி.”

அதைக்கேட்டு அந்த மனிதனின் முகத்தில் ஒரு பிரகாசம் உண்டானது. அவன் சொன்னான். “வீடுன்னு சொன்னா. அது ஒரு சின்ன அறை. அவ்வளவுதான்.”

“அது போதும். படுக்குறதுக்கு இடம் இருக்கும்ல...”

“அதுக்கு எந்தக் குறைச்சலும் இல்ல. பெரிய வசதி எதுவுமே இல்லைன்னாலும், மனிதர்கள் வசித்த வீடாயிற்றே.”

இதற்கிடையில் விஸ்வநாதன் கடைப்பக்கம் போனான். இதற்குமேல் மது அருந்தாமல் இருப்பதே நல்லது என்று பட்டது. இப்போதே தேவைக்கும் அதிகமாக மது அருந்தியாகிவிட்டது.

வாசற்கதவு கிறீச்சிட்டது. தலையை உயர்த்திப் பார்த்தபோது தெரிந்த பல் இளிப்பு அறை முழுவதும் நிறைந்ததைப் போல் இருந்தது.

படகோட்டி எதிரில் இருந்த பெஞ்சில் வந்து உட்கார்ந்தான். விஸ்வநாதனைப் பார்த்தவுடன் “அளவுக்கு மீறி குடிச்சிருப்பீங்க போல இருக்கே” என்றான் அவன். அதற்குப் பதிலெதுவும் கூறாமல் விஸ்வநாதன் முழுமையாக மது ஊற்றப்பட்டிருந்த குவளையை அவனை நோக்கி நகர்த்தினான்.

“போன விஷயம் என்ன ஆச்சுடா?”

நான்கு பக்கமும் பார்த்துக் கொண்ட அவன் தன் குரலைத் தாழ்த்திக் கொண்டு சொன்னான்.

“ஒரு ஆள் கிடைச்சான். நான் அப்பவே சொன்னேன்ல- அந்தப் பெண் அந்த மாதிரிதான்னு நான் நினைச்சது சரிதான்.”

“அப்படின்னா ஆள் எங்கே?”

“வெளியே நிக்கிறான். அவன் உள்ளே வரமாட்டான். யாராவது பார்த்தாலோ தெரிஞ்சாலோ ஏதாவது பிரச்சினை ஆயிடும்னு பயப்படுறான்.”

குவளை காலியானது. மீண்டும் அதில் ஊற்றியவாறு அவன் சொன்னான்.

“வா... நாம வெளியே போவோம். இன்னைக்கு இது போதும். சரி... அவன்கிட்ட ஆள் யாருன்னு சொல்லிட்டியா?”

“சொன்னேன். இடத்தைச் சொன்னவுடனே, ஆள் யாருன்றதை அன்பு புரிஞ்சிக்கிட்டான். ஒரு வண்ணானோட மகள் அவ. ஊர்ல இந்த விஷயம் அதிகம் பேருக்குத் தெரியாது. ஊர்க்காரங்களா இருந்தா அந்தப் பெண்ணோட அப்பா கத்தியைத் தூக்கிட்டுத்தான் மறுவேலை பார்ப்பான். இப்போ நமக்கு எந்தப் பிரச்சினையும் இல்ல. எல்லா விஷயத்தையும் அந்த ஆளு பார்த்துக்குவான்.”

திடீரென்று விஸ்வநாதனுக்கு மனதில் ஒரு பரபரப்பு வந்தது சேர்ந்ததைப் போல் இருந்தது. காலையில் அவளைப் பார்த்தபோது உண்டான ஆர்வம் இப்போது அவனிடம் இல்லாமற்போலிருந்தது. இப்போது நடக்கப்போகும் விஷயங்கள் அவனுடைய கண்களுக்கு முன்னால் ஓடிக் கொண்டிருந்தன. சாராயக் கடைக்குப் பின்னால் இருந்த இருட்டில் தாழ்ந்த குரலில் அவர்கள் பேசிக் கொண்டார்கள்.

“பத்து ரூபாய்ல ஒரு பைசா குறைஞ்சாலும் அந்த ஆளு சம்பதிக்கமாட்டான். நல்ல சரக்கு. சார், நீங்கதான் பார்த்தீங்களே! போதாததற்கு, அவள் இளசு வேற... படிச்ச பொண்ணு. பிறகு... பாக்கெட் மணின்ற பேர்ல ஏதாவது கொடுத்தால், அவ அதுக்குக் கட்டாயம் நன்றியுடன் நடந்துக்குவா.”

ஆள் நடமாட்டமே இல்லாமல் வெறுமையாகக் கிடந்த வயல் வரப்புகளில் அல்லது இருண்டு போய்க் கிடக்கும் தென்னை மரங்களுக்கு மத்தியில் நடக்கும் சத்தம்... வீட்டுக் கதவுகளின் கிறீச்சிடல்கள்...

கடைசியில் ஒரு மண்ணெண்ணெய் விளக்கின் புகையை சுவாசித்துக் கொண்டு, வியர்வை நாற்றம் எடுத்த சூடாக இருந்த பெண்ணின் நிர்வாண உடம்புடன் உறவு கொண்டு முடிக்கும் விரசமான மணித்துளிகள்...

“தலைவிதி!”- விஸ்வநாதன் தனக்குள் கூறிக் கொண்டான். “இதற்காகத்தான் நான் இங்கே வந்து தங்கினேனா? கஷ்டகாலம்! ஒரு பகலையும் ஒரு இரவையும் வெறுமனே வீண் பண்ணிட்டேனே.”

எதிர்பார்த்ததைப் போலவே நடந்தது. இல்லாவிட்டால் எதிர்பார்த்ததைவிட மனக் கஷ்டப்படும் வகையில் வேறு ஏதோ நடந்தது. நினைத்தது நடக்காமற் போவதற்கு இங்கு இடமில்லை. யாரிடம் அதைப் பற்றி குறை கூற முடியும்? கூட்டிக் கொடுப்பவர்களிடம் இருப்பதைப் போன்ற பாதுகாப்பு உணர்வு உலகத்தில் உள்ள மற்றவர்களிடமும் இருக்கவே செய்கிறது.

“நான் சொன்னது இந்தப் பொண்ணு இல்ல...” என்று விஸ்வநாதன் சொன்னால் அதற்கு அவன் கூறப்போகும் பதில் என்னவாக இருக்கும் என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும்.

“இவளைத்தான் நீங்க சொல்றீங்கன்னு நான் நினைச்சேன், சார்.”

அதற்குப் பிறகு கூறுவதற்கு எதுவுமேயில்லை. கூறுவதற்கு என்ன இருக்கிறது? அவனுடைய கையில் விஸ்வநாதன் புகைப்படம் எதையும் கொடுத்தானா? ஏதாவது அடையாளம் சொன்னானா? அந்தப் படகுத்துறையில் குளித்துக் கொண்டிருந்த நின்றிருந்த பெண் என்று படகோட்டி சொன்னான். அவ்வளவுதான்.

இப்போது நின்று கொண்டிருக்கும் பெண்ணும் அதே படகுத்துறையில் குளித்துக் கொண்டிருந்தவள் இல்லை என்று யாரால் கூற முடியும்?

அறையின் மூலையில் தரையில் விரிக்கப்பட்டிருந்த பாயில் நிர்வாணக் கோலத்தில் ஒரு சிறுவன் படுத்து உறங்கிக் கொண்டிருந்தான். அறைக்குள் நுழையும்போது அவள் குழந்தைக்கும் பால் கொடுத்தவாறு தூங்கிக் கொண்டிருந்தாள். விளக்கைக் காட்டிக் கொண்டிருந்த நடுத்தர வயதைக் கொண்ட பெண் பலமாக அவளை மிதித்தவுடன், கண்களைக் கசக்கியவாறு அவள் எழுந்தாள்.

“இதோ... இவதான்”- அந்தப் பெண்ணின் குரல் முரட்டுத்தனமாக இருந்தது. ஒரு ஆணின் குரலைப்போல அது இருந்தது.

விஸ்வநாதன் எதுவும் சொல்லவில்லை. வெறுப்புடன் அறிமுகமில்லாதவர்களுக்கு மத்தியில் நின்று கொண்டிருக்கும் உணர்வுடன் அவர்களைப் பார்த்தவாறு நின்றிருந்தான். ஒரு பெண் ஒரு தாய்... ஒரு தூக்கம் கலைந்து போனதன் வெறுப்பு வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு முகம்.


“விளக்கை இங்கே வைக்கவா?”- தீர்மானம் என்ன என்பதைத் தெரிந்து கொள்வதற்காகக் கேட்ட கேள்வி.

“வையிங்க.”

தரையின் மூலையில் விளக்கை வைத்துவிட்டு வாசல் கதவை அடைத்துவிட்டு அவள் வெளியே சென்றாள். போவதற்கு முன்பு பணத்தை எண்ணி வாங்குவதற்கு மறக்கவில்லை.

“என் பேர் என்ன?”

“கதீஸு!”

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பார்த்த அந்தப் பொம்பளை உனக்கு என்ன வேணும்?”

“அவங்க எனக்கு யாருமில்ல. அவங்க வேற ஜாதிக்காரங்க.”

அவள் சொன்ன பதில் விஸ்வநாதனை மிகவும் கவலைப்படச் செய்தது. அழைத்துக் கொண்டு வந்த பெண் கதீஸின் தாயாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று அவன் நினைத்தான். அதனால் குறிப்பிட்டுக் கூறும்படியான ஆதாயம் எதுவும் அவனுக்கு இல்லை. வெறுமனே ஒரு ஆசை. உறவுகள் அர்த்தமே இல்லாமல் தனக்கு முன்னால் கெட்டு நாறிப் போய் கீழே விழுவதைப் பார்க்கவேண்டும் என்ற விருப்பம் அவனுக்குள். அவ்வளவுதான். சொல்லப் போனால் ஒரு தரக்குறைவான சந்தோஷம்... இங்கு அப்படி எதுவும் இல்லை. ஒரு சாதாரண விபசாரம் நடக்கும் வீடு.

“இங்கே வேற பெண்களும் இருக்காங்களா?”

“இருந்தாங்க. இப்போ நான் மட்டும்தான் இருக்கேன்.”

சத்திரம்! விஸ்வநாதன் தரையில் மல்லாக்கப் படுத்தான். மேலே மேற்கூரைக்கு அப்பால் இரவு காத்து நின்று கொண்டிருக்கும். இந்த விளக்கைக் கொஞ்சம் அணைத்தால் ஓலை இடைவெளி வழியாக இரவு உள்ளே நுழைந்து வரும். அறை முழுவதும் இரவு நுழைந்திருக்கும். இரவுக்கு அடியில் கதீஸும் விஸ்வநாதனும் மூழ்கிச் சாவார்கள்.

விஸ்வநாதன் விளக்கை வாயால் ஊதி அணைத்தான். இரவை உள்ளே அவனே அழைத்து நுழையச் செய்தான்.

தூங்கி எழுந்தபோது பொழுது நன்கு விடிந்துவிட்டிருந்தது. வாசல் கதவைத் திறந்து வெளியே வந்ததும், வாசலின் மூலையில் தூங்கிக் கொண்டிருந்த மாமா பணிவும் ஞாபக சக்தியும் கொண்ட ஒரு நாயைப் போல திடுக்கிட்டு எழுந்து அருகில் வந்து வாலை ஆட்டியவாறு நின்றான். அவன் காத்துக்கிடந்தது இந்தத் தருணத்திற்காகத்தான் இருக்க வேண்டும்.

உள்ளே ஒரு அறையில் தீப்பெட்டி உரசும் சத்தம் கேட்டது. தொடர்ந்து வாசல் கதவைத் திறந்து உச்சிக்கு மேல் தலைமுடியை இழுத்துக் கட்டியிருந்த பெண் வெளியே வந்தான். நடுத்தர வயதைக் கொண்ட வீட்டின் தலைவி.

“என்ன, புறப்பட்டாச்சா?”

அவளுடைய வெளிப்படையான சிரிப்பும், குரலில் இருந்த லேசான காந்தத் தன்மையும், காற்றில் பரவியிருந்த கெட்ட நாற்றமும்... மொத்தத்தில் அச்சத்தைத் தரக் கூடிய ஒரு சூழ்நிலை அங்கு நிலவிக் கொண்டிருப்பதைப் போல் விஸ்வநாதனுக்குத் தோன்றியது.

“இல்ல... இங்கேயே தங்கப் போறேன்.”

அந்தப் பெண் அதற்குக் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள்.

அவன் முற்றத்தை நோக்கி நடந்தான். கதவுக்குப் பக்கத்திலிருந்த விளக்கை எடுத்துக் கொண்டு அந்தப் பெண்ணும் அவனுக்குப் பின்னால் வந்தாள்.

“சார், உங்களுக்கு ஒரு வீடு வேணும்னு நாணு சொன்னான்.”

“ஆமா...”

அது இருக்கட்டும். நாணு என்ற இரவு உறவுக்காரன் தன்னுடைய இந்தத் தேவையை எப்படித் தெரிந்து கொண்டான் என்று அவன் ஆச்சரியப்பட்டான். ஒருவேளை காலை நேரத்தில் தேநீர்க் கடையின் மனிதர்கள் கூட்டத்தின் ஏதாவதொரு மூலையில் பொழுது விடிந்ததற்காகக் கவலைப்பட்டுக் கொண்டு அந்த மாமா உட்கார்ந்திருப்பான். படகோட்டி முதலில் அந்தத் தேவையைச் சொல்ல அவனுடன் அறிமுகமாகியிருக்க வேண்டும்.

“அப்படி ஒரு வீடு இருக்கு. தேவைன்னா வந்து பாருங்க.”

அதற்கு வெறுமனே விஸ்வநாதன் ‘உம்’ மட்டும் கொட்டினான். ஒரு நிரந்தர வாடிக்கையாளரை உருவாக்குவதற்கான முயற்சியில் அவன் இருந்தாள்.

“ஒரு வாரத்துக்குப் போதும்னா சொன்னீங்க? காலையில நாணுவை அழைச்சிக்கிட்டுப் போய்ப் பாருங்க. பிடிச்சிருந்தா ரெண்டு ரூபா கொடுத்தா போதும்.”

அடக்கி வைக்க முடியாத வெறுப்பு கால்களை நகர்த்த முடியாமற் செய்தது.

அந்தப் பெண்ணின் கழுத்தை நெறித்துக் கொல்ல வேண்டும் போல ஒரு வெறி அவனிடம் தோன்றியது.

“ஒரு ரூபா போதாதா?”- வெறுமனே ஒரு பேரம் பேசும் செயலுக்கு அவன் தொடக்கம் இட்டான்.

“சார், அய்யோ...”

“ஒரு ரூபான்னா பரவாயில்ல...”- குரூரமான ஒரு சந்தோஷத்துடன் ஒரு ரூபாயை இழந்தால் உயிரே போய் விடுவதைப் போல அவன் தான் நின்ற இடத்திலேயே நின்றிருந்தான்.

அந்தப் பெண் விளக்கைக் கையில் வைத்தவாறு நின்றிருந்தான். மண்ணெண்ணெய் விளக்கின் திரி வயல்களில் இருந்து வந்த காற்றுப் பட்டு அவளுடைய முகத்தை நோக்கி திரும்பி எரிந்தது. புகை அவளுடைய முகத்தில் பட்டு அழியாத அடையாளங்களை உண்டாக்கி கொண்டிருந்தது.

“வீடு என்னோடதல்ல. என் வீடா இருந்தா சும்மாகூட நான் தந்திடுவேன். அது என் ஒரு அக்காவுக்குச் சொந்தமானது. அவர் இறந்துட்டாங்க. இப்போ இருக்குறது அவங்களோட மகள் மட்டும்தான். அவ இங்கே இல்ல. வர்றப்போ ஒரு ரூபாய்க்கு ஏன் வீட்டை வாடகைக்கு விட்டேன்னு அவ கேட்டா, நான் ஏதோ தப்பு செஞ்சிட்டேன்றது மாதிரி ஆயிடாதா?”

அந்தப் பெண்ணின் குரலில் இருந்த பரிதாபத் தன்மையுடன் அக்கறையும் விஸ்வநானின் மனதைத் தொட்டன. ஒரு ரூபாய் மீது அவளுக்கிருந்த விருப்பம் விஸ்வநாதனின் இதயத்தை ஈரமாக்கியது.

“ஒரு ரூபாய்க்கு மேல ஒரு பைசாகூட நான் தரமாட்டேன்”-  நீர்க்குமிழியைப் போல மலர்ந்த ஒரு சிரிப்பை உள்ளுக்குள் மறைத்து வைத்துக் கொண்டு விஸ்வநாதன் சொன்னான்.

அவள் அதற்கு உடனே எந்த பதிலும் கூறவில்லை. அவனுடைய முகத்தைப் பரிதாபமாக அவள் பார்க்க மட்டும் செய்து கொண்டிருந்தாள்.

விஸ்வநாதன் அப்போதுதான் முதல் தடவையாக அந்தக் கண்களைக் கூர்மையாகப் பார்த்தான். அந்த குரலின் ஆழத்திற்குள் அப்போதுதான் அவன் சென்று கவனித்தான்.

“ஒண்ணரை ரூபாய்க்கு வீட்டை வாடகைக்கு விடுங்க, சங்கரி அக்கா”- பின்னாலிருந்து நாணு சொன்னான்.

அதற்கு சங்கரி அக்கா எந்த பதிலும் கூறவில்லை. விஸ்வநாதன் அதிர்ச்சியடைந்து நின்றிருந்தான். திடீரென்று அவனுக்கு எல்லாமே புரிந்தது. தூரத்தில் உதயமாகிக் கொண்டிருந்த சூரியன் அவனுக்குச் சொந்தமானது. தலைக்கு மேலே வீசிப் போய்க் கொண்டிருக்கும் அதிகாலைப் பொழுது காற்று அவனுக்குச் சொந்தமானது. வீட்டின் ஓரத்தில் ஓடிக் கொண்டிருக்கும் வாய்க்கால் உண்டாக்கும் இசை அவன் கேட்பதற்காகப் பிறந்தது.

“இந்த இடத்தோட பேர் என்ன?”- அவன் திடீரென்று கேட்டான்.

நாணு பெயரைச் சொன்னான்.

இருபது வருடங்களுக்கு முன்னால் விஸ்வநாதன் உதறிவிட்டுப் போன ஊரின் பெயர் அவனுடைய காதுகளில் வந்து விழுந்தது.

“உங்க பேர் என்ன?”- விஸ்வநாதன் அந்தப் பெண்ணைப் பார்த்துக் கேட்டான்.


இருபது வருடங்களுக்கு முன்னால் கேட்டு மறந்து போன சித்தியின் பெயரை அவன் மீண்டும் கேட்டான்.

“உங்களோட செத்துப்போன அக்காவோட பேர் என்ன?”

விஸ்வநாதனை எடுத்து வளர்த்த அவனுடைய தாயின் அக்காவான பெரியம்மாவின் பெயரை அவன் மீண்டும் கேட்டான்.

அதற்குப் பிறகு அங்கு ஒரு நிமிடம்கூட அவனால் நிற்கமுடியவில்லை. நின்று கொண்டிருக்கும்பொழுது, சுழல்களை நோக்கியும் ஆழங்களை நோக்கியும் தூக்கி எறியப்பட்ட படகோட்டியின் தர்மசங்கடமான நிலை அவனைச் சூழ்ந்து கொண்டது.

அவன் ஆழங்களுக்குள் மூழ்கினான். “போகணும். இங்கே மட்டும் வரவே கூடாதுன்னு நான் எப்படியெல்லாம் கடவுள்கிட்ட வேண்டிக்கிட்டேன். இருந்தும் கடைசியில்...”

அவனுடைய கால்கள் அவனை வலிய இழுத்துக் கொண்டு போயின.

பின்னாலிருந்து சங்கரியம்மாவின் குரல் கேட்டது “ஒரு ரூபாய்னா கூட போதும் சார்.”

ஒரு வியாபாரத்தின் பிடிவாதத்துடன் பேரம் பேசல் நடத்திக் கொண்டிருந்த பொருளின் சொந்தக்காரி தன் தோல்வியை ஒப்புக் கொண்டாள். நாணு தன்னுடன் வந்து சேரக் கட்டப்படுவதைக் காதுகளுக்குக் கீழே கேட்கும் பெருமூச்சுகளைக் கொண்டு உணர முடிந்தது.

வாய்க்காலையொட்டி இருக்கும் வரப்புகள், வயல்கள், தென்னை மரங்கள், அதிகாலை நேரத்தில் நடந்து கொண்டிருக்கும் பாதங்கள்... இவ்வளவு தூரம் நான் இந்த இரவு நேரத்துல நடந்து வந்தேனா? அவன் ஆச்சரியப்பட்டான்.

அவனுக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த நாணு அவனிடம் என்னவோ கூற முயன்றான். ஒருவேளை அவன் தனக்குச் சேர வேண்டிய பணத்தைக் கேட்டிருக்கலாம். இல்லாவிட்டால் வாடகைக்கு வீடு எடுக்கக் கூடிய விஷயம் பற்றிக் கூட இருக்கலாம். அதுவும் இல்லாவிட்டால் திடீரென்று விஸ்வநாதனிடம் உண்டான குண மாறுதலைப் பற்றிக் கூட அவன் ஏதாவது கேட்க நினைத்திருக்கலாம்.

விஸ்வநாதன் அவன் சொன்னது எதையும் காதிலேயே வாங்கவில்லை. ஒரு கடுமையான சூறாவளியில் சிக்கி அவன் பறந்து கொண்டிருந்தான். நான் உடனடியா படகுத்துறைக்குப் போகணும். நான் இப்பவே என் படகை அடையணும். நான் இந்த நிமிடமே இங்கேயிருந்து கிளம்பணும், அவன் தனக்குள் கூறிக் கொண்டான்.

3

>ணவன் உயிரோடு இருக்கும்பொழுது அவனுடைய மனைவி விபசாரம் செய்ய ஆரம்பிக்கிறாளென்றால் அவன் கணவனோ அல்ல என்ற நிலையை அடைகிறான். பெண் குற்றவாளியாக ஆகிறாள். கணவன் மரணமடைந்த பிறகு அவள் விபசாரம் செய்தால், அவளும் அவனும் குற்றவாளி இல்லை என்றாகிறார்கள்.

வாசு உயிருடன் இருந்தபோது எவ்வளவு மரியாதையுடன் வாழ்ந்தவள் அவள். அவன் இப்போது உயிருடன் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடக்குமா? கணவன் ஒரு மிகப் பெரிய வீரன் என்று உயரத்தில் வைத்துப் புகழப்படுகிறான். அவளைக் குற்றம் சொல்வதற்கில்லை. எப்படிச் சொல்ல முடியும்? சொல்லப் போனால் அவளிடம் இளமை இருக்கிறது. வாழ்வதற்கு வேறு வழியே இல்லை. இதைத் தவிர அவள் வேறு என்ன செய்ய முடியும்? பெண் தர்ம சங்கடமான நிலைமையிலும் இரக்கப்படக் கூடிய சூழ்நிலையிலும் தள்ளப்படுகிறாள் என்பதே உண்மை.

தன் தந்தை முன்பே மரணத்தைத் தழுவியது பல காரணங்களாலும் நல்லதாகப் போய்விட்டது என்று விஸ்வநாதனுக்குப் பட்டது. தன்னுடைய பெயருக்குக் களங்கம் உண்டாவதற்கு முன்பு அவனால் இந்த உலகை விட்டு போய்விட முடிந்திருக்கிறதே.

ஆற்றுக்கு மத்தியில் தேங்காய் ஏற்றப்பட்ட படகு நகர்ந்து கொண்டிருந்தது. சிறிய நீர்த் திவலைகள் விஸ்வநாதனின் உடம்பில் வந்து மோதிக் கொண்டிருந்தன.

காலையில் கண் விழித்தபோது மிகவும் நேரமாகிவிட்டிருந்தது. அவன் கண்விழித்துப் பார்த்தது படகின் ஓரங்களைத்தான். நீர்த்திவலைகள் தங்கள் கைகள் கொண்டு அந்தத் தொட்டிலை ஆட்டிக் கொண்டிருந்தன. தூக்கம் இன்னும் முடியவில்லை.

எப்படித் தன்னால் தூங்க முடிந்தது என்று விஸ்வநாதனுக்குத் தன் மீதே சந்தேகம் தோன்றியது. தன்னுடைய சொந்த ஊருக்கு வந்திருக்கிறோம் என்ற உண்மை தெரிந்த பிறகும், தன்னுடைய சொந்தத் தாயின் தங்கை நடத்தும் விபசார இல்லத்திற்குச் சென்று விபசாரத்தில் ஈடுபட்ட பிறகும், உறக்கம் அவனை விட்டு நீங்கவில்லை. படகோட்டி ஒரு குவளைத் தேநீருடன் கரையிலிருந்து வந்து கொண்டிருந்தான்.

“வர்றப்போ பொழுது புலர்ந்திருச்சு. அப்படித்தானே?”

“ஆமா...”

“எனக்கு எதுவுமே தெரியாது. நல்லா தூங்கிட்டேன்.”

“ம்...”

“போக வேண்டாமா?”

விஸ்வநாதன் அதற்கு உடனடியாகப் பதில் எதுவும் கூறவில்லை போகலாம் என்று கூறுவதற்காக நாக்கு அவனையே அறியாமல் வளைந்தது. இப்போது வரையிலும் அப்படிச் சொல்லித்தான் அவனுக்குப் பழக்கம். இப்போது முதல்தடவையாக எதுவுமே கூறாமல் அவன் இருந்தான்.

“அந்த நாணு காலையில வந்தான்”- படகோட்டி சொன்னான் “நீங்க கண் விழிப்பீங்கன்னு காத்திருந்தான். இவ்வளவு நேரமும் இங்கேதான் இருந்தான். இப்போதான் போனான்.”

“அப்படியா?”

“அந்த வீட்டை ஒரு ரூபாய்க்குத் தர்றதா சொன்னாங்க.”

கையிலிருந்த குவளையைப் படிமீது வைத்துவிட்டு ஒரு பீடியை எடுத்துப் பற்ற வைத்த விஸ்வநாதன் என்னவோ சிந்தனையில் மூழ்கியவாறு படுத்திருந்தான். பதில் ஏதாவது வரும் என்று சிறிது நேரம் எதிர்பார்த்து நின்றிருந்த பிறகு, எந்தப் பதிலும் வராமல் போகவே படகோட்டி குவளையை எடுத்துக் கொண்டு தேநீர்க் கடையை நோக்கி நடந்து போனான்.

தேநீர்க் கடையில் எழுந்த சத்தங்கள், ஒரு வண்டின் முனகலைப் போல தெளிவற்ற முணுமுணுப்பாக ஒலித்தன. தூரத்தில் எங்கோ இருந்த ஒரு தேவாலயத்திலிருந்து நிற்காமல் ஒலித்த மணியோசை தெளிவில்லாத ஒரு அலறலைப் போல் கேட்டது.

அந்தச் சத்தம் நிற்கும் வரை விஸ்வநாதன் தீவிர யோசனையில் மூழ்கியிருந்தான். சிறு பிள்ளைக் காலம் அவனுடைய மனதில் தோன்றி இரைச்சல் உண்டாக்கியது. கிராமத்துப் பாதைகள் வழியாக தலைகளை மூடிக் கொண்டு ஓவியம் என சிறுமிகள் நடந்து செல்லும் ஞாயிற்றுக்கிழமைகள்? மாலை நேரங்களில் மணியோசை எழுப்பும் கோவில்கள், திருவிழாக்கள், கடைகள், தந்தை, தந்தையின் தலைவணங்காத குணம், தாய், வீடு...

இருபது வருடங்களுக்குப் பிறகு கடைசி மணியோசை... பிறகு முழுமையான அமைதி...

காற்றும் நீரலைகளும் சேர்ந்து நடத்தும் சல்லாபத்தை ஒருவித அதிர்ச்சியுடன் விஸ்வநாதன் புரிந்து கொண்டான். இங்கேயிருந்த அப்படி வேற எங்கேயாவது ஓடிப்போக என்னால முடியாது. என் கால்கள் இங்கே கட்டப்பட்டிருப்பவை. வேர்களாக இருந்தா பிய்த்து எறிந்துவிட்டு ஓடிடலாம். இங்கே அது இல்ல. சரியாக சொல்லப் போனா கனமான சங்கிலிகள் கொண்டு நான் கட்டப்பட்டிருக்கேன். அதற்கு மத்தியில் ஒண்ணுமே செய்ய முடியாமப் படுத்திருக்கிறதைத் தவிர எனக்கு வேற வழியே இல்ல!’- அவன் தனக்குள் கூறிக் கொண்டான்.

படகோட்டி திரும்பி வந்தான்.

“சரி... என்ன தீர்மானம் பண்ணினீங்க?”


மன்னிப்பு கேட்பதைப் போல, வெட்கப்பட்டு தலைகுனிந்தவாறு விஸ்வநாதன் சொன்னேன் “நாணுவைக் கொஞ்சம் தேடிப்பிடி... எனக்கு உடனடியா ஒரு வீடு வேணும்.”

அவன் தலையை உயர்த்திப் பார்க்கவேயில்லை. படகோட்டியின் முகத்தில் பரவியிருக்கும் ஆச்சரியத்தை அவனால் கற்பனை பண்ணிப் பார்க்க முடிந்தது. அதைப் பார்க்க முயற்சிக்காமல் கட்டியிருந்த வேஷ்டியை அவிழ்த்துவிட்டு நீருக்குள் அவன் இறங்கினான்.

நீர் ஓடிக் கொண்டிருந்தது. கண்களை மூடிக் கொண்டு, காதுகளையும் மூக்கையும் வாயையும் மூடிக் கொண்டு அவன் இருந்தான். நீர் அவனையும் இழுத்துக்கொண்டு ஓடியது. கீழ்நோக்கி, கீழ் நோக்கி... மரத்தின் வழியாக கை, கால்களை அசைக்காமல் கடந்து போகும் ஒரு அனுபவம். இறுதியில் தலையைத் தூக்கிப் பார்த்தபோது, படகு மேலே ஒரு பொட்டைப் போல நின்றிருந்தது. கண்களைச் சுற்றிலும் நீர். எண்ணினால் எண்ண முடியாத அளவுக்கு சிறிய அலைகள்...

விஸ்வநாதன் அங்கே திகைத்துப் போய் படுத்திருந்தான். சிறுசிறு மீன்கள் அவ்வப்போது குதித்தோடிக் கொண்டு வந்து அவனுடைய மார்பைக் கொத்திக் கொண்டிருந்தன. தொப்புளில் வாலால் கிச்சுக் கிச்சு மூட்டின. குறும்புத்தனம் செய்த சந்தோஷத்துடன் தூரத்தை நோக்கி ஓடின. நீரலைகளிலிருந்து அவற்றின் சந்தோஷத்தைத் தெரிந்து கொண்ட விஸ்வநாதன் தன்னை முழுமையாக நிர்வாணமாக்கினான். நீரலைகள் அவனைச் சுற்றிக் கொண்டன. முத்தம் இட்டன். தூங்கச் செய்தன. விஸ்வநாதன் கண்களை மூடி மல்லாக்கப் படுத்தினான். அவனுடைய கண்களுக்கு மேலே நீர் ஒரு தோலைப் போல மூடிகிடந்தது. நீரலைகள் அவன்மீது வந்து மோதின. கண்களைத் திறந்து பார்த்தபோது, சூரியன் கீழே இறங்கிவிட்டிருந்தது.

அவன் மீண்டும் ஆழங்களை நோக்கி மூழ்கினான். கால்களை அசைத்து ஒரு முதிர்ச்சி பெற்ற மீனைப் போல கீழ் நோக்கி, கீழ் நோக்கி அவன் நீரைத் துழாவிக் கொண்டு இறங்கினான். மீண்டும் மேலே வராமல் இருந்தால். நீருக்கு மத்தியிலிருந்த சிறிது காற்றை இழுக்கக் கூடிய சக்தி தனக்குக் கிடைத்திருந்தால்”- இப்படியெல்லாம் அவன் நினைத்துப் பார்த்தான்.

அடியில் மணல் கிடந்தது. அவன் அங்கு வந்திருப்பது தெரிந்தவுடன் அந்த மணல்கள் மெதுவாக உருண்டு இடம் மாறின. அங்கு உட்காரவும், காற்பாதங்களின் கிச்சுக் கிச்சு மூட்டிக் கொண்டு அங்கு பயணம்  செய்யவும் அவன் ஆசைப்பட்டான். இது எதுவும் முடியாமல் பூமிக்கு மேலே கால்களைப் பரப்பி வைத்துக் கொண்டு பரந்து கிடக்கும் ஆகாயத்திலிருந்து குடம் குடமாகக் காற்றை இழுத்து சுவாசித்து இவ்வளவு காலமாக வாழ்ந்து கொண்டிருக்கும் விஸ்வநாதன் என்ற மனிதன்மீது அவனுக்கு இரக்கமும் வெறுப்பும் உண்டானது.

அங்கிருந்த மணலை அவன் ஒரு கை நிறைய எடுத்தான். அப்போது தடுத்து நிறுத்த முயற்சித்தாலும், முடியாமல், ஒரு ஹைட்ரஜன் பலூனைப் போல நினைத்துப் பார்க்க முடியாத வேகத்துடன் அவன் அங்கிருந்து மேல் நோக்கி உயர்த்தப்பட்டான். தரையில் மோதி மேல் நோக்கி எழும்பும் ஒரு ரப்பர் பந்தைவிட தன்னுடைய நிலை அப்படியொன்றும் பெரிதில்லை என்பதை நினைத்தபோது அவனுடைய மனதில் வருத்தம் உண்டானது.

எப்போதும் பூமியிலேயே கிடந்து வாழ்வதற்காகச் சாபமிடப்பட்ட தன்னுடைய வாழ்க்கையை நினைத்துப் பார்க்கும்போது அவனுக்கே வெறுப்பாக இருந்தது. நீண்ட, ஆர்வம் கலந்த, வெறுக்கப்பட வேண்டிய சுவாசம்.

கையிலிருந்த மணலில் கொஞ்சம் கீழே விழுந்திருந்தன. மீதியிருந்த மணலை அவன் வெறி மேலோங்கப் பார்த்தான். சூரிய வெப்பத்தில் முகத்தை மூடிக் கொண்டு கவிழ்ந்து படுத்திருக்கும் நிர்வாணமான கறுப்பு நிறக் கன்னிகள். அவன் அவற்றை முத்தமிட்டான். என் மணல் என் ஆற்றில் உறங்கிக் கிடந்த, எனக்காகக் காத்துக்கிடந்த, என் மணல்... அவன் தனக்குள் கூறிக்கொண்டான்.

அந்த மணலை மீண்டும் நீருக்குள் போட அவனுக்கு மனம் வரவில்லை. உள்ளங்கையில் கிடந்தவாறு அவை தன்னிடம் என்னவோ யாசித்துக் கேட்பதைப் போல அவன் உணர்ந்தான். விரல்களைச் சற்று விலக்கினால் போதும், அவை காணாமல் போய்விடும். மீண்டும் ஒருமுறை பார்க்க முடியாத, ஆழங்களை நோக்கி வீசியெறியப்படும் சிறு குழந்தைகளின் ஊமைத்தனமான கெஞ்சுதல் அவளைப் பாடாய்ப்படுத்தியது. உள்ளங்கையில் ஒட்டிக் கொண்டிருந்த பத்தோ பதினைந்தோ மணல் துகள்களை மீண்டும் நீருக்குள் போடுவது என்பது ஒருவகையில் பார்க்கப் போனால் கண்ணில்லாத கொடுமைச் செயல் என்பதைப் போல் விஸ்வநாதன் உணர்ந்தான்.

