Logo

சபதம்

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 5965
sabhatham

ச்சிற திருவிழாவிற்குச் சென்றிருந்தபோது நாணி ஒரு அண்டாவை வாங்கினாள். நான்கரை ரூபாய் விலை கூறப்பட்ட அண்டாவை மூன்றே முக்கால் ரூபாய் தந்து அவள் விலைக்கு வாங்கினாள். சிறு பிள்ளைகளுக்குக் கொடுப்பதற்காக கொஞ்சம் பேரீச்சம் பழங்களையும், ஐந்தாறு முறுக்குகளையும் வாங்கி அண்டாவிற்குள் போட்டாள். முறம் ஒன்றை வாங்கி அண்டாவிற்கு மேலே வைத்தாள். தொடர்ந்து அண்டாவை எடுத்துத் தலையில் வைத்துக் கொண்டு, பெருமை தாண்டவமாட மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியவாறு மனதில் கற்பனை பண்ணிக் கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தாள்.

நாணியின் வீட்டின் கிழக்குப் பக்கத்தில் கல்யாணி கயிறு திரித்துக் கொண்டு நின்றிருந்தாள். நாணி கல்யாணியைப் பார்த்தாள். ஆனால், பார்த்ததைப் போல காட்டிக் கொள்ளவில்லை. கடைக் கண்களால் பார்த்தாள்- அவளுடைய தலையில் இருந்த அண்டாவை கல்யாணி பார்த்தாளா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மட்டுமே. கல்யாணி அண்டாவையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். நாணி சற்று நெளிந்து கொண்டே மேலும் சிறிது வேகமாக நடந்தாள்.

"அண்டாவை ஓச்சிறயிலயா வாங்கினேடீ?'' கல்யாணி கேட்டாள்.

"ஆமாம்...'' நாணி திரும்பி நிற்காமலே கூறிவிட்டுத் தன் நடையைத் தொடர்ந்தாள்.

"அதன் விலை என்னடி?''

"சும்மா கிடைச்சது.'' நாணி அலட்சியமான குரலில் கூறினாள்.

கல்யாணி கேட்டாள்: "சும்மா கிடைக்கிறதுக்கு உன் அப்பனா அங்கே வியாபாரம்  பண்ணிக்கிட்டு இருக்காரு?''

நாணி திரும்பி நின்றாள்: "ஃபு.......! உன் அப்பன்தான்டி அங்கே இருக்காரு.''

கல்யாணிக்கு கோபம் அதிகரித்தது: "பு....! என் அப்பாவைப் பற்றி சொல்றதுக்கு நீ யாருடி? ஒரு அண்டா வாங்கி விட்டோம்கறதுக்காக உனக்கு என்னடி இந்த அளவுக்கு கொழுப்பு!''

நாணி கோபத்துடன் நின்றாள். "நான் ஒரு அண்டாவை வாங்கினதுக்காக உனக்கு ஏன்டி இந்த அளவுக்குப் பொறாமை?''

"எனக்கு பொறாமை எதுவும் இல்லைடி... உன் அண்டா என் நாய்க்கு கூட தேவையில்லை...''

"அப்படி இல்லைன்னா இங்கே வா... தர்றேன்...''

"ஒரு அண்டாவை வாங்கணும்னு நான் நினைச்சாலும் நடக்கும்டீ...''

"நீயும் உன் வீட்டுக்காரனும் நினைச்சாக்கூட நடக்காதுடீ...''

"ஃபு...'' கல்யாணி கயிறைக் கீழே வைத்துவிட்டு ஐந்தாறு அடிகள் முன்னால் வந்தாள். "என் வீட்டுக்காரரைப் பற்றி பேசினால் உன்னோட...''

"சொன்னா நீ எதை எடுப்பேடீ?'' நாணியும் ஐந்தாறு அடிகள் முன்னால் வந்தாள்.

"எதை எடுப்பேன்னு பார்க்கணுமாடீ? அந்த ஆளு இங்கே இருக்குறப்போ சொல்ல முடியுமா?''

"அவனும் அவனோட அப்பனும் இருந்தாக்கூட நான் சொல்வேன்டீ...''

"வாய்ல பற்கள் இருக்காது.''

"புல்லே! அதை நீயே வச்சுக்கடீ...''

கல்யாணி தோற்றுப் போய் விட்டாள். அவள் சொன்னாள்: "நான் நினைச்சால், ஒரு அண்டாவை வாங்க முடியுமா முடியாதான்னு காட்டுறேன்.''

"முடியாதுடீ... இதோட விலை அஞ்சு ரூபாயாக்கும்....''

"போடீ... அஞ்சு ரூபாய்னு கேட்டால் நான் என்ன பயந்து போயிடுவேனா?''

"அப்படின்னா ஒரு அண்டாவை வாங்கிக் காட்டுடீ. நீ பிறந்ததிலிருந்து அஞ்சு ரூபாவைப் பார்த்திருக்கியாடீ?''

"சரிடீ... நீ பார்த்திருக்கியா?''

"நான் பார்த்திருக்கேன்டீ... நீ அண்டாவை வாங்குற அன்னைக்கு உனக்கு முன்னால, நான் ஒரு ஆணாக வந்து நிக்கிறேன்.'' இவ்வாறு கூறிவிட்டு நாணி திரும்பி நடந்தாள்.

அதற்குப் பிறகு கல்யாணி எதுவும் பேசவில்லை. அவளுடைய தன்மானம் காயப்பட்டுவிட்டது. அவள் நினைத்தால் ஒரு அண்டாவை வாங்க முடியாதாம்...? அவள் பிறந்ததிலிருந்து ஐந்து ரூபாயைப் பார்த்ததே இல்லையாம்...! அவளுடைய கண்கள் நிறைந்து விட்டன.

அவளுடைய சிறிய மகன்- குட்டப்பன்- தூக்கம் கலைந்து உரத்த குரலில் அழுதான். அவள் ஓடிச் சென்று அவனைத் தூக்கிக் கொண்டு வந்து வாசலில் உட்கார்ந்து பால் கொடுத்தாள்.

கோபாலன்- கல்யாணியின் கணவன் கைலியை அணிந்து, வலை போட்ட பனியன் அணிந்து, தலையில் துண்டைக் கட்டிக் கொண்டு தேநீர் குடித்து முடித்து, பீடியைப் புகைத்துக் கொண்டே வந்து கொண்டிருந்தான். அவன் இலங்கையிலிருக்கும் ஒரு தோட்டத்தில் கூலி வேலை செய்து கொண்டிருந்தான். வேலையை விட்டெறிந்து விட்டு, கிராமத்திற்கு வந்து இப்போது இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன.

கோபாலன் இலங்கையிலிருந்து சட்டையுடனும் கோட்டுடனும் குடையுடனும் வந்தான். ஒரு தகர பெட்டியும் அதில் இரண்டு மூன்று வேட்டிகளும் இரண்டு சட்டைகளும் நான்கு பனியன்களும் மூன்று வினோலியா சோப்புக் கட்டிகளும் ஒரு சென்ட் குப்பியும் சீப்பும் கண்ணாடியும் இருந்தன. இலங்கையில் தான் வெள்ளைக்காரரின் "ரைட் ஹேண்ட்"டாக இருந்ததாக கோபாலன் கிராமத்திற்கு வந்தபிறகு எல்லாரிடமும் கூறினான். கிராமத்திற்கு வந்தபிறகு சட்டையும் கோட்டையும் அணிந்து, தலை முடியை வாரி, சென்ட் தேய்த்து ஒவ்வொரு வீடாகச் சென்று இலங்கை விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பதுதான் அவனுடைய முக்கிய வேலையாக இருந்தது. அப்படிப் பேசித் திரிந்து கொண்டிருந்ததற்கு மத்தியில் அவன் பல இளம் பெண்களையும் நோக்கி காதல் வலையை வீசிக் கொண்டிருந்தான். பல இளம் பெண்களும் அந்த வலையில் சிக்கினார்கள் என்பதாகக் காட்டிக் கொண்டு, அந்த விஷயத்தை இதற்கிடையே சம்பாதித்த நண்பர்களிடம் கூறிக் கொண்டிருந்தான். அப்படிக் கூறிக் கூறி ஒரு இளம் பெண்ணின் சகோதரன் கோபாலனின் கன்னத்தில் ஒரு அடி கொடுத்த பிறகுதான் அப்படிப் பேசிக் கொண்டிருந்தது நின்றது. இறுதியாக கல்யாணியிடம் ஈடுபாடு உண்டானதால், அவன் அவளிடம் சேர்ந்தான். திருமணமும் நடந்தது. இலங்கையில் இருந்தபோது கிடைத்த அன்றாட சம்பளத்திலிருந்து சேர்த்து வைத்திருந்த பணத்திலிருந்து பயணச் செலவு போக மீதமாக இருந்த நாற்பத்து மூன்று ரூபாய் அந்தச் சமயத்தில் செலவாகிவிட்டது.

அதற்குப் பிறகு, இலங்கையிலிருக்கும் ஒரு வங்கியில் பணம் போட்டு வைத்திருப்பதாகவும், அதை வெகுவிரைவில் அனுப்பி வைப்பார்கள் என்றும் கூறி, கல்யாணியின் தாய்க்கு ஒரு சீட்டு கிடைத்த வகையில் யாருக்கும் தெரியாமல் வைத்திருந்த இருபது ரூபாய்களை அவன் கடனாக வாங்கினான். அதுவும் செலவாகிவிட்டது. கல்யாணி கர்ப்பவதியாகவும் ஆனாள்.

பிரசவத்தின்போது அவளுடைய தாயும் தந்தையும் சேர்ந்து செலவு செய்தார்கள். இலங்கையிலிருந்து பணம் வரும் என்ற எதிர்பார்ப்பில் அவர்கள் கோபாலனுக்கு இரண்டு வேளைகள் சோறு தந்து கொண்டிருந்தார்கள்.

இலங்கையிலிருந்து பணம் வரும் என்று எதிர்பார்த்து எதிர்ப்பார்த்து மனதில் கவலைப்பட்டார்கள். கல்யாணியின் தாய் மற்றும் தந்தையின் கையில் இருந்த பணம் முழுவதும் தீர்ந்து முடிந்தது. வீட்டில் பட்டினி உண்டாக ஆரம்பித்தது. அதைத் தொடர்ந்து இங்குமங்குமாக சில "முணுமுணுப்புகளும்" உண்டாக ஆரம்பித்தன. அது  முதிர்ந்து சண்டையாக மாறியது.


இறுதியில் கோபாலன் கல்யாணியையும் சிறிய மகனையும் அழைத்துக் கொண்டு நாணியின் வீட்டின் கிழக்குப் பகுதியில் தாறுமாறாகக் கிடந்த ஒரு இடத்தைச் சீர்செய்து, அதில் வந்து வசித்துக் கொண்டிருக்கிறான்.

