Logo

ஏ தவ்சன்ட் டைம்ஸ் குட் நைட்

Category: சினிமா
Published Date
Written by சுரா
Hits: 4213

என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)

ஏ தவ்சன்ட் டைம்ஸ் குட் நைட்- A Thousand Times Good Night

(நார்வே திரைப்படம் 2013)

தவ்சன்ட் டைம்ஸ் குட் நைட் -- 2013 ஆம் ஆண்டில் திரைக்கு வந்த நார்வே நாட்டு திரைப்படம்.  படத்தின் இயக்குநர் எரிக் போப் (Erik Poppe).  படத்தின் கதாநாயகி ஜுலியட் பினோச்சே (Juliette Binoche).  ஆங்கில மொழியில் எடுக்கப்பட்ட இப்படம் 117 நிமிடங்கள் ஓடக் கூடியது.  2013 ஆம் ஆண்டில் நடைபெற்ற 'மான்ட்ரியல் உலக திரைப்பட விழாவில்' இப்படத்திற்கு நடுவர்களின் சிறப்பு விருது கிடைத்தது.

ஒரு பெண் புகைப்பட கலைஞரை மையமாக வைத்து எடுக்கப்பட்ட மாறுபட்ட படமிது.  படத்தின் கதை என்ன என்பதைப் பார்ப்போமா?

ரெபேக்கா (Rebecca) ஒரு பெண் புகைப்பட கலைஞர்.  சாதாரண புகைப்படங்களை எடுக்கக் கூடியவள் அல்ல.  சாகசக் களங்களில் துணிச்சலாக புகைப்படங்களை எடுக்கும் நவீன பெண் அவள்.  போர்க்களங்களுக்குச் சென்று எந்த வித பயமும் இல்லாமல் அவள் புகைப் படங்களை எடுப்பாள்.  அது பத்திரிகைகளிலோ அல்லது புத்தகத்திலோ பிரசுரமாகி, உலகமெங்கும் பேசப்படும். பல நாடுகளின் கவனத்தை அவளுடைய புகைப்படங்கள் ஈர்க்கும்.  அவள் திருமணமானவள். அவளுடைய கணவனின் பெயர் மார்க்கஸ்.  அவர்களுக்கு இரண்டு மகள்கள்.  மூத்த மகளின் பெயர் ஸ்டெப் (Steph).  இளைய மகளின் பெயர் லிஸா (Lisa).  அவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.  அவளுடைய குடும்பம் அயர்லேண்டில் இருக்கிறது.  குடும்பத்தை கிட்டத்தட்ட ரெபேக்காவின் கணவன் மார்க்கஸ்தான் பார்த்துக் கொள்கிறான்.  பெரும்பாலான நாட்களில் ரெபேக்கா தன் வீட்டிலேயே இருப்பதில்லை.  புகைப்படங்கள் எடுப்பதற்காக ஏதாவதொரு நாட்டின் போர்க்களத்தில் அவள் ஆர்வத்துடன் கேமராவைக் கையில் வைத்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருப்பாள்.

இப்படத்தின் ஆரம்ப காட்சி ஆஃப்கானிஸ்தானில் ஆரம்பிக்கிறது.  பர்தா அணிந்த பல பெண்கள் நின்று கொண்டிருக்கிறார்கள்.  ஒரு இளம் பெண்ணின் உடலில் வெடி பொருட்களை வைத்து சுற்றுகிறார்கள்.  அவள் ஒரு மனித வெடிகுண்டு என்பதை நாம் புரிந்து கொள்கிறோம்.  ஏதோ ஒரு காரணத்திற்காக அவள் மனித வெடிகுண்டாக ஆக்கப்பட்டிருக்கிறாள்.  அவளுக்கும் குடும்பம், உறவினர்கள், ரத்த சொந்தங்கள் என்று இருக்கிறார்கள்.  எனினும், சந்தர்ப்ப சூழ்நிலை அவளை அப்படிப்பட்ட ஒரு பயங்கரச் செயலில் இறக்கி விட்டிருக்கிறது.  அவளை இறுக அணைத்து பிரியா விடை கொடுக்கின்றனர் அங்கிருக்கும் பெண்கள். இந்தச் சம்பவங்கள் அனைத்தையும் ஒரு பெண் மிகவும் வேகமாக தன்னுடைய கேமராவில் புகைப் படங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறாள்; அவள்தான் -- ரெபேக்கா.

