Logo

ஷ்யாம் அண்ணன்

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 5967
shyam annan

சுராவின் முன்னுரை

ங்காள மொழியின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவரான பிரேமேந்திர மித்ரா (Premendra Mitra), ‘ஷ்யாம் அண்ணன்‘ (Shyam Annan) என்ற இந்தப் புதினத்தை எழுதியிருக்கிறார். இதைக் கதை என்று கூறுவதைவிட, பல விஷயங்களைப் பற்றிய தகவல் களஞ்சியம் என்று கூறுவதே பொருத்தமாக இருக்கும்.

இதன் கதாநாயகனான ஷ்யாம் அண்ணனைப் போன்ற மனிதர்களை நம் வாழ்க்கையில் தினமும் நாம் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்!

எந்த விஷயத்தைப் பற்றிப் பேச நேர்ந்தாலும். அது ‘எனக்குத் தெரியும்’ என்று கூறுவதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கும் எத்தனையோ மனிதர்களை நாம் தினமும் சந்திக்கிறோம்!

அது போன்றதொரு கதாபாத்திரத்தை மையமாக வைத்துக் கொண்டு அரிய- அற்புதமான பல விஷயங்களை இந்நூலில் பிரேமேந்திர மித்ரா வெளியிடுகிறார் என்பதை நினைக்கும்போது அவர்மீது ஆச்சரியம்தான் உண்டாகிறது. உலகத்தின் பல பகுதிகளுக்கும் போய் வந்த ஒரு உணர்வு இதைப் படிக்கும்போது நமக்கு உண்டாகும்.

இந்த நல்ல நூலை இணையதளத்தில் வெளியிடும் லேகாபுக்ஸ்.காம் (www.lekhabooks.com)  நிறுவனத்திற்கு நன்றி.

அன்புடன்,

சுரா (Sura)


முதலில் கதையைக் கூறுவதா? இல்லாவிட்டால் கதை கூறும் ஷ்யாம் அண்ணனை, கனஷ்யாம் அண்ணனை முதலில் வர்ணிப்பதா? கதை ஷ்யாம் அண்ணனுடன் தொடர்பு கொண்டதுதான். அதனால் ஷ்யாம் அண்ணன் முன்கூட்டியே நமக்கு அறிமுகமாகவில்லையென்றால், கதையில் பாதி சுவாரசியம் இல்லாமலே போய்விடும். அதனால் ஷ்யாம் அண்ணனைப் பற்றி முதலில் ஆரம்பிப்போம்.

ஒட்டி உலர்ந்துபோய் எலும்புகள் புடைத்த உடம்புடன் இருக்கும் ஷ்யாம் அண்ணனின் வயது என்ன என்பதை அவ்வளவு எளிதாக நம்மால் முடிவு செய்ய முடியாது. முப்பத்தைந்திலிருந்து ஐம்பதுக்கு இடையில் என்ன வயது வேண்டுமானாலும் இருக்கும். ஷ்யாம் அண்ணனிடம் அதைப் பற்றிக் கேட்டால் சிரித்துக் கொண்டே அவர் கூறுவார்: "வயசை எண்ணிப் பார்க்குறுதுக்கு எனக்கு எங்கே நேரம் இருக்கு? நான்தான் இவ்வளவு காலமா உலகத்தைச் சுற்றிக்கிட்டுத் திரியிறேனே! இருந்தாலும்..." இதைக்கூறிவிட்டு ஷ்யாம் அண்ணன் சொல்லப்போகும் கதை இருக்கிறதே... அது சில நேரங்களில் சிப்பாய் போராட்டத்துடன் சம்பந்தப்பட்டதாக இருக்கும். இல்லாவிட்டால் ரஷ்யாவுக்கும் ஜப்பானுக்குமிடையில் நடைபெற்ற முதல் போரைப்பற்றி இருக்கும். அதனால் ஷ்யாம் அண்ணனின் வயதைப் பற்றி நினைத்துப் பார்க்காமல் இருப்பதே நல்லது என்று நாங்கள் முடிவு செய்திருக்கிறோம். கடந்த இருநூறு வருடங்களுக்கிடையில் ஷ்யாம் அண்ணன் செல்லாத இடமோ அவர் பங்கு பெறாத ஏதாவது சம்பவமோ இல்லை என்று நாங்கள் ஏற்கெனவே அவரிடம் ஒப்புக் கொண்டிருக்கிறோம்.

எனினும், பல வருடங்களுக்கு முன்பு நகரத்தின் சிறிய ஒரு தெருவில் இருக்கிற எங்களின் இந்த நெருக்கமான மெஸ்ஸில் அவர் கருணை மனம் கொண்டு வசிக்க வந்ததற்கான காரணம் என்ன என்று கூறுவது சற்று சிரமமான ஒரு விஷயம்தான். ஓய்வு நேரங்களில் நாங்கள் பலரும் சேர்ந்து உட்கார்ந்து பல விஷயங்களைப் பற்றி சிரிக்கச் சிரிக்கப் பேசுகிற இடத்தில் அவர் தவறாமல் வந்து உட்காருவார். இதுகூட அவருடைய அளவற்ற கருணை மனத்தால் நடக்கக்கூடியதே. தான் பெட்டியையும், சாமான்களையும் எடுத்துக் கொண்டு இந்த இடத்தை விட்டு உடனே போகப்போவதாக அவ்வப்போது அவர் எங்களைப் பயமுறுத்துவது உண்டு. மாதக் கடைசியில் மெஸ் பில் கையில் கிடைக்கிற நேரத்தில்தான் பெரும்பாலம் அவர் அப்படிக் கூறி நாங்கள் பார்த்திருக்கிறோம்.

இறுதியில் எல்லாரும் ஒன்றாகக் கூடி உட்கார்ந்து இனிமேல் ஷ்யாம் அண்ணன் பில் பணம் தரவேண்டாம் என்று முடிவெடுத்தோம். பில் பணம் கொடுக்காதது மட்டுமல்ல. நாங்கள் கூட்டமாக அமர்ந்திருக்கிற இடத்துக்கு வந்து ஷ்யாம் அண்ணன் அங்கு போடப்பட்டிருப்பதிலேயே மிகவும் நன்றாக இருக்கும் சாய்வு நாற்காலியில் உட்காருவார். எங்களில் அதிர்ஷ்டசாலியாக இருக்கும் யாராவது ஒருவனிடம் சிகரெட் வாங்கி இழுத்தவாறு கண்களை மூடிப் படுத்திருப்பார். இடையில் திடீரென்று நாங்கள் யாராவது கூறும் வார்த்தையைப் பிடித்துக்கொண்டு உரத்த குரலில் சிரிப்பார்.

நாங்கள் அதிர்ச்சியுடன் திரும்பிப் பார்ப்போம். ஷ்யாம் அண்ணன் நிமிர்ந்து உட்கார்ந்து சிகரெட்டை இழுத்துப் புகையை விட்டவாறு சற்று கர்வம் கலந்த குரலில் கேட்பார்: "எதைப்பற்றி சொல்லிக் கொண்டிருந்தேன்? வெள்ளப்பெருக்கு...”

நாங்கள் வெட்கத்துடன் "தாமோதர நதியின் வெள்ளப் பெருக்கைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம்" என்பதைக் கூறுவோம்.

ஷ்யாம் அண்ணன் இரக்க குணத்துடன் எங்களை மாறி மாறிப் பார்ப்பார். பிறகு கேட்பார்: "டைடல் வேவ்னா என்னன்னு உங்கள்ல யாருக்காவது தெரியுமா? இந்த வெள்ளப்பெருக்கை நீங்க யாராவது எப்பவாவது பார்த்திருக்கீங்களா? கடல்நீர் கொந்தளிப்புன்னு சொல்லப்படுற இந்த நீர்ப்பெருக்கத்தை?"

"கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் நேரடியாகப் பார்த்ததில்லை" என்று கூச்சத்துடன் நாங்கள் கூறுவோம்.

ஷ்யாம் அண்ணன் சிரித்துக்கொண்டே கூறுவார்: "அது எப்படி உண்டாகுது? அதை நான் சொல்றேன். கேளுங்க! அப்போ ஒரு முறை முத்து வியாபாரம் பண்ணலாம்னு  நினைச்சு நான் தாஹிதி தீவுக்குப் போயிருந்தேன்."

ஷ்யாம் அண்ணன் சொன்ன அந்த நீளமான சுவாரசியம் கலந்த கதையிலிருந்து அவர் எப்படி ஒரு மிகப்பெரிய டைடல் அலையின் முதுகின்மீது உட்கார்ந்து தாஹிதி தீவிலிருந்து ஃபிஜி தீவிற்கு ஒரே நிமிடத்தில் போய்ச் சேர்ந்தார் என்பதை நாங்கள் தெரிந்து கொண்டோம்.

அந்தக் கதையைக் கேட்ட பிறகு எங்களுடைய மனநிலை எப்படி ஆகியிருக்கும் என்பதைக் கூறுவதற்கு மிகவும் சிரமமாக இருக்கும் என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை. நடுப்பகல் நேரத்தில் இருக்கும் சூரியனுக்கு முன்னால் எரிய வைக்கப்பட்ட சாதாரண மெழுகுவர்த்தியைப் போல் நாங்கள் ஆகிவிட்டோம்.

ஷ்யாம் அண்ணன் எங்கே இடையில் புகுந்துவிடுவாரோ என்று பயந்துபோய் நாங்கள் மிகவும் மெதுவான குரலில்தான் எதையும் பேசுவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தோம். எனினும், எவ்வளவுதான் மனதிற்குள் நாங்கள் பேசிக்கொண்டாலும், ஷ்யாம் அண்ணனிடமிருந்து நாங்கள் தப்பவே முடியாது. நாங்கள் பேசுவது எப்படியோ அவருடைய காதுகளில் விழுந்து விடும். நாங்கள் என்ன பேசுகிறோம் என்பதை அவர் தெரிந்து கொள்வார்.

சில நேரங்களில் இப்போது பெரும்பாலான மனிதர்கள் கண்ணாடி அணிவதைப் பற்றி யாராவது ஏதாவது கூறுவார்கள். முன்பைப் போல கண்களுக்குப் பார்வை சக்தி இளைஞர்களுக்கு இல்லாமலிருக்கிறது என்பதைப் பற்றியதாக இருக்கும் பேச்சு. அடுத்த நிமிடம் ஷ்யாம் அண்ணன் தனக்கேயுரிய ட்ரேட் மார்க் சிரிப்புடன் ஆன்டிஸ் மலையின் உச்சிக்கு உலகத்திலேயே மிகவும் பெரிய பறவையான 'கண்டுர்' கழுகுக் கூட்டைத் தேடிச் சென்ற கதையைக் கூற ஆரம்பித்துவிடுவார்.

"ஆமாம்... பார்வையோட சக்தி என்னன்றதை அப்போதான் நான் பார்த்தேன். ஆன்டிக் மலைப்பகுதிகளில் நான் வழி தவறிப்போய் சுற்றிக் கொண்டிருந்தேன். குளிர்ல உறைஞ்சு போறதுக்கு இனி அப்படியொண்ணும் அதிக நேரமில்லைன்ற நிலையில நான் இருந்தேன். என்கூட அர்ஜன்டினா நாட்டைச் சேர்ந்த ஒரு ஆறு அடி உயர மனிதன் இருந்தான். அவன் 'போரோரோ'ன்ற இனத்தைச் சேர்ந்தவன். சிவப்பு இந்திய வழிகாட்டியாக எனக்கு முன்னால் அவன் போய்க் கொண்டிருந்தான். நேரம் கொஞ்சம் கொஞ்சமாக மங்கிக் கொண்டிருந்தது. சில நிமிடங்களில் சரியான பாதையைக் கண்டுபிடிக்க முடியலைன்னா, அங்கேயே உயிரோடு பனிக்குள்ளே மூடப்பட்டு சாக வேண்டியதுதான். அந்த நேரத்துல மலை உச்சிக்குக் கீழே இருட்டா நின்னுக்கிட்டு இருந்த மேகங்களுக்கு மத்தியில ஒரு சின்ன இடைவெளி தெரிஞ்சது. இருபதாயிரம் அடி உயரத்துல இருந்து கொண்டு அந்த இடைவெளி வழியா எதையாவது பார்க்கமுடியுமா? 'போரோரோ'க்காரர்களின் பார்வை சக்தியைப் பற்றி அப்போ நான் எதுவும் சொல்லல. ரெண்டு கைகளையும் அந்த ஆள் தூரமானியைப் போல தன் கண்களுக்கு மேலே வச்சான். பிறகு அவன் 'ம்'... இனிமேல் பயப்படுறதுக்கு ஒண்ணுமில்ல...'ன்னு சொன்னான்.


நான் ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்துக் கேட்டேன்: 'பயப்படுறதுக்கு எதுவும் இல்லாம இருக்கலாம். ஆனா, நீங்க பார்த்தது என்ன?'ன்னு.

அவன் சிரித்துக்கொண்டே சொன்னான்: 'நான் என்ன பார்த்தேன்னு கேக்குறீங்களா? கீழே வேடர்களின் கூடாரம் அடிக்கப்பட்டிருக்கு. ஒரு பெரிய நாயுடன் சிவப்பு கோட் அணிந்த ஒரு மனிதன் கூடாரத்துக்குள்ள போறதை நான் பார்த்தேன்'ன்னு.

அதைக்கேட்டு நான் ஆச்சரியப்பட்டு நின்னுட்டேன்!"

ஷ்யாம் அண்ணனின் பேச்சைக்கேட்டு நாங்கள் அதைவிட ஆச்சரியத்துக்கு உள்ளாகிவிட்டோம். "இருபதாயிரம் அடி உயரத்துல நின்னுக்கிட்டு ஒரு மனிதன் அணிஞ்சிருக்கிற சிவப்பு நிறக் கோட்டை ஒரு ஆள் பார்க்குறதுன்றது..."

"அதைக் பார்க்க முடியாத கண்ணோட பார்வை என்ன பார்வை? 'கண்டுர்' கழுகோட கண்கள் எப்படிப்பட்டது தெரியுமா? ரெண்டு மைல் உயரத்துல இருந்து கொண்டு செத்துக் கிடக்கிற கால்நடைகளை நல்லா பார்க்க அந்தக் கழுகால முடியும். இந்த 'போரோரா' இனத்தைச் சேர்ந்தவர்கள் கண்களும் அதே மாதிரிதான்றதைப் புரிஞ்சிக்கங்க."

அதற்குப்பிறகு நாங்கள் எதுவும் பேசவில்லை என்பதைச் சொல்ல வேண்டியதில்லையே!

ஷ்யாம் அண்ணன் வந்துவிட்டால் பொதுவாகவே பேச்சை நாங்கள் நிறுத்திவிடுவோம். ஆனால், ஒருநாள் கிரகத்தின் கோளாறு என்று தான் சொல்ல வேண்டும்- யாரோ கொசுவைப் பற்றிப் பேசினார்கள். ஷ்யாம் அண்ணன் அப்போது அங்கு வரவில்லை என்ற தைரியம்தான் அதற்குக் காரணமாக இருக்கவேண்டும். அது மட்டுமல்ல - அப்படியே அதற்குள் வந்து சேர்ந்தாலும்கூட மிக சாதாரணமான ஒரு கொசுவைப்பற்றி ஷ்யாம் அண்ணன் அப்படி சிறப்பாக ஒரு கதையையும் கூற முடியாது என்று அங்கு பேசிய நபர் நினைத்ததும் ஒரு காரணமாக இருக்கலாம்.

ஆனால், அப்படி நினைத்தது எவ்வளவு பெரிய தவறு என்பதைப் புரிந்து கொள்வதற்கு அதிக நேரம் ஆகவில்லை. கொசுவைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்த ஆள் தன்னுடைய கிராமத்தில் கொசுக்களைக் கொல்வதற்கு மனிதர்கள் எப்படிப்பட்ட வழிமுறைகளையெல்லாம் பின்பற்றுகிறார்கள் என்பதைக் கூறிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அங்கு வாசலில் ஷ்யாம் அண்ணன் வந்து நின்றார்.

"எதைப் பற்றி பேசிக்கிட்டு இருக்கீங்க?"

"சிறப்பா ஒண்ணுமில்ல. கொசுவைப் பற்றி சொல்லிக்கிட்டிருந்தேன்."

அந்த ஆள் அதைக் கூறிவிட்டு மரியாதையுடன் எழுந்து சாய்வு நாற்காலியை ஷ்யாம் அண்ணனுக்கு ஒதுக்கிக் கொடுத்தார்.

ஷ்யாம் அண்ணன் சாய்ந்தவாறு அந்த மனிதரின் கையிலிருந்து ஒரு சிகரெட்டைக் கேட்டு வாங்கிப் பிடித்தவாறு சொன்னார்: "ம்... கொசுவைப் பற்றி பேசிக்கிட்டு இருக்கீங்களா?"

எங்களுக்குச் சற்று நிம்மதி கிடைத்ததைப் போல் இருந்தது. ஷ்யாம் அண்ணனின் கவனம் கொசு மீது இல்லை என்பதாக நாங்கள் நினைத்தோம். ஆனால், அடுத்த நிமிடம் ஒரு குண்டு வெடித்தது. சாதாரண குண்டு அல்ல- அணுகுண்டு.

"ஆமா... ஒருமுறை நான் ஒரு கொசுவைக் கொன்னுட்டேன்."

அதைக் கேட்டு நாங்கள் திகைத்து நின்று விட்டோம். ஷ்யாம் அண்ணன் கொசுவைப் பற்றி நடைபெற்ற பேச்சிலும் விலகி நிற்காமல் இருந்ததற்காக அல்ல- யாராலும் நம்பமுடியாத அவருடைய திறமையைப் பார்த்து வியப்பு உண்டாகாமல் எப்படி இருக்கும்? கொசுவைக் கொல்வது என்பது ஒருபக்கம் இருக்கட்டும்- ஷ்யாம் அண்ணனைப் போன்ற ஒரு பெரிய மனிதர் ஒரே ஒரு கொசுவை மட்டும் தனிமைப்படுத்திக் கொல்வது என்பதைக் கனவில் கூட எங்களால் கற்பனை பண்ணிப் பார்க்க முடியவில்லை.

எனினும், கொசுவைப்பற்றி கூறிக் கொண்டிருந்த ஆள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கேட்டார்: "ஒரே ஒரு கொசுவையா?"

"ஆமா... ஒரே ஒரு கொசுவைத்தான் இப்போவரை நான் கொன்னிருக்கேன்"- எங்களின் ஆர்வத்தை இரண்டு மடங்கு அதிகரித்தபடி ஷ்யாம் அண்ணன் தொடர்ந்து சொன்னார்: "அது நடந்தது 1939-ம் ஆண்டு ஆகஸ்டு 5-ம் தேதி சகாலின் தீவுல."

சகாலின் தீவு

கேட்பதற்குத் தேவையான ஆர்வம் எங்களிடம் மேலும் அதிகமாக வரட்டும் என்ற எண்ணத்துடன் சில நிமிடங்கள் மௌனமாக இருந்தபிறகு ஷ்யாம் அண்ணன் கதையைத் தொடங்கினார்:

"சகாலின் தீவு என்று கேள்விப்பட்டிருப்பீங்க. ஆனால், அதற்கு மேல் அதைப்பற்றி உங்களுக்கு ஒண்ணும் தெரியாது. அப்படித்தானே! சகாலின் ஜப்பானுக்கு வடக்கே, தெற்கு வடக்காக சரியாகச் சொல்லப் போனா ஒரு வாலைப் போல நீண்டு கிடக்கு. அதோட தெற்குப் பக்கம் ஜப்பான்காரர்களுக்கும் வடக்குப் பக்கம் ரஷ்யாக்காரர்களுக்கும் சொந்தம். அந்தத் தீவின் கிழக்குக் கரையில அம்பர் (சுறாமீனின் குடலிலிருந்து கிடைக்கும் ஒரு வாசனைப்பொருள்) சேகரிக்கும் ஒரு நிறுவனத்தின் ஏஜன்டாக அப்போ நான் வேலை பார்த்துக்கிட்டு இருந்தேன். இந்த அளவிற்கு யாருக்கும் தெரியாத, பாண்டவர்கள் கூட கால் வைக்காத ஒரு இடம் உலகத்துல வேற எங்கேயாவது இருக்குமான்றது சந்தேகம்தான். வருடத்தில பாதி நாட்கள் அங்கே பெருமழை பெய்துக்கிட்டே இருக்கும். மீதி நாட்கள் கடுமையான பனி இருக்கும். அதுக்குமேல மிகப்பெரிய பனிமலை வேற. எங்கே பார்த்தாலும் பனி மூட்டம்தான். எது எப்படி இருந்தாலும் விலை மதிப்புள்ள அம்பர் கொஞ்சம் சேகரித்துக்கொண்டு அந்த இடத்தை விட்டுப் போயிட்டா, பிறகு அந்த இடத்தைத் திரும்பிக்கூட பார்க்கக்கூடாதுன்னு மனசுல தெளிவா முடிவு எடுத்திருந்தேன் நான். ஆனா, எல்லாமே வேற மாதிரி ஆயிடுச்சு. எங்கள் நிறுவனத்துல வேலை பார்த்த தான்லின் என்ற சீனாவைச் சேர்ந்த தொழிலாளி ஒருநாள் பொழுது புலர்ந்த நேரத்துல காணாமல் போயிட்டான். அவனோடு சேர்ந்து அதுவரை சேர்த்து வைத்திருந்த விலை மதிப்புள்ள அம்பரும்.

சகாலின் தீவு அப்படியொன்னும் சின்னது இல்ல. அதன் முக்கால் பகுதி காடும் மலையுமாக இருந்தது. அந்த இடங்கள்ல யாரோட காலாவது பதிஞ்சிருக்குமா என்பதே சந்தேகம்தான். அங்கே யாரையாவது தேடிக் கண்டுபிடிக்குறதுன்றது அவ்வளவு சாதாரண ஒரு விஷயமில்ல. இருந்தாலும் ஒருவகையில் நிம்மதிதான். அம்பர் மாதிரி இருக்குற விலை மதிப்புள்ள பொருளைத் திருடி சகாலின் தீவுல மறைச்சு வைக்கிறதுனால ஒரு பிரயோஜனமும் இல்ல. அந்தத் திருடிய பொருளை விற்பனை செய்யணும்னா யாராக இருந்தாலும் வெளி உலகத்துக்குப் போகாம இருக்க முடியாது. சகாலின் தீவுல இருந்து - ஏப்ரல் மாதத்துல இருந்து அக்டோபர் மாதம் வரை யாராவது வெளியே கடந்து போகணும்னா முக்கிய நகரமான அலெக்ஸான்ட் ரோவஸ்கில இருந்து வ்ளாடிவஸ்டோக்குக்கு ஸ்டீமர் இல்லாம முடியாது. அக்டோபர் மாதம் கடந்துட்டா கடல்நீர் உறைந்துபோய் பனிக்கட்டியா மாறிடும். அப்போ நாய்களை வச்சு இழுக்குற, 'ஸ்லேஸி'ல் ஏறி ஓடிப்போக முடியும்.


ஆனா, முக்கிய ஸ்டீமர் துறையில் பலத்த காவல் இருக்குற மாதிரி ஏற்பாடுகள் செய்தால், திருடன் எந்த விதத்திலும் சகாலினை விட்டுப்போகவே முடியாது. அக்டோபர் வரை திருடனைத் தேடித்திரியிறதுக்கு எங்களுக்கு நாட்கள் இருக்குன்றது விஷயம்.

கம்பியில்லா தந்தி வழியே அலக்ஸான்ட்ரோவஸ்கில இருக்குற போலீஸ் இலாகாவுக்கு விவரத்தைத் தெரியப்படுத்திட்டு நானும் எங்க கேம்ப்ல டாக்டரான மார்ட்டினும் கூலிகளோடு தான்லினைத்தேடிப் புறப்பட்டோம்.

சிறிது நாட்கள் காட்டுலயும் மேட்டுலயும் சுற்றித் திரிஞ்சு கடைசியில ஏமாற்றத்தோட இருந்த நேரத்துல அதிர்ஷ்டவசமா ஒரு துப்பு கிடைச்சது.

டியார் மலைக்குப் பக்கத்துல ஒருநாள் சாயங்கால நேரத்துல நாங்கள் தங்கியிருந்தோம். அங்கே வசிக்கிற கிலியாத் என்ற ஆதிவாசி இனத்தைச் சேர்ந்த ஒரு வேடன்கிட்ட இருந்து உறுதியாகக் கூறமுடியாத ஒரு தகவல் கிடைச்சது. அன்னைக்குக் காலையில ஒரு சீனாக்காரன் போகுறதைப் பார்த்ததா அவன் சொன்னான்.

