Logo

ரோகிணி

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 6550
rohini

புகழ்பெற்ற தேவியின் அருளைப் பெறுவதற்காக அவர்கள் கன்னியாகுமரிக்கு வந்திருந்தார்கள். திருமணம் முடிவடைந்து இருபது வருடங்களாகி விட்டன. ஒரு குழந்தை இல்லை. சாதாரண இந்து மதத்தைச் சேர்ந்த தம்பதிகளுக்கு அது பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு விஷயம்தான். சந்தேகமே இல்லை. கன்னியாகுமரி பயணத்திற்கான பலனைப் பற்றி அவர்களுக்கு சிறிது சந்தேகம் இருக்கத்தான் செய்தது. அந்தச் சந்தேகத்தை அவர்கள் வெளியே கூறவில்லை.

அவனுடைய தாயை எடுத்துக் கொண்டால், ஒரு வாரிசு வேண்டும் என்ற விஷயத்தில் அமைதியற்றவளாக ஆகிவிட்டிருந்தாள். வீட்டிற்கு வரும் யாராக இருந்தாலும் சரி, சிறிய விஷயங்களைக் கூட விட்டுவிடாமல் ஏமாற்றம் நிறைந்த கதைகள் முழுவதையும் கூறுவது அவளுடைய குணமாக இருந்தது. அவர்கள் குருவாயூருக்குப் போனதையும், பழனிக்குப் போய் படிகள் ஏறியதையும், காசிக்கும் பூரிக்கும் ஹரித்துவாருக்கும் சென்றதையும், இவ்வளவு இடங்களுக்குப் போன பிறகும் கடவுள் கடந்த பிறவிகளில் செய்த பாசங்களை மறக்கவோ, அவர்களுக்குக் குழந்தை பிறப்பதற்கான பாக்கியத்தைத் தரவோ தயாராக இல்லை என்றும்; அவர்களுக்கு இப்போதும் குழந்தைகள் இல்லை என்றும் அந்தப் பெண் தன்னுடைய வறண்டுபோன குரலில் எல்லோரிடமும் கூறினாள். அந்த மொத்த பணத்தையும் அந்த சொத்துக்களையும் அந்த கட்டிடங்களையும் யாரிடம் தந்துவிட்டு இந்தத் தலைமுறை கடந்து செல்லும் என்று அவள் கவலைப்பட்டாள்.

ஒருமுறை மது அருந்தி போதை மயக்கத்துடன் வீட்டிற்கு வந்த ஒரு எழுத்தாளனிடம் அவள் கோவில்களைப் பற்றிச் சொன்னபோது, அவன் கேட்டான்: “அவள் கடவுள்களைத் தேடிப் போகாமல் ஒரு ஆணை அணுகிப் பார்த்தாளா?” என்று. அடுத்த நிமிடம் கிழவி அந்த மனிதனை அடித்து வெளியே விரட்டிவிட்டாள். ஒருமணி நேரம் அவள் ஒரு வலிப்பு நோய் வந்த பெண்ணைப் போல இருந்தாள். வீட்டிலிருந்த இளம் வயதினர் வார இறுதியில் வீட்டிற்கு வற்புறுத்தி வரவழைத்த விருந்தாளிகளை அவள் ஏற்றுக் கொள்ளவில்லை. விருந்தாளிகள் ஓவியர்களாகவும் கவிஞர்களுமாக இருந்தார்கள். ஒருமுறைகூட ஒரு கவிதை புத்தகத்தைப் புரட்டிப் பார்க்கக் கூட செய்யாத பணக்காரனும் தொழிலதிபருமான தன்னுடைய மகனுக்கும் அவர்களுக்கும் இடையில் என்ன தொடர்பு என்று அவள் நினைத்தாள். அவன் பள்ளி கல்வியைக் கூட முழுமையாக முடிக்கவில்லை. தொழிற்சாலைகளின் முழுச் சுமையையும் தாயின் தோள்களில் திடீரென்று வைத்துவிட்டு அவனுடைய தந்தை மரணத்தைத் தழுவிவிட்டார். தாய் உடல் ரீதியாக நல்ல நிலையில் இல்லை. ஆனால், அவள் மனரீதியாக பலம் கொண்டவளாக இருந்தாள். அவள் மிகுந்த தைரியசாலியாக இருந்தாள். தன் மகன் தொழிலில் ஆர்வம் கொண்டிருப்பதை வெளிப்படுத்தியபோது, தாய்க்கு சந்தோஷமாக இருந்தது. ஒரு வருடத்திற்குள் நகரத்தில் பிறந்து வளர்ந்த, படித்த ஒரு இளம் பெண்ணைப் பார்த்து அவனுக்குத் திருமணம் செய்து வைக்க அவனைக் கட்டாயப்படுத்தினாள். அப்படிப்பட்ட ஒரு மனைவி வெளிநாட்டு வர்த்தகர்களுக்கு வரவு – செலவு விஷயங்களில் அவனுக்கு உதவியாக இருப்பாளே!

அவள் மெலிந்து போய்க் காணப்பட்டாள். பிரகாசமான கருப்பு நிறம். அவள் அவனிடமிருந்தும் மாமியாரிடமிருந்தும் முற்றிலும் வேறுபட்டவளாக இருந்தாள். அவனுடைய தாய் தடிமனான உடலைக் கொண்டவளும், மாநிறத்தைக் கொண்டவளுமாக இருந்தாள். அவளுடைய முகத்திலிருந்த கருப்பு ஒரு குறையாகவே இருந்தது. ஆனால், அந்தக் குறைப்பாட்டை வைத்துத்தான் அவளுடைய மாமியார் தன் மகனுக்காக அவளைத் தேர்ந்தெடுத்தாள். அழகான பெண்ணைத் தேர்வு செய்தால் அவ்வளவு நல்லதல்ல. அழகு தவறான வழியில் கொண்டு போய்விடும். அவளுடைய மகன் தொழிலை விட்டு விலகிப் போய்விடக்கூடாது. இன்னொரு விஷயமும் இருக்கிறது. அவளைப் பற்றிக் கூறுகின்ற வேலைக்காரிகள் மற்றும் வறுமையில் வாழ்ந்து கொண்டிருக்கும் உறவினர்கள் ஆகியோரின் வார்த்தைகள் கிழவியின் காயம்பட்ட பொறாமையின் மீது ஒரு மருந்தைப் போல புரண்டன என்பதென்னவோ உண்மை. அவர்கள் கூறுவார்கள்: “அம்மா, உங்களுடைய மருமகள் நிறைய படித்தவளாக இருக்கலாம். ஆனால், உங்களுடைய நிறத்தில் அவள் பாதி கூட இல்லை. நீங்க ஒரு வெள்ளை ரோஜா மலரைப் போல இருக்கீங்க. உங்களுடைய பால் போன்ற வெள்ளை நிறத் தோலைப் பார்த்து நகரத்திலிருந்து வரும் எந்தப் பெண்ணாக இருந்தாலும் ஏங்குவார்கள் தெரியுமா?”