கல்யாணி தென்னை மட்டையை உரித்தும் கயிறு திரித்தும் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தாள். காலையில் கோபாலன் எழுந்து செல்வான். நண்பர்களிடம் யாசித்தோ பிடுங்கியோ தேநீர் குடிப்பதையும் பீடி புகைப்பதையும் நிறைவேற்றிக் கொள்வான். அது எதுவுமே நடக்கவில்லையென்றால், கல்யாணியிடம் சண்டை போட்டு, அவள் கயிறு திரித்துச் சம்பாதித்த பணத்திலிருந்து அரை சக்கரத்தையோ (பழைய திருவாங்கூர் நாணயம்) ஒரு சக்கரத்தையோ பிடுங்கிக் கொண்டு செல்வான்.

அன்று காலையில் கல்யாணி தந்த ஒரு சக்கரத்தை எடுத்துக் கொண்டு போய், தேநீர் பருகுவதும் தமாஷாகப் பேசிக் கொண்டிருப்பதும் முடிந்து வந்து கொண்டிருந்தான்.

"ஏதாவது இருக்காடீ?'' கோபாலன் கேட்டான்.

"ஆமாம்... இருக்கு. கறியும் சோறும்...'' அவள் தடுத்து நிறுத்தி வைத்திருந்த கோபமும் கவலையும் இப்படி உடைத்துக் கொண்டு வெளியே வர ஆரம்பித்தன.

கோபாலன் அருகில் சென்றான். "நீ ஏன் அழறே?'

"என் மனசுல இருக்கிறதை... யார் கேக்குறது?'' அவளுடைய கோபம் அதிகமானது. "காலையில இருந்த ஒரு காசையும் கொண்டு போய் கொடுத்து தேநீரையும் பலகாரத்தையும் சாப்பிட்டுட்டு வந்திருக்கீங்க... ஏதாவது இருக்கான்னு கேட்டுக் கொண்டு...''

"நீ என்னடி இந்த அளவுக்கு கோபப்படுறே?'' கோபாலனுக்கும் கோபம் வந்தது.

கல்யாணி வெறுப்பு மேலோங்க கூறினாள்: "இல்லை... கோபப்படவில்லை... கொஞ்சறேன்... கொஞ்சணும்தான் தோணுது''.

"அடியே... நீ உன் நாக்கை அடக்கி வச்சிக்கிறது நல்லது. இல்லாவிட்டால் உன் தலையை நான் உடைச்சிடுவேன்.''

கல்யாணி கோபத்தால் துடித்தாள். "என்னோட.... அந்த... நான் ஏதாவது சொல்லிடப் போறேன்.''

"என்னடி... நீ சொல்லப்போறே? எங்கே... சொல்லு...'' கோபாலன் கையை உயர்த்திக் கொண்டு நெருங்கினான்.

கல்யாணி அமர்ந்திருந்த இடத்தைவிட்டு அசையவே இல்லை. "ம்... என்ன செய்றீங்கன்னு பார்க்குறேன்.''

கோபாலன் கையை ஆட்டியவாறு சொன்னான்: "ஒண்ணு கொடுத்தேன்னு வச்சுக்கோ... உன் கதை முடிஞ்சிடும்.''

"ம்... கதையை முடிப்பீங்க. அதற்கு வளர்த்து வச்சிருக்கணும். நான் தேங்காய் மட்டையை உரிச்சும் கயிறு திரித்தும் கஞ்சி குடிச்சிக்கிட்டு இருக்கேன்.''

"சரிடீ... உனக்கு நான் பாடம் கத்துத் தர்றேன்.'' இவ்வாறு கூறிவிட்டு கோபாலன் திரும்பி நடந்தான்.

"ம்... சரி போங்க. படிக்கிறது யாருன்னு...'' கல்யாணி உரத்த குரலில் சொன்னாள்.

கோபாலன் படிகளைக் கடந்து நடந்தான். கல்யாணி எழுந்து குழந்தையை திண்ணையில் ஒரு கிழிந்த பாயில் படுக்க வைத்து விட்டு கயிறு திரிக்க ஆரம்பித்தாள்.

"இங்கே என்ன சண்டை?'' தெற்குப் பக்க வீட்டிலிருக்கும் மாதவி சண்டையைப் பற்றித் தெரிந்து கொள்வதற்காக வந்திருந்தாள்.

"இங்கே ஒரு காசு இருந்தால், காலையில தேநீர் குடிக்கிறதுக்காக போனாருடி, மாதவி. இப்போ வந்து ஏதாவது இருக்கான்னு கேக்குறாரு. எனக்கு என்னோட நாக்கு அரிக்க ஆரம்பிச்சிருச்சு. இங்கே எப்படி வாழ்ந்து கொண்டிருக்கேன்னு உனக்குத் தெரியாதா? நான் ஒரு வேலை செய்துதான்டி மூணு பேரோட வயித்தையும் காப்பாத்திக்கிட்டு இருக்கேன்? ஆடையையும் சோப்பையும் சென்ட்டையும் பார்த்து கல்யாணம் பண்ணிக்கிட்டேன். இப்போ அணியிறதுக்கு ஆடை இல்லை. திங்கிறதுக்கு இல்லை. நீ என்னை கொஞ்சம் பாரு. நான் இப்படியா இருந்தேன்?'' கல்யாணியின் கண்கள் நிறைந்தன.

மாதவி இரக்கம் கலந்த குரலில் சொன்னாள்: "அப்போ எப்படி இருந்தீங்க, கல்யாணி அக்கா? நாழி அரிசி உலையில போட்டா முழுப்படி அரிசியை வடிச்சு எடுப்பீங்களே! எங்க சின்ன அண்ணன் அப்பவே சொல்வாரு... அவரோட பகட்டுத்தனங்களைப் பார்த்து பெண்ணைக் கல்யாணம் பண்ணிக் கொடுக்கக் கூடாதுன்னு.''

"புளிமூட்டுல இருந்து அவர் கல்யாணத்துக்குப் பெண் கேட்டு வந்தாரு. என் கெட்ட நேரத்தால, நான் அதை வேண்டாம்னு சொல்லிட்டேன். அதற்குப் பிறகுதானே அவர், நொண்டி கொச்சி முத்துவின் மகளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாரு? அவர் இப்போ அவளை கீழேயோ மேலேயோ வைக்காமல், கூடவே வச்சிக்கிட்டு இருக்காரு. சமீபத்துல ஒருநாள் அவள் ஆடை உடுத்தி நடந்து போறதைப் பார்த்தப்போ என் நெஞ்சே எரிஞ்சு போயிருச்சு.''

"அவர் நல்ல வசதியானவர். அவங்க இப்போ நல்லா சந்தோஷமா இருக்காங்க.''

"இதெல்லாம் என் தலைவிதிடீ.'' கல்யாணி ஒரு நீண்ட பெருமூச்சை விட்டாள். "ஓச்சிற திருவிழா ஆரம்பிச்சு இப்போ பத்து, பன்னிரெண்டு நாட்கள் ஆயிருச்சுல்ல! எனக்கு ஒரு தடவை அங்கே போக முடிஞ்சதா? எல்லா நாட்களும் நான் போகக் கூடியவள்.''

"பிறகு ஏன் போகல?''

"எப்படிடீ போக முடியும்? உடுத்திட்டுப் போறதுக்கு ஒரு துணி இருக்குதா? நெய் விளக்கு ஏத்துறதுக்கு ஒரு சக்கரம் வேண்டாமா? பிள்ளைக்கு உடம்புக்கு சரி இல்லாம ஆனப்போ, ஒரு கால் வாங்கி வைக்கிறேன்னு நேர்ந்துக்கிட்டேன். அதற்கு ஒரு சக்கரம் வேண்டாமா? பிறகு கையில இரண்டு சக்கரங்கள் இருக்க வேண்டாமாடீ?''

"அது உண்மைதான். போன சனிக்கிழமை நாங்கள் போய் சாமான்கள் வாங்கிட்டு வந்தது... எல்லாத்தையும் சேர்த்து ரெண்டு ரெண்டரை வந்திருச்சு.''

"நீங்க வசதி உள்ளவங்கடி... நான் என்ன அப்படியா? என் தலைவிதி இது. என்னை மாதிரி இருக்குற பெண்கள் ஓச்சிறயில் இருந்து பொருட்களை வாங்கிக் கொண்டு திரும்பி வருவதைப் பார்க்குறப்போ அழுகை வரும். இன்னைக்கு நான் இதேமாதிரி இங்கே கயிறைத் திரித்துக் கொண்டு நின்னிருக்குறப்போ, மேற்குப் பக்க வீட்டிலிருக்கும் அவள் ஒரு அண்டாவை வாங்கிக்கிட்டு வந்தா. அண்டா விலை எவ்வளவுடின்னு நான் கேட்டேன். அவள் என் தந்தையைப் பற்றியும் தாயைப் பற்றியும் வாய்க்கு வந்தபடி பேசிக்கிட்டு நடந்து போறா. ஒரு அண்டா வாங்கின நிமிடத்திலிருந்தே அவளுக்கு கீழே மேலே எதுவுமே தெரியலடி...''

மாதவி அதை ஏற்றுக் கொண்டு சொன்னாள்: "எப்படி இருந்தாலும், அவள் ஒரு திமிர் பிடிச்சவதான். சமீபத்தில் நான் போய் அந்த சீனாச்சட்டியைக் கொஞ்சம் கேட்டேன். இப்போ தர்றதுக்கு விருப்பம் இல்லைன்னு சொல்லிட்டா. இந்த திமிர்த்தனமும் தலைக்கனமும் எப்போ உண்டானதுன்னு நமக்கென்ன தெரியாதா?''

"பிறகு... நமக்குத் தெரியாதா? மூலையில உட்கார்ந்து கொண்டிருந்தவ... இப்போ அவள் ஒரு பழக்காரி! ம்... ஓச்சிற கடவுள்னு ஒருத்தர் இருந்தால், நானும் ஒரு அண்டாவை வாங்குவேன்.''

மாதவியை அவளுடைய தாய் அழைத்தாள். அவள் ஓடிச் சென்றாள்.

அடுத்த வருடம் ஓச்சிற திருவிழாவிற்குச் செல்லும்போது அண்டா ஒன்றை வாங்கியே ஆக வேண்டுமென்று கல்யாணி தீர்மானித்தாள்.


அதற்குத் தேவையான பணத்தைத் தயார் பண்ணக் கூடிய வழியைப் பற்றியும் அவள் சிந்தித்து முடிவெடுத்தாள்.

அன்று முதல் அவள் கயிறு விற்கும் காசில் இருந்து அரைச் சக்கரம் வீதம் எடுத்து அடுப்புக் கல்லுக்குக் கீழே மறைத்து வைத்தாள். அந்த வகையில் ஒரே வாரத்தில் மூன்றரை சக்கரத்தைச் சேமித்து வைக்க முடிந்தது.

ஊமை வேலுவின் வீட்டில் கோழிக் குஞ்சுகளை விற்பதாக இருக்கிறது என்ற செய்தியை அவள் அறிந்தாள். ஒரு கோழிக் குஞ்சுக்கு இரண்டரை சக்கரம் விலை கூறப்பட்டது. கல்யாணி அடுப்புக் கல்லுக்கு அடியிலிருந்து இரண்டரை சக்கரத்தை எடுத்துக் கொண்டு போய் கொடுத்து ஒரு கோழிக் குஞ்சை வாங்கினாள்- ஒரு கறுத்த பெட்டைக் குஞ்சு.