இரவு நேரத்துல கூடாரத்துக்குள்ளே படுத்து உறங்குறதுன்றது முடியாத காரியம். சகாலின் தீவுல பயங்கரமான மிருகம்னு கரடியை மட்டும்தான் சொல்லமுடியும். பொதுவா கரடிகள் மனிதர்களை ஒண்ணுமே செய்யாது. ஆனால், பகல் நேரத்துல ஈக்களும் ராத்திரி நேரத்துல கொசுக்களும் மிருகங்களைவிட பயங்கரமான தொந்தரவுகள் தரும். அதனால் நானும், மார்ட்டினும் உறங்க முடியாமல் வெளியே வந்து உட்கார்ந்து எதையாவது பேசிக் கொண்டிருந்தோம். அப்போ திடீர்னு நான் அதிர்ச்சியடைந்து எழுந்தேன்.

'அங்கே பாருங்க மார்ட்டின்!'

மார்ட்டின் நான் காட்டிய பக்கம் தன் பார்வையைத் திருப்பினார். அவர் சொன்னார்: "ஆமா... நல்ல ஒரு வெளிச்சம் தெரியுது. மனிதர்கள் நடமாட்டமே இல்லாத இந்தப் பகுதியில எங்கேயிருந்து இந்த வெளிச்சம் வருது? பேய், பூதம் ஏதாவது இருக்குமோ?"

நான் சிறிது நேரம் கூர்மையாகப் பார்த்து விட்டு சொன்னேன்: "இல்ல... இது அந்த மாதிரி வெளிச்சம் எதுவும் இல்ல. தூரத்துல தெரியிற அந்தப் பாறைக்குப் பின்னாடி ஒரு வீடு இருக்கணும். அதுல இருந்து வர்றதுதான் அந்த வெளிச்சமா இருக்கணும்!"

'இந்த இடத்துல வீடு உண்டாக்கி வாழ்றதுக்கான தைரியம் யாருக்கு வரும்? கிலியாக், ஒரோக், டும்குஸ் ஆகிய இனத்தைச் சேர்ந்த காட்டுவாழ் வேடர்களைத் தவிர வேற யாரும் இங்கே வருவாங்கன்னு சொல்ல முடியாது. இங்கே இதுவரை ஏதாவது கனிமங்கள் இருக்குற சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கேள்விப்பட்டது இல்ல.'

சம்பவத்தைத் தெரிஞ்சிக்கணும்ன்ற ஆர்வம் மனசுல அதிகமாக இருந்தாலும், பொழுது விடியிற வரையில காத்திருப்பதைத் தவிர எங்களுக்கு வேற வழியே இல்ல. ஆனால், அப்போ திடீர்னு பயங்கரமான ஒரு ஓசை அந்த இரவு நேரத்தின் அமைதியையே கெடுத்திடுச்சு.

நானும் மார்ட்டினும் ஒருத்தரையொருத்தர் பார்த்துக்கிட்டோம். பிறகு எதுவுமே பேசாமல் உள்ளே இருந்து டார்ச் விளக்கைக் கையில் எடுத்துக்கிட்டு நாங்க நடக்க ஆரம்பிச்சோம். எங்க கையில ஆயுதம் எதுவும் இல்லைன்னு சொல்ல முடியாது. இரண்டுபேர் இடுப்புலயும் பிஸ்டல் தொங்கிக் கொண்டிருந்துச்சு.

வெளிச்சம் வந்து கொண்டிருந்த பாறைக்குப் பின்னாடி போகணும்னா அப்படியொண்ணும், அதிக தூரம் நடக்க வேண்டியதில்ல. முன்னூறிலிருந்து நானூறு கஜ தூரம் தான். பாறையை ஒரு முறை சுற்றி மறுபக்கத்தை அடைஞ்சப்போ நாங்க நினைச்சது தப்பாக இல்லைன்றதைத் தெரிஞ்சுக்கிட்டோம். அந்த அளவுக்குப் பெரிசுன்னு சொல்ல முடியாத ஒரு வீட்டின் ஜன்னல் வழியே நல்ல வெளிச்சம் வெளியே தெரிஞ்சது.

எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒண்ணே ஒண்ணுதான். பயங்கரமான அந்தச் சத்தம் அதற்குப் பிறகு கேட்கவேயில்லையன்ற விஷயம்தான் அது. இரண்டு பேரும் ஒரே நேரத்தில் அந்தச் சத்தத்தைக் கேட்காமப் போயிருந்தோம்னா அப்போ அங்கே இருந்த முழு அமைதியைப் பார்த்து அந்தச் சத்தம் எங்க கற்பனையின் விளைவுன்ற எண்ணம் உண்டாகியிருக்கும்.

வீட்டை நெருங்கினவுடனே, நாங்க அப்படியே நின்னோம். இனி என்ன செய்றது? கேள்வியே பட்டிராத ஒரு இடத்துல, இதுக்கு முன்னாடி அறிமுகமே இல்லாத ஒரு வீட்டின் வாசல்ல இரவு நேரத்துல போய் நின்னுக்கிட்டு, கதவைத் தட்டி அழைப்பதுன்றது அவ்வளவு நல்ல ஒரு செயல் இல்லன்னு தெரியும். அதுக்காகத் திரும்பிப் போறதுன்றதும் சிந்திச்சுப் பார்க்க முடியாத ஒண்ணுதான்.

வெளிச்சம் வெளியே வந்துக்கிட்டு இருந்த ஜன்னல் பக்கத்துல நின்னுக்கிட்டு ஆர்வத்துடன் உள்ளே எட்டிப் பார்த்தோம். பெரிய ஒரு அறை. பார்ப்பதற்கு அது ஒரு கண்காட்சி சாலையைப் போல இருந்தது. கண்ணாடி போட்ட ஒரு பெரிய மேஜை அறையின் நடுவுல இருந்தது. கண்ணாடிக்குள்ளே என்ன இருக்குதுன்னு எங்களால பார்க்க முடியல. அங்கே யாரும் இல்ல. அந்தச் சமயத்துல யாரும் இருப்பாங்கன்னு எதிர்பார்க்கவும் முடியாது.

அங்கேயிருந்து நகர்ந்து கதவுக்குப் பக்கத்துல போய் அதைத் தட்டலாமா வேணாமான்னு சிந்திச்சுக்கிட்டே நின்னுக்கிட்டு இருந்தோம். அப்போ பின்னாடியிருந்து காதுக்குள்ளே நுழையிற மாதிரி ஆங்கிலத்தில் சில வார்த்தைகள் வந்துச்சு. 'உயிர் மேல ஆசையிருந்தா கையைத் தூக்குங்க.'

அதிர்ச்சியடைந்து திரும்பிப் பார்த்தோம். திருடர்கள் கூட்டத்துல இருக்குறவனை மாதிரி தோற்றம் இருக்குற ஒரு இளைஞன் எங்களுக்கு நேரா கைத்துப்பாக்கியைக் காமிச்சிக்கிட்டு நின்னிருந்தான். அவனுக்குப் பின்னாடி உயரமும், கனமும் இருக்குற, எமதூதனைப் போல காட்சியளிக்குற வேறொரு மனிதன் நின்னுக்கிட்டு இருந்தான். அவன் கையிலும் துப்பாக்கி இருந்துச்சு.

சம்பவம் பலவித திருப்பங்களோட நடந்துக்கிட்டிருந்தாலும் கடைசியில அங்கு நின்னுக்கிட்டு இருந்த மனிதன் யார்னு தெரிஞ்சதும், சூழ்நிலைகள் சாதாரணமாயிடுச்சு.

எங்களை நோக்கி பிஸ்டலைக் காட்டி பயமுறுத்தி கையைத் தூக்கச் சொன்ன மனிதன் நிஷிமாரான்ற ஜப்பான்காரன்றதை நாங்க தெரிஞ்சுக்கிட்டோம். அவன் ஒரு விலங்கியல் ஆராய்ச்சியாளன். சகாலினிலுள்ள புழு, பூச்சிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்றதுக்காக அவன் அந்தப் பகுதியில் வந்து தங்கியருக்கான். நாங்கள் எதுக்காக வந்தோம்ன்றதை அவனுக்கு விளக்கிச் சொன்னப்போ, அவன் ஒரு மாதிரி ஆயிட்டான். கொஞ்ச நாட்கள் அங்கேயே தங்கியிருந்து தன்னோட ஆராய்ச்சிகளைப் பார்க்கும்படி அவன் சொன்னான். அதோட காணாமற்போன சீனாக்காரனைத் தன்னோட ஆட்களைப் பயன்படுத்தி கண்டுபிடிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யிறதாகவும் சொன்னான். அந்தப் பகுதியில கண்களை முழுமையாகக் கட்டிவிட்டால் கூட அவனுக்கு வழி கொஞ்சமும் தவறாது. அவனோட மனிதர்களின் கண்ணில் மண்ணைத் தூவிட்டு யாரும் அங்கேயிருந்து நடந்து செல்ல முடியாது.

இது எந்த அளவுக்கு உண்மையான ஒரு விஷயம்ன்றதை ஒரு நாள் முடியிறதுக்குள்ளே நாங்களே தெரிஞ்சுக்கிட்டோம். அடுத்த நாள் காலையில் நிஷிமாரா தன்னோட ஆராய்ச்சி சாலைகளைச் சுற்றி நடந்து பார்க்குறப்போ எங்ககிட்ட தன்னோட ஆராய்ச்சிகளைப் பற்றி விளக்கிச் சொன்னான்.


சாதாரணமா நாம பார்க்குற உயிரினங்களைப் பற்றியல்ல. அவன் ஆராய்ச்சி செய்யிறதுன்றதை சோதனைச் சாலையைப் பார்த்தவுடனே நாங்க புரிஞ்சிக்கிட்டோம். ஆராய்ச்சி பண்றதுக்கான விஷயங்கள் மட்டுமல்ல- உயிரினங்களை வளர்ப்பதற்கும், பெருக்குவதற்கும் உள்ள ரசாயனப் பொருட்களும் மின்சக்தியால் இயங்கக்கூடிய பலவிதப்பட்ட இயந்திரங்கள், கருவிகளும் கூட அங்கு இருந்தன.

மார்ட்டின் ஒருமுறை அந்த மனிதனைப் பார்த்து, 'புழு, பூச்சிகளில் முக்கியமா நீங்க கொசுவைப் பற்றித்தான் ஆராய்ச்சி பண்றீங்கன்னு நினைக்கிறேன்'ன்னார்.

அதற்கு நிஷிமாரா சிரிச்சுக்கிட்டே 'இதுல ஆச்சரியப்படுத்துறதுக்கு என்ன இருக்கு? மனித இனத்தின் அழவிற்கு மிகப்பெரிய எதிரியே கொசுதான். இந்த சலாகின் தீவுல தொடங்கி உலகம் முழுவதும் மலேரியாவைப் பரப்புற வாகனம் கொசுன்றதை நினைக்கிறப்போ, அது எவ்வளவு பெரிய கேட்டை உண்டாக்குதுன்ற விஷயத்தை ஒரு டாக்டர்ன்ற முறையில உங்களால புரிஞ்சிக்க முடியுதா?ன்னு கேட்டான்.

அதற்கு மார்ட்டின், 'ஆனா, இங்கே கொசுக்களை வளர்க்குறதுக்கான ஏற்பாடுகள் இருக்குறதைப் பார்க்குறேனே! பிறகு எப்படி மலேரியாவை ஒழிக்க முடியும்?'னு கேட்டார்.

அப்போ நிஷிமாரா, திரும்பவும் சிரித்தான். 'யாருக்கும் இப்படியொரு சந்தேகம் உண்டாகத்தான் செய்யும். கொசுக்களை அழிப்பதன் மூலம் நான் இந்தப் பிரச்சினைக்கு முடிவு காண விரும்பல. கொசுக்கள் மலேரியா உண்டாக்காமல் இருக்க என்ன வழி என்பதைப் பற்றித்தான் இப்போ நான் முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன்' என்றான் அவன்.

நாங்கள் எதுவும் புரியாமல் விழித்தவாறு நின்றிருப்பதைப் பார்த்துவிட்டு நிஷிமாரா சொன்னான்: 'கொசுக்கள் எப்படி நோய்க் கிருமிகளை உடம்புக்குளே செலுத்துதுன்ற விஷயம் டாக்டரான உங்களுக்குத் தெரியாதது இல்ல. அவற்றின் முகம் டாக்டர்களின் கையில் இருக்குற பலவகைப்பட்ட கருவிகள் கொண்ட ஒரு பெட்டின்னு சொல்லலாம். உடம்புல வந்து உட்கார்ந்து முதல்ல அது ஒரு கருவியால் தோலைத் திறக்கும். பிறகு வாயில் இருந்து ஒருவகையான எச்சிலை அங்கு பரவவிடும். பிறகு இரத்தம் கட்டாம இருக்குறுதுக்காக அது. மூணாவதா ஒரு கருவி மூலம் இரத்தத்தை உறிஞ்சியெடுக்கும். நம்ம உடம்புல ரெண்டாவதா பரவவிடுற எச்சில் வழியாத்தான் நோய் அணுக்கள் உடம்புல பரவுறது. கொசு பிறந்ததற்குப் பிறகு அதன் வாயில் இருக்கும் எச்சிலில் இருந்து நோய் அணுக்களை இல்லாமற் செய்வதற்கான ரசாயனச் செயல்களைச் செய்தால் கொசு எவ்வளவுதான் கடிச்சாலும் மலேரியா வரவே வராது. நான் என் சோதனைச் சாலையில் கொசுக்களின் வாயிலிருக்கும் எச்சிலின் குணத்தை மாற்றுவதற்கான முயற்சியில இப்போ ஈடுபட்டிருக்கேன்.'

நம்பிக்கை இருந்தாலும் இல்லாட்டியும் நிஷிமாரா கூறியதைப் பற்றி கேள்வி கேட்க நாங்கள் தயாரா இல்லை. சோதனைச் சாலையில் மொத்தத்துல என்னவோ ரகசியம் மறைஞ்சிருக்குன்ற எண்ணம் எங்களுக்கு உண்டாச்சு. கடந்த இரவில் கேட்ட பயங்கரமான அந்தச் சத்தத்தை நாங்க மறக்கல. நிஷிமாராகிட்ட அதைப் பற்றி கேட்டதுக்கு ஏதாவது காட்டு மிருகங்களோட சத்தமாக இருக்கும்னு அவன் சொன்னப்போ, அவன் எதையோ மறைக்க முயற்சிக்கிறான்னு எங்களுக்குப் பட்டது.

கொசு

றுநாள் இரவிலேயே அந்த ரகசியம் என்னன்றதை நாங்க தெரிஞ்சுக்கிட்டோம். நிஷிமாரா எங்களை உபசரிக்கிறதுல எந்தக் குறைவும் வைக்கல.

இரவு உணவு முடிஞ்சு உறங்குறதுக்கு ஏற்பாடு பண்ணிக் கொடுக்கப்பட்ட அறையில நாங்க படுத்திருந்தப்போ மார்ட்டின், ‘எதுக்கு இப்பவே படுக்கணும்? வாங்க... கொஞ்ச நேரம் வெளியே போய் உட்காருவோம்'னு சொன்னாரு. வெளியே போகலாம்னு நினைச்சப்போ, நாங்க அதிர்ச்சியடைந்து போனோம். வெளியே கதவு பூட்டப்பட்டிருந்ததுதான் காரணம்.

'இதன் அர்த்தம் என்ன?'ன்னு மார்ட்டின் சிந்தனை மேலோங்க என் பக்கம் திருப்பிக் கேட்டாரு.

அர்த்தம் சரியாக என்னன்னு எனக்குத தெரியலைன்னாலும் அந்தச் செயலில் ஏதோ ஆழமான நோக்கம் இருக்குன்ற விஷயத்துல மட்டும் கொஞ்சமும் எங்களுக்குச் சந்தேகம் வரல.

அவ்வளவு சீக்கிரமா வலையில மாட்ட நாங்களும் தயாரா இல்ல. மண்ணுக்குக் கீழே காற்று போறதுக்காக ஒரு சின்ன சாளரம் இருந்துச்சு. அதன் கண்ணாடியை உடைச்சு எப்படியோ முண்டி முண்டி ஊர்ந்து நாங்க வெளியே வந்துட்டோம்.

கடுமையான இருண்டுபோன இரவு நேரம். சோதனைச் சாலையில் மட்டும்தான் வெளிச்சம் இருந்தது. மெதுவா நடந்து அறையின் பின்பக்கம் இருந்த சாளரத்துக்குப் பக்கத்துல போய் நிற்கலாம்னு முயற்சி செய்யிறப்போ மீண்டும் அந்த பயங்கரமான சத்தம் கேட்டது. முந்தினநாள் கேட்ட அதே சத்தம்தான். அந்தச் சத்தத்தைக் கேட்டவுடன், நாங்க ரெண்டு பேரும் சாளரத்தின் வழியா குதித்து அறைக்குள்ளே நுழைஞ்சோம். ஆனா, என்ன ஆச்சரியம்! நாங்க தேடிக் கொண்டிருந்த அந்த தான்லி தரையில் படுத்து வலி தாங்காமல் துடித்துக் கொண்டிருந்தான். அவனுக்குப் பக்கத்துல முந்தின நாள் பார்த்த அந்த எமதூதனைப் போன்ற முரட்டு மனிதன் நின்னுக்கிட்டு இருந்தான். இன்னொரு பக்கம் கையில ஒரு பருமனான கண்ணாடிக் குழாயைப் பிடிச்சுக்கிட்டு நிஷிமாரா நின்னுக்கிட்டு இருந்தான்.

'என்ன நடக்குது நிஷிமாரா?'- மிகுந்த கோபத்துடன் நான் கேட்டேன்.

நிஷிமாரா எங்களை அங்கு பார்த்த ஆச்சரியத்தில் ஒரு வார்த்தை கூட பேசாமல் அப்படியே சிலை மாதிரி நின்னுட்டான். பிறகு தன்னைச் சமாளிச்சுக்கிட்டு அவன் சொன்னான்:

'என் விருந்தினர்களா வந்து தங்கியிருக்குற நீங்க இப்படி நடக்கலாமா? உங்களை இந்த அறைக்குள்ளே யார் வரச் சொன்னது?'

'யாருமில்ல. இப்போ என்ன நடக்குதுன்னு சொல்லுங்க.'

நிஷிமாரா ஆச்சரியம் கலந்த ஒரு சிரிப்புடன் சொன்னான்: ‘என்ன நடந்ததுன்னு நீங்கதான் பார்த்தீங்கள்ல? இந்த மனிதனைப் பாம்பு கடிச்சிடுச்சு. அதுக்கு நான் சிகிச்சை பண்ணுறேன்.'

மார்ட்டின் இதற்கிடையில் தரையில் படுத்திருந்த தான்லினையே உற்றுப் பார்த்தார். அவர் தன் தலையை உயர்த்தி கடுமையான குரலில் சொன்னார்: 'இந்த ஆளு இறந்துட்டாரு. பாம்பு கடிச்சு இவன் இறக்கல. இவனை நீங்க என்ன செய்தீங்க?'

'அதை நீங்க தெரிஞ்சுக்கணுமா?'

இதற்கிடையில் நிஷிமாரா எங்கிருந்து ஒரு கைத்துப்பாக்கியைக் கொண்டு வந்தான்னு தெரியல. அதை எனக்கு நேராகக் காட்டியவாறு அவன் சொன்னான்: 'சரி... அந்தக் கதையை நான் சொல்றேன். கேளுங்க. உலகத்திலேயே மிகப்பெரிய ஆச்சரியமான கண்டுபிடிப்பைக் கேட்டு சாகக்கூடிய அதிர்ஷ்டம் உங்களுக்குக் கிடைச்சதா இருக்கட்டும். உங்க தான்லின் பாம்பு கடிச்சு இறக்கல. அவன் ஒரு கொசு கடிச்சு இறந்திருக்கான். சாதாரண ஒரு கொசு கடிச்சு...'

நிஷிமாரா காதுகளே செவிடாகிற மாதிரி உரத்த குரல்ல சிரிச்சான். நாங்களே அதைக் கேட்டு நடுங்கிப் போனோம். அவன் சொன்னான்: 'நம்ம முடியல... அப்படித்தானே? பரவாயில்ல...


இப்போ நீங்களே நேரடியா அதைப் பார்க்கலாம். ஆனா, அதைக் காட்டுறதுக்கு முன்னாடி ஒரு விஷயத்தை நான் சொல்ல விரும்புறேன். கவனமா கேட்கணும். கொசுவின் வாயில் சுரக்கும் எச்சிலை ரசாயன செயலால் வேற மாதிரி மாற்றலாம்னு நான் சொன்னதை நீங்க மறந்திருக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன். நான் அந்த விஷயத்துல வெற்றி அடைஞ்சிட்டேன். முட்டையில இருந்து ஆரம்பிச்சு நீரில் கொசு புழுவாக நீந்திப் போகுறது வரை உள்ள ஒவ்வொரு கட்டத்திலும் அதன் மீது பலவகைப்பட்ட ரசாயன செயல்கள் நடத்தி கொசுவின் எச்சிலை பாம்பின் விஷத்தை விடவும் மிகவும் கொடிய ஒன்றாக நான் மாற்றியிருக்கேன். நேற்று நீங்கள் கேட்ட பயங்கர சத்தம் இதே மாதிரி ஒருத்தன் மீது கொசுவைக் கடிக்கச் செய்து பார்த்ததன் விளைவாக உண்டானது. தான்லினின் நிலையை உங்கக் கண்களாலேயே இப்போ நீங்க பார்த்தீங்க. இனிமேல் இருக்குறது நீங்க ரெண்டுபேர்தான்.'

நிஷிமாரா சைகை காட்டியதைத் தொடர்ந்து எமதூதனைப் போல அங்கே நின்னுக்கிட்டு இருந்த அந்த மனிதன் எந்தவித கஷ்டமும் இல்லாம மார்ட்டினைத் தன் கைகளால் பற்றினான். அவர் பக்கத்துல நெருங்கிப் போன நிஷிமாரா சொன்னான்: 'இந்தக் குழாயைப் பாருங்க. இதுல ஒரே ஒரு கொசுதான் இருக்கு. ஆனா, உங்களை மாதிரி உள்ள இருபது இளைஞர்களை இது எம உலகத்திற்கு அனுப்பும். நீங்க விஞ்ஞான வளர்ச்சியில முன்வரிசையில நின்னுக்கிட்டு இருக்குற அமெரிக்காகாரர் ஆச்சே! அதுனால நண்பர்களான உங்க ரெண்டு பேர்ல உங்களைத்தான் நான் விஞ்ஞான சோதனைக்காக உயிரை இழக்குறதுன்ற மிகப்பெரிய செயலுக்குத் தேர்ந்தெடுத்திருக்கேன். நீங்க குறிப்பா ஒண்ணும் செய்ய வேண்டியது இல்ல. இந்தக் குழாயை உடம்புல அழுத்தி வைக்கிறப்போ அதோட மூடி அதுவாகவே திறக்கிற மாதிரி அமைக்கப்பட்டிருக்கு. உள்ளே இருக்குற கொசு உங்களைக் கடிக்க அதிக நேரம் ஆகாது...'

தலைக்குள்ளே புழுக்கள் நெளிவதைப் போல் நாங்கள் உணர்ந்தோம். இதுக்கு மேல அங்கு எங்களால இருக்க முடியல. எல்லா பலத்தையும் பயன்படுத்தி நான் நிஷிமாராவை ஓங்கி ஒரு அடி கொடுத்தேன். நிஷிமாரா திடீர்னு கிடைச்ச அடியால ஒரு பக்கம் சாய்ந்து விழுந்தான். அவன் விழுந்தவுடனே, அந்தக் குழாயும் தரையில விழுந்து உடைந்தது. அதற்குப் பிறகு என்ன நடந்ததுன்றதை வர்ணிக்குறது கஷ்டமானது. நீங்களே நினைச்சுப் பாருங்க. மூணு பேர் எமனைப் போல பயங்கரமான ஒரு கொசுவோட கடியில இருந்து தப்பிக்கிறதுக்காக அறைக்குள்ளே இங்கேயும் அங்கேயுமா ஓடுறதுன்றதை நீங்க கொஞ்சம் மனசுல நினைச்சுப் பாருங்க. தான்லினோட இறந்துபோன உடலை அங்கேயே விட்டுட்டு தப்பிச்சு ஓடுறதுக்கான வழி என்னன்னு பார்த்தோம்.

எப்படியோ வாசலை அடைந்து, கதவை இழுத்துத் திறக்கறதுக்காக பிடியில கையை வச்சேன் நான். அப்போ அந்த அரக்கனைப் போன்ற மனிதன் எனக்கு நேராகப் பாய்ந்தான்.

இனி தப்பிக்கிறதுக்கு வழியே இல்ல. அப்போ கொசு என் மூக்குக்கு நேரா ஒரு தடவை பறந்துட்டு போய்க் கொண்டிருந்தது. அந்த மனிதன் உரத்த குரல்ல கத்திக்கிட்டே என் மேல ஒரு புகைவண்டி இயந்திரத்தைப் போல வந்து விழுந்தான். கொசு அவனைக் கடிச்சிருக்குன்றதையும், அவனோட கதை முடிஞ்சிடுச்சுன்றதையும் நான் புரிஞ்சுக்கிட்டேன்.

