Logo

உருவப் படம்

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 5972
uruvap padam

சுகுமாரன் எனக்கு நன்கு தெரிந்தவன். என்னுடன் இருந்தவன். நாங்கள் மிகவும் நெருக்கமாகப் பழகக் கூடியவர்கள். இப்படியெல்லாம் கூறும்போது நாங்கள் நண்பர்களாக இருந்தோம் என்று நீங்கள் நினைக்க வழி இருக்கிறது. அப்படி நினைத்தால் அது சரியல்ல. சுகுமாரன் தாவும்போது கீழே விழுந்தவன் ஆயிற்றே! எது எப்படியோ அவன் ஒரு தனி டைப்.

நாம் எல்லோரும் புரிந்துகொள்ளும் அர்த்தத்தில் நட்பு என்ற உணர்வு அவனுக்கு இருந்ததா? எப்போதாவது? யாரிடமாவது? என்னுடனோ, பாஸ்கர மேனனுடனோ, ஸுஷமாவுடனோ? சந்தேகம்தான்.

தன்னுடைய சொந்த உடல்மீது மட்டுமே அவன் பிரியம் வைத்திருந்தான். சொந்த சதையை சொந்தத் திறமையை.

வாழ்வதற்கு அவன் உண்மையாகவே ஆசைப்பட்டானா? தான் சிரஞ்சீவி என்று அவன் நம்பியிருந்தானா?

ஒருமுறை அவன் சொன்னான்: ‘‘நான் மாஸ்டர்ஜியைவிட அதிக நாட்கள் வாழுவேன்’’

‘‘அப்படின்னா...?’’ - நான் கேட்டேன்.

‘‘நூற்று இருபது வயது வரை.’’

‘‘அந்த வயதுவரை வாழணுமா? எதை அடைவதற்காக நீட்டிப் பிடித்து வாழணும்?’’

‘‘ராஜப்பா, வாழ்ந்து கொண்டிருப்பது என்பதுதான் நோக்கம். நூற்று இருபது வயது. என்னால் அந்த மைல்கல்லை அடைய முடியாதா?

‘‘பிரார்த்தனை செய். நல்லது நடக்கட்டும்.’’

‘‘நிரந்தரமான உடற்பயிற்சி. அதுதான் என் பிரார்த்தனை.’’

எனக்கு சிரிப்பு வந்தது. அவனை கோபமடையச் செய்ய வேண்டும் என்பதற்காக நான் சொன்னேன். ‘‘அதிகமாக முறுக்கினால், கம்பி அறுந்திடும்.’’

‘‘அப்படின்னா? நான் ஜிம்கானாவுக்குப் போகக் கூடாதுன்றியா? உடற்பயிற்சியை நிறுத்தணும்ன்றியா?’’

‘‘நான் அப்படியா சொன்னேன்?’

‘‘பிறகு?’’

‘‘சுகு... நூற்று இருபதுன்னுதானே சொன்னே? அதை நினைக்கிறப்போ...?’’

‘‘ம்... சொல்லு...’’

நான் ஒரு கேள்வி கேட்டேன்: ‘‘சுகு, மிகவும் வேகமாக ஓடும் உயிரினம் எதுன்னு தெரியுமா?’’

‘‘நான் மடையன்! எனக்குத் தெரியாது...’’

‘‘க்ரே ஹௌண்ட்.’’

‘‘நாய்?’’

‘‘ஆமாம்... மிகவும் மெதுவாக ஓடுற உயிரினம் எது?’’

‘‘ராஜப்பா, நான் மீண்டும் மடையன்...’’

‘‘காலப்பகாஸ் தீவுகளில் இருக்கும் ஆமைகள். இந்த ஆமைகளைப் பற்றித்தான் நம்ம டார்வின் நீண்ட காலம் படித்தார். ஆமையின் சராசரி வயது உன் ஆசையைவிட நான்கு மடங்கு.’’

‘‘அப்படியா?’’

‘‘நானூற்று எண்பது வயது.’’

‘‘அந்த நாயின் வயது?’’

‘‘ஏழு... அதிகமா போனால் எட்டு.’’

‘‘ராஜப்பா, அப்படின்னா நான் சீக்கிரமா போயிடுவேனா என்ன?’’

இப்படி ஒரு உரையாடல் நடந்திருக்கவே கூடாது.

வருடங்கள் எத்தனையோ கடந்து போய்விட்டன!

இப்போதும் நான் சுகுமாரனைப் பற்றி நினைத்துப் பார்க்கிறேன்.

எனினும் எழுத உட்காரும்போது சந்தேகங்கள்.

அவனைப் பற்றி எனக்கு என்ன தெரியும்?

நிறைய...

நேரிலேயே பல விஷயங்களையும் பார்த்திருக்கிறேன்.

எனினும் பல விஷயங்களும் கேட்டுத் தெரிந்து கொண்டவைதாம்.

முதலில் விஷயத்தை ஆரம்பிக்கட்டுமா?

சுகுமாரனுக்குத் தன்னுடைய உடலைப்பற்றி மிகப் பெரிய மதிப்பு இருந்தது என்று நான்தான் சொன்னேனே?

உருக்கைப் போன்ற உடல்.

உருக்கலான கம்பிகளை அடுக்கி வைத்ததைப் போன்ற பரந்த மார்பு. சதைகள் துடிப்புடன் துள்ளிக் கொண்டிருக்கும் தோள் பகுதி. பெரிய வயிறு. அதில் வெட்டி உண்டாக்கப்பட்ட படிகளைப் போல இருக்கும் சதை மடிப்புகள். கையை மடக்கும்போது தேங்காய் அளவிற்கு ‘பைஸெப்ஸ்’ மேல்நோக்கி உருண்டு எழும். உடலுக்கு அளவெடுத்ததைப் போல் நல்ல வடிவம். அதில் எண்ணெய் தேய்த்து முடித்து சிறிது சாய்ந்துகொண்டே, அந்தத் தேங்காயைப்போல இருக்கும் சதையைச் திரளச்செய்து சிலையைப் போல நின்றால் நிச்சயம் அவன் ஒரு ‘மிஸ்டர் கேரளம்’தான் - ‘கேரளஸ்ரீ’.

‘சக்தி ஜிம்கானா’வின் உறுப்பினர்கள் எல்லோருக்கும் சுகுமாரனைப் பிடிக்கும் என்று கூறுவதற்கில்லை. பலருக்கும் அவன்மீது பொறாமை இருந்தது.

பாரலல் பாரிலும் வெயிட் லிஃப்டிலும் ரெஸ்லிங்கிலும் ரிங்க்ஸ் பயிற்சியிலும் முதன்மையாக இருந்தது சுகுமாரன்தான்.

அத்துடன் நின்றதா?

சில நாட்களாகவே சுகுமாரன் சக்தி ஜிம்கானாவின் தலைவர் பதவியையும் அலங்கரித்துக் கொண்டிருக்கிறான்.

‘அலங்கரித்தான்’ என்று கூறுவதுதானே சரி!

மாஸ்டர்ஜியின் ஆசை அதுதானே?

சக்தி ஜிம்கானாவின் நிறுவனர் வெள்ளை நிற மஸ்லின் துணியால் தலைப்பாகை கட்டி நடந்து கொண்டிருந்த மாஸ்டர்ஜி. தலைப்பாகைக்கு தோள்வரை தொங்கிக் கொண்டிருந்த வால் இருந்தது. தூங்குவதற்காகப் படுக்கும்போதுகூட அவர் அந்தத் தலைப்பாகையை அவிழ்க்க மாட்டார் என்பதுதான் உண்மை.

மாஸ்டர்ஜி மரணத்தைத் தழுவுவார் என்பதை யாரும் நினைக்கவில்லை. பிறப்பவர்கள் எல்லோரும் இறக்கத்தானே வேண்டும்? ஆனால், மாஸ்டர்ஜியைப் பார்க்கும்போது, யாரும் மரணத்தைப் பற்றிச் சிறிதும் எண்ணவேயில்லை. பிரகாசமான கண்கள். சற்று பெரிதாக இருக்கும் மூக்கு. அதற்குக் கீழே பெரிய ஹேண்டில் பார் மீசை. ஏதோ ஒரு கட்டத்தில் வயது அதிகமாவது ‘ஹால்ட்’ அடித்து நின்று விட்டதைப்போல ஒரே சுறுசுறுப்பு. நிற்கும்போதும் நடக்கும்போதும் அமர்ந்திருக்கும்போதும் என்ன மிடுக்கு!

ஆனால், மாஸ்டர்ஜி இறந்துவிட்டார்.

ஒரு அருமையான விருந்து சாப்பிட்ட பிறகு சற்று ஓய்வெடுக்கலாம் என்று அவர் படுத்தார். குறட்டை விட்டவாறு தூங்கினார். எப்போது குறட்டைச் சத்தமும் மூச்சும் நின்றன?

எல்லோரும் சொன்னார்கள்: ‘‘கொடுத்து வச்சவர்.’’

வலி இல்லாமல் சிறிதும் கஷ்டப்படாமல் தூங்கும்போது இறப்பது என்பது கொடுத்து வைத்த ஒரு விஷயம்தானே?

மாஸ்டருக்கு அப்போது என்ன வயது?

அதைப்பற்றி மாறுபட்ட கருத்துகள் இருந்தன.

எழுபத்தைந்து என்று சிலர் சொன்னார்கள்.

என் கணக்கு எண்பதிற்கும் மேல் என்றிருந்தது.

சுகுமாரன் என்னைத் திருத்தினான். அவன் கணக்குப் போட்டான். ஸ்ரீ மூலம் திருநாள் மகாராஜாவின் தலைமையில் நடைபெற்ற ஜூனியர் பிரிவு குஸ்திப் போட்டியில் முதலாவதாக வெற்றி பெற்றவர் மாஸ்டர்ஜிதானே? அப்போது அய்யப்பன் பிள்ளை என்பதுதான் மாஸ்டர்ஜியின் பெயராக இருந்தது. இந்த விஷயத்தை மாஸ்டர்ஜியே ஒரு முறை கூறினார் என்று சுகுமாரன் சொன்னான். அவர் தன்னைப் பற்றிய விவரங்களைத் தெளிவாகக் கூறியிருந்தார். குஸ்திப்போட்டிக்குத் தலைமை தாங்கிய மகாராஜா பரிசாகத் தந்த தங்கமெடலில் அய்யப்பன் பிள்ளை என்ற பெயரும் தேதியும் மாதமும் வருடமும் பொறிக்கப்பட்டிருந்தன.

12, மீனம், 1082.

கொல்ல வருடம் 1082.

அப்போது மாஸ்டருக்கு பதினாறு வயது நடந்து கொண்டிருந்தது என்று கணக்குப் போட்டால்...

மரணம் நடக்கும்போது வயது நூற்று நான்கு...

நூற்று இருபது வயதுவரை வாழ வேண்டும் என்று மாஸ்டர்ஜி ஆசைப்பட்டாரா?

இறப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னால், ஜிம்கானாவில் நானும் இருந்தபோது மாஸ்டர்ஜி சுகுமாரனிடம் கூறினார்: ‘‘டேய் சுகு, எனக்கு எல்லாமும் இதுதான். இந்த ஜிம்கானா! என்னுடைய காலத்திற்குப் பிறகு நீ இதை நல்லபடியா நடத்தணும்.’’

சுகுமாரன் என்னையும் மாஸ்டர்ஜியையும் மாறி மாறிப் பார்த்தான்.


‘‘காலத்திற்குப் பிறகா? என்ன அப்படிப் பேசுறீங்க? மாஸ்டர்ஜி, நீங்க எப்பவும் எங்களுடன் இருப்பீங்க?’’ -சுகு சொன்னான்.