அங்கு ஒரு வேன் நின்று கொண்டிருக்கிறது.  அதில் அந்த 'மனித வெடிகுண்டு' பெண்ணை ஏற்றுகிறார்கள்.  தானும் அந்த வேனில் சிறிது தூரம் வருவதாக கூறுகிறாள் ரெபேக்கா.  அவளையும் அதில் ஏற்றிக் கொள்கிறார்கள் வேன் புறப்படுகிறது.

நீண்ட தூரம் பயணித்த வேன் காபுலுக்குள் (Kabul) நுழைகிறது.  நகரத்தின் ஒரு இடத்தில் வேன் நிற்கிறது.  வேனிலிருந்து இறங்கிய ரெபேக்கா, வெளியே நின்றவாறு உள்ளே பர்தா அணிந்து அமர்ந்திருக்கும் இளம் பெண்ணை புகைப்படங்கள் எடுக்கிறாள்.  அப்போது 'மனித வெடிகுண்டு' வெடிக்கப் போகிறது என்பதை அவள் உணர்ந்து கொள்கிறாள்.  சாலையில் மக்கள் ஏராளமாக நடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள், நகரமே மிகவும் பரபரப்பாக இருக்கிறது.  'எல்லோரும் தப்பித்துச் செல்லுங்கள்' என்று உரத்த குரலில் கத்துகிறாள், அதற்குள் மனித வெடிகுண்டு வெடித்து விடுகிறது.  இளம் பெண் அமர்ந்திருந்த கார் நெருப்பு பிடித்து எரிகிறது.  குண்டு வெடிப்பு காரணமாக மக்கள் செத்து விடுகிறார்கள்.  பலர் சிதறி, ஆங்காங்கே காயத்துடன் கிடக்கிறார்கள்.  பல இடங்களிலும் நெருப்பு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.  ரெபேக்கா ஒரு இடத்தில் உடலில் காயங்கள் பட்டு, மயங்கி விழுந்து கிடக்கிறாள், அவளுக்கு அருகில் அவளுடைய உயிருக்கு உயிரான கேமரா.

காயம் பட்டு மருத்துவமனையில் இருக்கும் ரெபேக்கா கண்களைத் திறக்கிறாள்.  அவளுக்கு எதிரே அவளுடைய அன்பு கணவன் மார்க்கஸ், அப்போதுதான் தான் உயிருடன் இருக்கிறோம் என்ற உண்மையே ரெபேக்காவிற்குத் தெரிய வருகிறது.  தன் குழந்தைகள் எங்கே என்று அவள் தன் கணவனிடம் கேட்க, அவன் பதிலெதுவும் கூறாமல் அமைதியாக இருக்கிறான்.  அவளுடைய காயங்கள் சற்று குணமாக, அவளுடன் காரில் தன்னுடைய வீட்டிற்கு வருகிறான்  மார்க்கஸ்.  காரைப் பார்த்ததும், அவளுடைய இரு பெண் குழந்தைகளான ஸ்டெப்பும், லிஸாவும் ஓடி வருகிறார்கள்.  நீண்ட நாட்களுக்குப் பிறகு ரெபேக்கா தன் குழந்தைகளைப் பார்க்கிறாள்.  அதேபோல அந்த அன்புச் செல்வங்கள் பல நாட்களுக்குப் பிறகு தங்களுடைய அன்னையைப் பார்க்கிறார்கள்.  ரெபேக்கா தன் மகள்களைக் கொஞ்ச, அவர்கள் தங்களின் தாய் மீது பாசத்தைப் பொழிகிறார்கள்.

தபால்காரர் ரெபேக்காவிடம் இரு தோல் பைகளைக் கொண்டு வந்து கொடுக்கிறார்.  ஒரு பையில் அவளுடைய கிழிந்த, அழுக்குப் படிந்த, குண்டு வெடிப்பு சம்பவத்தின் போது அவள் அணிந்திருந்த ஆடைகள்... இன்னொரு பையில் புழுதி படிந்த அவளுடைய கேமரா.