ஆனா, அதை நினைச்சு அங்கே நிக்கிறதுக்கு நேரமில்ல எழுந்து ஓட நான் நினைச்சேன். அப்போ இன்னொரு ஆபத்து வந்தது. நிஷிமாரா மார்ட்டினை தரையில விழவச்சிட்டான். கொசு அவங்களுக்கு நேரா பறந்துக்கிட்டு இருந்துச்சு. நான் ஓடிப்போய் மார்ட்டினை தள்ளிவிட்டேன். அப்போ நிஷிமாரா உரத்த குரல்ல கத்தினான். கொசு அவனோட கன்னத்துல உட்கார்ந்துக்கிட்டு இருந்துச்சு.

அதற்கு மேல நான் சும்மா இருக்கல. நிஷிமாராவின் கன்னத்துல ஓங்கி ஒரு அடி அடிச்சேன். கொசு, நிஷிமாரா ரெண்டு பேரோட ஆட்டமும் ஒரே நேரத்துல முடிஞ்சிடுச்சு."

கொசுவைக் கொன்ற தன்னுடைய வீரச் செயலைச் சொன்ன ஷ்யாம் அண்ணன் ஒரு நீண்ட பெருமூச்சை விட்டவாறு சொன்னார்: "அதற்குப் பிறகு கொசுவைக் கொல்லணும்ன்ற ஆர்வம் எனக்கு ஒரு முறைகூட வரல!"

பூச்சி

ஷ்யாம் அண்ணன் அன்று கிட்டத்தட்ட தோல்வியைத் தழுவிவிட்டார்.

'கிட்டத்தட்ட' என்று வெறுமனே கூறவில்லை. உண்மையாக சொல்லப்போனால் தன்னுடைய தோல்வியை அவ்வளவு சாதாரணமாக ஒப்புக் கொள்ளக்கூடிய மனிதரில்லை அவர். எவ்வளவு மோசமான சூழ்நிலை உண்டாகி மூலையில் போய் உட்காருகிற ஒரு நிலை வந்தாலும் சிறிதும் பதறாத - வேறு யாருக்கும் இல்லாத ஒரு குணம் ஷ்யாம் அண்ணனுக்கு இருந்தது. வழுவழுப்பான மீனைப் போல எவ்வளவு இக்கட்டான தருணத்திலும் வழுக்கிப்போகும் சாதுர்யம் ஷ்யாம் அண்ணனுக்கு மட்டுமே உரியது.

ஆனால், அன்று ஷ்யாம் அண்ணன் ஒரு மாதிரி ஆகிப் போயிருந்தார் என்பதைக் கூறாமல்  இருக்க முடியவில்லை. மெஸ்ஸில் இருக்கும் எல்லாரின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி மனக் காயமடைந்து போயிருந்தார் அவர்.

மெஸ்ஸின் மூன்றாவது மாடியில் இருந்த ஒரு சிறு அறையில் ஷ்யாம் அண்ணன் மட்டும் தனித்து வசித்து வந்தார். அப்படி இருப்பதுதான் ஷ்யாம் அண்ணனுக்குப் பிடித்திருந்தது என்பது ஒருபுறம் இருக்கட்டும்- அப்படி அவர் இருப்பதுதான் எங்களுக்கும் நிம்மதியைத் தரக்கூடிய ஒன்றாக இருந்தது.

ஷ்யாம் அண்ணனுக்கு நிகரான அசாதாரண தகுதிகளைக் கொண்ட ஒரு மனிதன் அவருக்கு அருகிலேயே இருப்பது என்பது எவ்வளவு ஆபத்தான ஒரு விஷயம் என்று எல்லாரும் நினைத்ததுதான் அதற்குக் காரணம்.

ஷ்யாம் அண்ணன் இருக்கும் அந்த மூன்றாம் மாடியில் அன்று இரவு சுமார் பன்னிரண்டு மணிக்கு ஒரு சிறு பிரச்சினை உண்டாகுமென்று எங்களுக்கு நன்றாகத் தெரிந்துவிட்டது. சனிக்கிழமை இரவு. அடுத்த நாள் விடுமுறை. அதிகாலையில் எழுந்திருக்சக வேண்டிய தேவையில்லை என்ற நிம்மதியுடன் எல்லாரும் தங்களுக்கு விருப்பமான சீட்டு விளையாட்டு, தமாஷாகப் பேசிக் கொண்டிருத்தல் எல்லாம் முடிந்து அப்போதுதான் போய்ப்படுத்திருப்பார்கள். அப்போது மேஜை, நாற்காலிகள் கீழே தள்ளப்படும் சத்தமும் தொடர்ந்து ஷ்யாம் அண்ணனின் பயங்கரமான ஒரு கர்ஜனையும் கேட்க, எல்லாரும் திடுக்கிட்டு எழுந்தார்கள்.

"என்ன நடந்தது?"

சீட்டு விளையாட்டு போன்றவை ஷ்யாம் அண்ணனின் கண்களில் படக்கூடாது. அதனால் ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் இரவு நேரத்தில் எங்களிடம் கோபம் இருக்க, எப்போதையும்விட சீக்கிரமே தன்னுடைய அறைக்கு ஷ்யாம் அண்ணன் போய்விடுவார்.


அறைக்குச் சென்றபிறகு அவர் ஹுக்கா இழுக்கும் சத்தமும் சில நேரங்களில் மரத்தில் கூர்மையான வாளை வைத்து அறுக்கும்போது உண்டாகும் சத்தத்தையொத்த குறட்டைச் சத்தமும் கீழேயுள்ள மாடிகளில் அமர்ந்து சீட்டு விளையாடிக் கொண்டிருப்பவர்களின் அமைதியைக் குலைத்துக் கொண்டிருக்கும்.

அன்று அப்படிப்பட்ட சுகமான உறக்கத்திற்கு திடீரென்று என்ன கேடு உண்டாகிவிட்டது? ஷ்யாம் அண்ணனின் உரத்த சத்தத்தைக் கேட்டால் ஒரு வாரம் பட்டினி கிடந்த ஏதோ நரியோ, சங்கிலியை அறுத்துக் கொண்டு கத்தியை ஓங்கியவாறு ஓடிவருகின்ற இரத்தவெறி பிடித்த பைத்தியக்காரனோதான் அந்தச் சத்தத்தின் காரணகர்த்தா என்று யாரும் நினைப்பார்கள். ஷ்யாம் அண்ணனைப் போன்ற ஒரு வீரசாகசங்கள் செய்யும் மனிதனுக்கு எந்த விஷயமும் சாதாரணமானதே. அப்படியென்றால் என்னதான் நடந்தது?

அந்த ரகசிய சம்பவத்தின் கதாநாயகனான ஷ்யாம் அண்ணன் அடுத்த நிமிடம் 'சடபடா' என்று படிகளில் இறங்கி வந்து கொண்டிருப்பதை நாங்கள் பார்த்தோம். வேகமாக அருகில் சென்று அவரிடம் கேட்டோம். "என்ன நடந்தது, ஷ்யாம் அண்ணே?"

நாங்கள் இப்போதும் விழித்துக்கொண்டுதான் இருக்கிறோம் என்று ஷ்யாம் அண்ணன் நினைக்கவில்லை. ஆர்வத்துடன் நாங்கள் கேள்வி கேட்டவுடன், முதலில் ஷ்யாம் அண்ணன் திகைப்புடன் நின்றிருந்தார். ஒருவேளை எங்களுக்கு அப்படித் தோன்றியிருக்கலாம். அடுத்த நிமிடம் நாங்கள் எல்லாரும் அதிர்ச்சியடையும் வண்ணம் ஷ்யாம் அண்ணன் தாழ்ந்த குரலில் சொன்னார்: "சம்பவம்... சம்பவம்... நான் நினைச்சதுதான்." அவர் சொன்னதன் அர்த்தத்தை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அவர் சொன்ன விதத்தைப் பார்த்து நாங்கள் வியப்படைந்தோம். ஏதோ பயத்தின் சாயல் அவருடைய குரலில் ஒளிந்திருப்பதை எங்களால் உணர முடிந்தது. நடு எலும்பு வழியாகக் குளிர்ச்சியான நீர் வழிந்து போவதைப் போல ஒரு உணர்வு எங்கள் எல்லாருக்கும் உண்டானது.

அந்த அதிர்ச்சியிலிருந்து ஒரு வகையில் விடுபட்டு, நடுங்கிய குரலில் முதலில் கேள்வி கேட்டவன் சிபுதான். அவன் கேட்டான்: "பூதமோ, ஆவியோ ஏதாவது இருக்குமோ, ஷ்யாம் அண்ணே?"

"பூதம்!"

தன்னுடைய கிண்டல் கலந்த கூர்மையான வார்த்தையைக் கேட்டு, சாதாரண ஒரு பூதத்தைப் பார்த்து தான் உண்டாக்கிய சத்தத்தைக் கேட்டு, சிபு தன்னை அவமானப்படுத்திவிட்டான் என்று ஷ்யாம் அண்ணன் நினைப்பதைப் போல் தோன்றியது.

"எல்லாரும் போயி பார்த்துட்டு வருவோம்"- கோரா சொன்னான்.

ஷ்யாம் அண்ணனுக்கு இந்த விஷயத்தில் சம்மதம் இல்லை. தவிர, இவ்வளவு பெரிய ஆபத்தை நோக்கி எங்களைத் தள்ளிவிட வேண்டும் என்ற விருப்பம் அவருக்கு இல்லை. அதைவிட இரவு நேரத்தில் நாங்கள் யாருடைய அறையிலாவது தங்கியிருந்துவிட்டு பொழுது விடிந்த பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானித்துக் கொள்ளலாம் என்று அவர் நினைக்கிறார் என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடிந்தது.

ஆனால், அவ்வளவு எளிதாக அந்த விஷயத்தை விட்டுவிட நாங்கள் தயாராக இல்லை. ஷ்யாம் அண்ணனைப் போன்ற ஒரு மனிதரின் மனதில் பாதிப்பு உண்டாக்கிய அந்த விஷயம் என்ன என்பதைக் கண்டுபிடிக்காமல் விடக்கூடாது என்ற பிடிவாதம் எங்களுக்கும் உண்டானது.

எல்லாரும் படிகளில் ஏறி அறைக்குள் நுழைந்தோம். அறைக்குள் நல்ல இருட்டு. ஸ்விட்ச்சைப் போட்டால் அங்கு என்ன நடக்கும் என்ற பயம் இருந்ததால் யாருக்கும் விளக்கு போட தைரியம் வரவல்லை. கடைசியில் சிசிரன் பாதி மனதுடன் ஸ்விட்சைப் போட்டான்.

ஆனால், எங்கு? என்ன?

கீழே விழுந்து கிடந்த மேஜையையும் நாற்காலியையும் தவிர அங்கு வேறு எதுவும் இல்லை. எவ்வளவு முயற்சித்தும் எங்களைத் தடுக்க முடியாமற்போன ஷ்யாம் அண்ணன் எங்களுக்குப் பின்னால் நடந்து அறைக்குள் வந்து நின்றிருந்தார். நாங்கள் திகைத்துபோய் ஷ்யாம் அண்ணனின் முகத்தைப் பார்த்தபோது அவர் மிடுக்கான குரலில் சொன்னார்: "நான்தான் சொன்னேன்ல?" அறையில் எதுவும் இல்லை என்பதுவே ஒரு மிகப்பெரிய ரகசியமாயிற்றே என்பதுதான் அந்தக் கேள்வியின் அர்த்தம் என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம்.

நாங்கள் ஏதாவது கூறுவதற்கு முன்பு அந்த அறையில் ஆச்சரியப்படும் வகையில் ஒரு சத்தம் கேட்டது. 'கோ' என்றொரு சப்தம். திடீரென்று ஒலித்த அந்தச் சத்தத்தைக் கேட்டு நாங்கள் அதிர்ச்சியடைந்து எங்களை மீறி நாங்கள் எல்லாரும் பின்னால் நகர்ந்து நின்றோம். ஆனால், அடுத்த நிமிடம் விஷயம் என்னவென்று தெரிந்தபோது சிரித்து சிரித்து எங்களுக்கு வயிறே வெடித்துவிடும் போல் இருந்தது.

கோராதான் எல்லாருக்கும் முன்னால் நின்றிருந்தான். முதலில் அவன் எல்லாருடனும் சேர்ந்து பின்னோக்கி நகர்ந்தான் என்றாலும் அடுத்த நிமிடம் குனிந்து தரையிலிருந்து ஒலித்த எல்லாரையும் பயமுறுத்திய அந்த பயங்கரமான ரகசியத்திற்கு ஆதாரமான உண்மையைக் கையில் எடுத்தான்.

பெரிய ஒரு விட்டில் பூச்சி!

நாங்கள் அதையும், தொடர்ந்து ஷ்யாம் அண்ணனையும் பார்த்தோம். நாங்கள் விழுந்து விழுந்து சிரித்தோம். சிசிரன் இதற்கிடையில் சிரிப்பை அடக்க முடியாமல் அடக்கிக் கொண்டு கேட்டான்: "கடைசியில இந்த ஒரு விட்டில்தான் ஷ்யாம் அண்ணனை பயமுறுத்தினதா?"

மீண்டும் சிரிப்பு அலை அங்கு ஓயாமல் கேட்டு கொண்டிருந்தது. ஆனால், அந்தச் சிரிப்பலைகள் ஷ்யாம் அண்ணனைச் சிறிதும் பாதிக்கவில்லை. அதைப்பற்றி சிறிதும் கவனிக்காமல் தன்னுடைய கட்டிலில் போய் அமர்ந்து கொண்டு எங்கள் ஒவ்வொருவரையும் அவர் ஆச்சரியத்துடன் பார்த்தார். பிறகு எங்களிடம் அவர் கேட்டார்: "ஒரு விட்டில் பூச்சியைப் பார்த்து இந்த அளவுக்குப் பயம் உண்டாகியிருக்கு... அப்படித்தானே?"

இரண்டு கால்களையும் தூக்கிக் கட்டிலில் வைத்துக் கொண்டு வசதியாக உட்கார்ந்தவாறு ஷ்யாம் அண்ணன் பிரகாசிக்கும் கண்களுடன் எங்களைப் பார்த்துக் கேட்டார்: "ஒரு பூச்சிக்குப் பின்னால் எட்டாயிரம் மைல் தூரம் எப்பவாவது ஓடியிருக்கீங்களா? மூவாயிரம் டன் இறந்துபோன கிருமிகளை இனி என்ன செய்யிறதுன்ற தர்மசங்கடமான நிலையில சிக்கியிருக்கீங்களா? பாக்கெட்ல ஒரு மூடிய டப்பாவையும் கையில ஒரு காகிதத்தையும் வச்சுக்கிட்டு ஆப்ரிக்காவின் அடர்ந்த காட்டுலயும் மேட்டுலயும் ஒரு பூச்சியைத் தேடி அலைஞ்சிருக்கீங்களா?"

அவரின் அந்தக் கேள்வியைக் கேட்டு எங்களின் சிரிப்புச் சத்தம் நின்றுவிட்டது. எனினும், கேள்வி கேட்காமல் எங்களால் இருக்கமுடியவில்லை. நாங்கள் கேட்டோம்: "அப்படி என்ன பூச்சி ஷ்யாம் அண்ணே? இந்த மாதிரி விட்டிலா?"

"இல்ல... அதோட பேரு பிஸ்ட்டோ ஸார்க்கா க்ரிகேரியா."

"போதும்... போதும் ஷ்யாம் அண்ணே, பூச்சியா இருந்தாலும் கடவுளோட படைப்புல சேர்ந்ததுதானே? அதைக்கேவலமா பேசுறது சரியா என்ன?"


சிபு அதைச் சொன்னதும் மீண்டும் சிரிப்பு அலை எழுந்தது. அப்போது அதட்டுகிற குரலில் ஷ்யாம் அண்ணன் சொன்னார்: "கேவலமா சொல்லல. அது அதோட விஞ்ஞானப் பெயர்."

நாங்கள் படிகளில் இறங்குவதற்காகப் புறப்படுவதற்கு முன்னால் ஷ்யாம் அண்ணன் கதையை ஆரம்பித்தார்.

"1931- ஆம் வருடம் டிசம்பர் 22- ஆம் தேதி லாக்வியாவுல இருக்குற நிஷா நகரத்தின் தெருக்கள் பனியால மூடப்பட்டுக் கிடந்தன. அதற்கு முந்தின நாள் பலமான ஒரு பனிப்புயல் அடிச்சது. நகராட்சியைச் சேர்ந்தவர்கள் வந்து பனியை வெட்டி அப்புறப்படுத்துறது வரை மக்களால் சாளரங்களைத் திறக்கக்கூட முடியல. நான் வழக்கம்போல காலை நேரத்து நடை முடிந்து ஹோட்டலுக்கு அப்போதான் திரும்பி வந்திருந்தேன்.

அப்போது ஒரு குதிரை வண்டி என் பக்கத்துல வந்து நின்னுச்சு. 'அஸ்ட்ரகான்' கோட்டும் ரஷ்யன் தொப்பியும் அணிஞ்ச ராணுவத்தைச் சேர்ந்த ஆள்னு நினைக்கிற மாதிரி தோற்றத்தைக் கொண்ட ஒரு மனிதன் இறங்கி வந்து என்னையே பார்த்தான். பிறகு ஒரு கடிதத்தை அவன் என் கையில தந்தான்.

கடிதத்தைப் படிச்சிட்டு ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்து நான் சொன்னேன்: "ஜெனரல் வர்னோஃப் இங்கே இருக்குறார்னு எனக்குத் தெரியாது"ன்னு.

அவன் அதற்குச் சொன்னான்: "ஆமா... மூணு வருடங்களாக அவர் இங்கேதான் வசிக்கிறார். உங்களை அவர் இப்போ பார்க்க விரும்புறார்."

'அந்த விஷயத்தைக் கடிதத்திலேயே எழுதியிருக்கார். ஆனா, அவர் பார்க்க விரும்புற ஆள் நான்தான்னு எப்படி நீங்க கண்டுபிடிச்சீங்க?'- நான் அந்த மனிதனைப் பார்த்துக் கேட்டேன்.

அதற்கு அஸ்ட்ரகான் கோட்டின் காலரை உயர்த்தியவாறு சொன்னான்: 'அதைத் தெரிஞ்சுக்குறதுல என்ன கஷ்டம் இருக்கு? ஜெனரல் உங்களைப் பற்றி என்கிட்ட எவ்வளவோ சொல்லியிருக்காரு. அது ஒரு பக்கம் இருக்கட்டும். இரத்தத்தை உறைய வைக்கிற பனியில ஒரு சாதாரண ஸ்வெட்டரை மட்டும் அணிந்து கொண்டு அதிகாலை நேரத்துல நடக்குறதுக்காக நிச்சயம் உங்களைத் தவிர, வேற யாரும் போகமாட்டாங்கன்றது எனக்கு நல்லா தெரியும்!'

ஜெனரல்

தற்குப் பிறகு நான் ஜெனரலோட வீட்டுக்குப் போனேன். ரிகா கடலின் தெற்குப் பகுதியில் அழுக்கடைந்ததும் பழையதுமாக இருக்குற நகரத்தின் மத்தியில் மக்கள் கூட்டம் கூட்டமா வசிக்கிற ஒரு தெருவுல ஜெனரலோட ரெண்டு அறைகள் மட்டுமே இருக்கக் கூடிய, கீழே விழுற நிலையில இருக்குற வீட்டைப் பார்க்குறப்போ உண்டானதைவிட ஆச்சரியம் அதிகமா உண்டானது.

ஆப்ரிக்காவுல வேட்டைக்குப் போற காலத்துல ஜெனரல் எனக்குப் பழக்கமானாரு. நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து நைப்பர் நதியில் சிறு படகுல நாநூறு, ஐந்நூறு மைல்கள் பயணம் செய்திருக்கோம். காங்கோவின் பயங்கரமான காடுகளுக்குள் உயிரைக் கையில பிடிச்சுக்கிட்டு கொரில்லாக்களைத் தேடிஅலைஞ்சிருக்கோம். மாஸாயிகளோடு சேர்ந்து வில்லையும் அம்பையும் கையில எடுத்துக்கிட்டு வேட்டைக்குப் போயிருக்கோம். தோற்றத்திலயும் நடவடிக்கைகள்லயும் ப்ரஷ்யாக்காரர் உடலும் மனசும் ஒரே மாதிரி உருக்கால உருவாக்கினதைப் போல இருக்கும். சோர்வுன்னா என்னன்னு அந்த மனிதனுக்குத் தெரியாது. துன்பம்னா என்னன்னு இதுவரை அவரோட மனம் உணர்ந்ததுகூட இல்ல. முதல் உலகப்போர் சமயத்துல ஜெர்மன் படைத் தளபதின்ற முறையில அவருக்கு மிகப்பெரிய மதிப்பு இருந்துச்சு. ஏராளமான பரிசுகளை அவர் வாங்கியிருக்காரு. அப்படிப்பட்ட ஒரு மனிதருக்கு இக்கட்டான ஒரு நிலையா? பொருளாதார நிலை மிகவும் மோசமாக இருந்தது. உடல்நிலை அதைவிட படுமோசமாக இருந்தது. பழைய ஜெனரலோட ஒரு நிழல் மட்டும்தான் தெரிஞ்சது.

மரியாதைக் குறைவுன்னு மனசுல பட்டாலும் இப்படிப்பட்ட சூழ்நிலை உண்டானதுக்குக் காரணம் என்னன்னு கேட்காம என்னால இருக்க முடியல. ஜெனரல் ஆச்சரியத்துடன் என்னைப் பார்த்துக் கொண்டே சொன்னார்: 'நீங்க இந்த நேரத்துக்கு வந்திருக்கீங்கன்னு கேள்விப்பட்டேன். இதைப்பற்றி பேசுறதுக்குத்தான் நான் ஆள் அனுப்பி உங்களை இங்கே வரவழைச்சிருக்கேன். உலகத்துல இருக்குற யாருக்கும் இந்த விஷயம் தெரியாது. நீங்கதான் இதைத் தெரிஞ்சுக்கப் போற முதல் மனிதர் வாங்க...'

என்னை அறைக்குள்ளே அழைச்சிட்டுப்போயி அங்கேயிருந்த ஒரு நாற்காலியில உட்காரச் சொல்லிட்டு மேஜையை அவர் திறந்தாரு. உள்ளேயிருந்து ஒரு புகைப்படத்தை வெளியே எடுத்தாரு. பிறகு என்னைப் பார்த்து கேட்டாரு: 'இது யாரோட புகைப்படம்னு தெரியுதா?'

பார்த்த உடனே எனக்கு அது யாருன்னு தெரிஞ்சிருச்சு. ஆச்சரியத்துடன் நான் சொன்னேன்: 'இந்தப் புகைப்படத்துல இருக்குறது டாக்டர் ரத்ஸ்டைன்தானே? பதினஞ்சு வருடங்களுக்கு முன்னால் ஸி.ஸி.ஈக்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யிறதுக்காக ஆப்ரிக்காவுக்குப் போன அவர் அங்கேயே இறந்துட்டாருன்னு சொல்லுவாங்க.'

ஜெனரல் மெதுவாகத் தலையை ஆட்டிக் கொண்டே சொன்னாரு: 'இல்ல... இறக்கல. இப்பவும் அவர் வாழந்துக்கிட்டு இருக்காரு. தனிப்பட்ட ஒரு நோக்கத்தை மனசில வச்சிக்கிட்டு தான் இறந்துட்டதா நாடு முழுவதும் அவரே செய்தி பரப்பிட்டாரு.'

'அந்த விஷயம் உங்களுக்கு எப்படித் தெரியும்?'

சில நிமிட அமைதிக்குப் பிறகு ஜெனரல் மெதுவான குரல்ல சொன்னாரு: 'அவர் என் சகோதரர்!'

'உங்க சகோதரரா? டாக்டர் ரத்ஸ்டைன் யூத இனத்தைச் சேர்ந்தவராச்சே! நீங்க ஜெர்மன்காரர். அவர் எப்படி உங்களுக்கு சகோதரரா ஆக முடியும்?'

'என்னோட சொந்த சகோதரர்தான். ஒரே தாய்- தந்தைக்குப் பொறந்தவங்க நாங்க'- ஜெனரல் கவலையுடன் என்னைப் பார்த்துக் கொண்டே சொன்னார்: 'உங்களை எனக்கு அறிமுகமாகுற காலத்துல ஆப்ரிக்காவுல வேட்டைக்குப் போறோம்ன்ற போர்வையில நான் இந்த சகோதரரைத் தேடிக் கொண்டிருந்ததேன்.'