மாஸ்டர்ஜி தலையை ஆட்டினார். அவர் சொன்னார்: ‘‘ஆமாம்... ஆமாம். இன்னும் நேரம் இருக்கு. எனக்கு மரணபயம் இல்ல. மரணத்தைப்பற்றி எதற்காக நான் சிந்திக்கணும்? மரணத்தையும் மதிய நேர சூரியனையும் நாம பார்க்கக் கூடாது... தெரியுமா? ம்... நான் என்ன சொன்னேன்? என்னைக்காவது சுகு, நீ இந்த ஜிம்கானாவின் பொறுப்பை ஏற்க வேண்டியது இருக்கும். நான் சொல்ல நினைச்சது அதைத்தான்.

2

க்தி ஜிம்கானா.

பல வருடங்களுக்கு முன்னால்-

சுகுமாரன் வருவதற்கு முன்பே நான் ஜிம்கானாவில் உறுப்பினராக இருந்தேன்.

ஒரு மாலைநேரம். நானும் வேறு சிலரும் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தோம். மாஸ்டர்ஜி மேஜைக்கு அருகில் நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்துகொண்டு பீடி புகைத்துக் கொண்டிருந்தார். (உடற்பயிற்சிக்கு கேடு விளைவிக்கக் கூடிய அவரிடமிருந்த ஒரே பழக்கம்)

அப்போதுதான் சுகுமாரன் அங்கு வந்தான். அவன் மேஜைக்கு அருகில் வந்தான்.

‘‘என்ன?’’ - மாஸ்டர்ஜியின் கம்பீரமான கேள்வி.

‘‘ஜிம்கானாவில் சேர்வதற்காக வந்திருக்கேன்’’ - சுகுமாரன் பதில்.

அந்த பதில் மாஸ்டர்ஜிக்கு ஒரு தமாஷான விஷயமாகத் தோன்றியிருக்குமோ? அவர் மெதுவாகச் சிரித்தார்.

அன்று சுகுமாரன் மிகவும் மெலிந்துபோய் காணப்பட்டான். ‘எலும்பும் தோலுமாக இருப்பவனுக்கு இங்கு என்ன வேலை?’ என்று மாஸ்டர்ஜிக்குத் தோன்றியிருக்குமோ? அதனால்தான் அவர் சிரித்திருப்பாரோ?

சுகுமாரன் சுற்றிலும் பார்த்தான். என்னையும் நண்பர்களையும் பார்த்தான். நாங்கள் நல்ல சதைப் பிடிப்புடன் இருப்பவர்கள். கர்லாவைச் சுற்றுபவர்கள். பாரில் வித்தைகளைக் காட்டுபவர்கள். ரிங்க்ஸில் விளையாடுபவர்கள்.

‘‘என்ன பேரு?’’ - மாஸ்டர்ஜி கேட்டார்.

‘‘சுகுமாரன்.’’

‘‘தினமும் வர முடியுமா?’’

‘‘தினமும் வர்றேன்.’’

‘‘சரியான நேரத்துல... ரெகுலரா...?’’

‘‘வர்றேன்.’’

அப்போது மாஸ்டர்ஜி என்னை அழைத்தார்,.

‘‘ராஜப்பா!’’

நான் அருகில் சென்றேன். மேஜைமீது விரல்களால் தட்டித் தாளம் போட்டவாறு மாஸ்டர்ஜி சொன்னார்: ‘‘ராஜப்பா, இவன் பேரு சுகுமாரன். உடலைப் பார்த்தியா? பரிதாபமா இருக்கு. ஆனால், சரி பண்ணலாம். ஒண்ணு மட்டும்... ரெகுலரா வரணும். என்ன?’’

‘‘ஆமாம்... மாஸ்டர்ஜி’’ - நான் சொன்னேன்.

மாஸ்டர்ஜி மேஜை ட்ராயரைத் திறந்து ஒரு மனுவை வெளியே எடுத்தார்: ‘‘சுகுமாரா, இதை நிரப்பு...’’

சுகுமாரன் அந்த மனுவை நிரப்பினான். நுழைவுக் கட்டணத்தைச் செலுத்தினான். மாஸ்டர்ஜி எழுந்து அன்புடன் சுகுமாரனின் முதுகைத் தட்டினார்.

‘‘சுகு, டிப்ஸ்...’’ - பயிற்சி செய்ய மாஸ்டர்ஜி உத்தரவிட்டார்.

இப்படித்தான் ஆரம்பமானது. அப்போது சுகுமாரன் ஜூனியர் பி.ஏ., படித்துக் கொண்டிருந்தான். நான் ஜூனியர் பி.எஸ்ஸி., படித்துக் கொண்டிருந்தேன்.

எலும்பும் தோலுமாக இருந்த சுகுமாரன் இரண்டு வருடங்களில் ஜிம்கானாவின் குறிப்பிடத்தக்க பலசாலியாக மாறினான்.

நாங்கள் பட்டம் பெற்றோம்.

‘இனி என்ன?’ என்ற கேள்வி எழுந்தது.

சுகுமாரன் போலீஸ் துறையில் சேர வேண்டுமென்று மாஸ்டர்ஜி விரும்பினார். அதற்கான தைரியமும், உடல் வலிமையும்தான் அவனுக்கு இருந்தனவே! மிக விரைவிலேயே இன்ஸ்பெக்டர்களுக்கான தேர்வு நடக்கப் போவதாகச் சொன்னார்கள்.

‘‘நான் என்ன செய்றது?’’ - நான் மாஸ்டர்ஜியின் அறிவுரையைக் கேட்டேன்.

சிரித்துக்கொண்டே மாஸ்டர்ஜி சொன்னார்: ‘‘உனக்கு வலிமையும், கம்பீரமும் இல்லைன்னு இல்லை. ஆனால், சுகுமாரன் அளவிற்கு இல்ல... பிறகு... நீ ஒரு வாயாடி ஆச்சே! வக்கீலாக ஆகு!’’

நான் சட்டக்கல்லூரியில் சேர்ந்தேன்.

சுகுமாரனும் அங்குதான் வந்தான். போலீஸ் ‘உத்தியோகம்’ அவனுடைய வீட்டில் உள்ளவர்களுக்குப் பிடிக்கவில்லை. புகழ்பெற்ற சங்கரத்து குடும்பத்திலிருந்து அன்று வரை காவல் துறையில் யாரும் நுழைந்ததில்லை. ‘போக்கிடம் இல்லையென்றால் போலீஸ்’ என்றுதானே பலரும் கூறிக் கொண்டிருக்கிறார்கள்! அந்த அளவிற்கு மோசமான நிலையிலொன்றும் சங்கரத்து குடும்பம் இல்லையே! இல்லை, மோசமான நிலைமையில் இல்லை. குடும்பத்தின் பாரம்பரியப் பெருமைதான் என்ன! ஒன்று அரண்மனைச் சேவை. இல்லாவிட்டால் வக்கீல் பணியும் மக்களவையில் உறுப்பினராக இருப்பதும். ‘‘எது எப்படியோ... நீ காக்கித்தோல் அணியவே வேண்டாம் சுகுமாரா.’’ குடும்பத்தின் பெரியவர் சொன்னார்.

நானும் சுகுமாரனும் ஒரே ஹாஸ்டலில் தங்கினோம்.

தான்தோன்றிகள் பலர் ஒன்று சேர்ந்த இடமாக இருந்தது சட்டக் கல்லூரி. சொல்லப்போனால் அங்கு இருப்பதே மனதிற்கு சோர்வைத் தரக்கூடிய ஒரு விஷயமாக இருந்தது. ரோமன் சட்டமும் ஜூரிஸ் ப்ரூடன்ஸும் 1935-ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தின் சட்டமும்... இப்படிப் பலவும் இருந்ததால் பலரும் வகுப்பை ‘கட்’ பண்ணிவிட்டு வெளியே போனார்கள். வேறொன்றும் கையில் கிடைக்காததால், இங்கு... இந்த வழியிலிருந்த கோவிலில் வந்து மாட்டிக்கொண்டோம்... இதுதான் அங்கிருந்த பலரின் எண்ணமாகவும் இருந்தது. ஒழுங்காக வகுப்பிற்குச் சென்றவர்கள் தலைமைச் செயலகத்தின் க்ளார்க்குகள் மட்டும்தான். சட்டப்படிப்பில் பட்டம் பெற்றால் அவர்களுக்கு வேலையில் ப்ரமோஷன் கிடைக்கும். ஏணிப்படிகளில் ஏறலாம். இந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள் பிரம்பை விழுங்கி விட்டதைப்போல் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு முதல் வரிசையில் உட்கார்ந்திருப்பார்கள்.

சட்டம் படிக்க வந்த சிலர் எந்த நேரமும் அரசியலைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பார்கள். என்னையும் சேர்த்துதான் இந்தக் கூட்டத்தின் தலைவனாக பாஸ்கர மேனன் இருந்தான். பார்ப்பதற்கு அழகான தோற்றத்தைக் கொண்டவன். எப்போதும் கருப்புக் கண்ணாடியை அணிந்து நடந்து கொண்டிருப்பவன். மார்க்ஸிசத்தைக் கரைத்துக் குடித்திருப்பவன். வாயாடி பாஸ்கரனின் ஆதரவாளர்களான நாங்கள். வகுப்பில் ஆஜராகியிருக்கும் தகவலை வெளிக்காட்டியவுடன் வெளியேறி வந்துவிடுவோம். கல்லூரிக்கு எதிரில் இருக்கும் அண்ணாச்சியின் வெற்றிலை பாக்கு கடையில் கூட்டமாகப் போய் நிற்போம். அங்கு கணக்கில் சிகரெட், வெற்றிலை பாக்கு ஆகியவற்றை வாங்கலாம். கையில் காசு இருந்தால் சற்று தள்ளி இருந்த இந்தியா காஃபி ஹவுஸைத் தேடிச் செல்வோம். ஒரு கோப்பை காஃபியின் சக்தி போதும் - நீண்ட விவாதங்களுக்கு! இந்தியாவின் சுதந்திரம்... சோசலிஸம்... ஆன்ட்டி ஃபாசிஸம்...

சுகுமாரனை இந்த தான்தோன்றித்தனமானவர்களின் பட்டியலில் சேர்க்க மிகவும் சிரமப்பட வேண்டியது இருந்தது. என்றாலும் அவனும் வகுப்பை ‘கட்’ பண்ணப் பழகிக் கொண்டான். ஆனால், கூட்டத்தில் சேரவும் அரசியலைப் பற்றி விவாதம் செய்யவும் அவன் தயாராக இல்லை. குஸ்திக்காரனைப் போல நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு கல்லூரி எல்லைக்குள் அவன் வெறுமனே நடந்து கொண்டிருப்பான். சில நேரங்களில் கல்லூரி நடந்து கொண்டிருக்கும்போது - மாலை வேளைகளில் எப்போதும் வருவதற்கும் மேலாக - ஜிம்கானாவிற்கு வருவான்... உடற்பயிற்சி செய்ய. பகல் நேரத்தில் ஜிம்கானாவில் கூட்டம் இருக்காது. இந்தப் பகலில் வரும் வருகைதான் சுகுமாரனை மாஸ்டர்ஜியின் ‘செல்லப்பிள்ளை’யாக ஆக்கியிருக்க வேண்டும்.