அவன் திடீரென்று நான்கு பக்கங்களிலும் பார்த்தான் வெறிச்சோடிப் போன கரைகள்... பரவிக் கிடக்கும் தென்னை மரங்களுக்குக் கீழே மேய்ந்து கொண்டிருக்கும் ஒட்டிப் போன பசுக்கள் அங்கு யாரும் இல்லை.

விஸ்வநாதன் அந்த மணல் முழுவதையும் நாக்கால் நக்கினான். ஒருவித மயக்க உணர்வுடன், குதூகலத்துடன் தொண்டை வழியாக அந்த மணல் கீழ்நோக்கி இறங்கிச் செல்வதை அவன் ரசித்தவாறு படுத்திருந்தான். தொடர்ந்து அவன் கொஞ்சம் நீரைக் குடித்தான்.

“என் மணல்... என் நீர்... என் பூமி.”

அவன் ஒரு நீரில் வாழும் உயிரினத்தைப் போல நீருக்கு மேலே படுத்து உருண்டான். வானத்திற்கு மேலே போகவேண்டும் என்ற ஆர்வத்துடன் வாய் நிறைய நீரை வைத்துக் கொண்டு, மேல்நோக்கி பீச்சினான். தொடர்ந்து கண்களை மூடியவாறு மேலேயிருந்து நிமிட நேரத்திற்குப் பொழிந்த மழை நீரை அவன் ஏற்றுக் கொண்டான்.

வெயில் நீருக்கு அடியிலிருந்து கிளம்பி மேலே வந்தது. நீர் வெப்பமாக ஆரம்பித்தது. விஸ்வநாதனின் தோலை இளம் வெப்பத்தைக் கொண்ட நதிநீர் வந்து மோதிக் கொண்டிருந்தது.

பூமியின் மணித்துளிகள் வேலை செய்து முடித்து நீருக்குள் நுழைந்தன. பூமியில் எல்லாரும் ஆச்சரியப்பட்டு வாழ்த்தும் அதை அங்கு குறிப்பிட்டுக் கூறும்படி யாரும் கண்டுகொள்ளவேயில்லை. வீசி எறியப்பட்ட துணிகளைப் போல மணித்துளிகள் நீரில் கலந்து மறைந்தன. நீர் வளையங்களும், மீன்களும் சிறு சிறு அலைகளும் பாசிகளின் வேர்களும் அதைப் பார்த்து ஒதுங்கின. யாரும் தன்னைக் கண்டு கொள்ளவில்லை என்பதை உணர்ந்ததும் மூழ்கிக் கொண்டிருந்த மணித்துளிகள் தலைக்கு மேலே கைகளைக் கூப்பியவாறு ஆழங்களை நோக்கி வேகமாகப் பாய்ந்தன. அங்கு அவற்றின் மரணம் அவற்றை எதிர்பார்த்துக் காத்திருந்தது.

சுற்றிலும் அழிந்து கொண்டிருந்த செயலற்றுப்போன மணித்துளிகளைப் பற்றி விஸ்வநாதனும் நன்கு தெரிந்து வைத்திருந்தான். எதிரிகளின் செயல் அவனை வெறி கொள்ளச் செய்தது. அவன் உரத்த குரலில் கத்தியவாறு, விழுந்து விழுந்து சிரித்தான். வெற்றி வீரனின் குரூரமான உற்சாகத்துடன் அவன் அந்த மணித்துளிகளை ஏளனம் செய்தான்.


ஒரு படகு அப்போது கடந்து சென்றது. சற்றி மெலிந்து போய்க் காணப்பட்ட ஒரு வயதான மனிதன் துடுப்பை வேகமாக நீருக்குள் செலுத்தியவாறு அவனை ஆர்வத்துடன் பார்த்தான். படகின் நடுவில் குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு குடையை விரித்துப் பிடித்திருந்த பெண் நீர்ப்பரப்பிற்குக் கீழே அசைந்து கொண்டிருந்த அமைதி நிலையைப் பார்த்து பதைபதைத்துப் போய் தலையைக் குனிந்து கொண்டாள்.

அவன் ஒரு சிறு குழந்தையைப் போல குலுங்கிக் குலுங்கிச் சிரித்தவாறு படகை நோக்கி நீந்திச் சென்றான். படகு அவனுக்குப் பிடி கொடுக்காமல் வேகமாகப் போய்க் கொண்டிருந்தது.

படகுக்கு மேலே காற்று வீசிக் கொண்டிருந்தது. காற்றின் உதவியுடன் குதித்துப் போய்க் கொண்டிருக்கும் படகைப் பார்த்து விஸ்வநாதனுக்குப் பொறாமை உண்டானது. “இந்தக் காற்று எனக்கும் சொந்தமானது தானே? என்னையும் ஏன் அது தன்னுடன் கொண்டு போகல?- அவன் தனக்குத் தானே கூறிக் கொண்டான்.

தூரத்தில் ஒரு கூக்குரல் கேட்டது. தலையைத் தூக்கிப் பார்த்தபோது வேறொரு படகு அருகில் வந்தது. விஸ்வநாதனின் படகு அவனைத் தேடி வந்து கொண்டிருந்தது. படகோட்டியின் பதைபதைப்பை அவனால் உணர முடிந்தது. ஒருவேளை இதற்கிடையில் நாணுவைப் பார்த்து வீட்டுக்கான முன்பணத்தைக் கூட கொடுத்து முடித்து விட்டு அவன் வந்திருக்கலாம். படகுத்துறையில் தன் வரவை எதிர்பார்த்து உட்கார்ந்திருக்கும் நாணுவின் முகத்தில் தெரியும் பரபரப்பை ஒருநிமிட நேரத்தில் அவனால் காணமுடிந்தது.

பாவம். விஸ்வநாதன் நினைத்தான். கதீஸின் பெயரைச் சொல்லி சங்கரி சித்தி வாங்கியபோது நாணுவிற்கு ஒரு ரூபாய் அதில் கொடுக்கப்பட்டிருக்கும். வீட்டிற்காக சங்கரி சித்தி ஒரு ரூபாய் வாங்குகிறபோது...?

“நாணுவிற்கு மட்டுமே இருக்கும்படி ஒரு ரூபா தரணும்”- தனக்குள் விஸ்வநாதன் கூறிக் கொண்டான்.

படகு பார்வைக் கெட்டிய தூரத்தைத் தாண்டிப் போய்க் கொண்டிருந்தது.

விஸ்வநாதன் மீண்டும் நீருக்கடியில் மூழ்கினான். படகோட்டியின் பதைபதைப்பு மேலும் அதிகமாகட்டும். அவனுடைய வழி தவறட்டும் நிமிடங்களுக்குப் பிறகு நிர்வாணமாக ஒரு நீர் வாழ் உயிரினம் மேலே வரும்போது படகோட்டி அதிர்ந்து போய் கூப்பாடு போடட்டும்.

அவன் குளிர்ந்த நீருக்கடியில் ஒரு ஆமையைப் போல தன்னை மறைத்துக் கொண்டான்.

4

ணலில் அடையாளம் உண்டாக்கி காணாமற்போன மூத்திரத்தைப் போல இருந்தது அந்த வீடு. அந்த வீட்டைச் சுற்றிலும் பிச்சைக்காரர்களைப் போல திரிந்து கொண்டிருந்தன பக்கத்து வீடுகளைச் சேர்ந்த மெலிந்து போன கோழிகள். அழுகிப்போன தேங்காய்களின் வாசனை நிறைந்திருந்த காற்றைக் கிழித்துக் கொண்டு குரைத்துக் கொண்டிருந்த நாய்கள் ஆங்காங்கே நின்றிருந்த குளம்...

இங்கு வருவதற்கு முன்பே இங்குதான் வரப்போகிறோம் என்பது விஸ்வநாதனுக்கு நன்கு தெரியும். எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் பிறந்து வளர்ந்த வீட்டிற்கு ஒரு வாடகைக்காரனாக செல்ல முடியும் என்ற உறுதி அவனுக்கு இருந்தது.

இங்குதான் விஸ்வநாதன் பிறந்தான். இந்த வாசலில் விஸ்வநாதன் எட்டு வைத்து நடந்தான். இந்த வாய்க்காலிலும் வரப்பிலும் அவனுடைய மூன்று அன்னைமார்களும் ஒருவரோடொருவர் போட்டி போட்டுக் கொண்டு விஸ்வநாதனைத் தங்களின் தோள்மீது ஏற்றி காக்கா, பூனை கதைகளைச் சொல்லி உணவு ஊட்டினார்கள். இந்தத் திண்ணையில் விஸ்வநாதனை தன் தந்தையைப் பார்த்தான். தந்தையைப் பார்த்துப் பயந்தான். இந்த முற்றத்தில் ஓண நாட்கள் அவனைத் தேடி வந்தன. வயலிலும் ஆற்றின் பள்ளங்களிலும் அவனுடைய மலம் கலந்தது. அங்கு முளைத்த இலைகளும் கிழங்குகளும் ஆற்றில் ஓடிவந்த மீன்களும் நண்டுகளும் அவனுக்கு உணவாயின.

இங்குள்ள காற்று அவனுக்கு நிறம் தந்தது. இந்த வயல் வழியே ஓடி நடந்த வெயில் அவனுடைய தோலிலிருந்து வியர்வையை உறிஞ்சி எடுத்தது. மழை அவனை நினைத்து எடுத்தது. மழை அவனை நனைத்து எடுத்தது. ஏரிகளிலிருந்து கிளம்பி வரும் நீரை முத்தமிட்டு வரும் காற்று விஸ்வநாதனின் தாடை எலும்புகளை மோதி உலுக்கியது. இங்கு விஸ்வநாதன் வளர்வதற்குத் தேவையான அனைத்தும் அவனுக்காகப் படைக்கப்பட்டிருந்தன. கடைசியில் இந்த மண்ணில் விஸ்வநாதனின் தந்தை வெட்டப்பட்டு இறந்துகிடந்தான். அவனுடைய இரத்தம் பட்டிருந்த மணலின் ஈரம் காய்வதற்கு முன்பு அவனுடைய அன்னையின் இரத்தமும் விழுந்தது. இரண்டையுமே விஸ்வநாதன் பார்த்தான். அன்னையின் பிணத்தையும் தந்தையின் பிணத்தையும் அருகருகில் இருக்கும்படி குழிதோண்டி புதைப்பதை ஏழு வயது சிறுவன் ஆச்சரியத்துடன் பார்த்தவாறு நின்றிருந்தான். அதற்குப் பிறகு இரண்டு வருடங்கள் கடந்தபிறகு, வீட்டிற்குள் இரவுகள் சத்தம் நிறைந்ததாக ஆகி, சங்கரி சித்தியும் ஜானு பெரியம்மாவும் ஆணுக்காக ஒருவரோடொருவர் அடித்துக் கொள்ள, சங்கரி சித்திக்கு வேண்டிய ஒரு ஆள் கள்ளு அருந்திவிட்டு வந்து விஸ்வநாதனின் கன்னத்தில் அடிக்க இந்த மண் அவனிடம் கூறியது. இங்கிருந்து போ. உன்னுடைய நாளையை நான் வேறொரு மண்ணில் உண்டாக்கியிருக்கேன். நாளை முடிந்து, பிறகு பல நாட்களும் கடந்தபின்னர் நீ என்னை வந்து பார்க்கணும், அன்று நான் உன்னை வரவேற்று உபசரிப்பேன்.

விஸ்வநாதன் திரும்ப வந்திருக்கிறான். எங்கெங்கெல்லாமோ சுற்றித் திறந்துவிட்டு கடைசியில் தனக்கே தெரியாமல் இதே மண்ணைத் தேடி அவன் வந்திருக்கிறான்.

மாலை நேரம் முற்றத்தில் தன் பலத்தை அடக்கி வைத்துக் கொண்டு தூங்கிக் கொண்டிருக்கிறது. விஸ்வநாதன் வாசலில் விரித்திருந்த புல்லால் ஆன பாயில் சாய்ந்து படுத்தான். தூரத்தில் எரிந்து நீங்கிக் கொண்டிருக்கும் சூரியனின் கவலை நிறைந்த முகம் தெரிகிறது.

பிய்ந்து போய்க் காணப்பட்ட வேலிக்கு அந்தப் பக்கத்திலிருந்து சதைப்பிடிப்பான ஒரு பெண் நடந்து வந்து கொண்டிருந்தான். நிலத்தின் மூலையில் கட்டப்பட்டிருந்த ஒரு ஆடு அவளைப் பார்த்தவுடன் உரத்த குரலில் கத்த ஆரம்பித்தது. அதை அவிழ்த்து விட, அது அவளின் பின்பாகத்தில் தன்னுடைய உடம்பால் உரசியவாறு முன்னோக்கி நடந்தது. அவள் சிரித்துக் கொண்டே விஸ்வநாதனைப் பார்த்தாள். பிறகு கையை உயர்த்தி வயிற்றுப் பகுதி மேலும் சற்று அதிகமாகத் தெரியும்படி காண்பித்தவாறு, தலைக்கு மேலே இன்னொரு கைக்கு கயிறை மாற்றியவாறு, பின்பகுதியை அசைத்துக் கொண்டே ஆட்டிற்குப் பின்னால் அவள் வேகமாக ஓடினாள்.

“அவளுடன் பழக்கம் உண்டாக்கிக் கொள்ளலாமா? வேண்டாம். அதற்காக வேண்டியா நான் இங்கு தங்கியிருக்கிறேன்? இந்த ஊர்ல யார் கூடவும் அறிமுகம் ஆகவேண்டாம். பயணம் செய்யும் ஒருத்தனின் பயணத்தில் ஒரு கால்சுவடு இங்கேயும் பதிகிறது. அவ்வளவுதான் இங்கேயிருந்து போறப்போ கால் பாதத்துல ஒரு சின்ன மணங்கூட ஒட்டியிருக்கக் கூடாது”- அவன் தனக்குள் கூறிக்கொண்டான்.


பிரிந்து போவதன் வேதனைக்குப் பயந்து அவன் இப்படித் தனக்குத்தானே கூறிக் கொள்ளவில்லை. சொல்லப் போனால் எந்தவொரு பிரிவும் அவனுக்கு வேதனை தரக்கூடிய ஒன்றாக இருந்ததில்லை என்பதே உண்மை.

காலையில் அவன் படகோட்டியைப் போகச் சொன்னான். படகோட்டிக்கு அவனைப் பிரிந்து செல்வதில் சற்று வருத்தம் இருப்பதைப்போல் தோன்றியது. அது ஏன் என்பதற்கான காரணம் அவனுக்குத் தெரியவில்லை. குறைந்த நாட்களே நீடித்திருந்த அந்த நட்பு இயற்கையாகவே அதன் முடிவில் போய் சேர்ந்திருக்கிறது. அதை நினைத்து அந்த மனிதன் எதற்காக வருத்தம் கொள்ள வேண்டும்?

அவன் எந்தச் சமயத்திலும் தனக்கு இவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டதில்லை. ஏதாவது சொல்லாமல் இருக்க முடியாது என்பதைப் புரிந்து கொண்டபோது, அவன் ஒரு தொகையைச் சொன்னான். அது மிகவும் குறைவான தொகை என்று அவனுக்குத் தோன்றியது. அதனால் அந்தப் படகோட்டி கேட்டதைவிட அதிகமாக அவன் பணம் கொடுத்தான். பத்து ரூபாய்.

படகுத்துறை அரை அவன் படகோட்டியுடன் சென்றான். நாணு பெட்டியையும் பேக்கையும் எடுத்தான். துடுப்பைக் கரையில் ஊன்றியவாறு படகோட்டி அசட்டுத்தனமாகச் சிரித்தான். கதை தூரத்தில் இருந்தது. படகு தூரத்தில் வேகமாகப் போய்க் கொண்டிருந்ததை விஸ்வநாதன் வெறுப்புடன் பார்த்தவாறு நின்றிருந்தான். படகோட்டியின் வாய் நிறைந்த சிரிப்பை இனி அவன் பார்க்க முடியாது.

நாணு கிடைத்தது ஒரு விதத்தில் நல்லதாகப் போய்விட்டது. எந்தத் தேவைக்கும் அவனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். கஷ்டங்களும் புகார்களும் அவனிடம் நிறைய இருந்தன. அவன் வீட்டில் கணக்கிலடங்காத குழந்தைகள் எப்போதும் அழுதவண்ணம் இருக்கின்றன.

கடைசி குழந்தை ஒன்றைத் தவிர, மீதி எல்லாமே ஆண் குழந்தைகள். நாணுவிற்குத் தன்னுடைய எதிர்காலத்தைப் பற்றி எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லை.

மெலிந்து போய்க் காணப்பட்ட ஒரு மனிதன் வீட்டு வாசல் வழியே நடந்து வந்து கொண்டிருந்தார். பக்கத்து வீட்டைச் சேர்ந்த மனிதராக இருக்க வேண்டும். எங்கோ தூரத்திலிருந்து வந்திருக்கும் ஒரு புதிய வேற்று ஊர் மனிதனைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக அந்த மனிதர் அங்கு வந்திருக்க வேண்டும்.

விஸ்வநாதன் எழுந்து நின்றான். வாழ்க்கையில் முதல் தடவையாக ஒரு உபசரிப்பாளர் வேடத்தை அவன் இப்போது அணிகிறான்.

வந்த மனிதர் திண்ணையில் ஏறத் தயங்கி நின்றிருந்தார்.

“சாயங்காலம் வயல்ல இருந்து வந்தப் போதான் வந்திருக்குற விஷயமே தெரியும்”- அந்த மனிதரின் குரலில் ஒரு பண்பாடு தெரிந்தது.

விஸ்வநாதன் பணிவுடன் சிரித்துக் கொண்டான்.

“இங்கே உட்காருங்க.”

“வேண்டாம்... நான் இங்கேயே நிற்கிறேன்.”

அந்த மனிதரை ஒரு அடி முன்னால் நகர வைப்பதற்கு மிகவும் மெனக்கெட வேண்டிய வந்தது. கடைசியில் திண்ணையில் ஏறி உட்காராவிட்டால் விஸ்வநாதன் ஒரு வார்த்தைகூட பேசமாட்டான் என்பதைப் புரிந்து கொண்ட பிறகுதான் அந்த மனிதர் வேறு வழியே இல்லாமல் அவன் சொன்னதைக் கேட்டார். மிகவும் தயங்கியவாறு அவர் வெற்றிலையைப் போட்டார்.

முதுகு வளைந்திருந்த உடலில் எலும்புகள் துருத்திக் கொண்டிருந்தன. இவ்வளவு வயதான பிறகும், முகத்தில் சிறு சிறு ரோமங்கள் வளர்ந்து காடென காட்சியளித்தன. அவ்வப்போது சிறிதும் எதிர்பாராமல் பேசும்போது தொண்டைக் கமறல் எடுத்துக் கொண்டிருந்தது. உடம்பு சரியான நிலையில் இல்லை என்பதை அறிவிக்கிற மாதிரி விக்கலும் இடையில் தலைகாட்டிக் கொண்டிருந்தது. இவை எல்லாமே அவரிடம் முன்பும் இருந்தன. சிவராமன் அண்ணனிடம் எந்தவித மாற்றமும் இல்லை. அவரிடம் வளர்ச்சியும் இல்லை. முன்பும் இதேபோலத்தான் இருந்தார். யாராக இருந்தாலும் மிகவும் சீக்கிரமே நெருங்கும் விதத்திலும், வீசி எறிய முடியாத மாதிரியும் இருக்கக் கூடிய ஒரு நட்பு முறைகளை அவரால் வளர்த்தெடுக்க முடியும்.

சிவராமன் அண்ணன் தன் பெயரைச் சொன்னார். தன் மூன்று பிள்ளைகளைப் பற்றிக் கூறினார். மூத்தவன் ஆலப்புழையில் இருக்கிறான். கயிறு தொழிற்சாலையொன்றில் வேலை பார்த்தான். இப்போது அந்தத் தொழிற்சாலையை மூடிவிட்டார்கள். ஒரு மருந்து தொழிற்சாலையில் மருந்து அரைக்கும் வேலையில் தற்போது அவன் இருக்கிறான். அவனுடைய மனைவி சாலைப்பணிக்குப் போய் கொண்டிருக்கிறாள். இரண்டாவது மகன் ஆலப்புழையில் ஒரு முதலாளியிடம் ஓட்டுநராக வேலை பார்க்கிறான். வீட்டிலுள்ளவர்களுடன் சண்டை மூன்றாவது மகள் பெயர் சுசீலா. அவள்தான் முன்பு அவன் பார்த்த அழகி.

விஸ்வநாதன் கடந்து போன காலத்தைத் திரும்பிப் பார்த்தான். அந்தக் குடும்பப் புராணம் அவன் ஏற்கெனவே கேட்டதுதான். விஸ்வநாதன் ஊரைவிட்டுப் போகும்போது சந்திரன் சிறுவனாக இருந்தான். விஸ்வநாதனுக்கு மிகவும் நெருங்கிய நண்பனாக இருந்தவன் கொச்சு கிருஷ்ணன் தான். இந்தப் பயணத்திற்கு முதல்நாள் இரவு முழுவதும் அவனிடம் தான் ஊரைவிட்டுச் செல்லும் விஷயத்தைக் கூறுவதா, வேண்டாமா என்று சிந்தித்து உறங்காமலேயே அவன் கிடந்தான். கடைசியில் கூறவே வேண்டாம் என்ற முடிவுக்கு அவன் வந்தான். அதற்குப் பிறகு இதுவரையில் யாரிடமும் எங்கும் அவன் நினைத்துப் பார்த்து கொச்சு கிருஷ்ணனிடம் அவன் சொல்லாமல் கிளம்பியபோதுதான்.

குடும்பப் புராணத்தை நிறுத்திவிட்டு இடையில் சிவராமன் அண்ணன் விஸ்வநாதனைப் பற்றி விசாரித்தார். விஸ்வநாதன் தன் பெயரை மறைத்து வைக்கவில்லை. அதற்கான அவசியம் இல்லையே. மீது அவன் சொன்ன எல்லா விஷயங்களும் உண்மை அற்றவையே. யாரோ ஒரு தந்தையைப் பற்றியும், யாரோ ஒரு தாயைப் பற்றியும் கூறினான். தனக்கே தெரியாத ஊரிலிருக்கும் தனக்கு அறிமுகமே இல்லாத ஒரு வீட்டின் பெயரைச் சொன்னான். வேறொரு மனிதனின் வாழ்க்கைக் கதை அது.

“சாப்பாடு எங்கே?”- கடைசியில் கிழவர் கேட்டார்.

“அதை நாணு வாங்கிக் கொண்டு வருவான். தேநீர்க் கடையில ஏற்பாடு பண்ணியிருக்கு...”

அது சிவராமன் அண்ணனுக்குத் திருப்தி தரக்கூடிய ஒரு விஷயமாக இருக்கவில்லை. நாணுவைப் பற்றி அவருக்கு ஒரு விருப்பமின்மை இருப்பதைப் போல் தோன்றியது. “ஒரு பால் கலக்காத தேநீர் கொண்டு வரச் சொல்லட்டுமா?”- பேச்சுக்கு வெப்பம் கிடைத்தபோது சிவராமன் அண்ணன் கேட்டார்.

“வேணும். நான் அங்கே சொல்லலாம்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்.”

அவர் வாசலில் நின்றவாறு உரத்த குரலில் சுசீலாவை அழைத்தார். “ரெண்டு பால் இல்லாத தேநீர் கொண்டு வா.”

விஸ்வநாதன் பாயில் மல்லாக்கப் படுத்திருந்தான். அவனையே அறியாமல் அவனுக்குள் ஒருவித கவலை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. தனக்குள் அவன் மூடி வைத்திருந்த இந்த விளையாட்டு இப்போதும் அவனை விடாமல் பின்தொடர்ந்து கொண்டிருந்தது. என்றாவதொரு நாள் யாரிடமாவது தான் யார் என்ற உண்மையை வெளிப்படுத்த முடியுமா என்று அவனுக்கே சந்தேகம் உண்டாக ஆரம்பித்தது.


அப்படியே சொன்னாலும் அதை யாராவது நம்பத்தான் தயாராக இருப்பார்களா? அதையும் பரீட்சித்துத்தான் பார்த்துவிடவோமே என்று அவன் நினைத்தான். பின் பிறப்பைத் தெரிந்த ஒரு மனிதர் இதோ இங்கே இருக்கிறார். வேணும்னா இப்பவே நான் சொல்லத் தயார். சிவராமன் அண்ணே, என்னை உங்களுக்குத் தெரியலையா? நான் கத்தியால குத்தப்பட்டு இறந்த வாசுவோட மகன்... விஸ்வநாதன். இங்கே வந்து சேர்ந்தப்போ தெரியாத்தனமா சித்தியைப் பார்த்துட்டேன். பிறந்து வளர்ந்த ஊர்ன்றதாலயோ என்னவோ இங்கேயிருந்து உடனே போகுறதுக்கு எனக்கு மனசு வரல. நான் யார்ன்றதை யார்கிட்டயும் சொல்லமாட்டீங்கள்ல?- அவன் தனக்குள் கூறிக் கொண்டான்.

ஒருவேளை அவன் கூறியதை அவர் நம்பியிருக்கலாம். அப்படி நம்பவில்லையென்றால் ஆதாரங்களைத் திரட்டி மனிதர்களையும் இடங்களையும் சாட்சிகளாக நிறுத்தி அவரை அவன் நம்பிக்கை வரும்படி செய்யவேண்டும். அப்படிச் செய்வதால் அவனுக்குக் கிடைக்கப் போகிற அனுகூலம் என்ன? எதுவுமே இல்லை என்பதே உண்மை. யாரிடமும் கூறமாட்டேன் என்று சத்தியம் செய்துவிட்டு, அவர் சொல்லி நாளை பொழுது புலர்வதற்கு முன்பே ஊர் முழுவதும் விஷயம் பரவியிருக்கும். அந்தக் காற்சட்டை அணிந்து வந்தது யாருன்னு தெரியுமா? செத்துப்போன வாசுவோட மகனாக்கும். அது, அவர்கள் ஒவ்வொருவரும் பேசிக் கொள்வார்கள். இரண்டு நாட்களுக்கு ஆர்வம் நிறைந்த பல முகங்களை அவன் பார்க்க வேண்டியது வரும். பலரிடமும் இன்முகத்துடன் பேச வேண்டிய சூழ்நிலை உண்டாகும். மூன்றாவது நாள் விஸ்வநாதன் அவர்களுக்கு ஒரு புதுமையான விஷயமாக இல்லாமல் போய்விடுவான். பல பிரச்சினைகளுக்கு மத்தியில் எழுந்த அந்தச் சுவையான விஷயம் வெகு சீக்கிரமே பாய்க்குள் மங்கிப்போய் சுருட்டி மூடப்பட்டு விடும்.

நான் செல்ல மாட்டேன், விஸ்வநாதன் தனக்குள் கூறிக் கொண்டான். யார்கிட்டயும் சொல்லமாட்டேன். அப்படி அவன் கூறிவிட்டால், அந்த நிமிடத்திலேயே அவனுடைய வாழ்க்கையின் அமைதித் தன்மை இழக்கப்பட்டு விடும். பிறகு எந்தச் சமயத்திலும் திரும்பப் பெற முடியாத அளவிற்கு அதன் பிரகாசம் நிரந்தரமாக இல்லாமற் போய்விடும்.

சுசீலா தேநீருடன் வந்தாள்.

“பால் இருந்ததாடீ?” சிவராமன் அண்ணன் கேட்டார்.

“ஆட்டைக் கறந்தேன்.”

“புத்திசாலிப் பொண்ணு”

கிராமத்து அழகு வெட்கப்பட்டு ஒதுங்கி நின்றது. என்னதான் விலக்கினாலும், அவனையே அறியாமல் அவனுடைய கண்கள் அவள் மீது ஆழமாகப் பதியவே செய்தன. நல்ல உடல் வளத்துடன் சுசீலா இருந்தாள்.

“போ... நான் வர்றேன். குவளைகளை எடுத்துட்டுப் போ.”

தன் தந்தை காணாதது மாதிரி, அதே நேரத்தில் யாருக்கும் தெரியாமல் விஸ்வநாதன் பார்க்கிற மாதிரி அவள் ஒதுங்கி நின்றிருந்தாள். அவ்வப்போது அவள் அவன் முகத்தைப் பார்த்தாள். அப்படிப் பார்க்கும்போது அவளுடைய கன்னங்கள் சிவந்தன. அவனுக்கு அவள்மீது பரிதாப உணர்ச்சி உண்டானது. நான் கையில தூக்கி நடந்திருக்க வேண்டிய பெண்ணு இவ, அவன் தனக்குள் கூறிக் கொண்டான். ஒருவேளை அவனுடைய மனைவியாகக் கூட சுசீலா ஆகியிருக்கலாம். தன்னுடைய இழப்புகளில் அவளுடைய இளமையும் கன்னித் தன்மையும்கூட அடங்கியிருக்கின்றன என்பதை அவன் கவலையுடன் நினைத்துப் பார்த்தான்.

குவளை காலி ஆனது. சிவராமன் அண்ணனின் நகைச்சுவை கலந்த பேச்சு, சுசீசலாவின் கண்களில் இருந்த ஒளி, மாலை தவழ்ந்து கொண்டிருக்கும் வாசல் வழியாகப் பின்பாகத்தை அசைத்தவாறு நடந்து போய்க் கொண்டிருக்கும் அந்த இளம் பெண்ணின் கொள்ளை அழகு, ஒரு பழைய உறவின் மறு பிறப்பு... நினைக்க நினைக்க விஸ்வநாதனுக்கு எல்லாமே விளையாட்டாகத் தோன்றியது.

5

விஸ்வநாதன் பிறந்தபோது அவனுடைய தந்தை ஒரு படகோட்டியாக இருந்தான். ஒருமுறை படகின் சொந்தக்காரன் தேவையில்லாமல் என்னவோ கூறிவிட்டான். வாசு அந்த ஆள் எப்படி அப்படிப் பேசலாம் என்று திருப்பிக் கேட்டான். வாக்குவாதம் முற்றியது. அவ்வளவுதான், அந்த மனிதனை வாசு அடித்து விட்டான். அந்த வேலை அந்த நிமிடமே அவனுக்கு இல்லாமற் போனது.

விஸ்வநாதனுக்கு ஞாபகம் தெரிந்த நாளில் அவனுடைய தந்தை ஒரு லாரியில் ஓட்டுனராகப் பணியாற்றிக் கொண்டிருந்தான். ஒரு நாள் அந்த வேலையும் வேண்டாம் என்று கூறிவிட்டு, ஒரு பழைய காரை அவன் விலைக்கு வாங்கினான். அதை வாடகைக் காராக மாற்றினான். பத்துமைல் சுற்றளவில் இருந்த ஒரே ஒரு வாடகைக் கார் அதுதான். வீட்டிற்குப் பணம் எந்தச் சமயத்திலும் வந்து சேர்ந்ததில்லை. இருந்தாலும் அவனுடைய தந்தையின் ஜிப்பா பையில் எப்போதும் பண நோட்டுக்கள் இருந்தவண்ணன் இருக்கும். ஜானு மலடியாக இருந்தாள். மனைவி பிள்ளை பெறவில்லை என்றதும் வாசு ஜானுவின் தங்கையையும் மனைவியாக ஆக்கிக் கொண்டான். கமலாக்ஷி! பிரசவம் ஆகி அவள் மிகவும் இளைத்துப் போய்க் காணப்பட்டதால், வாசு சங்கரியையும் மனைவியாக்கிக் கொண்டான்.

அவனுடைய தந்தை கர்ப்பமாக்கிய பெண்கள் இடையில் அவ்வப்போது அவனைத் தேடி வீட்டிற்கு வந்தார்கள். மூக்குப்பொடியை உள்ளே இழுத்துக் கொண்டே ஜானு பெரியம்மா அவர்கள் மீது பாய்ந்து விழுந்தாள். அவனுடைய தாய் எதுவும் பேசவில்லை. தன் தாயின் மடியில் மல்லாக்கப் படுத்தவாறு வாசலில் பெரிதாகக் கேட்டுக் கொண்டிருந்த ஆரவாரத்தைக் கேட்டு ரசித்துக் கொண்டிருந்தான் விஸ்வநாதன். வாசலில் போடப்பட்டிருந்த உரலில் தன் பின் பாகத்தை இறக்கி வைத்துவிட்டு, முழங்காலுக்கு மேலே முண்டை தூக்கிக் கட்டியவாறு கலகலகவென்று சிரித்துக் கொண்டும், இடையில் அடிக்கொருதரம் தன் அக்காவிற்கு உதவிக்கொண்டும் சங்கரி சித்தி ஒரு தேவதையின் குறும்புத்தனங்களுடனும் அழகுடனும் அங்கு தோன்றிக் கொண்டிருந்தாள்.

சங்கரி சித்தி தினமும் குளித்தாள். மாலை நேரம் வந்துவிட்டால் ஏணியில் ஏறி முல்லைப்பூ பறித்து தன் தலையில் சூடுவதை வாழ்க்கையாகக் கொண்டிருந்தாள். அவளை எப்போதும் நறுமணம் சூழ்ந்தவண்ணன் இருந்தது.

பெரியம்மா எப்போதும் குளித்ததில்லை. மூக்குப் பொடியின் சகிக்க முடியாத வாசனை மூக்கில் படும்போதெல்லாம் பெரியம்மாவைப் பற்றிய நினைவு அவனுக்கு வந்துவிடும். எல்லாமே புலர்காலைப் பொழுதின் குளிர்ச்சியைப் போல தெளிவற்ற நினைவுகள்...

நினைவுகள்மீது விடாமல் மழைபெய்து கொண்டிருந்தது. நினைவுகளின் வயல்களில் நீ நிறைந்து வழிந்தது. ஆறுகளின் கரைகள் நீரால் நிறைந்து காணப்பட்டன. மழைக்காலத்தின் மத்தியில் வாத்துக்கள் கூட்டம் கூட்டமாக நீரில் மிதந்து வந்து கொண்டிருந்தன. அவை எங்கிருந்து வந்தன என்பது அவனுக்குத் தெரியாது. முடிவற்ற காலத்திற்கு அப்பாலிருந்துகூட இருக்கலாம். உடம்பில் வரிகள் இருக்க, இறக்கைகளை அசைத்தவாறு அவை மிதந்து வந்தன. மிதந்து வரும்போது ஆண் வாத்துக்கள் பெண் வாத்துக்கள்மீது வேகமாக ஏறின. நீரில் மூழ்கி மேலே வந்த பெண் வாத்து தூரத்தை நோக்கி ஓடியது. ஆண் வாத்திற்குச் சிறிதுகூட தாகம் அடங்கவில்லை.


மாலை நேரம் வந்துவிட்டால் வாத்துக் கூட்டம் தென்னந்தோப்பைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த வலைக்குள் தங்களை அடக்கிக் கொண்டன. வெளியே பெண் வாத்துக்கள் பரிதாபமாக அழுதன. உள்ளே ஒரு தனி அறையில் மூன்று பெண்கள் அவனுடைய தந்தையைச் சுற்றி நெருக்கமாகப் படுத்திருந்தார்கள். அவர்களுக்கும் போவதற்கு ஒரு இடம் இல்லை.