அன்று சாயங்காலம் கோபாலன் வந்தபோது கோழிக் குஞ்சைப் பார்த்தான். "கோழிக் குஞ்சை வாங்குவதற்கு எங்கேயிருந்துடி சக்கரம் கிடைச்சது?''

"வழியில சக்கரம் கிடந்து நான் பொறுக்கி எடுத்தேன்.''

"அப்படின்னா எனக்கும் கொஞ்சம் சக்கரம் தா.''

"போய் பொறுக்கி எடுத்துக்கோங்க.''

கோழிக் குஞ்சை மிகவும் கவனம் செலுத்திப் பார்த்துக் கொள்வது- அது கல்யாணியின் மிக முக்கியமான வேலையாக இருந்தது. அரிசி வாங்கிக் கொண்டு வந்தால், அதில் ஒரு பகுதியைக் கோழிக் குஞ்சுக்கு கொடுப்பாள். அரிசி வெந்தால், முதலில் பரிமாறுவது கோழிக் குஞ்சுக்குத்தான். சிறு சிறு பூச்சிகளைப் பிடித்து தின்பதற்காக அவள் குப்பையைக் கிளறிக் கொடுப்பாள். காகமும் பருந்தும் வந்து தூக்கிக் கொண்டு போய்விடாமல் அவள் எப்போதும் பத்திரமாக பார்த்துக் கொள்வாள். கோழிக் குஞ்சு கண்களின் பார்வையிலிருந்து மறைந்து போய் விட்டால், அவள் உரத்த குரலில் கூப்பிடுவாள்: "பா... பா... பப்பப்ப...''

வாசலில் சிறு சிறு பூச்சிகளைக் கொத்தித் தின்று கொண்டிருக்கும் கோழிக் குஞ்சைப் பார்த்துக் கொண்டே அவள் தனக்குத்தானே கூறிக் கொள்வாள்! "ம்... நான் அண்டாவை வாங்குற அன்னைக்கு அவள் எனக்கு முன்னால் ஒரு ஆணாக வந்து நிற்பேன் என்று கூறியிருக்கிறாள் அல்லவா? அவள் ஆணாக ஆவதை நான் கொஞ்சம் பார்க்கணும்."

ஒருநாள் இரவு உணவு சாப்பிட்டு முடித்து எல்லாரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். குட்டப்பன் நடுவிலும், கல்யாணியும் கோபாலனும் இரு பக்கங்களிலும். பாதி இரவு தாண்டியது. நல்ல உறக்கம்.

"குழ... குழ...'' என்று அழைத்தவாறு கல்யாணி வேகமாக எழுந்தாள்.

"என்னடி? என்னடி?'' கோபாலனும் பதைபதைப்புடன் எழுந்தான்.

"அய்யோ! என் கோழிக் குஞ்சை பருந்து கொண்டு போயிருச்சே!'' கல்யாணி உரத்த குரலில் கத்தினாள்.

"பருந்தா? நீ என்னடீ சொல்றே! இரவு நேரத்துலயாடீ பருந்து வரும்?''

அதற்குப் பிறகு கல்யாணி எதுவும் கூறவில்லை. அவள் கனவு கண்டிருக்கிறாள்.

கோபாலனுக்குக் கோபம் வந்து விட்டது. "பயமுறுத்திட்டியே! ச்சே... கோழிக் குஞ்சு வளர்க்குற ஒருத்தி! நான் எல்லாத்தையும் கொன்று ஒரு வழி பண்றேன்.''

கோழிக் குஞ்சு படிப்படியாக வளர்ந்தது. வளர்ந்து முட்டையும் போட்டது. முதல் முட்டை- கல்யாணி அதை எடுத்து கண்களில் ஒற்றிக் கொண்டாள். அவள் சந்தோஷத்தால் தன்னையே மறந்து விட்டாள். அவள் மாதவியை உரத்த குரலில் அழைத்துக் கூறினாள்: "என் கோழி முட்டை போட்டுடுச்சுடி, மாதவி.''

அன்று சாயங்காலம் கல்யாணி கயிறை எடுத்துக் கொண்டு சந்தைக்குச் சென்றாள். மாதவி கூறினாள்: "இனிமேல் நெல் கொடுத்தால், தினமும் முட்டை இடும்.'' அன்று அவள் எப்போதும் இல்லாதமாதிரி வயலின் வழியாக சந்தைக்குச் சென்றாள். கயிறு விற்று அரிசியையும் சர்க்கரையையும் உப்பையும் மிளகாயையும் மண்ணெண்ணெய்யையும் மீனையும் வாங்கிக் கொண்டு அவள் வேகமாக நடந்தாள்.

மாலை மயங்க ஆரம்பித்து விட்டிருந்தது. கல்யாணி கூடையைத் தோளில் வைத்துக் கொண்டு வயல் பக்கம் இறங்கினாள். விளைந்து கிடக்கும் நெற்கதிர்கள் மாலை நேர வெயிலில் மூழ்கி இப்படியும் அப்படியுமாக ஆடி விளையாடிக் கொண்டிருந்தன. வயலின் இரு பக்கங்களிலும் மாலை நேர விளக்குகள் வரிசையாகத் தெரிந்தன.

கல்யாணி தன் நடையின் வேகத்தைக் குறைத்தாள். அவள் சுற்றிலும் பார்த்தாள். யாருமில்லை. வரப்பில் நின்று கொண்டே எட்டிப் பிடித்து ஐந்தாறு நெற்கதிர்களை அவள் பறித்து கூடைக்குள் போட்டாள். மீண்டும் சுற்றிலும் பார்த்தாள். யாருமில்லை. அவள் வரப்பை விட்டு வயலுக்குள் இறங்கினாள். வேகமாக பத்து, பதினைந்து நெற்கதிர்களைப் பறித்துக் கூடைக்குள் போட்டாள்.

அந்த வகையில் அவள் தினமும் கோழிக்கு நெல் கொடுப்பாள். ஒவ்வொரு நாளும் கோழி முட்டையிடும். பத்து நாட்கள் முட்டையிட்டது. அவள் ஒரு கூடையில் உமியை அள்ளிப்போட்டு, அதில் முட்டைகள் அனைத்தையும் எடுத்து வைத்தாள். கோழி முட்டைகளுக்குமேலே அடை காக்க ஆரம்பித்தது.

நாட்கள் சில கடந்தன. ஒரு நாள் காலையில் கல்யாணி தூக்கத்திலிருந்து கண் விழித்தபோது, மூலையில் இருந்த கூடையில் "கீ... கீ... கீ...'' என்ற சத்தம் கேட்டது. முட்டைகள் அனைத்தும் விரிந்து விட்டிருந்தன- அவளுடைய எதிர்பார்ப்புகள் அந்த வகையில் ஒவ்வொன்றாக விரிந்து கொண்டிருந்தன. அவள் ஒவ்வொரு குஞ்சையும் தனித் தனியாக எடுத்துப் பார்த்தாள். "இவை அனைத்தும் பெட்டைகளாக இருக்க வேண்டும் என் ஓச்சிற கடவுளே!'' அவள் கைகளைக் கூப்பிக் கொண்டு வேண்டினாள்.

அனைத்தும் பெட்டைக் கோழிகளாக இருக்க வேண்டும், தினமும் அவை அனைத்தும் முட்டை இட வேண்டும், அவை அனைத்தையும் விற்றுக் காசாக்க வேண்டும்- அந்த வகையில் அடுத்த ஓச்சிற திருவிழாவின்போது... "ம்... ஓச்சிற கடவுள்னு இருந்தால், நான் அவளிடம் பதிலுக்கு பதில் கேட்காமல் இருக்க மாட்டேன்." அவளுடைய சந்தோஷத்திற்கு மத்தியில் பழி வாங்க வேண்டும் என்ற உணர்ச்சி தலையைக் காட்டியது.

தாய்கோழி குஞ்சுகளை அழைத்துக் கொண்டு வெளியே வந்தது. கல்யாணியின் மனதில் இருந்த ஆசையும் அதிகமானது. கோழிக் குஞ்சுகளைப் பூனை பிடித்து விடுமோ, பருந்தும் காகமும் தூக்கிக் கொண்டு போய் விடுமோ?- உண்ணும்போதும் உறங்கும்போதும் அவளுடைய சிந்தனை அதைப் பற்றியே இருந்தது. ஏதாவது பூனை அந்தப் பக்கமாக வந்தால், அவள் அதை அடித்து விரட்டி விடுவாள். காகங்கள் அருகில் எங்காவது உட்கார்ந்திருந்தால், அவள் கல்லை எடுத்து எறிவாள். வானத்தில் பருந்து பறப்பதைப் பார்த்தால், அவள் குஞ்சுகளை கூடையைப் போட்டு மூடுவாள்.

ஒருநாள் தாய்க் கோழி குஞ்சுகளுக்கு இரையைப் பிரித்துப் போட்டு உண்ண வைப்பதைப் பெருமையுடன் பார்த்துக் கொண்டே கல்யாணி கயிறு திரித்துக் கொண்டிருந்தாள்.


அப்படி நின்று கொண்டிருக்கும்போது அவள் பலவற்றையும் பார்த்தாள். அன்றொரு நாள் நாணி அண்டாவைத் தூக்கிக் கொண்டு வந்தபோது, அவள் கூறிய வார்த்தைகள், அடுத்த வருடம் ஓச்சிற திருவிழாவின்போது அண்டா வாங்க வேண்டும் என்ற சபதம், கோழிக் குஞ்சுகள் வளர்ந்து அவை அனைத்தும் முட்டைகள் இடுவது, அந்த முட்டைகள் அனைத்தையும் விற்றுக் காசாக்குவது, அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு ஓச்சிற திருவிழாவிற்குச் செல்வது, அண்டா வாங்குவது, அதைத் தூக்கிக் கொண்டு நாணி பார்க்கிற மாதிரி வருவது- இப்படிப் பலவற்றையும் அவள் கற்பனையில் கண்டாள்.

மேற்குப் பக்கத்திலிருந்து மாமரத்திற்குக் கீழே ஒரு ஆரவராம். "கீய.. கீய... கீய..."

கல்யாணி மனதிற்குள் ஒரு பரபரப்புடன் "குழ... குழ..." இவ்வாறு சத்தம்போட்டுக் கொண்டே அவள் மாமரத்தின் அடியை நோக்கி ஓடினாள்.

"கீய.. கீய.. கீய..." பறந்து செல்லும் பருந்தின் காலில் இருந்தவாறு கோழிக் குஞ்சு சத்தம் போட்டது.

"அய்யோ...! நாசம் பண்ணிட்டியா?'' கல்யாணி பருந்து பறந்து செல்லும் திசையை நோக்கி ஓடினாள். "குழ... குழ... குழ...''