ஹாஸ்டலிலும் சுகுமாரன் தனிமை விரும்பியாகத்தான் இருப்பான். பாஸ்கரனும் நானும் மட்டுமே அவனுடன் நட்புணர்வுடன் நடப்போம். உடலைச் சீராக வைத்துக் கொண்டு நடந்த, குஸ்தி போஸ் தந்து கொண்டிருந்த சுகுவை ஹாஸ்டலில் தங்கியிருந்த பெரும்பாலான மாணவர்கள் கிண்டலாகப் பார்த்தார்கள். பாஸ்கரன் பல நேரங்களில் இரட்டை வேடங்களில் நடித்தான். சுகுவை ‘‘எஜமானே!’’ என்று அழைப்பான் ‘‘எஜமானா!’’ என்று யாராவது கேட்டால், ‘‘பிறகு என்ன? சங்கரத்து ஃப்யூடல் குடும்பத்தின் இளவரசன் ஆயிற்றே அவன்!’’ என்பான் அவன்.

இந்த பாஸ்கர மேனன்தான் சுகுவிற்குப் பட்டப்பெயர் வைத்தவன். பெயர் - ‘தடிமாடன்.’

இப்படி ஒரு பட்டப்பெயர் தனக்கு இருக்கிறது என்ற விஷயமே சில நாட்களுக்குப் பிறகுதான் சுகுவிற்குத் தெரியும். எனினும் அந்தப் பெயரை வைத்தது பாஸ்கரன் என்ற விஷயம் சுகுவிற்குத் தெரியாது. அந்த விஷயமே தனக்குத் தெரியாதது மாதிரி சுகு காட்டிக் கொண்டான். அதுதானே உண்மை! எனினும், இது ஹாஸ்டலாயிற்றே! பின்னாலிருந்து பலரும் கேலி பண்ணிச் சிரிக்கலாம். ஆனால், அவன் கேரளத்தின் மண் வாசனையுடன் திரிபவன் அல்ல. அதாவது அவன் முப்பத்தேழாம் எண் அறையில் இருக்கும் அரைக்கிறுக்கு கவிஞனான சந்திரன் அல்ல. சந்திரன் வேர்ட்ஸ்வர்த்தைப் பின்பற்றித்தான் கவிதைகளே படைப்பான். அந்த ஆங்கிலக் கவிஞன் ‘இயற்கைக் கவிஞன்’ என்ற பெயரைப் பெற்றவனாயிற்றே! இயற்கையை வழிபடுபவன். இப்படி சில விஷயங்களைக் கூறிக் கூறியே சந்திரனை சிலர் கேரளத்தின் இயற்கைக் கவிஞனாக ஆக்கிவிட்டார்கள். அந்த அப்பிராணியை ‘டேய் கேரள இயற்கை!’ என்று முகத்திற்கு நேராக அழைக்கவும் சிலர் தயாராக இருந்தார்கள். கவிஞன், மெலிந்த உடலைக் கொண்டவன். பேசாமல் நடந்து செல்வான் - பரிதாபமான அரைப் புன்னகையுடன்.

எது எப்படியோ, சுகுமாரனுடைய முகத்தைப் பார்த்து ‘தடிமடா’ என்று அழைக்க யாருக்கும் தைரியம் இல்லை. அந்த வகையில் நல்லதுதான்.

இனி... அல்ல... அதாவது... ஒருவேளை... யாராவது நேரில் அப்படி அழைத்து விடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். என்ன செய்ய முடியும்? பலத்தைக் காட்டுவதற்கு வழியில்லை. அப்படி அழைத்தவனைக் கையில் பிடித்தால், அவனுடைய எலும்புகள் நொறுங்கிப் போகும். கொலை வழக்கில் குற்றவாளியாக முடியாது.

இப்படியெல்லாம் சுகுமாரன் சிந்தித்திருக்க வேண்டும். எனினும், ஒருமுறை சுகுமாரனுக்குத் தன்னுடைய கட்டுப்பாட்டை மீறவேண்டிய சூழ்நிலை உண்டானது.

அதற்குக் காரணமாக இருந்தது - ஒரு கார்ட்டூன்.

சுகுவின் ஆண்மையைக் கிண்டல் பண்ணுகிற மாதிரியான கார்ட்டூன் அது. ஹாஸ்டல் அறிவிப்புப் பலகையில் ஒருநாள் கேலிச்சித்திரம் இருந்தது. ஒரு தடிமனான மனிதனின் நிர்வாணப் படம்... அவனுடைய தொடைக்கு நடுவில் தொப்புளுக்குக் கீழே, ஒரு ஆலிலை வரையப்பட்டிருந்தது. ஆதாமின் ‘ஃபிக் லீஃப்’ என்பது மாதிரி.

படத்திற்குக் கீழே எழுதப்பட்டிருந்தது...

‘தடிமாடன் எல்லாவற்றையும் வளர்த்துக் கொள்கிறான் ஆண்மையைத் தவிர...’

அறிவிப்புப் பலகைக்கு அருகில் ஐந்தெட்டுப் பேர் கூட்டமாக நின்று சிரித்துக் கொண்டிருக்கும்போது, சுகுமாரன் அந்தப் பக்கமாகக் கடந்து சென்றான். அவனைப் பார்த்ததும் அங்கு குழுமி நின்றிருந்தவர்கள் சிதறி ஓடினார்கள்.

கார்ட்டூனைப் பார்த்த சுகுமாரன் பயங்கரமான கோபத்திற்கு ஆளானான்.

குஸ்தி போடுபவர்களும் ‘மஸில்மென்னும்’ சிறிய பிறப்பு உறுப்பைத்தான் கொண்டிருப்பார்கள் என்ற பொதுக்கருத்தை மனதில் வைத்துக் கொண்டு அவனைக் கேலி பண்ணியிருக்கிறான் அந்த கார்ட்டூனை வரைந்த ஓவியன்!

அதை வரைந்த ஓவியன் யாராக இருக்கும்? அந்தக் கேள்விக்கு ஒரே ஒரு பதில்தான் இருந்தது. ஹாஸ்டலில் ஒரே ஒரு ஓவியன்தான் இருக்கிறான்! இருபத்து இரண்டாம் எண் அறையில் இருக்கும் ஃபிலிப். முன்பு ஒருமுறை ஹாஸ்டலில் வார்டனின் கார்ட்டூனை இதே அறிவிப்புப் பலகையில் வரைந்து காட்சிக்கு வைத்திருந்தவன் அவன்தானே! அந்த கேலிச் சித்திரத்தில் வாழைக்குலையை கடித்துத் தின்று கொண்டிருக்கும் வவ்வாலாக மாறியிருந்தார் நல்ல மனிதரான வார்டன்.

சுகுமாரன் என்னுடைய அறைக்கு வந்தான் - சூறாவளியைப் போல.

‘‘ராஜப்பா, நான் இப்போ என்ன செய்யணும்?’’ - அவன் என்னிடம் கேட்டான்.

‘‘என்ன விஷயம் சுகு?’’

‘‘நீ அறிவிப்புப் பலகையைப் பார்த்தேல்ல?’’

‘‘ஓ! அந்த கார்ட்டூன்!’’

‘‘ராஜப்பா, அதை யார் வரைந்தது?’’

‘‘ஃபிலிப்.’’

‘‘நான் அவனைச் சும்மா விடமாட்டேன்’’ - சுகுமாரன் உரத்த குரலில் கத்தினான்.

‘‘விடு சுகுமாரா... டேக் இட் ஈஸி...’’

‘‘எனக்கு அறிவு குறைவுன்னு சொன்னா நான் பொறுத்துக்குவேன். ஆனால் ஆண்மைத் தன்மை இல்லாதவன் என்று சொன்னால்...! நான் அவனுக்கு ஒரு பாடம் கற்றுத் தரப்போறேன். நீ பார்க்குறியா?’’

என்னுடைய அறையிலிருந்து சுகுமாரன் வெளியேறினான். ஃபிலிப்பைக் கையால் இழுத்துக் கொண்டு திரும்பி வந்தான். ஃபிலிப் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தான். அறைக்கு வெளியே கூட்டம் கூடியது. கூக்குரல் எழுப்பினார்கள். மேனன்தான் முன் வரிசையில் நின்றிருந்தான்.

ஃபிலிப்பின் சட்டையைக் கொத்தாகப் பிடித்துக்கொண்டு சுகுமாரன் பல முறைகள் இப்படியும் அப்படியுமாக உலுக்கி எடுத்தான். பிடியை விட்டபோது ஃபிலிப் மேல்மூச்சு கீழ்மூச்சு விட்டவாறு சுவரில் மோதி நின்றான்.

சுகுமாரன் தன்னுடைய ஆடையைத் தூக்கிக் காட்டினான். ஃபிலிப்பைப் பார்த்தவாறு அவன் உரத்த குரலில் கத்தினான்... ‘‘பாருடா! அளந்து பாருடா...’’

ஆரவாரமும் கூவலும் உச்சத்தில் கேட்டன. அந்த நேரத்தில் மேனன் நிலைமையைச் சமாதானமாக்க முயற்சித்தான். எல்லோரையும் போகும்படி சொன்னான்.

இந்த ஒரு சம்பவத்தை மட்டும் நீக்கிவிட்டுப் பார்த்தால், சட்டப்படிப்பு படிக்கிற காலத்தில், ஞாபகத்திலிருந்து எடுத்துக் கூறுகிற அளவிற்கு வேறு ஏதாவது நடந்ததா?

நடந்ததே! காதல்!

3

சுகுமாரன் காதலிக்கிறானா? சாத்தியமே இல்லாத விஷயம். ஒரு இளம்பெண்ணை தன்னை நோக்கி இழுக்க, அவளுடைய இதயத்தைக் கவர்ந்தெடுக்க அவனால் முடியுமா? முடியாது என்றுதான் நான் நினைத்தேன். எனினும் எனக்கு தவறு உண்டாகிவிட்டதே!

நான் சுற்றி வளைத்துப் பேசவில்லை.

நான் பழைய கதையைக் கூறுகிறேன்.

நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இன்றைய சூழ்நிலை அல்ல. அன்றைக்கு இருந்த சூழ்நிலை காதலுக்கு சிறிதும் ஏற்றதாக இல்லை. அந்தப் பழைய காலத்தில் கல்லூரிகளில் படித்துக் கொண்டிருந்த இளம்பெண்கள் மனதில் தங்களின் தாய்மார்களைவிட வெட்கப்படுபவர்களாக இருந்தார்கள். அவர்கள் தலையைக் குனிந்துகொண்டு நடந்தார்கள். இளைஞர்களிடம் ஒரு வார்த்தைகூட அவர்கள் பேசமாட்டார்கள்.

என்னுடைய மொழியை கவனித்தீர்களா?

‘பெண்கள், ஆண்கள்’ என்று நான் கூறவில்லை. ‘இளைஞர்கள், இளம்பெண்கள்’ என்றே நான் கூறுகிறேன்.

தைரியசாலிகளான இளைஞர்கள் சில நேரங்களில் ‘கஸின்’ வேடம் அணிந்து மகளிர் ஹாஸ்டல்களுக்குள் நுழைந்துவிடுவார்கள். பல வேளைகளில் ஹாஸ்டல் வார்டன்களின் திட்டுகளை வாங்கிக் கொண்டு திரும்பி வருவார்கள்.


இந்தச் சூழ்நிலை மலர்ந்து கொண்டிருந்த காலத்தில்தான், ஒருநாள் என்னிடமும் பாஸ்கர மேனனிடமும் சுகுமாரன் சொன்னான்: ‘‘ராஜப்பா, பாஸ்கரா நான் ஒருத்தியைக் காதலிக்கிறேன்.’’

நாங்கள் நம்பவில்லை.

‘‘உனக்குக் காதலா? ஒன்வே ட்ராஃபிக்கா இருக்கும்’’ - நான் சொன்னேன்.

‘‘இல்லைடா...!’’