வாத்துக் கூட்டத்திற்குப் பின்னார் தொப்பிக் குடை அணிந்து விரிந்த மார்புகளைக் கொண்ட அப்பச்சனும் பைலிக்குஞ்ஞும் படகில் மிதந்து வந்தார்கள். அவர்கள் அவனுடைய தந்தையின் நண்பர்கள். மாலை நேரங்களில் அவர்கள் கொண்டுவரும் சுத்தமான பட்டைச் சாராயத்தின் வாசனை வீட்டின் திண்ணைப் பகுதியில் நிறைந்திருந்தது. அவனுடைய தந்தை அவர்களை எப்போதும் திட்டிக் கொண்டே இருப்பான். இரும்பைப் போல உறுதி படைத்த அந்தச் சகோதர்கள் அவனுடைய தந்தைக்குப் பயந்தார்கள். சொல்லப் போனால் வாசுவைப் பார்த்தாலே இந்த ஊரில் உள்ள எல்லாருக்கும் பயம்தான்.

சிவராமன் அண்ணன் விக்கிவிக்கி கூறுகிறார்:- அவனுடைய தனிப்பட்ட குணத்தைத் தெரிந்திருந்தால் பைலில்குஞ்ஞு அல்ல, அவனுடைய தந்தையே நினைத்தால்கூட ஜானு மீது கை வைக்க தைரியம் வராது என்று ஜானு பெரியம்மா அவனுடைய தந்தையிடம் வந்து விஷயத்தைச் சொன்னாள். அவன் தந்தை பைலிக்குஞ்ஞுவைக் கத்தியால் குத்தினான். அவர்கள் பழிக்குப் பழி வாங்கினார்கள். விஸ்வநாதனின் தந்தையை அவர்கள் கோடரியால் வெட்டி வீழ்த்தினார்கள். விஸ்வநாதனின் கால்களுக்குக் கீழே அவனுடைய தந்தையின் இரத்தம் வழிந்து ஓடியது. தடுத்துப் பிடிக்கப்போன அவனுடைய தாயும் அங்கேயே விழுந்து இறந்தாள். அவன் இறந்ததோடு இந்த வீடு நாலாவிதமாகிவிட்டது. கண்ட கழுதைகளும் வீட்டுக்குள் நுழைந்து அந்த இரு பெண்களையும் ஒரு வழி பண்ணின. “இருந்த ஒரே மகனான சின்னப்பையன் எங்கேயோ கிளம்பிப் போயிட்டான். கொஞ்ச நாட்கள் ஆனவுடனே சின்ன பொண்ணை ஒரு மந்திரவாதி மயக்கிக் கொண்டு போயிட்டான். எங்கே கொண்டு போனான்னே தெரியல. ஆறேழு வருடங்கள் ஆனபிறகு, கையில கொஞ்சம் காசோட அவள் திரும்பி வந்தா. இங்கே ஒரு சின்ன வீட்டை வாங்கி வசிக்க ஆரம்பிச்சா. இப்போ முடியாது. வயதாயிடுச்சு. இருந்தாலும் தொழிலை விடல”- சிவராமன் அண்ணன் கூறினார்.

விஸ்வநாதன் தான் அறிந்த அந்தக் கதை மீண்டும் கூறப்படுவதைக் கேட்டவாறு உட்கார்ந்திருந்தான். உள்ளுக்குள் ஒருவகை விரக்தி உணர்வு உண்டானது. வெறுப்பு கலந்த காற்றில் அமைதி கூடிக் கொண்டிருந்தது.

“பெண்களுக்கு நன்றி இல்லைன்னு சொல்றது சும்மா இல்ல? சார்...”- சத்தம் காதுகளில் வந்து மோதுகின்றன. “சிறையில் இருந்து வந்த அன்னைக்கு பைலிக்குஞ்ஞு அந்த மலடி கூடத்தான் படுத்தான்.”

விஸ்வநாதன் அந்தக் கணமே எழுந்தான். அவனுடைய பாலப் பருவத்தின் குறுகிய காலம் ஒரு ஆவேசத்திற்குள்ளேயே அடங்கிப் போனது. ஊரைவிட்டுப் போகும்போது? ஒரேயொரு இலட்சியம் மட்டுமே அவனிடம் இருந்தது. நான் அவர்களைக் கொல்வேன். தேடிப்பிடிச்சுக் கொல்வேன். என் தந்தையைக் கொலை செய்தவர்களை, தாயைக் கொன்றவர்களை என்பதே அது. வருடக்கணக்கான அந்த ஒரே வெறி அவனுடைய இரத்தத்தில் ஊறிப் போய்க் கிடந்தது. நகரங்கள் மாறின. முகங்கள் மாறின. பகல் இரவுகளின் தன்மைகள் மாறின. வாழ்க்கை மாறியது. அறியாத கூட்டங்களுக்கு மத்தியில் அவன் முதலில் அவர்களைத் தேடினான். தூர இடங்களில் இருக்கும் கிராமங்களில்கூட வக்கிரம் பிடித்த, கொடூரத்தன்மை கொண்ட அவர்களின் கண்களைத் தேடி அவன் அலைந்தான். கடைசியில் அந்தத் தேடலுக்கு எந்தவிதப் பிரயோஜனமும் உண்டாகவில்லை என்று அவனுக்கே தோன்றியபோது, அந்த லட்சியம் மறைந்து போனது. ஆனால், இப்போது, இறுதியில்-

“அவங்க இப்போ எங்கே இருக்காங்க?”

“யாரு?”

“அந்த வாத்து மேய்ப்பவர்கள்.”

“இந்த ஊர்லதான் இருக்காங்க. அந்த வழக்கு இப்போ மறைஞ்சு போன ஒண்ணு. இருபது வருடங்கள் ஓடிப்போச்சே!”

சிவராமன் நாயர் சொன்னார்.

ஒரு நிமிடம் அவன் மரத்துப் போன மாதிரி ஆவிட்டான். இங்கு, இந்தப் பகுதியில் அவன் தேடிக் கொண்டிருந்த எதிரிகள்... சிவராமன் நாயரின் நாக்கு வழியாக நடந்த சம்பவங்கள் வெளியே வருகின்றன. பைலிக்குஞ்ஞு இப்போதும் ஊரை நடுங்கச் செய்து கொண்டிருக்கிறான். இரண்டு கொலைச் செயல்களின் கரை விழுந்த அவனுடைய கைகளைப் பார்த்து ஊர்க்காரர்கள் இப்போதும் பயப்படுகிறார்கள்.

“அப்பச்சன் ரொம்பவும் அமைதியான ஆள். அன்னைக்கு நடந்த சம்பவங்களுக்குப் பிறகு அந்த ஆளை வெளியே அதிகம் பார்க்க முடியல.”

“நான் அவங்களைப் பார்க்கணும்”- விஸ்வநாதன் சொன்னான். “காரணம் ஒண்ணும் இல்ல. சும்மா பார்க்கணும்னு ஒரு விருப்பம். அவ்வளவுதான்” அவனுக்குள் நீறு பூத்த நெருப்பாகக் கனன்று கொண்டிருந்த நெருப்பு மெதுவாகப் படர ஆரம்பித்தது. அதன் ஆக்கிரமிப்பு கண்களை அடைந்து அதையும் தாண்டிப் போகப் போகிறதா?

“பைலியை எப்ப வேணும்னாலும் பார்க்கலாம்”- சிவராமன் நாயர் சொன்னார்: “அந்த ஆளு அந்தச் சாராயக் கடையிலதான் எப்பவும் இருப்பான்.”

விஸ்வநாதன் வாசலில் இறங்கினான். என்னவோ சில குறைகள் அவனிடம் இருக்கவே செய்கின்றன. இந்த ஊருக்கு அவன் புதியவன். யாருக்கும் தெரியாதவன். ஒரு ஆள்கூட அவனுக்கு உதவ முன்வர மாட்டார்கள்.

நினைவில் முதல்நாள் இரவு வலம் வந்தது. சாராயக் கடையில் தான் பார்த்த முரட்டுத்தனமான மனிதர்களில் இதற்குமுன் பார்த்த ஒரு முகத்தைப் பார்த்தோமா என்று அவன் யோசித்தான். அடுத்த அறைகளில் இருந்து கேட்ட முரட்டுத்தனமான குரல்களில் கேட்டு மறந்துபோன ஒரு குரலும் இருந்ததா என்பதை ஞாபகப்படுத்திப் பார்த்தான்.

அவன் வாசலில் இங்குமங்குமாக நடந்தான். ஒரு மங்கலான நிலவு ஓலைகளுக்கு மேலே தெரிந்தது. தூரத்தில் எங்கோ ஒரு குழந்தையை அதன் தாய் அடித்துக் கொண்டிருந்தாள். அந்தக் குழந்தையின் அழுகுரல் காற்றில் தவழ்ந்து வந்தது. பக்கத்து வீட்டுத் திண்ணையிலிருந்து ஒலித்த ராமநாமம் தன்னுடைய தளர்ந்துபோன கால்களை நீட்டிக் கொண்டு யாராலும் கவனிக்கப்படாமல் கடந்து போய்க் கொண்டிருந்தது.

“சிவராமன் அண்ணே, நீங்க தண்ணி அடிப்பீங்களா?”

“அய்யோ சார், இல்ல...”

ஒரு பெரிய தவறான செயலுக்கு வற்புறுத்துவதைப் போல கிழவர் ஒதுங்கி நின்றார். விஸ்வநாதன் வெறுப்புடன் அந்த முகத்தைப் பார்த்தான்.

எனக்கு உங்களைத் தெரியாதுன்னு நீங்க நினைக்கிறீங்க. அப்படித்தானே? என் குழந்தைப் பருவ நினைவுகளில் குழைந்து போன நாக்குடனும் பின்னிப் பிணைந்த பாதங்களுடனும் நடந்து வந்து ஆர்ப்பட்டம் பண்ணுற? எப்போ பார்த்தாலும் பொண்டாட்டியை அடிச்சு உதைக்கிற சிவராமன் அண்ணனை எனக்குத் தெரியும்னு ஒருவேளை உங்களுக்குத் தெரியாம இருக்கலாம்’- அவன் தனக்குள் கூறிக் கொண்டான்.


“நான் கொஞ்சம் தண்ணி அடிக்கணும்!”

சிவராமன் அண்ணன் அதற்குப் பதில் எதுவும் கூறவில்லை.

“வர்றீங்களா?”

“அய்யோ, இல்ல...”

“அப்படின்னா நான் போயிட்டு வர்றேன்!”

ஒற்றையடிப் பாதை வழியாக இறங்கியபோது, அவர் அவனுடன் நடந்து கொண்டே சொன்னார்: “வழி தெரியலைன்னா, நான் அங்கே வரை கொண்டுவந்து விடுறேன்!”

“வேண்டாம். நேற்று நான் போயிருக்கேனே!”

கிழவருக்கு ஒரு மாதிரி ஆயிவிருக்க வேண்டும்.

“நாளைக்குப் பார்க்கலாம்.”

“ம்...”

விஸ்வநாதன் வயலில் இறங்கினான். வானத்தில் காய்ந்து கொண்டிருந்த நிலவொளி வயல் முழுக்க நிறைந்திருந்தது. வயல்களிலேயே அது தன்னை அடக்கிக் கொண்டு விட்டதைப் போல் இருந்தது.

6

ன் தந்தையையும் தாயையும் கொலை செய்த ஒரு மனிதனிடம் அன்பு உண்டாக வழியில்லை. அந்த மரணங்கள் கண்களுக்குக் கீழே கை, கால்களை உதைத்துக் கொண்டு கொஞ்சம் சொஞ்சமாக அமைதியாக ஒடுங்குவதைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்த நேரத்தில், குறிப்பிட்டுக் கூற வேண்டிய ஒரு விஷயம்- குற்றவாளிகள் ஓடிப் போனார்கள். போலீசுக்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. அனாதைகளாகக்கப்பட்ட வாத்துக்களைக் காப்பாற்ற வந்த புதிய மனிதர்களுக்கிடையே அடிபிடி தகராறுகள் உண்டாயின. ஊர் எதுவும் பேசாமல் ஊமை ஆனது. அன்று மனம் முழுக்க குத்து விழுந்து கீழே விழும் பைலிக்குஞ்ஞுவின் உருவம்தான் நிறைந்திருந்தது. ஆனால், காலப்போக்கில் அந்த உருவத்தின் நிறம் மங்கியது. குற்றவாளிகளைப் போலீஸ்காரர்கள் பிடித்தார்கள். சாட்சிக் கூண்டில் நின்று கொண்டு பல தடவைகள் திரும்பத் திரும்ப அவன் சொன்னான்: “என் அப்பாவை வெட்டினதை நான் பார்த்தேன். என் கழுத்தைப் பிடிச்சு நெறிக்க பைலிக்குஞ்ஞு வந்தப்போ, அதைத் தடுக்க வந்த என் அம்மா மேல ஒரே வெட்டு... எனினும் தேவையான ஆதாரங்கள் அதற்கு இல்லாமற் போயின. ஆதாரங்கள் இல்லாமல் அப்பச்சன் வெளியே வந்து விட்டான். பைலிக்குஞ்ஞுவிற்கு ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டபோது, அவன் மீது விஸ்வநாதனுக்கு உண்டான மனநிலை மாறியது. ஒருவித பரிதாப உணர்ச்சி அவன் மீது உண்டானது. இரண்டு பேர் ஒன்றாகச் சேர்ந்து ஒரு குற்றத்தைச் செய்துவிட்டு...

பரிதாப உணர்ச்சி தனக்குள் இருந்த இன்னொரு வெறி உணர்வைக் குளிரச் செய்துவிட்டது என்பதை அவன் தெரிந்து கொண்டதே அதற்குப் பிறகு நீண்டகாலம் கடந்த பிறகுதான். பைலிக்குஞ்ஞு பைலி ஆசானாகப் பக்கத்து அறையில் இருக்கிறான் என்பது தெரிந்தபோது அந்தப் பழைய வெறி மீண்டும் தலையை உயர்த்தியது. பைலி ஆசான் என்னைப் பார்த்தா எப்படி இருக்கும்?- அவன் தனக்குள் கூறிக்கொண்டான். கடையில் இருந்த பணியாள் பொறித்த நண்டை கொண்டு வந்து வைப்பதற்காக வந்தபோது சொன்னான்: “உங்களை அங்கே வரும்படி பைலி ஆசான் சொன்னாரு.” அதைக் கேட்டு உண்மையிலேயே அவன் ஆச்சரியப்பட்டு விட்டான். தான் தேடி வந்த மனிதன் தன்னைப் பார்க்க வேண்டும் என்கிறான். “எந்த பைலி ஆசான்?”- விஸ்வநாதன் கேட்டான். அதற்குச் சிறுவன் தன் தலையைச் சொறிந்து கொண்டே மெதுவாகக் கூறும்படி சைகை செய்தான். பைலி ஆசான் காதில் விழுந்துவிடப் போகிறது. கேட்டால் தலையைத் துண்டிச்சு விட்டுத்தான் வேறு வேலையைப் பார்ப்பார். இதுதான் அந்த சைகைக்கு அர்த்தம். “சத்தமா... கடை முழுவதும் கேட்கிற மாதிரி என்னால சொல்ல முடியும். எந்த நாய்டா அது?”- விஸ்வநாதன் கேட்டான். அதைக் கேட்டு வேலைக்காரச் சிறுவன் அதிர்ச்சியடைந்துவிட்டான். அவன் முகம் ஒரு மாதிரி வெளிறிப் போய்விட்டது. “அங்கே போய்ப் பார்க்குறதுக்கு நான் யாரு? அவன் வீட்டுப் பொண்ணை நான் கல்யாணம் பண்ணியிருக்கேனா?” என்று அவன் கேட்டவுடன், பையன் அந்த இடத்தைவிட்டு ஓடி விட்டதைப் பார்த்து, அவன் விழுந்து விழுந்து சிரித்தான். இவ்வளவு காலமாக பைலி இந்த ஊரில் ஒரு அச்சத்தைத் தரக் கூடிய மனிதனாக உலகிக் கொண்டிருக்கிறான் என்பதை நினைத்துப் பார்த்தபோது அவன் மீது விஸ்வநாதனுக்கு ஒருவித மதிப்பு உண்டானது. இரை வலையைத் தேடி வருவதை எதிர்பார்த்திருக்கும் சிங்கத்தின் பொறுமை உணர்வு அவனிடம் உண்டானது. குவளைகளில் நுரைகள் அவற்றின் பிரதிபலிப்பு என்பதைப் போல மேலே உணர்ந்து கொண்டிருந்தன.

வாசல் கதவு கிறீச்சிட்டது. ஒரு தலை அங்கு தெரிந்தது. அதைப் பார்க்காதது மாதிரி உட்கார்ந்திருந்தபோது தொண்டை கனைக்கும் சத்தம் கேட்டது. சவாலுக்கு அழைக்கும் ஒரு பயங்கர வேடம் கட்டிய உருவம் உள்ளே நுழைந்து தலையைத் தூக்கியது. குழி விழுந்த, போதை ஆக்கிரமித்திருக்கும் குரூரம் நிறைந்த கண்கள். வளர்ந்து கன்னங்களில் இறங்கியிருக்கும் நீளமான மீசை ரோமங்கள். பருமனான தோளில் ஒரு துண்டு. கையில் மடக்கிப் பிடித்திருக்கும் கத்தியின் முனையால் தாடியின் கீழ்ப்பகுதியைச் சுரண்டும் எதிரி...

குரைத்துக் கொண்டிருக்கும் ஒரு நாயைப் போல பைலி இருந்தான்.

புல்லைப் பார்த்துவிட்டு கண்களை வேறு பக்கம் திருப்புவதை போல அலட்சியமாக விஸ்வநாதனால் நடக்க முடிந்தது. ‘இது என்னோட மிகப் பெரிய வெற்றி. முதல் சந்திப்பில் இப்படி இல்லாமல் வேறொரு மாதிரிதான் என்னால் நடக்க முடியும். அது ஒரு கொலை பற்றிய உருவம்...’- அவன் தனக்குள் கூறிக்கொண்டான்.

குவளையைப் பாதி நிறைத்தான். காதுகளைக் கைகளால் மூடிக் கொண்டான். பக்கத்து அறைகளில் படு அமைதி நிலவிக் கொண்டிருந்தது. பல காதுகளும் ஒரு அதிர்ச்சியான சம்பவத்தை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டும். பலகைக்கு அப்பால் வேலைக்காரனின் தலை தெரிந்தது. என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்பதற்காக வந்த வேலைக்காரன்... “கலக்குறதுக்கு என்ன வேணும் சார்? ஃபேன்டா... கோலா... சோடா...?”- வேலைக்காரன் கேட்டான்.

அவனுக்குப் பதில் கிடைக்கவில்லை. அவன் பார்த்துக் கொண்டிருக்க, நீர் கலக்காத சாராயம் வயிற்றுக்குள் சென்றது. ஒரு மடக்கு குளிர்ந்த நீரைக் குடித்துவிட்டு அவன் கேட்டான்: “என்ன கேட்டே?”

“ஒண்ணும் இல்ல”- பையன் பதைபதைப்புடன் சொன்னான். சொல்லிவிட்டு அவன் ஓடிவிட்டான்.

பைலி உள்ளே வந்தான். எதிரில் இருந்த பெஞ்சில் உட்கார்ந்தான். நோக்கத்தைப் புரிந்து கொண்டபோது அவன் மீது விஸ்வநாதனுக்கு ஒரு மெல்லிய பரிதாபம் தோன்றவே செய்தது. சிறிதும் அறிமுகமில்லாத இளைஞர்களைப் பயமுறுத்தி மது அருந்தக்கூடிய இந்தக் கதாபாத்திரத்தை விஸ்வநாதன் வேறு எங்குமே பார்த்ததில்லை.

“ஊருக்குப் புதுசா வந்திருக்கிற ஆளு... அப்படித்தானே?”- முரட்டுத்தனமான குரல். வேண்டுமென்றே பணிவை வரவழைத்துக் கொண்டதால் உண்டான பாரத்தைத் தாங்க முடியாத கேள்வி.


எந்தவொரு பதிலும் சொல்லாமல் விஸ்வநாதன் அந்தக் கண்களையே பார்த்தான். உன் தேவை எவ்வளவு அற்பமா இருக்கு, பைலி? நீ கொஞ்சம் மது அருந்ததே. இதை விட்டால் வேற ஒண்ணுமே இல்ல. என் இலட்சியம் எவ்வளவு பெருசு தெரியுமா? நான் உனக்கு ஒரு சொட்டு மது கூட தரப்போகிறது இல்ல. ஆனால், நீ எனக்கு உன் உயிரைத் தர வேண்டியது வரும். தரலைன்னா, நான் அதை உன்கிட்ட இருந்து வாங்கிக்குவேன். ஆமா... உனக்கு என்ன பதைபதைப்பு? என் கண்களை நேருக்கு நேரா பார்க்க நீ பயப்படுறே. எனக்குத் தெரியும். கண்களை நேருக்கு நேரா பார்க்குற விஷயத்துல உனக்கு ஒருநாள் கூட வெற்றி கிடையாது. ஒரு கெட்ட நேரத்துல உன் மனசாட்சிக்கு விரோதமான ஒரு செயலைச் செய்திட்டு, அதோட குற்ற உணர்வுல இருந்த தப்பிக்கிறதுக்கும், பயத்துல இருந்து விடுபடுறதுக்கும் இப்படியொரு வேஷத்தைப் போடுற உன்னால பாவங்களையும் கொடூரங்களையும் வஞ்சம் தீர்க்குற எண்ணத்தையும் கேன்ஸர் செல்களைப் போல பெருக்கிப் பெருக்கி ரசிக்கிற என் கண்களைப் பார்த்துக்கிட்டு எவ்வளவு நேரம் இருக்க முடியும்?- அவன் தனக்குள் கூறிக்கொண்டான்.

“பைலி ஆசான்... அப்படித்தானே?”

“ஆமா... பைலி பேனாக்கத்தியை விரித்து நகம் வெட்ட ஆரம்பித்தான்.”

“நேற்று கடைக்கு வந்திருந்தாப்லயா?”

“ம்...”

“அதற்குப் பிறகு? பைலியின் கண்கள் குறுகிச் சிறிதாயின. குற்றத்தைக் கண்டுபிடித்து நிரூபிக்க முயற்சிக்கும் போலீஸ்காரனின் முகபாவனை.

“அதற்குப் பிறகு?”-  எதுவும் புரியாததைப் போல விஸ்வநாதன் கேட்டான்.”

“கடையில இருந்து எங்கே போனாப்ல?”

குரல் உயர்ந்தது.

விஸ்வநாதன் பதில் சொன்னான். கிராமத்து மொழியில் அந்தப் பதில் இருந்தது: “ஒரு பொண்ணை அனுபவிக்கப் போனேன். அது நல்லபடியா முடிஞ்சது.”

எதிரியின் உதடுகள் சிறிதாகத் துடித்தன. எந்த நேரத்திலும் அது தன் மீது பாயுமென்றும் கடித்துப் புண்ணாக்கும் என்றும் விஸ்வநாதன் நினைத்தான்.

அறைக்குள் படு அமைதி நிலவிக் கொண்டிருந்தது. விஸ்வநாதன் புட்டியைக் குவளைக்குள் கவிழ்த்தான். புட்டியை மேஜை மீது ஓசை வரும்படி மூன்று நான்கு முறைகள் அடித்தான். வாசலில் வேலைக்காரன் வந்து நின்றான். “இன்னொரு அரைபுட்டி கொண்டு வா”- விஸ்வநாதன் சொன்னான்.

வேலைக்காரன் மேலும் சிறிதுநேரம் அங்கேயே நின்றிருந்தான். அவன் எதிர்பார்த்திருந்த கட்டளை பைலியிடமிருந்து வந்தது.

“ஒரு குவளை கொண்டு வாடா!”

மீண்டும் ஒன்றோடொன்று வெறித்துப் பார்க்கும் கண்கள். பக்கத்து அறைகளில் நாக்குகள் முழுமையாகச் செத்துப் போயிருந்தன. தாழ்ந்த குரலில் அவை என்னவோ பேசிக் கொண்டன.

“இந்த இடம் ரொம்ப மோசம்”- பைலி விரித்த பேனாக் கத்தியை மேஜை மீது குத்தியவாறு சொன்னான்.

“ஆமா...”- விஸ்வநாதன் நிமிர்ந்து உட்கார்ந்தான்.

புட்டி வந்தது- அதோடு குவளையும். வேலைக்காரப் பையன் இரண்டு குவளைகளையும் அடுத்தடுத்து வைத்து புட்டியைத் திறந்தான். ஒரு குவளையில் ஊற்றி முடித்தவுடன், விஸ்வநாதன் அவனுடைய கையிலிருந்து புட்டியை வாங்கினான். “பயமுறுத்தி தண்ணி அடிக்க வேற ஆளைப் பார்க்கணும்”- அவன் சொன்னான்.

வேலைக்காரன் ஒரு நிமிடம் பைலி ஆசானின் முகத்தையே உற்றுப் பார்த்தான்.  பிறகு அந்த இடத்தைவிட்டு அவன் நகர்ந்தான். விஸ்வநாதன் புட்டியை மேஜை மீது வைத்தான். குவளை காலியானபோது இன்னொரு குவளை நிறைந்து கொண்டிருந்தது. அந்த விரல்களின் அதிகாரத்தைப் பார்த்தபோது அவனுக்குச் சிரிப்பு வந்தது.

எதிரியின் கண்களையே அவன் பார்த்தான். குவளையை உயர்த்தியவாறு பைலி ஒரு வெற்றி வீரனைப் போல சொன்னான்: “இந்த ஊர்ல அரண்மனையில மது அருந்துற ஒரு ஆளு கூட எனக்கு நூறு மில்லி வாங்கித் தந்துட்டுத்தான் குடிப்பான்.”

விஸ்வநாதன் காலியான குவளையைக் கீழே வைத்தான். இது ஒரு தருணம். இந்தத் தருணம் முன்னோக்கி நகராது. தடுத்து நிறுத்தப்பட்ட இந்த நிமிடம் என் வெற்றியையும் தோல்வியையும் தீர்மானிக்குது. இங்கே தோற்றால் வாழ்க்கையிலேயே நான் தோற்றுட்டேன்னு அர்த்தம். தனக்குள் விஸ்வநாதன் கூறிக் கொண்டான்.

எழுந்து நின்றான்.

பைலி குவளையை உயர்த்தினான். கண்கள் எதிரியின் முகத்தில் இருந்தன. குவளை மெதுவாக உயர்ந்தது. உதடுகளை இது நெருங்கியபோது அது நடந்தது.

குவளை பலகையில் போய் அடித்து உடைந்தது. பலகை வழியாகச் சாராயம் வழிந்தது. பக்கத்து அறைகளில் பெஞ்சுகள் கிறீச்சிட்டன. வராந்தாவில் பாத ஓசைகள். வாசலில் பயந்து, இறுகிப் போன முகங்கள்.

கத்தியை உருவி எடுப்பான் என்றும், குத்துவான் என்றும் எல்லாரும் எதிர்பார்த்தார்கள். அப்படி எதுவும் நடக்கவில்லை. பைலி ஒரு சிலையைப் போல, பார்த்தவாறு நின்றிருந்தான். இதற்கு முன்பு இப்படியொரு காட்சியை யாரும் பார்த்ததில்லை.

“பயமுறுத்தி பார்த்தாப்ல... அப்படித்தானே?”- விஸ்வநாதன் கேட்டான்.

பைலி அதற்குப் பதிலெதுவும் சொல்லவில்லை. சிறுத்துப் போன கண்களில் நெருப்பு எரிந்தது. கை விரல்கள் கத்தியின் கைப்பிடியில் இருந்தவாறு துடித்தன.

புட்டியில் மீதியிருந்த சாராயம் முழுவதையும் குவளையில் ஊற்றி ஒரு பிச்சைக்காரனிடம் தருவது மாதிரி, அந்தக் குவளையை விஸ்வநாதன் நீட்டினான். அவன் சொன்னான்: “இன்னும் குடி.”

பைலி குவளையைப் பார்க்கவே இல்லை. விஸ்வநாதனின் முகத்திலிருந்து விலகாத கண்களில் குரூரத்தின் நிழல்கள் தெரிந்தன.

“எவ்வளவு ஆச்சு?”- விஸ்வநாதன் அந்தக் கண்களை அலட்சியம் செய்துவிட்டு வேலைக்காரனிடம் கேட்டான். அவன் தொகையைச் சொன்னான். அதை எடுத்துக் கொண்டு வாசலில் கூட்டமாக நின்றிருந்த மனிதர்களை நோக்கி நடந்தபோது, பின்னால் பைலியின் குரல் கேட்டது.

“நாளை ஒருநாள் இருக்கு...”

“என்ன?”- விஸ்வநாதன் திரும்பி நின்றான்.

“உன் ஆயுள் காலத்தைச் சொல்றேன்”- பைலி எழுந்து நின்றான்.

தரையில் இனியும் குருதி சிந்தும். விஸ்வநாதன் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தான். அந்தச் சிரிப்பு அலைகளுக்கு நடுவே பைலியின் முகம் படிப்படியாக வெளிறியது.

“சிரமப்பட வேண்டாம்”- விஸ்வநாதன் சொன்னான்: “நான் நாளைக்கு அங்கே வர்றேன்” மனதிற்கு முன்னால் நின்று கொண்டிருந்த பயந்த நிலையில் இருந்த எதிரியிடம் அவன் சொன்னான்: “உன் வீட்டுக்கு நான் வர்றேன்.”

பின்னால் குசுகுசுப்புகள். விஸ்வநாதன் வெளியேறினான்.

“இந்த ஊர்ல நான் திரும்பவும் ஒரு பிரச்சினையாக ஆகியிருக்கேன்”- அவன் தனக்குள் நினைத்துக் கொண்டான்.


7

காலையில் வாசல் முழுவதும் மூப்பு அடையாத பைங்கிளிகள் பறந்து திரிந்து கொண்டிருந்தன. அந்தப் பைங்கிளிகள் தங்கள் குஞ்சுகளுடன் பின்வாங்கின. பிறகு வானில் இங்கும் அங்குமாய் உட்கார்ந்து ஒளிந்து துடித்துக் கொண்டிருந்த முந்தைய இரவு நேர ஐந்துக்களைக் கொத்தி எடுத்துக் கொண்டு போகும் பெண் காகங்களைப் பார்த்தன.

இரவில் நல்ல மழை பெய்திருந்தது. தெற்குத் திசையில் எங்கோ நீரின் இரைச்சல் கேட்டது. தாழ்ந்த ஸ்தாயியில் ஒரு இசையென அது இருந்தது. அதற்குப் பின்னணி இசை ஒலிப்பதைப் போல தூரத்தில் கடலின் ஆரவாரம்...

காலையில் மீண்டும் மழை வருவதற்கான அறிகுறி தெரிந்தது. தூரத்தில் தென்னங்கீற்றுகளுக்கு மத்தியில் ஒரு துண்டு கார்மேகம் மறைந்து வெளியே வருவது தெரிந்தது. தொடர்ந்து வீசிய காற்றில் அது காணாமல் போனது. அப்போது ஒரு புதிய கார்மேகம் அங்கு மீண்டும் தோன்ற ஆரம்பித்தது.

‘என் ஊர்ல பெய்யும் மழை மற்ற ஊர்கள்ல பெய்யிற மழைகளை விட ரொம்பவும் வித்தியாசமானது. என் வானத்தின் மேகம், வேறு எந்த இடத்துல இருக்குற மேகங்களை விடவும் வித்தியாசமானது’- விஸ்வநாதன் தனக்குள் கூறிக் கொண்டான்.

காலையில் நாணு வந்தான். தேநீர்க் கடையிலிருந்து வாங்கிக் கொண்டு வந்திருந்த தோசையையும் காப்பியையும் திண்ணை மீது வைத்துவிட்டு அவன் கேட்டான்: “நேற்று ராத்திரி கடையில ஏதாவது அடிபிடி தகராறு நடந்ததா?”

கேள்வியைக் கேட்டபோது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. “இந்த ஊர்ல இவ்வளவு சீக்கிரமா ஒரு செய்திக்குச் சிறகு முளைச்சிடுச்சா? உண்மையா சொல்லப் போனால், அடி எதுவும் நடக்கல. ஒரு டம்ளரை வீசியெறிஞ்சு உடைக்க மட்டுமே செய்தேன். ஆனா, அதைச் சொன்னால் யாருமே நம்புறதா இல்ல. அதுனால வாயை மூடிக்கிட்டேன்.”

“அப்படி செய்திருக்க வேண்டியது இல்ல”- நாணு சொன்னான்.

“என்ன சொன்னே?”

“பைலி ரொம்பவும் மோசமான ஆளு. கொஞ்ச காலம் சிறையில இருந்துட்டு வந்த ஆளு...”

நாணுவிற்கு இந்த விஷயத்தில் கொஞ்சம் விருப்பமில்லைதான். என்னதான் விஸ்வநாதனுடன் அவன் நெருக்கமாக இருந்தாலும் பைலி இந்த ஊர்க்காரனாயிற்றே! விஸ்வநாதன் மட்டும்தான் இங்கு வேறெங்கோயிருந்து வந்தவன். இந்த ஊரைச் சேர்ந்த ஒருவனுடன் வேற்றூர்க்காரன் ஒருவன் மோதுவதை அவன் பொதுவாக விரும்பவில்லை.

“நாம வந்த விஷயத்தை முடிச்சிட்டு வந்தது மாதிரியே திரும்பிப் போகப் பாருங்க”- நாணு அறிவுரை சொன்னான் : “படம்னா படம். பாட்டுன்னா பாட்டு. அதுக்கு இடையில...”

“அதுக்கு இடையில யாராவது நுழைஞ்சு வெறுமனே பெரிய ஆளாகணும்னு நினைச்சா?”

நாணு திடீரென்று அமைதியாக ஆனான். தான் கொஞ்சம் அதிகமாகப் பேசி விட்டதை அவனே உணர்ந்திருக்க வேண்டும். சிறிது நேர அமைதிக்குப் பிறகு அவன் சொன்னான்: “இல்ல... நான் சும்மா பேச்சுக்காகச் சொன்னேன். பைலிக்கு யாராவது ஒரு ஆளு வந்து கொடுக்குற காலம் வந்திடுச்சுன்னு நினைக்கிறேன்.”

படுத்துக்கொண்டே கையை நீட்டி விஸ்வநாதன் தேநீர் குடித்தான். “பைலி எங்கே வசிக்கிறான்?”- விஸ்வநாதன் கேட்டான்.

சிறிது நேரம் அமைதி நிலவியது. பிறகு நாணு எப்படிப் போக வேண்டுமென்று வழி சொன்னான்: “படகுத்துறை... நீரைத்தாண்டி அடுத்த கரையின் மூலை... அங்கேயிருந்து நேரா போற சாலையில இடது பக்கமாத் திரும்பி வயலைத் தாண்டி.... அதுக்குப் பிறகு இன்னொரு வயல்... வயலின் எதிர்கரை...”

எனக்கு நன்கு தெரிந்த வழிகள்... பழைய கிராமத்துப் பாதைகள்... சின்னப்பையனா இருக்குறப்போ எத்தனையோ தடவைகள் வண்டியோட்டி விளையாடிய ஒற்றையடிப்பாதைகள்... வயல் வரப்புகள்... வயல்கள்...’ விஸ்வநாதன் தனக்குள் பேசிக் கொண்டான்.

படகை விட்டு இறங்கியபோது பார்த்த ஒரு ஆள் பழக்கமில்லை என்றாலும் நன்கு தெரிந்தவன் மாதிரி வாய் திறந்த சிரிப்புடன் கேட்டான்: “எங்கே போறாப்ல?”

“இதோ இங்குவரைதான்”- விஸ்வநாதன் சிரித்துக் கொண்டே நடந்தான்.