வீட்டின் அறையில் அமர்ந்து தன் கேமராவில் பதிவான புகைப்படங்களைப் பார்க்கிறாள் ரெபேக்கா.  பர்தா அணிந்த ஆஃப்கானிஸ்தான் பெண்கள், மனித வெடிகுண்டாக மாறிக் கொண்டிருக்கும் இளம் பெண், அவளுக்கு பிரியா விடை கொடுக்கும் மற்ற பெண்கள், காருக்குள் அமர்ந்திருக்கும் 'மனித வெடி குண்டு' பெண், குண்டு வெடிக்கும் காட்சி, மக்கள் சாலையில் பயந்து, சிதறியோடும் காட்சி -- அவை அனைத்தும் அந்த கேமராவில் அடுத்தடுத்து வருவதை அவள் பார்க்கிறாள்.  அவளுடைய மனம் தான் பார்த்த காட்சிகளைத் திரும்பவும் அசை போடுகிறது.

மார்க்கஸ் அவள் மீது மிகுந்த கோபத்தில் இருக்கிறான்.  'நீ புகைப்படம் எடுப்பதற்காக எங்கெங்கோ ஆபத்து நிறைந்த இடங்களுக்குச் சென்று விடுகிறாய்.  அந்த நேரத்தில் நானும், நம் இரு மகள்களும் மிகுந்த பதட்டத்தில் இருக்கிறோம்.  நீ உயிருடன் திரும்ப வருவாயா, மாட்டாயா என்ற சந்தேகத்துடன் எப்போதும் இருக்க வேண்டியதிருக்கிறது.  எவ்வளவு நாட்களுக்குத்தான் இப்படிப்பட்ட மன கஷ்டத்துடன் இருப்பது?  அதனால்... இப்போது நான் தெளிவான குரலில் கூறுகிறேன், நான் உன்னுடன் வாழ விரும்பவில்லை. நீ எங்களுடன் வாழ வேண்டும் என்று நினைத்தால், நீ ஒரேயொரு முடிவைத்தான் எடுக்க வேண்டும்.  ஒன்று -- எங்களுடன் நீ இங்கேயே இருக்க வேண்டும்.  இல்லாவிட்டால், ஒரேயடியாக நீ எங்களை விட்டுப் பிரிந்து சென்று விடு.  உன்னை நாங்கள் நினைக்கவே மாட்டோம்.  என் மகள்களை நான் வளர்த்துக் கொள்கிறேன்' என்கிறான் அவன்.


எந்தவித கவலையும் இல்லாமல் உறங்கிக் கொண்டிருக்கும் தன் இளைய மகள் லிஸாவையும், படிப்பில் மிகவும் கெட்டிக்காரியான தன் மூத்த மகள் ஸ்டெப்பையும் அவள் நினைத்துப் பார்க்கிறாள், தன் மீது அளவற்ற அன்பு வைத்திருக்கும் தன் கணவனையும்தான்.  தன்னால் தன் குடும்பத்தில் உள்ளவர்கள் பதட்டத்துடனும், சந்தோஷமற்றும் இருப்பதை அவள் விரும்பவில்லை.  அதனால் அவள் ஆழமாக சிந்தித்து ஒரு முடிவை எடுக்கிறாள்.  அது -- இனிமேல் குடும்ப வாழ்க்கையில் மட்டும் கவனத்தைச் செலுத்துவது என்பது.

தன் கணவனுடனும், பிள்ளைகளுடனும் அவள் நேரத்தைச் செலவிடுகிறாள்.  எல்லோரும் சேர்ந்து பல இடங்களுக்குச் செல்கிறார்கள்...  பார்க்கிறார்கள்.  வெளியே ரெஸ்ட்டாரெண்டுகளுக்குச் சென்று சந்தோஷத்துடன் சாப்பிடுகிறார்கள்.   அவளைப் பார்ப்பவர்கள் அவளை தலையில் வைத்து புகழ்கிறார்கள்.  'நீங்கள் மிகவும் தைரியசாலி... திறமைசாலி... அடுத்து எந்த நாட்டிற்கு புகைப்படங்கள் எடுப்பதற்காகச் செல்கிறீர்கள்?'  என்று கேட்கிறார்கள், அதற்கு அவள் 'நான் எங்கும் போவதாக இல்லை.  இனிமேல் நான் என் குடும்பத்துடன் மட்டுமே' என்கிறாள். அதைக் கேட்டு அவர்கள் ஆச்சரியத்துடன் அவளையே பார்க்கிறார்கள்.