நான் உணர்ச்சிவசப்பட்டு ஜெனரலைப் பார்த்தேன். வறுமையாலும் கவலைகளாலும் அந்த மனிதருக்கு பைத்தியம் பிடிச்சிருக்குமோன்னு நினைச்சேன். என் பார்வையோட அர்த்தத்தைப் புரிந்து கொண்ட ஜெனரல் கவலை தோய்ந்த குரல்ல சொன்னார்:

'என் தலைக்கு என்னவோ பிரச்சினை வந்திருக்கும்னு நீங்க நினைக்கிறீங்க. ரத்ஸ்டைன் யூதரா இருக்குறப்போ எப்படி அவர் என் சொந்த சகோதரரா ஆக முடியும்னு நினைச்சு நீங்க குழம்பிப்போய் இருக்கீங்கள்ல! போன உலகப் போர்ல ஜெர்மனியின் மிகப்பெரிய போர் வீரருக்குத் தரப்படுற பரிசுகளைப் பெற்ற, ஒரு மனிதர் ரிகாவின் இந்த அசிங்கம் பிடிச்ச மூலையில் வறுமையின் பிடியில் சிக்கி ஒரு திருடனைப் போல மறைந்துகொண்டு வாழ வேண்டிய சூழ்நிலை எப்படி உண்டானதுன்றதை நினைச்சுப் பார்த்தா உங்களால புரிஞ்சுக்க முடியும்.'

நான் எதுவும் பேசாமல் அமர்ந்திருப்பதைப் பார்த்து ஜெனரல் திரும்பவும் என்னைப் பார்த்துச் சொன்னார்: 'உண்மையான ஜெர்மன்காரன்னு சொல்லிக்கிட்டு ப்ரஷ்யாக்காரர்களை விட மிடுக்கா நடந்து கொண்டு திரியிறவன் நான் என்ற விஷயம் எல்லாருக்கும் தெரியும்.


இப்பவும் அதே நிலை தொடருது. ஆனால், உண்மையா சொல்லப்போனால் நானும் யூதன்தான். என் சகோதரர் காலத்துல யூதர்களுக்கு அணையாவிளக்காக இருந்தார்ன்னா நான் அவர்களின் இனத்தை அழிக்க வந்த கொடியவன். ஜெர்மனியில - ஜெர்மனி மட்டும் எதற்கு? ஐரோப்பா முழுவதும் யூத மதத்தின் மீது வெறுப்பு எந்த அளவுக்குப் பரவிப்போய் இருந்ததுன்றதை நான் சொல்ல வேண்டியது இல்லையே! ரெண்டாயிரம் வருடங்களாக அவர்கள் எங்கள் மீது காட்டி வர்ற பகை சாதாரண ஒரு விஷயமில்ல. அவ்வப்போ இந்த விரோதத்துக்கு சக்தி கொஞ்சம் குறைந்து போய்விட்டது மாதிரி தோணுமே தவிர, முன்பு இருந்ததைவிட மேலும் அதிக பலத்தோட அந்த விரோதக் காற்று வீசிக்கொண்டு இருந்ததுன்றதுதான் உண்மை. சின்ன வயசுல இருந்தே இந்த யூதர்களுக்கு எதிரான பகை எங்க ரெண்டுபேர் மனசையும் பயங்கரமா வேதனைப்பட வைத்தது. ஆனா, ரெண்டு பேரையும் ரெண்டு வெவ்வேறு விதத்துலன்னு சொல்றதுதான் சரியா இருக்கும்.

என் சகோதரர் ஜேக்கப்... ரத்ஸ்டைன்றது எங்களோட குடும்பப் பெயர்... விஞ்ஞானியாக ஆகணும்னு முயற்சி பண்ணிக் கொண்டிருந்தார். அதன் மூலம் யூத இனத்தின் பெருமையை நிலை நாட்டணும்ன்றது அவரோட எண்ணம். ஆனால், நான் என்னோட இனத்தை விட்டு விலகி ஜெர்மன்காரர்களோடு சேர்ந்து யூதர்கள் மீது இருந்த வெறுப்புல இருந்து என்னைக் காப்பாற்றிக்கொள்ள முயற்சி பண்ணினேன். சிந்தனையிலும் அறிவிலும் நான் ஜேக்கப்பைவிட எவ்வளவோ பின்தங்கி இருந்ததேன். அதனால என்னோட தாய், தந்தை இருவரும் இறந்தபிறகு என் இருபதாவது வயசுல நான் ப்ரஸீலில் இருந்த ஒரு சுரங்கத்துல வேலைக்குச் சேர்ந்தேன். அங்கேயிருந்து நான்கைந்து வருடங்களுக்குப் பிறகு திரும்பி ஊருக்கு வந்தப்போ, நான் ஒரு முழுமையான ப்ரஷ்யாக்காரனா மாறிவிட்டிருந்தேன். நடத்தை, பழகுற விதம் எதிலயும் என்னை வேறொரு ஆளா யாராலும் பார்க்க முடியல.

சந்தர்ப்பச் சூழ்நிலையால் ப்ரஷ்யன் கொடுத்து வைத்தவன் என்று எல்லாருக்கும் காட்டக்கூடிய சந்தர்ப்பம் எனக்குக் கிடைச்சது. சுத்த ப்ரஷ்யன் இனத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன் கடுமையான பயணத்துக்கு மத்தியில் ப்ரஸீலின் காடுகளில் அலைந்து திரிஞ்சப்போ எங்க சுரங்கத்துக்குப் பக்கத்துல வர்றப்போ இறந்துட்டான். அவனுக்கு என்னைப்போலவே உருவ ஒற்றுமை இருக்குன்னு எல்லாரும் சொன்னாங்க. அந்தப் பொன்னான சந்தர்ப்பத்தை நான் சரியா எனக்குச் சாதகமா பயன்படுத்திக்கிட்டேன். சாகுறப்போ ஜெர்மனியில் கொண்டுபோய் சேர்க்கணும்னு அவன் சில பொருட்களையும் கடிதங்களையும் என்கிட்ட கொடுத்தான். அவனைக் கவனிக்கிறதுக்கு பக்கத்துல நான் மட்டும்தான் இருந்தேன். அந்தக் கடிதங்களைக் கொண்டும் பொருட்களைக் கொண்டும் எந்தவித பயமும் இல்லாமல் வர்னோஃபாக என்னால் நடித்து திரிய முடிஞ்சது. போர்ச் செயல்களில் ஈடுபட்டு நல்ல நிலைமைக்கு என்னால் வர முடிஞ்சது. யாருக்கும் என்மேல கொஞ்சம் கூட சந்தேகம் வரல.

இதற்கிடையில் ஜேக்கப்பைப் பார்க்கணும்னு நான் கொஞ்சம் கூட முயற்சி பண்ணலை. அவரைப் பற்றிய செய்திகளையெல்லாம் நான் பலரிடமும் கேட்டுத் தெரிஞ்சு வச்சிருந்தேன். ஒருநாள் பெர்லினிலிருந்து ம்யூனிச்சிக்குப் போற வழியில ரயில்ல யதேச்சையா நான் பார்த்தேன். அப்போ நான் ராணுவ அதிகாரியா மாறிவிட்டிருந்தேன். ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி விசாரிக்கிறதுக்காகத் தான் நான் ம்யூனிச்சிக்குப் போயிருந்தேன். அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்ட ஏதோ ஒரு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜேக்கப் அங்கு வந்திருந்தார். பார்த்தவுடனே எனக்கு ஜேக்கப்பை அடையாளம் தெரிந்துவிட்டாலும் ராணுவ உடையில நான் மிடுக்காக இருந்ததால், அவரால் என்னை உடனே அடையாளம் கண்டுபிடிக்க முடியல. சந்தேகத்துடன் என்னையே ஒண்ணு ரெண்டு தடவை பார்த்துக்கிட்டே இருந்தார். அவ்வளவுதான். நான் யாருன்னு சொல்றதுக்கு எனக்கும் அப்படியொண்ணும் விருப்பம் இல்ல. இருந்தாலும் சூழ்நிலையால் அதையும் சொல்ல வேண்டி வந்தது.

வழியில ஒரு ஸ்டேஷன்ல வண்டி நின்னப்போ, எனக்குக் கீழே வேலை செய்து கொண்டிருந்த ஒரு இராணுவ அதிகாரி எனக்கு வணக்கம் சொல்றதுக்காக அறைக்குள் வந்தான். ஒரே பார்வையில் ஜேக்கப்பை ஒரு யூதன் என்று கண்டுபிடிக்க அவனுக்குச் சிரமமாக இருக்கவில்லை. அணிந்திருக்கும் ஆடைகளாலும், நடவடிக்கைகளாலும் தான் யூதன் இல்லை என்று மற்றவர்கள் நினைக்கும்படியான எந்தவொரு செயலையும் செய்வது அவருக்கு பழக்கமும் இல்ல. எனக்குக் கீழே வேலை பார்த்த அந்த அதிகாரி ஒரு சரியான முரட்டு ஆசாமியாகவும், அதிகார மனப்பான்மை கொண்டவனாகவும் இருந்தான். அவன் ஜேக்கப்பை வைத்துக்கொண்டு என்கிட்ட சொன்னான்: 'இந்த யூதக் கழுதை உங்கக் கூட ஒரே பெட்டியில பயணம் செய்யுதா? இவனைக் கழுத்தைப் பிடிச்சு வெளியே தள்ளட்டுமா?'

மனதில் அது ஒரு மிகப்பெரிய அடியாகத் தோன்றினாலும், அதை மறைச்சிக்கிட்டு அதிகாரத் தொனியில் நான் சொன்னேன்: 'சரி! போகட்டும்! அதெல்லாம் வேண்டாம். போற பாதையில எத்தனையெத்தனை நாய்களும் பூனைகளும் நடந்து திரிகின்றன!'

ஒரு யூதனை அழிப்பதற்காகக் கிடைத்திருக்கும் சந்தர்ப்பம் தன் கையைவிட்டு நழுவிப் போகிறதே என்பதை நினைத்து மிகுந்த வருத்தத்துடன் அந்த மனிதன் ரயில் பெட்டியை விட்டு கீழே இறங்கிப்போனான். நான் வெளியே பார்த்தவாறு உட்கார்ந்துக்கிட்டு இருந்தேன். ஒருமுறை யதேச்சையா ஜேக்கப்பின் முகத்தைப் பார்த்தப்போ, அவர் என்னையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். நான் தர்மசங்கடமான நிலையில் தலையைத் திருப்பிக் கொண்டாலும் சில நிமிடங்கள் கழிச்சு என் பார்வை அவரை நோக்கியே திரும்பியது.

அப்பவும் அவர் என்னையேதான் பார்த்துக் கொண்டிருந்தார். அவருடைய முகத்தில் பாசமான ஒரு சிரிப்பு தெரிஞ்சது. பெட்டியில் வேற யாரும் இல்ல. அதை அதிர்ஷ்டம்னுதான் சொல்லணும். இல்லாவிட்டால் ஒரு யூதனுக்கு முன்னாடி ஒருவன் அமைதியா உட்கார்ந்திருப்பதைப் பார்த்து யாருக்கும் கட்டாயம் சந்தேகம் வரத்தான் செய்யும்.

ஜேக்கப் என்னைப் பார்த்துச் சொன்னார்: 'ஐஸக், நீ யாருன்னு இப்பத்தான் எனக்கே தெரியுது.'

முடிந்தவரை ராணுவ அதிகாரிக்கே இருக்கக்கூடிய மிடுக்கான குரலில் நான் கேட்டேன் : 'நீங்க என்ன பேசுறீங்க? யாருகிட்ட பேசுறோம்னு தெரியுதா?"

'எதுக்காக இப்படி தேவையில்லாம விளையாடணும், ஐஸக்? எனக்குத்தான் எல்லாம் புரிஞ்சு போச்சே. ஒரு உண்மையான ப்ரஷ்யாக்காரன் தனக்குச் சரி நிகரா உட்கார்ந்து கொண்டு வர்ற ஒரு யூதனை மிதிச்சு வெளியே தள்ளக்கூடிய எந்த ஒரு வாய்ப்பையும் தவறவிடவே மாட்டான்.'

கண்களில் கண்ணீர் நிறைய நான் அவரைப் பார்த்து பாசத்துடன் அவரோட ரெண்டு கைகளையும் பற்றியவாறு சொன்னேன்: 'என்னை மன்னிச்சுடுங்க, ஜேக்கப். இந்த ஆள்மாறாட்ட வேலையில இருக்குறதுக்காக எவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்கிறேன்றதை உங்களுக்கு நான் சொல்ல வேண்டியது இல்லைன்னு நினைக்கிறேன்.'


'அது எனக்குத் தெரியும். ஆனால், யூத கோபத்தை இப்படியா காட்டுவது? இந்த வேஷம் உன் உடம்புத் தோலைப் பொசுக்குறது மாதிரி இல்லையா?'

பார்த்தால் பயந்து போகிறமாதிரி ஜேக்கப்பின் முக பாவங்கள் திடீர்னு மாறின. அவரோட கண்களில் இருந்து கிளம்பிய தீப்பொறி மனசுக்குள்ள எரிஞ்சுக்கிட்டு இருந்துச்சு. நெருப்பு மலையையே அவர் காட்டுவதாக உணர்ந்து நான் நடுங்கிப் போயிட்டேன்."

விருந்து

ன்று விடுதியில் ஒரு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதல் காரணம்- அன்று விடுமுறை நாள். இரண்டாவது- விடுதியில் இருக்கும் கௌரன் என்ற பையன் ஏதோவொரு தேர்வில் வெற்றி பெற்றிருந்தான்.

அதற்காக நன்கொடை ஏதாவது கேட்டு விடுவார்களோ என்று பயந்தது காரணமாக இருக்கலாம்- ஷ்யாம் அண்ணன் தன் வயிற்றுக்குக் கேடு இருக்கிறது என்று கூறி ஒதுங்கி இருந்து விட்டார். கடையிசில் ஷ்யாம் அண்ணனுக்காகத் தனியாகச் சாப்பாடு ஏற்பாடு செய்ய வேண்டியதாகி விட்டது.

எல்லாரும் உணவு சாப்பிட உட்கார்ந்திருந்தார்கள். ஷ்யாம் அண்ணனுக்காகத் தனியாகத் தயாரிக்கப்பட்ட ஜீரணப் பிரச்சினை உள்ளவர்களுக்கென்றே தயாரிக்கப்பட்ட 'கேட்ஃபிஷ்' குழம்பைப் பரிமாறுவதற்காக அதற்கென நியமிக்கப்பட்டிருந்த மனிதன் ஷ்யாம் அண்ணனின் கிண்ணத்தை நோக்கிக் குனிந்ததுதான் தாமதம், அவர் தன் இரண்டு கைகளையும் கோர்த்து கிண்ணத்தின் மீது வைத்துக் கொண்டு மறுத்தார்: "எனக்கு இது வேண்டாம். நான் இதைச் சாப்பிட மாட்டேன்."

விருந்திற்குச் செலவு செய்த கௌரன் கெஞ்சுகிற குரலில் கேட்டான்: "ஷ்யாம் அண்ணே, எதற்கு இப்படிப் பிடிவாதம் பிடிக்கிறீங்க? நோயாளிகளுக்கு கேட்ஃபிஷ் நல்லதுன்னு சொல்லுவாங்க. ஜீரண பிரச்சினை இருக்காது. வயிற்றுல கேடு இருக்குன்னு நீங்க சொன்னதுனால..."

"சீக்கிரமா ஜீரணம் ஆகும்னா, நீயே அதை வயிற்றுக்குள்ளே போட்டுக்கோ. தேவையில்லாம மற்றவர்களுக்கு உதவ நடந்து திரிய வேண்டாம்" ஷ்யாம் அண்ணன் கோபம் தலைக்கேற கூறினார்.

அப்போது நான் தலையிட வேண்டி வந்தது. ஏதோ ஒரு பெரிய பிரச்சினை உண்டாகிவிட்டதைப் போல் முகத்தை வைத்துக் கொண்டு நான் சொன்னேன்: "அது தேவையில்லாத பிரச்சினைகளை உண்டாக்கிவிடும், ஷ்யாம் அண்ணே எங்களுக்காகச் சமையல் செய்திருப்பது மாமிசம்... அதுவும் கொழுப்பு ஏராளமா இருக்குற ஆட்டோடது... ஷ்யாம் அண்ணே, உங்களுக்க அது ஆகாதே!"

ஷ்யாம் அண்ணன் இக்கட்டான நிலையில் மாட்டிக் கொண்டு சொன்னார்: "தற்போதைக்கு அதுவே பரவாயில்லைன்னு நினைக்கிறேன், தம்பி! வேற எந்த மீனாக இருந்தாலும் பரவாயில்ல. இந்த கேட்ஃபிஷ்னு சொல்லப்படுறதை பட்டினியே கிடந்து செத்தாலும் பரவாயில்ல, நான் சாப்பிடமாட்டேன்."

"இதுமேல அப்படி என்ன வெறுப்பு?" சமையல்காரன் ஆட்டு மாமிசத்தை ஷ்யாம் அண்ணனின் கிண்ணத்தில் பரிமாறுவதற்கிடையில் கௌரன் கேட்டான். ஆனால், இரண்டு முறை பரிமாறப்பட்ட ஆட்டு மாமிசத்தை முழுமையாகச் சாப்பிட்டு முடித்து கிண்ணத்தை நாய் நக்கிய பாத்திரத்தைப் போல் ஆக்குவதற்கு முன்பு ஷ்யாம் அண்ணன் தலையை உயர்த்தவேயில்லை.

அதற்குப் பிறகு சட்னி வந்தது. தயிர் வந்தது. கடைசியாக 'சந்தேஷ்' (வங்காளிகளுக்கு மிகவும் விருப்பமான இனிப்புப் பலகாரம்) வந்தது. இதற்கிடையில் ஷ்யாம் அண்ணன் மெதுவாகத் தன் தலையை உயர்த்துவதைப் பார்த்து நான் சொன்னேன்: "இன்னைக்கு உங்க வயிற்றுல கோளாறு இருக்குன்றது என்னவோ உண்மை." அக்யூட் ஆங்கிளில் அவர் உணவு உண்ண ஆரம்பித்தார். அப்ட்யூஸ் ஆங்கிளை அடைந்தபோது அவருடைய உடம்பும் மனதும் ஒரே நிலையில் தெளிவு நிலைக்கு வந்தன. பிரகாசமான ஒரு சிரிப்புடன் அவர் சொன்னார்: "அதற்காகத்தான் எனக்காக இப்படியொரு தனியான ஏற்பாட்டைச் செய்து வச்சிருங்கீங்கள்ல? சரிதான்... உங்களைக் குறை சொல்லி பிரயோஜனம் இல்ல. எனக்கு ஏன் கேட்ஃபிஷ்ஷைப் பிடிக்கலைன்னு தெரியுமா?"

"ஏன் அவரைப் பிடிக்கலைன்றதை நாங்களும் கொஞ்சம் தெரிஞ்சிக்க விரும்புறோம்." - கௌரன் மெதுவான குரலில் சொன்னான்.

"சொல்றேன்... சொல்றேன்..."

திடீரென்று சந்தேஷ் தொண்டையில் அடைத்து கொண்டதால் அதற்குப் பிறகு அவர் சொன்னது எதுவும் எங்கள் காதுகளில் விழவில்லை.

சாப்பிட்டு முடித்து அறைக்குள் நுழைந்த ஷ்யாம் அண்ணன் அவர் எப்போதும் உட்காரக்கூடிய சாய்வு நாற்காலியில் கால்கள் இரண்டையும் நீட்டிக் கொண்டு சிசிரனிடம் ஒரு சிகரெட்டை 2999- ஆவது தடவையாக இரவல் வாங்கிப் புகைத்தவாறு சொல்ல ஆரம்பித்தார்:

"1929-ஆம் வருடம் செப்டம்பர் 23-ஆம் தேதி உண்டான சந்திரகிரகணத்தைப் பற்றி உங்களுக்குத் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்ல. காரணம்- அந்தக் கிரகணம் இந்தியாவுல ஒரு இடத்துலயும் தெரியலைன்றதுதான். டாக்டர் ஆல்ஃப்ரெட் ஹில் 1930 எஃப்.ஆர்.ஜி.எஸ். அதாவது ஃபெல்லோ ஆஃப் தி ராயல் ஜியோக்ராஃபிகல் சொசைட்டியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பாராட்டப்பட்டார். கிவ்விற்கும் எட்வர்ட் ஏரிக்கும் நடுவில் ஒரு புதிய நதி தோன்றியதைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீங்க."

ஷ்யாம் அண்ணனைத் திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக 'கேள்விப்பட்டது இல்லை' என்று எல்லாரும் ஒரே குரலில் சொன்னதும் அவர் உற்சாகத்துடன் தன் கதையைத் தொடர்ந்தார். "ஆப்பிரிக்காவுல பெல்ஜியம் காங்கோவிற்குக் கிழக்கே விஷுவத் ரேகைக்குக் கொஞ்சம் தள்ளி தெற்கு திசையில நடந்தது அது..."

"ஜெர்மனியில் ஒரு புகழ்பெற்ற சர்க்கஸ் கம்பெனிக்கும் ஸ்பெயினிலிருந்த ஒரு மிருகக் காட்சி சாலைக்கும் கான்ட்ராக்ட் எடுத்து ஆப்ரிக்காவின் காடுகளில் அலைந்து திரிந்து பயங்கரமான மிருகங்களைப் பிடிக்கும் வேலையில் அப்போது நான் ஈடுபட்டிருந்தேன். மிருகக்காட்சி சாலைக்குத் தேவையான பெரும்பாலான மிருகங்களை நான் பிடித்து முடித்திருந்தேன். ஒட்டகச்சிவிங்கிக்கும் வரிக்குதிரைக்கும் இடையில் இருக்கிற ஒரு வினோதமான மிருகமான ஒகாபி, காங்கோவில் இருக்கும் சிவப்பு நிறக் குள்ள மிருகம், நரிப்பூனை, புள்ளி இருக்கும் கழுதைப்புலி, பல மாதிரியான பறவைகள், மீன்கள், பாம்புகள் இப்படி எத்தனையோ... இனி சர்க்கஸ் கம்பெனிக்காரர்களுக்குத் தேவைப்படுற மிருகங்களை நான் கொண்டு போய் சேர்க்கணும். அது கொஞ்சம் சிரமமான விஷயம்தான். அவர்களுக்குத் தேவையானது ஒரு குட்டி கொரில்லா. கொரில்லாக்களைப் பிடிக்கிறதுன்றது அவ்வளவு சாதாரண விஷயமில்ல. அடர்ந்த காடுகளுக்குள்தான் அவை இருக்கும். காங்கோவிலும் காமெரூனிலும் இருக்கிற அடர்த்தியான காடுகளில் தான் முதன்முறையா நான் பயங்கரமான இந்த கொரில்லாக்களைப் பார்த்தேன்.

அதற்குப் பிறகு கிவ் ஏரிக்கு அருகில் மலை மீது பத்தாயிரம் அடி உயரத்தில் இருக்கிற காட்டில் முதல்ல பார்த்ததைவிட கொஞ்சம் பெருசா இருக்கிற கொரில்லாக்களைப் பார்த்தேன். இப்போ அவை இருக்கிற இடத்தை நோக்கித்தான் என் பயணம். ஆப்ரிக்காவில்... குறிப்பாக காங்கோவில் இருக்குற காடுகளுக்குள் நான் நுழைய வேண்டும். அது எவ்வளவு பெரிய ஆபத்தான விஷயம்ன்றது அங்கே போய் வந்தவனுக்குத்தான் தெரியும்.


கையில ஆயுதத்தையும் வெட்டுக் கத்தியையும் வச்சுக்கிட்டு பாதை உண்டாக்கிய பிறகுதான் உள்ளேயே போகமுடியும். இருநூறு அடிவரை உயர்ந்து வளர்ந்து இருக்கிற காட்டுக் கொடிகள் படர்ந்து ஏராளமான இலைகளுடன் நின்று கொண்டிருக்கும் மரங்கள் காரணமாக இருக்க வேண்டும். உச்சி பகல் நேரத்துல கூட அங்கே வெயில் இருக்காது. அந்தப் பெரிய மரங்களுக்குக் கீழே முட்கள் நிறைந்த சிறு மரங்களின் இன்னொரு காடு பதினஞ்சு அடி உயரத்தில் இருக்கும். அதற்குள்ளே அர்மிலா ரப்பர் மரங்களின் வேர்கள் பரவியிருக்கும். அப்போ ஓய்வு எடுப்பதற்காக கூடாரம் அமைக்கப்பட்ட இடத்தில் காட்டின் ஆக்கிரமிப்பு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து 'சவன்னா'... அதாவது- புற்கள் அடர்ந்த பகுதி காணப்பட்டது. அந்தப் புற்கள் சாதாரண புற்களைப் போல் இருக்காது. ஆறடி உயரத்தைக் கொண்ட ஒரு மனிதன் அதற்குள்போய் நின்றால், வெளியே தெரியாது. ஒரு குள்ளமான 'பவ்பாப்' மரத்தின் கீழ்ப்பகுதியைச் சுத்தப்படுத்தி அங்கே கூடாரம் அமைக்கப்பட்டது. ஆப்ரிக்கா காடுகளில் வேட்டையாடுவதை 'சஃபாரி' என்பார்கள். எங்க சஃபாரியில ஆட்கள் அதிகம் இல்ல. சாமான்கள், உணவு, பிடிக்கும் மிருகங்களை அடைக்கக்கூடிய கூடுகள் போன்றவற்றைச் சுமப்பதற்கு நூறு 'காஃபிர்' இனத்தைச் சேர்ந்த கூலியாட்கள் இருந்தார்கள். பிறகு 'மஸாயி' இனத்தைச் சேர்ந்த ஐந்து வேடர்கள்.