வேலி! கல்யாணி வேலிமீது ஏறி, அவளும் வேலியும் சேர்ந்து கீழே விழுந்தார்கள்.

நாணி அவை அனைத்தையும் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். கல்யாணி கீழே விழுவதைப் பார்த்து அவள் கைகளைத் தட்டிச் சிரித்தாள்.

கல்யாணி வேகமாக எழுந்தாள். மானக் கேடு, கோழி இழப்பு! கவலையும் கோபமும். "நீ என்னத்தைப் பார்த்து சிரிக்கிறே?'' அவள் நாணியைப் பார்த்துக் கேட்டாள்.

"உன் அழகைப் பார்த்துட்டு...'' நாணி சிரித்துக் கொண்டே கூறினாள்.

"உனக்கு நான் யார்னு காட்டுறேன்டி'' கல்யாணி கோபத்தை அடக்கிக் கொண்டு, திரும்பி நடந்தாள்.

"காட்டுறப்போ பார்த்துக்கலாம்- இப்போ நீ போ...'' நாணி உரத்த குரலில் சொன்னாள்.

கல்யாணி மாமரத்திற்குக் கீழே சென்றாள். தாய்க் கோழி மற்ற குஞ்சுகளை இறக்கைக்குக் கீழே வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தது. அவள் மேலே பார்த்தாள்.

"கீய... கீய... கீய..." பருந்து கோழிக் குஞ்சைத் தூக்கிக் கொண்டு பறந்து கொண்டிருந்தது. அன்று கல்யாணி உணவு சாப்பிடவில்லை.

கோழிக் குஞ்சுகள் வளர்ச்சியடைய ஆரம்பித்தன- நான்கு சேவல்களும் ஐந்து பெட்டைகளும். தாய்க் கோழி அதற்குப் பிறகும் முட்டை இட்டது. கல்யாணி அந்த முட்டை எல்லாவற்றையும் விற்றுக் காசாக்கினாள். கிடைத்த காசை அந்த நேரத்திலேயே அடுப்புக் கல்லுக்கு அடியில் கொண்டு போய் பத்திரப்படுத்தி வைத்தாள். தேநீர் பருக காசு தராததற்காக, ஒவ்வொரு நாளும் அவள் கோபாலனுடன் சண்டை போட வேண்டியதிருந்தது.

ஒருநாள் கோபாலன் மறைந்திருந்து கல்யாணி காசுகளைப் பத்திரப்படுத்தி வைக்கும் இடத்தைக் கண்டு பிடித்து விட்டான். மறுநாள் முட்டை விற்ற காசை வைப்பதற்காக அவள் அடுப்புக் கல்லை அகற்றினாள். அங்கு காசுகள் எதுவும் இல்லை.

"அய்யோ... அவன் என் காசுகளை எடுத்துட்டுப் போயிட்டானே!'' அவள் அடுப்புக் கல்லை எடுத்து எறிந்தாள். கோபாலனின் "ட்ரங்க் பெட்டி"யை எடுத்து வெளியில் போட்டாள். அவனுடைய பழைய கோட்டைப் பிடித்து இழுத்துக் கிழித்தாள். அதனால் அவளுடைய கோபம் தீரவில்லை. அவள் ஓடிச் சென்று குட்டப்பனுக்கு ஐந்தாறு அடிகள் கொடுத்தாள். அவன் தரையில் கிடந்து அழுதான்.

அப்போது கோபாலன் அங்கே வந்தான். கல்யாணி சிங்கத்தைப் போல  பாய்ந்து அவனுக்கு அருகில் சென்றாள். கோபாலன் அவளைத் தடுத்து நிறுத்தினான். ஆரவாரம்... ஆரவாரம்...

அன்று அவள் கஞ்சி வைக்கவில்லை. இரவு உணவும் தயாரிக்கவில்லை. எல்லாரும் பட்டினி.

மறுநாள் கல்யாணி யாருக்கும் தெரியாமல் மாதவியை அழைத்துக் கூறினாள்: "மாதவி, நான் ஒரு விஷயத்தைச் சொன்னால் நீ யாரிடமாவது சொல்லுவியாடீ?''

"என்ன? சொல்லுங்க... நான் யாரிடமும் சொல்ல மாட்டேன்.''

"பிறகு நான் முட்டைகள் விற்கிற காசுகளை உன் கையில் தர்றேன். நீ அதை பத்திரமாக வச்சிருப்பியா?''

"ம்... என் தகரப் பெட்டியில் வச்சிருந்தால், யாரும் எடுக்க மாட்டாங்க. நான் யாரிடமும் சொல்ல மாட்டேன்.''

"இங்கே வச்சிருந்தால் பணம் கைக்கு வராதுடி. அடுப்புக் கல்லுக்குக் கீழே வச்சிருந்ததை அவர் எடுத்துட்டுப் போயிட்டாரு.''

"இங்கே தந்தால் நான் பத்திரமா வச்சிக்கிறேன். கேக்குறப்போ தர்றேன்.''

அந்த வகையில் காசுகளை பத்திரப்படுத்தி வைப்பதற்கு கல்யாணி ஒரு வழியைக் கண்டுபிடித்தாள்.

சிறு குஞ்சுகள் வளர்ச்சியடைந்து முட்டையிட ஆரம்பித்தன. அதைத் தொடர்ந்து கல்யாணியின் வருமானமும் அதிகரித்தது. சில நேரங்களில் முட்டைகள் விற்றதன் மூலம் ஒன்றரை, இரண்டு சக்கரங்கள் என்ற விகிதத்திலும் கிடைக்க ஆரம்பித்தன.

மாதவியின் தகரப் பெட்டியின் எடை கூடிக் கொண்டு வந்தது.

கோபாலன் வீட்டின் எல்லா இடங்களிலும் கல்யாணி காசுகளைப் பத்திரப்படுத்தி வைக்கும் இடத்தைக் கண்டு பிடிப்பதற்காக அலசி அலசிப் பார்ப்பான். ஒரு இடத்திலும் காசு இருக்காது.

ஒருநாள் கோபாலன் கேட்டான்: "முட்டை விக்கிற காசெல்லாம் எங்கடீ?''

கல்யாணிக்கு வெறி வந்து விட்டது. "முட்டை விற்ற காசை கேக்குறதுக்கு கோழியை வாங்கித் தந்தீங்களா என்ன?''

"அப்படின்னா, இப்போ உன் கோழிகள் எல்லாத்தையும் பிடித்துக் கொண்டு போய் விக்கிறதைப் பார்க்கணுமா?''

"ம்... விப்பீங்க. அதற்கு அம்மாவோட வயித்துக்குள்ளே இன்னொரு தடவை போயிட்டு வரணும்.''

அதைத் தொடர்ந்து கோபாலன் சமாதான உடன்பாட்டிற்கு வருவான். "அடியே.. நீ சக்கரங்கள் எல்லாத்தையும் யாரோட கையிலாவது தந்து வைக்கிறியா என்ன? அவங்க ஏமாத்திடப் போறாங்க.''

"ஏமாத்தட்டும்... இழப்பொண்ணும் இல்லையே!''

கோபாலனின் தந்திரங்கள் எதுவும் கல்யாணியிடம் பலிக்கவில்லை. அபூர்வமாக எப்போதாவது மட்டுமே அவள் ஒரு சக்கரத்தைத் தருவாள்.

இப்படி நாட்களும் வாரங்களும் மாதங்களும் கடந்தன. இடப மாதம் வந்தது. ஒருநாள் கல்யாணி மாதவியிடம் கேட்டாள்: "இப்போ எவ்வளவுடி சேர்ந்திருக்கு மாதவி?''

"ஆ... நான் எண்ணிப் பார்க்கல.''

"நாம கொஞ்சம் எண்ணிப் பார்ப்போம். எடுத்துக் கொண்டு வா.''

மாதவி ஒரு சிறிய தகரப் பெட்டியைத் தூக்கி எடுத்துக் கொண்டு வந்தாள். அது நிறைய சக்கரங்கள் இருந்தன. தூரத்தில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்த குட்டப்பன் எழுந்து வேக வேகமாக அவர்கள் இருந்த இடத்திற்கு வந்தான். குட்டப்பனை ஒரு கையால் விலகி நிற்கச் செய்து விட்டு கல்யாணி சொன்னாள்: "பதினொண்ணே கால் சக்கரம் மீதம் இருக்குடீ, மாதவி.''

"அப்போ இந்த அஞ்சு ரூபாய் எதற்கு?'' மாதவி கேட்டாள்.

"அதுவா? அதைப் பிறகு சொல்றேன். இப்போ இதை அங்கே கொண்டு போய் வை. இங்கே இருக்குற ஆம்பளைக்குத் தெரிஞ்சா, ஒரு காசும் இருக்காதுடீ.''


குட்டப்பன் நகர்ந்து நகர்ந்து சக்கரங்கள் பரவி வைக்கப்பட்டிருந்த பாயில் ஏறினான். அவன் ஒரு பிடி சக்கரத்தை வேகமாகக் கையில் எடுத்தான்.

"இங்கேயிருந்து போ...'' கல்யாணி குட்டப்பனின் கையை மெதுவாகத் தட்டி விட்டாள். சக்கரங்கள் சிதறிக் கீழே விழுந்தன. குட்டப்பன் சத்தம் போட்டு அழ ஆரம்பித்தான்.

"இதை அங்கே கொண்டு போய் வை மாதவி'' கல்யாணி சக்கரங்கள் எல்லாவற்றையும் பொறுக்கிப் பெட்டிக்குள் போட்டாள். "உனக்கு நான் இதுல ஒரு ரவிக்கை வாங்கித் தர்றேன்.''

வழியில் ஒரு முனகல் பாட்டு. கல்யாணி திரும்பிப் பார்த்தாள். "அய்யோ... அவர்தான் வர்றாருடீ... பெட்டியை எடுத்துக் கொண்டுபோ.''

மாதவி பெட்டியை எடுத்துக் கொண்டு மிகவும் வேகமாக அங்கிருந்து கிளம்பினாள்.

கோபாலன் பாட்டை முணுமுணுத்துக் கொண்டே படிகளைக் கடந்து வந்து கொண்டிருந்தான். கல்யாணி வேகமாக கயிறைத் திரிக்க ஆரம்பித்தாள்.

இடப மாதம் பத்தாம் தேதி கடந்தது. ஒருநாள் சாயங்கால நேரம் கழிந்து கல்யாணி சமையலறையில் உட்கார்ந்திருந்து நெருப்பை எரிய விட்டுக் கொண்டிருந்தாள். குட்டப்பனும் சமையலறையில் இருந்தான்.

வெளியே ஒரு சத்தம் கேட்டது: "ஹு... ஹுஹுஹுஹு..." கல்யாணி வெளியே வந்து பார்த்தாள். கோபாலன் நடுங்கிக் கொண்டே வாசலில் இருந்து திண்ணையில் ஏறினான்.

"என்ன?... என்ன?'' கல்யாணி பதைபதைப்புடன் பார்த்தாள்.

"ஹுஹுஹுஹு... எனக்கு காய்ச்சல்டீ... பாயைப் போடு. நான் படுக்கப் போறேன்.''

