Logo

ஹமூன்

Category: சினிமா
Published Date
Written by சுரா
Hits: 4924
Hamoun

என்னை கவர்ந்த திரைப்படங்கள்சுரா (Sura)

ஹமூன் - Hamoun

(ஈரானிய திரைப்படம்)

1990ஆம் ஆண்டில் திரைக்கு வந்த ஈரானிய திரைப்படம் - Hamoun. 122 நிமிடங்கள் ஓடக் கூடிய இந்தத் திரைப்படத்தை இயக்கியவர் உலக புகழ் பெற்ற ஈரானிய திரைப்பட இயக்குநரான Dariush Mehrjui. பொருளாதார ரீதியாக நடுத்தர நிலையில் இருக்கும் Hamid Hamoun என்ற 30 வயதைத் தாண்டிய மனிதனையும், அவன் திருமணம் செய்து கொண்ட பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த, அழகான பெண்ணான Mahshidஐயும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமிது.

பாரசீக மொழியில் இப்படம் எடுக்கப்பட்டது.

1997ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒரு திரைப்பட ஆய்வில், ஈரான் நாட்டைச் சேர்ந்த திரைப்பட விமர்சகர்கள்' The best Iranian Film ever made' என்று 'Hamoun' படத்தைத் தேர்ந்தெடுத்தார்கள். இந்தப் படத்தின் இயக்குநரான Dariush Mehrjui அதற்கு முன்பு இயக்கி, உலகமெங்கும் பேசப்பட்ட 'The cow' என்ற படத்திற்கு  இதே மரியாதை, ஈரானிய திரைப்பட விமர்சகர்களால் தரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த அளவிற்கு எல்லோராலும் தலையில் வைத்து கொண்டாடப்பட்ட 'Hamoun' படத்தின் கதை என்ன? இதோ:

Hamid Hamoun முப்பது வயதைத் தாண்டிய ஒரு மனிதன். அவன் ஏற்றுமதி - இறக்குமதி செய்து கொண்டிருக்கும் ஒரு நிறுவனத்தில் ஒரு முக்கியமான பொறுப்பில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான். பகுதி நேர பள்ளிக்கூட ஆசிரியராகவும் அவன் ஒரு உயர்நிலைப் பள்ளிக் கூடத்தில் பணியாற்றுகிறான். இது தவிர, பி.எச்.டி. வேறு பண்ணிக் கொண்டிருக்கிறான். ஒரு மிகப் பெரிய எழுத்தாளனாக வர வேண்டும் என்பது அவனுடைய தீராத ஆசை. அதனால் எப்போது பார்த்தாலும் புத்தகங்களும் கையுமாக அவன் அலைந்து கொண்டிருக்கிறான். Kierkegaard எழுதிய 'Fear and Trembling', J.D. Salinger எழுதிய 'Franny and zooey', Pirsig எழுதிய 'Zen and the Art of Motorcycle Maintenance' ஆகிய நூல்களை அவன் எப்போதும் தன்னிடம் வைத்திருக்கிறான்.

Mahshid நல்ல வசதி படைத்த குடும்பத்தில் பிறந்த இளம்பெண். அவள் தன் வாழ்க்கைப் பாதையில் ஹமூனைப் பார்க்கிறாள். அவன் அறிவாளித்தனமாக பேசுவதும், முற்போக்கான சிந்தனைகளுடன் இருப்பதும், கவிதைகளை சுவாரசியமாக கூறுவதும், எப்போதும் பலவகையான நூல்களைப் படித்துக் கொண்டிருப்பதும் அவளுக்குப் பிடிக்கிறது. அவன் பண வசதி நிறைந்த குடும்பத்தில் பிறந்தவனல்ல. சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவன் என்ற உண்மை நன்கு தெரிந்தும், அவனை அவள் திருமணம் செய்து கொள்கிறாள். Mahshid இன் தாய், தந்தை இருவருக்குமே அவளுடைய அந்தச் செயல் சிறிதும் பிடிக்கவில்லை. 'நம் நிலை எங்கே? அவன் எங்கே?' என்கிறார்கள் கவலையுடனும், கோபத்துடனும். எனினும், பணக்கார இரத்தம் அவளுக்குள் ஓடிக் கொண்டிருந்ததால், தன் பெற்றோர் கூறியதை மஷித் சிறிது கூட காதில் போட்டுக் கொள்ளவில்லை. கட்டுப்பாடுகள் நிறைந்த ஈரானில், பெற்றோருக்கு எதிராக ஒரு பெண் இப்படி முடிவு எடுப்பது என்பது சாதாரண ஒரு விஷயமல்ல. எனினும், மஷித் தன் விருப்பப்படி ஒரு முடிவை அழுத்தமாக எடுக்கிறாள் என்று தன் திரைப்படத்தில் காட்டுவதன் மூலம், ஒரு பெண் நல்லதோ - கெட்டதோ சுயமாக தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஈரானின் மற்ற பெண்களின் மனங்களில் ஆழமாக ஊன்றுவதற்கு இப்படத்தின் இயக்குநரான Dariush Mehrjui ஆசைப்படுகிறார் என்பதை எல்லோராலும் புரிந்து கொள்ள முடிந்தது.