அவன் வரலாறு முழுவதையும் சொன்னான்: ‘‘நீங்க நினைக்கிறது மாதிரி நான் அந்த அளவுக்கு ரசிப்புத்தன்மை இல்லாதவன் இல்லை. என் இதயத்தில் கொஞ்சம் கவிதை இருக்கத்தான் செய்யுது...’’ - வன் தொடர்ந்து சொன்னான்.

‘‘நான் சில நேரங்கள்ல இங்கேயும் அங்கேயுமா கத்திக்கிட்டு இருப்பேன். பெண்கள் விடுதிக்கு முன்னால் அப்படி கத்தறது உண்டு. அப்படி சுற்றித் திரியப்போதான் ஸுஷமாவை நான் சந்திக்க நேர்ந்தது. நல்ல வெள்ளை நிறத்தைக்கொண்ட இளம்பெண். நட்சத்திரங்களைப்போல பிரகாசிக்கிற கண்கள். அடர்த்தியான தலைமுடி. தைக்காடு சாஸ்தா கோவிலுக்கு முன்னால்தான் நான் அவளை முதல் தடவையா பார்த்தேன். ‘இந்து இல்லத்’தில்தான் அப்போ அவள் தங்கியிருந்தாள். அதற்குப் பின்னால் அவளை ஒய்.டபிள்யூ.சி.க்கு முன்னால் பார்த்தேன். ஒரு தடவை அல்ல. பல தடவை. அவள் ‘இந்து இல்லத்’தை விட்டு எதற்காக வெளியேறினாளோ, தெரியவில்லை! நான் அவளைப் பார்த்துப் புன்னகைத்தேன். முதல்ல அவள் என்னைக் கண்டுகொள்ளவே இல்லை. நானா பின்வாங்குற ஆளு? கடைசியில ஒரு நாள் என்னைப் பார்த்து அவளும் புன்னகைத்தாள். அது ஒரு நல்ல சிக்னல்னு நான் நினைச்சேன். அதற்குப் பிறகு என்ன நடந்ததுன்னு தெரியுமா? ஒருநாள் அவள் என்னைப் பார்த்து ‘காச் மூச்’னு கத்த ஆரம்பிச்சிட்டா. ஹாஸ்டலுக்குப் பக்கத்துல இருக்குற பஸ் நிறுத்தத்துல வச்சு என்மீது கோபம் இருக்குறது மாதிரி காட்டிக் கொண்டு அவள், ‘‘நீங்க ஏன் என்னையே வெறிச்சுப் பார்க்குறீங்க? ஏன் பல்லைக் காட்டுறீங்க?’ன்னு கேட்டாள். அதற்கு நான் என்ன சொன்னேன் தெரியுமா? ‘நீ பார்க்குறதுக்கு அழகா இருக்கே. அதனால உன்னையே வெறிச்சுப் பார்த்தேன். பிறகு... பல்லைக் காட்டுறது - என் காதலை அறிவிப்பதற்காகன்னேன்.’’

இந்த அளவிற்குக் கேட்ட பிறகு, காதல் கதையில் சுவாரசியம் இருக்கிறது என்பதை பாஸ்கர மேனன் உணர்ந்துகொண்டான். மேனன் கேட்டான்: ‘‘இந்த மோதல், மேலும் அதிகமாக நெருங்குவதற்கும் காதலின் வெப்பம் நிறைந்த அடுத்தக் கட்டத்திற்கான பாதையைத் தயார் பண்ணுவதற்கும் உதவும். என்ன, நான் சொல்றது சரிதானா?’’

 ‘‘ஆமாம் பாஸ்கரா! ஒருவருக்கொருவர் காதல் கடிதம் எழுதுவது ஆரம்பமாகிவிட்டது.’’

‘‘அப்படின்னா இனிமேல் ஜிம்கானா மீது இருக்கும் ஆர்வம் குறையும்’’ - நான் சொன்னேன்.

‘‘எந்தச் சமயத்திலும் அது நடக்காது.’’

சுகு கையைச் சுருட்டினான்: ‘‘என் முதல் காதலி... என் ஃபஸ்ட் லவ்... ஜிம்கானாதான்.’’

அந்தக் காதல் வளர்ந்திருக்கலாம்.

சட்டக்கல்லூரி முதல் வருடப் படிப்பின்போது.

ஐ.என்.எ. தலைவர்களை விசாரிக்க முயன்ற ஆங்கிலேய அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம், ஆன்ட்டி - டிட்டன்ஷன் போராட்டம், பகுதி பகுதியாக தேர்வெழுதுவதற்கான போராட்டம்... இவற்றின் ஆரவாரத்திற்குள் பாஸ்கரமேனன் கழுத்துவரை மூழ்கிக் கிடந்தான். ஒன்றிரண்டு முறை அவன் கைதும் செய்யப்பட்டான். நான் எப்போதும்போல இங்குமங்குமாக சுற்றிக்கொண்டு திரிந்தேன். இதற்கிடையில் சுகுவின் காதல் நதி எப்படி ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை விசாரித்துத் தெரிந்துகொள்வதற்கும், ப்ராக்ரஸ் ரிப்போர்ட்களை வாங்குவதற்கும் எனக்கு நேரமில்லாமல் போய்விட்டது. இன்னொரு வகையில் மனம் திறந்து கூறுவதாக இருந்தால், எனக்கு அந்த விஷயத்தில் சிறிதும் ஆர்வம் இல்லை. எது எப்படி இருந்தாலும் காதல் என்ற விஷயம் அடங்கிப் போய்விடவில்லை என்பது மட்டும் உண்மை. சுகுவின் ஒரு படைப்பை வாசிக்கவேண்டிய கட்டாயம் எனக்கு உண்டானது என்ற விஷயத்தை நான் மறக்கவில்லை.

அந்தப் படைப்பின் பெயர் ‘ராகஸுஷமா.’

பல வரிகளும் சங்ஙம்புழையின் வரிகளாக இருந்தன.

நான் இரண்டாம் வருடத்திற்குத் தாவினேன்.

பி.எல். தேர்வு ஆரம்பமான நேரம்.

முதல் தாள் எழுதி முடித்தவுடன் சுகுமாரன் சொன்னான்:

‘‘நான் க்ளாஸ் வாங்கி வெற்றி பெறுவேன்.’’

எனக்கு தன்னம்பிக்கை குறைவாக இருந்தது.

பேரலல் பாரில் ஏறும்போது எந்த அளவிற்கு முழு ஈடுபாடு இருக்கிறதோ, அதே அளவிற்கு கட்டுப்பாடுடன் மனதை வைத்திருப்பதற்கும் அவற்றின் வெளி அம்சங்களுடன் போராடுவதற்கும் சுகுமாரனால் முடிந்தது. ஊர்வலம் போவதற்கும், சிறைக்குப் போவதற்கும் செலவிட்ட நேரத்திற்குப் பிறகு இருந்த நேரத்தில், ஒரே வாசிப்பில் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள பாஸ்கரனால் முடிந்தது. அவனுடைய தலை மிகவும் திறமை படைத்ததாக இருந்தது. சுகு கடுமையான உழைப்பாளி. நானோ? வெறும் ‘சாதா’... எப்போதும் வெறுமனே ஊர் சுற்றிக் கொண்டிருப்பவன்.

தேர்வு முடிந்தது.

பாஸ்கரனும் சுகுவும் நானும் காஃபி ஹவுஸில் ஒன்று சேர்ந்தோம். மிகவும் மென்மையான நிமிடங்கள்.

நான் அந்தக் காதல் கதையின் பழைய தோலை உரிக்கத் தயாரானேன்.

‘‘டேய், சுகு! உன் அந்தப் பொண்ணு இருக்காளே? ராகஸுஷமா... அவளோட தேர்வு முடிஞ்சிடுச்சா?’’

சுகு கைகளை அழுத்தினான். ‘‘டேய், ராஜப்பா... ராகஸுஷமா இல்ல... வெறும் ஸுஷமாதான்... அவளை நான் பார்த்தே எவ்வளவு நாட்களாயிடுச்சு! நடந்தவையெல்லாம் அர்த்தமே இல்லாத சம்பவங்கள் என்று நான் எழுதத் தயாராக இருந்தேன். அதற்கு நான் என்னைத் தயார்படுத்திட்டேன்னுகூட வச்சுக்கோ. ஆனால், அவள் மிகவும் தீவிரமா இருந்தது மாதிரி எனக்குப் பட்டது.’’

‘‘என்ன நடந்துச்சுடா?’’ - பாஸ்கர மேனன் கறுப்புக் கண்ணாடியைத் தூக்கிக் கொண்டே கேட்டான்.

‘‘பாஸ்கரா, இந்து சட்டம் பேப்பர் எழுதிய நாள்... சமீபத்தில்... அவளுடைய கடிதம் வந்தது. கடிதத்தில் உலர்ந்த ரோஜா இதழ்கள்... அவளுடைய வீட்டு முகவரி இருந்தது.’

‘‘எக்ஸலென்ட்! காதல் செழிப்பா வளரட்டும்!’’ - நான் வாழ்த்தினேன்.

"அரசியல் முருங்கைக்காயான நானும் வாழ்த்துறேன். சங்கரத்து ஃப்யூடல் பிரபுக்களுக்கு இந்த உறவு சம்மதிக்கக் கூடிய ஒன்றாக இருக்கட்டும்"- பாஸ்கரன் விளையாட்டுத்தனத்தைக் கலைத்தான்.

தேர்வு முடிந்ததும் ஊருக்குச் செல்வதில் நான் மிகவும் அவசரமாக இருந்தேன். காலடிக்கு அருகில் இருக்கும் கிராமப்பகுதி. வயதானதால் உண்டான உடல்நலக் குறைவுகளும், சிரமங்களும் கொண்ட தாய் - தந்தையுடன் சில வாரங்கள் இருந்தால் மனதிற்குச் சற்று சந்தோஷமாக இருக்கும். பிறகு... எவ்வளவோ வருடங்களாக நிறைவேற்றாமலே இருந்த ஒரு வாக்குறுதியை செயல்படுத்தியாக வேண்டும். என் தாயிடமும் ஜகதீஸ்வரனிடமும் கொடுத்த வாக்குறுதி... என் அன்னையுடன் சேர்ந்து போய் தோட்டுவா தேவரை வழிபட வேண்டும். நெய்விளக்கு ஏற்ற வேண்டும். முடிந்த அளவிற்கு தோட்டுவா தேவரின் திருமுற்றத்தில் பிராமணர்களுக்கு உணவு அளிக்க வேண்டும்.


தோட்டுவா ஆலயத்தில் தன்வந்திரி ஒளிமயமாகக் காட்சியளிக்கிறார். என் தாய் கடந்த பல நாட்களாகவே மிகவும் மனக்கவலையுடன் இருக்கிறார். தன்வந்திரி உதவி செய்யட்டும்.

தேர்வு முடிவு வந்தது.

‘அரசியல் முருங்கைக்காய்’ பாஸ்கர மேனன் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றான். க்ளாஸ் கிடைக்கவில்லையென்றாலும், சுகுமாரன் தடைகளைத் தாண்டி வெற்றி பீடத்தில் நின்று கொண்டிருந்தான். நான் வீழ்ச்சியடைந்தேன். மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்தேன். அதாவது தோற்றுவிட்டேன்.

தேர்வில் வெற்றி பெறுவதற்கு எந்த கோவிலுக்குச் சென்று வழிபட வேண்டும்?

காலடியில் இருப்பவர்களின் கிண்டல் அதிகமானபோது நான் ஓடினேன் - திருவனந்தபுரம் தெருக்களை நோக்கி.