கன்னியாகுமரி கோவிலுக்குச் செல்லும் முதல் பயணத்திற்காக ஆடைகளை மாற்றிக் கொண்டிருந்த ரோகிணி இப்படிப்பட்ட வார்த்தைகளை நினைத்து வேதனையால் நெளிந்தாள். கெஸ்ட் ஹவுஸில் அவர்களுடைய அறையின் ஜன்னல்கள் மூடியிருந்தன. ஜன்னல்களின் கண்ணாடிகளில் தூசி படிந்திருந்தது. காலையில் அந்தக் கதவுகளைத் திறக்க அவள் முயற்சித்தாள். ஆனால், அவை இறுகிப்போய் இருந்தன. அவள் அதற்குப் பிறகு அதை அப்படியே விட்டுவிட்டாள். கடலின் வயிறு வீங்கியிருந்தது. கதவின் இடைவெளி வழியாக அதன் இறைச்சல் சத்தம் அவளுடைய காதுகளில் விழுந்தது. இருண்டு உயரமாக நின்றிருந்த பாறைகள் மீது அலைகள் வேகமாக வந்து மோதியது, கோபம் நிறைந்த சத்தங்களின் ஆரவாரம் தன்னுடைய காதுகளில் விழுவதை அவளால் உணர முடிந்தது. அது அவளை தளரச் செய்தது. ஒற்றைப் பாலத்திலிருந்து கன்னியாகுமரிவரை உள்ள நீண்ட கார் பயணத்தின் மூலம் உண்டான களைப்பு காரணமாக இருக்கலாம்- இரவில் அவளால் நன்கு உறங்கவே முடியவில்லை. எந்தவிதக் கவலையும் இல்லாமல் குறட்டை விட்டவாறு தூங்கிக் கொண்டிருந்த தன் கணவனுக்கு அருகில் மணிக்கணக்காக அவள் இப்படியும் அப்படியுமாகப் புரண்டு கொண்டிருந்தாள். படுத்தவுடன் தூங்கக் கூடிய அவனுடைய இயல்பைப் பார்த்து அவளுக்கு பொறாமையே உண்டானது. தொழிற்சாலையில் வேலை நிறுத்தங்களும் கதவடைப்புகளும் நடக்கலாம். ஆனால், சாப்பிட்டு முடித்தவுடன் தூங்க வேண்டும் என்ற ஒன்றைத் தவிர, வேறு எதுவும் அவனுக்குப் பிரச்சினையே இல்லை. தொழிலாளிகளின் கோபத்தைப் பார்த்து நிலைகுலைந்து போகக்கூடியவள் மனைவிதான். அவன் யாரிடமாவது எந்தச் சமயத்திலாவது கோபப்படுவதை அவள் பார்த்ததேயில்லை. விளையாட்டுப் பொருட்கள் விற்கப்படும் கடைகளில் இருக்கக்கூடிய வட்ட முகத்தையும் சிறிய கண்களையும் தொந்தியையும் வைத்துக் கொண்டு சிரித்துக் கொண்டிருக்கும் பொம்மைதான் அவனுடைய தோற்றம் என்று அவளின் மனதில் தோன்றியது. மனதில் அவள் அமைதியாக அவனைக் கெட்ட வார்த்தைகளால் திட்டுவதும் சாபம் இடுவதுமாக இருந்தாள். அவன் ஒரு தீனிப் பண்டாரமாகவே இருந்தான். தன்னுடைய நடவடிக்கைகள் ஒவ்வொன்றிலும் அவன் ஒரு கிராமத்து மனிதனாகவே இருந்தான். ஆனால் தன்னுடைய மனக்குறையை அவனுடைய முகத்தைப் பார்த்து அவள் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. எந்தவிதத்தில் பார்த்தாலும் வறுமையின் காரணமாக ஆசிரியை வேலைக்கோ ஸ்டெனோகிராஃபராக பணியாற்றவோ போக வேண்டிய சூழ்நிலைக்கு ஆளான தன்னுடைய சிநேகிதிகளைவிட அவள் அதிர்ஷ்டம் வாய்த்தவளாக இருந்தாள்.


ப்ளாஸ்டிக் வலைகளுக்குள் மூடப்பட்ட கூந்தலுடனும் நைலானின் மூடிய, பார்க்க சகிக்காத தோற்றத்துடனும் நடந்து செல்லும் அவர்களைப் பார்ப்பது என்பது எவ்வளவு மோசமான விஷயம்! அவர்களுடைய கேடு கெட்ட நிலை தனக்கு வரவிடாமல் செய்த நட்சத்திரங்களுக்கு நன்றி கூறுவதற்காக மட்டுமாவது அவள் அவர்களுடன் நட்பைத் தொடர்ந்து கொண்டிருந்தாள். அவள் ஆசைப்பட்டவை அனைத்தும் அவளுக்குக் கிடைத்திருந்தன. பெரிய வீடு, நிறைய வேலைக்காரர்கள், ரத்தினம் பதிக்கப்பட்ட நகைகள், குளிர்சாதன வசதி இணைக்கப்பட்ட படுக்கையறை, ஊரிலேயே மிகச் சிறந்த சமையல்காரன்- எல்லாம் அவளுக்குக் கிடைத்தன. ஆனால், அவற்றுடன் அவள் விலைபேசி வாங்காத வேறு சிலவும் இருந்தன. உதாரணத்திற்கு- பகல் முழுவதும் தொல்லைகள் கொடுத்துக் கொண்டிருக்கும்- அவள் எங்கு சென்றாலும் பின் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் மாமியார், இரவில் கணவனின் குளிர்ந்து போன மென்மையான கைகள்... தன்னைச் சீக்கிரமே விதவை ஆக்கக் கூடாதா என்றுகூட அவள் ரகசியமாக கடவுளிடம் ஒன்றிரண்டு தடவை வேண்டிக் கொண்டதும் உண்டு. “ஓ... நான் என்னை நானே வெறுக்கிறேன்”- அவள் கண்ணாடியைப் பார்த்து முணுமுணுத்தாள்: “நான் ஒரு பாவி...” அந்த நேரத்தில் கதவைத் திறந்து கொண்டு அவளுடைய கணவன் அறைக்குள் வந்தான்.

“நீ தயாராயிட்டியா?”- அவன் கேட்டான். கடுகு நிறத்திலிருந்த ஒரு சட்டையையும் அகலம் அதிகமாக இருந்த கால் சட்டையையும் அவன் அணிந்திருந்தான். அவனுடைய முகத்தை மீண்டும் ஒருமுறை பார்ப்பது என்பது அவளுக்கு சகித்துக் கொள்ள முடியாத ஒரு விஷயமாக இருந்தது. ‘அவன் தன்னுடைய உணவு விஷயத்திலாவது கவனமாக இருக்கக் கூடாதா?’ அவள் தனக்குத்தானே கூறிக் கொண்டாள்: ‘கொலைச் சோறு உண்ணும் குற்றவாளியைப் போல இருக்கும் நாசமாகப் போன தீனியையாவது நிறுத்தியிருக்கக் கூடாதா?’ தன்னுடைய சொந்த முகத்தை மீண்டும் கொண்டு வந்து அவள் புன்னகைத்தாள். அவன் தன் இரு கைகளாலும் அவளுடைய இடுப்பைப் பிடித்தான். நிர்வாணமாகவும் குளித்து முடித்து இப்போதும் சிறிது ஈரத்துடனும் இருந்த தோள்களில் முத்தமிட்டான். வலையில் சிக்கிக் கொண்ட ஒரு மிருகத்தைப்போல தன்னுடைய மனம் பயந்து போய் உள்ளே இழுத்துக் கொள்வதை அவளால் உணர முடிந்தது. எனினும், அவனுக்கு எந்தவித சந்தேகமும் உண்டாகவில்லை. அவளுடைய மரத்துப்போன நிலையை அவன் கணக்கிலேயே எடுத்துக் கொள்ளவில்லை. பெண்களைப் பற்றி அவனுக்கு சில தீர்மானிக்கப்பட்ட கருத்துக்கள் இருந்தன. நல்ல முறையில் வளர்ந்த பெண்கள் மிகவும் அமைதியானவர்களாக இருப்பார்கள் என்று அவன் நினைத்தான். அதனால் அவனுடைய வியர்வை வழிந்து கொண்டிருக்கும் உடலுக்குக் கீழே ஒரு சிலையைப்போல அவள் படுத்துக் கிடந்தபோது, அவன் அவளிடமும் தன்னுடைய திருமணத்திலும் திருப்தி அடைந்தான். காம வெறியைத் தணித்துக் கொள்வதற்காக அவன் சிறு நகரங்களிலிருந்துக்கும் விலைமாதர்களைத் தேடிச் சென்றான். அவன் கொடுத்த பணத்திற்கு விலையாக அவர்கள் முனகல்களையும் பெருமூச்சுகளையும் அவனுக்குத் திருப்பித் தந்தார்கள்.

“கோவிலுக்குப் போவோமா?”- அவன் அவளிடம் கேட்டான்: “வெயில் அதிகமாவதற்கு முன்னால் நாம திரும்பி வந்திடணும்.”

அவர்கள் கீழே படிகளில் இறங்கி வந்தபோது வேலைக்காரர்கள் அவர்களையே வெறித்துப் பார்த்தார்கள். அவர்களைப் போன்ற வசதி படைத்த ஆட்களுடன் பழகிக் கொள்வது என்பது அவர்களைப் பொறுத்தவரையில் அபூர்வமான ஒரு விஷயமே. பணம் படைத்தவர்கள் எப்படி நடப்பார்கள், எப்படிப் பேசுவார்கள், எப்படி உணவு சாப்பிடுவார்கள் என்பதையெல்லாம் தெரிந்துகொள்ள அவர்களுக்கு ஆர்வமாக இருந்தது. அவர்களுடைய வாழ்க்கை முறை பணக்காரர்களுடையதிலிருந்து வேறுபட்டது என்ற விஷயத்தில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள். ஆனால், எப்படியாவது அந்த ரகசியத்தைத் தெரிந்து கொண்டால், அவர்களும் பணக்காரர்களாக ஆகிவிடலாம். அவர்களும் அவர்களுடைய ஒல்லியான இடைகளைக் கொண்ட மனைவிகளுடைய கையைப் பிடித்துக் கொண்டு, கஸ்தூரி வாசனையைப் பரவவிட்டுக் கொண்டு படிகளில் இறங்கி வருவார்கள்.