எல்லோரின் விருப்பத்தையும் மீறி, தான் நினைத்தபடி ஹமூனுடன் இல் வாழ்க்கையில் மஷித் இணைந்ததென்னவோ நல்ல விஷயம்தான். ஆனால், அந்த திருமண உறவு எவ்வளவு நாட்கள் நீடித்தது? 'ஆசை அறுபது நாள். மோகம் முப்பது நாள்' என்று அவர்களுடைய வாழ்க்கை ஆகிப் போனதுதான் நமக்கு வருத்தத்தைத் தரக் கூடிய விஷயமே.

ஆரம்பத்தில் அவர்களுடைய திருமண வாழ்க்கை நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. தன் மனைவி மஷித் மீது நிறைய அன்பும், காதலும் வைத்திருந்தான் ஹமூன். அவளுக்கும் அவன் மீது முழுமையான ஈடுபாடும், அன்பும் இருந்தன. மஷித்திற்குள்ளும் ஒரு தனிப்பட்ட கலை ஆர்வம் இருந்தது. ஒரு abstract painter ஆக வர வேண்டும் என்று அவள் ஆசைப்பட்டாள். அதற்காக வீடெங்கும் ஓவியங்களை வரைந்து வைத்து, வீட்டையே ஓவியக் கூடமாக ஆக்கி வைத்திருந்தாள். தன் விருப்பப்படி பல வர்ண சாயங்களையும் தெளிப்பது, தான் நினைத்தபடி தகர டப்பாவில் சாயத்தைக் கொண்டு வந்து எதைப் பற்றியும் கவலைப்படாமல், தன்னுடைய ஓவியத்தின் மீது ஊற்றுவது, அதை மிக உயர்ந்த 'abstact' ஓவியமாக நினைப்பது என்று அவளுடைய நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருந்தன. அவளுடைய ஓவிய ஆர்வத்தை வளர்ப்பதற்கும், அட்டைகளையும் துணிகளையும் வாங்கிக் கொடுப்பதற்கும், பல வர்ண சாயங்களை வாங்கித் தருவதற்குமே ஹமூனின் வருமானத்தின் பெரும் பகுதி செலவாகிக் கொண்டிருந்தது.

ஒரு வகையில் அது அவனுக்கு வெறுப்பை அளிக்கும் ஒரு விஷயமாகத்தான் இருந்தது. எனினும், அவள் மீது கொண்டிருந்த அளவற்ற அன்பு காரணமாகவும், பெற்றோரின் எதிர்ப்பை மீறி தன்னை ஏற்றுக் கொண்டவள் என்ற உயர்ந்த எண்ணத்தின் காரணமாகவும் அவன் அவளுடைய செயல்கள் எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டான். இப்படியே அவர்களுடைய திருமண வாழ்க்கை ஏழு வருடங்களைத் தாண்டி விட்டது. அந்த உறவின் பரிசாக அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு இப்போது வயது ஐந்து. அவன் பள்ளிக் கூடத்தில் படித்துக் கொண்டிருந்தான். தன் மகனின் மீது அளவற்ற பாசம் ஹமூனுக்கு.