அங்கு சிங்கங்களின் தொந்தரவு அதிகமாக இருக்கும். அதனால் கூடாரத்தைச் சுற்றி நெருப்பை எரிய வைத்துவிட்டு இரண்டு வேடர்களைக் காவல் இருக்க வைத்துவிட்டு நாங்கள் உறங்குவோம்.

எங்கள் கூடாரத்தில் இரண்டு மூன்று விலை மதிப்புள்ள பறவைகளின் கூடும், மீன், உடும்பு போன்றவற்றில் வேறு எங்கும் பார்க்க முடியாத சில இனங்களைப் பாதுகாப்பாக வைக்கக்கூடிய கண்ணாடிப் பாத்திரங்களும் இருந்தன. ஒரு கண்ணாடிப் பாத்திரம் எப்படியோ உடைந்து தண்ணீர் வெளியே கொட்டுவதை நான் பார்த்தேன். உள்ளே நீர் இல்லாமல் மீன் துடித்தது. நான் எழுந்துபோய் அதை வேறொரு கண்ணாடி ஜாடியில் போட்டு நீர் ஊற்ற ஆரம்பிக்கிறப்போ, ஜீகன் உள்ளே வந்தான்.

ஜீகன் எங்கள் எல்லாருடைய நம்பிக்கையையும் பெற்ற ஒரு நல்ல மனிதன். எல்லா காஃபிர் கூலியாட்களுக்கும் மஸாயி வேடர்களுக்கும் தலைவன் அவன்தான். ஆஜானுபாகுவான உடம்பைக் கொண்டவன் அவன். குரல் கூட கொஞ்சம் முரட்டுத்தனமானதுதான். சாதாரண ஒரு ஈட்டியைக் கையில் எடுத்து வைத்துக் கொண்டு மாமிசத்தைச் சாப்பிடும் சிங்கத்தைக் கூட அவன் எந்தவிதப் பிரச்சினையும் இல்லாமல் சந்திப்பான். யாரிடமும் அவனுக்குச் சிறிதும் பயமில்லை. ஆனால், இந்த விஷயங்களெல்லாம் பகல் நேரத்துல மட்டும்தான். இரவு நேரத்துல ஒரு இலை அசைஞ்சால் கூட போதும். பூதம், பிரேதம், ஆவி அது இதுன்னு சொல்லிட்டு நடுங்கிக் கூப்பாடு போட ஆரம்பிச்சுடுவான். பேய்கள் தன்னைப் போல இருக்கிற வேடர்களின் மண்டைகளை உடைப்பதற்காக ராத்திரி நேரங்கள்ல ஒளிஞ்சு வரும்னு அவன் உறுதியாக நம்பினான்.

ஜீகனோட முக வெளிப்பாடுகளைப் பார்த்தாலே நமக்குத் தெரிஞ்சிடும். அவன் இந்த மாதிரி எதையோ பார்த்துப் பயந்துதான் இந்த நேரத்துல வந்திருக்கான்னு.

எந்தப் பேயைப் பார்த்து இப்படிப் பதைபதைச்சுப்போய் வந்து நிற்கிறேன்னு கேட்டு அவனைக் கிண்டல் பண்ணலாம்னு மனசுல நினைச்சுக்கிட்டு இருக்குறப்போ, வினோதமான ஒரு சத்தத்தைக் கேட்டு நான் ஒரு மாதிரி ஆகிவிட்டேன். கண்களை உருட்டி மிரள மிரள விழித்துக் கொண்டு என்னைப் பார்த்த ஜீகன் பயத்துடன் சொன்னான்: "சத்தம் கேட்குதா?"

தெளிவாக அந்தச் சத்தம் கேட்டது. நிச்சயமாக அது சிங்கத்தின் சத்தமோ, கோபமடைந்த யானையின் சத்தமோ அல்ல. ஆழமான இருட்டைக் கிழித்துக் கொண்டு எங்கோ தூரத்திலிருந்து ஆகாயத்தையே நடுங்கச் செய்யிற மாதிரி அந்தச் சத்தம் திரும்பவும் கேட்டது: கும் கும் கும் கும்...!

ஒரு திசையிலிருந்து அந்த சத்தம் வந்து நிற்பதற்கு முன்னால் வேறொரு இடத்திலிருந்து கேட்க ஆரம்பித்தது. பிறகு இன்னொரு இடத்துல இருந்து. இப்படி அந்தச் சத்தம் இருட்டான வானத்தின் ஒரு எல்லையிலிருந்து இன்னொரு எல்லை வரை நானே நடுங்கிப் போகிற அளவுக்குப் பயங்கரமாகக் கேட்டது.

சிறிது நேரம் அந்தச் சத்தத்தையே கேட்ட நான் கேட்டேன்: "நீ என்ன நினைக்கிறே ஜீகன்? ஏதாவது புரியுதா?"

ஜீகன் பயத்துடன் சொன்னான்: "புரியுது எஜமான்! அந்த கெட்ட ஆவிகளுக்கு எதிரியான சாத்தான் தேவைப்படுது. காடு, மலை எதாலயும் அவனை மறைச்சு வைக்க முடியாது. எண்ணெய் நிறைக்கப்பட்ட கொப்பறை தயாரா இருக்கு."

"நீ அதைச் சரியா கண்டுபிடிச்சுட்டே இருந்தாலும் இன்னொரு விஷயத்தை நீ தெரிஞ்சுக்கணும். அவங்களுக்குத் தேவை சாதாரண ஒரு சாத்தான் இல்ல. வெள்ளைத்தோலைக் கொண்ட ஒரு சாத்தான்தான் அவங்களுக்கு வேணும்!"

ஜீகன் சிறிது நேரம் கழித்துச் சொன்னான்: "நீங்க சொல்றது சரிதான் எஜமான். ஆனா, நீங்க யாரைப்பற்றி சொல்றீங்க? உங்களைப் பற்றியா?"

சிரித்துக் கொண்டே நான் சொன்னேன்: "நீ சொல்றது சரியான ஒண்ணா எனக்குத் தோணல. காஃபிர்களுக்கு மத்தியில் நிக்கிறப்போ கூட நான் வெள்ளைக்காரன்னு ஒரு பார்வை தெரியாத மனிதர் மட்டும்தான் கூறமுடியும்."

இதற்கிடையில் அந்தச் சத்தத்தைக் கேட்ட காஃபிர் கூலிக்காரர்களும் மஸாயி வேடர்களும் கூடாரத்திற்கு முன்னால் பயத்துடன் வந்து நின்னாங்க. அவங்கக்கிட்டயும் அதையே சொல்லி சமாதானப்படுத்தினேன் நான். அந்த இரவு அப்படியே நீண்டது.

அவர்களை நான் சமாதானப்படுத்திவிட்டேன் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், பொழுது விடியும் வரையில் பலவிதப்பட்ட சம்பந்தா சம்பந்தமில்லாத எண்ணங்களால் எனக்குத் தூக்கமே வரவில்லை. ஆஃப்ரிக்காவை நன்கு அறிமுகமானவர்களுக்கு அந்த சத்தத்தின் அசாதாரண தன்மையையும் அது எந்த அளவுக்கு அச்சம் தரக் கூடியதுன்றதும் நல்லாவே தெரியும். அந்தச் சத்தம் ஆஃப்ரிக்காவுக்கு மட்டுமே சொந்தமானது. ஒருவித பிரத்யேக தப்பட்டையின் ஓசை அது. பயங்கரமான காடுகளில் வாழும் பத்து மைல் தூரத்திலிருக்கும் கிராமப்புற மக்கள் ஒருவரையொருவர் நெருங்கவோ அப்படி நெருக்கமாக இருக்கும் போது இரண்டு குழுவினருக்கு இடையில் ஒரு மொழியில் பேச முடியாத சூழ்நிலை உண்டாகும்போதோ அந்தத் தப்பட்டையின் வழியாகத்தான் அவங்க தந்தி வழியா செய்தி பரிமாறிக்குற மாதிரி நீண்ட தூரத்தைக் கடந்து செய்திகளை அனுப்பிக்குவாங்க. அந்தத் தப்பட்டைகளுக்குன்னு தனியா ஒரு மொழி இருக்கு. வேற்று இனத்தைச் சேர்ந்த மாறுபட்ட மொழிகள் பேசுபவர்கள் கூட அந்த மொழியைப் புரிஞ்சுக்க முடியும். அந்த மொழியைக் கையாளுற விதமே வினோதமா இருக்கும்.


ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தப்பட்டையின் ஓசையைக் கேட்டால் அடுத்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் உடனே அதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு அதற்கேற்றபடி சத்தம் உண்டாக்குவார்கள். இந்த முறையில் செய்தி நீண்ட தூரத்தில் போய் சேரும். யாருக்கு எதிராக உண்டாக்கிய சத்தமாக இருந்தாலும், எவ்வளவு தூரத்தில் இருந்தாலும், சம்பந்தப்பட்ட மனிதன் உடனே ஓடிப்போயே ஆகணும். அந்தத் தப்பட்டையிடமிருந்து யாரும் தப்பிக்க முடியாது.

நீண்ட காலமாக ஆஃப்ரிக்காவின் அடர்ந்த காடுகளில் சுற்றி நடந்து கொண்டிருந்த எனக்கு இந்தத் தப்பட்டையின் மொழியை நல்லா புரிஞ்சிக்க முடிஞ்சது. அதனால் அந்தத் தப்பட்டை ஒலியைக் கேட்டதும், அது என்னைப் பாதிக்கக்கூடிய ஒண்ணு இல்லைன்றதை நான் தெரிஞ்சுக்கிட்டாலும், ஒருவித கவலை என்னை ஆட்டிப் படைத்ததென்னவோ உண்மை.

மறுநாள் நாங்கள் கூடாரத்தைக் கலைத்துவிட்டு சவன்னாவைக் கடந்து மலையை நோக்கி நடந்தோம். அந்த மலையில் பத்தாயிரம் அடி மேலே ஏறிச் சென்றால் கொரில்லாக்கள் இருக்குற இடத்தைப் பார்க்கலாம்னு பொதுவா சொல்லுவாங்க. மலை நெடுங்குத்தா நின்னுக்கிட்டு இருந்துச்சு. அது முழுக்க அடர்ந்த காடுகளா இருந்துச்சு. எவ்வளவு உயரத்துல ஏறின பிறகும் தப்பட்டை ஒலி எங்களை விடுறதா இல்ல. ராத்திரியும் பகலும் அது எங்களைப் பின் தொடர்ந்து கொண்டே இருந்துச்சு.

நான்காம் நாள் கிவ் ஏரியை நாங்கள் அடைந்தோம். முள் மரங்கள் அடர்ந்து நின்று கொண்டிருக்கும பயங்கரமான அந்தக் காட்டைப் பார்த்ததும் கொரில்லாக்களின் இருப்பிடம் நெருங்கிவிட்டது என்ற உண்மையை நாங்கள் புரிந்து கொண்டோம். நல்ல இடமாக ஒரு இடத்தைத் தேர்வு செய்து நாங்கள் கூடாரம் அமைத்தோம். இரவு வருவதற்கு முன்பு காட்டைக் கொஞ்சம் பார்த்துவிட்டு வரலாம் என்று நான் மட்டும் தனியே புறப்பட்டேன். கொரில்லா வேட்டையில் அவற்றை உயிரோடு பிடிப்பது என்பது உயிரோடு விளையாடக்கூடிய ஒன்று. முதலாவது விஷயம்- அவை மனிதர்களைக் கண்டால் ஓடி ஒளிந்து கொள்ளும். தானாகவே அது யாரையும் எதிர்த்துக் கிளம்பாது. அப்படி கோபப்பட்டு கிளம்பியாச்சுன்னு வச்சுக்கங்க, அதற்குப்பிறகு அதுக்கிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது. அந்த நேரத்துல அதை மாதிரி கொலைவெறி பிடிச்ச இன்னொரு பிறவியைப் பார்க்க முடியாதுன்றதுதான் உண்மை. ஒரே குண்டுல அதைக் கொல்ல முடியலைன்னு வச்சுக்கங்க, அதற்குப் பிறகு அதைத் தடுத்து நிறுத்துறதுன்றது சாதாரண விஷயமில்ல. வேடன் யாராவது கையில் கிடைத்தால் தப்பட்டையை அடிக்கிறது மாதிரி மார்புப்பகுதியை ரெண்டு கைகளாலும் அடிச்சுக்கிட்டே கொரில்லா அவனை சட்னியாக்கிட்டுத்தான் மறு வேலையைப் பார்க்கும். அதனால் வயதான ஆண் கொரில்லாவைப் பொதுவா யாரும் பிடிக்கிறதுக்கு முயற்சி பண்ணுறதே இல்ல.வேணும்னா குட்டி கொரில்லாக்களை வேட்டையாடுவாங்க. ஆனா, குட்டிகளை மட்டும் தனியா பார்க்குறது கஷ்டம். சிறு சிறு  குடும்பங்களாக கொரில்லாக்கள் சேர்ந்து பகல் முழுவதும் மரங்களில் பழங்களைத் தின்னுக்கிட்டு இரக்கும். ராத்திரி நேரங்கள்ல வயதான ஆண் கொரில்லா மரத்துக்குக் கீழே காவல் காக்கும். குட்டி கொரில்லாக்களும், தாய் கொரில்லாவும் மரத்தில் இலைகளாலும் சுள்ளிகளாலும் அமைக்கப்பட்ட படுக்கையில் படுத்திருக்கும். அதனால் அதுவாகவே ஏதாவது கொரில்லா குட்டி அந்த இடத்தை விட்டுப்போனால் தவிர, சாதாரணமாக அதைப் பிடிக்குறதுன்றது இலேசுப்பட்ட விஷயமில்ல.

அடுத்த நாள் எந்த இடத்துல எப்படி கொரில்லாவைப் பிடிக்குறதுன்றதைப் பற்றி தீவிரமா யோசனை பண்ணிக்கிட்டு நான் இருந்தேன். அநத நேரத்துல ஜீகன் மேல் மூச்சு கீழ் மூச்சு விட்டவாறு ஓடிவந்து சொன்ன செய்தியைக் கேட்டு நான் ஆச்சரியப்பட்டு நின்னுட்டேன். நான் நின்னுக்கிட்டு இருந்த இடத்துல இருந்து கொஞ்சம் தள்ளி இருந்த ஒரு குகைக்குள்ள ஒரு கொரில்லா போறதை அவன் பார்த்திருக்கான். அது பார்க்குறதுக்கு வெள்ளை நிறத்துல இருந்திருக்கு.

குதிரைக்கு கொம்பு இருக்குன்னு சொல்றது மாதிரியான விஷயம்- வெள்ளை நிறத்துல கொரில்லா இருக்குன்னு சொல்றது. அப்படி இருக்கவே முடியாது. இருந்தாலும் மாலை நேரத்து மங்கலான வெளிச்சத்துல பார்க்குறப்போ ஜீகனுக்கு அப்படி தோணியிருக்கலாம். ஆனால், கொரில்லா தனியா குகையில் வசிக்குதுன்ற விஷயம் நான் இதுவரை கேள்விப்படாத ஒன்று. எது எப்படியோ, ஜீகன் சொன்னது உண்மையான்னு கண்டுபிடிச்சுத்தான் ஆகணும்.

ஜீகனை அழைச்சிக்கிட்டு அந்தக் குகையை நெருங்கினப்போ நல்லா இருட்டிடுச்சு. அந்த இருட்டில் குகைக்குள் கொரில்லாவைத் தேடுவது என்பது ரொம்பவும் ஆபத்தான ஒரு சாகசச் செயலாக இருக்கும் என்பதை நான் புரிஞ்சுக்கிட்டேன். குகை அப்படியொண்ணும் பெரிதாக இல்லை. மலையின் மார்பில் உண்டான ஒரு பிளவு போல் அது இருந்தது. அதனால் முதல்ல குகையின் வாசற்பகுதியை நோக்கி நான்கைந்து முறைகள் சுட்டேன். எந்தவிதமான பயனும் உண்டாகாமல் போகவே காய்ந்து போன ஒரு மரக்கிளையைப் பந்தம் போல எரிய வைத்து உள்ளே புகுந்தோம். நான் துப்பாக்கியைக் கையில் பிடிச்சு நீட்டியவாறு முன்னால் நடக்க, ஜீகன் பந்தத்தைக் கையில பிடிச்சுக்கிட்டு பின்னால் வந்தான். கொரில்லா திடீர்னு எங்கள் மீது பாய்ந்தால், துப்பாக்கியை அழுத்த வேண்டியதுதான். பிறகு நடப்பது நடக்கட்டும்.

குகை சிறிது தூரம் நேராக உள்ளே சென்று வலது பக்கம் திரும்பியது. திரும்பியவுடன் அதிர்ச்சியடைந்து நின்னுட்டோம். இதுதான் ஜீகனின் கொரில்லாவா?

அந்த கொரில்லா பாறையின் மீது சாய்ந்து நின்றவாறு எங்களையே உற்றுப் பார்த்தது. அதன் நிறம் நல்ல வெளுப்புதான். உடம்பும் நல்லா பெருசாவே இருந்துச்சு. ஆனா, அது கொரில்லா இல்லை.

நாங்கள் நிற்பதைப் பார்த்து தன் கையில் இருந்த கைத்துப்பாக்கியை உயர்த்தி அது சுத்தமான ஆங்கிலத்தில் சொன்னது: 'உஷாரா இருந்துக்கங்க. ஒரு அடி முன்னாடி வச்சாலும் உங்களைத் தொலைச்சிடுவேன்.'

இதற்கிடையில் நான் என்னை ஒரு கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்திருந்தேன். சிரித்துக்கொண்டே நான் சொன்னேன்: 'அதனால் யாருக்கும் உயிர்ச்சேதம் வரும்னு நினைக்கிறீங்களா, டாக்டர் ஹில்? உங்க குணம் எனக்குத் தெரியும்?’

டாக்டர் ஹில் அதிர்ச்சியடைந்து தன் கையிலிருந்த பிஸ்டலைக் கீழே இறக்கியவாறு என்னை நெருங்கிக்கிட்டே கேட்டார்: "யார் இது? மிஸ்டர் தாஸ்... நீங்களா? நீங்க எப்படி இங்கே?"

மிடுக்கான குரலில் நான் சொன்னேன்: "எல்லாம் விதியின் செயல்னுதான் சொல்லணும். இல்லாவிட்டால் அமெரிக்காவில் ப்ரஸீலில் இருக்கும் காடுகள் எங்கே?"

டாக்டர் ஹில் நெகிழ்ச்சியுடன் சொன்னார்: "நீங்க சொல்றது உண்மைதான். அப்போ நீங்க மட்டும் இல்லாமலிருந்தா நான் அங்கேயிருந்து உயிரோட வந்திருக்கவே முடியாது."

சிரித்துக் கொண்டே நான் சொன்னேன்: "உங்க துப்பாக்கியோட சக்தி என்னன்னு அன்னைக்கே நான் புரிஞ்சுக்கிட்டேன். முதலையைக் கொல்றதுக்காக சுட்டது என்மேல பாய்ந்து, என்னைக் கொல்லாம விட்டிருச்சு!"


"நீங்க சொல்றது உண்மைதான்"- நீண்ட ஒரு பெருமூச்சை விட்டவாறு டாக்டர் ஹில் சொன்னார்: "ஆனா, உங்களைப் பார்த்ததால் இந்த முறை எந்தவித பிரயோஜனமும் இல்லை, மிஸ்டர் தாஸ். இந்தத் தடவை எனக்கு உங்களால் உதவ முடியாது."

"சரி... என்கூட வாங்க. மற்ற விஷயங்களைப் பிறகு பார்க்கலாம்” என்று கூறியவாறு டாக்டர் ஹில்லின் கையைப் பிடித்தபோது அவர் தடுத்துக் கொண்டு சொன்னார்: "என்னை உடன் அழைத்துக் கொண்டு போறதா இருந்தால், நீங்களும் உங்க கூட இருக்குற ஆளும் தேவையில்லாத ஆபத்துல சிக்க வேண்டியது வரும் புரியுதா?"

குகைக்குள்ளும் தப்பட்டையின் சத்தம் கேட்டுக் கொண்டேயிருந்தது. சிறிது நேர அமைதிக்குப் பிறகு நான் சிரித்துக் கொண்டே சொன்னேன்: "ஆபத்துகளை இழுத்து தலையில் போட்டுக் கொள்வது என் குணம். அது உங்களுக்குத் தெரியாதா மிஸ்டர் ஹில்?"

டாக்டர் ஹில்லைக் கூடாரத்திற்கு அழைத்துக் கொண்டு வந்து எல்லா விஷயங்களையும் அவரிடம் சொன்னேன்.

டாக்டர் ஹில்லை புவியியல் நிபுணர் என்று சொன்னால் அது அவ்வளவு பொருத்தமான ஒன்றாக இருக்காது. வாழ்க்கையில் ஒரு துப்பாக்கியை ஒழுங்காகப் பிடிக்க அவர் இதுவரை படித்ததில்லை. ஆனால், உலகத்தில் மிகவும் சிரமமான இடங்களைப் போய் பார்ப்பது என்பது அவருக்கு மிகவும் பிடித்த ஒரு விஷயம் அமேஸான் நதியின் ஆரம்ப இடத்தில் வைத்து ஐந்து வருடங்களுக்கு முன்னாடி நான் டாக்டர் ஹில்லைப் பார்த்து அறிமுகமானேன். அந்த முறை நான் அவரை அமேஸான் நதியில் ஒரு கொடுமையான 'அலிகேட்டர்' முதலையிடமிருந்து காப்பாற்றினேன்.

டாக்டர் ஹில் சொன்னதைக் கேட்டபோது இந்த முறை அவரைக் காப்பாற்றவோ இல்லாவிட்டால் தானே தப்பிக்கவோ அவரால் முடியாது என்று தோன்றியது. தொடர்ந்து மூணு நான்கு நாட்களாகக் கேட்டுக் கொண்டேயிருக்கும். தப்பட்டை ஒலியின் நோக்கமே டாக்டர் ஹில்தான் என்ற விஷயத்தைச் சொல்ல வேண்டியதில்லையே! காங்கோவின் இந்தப் பகுதிக்குப் புவியியல் சம்பந்தப்பட்ட பயணத்திற்காக வந்த டாக்டர் ஹில் தன்னுடைய குழந்தைத்தனமான செயல்களால் இங்குள்ளவர்களுக்க கெட்ட மனிதராகத் தோன்றிவிட்டார்.

இங்குள்ள காட்டுவாழ் மக்கள் இப்போதும் பழமையான முறைகளில்தான் வாழ்கிறார்கள். அவர்களின் காட்டிற்கு அப்பால் ஒரு உலகம் இருக்கிறது என்பதே அவர்களுக்குத் தெரியாது. அவர்களின் ஒரு கிராமத்தில் டாக்டர் ஹில் சுற்றித் திரிஞ்சப்போ முதல் வினோத மனிதர் அங்கு வந்திருக்கிறார்னு அவங்க அவரைப் பாராட்டினாங்க. அவருக்கும் அவருடன் வந்தவங்களுக்கும் அவங்க தேவையான உதவிகளைச் செஞ்சாங்க. டாக்டர் ஹில் பதிலுக்கு அவர்களுக்கு உதவி செய்யப்போனப்போதான் பிரச்சினையே உண்டானது.

அந்தக் கிராமத்தின் தலைவன் நீண்ட நாட்களாகவே தலைவலியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தான். கிராமத்தின் புரோகிதரும் மந்திரவாதிகளும் பலவகைப்பட்ட மந்திரங்களையும் சொல்லி பூதங்களையும், ஆவிகளையும் விரட்ட முயற்சி பண்ணினாங்க. ஆனா, தலைவலி கொஞ்சமும் குறைந்ததாக இல்லை. டாக்டர் ஹில் பரிசோதனை செய்து பார்த்து ஒரு ஆஸ்பிரின் மாத்திரையைத் தந்து தலைவலியை ஒண்ணுமில்லாமப் பண்ணிட்டார். அதற்குப் பிறகு அவரை விடுவார்களா? தலைவனின் பார்வையில் அவர் பத்து மடங்கு மிகப்பெரிய மனிதராகத் தோன்றியபோது, கிராமத்திலிருந்த புரோகிதருக்கும் மந்திரவாதிகளுக்கும் அவர் எதிரியாகத் தெரிந்தார். காட்டு வாழ் மனிதர்களுக்கு மத்தியில் தங்களின் மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள புரோகிதர்களும் மந்திரவாதிகளும் செய்யாத கெட்ட காரியங்கள் ஒண்ணு கூட இல்லை. அதற்கேற்றபடி சந்தர்ப்பம் வந்தது. அவர்களின் அதிர்ஷ்டம்னுதான் சொல்லணும். ஏதோவொரு தொற்றுநோய் காரணமாக அங்கிருந்த சில மிருகங்கள் இறந்துவிட்டன. டாக்டர் ஹில் தன்னுடைய மாயச் செயல்களால் அந்த மிருகங்களைக் கொன்னுட்டார்னு அவங்க செய்திகளைப் பரப்பினாங்க. இதே மாதிரி மனிதர்களையும் கொல்லுறதுதான் அவரின் நோக்கம்னு அவங்க சொன்னாங்க. தலைவனிடமும் அவர்கள் இதே விஷயத்தைச் சொன்னாங்க.