டிரைவர் காரின் கதவைத் திறந்து கையில் பிடித்துக் கொண்டு காத்து நின்றிருந்தான். முதலாளியின் மனைவி பார்க்கும்போது, கன்னங்களில் சிவப்பு நிறம் உண்டாகக்கூடிய இயல்பைக் கொண்ட ஒரு இளைஞன்தான் டிரைவராக இருந்தான். அவன் மோசமான தோற்றத்தைக் கொண்டவன் அல்ல. காரில் ஏறும்போது ரோகிணி நினைத்துப் பார்த்தாள். அவள் அவனிடம் சிறிது குழைந்து பேச ஆரம்பித்தால், அவனுடைய நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை அவள் தெரிந்து கொள்ளலாம். அப்படி தெரிந்து கொள்வது மிகவும் சுவாரசியமான ஒரு விஷயமாக இருக்கும். ஒருநாள் வேண்டுமென்றே அவள் அவனுடைய கைகளிலோ காருக்கு அருகிலேயோ மயக்கமடைந்து விழ வேண்டும். அப்போது அவன் அவளைத் தொட வேண்டியதிருக்கும். அவன் வெட்கப்பட்டு சிவப்பான். அவனுடைய இதயம் ‘படபட’வென்று அடித்துக் கொண்டிருக்கும். அந்தக் காட்சியை நினைத்துப் பார்த்து அவள் சிரித்தாள். அவன் தன்னை மிகவும் ஆழமாகக் காதலிக்கிறான் என்ற விஷயத்தில் அவள் உறுதியாக இருந்தாள். அவளுக்கு வயது நாற்பதாகிவிட்டது. ஆனால், மிகவும் வசீகரமான நாற்பது தன்னுடையது என்பதும் அவளுக்குத் தெரியும். உடலில் ஒரு அவுன்ஸ்கூட கொழும்பு அதிகமாக இல்லை. அவளுடைய மெலிந்த உடல், அகலம் குறைவான பாதங்கள், சிறிய உள்ளங்கைகள், பெரிய மார்பகங்கள் ஆகியவற்றின்மீது அவளுக்கு மதிப்பு இருந்தது. ரவிக்கைக்கு உள்ளே ப்ரேஸியர் அணியாமல் அவள் அதை மதிப்புடன் வெளியே காட்டினாள். ரவிக்கைக்கு அடியில் எதையும் அணியாமல் இருப்பதற்குக் காரணம் என்ன என்று அவளுடைய கணவன் பல நேரங்களில் கேட்டிருக்கிறான். ‘பையைப்போல தொங்கிக் கொண்டிருக்கும் மார்பகங்களைக் கொண்ட பெண்களுக்குத்தான் ப்ரா வேண்டும். தனக்கு அது தேவையே இல்லை’ என்று அவள் பதில் சொன்னாள். குழந்தைகள் இல்லாமல் போனது ஒரு வகையில் பார்க்கப் போனால் நல்லது என்றே சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் மார்பகங்களின் கண்களைச் சப்பி இழுத்து, மார்பகங்களின் அழகை பாழ் பண்ணியிருப்பார்கள். இது அவள் தன்னுடைய மனதிற்குள் அடைத்துப் பூட்டி வைத்திருந்த இன்னொரு ரகசியம். தன்னுடைய மாமியாருக்கு எந்தக் காலத்திலும் புரியாத இந்த மாதிரியான ரகசியமான சிந்தனைகளும் தன்னிடம் இருக்கின்றனவே என்பதை நினைத்தபோது அவளுக்கு அடக்க முடியாமல் சிரிப்பு வந்தது. ‘என் இதயம் ஒரு வங்கி லாக்கரைப் போன்றது’- அவள் தனக்குத்தானே கூறிக் கொண்டாள்: ‘அதைத் திறப்பதற்கான சாவி என்னிடம்தான் இருக்கிறது.’

அவளுடைய புன்சிரிப்பைப் பார்த்த கணவன் சொன்னான்: “நீ இன்னைக்கு நல்ல மூடில் இருப்பது போல தெரியுதே!”

அதற்கு அவள் ‘ஆமாம்’ என்று தலையை ஆட்டினாள்.


“எனக்கு கடல் என்றால் விருப்பம்”- அவள் சொன்னாள்: “நான் சின்ன பிள்ளையா இருந்தப்போ, என் அப்பாவும் அம்மாவும் விடுமுறைக் காலத்தில் என்னைக் கடலோர இடங்களுக்கு அழைச்சிட்டுப் போவாங்க. நான் அப்போ சிப்பிகளைப் பொறுக்குவேன். அவை இப்போதும் என் தாயின் அறையில் இருக்கும் அலமாரியில் இருக்கின்றன. அது என் நினைவிற்குள் கொண்டு வருவது...”

“அது உன் நினைவிற்குக் கொண்டுவருவது நீ ஒரு வருடமாக உன் அம்மாவைப் போய் பார்க்கவில்லை என்ற விஷயத்தைத்தான்...”- அவன் சொன்னான்.

“நீங்க சொல்றது சரிதான்....”- அவள் சொன்னாள்: “அம்மாவைப் பார்க்குறதுக்கான நேரம் வந்துவிட்டது. இந்த வருடம் ஓணத்திற்கு நான் அங்கே போகணும். நீங்ககூட வரலாம். உங்களுக்குத் தெரியுமே... அம்மாவுக்கு உங்கள் மீது எந்த அளவிற்கு விருப்பம் இருக்குன்னு! நான் கூட இருக்குறப்போ அம்மா எப்போதும் உங்களைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருப்பாங்க. என் அம்மா இருக்கும் இடத்தில் நீங்கள் ஏன் மேலும் கொஞ்ச நாட்கள் தங்கவில்லை? நாங்க ஏழைகள்ன்றதுனாலா? உங்க அளவுக்கு பணக்காரர்களா இல்லாததுனாலா?”

“என் டிரைவருக்கு முன்னால் நீ இப்படிப் பேசாதே”- அவன் குரலைத் தாழ்த்திக் கொண்டு சொன்னான்: “அது என்னை மன அமைதி இல்லாதவனா ஆக்குது.”

அவள் அடுத்த நிமிடம் தன் முகத்தைத் திருப்பிக் கொண்டு கடற்கரையைப் பார்த்தாள். அழுக்கு ஆடைகள் அணிந்த இரண்டு சிறுமிகள் ஒரு குஜராத்தி தம்பதிகளுக்கு சிப்பி மாலை விற்க முயற்சித்துக் கொண்டிருந்தார்கள்.

“கோவிலில் ஏறி இறங்குவதற்கு பதிலாக நாம் ஒரு ஏழை குழந்தையைத் தத்து எடுத்தால் என்ன?”- அவள் தன் கணவனிடம் கேட்டாள்: “இந்தச் சிறுமிகளில் ஒருத்தியை நாம் வீட்டுக்குக் கொண்டு போய் குளிப்பாட்டி நல்ல உணவு கொடுத்து வளர்க்கலாம். அவள் காலப்போக்கில் என்னை மாதிரி ஆகி விடுவாள்.”

“மற்றவர்களுடைய குழந்தைகள் என் சொத்துக்கு வாரிசுகளாக வருவதை நான் விரும்பவில்லை”- அவன் சொன்னான். அந்த உரையாடல் அத்துடன் முடிந்தது.

2

கோவிலில் கடவுளை தரிசனம் செய்யப் போவதற்கு முன்னால், அறையில் கொடுக்கப்படும் உணவைச் சாப்பிட்டு முடித்த பிறகு, நேரத்தைச் சரி பண்ணுவதற்காக நிர்வாணத் திரைப்படங்கள் எடுக்கும் தயாரிப்பாளர்கள் கூறுகிறபடி நடந்துகொள்ளும் மாடல்களைப் போல அவர்கள் சிற்றின்ப லீலையில் ஈடுபட்டார்கள். அந்தச் சூழ்நிலையிலும் சந்தோஷத்தை அடைய ரோகிணியால் முடியவில்லை. அதற்குக் காரணம்- அவர்களைத் தன்னுடைய பொம்மைகளாக ஆக்க விரும்புகிற அவளுடைய மாமியாரின் அறிவுரையால்தான் தாங்கள் அந்தச் செயலில் ஈடுபடுகிறோம் என்ற விஷயம் அவளுக்கு நன்றாகவே தெரியும். அவளுடைய கணவன் உடலுறவில் ஈடுபடுவதற்குத் துடித்ததற்குக் காரணம் அவளுடைய உடல்மீது அவன் கொண்டிருந்த மோகம் அல்ல- மாறாக, கிழவியின் கட்டளை அது என்பதையும் அவள் அறிந்திருந்தாள். அந்த தலை நரைத்துப்போன பெண் அவர்களைப் பார்த்து ஒன்று – இரண்டு – மூன்று என்று எண்ணியவாறு தங்களுக்கு அருகில் நின்று கொண்டிருப்பதைப் போல அவள் உணர்ந்தாள். அவளுக்குத் தேவை ஒரு வாரிசு. அவ்வளவுதான். தன் மாமியாரைப் பற்றி நினைத்துப் பார்த்தபோது, ரோகிணி தன்னையே நொந்து கொண்டாள். கடவுளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்- அவள் அவர்களுடன் வராமல் இருந்துவிட்டாள். அவள் மெதுவான குரலில் தனக்குத்தானே கூறிக் கொண்டாள். தன் தடிமனான கையை அவள்மீது வைத்தவாறு படுத்திருந்த அவளுடைய கணவன் தலையைத் திருப்பி அவளைப் பார்த்தான்.”