ஊரில் உள்ள எல்லாருக்குமே அவனைத் தெரியும். யாருடைய முகங்களையும் அவனால் தெரிந்து கொள்ள முடியவில்லை. எனினும் பலரும் அவனைப் பார்த்து சிரித்தார்கள். சிரித்தவர்களைப் பார்த்து அவனும் சிரித்தான்.

பழைய சந்திப்பில் புதிய சில அலங்காரங்கள் வந்து சேர்ந்திருந்தன. கிருஷ்ணன் நாயரின் தேநீர்க் கடை இப்போதும் அதே இடத்தில்தான் இருக்கிறது. புதிய ஒரு விளம்பரப் பலகையை யாரோ வரைந்திருக்கிறார்கள். அதில் உடல் உறுப்புகள் சீராக இல்லாத ஒரு குழந்தைப் பருவ கிருஷ்ணன் கண்களை விழித்தவாறு புல்லாங்குழல் ஊதிக் கொண்டு அழைத்தவாறு நின்றிருந்தான். ஒரு சிறு வராந்தா புதிதாக உருவாக்கப்பட்டிருந்தது. வராந்தாவிற்குக் கீழே படிகள். முன்னால் நான்கைந்து சைக்கிள்கள் வரிசையாகக் கட்டப்பட்டிருக்கும் போர்க்குதிரைகளைப் போல நின்றிருந்தன. “ஒரு சைக்கிளை எடுத்துக் கட்டுமா?” - யாருக்கும் அறிமுகமில்லாத ஒரு மனிதனாகத் தன்னை நினைத்துக் கொண்டு அவன் கேட்க வேண்டிய சூழ்நிலை உண்டானது.

“அய்யோ... எடுத்துக்கங்க... எடுத்துக்கங்க...”- கிருஷ்ணன் நாயர் இப்போதும் வெள்ளை ஆடையைப் பார்த்ததும் தன்னையே அறியாமல் மரியாதை தருகிறார். அது மட்டுமல்ல- அறிமுகமில்லாத தால் குரலில் இனம்புரியாத ஒரு பணிவு வேறு காத்திருக்கிறது. அவர் சொன்னார்: “இதுல ஒரு நல்ல சைக்கிளை நீங்களே தேர்ந்தெடுத்துக்கங்க... அதோ... அந்தக் கடையில இருக்குற சைக்கிள் நல்லா இருக்கும்.”

நீண்டு நீண்டு போய்க் கொண்டிருக்கும் பாதைகள். சிரிக்கும் முகங்கள். திருப்பத்தை அடைந்ததும்- ஒரு மைல் கல்லில் காலை வைத்தவாறு சிகரெட்டைக் கொளுத்தினான். பல வருடங்களுக்குப் பிறகு அவன் இப்போதுதான் சைக்கிளை மிதிக்கிறான். சைக்கிள் ஓட்டுவதை ஒருவேளை மறந்து போயிருந்தாலும் போயிருக்கலாம் என்று கூட அவனுக்குச் சந்தேகமாக இருந்தது. ஆனால், மறக்கவில்லை. ஒருமுறை செய்த எந்தவொரு செயலும் மரணமடையும் வரையிலும் மறக்கவே மறக்காது என்று திடீரென்று அவனுக்குத் தோன்றியது. மீண்டும் சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தபோது, எதிரில் வந்த ஒரு ஆள் மரியாதை நிமித்தமாகக் கேட்டான் : “எங்கே போறாப்ல?”

“இதோ இங்குவரை...”

“அப்படியா?”- அவனுக்குத் திருப்தி உண்டானது மாதிரி இருந்தது. எதிரே பலமான காற்று வீசியது.

சட்டையின் பின் பாகம் தலையணையைப் போல் வீங்கியிருந்தது. காதில் காற்றின் ரீங்காரம். முடிகளில் காற்று பட்டு சுகமான ஒரு அனுபவம் உண்டானது.

ஏன் எல்லாரும் அவனைப் பார்த்து எங்கு போகிறான் என்பதைக் கேட்க வேண்டும்.

எதற்காகவும் இல்லை. வெறுமனே கேட்டார்கள். அவ்வளவுதான். யாரிடமாவது உண்மையைச் சொன்னானா? அதுவும் இல்லை.

“இதோ... இங்கு வரை...”- இதுதான் அவன் சொன்னது.


“எங்கு வரை?”- யாரும் கேட்கவில்லை. கேட்கக் கூடிய ஆளுக்கு அதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என் தேவையும் இல்லை. எனினும் விசாரிக்கிறார்கள். “எங்கே போறாப்ல?” மீண்டும் அதே பதில்தான். “இங்கு வரை... இங்கு வரை...” இங்கு என்பது மிகவும் ரகசியமானது. யாரும் யாருக்கும் அதை விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.

அருகிலுள்ள வீட்டிற்குப் போகிறபோது கூட, விசாரிக்கக் கூடிய ஆனிடம் கூறும் பதில் ‘இங்கு வரை’ என்பதாகத்தான் இருக்கும். ஒவ்வொரு மனிதனிடமும் அவனுக்கென்றே இருக்கிற சில தனிப்பட்ட நோக்கங்கள் உள்ளன. அதைத் தெரிந்து கொள்வதற்கான ஆர்வம் பொதுவாக யாருக்கும் இல்லை. எனினும், வெறுமனே அவர்கள் அதைப் பற்றி விசாரிக்கிறார்கள். ஒரு நழுவல்தனமான பதிலில் அவர்கள் நிறைவடையவும் செய்கிறார்கள்.

வயல்களுக்கு மத்தியில் உயர்ந்து நிற்கும் வரப்பு வழியாக சைக்கிளை ஒட்டிச் செல்லும்போது மிகவும் கவனமாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் ஆளும் சைக்கிளும் நீருக்குள் விழ வேண்டியதிருக்கும். இரண்டு பக்கங்களிலும் பார்க்க முடியாது. அப்படிப் பார்க்க முடிந்தால், வேலை முடிந்து நடந்து செல்லும் பெண்களைப் பார்க்கலாம். மாலை நேரத்தின் விரல்கள் நீரில் வரைந்து கொண்டிருக்கும் ஓவியங்களைப் பார்க்கலாம்.

வயல்கள் முடிந்தன. நிலங்கள்... தென்னந்தோப்புக்கு மத்தியில் மனிதர்கள் நடந்து உண்டாக்கிய பாதை. பாதையின் இறுதி ஒரு சிறு ஒற்றையடிப்பாதையில் போய் முடிகிறது. இரு பக்கங்களிலும் முற்செடிகள் அடர்ந்து கிடக்கின்றன. சட்டையில் முற்கள் தொட்டு கிச்சுக்கிச்சு மூட்டுகின்றன.

“எங்கே?”- அவன் தனக்குள் கேட்டுக் கொண்டான்.

“இங்குவரை...”- பதில்.

“எங்கே?”

“இங்கு... இதோ... இங்கு... இங்கு வரை...”

‘காலத்தின் கெட்ட நாற்றமெடுத்து ஓடிக் கொண்டிருக்கும் நீரில் ஒரு பஞ்சுத்துண்டைப் போல மிதந்து போய்க் கொண்டிருக்கிற என்னை இந்த ஊரிலேயே இருக்கும்படி செய்தது அந்தப் பெண்தானா?’

நினைக்க நினைக்க அந்த சந்தேகம் அவனுக்குள் வளர்ந்து கொண்டேயிருந்தது. ‘அவளோட மார்பகங்களில்தான் சூரியன் உதித்ததா? அவளின் கையிடுக்கில்தான் என் கண் இமைகளின் நிழல் கறுப்பு நிறத்தில் அடையாளங்கள் இட்டனவா?’

நீரில் அலைந்து நீரில் முடிய வேண்டிய என் வாழ்க்கையில் ஒரு தங்குமிடத்தை இருக்கும்படி செய்தது அந்தப் பெண்ணின் நனைந்த தொடைகளின் அசைவா?

அப்படி இருக்க முடியாது.

அந்தப் பெண் இன்னும் கொஞ்சம் உயரமாக இருந்தாள். இந்த அளவுக்கு நிறம் அவளுக்கு இல்லை. அவளோட தலைமுடி சுருண்டமாக இல்லை. பின் பகுதியை மறைக்கிற அளவுக்கு முடி நீளமாக இருந்தது. இதைப்போல தோளைத் தொட்டுக்கிட்டு இருக்கிற சுருள் சுருளான தலைமுடியை அப்போ நான் பார்க்கல. ஆனால், ஒரு விஷயத்தை மட்டும் என்னால் உறுதியா சொல்ல முடியும். அன்னைக்குக் காலையில அந்தப் படகுத் துறையில அம்மிணியைப் பார்த்திருந்தா கூட, இதேதான் நடந்திருக்கும்’- அவன் தனக்குள் கூறிக்கொண்டான்.

அம்மிணி ஒரு தட்டில் இரண்டு வேக வைத்த முட்டைகளைக் கொண்டுவந்து வைத்தாள். “சாப்பிடு”- அப்பச்சன் சொன்னான். அவனுடைய குரல் மிகவும் சாந்தமான ஒன்றாக இருந்தது.

‘என்னால நம்பவே முடியல. இந்த மனிதன் எப்படி என் அப்பாவையும் அம்மாவையும் கொன்னான்? பழைய ஒரு இரவுல தன் தம்பியின் கைகளில் கோடரியைக் கொடுத்து ‘வெட்டுடா’ன்னு உரத்த குரல்ல சத்தமா சொல்லுற அளவுக்கு இந்த மென்மையான குரலுக்கு எங்கேயிருந்து உயிர் வந்தது?’ - விஸ்வநாதன் தனக்குள் கேட்டுக் கொண்டான்.

பைலிக்குஞ்ஞு வெளியே போயிருந்தான். இரவில் வந்தாலும் வரலாம். இல்லாவிட்டால் இல்லை. முதல்நாள் இரவில் சாராயக் கடையில் ஏதாவது நடந்தது என்று விஷயமே அப்பச்சனுக்குத் தெரியவில்லை. விஸ்வநாதன் சொல்லித்தான் அவனுக்கே அந்த விஷயம் தெரிகிறது. அது தெரிந்தபோது, குறிப்பாகக் கூறும்படி ஏதோ நடந்திருக்கிறது என்பது மாதிரிகூட அவன் காட்டிக் கொள்ளவில்லை. இது எப்போதும் நடக்கக் கூடிய ஒன்றுதானே என்பது மாதிரி இருந்தது அப்பச்சனுடைய நடவடிக்கை. அதே நேரத்தில், ஒரு தவறான எண்ணம் அவனுக்கு உண்டானதைப் போல் தோன்றியது. அதை அவன் சொன்னவுடன், அந்த நிமிடமே விஸ்வநாதன் அதற்குத் திருத்தம் கூறவும் செய்தான். “இப்போ இங்கே வந்ததற்குக் காரணம் நான் கோழை என்பதற்காக அல்ல. மன்னிப்புக் கேக்கும்ன்றதுக்காகவும் நான் வரல. உங்க தம்பி எனக்கு புல் மாதிரி. நீங்களும்தான். உங்க தம்பிகிட்ட இன்னைக்கு இங்கு வந்து பார்க்குறதா சொல்லி இருந்தேன். சொன்னதுனால வந்தேன். அவ்வளவுதான்.”

அதைக்கேட்டு அப்பச்சனுக்குக் கோபம் வரும் என்று நினைத்தது விஸ்வநாதனின் தவறு. அந்த ஆள் சிரித்தான். நிராயுதபாணியாக நிற்க வைக்கிற மாதிரி ஒரு வாய் விரிந்த சிரிப்பு. சிரிப்பின் இறுதியில் தனிப்பட்ட முறையில் பல கேள்விகள்.

“பேர் என்ன? எந்த ஊரு? வீட்ல யாரெல்லாம் இருக்காங்க? இந்த ஊர்ல எவ்வளவு நாட்களா இருக்குறதா எண்ணம்?”

அது முடிந்தவுடன், அவன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். பைலிக்குஞ்வின் விவரமில்லாத போக்கு, வாத்துக்களின் பாசம், பைலிக்குஞ்ஞுவின் மகள் அம்மிணியின் குறும்புத் தனங்கள்... ஒரு பழைய உறவினருக்கு வீட்டில் உண்டாகியிருக்கும் புதிய மாறுதல்களை விளக்கிக் கூறுவது மாதிரி இருந்தது அவனுடைய செயல்.

பிரச்சினைகள் நிறைந்த குடும்பச் சூழ்நிலை.

இரண்டு தந்தைமார்களின் மகள். அம்மிணி வாசற்படியில் நின்றவாறு இரண்டு தந்தைகளைப் பற்றியும் புகார் சொன்னாள். இரண்டு தந்தைமார்களும் செல்லம் கொடுத்து செல்லம் கொடுத்து அவளுக்கு மூச்சு விடுவதற்குக் கூட சுதந்திரம் இல்லாமல் போய்விட்டது ஒரு திரைப்படத்திற்கு அழைத்துப் போகும்படி எவ்வளவோ நாட்களாக அவள் கூறிக் கொண்டிருக்கிறாள். அப்பச்சன் அழைத்துப் போகமாட்டான். பைலிக்குஞ்ஞு அவளை அழைத்துச் செல்லத் தயார். ஆனால், அவனுடன் அவள் எப்படி வெளியே செல்வாள்,

யாராவது அவளைப் பார்த்துவிட்டால், அவன் சண்டைக்குப் போய்விடுவான். அவளுக்கு நூறு நாக்குகள் இருக்கின்றன. கதைகளுக்கு மேல் கதைகள் அறையை நிறைத்தன.

முன்பொரு முறை அவள் பைலிக்குஞ்ஞுவுடன் திரைப்படம் பார்க்கச் சென்றாள். நாற்காலியில் அவளை உட்கார வைத்துவிட்டு அவன் வெளியே செல்வதைப் பார்த்தாள். இடைவேளை முடிந்த பிறகும், அவன் வரவில்லை. படம் முடிகிற நேரத்தில் வந்து சேர்ந்தான். முழுமையாகக் குடித்திருந்தான். நடக்கக் கூட முடியவில்லை. கடைசியில் வீடுவரை கைத்தாங்கலாகப் பிடித்து நடத்திக் கொண்டு வரவேண்டிய சூழ்நிலை உண்டானது. அப்பச்சன் உரத்த குரலில் விழுந்து விழுந்து சிரித்தான். அவனுடைய தம்பியின் செயல்கள் வறண்டுபோய் கோடுகள் விழுந்த முகத்தில் சந்தோஷத்தின் மலர்ச்சியைப் பரவச் செய்தன. அப்பச்சன் ஒரு சன்னியாசி என்று அம்மிணி கூறுகிறாள்.


அப்பச்சன் சாமியாராக ஆகியிருக்க வேண்டிய மனிதன். அவனுடைய தலையெழுத்து என்றுதான் சொல்ல வேண்டும், சிறிது பிசகி விட்டது. அவன் வாத்துக்காரனாகிவிட்டான்.

‘நான் எங்கே இருக்கேன், கறுத்த முகங்களில் குரூரத்தனம் தேடி வந்த எனக்கு முன்னால் சிரித்த முகங்களும், அன்பு கலந்த வெளிப்பாடுகள்... மோதல் நடக்கும் என்று தேடிவ வந்த என் மனதிற்குள் இருப்பதை யாரால் புரிந்து கொள்ள முடியும்,

முதல் தடவையாக ஒரு வீட்டின் சந்தோஷத்தை நான் பார்க்குறேன். நான் எதைத் தெரிந்து கொண்டேன்? என் தந்தையும் பிள்ளைகளும் இந்த மாதிரி சிரிச்சு பேசியதில்லை. என் வீட்டின் மாலை நேரங்கள் எந்த நாள்லயும் இப்படி அமைதியா இருந்தது இல்ல. அற்ப ஆயுளைக் கொண்ட என் வீட்டுக்கு எந்தக் காலத்துலயும் செல்வச் செழிப்புன்னு ஒண்ணு உண்டானதே இல்ல.

அப்பச்சனுக்கு ஊர்களைப் பற்றி நிறைய தெரிஞ்சுக்கணும். அம்மிணிக்கு அங்கே இருக்குற பெண்களைப் பற்றி செரிஞ்சுக்கணும். அப்பச்சனுக்கு ஊர்கள்ல இருக்குற பழக்க வழக்கங்களைப் பற்றி தெரிஞ்சுக்கணும். மகளுக்குத் தூர இடங்களில் இருக்குற பெண்களின் ஆடை, அணிகலன்களைப் பற்றித் தெரிஞ்சுக்கணும்.’

“நான் பார்க்காத ஒரு இடம்கூட இந்த இந்தியாவுல இல்ல. சின்னச் சின்ன கிராமங்கள்லகூட நான் போயி தங்கியிருக்கேன். இப்போ... இதோ... இங்கே வந்து வசிக்கலியா? இது மாதிரிதான். கையில காசே இல்லாத சூழ்நிலை வர்றப்போ யார்கிட்டயாவது கேட்பேன். பணம் இல்லாதப்போ பட்டினி கிடப்பேன். பணக்காரர்களோட படத்தை வரைவேன். பெரிய அளவுல பணம் கிடைக்கும் அது தீர்றது வரை அலைஞ்சு திரிவேன்... தீர்ந்து முடிஞ்சா, அகதியைப் போல வாழ்வேன்”? விஸ்வநாதன் சொன்னான்.

அம்மிணி ஒரே ஒரு விஷயத்தை மட்டும் கிளறிக் கிளறிக் கேட்டாள் “புடவை இல்லாமல், அங்கே இருக்கிற இளம் பெண்கள் வேற என்ன ஆடைகள் அணியிறாங்க?”

இதயம் அதற்குப் பதில் கூறியது. அப்பச்சனை அது மறந்துவிட்டது. பதில் கூறுவதற்குப் பொருத்தமில்லாமல் இருக்கும் சூழ்நிலையை அது மறந்தது. அம்மிணியின் கண்களில் தெரிந்த பரபரப்பை மட்டுமே அது பார்த்தது. குரலைத் தாழ்த்திக் கொண்டு அது சொன்னது. “அங்கு என்னென்ன ஆடைகள் அணிகிளார்கள்னு என்னால சொல்ல முடியாது. ஆனால், ஒரு விஷயத்தை மட்டும் என்னால சொல்ல முடியும். நான் பார்த்த எந்த ஊர்லயும் அம்மிணி, உன்னை மாதிரி அழகும், உடலமைப்பும் கொண்ட ஒரு பெண்ணைக் கூட நான் பார்த்து இல்ல...”

அம்மிணி உள்ளே ஓடினாள். உலகத்திலேயே மிகப் பெரிய அழகி என்ற பட்டம் தான் கொஞ்சமும் எதிர்பார்த்திராத ஒரு சந்தர்ப்பத்தில், தன் தலையில் சூட்டப்படுகிறது என்னும் போது உண்டாகக்கூடிய திகைப்பும், ஆச்சரியமும் அவளைத் திக்குமுக்காடச் செய்திருக்க வேண்டும். இப்பச்சன் சிரித்தான். போலியான ஒரு சிரிப்பு. கூர்ந்து கவனித்தபோது, சாந்தம் குடிகொண்டிருந்த கண்களில் சந்தேகத்தின் ஒரு திரி பற்றி எரிய ஆரம்பித்திருந்தது. அதை அடுத்த நிமிடமே விஸ்வநாதன் அணைத்தான். அவன் சொன்னான் “நான் சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன். நீங்க, அதைப் பெருசா நினைக்க வேண்டாம்.”

வீட்டை விட்டு வெளியே வந்தபோது, வாசலில் இருட்டின் வலைகள் விழுந்திருந்தன. அம்மிணி விளக்கைக் காட்டினாள். விளக்கின் ஒளியைப் பார்த்ததும் வீட்டின் மூலைகளில் தவம் செய்து கொண்டிருந்த வாத்துக்கள் ஒன்றோடொன்று பேசிக் கொள்ள ஆரம்பித்தன.

“இப்போ வயல் வழியே போகவேண்டாம். நேரா சைக்கிளை மிதிச்சுப் போகணும்”? அப்பச்சன் எப்படிப் போக வேண்டுமென்று வழி சொன்னான் “அஞ்சல் அலுவலகம் வரும். அங்கேயிருந்து இடதுபக்கம் திரும்பினா, வேளொரு சாலையை அடையலாம். கொஞ்சம் வேகமா மிதிக்கம்... அவ்வளவுதான். நிலவு வெளிச்சம் இருக்குதுல்ல... சைக்கிள்ல விளக்கு இருக்குல்ல?”

அம்மிணி குறும்புத்தனமான குரலில் சொன்னாள் “எதுவுமே வேண்டாம். அந்தச் சாராயக் கடையில நுழைஞ்சு, ஒரு புட்டியை எடுத்துக்கிட்டு, வரப்பு வழியா சைக்கிளை மிதிச்சிக்கிட்டுப் போனா போதும். பொழுது புலர்ற நேரத்துல சேர வேண்டிய இடத்துல போய் சேர்ந்திடலாம். படுக்க வேண்டிய இடத்துல போய் படுக்கலாம்.”

“இனிமேல் நீ ஏதாவது சொல்லாம இருந்தாலே பெரிய விஷயம்...” ? அப்பச்சன் கோபமான குரலில் சொன்னான். “சார், நீங்க நேரா போங்க. பைலி வந்தால், நான் கேக்குறேன். நாளைக்கு உங்க இடத்துக்கு வந்து அவன் தன் தவறை ஒத்துக்கிட்டு மன்னிப்புக் கேட்பான்.”

“வேண்டாம். நான் நாளைக்கு வர்றேன். இங்கேயே பார்த்துக்கலாம். மனிதர்கள் யார்கிட்டயாவது ஏதாவது பேசாமல் வாழ முடியுமா என்ன,”

விளக்கின் ஒளி. மணல் அடர்ந்த பாதை வழியாக அவன் புறப்பட்டான். “நான் நாளைக்கும் வருவேன் எனக்கு இந்த வீடு கட்டாயம் வேணும். இங்கே உள்ள சூழ்நிலை எனக்குத் தேவை. மனிதர்கள் தேவை சாம்பலாக... அழிக்க... கொன்னு தூரத்ல வீசி எறிய... . அவன் தனக்குள் கூறிக்கொண்டான்.

காற்றுக்கு குளிர்ச்சி உண்டாகியிருந்தது. மழைக்கு முன்பே வீசும் காற்று. உறங்கிக் கொண்டிருந்த பாதையில் தனியாகப் போய்க் கொண்டிருந்த சைக்கிள் பயணியைப் பின்னாலிருந்து தள்ளிக் கொண்டிருந்தது காற்று.

8

நான்காவது கடையிலிருந்து வெளியே வரும்போது பைலி சொன்னான் “நீ குரு... நான் வெறும் சிஷ்யன்...”

பைலி மிகவும் தளர்ந்து போயிருந்தான். கால்கள் ஒழுங்காக நிற்கவில்லை.

“துடுப்பு போட முடியுமா?” -விஸ்வநாதன் கேட்டான். “முடியாதுன்னா சொல்லு. நான் துடுப்பு போடுறேன்.”

தன்னுடைய மதிப்புக்கு பங்கம் விழுந்துவிட்டதைப்போல் பைலி பதைபதைத்துப் போனான். “இதை வச்சு என்னை நீ வீழ்த்திடலாம்னு நினைக்காதே. கால் தடுமாறலாம். நாக்குக் குழையலாம். ஆனா, செத்துப்போன மாதிரி கிடக்குறதுக்கு வேற ஆளைப்பாரு”? பைலி சொன்னான்.

நீர் பலமாக ஓடிக் கொண்டிருந்தது. ஏரி முழுமையாக நிறைந்திருந்தது. கலங்கிய நீரைக் கிழித்துக் கொண்டு துடுப்பு ஆழமாக இறங்கியது. உறுதியான, சதைப்பிடிப்பான கைகளிலிருந்து வியர்வை ஆறென வழிந்து கொண்டிருந்தது. பைலி வெறுமனே சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தான். “உன் வயசுல நான் இது என்ன... இதையும் தாண்டி குடிச்சிருக்கேன். இப்போ முடியாது வயசாகிட்டு வருதுல்ல? நீ என் வயசை அடையிறப்போ நடு எலும்பு ஒடிஞ்சு ஏதாவது மூலையில சுருண்டு கிடப்பே.”

விஸ்வநாதன் மல்லாக்கப் படுத்திருந்தான். படகு இரண்டு முனைகளிலும் மேல்நோக்கி உயர்ந்து வானத்தைத் தொட்டுக் கொண்டிருந்தது. அவன் அதிலேயே தன் முழு கவனத்தையும் வைத்திருந்தான். நீர் ஓட்டத்திற்கு எதிராகத் தள்ளிக் கொண்டு போகும் ஒரு பெரிய சுறாமீனைப் போல படகு போய்க் கொண்டிருந்தது.


காலையில் ஆரம்பித்தது. அதிகாலை வேளையில் பைலி ஆசான் எழுப்பிவிட்டான். சமீபகாலமாகப் பெரும்பாலான நாட்களில் காலை வேளைகளில் அதுதான் நடக்கிறது. வீட்டிற்குள் நுழைந்து கொஞ்ச நேரம் உட்கார்ந்து பேசிவிட்டு காபி குடித்துவிட்டுத்தான் அவன் புறப்படுவான். ஒரு வகையில் பார்க்கப் போனால் அது நல்லதுதான். ஊரின் மாறிப் போன முகம் இப்போது கிட்டத்தட்ட அவனுக்கு நன்கு அறிமுகமாகிவிட்டது. சிறு பையனாக இருந்தபோது பார்த்து மறந்து போன பல மனிதர்களின் முகங்கள் இப்போது அவனுக்குத் தெரிய ஆரம்பித்துவிட்டன. பல கதாபாத்திரங்களும் மண்ணை விட்டு மறைந்து போயிருக்கின்றன. அவனுடன் அப்போது சேர்ந்து விளையாடியவர்கள் எல்லாரும் இப்போது தாய்களாகவும் தந்தைகளாகவும் இருக்கிறார்கள். அப்போது பிரபலமாக இருந்த பலரும் இப்போது உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். கை நீட்டி பிழைத்துக் கொண்டிருந்தவர்களின் அடுத்த தலைமுறை மிகப் பெரிய கட்டிடங்களில் வாழ்ந்து கொண்டு ஊரை விலைபேசிக் கொண்டிருக்கிறார்கள்.

கேட்காமலே பலரும் வந்திருந்தார்கள். குறிப்பாக விசாரிக்க வேண்டும் என்ற ஆர்வம் உண்டானவர்களிடம் மட்டும் சுற்றி வளைத்து எந்தவொரு சந்தேகமும் தோன்றாத மாதிரி கேட்டு அவர்களைப் பற்றி தெரிந்து கொண்டான் அவன்.

சிவராமன் அண்ணனை சமீப நாட்களாக அதிகம் பார்க்க முடியவில்லை. அதற்குக் காரணம் ஒருவேளை பைலி இங்கு வருவதாக இருக்கலாம். ஒருவேளை அதுவே ஒரு தோணலாகக் கூட இருக்கலாம். அதற்குக் காரணம் தூக்கம் கலைந்து எழுந்திருக்கும் நேரத்திலேயே சிவராமன் அண்ணன் வயல் பக்கம் போய்விடுவார். அவர் திரும்பிவரும்போது விஸ்வநாதன் அங்கு எங்காவது இருந்தால்தானே.

அவ்வப்போது சுசீலா ஒரு மின்னலைப்போல அவன் கண்களில் படுவாள். ஆரம்பத்தில் அவன்மீது அவளுக்கு இருந்த ஆர்வம் இப்போது இல்லாமற் போயிருக்கலாம். ஊரிலேயே மிகவும் மோசமான மனிதனுடன் நட்பு பாராட்டிக் கொண்டிருக்கும் புதிதாக வந்திருக்கும் பக்கத்து வீட்டுக்காரனைப் பற்றிய அபிப்ராயத்தைத் தவிடு பொடியாக்கி விட்டது என்ற வருத்தம் அவளுடைய பார்வையில் தொக்கி இருப்பதை அவனால் பார்க்க முடிந்தது.

ஒரு மனிதன் எவ்வளவு நாட்களுக்குத் தன்னுடைய புதுத் தன்மையைப் புதிய ஒரு சூழ்நிலையில் சிறிதும் மங்காமல் நிலை நிறுத்த முடியும்? விஸ்வநாதன் கவலையுடன் நினைத்தப் பார்த்தான். புதிய முகங்களுக்கு மத்தியில் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே தங்கி நின்று சீக்கிரமே காணாமல் போகும் தன்னுடைய புத்தம் புது தன்மையின் நிலையற்ற நிலையை நினைத்து விஸ்வநாதன் மனதிற்குள் கவலைப்பட்டான்.

“எனக்கு இன்னும் குடிக்கணும் போல இருக்கு” பைலி சொன்னான். விஸ்வநாதன் முழங்கைகளில் தலையை வைத்து சாய்ந்து படுத்திருந்தான்.

“உன் பணம் எதுவும் தேவையில்ல...”

படகு ஒருமுறை சுற்றியது. பிறகு நீரோட்டத்தோடு சேர்ந்து கீழ் நோக்கி ஓடத் தொடங்கியது. ஒரு ஈட்டியின் வேகத்தில் அது ஓடியது. பைலி ஆசான் துடுப்பைக் கையிலெடுக்க ஆரம்பித்தபோது, விஸ்வநாதன் அதைத் தடுத்தான். அவன் சொன்னான் “இப்படியே போகட்டும் அடுத்து வர்ற படகுக் துறையில நாம இறங்குவோம்.”

விஸ்வநாதன் துடுப்பைக் கையில் எடுத்தான். நீரோட்டத்தை அனுசரித்து துடுப்பைப் போட்டு படகின் வேகத்தை அவன் சரிப்படுத்தினான்.

“தேவாலயத்தைத் தாண்டி ஒரு சாராயக்கடை இருக்கு. அங்கே பொரிச்ச மீன் கிடைக்கும்”, பைலி சொன்னான்.

அந்த மனிதன் மதுமீது கொண்டிருந்த தாகம் விஸ்வநாதனை வெட்கப்படச் செய்தது. எவ்வளவு அருந்தினாலும் போதுமென்று தோன்றாத ஒரு மனம். ஒரு ஞாயிற்றுகிழமையைக் கொண்டாடுவதிலும் ஒரு அளவு இருக்க வேண்டாமா? காலையில் வந்து எழுப்பி மதுவை நோக்கி அழைத்துச் செல்லும்போது, இந்தப் பயணம் இந்த அளவுக்கு நீளும் என்று அவன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.

கரைகள் அவர்களுக்கு ஓடிவர முயற்சித்தன. மேலே காற்று வீசிக் கொண்டிருக்க வேண்டும். தென்னை ஓலைகள் சுழலில் சிக்கிக் கொண்டதைப்போல இப்படியும் அப்படியுமாக ஆடிக் கொண்டிருந்தன. படகுத்துறைகள்... மழைக்குப் பிறகு தோன்றிய வெயில்... பிரகாசித்துக் கொண்டிருக்கும் பெண்களின் உடல்கள்... உரத்த குரலில் பாடிய படகுப் பாடல்களைத் தாங்கிச் செல்லும் காற்று...

எதிர்பார்த்ததைவிட பைலியுடன் படுவேகமாகத் தான் நெருங்கிவிட்டதை விஸ்வநாதன் நினைத்துப் பார்த்தான். ஆரோக்கியமற்ற முதல் சந்திப்பைச் சொல்லி வருத்தப்படக் கூடிய பைலியைத்தான் அவன் எதிர்பார்த்தான். ஆனால், பிறகு பார்த்தபோது பைலி அவனை ஞாபகத்திலேயே வைத்திருக்கவில்லை. புதிய ஒரு நண்பனைப் பார்க்கும்போது உண்டாகக் கூடிய மகிழ்ச்சி அவன் முகத்தில் ஒளி உண்டாக்கியது. அப்பச்சனுக்கு முன்னால் அவன் ஒரு சிறு குழந்தையைப் போல இருந்தான். குறும்புத்தனங்கள் நிறைந்த கள்ளங்கபடமில்லாத, அண்ணனுக்குப் பயப்படக் கூடிய ஒரு இளைஞனின் செயல்கள்... அந்த முகம் விஸ்வநாதனை ஏமாற்றமடையச் செய்தது. ‘எனக்கென்று சேர்த்து வைத்திருக்கும் பிடிவாதமும் குரூரமும் படிப்படியாக இழக்கப்பட்டு கடைசியில் ஒன்றுமில்லாமற் போய் விடுமா’? விஸ்வநாதன் தன்னைப் பார்த்துக் கேட்டுக் கொண்டான்.

‘அப்படியெல்லாம் எதுவும் இல்ல. நான் ஒரு நல்ல நடிகன். என் இலட்சியங்களுக்கு எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் ஒரு மாறுதலும் உண்டாகாது.

ஒருநாள் ஒருவரோடொருவர் கட்டிப்பிடிச்சு நிக்கிறப்போ எதிரியின் உடல்ல இருந்து உயிர் என் கைகளுக்கு மாறும். அதை சதின்னோ வஞ்சனைன்னோ எப்படி வேணும்னாலும் சொல்லிக்கலாம். ஆனால், நான் தாக்குப் பிடிக்கிறது அந்த நிமிடத்துலதான் இருக்கு’? விஸ்வநாதன் தனக்கு கூறிக் கொண்டான்.

பைலி துடுப்பை விஸ்வநாதனிடமிருந்து வாங்கினான். படகு நீரோட்டத்தை விட்டு விலகிக் கரையை நோக்கி நகர்ந்தது. தேவாலயத்தின் உயரமான நிழல் நீர்மீது படர்ந்திருந்தது. தேவாலயத்தின் வாசலில் இங்குமங்குமாக வெள்ளை ஆடைகள் தெரிந்தன. காற்றில் புதிய கள்ளின் வாசனை தவழ்ந்து வந்தது.

தெற்கு திசையில் ஒரு கிராமத்தில் தேக்கி வைக்கப்பட்ட நீரும். வரப்புகளில் கை தட்டினால் ஓசை எழுப்பிக் கொண்டு பறந்தோடி வரும் வெள்ளைக் கொக்குகளும் இருந்த ஒரு பழைய மழைக்காலத்தில் வானத்தில் கார்மேகங்களின் ஊர்வலம்... எப்போது பார்த்தாலும் மழைபெய்த வண்ணம் இருக்கும் மழைச்சாரல் பட்டு வாத்துக்கள் இப்படியும் அப்படியுமாக ஓடும். அவர்களுக்குத் தேவையற்ற சிந்தனைகள்தான் எப்போதும். வயல்களை விட்டு வேறு வயல்களைத் தேடிப்போகும் பாத யாத்திரையின் ஒரு கட்டத்தில் பைலி சொன்னான் : ‘நான் சிறையில இருந்து வெளியே வந்த நாட்கள். பொண்ணுன்னு சொன்னா எனக்கு உயிர் வந்த மாதிரி... அந்த அளவுக்குத் தாகம் எடுத்து திரிஞ்சேன் நான். ஜானுன்ற மலட்டுத் தேவடியாவின் வியர்வை வழிந்து கொண்டிருக்கும் மார்பு... ஒரு சரியான பெண்ணை விதை போட்டால் முளைக்கிற மண்ணைத்தேடி அலைஞ்சேன்...’


கிராமத்தின் ஒரு மூலையில், வாத்துக்களை வலைபோட்டு இருக்கும்படி செய்துவிட்டு அருகிலேயே சிதிலமடைந்து காணப்பட்ட ஒரு கடை அறையில் தரையில் விரிக்கப்பட்ட பாயில் இரண்டு சகோதர்களும் உறங்கினார்கள்.