தன் இளைய மகளுக்கு பூனையொன்றை வாங்கித் தருகிறாள் ரெபேக்கா. தன் மூத்த மகள் படிக்கும் கல்விக் கூடத்திற்குச் சென்று அவள் நடனமாடுவதை அவள் மகிழ்ச்சியுடன் பார்க்கிறாள்.  தன் கணவனிடம் மனம் விட்டு பல விஷயங்களையும் பேசுகிறாள்.  இப்படியே வாழ்க்கை சந்தோஷமாக போய்க் கொண்டிருக்கிறது, எல்லாவற்றையும் மறந்து விட்டு, சிரித்த முகத்துடன் வலம் வந்து  கொண்டிருக்கிறாள் ரெபேக்கா.

இதற்கிடையில் அவளுடைய நூலைப் பதிப்பிக்கும் பதிப்பாளர், அவள் அனுப்பி வைத்திருந்த சில புகைப்படங்களைப் பிரசுரம்  செய்ய முடியாது என்று கூறுவதாகவும், மேலிடங்களிலிருந்து வரும் அழுத்தமே அதற்குக் காரணம் என்றும், பதிப்பகத்திலிருக்கும் ஒரு தொலைபேசியில் கூறுகிறார்.  அதைக் கேட்டதும் கோபத்தின் உச்சிக்கே சென்று விடுகிறாள் ரெபேக்கா.  'நான் அனுப்பிய புகைப் படங்கள் கட்டாயம் பிரசுரிக்கப்பட வேண்டும்.  இல்லாவிட்டால், நான் வேறு முடிவை எடுக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகி விடும்' என்று அழுத்தமான குரலில் கூறுகிறாள் ரெபேக்கா.

ரெபேக்கா தன் கணவன், பிள்ளைகளுடன் சந்தோஷமாக நாட்களைச் செலவிட்டுக் கொண்டிருக்கிறாள்.  வெளியே பொது இடமொன்றில் அவளைப் பார்த்த, அவளுக்கு நன்கு தெரிந்த நண்பர் ஒருவர் 'கென்யாவிலிருந்து வருகிறேன், நீங்கள் அங்கு போகவில்லையா?  ஆபத்து எதுவும் இல்லை.  நீங்கள் போகலாம்' என்கிறான், அதற்கு ரெபேக்கா 'நான் எங்குமே போவதாக இல்லை.  குடும்ப வாழ்க்கையில் மட்டும் கவனம் செலுத்தலாம் என்றிருக்கிறேன்' என்கிறாள்.

நாட்கள் நகர்கின்றன.

தன்னுடைய படிப்பின் ஒரு பகுதியாக ஆஃப்ரிக்காவைப் பற்றி தான் ஒரு சொற்பொழிவு ஆற்ற வேண்டும் என்றும், அதனால் அதைப் பற்றிய தகவல்கள் தனக்கு தேவைப்படுகிறது என்றும் கூறுகிறாள் ரெபேக்காவின் மூத்த மகள் ஸ்டெப்.  அதைக் கேட்ட மார்க்கஸ் 'அதற்கு நான் ஒரு தீர்மானம் எடுத்திருக்கிறேன்... ஆமாம்...  நீ உன் அம்மாவுடன் சேர்ந்து கென்யாவிற்குச் செல்லுங்கள்' என்கிறான்.  'நான் இனி எங்கும் போவதாக இல்லை' என்று ரெபேக்கா கூற, 'அங்குதான் அமைதி நிலவுகிறது என்கிறார்களே!  நீ நம் மகளை அங்கு அழைத்துக் கொண்டு செல்' என்கிறான் முழுமையான சம்மதத்துடன் -- ரெபேக்காவிடம்.  அவளின் சந்தோஷத்திற்குக் கேட்கவா வேண்டும்?

 

ரெபேக்காவும், மகள் ஸ்டெப்பும் கென்யாவிற்குச் செல்லும் விமானத்தில் அமர்ந்திருக்கிறார்கள்.  தன்னுடைய ஒரு சிறிய கேமராவை ஸ்டெப்பிடம் தந்து, அதை வைத்து எப்படி புகைப் படங்களை எடுப்பது என்பதை அவளுக்குச் சொல்லித் தருகிறாள் ரெபேக்கா.