“நீ ஏதாவது சொன்னியா?”- அவன் அவளிடம் கேட்டான். அவள், ‘இல்லை’ என்று தலையை ஆட்டினாள்.

“நீ சரியாக ஓய்வெடுப்பது இல்லை என்பதுதான் உன்னிடம் இருக்கும் பிரச்சினையே...”- அவன் சொன்னான்: “தூக்கத்தில்கூட உன் கைகள் மரத்துப்போனது மாதிரி இருக்கின்றன. நீ ஏன் அப்பப்போ தூங்க மாட்டேங்குறே?”

“நான் இப்படித்தான்”- அவள் சொன்னாள்: “போதாதற்கு, உங்களுடைய உடம்பிலிருந்து வரும் கந்தக வாசனை எனக்குப் பிடிக்கவே இல்ல. உங்களுக்கு வியர்வை வர்றப்போ, அந்த வாசனை என்னை ஒரு மாதிரி ஆக்குது. மூச்சுவிட முடியல...”

“நீ ஒரு காதலனுடன் தொடர்பு உண்டாக்கணும்”- அவன் சொன்னான்.

அதைக் கேட்டதும் அவள் நிலைகுலைந்து போய் அவனைப் பார்த்தாள். ஆனால், அவனுடைய முகம் எப்போதும்போல எந்தவித சலனமும் இல்லாமல் இருந்தது. அப்படியென்றால் அவன் வெறுமனே தமாஷுக்காக அதைச் சொல்லவில்லை. அவன் ஒரு பொறாமை கொண்ட கணவனாக இல்லாமல் போய் விட்டானா? அவளுடைய உடல்மீது கொண்ட மோகத்தை அவன் இழந்துவிட்டானா?

“எனக்கு இப்படிப்பட்ட வேடிக்கைப் பேச்சுகளைப் பிடிக்காது”- அவள் தாங்க முடியாமல் சொன்னாள்.

“கோபத்தில் சிரிப்பது உன் வாய்க்குப் பொருத்தமாக இல்லை”- அவன் சொன்னான்: “உனக்கு நாற்பது வயது நடக்குது என்ற விஷயத்தை நீ மறந்துட்டே...”

“இன்னைக்கு உங்களுக்கு என்ன ஆச்சு?”- அவள் தன் குரலை உயர்த்திக் கொண்டு கேட்டாள்: “இரக்கமே இல்லாத வார்த்தைகளால் என்னைக் காயப்படுத்த வேண்டுமென்று உங்களுக்கு ஏதோ கட்டாயம்னு நினைக்கிறேன்.”

அவன் அதைக் கேட்டுப் புன்னகைத்தான்: “நான் காயப்படுத்தணும்னு நினைச்சா, நான் அதை வார்த்தைகளால் செய்யமாட்டேன். இன்னும் கொஞ்சம் கூர்மையா இருக்கும் ஏதாவதொன்றை நான் பயன்படுத்துவேன்”- அவன் சொன்னான்: “நான் கவிஞன் இல்லை. இசையின் மூலங்களைப் பற்றியும் ஆல்பர் காம்யுவைப் பற்றியும் உன்னிடம் பேசவதற்காக வரும் கலைஞர்களில் ஒருவனல்ல நான்.”

அவள் திடீரென்று எழுந்தாள். அவளுடைய இதயம் வேகமாக அடித்துக் கொண்டிருந்தது. “நீங்கள் குடிச்சு போதையில் இருக்கீங்களா?”- அவள் அவனிடம் கேட்டாள்:  “நீங்கள் எப்படி இப்படிப்பட்ட மோசமான மிருகமா மாறினீங்க?”

“நீ ஆணவம் கொண்ட ஒரு பெண். வேறொண்ணும் இல்ல...”- அவன் சொன்னான்: “இதை உன்னிடம் சொல்றதுக்காக நான் இருபது வருடங்கள் காத்திருந்தேன். நல்ல சிந்தனைகளைக் கொண்டவள்னு நீ நடிக்கிறே. எதிர்ப்புகளைச் சந்திக்க நேரும்போது, நரம்பு சம்பந்தமான தலைவலி வந்துவிடுவதாகக் கூறி நீ நடிக்கிறே. சிறு பிள்ளைத்தனத்தையும் போலித் தனமான தனித்துவத்தையும் வச்சிக்கிட்டு இருக்குற ஒருத்தி நீ. நீ கூலிக்கு குத்துறவ. நீ கேவலமான மன நிலையைக் கொண்டவள். உன் வீட்டின் பாதுகாப்பிற்காகத்தான், பணக்காரியாக ஆகணும்ன்றதுக்காகத்தான் நீ என்னைத் திருமணம் செய்துக்கிட்டே. உன் தோழிகளுக்கு உன்னுடைய அதிர்ஷ்டத்தின் மீது பொறாமை வந்துவிடக் கூடாது என்பதற்காக அவர்களுக்கு முன்னால் ஒப்பனை அணிந்து நடக்க நீ விரும்பினே. அவர்கள் ஒவ்வொருவரும் குணத்தில் உன்னைவிட உயர்ந்தவர்கள். அவர்கள் நம்முடன் தங்கியிருக்க வந்தப்போ, அவங்க ஒவ்வொருத்தருடனும் நான் தனிப்பட்ட முறையில் பேசிக் கண்டுபிடிச்ச விஷயம் இது.


நான் தூங்கிக் கொண்டிருக்கிறேன் என்று நீ நினைச்சிருந்த நேரத்தில் நான் அவர்களுடன் பேசிக் கொண்டிருப்பேன். என் பகல் தூக்கம் இல்லாமல் போனாலும் பரவாயில்லைன்னு நான் நினைச்சேன். பகல் நேரத்தில் ஓய்வு எடுக்கவில்லையென்றாலும், எனக்கு உனக்கு வர்றதைப் போல தலைவலி வராதே!”

“இதை உடனே நிறுத்துங்க”- அவள் கத்தினாள்: “உங்களுக்கு என்னவோ பிரச்சினை இருக்குது. இந்த நிமிடத்தில் நீங்கள் முற்றிலும் வேற யாரோ மாதிரி தெரியுது. உங்களுக்கு உங்களுடைய மனைவியைப் பற்றி இந்த அளவிற்கு மோசமான எண்ணம் இருக்கும் என்று நான் கொஞ்சம்கூட நினைக்கல. உங்களுடைய தாயைப் பற்றியும் இப்படிப்பட்ட எண்ணங்கள் தான் இருக்கா?”

அதைக் கேட்டு அவன் பலமாக சிரித்தான். அவள் பயந்துபோய் அமைதியாகிற அளவிற்கு ஒரு பயங்கரமான சிரிப்பாக அது இருந்தது. அன்று அவன் ஒரு துளி மதுவைக்கூட தொடவில்லை. மன நோய்க்கான அறிகுறிகள் ஏதாவது இருக்கின்றனவா என்று அவள் அவனுடைய முகத்தில் தேடினாள். அவனுடைய கண்கள் மிகவும் சாந்தமானவையாக இருந்தன. முகத்திலிருந்த தசைகள் அசைந்து கொண்டிருந்தன. அவன் எப்போதும்போல சிரிக்கும் பொம்மையாகக் காட்சியளித்தான். சந்தேக குணம் கொண்ட பொம்மை. அவள் உள்ளங்கைகளில் தன் முகத்தை மறைத்துக் கொண்டு தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள்.

“உங்களுக்கு என்மேல வெறுப்பு வந்திடுச்சு”- அவள் மெதுவான குரலில் சொன்னாள்: “உங்களுக்கு என்மீது அன்பு இல்லையென்றால், நான் என் தாய் இருக்குற இடத்துக்குப் போயிடுறேன்.”

அவன் மீண்டும் சிரித்தான்: “எங்களுடைய பரம்பரையில் விவாகரத்து என்பது இல்லவே இல்லை குழந்தை...”- அவன் சொன்னான்: “எங்களுடைய ரகசியங்களுடன் நீ அங்கே போக நாங்க அனுமதிக்க மாட்டோம். எங்களுடைய ரகசியங்களை நீ எங்களின் எதிரிகளுக்கு விற்பனை செய்வே. எனக்கு உன்மேல நம்பிக்கை இல்ல...”

“பிறகு என்னை நீங்க என்ன செய்யப் போறீங்க?”- அவள் கேட்டாள். கண்ணீரின் வெப்பத்தை அவள் தன் கன்னங்களில் உணர்ந்தாள். “என்னைக் கொல்லணும்னு நீங்க நினைக்கிறீங்களா? நீங்களும் உங்க தாயும் சேர்ந்து...? என்னை இங்கே கொண்டு வந்து கொலை பண்ணும்படி அவங்க உங்களிடம் சொல்லியிருக்காங்களா?”- அவள் கேட்டாள்.