பாதி இரவு தாண்டியிருக்கும். பூனை வந்தது. வாத்துக்கள் கண்விழித்து கத்துவதை எதிர்பார்த்திருந்த தம்பி கல்லை எடுத்து எறிந்தான். டார்ச் விளக்குடன் வலையைச் சுற்றி நடந்து பரிசோதித்தான். எல்லாம் முடிந்து வந்து படுத்தால் தூக்கம் வரவில்லை. வாலிபம் பொங்கித் துடித்துக் கொண்டிருந்தது. நிரந்தரமாக இழந்துவிட்டோம் என்று நினைத்திருந்த ஒரு மிகப் பெரிய பொக்கிஷம் கொலைக் கயிற்றிலிருந்து திரும்பி வந்த நேரத்தில் கிடைத்தபோது உண்டான ஆனந்தத்திற்கு அளவே இல்லை. அந்த ஆனந்தம் இரண்டு மடங்காக அதிகரித்திருத்தது. உலகத்தில் வேறு எந்த ஒரு ஆணும் அறியாத அளவிற்கு அதன் மதிப்பு என்ன என்பதை பைலி நன்கு அறிந்திருந்தான். அவன் மனதில் அப்போது வேறு சிந்தனையே இல்லை.

வயல்களில் சேறு நிறைந்த நீரில் நாற்று நட்டுக் கொண்டிருக்கும் புலையப் பெண்கள் உடுத்தியிருக்கும் முண்டின் பின்பகுதியில், அவர்கள் குனியும்போது மறையும், நிமிரும்போது விழும் இடைவெளியை விட்டு அவனுடைய கண்கள் நீங்கவே நீங்காது. பொழுது புலரும் நேரத்தில் இயற்கையின் அழைப்பை நிறைவேற்றுவதற்காக ஒரு மைல் தூரம் நடந்து சென்று அங்கு ஓடிக் கொண்டிருக்கும் வாய்க்கால் கரையில் அடர்ந்திருக்கும் செடிகளுக்குள் அவன் தன்னை மறைத்துக் கொள்வான். ஓடிக் கொண்டிருக்கும் நீரில் காட்சி தரும் நிர்வாணமான பின்பகுதிகளும், உடம்பைத் தேய்த்துக் குளிக்கும்போது தெரியும். அப்போதுததான் முளைத்துக் கொண்டிருக்கும் மார்புக் கண்களும் நினைவுகளாக வந்து இரவில் அவனை உறங்கவிடாமற் செய்யும். அவனுடைய அண்ணனுக்கு எல்லாம் தெரியும். எனினும், எதுவும் தெரியாததைப் போல நடித்துக் கொண்டு பேசாமல் திரும்பிப் படுத்திருப்பான்.

“மீனாட்சி எதற்கும் தயார்தான். இந்தத் தாகத்தை முழுமையாகத் தீர்ப்பதற்கான சக்தி மீனாட்சியிடம் இருந்தது. “ஆனா, மகளை மட்டும் பார்க்காதீங்க. நான் உறுதியான குரல்ல சொல்றேன். என் தங்கம்ல... அவளை இந்த வயது வரை ஒரு பொன்னைப் போல பொத்திப் பொத்தி வளர்த்துக் கொண்டு வர்றேன். சாயங்காலம் ஆனபிறகு வழியில எங்காவது ஒரு சைக்கிளோட மணிச்சத்தம் என் காதுல விழுந்ததுன்னு வச்சுக்கங்க, அன்னைக்கு நான் பொண்ணைக் கொன்னுட்டுத்தான் வச்சுக்கங்க, அன்னைக்கு நான் பொண்ணைக் கொன்னுட்டுத்தான் மறுவேலை பார்ப்பேன். அந்த அளவுக்குப் பயத்தோட அவள் வளர்ந்து வர்றா”- கிராமத்து விலைமாதுவின் வியர்வை விழுந்து வளர்ந்த கன்னிப்பெண்.

என் மீனாட்சி... எனக்கு அவள்மேல ஒரே மோகம். வேறொண்ணும் இல்ல. மோகம்... மீனாட்சிக்கு அதெல்லாம் தெரியணும்னு அவசியம் இல்ல. “தந்தை இல்லாத பொண்ணு. போவதாததற்கு என் மகள் வேற... அவளை ஒருத்தன் கூட...”

காமக் கலையின் கடைசி அத்தியாயங்களைப் படிச்சு முடிச்சு தளர்ந்து போய் உறங்க ஆரம்பிக்கிற நேரத்துல மெதுவா என்கிட்ட ஞாபகப்படுத்துவாள். “நான் கல்யாணம் பண்ணாதவன். எனக்கு ஒரு பெண் வேணும். எங்கே இருந்தாவது கட்டாயம் எனக்கு ஒருத்தி வேணும். அது உன் மகளா இருந்தாத்தான் என்னன்னு நான் நினைக்கிறேன்”னேன். ஒரு மந்திரம் போல இருந்தது அது. மந்திரத்தை ஒரு தடவை சொன்னால் போதாது. ஒவ்வொரு நாளும் சொல்லிக்கிட்டே இருக்கணும். தினமும் ஆயிரம் தடவைகள் சொல்லணும். உண்றப்போ, உறங்குறப்போ, நீர்ல முங்குறப்போ, முங்கி நீந்துறப்போ, நீதி தளர்றப்போ நான் அவளைப் பார்த்துச் சொன்னேன்: “இங்க பாரு மீனாட்சி, நான் அவளைக் கல்யாணம் பண்ணிக்கிறேன். அவளுக்கு எந்தக் கஷ்டமும் வராம நான் பார்த்துக்குறேன்”னு.

“இங்கே தொட்டு சத்தியம் பண்ணுங்க”- அவள் சொன்னாள். நான் சத்தியம் செய்தேன். “ஏமாற்றமாட்டேன்னு சொல்லுங்க”- அவள் சொன்னாள். சொன்னேன்.

“சத்தியம் பண்ணுங்க”- அவள் சொன்னாள்.

“சத்தியம்.”

“சத்தியம்.”

மீனாட்சி குலுங்கிக் குலுங்கி அழுதாள். என் தெய்வமே!

 

மழை முடிந்து, நிலவு உதித்துக் கொண்டிருந்த ஒரு இரவு வேளையில், எலும்புகள் நொறுங்கிச் சிதறின. வாயில் இரத்தத்துளிகள்! “ஒண்ணுமில்ல கண்ணு... இனி எதைப் பற்றியும் கவலைப்படாதே” பைலி தேற்றினான். பாரதியின் நிர்வாண உடம்பு அவனை வெறிகொள்ளச் செய்தது. வியர்வை வழிந்து கொண்டிருந்த விளைவுகளில் கண்ணாடியின் மென்மைத்தனம் இருந்தது. ஆவர்த்தனத்தின் முடிவு புதிய ஒரு ஆர்வத்தனத்தில்தான் என்பதை அவன் புரிந்து கொண்டபோது, பொழுது விடிந்துவிட்டது.

வெளியே தாய் அழுதாள்.

உள்ளே போனபோது, மகள் ஒரு கிழிந்த துணியைப்போல, பிணத்தைப் போல, நிர்வாணக் கோலத்தில் கவிழ்ந்து படுத்துக் கொண்டு அழுதாள். தாய் சொன்னாள்: “எனக்கு நம்பிக்கை இல்ல. போகுறதுக்கு முன்னாடியே வேண்டியதைச் செஞ்சிட்டுப் போகலைன்னா, நீங்க எங்கே இருந்தாலும் நான் அங்கே வருவேன். மீனாட்சி மனம் கோணிட்டான்னா அதற்குப் பிறகு அவ்வளவுதான்...”

மழை பின்வாங்கியது. நாற்றுகளுக்கு வேர் பிடித்து ஓடினது. பச்சி இலைகள் அவற்றில் முளைத்துப் படரத் தொடங்கின. நாற்றுகளையும் வயல் வரப்புகளையும் விட்டு வாத்துக்கூட்டம் பயணத்தைத் தொடங்கியது. “நான் அங்கே போய் வேண்டியவர்கள்கிட்ட கலந்து ஆலோசனை பண்ணிட்டு அடுத்த மாசம் வர்றேன். எங்க தேவாலயத்துல விவரத்தைச் சொல்லணும். பாரதியை எங்க கூட்டத்துல சேர்க்கணும்ல”? பைலி சொன்னான். அதைக் கேட்டு மீனாட்சி அழுதாள். பாரதி ஈரமற்ற கண்களுடன் திண்ணையில் உட்கார்ந்திருந்தாள். “அவளுக்குக் குளியல் தவறிடுச்சு... ஒரு மாசம்னு சொல்றீங்க. முடிஞ்சா அதற்கு முன்னாடியே வரப்பாருங்க. ஆளுங்க குசுகுசுன்னு ஏதாவது பேசுறதுக்கு முன்னாடி...” - மீனாட்சி சொன்னாள்.

“கட்டாயம் வர்றேன்.”

உள்ளே அறைக்குள் பாரதியைத் தனியாக அழைத்தான். “ஒரு துணி கூட உடம்புல இல்லாம உன்னை நான் பார்க்கணும். இனி என்னைக்கு இதை மாதிரி பார்க்கப் போறேன். திரும்பி வர்றப்போ வயிறு பெருசாகி...” - பைலி சொன்னான். பாரதி அவன் சொன்னபடி நடந்தாள். ஒரு பொம்மையைப் போல. வெட்கப்படவில்லை. எதிர்ப்புகளும் இல்லை. சாய்த்து நிறுத்தப்பட்டிருந்த நிர்வாணமாக பிணம்... உணர்ச்சியற்ற முகம்... “இந்தா... இதைக் கையில வச்சுக்கோ. அம்மாக்கிட்ட சொல்ல வேண்டாம். ஐம்பது ரூபாய் இருக்கு. ஒரு மாசத்துக்குள்ளே ஏதாவது செலவு வரலாம்ல...”- பைலி சொன்னான். பாரதி ரூபாய் நோட்டுக்களைப் பார்க்கவேயில்லை. காலில். தொடைகளில், இடுப்பிலிருந்த முடிச் சுழிகளில், தொப்புளில், மார்புப் பகுதியில், கழுத்தில், உதட்டில், முடியில் முத்தம் கொடுக்கும் கணவனுடைய தாகத்தின் ஆழங்களைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தபோது, பாரதியின் கண்கள் நீரால் நிறைந்தன. “நான் பேகட்டுமா, கண்ணு?”- பைலி கேட்டான்.


பாரதி தலையை ஆட்டினாள்.

‘அதற்குப் பிறகு மூன்று வருடங்கள் கழித்துத்தான் அவன் அந்த இடத்திற்கே போனான். போகும்போதே அவனுக்கு நன்றாகத் தெரியும்? உடனே அந்த இடத்திற்குத்தான் திரும்பி வரப்போவதில்லை என்ற விஷயம்.

மூன்று வயதுள்ள குழந்தை வாசலில் நடந்து கொண்டிருப்பதைப் பார்த்து அவன் போனான். மீனாட்சியின் கன்னங்களில் கடைசி கடைசியாக இருந்த பளபளப்பும் இல்லாமற்போய்விட்டிருந்தது. அவள் கண்டபடி திட்டியதை அவன் கேட்டான். அவள் அழுவதைப் பார்த்தான். “பாரதி இறந்துட்டா...”- மீனாட்சி அழுதாள் : “என் மகள்... என் தங்க மகள்... டேய் மோசக்காரா” மீனாட்சியின் வறண்டுபோன நிர்வாணத்தின் ஆழங்களில், புதைந்துகிடந்தவாறு அவன் முழுவதையும் கேட்டான். ‘பாரதி இறந்துட்டா. எப்படி இறந்தா? யாருக்குமே தெரியாது.

ஒரு நாள் ஆற்றின் கரையின் மணலைத் தோண்டிக் கொண்டிருந்த நாய்கள் அவளுடைய முண்டின் ஒரு பகுதியைத் தோண்டி வெளியே போட்டன. போலீஸ் வந்து பார்த்தபோது உடல் அழுக ஆரம்பித்திருந்தது. அவளைக் கொன்றது யார்? அவளுடைய தாய்க்கும் அது தெரியவில்லை. போலீஸிடம் எல்லா விஷயங்களையும் எப்படிக் கூற முடியும்? அவள் பலருடனும் போய்க் கொண்டிருந்தாள். கடைசியில் அவள் போனது மூன்று நான்கு கள்ளு குடிக்கும் ஆட்களுடன். காலம் அவளை அப்படி ஆக்கிவிட்டது. காலத்தின் போக்கில் ஒரு நாள் வடக்கில் இருந்து வந்த ஒரு வாத்துக்காரன் அவளைக் கர்ப்பிணி ஆக்கினான். குழந்தை பிறந்தபோது ஊர்க்காரர்கள் எல்லாருமே பெண்ணின் தாயை வாய்க்கு வந்தபடி மோசமாகப் பேசினார்கள். பிறகு அவர்கள் பெண்ணின் விலை என்ன என்று விசாரித்தார்கள். பின் வாங்கிக் கொண்டிருந்த இளமையும் கூடிக் கொண்டிருந்த முதுமையும் அந்தத் தாயை ஒரு அதிகத் தொகையைச் சொல்ல வைத்தது. விலை படிப்படியாகக் குறைந்து கொண்டே வந்தது. ஊரில் இனிமேல் யாருக்கும் ஆசை பாக்கி இல்லை என்ற நிலை வந்தபோது, இரண்டு வருடங்கள் கடந்தபிறகு, இரவு நேரங்களில் வெளியே போகும் பழக்கம் ஆரம்பித்தது. மணலில், இரண்டு நாட்கள் தொடர்ந்து பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட, பட்டினியால் பாதிக்கப்பட்ட, நோயால் பீடிக்கப்பட்ட இளம்பெண்ணின் அழுகி நாறிப்போன பிணம் ஒரு நாள் கிடந்தது. போஸ்ட்மார்ட்டம் முடிந்து, குழிக்குள் போட்டு மூடினார்கள்.

இரவில் உறங்கவில்லை. பூனைகள் வரவில்லை. எனினும் வாத்துக்கள் அவ்வப்போது கத்திக் கொண்டிருந்தன. வாசலில் அலைந்து கொண்டிருக்கும் மனிதனின் நிழல்... நிலவு... அப்பச்சன் தூக்கம் கலைந்து எழுந்தான்.

“என்னடா பைலி?”

பைலி பதிலெதுவும் கூறவில்லை.

“சொல்லு. உனக்கு என்ன மனக் கஷ்டம்,”

பைலி சொல்ல மாட்டான்.

“எதுன்னாலும் நாம சரி பண்ணிடலாம்.”

“நான் ஒரு தப்பு பண்ணிட்டேன்”? பைலி அழுதான் “நாம இந்த ஊரைவிட்டுப் போகிடலாம்.”

மறுநாள் காலையில அப்பச்சனைப் பாயில் காணவில்லை. வெயில் அதிகமானபோது, ஒரு பெண் குழந்தையுடன் அவன் வந்தான்.

“இந்தா... உன் மகள்...” அண்ணன் தம்பியிடம் சொன்னான்: “நம்ம மகள்... நான் பத்து ரூபாய் கொடுத்து வாங்கிட்டு வந்தேன். அந்தத் தேவிடியாளுக்கு ஒரு பாரம் குறைஞ்ச மாதிரி ஆச்சு...”

“லட்சம் ரூபாய்”? பைலி சொன்னான்.

பைலியின் நாக்கு குழைந்தது : “லட்சம் ரூபாய்...” பைலி பொறித்த மீனின் வாசனையை வெளியே துப்பினான். அவனுடைய கை பட்டு ஒரு குவளை சாய்ந்தது. மேஜையில் வழிந்த கள்ளு கீழே மணலில் போய் அடைந்தது. “லட்சம் ரூபாய்...” - பைலி விரலை உயர்த்திக் காட்டினான். வெளியிலிருந்து வேகமாக வீசிய காற்றில் அவனுடைய தலைமுடி பயங்கரமான சித்திரங்கள் வரைந்தவாறு காற்றில் பறந்து கொண்டிருந்தது. “லட்சம் ரூபாய்...” பைலி குலுங்கிக் குலுங்கி அழுதான். நெஞ்சில் அடித்துக் கொண்டான். “லட்சம் ரூபாய் தந்தா...”- பைலி சொல்ல முயற்சித்தான் : “பத்து ரூபாய்க்கு வாங்கின எங்க அம்மிணியை நாங்க யாருக்கும் கொடுக்கமாட்டோம். ஒண்ணு ரெண்டு இல்ல. லட்சம் ரூபாய்...”

விஸ்வநாதன் மேலும் ஒரு குவளைக் குடித்தான். உள்ளுக்குள் சலனங்கள். எதிரிக்கு இதயம் என்ற ஒன்று இருக்கிறது என்பதையும் அங்கு ஈரம் இருக்கிறது என்பதையும் தெரிந்து கொண்டபோது சிறிதும் எதிர்பார்க்காமல் மதகை உடைத்துக் கொண்டு பரிதாப உணர்ச்சி பெருக்கெடுத்து ஓடியது.

“உனக்கு அவள் மேல ஒரு கண்ணு இருக்குன்னு எனக்கு ஒரு சந்தேகம். அப்படி ஏதாவது இருக்குன்னு தெரிஞ்சா, அன்னைக்கி உன் குடலை மண்ணு தின்னும். சொல்லிடுறேன்”... பைலியின் வார்த்தைகள் காற்றில் தவழ்ந்து வந்தன. எங்கோ இருக்கும் ஒரு ஊர் வரை அந்த வார்த்தைகள் போய்ச் சேர்ந்தன.

“நான் இன்னும் குடிக்கணும். என் அம்மிணி கண்ணை நான் பார்க்கணும்.”

எதிரியின் பலவீனம் என்ன என்பதைக் கண்டுபிடிப்பதுதான் போரில் மிகவும் கஷ்டமான ஒரு விஷயம். மர்மமான ஒன்று அது.

விஸ்வநாதனின் கண்களில் புதிய ஒரு பிரகாசத்தின் ரேகைகள் தெரிந்தன.

9

முதல் வாரம் ஒரு ரூபாய் வாடகை. இரண்டாவது வாரம் வந்தபோது, கேட்காமலே வாடகையை இரண்டு ரூபாயாக விஸ்வநாதன் உயர்த்திக் கொடுத்தான். ஒவ்வொரு வாரம் முடியும்போதும், ஒரு ரூபாய் அவன் அதிகமாகக் கொடுத்தான். இப்போது நடப்பது ஆறாவது வாரம். ஆறு ரூபாய். இப்படியே போனால் வாரத்திற்கு ஐம்பதோ, நூறோ கூட இந்தச் சிதிலமடைந்த குடிசைக்கு வாடகை கொடுக்க வேண்டிய சூழ்நிலை அவனுக்கு உண்டாகலாம்.

எனினும், ஏதோவொரு உள்ளுணர்வால் உந்தப்பட்டதைப் போல ஒவ்வொரு வாரமும் முடியும்போது தொகையை அவன் அதிகப்படுத்திக் கொடுத்துக் கொண்டிருந்தான். அப்படி தருவதற்குக் காரணம் என்ன? ஒருவேளை வீசி எறிந்துவிட்டு போகக் கூடிய விஷயங்களில் அதிகப்படியான ஒன்றாக அது இருக்கட்டும் என்று உள்ளுக்குள் யாரோ இருந்து கொண்டு நிரந்தரமாக ஒரு கணக்குப் போட்டுப் பார்த்து கூறியிருக்கலாம்.

இடையில் ஒரு ஓவியம் வரைந்தான். அதை முழுமையாக முடிக்க மிகவும் சிரமப்பட வேண்டி வந்தது என்பதுதான் உண்மை. என்னவோ எங்கேயோ போதாது போல தோன்றியது. இப்போதுகூட அது முடிவடைந்துவிட்டது என்று கூறுவதற்கில்லை. ஒவ்வொரு தடவை பார்க்கும்போதும் உள்ளுக்குள் திருப்தியின்மை என்ற புண் இருந்து கொண்டு வேதனை தந்து கொண்டிருந்தது. நிர்வாணக் கோலத்தில் இருக்கும் இளம்பெண்ணின் கண்களில் கவலையின் ஆழமான நிழல் பரவலாக இருக்கிறது. இடுப்பைக் கைகளால் சுற்றி அணைத்தவாறு, அங்கு முத்தமிடும் ஆண் முகத்தின் சந்தோஷத் தோற்றம்... வித்தியாசம்... எல்லாம் திருப்திதான். ஒன்றே ஒன்றைத் தவிர... அந்த மனிதனின் கண்களில் நிறைந்திருக்கின்ற தாகத்தை மட்டும் அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.


அங்கு கவலை என்ற ஒன்று இருக்கிறதா? இல்லாவிட்டால் கவலையின் ஒரு சாயல் மட்டும் அங்கு விழுந்திருக்கிறதா? இப்போதுகூட அவனால் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. இதை யாரிடம் போய் அவன் கேட்பான்? அவனுடைய கேள்விக்கு யாராலாவது பதில் சொல்ல முடியுமா? பைலியிடம் கேட்டான்: “இந்த ஓவியத்துல இருக்குறது நீங்கதான். இது பாரதி...” அதைப் பார்த்து தன் தொடையில் ஓங்கி அடித்தான். விழுந்து விழுந்து விரித்தான். அட்டகாசம் பண்ணினான். “இது மனிதப் பிறவிகளா? நான் நினைச்சேன்...” தன்னுடைய முகத்தை அடையாளம் கண்டுபிடிக்க முடியாத மனிதனிடம் அவனுக்குப் பரிதாப உணர்ச்சிதான் உண்டானது.

பைலியை இப்போது கூட முழுமையாக அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. புரிந்து கொள்ள தன்னால் முடியுமா என்ற சந்தேகம் விஸ்வநாதனுக்கே உண்டானது. ஒருவேளை பைலியின் கடைசி கட்டத்தில் அவனைப் பற்றிய ஒரு தெளிவான பார்வை தனக்குக் கிடைக்கலாம் என்று விஸ்வநாதன் நினைத்தான். அந்த நேரத்திற்காக விஸ்வநாதன் காத்திருந்தான். ஏராளமான முகங்களைக் கொண்ட மனிதனின் ஒரு முகத்தை மட்டும் பார்ப்பதற்குக் காத்திருப்பது என்பது முட்டாள்தனமான செயல் என்று அவன் நினைக்காமல் இல்லை. எனினும், அதைத் தன்னால் பார்க்க முடியும் என்ற எதிர்பார்ப்பு அந்தக் காத்திருப்பிற்குத் தூண்டுகோலாக இருந்தது.

சிவராமன் அண்ணனை ஒருநாள் அழைத்துக் கொண்டு போய் அவன் சாராயம் வாங்கிக் கொடுத்தான். சாராயம் குடிக்கும் பழக்கம் இல்லை என்று அதிலிருந்து தப்புவதற்குப் பாவம் அந்த மனிதர் முதலில் முயற்சி செய்து பார்த்தார். ஆனால், முழுமையாக ஊற்றப்பட்ட குவளைக்கு முன்னால் ஆர்வத்தை அடக்கிக் கொண்டு நீண்ட நேரம் உட்கார்ந்திருக்க அவரால் முடியவில்லை. குடிக்க ஆரம்பித்தவுடன், அது ஒரு தொடர் குடிசைப் போல் ஆகிவிட்டது. அதோடு அறிவுரைகளும். “பைலி கூட அதிகமா நெருங்கிப் பழக வேண்டாம். அவனையும் அவனோட அண்ணனையும் இந்த ஊர்க்காரர்கள் ஒதுக்கி வச்சு எவ்வளவோ வருடங்களாச்சு. பழகுறதுக்குத் தகுதியில்லாத மனிதன். மிகவும் மோசமானவன். கோபம் வந்தால் எது வேணும்னாலும் செய்வான். தனி மனிதனா கொஞ்சமும் அறிமுகமில்லாத ஒரு ஊர்ல வந்து வசிக்கிறதுனால சொல்றேன். சார், அவன்கூட நீங்க வச்சிருக்குற நட்பு கெடுதல்லதான் போய் முடியும்”? சிவராமன் அண்ணன் சொன்னார்.

விஸ்வநாதன் ஒரு கீழ்ப்படிதல் உள்ள சிறுவனைப் போல் அவர் சொன்னவை முழுவதையும் காது கொடுத்துக் கேட்டான். நேரம் செல்லச் செல்ல அவனுக்கே வெறுப்புத் தோன்றிவிட்டது. எனினும், பல்லைக் கடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான். “கொஞ்சம் நிறுத்துடா” என்று கூறினால்போதும், அவர் தன்னுடைய பேச்சை வேறு திசை நோக்கித் திருப்பிக் கொள்வார். ஆனால், பைலியைச் சுற்றிப் பேச்சு இருப்பதே நல்லதென்று தோன்றியதால் அதை எதிர்த்து ஒரு வார்த்தைகூட கூறவேண்டும் என்று அவன் நினைக்கவில்லை.

அன்று இரவுதான் ஜானு பெரியம்மாவைப் பற்றி அவன் தெரிந்து கொண்டான். திரும்பி வந்தபிறகு சிவராமன் அண்ணனுடன் சேர்ந்து எல்லா அறைகளிலும் நுழைந்து அவன் பார்த்தான். அன்றுதான் முதல் தடவையாக உள்ளேயிருந்த அறைகளுக்குள் அவன் நுழைகிறான். அழுக்கு, தூசி ஆகியவற்றின் நாற்றத்தைக் கொண்ட அறைகளில் ஒரு விருந்தாளியைப் போல நின்றிருந்தபோது அவனுடைய உடலில் குளிர்ச்சி படர்ந்தது. பழைய அறைகள்... நினைவுகளின் கல்லறைகள்... “இந்த அறையிலதான் ஜானு இறந்து கிடந்தா...” - விஸ்வநாதன் அதைக் கேட்டவாறு நின்றிருந்தான்.

“இப்பவும் நாற்றமடிக்குதுல்ல?” - சிவராமன் அண்ணன் கேட்க, விஸ்வநாதன் தலையை ஆட்டினான். “ஹோ... கடைசி கட்டத்துக்கு வந்தவுடன் வயிற்றுக்குக் கீழே குளத்தைப் போல ஒரு புண். அங்கே புக்கள் துளைச்சிக்கிட்டு இருக்குறதை என் கண்களால் பார்த்தேன். சாகுறதுக்கு முந்தின நாள் என்னை அழைச்சு சொன்னா : “என் சிவராமன் அண்ணே... நான் செய்த பாவத்திற்காக பலனை நான் அனுபவிக்கிறேன். என் முகத்தைக் கொஞ்சம் பாருங்க. இப்போ நான் யாருக்கும் வேண்டாதவளா போனேன். கடைசி காலத்துல வாய்ல தண்ணி ஊத்துவான்னு ஒரு நன்றி கெட்டவளை நான் வளர்த்தேன். இப்போ அவகூட இல்லாமப் போயிட்டா.”

“அவள் எங்கு போனாள்?”- விஸ்வநாதன் கேட்டான்.

“ஒருத்தன்கூட அனுப்பினதா தகவல்... அதற்குப் பிறகு இதுவரை அவளை யாரும் இங்கே பார்க்கல.”

தத்தெடுத்து வளர்க்கப்பட்ட மகளுக்கும் அவளை வளர்த்த தாய்க்கும் இடையில் உண்டான ஒப்பந்தப் பத்திரத்தில் கடைசி காலத்தில் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறதா? தான் பார்க்காத, அறியாத அந்தச் சகோதரியின் பக்கம் இருந்தான் விஸ்வநாதன். “அப்படி எதுவும் அதுல எங்கேயும் இல்ல. இந்த பைலி...” - சிவராமன் அண்ணன் உணர்ச்சிவசப்பட்டு அழுதார்: “அவள் கையில் இருந்த பணம் முழுவதையும் அது இதுன்னு சொல்லி வாங்கிட்டான். கடைசி காலத்துல அவள்கிட்ட இருந்த ஏழெட்டு பவுன் நகைகளைக் கூட எடுத்துக் கொண்டு அடகு வச்சு கள்ளு குடிச்சவனாக்கும் அந்தப் பிசாசு... இந்த விஷயத்தை அவள் சொன்னப்போ, எனக்கே ரொம்பவும் வருத்தமாப் போச்சு. ’நான் செய்த கெடுதலுக்குப் பலனை நான் அனுபவிக்கிறேன்’னு சாகுற நேரத்துல அவள் நினைக்க ஆரம்பிச்சுட்டா.

செத்துக் கிடக்கிறப்போ அவள் தங்கச்சியும் அவளோட ஆளுங்களும் வந்து செய்ய வேண்டியதைச் செய்தாங்க. இல்லாட்டி இன்னும் அழுகி நாறிப்போய் கிடக்கணும். அவளுக்கு உடம்புக்கு ஆகாம போனவுடனே பைலி இந்தப் பக்கமே காலடி எடுத்து வைக்கல. செத்துப்போன செய்தி தெரிஞ்சவுடன் ஊர்க்காரங்க பலரும் வந்தாங்க. ஆரம்ப காலத்துல இருந்து பழக்கமானர்வளும், பற்று வரவு வைத்துக் கொண்டவர்களும். பிறகு... என்னைப் போல இருக்குற சாதாரண ஆளுகளும். அதற்குப் பிறகு கூட அந்த மகாபாவி இந்தப் பக்கம் திரும்பிக் கூட பார்க்கல. பிறகு... இப்பத்தான்... சார், உங்களைப் பார்க்குறதுக்காக அவன் இந்த வீட்டுப் பக்கம் வர்றான். சார், வேற எதுவும் எனக்குத் தோணல. அவன் இந்தத் திண்மையில வந்து உட்கார்றதையும், சத்தம் போட்டு சிரிக்கிறதையும் பார்க்குறப்போ எனக்கு வெறி பிடிச்ச மாதிரி இருக்கு. மனிதனா பிறந்தா ஏதாவதொரு மனிதகுணம் இருக்க வேண்டாமா?”

விஸ்வநாதன் அன்பு இரவு முழுவதும் அந்தக் கேள்வியைத் தன்னைப் பார்த்துக் கேட்டுக் கொண்டான். கேட்க வேண்டியதுதான். இந்தத் திண்ணையில் உட்கார்ந்திருக்கும்பொழுது பைலியின் மனம் சுட்டிருக்க வேண்டும். இந்தச் சுவர்களைப் பார்க்கும்போது அவனுடைய சங்கு வெடித்திருக்க வேண்டும்.

‘அப்படியென்றால்...’- விஸ்வநாதன் தனக்குத்தானே கேட்டுக் கொண்டான்: ‘என் விஷயம்,’ இந்தச் சூழ்நிலையில் நான் கோபப்பட்டு ஆர்ப்பாட்டம் பண்ணியிருக்கணும். இந்தக் காற்றின் மணம் என்னை மூச்சு விடாம பண்ணி படுக்க வைத்திருக்கணும். இந்த வீட்டின் அமைதியான நடுநிசி நேரங்கள் என்னைப் பைத்தியம் பிடிக்க வைச்சிருக்கணும்...


அப்படி எதுவும் நடக்கவில்லை. மனிதர்களின் குண விசேஷங்கள் கிட்டத்தட்ட வற்றிப்போன இரண்டு மனித உருவங்கள்.

பிறகு பைலி வரும்போதெல்லாம் தன்னையும் மீறி விஸ்வநாதன் கவனிப்பான். ஜானு பெரியம்மாவைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஏதாவதொரு வகையில் மாற்றம் உண்டாகிறதா என்று பார்த்தான். அப்படி உதுவும் நடக்கவில்லை. பிறகு அதற்காகத் தன்னைத்தானே அவன் குறைபட்டுக் கொண்டான். ‘அப்படியொரு செயலைச் செய்றதுக்கு உனக்கு என்ன உரிமை இருக்கு? உனக்குச் சில விஷயங்கள் தெரியும்ன்றதுக்காக நீ அவனைக் கண்காணிச்சுக்கிட்டு இருக்கே. அதனால உனக்கு அவன் மிருகத்தைப் போல தெரியுறான். உன் கடந்த காலத்தையும் உன் வீட்டைப் பற்றியும் அவனுக்குத் தெரியாது. அவனுக்குத் தெரிஞ்சா, அப்படித் தெரிந்து கொண்டதை வச்சு அவன் உன் அசைவுகள் ஒவ்வொண்ணையும் கூர்ந்து கவனிச்சான்னா, நீ எவ்வளவு பயங்கரமான ஒரு மிருகமா அவன் முன்னாடி நிற்க வேண்டியது இருக்கும் தெரியுமா,’

மிருகங்களுக்கிடையே உண்டாகும் மோதலில் இம்மாதிரியான தத்துவ சிந்தனைக்குச் சிறிதுகூட இடம் இருக்காது. அங்கு வெறும் கடித்தலும் பிடித்தலும் மட்டுமே. வேறு எந்த விஷயத்திற்கும் அங்கு இடமில்லை. எதிரியின் அசைவுகளைக் கவனிக்க வேண்டும். அவ்வளவுதான். அதை விட்டு போரில் ஈடுபட்டிருக்கும் ஒரு மிருகம் இன்னொரு மிருகத்தின் மனதைப் படிக்க வேண்டியது அதன் வேலையாக இருக்காது. வெற்றிக்கான பாதை அதுதான்? அது மட்டும்தான்.

இதுவரை நடந்த விஷயங்களை எண்ணிப் பார்க்கும்போது அனுகூலமே அதிகம். எதிரியுடன் நெருங்கிப் பழக முடிந்ததுதான் இருப்பதிலேயே மிகப் பெரிய விஷயம். அந்தச் சிறிய ஒதுக்கப்பட்ட குடும்பத்திற்கு வேறொரு இடத்திலிருந்து வந்த அன்பு கொண்ட, கள்ளங்கபடம் சிறிதும் இல்லாத விருந்தாளி மிகப் பெரிய ஆனந்தமாக ஆகியிருக்கிறான். அப்பச்சனுக்கு ஒரு மகன் கிடைத்திருக்கிறான். பைலிக்கு எதையும் கூறக்கூடிய, எப்படிப்பட்ட துணிச்சலான செயலுக்கும் தயாராக இருக்கக் கூடிய ஒரு நண்பன் இந்த ஊரிலேயே கிடைத்திருக்கிறான். அம்மிணிக்கு?

அந்தக் கேள்வி ஒரு பெரிய விடுகதையையே உள்ளடக்கியிருந்தது. பல நேரங்களில் அந்த விடுகதையை அவிழ்க்க அவன் முயன்றிருக்கிறான். அப்போதெல்லாம் மேலும் மேலும் சிக்கல்கள் உண்டாவதையே அவன் பார்த்திருக்கிறான். பதில் இல்லாத ஒரு விடுகதை. அப்பச்சனின் சந்தேகம் படர்ந்த கண்களுக்குக் கீழே அந்த இளம்பெண் நகைச்சுவையாகப் பேசி விளையாடினாள். அப்பச்சனும் பைலிக் குஞ்ஞும் வீட்டில் இல்லாத நேரங்களில் சிறிதும் எதிர்பாராமல் விஸ்வநாதன் அங்கு செல்லும்போது, தேவையில்லாதததைப் பேசுவதில் கூட அவள் மிகவும் ஆர்வமாக இருப்பாள். அவளை நெருங்கித் தொடலாம் என்றால் அதற்கான தைரியம் அவனுக்கு வரவில்லை. எங்கே கத்தி விடுவாளோ என்ற பயம் காரணம் இல்லை. எதிர்த்து விடுவாளோ என்ற பயத்தாலும் அல்ல. அதெல்லாம் உண்டாகத்தான் செய்யும். எனினும், ஒரு இடத்தில் விழும்வரை போராட வேண்டிய தேவை இருக்கவே செய்கிறது. அந்த இடத்திற்கு ஒரு பெண்ணைப் பிடித்து இழுத்துக் கொண்டு வருவதற்குத் தேவையான அனுபவமும் உழைப்பும் அவனிடம் இருக்கவே செய்கிறது. பிறகென்ன? விஷயத்தைத் தெரிந்து கொண்டு பைலிக்குஞ்ஞும் அப்பச்சனும் தன்னை ஒரு வழி பண்ணி விடுவார்கள் என்ற பயம் காரணமா, அதுவும் இல்லை.