கல்யாணி உள்ளே சென்று பாயை விரித்துப் போட்டாள். கோபாலன் போர்வையால் முழுமையாக மூடிக் கொண்டு படுத்தான். கல்யாணி நெற்றியில் கையை வைத்துப் பார்த்தாள். "நெருப்பைப்போல இருக்குற காய்ச்சல்... நெல்லைப் போட்டா மலரா ஆயிடும்... என் கடவுளே!''

அன்று இரவு கோபாலன் எதுவும் சாப்பிடவில்லை. கல்யாணியும் இரவு உணவு உண்ணவில்லை.

காலையில் மாதவி வந்தாள். கல்யாணி கூறினாள்: "காய்ச்சல் வந்து படுத்திருக்காருடி, மாதவி.''

"எப்போ காய்ச்சல் ஆரம்பமாச்சு?''

"நேற்று இரவு நான் அடுப்புல சமையல் பண்ணிக் கொண்டிருந்தப்போ, பின்னால ஒரு முனகல் சத்தம் கேட்டது. நான் எழுந்து சென்று பார்த்தப்போ, இவர் அங்கே நடுங்கிக் கொண்டு நின்னுக்கிட்டு இருக்காரு. "காய்ச்சல்டீ... பாயை விரிச்சுப் போடு"ன்னு சொல்லிக்கிட்டே உள்ளே வந்தாரு. நான் போய் பாயை விரிச்சுப் போட்டேன். உடம்பு முழுக்க போர்த்திக்கிட்டு படுத்துட்டாரு. நெற்றியில் கையை வச்சுப் பார்த்தால் சுட்டெரிக்குதுடி...''

"தண்ணி குடிச்சாரா?''

"தண்ணி குடிக்கலடி. அதனால நானும் எதுவும் சாப்பிடல. ஆக்கின சோறு அப்படியே சட்டியில இருக்கு. பிள்ளைக்கு ஐந்தாறு பருக்கைகளை பரிமாறிக் கொடுத்திட்டு, பொழுது விடியிற வரை விளக்கை எரிய வச்சிக்கிட்டு உட்கார்ந்துகிட்டிருந்தேன். இனி என்னடீ செய்யறது?''

மாதவி சொன்னாள்: "அந்த நொண்டி வைத்தியரை அழைச்சிக்கிட்டு வந்தா போதும். அவர்கிட்ட ஒரு கஷாயமோ மாத்திரையோ இருக்கு. எங்க சின்ன அண்ணணுக்குக் காய்ச்சல் வந்தப்போ அந்த கஷாயத்தைத்தான் கொடுத்தோம். பிடிச்சு நிறுத்தியதைப்போல அது நின்னுருச்சு''.

"அப்படின்னா, நீ கொஞ்சம் இங்கே பார்த்துக்கோ.'' இவ்வாறு கூறிவிட்டு கல்யாணி வைத்தியரை அழைப்பதற்காகப் புறப்பட்டாள். சந்தைக்குப் போவதற்காக வைத்திருந்த முண்டையும் ரவிக்கையையும் எடுத்து அணிந்து கொண்டு, உதயமாகிக் கொண்டிருந்த சூரியனை ஒருமுறை வணங்கி விட்டு, அவள் வேகமாக நடந்தாள்.

ஒரு மணி நேரம் ஆனதும், கல்யாணி நொண்டி வைத்தியரை அழைத்துக் கொண்டு வந்தாள். கிழிந்து போயிருந்த பாயை எடுத்து வைத்தியர் உட்காருவதற்காக திண்ணையில் போட்டாள். வைத்தியர் ஓலைக் குடையை வாசலில் வைத்துவிட்டு, திண்ணையில் ஏறி உட்கார்ந்து, நோய் பற்றிய விஷயத்தைக் கேட்டார். கல்யாணி குட்டப்பனை எடுத்து இடுப்பில் வைத்துக் கொண்டு முந்தைய நாள் அடுப்பில் உலை வைத்துக் கொண்டிருந்தபோது வெளியே முனகல் சத்தம் கேட்டதையும், அவள் ஓடிச் சென்று பார்த்ததையும், அப்போது அங்கே ஆள் நின்று கொண்டு நடுங்கிக் கொண்டிருந்ததையும், "காய்ச்சல்... பாயை விரிச்சுப் போடு" என்று சொன்னதையும்,பாயை விரித்துப் போட்டதையும், உடம்பு முழுக்க மூடிக் கொண்டு படுத்ததையும், நீர்கூட பருகாமல் இருந்ததையும், தான் இரவு உணவு சாப்பிடாமல் இருந்ததையும், விளக்கை எரிய வைத்துக் கொண்டு பொழுது புலர்வது வரை உட்கார்ந்திருந்ததையும் விளக்கிக் கூறினாள்.

வைத்தியர் எல்லாவற்றையும் "உம்" கொட்டிக் கேட்டுவிட்டுக் கூறினார்: "ம்... இது பரவாயில்லை. ஜலதோஷ காய்ச்சல்...'' அவர் மாத்திரைகள் இருந்த டப்பாவைத் திறந்து ஒரு மாத்திரையை எடுத்துக் கொடுத்தார். "சுக்கும் சீரகமும் போட்டு நீரைக் கொதிக்க வைத்து மூன்று மாத்திரைகளை மூணு நேரம் கொடு...''

"கஷாயம் எதுவும் வேண்டாமா?''

"கஷாயம் பின்னால கொடுக்கலாம். இப்போ இதைக் கொடு.''

கல்யாணி மாத்திரையை முண்டின் நுனியில் கட்டிக் கொண்டே வாசலில் இறங்கி மாதவியைச் சைகை செய்து அழைத்தாள். "அந்த ஆளுக்கு ஏதாவது கொடுக்க வேண்டாமா மாதவி?''

"ம்... ஏதாவது கொடுக்கணும்.''

"காசு எதுவும் இல்லையேடீ...''

"இல்லைன்னு யார் சொன்னது? என்கிட்ட கொடுத்து வச்சிருக்கிறது காசு இல்லையா?''

"அது ஒரு தேவைக்காக வச்சிருக்கிறது.''

"இதைவிட தேவை என்ன இருக்கு. ஆண் இல்லைன்னா, தேவை இருக்கா?''

கல்யாணி தலையைக் குனிந்து கொண்டு நின்றிருந்தாள். அன்றைய அந்த சம்பவங்கள்- நாணி ஓச்சிறயிலிருந்து அண்டாவைத் தூக்கிக் கொண்டு வந்தது, அதற்கு என்ன விலை என்று கேட்டதற்கு கிண்டல் கலந்த குரலில் அவள் கூறிய வார்த்தைகள், அண்டா வாங்குவேன் என்று கூறிய சபதம், பருந்திற்குப் பின்னால் ஓடியபோது வேலியில் ஏறி விழுந்ததைப் பார்த்து அவள் கைகளைத் தட்டிக் கொண்டு சிரித்தது- அந்தச் சம்பவங்கள் அனைத்தையும் அவள் மனதில் நினைத்துப் பார்த்தாள். உண்ணும்போதும் உறங்கும்போதும் ஒரே நினைப்புடன் அவள் கோழியை வளர்த்ததையும், முட்டைகள் விற்ற காசை கோபாலன் என்ற வழிப்பறிக்காரனுக்கு பயந்து மாதவியிடம் கொடுத்து பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டிருப்பதையும் அவள் நினைத்துப் பார்த்தாள். ஓச்சிற கடவுளின் கருணையில் அண்டா வாங்குவதற்கான பணத்தை அவள் சேமித்து விட்டிருந்தாள். ஓச்சிற திருவிழாவும் நெருங்கிக் கொண்டிருந்தது. அவளுடைய ஆசை நிறைவேறப் போகும் இந்தச் சூழ்நிலையில்... கல்யாணி சொன்னாள்: "இல்லை... அதுல இருந்து எடுக்க முடியாது.''

"அதுல இருந்து கொடுக்காமல் பிறகு எப்படி? வைத்தியருக்கு ஏதாவது கொடுக்க வேண்டாமா? சுக்கும் சீரகமும் வாங்க வேண்டாமா? கஷாயத்திற்கு எழுதித் தர்றப்போ மருந்து வாங்க வேண்டாமா?''

அதற்குப் பிறகும் கல்யாணி சிறிது நேரம் சிந்தனையில் மூழ்கினாள்: "சரி... நீ ஒரு காரியம் செய். அங்கே அஞ்சு ரூபாயை வைத்து விட்டு மீதி சக்கரங்களை இங்கே எடுத்துக் கொண்டு வா.''


மாதவி திரும்பி நடந்தாள். கல்யாணி பின்னால் ஓடிச் சென்று மெதுவான குரலில் சொன்னாள்: "அங்கே வெற்றிலை இருந்தால், கொஞ்சம் எடுத்துட்டு வாயேன்.''

"இருந்தால் எடுத்துட்டு வர்றேன்.'' மாதவி வேகமாக நடந்தாள்.

கல்யாணி சக்கரங்களை எண்ணிப் பார்த்தாள். ஏழு சக்கரங்களை கையில் எடுத்துக் கொண்டு மீதியை மடியில் வைத்தாள். அவள் வைத்தியரின் அருகில் சென்று கையை நீட்டிக் கொண்டு சொன்னாள்: "வைத்தியரே, உங்களுக்கு ஒரு தட்சிணை...''

வைத்தியர் புன்சிரிப்பைத் தவழ விட்டார். கூச்சத்துடன் கையை நீட்டினார். கல்யாணி சக்கரங்களை கையில் கொடுத்தாள்.

"பரவாயில்லை... ஜலதோஷ காய்ச்சல்தான். இந்த மாத்திரையை இப்பவே கொடுத்திடு. பிறகு கஷாயத்திற்கும் எழுதித் தர்றேன்....'' வைத்தியர் சக்கரத்தையும் மாத்திரை டப்பாவையும் மடியில் வைத்து, ஓலைக் குடையை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்.

கல்யாணியின் கையில் நான்கே கால் சக்கரங்கள் மீதியிருந்தன. அதிலிருந்து கால் சக்கரத்தை எடுத்துக் கொண்டு போய் சுக்கு, சீரகம் ஆகியவற்றை வாங்கிக் கொண்டு வந்தாள். நீரைக் கொதிக்க வைத்து ஒரு மாத்திரையைக் கரைத்துக் கொடுத்தாள்.