“உன்னுடைய இந்தப் பேச்சை நிறுத்து”- அவன் சொன்னான்: “ஆளுங்க யாராவது கேட்டுவிடப் போறாங்க. நம்முடைய அறைக்குப் பக்கத்துல வெளியே வராந்தாவில் டிரைவர் படுத்துத் தூங்கிக்கிட்டு இருக்கான். அவன் உன் சத்தத்தைக் கேட்டு, என்னிடமிருந்து உன்னைக் காப்பாற்றுவதற்காக ஓடிவருவான். அவன் உன்னை வழிபடுறவன் ஆச்சே! நீ அவனிடம் குழைவதை நான் பல நேரங்களில் பார்த்திருக்கேன்.”

“நான் அவன்கூட அப்படிப் பேசுறதே இல்லையே!”- அவள் சொன்னாள்.

“நீ கண்களால் குழைவது உண்டு அவனிடம்...”- கணவன் சொன்னான்.

“காரிலிருந்து இறங்கி நடக்குறப்போ, பின்பாகத்தை வைத்தும், காரில் ஏறும் நேரத்தில் உன் சதைப் பிடிப்பான மார்பகங்களை வைத்தும் கடந்த பல வருடங்களாக நான் உன் அசைவுகளைக் கவனிச்சுகிட்டுத்தான் வர்றேன்.”

“என்னைத் திரும்பவும் வீட்டுக்குக் கொண்டு போங்க”- அவள் கத்தினாள்: “இங்கே அறிமுகமில்லாத இந்த கிராமத்தில் தனியாக இருக்க எனக்கு பயமா இருக்கு. காரை தயாரா கொண்டு வந்து நிறுத்தும்படி டிரைவரிடம் சொல்லுங்க. நான் உடனே போகணும்.”

அவன் ரோமங்கள் அடர்ந்த முரட்டுத்தனமான கைகளால் அவளைப் பிடித்துப் பின் பக்கமாகப் படுக்கையில் தள்ளிவிட்டான்.

“அசையாமல் அங்கேயே படு...”- அவன் சொன்னான்: “இல்லாவிட்டால் நான் உன் கழுத்தை நெறித்துக் கொன்னுடுவேன்.”

இறுதியில் ரோகிணிக்கு சுய உணர்வு வந்தபோது, சூரிய ஒளி விழுந்து கொண்டிருந்த அறைக்குள் அவள் மட்டும் தனியே இருந்தாள். கடந்து சென்ற இரவின் அதிர்ச்சியூட்டும் சம்பவம் அவளுடைய நினைவில் திரும்பவும் வந்தது. அவள் கண்ணாடியில் தெரிந்த தன் உருவத்தைப் பார்த்தாள். அவள் மிகவும் வெளிறிப் போய்க் காணப்பட்டாள். ஒருவேளை அந்த பயங்கரமும் அதிர்ச்சியும் தான் கனவு கண்டதாக இருக்குமோ என்று அவள் நினைத்தாள். அவள் ஆடைகளை மாற்றிக் கொண்டு கீழேயிருந்த சாப்பிடும் அறைக்குச் சென்றபோது, அவளுடைய கணவன் மேஜைக்கு அருகில் அமர்ந்து பத்திரிகை வாசித்துக் கொண்டிருந்தான். அவன் தலையை உயர்த்திப் பார்த்தபோது, சாந்தமான முகத்தையும் அன்பை வெளிக்காட்டுவதையும் மலர்ந்த சிரிப்பையும் அவள் பார்த்தாள். ஒருவேளை அது கனவாக மட்டுமே இருக்க வேண்டும். அவளிடம் அந்த அளவிற்கு மிருகத்தனமாக நடப்பதற்கு அவனால் முடியாது. அவன் அவளை வழிபடக் கூடியவன். அவளையும் அவளுடைய நாகரிகமான நடவடிக்கைகளையும்தான். அவள் குளிக்கும்போது அவளுடைய மென்மையான மாநிறத்தைக் கொண்ட உடலைக் காண்பதற்கும், அதை ரசிப்பதற்கும் பல நேரங்களில் குளியல் தொட்டிக்கு அருகில் அவன் வந்து நின்று கொண்டிருப்பதுண்டு. குளியல் தொட்டிக்குள் சோப்பு நுரைகளுக்குள் இருந்து கொண்டு அவள் ஆனந்தம் அனுபவித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து ரசிக்க அவன் விருப்பப்பட்டான். அவள் தன் உதடுகளில் உதட்டுச் சாயம் பூசுவதைப் பார்த்துக் கொண்டு நிற்பதையும் அவள் ஹோட்டல்களில் கத்தியும் முள்ளும் பயன்படுத்தி உணவு சாப்பிடுவதைப் பார்ப்பதையும் அவன் விரும்பினான். ஆமாம்... அவள் மீது அவனுக்கு எப்போதும் ஒரு உயர்ந்த மதிப்பு இருந்தது. கடந்து போனது ஒரு கெட்ட கனவாக இருக்க வேண்டும்...

“கடந்த இரவில் நான் ஒரு வினோதமான கனவைக் கண்டேன்”- அவள் சொன்னாள்.

“நான் நினைச்சேன்”- அவன் சொன்னான்: “நீ தூக்கத்துல உளறிக்கிட்டு இருந்தே.”

“அது உங்களைப் பற்றித்தான்”- அவள் சொன்னாள்: “நீங்க ஏதோ ஒரு பயங்கரமான மிருகமா மாறிட்டீங்க. நீங்க என்னைக் கொல்ல விரும்புனீங்க...”

“கனவில்கூட உன்னைக் கொல்ல நான் விரும்பமாட்டேன் கண்ணே”- அவன் சொன்னான். ஒரு ரொட்டித் துண்டின் மீது வெண்ணெயைத் தேய்த்து அவளிடம் தந்தான். தொடர்ந்து தேநீர் போடத் தொடங்கினான்.

அவள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாள். அறைக்குள் விழுந்து கொண்டிருந்த சூரிய ஒளி மஞ்சள் நிற வெண்ணையைப் போல தோன்றியது. ஒரு நீலநிறப் பாத்திரத்தில் யாரோ கடல் தாவரங்களை வைத்திருந்தார்கள். அவை கடலின் வாசனையைப் பரப்பிக் கொண்டிருந்தது. கடல் மிகவும் அமைதியாக இருந்தது.

“இன்னைக்கு நாம என்ன செய்யணும்?”- அவன் அவளிடம் கேட்டான்: “விவேகானந்தர் பாறையைப் பார்க்கப் போவோமா? இல்லாவிட்டால் நீந்தப் போவோமா?”

“சுசீந்திரம் கோவிலுக்குப் போகணும் என்று அம்மா சொல்லலயா?”- அவள் புன்னகைத்துக் கொண்டே சொன்னாள்: “நாம் நம்முடைய விண்ணப்பத்துடன் அங்கே போகலைன்னா, அம்மா அதைப் பொறுத்துக்கவே மாட்டாங்க.”


“அது சரிதான்”- அவன் சொன்னான்: “ஆனால், நமக்கு ஒரு குழந்தை இல்லைன்ற விஷயத்துல, எனக்கு அப்படியொண்ணும் வருத்தம் இல்ல. உனக்கு இருக்கா?”

“இல்ல... நான் இப்போ இருக்குறது மாதிரி எப்போதும் சந்தோஷமாகத்தான் இருக்கேன்”- அவள் சொன்னாள். அவன் தயார் பண்ணித் தந்த தேநீரைப் பருகியவாறு அவர்கள் இருவரும் ஒன்றாகச் சிரித்தார்கள். அந்தக் காலை வேளையில் அவன் சிவந்துபோய் நல்ல உற்சாகத்துடன் இருந்தான். காற்று வீசிய இரவு அவனுக்கு எந்தவொரு தொந்தரவையும் தரவில்லை. அவனுக்கு அதிகபட்சம் முப்பது வயது இருப்பது மாதிரிதான் தோன்றும். பளபளப்புடன், சதைப் பிடிப்பு கொண்ட, நன்றாக சாப்பிடக்கூடிய ஒரு குழந்தையைப் போல அவன் இருந்தான். அவனுடைய வாயைச் சுற்றி எப்போதும் பாலின் வாசனை வந்து கொண்டிருந்தது. அவன் ஒவ்வொரு மணி நேரம் ஆகிறபோதும், ஒரு கோப்பை பால் குடித்துக் கொண்டிருந்தான். இல்லாவிட்டால் தனக்கு இருக்கும் அல்சர் நோய் பெரிதாகிவிடும் என்று அவன் பயந்தான். அவனுக்கு மதுவின்மீது அப்படியொன்றும் விருப்பம் இல்லை. அவன் புகை பிடிப்பதில்லை. ஒருவகையான `அம்மாவின் பிள்ளை’யாக அவன் இருந்தான். ‘அவனுடைய தாய் இறந்தபிறகு நான் அவனைத் தாயைப் போல பார்த்துக் கொள்வேன்’- அவள் மனதிற்கும் கூறிக் கொண்டாள். அவனுக்கு எப்போதும் மனைவியைவிட ஒரு தாய்தான் வேண்டும்.