தன் மனம் கெடுவதற்குக் காரணமான பெண்ணின் வயதான தாய், தந்தைமார்களை ஏற்கெனவே அவன் பார்த்திருக்கிறான். அவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதும் அவனுக்குத் தெரியும். அவர்களின் அசையும் கேடுகெட்ட நாக்குகளைப் பேச விடாமற் செய்ய எந்த ஆயுதத்தையும் எடுத்துப் பயன்படுத்துவதற்கான ஆத்மதைரியம் அவனிடம் இருக்கிறது. பிறகு ஏன் அவன் அப்படி நடந்து கொள்கிறான்?

ஒரே ஒரு பதில்தான் இருக்கிறது. இந்தச் சிறிய லாபம் கிடைக்கிறது என்தற்காக, இனி கிடைக்க இருக்கிற வேறு பல பெரிய லாபங்களை இழக்க அவன் விரும்பவில்லை.

இந்த நட்பு இதே மாதிரி நிலவிக் கொண்டிருக்கும்பொழுது, அவன் செய்ய வேண்டிய வேறு பல விஷயங்கள் இருக்கின்றன. அது நடக்கும் என்று உறுதியான பிறகு, இல்லாவிட்டால் அது நடந்து முடிந்தபிறகு, மற்ற விஷயங்களுக்கு நேரம் இருக்கும் பட்சம், அப்போது அதைப் பற்றி அவன் நினைக்கலாம்.

வீட்டில் அம்மிணி மட்டுமே இருந்தாள். அது தெரிந்துதான் பிற்பகல் நேரம் பார்த்து அவன் அங்கு சென்றான். எனினும், பெரிய அந்த வீட்டின் நடுவில் நான்கு பக்கங்களிலும் மழைத் தூறல்கள் விடாமல் விழுந்து கொண்டிருக்கும் ஒரு வீட்டிற்குள் அவளும் தானும் மட்டுமே இருக்கிறோம் என்பதை நினைக்கும்போதும் அந்த நினைப்பு ஒர புழுவைப் போல மண்ணில் நெளிந்து நடக்க ஆரம்பித்தபோதும் தன்னையுமறியாமல் அவனுக்கு ஒரு நடுக்கம் உண்டானது.

“உட்காருங்க.”

அம்மிணி விடுவது மாதிரி இல்லை.

“அப்பன் வர்றது வரை நான்தான் இங்கு இருக்கேனே. பிறகு என்ன பயம்?”

அம்மிணிக்குப் பயமில்லை. அம்மிணி என்ன கேட்டாலும் சிரிப்பாள். யாருமில்லாத வேளைகளில் அவள் தேவையற்ற விஷயங்களையே பேசுவாள்.

“சுசீலா வீட்டுக்கு வந்திருந்தாளா?”- அம்மிணி கேட்டாள். கண்களில் ஒருவித திருட்டுத்தனமான சிரிப்பு. “வந்திருப்பா. என்ன இருந்தாலும் பக்கத்து வீட்டுக்காரியாச்சே.”

நீண்ட நாட்களுக்குப் பிறகு அவன் ஒரு உண்மையைச் சொன்னான் “நான் அவளைக் கவனிக்கிறதே இல்ல...”

அம்மிணி தமாஷான ஒரு விஷயத்தைக் காதில் வாங்கினாள். அவள் மீண்டும் விழுந்து விழுந்து சிரித்தாள். “பெண்களைக் கவனிக்காத ஒரு ஆள். என்கிட்ட எதற்கு இந்த வேஷம் போடணும்? சில நேரங்கள்ல பார்க்குற பார்வையைப் பார்த்தா போதுமே. நானே உட்கார்ந்து ஒரு மாதிரி ஆயிடுறேன். அம்மா. அப்பனோ வேற யாராவதோ எங்கே பார்த்துடப் போறாங்களோன்னு நானே பயந்து பயந்து நின்னுக்கிட்டு இருக்கேன்.”

“அம்மிணி உன்னை நான் அப்படிப் பார்க்குறேனா?”

“இல்ல இல்ல... பயங்கரமான ஆள்தான். தேள்ல எதுவும் போடாம முன்னடி வந்து நிக்கவே பயமா இருக்கு. யாராவது பார்த்துடப் போறாங்களேன்ற கூச்சம்கூட கொஞ்சமும் இல்ல. அப்படிப்பட்ட ஆள்தான் சுசீலாவைப் பார்க்காம இருப்பாராம்.”

விஸ்வநாதன் தன் நிலையில் உறதியாக இருந்தான். இந்த இளம் பெண்ணிடம் எப்படி நெருங்குவது என்ற கேள்வி இப்போதும் பிடிபடாமல் அவனுக்கு முன்னால் நின்று கொண்டிருந்தது.

“அவளோட காலைப் பார்த்திருக்கீங்களா?”

அம்மிணி கேட்டாள்.

“இல்ல”

வெளியே மழை மேலும் அதிகமாகப் பெய்து கொண்டிருந்தது. உள்ளுக்குள் வெப்பத்தின் பரவல். கைலி முண்டுக்குக் கீழே தெரிந்த அம்மிணியின் கால் பகுதியைப் பார்த்துக்கொண்டே ஒன்றும் தெரியாதவனைப் போல அவன் கேட்டான் : “அம்மிணி, உன் கால்ல இருக்குற மாதிரி நிறைய அழகான சின்னச்சின்ன முடிகள் இருக்குமா என்ன?”

அம்மிணி மூக்கில் விரல் வைத்தாள்.


“பார்த்தீங்கள்ல... நீங்க எங்கெல்லாம் பார்க்கிறீங்கன்னு தெரியுதுல்ல... அப்பன் வரட்டும். நான் சொல்லுறேன்.”

விஸ்வநாதன் மெதுவான குரலில் விசித்தான். எவ்வளவோ தன்னைக் கட்டுப்படுத்தியும் பழகிப்போன பழக்கங்கள் ஒவ்வொன்றாக வெளியே வருவதை நினைத்துப் பார்த்தபோது அவனுக்கே தமாஷாக இருந்தது.

“நான் சொன்ன அதை இல்ல”- அம்மிணி வருத்தின் ஈரம் கலந்த குரலில் தன்னை நியாயப்படுத்த முயற்சித்தாள்.

“அவனோட ஒரு கால் வீங்கி இருக்கும்.”

அது ஒரு புதிய தகவலாக இருந்தாலும் விஸ்வநாதன் அப்போது அதைப்பற்றி சிந்திக்கவில்லை. ஈதல்முறையாக அம்மிணியின் முகத்தில் இலேசான படபடப்பின் சாயல் தெரிந்தது. அவள் என்னதான் முயற்சி செய்தாலும், அந்தப் படபடப்பு மேலும் அதிகரிக்கவே செய்தது.

“அம்மிணி, உன் கால்ல வீக்கம் இருக்கா?” - விஸ்வநாதன் கேட்டான்.

“அந்த அளவுக்குச் சந்தேகம் இருந்தாலும் நீங்களே பார்த்துக்கோங்க”- அம்மிணி தன் கால்களை நீட்டிக் காட்டினாள். பழைய முகம்... பிரகாசமான, மனதில் பாடல் வரவழைக்கும் முகம்... அதை மேலும் பிரகாசமாகக்க முயற்சித்தாள்.

“முழங்காலுக்கு கீழே இல்ல”- விஸ்வநாதன் மீதியைச் சொல்லாமல் நிறுத்தினான்.

“முழங்காலுக்கு மேலயா?” - அம்மிணி கேட்டாள்.

குதலில் நடுக்கம்... கன்னத்தில் சிவப்பின் ஆக்கிரமிப்பு.... படபடப்பையும் வெட்கத்தையும் மறைத்து வைக்க அவள் முயற்சிக்க, அவை எதிர்பார்ப்பையும் தாண்டி அதிகமாக வெளிப்பட்டன.

“சரியாகச் சொல்லணும்னா பரிசோதிக்கப் பார்த்தாத்தான் தெரியும்” என்னதான் கட்டுப்படுத்த முயற்சித்தாலும் நாக்கு சூழ்நிலைக்கேற்றபடிதான் செயல்படுகிறது.

“அந்த அளவுக்குச் சந்தேகம் இருந்தா....” - அம்மிணி தரையில் நடந்து கொண்டிருந்த ஒரு ஈ பக்கம் தன் கவனத்தைத் திருப்பினாள்.

“இருந்தா...”

அதற்குப் பதில் இல்லை. விஸ்வநாதன் அந்த ஒரு நிமிடத்தில் உண்மையான விஸ்வநாதனாக மாறினான். அவன் தனக்குள் கூறிக் கொண்டான்: ‘விஸ்வநாதா. இப்போ இது வேண்டாம். நீ எதற்கு இந்தப் பெண்ணைக் கட்டிப்பிடிச்சு முத்தமிடுறே, அவளோட இனிமையான சிரிப்பைக் கேட்டு எதற்காக நீ பைத்தியம் பிடிச்சவனைப் போல ஆகுற, இந்த வேகம் உன் வழியை வேறு பக்கம் திருப்பி விடும். உன் வழி இது இல்ல. அவள் உன்னைக் கட்டிப் பிடிக்கட்டும். கால்களில் பின்னட்டும். கைகளால் கழுத்தில் சுற்றட்டும். அவளைத் தூக்கிக் கொண்டு எதற்காக நீ அறைக்குள் வர்றே,’

அவிழ்ந்த பாவாடை கட்டப்பட்டிருந்த இடத்திற்குக் கீழே. அம்மிணியின் நிர்வாணமான வயிற்றுக்கு மேலே ஒரு வியர்வைத்துளி வழிந்து கொண்டிருந்தது.

“இருக்கு?”

“அம்மிணி, என் மேல கோபமா?”

அம்மிணி எழுந்து நின்றாள். முண்டைத் தேடி எடுத்து, இடையை மூடினாள். அவன் மீது கோபப்பட்டாள்.

அவளின் குரலில் மறைந்திருந்த உண்மைத்தன்மை விஸ்வநாதனை அதிர்ச்சியடையச் செய்தது. எல்லா லட்சியங்களும் தாறுமாறாக ஆனதைப் போல, எல்லா உத்வேகங்களும் ஒன்றுமில்லாமற் போனதைப் போல இருந்தது.

“நான் மட்டுமா தப்பு செய்தேன்?” -கோழையைப் போல, குற்றவாளியைப் போல குரலைத் தாழ்த்திக் கொண்டு அவன் கேட்டான். “ஆமா...” - அம்மிணி சொன்னாள். உறுதியான குரல். வாசற்கதவைப் பிடித்து நின்றவாறு அவ்வப்போது வெளியே பார்த்துக் கொண்டே நடுங்கும் குரலில் அவன் கேட்டான் : “எப்படி,”

அம்மிணி உதடுகளைக் கடித்தாள்.

அவளுடைய சிவந்த, கலங்கிய கண்களில் நீர் வளிச்சிட்டது. தரையைப் பார்த்துக் கொண்டிருந்த பார்வையில் குற்றம் சுமத்துவதை அவனால் வாசிக்க முடிந்தது. ஒரு விஷயமும் இல்லாமல், அம்மிணி அவனை அங்கிருந்து போகும்படி சொன்னாள்.

10

லையடித்து ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும் கடலுக்கும் அடங்கி ஒதுங்கிக் கிடக்கும் ஏரிக்கும் நடுவில் ஒரு சிறு கதை இருந்தது.

கடலுக்கு மேலே மழை பெய்தது. மழைத்துளிகள் அலைகளுக்கு நடுவில் விழுந்து மறைந்து போயின. புதிய துளிகள் வெற்றி முழக்கம் இட்டவாறு உயரத்திலிருந்து குதித்து வந்து நீர்ப்பரப்பில் விழுந்து தலை மோதி இறந்தன. கடல் ஒரு வெற்றி வீரனைப் போல எதைப் பற்றியும் கவலைப்படாமல் சிரித்துக் கொண்டிருந்தது.

ஏரிக்கு மேலே மழை பெய்தது. முதலில் வந்த மழைத்துளிகள் அங்கேயும் தோற்று அழிந்தன. மழைத்துளிகளின் பிணங்களால் ஏரியின் அடிப்பகுதி நிறைந்தது. பிணங்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வந்தது. பிணங்களை உள்ளுக்குள் மறைத்துக்கொண்டு ஏறி உயர்ந்து கொண்டே வந்தது. ஆறுகளும் வாய்க்கால்களும் ஏரியைத் தோற்கடிக்கும் போரில் பங்காளிகளாக மாறின. அவை தங்களின் பலமான கைகளால் ஏறியின் நூறு முகங்களையும் அடித்துத் தள்ளின.

ஏரி சோர்வுற்றது. எதிர்த்து நிற்க முடியாமல் அது மல்லாந்து விழுந்தது. தோல்வியடைந்த ஏரிக்கு மேலே மழை சீறிச் சீறி பெய்து கொண்டிருந்தது. முடிவே இல்லாத நீர் பெருக்கம். ஏரி இறந்தது. ஏரிக்கு மேலே நீர் பெருகியது. கரைகளுக்கு மூச்சுவிட முடியவில்லை. வாய்க்கால்கள் தங்களின் பயணத்தை முடித்துக் கொண்டன. ஆறுகள் தங்கள் பாய்ச்சலை நிறுத்திக் கொண்டன. நின்றுவிட்ட வாய்க்கால் நீர் மீதும் இறந்துவிட்ட ஆற்று நீர் மீதும் மழை தொடர்ந்து சிறிதும் இரக்கமே இல்லாமல் பெய்து கொண்டிருந்தது. அற்றின் ஜடம் நீருக்குக் கீழே கிடந்தது. வாய்க்கால் மூழ்கி மறைந்து நீரோட்டம் நின்றது. ஏரியின் இனிமேல் இடமில்லை. கரைகளுக்கு மூச்சை அடைத்தது. நாட்கள் செல்லச் செல்ல கரைகளின் தற்கொலைகள் எண்ணிக்கை கூடிக் கொண்டேயிருந்தது.

வயல்கள் மூழ்கின. வரப்புகள் மூழ்கின. ஆதரவற்றுப் போன வாய்க்கால் நீர் கண்டபடி ஓடியது. வசிப்பிடங்களின் ஓரங்களில் அது ஓடிக்கொண்டிருந்தது.

ஏரிக்கும் கடலுக்கும் நடுவிலிருந்த கரையின் அளவு குறைந்தது. அதற்கப்பால் இருந்த வெற்றிவீரனான உடல் ஆர்ப்பரித்தும் கொண்டிருந்தது. “என்கிட்ட வா... என்னுடன் வந்து அடைக்கலம் ஆகிவிடு...” உதவிக்கு வருவதாகக் கடல் கூறிய வாக்குறுதி இரவு பகல் எந்நேரமும் கேட்டுக் கொண்டேயிருந்தது.

ஏரி அந்த அழைப்பைக் கேட்டது. ஆதரவற்ற, கைவிடப்பட்ட முகத்துடன் அது எதையும் காதில் வாங்காதது மாதிரி நடித்துக் கொண்டு படுத்திருந்தது. கை கால்கள் செயலற்றுப் போன போராளி.

ஏரிக்கரையிலிருந்த மனிதர்கள் அந்த அழைப்பைக் கேட்டார்கள். அவர்களின் வயல்கள் நீருக்கடியில் கிடந்தன. ஆறுகளும் வரப்புகளும் மழையின் பயமுறுத்தலுக்குக் கீழ்ப்படிந்தன.

ஏரிக்கும் கடலுக்கும் நடுவிலிருந்து கரையை அகற்ற வேண்டிய சூழ்நிலை வரும் நாட்கள்... கரை உடையுமா, மனதிர்கள் பார்த்து கொண்டிருந்தார்கள். ஒரு வேளை மழையே அதை உடைக்கலாம்.

இரண்டு நீர் நிலைகளுக்கு நடுவிலிருந்து அந்தச் சிறு கதையை மழை நக்கி எடுத்துக் கொண்டு போனால் அது ஒரு நல்ல விஷயமாக இருக்கும். அதுவே உடையவில்லையென்றால், அதை மனிதர்கள்தான் அகற்ற வேண்டும். அதற்கு மனிதர்கள் தயார்தான். ஆபத்து வரவழைக்கக் கூடிய விஷயம் அது என்றாலும், அதைக் கட்டாயம் செய்தே ஆக வேண்டும். இல்லாவிட்டால் பயிர்கள் வழிந்துவிடும். விளை நிலங்கள் பாழாகிவிடும். வாழ்க்கை பாதிக்கப்படும்.


இன்று அந்தக் கதையை அகற்றுகிறார்கள்.

“பார்க்க வர்றியா?”- பைலி கேட்டான்.

“இல்ல...”- விஸ்வநாதன் சொன்னான். அவன் சிறுவனாக இருந்தபோது எவ்வளவோ தடவைகள் கரை உடைவதைப் பார்த்திருக்கிறான். தன் தந்தையுடன் போய் மூச்சை அடக்கிக் கொண்டு நின்று பார்த்திருக்கிறான். மண்ணுக்கு மத்தியில் ஒவ்வொரு முறையும் தும்பாவால் வெட்டி கீழே இறக்குவதை ஒருவித பதைபதைப்புடன் அவன் பார்த்துக் கொண்டு நின்றிருப்பான். இப்போது கதை உடையுமா? ஏரியிலிருந்து அலறிக் கொண்டு ஓடப் போகும் நீர்ப்பாய்ச்சல் அங்கு நின்று கொண்டிருந்த மனிதர்களையும் கடலில் கொண்டு போய் சேர்த்து விடுமோ?- இந்த எண்ணங்களுடன் சிறுவன் விஸ்வநாதன் நின்றிருப்பான்.

கடைசியில் அந்த பயம் குறைந்துகொண்டே வந்தது. மிகவும் கவனமாகத் திட்டமிட்டு அரங்கேறும் ஒரு நாடகக் காட்சியில் மூச்சை அடக்கிக் கொண்டு உட்கார்ந்திருக்கும் நிமிடங்களைப் போலவே, அதைப் பார்க்கும்போது அவனுக்கு இருக்கும். எனினும், ஊர்க்காரர்களுக்கு இப்போதும் அது ஒரு புதிய விஷயமாகவே தெரிகிறது. பைலிக்கு பைத்தியம்தான் பிடித்திருக்க வேண்டும். ஒரு திருவிழாவின் கொண்டாட்டத்தை தனக்குள் ஏந்திக் கொண்டிருக்கும் ஆறு வயது சிறுவனின் உற்சாகம் அவனிடம் இருந்தது. இதுவரை பார்க்கவில்லையென்றால் இப்போது பார்க்க வேண்டும். விஸ்வநாதன் சொன்னான்: “எனக்கு உடம்பு சரியில்லைன்ற மாதிரி இருக்கு கொஞ்சம் ஜலதோஷம்...”

ஜலதோஷம்! பைலி ஒரு பெரிய நகைச்சுவைக்குத் தலைகுனிந்தான். ‘ஜலதோஷம் இருக்கும்போல- பைலி தனக்குள் கூறிக் கொண்டான்.

போக வேண்டுமென்றால் பைலியுடன் சேர்ந்து விஸ்வநாதன் போகலாம். ஆனால், சமீபகாலமாக அவனுக்கு இந்த விஷயத்தில் பயம் வந்துவிடுகிறது. பைலியின் நடத்தை எப்போது தன்னுடைய சமநிலையைத் தவறச் செய்யும் என்பது அவனுக்கே தெரியாது. அவனுடைய அசைவுகளைப் பார்த்து கொண்டிருக்கும்போது, எதை வேண்டுமென்றாலும் செய்வதற்கும் கூறுவதற்கும் உள்ள சுதந்திரத்தை அவன் சர்வசாதாரணமாகப் பயன்படுத்துவதைப் பார்க்கும்போது, கட்டுப்பாட்டின் கயிறுகள் ஒன்றுக்கொன்று உரசி பலமிழப்ப தென்னவோ உண்மை. ஒரு குறிப்பிட்ட நேரத்தில், ஒரு குறிப்பிட்ட உள்ளுணர்வின் ஆவேசத்தில் தானே ஏதாவது செய்துவிடுவோமோ என்ற படம் சமீபகாலமாக அவனுக்கு அதிகமாகவே இருக்கிறது. குறிப்பாக மது அருந்துகிற நேரங்களில் அந்தக் கட்டுப்பாடு தன்னை மிகவும் தொல்லைக்குள்ளாக்கும் நெருப்பாக இருப்பதைப்போல் அவன் உணர்வான்.

“ஆம்பளைன்னு சொல்லிக்கிட்டு இருந்தா போதாது”- இறங்கி நடக்கும்போது வாசலில் நின்றவாறு பைலி உரத்த குரலில் அழைத்து சொன்னான் : “நல்ல ஒரு நாளா பார்த்து கோழியைப் போல வீட்டுக்குள்ளே உட்கார்ந்துக்கோ.”

அவன் போன பிறகும் விஸ்வநாதன் அதே இடத்தில்தான் உட்கார்ந்திருந்தான். பைலிக்குள் துடித்துக் கொண்டிருந்த இளமைத் துடிப்பு விஸ்வநாதனைக் கோழையாக்கியது. இனியும் அவன் தைரியத்தை வரவழைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. மேலும் அவன் வயதில் குறைந்தவனாக ஆக வேண்டியிருக்கிறது.

மங்கலான வெயில் அழகில்லாத ஒரு பெரிய குன்றைப் போல வாசலில் பரவியிருந்தது. தூரத்தில் கிராமத்துப் பாதை வழியாக நோட்டீஸ் வண்டி போய்க் கொண்டிருக்க வேண்டும். புதிய திரைப்படம். செண்டை அடிப்பதால் உண்டாக அலைகள் வாசல்வரை கேட்டுக் கொண்டிருந்தது.

‘இந்த ஊர் என்னை உள்ளே பிடிச்சு இழுத்துப் போகுதோ?’ - விஸ்வநாதன் தனக்குத்தானே கேட்டுக் கொண்டான் : ‘இங்கேயிருந்து இனிமேல் போகவே முடியாதுன்ற மாதிரி சூழ்நிலை வருமோ? அறியாமல்... என்னை அறியாமலே... இந்த ஊரைப்பற்றி நினைக்க ஆரம்பித்திருக்கிறேன். சமீபகாலமா இந்தப் பழக்கம் ரொம்பவும் அதிகமாயிடுச்சு. நாளை இந்த மண்ணுல என்ன நடக்கும்ன்ற ஆர்வத்தோடு மட்டுமே இன்னைக்கு ராத்திரி என்னால உறங்க  முடியுது. ஆர்வம் நிரந்தரமான ஒரு பிணத்தைப் போல அதிகமாகிக்கிட்டேயிருக்கு. ஒருவேளை இது தன்னோட பழைய உறவுக்காரன்றதை மண்ணு புரிந்து கொண்டிருக்கலாம். நீண்ட காலத்திற்குப் பிறகு வந்து சேர்ந்த விருந்தாளியை வரவேற்க  அது கடமைப்பட்டிருக்கலாம். எதுவுமே தெரியாதுன்னு நினைச்சிக்கிட்டு இருந்தாலும், இடையில் அவ்வப்போது ஒரு பயம் உள்ளே நுழைஞ்சி தொந்தரவு செய்யத்தான் செய்யுது. இந்த இடத்துல நிரந்தரமா தங்கியிருக்குறதுக்கா நான் வந்திருக்கேன்? மற்ற எல்லா இடங்களும் சத்திரங்கள்னும் இந்த ஊர் மட்டும் வீடுன்னும் தோண ஆரம்பிச்சிடுச்சுன்னா அதற்குப் பிறகு தப்பிக்கிறதுக்கு வேற வழியே இல்ல. அதற்கு முன்னாடி...’

நாணு காப்பியும் பலகாரமுமாய் வந்து, அலுமினியப் பாத்திரத்தைத் திண்ணையில் வைத்தான். தலையில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து தரையில் விரித்து உட்கார்ந்து கொண்டு சொன்னான் : “ஒரு செய்தி கேள்விப்பட்டேன்.”

அதில் ஆர்வம் இல்லாததால் பாத்திரத்தின் மூடியை அவன் திறந்தான். நடுவில் ஒடிந்த மூன்று நான்கு தடிமனான தோசைகள், சிதறிக்கிடக்கும் இரத்தமும் சலமும் போல சட்னி...

“ஊர் முழுக்க தெரிஞ்சிடுச்சு...”- நாணு சொன்னான்: “எல்லாரும் என்கிட்டதான் கேக்குறாங்க. நான் என்ன பதில் சொல்லணும்?”

“என்ன கேள்விப்பட்டோ?” -வெறுப்பு தோன்றியபிறகு அவன் கேட்டான்.

“கேக்குறேன்னு வருத்தப்படக் கூடாது.”

“இல்ல...”

“எல்லாரும் சொல்றாங்க - பைலி ஆசான்கூட சேர்ந்து திரியிறதுக்கும் அந்த ஆளுக்கு கள்ளு வாங்கிக் கொடுக்குறக்கும், எப்போ பார்த்தாலும் அங்கே போயி இருக்குறதுக்கும் காரணம் அந்த ஆளோட மகளை...”

விஸ்வநாதன் அடுத்த நிமிடம் தலையை உயர்த்திப் பார்த்தான். ஆபத்தான ஒரு பேச்சு. சிறிய ஒரு லாபத்தின் கூர்மையான நுனியில் சிக்கி பெரிய இலட்சியங்களை இழக்க வேண்டியது வருமோ? நாணு ஒரு அறிவுரை கூறும் தீவிரத்துடன் சொன்னான் : “நடந்ததெல்லாம் சரி. வந்தது மாதிரியே தனியா போயிடணும். எப்படி வேணும்னாலும் நடந்துக்கங்க. இந்த ஊர்ல இளைஞர்கள் நினைச்சா நடக்காத விஷயமா? ஆனா அதைத்தாண்டிப் போகக் கூடாது.”

விஸ்வநாதன் வாயே திறக்கவில்லை. ‘வேற யாருக்குத் தெரிஞ்சாலும் பரவாயில்ல. பைலிக்குத் தெரியாம இருந்தா போதும். அப்பச்சனுக்குத் தெரிஞ்சா? அந்த ஆள்கிட்ட எதையாவது சொல்லி சரி பண்ணிடலாம்’ - விஸ்வநாதன் தனக்குள் கூறிக் கொண்டான்.

கைகழுவிவிட்டு வரும்போது நாணு ஒரு புதிய செய்தியைச் சொன்னான். “சங்கரி அம்மா வீட்டுக்கு வேற புதுசா ஒரு பொண்ணு வந்திருக்காப்ல. நான் நேத்து சொன்னேன்ல. இன்னைக்கு நான் அதை நேராவே போய் பார்த்தேன். அடடா... என்ன அழகுன்றீங்க...”

விஸ்வநாதன் வாசலில் அங்குமிங்குமாக நடந்தான். கரையை உடைப்பதற்கான நேரம் நெருங்கிவிட்டது. ஒரே வெட்டுதான். அதற்கடுத்து நீர் பெருக்கெடுத்து ஓட வேண்டும். துளித் துளியாக நீர் ஓடி எந்தவொரு பிரயோஜனம் இல்லை.

“இன்னைக்கு அங்கே வர்றதா சொல்லிடட்டுமா?” நாணு கேட்டான்.

“என்ன?”

“இல்ல... சார், நீங்க வர்றீங்கன்னு சொன்னா அவங்க ஏதாவது சமையல் பண்ணி வைப்பாங்க.”


“ஒண்ணும் வேண்டாம்.”

“அங்கே போகலியா?”

“இல்ல...”

“அப்படின்னா ஒரு காரியம் செய்வோம். இருட்டின பிறகு, நான் அந்தப் பொண்ணை மெல்ல இங்கு கொண்டு வந்திடுறேன்.”

வானம் கொஞ்சம் கொஞ்சமாக இருட்டிக் கொண்டிருந்தது. ஒரு சவால் உள்ளுக்குள்ளிருந்து முட்டிக் கொண்டிருந்தது. அதை அதன் போக்கில் விட்டான். படபடப்பின் குரல். வெற்றி வீரனின் குரல். முதல் தடவையாகக் கேட்கப்போகும் ஏசல் வார்த்தைகள்...

“அந்தப் பெண்ணைக் கொண்டு வர்றப்போ நீங்க இங்கே இருக்கணும்”- நாணு சொன்னான் : “கண்ட கண்ட கள்ளுக் கடையிலும் சாராயக் கடையிலும் உங்களைத் தேடும்படி என்னை விட்றாதீங்க.” அதற்கு விஸ்வநாதன் பதிலேதும் கூறாமல் அமைதியாக இருந்தான். ஒரு பதிரி தோல்வியைத் தழுவாமல் கண்ணுக்கு முன்னால் நின்று கொண்டிருக்கிறான். அந்தச் சமயத்தில் வந்து என்னவோ கூறிக் கொண்டிருக்கிறான் நாணு என்ற வியாபாரி.

“சரி...”

-விஸ்வநாதன் விரக்தியுடன் சொன்னான்.

அம்மிணி புறப்படும்போது பொழுது புலர்ந்துவிட்டது. கிழக்குத் திசையில் அப்போதுதான் வெளிச்சத்தின் அறிகுறி தெரிந்தது. அது படிப்படியாக அதிகரித்தது. புறப்படுகிற நேரத்தில் அவள் மிகவும் மவுனமாக இருந்தாள். முழுமையான சந்தோஷத்தின் துளிகளைப் பலமாக தாங்கிக் கொண்டிருந்த கால்களை எடுத்துவைத்து, அதிகாலைப் பொழுதின் நதிக்காற்றில் பட்டவாறு நடுங்கிக் கொண்டே அவள் நடந்து மறைவதை விஸ்வநாதன் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டே படுத்திருந்தான். பலமான ஒரு எதிரியைக் கீழே விழ வைத்துவிட்ட சந்தோஷம் அவனுடைய மனதில் முழுமையாக நிறைந்திருந்தது. சோர்வு இருந்தது. அடித்துப்போட்ட உணர்வு இருந்தது. எனினும், அதையெல்லாம் அவன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இன்றுவரை எந்த இடத்திலும் தோல்வியைச் சந்தித்திராத தான் இப்போதும் தன்னுடைய இடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறோம் என்ற சந்தோஷம் அவனுக்கு இருந்தது.

எவ்வளவு பெரிய ஆபத்தையும் அவன் எதிர்பார்த்திருந்தான். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. இடையில் ஒரு சிறிய பிரச்சினை உண்டானது. வாத்துக்களுக்கு உணவு வைத்திருக்கும் அறையின் மூலையில், அம்மிணி வருவதை எதிர்பார்த்து அமைதியாக அவன் உட்கார்ந்திருந்தான். நீண்ட நேரம் நீடித்து ஒரு இருமலுக்குக் கூட சுதந்திரமில்லாத ஒரு வெறுப்பைத் தந்த காத்திருப்பு அது. வீடு உறங்கிக் கொண்டிருந்தது. நல்ல இருட்டு. எந்த நேரத்திலும் இருட்டில் பதுங்கிக் கொண்டு அவள் வந்துவிடுவாள். அப்படித்தான் மாலையில் பார்த்தபோது அவள் சொன்னாள். அப்பச்சன் உறங்க வேண்டும். பைலி உறங்குவது ஒரு பெரிய பிரச்சினையில்லை. வந்து விழுந்தவுடன் அவன் உறங்கிவிடுவான். அப்பச்சன் அப்படி இல்லை. பிரார்த்தனை முடிவதற்கே நீண்ட நேரமாகும். அப்படியே படுத்தாலும், உறக்கம் சீக்கிரம் வராது. உறங்கினாலும், ஒரு சிறிய ஓசை கேட்டால்கூட எழுந்து விடுவான்.

அப்படிக் காத்திருக்கும்போது, ஒற்றையடிப்பாதை வழியாக டார்ச் விளக்கின் மங்கலான வெளிச்சத்தில் நாணு அங்கே வந்தான். அவனுடைய குரல் வீட்டிற்குள் விளக்கை எரிய வைத்தது. அவன் விஸ்வநாதனைத் தேடி வந்திருந்தான். “இனி விசாரிக்கிறதுக்கு ஒரு இடம் கூட இல்லை. ஒருவேளை பைலி ஆசான்கூட இங்கே வந்திருப்பார்னு சந்தேகம் உண்டானதுனால...” நாணு சொல்லி முடிப்பதற்குள், “இங்கே யாரும் வரல” என்று உறக்கம் கண்களில் தங்கியிருக்க, அப்பச்சன் சொன்னான். தொடர்ந்து அப்பச்சன் சொன்னான் : “சாயங்காலம் ஆள் வந்திருந்தாப்ல. அப்பவே போயாச்சு.”

நாணு வந்த வழியே திரும்பிச் சென்றான். அப்பச்சன் மேலும் சிறிது நேரம் வாசலிலேயே நின்றிருந்தான். அவனுக்கு நாணு வந்தது சிறிதும் பிடிக்கவில்லை. தூரத்தில் இருந்தாலும், விளக்கின் மங்கலான ஒளியில் அந்த முகத்தில் படிந்திருந்த சந்தேகங்களும் சிந்தனைகளும் விஸ்வநாதனை அச்சமுறச் செய்தது. ஒருமுறை அந்த இடத்திலிருந்து வெளியே வந்து வாத்துக்கள் இருந்த இடத்துக்கு அருகில் அவன் அந்த இடத்தைச் சுற்றி நடந்து ஆராய்ந்தபிறகுதான் அவன் திரும்பி வந்தான். அவ்வளவு நேரமும் அவன் மூச்சை அடக்கிப் பிடித்திருந்தான். ஒரு சுவருக்கு அப்பால் பாதங்களின் ஓசைகள் கேட்டன. கடைசியில் அவன் வீட்டிற்குத் திரும்பிச் சென்றுவிட்டான். வாசல் கதவு அடைக்கப்படும் சத்தம் கேட்டது. வீடு மீண்டும் இருட்டினுள் மூழ்கிவிட்டபோது ஒரு நிழலைப் போல அம்மிணி வெளியே வந்து கொண்டிருந்தாள்.

இப்போது அதை நினைத்துப் பார்க்கும்போது உண்மையிலேயே அவனுக்கு அது அதிர்ச்சியாகவே இருக்கிறது. அந்த நேரத்தில் அப்பச்சன் பார்த்திருந்தால்?

ஒற்றையடிப்பாதை வழியாக இரண்டு பேர் கட்டியிருந்த ஆடைகளை அவிழ்த்து தோள்வழியாக மூடிக் கொண்டு நடந்து போனார்கள். அவர்களின் மெதுவான பேச்சு நாளின் சிறகை அணைப்பதைப்போல இருந்தது. உள்ளே அம்மிணி மீண்டும் உறங்க ஆரம்பித்திருப்பாள்.

அவன் எழுந்தான். வந்த விஷயம் இன்னும் முடியவில்லை. முடிந்தது அதன் ஒரு பகுதி மட்டுமே.