அடுத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள அல்ல, அடுத்த தேர்விற்குத் தயார்பண்ணிக் கொள்ள அல்ல- என்ன காரணத்தாலோ இரண்டாவது தடவை பி.எல். தேர்வு எழுத வேண்டும் என்று தோன்றவில்லை. தோல்வியால் உண்டான அவமானம் மாற வேண்டும். மாற்ற வேண்டும். ஒரு வேலையைத் தேட வேண்டும். எந்தக் கழுதையின் கால்களைப் பிடிக்க வேண்டியது வந்தாலும் பிடித்து காரியத்தைச் சாதிக்க வேண்டும்.

சுகுமாரனும் தலைநகரத்தில் இருந்தான். ஒரு மூத்த வக்கீலின் சேம்பரில் பயிற்சி பெறுவதற்காக அவன் இருந்தான். பார் கவுன்சில் தேர்வுக்கு முன்னால் அன்றைய நடைமுறைக்கேற்றபடி அது ஒரு கட்டாயத் தேவையாக இருந்தது.

பாஸ்கரமேனனைப் பற்றிய தகவல்கள் எதுவும் தெரியவில்லை.

சுகுமாரனை எப்போதாவதுதான் நான் பார்ப்பேன். ஜிம்கானாவில்தான். அபூர்வமாக சாஸ்தாமங்கலத்தில் இருக்கும் அவனுடைய வாடகை வீட்டில் பார்ப்பேன்.

ஒரே ஒருமுறைதான் நான் ஸுஷமாவைப் பற்றி அவனிடம் கேட்டேன்.

‘‘உன் காதல் என்ன ஆச்சுடா?’’

‘‘நடந்துக்கிட்டுத்தான் இருக்கு.’’

‘‘கல்யாணம் எப்போ?’’

‘‘காலமும் பெரியவர்களின் சம்மதமும் ஒன்று சேரணுமே!’’ என்பது அவனுடைய பதிலாக இருந்தது.

ஜிம்கானாவில் ஒருமுறை நானும் சுகுமாரனும் சந்திக்கும்போது, மாஸ்டர்ஜியும் இருந்தார். அன்றுதான் - அப்படித்தான் நினைக்கிறேன் - சுகுவிடம் மாஸ்டர்ஜி சொன்னார்: ‘என் காலத்திற்குப் பிறகு நீ இதை கவனமா நடத்தணும்’ என்று.

மாஸ்டர்ஜியின் மரணத்திற்குப் பிறகு அவர் இருந்த இடத்திற்குப் பின்னால் இருந்த சுவரில் எண்ணெய் சாயத்தாலான ஓவியம் தொங்கிக் கொண்டிருந்தது. அதை வரைந்த ஓவியனுக்கு சுகுமாரன்தான் பணம் தந்தான்.

4

ரில் வேலை கிடைக்காது என்ற விஷயம் தெரிந்தவுடன், நான் பம்பாய்க்கு புகை வண்டி ஏறினேன். பம்பாய்க்குச் செல்லும் தகவலை நான் சுகுமாரனிடம் கூறவில்லை.

என்னுடைய ஒரு தூரத்து உறவினர் பம்பாயில் இருந்தார். ஸ்ரீதரன்பிள்ளை.

மோத்திபாய் அசோசியேட்ஸ் என்ற நிறுவனத்தில் சீனியர் ஸ்டெனோகிராஃபராக இருந்தாள் பிள்ளை. ஆனால் அது அவருடைய முக்கிய அடையாளம் இல்லை. கேரள சமாஜம் செயலாளர், ஆர்ய வைத்திய சாலையின் ஏஜெண்ட், காங்கிரஸ் செயல்வீரர்... இப்படி பல அடையாளங்களைக் கொண்டிருந்தார் பிள்ளை அண்ணன். ‘உதவும் குணம் உள்ளவர்’ என்பதையும் சேர்த்துக் கொண்டால்தான் அவரைப் பற்றிய ஒரு தெளிவான வரைபடம் நமக்குக் கிடைக்கும். வேலை தேடி பம்பாய்க்கு வரும் எந்த ஒரு மலையாளியும் பிள்ளை அண்ணனின் ஒரே ஒரு அறைகொண்ட ஃப்ளாட்டில் விரித்துப் படுக்கலாம். நானும் அங்கு சென்று விரிப்பை விரித்தேன்.

ஃப்ளாட்டில் தினமும் முதலில் கண் விழிப்பது பிள்ளைதான். எல்லோருக்கும் தேநீர் உண்டாக்கித் தருவார். ‘‘இது ஒரு சிரமமான காரியமாக இல்லையா?’’ என்று ஒருமுறை நான் கேட்டதற்கு பிள்ளை சொன்னார். ‘‘இது ஒரு வழக்கம் தம்பி! என் பானுமதி உயிரோடு இருந்தப்போகூட நான்தான் பெட் டீ உண்டாக்கித் தருவேன்’’ என்று.

மனைவி இல்லாத மனிதர். பிள்ளைகள் இல்லாதவர் குறிப்பாகச் சொல்கிற மாதிரி எந்த ஒரு லட்சியமும் அவருடைய வாழ்க்கையில் இல்லை.

எத்தனை நாட்கள் நான் இதே மாதிரி தேநீர் குடித்திருப்பேன்! எத்தனை நாட்கள் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’வில் ‘வேலை காலி’ பகதியைப் படித்திருப்பேன்! எனக்குப் பொருத்தமான ஒரு வேலையை பம்பாயால் தர முடியாது என்பது உறுதியாகத் தெரிந்துவிட்டது. என் மனம் இடி விழுந்ததைப்போல் ஆகிவிட்டது.

அதைப் புரிந்துகொண்டிருக்க வேண்டும்- ஒருநாள் பிள்ளை அண்ணன் சொன்னார்: ‘‘நான் மனம் திறந்து சில விஷயங்களைச் சொல்லணும்னு நினைக்கிறேன். வருத்தப்படக்கூடாது.’’

எனக்கு சிறிது ஆச்சரியம் உண்டானது.

‘‘அய்யோ! வருத்தப்படுவதா? அதுவும் அண்ணன் நீங்க சொல்றதைக் கேட்டா? நிச்சயம் இல்ல... என்னிடம் எதை வேண்டுமானாலும் நீங்க சொல்லலாம்.’’

‘‘ராஜப்பா, இங்கே எவ்வளவு நாட்கள் வேணும்னாலும் நீ தங்கலாம். இந்த ஃப்ளாட் உனக்குச் சொந்தமானதுன்னே வச்சுக்கோ. ஆனால், என் மனசுல ஒண்ணு தோணுது. நீ ஊருக்குத் திரும்பிப் போறதுதான் நல்லது.’’

என்னை உற்றுப் பார்த்துக்கொண்டே பிள்ளை அண்ணன் தொடர்ந்து சொன்னார்:

‘‘உனக்குப் பின்னால் வந்த பத்ரனுக்கும் சாக்கோவிற்கும் வேலை கிடைச்சிடுச்சு. க்ளார்க் வேலையும் டைப்பிஸ்டு வேலையும்தான். அந்த மாதிரியான வேலைகளை உன் மனசு ஏத்துக்காது. நீ படிச்சது டைப்பிங் இல்லையே! பி.எல்... அப்படித்தானே. அதில் கூட தேர்ச்சி பெறல... இந்த வியாபார நகரத்தின் சரியான இடங்களில் எங்கும் உனக்கு வேலை கிடைக்காது. அதற்குத் தேவையான தகுதிகள் எதுவும் உன்னிடம் இல்லையே! அதனால் நீ ஊருக்குத் திரும்பிப் போறதுதான் நல்லதுன்னு நான் நினைக்கிறேன். பி.எல். எழுதித் தேர்ச்சி பெறு! தொழில் சட்டத்தில் ஒரு டிப்ளமோ வாங்கு. அதற்குப் பிறகு இங்கே வா. ஏதாவதொரு தொழிற்சாலையில் வெல்ஃபர் ஆஃபீஸா வேலை கிடைக்கும்.’’

பம்பாயைத் தேடி வந்துவிட்டு, உடனடியாகத் திரும்பிச் செல்வதில் எனக்கு அந்த அளவிற்கு விருப்பமில்லை. ஒரு க்ளார்க்காக ஏதாவதொரு அலுவலகத்தில் இருந்துகொண்டு வேலை பார்ப்பது என்பது நான் விருப்பப்பட்ட ஒரு விஷயம் அல்ல என்பதென்னவோ உண்மை. மதிப்பு என்பதைப் பற்றி மனதில் நான் நினைத்து வைத்திருந்ததற்கு எதிராக இருந்தது க்ளார்க் வேலை. அந்த மாதிரிவேலை பள்ளி இறுதி வகுப்பு படித்தவர்களுக்கென்று இருப்பதாயிற்றே! தேர்வில் வெற்றி பெறவில்லையென்றாலும், பி.எல். படிப்பை முழுமையாக முடித்த எனக்கு ஏதாவதொரு சூப்பர்வைசர் போஸ்ட் கிடைக்கக்கூடிய அளவிற்குத் தகுதி இல்லையா என்ன என்ற எண்ணம் என் மனதில் உண்டானது. எனினும், பிள்ளை அண்ணனிடம் நான் அதைப்பற்றி எதுவும் சொல்லவில்லை. அவர் சொன்னதை ‘உம்’ கொட்டிக் கேட்டுக் கொண்டேன். அவ்வளவுதான்.

எட்டு பத்து நாட்களுக்குப் பிறகு என் தாயின் உடல்நலக் குறைவைப் பற்றி மனதில் கவலை உண்டாகிற மாதிரி கடிதம் கிடைத்தபோது, நான் ஒரு தீர்மானத்திற்கு வரவேண்டிய சூழ்நிலை உண்டானது. என் அன்னைக்காக இதுவரை எதுவும் செய்திராத நான் அவளுடைய இறுதி நாட்களிலாவது அவளுக்கருகில் இருக்க வேண்டாமா?


நான் ஊருக்கு வந்தேன்.

என் தாயைக் கொல்வதற்கு வந்த நோய் கேன்ஸர்.

எங்களுடைய வீட்டில் என்ன நடந்தது?

மரணமா?

இறப்பதற்காகப் படுத்திருந்த என் தாயிடம் சிறிதும் உற்சாகக் குறைவு உண்டாகவில்லை. என் தாய் சிரித்துக் கொண்டிருந்தாள். எல்லோரைப் பற்றியும் நலம் விசாரித்தாள்.

‘‘ம்... நீ வந்துட்டியா? இனி நான் சந்தோஷமா சாகலாம்.’’ - என்னைப் பார்த்தவுடன் என் தாய் சொன்ன வார்த்தைகள் இவை.

நான் அவளுக்கு ஒரே ஒரு மகன்.

சகோதரிகள் வந்து சேர்ந்தார்கள்.

வாத நோயாளியான என் தந்தை ஒரு பிரம்பு நாற்காலியில் படுத்திருந்தார். சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளும் சுயஉணர்வு அவருக்கு இல்லை.

எல்லோரும் மிகவும் கவலைப்பட்டார்கள். எல்லோரையும் பார்த்து என் தாய் சொன்னாள்:

‘‘எனக்கு வந்திருக்கும் நோய் என்னவென்று எனக்கு நல்லா தெரியும். அது முழுமையாகப் பரவிடுச்சு. இனி நான் உயிரோடு இருக்க முடியாது. பயனுள்ள வகையில் வாழ்ந்திருந்த காலம் முடிவடைகிறது. இனி எதற்கு சிகிச்சை செய்யணும்? இனிமேல் லைட் அடிக்க வேண்டாமென்று அந்த டாக்டரிடம் சொல்லிடுங்க. நான் போறதுக்கு பயப்படல. நான் மரணத்தை நெருங்கிட்டேன்...’’