“நான் காலையில குளிக்கப் போனப்போ யாரைப் பார்த்தேன் தெரியுமா?”- அவன் சொன்னான்: “என்னுடைய பழைய தோழன் விஜயன் பல வருடங்களாக வெளியே எங்கேயோ இருந்தான். அவனை உயிரோடு பார்க்க முடியும் என்றுகூட நான் நினைச்சது இல்லை. அவன் நீண்ட காலமாக பஹரினில் இருந்தான். திருமணம் செய்வதற்காக இந்தியாவுக்கு வந்திருப்பதாகச் சொன்னான். அப்படின்னா கன்னியாகுமரியில் என்ன பண்றேன்னு நான் கேட்டேன். அதற்கு அவன் திரும்பி என்னைப் பார்த்துக் கேட்கிறான், ‘ஏன், தமிழ்நாட்டுல இளம் பெண்கள் இல்லையா?’ என்று. அவன் அதே பழைய விஜயன்தான். நகைச்சுவையாக ஏதாவது பேசிக் கொண்டிருப்பதும் சிரிப்பதும்... அவன் இங்கு மதிய உணவிற்கு வர்றப்போ உனக்கு அவனை அறிமுகப்படுத்தி வைக்கிறேன். நான் அவனை வரச் சொல்லி இருக்கேன்...”

“நீங்க இந்த நண்பனைப் பற்றி ஒருமுறைகூட என்னிடம் சொன்னது இல்லையே!”- அவள் சொன்னாள்.

“இல்ல... சொன்னது இல்ல... அவன் இறந்து போயிட்டான்னு நினைத்ததால், நான் சொல்லாம இருந்துட்டேன். இப்போ என்னன்னா அவன் உயிருடன், திடகாத்திரமா இருக்கான்.”

“இந்த இடத்தின் சோர்வை மாற்றுகிற விஷயத்தில் அவன் நமக்கு உதவியாக இருப்பான்”- அவள் சொன்னாள்: “அவன் தன்னுடைய இந்தியாவிற்கு வெளியில் இருந்த வாழ்க்கையைப் பற்றி ஏதாவது கூறுவான்.”

“நீ அவனைக் காதலிக்க மாட்டேன்னு நான் நினைக்கிறேன்”- கணவன் சொன்னான்: “அவன் இளம் வயதில் பெண்களை ஈர்க்கக் கூடியவனாக இருந்தான். இப்போதும் பார்க்க அழகன்தான். உன்னைப் பார்த்தால் அவன் குழைவான் என்பதை மட்டும் என்னால உறுதியா சொல்ல முடியும். பஹரினில் இருக்கும் பெண்களைவிட நீ நாகரிகமானவன். அது மட்டும் உண்மை.”

3

வள் மகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டே அவனுடைய கையைப் பிடித்து அழுத்தினாள். அது வழக்கம்போல குளிர்ச்சியாக இருந்தது.

விஜயன் மதிய உணவிற்காக வந்தபோது, அவர்கள் பிரம்பு நாற்காலியில் அமர்ந்திருந்தார்கள். ஒரு நிமிட நேர வழக்கமான உபச்சார வார்த்தைகளை மறந்துவிட்டு அவன், “நான் மழையில மாட்டிக்கிட்டேன்” என்று சொன்னான். ஒரு நிமிடத்திற்கு முன்னால் பெய்த மழை அவனுடைய நீலநிற சஃபாரி சூட்டை நனைத்து விட்டிருந்தது. புதுமணத் தம்பதிகள் புதிய ஆடைகள் அணிந்து நடக்கும் புல் தரையில் சாரல் மழை விழுந்து தூசியைப் பரக்கச் செய்வதை அவன் பார்த்துக் கொண்டிருந்தான்.

“என் மனைவி ரோகிணி”- கணவன் மதிப்புடன் தன்னுடைய மனைவியை விருந்தாளிக்கு அறிமுகப்படுத்தி வைத்தான்.

“நாம இதற்கு முன்னால் பார்த்திருக்கிறோம்னு நான் நினைக்கிறேன்”- அவளுடைய கண்களைக் கூர்மையாகப் பார்த்தவாறு விஜயன் சொன்னான். அதைக் கேட்டு அவள் ஒரு மாதிரி ஆகிவிட்டாள். இப்படிப்பட்ட ஒரு மனிதனைப் பார்த்ததாக அவளுக்கு ஞாபகத்திலேயே இல்லை. உயரமான தோற்றத்தையும், அழகான உடலையும் கொண்டிருந்த அவன் தன் தலை முடியை நீளமாக வளர்த்திருந்தான். அவனுடைய ப்ரவுன் நிறத்தில் இருந்த கண்கள் அவனுடைய பரம்பரையைப் பற்றி சந்தேகங்களை உண்டாக்கின. அவனுடைய உடல் நல்ல வெள்ளை நிறத்தில் இருந்தது. இப்படிப்பட்ட ஒரு மனிதனை ஒருமுறை பார்த்திருந்தால், அவள் மறந்திருக்க மாட்டாள். தொடர்ந்து அவள் சிரித்தாள். அந்தச் சிரிப்பில் இருந்த நட்பின் வெப்பம் அவளுக்குப் பிடித்திருந்தது. அவளுக்கு நிம்மதியைத் தந்தது.

“இல்லை...” அவள் சொன்னாள்: “எனக்குத் தோணல.”

விஜயன் சாதாரணமாகச் சிரித்தான். “ஒருவேளை கடந்து போன வருடங்களில் நான் மிகவும் மாறி இருந்திருக்கலாம்”- அவன் சொன்னான்: “உங்களை போர்டிங்கில் வந்து நான் பார்த்த காலத்தில்...”

அவள் தன் கணவனைப் பார்த்தாள். அவன் அந்த மனிதன் கூறியதை நம்புவதைப் போல இருந்தது. “உங்களுக்கு தவறு நடந்திருக்கணும்”- அவள் தலையைக் குலுக்கிக் கொண்டு மெதுவான குரலில் சொன்னாள்: “நான் எந்த போர்டிங் பள்ளிக் கூடத்திலும் படித்தது இல்லை.”

அதற்குப் பிறகும் விஜயன் சிரித்தான். மரியாதையுடன் அவன் தலை வணங்கினான். “என் தவறாக இருக்கலாம் மேடம்”- அவன் சொன்னான்: “இருபது வருடங்களுக்கு முன்னால் எனக்கு ஒரு ரோகிணியை மிகவும் நெருக்கமாகத் தெரியும்.”

ஒரு தவறு காரணமாக மதிய உணவு அவளுக்கு மகிழ்ச்சியானதாக இல்லை. அவளுடைய கணவன் வந்திருந்த புதிய மனிதனை முழுமையாக நம்பி விட்டதைப் போல் இருந்தது. ஜன்னல் மீது சாய்ந்து நின்று கொண்டு, அந்த ஆண்கள் புகைப் பிடிப்பதை ரோகிணி பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். விஜயன் அவனுடைய பழைய நண்பனாகத் தெரியவில்லை. அவனுக்கு சதைப் பிடிப்புடன் கூடிய நீளமான கால்கள் இருந்தன. அவனுடைய ஆடைகளுக்குக் கீழே திரண்டு தெரிந்த சதைகளை அவள் பார்த்தாள். தனக்கு இருபது வயது இருக்கும்போது தன்னைத் திருமணம் செய்வதற்கு தன்னுடைய தடிமனான கணவன் வந்ததற்குப் பதிலாக இந்த மனிதன் ஏன் வரவில்லை என்று அவள் நினைத்தாள். அவனைப் போன்ற அழகான தோற்றத்தைக் கொண்டிருக்கும் அவனுடைய பிள்ளைகளைப் பெற்றெடுக்க அவள் விருப்பப்பட்டிருப்பாள். தன்னுடைய வயிற்றுக்குள் ஒரு சுகமான வலியை உண்டாக்கிய அந்த சிந்தனையை அவள் ஒரு தோள் குலுக்கல் மூலம் வீசி எறிந்தாள்.