அகலமான மூன்று கூடைகளில் வாத்துகளுக்குத் தேவையான உணவு வைக்கப்பட்டிருந்தது. பனைமரத்தின் சிறு சிறு துண்டுகள். காலையில் வெளியே புறப்படுவதற்கு முன்பு அவை உண்ணும் உணவு அது. இரவு வேளையில் மூன்று கூடைகள் நிறைய அறுத்து அந்த உணவுப் பொருளை வைத்த பிறகுதான் அப்பச்சன் படுத்துச் செல்வான்.

விஸ்வநாதன் தரையின் ஒரு மூலையிலிருந்து புட்டியை எடுத்தான். இது போதாது. ரொம்பவும் குறைவா இருக்கு - தனக்குள் அவன் கூறிக்கொண்டான். ஒரு கூடைக்கே அதை மிகவும் சிரமப்பட்டு கலக்க வேண்டி வந்தது. அதைக் குலுக்கி மேலே உள்ளதைக் கீழே கொண்டு வந்தும், எல்லா இடத்திலும் அது சரியாகக் கலக்கவில்லை.

புட்டி காலியானது. கடைசி துளியும் உணவில் போய்க் கலப்பதைப் பார்த்தவாறு நின்றிருந்தபோது, உள்ளுக்குள் ஒரு குளிர்ந்த மயிர்க்கூச்செரிதலை அவன் உணர்ந்தான்.

செயலற்ற நிலையில் பரிதாபமான தோற்றத்துடன் இருக்கும் எதிரியின் முகம் கண்களுக்கு முன்னால் முதலில் தெரிந்தது. ஒரு கிளி அந்த இடத்திற்கு மேலே வந்து உட்கார்ந்து உரத்த குரலில் கத்தியது. வாத்துகள் விழித்து ஓசை உண்டாக்கின.

‘இனிமேல் இங்கே இருக்குற ஆபத்தான விஷயம். பொழுது புலர்ற நேரத்துல எழுந்திருக்குற ஆளாச்சே அப்பச்சன்’- விஸ்வநாதன் தனக்குள் கூறிக்கொண்டான்.

வயல்களையும் ஒற்றையடிப் பாதைகளையும் கடந்து வேகமாக நடந்தபோது உள்ளே பலவிதக் காட்சிகளும் தோன்றி மறைந்தன. வெளிச்சம் வருவதற்கு முன்பே, ஆர்வத்துடன் உணவைச் சாப்பிட்டு விட்டு வெளியே செல்லும் வாத்துகள்... ஓடிக் கொண்டிருக்கும் நீரில் மிதக்கும் தளர்ந்து போன பாதங்கள்... நீரில் நீந்த முடியாமல் ஒரு வாத்து வாடி விழுகிறது. நீரோட்டம் அதையும் இழுத்துக் கொண்டு கீழ் நோக்கி ஓடுகிறது.


பதைபதைத்துப்போன அப்பச்சனின் முகத்திற்குக் கீழே ஒன்றல்ல பத்தல்ல நூற்றுக்கணக்கான வாத்துகள் நீரோட்டத்தில் கலந்து சாகின்றன. பழிவாங்கிய உணர்வுடன் கலங்கி ஓடும் நீர் அந்த வாத்துக்களுடன் கீழ்நோக்கி ஓடி மறைகிறது.

என்ன செய்வதென்று தெரியாமல் அழுது கொண்டிருக்கும் எதிரி...

ஆற்றை நெருங்கியபோது யாரோ சொல்வது காதில் விழுந்தது: “கரையை வெட்டியவுடன், நீர் ஓட ஆரம்பிச்சிடுச்சு.”

“கடலில் போய் சேரட்டும்”- அவன் கையிலிருந்த புட்டியை ஆற்றில் வீசி எறிந்தான்.

11

ண் விழிக்கும்போது நேரமாகிவிட்டிருந்தது. உடம்பு பயங்கரமாக வலித்தது. தலைக்குள் முந்தின இரவைப் பற்றி நினைவுகள் நிறைந்திருந்தன. அவை ஒன்றன் பின் ஒன்றாக ஞாபகத்தில் வந்து கொண்டிருந்தன. கட்டிப்பிடிக்கிற, கட்டிப்பிடிக்கும்போது மூச்சுவிட முடியாமல் தவிக்கிற, தாகமெடுத்த இளம்பெண். துடிக்கும், துடித்து இறக்கும் வாத்துகள்...

நாணு கேட்டான் : “சாப்பிடுறீங்களா? எழுப்பினா கோபப்படுவீங்கன்னு நினைச்சுத்தான் நான் எழுப்பல...”

“பசிக்கல.”

“தேநீர் கொண்டு வந்து வச்சிருக்கேன். எடுத்துட்டு வரட்டுமா?”

“ம்...”

ஆற ஆரம்பித்திருந்த தேநீரைக் குடிக்கும்போது நாணு சந்தேகம் கலந்த குரலில் கேட்டான் : “நேற்று ராத்திரி எங்கே போயிருந்தீங்க? நான் இந்த ஊர் முழுவதும் தேடியாச்சு.”

அதற்கு விஸ்வநாதன் பதில் எதுவும் கூறவில்லை. உண்மையைச் சொன்னால் அவன் நம்புவது மாதிரி தெரியவில்லை.

“சரியாக ஆளுதான்”- நாணு வருத்தத்துடன் சொன்னான்: “நாங்க பொழுது விடியிறது வரை இங்கே காத்திருந்தோம். கடைசியில பொழுது புலர்றதுக்கு முன்னாடிதான் அந்தப் பெண்ணைக் கொண்டு போய்விட்டேன். அங்கே போனா? அந்தப் பொம்பளை வாய்க்கு வந்தபடி திட்டோ திட்டுன்னு திட்ட ஆரம்பிச்சுடுச்சு...”

“எதற்கு?”

“அவங்களுக்கு ராத்திரி கிடைக்க வேண்டியதுகூட கிடைக்காமப் போச்சே. அதனாலதான்...”

“அவங்களுக்கு ஏதாவது வேணும்னா? கொடுத்துடுவோம்.”

“அதெல்லாம் வேண்டாம்.”

நாணு எப்போதும் தன் பக்கம்தான் இப்பான் என்ற விஷயம் விஸ்வநாதனுக்கு நன்கு தெரியும். அவனால் எழுந்திருக்க முடியவில்லை. குடித்து சுயநினைவில்லாமல் விழுந்த இரவு நேரங்களில்கூட இந்த அளவுக்கு சோர்வு அவனிடம் ஏற்பட்டதில்லை. ஒரு பெண்ணின் சதைகளில் இந்த அளவுக்கு வெறியும் பலமும் மறைந்திருக்கின்றன என்பதையே நேற்றுத்தான் அவன் தெரிந்து கொண்டான். “நான் வீடுவரை கொஞ்சம் போயிட்டு வந்திடட்டுமா?”- நாணு கேட்டான் : “பொழுது விடிஞ்ச பிறகு அங்கே போகவே இல்ல. ஒரு குழந்தைக்கு உடம்புக்கு முடியல. கெட்டது ஏதாவது பிடிச்சிருக்குமோன்னு தோணுது. ஒரு மைலுக்கு இந்தப் பக்கம் நின்னாக்கூட குழந்தை இருமுறது கேக்குது”- அவன் முணுமுணுத்தான்.

விஸ்வநாதன் நாணு சொன்னதை வெறுமனே கேட்டவாறு படுத்திருந்தான். தந்தையின் குரல், தந்தையின் கவலை. நாணுவின் தேவை வெளிப்படையானது. விஸ்வநாதன் எழுந்து சூட்கேஸைத் திறந்து பத்து ரூபாய் எடுத்து நீட்டினான் : “இந்த ரூபாயை வச்சு மருந்து வாங்கிக் கொடு. மீதியை கையில வச்சுக்கிட்டு கண்டபடி செலவழிச்சிடாதே. வீட்டில கொடுத்திடு.”

பெண்களைக் கூட்டிக் கொடுக்கும் மனிதனின் முகத்தில் ஒரு நிலவு பிரகாசித்தது. முந்தைய இரவில் தனக்கு உண்டான இழப்பைச் சொல்லி ஒரு பகல் முழுவதும் கவலைப்பட்டுக் கொண்டிருந்த மனதில் சிறிதும் எதிர்பார்க்காமல் உண்டான உற்சாகம்...

மீண்டும் வந்து படுத்தான். உறக்கம் வரவில்லை. வேறு எங்கும் போகவும் தோன்றவில்லை. வெறுமனே கண்களை மூடியவாறு படுத்துக்கிடந்தாலே போதும் என்றிருந்தது அவனுக்கு. இரவில் நடைபெற்ற சம்பவங்கள் கண்ணுக்குள் அடுத்தடுத்து ஓடிக் கொண்டிருந்தன. வந்த நிமிடத்திலிருந்து போன நிமிடம் வரை ஒருவித இறுக்கத்துடன் ஒருமுறைகூட அந்த நிலையிலிருந்து விலக சம்மதிக்காத பம்பரத்தைப் போல இருந்த அம்மிணி...

ஒரு கனவில் தான் மூழ்கிவிட்டோமோ என்ற சந்தேகம் அவனுக்கு உண்டானது. திடுக்கிட்டு எழுந்தபோது வாசலில் பைலியின் உரத்த குரல் கேட்டது. கெட்ட வார்த்தைகளின் திட்டிக் கொண்டிருந்தான். யாரை என்று தெரியவில்லை. ஊர்க்காரர்கள் எல்லாரையும் கண்டபடி பேசிக் கொண்டிருந்தான். சவால் விட்டான் : “எல்லாரையும் கொன்னுடுவேன். குத்திக் கீழே தள்ளிடுவேன்” என்றான்.

விஸ்வநாதன் புன்சிரிப்புடன் எழுந்தான். பைலி திண்ணைக்கு அருகில் வந்து நின்றான். கால் நிலையாக நிற்கவில்லை. வார்த்தைகள் அர்த்தமே இல்லாமல் அவன் வாயிலிருந்து சரமாரியாக வந்த கொண்டிருந்தன.

“உட்கார வேண்டியதுதானே.”

“நான் உட்கார்றதுக்காக வரலைடா”- பைலி கத்தினான்.

“பிறகு எதுக்கு சத்தம் போடணும்?”

“கொல்லப்போறேன்... நான் எல்லாரையும்..”

“என்னையுமா?”

“நீ யாருடா குப்பை? உன்னையும் கொல்லுவேன். உன் அப்பனையும் கொல்லுவேன்.”

“ஏன் எல்லாரையும் கொல்லணும்?”

“கொல்லணும்னு அவசியம் இல்லடா, நாயே.”

எனினும், கடைசியில் அவன் சொன்னான். சொல்லும்போது கண்களில் நீர் நிறைந்துவிட்டது. மதுவின் ஆவி சுட்டு வெந்துபோன தொண்டை... நடந்த சம்பவங்களைக் கோர்வையாகச் சொல்ல அவன் மிகவும் பாடுபட்டான். தடுமாறிய தொண்டை வழியாக, விட்டுவிட்டு வந்த வார்த்தைகள் வழியாக விஷயம் வெளியே வந்தது. சாயங்காலம் வந்தபிறகுதான் பைலிக்கு விஷயமே தெரிய வந்தது. காரையில் அப்பச்சன் வாத்துக்களை அழைத்துக் கொண்டு போய் சிறிது நேரம் ஆனபிறகு, பைலி தூரத்திலுள்ள மாட்டுச் சந்தைக்குப் போய்விட்டான். சந்தை நாளின்போது செய்யும் தரகர் வேலைக்கு நல்ல கமிஷன் கிடைக்கும். அன்றும் அது கிடைத்தது. அதை வைத்து பைலி நன்றாகக் கொண்டாடினான். மாலை நேரத்தில் வீட்டிற்கு வந்தபோது அம்மிணி அழுது கொண்டிருந்தாள்... அப்பச்சனும் அழுது கொண்டிருந்தான்.

இருநூறுக்கும் மேற்பட்ட வாத்துகள் ஒரே நேரத்தில் இறந்துவிட்டன. முதலில் ஏதாவது நோய் பிடித்திருக்க வேண்டும் என்றுதான் நினைத்தார்கள். எனினும், சந்தேகம் இருந்தது. திரும்பி வந்தபோது சந்தேகப்பட்டது உண்மை ஆகிவிட்டது. வாத்துகள் உணவு தின்ற இடத்தில் கிடந்த பொட்டையும் பொடியையும் கொத்தித் தின்ற இரண்டு கோழிகள் செத்து விழுந்து கிடந்தன. ஒரு கூடையிலிருந்து தாங்க முடியாத அளவுக்கு ஒருவித நாற்றம் வந்தது. “எதிரிகள் யாரோ செய்த வேலை அது. இந்த ஊர்ல இருக்குற யாரோதான் அதைச் செய்திருக்காங்க. ஆனா? இந்த பைலி ஆள் யாருன்னு கண்டுபிடிப்பான். கண்டுபிடிச்சபிறகு, அந்தத் தப்பைச் செஞ்சவன் யாராக இருந்தாலும் உயிரோட இருக்க முடியாது. அவன் வயித்தைக் கிழிச்சிடுவேன். கழுத்தைக் கடிச்சு தனியா எடுத்திடுவேன்”- பைலி கத்தினான்.

“வாத்துக்கள் எல்லாமே செத்துப்போச்சா?” -கவலை உண்டானவனைப் போல விஸ்வநாதன் விசாரித்தான்.

“மூன்று கூட்டம் வாத்துக்கள் இருந்துச்சுன்னா? ஒரு கூட்டம் செத்துப்போச்சு. ஒரு கூடையில இருந்த உணவைத் தின்ன வாத்துகள் மட்டும் செத்திருக்கு. வாத்துகள் செத்துப்போனதுக்காக நான் கவலைப்படல. இந்த ஊர்ல இப்படிப்பட்ட ஒரு காரியத்தைச் செய்யிற அளவுக்கு ஒரு நாய் வளர்ந்திருக்குன்னா... அவன் யாருன்னு உடனடியா தெரியணும். யாராக இருந்தாலும் அதுதான் அவனோட கடைசி கெட்ட செயலா இருக்கணும்.”


விஸ்வநாதன் வார்த்தைகளை மிகவும் கவனமாகப் பொறுக்கி எடுத்தான். உணர்ச்சிகளை முன் எச்சரிக்கையுடன் எடுத்து முகத்தில் அணிந்து கொண்டான். மிகவும் கவனமாக அவன் இருக்க வேண்டியிருக்கிறது. அம்மிணிக்குச் சந்தேகம் ஏற்படலாம். ஒன்றோ இரண்டோ நாட்கள் அமைதியாக இருந்துவிட்டு அவள் அதைக் கூறலாம். அப்படியென்றால் இரண்டில் ஒன்றுதான். ஒன்று விஸ்வநாதன் சாவதற்கு இப்போதே தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் யாருக்கும் தெரியாமல் அவன் ஊரைவிட்டு ஓடிவிட வேண்டும்.

பேச்சின் திசையை மாற்ற எவ்வளவு முயற்சி செய்தும், கடைசியில் பைலி அதே விஷயத்திற்குத்தான் திரும்பத் திரும்ப வந்து கொண்டிருந்தான். இப்போது வேறு எந்த விஷயத்தைப் பற்றியும் பேச அவனால் இயலாது.

விஸ்வநாதன் பொறுமையாக பைலி சொன்ன அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தான்.

மாலை நேரத்திற்குச் சற்று முன்பு நாணு அங்கு வந்தான். கையில் ஒரு சிறு பலகாரப் பொட்டலம் இருந்தது. “சார், நீங்க தின்றதுக்காக வீட்டுல தயாரிச்சது... அவிச்ச சீனிக்கிழங்கு”

“இதெல்லாம் தேவையா?” - விஸ்வநாதன் கேட்டான் : “அந்தக் குழந்தைக்கு மருந்து வாங்கிக் கொடுத்தியா?”

“வைத்தியர்கிட்ட கொண்டு போய் காட்டினேன். கொஞ்சம் மருந்துப்பொடியும், மருந்தும் தந்தாரு. இப்போ பரவாயில்ல...”

விஸ்வநாதனுக்கு நாணுவின் முகத்தைப் பார்க்கவே பயமாக இருந்தது. வறுமையின் பிடியில் சிக்கிக் கிடக்கிற, குழந்தைகளை வளர்க்க முடியாத, அவர்களிடம் கொண்டிருக்கும் பாசத்தை மனதிற்குள் பூட்டி வைத்துக் கொண்டிருக்கும் ஏழை தந்தையைப் பற்றிய நினைப்பு ஒருவேளை அவனிடம் ஞாபகங்களைக் கிளறச் செய்திருக்கலாம்.

நாணு உள்ளே போக முயன்றான்.  சிறிது தேநீர் தயாரிக்கலாம் என்ற எண்ணம் அவனுக்கு.

“இங்கே வாடா” -அதுவரை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த பைலி எழுந்து நின்றான். அந்தக் குரலின் பயங்கரத்தன்மை விஸ்வநாதனை அதிர்ச்சியடையச் செய்தது. “என்னையா?” நாணு திகைத்து நின்றான்.

“உன்னைத்தான். உன்னை இல்லாம வேற யாரை? உன் அப்பனையா?”

நாணு மெதுவாக அருகில் வந்தான். முகத்தில் பயத்தின் கீற்றுகள் வந்துபோய்க் கொண்டிருந்தன. “நீ நேற்று ராத்திரி எங்க வீட்டுக்கு வந்தேல்ல?” பைலி கேட்டான்.

“ஆமா... வந்தேன்.”

“எதுக்கு வந்தே?”

“நான்... நான்... சாரைத் தேடி வந்தப்போ...”

அவன் முழுமையாகச் சொல்லி முடிப்பதற்குள் ஒரு அடி முன்னால் வைத்து வானமே அதிர்கிற குரலில் பைலி கத்தினான்:

“சாரைத்தேடி நடுராத்திரி நேரத்துல எங்க வீட்டுக்கு வருவே. அப்படித்தானேடா?”

நாணு என்ன செய்வதென்று தெரியாமல் நின்றிருந்தான். அவனுடைய பயம் நிறைந்த கண்கள் தரையிலிருந்து விஸ்வநாதனின் முகத்தை நோக்கி மெதுவாக நகர்ந்தபோது, ஒரு அடி விழுந்தது. நாணு ஒரு பக்கம் சாய்ந்து விழுந்தான்.

“நேரா பாருடா. திருட்டுத் தேவிடியா மகனே.”

தரையில் கிடந்த அவனைத் தூக்கி நிறுத்தியவாறு பைலி சொன்னான் : “நீ எங்க வாத்துகளுக்கு விஷம் கொடுத்துட்டே...”

“இல்ல... இல்ல...”- நாணுவின் குரல் மிகவும் பரிதாபமாக ஒலித்தது. மீண்டும் அடி விழுந்தது. நாணு சுவரில் மோதிக் கீழே விழுந்தான். அவன் தலையைத் தூக்கக் கஷ்டப்படுவதை விஸ்வநாதன் பார்த்தான்.

கடைவாயிலிருந்து சிவப்பாக இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. இடுப்பிலிருந்த பேனாக் கத்தியை எடுத்து பைலி ஒரு பைத்தியம் பிடித்தவனைப் போல நடந்தான். நாணுவின் அருகில் சென்று குனிந்து அவன் பேனாக்கத்தியை ஓங்கினான்.

நாணு முனகினான், மேல்மூச்சு கீழ்மூச்சு விட்டான்.

“உண்மையைச் சொல்லுடா? நாயே. யார் சொல்லி நீ அதைச் செஞ்சே?”

நாணு கைகளை உயர்த்தி, ‘என்னை அடிக்காதீங்க’ என்று சைகை செய்தான். பைலியின் உதடுகளின் ஓரத்தில் குரூரமான ஒரு புன்னகை தோன்றி மறைந்தது.

“உண்மையைச் சொன்னா நீ தப்பிக்கலாம்.”

நாணு எதுவும் கூற முடியாமல் கவிழ்ந்து விழுந்தான். அவனுடைய முனகல் சத்தம் வீட்டின் சிறு வராந்தாவில் கேட்டது.

“நான் இல்லை... நான் இல்ல...”- அவன் சொன்னான்.

பேனாக்கத்தியின் உரை வேகமாக அவனுடைய முதுகெலும்பு மீது போய் விழுந்தது. ஒரு உரத்த அழுகைச் சத்தம் அடுத்த நிமிடம் அங்கு கேட்டது. நாணு மல்லாக்க விழுந்து கைகளையும் கால்களையும் ஆட்டினான். ஒரு புழுவைப் போல துடித்தான். அவனுடைய கால்களை மிதித்தவாறு பைலி கத்தியை விரித்தான். பிசாசுத்தனமான முக வெளிப்பாடு.

“உண்மையைச் சொல்லு. இல்லாட்டி நீ சாகுறது நிச்சயம்”

அவன் சொன்னால், சொன்னது கண்களுக்கு முன்னால் நடக்கும் என்ற விஷயம் உறுதியாக விஸ்வநாதனுக்குத் தெரியும். ஏதாவது உடனடியாகச் செய்யாவிட்டால், எந்த அர்த்தமும் இல்லாமல் ஒரு கொலைச் செயலுக்குத்தான் சாட்சியாக இருக்க வேண்டியதிருக்கும் என்று அவனுக்குப் புரிந்தது.

“அவனை விடு, பைலி”- விஸ்வநாதன் படுத்துக் கொண்டே சொன்னான்.

“விடவா?”- பைலி விழுந்து விழுந்து சிரித்தான் : “இவனை விடவா? இவன் குடலை நான் எடுக்கப் போகிறேன்.”

“எதுக்கு?”

“இவன்தான் நேற்று ராத்திரி அங்கே வந்து கடவுளுக்குப் பொறுக்காத ஒரு காரியத்தைச் செஞ்சவன்...”

“இல்ல...” -விஸ்வநாதன் மெல்லிய ஒரு புன்சிரிப்புடன் குறும்புத்தனத்தை ஒத்துக் கொள்ளும் குழந்தையைப் போல் முகத்தை வைத்துக் கொண்டு சொன்னான் : “அதை செஞ்சது நான்...”

ஒரு நிமிடம் பைலி அசைவற்று நின்றுவிட்டான். அடுத்த நிமிடம் முகம் திடீரென்று செத்துப் போனது மாதிரி ஆகிவிட்டது. செத்துப்போன முகத்தில் இரத்தம் மீண்டும் வேகமாகப் பரவியபோது அவன் கத்தினான்:‘’

“இல்ல... இல்ல...”

“நான் சொன்னது உண்மை” - விஸ்வநாதன் எழுந்து நின்றான்.

“சார், இவனை விடணும்ன்றதுக்காகப் பொய் சொல்லக் கூடாது.”

விஸ்வநாதன் முணுமுணுத்தான் : “ஒரு பிணத்தைக் காப்பாத்துறதுக்கு நான் ஏன் முன் வரணும்?”

ஏரியின் மீது இருட்டு மூடிக்கிடந்தது. திசைகள் இருட்டுக்கு அப்பால் இருந்தன குளிர்ந்த காற்று வீசும்போது, நீரில் வளையங்கள் உண்டாயின. அவ்வப்போது சிறிய மீன்கள் படகிற்கு அருகில் குதித்துச் சாடி ஒரு ஊசி விழும் ஓசையை உண்டாக்கிக் கொண்டு கீழே விழுந்து கொண்டிருந்தன.

விஸ்வநாதன் ஓசை எதுவும் உண்டாக்காமல் துடுப்பைப் போட்டான். அருகில் சில நேரங்களில் பைலியின் முனகல் சத்தம் கேட்டது. சங்கிலியால் அவன் கட்டப்பட்டுக் கிடந்தபோது, தொடர்ந்து அடிகள் வாங்கிய நாயின் கடைசி நேர முனங்கள்தான் விஸ்வநாதனுக்கு ஞாபகத்தில் வந்தது.

பைலிக்கு சுயநினைவு மீண்டு வந்து கொண்டிருந்தது. எந்தவிதத்தில் பார்த்தாலும், அது நல்லதுதான். கடைசி நிமிடங்கள்... அவற்றின் குரூரமான நகங்களைப் பதிய வைக்கும்போது, அதன் வேதனையை அவன் தெரிந்து கொள்ளட்டும்.


பைலி சிறிது இப்படியும் அப்படியுமாக நெளிந்தான். சுய நினைவற்ற தளங்களில் இருந்து கொண்டு அவன் உரத்த குரலில் பிதற்றினான். படகு வேகமாக ஓடியது.

உணர்வு வந்தது ஒருவிதத்தில் நல்லதுதான். ஒருவேளை அவன் உணர்வு நிலைக்கு வராமல் இருந்திருந்தால், மீண்டும் கடந்தவற்றையெல்லாம் திரும்பச் செய்ய வேண்டியதிருக்கும்.

‘தன்னைத் திறந்து காட்டக்கூடிய நேரம் அப்போது வந்துவிட்டிருந்ததா?’ விஸ்வநாதன் தன்னைத்தானே குற்றப்படுத்திக் கொண்டான்.

‘அதற்கான நேரம் வரவில்லை’ என்றுதான் அவனுக்குத் தோன்றியது எது எப்படி இருந்தாலும் அந்த ஒரு நிமிடம் அவனையும் மீறி அவனுடைய நாக்கு சொல்லிவிட்டது. ‘நான்தான் விஸ்வநாதன். நீ வெட்டிக் கொலை செய்த வாசுவின் மகன். இங்கிருந்து ஓடிய விஸ்வநாதன்’ மனம் கட்டுப்பாட்டிலாமல் இருந்தது. அதனால்தான் அந்த ஆபத்து உண்டானது. அருகில் முனகிக் கொண்டிருந்த நாணு அதைக் கேட்பான் என்பதை அவன் நினைக்கவில்லை.

சில நிமிடங்களில் ஊரில் ஒரு புதிய செய்தி எல்லா இடங்களிலும் பரவும் என்பதை அவன் சிறிதுகூட சிந்திக்கவில்லை. அடக்கி வைத்திருந்த ஆத்திரங்களின் பாய்ச்சலாக இருந்தது அது. என்னவெல்லாம் தான் புலம்பினோம் என்பது அவனுக்கு ஞாபகத்தில் இல்லை. “இன்னைக்கு உன் வாத்து... நாளைக்கு நீ... பிறகு உன் அண்ணன்... உன் மகள்...” வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவளைப்போல் அவன் உரத்த குரலில் சொன்னான்: “நான் வந்ததே அதற்குத்தான்.”

நினைவு திரும்ப வந்தபோது, பைலி தரையில் விழுந்து கிடந்தான். நெற்றி பிளந்து வழிந்த இரத்தம், நீளமான முடிகளுக்கு நிறம் பூசியிருந்தது. ஒரு இறுகிய சத்தம் தொண்டைக்குழிக்குள் கேட்டது. அங்கு ஏதோ வெடிப்பதைப்போல் மெல்லிய ஓசை. நினைவு திரும்பிய கரடு முரடான முகத்தில் இரத்தத்தின் ஈரம்... நாணு துள்ளி எழுந்து மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க நின்றுகொண்டு கேட்டான் : “நீங்க சொன்னது உண்மையா? வாசு அண்ணனோட... வாசு அண்ணனோட மகனா நீங்க?”- அந்தக் கேள்வியில் ஒரு ரகசியம் தன்னுடைய இறுதிமூச்சை விடுகிறது என்பதை அறிந்தபோது, விஸ்வநாதன் அதிர்ந்து போனான்.

“ஒரு ஆள்கிட்டகூட இந்த விஷயத்தைச் சொல்லக் கூடாது. சொன்னா...”

நாணு தலையை ஆட்டினான் : “நான் யார்கிட்டயும் சொல்லமாட்டேன். ஒரு ஆள்கிட்ட கூட சொல்லமாட்டேன்.”

“சரி... கிளம்பு. நாளைக்குக் காலையில வந்தா போதும்.”

நாணு போனபிறகுதான், அவன் வாசலில் இருட்டு இருப்பதைப் பார்த்தான். வீட்டைச் சுற்றிலும் இருந்த தனிமைச் சூழல் பயத்தை வரவழைக்கும் சத்தங்களை உண்டாக்கியது. மாலை இரவின் காட்டுக்குள் நுழையவும், இரவு கிராமத்தைத் தளரச் செய்து உறங்க வைக்கவும், வீட்டிற்குள் இருட்டு தங்கியிருக்கவும் செய்தபோது அசைவற்ற, சுயநினைவற்ற, கை - கால்கள் கட்டப்பட்ட உடல் அவனுக்குப் பக்கத்தில் பயமுறுத்துவதைப் போலக் கிடந்தது. ஒரு முறை பதுங்கியவாறு நடந்து சென்று அவன் அதை ஆராய்ந்து பார்த்தான். அமைதியான நதிப்பகுதி, நிறைந்த ஓடிக்கொண்டிருக்கும் ஆறு, கரையில் நீரோட்டத்தைப் பார்த்து பயந்து நின்று கொண்டிருக்கும் ஆமையைப் போல சிறிய படகு...

பைலி மீண்டும் முனகினான். கை, கால்களை நீட்ட முயன்று தோல்வியுற்று, அவன் உடலை இப்படியும் அப்படியுமாக ஆட்ட, படகின் ஓரங்கள் குலுங்கின.

“யார் அது?” - பைலி கேட்டான். குரலில் பயமில்லை. சவால் இல்லை.

புதியதொரு சூழ்நிலையுடன் அறிமுகமாகிக் கொள்ள இயலாத இக்கட்டான நிலை அந்தக் கேள்வியில் தொனித்தது. நீண்ட நேர உறக்கத்திற்குப் பிறகு கண் விழிக்கும்போது மண்டைக்குள் நுழையும் அறிமுகமற்ற உணர்வின் பாதிப்புகளை விட்டெறிய அவன் செய்யும் முயற்சி...

விஸ்வநாதன் துடுப்பை எடுத்து இருட்டில் வேகமாகத் துழாவினான். இருட்டில் பைலி உரத்த குரலில் சத்தம் போடுவதை அவன் கேட்டான். உரத்த குரலில் கூப்பாடு போடுவதைத்தான் அவன் எதிர்பார்த்தான். வெளியே வந்தவை கெட்ட வார்த்தைகள். விஸ்வநாதன் புன்னகைத்தான். இப்போது இடம் தெரிந்திருக்கும். எங்கு இருக்கிறோம் என்பது புரிந்திருக்கும்.

கட்டப்பட்டிருக்கும் எதிரி கேட்கிறான்: “என்னை எங்கே கொண்டு போற?”

ஒரு நிமிடம் அந்தக் கேள்விக்குப் பதில் கூறவேண்டுமா என்று அவன் யோசித்தான். சொல்லாம். எதிர்பாராத மரணத்தின் கறுத்த முகத்தை அடைந்து அல்லல் படுவதைவிட அது நல்லது. ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு துழாவலும் மரணத்தை நோக்கித்தான் நம்மைக் கொண்டு போகின்றன என்ற அறிவு யாருக்கும் சுகமான ஒரு அனுபவமாக நிச்சயம் இருக்காது. அதனால் அவன் சொன்னான் : “உன்னைக் கொல்லப்போறேன்.”

“ஏரிக்கும் கடலுக்கும் நடுவிலிருக்கும் கரையை அடையிறது வரைதான் இந்தப் படகுல உனக்கு இடம். பிறகு நீரோட்டத்தோடு, கரையோடு சேர்ந்து கடலை நோக்கிப் போக வேண்டியதுதான். அங்கே உன் தலைவிதியைத் தீர்மானிக்குறதுக்கான வாய்ப்பை உனக்கு நான் விட்டுத் தர்றேன்” - விஸ்வநாதன் சொன்னான். பைலி அதற்குப் பதிலெதுவும் கூறவில்லை. ஒரு உதவி கேட்டு அவன் கெஞ்சுவான் என்று விஸ்வநாதன் எதிர்பார்த்தான். அந்தக் கெஞ்சுதலின் வாழ்க்கையின் சாபல்யத்தை அடைந்து விடலாம் என்று அவன் நினைத்தான். ஆனால், கிடைத்ததென்னவோ ஏமாற்றம்தான்.

விஸ்வநாதன் துடுப்பை மடியில் வைத்தவாறு, தீப்பெட்டியை உரசினான். முதல் தீக்குச்சி எரிவதற்கு முன்பே அணைந்தது. மற்றொரு தீக்குச்சி விரலின் ஓரத்தில் ஒதுங்கி நின்றது. நடுங்கி நடுங்கி எரிந்து கொண்டிருந்த நெருப்பின் சிறு ஜுவாலை ஒளியில் பைலியின் முகத்தை ஆர்வத்துடன் கூர்ந்து பார்த்தபோது-

உறங்கிக் கொண்டிருக்கும் முகம். இரத்தத்துளிகள் விழுந்திருக்கும் வீரனின் கம்பீரமான முகம். தோளுக்குக் கீழே துடுப்பு உண்டாக்கிய புதிய காயத்திலிருந்து வெளிவந்து புதிய இரத்தத்தின் கறுப்பு நிறம்.

மீண்டும் இருட்டு. இனி பார்க்க முடியாது. பார்த்து முடிக்கும்போது, என்னவோ எங்கோ தளர்ந்து விழுவதைப்போல் தோன்றுகிறது. அதை அனுமதிக்கக் கூடாது.

துடுப்பை எடுத்தான். புதிய ஒரு வெறியுடன், புதிய ஒரு சபதத்தின் சூட்டில் வேகமாக ஓடியது.

திசைகள் தெரியவில்லை. நான்கு திசைகளிலும் நான்கு நிறங்களில் உள்ள நான்கு நட்சத்திரங்கள் இரவிலும் பகலிலும் கண்விழித்தவாறு இருந்தால்...

இருட்டில் படகோட்டியின் கஷ்டத்தின் ஆழம் புதிய பிரார்த்தனைகளுக்குப் பிறவி கொடுக்கிறது.

ஏரிக்கும் கடலுக்குமிடையே இருக்கும் கரையைப் பற்றிய கற்பனைகள் இருட்டில் இரண்டறக் கலந்துவிட்டன. ஒரு உண்மையைப் போல, கரூரமான ஒரு உண்மையைப் போல, இருக்கும் அலைகளும்...

கடைசியில் சத்தம் கேட்டது. அலைகள் அழைத்துக் கொண்டிருந்தன. ‘இதோ நான் இங்கே இருக்கேன்... இங்கே’ ஒவ்வொரு முறையும் துடுப்பு நீருக்குள் செல்லும்போதும், அந்தக் குரல் மேலும் மேலும் தெளிவாகக் கேட்டது. ஈரமான கைகளை உயர்த்திக் காட்டி அலைகள் உரத்த குரலில் சொல்லின : ‘இங்க வா... இங்க வா.’


குரூரமான ஒரு சந்தோஷத்துடன், பயங்கரமான ஒரு வெறியுடன் நீர் பிளந்து மாறின. அலைகளின் கர்ஜனை நெருங்கி நெருங்கி வந்து கொண்டிருந்தது. மிகவும் அருகில் கீழே காதுகளுக்கு அடியில் அந்தச் சத்தம் பெரிதாகக் கேட்டது.

எனினும், சிறிதும் பிடிபடாத ஒரு ஆச்சரியத்தைப் போல கடல் தூரத்தில் தூரத்தில் போய்க் கொண்டேயிருந்தது. நாக்கை இங்கும் உடலை அங்கும் வைத்து நின்று கொண்டிருக்கும் ஒரு அபூர்வப் பிறப்போ கடல்.