 

ஒரு காரில் ரெபேக்காவும், மகள் ஸ்டெப்பும் போய் ஒரு இடத்தில் இறங்குகிறார்கள்.  அது ஒரு அகதிகள் முகாம்.  கருப்பின மக்கள் அங்கு ஏராளமாக கூடாரங்கள் அமைத்து துயர வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.  அவர்களை வளைத்து, வளைத்து தன்னுடைய பெரிய கேமராவில் புகைப்படங்கள் எடுக்கிறாள் ரெபேக்கா, ஸ்டெப் தான் வைத்திருக்கும் சிறிய கேமராவில் படங்களை எடுக்கிறாள்.  அவர்களை அங்கு அழைத்துச் சென்றவர்கள் 'ரெபேக்கா.... இங்கிருந்து கிளம்புவோம்.  நிலைமை மோசமாகிறது' என்கிறார்கள் -- பதட்டத்துடன்.  அதைத் தொடர்ந்து, குண்டுகள் வெடிக்கும் சத்தம்.  ஒரு தீவிரவாத குழு மனம் போனபடி சுடுகிறது.  மக்கள் பயந்து ஓடுகிறார்கள்.

ரெபேக்கா 'என் மகளை நீங்கள் பத்திரமாக அழைத்துச் செல்லுங்கள்.  என்னைப் பற்றி கவலைப்படாதீர்கள்' என்று கூறி விட்டு, சிறிதும் பயமே இல்லாமல் கூடாரங்களுக்குப் பின்னால் மறைந்து கொண்டு, புகைப்படங்கள் எடுக்கிறாள்.  ஆயுதங்களை ஏந்திய மனிதர்கள் இரக்கமில்லாமல் சுடுவது, ஏழை ஆஃப்ரிக்க அகதிகள் பயந்து ஓடுவது, செத்து மடிவது, காயங்கள் படுவது.... அனைத்தும் அவளுடைய கேமராவில் பதிகின்றன.

இரவு நேரம்.  தாங்கள் தங்கியிருந்த இடத்தில் வலைகளுக்குள் படுத்திருக்கிறார்கள் ரெபேக்காவும், ஸ்டெப்பும்.  'இங்கு என்ன நடந்தது என்பது அப்பாவிற்குத் தெரிய வேண்டாம்' என்கிறாள் ஸ்டெப்.

மீண்டும் அயர்லேண்ட். ரெபேக்காவும், மகள் ஸ்டெப்பும் வீட்டிற்கு வருகிறார்கள்.  முன்பு இருந்ததைப்போல இல்லாமல், ஒரு இறுக்கமான சூழ்நிலை வீட்டில் நிலவிக் கொண்டிருக்கிறது.  தன் தாய் மீது கோபத்துடன் இருக்கிறாள் ஸ்டெப்.  கென்யாவில் தன்னை அனுப்பிவிட்டு, உயிரைப் பணயம் வைத்து புகைப்படங்கள் எடுத்த தன் அன்னையின் செயல் அவளுக்குப் பிடிக்கவில்லை.  அதனால் அவள் தன் தாயுடன் பேசுவதைக் கூட விரும்பாமல் இருக்கிறாள்.  ரெபேக்கா தன் மகளிடம் பேச முயற்சிக்க, ஸ்டெப் அதைத் தவிர்க்கிறாள்.

ஒரு நாள் தன் கேமராவில் பதிவான கென்யாவில் எடுக்கப்பட்ட காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள் ரெபேக்கா, தொடர்ந்து ஸ்டெப்பின் சிறிய கேமராவில் படமாக்கப்பட்ட காட்சிகளையும்... அதில் ரெபேக்கா காரில் ஏற மறுத்தது, தன் மகளை மட்டும் அழைத்துச் செல்லும்படி கூறியது, அவள் மட்டும் தனியே சென்று புகைப்படங்கள் எடுத்தது...  இவை அனைத்தும் பதிவாகி இருக்கின்றன.  அப்போது அறைக்குள் வந்த மார்க்கஸ் அந்த காட்சிகளைப் பார்த்து விடுகிறான்.

அவ்வளவுதான் -- எரிமலையாக மாறி விடுகிறான் மார்க்கஸ்.  தன் மனைவி இன்னும் சிறிது கூட மாறவில்லை என்று அவன் முடிவு செய்கிறான்.  விளைவு -- அவளை அவன் வீட்டிலிருந்து வெளியேற்றுகிறான்.  அவள் மன்றாடிப் பார்க்கிறாள்.  ஆனால், அவனோ கேட்பதாக இல்லை.

தன் நண்பர்கள் வீட்டில் தங்குகிறாள் ரெபேக்கா, பின்னர் தன்னுடைய வீட்டிற்கு அவள் வருகிறாள்.  அவளை அவளுடைய கணவன், மகள்கள் இன்முகத்துடன் வரவேற்கவில்லை.  ஒரு வித கோபத்துடன் அவர்கள் இருக்கிறார்கள்.