இது வெறும் மிருகத்தனமான வெறியா? அவள் தனக்குத்தானே கேட்டுக் கொண்டாள். நல்ல திடகாத்திரமான உடலைக் கொண்டிருக்கும் ஒரு ஆணுக்கு முன்னால் தன்னுடைய மரத்துப்போன தன்மை திடீரென்று இல்லாமல் போய்விடுவதா? அப்படி இருக்கவே கூடாது. உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டும். போதாதற்கு, அவனைப் பார்க்கும்போது ஒரு பொறுக்கி மாதிரி இருக்கிறான். அவளை இருபது வருடங்களுக்கு முன்பே தெரியும் என்பது அவனே கற்பனை பண்ணி உண்டாக்கிய ஒன்று என்று அவள் உறுதியாக நம்பினாள். ஒருவேளை அவனுடைய ஆரம்ப அடி வைத்தல் என்பதாகக் கூட அது இருக்கலாம். தான் தெளிவான மனதுடன் நடந்து கொண்டோம் என்பதைக் குறித்து அவளுக்கு மகிழ்ச்சி உண்டானது. அது உண்மையாகவே மிகவும் இக்கட்டான ஒரு விஷயம்தான். அவனை அங்கு வரவழைத்துத் தன்னை அறிமுகப்படுத்தியதற்காக அவள் தன் கணவனைக் குறைப்பட்டாள். அவனுக்கு அந்த மனிதனுடன் பேச வேண்டுமென்றால், அவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து ஒரு ஹோட்டலுக்கோ வேறு எங்காவதோ போயிருக்கலாமே! வீட்டில் இருக்கும் பெண்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கக்கூடிய தரமான மனிதன் இல்லை அவன். இந்த விஷயத்தைப் பற்றித் தன் கணவனிடம் பேச வேண்டும் என்று அவள் முடிவெடுத்தாள். நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று தங்களைக் குறிப்பிட்டுக் கூறிக் கொள்ளும், நகர வாழ்க்கைக்கு முற்றிலும் பொருத்தமாக இல்லாதவர்களின் நகாரிகத்திற்கு எதிராக அவனுக்கு எச்சரிக்கை தர வேண்டியது அவசியமும் கூட என்று அவள் நினைத்தாள். அப்படிப்பட்டவர்கள் பெண்களைக் கூட்டிக் கொடுப்பவர்களும் வழிப்பறிச் செயலில் ஈடுபடக் கூடியவர்களுமாக இருப்பார்கள். தன்னுடைய மென்மையான, நிரபராதியுமான கணவனிடமிருந்து பணம் பறிக்க இந்த விஜயன் திட்டமிட்டிருக்கலாம். நிச்சயமாக பண விஷயமாக இல்லையென்றாலும், வேறு ஏதோ ஒன்றில் தரகராக அவன் இருக்க வேண்டும். அந்த மனிதனின் சிரிப்புச் சத்தம் அவள்மீது படர்ந்து வந்தது. அடிபட்டவளைப் போல அவள் கண்களைச் சுருக்கினாள். சூரிய ஒளி வந்திருந்த விருந்தாளியின் கன்னங்களை ஒளிரச் செய்தன. பொறுக்கி எவ்வளவு அழகாக இருக்கிறான்! கண்களை வேறு பக்கம் திருப்ப வேண்டும் என்று விரும்பிய அவள் நினைத்தாள்: ‘என்னைத் திரும்பவும் வீட்டுக்கு அழைச்சிட்டுப் போகும்படி கணவனைக் கட்டாயப்படுத்தணும்.’

மதியத்திற்குப் பிறகு சுசீந்திரத்திற்குப் போகலாம் என்று விஜயன்தான் சொன்னான். அவள் சொன்னாள்: “எனக்குத் தலை வலிக்குது.” அதைக்கேட்டு அவளுடைய கணவன் நிதானத்தை இழந்துவிட்டான். “நீ நாடகம் ஆடுறே!”- அவன் அவளுடைய கையைப் பிடித்துக் கொண்டு சொன்னான்: “உனக்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை. இன்னைக்குக் காலையிலதானே கோவிலுக்குப் போகலாம் என்று நீ சொன்னே? அதுதானே உண்மை? அப்படிப்பட்ட பயணத்திற்கு கூட வர்றதுக்கு சரியான ஆள் விஜயன்.”

கோவிலை அடைந்தபோது வயதான ஒரு வழிகாட்டி அவளுக்கு அருகில் வந்தார். “என் பெயர் பிள்ளை”- அவர் சொன்னார்: “நானும் ஒரு மலையாளிதான்.” அவர்கள் அந்த மனிதரைப் பின் தொடர்ந்து நடந்தார்கள். அவர் பெருமையாகக் கூற வேண்டியவற்றைப் புகழ்ந்து கூறினார். அவளுக்குச் சோர்வு உண்டானது. திரும்பவும் கெஸ்ட் ஹவுஸுக்குச் சென்று படுத்துத் தூங்க வேண்டும்போல் அவளுக்கு இருந்தது. மதிய தூக்கத்திற்கான நேரமாக அது இருந்தது. அது இல்லாமல் போனால், அவளுக்குக் கோபம் வந்துவிடும். ஒரு இருட்டான மூலையில் திரும்பியபோது, விஜயனின் கை அவளுடைய தொடையில் பட்டது. அவள் அதிர்ச்சியடைந்து நடுங்கினாள். அவன் தன்னைத் தொட முயற்சிக்கிறானோ? கண்களை மூடி, பின் பாகத்தை குலுக்கிக் கொண்டு, ஆண்களுக்கு வலை வீசிக் கொண்டு, நகரத் தெருக்களில் அலைந்து கொண்டிருக்கும் விலை குறைந்த சரக்குகளில் ஒன்றுதான் என்று அவன் நினைத்திருக்கிறானோ? – இப்படியெல்லாம் அவள் நினைத்தாள். “நான் திரும்பப் போகணும்”- அவள் உரத்த குரலில் சொன்னாள்: “நான் மிகவும் சோர்வாக இருக்கேன்.”

“உங்களுக்கு திடீர் திடீர்னு சோர்வு வரும். அப்படித்தானே?”- விஜயன் கேட்டான். அதைக் கேட்டு அவளுடைய கணவன் சிரித்தான். “விஜயா, உனக்குப் பெண்களைப் பற்றி தெரியாது. அவங்க என்னையும் உன்னையும் மாதிரி இல்ல...”

4

“அதெல்லாம் எனக்கும் தெரியும்”- அந்த மனிதன் சொன்னான்: “பெண்களைப் போல நம்மைப் போன்றவர்கள் இல்லை என்பதைக் கண்டுபிடிப்பதற்கான சந்தர்ப்பம் எனக்கு கிடைச்சிருக்கு.” தான் ஏதோ மிகப் பெரிய நகைச்சுவையைக் கூறிவிட்டோம் என்பது மாதிரி அவன் உரத்த குரலில் சிரித்தான். ரோகிணியின் கோபம் பல மடங்கு அதிகமானது. அவள் காரை நோக்கி நடந்தாள். “எனக்கு இந்த கோவில்கள் போதும்”- அவள் சொன்னாள்.

“நீங்க நகரத்தைச் சேர்ந்த பெண்ணைப் போலவே பேசுறீங்க!”- விஜயன் சொன்னான்: “எனக்கு இந்த சிலைகள் மீது நம்பிக்கை இல்லை. நாம ஏன் சதையும் எலும்பும் கொண்ட தேவர்களாகவும் தேவிகளாகவும் ஆகக் கூடாது? ஒரு மாறுதலுக்காகவாவது அப்படிப்பட்ட ஒரு தேவி எனக்கு இருந்தாள் என்றால், என்ன கேட்க வேண்டும் என்று எனக்குத் தெரியாது. அந்த அளவிற்கு வாழ்க்கையில் எனக்கு சந்தோஷம் இருக்கும்.”

“நீ எவ்வளவு சீக்கிரமா முடியுமோ, அவ்வளவு சீக்கிரமா நீ திருமணம் செய்துக்கணும்”- ரோகிணியின் கணவன் சொன்னான்: “ஒருவேளை உனக்குப் பொருத்தமான ஒரு ஜோடியை என் மனைவியே தேர்ந்தெடுக்கலாம்.”

“அது கொடுமையான ஒரு செயலாக இருக்கும்”- அவளுடைய கண்களை உற்றுப் பார்த்துக் கொண்டே விஜயன் சொன்னான். அவள் வேகமாக காருக்குள் ஏறினாள்.

“ஏறு”- அவளுக்கு அடுத்து உட்காரும்படி விஜயனை அழைத்தவாறு அவளுடைய கணவன் சொன்னான். அவள் கணவனுக்கும் புதிய அறிமுகமில்லாத மனிதனுக்கும் நடுவில் நசுங்கிப்போய் உட்கார்ந்திருந்தாள். கார் வளைவில் திரும்பும் போதெல்லாம் அவன் அவளுடைய மார்பகத்தை நோக்கிச் சாய்ந்தான். தன் கணவனுக்கு என்ன ஆகிவிட்டது என்று அவள் தன்னைத்தானே கேட்டுக்கொண்டாள். அவன் நடப்பவை எதையும் பார்க்கவே இல்லையா? அந்த மனிதன் தன்னை பலாத்காரம் செய்ய முயல்கிறான். நாற்பதாவது வயதில்... காருக்குள் வைத்து... பல வண்ணங்களில் ஆடைகள் அணிந்திருக்கும் ஒரு பொறுக்கி மனிதனால் முரட்டுத்தனமாக கை வைக்கப்படுவது என்பது... அவள் அமைதியாகத் தன் விதியை நொந்து கொண்டாள். அன்று சாயங்காலம் உணவு எதுவும் சாப்பிடாமல் அவள் எடுத்து விட்டாள். உள்ளே நுழைவதற்கு முன்னால் அவள் இருவருக்கும் குட் நைட் சொன்னாள். அவர்கள் அப்போதும் விஸ்கியும் சோடாவுமாக அமர்ந்திருந்தார்கள்.