‘கெமோத்தெரப்பி’ வேண்டாம் என்று என் தாய் உறுதியான குரலில் சொன்னாள். இரண்டு வாரங்களுக்கு முன்புதான் மருத்துவமனையில் இருந்தே திரும்பி வந்தோம். இனிமேல் அங்கு போக வேண்டியதில்லை.

டாக்டர் என்னிடம் சொன்னார்: ‘‘உங்க அம்மா மிகவும் தைரியம் கொண்ட ஒரு பெண்.’’

அதிலிருந்து பத்தாவது நாள் என் தாய் மரணத்தைத் தழுவினாள்.

கவலை உண்டானதா?

எனினும், அதை நான் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.

என் தாயின் மரணச் சடங்குகள் நடந்து முடிந்தன. சில நாட்கள் நான் காலடியிலேயே இருந்தேன். இனி என்ன செய்வது? பிள்ளை அண்ணன் கூறிய அறிவுரைகளை நான் நினைத்துப் பார்த்தேன். பி.எல். எழுதி, அதில் வெற்றி பெறவேண்டும். தொழில் சட்டத்தில் ஸ்பெஷல் டிப்ளமோ எதுவும் பெறவேண்டியதில்லை. வெல்ஃபர் ஆஃபீஸராக வேண்டும் என்றில்லை.

எதற்காக இனிமேல் பாம்பாய்க்குச் செல்ல வேண்டும்? ஒரு பெயர்ப்பலகையைத் தொங்கவிட்டுக் கொண்டு இந்த மண்ணிலேயே இருக்க வேண்டியதுதான் - ‘அட்வகேட் ராஜப்பன்’ அது மோசம் என்று கூற முடியாத அடையாளம் ஆயிற்றே!

நான் சுகுமாரனுக்குக் கடிதம் எழுதினேன் - அவனுடைய சாஸ்தாமங்கலம் முகவரிக்கு. காத்திருந்தேன். பதில் வரவில்லை.

எது எப்படி இருந்தாலும் திருவனந்தபுரத்திற்குப் போக வேண்டியதுதான்.

என்னுடைய கிராமப்பகுதி தேர்வுக்குத் தயார் பண்ணிக் கொள்வதற்க வசதிகள் இல்லாமல் இருந்தது.

5

>பு

‘‘டேய் ராஜப்பா.’’

திரும்பிப் பார்த்தேன். ஆச்சரியம்! அது பாஸ்கரமேனன்...

நாங்கள் ஒருவரையொருவர் விசாரித்துக் கொண்டோம்.

‘‘அந்த வகையில் நான் திரும்பவும் வந்திருக்கேன் - பி.எல்.லுடன் சண்டை போட...’’

‘‘சண்டையில் வெற்றிபெற்ற பிறகு...?’’

‘‘வக்கீல் வேலை...’’

‘‘அது மோசமான வேலை. அரசியலுக்கு வா. என்கூட இரு. அரசியலுக்கு இருக்குற கவர்ச்சி சாதாரணமானது இல்ல. இனிமேல் வர இருக்கும் வருடங்களில் அரசியல் அளவுக்கு நல்ல கேரியர் வேற ஒண்ணு இருக்காது.’’

நாங்கள் காஃபி ஹவுஸை நோக்கி நடந்தோம். அங்கு அமர்ந்திருக்கும்போது சுகுமாரன் எங்களின் உரையாடலுக்கான விஷயமாக ஆனான்.

‘‘பாவம் தடிமாடன். அவன் இப்போ ஒரு வித்தியாசமான பிறவியா ஆயிட்டான் ராஜப்பா! நான் இங்கு புளிமூட்டில் தங்க ஆரம்பிச்ச பிறகு, இரண்டு மூன்று தடவை அவனைப் பார்த்தேன். அவன் ஆளே மாறிப் போயிட்டான். முழுப் பையத்தியமா ஆயிட்டானோன்னு எனக்குச் சந்தேகம். ரொம்பவும் விலகித்தான் பழகினான். இல்ல... எனக்கு அப்படித் தோணுச்சு...’’

‘‘பாஸ்கரா, அவன் ப்ராக்டீஸ் பண்றானா?’’

‘‘வஞ்சியூரில் பெயர்ப்பலகை வச்சிருக்கான். என்ன ஆச்சோ தெரியல... பெரிய குடிகாரனா ஆயிட்டதா கேள்விப்பட்டேன். நீ அவனைத் தேடிப் பிடிப்பேல்ல...? என்ன, நான் சொல்றது சரிதானா? என்னைவிட நீ அவன்கூட மிகவும் நெருக்கமா இருந்தவனாச்சே!’’

‘‘பார்க்கணும்... ஃபார் ஓல்ட் டைம்ஸ் ஸேக்...’’

‘‘ஒரு விஷயம் மட்டும் சொல்றேன். இது ஒரு எச்சரிக்கை... கடவுளை மனசுல நினைச்சுக்கிட்டு அவனுடைய பழைய காதல விஷயத்தைப் பற்றி மட்டும் கேட்காதே!’’

பாஸ்கரன் இப்படித் தடுத்ததும், என்னுடைய ஆர்வம் அதிகமானது.

ஸுஷமா... நானும் பாஸ்கரனும் பார்த்திராத பெண்.

நான் கேட்டேன்: ‘‘உறவு எப்படி முடிந்தது?’’

சந்தோஷம் அளிக்காத கதையைக் கேட்க வேண்டிய சூழ்நிலை உண்டானது.

‘‘பி.எல். தேர்வு எழுதுறதுல தீவிரமாக இருந்ததால் அடிக்கடி அவளைச் சந்திக்க தடிமாடனுக்கு முடியல. ஆனால், அவன் அவளை மறக்கல. பார் கவுன்சில் தேர்வுக்குத் தயாராகும் போது மீண்டும் அவளைப் பார்க்க நேர்ந்தது. காதல் திரும்பவும் துளிர்த்தது. மலர்ந்தது. தடிமாடனின் குடும்பத்தின் அந்தஸ்து அவளின் குடும்பத்திற்கு இல்லை. சங்கரத்து குடும்பத்துடன் திருமண உறவு வைத்துக்கொள்ள ஸுஷமாவின் வீட்டைச் சேர்ந்தவர்களுக்கு சந்தோஷம்தான். செட்டிக் குளக்கரையிலிருக்கும் மதிப்பு மிக்க சங்கரத்து குடும்பம் எங்கே... வேங்பூரில் இருக்கும் நடுத்தரமான இளயம்வீடு எங்கே? தன்வீட்டில் இருக்கும் பெரியவர்களுடன் கலந்து ஆலோசிக்காமல் சுகுமாரன் விஷயத்தைமுடிவு செய்தபோது, பெரிய சூறாவளியே வீச ஆரம்பிச்சிடுச்சு. சங்கரத்து குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அதை பலமா எதிர்த்தாங்க. இந்த உறவு தொடரக்கூடாதுன்னு கட்டளை போட்டுட்டாங்க! சுகுமாரன் தடுமாறிப் போனான். குடும்பத்துடன் கொண்ட உறவை வேண்டாமென்று சொல்லி, அந்த உறவை முறித்துக் கொண்டு தன்னுடைய பங்கை வாங்கினான். திருமணம் நடந்தது. பெண் வீட்டைச் சேர்ந்தவர்கள் மட்டும் கலந்துகொண்ட நிகழ்ச்சி. ஸுஷமாவுடன் சேர்ந்து சுகு சாஸ்தாமங்கலத்தில் வாடகை வீட்டில் வாழ்க்கையைத் தொடங்கினான். அதற்குப் பிறகு நடந்தவை அனைத்தும் சிறிதும் எதிர்பார்க்காதவை. இரண்டு மாதங்களில் அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டார்கள். முறிந்த உறவு இப்போ விவாகரத்து வழக்கின் சிக்கல்களில் மாட்டிக்கொண்டு கிடக்குது.’’

இப்படியொரு கவலை தரும் முடிவு உண்டானதற்குக் காரணம் என்னவாக இருக்கும்?

அதைப்பற்றி கேட்டதற்கு, பாஸ்கரன் சொன்னான்:

‘‘பலவகைப்பட்ட கருத்துக்களும் இருக்கு. அவன் ஸுஷமாவை உடல் ரீதியான தொல்லைக்கு ஆளாக்கியிருக்கான். அவளுடைய அலறல் சத்தத்தைப் பல இரவுகளிலும் பக்கத்து வீடுகளைச் சேர்ந்தவர்கள் கேட்டிருக்காங்க. ஆனால், தடிமாடன் வெளியே தனக்கு சாதகமான ஒரு கதையைச் சொல்லிக்கிட்டு இருக்கான். அதிகமான நேரத்தை அவன் ஜிம்கானாவில் செலவழிப்பது அவளுக்குப் பிடிக்கவில்லையாம். அவளுக்கு அதனால் பொறாமை வந்திடுச்சாம்.


 ‘ஜிம்கானாதான் முதல் காதலியா? அப்படின்னா நான் போறேன்’னு அவள் சொல்லிட்டாளாம். அதனால அவங்க பிரிஞ்சிட்டாங்கன்னு நாம நம்பணும்...’’

திடீரென்று பாஸ்கரன் கேட்டான்: ‘‘முன்பு ஃபிலிப் வரைந்த கார்ட்டூன் ஞாபகத்துல இருக்குதா? அப்படி ஏதாவது காரணம்...’’

‘‘சிந்திக்க வேண்டிய விஷயம்தான்.’’

‘‘எது எப்படி வேணும்னாலும் இருக்கட்டும். நீ அவனைப் பார்க்குறப்போ, ஸுஷமாவைப் பற்றி எதுவும் கேட்க மாட்டேல்ல!’’

காஃபி ஹவுஸ் பேரர் பில் கொண்டு வந்தான்.

‘‘அப்படின்னா தற்போதைக்கு நாம பிரிவோம்."

‘‘பாஸ்கரா, என் இருப்பிடத்தைப் பார்க்க வேண்டாமா?’’

‘‘உன் மாளிகை எங்கே இருக்கு?’’

‘‘சீதாராமன் போற்றி ஹோட்டலின் மாடியில் இருக்குற அறை. வாடகை குறைவு. வடையும் பஜ்ஜியும் மிகவும் சுவையாக இருக்கும்.’’

நாங்கள் நடந்தோம்.

என்னுடைய இருப்பிடம் பாஸ்கரனுக்குப் பிடிக்கவில்லை.

‘‘ராஜப்பா, இந்த இட்லி தோசை ஆரவாரத்தில் ஒரு பக்கமாவது வாசிக்க முடியுமா? இந்தக் கேடுகெட்ட அறையில் இருந்து கொண்டு சட்டம் என்ன, சவரத்தைப் பற்றிக்கூட படிக்க முடியாது. நீ ஒரு காரியம் செய். வா, என்கூட புளிமூட்டுக்கு...’’

‘‘அய்யோ... வேண்டாம். உன்னுடைய பழைய நோட்ஸை எனக்குத் தந்தால் போதும். நான் இங்கேயே இருந்து படித்துக் கொள்வேன்.’’

பாஸ்கரன் சந்தோஷமடைந்தான்.

‘‘டேய் ராஜப்பா. நீ எந்தப் பேப்பர்ல தோல்வி அடைஞ்சே?’’

‘‘இந்து சட்டம்தான் என்னை படுகுழியில தள்ளிடுச்சு. மீதி எல்லா பேப்பர்களிலும் நான் பாஸ் மார்க்குகள் வாங்கிட்டேன்.’’

பாஸ்கரன் வளைந்து கொண்டு நின்றான். ‘‘இந்து சட்டம் மிகவும் எளிமையானது! தெரியுமா? என் இந்து சட்டம் மதிப்பெண் ஒரு பல்கலைக்கழக ரெக்கார்டு! 120-க்கு 95 மார்க். பாகம் பிரிப்பது, யாக்ஞவல்கிய ஸ்மிருதியின் விளக்கம்... எதைப்பற்றி வேணும்னாலும் கேளு, எப்படிப்பட்ட உறக்கத்திலும் நான் சொல்லித் தர்றேன்.’’