தமக்கு இது ஒரு நல்ல சூழ்நிலை இல்லைன்னு புரிஞ்சுக்கிட்ட டாக்டர் ஹில் தன் மனிதர்களுடன் ஓடிப்போக தீர்மானித்ததன் மூலம் அவரே சீக்கிரமா ஆபத்தை வரவழைச்சுக்கட்டார். அவர் கூட்டத்தை விட்டுப் பிரிந்து ஒரு இருட்டில் இந்தக் குகையில் வந்து மாட்டிக்கொண்டார். அவருடன் வந்த மற்றவர்கள் அனைவரும் பிடிபட்டு விட்டார்கள். இங்கு வந்ததன் மூலம் தப்பித்து விட்டார் அப்படின்னும் சொல்ல முடியாது. தப்பட்டையை ஒலிக்கச் செய்து காடு முழுவதும் முன்னறிவிப்பு செய்திட்டாங்க. அவர்களிடமிருந்து தப்பிக்கிறதுன்றது நடக்கக்கூடிய ஒரு விஷயம் இல்ல.

அன்று இரவும் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்த தப்பட்டை ஒலியிலிருந்து காட்டை முழுமையாக ஆக்கிரமித்து அவர்கள் இந்தப் பகுதியை நோக்கி வந்துக்கிட்டு இருக்காங்கன்றது தெரிஞ்சது. இனிமேல் அவர்களிடமிருந்து தப்பிக்க ஒரே ஒரு வழிதான் இருக்கு. மலை வழியாக கிழக்குப் பக்கமாகக் கடந்து டங்கனிக்காவை (டான்ஸானியா) அடையணும்.

நடுராத்திரி நேரத்தில் தப்பட்டை ஒலி நின்னப்போ கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. அனேகமாக பொழுது புலர்ந்த பிறகுதான் அவர்கள் திரும்பவும் தங்களின் தேடுதல் வேட்டையைத் தொடருவாங்க.

அதனால் எல்லாரையும் அழைத்து இரவோடு இரவாகவே இந்த இடத்தை விட்டுக் கிளம்பி விடலாம் என்று சொன்னேன் நான்.

ஆனால், நீண்ட தூரம் போக முடியல. பொழுது விடியிற நேரத்துல கிவ் ஏரியின் கரையை அடையிறப்போ காடும் மலையும் பூகம்பம் உண்டானதைப் போல குலுங்கின. அதிர்ச்சியுடன் நாங்கள் பார்த்தோம். பல நிறங்களில் கன்னாபின்னாவென்று பச்சை குத்தியிருந்த ஆயிரக்கணக்கான காட்டு வாழ் மனிதர்கள் வாள், ஈட்டி ஆகியவற்றைக் கையில் வைத்துக் கொண்டு இந்திர ஜாலத்தால் பூமி பிளந்ததைப் போல எங்களைச் சுற்றி வளைத்துக் கொண்டனர்.

அதற்குப் பிறகு உண்டான மோசமான சம்பவத்தை வார்த்தைகளால் கூறவே முடியாது. புரோகிதர்களின், மந்திரவாதிகளின் அட்டகாசத்தைத் தாங்க முடியல. எங்கள் கைகளைப் பின்னால் கட்டிய அவர்கள் ஊழித்தாண்டவம் ஆடினார்கள். அவர்களின் பேச்சிலிருந்து எங்களை நெருப்பில் சுட்டுப் பொசுக்கப் போகிறார்களோ அல்லது கொப்பறையில் போட்டு வறுக்கப் போகிறார்களோ என்பதை இன்னும் அவர்கள் தீர்மானிக்கவில்லை என்று தெரிந்தது.

மத்தியானம் காட்டு வாழ் மக்களின் தலைவன் அங்கே வந்தான். அவனடைய முக வெளிப்பாட்டையும் அடிக்கொருதரம் தன்னோட நெற்றியைத் தடவியதைப் பார்த்தப்போ இப்போதைக்கு ஒரு ஆஸ்பிரின் கிடைச்சா நல்லா இருக்கும்னு அவன் நினைப்பது தெரிஞ்சது. இருந்தாலும் புரோகிதருக்கு பயந்து அவன் பேசாம இருக்குறான்றதையும் நாங்க தெரிஞ்சுக்கிட்டோம்.

காட்டு வாழ் மனிதனாக இருந்தாலும் அவன் நன்றி இல்லாத மனிதனா இல்ல. தலைவலியை இல்லாமற் செய்ததற்காக அவன் இதயம் டாக்டர் ஹில் மீது நன்றியுடன் இருந்தது. அருகில் வந்த டாக்டர் ஹில்லைப் பார்த்து அவன் கேட்டான்:


"நெருப்புல கிடந்து சாகுறது, செம்பு கொப்பறையில் வறுக்கப்பட்டு இறப்பது- இதுல எதுல உங்களுக்கு விருப்பம்? ரெண்டுல ஒண்ணு தேர்ந்தெடுக்குறதுக்கு உங்களுக்க அனுமதி தர்றேன்."

நான் டாக்டர் ஹில்லின் சார்பாகச் சொன்னேன்: "எங்களை வறுத்தோ பொறிச்சோ கொல்றதுக்கு முன்னாடி தலைவலியைப் போக்குற ஒரு மந்திரசக்தி கொண்ட மாத்திரை கிடைச்சா நல்லா இருக்கும்னு உங்களுக்குத் தோணுதா இல்லையா?"- நான் பண்டு மொழியில் பேசினேன்.

புரோகிதர்மார்கள் அதைத் தடுத்தார்கள்: "வேண்டாம்... வேண்டாம். இந்த மந்திரசக்தி வாய்ந்த மாத்திரை முதல்ல நோயைக் குணப்படுத்தினாலும், கடைசியில அதுவே விஷமா மாறிடுது. அதைத் தொடவே கூடாது!"

தலைவனின் மனதில் ஒரு ஊசலாட்டம் இருப்பதை உணர்ந்த நான் சொன்னேன்: "இந்த அளவுக்கு சக்தி வாய்ந்த புரோகிதர்களும், மந்திரவாதிகளும் முடியும்னா தலைவலியைப் போக்குற மாத்திரை ஏதாவது தர்றாங்களான்றதை நாங்களும் கொஞ்சம் பார்க்குறோமே!"

தலைவனின் மனம் மேலும் சற்று அசைவதைப் பார்த்த நான் டாக்டர் ஹில்லைச் சுட்டிக் காட்டியவாறு சொன்னேன்: "முட்டாள்களான புரோகிதர்மார்களுக்காக நீங்கள் யாரைத் துன்பத்துக்குள்ளாக்குறீங்க தெரியுமா? நிலாவுல இருந்து நேரா இங்கே இறங்கி வந்த மனிதராக்கும் இவர்..."

நிலாவில் இருந்து இறங்கி வந்த மனிதரா? தலைவன் வானத்தையும் ஹில்லையும் மாறி மாறிப் பார்ப்பதைக் கண்டு அவன் எங்கள் பக்கம் சாய்ந்து விட்டான் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிஞ்சது.

புரோகிதர் உரத்த குரலில் கத்தினார்: "எல்லாமே பொய். இவர் நிலவுல இருந்து இறங்கி வந்ததுக்கு என்ன ஆதாரம் இருக்கு?"

"ஆதாரம் இவரின் முகம் தான் நிறம்..."

"இல்ல... இந்த ஆதாரத்தை நாங்க ஒத்துக்க மாட்டோம். வேற ஏதாவது ஆதாரம் வேணும்"- புரோகிதர்களின் பிடிவாதத்துக்கு முன்னால் தலைவன் எதுவும் செய்ய முடியவில்லை.

அது மிகவும் சாதாரண ஒரு விஷயம் என்பது மாதிரி நான் சொன்னேன்: "சரி... இன்னைக்கு ராத்திரி நிலவில் உங்களுக்கத் தேவையான ஆதாரம் கிடைக்கும்."

சிறிதும் தயங்காமல் நான் சொன்னதைக் கேட்டு ஒரு மாதிரி ஆகிவிட்ட காட்டுவாழ் மனிதர்கள் தங்களுக்குள் என்னவோ மாறி மாறி பேசிக் கொண்டதைப் பார்த்த டாக்டர் ஹில் சொன்னார்: "நீங்க என்ன சொல்றீங்க? வறுத்தோ வேகவச்சோ கொல்லுறதுக்கு பதிலாக இவங்க இனிமேல் தோலை உரிச்சு கொல்லப்போறதா சொல்லப் போறாங்க. எதுக்காக தேவையில்லாம நிலாவைக் கொண்டு வந்து சேர்த்தீங்க."

நான் சொன்னேன்: "பயப்பட வேண்டாம். நான் நிலாவை வச்சு அவங்களுக்கு ஆதாரம் கொடுப்பேன்."

பரிதாபமாக என்னைப் பார்த்த டாக்டர் ஹில் சொன்னார். "வேண்டாம். இக்கட்டான நிலை காரணமா உங்களோட மூளையில பிரச்சினை உண்டாகியிருக்கு. நிலவை வச்சு என்னத்தை நிரூபிக்க முடியும்!"

"இன்னைக்கு என்ன தேதின்னு உங்களுக்குத் தெரியாது. இல்லாட்டி இப்படிப் பேசமாட்டீங்க."

டாக்டர், கொஞ்ச நேரம் யோசிச்சுப் பார்த்துவிட்டு வேகமான குரலில் சொன்னார்: "ஆமா... நான் முழுசா மறந்துட்டேன். இன்னைக்கு சந்திரகிரகணத்தை நாம பார்க்கலாமே!"

"ஆமா... இதைவிட என்ன பெரிய ஆதாரம் வேணும்?"

இருந்தாலும் அதிர்ஷ்டம் எங்களை விட்டு எவ்வளவு தூரத்துல இருக்குன்றதை எங்களால புரிஞ்சிக்க முடியல.

சாயங்கால நேரம் வந்தப்போ எங்கிருந்தோ மேகங்கள் கூட்டம் கூட்டமா வந்து சேர்ந்துச்சு. வானத்தை அது முழுமையா மூடிடுச்சு. புரோகிதர்களும் மந்திரவாதிகளும் கூப்பாடு போட ஆரம்பிச்சாங்க. தங்களின் மந்திரச் செயல்களால் இப்படியொரு நிலைமை உண்டாக்கினதா அவர்கள் உரத்த குரல்ல சொன்னாங்க.

தலைவன் நெருப்பென சிவந்த கண்களுடன் வந்து சொன்னான்: "எங்கே? நிலாவில் ஆதாரத்தைக் காட்டுங்க பார்ப்போம்..."

உள்ளே நடுக்கம் இருந்தாலும் வெளியே அதைக் காட்டிக் கொள்ளாமல் அலட்சியமான குரலில் நான் சொன்னேன்: "உங்க புரோகிதர்களும் மற்றவர்களும் சாதாரண மனிதர்கள் இல்லை. இருந்தாலும் நிலாவுல ஆதாரத்தைக் காட்டுவதற்கு இன்னும் நேரம் வரல."

பாதி எரிந்த நிலையில் இருந்த ஒரு பந்தத்தை எங்களுக்கு முன்னால் குத்தி வைத்த தலைவன் சொன்னான்: "சரி... இந்த பந்தம் எரிஞ்சு முடியிறது வரை உங்களுக்கு நான் நேரம் தர்றேன். அதற்குப் பிறகு உயிரோட உங்க இதயத்தை வெட்டி எடுத்துடுவேன்!"

"தாராளமா... " என்று சொல்லிய நான் உரத்த குரல்ல சிரிச்சேன். அதே நேரத்துல நான் மனசுக்குள்ள வேண்டிக்கிட்டேன்: "ஏ வானத்து தேவதைகளே! ஒரு சூறாவளிக் காற்றடித்து வானத்துல இருக்குற மேகங்களை விரட்டி விடு!... இல்லாவிட்டால், நாங்க தப்பிக்கவே முடியாது."

ஆனா, வானத்து தேவதைகள் கருணை காட்டல. மேகங்கள் மேலும் அதிகமா திரண்டு நின்றன.

பந்தம் முழுசா எரிஞ்சு முடிஞ்சது. அதையே பார்த்துக் கொண்டிருந்த நான் மனசுக்குள்ளே வானத்து தேவதைகளின் பெயர்களைச் சொல்லித் தொழுதேன். அப்போ, திடீர்னு ஒரு சத்தம் கேட்டு, திரும்பிப் பார்த்தேன். குடுவைகளில் போட்டு பாதுகாக்கப்பட்டிருந்த மீன்களில் ஒன்று கொஞ்சமும் எதிர்பார்க்காம துடியோ துடின்னு துடிச்சது!

டாக்டர் ஹில் தன் தலைவிதியை நினைத்து நொந்து போய்விட்டார். கவலை தோய்ந்த சிரிப்புடன் அவர் சொன்னார்: "பாவம்... இந்த மீன்கள் கூட நம்ம நிலைமையைப் பார்த்துப் பரிதாபப்படுதுங்க."

சிறிது நேரம் அந்த மீனையே பார்த்துக் கொண்டிருந்த நான் திடீர்னு உற்சாகமானேன். நான் சொன்னேன்: "கவலைப்படாதீங்க. டாக்டர் ஹில். இனிமேல் பயப்படத் தேவையே இல்ல. மீன் எங்களின் நெருங்கிய நண்பன். அது தப்பிப்பதற்கான வழியைச் சொல்லித் தந்திருக்கு."

பிறகு உரத்த குரலில் நான் சொன்னேன்: "கிராமத்துத் தலைவன் எங்கே? மந்திரவாதிகளும் புரோகிதர்களும் எங்கே? நிலவில் இருந்து வந்திருக்கும் மனிதனின் வீரம் என்னன்றதை அவங்க காணட்டும்!"

எல்லாரும் ஓடி வந்தார்கள்.

நான் உரத்த குரலில் சிரித்தவாறு சொன்னேன்:

"சாதாரண மேகங்களைக் கொண்டு வானத்தை மூடச் செய்யும் காரியத்தை உங்க ஆளுங்க செய்து காட்டினாங்க. அதே நேரத்துல சந்திரன்ல இருந்து வந்திருக்கும் இந்த மனிதர் இந்தக் காட்டையும் மலையையும் இப்போ நடுங்கச் செய்யப் போறாரு. அதை நீங்களே பார்க்கலாம்."

புரோகிதர்கள் அதைக் கேட்டு சும்மா இருக்கல. அவங்க சொன்னாங்க: "எல்லாம் சுத்த ஏமாற்று வேலை."

காட்டு வாழ் மனிதர்கள் எங்கள் மீது பாய்ந்து விழத் தயாராக இருந்தார்கள். அப்போ திடீர்னு மண்ணுக்குக் கீழே ஆச்சரியமான ஒரு சத்தம் கேட்டது. தொடர்ந்து அலைகள் மீது படகு போறது மாதிரி மலை ஆட ஆரம்பிச்சது. அதோடு நிற்கவில்லை. கிவ் ஏரியில் நீர் பெருகி கரையை உடைத்துக் கொண்டு வெள்ளமென ஓடியது.


அந்தப் பெரிய பூமி அதிர்ச்சியில் காட்டுவாழ் மனிதர்கள் கண்ட பாதைகளிலெல்லாம் தலைதெறிக்க ஓட ஆரம்பித்தார்கள். பூமி அதிர்ச்சி நின்னப்போ நாங்கள் மட்டுமே சுயநினைவற்ற நிலையில் அங்கே நின்னுக்கிட்டு இருந்தோம். கிவ் ஏரியிலிருந்து ஒரு நதி இடைவிடாது ஓடிக்கொண்டிருந்தது. இந்த விஷயத்தை அறிவித்ததற்காகத்தான் டாக்டர் ஹில்லுக்கு ஃபெல்லோஷிப்பே கிடைத்தது."

கதையைச் சொல்லி முடித்தபோது சிபு கேட்டான்: "அந்த மீன் பூகம்பம் வரப்போறதை முன்கூட்டியே காட்டியது... அப்படித்தானே? அந்த மீனோட பேர் என்ன?"

"அந்த நாட்டுல இருக்குற ஒரு வகை மீன் அது" - மிடுக்கான குரலில் ஷ்யாம் அண்ணன் சொன்னார்: "ஆங்கிலத்தில் அதை கேட்ஃபிஷ் என்று அழைப்பார்கள். ஜப்பானில் இருக்குறப்போ அதன் குணங்களை நான் தெரிந்து வைத்திருந்தேன். ஜப்பான்ல அடிக்கடி பூகம்பம் உண்டாகும். பூகம்பம் உண்டாகுறதுக்கு முன்னாடி கேட்ஃபிஷ் ஆச்சரியப்படும் வகையில் அதை முன்கூட்டியே எப்படி வெளிப்படுத்தும் என்ற உண்மையை ஜப்பான் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடிச்சாங்க. பூகம்பம் வர்றதுக்கு முன்னாடி அதை எப்படியோ தெரிந்து கொள்ளும் கேட்ஃபிஷ் துடிக்க ஆரம்பிக்கும். அதனால் பூகம்பம் வர்றதை முகூட்டி தெரிஞ்சுக்கிறதுக்காகவே பலரும் இந்தவகை மீன்களை வளர்க்கிறாங்க."

சிறிது நேரம் தன்னுடைய பேச்சை நிறுத்திய ஷ்யாம் அண்ணன் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டவாறு சொன்னார்: "அன்னைக்கு எங்க எல்லாரோட உயிரையும் காப்பாற்றியது அந்த மீன் தான். அதை எப்படி நான் சாப்பிடுவேன்?"

பேய்த் தீவு

ஷ்யாம் அண்ணன் கொட்டாவி விட்டார். ஷ்யாம் அண்ணன் இப்படி அடிக்கடி கொட்டாவி விடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

இரும்புக் கம்பிகள் வாயாக வாமன வயதைக் கொண்ட இரண்டு கால் மிருகங்களின் ஆணவத்தைப் பார்த்து மனம் நொந்து போன மிருகங்களின் ராஜாவான சிங்கராஜா அவ்வப்போது சேர்வைப் போக்கிக் கொள்வதைப் பார்த்தவர்களுக்கு ஷ்யாம் அண்ணன் கொட்டாவி விடும் காட்சியை மனதில் கற்பனை பண்ணிப் பார்த்துக் கொள்ள முடியும். அந்த அளவிற்குப் பெரிதாக வாயைத் திறந்து அவர் கொட்டாவி விடுவார். அந்த நேரத்தில் வெளியே கேட்கும் சத்தம் இருக்கிறதே! அதுவே குறிப்பிட்டுக் கூறக்கூடிய ஒன்றுதான். குறைந்தபட்சம் மூன்று வருடங்கள் எண்ணெய் என்ற ஒன்றையே பார்த்திராத மாட்டு வண்டி சக்கரத்தில் கேட்பதைப் போன்ற ஒரு பெரும் சப்தம் அவரின் கொட்டாவியின் போது கேட்கும். எனினும், சிங்கம் அவர்களால் ஷ்யாம் அண்ணன் செய்வதைப் போல கையால் சொடக்கு போட முடியாது என்ற விஷயத்தை நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

ஷ்யாம் அண்ணன் கொட்டாவி விட்டது எங்களை மிகவும் ஆச்சரியப்பட வைத்தது. அதன் அழகைப் பார்த்து அல்ல- எதற்காக அவர் கொட்டாவி விட்டார் என்பதை நினைத்துப் பார்த்துத்தான் நாங்கள் ஆச்சரியப்பட்டோம். மாலை நேரத்தில் நாங்கள் திட்டமிட்டிருக்கும் விஷயங்களெல்லாம் நடக்காது போய்விட்டால்?

பொழுது விடிந்தது முதல் கணக்கு வழக்கில்லாமல் மழை பெய்து கொண்டிருந்தது. மாநகராட்சி ஆட்களின் கருணை காரணமாக இந்த மழையின் போது கல்கத்தாவின் தெருக்களில் நடப்பது என்பது அவ்வளவு சாதாரணமான ஒரு விஷயம் இல்லை. ட்ராம்களும் பஸ்களும் தெருக்களில் நின்றிருந்தன. கல்கத்தா, வெனிஸ் நகரமாக மாறிவிட்டது என்று கூறினால், அது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று என்று யாருக்கும் தோன்றாது. இந்த அவலம் பிடித்த மாலை நேரத்தின் சோர்வைச் சற்று குறைப்பதற்கு ஷ்யாம் அண்ணனைப் பயன்படுத்தினால்தான் சரியாக இருக்கும் என்று நாங்கள் மனதில் நினைத்திருந்தோம்.

ஆனால், மேகங்கள் முழுமையாக மூடியிருந்த இந்தச் சூழ்நிலையில் ஷ்யாம் அண்ணனும் நனைந்துபோன அவலைப் போல மாறியிருப்பார் என்று நாங்கள் யாரும் நினைக்கவில்லை.

சிபு மீன் பிடிக்கும் விஷயத்திலிருந்து பேச்சை ஆரம்பித்து வைத்தான். பேச்சில் ஒரு சுவாரசியம் உண்டாக வேண்டும் என்பதற்காக ராமன் சொன்னான்: "எது எப்படியோ மழைக்காலத்துல மீனுக்கு நல்ல இரை கிடைக்கும்."

அதற்குப் பிறகும் உட்கார்ந்திருந்த இடத்தைவிட்டு ஷ்யாம் அண்ணன் சிறிதும் அசையவில்லை. ஒருமுறை தான் அளவில் மிகப்பெரியதாக இருக்கும் ஒரு விரால் மீனைத் தூண்டில் போட்டுப் பிடித்த விஷயத்தைத் தன்னுடைய இரண்டு கைகளைக் கொண்டும் எடையையும் நீளத்தையும் காட்டியவாறு எல்லாரிடமும் கூறினான் கோரா. அதற்குப்பிறகும் எந்த அசைவும் இல்லை.

விரால் மீனைப் பற்றிக் கூறினால் ஷ்யாம் அண்ணன் அடுத்த நிமிடம் தென்துருவக் கடலில் வாழும் பயங்கரமான திமிங்கலங்களை தான் வேட்டையாடப்போன கதையைக் கூற ஆரம்பித்துவிடுவார் என்று கோரா மனதில் கணக்குப் போட்டிருந்தான். ஆனால், அதற்குப் பதிலாகத் தளர்ந்து போன நிலையில் சிகரெட் புகையை வெளியே ஊதியவாறு உட்கார்ந்திருந்தார் ஷ்யாம் அண்ணன்.

அதற்குப் பிறகு நாங்கள் மலை ஏறும் விஷயத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தோம். கைக்கெட்டும் தூரத்தில் இமயமலை இருந்தாலும், வங்களா இளைஞர்களுக்கு மலை ஏறும் விஷயத்தில் சிறிது கூட திறமையோ, ஆர்வமோ இல்லாமல் இருப்பதற்கான காரணம் என்ன என்று கோரா மிகவும் வருத்தமான குரலில் கேட்டான்.

இரண்டு கால்களையும் நாற்காலியின் கைகளில் வைத்தவாறு உட்கார்ந்திருந்த ஷ்யாம் அண்ணனிடம் சிறிய அளவிலாவது அசைவு உண்டாகிறதா என்று எல்லாரும் பார்த்தோம். கண்களை மூடிக்கொண்டு புகைப் பிடிப்பதில் மட்டும் முழுமையாக ஈடுபட்டவாறு ஐம்புலன்களையும் அடக்கியிருக்கும் ஒரு முனிவரைப்போல அவர் அமர்ந்திருந்தார்.

நாங்கள் வேறு வழியில்லாமல் எடை தூக்குவதைப் பற்றிப் பேச ஆரம்பித்தோம். விஞ்ஞான சம்பந்தமான விஷயங்களைக் கூறும் அறிவுடன் சிபு சொன்னான்: "சிறு சிறு பூச்சிகள் கூட தங்களைவிட பல மடங்கு எடை கொண்ட பொருட்களைத் தூக்க முடிகிறபோது, மனிதனுக்கு மட்டும் ஏன் முடியாமல் போகிறது?"