அந்த இருட்டு வேளையில், இதற்கு முன்னால் அறிமுகமாகியிராத இரண்டு கைகளால் உறக்கத்திலிருந்து தட்டி எழுப்பப்பட்ட அவள் உரத்த குரலில் கத்தினாள்: “நீங்க யாரு? நீங்க இந்த நேரத்தில் என் படுக்கையறையில் என்ன செய்றீங்க?”


“கவலைப்படாதே. நான்தான்... விஜயன்... நான் உன்னை வேதனைப்பட விடமாட்டேன். எனக்கு நீ தேவை என்பதைவிட நான் உனக்குத் தேவைன்றதுதான் உண்மை.”

“என்னை விட்டுட்டுப் போங்க.”- அவள் கோபத்துடன் கத்தினாள்: “நான் சத்தம் போட்டு என் கணவனைக் கூப்பிடுவேன்.”

“நீ கூப்பிட்டால் அவனுடைய காதுகளில் விழாது”- மது வாசனை அடித்துக் கொண்டிருந்த மனிதன் சொன்னான்: “அவன் வெளியே இருக்கும் அறையில் படுக்கையில் இறந்ததைப் போல உறங்கிக்கிட்டு இருக்கான்.”

“என்னை விடுங்க...”- அவள் அழுதாள். “நீங்க என்னைத் தொட நான் அனுமதிக்க மாட்டேன். நீங்க என்னை ஏதாவது செய்தால், நான் அவமானம் தாங்க முடியாம இறந்திடுவேன். நான் போய் கடல்ல குதிச்சிடுவேன்.”

“உனக்கு வலிப்பு நோய் இருக்கு ரோகிணி” என்று சொல்லியவாறு அவன் அவளுடைய கழுத்தில் முத்தமிட்டான். “உனக்கு எப்போதும் வலிப்பு நோய் இருந்தது. நாம இருபது வருடங்களுக்கு முன்னால் சுற்றுலா போயிருந்தப்போ நான் வேறொரு பெண்ணைப் பார்த்ததற்கு நீ பண்ணிய ஆர்ப்பாட்டங்கள் இப்போ ஞாபகத்துல இருக்கா?”- அவன் கேட்டான்.

“எனக்கு அப்படிப்பட்ட ஒரு சுற்றுலாவே ஞாபகத்தில் இல்லை”- அவள் சொன்னாள்: “நான் உங்களை இன்னைக்குத் தவிர, என் வாழ்க்கையில் முன்பு எப்போதும் பார்த்ததே இல்லை.”

“உனக்கு ஒரு நரம்பு நோய் வந்திருந்தது ரோகிணி”- அவளுடைய ஆடையின் பொத்தான்களை அவிழ்த்தவாறு அவன் சொன்னான்:  “கர்ப்பத்தைக் கலைச்ச பிறகு நீ எந்தச் சமயத்திலும் பழைய நீயா ஆனதே இல்லை. உனக்கு சய உணர்வை வரவழைப்பதற்காக நான் எவ்வளவு மாதங்கள் சிரமப்பட்டேன் என்பது தெரியுமா? நாம இரண்டு பேர் மட்டும் ஊட்டிக்குப் போயிருந்த கோடை காலத்தை நீ மறந்துட்டியா? நான் உன்னை மலை உச்சிக்கு அழைச்சிட்டுப் போனேன். நீ ஒரு சிறு குழந்தையைப் போல அழுதே... உனக்கு அது ஞாபகத்துல இல்லையா?”

நினைத்தாளா இல்லையா என்பது அவளுக்குப் பிரச்சினையே அல்ல. அவன் அவளிடம் ஆரம்பித்து வைத்தது அவளுடைய வாழ்க்கையிலேயே மிகுந்த சந்தோஷத்தைத் தரக்கூடிய அனுபவமாக இருந்தது. தான் உருகிக் கொண்டிருப்பதைப் போல அவளுக்கு இருந்தது. அவளுக்குள் மிகவும் இறுகிப் போயிருந்த பகுதிகூட உருகிக் கொண்டிருந்தது. தொடர்ந்து அவளிடம் அவனைத் தவிர வேறு எதுவும் மீதமில்லை என்ற நிலை உண்டானது. ப்ரவுன் நிறத்தைக் கொண்ட புள்ளி விழுந்த கண்களின் சொந்தக்காரனான அவன் மட்டுமே எஞ்சி நின்றான். “நான் உன்னைக் காதலிக்கிறேன்”- அவள் சொன்னாள்: “ஓ கடவுளே! நான் உன்னைக் காதலிக்கிறேன்.”

அவன் ஆடைகளை அணிவதற்காக எழுந்தபோது அவள் சொன்னாள்: “என் கணவர் ஆழமான தூக்கத்தில் இருப்பது குறித்து எனக்கு மகிழ்ச்சியே. எழுந்து வந்து நாம ஒன்றாகப் படுத்திருப்பதைப் பார்த்தால், அவர் என்ன செய்வார்னே எனக்கு தெரியாது.”

அதைக் கேட்டு விஜயன் சிரித்தான். அது கிண்டலான ஒரு சிரிப்பாக இருந்தது. “நான் உன்னுடன் இருக்கிறேன் என்பது அவனுக்கு ஏற்கெனவே தெரியும்”- அவன் சொன்னான்: “உண்மையைச் சொல்வதாக இருந்தால், அவன்தான் என்னை உன் படுக்கைக்கே அனுப்பி வச்சான்.”

“என்னால அதை நம்ப முடியல”- அவள் சொன்னாள். போர்வைக்கு அடியில் தான் நடுங்குவதை அவளால் உணர முடிந்தது. “தன் தாய்க்கு ஒரு பேரக் குழந்தையைத் தர வேண்டுமென்று அவர் ஆசைப்படுகிறார் என்று எனக்குத் தெரியும். ஆனால் இன்னொரு மனிதனின் குழந்தை தன்னுடைய குழந்தையாக வளர்வதை அவர் விரும்பமாட்டார். அவருக்குத் தன்னுடைய ரத்தத்தைக் குறித்து உயர்ந்த மதிப்பு இருக்கு. அவருடைய பாழாய்ப்போன, சக்தி இல்லாத ரத்தத்தைக் குறித்து...”

“குழந்தை விஷயத்தை யார் சொன்னது?”- விஜயன் கேட்டான். அவன் பெல்ட்டின் பக்கில்களை இட்டு முடித்திருந்தான். பாக்கெட்டில் எதையோ அவன் தேடுவதைப்போல் இருந்தது. சிகரெட்டாக இருக்குமோ? எழுந்து தீக்குச்சியை உரசி, அந்த ஜூவாலையைத் தன் உள்ளங்கைகளால் மூடி, அவனுக்கு அதைப் பற்றச் செய்து தர வேண்டும் என்று அப்போது அவளுக்கு விருப்பம் உண்டானது. அவனுக்குச் சொந்தமானவளாக ஆக வேண்டும் என்று அவள் ஆசைப்பட்டாள். அவனுடைய மனைவி... அவனுடைய குழந்தைகளின் தாய்...

“நாம என்ன செய்யப் போறோம்?”- அவள் கேட்டாள்.

“நான் என்ன செய்யணும்னு எனக்குத் தெரியும்”- அவளுடைய உதடுகளில் முத்தமிட குனிந்தவாறு விஜயன் சொன்னான்: “எதைச் செய்வதற்காக எனக்குப் பணம் கிடைத்தது என்று எனக்குத் தெரியும்.”

அந்த முத்தத்தின் போதையில் அவளுடைய தலை சுற்றியது. அவள் மெதுவாக முனகினாள். “எதைச் செய்வதற்காக உனக்கு பணம் தரப்பட்டிருக்கிறது கூலி வேலைக்காரனே?”- அவள் கேட்டாள். அடுத்த ஒன்றோ இரண்டோ நிமிடங்களுக்குள் அவனுடைய கைகள் அவளுடைய கழுத்தைச் சுற்றுவதாகவும், அவளுடைய உயிரை இறுக்கி பிழிவதைப் போலவும், நிரந்தரமான இருளை அவளுக்கு விடுதலையாகத் தருவதாகவும் அவள் உணர்ந்தாள்.

இறுதியில் அந்த இருட்டு, அதன் பயங்கரமான வாயைத் திறந்து அவளை விழுங்கியது.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.