அன்று அவள் கயிறு திரிக்கவில்லை. முந்தின நாள் செய்த பழைய சாதத்தை எடுத்துச் சாப்பிட்டாள். குட்டப்பனுக்கு கொஞ்சம் கொடுத்தாள். அவன் வாசலில் இருந்து கொண்டு மண்ணை அள்ளி விளையாட ஆரம்பித்தான். அவள் காலையில் திறந்து விட்ட கோழிகள் எங்கே இருக்கின்றன என்று பார்த்து விட்டு, திண்ணையில் வந்து உட்கார்ந்து சிந்தனையில் மூழ்கினாள். "இருந்தாலும்... அஞ்சு ரூபா இருக்குதே!" அவள் தனக்குத் தானே கூறிக் கொண்டாள். "அண்டா வாங்குவதற்கு அதுபோதும். ஓச்சிற திருவிழா ஒண்ணாம் தேதி தொடங்குது. அன்றைக்கே போய் அண்டாவை வாங்கிடணும். அவள் என் முன்னால் ஆணாக வந்து நிற்பதைக் கொஞ்சம் பார்க்கணும். இன்னும் பத்து, பதினெட்டு நாட்கள் இருக்கின்றனவே! அதற்குள் கிடைக்கிற முட்டைகளை விற்றுக் காசாக்கணும். அதைக் கொடுத்து ஒரு சட்டியும் குடையும் பாயும் வாங்கணும். மாதவிக்கு ஒரு ரவிக்கையும் பையனுக்கு ஒரு ஆடையும்..."

நேரம் மதியத்தை தாண்டி விட்டிருந்தது.

"ச்சீ... போ... உன்னை நான்...'' கோபாலன் வாய்க்கு வந்ததை உளறிக் கொண்டிருந்தான்.

கல்யாணி பதைபதைப்படைத்து எழுந்து உள்ளே சென்றாள்: "என்ன? என்ன?''

"ஒரு பீடி தா. தேநீருக்கு சூடு இல்லை. சக்கரத்தை எங்கேடீ வச்சிருக்கே?''

கல்யாணிக்கு பயம் வந்து விட்டது. அவள் மாதவியை அழைத்துக் கொண்டு வந்தாள். "வாய்க்கு வந்தபடி உளறிக்கிட்டு இருக்காருடி, மாதவி''.

"மாத்திரை கொடுத்தீங்களா?''

"ம்... மாத்திரை கொடுத்த பிறகுதான் காய்ச்சல் அதிகமாயிருச்சு.''

"அது அப்படித்தான். ஒரு மாத்திரை கொடுக்குறப்போ, காய்ச்சல் அதிகமா ஆகும். பிறகு குறைஞ்சிடும். இன்னொரு மாத்திரையையும் கரைச்சுக் கொடுங்க.''

கல்யாணி இன்னொரு மாத்திரையையும் கரைத்துக் கொடுத்தாள். ஓச்சிற கடவுளுக்கு ஒரு நெய் விளக்கு ஏற்றுவதாக வேண்டிக் கொண்டாள்.

மாலை நேரம் வந்தது. கல்யாணி சந்தைக்குச் சென்று இரவு உணவுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு வந்தாள். இரவு உணவு சமைத்து அவளும் குட்டப்பனும் சாப்பிட்டார்கள். கோபாலன் நீர்கூட குடிக்கவில்லை. அவன் என்னென்னவோ கூறிக் கொண்டிருந்தான். இரவு முழுவதும் கல்யாணி தூங்காமல் கண் விழித்திருந்தாள். அவளுக்கு பயமாகவும் இருந்தது. பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள். அழைத்தாலும் யாரும் கேட்கப் போவதில்லை. எப்படியோ ஒரு வகையாகப் பொழுது புலர்ந்தது. அவள் வைத்தியரைத் தேடிச் சென்று விவரங்களைக் கூறினாள்.

"பரவாயில்லை... கஷாயம் வச்சு கொடு.'' அவர் கஷாயத்திற்கு எழுதிக் கொடுத்தார். இரண்டு நாட்கள் முட்டைகள் விற்றதன் மூலம் கிடைத்த மூன்று சக்கரங்களைக் கொடுத்து கஷாயத்திற்கு மருந்தும் அதில் போடுவதற்கு சர்க்கரையும் வாங்கி அவள் வேகமாக கஷாயம் தயார் பண்ணிக் கொடுத்தாள்.

அன்று அந்த வகையில் நாள் முடிந்தது. கோபாலனின் நோய் அதிகரித்துக் கொண்டிருந்தது. அன்று அங்கு கஞ்சி வைக்கவில்லை. மாதவி குட்டப்பனை அழைத்துக் கொண்டு போய் கஞ்சி கொடுத்தாள். கல்யாணியை அழைக்க, அவள் போகவில்லை.

மறுநாள் பக்கத்து வீடுகளில் இருக்கும் சில பெண்கள் கோபாலனின் நோயைப் பார்ப்பதற்காக வந்தார்கள். "கடுமையான காய்ச்சல். இதை குணப்படுத்துவதற்கு நொண்டி வைத்தியரால் முடியாது.'' அவர்கள் எல்லாருடைய கருத்தும் அதுவாகத்தான் இருந்தது.

கல்யாணியின் பதைபதைப்பு அதிகமானது. அவளும் மாதவியும் சேர்ந்து யோசித்தார்கள். மாதவி சொன்னாள்: "உண்மைதான். நொண்டி வைத்தியரால் முடியாது என்றுதான் தோணுது. காய்ச்சல் கடுமை ஆயிடுச்சு. வயல்காடனை அழைத்துக் கொண்டு வந்தால்தான் சரியாக இருக்கும்.''

"அந்த ஆளுக்குப் பணம் தர வேண்டாமா?"

"பிறகு... பணம் தராமல் இருக்க முடியுமா? அவரோட கட்டணம் இரண்டு ரூபாய்...''

"இரண்டு ரூபாயா?'' கல்யாணியின் நெஞ்சில் ஒரு வேதனை. "அய்யோடி... அதுல இருந்து இரண்டு ரூபாய் எடுத்தால், பிறகு மூணு ரூபாய்தானே இருக்கும்!''

"அதற்குப் பிறகு மருந்துக்கு விலை கொடுக்கணும்.''

கல்யாணி சம்மதமற்ற குரலில் சொன்னாள்: "வேண்டாம்டீ... வேண்டாம். அதுல இருந்து நான் இனிமேல் எடுக்க மாட்டேன்.''

"எடுக்கலைன்னா, ஆள் இல்லாமற் போயிடுவார். ரூபாய் வேணுமா? ஆள் வேணுமா?''

கல்யாணி அமைதியாக நின்று கொண்டிருந்தாள். பதினேழாவது வயதில் கோபாலன் அவளைத் திருமணம் செய்தான். அவனுடைய கையில் பணம் இருந்தபோது, தாராளமாகச் செலவழித்தான். அவளுடைய விருப்பங்கள் எல்லாவற்றையும் நிறைவேற்றி இருக்கிறான். பிறகு... கையில் காசு இல்லாமற் போய்விட்டது. தேநீர் அருந்துவது, பீடி புகைப்பது, தமாஷாக பேசிக் கொண்டிருப்பது, நண்பர்களுடன் சேர்ந்து நடந்து திரிவது... இது ஒரு வழக்கமாகிவிட்டது. "வந்ததெல்லாம் வந்திடுச்சு. இனி அவன் எப்படியோ போகட்டும். உன்னையும் பிள்ளையையும் நான் காப்பாத்துறேன்.'' அவளுடைய தாய் அவளுக்கு இவ்வாறு யோசனை கூறினாள். அவள் ஒத்துக் கொள்ளவில்லை. "ஒருத்தர் வந்து சேர்ந்தார். ஒரு குழந்தையும் பிறந்துவிட்டது. இனிமேல் என் குழந்தை வேறொரு மனிதனை அப்பா என்று அழைப்பது நடக்காது.'' இப்படிக் கூறிவிட்டு அவள் கோபாலனுடன் வீட்டை விட்டு வெளியேறி வந்தாள். மட்டை உரித்தும், கயிறு திரித்தும் அவள் அவனுக்கு செலவுக்குப் பணம் தந்தாள். பீடிக்கும் தேநீருக்கும் கொடுப்பதற்கு அவளுடைய கையில் காசு இல்லை. இந்த விஷயத்தில் மட்டுமே அவர்களுக்கிடையே சண்டை உண்டாகும். சில நேரங்களில் அரை சக்கரமோ ஒரு சக்கரமோ மிச்சம் பிடித்து அவனுக்கு தேநீர் குடிப்பதற்காகக் கொடுப்பாள்.


பீடிக்கும் தேநீருக்கும் காசு கிடைத்துவிட்டால், பிறகு கோபாலன் நல்லவன்தான். உண்மையிலேயே சொல்லப்போனால், அவன் அவள்மீது அன்பு வைத்திருந்தான். அவளுக்குத் தேவையானவற்றையெல்லாம் கொடுப்பதற்கு முடியாததை நினைத்து அவனுக்குக் கவலையும் இருந்தது.

சில நேரங்களில் அவள் அவனை எல்லை கடந்து திட்டுவாள். அப்போது கையை ஓங்கிக் கொண்டு போவானே தவிர, அடிக்க மாட்டான். சில நேரங்களில் "உன் எதுவும் எனக்கு வேண்டாம்டீ'' என்று கூறி அவன் வெளியேறிப் போய் விடுவான். அப்படிப்போன பிறகு, கல்யாணிக்கு கவலையாகிவிடும். அவள் சாதத்தையும் குழம்பையும் ஆக்கி வைத்துக்கொண்டு காத்திருப்பாள். கோபாலன் வரும் வரை அவள் சாப்பிட மாட்டாள். சிரமங்கள் அதிகமாக உண்டாவதாலும், திடீரென்று வரக்கூடிய கோபத்தாலும், அவள் தன்னை மறந்து எதையாவது கூறிவிடுவாளே தவிர, அவளும் அவன்மீது அன்பு கொண்டிருந்தாள்.

கல்யாணி தான் நின்றிருந்த இடத்திலேயே நின்று கொண்டு அவை எல்லாவற்றையும் நினைத்துப் பார்த்தாள். "பதினேழு வயதில் திருமணம் நடந்தது...'' அவள் தொண்டை இடற தொடர்ந்து சொன்னாள்: "கையில காசு இருந்த காலத்தில் தந்தவர்தான். இப்போ இல்லாமல் போனது என்னோட தலைவிதி. இனிமேலும் அதிர்ஷ்டம்னு ஒண்ணு இருந்தால், கிடைக்கும்.''

"அந்த அதிர்ஷ்டம் இருந்தால்தான் கிடைக்கும்.'' மாதவி அதை ஒப்புக் கொண்டு சொன்னாள்.

கல்யாணி கண்ணீரைத் துடைத்து விட்டு, தொடர்ந்து சொன்னாள்: "பாசம் உள்ள மனிதர்டீ, மாதவி- பாசமான மனிதர் கையில் காசு இல்லாத குறைதான். கையில காசு இருந்த காலத்தில் எனக்குக் கொண்டு வந்து தந்த சீமைப் பலகாரத்தின் ருசி இப்பக்கூட என் நாக்குல இருக்கு. அது எதையும் நான் மறக்க மாட்டேன். பிறகு... காசு இல்லாத கஷ்ட நிலை வர்றப்போ, நான் ஏதாவது சொல்வேன். இருந்தாலும், அடிக்க மாட்டார்டீ உட்கார்ந்து அழுதுக்கிட்டு இருப்பாரு.'' அவள் மீண்டும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்: "என் ஓச்சிற கடவுளே?'' தொழுத கைகளுடன் மேலே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்: "எதையும் தரலைன்னாலும், பார்த்துக் கொண்டே இருந்தால் போதும்.''