அப்போது ஷ்யாம் அண்ணன் கொட்டாவி விட்டார். கடைசியில் மௌனத்தில் இருக்கும் யாரையும் கூட கலைத்துவிடக் கூடிய தன் பேச்சுத் திறமை ஷ்யாம் அண்ணன் விஷயத்தில் எடுபடாது என்பதைப் புரிந்து கொண்ட ராமன் நேராகவே போய் கேட்டான்: "எப்பவாவது வெயிட் லிஃப்டிங் பண்ணியிருக்கீங்களா, ஷ்யாம் அண்ணே?"

"வெயிட் லிஃப்ட்டிங்!"- களைப்புடன் ஷ்யாம் அண்ணன் சொன்னார்: "இல்ல... வெயிட் லிஃப்டிங் பண்ணிப் பார்த்தது இல்ல. இருந்தாலும் ஒருமுறை கல் ஒன்றைத் தூக்கியிருக்கேன்."

எல்லாரும் காதுகளைத் தீட்டிக் கொண்டு அதைக் கேட்க ஆரம்பித்தார்கள். கோரா உற்சாகம் மேலிட கேட்டான்: "கல்லா? அந்தக் கல்லுக்கு எவ்வளவு எடை இருந்துச்சு?"

எங்கள் எல்லாருக்கும் ஏமாற்றம் அளிக்கும் வண்ணம் ஷ்யாம் அண்ணன் சொன்னார்: "அதுல என்ன எடை இருக்கப் போகுது? ஒரு சின்ன கல்லுதான் அது!"


எனினும், மீண்டும் ஏமாற்ற உணர்வு எங்களை ஆக்கிரமிப்பதற்கு முன்னால் ஷ்யாம் அண்ணன் தொடர்ந்து சொன்னார்: "அந்தக் கல்லால் ஒரு தீவு தூள் தூளாகி அழிஞ்சது."

"ஒரு உருண்டைக் கல்தான் அதற்குக் காரணமா?"

ஷ்யாம் அண்ணன் கூச்சத்துடன் சொன்னார்: "ஆமாம். ஒரு சின்ன வெள்ளை நிறக் கல்லை நான் கையில எடுத்தேன். நடந்தது அவ்வளவுதான். அதே சமயம் ஒரு தீவு கடலுக்குள்ளே மூழ்கிடுச்சு."

அதற்குப் பிறகு ஷ்யாம் அண்ணனை வற்புறுத்த வேண்டிய அவசியமே இல்லை என்றாகிவிட்டது. அவர் எந்தவிதத் தடையும் இல்லாமல் கதை சொல்ல ஆரம்பித்து விட்டார்.

"நியூ ஹெ ப்ரைடெஸ் அப்படின்னு எப்பவாவது கேள்விப்பட்டிருக்கீங்களா? கேள்விப்பட்டிருப்பீங்க. ஆனா, அது என்னன்னு சரியா உங்களுக்குச் சொல்லத் தெரியாம இருக்கலாம். அப்படித்தானே? நியூசிலாந்துக்கு வடக்குத் திசையில், ஆஸ்திரேலியாவுக்கு வடகிழக்கு திசையில் சின்னச் சின்ன தீவுகள் வரிசையா இருக்கும். அதைத்தான் நியூ ஹெ ப்ரைடெஸ்னு புவியியலில் சொல்லுவாங்க.

பூமிக்கு மேலேயிருந்து பார்த்தால் கடல்ல பாறைகள் விட்டு விட்டு இருக்குற மாதிரியும், ஆங்கிலத்தில் 'ஒய்' என்று எழுதியிருப்பது மாதிரியும் அந்தத் தீவுகள் இருக்கும்.

அந்த 'ஒய்'யின் மூன்று கைகளும் ஒன்றாகச் சேர்கிற இடத்தில் ஒரு தீவு இருக்கு. அதோட பேரு 'இஃபாட்டே' அதுதான் தீவுகளின் தலைமையிடம்.

இஃபாட்டேயில் இரண்டு துறைமுகங்கள் இருக்கு. அவற்றின் பெயர்கள் விலா, ஹவானா. அரசாங்க அலுவலகங்கள் விலா துறைமுகத்தில் இருக்கின்றன.

அப்போ நான் சந்தன வியாபாரத்துக்காக நியூ ஹெ ப்ரைடெஸ்ஸுக்கு தெற்கில் இருக்கும் 'அனீவா' என்ற தீவுல இருந்தேன். ஒருமுறை அரசாங்கத்துல இருந்து லைசென்ஸ் வாங்குறதுக்காக விலாவுல நான் சிறிது நாட்கள் தங்கவேண்டி வந்தது.

அரசாங்க அலுவலகங்கள் விஷயத்தை எடுத்துக்கிட்டா ஒரு இடத்திற்கும் இன்னொரு இடத்துக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்ல. எல்லா இடங்களிலும் ஒரே மாதிரிதான் அவை இருக்கும். அரசாங்க அலுவலகங்களுக்கு வருடம் ஒண்ணுக்குப் பதினெட்டு மாதங்கள். நியூ ஹெ ப்ரைடெஸின் கதையை எடுத்துக்கிட்டா, அது இன்னும் அதிகம் வினோதமானது. இருக்குற சூழ்நிலையைக் கெடுக்குறதுக்கு ராமன் ஒரே ஆளே போதும். அவனுடன் சுக்ரீவனும் சேர்ந்துவிட்டால்? நியூ ஹெ ப்ரைடெஸிற்குத் தலைமையிடம் ஒண்ணுதான். முன்னாடி சொன்ன இஃபாட்டே தான் அது. ஆனா, ஆட்சி இரண்டு பேர்களுக்குச் சொந்தமானது. ஆங்கிலேயர்களும் ஃப்ரெஞ்ச்காரர்களும் சேர்ந்து ஆட்சி செய்யிறதுன்னா எப்படி இருக்கும்? ஒரு வாரத்துல சாதாரணமா முடிக்க வேண்டிய வேலை இரண்டு விஷயங்களுக்கு நீண்டுக்கிட்டு இருக்கும். ஆங்கிலத்துல இருந்து ஃப்ரெஞ்சுக்கும், ஃப்ரெஞ்ச்ல இருந்து ஆங்கிலத்துக்கும் மொழிபெயர்ப்பு செய்யிறதுக்கு மத்தியில் லைசென்ஸுக்காக நாம் செய்த விண்ணப்பம் எந்த இடத்துல ஒதுங்கிக் கிடக்கும்னு மை போட்டுப் பார்த்தாலும் நம்மால கண்டுபிடிக்க முடியாது. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் கொஞ்சமும் எதிர்பார்க்காமல் மொஸ்யு பேட்ராவை நான் சந்திச்சேன். ஆச்சரியமான விதத்தில் அந்தச் சந்திப்பு நடந்தது. தலைநகரம்தான். துறைமுகம்தான். இருந்தாலும் என்ன பிரயோஜனம்? ஒரு நல்ல ஹோட்டல் கூட அங்கு இல்லை. மலானா என்ற பெயரைக் கொண்ட ஒரு கிராம பாணியில் அமைந்த தகரம் போட்ட இரண்டு மாடி ஹோட்டல்களில் மேல் மாடியிலிருந்த ஒரு அறையில் நான் இருந்தேன். அப்போ ஒரு நாள் அரசாங்க அலுவலகத்துல பார்க்க நேர்ந்த அடி முட்டாள்களான க்ளர்க்குகளுடன் சண்டை போட்டு சோர்வடைந்து போய் ஹோட்டல் அறைக்கு நான் மேலே ஏறிக்கொண்டிருந்தேன். திடீரென்று மேலேயிருக்கும் என்னோட அறையில் என்னவோ சத்தமும் அசைவும் கேட்பது மாதிரி இருந்தது.

வேகமாக மரப்படிகளில் ஏறி பதைபதைப்புடன் மாடியை அடைந்தேன். வெளியே போறப்போ நான் என் கைகளால் அறையைப் பூட்டி விட்டுப் போயிருந்தேன். பிறகு எப்படி இப்படியொரு பிரச்னை உண்டானது?

மேலே இருந்த வராந்தாவில் ஹோட்டல் சொந்தக்காரரான மலானாவைப் பார்த்தேன். அவர் கோபத்துடன் என் அறையை விட்டு வந்து கொண்டிருந்தார். என்னைப் பார்த்தவுடன் "உடனே போலீஸ் ஸ்டேஷனுக்குப் போயே ஆக வேண்டும்" என்று கையை ஆட்டியவாறு அவர் என்னிடம் சொன்னார்.

"எதுக்கு போலீஸ் ஸ்டேஷனுக்குப் போகணும்?"

"எதற்கா? எங்கேயோ இருந்த ஒரு ஃப்ரெஞ்ச் போக்கிரி உங்க அறைக்குள்ளே நுழைஞ்சிருக்கான். நான் எவ்வளவோ தடுத்துப் பார்த்தேன். ஆனால், ஒரு பிரயோஜனமும் இல்ல. தாழ்ப்பாளை பலமாகத் திறந்து உள்ளே நுழைஞ்சிட்டான். நான் ஸ்டேஷனுக்குப் போயி போலீஸை அழைச்சு வரட்டுமா?"

நான் சிரித்துக் கொண்டே சொன்னேன்: "அதற்கு முன்னாடி நான் அந்தத் தொழிலாளியோட முகத்தைக் கொஞ்சம் பார்த்திடறேனே! அதற்குப்பிறகு மற்ற விஷயங்களைப் பார்ப்போம்..."

மலானா பயத்துடன் சொன்னார்: "இதுல பார்க்குறதுக்கு என்ன இருக்கு மிஸ்டர்? எதற்கும் பயப்படாத ஒரு போக்கிரி அவன். அவன் செய்யாத ஒரு விஷயமும் இல்ல!"

"தேவைப்பட்டால் என்ன செய்யணும்னு எனக்குத் தெரியும். பிறகு எதற்குப் பயப்படணும்?"

மலானா நான் சொன்னதைப் புரிந்து கொள்ளாமல் பயந்து பயந்து எனக்குப் பின்னால் வந்தார்.

உள்ளே போனப்போ என் பெட்டியும் பத்திரங்களும் கீழே சிதறிக் கிடப்பதைப் பார்த்தேன். அதற்கு நடுவுல இருந்த நாற்காலியில ஒரு வீங்கிப்போன முகத்தைக் கொண்ட ஒரு மனிதர் புகைபிடித்துக் கொண்டு சாய்ந்து உட்கார்ந்திருந்தார். ஒரு பேண்ட் மட்டும் அவர் அணிந்திருந்தார். வெப்பத்தைத் தாங்க முடியாததால் அவர் சட்டையைக் கழற்றியிருக்க வேண்டும். நல்ல வெள்ளை நிறத்தில் இருந்தார். அவர் தாடியும் மீசையும் வைத்திருந்ததைப் பார்த்தவுடன் கூறிவிட முடியும் அவர் ஒரு ஃப்ரெஞ்ச்காரர் என்று.

நான் உள்ளே வர்றதைப் பார்த்து நாற்காலியை விட்டு எழுந்த அவர் நரியைப் போல சீறிக்கொண்டு ஃப்ரெஞ்ச் மொழியில் கேட்டார்:

"யாருடா நீ?"

மலானா அந்தக் குரலைக் கேட்டதும் பயந்து போய் வராந்தா பக்கம் ஓடினார்.

நான் சிரித்துக் கொண்டே சுத்தமான வங்காள மொழியில் சொன்னேன்: "தெரியலையா? நான்தான் உங்களோட எமன்!"

தெரிந்திராத மொழியையும் சிரிப்பையும் கேட்டு அந்த மனிதருக்குக் கோபம் வந்துவிட்டது. என்னை உயிருடன் தின்று விடுவதைப் போல வேகமாக எழுந்து பற்களைக் கடித்தவாறு ஆங்கிலத்தில் அவர் சொன்னார்: "இங்கேயிருந்து போ கறுப்பு முட்டாளே! இல்லாட்டி உன் தோலை நான் உரிச்சுடுவேன்."

நான் சிரித்துக் கொண்டே சொன்னேன்: "நீங்க என்ன சொல்றீங்க வெள்ளைக்காரரே? நீங்க சொல்றதைக் கேட்டு எனக்கு எரிச்சல் படிப்படியா ஏறுது. சீக்கிரம் இங்கேயிருந்து கிளம்புங்க. ஏன்னா, இது என்னோட அறை."


இந்த முறை நான் ஜெர்மன் மொழியில் பேசினேன். அந்த மனிதர் அதைக் கேட்டு ஒரு மாதிரி ஆகிவிட்டார். எது எப்படியோ ஜெர்மன் மொழி தெரியும் என்பதால் அந்த மனிதர் முழுமையாகக் கழுதை ஆக வாய்ப்பில்லை என்றே நான் நினைத்தேன்.

நான் சொன்னதைப் புரிந்து கொண்ட அந்தத் தாடிக்காரர் மீண்டும் கோபத்துடன் என் முன்னால் குதித்தார். அவர் கேட்டார்: "இந்த அறை உன்னோடதா? அதற்கான ஆதாரம்?"

"ஆதாரமா?"- நான் சிரிப்பை விடாமல் சொன்னேன்: "ஆதாரங்கள் ¬ நீங்க அறையில் சிதறிப் போட்டிருக்கீங்களே!"

"அதுவா?"- என்று சொன்ன அந்த மனிதர் என்னுடைய சூட்கேஸை எடுத்து வராந்தாவில் எறிந்துவிட்டு சொன்னார்: "போ... உன்னோட ஆதாரங்கள் அறைக்கு வெளியே கிடக்கு. இதுக்குப் பிறகும் உனக்கு நல்ல புத்தி வரலைன்னா, உன்னையும் உன் ஆதாரங்களுக்குப் பின்னால் மிதிச்சு வெளியே தள்ளி விட்டுடுவேன்."

அறையின் மத்தியில் அந்த வெள்ளைக்கார மனிதரின் கனமான கேபின்ட்ரங்க் பெட்டி இருந்தது. அதைக் கையில் எடுத்தவாறு நான் சொன்னேன்: "அப்படிச் செய்யிறது கொஞ்சம் மரியாதைக் குறைவான செயலாச்சே, சார்? அதைவிட நீங்க வேற வழியைப் பார்க்குறது நல்லது. உங்க சுமையை நீங்க சுமக்காம இருக்க நான் வழி செஞ்சு தர்றேன்..."

ட்ரங்க் பெட்டியை எடுத்து வராந்தாவைத் தாண்டி நான் வெளியே வீசி எறிந்தேன்.

அடுத்த நிமிடம் அந்த வெள்ளைக்கார மனிதர் சிறிது நேரம் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்று விட்டார். தொடர்ந்து பீரங்கிக் குண்டைப் போல அவர் என் மீது பாய்ந்தார்.

நான் தூசியைத் தட்டிவிட்டு திரும்பிப் பார்த்தேன்.அந்த மனிதர் சாளரத்துக்குப் பக்கத்துல அப்படியே படுத்துக் கிடந்தார். சிறிதுகூட அவரிடம் அசைவு இல்லை.

அறையில் இருந்த மண் கூஜாவிலிருந்து நீர் எடுத்து நான் அவருடைய முகத்தில் தெளித்து, தலையைத் தூக்கினேன்.

அவர் மேல்மூச்சு கீழ்மூச்சு விட்டவாறு மெதுவாக எழுந்து உட்கார்ந்தார். கண்களைத் திறக்காமலே அவர் சொன்னார்: "நான் செத்துட்டேன்! சாகாமலே செத்துட்டேன்!"

நான் அவரைப் பிடித்து பலமாகக் குலுக்கிக் கொண்டே சொன்னேன்: "ஆமா... செத்துப் போயிட்டீங்க. செத்து நரகத்துக்கு வந்திருக்கீங்க. கண்களைத் திறந்து பாருங்க. உங்களுக்கு முன்னாடி எமன் நின்னுக்கிட்டு இருக்கான். உங்களை வரவேற்குறதுக்காக அவன் நிக்கிறான்."

அந்த மனிதர் கண்களைத் திறந்து சுற்றிலும் பார்த்துக்கொண்டே சொன்னார்: "என்ன சொன்னே? அப்படின்னா, நான் சாகல. ஆனா, என் முதுகெலும்பு உடைஞ்சு தூள், தூளா ஆனது மாதிரி நான் உணர்கிறேனே!"

"சேச்சே... அப்படி எதுவும் நடக்கல. எழுந்திரிங்க."

ஆனால், அவர் உட்கார்ந்திருந்த இடத்தை விட்டு எழுந்திரிக்காமலே என்னை உற்றுப் பார்த்துக் கொண்டே கேட்டார்: "நீங்க ஜப்பான்காரர்தானே?"

தொடர்ந்து அந்தக் கேள்விக்கு அவரே பதிலும் கூறிக் கொண்டார்: "இருக்காது... ஜப்பான்காரர்களுக்கு முகம் இப்படி இருக்காது."

சிரித்துக்கொண்டே நான் சொன்னேன்: "நான் ஜப்பான்காரன் இல்ல. வங்காளி. வங்காளத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கீங்களா?"

"வங்காளம்!"- அந்த வெள்ளைக்காரரின் கண்கள் மலர்ந்தன.

"வங்காளத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கேனான்னு கேக்குறீங்களா? தாகோரை நல்லா தெரிஞ்ச மனிதன் நான்."

"தாகோரா? எந்த தாகோர்?"

"தெரியாதா? ராபீந்த்ர நாதா தாகோர்!"

ஃப்ரெஞ்ச்காரர்கள் கவிஞர் தாகூரின் பெயரை இந்த மாதிரிதான் உச்சரிப்பார்கள் போலிருக்கிறது என்று நான் நினைத்துக் கொண்டேன். பிறகு கேட்டேன்: "அவரை உங்களுக்குத் தெரியுமா? அவரை எங்கே பார்த்தீங்க?"

"அறிமுகம்னா பார்த்ததையும் கேட்டதையும் தான் சொல்லுறேன். அதாவது பாரிஸ்ல..."

சற்று மிடுக்கான குரலில் நான் கேட்டேன்: "என்ன சொல்றீங்க?"

வெள்ளைக்காரர் சற்று புரண்டுகொண்டே கூறினார்: "அவர் அங்கே இருந்த சமயத்துல பத்திரிகைகளில் வந்த படங்களைப் பார்த்திருக்கேன்."

நான் கண்களை உருட்டியவாறு சொன்னேன்: "இங்க பாருங்க, வெள்ளைக்காரரே! இந்த மாதிரியான ஏமாற்று வேலைகளையெல்லாம் என்கிட்டே வச்சுக்காதீங்க. இந்த அறையை விட்டு நீங்க கட்டாயம் போய் ஆகணும். ம்... எழுந்திரிங்க..."

வெள்ளைக்காரர் கெஞ்சுகிற குரலில் சொன்னார்:

"எழுந்திரிக்கிறேன். ஆனா, நான் எந்த நரகத்துக்குப் போகணும்ன்றதையும் நீங்களே சொல்லிடுங்க. பகல் முழுவதும் அலைஞ்சு திரிஞ்சும் ஒரு வீட்டுத் திண்ணை கூட எனக்குக் கிடைக்கல. தெருவுல படுத்துத் தூங்கணும்னு நீங்க சொல்றீங்களா?"

அவர் சொனன்தைக் கேட்டு எனக்கு அடக்க முடியாத அளவிற்குச் சிரிப்பு வந்தது. நான் சொன்னேன்: "சரி... இங்கே நீங்க தங்குறதைப் பற்றி எனக்கு ஆட்சேபணை இல்ல. ஆனா, என்னை மோசடி பண்ணணும்னு நினைக்கக்கூடாது!"

வெள்ளைக்காரர் தன்னுடைய கழுத்தைத் தடவிக் கொண்டே சொன்னார்: "இல்ல. என் கழுத்தை நான் இன்சூர் செய்யல..."

பெட்டியைத் தரையிலிருந்து எடுத்துக் கொண்டு வந்து அறைக்குள் வைத்துவிட்டு அமைதியாக ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டு என்னுடன் பல விஷயங்களைப் பற்றியும் அவர் பேச ஆரம்பித்தார். மொஸ்யு பேட்ரா என்னை மாதிரியே ஒரு நாடோடி. சண்டையில இருந்து உறவு ஆரம்பித்ததாலும் இரண்டு பேரும் ஒரே தாதுவால் உண்டாக்கப்பட்டவர்கள் என்பதாலும் நாங்கள் மிகவும் சீக்கிரத்திலேயே நண்பர்களாக ஆகிவிட்டோம். நான் இதற்கிடையில் என்னோட வியாபாரத்தைப் பற்றி அவர் கிட்ட சொன்னேன்: மொஸ்யு பேட்ரா தலையை ஆட்டியவாறு சொன்னார்: "சந்தன வியாபாரம் பண்ணுறது  என்ன பெரிய விஷயமா? இந்தத் தீவுல இருக்குறதுலயே விலை மதிப்பு அதிகமா உள்ள பொருள் கந்தகம்தான். ஒரே வருடத்துல இங்கே கந்தக வியாபாரம் எப்படி பெரிய அளவுல நடக்கப்போகுதுன்றதை நீங்களே பார்க்கப் போறீங்க!"

அதற்குப்பிறகு பெரிய மனதுடன் அவர் என்னை கந்தக வியாபாரத்தில் பங்காளியாகச் சேர்த்துக் கொள்வதாக வாக்குறுதி தந்தார். நான் சிரித்துக் கொண்டே சொன்னேன்: "முதல்ல நீங்க கந்தக சுரங்கத்தைத் தேடிக் கண்டுபிடிங்க. அதற்குப் பிறகு மற்ற விஷயங்களைப் பார்ப்போம்."

அதற்கு பேட்ரா வருத்தம் கலந்த குரலில் சொன்னார்:

"அப்படின்னா நான் சொல்றதுல உங்களுக்கு நம்பிக்கை இல்லைன்னு நினைக்கிறேன். பைத்தியக்காரத்தனமா நான் ஏதோ உளர்றேன்னு நீங்க நினைக்கலாம். சரி... ஒருநாள் நானே அதை நிரூபிக்கிறேன்."

பேட்ராவின் சவால் வெறும் வாய்ச்சவடால் இல்லை என்பது ஒருநாள் புரிந்தது. ஆனா, அது நடந்தது ஐந்தாறு வருடங்களுக்குப் பிறகு. இந்தக் கால இடைவெளியில் அவரைப் பற்றி நான் விசாரிக்கவும் இல்லை. அவரைப் பற்றிய தகவல்கள் எதுவும் எனக்குக் கிடைக்கவும் இல்லை. இஃபாட்டே தீவில் மலானாவுக்குச் சொந்தமான ஹோட்டலில் இரண்டு நாட்கள் ஒன்றாகத் தங்கினோம்.


பிறகு யாரிடமும் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் அவர் காணாமல் போனார். எனக்கு அது ரொம்பவும் ஆச்சரியமான ஒரு விஷயமாக இருந்தது. ஆனால், அந்த ஆச்சரியம் நீண்ட நாட்கள் நிலைத்து நிற்கவில்லை. அவர் எங்கு போனார் என்ற விஷயத்தைப் பற்றி நானும் கொஞ்சம் கூட நினைக்க முயற்சிக்கவல்லை. இப்படிப்பட்ட மனோபாவத்தைக் கொண்ட பயணிகளை நான் இந்த உலகத்தில் எவ்வளவோ தடவைகள் பார்த்திருக்கிறேன். சாயங்காலம் என்ன பண்ணப் போறோம்னு காலை நேரத்துல அவங்களுக்கே ஒரு தெளிவான தீர்மானம் இருக்காது. 

ஆறு வருடங்கள் கடந்த பிறகு நாங்கள் ஒருவரையொருவர் சந்தித்தோம். அதுவும் வினோதமான ஒரு சூழ்நிலையில்.

அனிவா தீவிற்குத் திரும்பச் சென்று சந்தன வியாபாரத்தில் நான் அப்போ ஈடுபட்டிருந்தேன். வியாபாரத்தில் நிலைமை ரொம்பவும் மோசமாக இருந்தது. ஃபிஜி தீவிலிருந்த சந்தன மரங்களை வெட்டி வீழ்த்தி அங்கிருந்து வேறு நாடுகளுக்குக் கடத்தி விற்று பணமாக்கிய பிறகு ஏராளமான வியாபாரிகள் இங்கு வந்து அதே விளையாட்டை விளையாட ஆரம்பித்தார்கள்.

வியாபாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு வேறு ஏதாவது திசைக்குச் சென்று கூடாரம் அடித்தால் என்னன்னு நான் யோசிக்க ஆரம்பிச்சேன். அப்போதான் ஆச்சரியப்படுற மாதிரி ஒரு சம்பவம் என் ஆர்வத்தைத் தட்டி எழுப்பியது. அனிவா தீவிற்கு தென்கிழக்கு மூலையில் கடலோரத்தில் ஒரு பெரிய மனிதரின் வீட்டில்தான் அப்போ நான் தங்கியிருந்தேன். கொஞ்ச நாட்களாகவே அந்த கிராமத்து மக்கள் மத்தியில் ஏதோ ஒரு வகை பரபரப்பும் ஆவேசமும் இருந்து கொண்டிருந்ததை என்னால் உணர முடிந்தது. ஒருநாள் அதற்கான காரணத்தைத் தெரிந்து கொண்டபோது நான் ஆச்சரியப்பட்டு நின்னுட்டேன்.