இரவு நேரம்.  அறையில் கண்களில் நீர் கசிய, அமர்ந்திருக்கிறாள் ரெபேக்கா.  அவளுக்கு முன்னால் ஸ்டெப்.  தன் தாயின் முகத்தில் பரவியிருக்கும் உணர்ச்சிகளை கேமராவில் படம் பிடிக்கிறாள் அவளின் அன்பு மகள் ஸ்டெப்.

ரெபேக்கா பதிப்பாளருக்கு அனுப்பி வைத்த புகைப்படங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டன என்ற தகவல் ரெபேக்காவிற்குக் கிடைக்கிறது.  அதைக் கேட்டு மிகவும் சந்தோஷப்படுகிறாள் ரெபேக்கா.

ஸ்டெப்பின் பள்ளி.  மாணவர்கள் ஒவ்வொருவரும் ஒரு தலைப்பில் பேச, ஸ்டெப் தான் தன்னுடைய அன்னையுடன் சேர்ந்து கென்யாவிற்குச் சென்றது, அகதிகளின் முகாமில் புகைப்படங்கள் எடுத்தது, தீவிரவாதிகள் ஆயுதங்களுடன் வந்து துப்பாக்கியால் சுட்டது, மக்கள் இறந்து விழுந்தது, உயிரைப் பணயம் வைத்து தன் தாய் புகைப் படங்கள் எடுத்தது என்று பலவற்றையும் கூறி 'அப்படிப்பட்ட துணிச்சலான பெண் என் அருமைத் தாய்!'  என்கிறாள் மனம் நெகிழ.  அதை கதவிற்கு அருகில் நின்றிருக்கும் ரெபேக்கா கேட்கிறாள்.  அவளுடைய கண்களில் ஆனந்தக் கண்ணீர்....

இரவு வேளை.  தன் இளைய மகள் லிஸாவின் காதில் ரெபேக்கா 'மகளே! குட்பை...' என்கிறாள்

தன் மூத்த மகள் ஸ்டெப்பைப் பாசம் பொங்க பார்த்தவாறு 'மகளே.... நான் புறப்படுகிறேன்.  சீக்கிரமே திரும்பி வருவேன்.  அதுவரை எனக்காக காத்திரு' என்கிறாள் ரெபேக்கா, தன் அன்னைக்கு பிரியா விடை தருகிறாள் ஸ்டெப்.

தன் கணவன் மார்க்கஸிடமும் அவள் விடை பெறுகிறாள்.

அவளால் நிச்சயம் கூண்டுப் பறவையாக இருக்க முடியாது.  அவள் ஒரு சுதந்திரப் பறவை.  அவளுக்கென்று கடமைகள் நிறைய இருக்கின்றன.  அவற்றை நிறைவேற்றுவதற்குப் பிறந்தவள் அவள்.

தன் கடமைகளைச் செய்வதற்கு அவள் புறப்பட்டு விட்டாள்.

மீண்டும் ஆஃப்கானிஸ்தான்.

சோதனைச் சாவடியில் சோதனை.  அவளைச் சோதித்து விட்டு, அனுப்புகிறார்கள் -- கேமராவுடன்தான்.

ஒரு இளம் பெண்ணை மனித வெடிகுண்டாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்.  எந்த வித பயமும் இல்லாமல் நின்றிருக்கிறாள் பர்தா அணிந்த அந்தப் பெண்.  அந்த காட்சிகளை மிகவும் அமைதியாக தன் கேமராவில் புகைப்படங்களாக பதிவு செய்து கொண்டிருக்கிறாள் ரெபேக்கா.

அப்போது அவள் என்ன நினைத்தாளோ.....  தரையில் அமர்ந்து உரத்த குரலில் அடக்க முடியாமல் அழுகிறாள் -- 'இந்தச் செயலை நிறுத்த மாட்டீர்களா?' என்று கேட்டவாறு.

அத்துடன் படம் முடிவடைகிறது.

படம் முடிந்து பல மணி நேரங்கள் ஆன பிறகும், நம் மனங்களில் துணிச்சல் மிக்க பெண் புகைப்படக்காரராக நடித்த ஜுலியட் பினோச்சேயின் அற்புதமான நடிப்புத் திறமை என்றும் மறக்க முடியாத அளவிற்கு நிரந்தரமாக தங்கி நிற்கும்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.