"அழாதீங்க கல்யாணி அக்கா.'' மாதவி ஆறுதல் சொன்னாள்: "ஓச்சிற கடவுள்னு ஒருத்தர் இருந்தால், எதுவும் வராது. சீக்கிரமா போயி வயல்காடனை அழைச்சிட்டு வாங்க. நான் இங்கேயே இருக்குறேன்.''

கல்யாணி முகத்தைத் துடைத்து, முண்டையும் ரவிக்கையையும் மாற்றினாள். வாசலில் இறங்கி கிழக்குப் பக்கம் திரும்பி வணங்கினாள். "பார்த்துக்கோ மாதவி!'' இவ்வாறு கூறிவிட்டு அவள் நடந்தாள்.

மாதவி தன்னுடைய வீட்டிற்குச் சென்று ஒரு பழைய பாயையும் கொஞ்சம் வெற்றிலையையும்  வைத்தியர் வரும்போது கொடுப்பதற்காக எடுத்துக்கொண்டு வந்தாள். இரண்டு மணி நேரம் கடக்கவில்லை. வயல்காடன் முன்னாலும் கல்யாணி பின்னாலுமாக வந்து நின்றார்கள். வைத்தியர் உள்ளே நுழைந்து நோயாளியின் நாடியைப் பிடித்துப் பார்த்தார். முக்கியமான சில விவரங்களை கல்யாணியிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார். பாயில் உட்கார்ந்து வெற்றிலை போட்டார். "யாரிடமாவது காட்டினாயா?''

கல்யாணி சொன்னாள்: "நொண்டி வைத்தியரிடம் காட்டினேன். ஒரு மாத்திரையையும் ஒரு கஷாயத்தையும் தந்தாரு. அதைக் கொடுத்ததும், காய்ச்சல் கடுமையா ஆயிடுச்சு!''

"ம்... நிலைமையை மோசமாக்கிட்டியே! சரி... இருக்கட்டும். கொஞ்சம் சிரமமானதாக இருந்தாலும் குணப்படுத்திடலாம். நல்ல முறையில் கவனித்துக் கொள்ளணும். வைத்தியசாலையில் இருந்து ஒரு பொடியும் ஒரு அரிஷ்டமும் வாங்கணும். பார்லி நீரை மட்டுமே கொடுக்கணும். ஒரு கஷாயமும் வைத்துக் கொடுக்கணும்.'' -வைத்தியர் இவ்வாறு சிகிச்சையை முடிவு செய்தார். "கஷாயத்தைப் பற்றி எழுதுவதற்காக சிறிய தாளையும் பென்சிலையும் கொண்டு வா.'' அவர் கட்டளையிட்டார்.

கல்யாணி மாதவியின் முகத்தைப் பார்த்தாள். மாதவி வீட்டிற்குக் ஓடிச் சென்றாள். தன் தம்பியின் நோட்டு புத்தகத்திலிருந்து ஒரு தாளைக் கிழித்தெடுத்து, ஒரு பென்சிலையும் காசுகள் வைக்கப்பட்டிருந்த தகரப் பெட்டியையும் எடுத்துக் கொண்டு அவள் நிமிடங்களுக்குள் திரும்பி வந்தாள். தாளையும் பென்சிலையும் வைத்தியருக்கு முன்னால் வைத்தாள். வைத்தியர் ஒரு சுலோகத்தைச் சொல்லிக் கொண்டே கஷாயத்தைக் குறிக்க ஆரம்பித்தார்.

இதற்கிடையில் கல்யாணியும் மாதவியும் சேர்ந்து சிலவற்றை முணுமுணுத்துக் கொண்டார்கள். கல்யாணி தகரப் பெட்டியிலிருந்து இரண்டு ரூபாய்களுக்கான சக்கரங்களை எண்ணி வைத்தாள். பிறகு தனியாக ஒரு ரூபாயை எண்ணி மடியில் வைத்தாள். பிறகு பெட்டியை மாதவியின் கையில் தந்தாள். "இதைக் கொண்டு போய் பத்திரமாகவை. இனி இதிலிருந்து எடுப்பதாக இல்லை.'' கல்யாணியின் கண்கள் நிறைந்துவிட்டன. அவளுடைய ஒரு வருட சம்பாத்தியம் அந்த வகையில் தேய்ந்து தேய்ந்து போய்க் கொண்டிருந்தது. அவளுடைய மனக்கோட்டை அப்படியே தகர்ந்து தகர்ந்து விழுந்து கொண்டிருந்தது. அவளுடைய பழிவாங்க வேண்டும் என்ற நெருப்பு அப்படியே எரிந்து எரிந்து அணைந்து கொண்டிருந்தது. நாணிமீது கொண்ட பழிவாங்கும் உணர்ச்சி- கணவன்மீது உள்ள கடமை- இப்படி இரண்டு முரண்பாடுகளுக்கு நடுவில் கிடந்து அவள் நசுங்கிக் கொண்டிருந்தாள். "ஓச்சிற கடவுள்னு ஒருத்தர் இருந்தால்...'' -துக்கம் அவளுடைய வார்த்தைகளைத் தடுத்தது.

அவள் கண்ணீரைத் துடைத்து விட்டு, ஐம்பத்தேழு சக்கரங்களை இரண்டு கைகளிலும் சேர்த்து அள்ளி எடுத்தாள். வைத்தியருக்கு அருகில் சென்று பணிவுடன் நீட்டினாள்.

வைத்தியர் அதைப் பார்த்தார். "இதைச் சுமந்து கொண்டு போக முடியாது.'' அவர் வெறுப்புடன் கூறினார்.

"நாங்கள் ஏழைங்க...'' கல்யாணி பணிவை வெளிப்படுத்தினாள்.

"மருந்து வாங்குவதற்காக என்னோட வைத்தியசாலைக்கு வர்றப்போ இதை கொண்டு வந்தால் போதும். மருந்துக்கான விலையையும் கொண்டு வரணும்.'' அவர் கஷாயத்திற்கான குறிப்பை கல்யாணியிடம் கொடுத்துவிட்டு எழுந்தார். "பயப்பட வேண்டாம்- உடல் நலக்கேட்டைச் சரி பண்ணிடலாம். நான் சொல்கிறபடியெல்லாம் செய்யணும்.'' அவர் வாசலில் இறங்கி நடந்தார்.

கல்யாணி, வைத்தியசாலைக்குச் சென்று பொடியையும் மருந்தையும் வாங்கினாள். அதற்கு ஒன்றே கால் ரூபாய் விலை. இரண்டு ரூபாய்களை வைத்தியரின் ஃபீஸ் என்ற வகையிலும் ஒரு ரூபாயை மருந்திற்கான விலை என்ற வகையிலும் கொடுத்தாள். கால் ரூபாய் கடன் சொன்னாள்.

நோயாளிக்கு மருந்தையும் பொடியையும் அந்தந்த நேரத்திற்குக் கொடுத்தாள். பிறகு... கஷாயத்திற்கு மருந்து வாங்க வேண்டும். பார்லி வாங்க வேண்டும். கல்யாணி, குட்டப்பன் ஆகியோரின் செலவும் நடக்க வேண்டும். அதற்கெல்லாம் காசு எங்கே இருக்கிறது? ஒரு வருட சம்பாத்தியத்தில் இன்னும் இரண்டு ரூபாய்கள்தான் மிச்சமாக இருக்கின்றன. அதை எடுத்துவிட்டால்...? எடுக்காமல் இருந்துவிட்டால்...? இப்படி தனக்குள் விவாதித்து விவாதித்து அவள் பகல் முழுவதையும் கழித்தாள்.


அவளுடைய சபதம்! ஓச்சிற திருவிழா! அண்டா? அய்யோ... அவள் மிகவும் சிரமப்பட்டு கட்டிய லட்சியக் கோட்டை! "இல்லை... அதை நான் எடுக்க மாட்டேன்.'' அவள் தனக்குள் கூறிக் கொண்டாள்.

நேரம் மாலை ஆகிவிட்டிருந்தது. மாலை நேரம் தாண்டியவுடன் நோயாளிக்கு கஷாயம் தர வேண்டும். அந்த விஷயத்தை வைத்தியர் குறிப்பிட்டுக் கூறியிருந்தார். குட்டப்பன் பசியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் அழ ஆரம்பித்திருந்தான். அன்று அவளும் எதுவும் சாப்பிடவில்லை.

"தண்ணி...'' கோபாலன் நீர் கேட்டான். பார்லி நீர்தான் கொடுக்க வேண்டும்.

கல்யாணி கவலைக்குள்ளானாள். சபதத்தையும் ஓச்சிற திருவிழாவையும் அண்டாவையும் அவள் மறந்துவிட்டாள். அவள் மாதவியை அழைத்துச் சொன்னாள்: "மீதி இருப்பதையும் எடுத்துக் கொண்டு வா, மாதவி!''

மாதவி தகரப் பெட்டியைக் கொண்டு வந்து கல்யாணியின் கையில் கொடுத்தாள். "பெட்டியைப் பின்னால் தந்தால் போதும்.'' இவ்வாறு கூறிவிட்டு அவள் அங்கிருந்து கிளம்பினாள்.

கல்யாணி பன்னிரண்டு சக்கரங்களை எடுத்து மடியில் வைத்தாள். பெட்டியை எடுத்துக் கொண்டு போய் ஒரு மூலையில் வைத்தாள். பாயைக் கொண்டு அதை மூடினாள். பிறகு சந்தைக்கு வேகமாக ஓடினாள். கஷாயத்திற்கான மருந்துகள், பார்லி, அரிசி, உப்பு, மிளகாய், மண்ணெண்ணெய் என்று பல சாமான்களையும் வாங்கிக் கொண்டு அவள் மாலை நேரம் கடந்தபிறகு திரும்பி வந்தாள். ஒரு அடுப்பில் கஷாயம், இன்னொரு அடுப்பில் பார்லி, வேறொரு அடுப்பில் அரிசி- இப்படி அவள் வேகமாக நெருப்பை எரியவிட ஆரம்பித்தாள்.

குட்டப்பன் சமையலறையில் வந்து உட்கார்ந்து அழுது கொண்டிருந்தான். கல்யாணி சந்தையிலிருந்து வாங்கிக் கொண்டு வந்திருந்த மரவள்ளிக் கிழங்கை அவனுக்கு சுட்டுக் கொடுத்தாள். அவனுடைய அழுகை நின்றது.

"தண்ணி... தண்ணி...'' கோபாலன் நீர் கேட்டான்.

கல்யாணி எதுவும் பேசவில்லை. எதையும் பேசுவதற்கு அவளுக்கு சக்தியும் இல்லை. அவளுடைய கண்களிலிருந்து இடையில் அவ்வப்போது அடுப்பின் மீதும் சட்டியிலும் கண்ணீர் விழுந்து கொண்டிருந்தது. அதற்குப் பிறகும் அவள் நெருப்பை ஊதி எரிய விட்டுக் கொண்டிருந்தாள்.