நான் வசித்த கிராமத்திலிருந்து பத்து மைல்கள் தூரத்தில் கடலில் வேறொரு தீவு இருப்பதைப் பார்க்கலாம். அதைத் தீவு என்று கூறுவதை விட கடல் மத்தியில் உயர்ந்து நிற்கும் மலை என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். எந்தப் பக்கத்துல நின்னு பார்த்தாலும் இரண்டாயிரம் அடி உயர்ந்து நிற்கும் மலை தெரியும்.

ஊர்க்காரர்கள் கெட்ட தேவதைகள் தங்கியிருக்கும் இடம் என்று அந்தத் தீவை நினைத்திருந்தார்கள். அங்கு மனிதர்கள் யாரும் வசிக்கவில்லை. சாயங்கால நேரங்களில் பறவைகள் கூட்டம் கூட்டமாக மலையின் பொந்துகளில் போய் தங்குவதை நாம் பார்க்கலாம். நினைக்க முடியாத தைரியத்தைக் கொண்ட ரெண்டோ நாலோ ஊர்க்காரர்கள் மட்டும் பகல் நேரத்துல அவர்களின் நீளமான படகில் ஏறிச்சென்று உரத்திற்கு சரியாக இருக்கும். அந்தப் பறவைகளின் எச்சத்தைச் சேகரித்துக் கொண்டு வருவார்கள். இரவு நேரங்களில் அவர்கள் அங்கு ஒருமுறை கூட தைரியமாகத் தங்கியது இல்லை.

'குவானோ' என்ற பெயரைக் கொண்ட அந்த உரம் விலை மதிப்பு உள்ளது.

அந்தப் பூதங்களும் பேய்களும் நிறைந்த தீவில் கொஞ்ச நாட்களாகவே அவற்றின் தொந்தரவுகள் அதிகமாக இருப்பதாக எல்லாரும் பேசிக் கொண்டார்கள்.

'குவானோ' சேகரிப்பதற்காகச் சென்ற சிலர் யாருக்கும் தெரியாமல் இறந்து போனார்கள். மேலேயிருந்து சரியாக அவர்களைக் குறிவைத்து யாரோ ஒரு பெரிய பாறையைத் தள்ளிவிட்டிருக்காங்க. மற்றொரு குழுவினர் பகல் நேரத்துல பயங்கரமான ஒரு உருவத்தை மலைமேல் பார்த்திருக்காங்க.

எல்லாவற்றுக்கும் மேலாக நீள நீளமாகப் புகைச்சுருள்கள் மலையிலிருந்து வருவதை எல்லாரும் பார்க்குறாங்க. இடையில் பயமுறுத்துற மாதிரி வெடிச் சத்தங்களும் கேட்கும்.

இனிமேல் அந்த பூதங்களும் பேய்களும் இங்குவரை வந்து விடுமோ என்றுதான் ஊர்க்காரர்களின் பயமாக இருந்தது. மந்திரவாதிகள் தங்களின் திறமைகளைக் காட்டுவதில் மும்முரமாக இறங்கியிருந்தார்கள். பேய் பிடிப்பதை முழுமையாக இல்லாமற் செய்வதாக உறுதி மொழி சொல்லி அவர்கள் ஜெபம், ஹோமம்னு ஈடுபட்டிருந்தாங்க.

ஊர் பெரியவரிடமிருந்து இந்தத் தகவல் எனக்குக் கிடைத்த போது, நான் அந்தத் தீவுக்குப் போக முடிவெடுத்தேன். பெரியவர் என்னைப் போக வேண்டாமென்று தடுத்தார். நான் அவர் சொன்னது எதையும் காதிலேயே வாங்காமல் புறப்பட்டேன்னுதான் சொல்லணும். என்னை அந்தத் தீவுல கொண்டு போய் சேர்க்க ஒரு படகோட்டி கூட தயாராக இல்லை.

கடைசியில் கோபத்தை அடக்க முடியாமல் ஒரு நாள் ஒரு சிறிய படகில் ஏறி மாலை நேரத்தில் தீவை நோக்கிப் புறப்பட்டேன். கையில் ஒரு நல்ல வெட்டுக்கத்தி, கிணற்றுக்குள் ஏதாவது விழுந்துவிட்டால், அதை எடுப்பதற்குப் பயன்படும் பாதாளக் கரண்டியை நுனியில் கட்டியிருக்கும் ஒரு பெரிய கயிறு, இரவு உணவுக்குக் கட்டாயம் தேவைப்படும் சில பொருட்கள் - இவை எல்லாம் இருந்தன. அவற்றை என்கிட்ட தந்தப்போ இரவு நேரத்துல அங்கே தங்க முடியுமான்னு ஊர்ப் பெரியவர் சந்தேகத்தோட என்னைப் பார்த்துக் கேள்வி கேட்டார்.

என் படகு கடலில் புறப்பட ஆரம்பித்த நேரத்தில் ஊர்ப்பெரியவர் கூப்பாடு போட்டு அழுது விடுவாரோ என்பது மாதிரி இருந்தது. இவ்வளவு நாட்களாக ஒன்றாக வசித்ததன் காரணத்தால் கபடம் என்றால் என்னன்னு தெரியாத அந்தக் கிராமத்துத் தலைவருக்கு என்மீது வார்த்தையால் விவரிக்க முடியாத அளவுக்கு ஒரு பாசம் தோன்றியிருந்தது. இப்படி நான் இறப்பதற்குத் திட்டம் போட்டு புறப்படுவதைப் பார்த்தப்போ அவரால் அதை ஜீரணிக்கவே முடியவில்லை. 

தனியா படகைச் செலுத்தி  தீவை நோக்கிப் புறப்பட்டப்போ என் செயல் கொஞ்சம் அதிகப்பிரசிங்கித்தனம் தான் என்பதாக எனக்குப் பட்டது. எங்கோ ஒரு பகுதியில் பூதமோ, பேயோ கூத்தாட்டம் போடுதுன்னா அதைப்பற்றி உனக்கு என்னடா இழப்பு? ஆனால், என்னைப் போன்ற ஒருவன் ஒரு இடத்துல இருக்க முடியுமா?

பேய்த் தீவை நெருங்கினப்போ நேரம் இருட்டாயிடுச்சு. கடல் காகங்களும் மற்ற பறவைகளும மலையையொட்டி பறந்து சென்று கூடுகளில் அடைந்துவிட்டிருந்தன. சற்று தாமதமாக வந்த நான்கு பறவைகளின் சிறகடிப்பு சத்தம் அப்போது காதில் விழுந்தது.

வசதியான ஒரு இடத்தில் படகைக் கட்டிப்போட்டுவிட்டு, வெட்டுக் கத்தியையும் கயிறையும் எடுத்துக் கொண்டு கரையில் கால் வைத்தேன். கரை என்றால் கரும் பாறை. இருபது கஜம் பாறைகள் வழியே நடந்தால் கோட்டைச் சுவரைப் போல நெடுங்குத்தாக நின்று கொண்டிருகும் மலை. வெட்டுக் கத்தியை இடுப்பில் சொருகிக் கொண்டு பாதாளக் கரண்டி கட்டப்பட்ட கயிறை மேலே எறிந்தேன். பாதாளக் கரண்டி பாறையின் பிளவில் எங்கோ பிடித்துக் கொண்டது. நன்கு இறுகப் பிடித்திருக்கிறதா என்று கயிறை இழுத்துப் பார்த்துவிட்டு, கயிற்றின் வழியாக ஏறி பாதாளக் கரண்டி பற்றியிருந்த இடத்தை அடைந்தேன். பிறகு அங்கிருந்தவாறு கயிறை வீசி எறிந்து அதற்கு மேலேயிருந்த பாறையை பாதாளக் கரண்டி பற்றிக் கொள்ள, நான் அதை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.


இப்படி உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு சிரமப்பட்டு மலையின் உச்சியை அடைஞ்சப்போ நேரம் கிட்டத்தட்ட இரவு ஆகியிருந்தது.

மலையின் மேற்குப் பகுதியை நான் அடைந்திருந்தேன். அங்கு இருட்டு அதிகமாக இருந்தாலும் கிருஷ்ணபட்ச சதுர்த்தி சந்திரனின் பிரகாசத்தால் சுற்றிலும் இருப்பதைப் பார்க்கக்கூடிய அளவிற்கு வெளிச்சம் பரவியிருந்தது.

அந்த வெளிச்சத்தில் நான் கண்ட காட்சி என்னை மெய் சிலிர்க்க வைத்தது. மலையின் உச்சியில் ஒரு சிறிய குளம் இருந்தது. கீழேயிருந்து பார்ப்பவர்களுக்கு இப்படியொண்ணு இருப்பதைக் கற்பனை பண்ணிக் கூட பார்க்க முடியாது. மலை ஒரு கோப்பையைப் போல அந்தக் குளத்தை தனக்குள் அடக்கி வைத்திருந்தது.

எந்தவித அசைவும் இல்லாமல் அமைதியாக இருந்த அந்த மலை உச்சியில் நிலவொளியில் பிரகாசித்துக் கொண்டிருக்கும் அந்த நீர் நிறைந்த குளத்தின் அழகை வார்த்தைகளால் விவரிப்பது என்பது உண்மையிலேயே முடியாத ஒன்றே.

கயிறில் தொங்கிக் கொண்டு ஏறியதால் மிகவும் களைப்பாக இருந்தது. குளத்தின் ஒரு கல்லில் அமர்ந்து முகத்தைக் கழுவலாமென்று நான் நினைத்தேன். அப்போது உடம்பெங்கும் குளிர் பரவியது.

குளத்தின் அந்தக் கரையை நோக்கி நீருக்குள்ளிருந்து ஒரு வினோதமான உருவம் போய்க் கொண்டிருந்தது. உருவம் மனிதர்களைப் போல நடந்தது. வேறு எந்த விதத்திலும் அதற்கு மனித உருவத்துடன் தொடர்பில்லை. உருவம் உருண்டையாக இருந்தது. பார்ப்பதற்கே பயங்கரமாக இருந்தது. அந்தப் பெரிய உருவத்திற்கு இரண்டு தூண்களைப் போல கால்கள் இருந்தன. நடையைப் பார்க்கும் போது உடம்பெங்கும் நடுக்கம் உண்டானது.

அந்த உருவம் ஆடியாடி நடந்து சென்று மலையின் ஒரு இடைவெளியில் போய் மறைந்து கொண்டது.

இல்லை! அந்த உருவத்தைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் இருக்க முடியாது. மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மிகவும் எச்சரிக்கை உணர்வுடன் எதிர்கரையை நோக்கி விரைந்தேன்.

முன்னால் குகையைப் போல ஒரு சுரங்கம் இருந்தது. சிறிது நேரம் என்னவோ சிந்தனையில் மூழ்கி நின்று கொண்டிருந்த நான் இடுப்பிலிருந்து வெட்டுக் கத்தியைக் கையில் எடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தேன். குகை அப்படியொன்றும் நீளமாக இல்லை. ஒரு திருப்பத்தில் திரும்பியபோது தூரத்தில வெளிச்சம் உள்ள ஒரு இடம் தெரிஞ்சது. அதுதான் குளத்திலிருந்து எழுந்து நடந்த அந்த பயங்கரமான உருவம் இருக்கும் இடமாக இருக்க வேண்டும். விளக்கை எரிய வைக்கும் வழிகூட அந்த உருவத்திற்குத் தெரிந்திருக்கிறது.

மெதுவாக நான் முன்னோக்கி நடந்தேன். வெளிச்சம் இருந்த இடத்தை அடைந்தபோது சுரங்கம் பெரிய ஒரு குகையாக மாறி விட்டிருந்தது. அங்கு அடைந்தபோது ஏமாற்றமே உண்டானது. அங்கு யாரும் இல்லை. ஆனால், மூலையில் ஒரு மண்ணெண்ணெய் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. சுவரில் சட்டையும் வேறு சில ஆடைகளும் தொங்கிக் கொண்டிருந்தன.

பூதங்கள் நடமாடும் பயங்கரமான மலையின் உச்சியில் மனிதன் எங்கிருந்து வந்தான்? நீரிலிருந்து வெளியே வந்த அந்த பயங்கரமான உருவம் எங்கு போனது?

நான் அங்கு தொங்கிக் கொண்டிருந்த சட்டையை உற்றுப் பார்த்தேன். அப்போது குகையே நடுங்கிப் போகிற மாதிரி ஒரு குண்டு என் காதை உரசிக் கொண்டு பாய்ந்து வந்து சுவரில் மோதியது.

மின்னல் வேகத்தில் நான் திரும்பி நிற்கவும் என் கையிலிருந்த வெட்டுக் கத்தி பாய்ந்து சென்று எதிர்ப்பக்கம் இருந்த சுவரில் நிலைகுத்தி நிற்கவும் சரியாக இருந்தது. குண்டை வெடிக்கச் செய்த மனிதனின் சட்டை கைக்குள் நுழைந்து சுவரில் ஆணி அடித்ததைப் போல் கத்தி குத்தி நின்றிருந்தது.

அந்த மனிதன் மீது வேகமாகப் பாய்ந்தேன் நான். அப்போது கால்கள் தரையில் நின்றுவிட்டதைப் போல் நான் உணர்ந்தேன். என்ன? அது மொஸ்யு பேட்ராவா?

மொஸ்யு பேட்ரா கவலை மேலோங்கச் சிரித்துக் கொண்டே சொன்னார்: "ஆமா... உங்களோட கைதி தான்..."

நீண்ட நேரம் நாங்கள் பழைய விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். கந்தகத்தைத் தேடிப் புறப்பட்ட பேட்ரா பல தீவுகளிலும் அலைந்து திரிந்துவிட்டு இந்த இடத்திற்கு வந்தது எப்படி என்பதை என்னிடம் விளக்கிச் சொன்ன பிறகு நான் கேட்டேன்: "குளத்துல இருந்து எழுந்து வந்த அந்த பயங்கர மனிதன் யார்?"

பேட்ரா சிரித்தவாறு சுவரிலிருந்த ஒரு கல்லை எடுத்து அகற்றி விட்டு, என்னை வேறொரு சிறு குகைக்கு அழைத்துக் கொண்டு போனார். யாராலும் எளிதில் கண்டுபிடித்துவிட முடியாத அளிவிற்கு மிகவும் கச்சிதமாக அந்தக் குகைக்குப் போகப் பயன்படும் கல் சுவரில் அடைக்கப்பட்டிருந்தது. 

உள்ளே போன பிறகு ஒரு இடத்தைச் சுட்டிக் காட்டியவாறு பேட்ரா சொன்னார்: "அதோ உங்களின் ஆதி மனிதன்!"

அதிர்ச்சி உண்டாக நான் பார்த்தேன். சுவரில் இரண்டு நீச்சல் உடைகள் தொங்கிக் கொண்டிருந்தன. அது சாதாரணமாக இல்லை. மிகவும் வித்தியாசமாக இருந்தது.

பேட்ரா சொன்னார்: "நான் இதற்காகவே திறமையான ஆட்களை வைத்து அந்த ஆடைகளைத் தைத்தேன்."

"அதற்கான தேவை என்ன?"

"தேவையா? வாங்க... சொல்லுறேன்"- பேட்ரா என்னைக் குளத்தின் கரைக்கு அழைத்துச் சென்று நிற்க வைத்து விட்டுக் கூறினார்: "தண்ணியில கையை வச்சுப் பாருங்க."

நீரில் கையை வைத்துப் பார்த்துவிட்டு நான் சொன்னேன்: "என்ன? தண்ணீர் சூடா இருக்கே! ரெண்டு மூணு மணி நேரத்துக்கு முன்னாடி நீர் ரொம்பவும் குளிர்ச்சியாக இருந்ததே!"

"அதுதான் இந்தக் குளத்தைப் பற்றிய ரகசியம். அதைக் கண்டுபிடிக்கத்தான் நீங்க பார்த்த அந்த வேஷம். இந்தக் குளத்தில அப்பப்போ நீர் திடீர்னு கொதிநீர் மாதிரி ஆயிடும். அதனால் ஆவி மேல் நோக்கிக் கிளம்பி பரவிக் கொண்டிருக்கும். அதைப் பார்த்துத்தான் ஆட்கள் இங்கே பூதங்களும் பேய்களும் இருக்குறதா சொல்லிக்கிட்டு இருக்காங்க."

நான் கேட்டேன்: "அந்த ஆடைகளை அணிந்து இந்தக் குளத்துல இறங்கி மூழ்கி அதை நான் சொல்றேன்.”

மறுநாள் நீர் குளிர்ந்தபோது, நல்ல நிழல் படிந்திருந்தது. நீரில் மூழ்கும்போது அணியக்கூடிய அந்த ஆடைகளை எடுத்து அணிந்து நாங்க ரெண்டு பேரும் நீருக்குள் இறங்கினோம். பாறைப் பகுதியில் இருந்தாலும், குளம் நல்ல ஆழமாக இருந்தது. நீர் மிகவும் தெளிந்து போய்க் காணப்பட்டது. அதனால் அதன் கீழ்ப்பகுதியைப் பார்ப்பது எங்களுக்கு கஷ்டமாக இல்லை.

நீருக்கடியில் இருக்குறப்போ பேசிக் கொள்வதற்காக நாங்கள் ஒரு ‘ஸ்பீக்கிங் டியூப்’ - அதாவது- பேசப் பயன்படும் ரப்பர் குழாயை வைத்திருந்தோம்.


கீழே ஒரு இடத்தை அடைந்ததும் பேட்ரா சொன்னார்: "கீழே பாருங்க, ஏதாவது தெரியுதா?"

நான் சொன்னேன்: "தெரியுது. ஒரு வகையான நீல நிறப் பாறைகள்."

"சாதாரண நீலப் பாறைகள் இல்லை. உலகத்திலேயே மிகவும் விலை மதிப்புள்ள வைரக்கற்கள் விளையும் பாறைகள் அவை!"

வைரம்! என்னைச் சுற்றிலும் நான் பார்த்துக் கொண்டிருப்பது முழுவதும் வைரங்கள். அப்படியென்றால் இந்தக் குளத்தில் ஏழு சாம்ராஜ்யங்களின் செல்வங்களும் குவிந்து கிடக்கின்றனவோ? மனதை என்னால் சிறிது கூட கட்டுப்படுத்த முடியவில்லை. பாறைக்கற்களுக்கு மத்தியில் பிரகாசித்துக் கொண்டிருக்கும் ஏதோ ஒரு சிறு பொருளைப் பார்த்து அதை எடுக்க வேண்டுமென்று நினைத்தேன். உளியைப் போன்ற ஒரு கருவியை நான் கையில் கொண்டு வந்திருந்தேன். அதைக்கொண்டு அந்தப் பொருளைத் தோண்டி, அந்தக் கல்லைக் கையிலெடுத்தேன். ஆச்சரியம்! அதற்குக் கீழே ஒரு துவாரம்- குழலின் வாய்ப்பகுதியைப் போல- தெரிந்தது. அது மட்டுமல்ல- அதன் வழியாக நீர் கீழ்நோக்கி ஒழுகிக் கொண்டிருந்தது.

என்னுடைய செயல் பேட்ராவைக் கோபம் கொள்ளச் செய்தது. எனக்கு மேலும் கொஞ்சம் வைரக் கற்களைச் சேகரிக்க வேண்டும் போல் இருந்தது. ஆனால், அவர் என்னைப் பிடித்து இழுத்து மேலே கொண்டு வந்தார். அது மட்டுமல்ல- அணிந்திருந்த நீச்சல் உடையைக் கழற்றி எறிந்து என்னை ஒரு வார்த்தை கூட பேச அனுமதிக்காமல் மலையின் ஒரு மூலைக்கு என்னை அவர் பிடித்துக் கொண்டு போனார். அங்கு ஒரு கயிறால் ஆன ஏணி கடல் மட்டம் வரை தொங்கிக் கொண்டிருந்தது. நீரில் ஒரு பாறையின் மறைவில் ஒரு மோட்டார் படகு நின்றிருந்தது.

கயிறால் ஆன ஏணியின் வழியாகக் கீழே இறங்கி மோட்டார் படகில் ஏறிப் பயணித்து தீவிலிருந்து கிட்டத்தட்ட பத்து மைல் தூரத்தை அடைவது வரை என்ன கேட்டும் ஒரு வார்த்தை கூட மொல்யு பேட்ரா என்னிடம் பேசவில்லை.

கடைசியில் கோபத்தைத் தாங்க முடியாமல் நான் சொன்னேன்: "என் கேள்விக்கு பதில் சொல்லலைன்னா, நான் உங்களைக் கடல்ல வீசி எறிஞ்சுடுவேன். இதுக்கு என்ன அர்த்தம்? பைத்தியம் பிடிச்சதைப் போல என்னைப் பிடிச்சு இழுத்துக்கிட்டு இப்படி ஓடினா எப்படி!"

"அர்த்தம் இப்போ புரியும். படகின் ஓரத்தை இறுகப் பிடிச்சிக்கிட்டு காதுகளைப் பொத்திக் கொண்டு அங்கே பாருங்க!"

அதற்குப் பிறகு அவர் சொன்னது எதுவும் என் காதுகளில் விழவில்லை. நான் தீவுப் பக்கம் திரும்பி நின்றிருந்தேன். திடீர்னு வானமே வெடிக்கிற மாதிரி ஒரு சத்தத்துடன் அந்த மலைத் தீவு தண்ணீர்ப பழத்தைப் போல சிதறி கடலுக்குள் விழுந்தது.

அதற்குப் பிறகு உண்டான சூறாவளிக் காற்றிலிருந்தும் பயங்கரமான அலைகளிலிருந்தும் எங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கே பல நிமிடங்கள் ஆயின.

மீண்டும் நான் பேட்ராவிடம் கேட்டேன்: "என்ன இதெல்லாம்?"

"நீங்க வைரக்கல்லைத் தோண்டியதால் வந்த ஆபத்து இது. ஒரு கூழாங்கல் அளவு இருந்த அந்த வைரக் கல்லைப் பெயர்த்து எடுத்ததால் ஒரு தீவே முழுமையா ஒண்ணுமில்லாமப் போச்சு!"

"அப்படி நடக்காம இருக்குமா?"- பேட்ரா மீண்டும் சொன்னார்: "தீவு என்பது ஒரு நெருப்பு மலையைத் தவிர வேறு ஒண்ணுமில்ல. மேலே பார்த்த குளம் ஒரு காலத்தில் லாவா உண்டாகுற நெருப்பு குண்டமாக இருந்தது. அதன் வாய்ப்பகுதி எப்படியோ மூடப்பட்டிருச்சு. பிறகு அதில் மழைநீர் விழுந்து விழுந்து அது ஒரு குளமாக மாறிடுச்சு. அதே நேரத்துல அடியில் இருந்த நெருப்பு அணைஞ்சு போகல. குளத்தின் நீர் அப்பப்போ சூடாக இருப்பதுல இருந்து நமக்கு அதைத் தெரிஞ்சுகொள்ள கஷ்டமாக இல்லை. குளத்தின் அடிப்பகுதி அந்த அளவுக்கு உறுதியா இல்ல. நீங்க அந்த வெள்ளை நிறக் கல்லைப் பெயர்த்தவுடன் மூடப்பட்டிருந்த துவாரம் வெளியே தெரிஞ்சுடுச்சு. அதன் வழியா கீழே எரிந்து கொண்டிருந்த நெருப்பில் குளத்தின் நீர் நுழைஞ்சிடுச்சு. அது ஆவியாக மாறுவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்? ஒரு சிறிய துவாரம்தான் இருப்பதே. வெளியே வர வழி தெரியாத ஆவி உள்ளேயே கிடந்து குமைந்து கடைசியில் மலையையே தூள் தூளாகச் சிதறச் செய்திட்டு வெளியே வந்திடுச்சு. நீங்க ஒரு சின்ன கல்லை எடுத்ததால் வந்த வினை இது!"

ஷ்யாம் அண்ணன் கதை சொன்னதை நிறுத்தியவுடன் கோரா ஆர்வத்துடன் கேட்டான்: "அந்தத் தீவின் பெயர் என்ன ஷ்யாம் அண்ணே?"

ஷ்யாம் அண்ணன் அலட்சியமான குரலில் சொன்னார்: "மூழ்கிப்போன அந்தத் தீவின் பெயரைத் தெரிஞ்சு என்ன பிரயோஜனம்?"

"அந்த நான்கைந்து வைரக் கற்கள்?"- சிபு கேட்டான்.

"அவற்றை ஷ்யாம் அண்ணன் பத்திரமா வைத்திருப்பார்!"

ஷ்யாம் அண்ணன் சிபுவின் கேள்வியைக் கேட்காதது மாதிரி காட்டிக் கொண்டு சிசிரனிடம் சிகரெட்டிற்காகத் தன் கையை நீட்டினார்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.