‘‘தேங்க்ஸ்... அந்த நோட்ஸை எனக்குத் தந்தால் போதும்.’’

நான் சுகுமாரனைத் தேடிச் சென்றேன். வஞ்சியூரில் அவனுடைய அலுவலகம் இருந்தது. குமாஸ்தா தூங்கிக் கொண்டிருந்தான். கட்சிக்காரர்கள் இருந்ததற்கான சிறு அடையாளம்கூட இல்லை.

சுகுமாரன் அங்கு இல்லை.

நான் குமாஸ்தாவைத் தட்டி எழுப்பினேன். ‘‘வக்கீல் சாரைப் பார்க்க வந்தேன்.’’

அதைக்கேட்டு குமாஸ்தாவின் முகம் ஒட்டுமொத்தமாகச் சுருங்கிவிட்டது. அவன் வாயைத் திறந்தபோது மதுவின் வாசனை வெளியே வந்தது. மரியாதைக் குறைவான பதில் எனக்குக் கிடைத்தது. ‘‘இங்கே வக்கீலும் இல்ல... சாரும் இல்ல... இது வக்கீல் அலுவலகம் இல்ல... களரி... களரி...’’

இந்தத் துரோகிக்கு எதற்காக சுகு சம்பளம் கொடுத்து இங்கு இருக்கச் செய்திருக்கிறான் என்று நான் ஆச்சரியப்பட்டேன்.

நான் ஜிம்கானாவிற்குச் சென்றேன்.

மாஸ்டர்ஜியின் ஓவியத்திற்குக் கீழே சுகுமாரன் அமர்ந்திருந்தான். ‘ஆள் முற்றிலும் மாறிவிட்டான்’ என்று பாஸ்கரன் சொன்னபோது, இப்போது நேரில் கண்ட அளவிற்கு மாற்றத்தை நான் மனதில் நினைத்திருக்கவேயில்லை. இது பழைய தடிமாடனின் நிழலாக இருந்தது. ஆள் மிகவும் மெலிந்து போயிருந்தான். தோள்கள் மிகவும் ஒடுங்கித் தாழ்ந்திருந்தன.

என்னையே சுகு வெறித்துப் பார்த்தான்.

பளிங்கைப்போல பிரகாசித்துக் கொண்டிருந்த கண்கள், பாதி செத்துவிட்டதைப்போல இருந்தன.

உரத்த குரலில் சிரித்தவாறு ஒரு விரலை ஆட்டிக்கொண்டே சுகு என்னை வரவேற்ற போது, நான் ஒரு மாதிரி ஆகிவிட்டேன்.

‘‘ராஜப்பா, உட்காரு.’’

மதுவின் வாசனை கொண்ட வார்த்தைகள்.

நான் எதிரிலிருந்த நாற்காலியில் உட்கார்ந்தேன். அந்தக் காட்சி உண்மை என்று சொன்னால் நம்பவே முடியவில்லை. நாங்கள் ஒருவரையொருவர் பிரிந்து எவ்வளவு காலமாகிவிட்டது! இதற்கிடையில் எவ்வளவு விஷயங்கள் நடந்திருக்கின்றன! எனினும் சற்று முன்பு முடிவடைந்த ஏதோ உரையாடலைத் தொடர்கிற மாதிரிதான் சுகுமாரன் நடந்து கொண்டது, தொடர்ந்து பேசியது எல்லாம் இருந்தன.

‘‘ராஜப்பா, நான் ஒரு மடையன். உடலை மட்டும் வளர்த்தவன். நீ ஒரு ஜீனியஸ். ஞாபகம் இருக்குதா? நேற்று நாம் விவாதித்த விஷயம்... ஆமை... டார்வினின் ஆமை... பிறகு... காற்றின் வேகத்தில் ஓடும் அந்த நாய்... க்ரே ஹவுண்ட்!’’

‘‘டேய் சுகு! நீ என்ன சொல்ற? முன்பு... முன்பு...’’

‘‘என்ன முன்பு? என்ன பழைய காலம்? இப்போது என்ன நேரம்? நேரத்திற்கு முடிவு, ஓரம், பரப்பு, ஆழம் இப்படியெல்லாம் இருக்குதா?’’

‘‘நான் கிளம்பட்டா, சுகு? நீ நல்ல மூடில் இல்லைன்னு நினைக்கிறேன்.’’

மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்க, சுகுமாரன் எழுந்தான்.

‘‘ராஜப்பா... அப்படின்னா... நீயும் என்னைவிட்டுப் போறே. சரி... அப்படியே நடக்கட்டும். எல்லோரும் என்னை விட்டுப் போறப்போ நீ மட்டும் ஏன் என்கூட இருக்கணும்?’’

அந்த வார்த்தைகளில் வாயால் விளக்கிக் கூற முடியாத அளவிற்கு வேதனைகள் நிறைந்து பொங்கிக் கொண்டிருந்தனவோ? ‘எல்லோரும் என்னைவிட்டுப் போறப்போ’ என்று கூறும்போது அவன் ஸுஷமாவை நினைத்திருப்பானோ?

ஆறுதல் கூறுவது மாதிரி நான் சொன்னேன்:

‘‘நான் போகல... திருப்திதானா?’’

‘‘திருப்தி! அது எங்கே கிடைக்கும்? எந்தக் கடையில்? ம்... அது இருக்கட்டும்... நீ விவரமானவன். நீண்ட காலம் வாழ்வதில் அர்த்தமே இல்லை. வாழும் காலத்தில் என்ன சாதித்தோம்? அந்தக் கேள்வியும் அதற்குக் கிடைக்கும் பதிலும்தான் முக்கியம். நான் தோற்றுப் போனவனா, ராஜப்பா? நான் இனிமேலும் சிலவற்றைச் செய்ய முடியாதா?

ஏதாவது சொல்ல வேண்டும் என்று நினைத்து நான் மெதுவான குரலில் சொன்னேன்: ‘‘முடியும்... அதில் என்ன சந்தேகம்?’’

‘‘அந்த அளவுக்கு பெரிய காரியங்கள் இல்ல... சிறியதாக இருந்தாலும் அர்த்தமுள்ள ஒரு காரியம்... ஒரு நல்ல காரியம்... ஆனால், எந்த நல்ல காரியத்தைச் செய்ய இறங்கினாலும், எதிர்ப்பு உண்டாகும்... சரிதானா?’’

நான் அதற்கு பதிலெதுவும் கூறவில்லை.

அவன் தொடர்ந்து சொன்னான்: ‘‘மாஸ்டர்ஜி! என் கனவுகளில் வர்றாரு. இந்த ஜிம்கானாவை நான் கவனமா நடத்தினால் போதும்னு அவர் சொல்றாரு. இருப்பதை கவனிச்சு நடத்த யாராலும் முடியும். இதில் என்ன பெருமை இருக்கு? நான் இந்த ஜிம்கானாவை விரிவுபடுத்தணும். இதைப் பெரிதாக ஆக்கணும். மாஸ்டர்ஜி வற்புறுத்திச் சொன்ன விஷயம் அதுதான். அது நடக்கும். நான் நடத்திக் காட்டுவேன்.’’

சுகுமாரன் மேஜைக்கு அடியில் இருந்த வேஸ்ட் பேப்பர் கூடைக்குள்ளிருந்து மதுப்புட்டியை எடுத்தான். செய்யக் கூடாததை செய்கிறோம் என்ற உணர்வு அவனுக்கு இல்லை. நான் அதைப்பற்றி விமர்சிப்பேன் என்ற பயம் சிறிதும் இல்லை. ஜிம்கானாவைச் சேர்ந்த வேறு உறுப்பினர்கள் யாராவது உள்ளே வருவார்களே என்ற பதைபதைப்பும் இல்லை. அவன் குடித்தான். நான் அதைப் பார்க்காதது மாதிரி காட்டிக் கொண்டேன்.


‘‘ராஜப்பா, சமீபத்தில்தான் ஜிம்கானாவின் வெள்ளிவிழா கொண்டாட்டம் நடந்தது. சிறப்பு விருந்தினராக கவர்னர் கலந்துகொண்டார். அருமையான நிகழ்ச்சிகள். பத்திரிகைகளில் சிறப்பாக அந்த விழாவைப் பற்றி எழுதினார்கள். நான் பத்திரிகையாளர்களிடம் என்னுடைய வருங்கால வளர்ச்சிக்கான திட்டங்களைப் பற்றிச் சொன்னேன். எல்லாவற்றையும் சீக்கிரமா செய்து முடிக்கணும். கட்டிடம் கட்டுவதுதான் முக்கியமான வேலை... என்ன, முடியாதா? சொல்லு! ஏதாவது சொல்லு!’’

‘‘முடியும். ஏன் முடியாது?’’

‘‘ஆமாம்... முடியும்... அதுவரை நான் உயிரோடு இருப்பேன். அதோ அங்கே பாரு. அந்த ஜன்னல் வழியா... அதோ தெரியிற அந்த இடம் அரசாங்கத்துக்குச் சொந்தமான புறம்போக்கு நிலம். இருபது சென்ட் இருக்கும். அதை எப்படியும் பதிவு செய்து வாங்கணும். அப்ளிகேஷன் அனுப்பியிருக்கேன். கட்டிடம் கட்டுறதுக்கு ஓரளவுக்கு அரசாங்கத்தின் நிதி உதவி கிடைக்கும். அதற்குமேல் தேவையான தொகையை நான் என் கையில் இருந்து போடுவேன். முதல்ல இடம் கைக்கு வரட்டும். அந்த விஷயத்துலதான் எதிர்ப்பு...’’

‘‘யாருக்கு எதிர்ப்பு?’’

‘‘பாஸ்கர மேனனை ஞாபகத்துல இருக்குதா? அந்த ராஸ்கல் இப்போ அரசியல் கட்சித் தலைவரா இருக்கான். இந்த இருபது சென்ட் நிலத்தில் எவனோ ஒருத்தனுக்கு இருக்குறதுக்கு உரிமை இருக்குன்னு அவன் சொல்லப் போறானாம்...’’

‘‘ச்சே... அவன் அப்படியெல்லாம் செய்வானா? நாம அவனைச் சந்திப்போம். தேவைப்பட்டால்...’’

‘‘நடக்காது. அவன் என்னுடைய எதிரி. என்னுடைய சொந்த வாழ்க்கையைப் பற்றி வாய்க்கு வந்தபடி மோசமா சொல்லிக்கிட்டுத் திரியிறவன்...’’

திடீரென்று சுகு தான் சொல்லிக் கொண்டிருந்ததை நிறுத்தினான். எல்லாவற்றையும் மறந்துவிட்டதைப் போல தலையைக் குனிந்துகொண்டு உட்கார்ந்திருந்தான்.

நிமிடங்கள் கடந்துபோய்க் கொண்டிருந்தன.

நான் அவனைத் தொட்டேன். ‘‘அப்போ... நான் புறப்படறேன் சுகு.’’

‘‘ம்... என்ன?’’ - அவன் தலையை உயர்த்தினான்.

‘‘நான் புறப்படறேன். கொஞ்சம் வேலைகள் இருக்கு.’’

‘‘என்ன வேலை?’’

‘‘இந்த முறை தேர்வில் வெற்றி பெறணும். அதற்குத் தயார் பண்ண வேண்டாமா?’’

‘‘என்ன தேர்வு?’’

‘‘நீ வெற்றிபெற்ற தேர்வு... பி.எல்...’’