குளிர்ந்த காற்றுக்கு வேகம் அதிகரித்தது. தளர்ந்துபோன தோள்களிலிருந்து வியர்வைத் துளிகள் கீழே வழிந்தன. ‘இதோ ஒரு நிமிடம்’- இதயம் ஆவேசக் குரலில் அழைத்துச் சொல்லிக் கொண்டிருந்தது. ‘நீ தேடி நடந்த நிமிடம்... உனக்காக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த சிறப்பு நிமிடம்...’

திடீரென்று கடலின் சத்தம் குறைந்தது போல் இருந்தது. உரத்த குரலில் பாடிக் கொண்டிருந்த ஒரு இசைக்கருவி திடீரென்று தன் சத்தத்தின் அளவைக் குறைத்துக் கொண்டது போல் அது இருந்தது. அதற்கான காரணத்தைத் தேடுவதற்கு முன்பு, தலைக்கு மேலே உருண்டையான கற்கள் வந்து விழுந்தன. முகத்தில் வந்து மோதும் நீரின் கனமான திவளைகள். இருட்டைப் பார்க்க முடியவில்லை. கடலின் அழைப்பைக் கேட்க முடியவில்லை. கண்களுக்கு முன்னால், காதுகளுக்கு முன்னால் மழையின் ஆர்ப்பாட்டமான ஜால வித்தைகள். “பைலி”- அவன் உரத்த குரலில் அழைத்தான். மைல்களுக்கப்பால் எங்கோயிருந்து பைலி திட்டுவது காதில் விழுந்தது. கெட்ட வார்த்தைகளால் ஏசுவது கேட்டது.

படகுக்குள் மழை சீறி விழுந்தது. துடுப்பு பலமிழந்து நழுவியது.

இப்போது படகு நீரால் நிறையும். பாதங்களை மூழ்கச் செய்யும் நீர் நிமிடங்களுக்குள் இடுப்புவரை வந்துவிடும். ஒரு ஓட்டை விழுந்த பாத்திரத்தைப்போல படகு ஆழங்களை நோக்கி ஓசையெழுப்பியவாறு போகும். அப்போது பைலி -

மழை அலறி அழைத்தது. மழையின் கர்ஜனை இரத்த நாளங்களை உறையச் செய்தது.

நான் தோற்றுக் கொண்டிருக்கிறேன் - விஸ்வநாதனுக்கு அப்படித் தோன்றியது. ‘என் எதிரி எனக்கு இல்லாமற் போகிறான். பலமான வேறொரு எதிரி அவனை என் கையில இருந்து தட்டிப் பறிக்கிறான்.’

படகு ஒருமுறை கூற்றித் திரும்பியது. பிறகு ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும் அலைகளின் கையில் அது விளையாட்டுப் பொருளாக மாறியது.

விஸ்வநாதன் பைலியின் உடலை ஆராய்ந்து பார்த்தான். இடுப்பில் தான் வைத்த பேனாக்கத்தி அப்படியே இருக்கிறது. பைத்தியத்திற்கு நிகரான ஒரு வெறியுடன் கட்டுக்களை அறுத்து முடித்தபோது, ஒரே ஒரு பிராத்தனைதான் மனதில் இருந்தது. ‘ஏன் எதிரியை எனக்குத் திரும்பவும் தா. வேறொரு சந்தர்ப்பம், சந்தோஷத்தின் வேறொரு வேளை... எனக்குத் தேவை அதுமட்டும்தான்.’

“நீந்திப் போ” - விஸ்வநாதன் மழையைவிட உரத்த குரலில் அழைத்துச் சொன்னான் : “கரையைப் பிடிச்சுக்கோ” பைலி அதற்கு ஏதாவது பதில் கூறினானா என்பது தெரியவில்லை. அதற்கு முன்பாகப் படகு சரிந்தது.

“பைலி”- விஸ்வநாதன் இருட்டைக் கிழித்துக் கொண்டு ஒரு செவிடனின் காதுகளின் கூறுவது மாதிரி அழைத்துச் சொன்னான்: “பைலி... எனக்குப் பின்னால் நீந்து...”

இருட்டு! அலறும் ஆர்ப்பரிக்கும் இருட்டு, மழையின் கர்ஜனை.

பக்கத்திலேயே மேற்கு திசையில் கடல். விஸ்வநாதன் எதிர்திசையை நோக்கி நீந்தினான். ஏரியின் சந்தோஷமும் அவனைக் கிண்டல் பண்ணியது. மழையின் வெற்றி அவனுடைய காதுகளே அடைத்துப் போகும்படி கூவி அழைத்தது.

கண்களே கூசிப்போகும்படி வந்த ஒரு மின்னல் நீரில் மிகவும் நீளமாகக் கோடுகள் உண்டாக்கியது. பிறகு காதுகளே செவிடாகும் வண்ணம் இடி முழங்கியது. அங்கு தூரத்தில் எங்கோ கரையில் ஒரு வைக்கோல் போர் எரிந்து கொண்டிருந்தது.

விஸ்வநாதன் அந்த நெருப்புச் சிகரங்களை நோக்கி நீந்தினான்.

12

வெளிச்சம் முகத்தில் அடிப்பதற்கு முன்பே அவன் எழுந்தான்.

இனிமேலும் படுத்திருந்தால் கண் விழிக்கும்போது சாயங்காலமாகிவிடும். இன்று அப்படி உறங்க முடியாது. ஒவ்வொரு அசைவுகளையும் கவனிக்க நூறு நூறு கண்கள் முயலும்.

உடம்பு பயங்கரமாக வலித்தது. காயம்பட்ட தசைகள் அங்குமிங்குமாய் இழுத்துக் கொண்டு தாங்க முடியாத வேதனையைத் தந்து கொண்டிருந்தன. மீன் கொத்திய காயங்கள் புண்களாக மாற முயற்சித்துக் கொண்டிருந்தன.

‘குளிக்கணும். முடி முழுவதும் மணல்...’

காலை நேரத்தில் வீட்டிற்கு வரும் விருந்தாளிகளுக்கு, பழைய உறவினர்களுக்கு உற்சாகமான, பிரகாசமான, சுத்தமான ஒரு விஸ்வநாதனை அவர்கள் பார்க்கும்படி செய்ய வேண்டும்.

மழை சற்று குறைந்திருந்தது. மணலில் ஓடிக் கொண்டிருந்த மழை நீருக்கும் வேகம் குறைந்திருந்தது. அழகான, அமைதியான ஆற்று நீர்... ஆங்காங்கே படகுகள்...

முந்தைய இரவின் முடிவு எங்கே இருந்தது? அவனுக்குச் சரியாக ஞாபகத்தில் இல்லை. மிகவும் சோர்வடைந்து போய் பாதங்கள் தரையைத் தோட்ட நிமிடமோ, இல்லாவிட்டால் தவழ்ந்து ஏறி மணலில் முகத்தைப் புதைத்துக்கொண்டு தலைக்குப் பின்னால் முடிவே இல்லாமல் வந்து விழுந்து கொண்டிருக்கும் மழைத்துளிகளின் சுகமான தாளத்தைக் கேட்டவாறு கண்களை மூடிய நிமிடமா, இருக்காது. அதுவும் இரவின் ஒரு பகுதி மட்டுமே.

மீண்டும் கண் விழித்தபோது மழை இல்லை. இருட்டு நிறைந்திருந்த கரை - ஏரியின் மீது வீசும் குளிர்ச்சியான மழைக்காற்று... அடுத்த மழைக்காக இப்போதே தாயாராகும் வானம்... கரை தந்த முன்னெச்சரிக்கைகளுடன் தட்டுத்தடுமாறி வீட்டை அடைந்ததும் நிம்மதிப் பெருமூச்சுடன் திண்ணையில் விழுந்ததும்கூட இரவின் பகுதிகள்தான்.

இப்போது தமாஷாக இருக்கின்றது.

வீடு...?

அங்கு போய்ச் சேரும்வரை தான் சீரான மனநிலையுடன் இல்லை என்பதை நினைக்கும்போது அவனுக்கே வெட்கமாக இருந்தது. எல்லாக் கரைகளையும் வீடுகளாக்கி, எல்லா வீடுகளையும் கரைகளாக்கிய விஸ்வநாதனுக்கு அப்படிப்பட்ட ஒரு நிலை ஆச்சர்யத்துக்குரிய ஒன்றாக இருந்தது. ஆனால், அப்போது அவன் அப்படித்தான் இருந்தான் என்ற உண்மையை மறுப்பதற்கில்லை.

குளித்து ஆடைகளை மாற்றி அவன் வெளியேறினான். பைலிக்கு என்ன நடந்தது என்பதை அறிவதற்கான ஊமைத்தனமான ஒருவித ஆர்வம் அவனையும் அறியாமல் அவனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கவனம் செலுத்த வைத்தது. யாராவது ஏதாவது சொல்கிறார்களா? தேநீர்க்கடையில் தன்னை உற்றுப் பார்க்கும் கண்கள் ஏதாவது இருக்கிறதா?

அப்படி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஊர்க்காரர்கள் மழையைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தார்கள். பெருக்கெடுத்து வந்த புது வெள்ளத்தைப் பற்றியும், மழையில் அடித்துச் செல்லப்பட்ட படகுகளைப் பற்றியும் தாழ்ந்த குரலில் கவலையால் பீடிக்கப்பட்டவர்களைப் போல அவர்கள் முணுமுணுத்துக் கொண்டிருந்தார்கள். பிறகு யோசித்துப் பார்த்தபோதுதான் தன்னுடைய முட்டாள்தனம் அவனுக்கே புரிந்தது.


பைலியைப் பற்றி யார் பேசுவார்கள்? சொந்த வீட்டிலேயே அவன் இல்லாமல் இருப்பது ஒரு பிரச்சினையாக இருப்பதற்கு வழியில்லை. வாரக் கணக்கில், மாதக்கணக்கில் காணாமல் போவதும் திடீரென்று ஒருநாள் பயமுறுத்துவதைப்போல தோன்றி எல்லாருக்கும் தலைவலியை உண்டாக்குவதுமாக இருக்கிற பைலி ஒரு இரவில் காணவில்லை என்பதற்காக யார் ஆர்ப்பாட்டம் பண்ணப் போவது?

நாணு ஒருவேளை செய்தியை வெளியே கூறாமல் இருந்திருக்கலாம். இல்லாவிட்டால் அதற்கான காரணம் இன்னும் வராமல் இருக்கலாம். ஊர்க்காரர்கள் பழைய குசலம் விசாரிப்புகளையும் பழைய தமாஷ்களையும் சொல்லி சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

தேநீர்க் கடையை விட்டு வெளியே வந்தபோது வீட்டிற்குப் போகவேண்டும் என்று அவனுக்குத் தோன்றவில்லை. அந்தச் சூழ்நிலையில் புதிதாகச் சிறிது பயம் தன்னிடம் வந்து சேர்ந்திருப்பதைப்போல் அவன் உணர்ந்தான். எந்தச் சூழ்நிலையிலும் முன்பு தெரிந்தவர்களும் ஆர்வம் கொப்புளிக்கும் முகங்களைக் கொண்ட குழந்தைகளும் அங்கு வந்து குழுமி ஒருவரோடொருவர் தள்ளி இடித்துக் கொள்வது மாதிரி ஒரு சூழ்நிலை உண்டாகிவிடுமோ என்று அவன் நினைத்தான்.

அதனால் வெறுமனே சுற்றிக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்ததும் தேங்காய் உரித்துக் கொண்டிருந்த பெண்கள் தாழ்ந்த குரலில் தங்களுக்குள் தமாஷாக என்னவோ சொல்லி விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டார்கள். வேலைக்குப் போய்க் கொண்டிருந்த ஆண்கள் அவனைப் பார்த்ததும் தலையில் கட்டியிருந்த துணியை அவிழ்த்து வாய் திறந்து சிரித்தார்கள்.

எல்லாம் எப்போதும் போலவே இருந்தது.

கடைசியில் ஏரிப் பகுதிக்கு வந்தான்.

இளம் வெயில் காய்ந்து கொண்டிருந்த சூழ்நிலையில், மழைக்குப் பிறகு வந்த காலைப் பொழுதில் ஆர்வத்துடன் வானத்தை ஆராய்ந்து பார்க்க வந்த கிளிகளின் ஆர்ப்பாட்டம். கரைக்கு அருகில் சிப்பி பொறுக்கும் குழந்தைகள் கூட்டம். தூரத்தில் விரித்துப் போடப்பட்டிருக்கும் படகுகளின் பாய்கள். எதிர் கரைக்கு மெதுவாக நீந்திக் கொண்டிருக்கும் அங்கே உட்கார்ந்த விஸ்வநாதன் சிறிது நேரம் தன்னை மறந்து தூங்கிவிட்டான். கண் விழித்தபோது மதியம் நெருங்கிவிட்டிருந்தது. நீருக்கு மேலே படகுகள் உறங்கியவாறு நின்றிருந்தன. அங்கு பார்த்துக் கொண்டிருந்தபோது, அவனுக்குப் பயமாக இருந்தது. திரும்பி விட்டான்.

தூரத்தை அடைந்தபோது வயலில் நிறைய ஆட்கள் கூட்டமாக நின்றிருந்தார்கள். வீட்டைச் சுற்றிலும் மனிதர்கள் அவன் வருவதை அறிந்து வரவேற்க வேண்டும் என்பதற்காகவே ஒற்றையடிப் பாதையில் நிறைய பேர் ஓடி வந்து கொண்டிருந்தார்கள்.

உடலில் சோர்வு இருந்தது. உறக்கம் வருவது மாதிரியும் இருந்தது. எனினும் அந்தச் சூழ்நிலையில் அவர்களைப் பார்த்து அவன் புன்னகை புரிந்தவாறு நிற்க வேண்டியதிருக்கிறது.

அவனுடைய தந்தையின் நண்பர்கள், தூரத்து உறவினர்கள் ஆச்சரியப்பட்டு மலர்ந்த கண்களுடன்  நின்று கொண்டிருக்கும் சிறுவர், சிறுமிகள்... ஒரு பெண்ணின் உரத்த குரலில் எழுந்த அலறல் “என் மகனே...”- சங்கரி சித்தி. உணர்ச்சிவசப்பட்டு கண்களைத் துடைத்துக்கொள்ளும் சிவராமன் அண்ணன். உணர்ச்சிப் பெருக்கில் நின்று கொண்டிருக்கும் சுசீலா...

அவனுக்குள் வெறுப்பு படர்ந்து எரிந்தது. முகத்தில் புன்சிரிப்பை வரவழைத்துக் கொண்டு ஒரு காட்சிப் பொருளைப் போல விஸ்வநாதன் அவர்களுக்கு மத்தியில் நடந்து சென்றான்.

“இப்போதான் நீ யார்னு எல்லாருக்கும் தெரிஞ்சதா?” - அப்பச்சன் கேட்டான். “எனக்கு உன்னைப் பார்த்தவுடனே நீ பார்னு தெரிஞ்சுபோச்சு. நீயே அதைச் சொல்றியா பார்ப்போம்னு இது நாள் வரை நான் காத்துக்கிட்டு இருந்தேன்...”- தொடர்ந்து அவன் சொன்னான்.

ஆரம்ப ஆர்வம் அடங்கிய ஊர்க்காரர்களும், போவதற்கு மனமே இல்லாத சித்தியும் அந்த இடத்தை விட்டுப் போனபிறகு, வெயில் மேற்குப் பக்கமாகச் சாய ஆரம்பித்தபோது, அப்பச்சன் அங்கு வந்தான்.

“நான் இங்கே வந்தது பைலிக்குஞ்ஞுவைத் தேடி...”

விஸ்வநாதன் அதற்குப் பதிலெதுவும் கூறவிலலை.

“நேற்று சாயங்காலம் அவன் இங்கே வந்திருந்தானா?”

“வந்திருந்தாப்ல.”

“உங்க ரெண்டு பேருக்கும் இடையில அடிபிடி சண்டை ஏதாவது உண்டாச்சா?”

விஸ்வநாதன் தரையைப் பார்த்தவாறு உணர்ச்சியற்ற குரலில் முணுமுணுத்தான்.

“சின்னதா...”

“காரணம்?”

“ரெண்டு பேரும் நல்லா குடிச்சிருந்தோம். அந்த நாணுவைக் காரணமே இல்லாம அடிச்சப்போ, நான் இடையில தலையிட்டு நியாயம் பேசினேன். அப்போ எனக்கும் அடி விழுந்தது. நான் திருப்பி அடிச்சேன்.”

அப்பச்சன் நீண்ட நேரம் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தான்.

“இதுவரை அவன் வீட்டுக்கு வரல.”

விஸ்வநாதன் பதிலெதுவும் சொல்லாமல் இருக்கவே, அப்பச்சனே பதிலையும் சொன்னான் : “வருவான். எங்கேயாவது போய்ப் படுத்துக் கிடப்பான்.”

“சாயங்காலம் முடிஞ்சதும் இங்கேயிருந்து ஆள் கிளம்பியாச்சு. காலைல வர்றதா சொல்லிட்டுப் போனாப்ல...”

நீண்டு கொண்டிருந்த அமைதி.

கடைசியில் விஸ்வநாதன் கேட்டான்: “நான் யார்னு தெரிந்தபிறகும், என்னை எப்படி வீட்டுக்குள்ள அனுமதிக்க முடிஞ்சது?”

“கமலாக்ஷியோட மகன்றதுனால...”

மீண்டும் அமைதி.

“பைலிக்குத் தெரியுமா?”

“தெரியாது. தெரிஞ்சிருந்தா நிச்சயமா அவன் வீட்டுக்கு வரவிட்டிருக்க மாட்டான்.”

“பைலிக்கு என்னைத் தெரியலையா?”

“பைலி கமலாக்ஷியையே தெரிஞ்சிக்கலையே!”

“உங்களுக்கு?”

“எனக்கு அவளைத் தெரியும். அவளை முழுமையாத் தெரிஞ்சு வச்சிருந்த ஒரே ஆள் நான்தான்.”

“அப்போ...”

விஸ்வநாதனுக்கு அந்தக் கதை தெரியும். தெரிந்த கதையின் தெரியாத பகுதிகளில் வெளிச்சம் விழுகிறது. பலவற்றைப் பற்றிய கருத்துகள் மாறுகின்றன.

“அப்போ...”- அப்பச்சனின் குரலில் பல வருடங்களுக்கு முந்தைய நாட்கள் புத்துணர்ச்சி உண்டாக்கிக் கொண்டு காட்சியளித்தன.

“மூன்று மனைவிமார்களுக்கு மத்தியில் ஒரு மனைவி நிம்மதி இல்லாமல் இருந்தாள். அவளுக்கு அன்பு தேவை. அக்காவும், தங்கையும் ஒண்ணு சேர்ந்து கணவனைச் சுற்றி இருக்குறப்போ, எங்கோ வெளியில் இருந்து வந்தவள் மாதிரி அவள் விலகி இருந்தாள். அமைதியான குணத்தைக் கொண்டவனும், நல்லவனுமான ஒரு வாத்துக்காரன் அவள் மனதில் இடம்பிடித்தான். ‘என்னை இங்கேயிருந்து கொண்டு போயிடுங்க’ என்று அவள் அப்பச்சனின் காலைப் பிடித்துக் கேட்டுக் கொண்டாள். ‘என் மகனையும் என்னையும் இந்த நகரத்துல இருந்து காப்பாத்துங்க. ரெண்டு வாத்துகளைப்போல நாங்க வாத்துகளோடு வாத்துகளா சேர்ந்து இருந்துர்றோம்’ என்றாள் அவள்.

உன் அப்பனுக்கு அவளைப் பார்த்து பயம். கடைசியில அவனுக்கு இந்த விஷயம் தெரிஞ்சது. அவளை அவன் அடிச்சான். அவள் எதையும் மறக்கல. எல்லா விஷயங்களையும் ஒத்துக்கிட்டா”- அப்பச்சன் சொன்னான்.

தவறு இழைத்த கணவன் அவளுடைய அந்த தைரியத்துக்கு முன்னால் என்ன செய்வது என்று தெரியாமல் செயலற்று நின்றுவிட்டான். ஒவ்வொரு நாளும் அவளுக்கு அடி, உதை கிடைத்தது. தினமும் அவள் அப்பச்சனின் வீட்டிற்கு யாருக்கும் தெரியாமல் போய் வந்தாள். ஒரு பழைய காதல் கதையின் விரசமான காட்சிகளை விஸ்வநாதன் கண்களைத் திறந்து கேட்டுக் கொண்டிருந்தான்.


அண்ணனின் வழி தவறிப்போன உறவை எதிர்க்கும் தம்பி. தம்பியின் எதிர்ப்புகளுக்கு முன்னால் ஊமையாகிப்போன அண்ணன். யார் எதிர்த்தாலும் மேலும் மேலும் நெருக்கமாகிக் கொண்டிருக்கும் ஒரு உறவு.

“உன் அப்பன் என்னைக் கொல்லணும்னு நினைச்சான். நான் அவனோட எதிரியா ஆனேன். பைலிக்குஞ்ஞுக்கு கமலாக்ஷிக்கிட்ட ஆத்திரம். அவளைப் பார்க்குற இடங்கள்லாம் வச்சு அவளை அவன் வாய்க்கு வந்தபடி கெட்ட வார்த்தைகளால் பேசுவான். கொல்றதாக் கூட சொல்லுவான்!”

ஒரு காரணம் உண்டாக்குவதற்காக எல்லாரும் காத்திருந்தார்கள். எல்லா மனங்களிலும் நெருப்புத் துண்டுகள் புகைந்து கொண்டிருந்தன. ஒருவரையொருவர் பார்க்கும் நிமிடங்களில் அன்பு இல்லாததைப் போல் காட்டிக் கொண்டார்கள். காரணம் உண்டாக்குவதற்காக, காரணம் உண்டாக்கினான் பைலி.

“உன் அப்பன் அதைச் சொல்லி என்னைக் கொல்ல வந்தான். கடைசியில அவன் செத்துட்டான். உன் தாய் எனக்கு எல்லாமாக இருந்தா. அந்தப் போராட்டத்துல பைலி நினைச்சதைச் சாதிச்சிட்டான்.”

எல்லா முடிந்தபிறகுதான் யாரும் எதையும் அடையவில்லை என்று எல்லோருக்கும் தெரிந்தது.

“என்னைக்காவது ஒருநாள் நீ வருவேன்னு எனக்குத் தெரியும். எங்கேயிருந்தாலும் உனக்குன்னு ஒரு பிடிவாதம் மனசுல இருக்கும். அது எனக்குத் தெரியும். நீ கமலாக்ஷியின் மகனாச்சே! உன் ஒவ்வொரு அசைவையும் நான் உன்னிப்பா கவனிச்சேன். உன் ஒவ்வொரு பார்வையையும் நான் கவனமாப் பார்த்தேன். எந்தச் சூழ்நிலையிலயும் எதுவும் நடக்கும்னு என் மனசுல பட்டுக்கிட்டே இருந்துச்சு. என் வாத்துகள் செத்துப்போ யாரும் சொல்லாமலே ஆரம்பத்திலேயே அதைச் செய்த ஆள் யார்னு எனக்குத் தெரிஞ்சிடுச்சு. பைலிக்கிட்ட நான் சொல்லல. சொன்னா அவன் எதைச் செய்யவும் தயங்கமாட்டான். என்னால உன்கிட்ட அதைக் கேட்க முடியாது. நீ அவள் வயித்துல பிறந்தவனாச்சே!”

விஸ்வநாதன் ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு அந்த முகத்தையே பார்த்தவாறு படுத்திருந்தான். ‘என் மனசு மாறல. என் தாகம் இப்போது கூட குறையல. இந்தக் கதைகளெல்லாம் என்னைக் குளிர வச்சிட முடியாது’  - அவன் தனக்குள் கூறிக் கொண்டான்.

போகும் நேரத்தில் அப்பச்சன் சொன்னான் : “நீ இனிமேல் இந்த ஊர்ல இருக்க வேண்டாம். பைலிக்குத் தெரியிறதுக்கு முன்னாடி நீ இங்கேயிருந்து கிளம்பிடணும். அவனுக்கு விஷயம் தெரிஞ்சிடுச்சுன்னா? அவன் என்ன செய்வான்னு சொல்லவே முடியாது.”

“நான் போகுறதுக்குத்தான் வந்தேன்” - விஸ்வநாதன் சொன்னான் : “கட்டாயம் போயிடுவேன். ஒருவேளை நாளைக்கோ இல்லாட்டி இன்னைக்கோ...”

“அது எனக்குப் புரியுது. அதுக்காக நான் இங்கே வரல. போறதுக்கு முன்னாடி இவ்வளவு விஷயங்களையும் உன்கிட்ட நான் சொல்லணும்னு நினைச்சேன்” அப்பச்சன் வெளியேறி நடந்தான்.

“காதலன்!”

அவன் போன வழியைப் பார்த்து விஸ்வநாதன் காறித்துப்பினான்.

மாலை நேரத்திற்குச் சற்று முன்பு நாணு மேல்மூச்சு, கீழ் மூச்சு வாங்க ஓடிவந்து பைலியின் பிணத்தைப் பார்த்த விவரத்தைச் சொன்னான். அவன் மிகவும் பதைபதைத்துப் போயிருந்தான்.

எங்கேயோ ஏதோ சில சந்தேகங்கள்.

முந்தின நாள் சண்டை முடிந்து, பைலி எப்போது போனான் என்ற விஷயம் அவனுக்குத் தெரியவேண்டும். அவன் போகும்போது பைலி அடி வாங்கி சுயநினைவில்லாமல் கீழே கிடந்தான். பைலிக்கு அப்போது சுயநினைவு வந்தது என்று அவன் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டே இருந்தான்.

விஸ்வநாதன் எந்தக் கேள்விக்கும் தெரிவாகப் பதில் கூறவில்லை. எல்லாக் கேள்விகளுக்கும் அலட்சியமான முனகல்கள் மட்டுமே பதில்களாக இருந்தன.

“பைலியின் பிணத்தை முதல்ல பார்த்தது மீன் பிடிக்கிறவங்கதான். நல்லா வீங்கிப் போய் இருக்குது.”

“ஏரியிலா, கடலிலா?” - விஸ்வநாதனுக்கு அதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

“ஏரியில்...”

அந்தப் பதில் விஸ்வநாதனைக் கவலைப்படச் செய்தது. உடலில் என்றால், ஏரிக்கும் கடலுக்கும் நடுவிலிருந்து கரையில் கொண்டு போய் தள்ளியவன் தான்தான் என்று மனதில் திருப்திப்பட்டுக் கொள்ளலாம். அப்படியென்றால் இப்போது நடந்திருப்பது தன்னால் அல்ல என்று அவனுக்குத் தெரிந்துவிட்டது.

சோர்வடைந்து, தளர்ந்து, செயலற்றுப்போன ஒரு மனிதன் ஏரியில் மூழ்கி இறந்துவிட்டான் என்றே எல்லாரும் நினைத்திருக்கிறார்கள்!

“இன்னைக்கு ராத்திரி நான் வரமாட்டேன்” - கடைசியில் தயங்கிக் கொண்டே நாணு சொன்னான்.

“வரவேண்டாம்.”

“குழந்தைக்கு ஒண்ணுமே முடியல.”

“சரி...”

அவனுடைய பயத்தை விஸ்வநாதனால் புரிந்து கொள்ள முடிந்தது. பரிதாபமான ஒரு மனிதன்!

“இந்த வீட்டுல ராத்திரி தங்கி, தேவையில்லாம எதுக்கு போலீஸ்காரர்கள்கிட்ட அடி வாங்கணும்?”

இப்போது பைலியின் பிணம் போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்டிருக்கும். துணியால் மூடப்பட்டிருக்கும் பிணத்தை வாங்குவதற்காக அப்பச்சனும் அம்மிணியும் மருத்துவமனையில் காத்து நின்றிருப்பார்கள்.

13

ரவு முழுவதும் அவன் விழித்துக் கொண்டு படுத்திருந்தான். காய்ந்த இலைகள் காற்றில் பறக்கும்போதெல்லாம், அவன் திடுக்கிட்டு எழுந்திருப்பான். எதிரி வழிவாங்கும் எண்ணத்துடன் கட்டாயம் வருவான் என்ற உறுதியான நம்பிக்கை அவனுக்கு இருந்தது.

அப்பச்சன் வருவான் என்று அவன் நினைக்கவில்லை. கமலாக்ஷியின் மகனை நேருக்கு நேர் பார்த்துப் பேச அவனுக்குக் கஷ்டமாக இருக்கும் என்று விஸ்வநாதனுக்குப் பட்டது. அவன் எதிர்பார்த்தது முழுவதும் அம்மிணியைத்தான். வாசுவின் மகனைப்போலத் தானே பைலியின் மகளும்!

நினைத்துப் பார்க்கும்போது எல்லாமே எதிர்பாராமல் நடந்த விஷயங்கள்தான். அவளுக்கு அவனிடம் காதலோ, மோகமோ எதுவும் இல்லை என்பது தெளிவு. சதையின் மொழி மட்டுமே விஸ்வநாதனுக்குத் தெரியும். அம்மிணிக்கு மற்றொரு மொழி தெரிவது மாதிரி தெரியவில்லை. ஒன்றுசேரும் நிமிடங்களை ஓடவிடாமற் செய்ய வேண்டுமென்ற, மதிப்பு மிக்கதாக ஆக்க வேண்டுமென்ற விருப்பம் அவளுக்கு இருக்கிறது. அதைத்தாண்டி எதுவும் இல்லை.

இரவு நீண்டு கொண்டேயிருந்தது. எந்தச் சலனமும் இல்லாத முற்றம். இடையில் அவ்வப்போது ஒற்றையடிப்பாதையில் மெதுவான குரலில் பேசியவாறு நடந்து செல்லும் மனிதர்கள்... நிறுத்தாமல் கத்திக் கொண்டிருக்கின்ற வண்டுகள்... இடையில் கொஞ்சம் பெய்து மறைந்த சாரல் மழை...

நள்ளிரவு நேரத்திற்குச் சற்று முன்னால் அவன் சாமான்களைப் பெட்டியில் அடுக்கி வைத்தான். பொழுது புலர்வதற்கு முன்பு அவன் ஊரைவிட்டுக் கிளம்பிவிட வேண்டும். அதற்கு முன்னால் அவன் செய்ய வேண்டிய ஒரு வேலை இருக்கிறது.

அவன் வெளியில் இறங்கினான். இரவின் கடைசி மிதி கல்லில் சாய்ந்து உட்கார்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் கிராமத்தின் குறட்டை ஒலியைக் கேட்டுக் கொண்டே அவன் நடந்தான்.


14

ள் அரவமற்ற முற்றத்தில் விஸ்வநாதன் நின்றான். தலைக்குள் மரத்துப்போன மாதிரி ஒருவித அமைதி.

சிறிது கூட அவன் இதை எதிர்பார்க்கவில்லை. ஆள் இல்லாத வீடு. யாரும் இல்லாத முற்றம்.

திறந்து கிடக்கும் வாசற் கதவுகள். வனமாக உள்ளே நுழைந்து ஆராய்ந்த போது கண்ணில் பட்டவை வெறுமனே கிடக்கும் அறைகள் மட்டுமே.

வீட்டுச் சாமான்களைக் கூட காணவில்லை. வாசலில் இருந்த வாத்துக்களையும். அப்பச்சன் போய்விட்டான். அம்மிணி போய் விட்டாள். வாத்துக்கள் கூட்டம் போய்விட்டது. எல்லோரும் போய்விட்டார்கள்.

‘நான் மட்டும் இங்கே இருக்கேன்’- அவன் தனக்குள் கூறிக் கொண்டான்.

இதை எல்லாம் நினைத்துப் பார்க்கும் மனநிலையில் இப்போது அவன் இல்லை. அவனுக்கு முன்னால் ஒரு காட்சி தெரிகிறது.

இருட்டுக்கு மத்தியில், உறக்கச் சுவடுகள் நீந்திச் செல்லும் வாத்துகள்.

படகில் அழுது கொண்டிருக்கும் இளம் பெண்.

கவனமாக, முழு பலத்தையும் பயன்படுத்தி துடுப்புப் போடும் கைகள்.

அந்தக் கைகளில் பயத்தின் நடுக்கம் தெரிகிறதா?

பழைய உறவின் சங்கிலிகள் அந்தக் கைகளில் அறுந்து தோங்கிக் கொண்டிருக்கின்றனவா, சுதந்திரமற்ற கைகள் செலுத்திக் கொண்டு போகும் படகு எங்கேயாவது போய்ச் சேருமா?

அவர்கள் எங்கு போகிறார்கள்?

விஸ்வநாதனுக்குத் தெரியாது.

விஸ்வநாதனுக்குத் தன்னுடைய இலக்கு என்ன என்றுகூட தெரியாது.

நாளை கிராமம் கண்விழிப்பது புதிய ஒரு கதையுடன் இருக்கும். ஒவ்வொருவரும் அவரவர்களுக்குத் தோன்றியதைக் கூறுவார்கள்.

இந்த ஊரில் கதைகள் முளைப்பதற்கும் வளர்வதற்கும் ஏற்ற மண் இருக்கவே இருக்கிறது. அவை முளைக்கட்டும். வளரட்டும். தூரமான காலத்திற்கு அப்பால் எங்கேயாவது போய் அழுகிச் சாகட்டும்!

வாத்துகளுக்கு உணவு வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் காலியாக இருக்கும் கூடைகள். முற்றத்தில் தவழ்ந்து கொண்டிருக்கும் குளிர்ந்த காற்றில் வாத்துக்களின் வாசனை.

15

‘நான் எங்கே போறேன்?’

-விஸ்வநாதன் தன்னைத்தானே கேட்டுக் கொண்டான். யாரும் எங்கிருந்தும் பதில் எதுவும் சொல்லவில்லை என்பது தெரிந்ததும், மெல்லிய ஒரு சுகத்தை அவன் உணர்ந்தான்.

நீரோட்டத்தினூடே படகு வேகமாக ஓடியது. உறங்கிக் கொண்டிருந்த கரைகள் பின்னோக்கிச் சரிந்து விழுந்தன.

படகின் முனையால் கிழித்த நீர் மட்டும் கண்களில் வந்து தெரித்துக் கொண்டிருந்தது.

இருண்ட ஆறு. நீரோட்டத்தில் மூழ்கி இறந்த ஆறு.

விஸ்வநாதன் மல்லாந்து படுத்திருந்தான்.

தலைக்குள் என்ன இருக்கிறது?

ஒன்றுமில்லை.

இன்று இரவு மலரும் இதற்கு முன்பு சந்தித்திராத? சந்தோஷத்தின் எதிர்பாராத நிமிடங்களா?

நிச்சயமில்லை.

தூரத்தில், பொழுது புலர்வதற்கான அறிகுறி. படகின் படிகளில் உட்கார்ந்துகொண்டு, தாடையில் கை வைத்தவாறு விஸ்வநாதன் அதைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

படகு ஒருமுறை மேலே குதித்து மீண்டும் தன் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தது. நீரோட்டம் அதிகரித்துக் கொண்டிருந்தது. தூரத்தில் ஒரு திருப்பத்தில் சூரியனின் கதிர்கள் ‘பளிச்’சென தெரிந்தன.

படகு அந்தத் திருப்பத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது. கவனமாக இல்லையென்றால் படகு சாய்ந்துவிடும்.

விஸ்வநாதன் துடுப்பை எடுத்தான். படகின் வேகம் குறைந்தது.

கைகளின் சதைகளில் நீரோட்டத்தின் வலிமை கூர்மையான ஊசிகளைப்போல் தைத்தது.

படிப்படியாக வேகம் குறைந்த படகு, மிகவும் கவனமாக எச்சரிக்கை உணர்வுடன் திருப்பத்தில் திரும்பியது.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.