பார்லி நல்ல முறையில் கொதித்தது. அவள் கொஞ்சம் நீரை எடுத்து ஆறச் செய்து கோபாலனுக்குக் கொடுத்தாள். அதற்குள் அரிசியும் ஒரு வகையில் வெந்து விட்டிருந்தது. அவள் கொஞ்சம் சாதத்தை எடுத்து குட்டப்பனுக்குக் கொடுத்தாள். ஊதி ஊதி கொஞ்சம் சாதத்தை அவளும் சாப்பிட்டாள்.

பிறகு கஷாயம் என்ற வகையில் முறைப்படி நீரை சுண்டச் செய்து, பொடியைச் சேர்த்து, கோபாலனுக்குக் கொடுத்தாள். தொடர்ந்து கோபாலனுக்கு அருகிலேயே படுத்துக் கிடந்தாள்.

பொழுது விடிந்தது. கல்யாணி திடுக்கிட்டு எழுந்தாள். நோயாளிக்கு  மருந்தையும் பார்லி நீரையும் கொடுத்தாள். முந்தின நாள் இரவில் தயாரித்த கஞ்சியிலிருந்து பருக்கை முழுவதையும் பிரித்தெடுத்து குட்டப்பனுக்குக் கொடுத்தாள். நீரை அவளும் குடித்தாள். தொடர்ந்து முண்டையும் ரவிக்கையையும் மாற்றி அணிந்து கொண்டு, தகரப் பெட்டியிலிருந்த சக்கரங்கள் முழுவதையும் எடுத்து மடியில் வைத்துக் கொண்டு வைத்தியரைப் பார்ப்பதற்காகக் கிளம்பினாள்.

வைத்தியரிடம் எல்லா விவரங்களையும் கூறினாள். முந்தின நாள் கொடுக்க வேண்டியிருந்த கால் ரூபாயைக் கொடுத்தாள். பிறகு ஒரு மருந்தை வாங்க வேண்டும்! அதை வாங்கினாள்.

திரும்பிச் செல்லும்போது அவளுடைய கையில் இரண்டரை சக்கரங்கள் மட்டுமே இருந்தன.

இனி என்ன வழி? தரையில் நடந்து கொண்டே அவள் சிந்தித்துப் பார்த்தாள். "என்னிடம் உள்ள எல்லா காசுகளும் தீர்ந்து போனாலும், இந்த நோயைக் குணப்படுத்தி விட்டுத்தான் நான் அடங்குவேன்.'' இப்படி அவள் மனதிற்குள் சபதம் செய்து கொண்டாள்.

மேலும் ஒருநாள் கடந்தது. கோபாலனின் உடல்நலக் கேட்டிற்கு சிறிது முன்னேற்றம் உண்டானது. மருந்துகளையும் பார்லி நீரையும் நேரம் தவறாமல் கொடுத்துக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு நாளும் அவள் வைத்தியரிடம் விவரங்களைக் கூறுவாள்: "இனிமேல் கஷாயத்தைக் கொஞ்சம் மாற்றணும்...'' -அவர் ஒரு பெரிய கஷாயத்தை எழுதிக் கொடுத்தார். அதற்கு மருந்து வாங்குவதற்கு எட்டு சக்கரங்கள் வேண்டும். இன்னும் இரண்டு நாட்கள் ஆனால், வைத்தியசாலையிலிருந்து மருந்து வாங்க வேண்டும். பார்லி நீரில் பாலையும் சர்க்கரையையும் கலந்து கொடுக்க வேண்டுமென்று வைத்தியர் கூறியிருப்பதால், பார்லியையும் பாலையும் சர்க்கரையையும் வாங்க வேண்டும். நோயாளியின் விஷயம் இந்த வகையில் இருந்தது. அவளுடைய, குட்டப்பனுடைய செலவும் நடக்க வேண்டும்.

கல்யாணியின் கையில் இருந்த காசு முழுவதும் தீர்ந்து முடிந்தது. "என்னிடம் இருக்கும் காசு அனைத்தும் செலவழிந்து முடிந்தாலும், நோயைக் குணப்படுத்தி விட்டுத்தான் நான் அடங்குவேன்.'' இதுதான் அவளுடைய சபதம். இன்னொரு சபதம் அண்டா வாங்க வேண்டும் என்பது. ஒன்றுக்கொன்று முரண்படக் கூடிய இரண்டு சபதங்கள்! இரண்டையும் நிறைவேற்றுவதற்கு ஒரே ஒரு வழி மட்டுமே எஞ்சியிருந்தது- தாய்க் கோழியையும் சேர்த்து ஆறு பெட்டைக் கோழிகளும் நான்கு சேவல்களும்.

சேவல்களை விற்பதற்கு அவள் தீர்மானித்தாள். ஒன்பது சக்கரங்கள் வீதம், முப்பத்தாறு சக்கரங்களுக்கு நான்கு சேவல்களையும் விற்றாள்.

மருந்துகள் வாங்கி, பார்லி வாங்கி, பால் வாங்கி, சர்க்கரை வாங்கி வீட்டுக்குத் தேவைப்படும் செலவுகளையும் செய்தாள். பிறகு அதில் எதுவுமே மிச்சமில்லை.

இனி என்ன செய்வது? "என் பிள்ளையையே விற்றுக்கூட நோயை நான் குணப்படுத்துவேன்!'' அவள் பிடிவாதமான குரலில் தனக்குத் தானே கூறிக் கொண்டாள். பெட்டைக் கோழிகளையும் விற்பதற்குத் தீர்மானித்தாள்.

ஒரு பெட்டைக் கோழிக்கு பத்தரை சக்கரம்- மத்தாயி மாப்பிள்ளை சொன்னார். கல்யாணி ஒத்துக் கொண்டாள். ஆறு பெட்டைக் கோழிகளையும் பிடித்துக் கட்டிக் கொண்டு வந்து மத்தாயி மாப்பிள்ளைக்கு முன்னால் வைத்தாள். ஒரு வருட சம்பாத்தியத்தின் ஊற்றுக் கண்கள், அண்டா வாங்க வேண்டுமென்ற ஆசையின் குழந்தைகள், அவளுக்கு தினந்தோறும் முட்டைகள் தந்து கொண்டிருந்த பெட்டைக் கோழிகள்- கடவுளே! அந்தக் கோழிகள் அனைத்தும் அவளையே பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருந்தன. அவளுடைய கண்களிலிருந்து கண்ணீர் அருவியென வழிந்தது.

"என்ன அழறே!'' மத்தாயி மாப்பிள்ளை கேட்டார்.

"என் பிள்ளைகளைப்போல வளர்த்தேன், மத்தாயி மாப்பிள்ளை''. -அவள் தேம்பித் தேம்பி அழுது கொண்டே சொன்னாள்: "நான் இறந்தாலும், இவை எதையும் விற்கக் கூடாதுன்னு இருந்தேன். கையில பணம் இருந்தப்போ தந்த மனிதராச்சே! உடல்நலம் பாதிக்கப்படுறப்போ நாம பார்க்க வேண்டாமா?''

"பிறகு? நாம இல்லாம பிறகு யாரு பார்ப்பாங்க?'' அவர் அறுபத்து ஐந்து சக்கரங்களை எண்ணி கல்யாணியின் கையில் கொடுத்தார். கோழிகளைக் கூடைக்குள் போட்டு தலையில் வைத்துக் கொண்டு நடந்தார்.


அவள் கண்ணீர் விட்டவாறு அதையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். கோழிகள் கூடைக்குள்ளிருந்து தலையை முட்டிக்கொண்டு அவளையே பார்த்துக்கொண்டிருந்தன. மத்தாயி மாப்பிள்ளை சிறிது சிறிதாக நடந்து, அவளுடைய பார்வையிலிருந்து மறைந்தார். அவளுடைய ஆசைகளின் ஊற்றுக் கண்கள் வற்றிப் போய்விட்டன.

"என் ஓச்சிற கடவுளே!'' அவளுடைய தலை சுற்றியது. அவள் அதே இடத்தில் உட்கார்ந்து விட்டாள்.

கோபாலனின் நோய் குணமாகி, கொஞ்சம் கொஞ்சமாக திண்ணையிலும்... பிறகு... வாசலிலும் இறங்கி நடக்கலாம் என்ற நிலை அவனுக்கு உண்டானது.

கல்யாணி கூறினாள்: "செத்து உயிருடன் வந்தவராச்சே! என்னிடம் இருக்கும் அனைத்தும் முடிஞ்சாலும், எனக்கு இவர் கிடைச்சிட்டாரே!''

மிதுன மாதம் முதல் தேதி. அன்று ஓச்சிற திருவிழா ஆரம்பமாகும் நாள். பொழுது விடிவதற்கு முன்பே ஆட்கள் ஓச்சிறக்குச் செல்ல ஆரம்பித்தார்கள்.

கல்யாணி காலையிலேயே எழுந்து வாசலுக்கு வந்தாள். நங்ஙேலி கிழவியும் அவளுடைய மகளும் மகளின் பிள்ளைகளும் சேர்ந்து ஓச்சிறக்குப் போய்க் கொண்டிருந்தார்கள். நங்ஙேலி கிழவி கேட்டாள்: "கல்யாணி, நீ வரலையாடீ?''

கல்யாணியின் கண்கள் நிறைந்து விட்டன. துக்கம் அவளை ஊமையாக்கியது. அவள் எதுவும் கூறவில்லை.

தெற்குப் பக்க வீட்டு மாதவியும் அவளுடைய அம்மாவும் அக்காவின் கணவரும் பிள்ளைகளும் ஓச்சிறக்குச் செல்வதற்காக வந்து கொண்டிருந்தார்கள். "நாங்க போயிட்டு வரட்டுமா?'' மாதவி உரத்த குரலில் கேட்டாள்.

"ம்...'' கல்யாணி மெதுவாக முனகினாள். உதயமாகிக் கொண்டிருந்த சூரியனின் ஒளிக் கதிர்கள் பட்டு, அவளுடைய கண்ணீர்த் துளிகள் மின்னிப் பிரகாசித்துக் கொண்டிருந்தன.

நாணி வந்து கொண்டிருந்தாள். அவள் கல்யாணியைப் பார்த்ததும் சற்று நெளிந்து கொண்டே, கேவலமான ஒரு பார்வையைப் பார்த்தாள். கல்யாணியால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவள் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.

நாணி சிறிது தூரம் நடந்துவிட்டு, மீண்டும் திரும்பிப் பார்த்தாள்.

"பார்த்தேன்டீ... பார்த்தேன்...'' கல்யாணி பற்களைக் கடித்துக் கொண்டே முணுமுணுத்தாள்.

நாணி மீண்டும் திரும்பிப் பார்த்தாள். வெறுப்பு கலந்த ஒரு சிரிப்பு!

கல்யாணி காறித் துப்பினாள்: "ஓச்சிற கடவுள்னு ஒருத்தர் இருந்தால், அடுத்த வருடம் நானும் வருவேன்டீ...''

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.