‘‘அப்போ நீ வெற்றி பெறல... இல்லையா? நான் பலவற்றையும் மறந்துட்டேன். அதாவது - மறக்க முயற்சிக்கிறேன். சரி-இருக்கட்டும். இனி நாம எப்போ பார்க்குறது?’’

‘‘உன் வசதியைப் போல! நான் இருக்குற இடத்துக்கு வா!’’

‘‘அது எங்கே இருக்கு?’’

‘‘சீதாராமன் போற்றி ஹோட்டல்...’’

6

ல வாரங்களுக்குப் பிறகு, நான் புத்தகங்களுடன் போராடிக் கொண்டிருந்தநேரத்தில், சுகுமாரன் என்னுடைய ஹோட்டல் அறையைத் தேடிவந்தான். நிறைய குடித்திருந்தான். கால்கள் தரையில் நிற்கவில்லை.

நான் அவனை என்னுடைய கட்டிலில் பிடித்து உட்கார வைத்தேன். அடுத்த நிமிடம் அவன் அதில் மல்லாக்க விழுந்தான். மேல்நோக்கிப் பார்த்துக் கொண்டே அவன் பேசினான். குரல் குழைந்தது.

‘‘நான் வந்திருக்கிறது கஷ்டமா இருக்குதா ராஜப்பா?’’

‘‘ச்சே... அப்படியெல்லாம் இல்ல.’’

‘‘நீ படிக்குறுது பாதிச்சிடுச்சே!’’

‘‘ஓ...! ஏறக்குறைய தயாராயிட்டேன். இந்த முறை வெற்றி பெற்றிடுவேன்.’’

‘‘முழுமையா தயாராகணும்! அதுதான் முக்கியம். நான் இன்னும் முழுமையா தயாராகல...’’

‘‘அப்படின்னா?’’

‘‘பேப்பர் அமைச்சர் வரை போயிடுச்சு. அவ்வளவுதான். இனி உத்தரவு வரணுமே! அந்த இடம் கிடைக்கணுமே! அப்போத்தானே எல்லாம் முடிஞ்சதா அர்த்தம்!’’ - அவன் நீண்டநேரம் ஏப்பங்களை விட்டான்.

‘‘குடிப்பதற்கு ஏதாவது?’’

‘‘எனக்குத் தேவையானது உன் கையில் இருக்காது’’ - அவன் பலவீனமாக சிரித்தான். ‘‘நான் எப்போ இதை ஆரம்பிச்சேன்? உன்னிடம் சொல்லலாமே... அவள் போன பிறகு...’’

நான் காத்திருந்தேன். ஸுஷமாவைப் பற்றி அவன் என்ன கூறப் போகிறான்? திடீரென்று மீண்டும் சுய உணர்விற்கு வந்தவனைப்போல அவன் தன்னைப் பின்னோக்கி இழுத்துக்கொண்டான். ‘‘நான் என்ன சொன்னேன்?’’

‘‘அவள் போனபிறகு...?’’

‘‘ஹே! நான் அப்படிச் சொன்னேனா? இல்லையே! அவளா? எவள்? எனக்கு யார் அவள்? நான் கேட்டது வேறொண்ணு.’’

‘‘என்ன?’’ - தொடர்பில்லாமல் பேசிய அவனை நான் கண்களை விரித்துக் கொண்டு பார்த்தேன்.

சுகுமாரன் கட்டிலில் வேகமாக எழுந்து உட்கார்ந்தான்.

‘‘ராஜப்பா, நீ யாருடைய மரணத்தையாவது மிகவும் அருகிலிருந்து பாத்திருக்கியா?’’

‘‘என் தாயின் மரணத்தை...’’

‘‘கஷ்டப்பட்டா இறந்தாங்க?’’

‘‘கஷ்டப்பட்டிருக்கலாம். ஆனால், பார்த்துக்கொண்டு நின்றவர்களுக்கு அப்படித் தோணல. என் தாய் மரணத்துடன் இரண்டறக் கலந்துட்டாங்க.’’

‘‘ராஜப்பா, நீ மரணத்தைப் பற்றி சிந்திப்பது உண்டா?’’

‘‘இல்ல...’’

‘‘நான் சிந்திப்பது உண்டு.’’

‘‘எதற்கு சுகு, நூற்று இருபது வயது வரை இருப்பதுதானே உன்னுடைய எதிர்பார்ப்பு?’’

‘‘அது அப்போ! இப்போ நீண்ட காலம் வாழணும்ன்ற ஆசை இல்லை. அந்தக் கட்டிட வேலை முடிவடைந்து விட்டால், இடத்தைக் காலி பண்ண நான் தயார். சரி... அது இருக்கட்டும். நான் இறந்தால், பத்திரிகையில் செய்தி வருமா?’’

‘‘வராமல் இருக்குமா? நீ எதற்குத் தேவையில்லாத விஷயங்களையெல்லாம் பேசுற?’’

‘‘எல்லாம் தேவையான விஷயங்கள்தான். நீ என்கூட இருக்கணும். நான் படுத்த படுக்கையா கிடக்கிறப்போ...’’

"படுக்கையில படுத்தாத்தானே?"

‘‘படுக்கையில ஒரு நாள் படுப்பேன். அப்போ நான் செய்தி அனுப்புவேன். நீ வரணும்...’’

எப்படியாவது சுகுமாரனை ஏதாவது சொல்லி அனுப்பினால் போதும் என்றிருந்தது எனக்கு. இந்தப் பைத்தியக்காரத்தனத்தை எவ்வளவு நேரம் கேட்டுக் கொண்டிருப்பது?

என் முகம் என்னுடைய எண்ணங்களின் கண்ணாடியாகிவிட்டதா?

‘‘சரி... நீ இருந்து படி... இப்போ என்ன படிக்கிறே?’’

‘‘இந்து சட்டம்.’’

‘‘என் பழைய நோட்ஸ் வேணுமா, ராஜப்பா?’’

‘‘தேங்க்ஸ். வேண்டாம். பாஸ்கரனின் நோட்ஸ் கிடைச்சது.’’

‘‘ராஜப்பா அவன் ஒரு அரசியல் ராஸ்கல்!’’

‘‘அவன் பல அரசியல்வாதிகளையும் விட நல்லவன்.’’

‘‘அப்படியா? நீ அவனுடைய நண்பன். உன் உணர்வுகளை என்னால புரிஞ்சிக்க முடியுது. ஆனால் நீ எனக்கும் நண்பன்.’’

‘‘ஆமாம்... நிச்சயமா...’’

‘‘அப்போ நீ வருவே... நான் தகவல் அனுப்புறப்போ...’’

இப்போது எதற்கு வேண்டுமானாலும் சம்மதிக்க நான் தயாரா இருந்தேன். அவன் போனால் போதும் என்றிருந்தது எனக்கு.

‘‘ராஜப்பா, நான் என்னைக்காவது உன் கையிலிருந்து பணத்தைக் கடனா வாங்கியிருக்கேனா?

‘‘இல்ல...’’

‘‘அப்படின்னா இப்போ வாங்கப்போறேன். ஐம்பது ரூபாய் தர முடியுமா? நான் வெறும் கையை வீசிக்கிட்டு வெளியேறல. சட்டை மடிப்பில் ரூபாவைச் சொருகி வச்சிருந்தேன். இப்போ அதைக் காணோம்... போற வழியில சேவியருக்குள்ளே நுழையணும்.’’

நான் ரூபாயைக் கொடுத்தேன்.

அதற்குப் பிறகு நான் சுகுமாரனைப் பார்த்தது மருத்துவமனையில்தான். குமாஸ்தாவின் மூலமாக செய்தி கிடைத்தவுடன், நான் மருத்துவமனைக்குச் சென்றேன். பொதுவார்டில் சுகு சுயஉணர்வு இல்லாமல் படுத்திருந்தான். மூக்கிலும் கைத்தண்டிலும் குழாய்கள். அவன் முனகிக் கொண்டிருந்தான்.


குமாஸ்தா சொன்னது சரியாக இருந்தால் -

நேற்றுதான் அவனை இங்கு அட்மிட் செய்திருக்கிறார்கள். அதற்கு முந்தைய நாள் - அதாவது - என்னுடைய அறைக்கு வந்த நாளன்று அவன் நிறைய குடித்துவிட்டு வஞ்சியூரில் இருக்கும் வக்கீல் அலுவலகத்திற்குச் சென்று, குமாஸ்தாவை அழைத்துக் கொண்டு ஜிம்கானாவிற்கு நடந்திருக்கிறான். அங்கு போன பிறகு, பைத்தியக்காரனைப் போல வளையங்களில் தொங்கிக்கொண்டு ஆடியிருக்கிறான். அடுத்த நிமிடம் பிடிவிட்டு, தரையில் விழுந்திருக்கிறான். அவனை குமாஸ்தாதான் மருத்துவமனையில் கொண்டுவந்து சேர்த்திருக்கிறான். பலதடவை ரத்தம் கொடுக்கப்பட்டு விட்டது. இடையில் அவ்வப்போது சுயஉணர்வு வந்தது. இன்று காலையில் சுயஉணர்வு வந்தபோது, எனக்கு தகவலைக் கூறும்படி சொல்லியிருக்கிறான்.

நான் சுகுவின் படுக்கைக்கு அருகில் சிறிதுநேரம் உட்கார்ந்திருந்தேன்.

திடீரென்று அவன் கண்களைத் திறந்தான். என்னை அடையாளம் கண்டுகொண்டான். மூக்கிலிருந்து குழாயை நீக்கியபிறகு, விட்டு விட்டுப் பேச ஆரம்பித்தான்.

‘‘ராஜப்பா, நான் மரணத்தின் எல்லைவரை போய்விட்டேன். ஒரு நீலநிற சுரங்கத்தின் வழியாக நடந்தேன். அதன் இன்னொரு முனையில் பிரகாசம். காதுகளில் இனம்புரியாத இசையின் அலைகள் வந்து மோதின. நான் திரும்பி நடந்தேன்... வாழ்க்கையை நோக்கி... நான் அந்த கட்டிடத்தைக் கட்டணும். நான் அதைக் கட்டுவேன். அதன் சுவரில் என்னுடைய உருவப்படத்தை வைக்கணும். நீ வைக்கணும். நான் வந்து பார்ப்பேன். நீ என்னுடைய உருவப்படத்தை வச்சிட்டியான்னு தெரிஞ்சிக்கிறதுக்காக...’’

மேல்மூச்சு கீழ்மூச்சு விடும் சத்தம்.

உடல் நடுங்கிக் கொண்டிருக்கிறது.

கண்கள் மூடுகின்றன.

ட்யூட்டி டாக்டர் ஓடிவந்தார்.

அவர் சொன்னார்: ‘‘இன்னும் சில நிமிடங்கள் மட்டுமே...’’

‘‘டாக்டர்...?’’

‘‘வி ஹேவ் டன் அவர் பெஸ்ட். இன்டர்னல் ஹெமரேஜ் இவருக்கு...’’

டாக்டர் அங்கேயே நின்றிருந்தார்.

இறுதியாக ஒரு அசைவு.

‘‘ஹி ஈஸ் டெட்’’ - டாக்டர் அங்கிருந்து நகர்ந்தார்.

நான் சுகுவின் முகத்தைத் துணியால் மூடுவதற்காக முன்னால் சென்றேன்.

அப்போது அவனுடைய வலது கண் ஒரு நிமிடம் திறந்தது. அது என்னையே பார்த்தது.

அச்சத்துடன் நான் குமாஸ்தாவின் கையைப் பிடித்தேன்.

மீண்டும் நான் சுகுவைப் பார்த்தபோது, வலது கண் மூடிவிட்டிருந்தது.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.