வீடெங்கும் தான் வரைந்து அடுக்கி வைத்திருந்த தன்னுடைய மாறுபட்ட சிந்தனையில் பிறந்த ஓவியங்களை வைத்து ஒரு கண்காட்சி நடத்தினாள் மஷித். தன் விருப்பப்படி சாயங்களைத் தெளித்தும், சிதறச் செய்தும், ஊற்றியும் உண்டாக்கிய அவளுடைய 'நவீன ஓவியங்களை'ப் பார்க்க வந்தவர்கள் ஆஹா ஓஹோ என்று புகழ்ந்தனர். அவற்றில் ஏதோ மிகப் பெரிய விஷயங்கள் பூடகமாக மறைந்திருக்கின்றன என்று அவளைப் பார்த்து பாராட்டினர். ஒரு மிகப் பெரிய தொழிலதிபர் அதிகமான விலைக்கு காசோலையில் கையெழுத்துப் போட்டுத் தந்து, நான்கு ஓவியங்களை வாங்கினார்கள். அவரைப் போலவே வேறு சிலரும் கூட ஓவியங்களை விலைக்கு வாங்கினார். தன்னையே மஷித்தால் நம்ப முடியவில்லை. தன்னுடைய ஓவியங்களுக்கு இப்படியொரு வரவேற்பா, இந்த அளவிற்கு மதிப்பு இருக்கிறதா என்று மனதிற்குள் கேள்விகள் கேட்டு, அவளே சந்தோஷப்பட்டும் கொண்டாள். தன் மனைவியின் திறமைக்குக் கிடைத்த அங்கீகாரத்தைப் பார்த்து உண்மையிலேயே ஆச்சரியப்பட்டுப் போய் விட்டான் ஹமூன். ஒரு வகையில் அந்த விஷயம் அவனுக்கு சந்தோஷத்தைத் தந்தாலும், இன்னொரு கோணத்தில் - அவள் மீது அவனுக்கு அது பொறாமையையும் உண்டாக்கியது.

ஒரு நாள் தன்னுடைய வீட்டின் படிகளில் ஹமூன் ஏறிச் சென்று கொண்டிருந்தான். அவனுக்கு முன்னால் அவனுடைய வயதான வீட்டின் வேலைக்காரப் பெண் பழங்கள், காய்கறிகள், இரண்டு பெரிய மீன்கள் ஆகியவற்றுடன் ஏறி போய்க் கொண்டிருந்தாள். ஏதோ அவசரத்தில் அவளை முந்திச் செல்ல ஹமூன் முயல, சற்று அவன் இடித்து, அந்தப் பெண் படிகளில் தடுமாறி கீழே விழுகிறாள். அவளின் கையிலிருந்த பழங்கள், காய்கறிகள், மீன்கள் அனைத்தும் சிதறி கீழே விழுகின்றன. அதற்கு அருகில் - மஷித் வரைந்து வைத்திருந்த ஓவியம் இருக்கிறது. அதன் மீது மீன்கள், பழங்கள், காய்கறிகள் அனைத்தும் விழ, ஓவியம் பலமாக பாதிக்கப்பட்டு விடுகிறது. அதைப் பார்த்து ஆவேசத்தின் உச்சிக்கே சென்று விடுகிறாள் மஷித் 'நான் சிரமப்பட்டு வரைந்த ஓவியம்! இப்படி பாழ் பண்ணி விட்டீர்களே!' என்று வாய்க்கு வந்தபடி கடுமையான சொற்களை பயன்படுத்தி, ஹமூனைத் திட்டுகிறாள் மஷித். அவனும் அவளை விடுவதாக இல்லை. 'யாரைப் பார்த்து திட்டுகிறாய்? நான் இவ்வளவு நாட்களும் ஏதோ பொறுமையாக இருந்தேன். எல்லா இடங்களிலும் ஓவியங்களை வரைந்து வைத்து, எனக்கு வீட்டில் சிறிது கூட மன நிம்மதி இல்லாமல் ஆக்கி விட்டாய். நான் பி.எச்டி. படித்து, அதில் தேர்ச்சி பெற வேண்டும் என்று எவ்வளவோ ஆசையுடன், அதில் முழுமையாக ஈடுபட்டேன். ஆனால், வீடு முழுக்க 'நவீன ஓவியங்கள்' என்ற பெயரில் எதையெதையோ வரைந்து, எங்கு பார்த்தாலும் அடுக்கி வைத்திருக்கும் சூழ்நிலையில் நான் எப்படி முழு மனதுடன் என் படிப்பில் கவனம் செலுத்த முடியும்? உன் சுய நலத்தால் என்னுடைய பல வருட இலட்சியத்தை நிறைவேற்ற முடியாத மன நிலையில் நான் இருக்கிறேன்' என்கிறான் ஹமூன்- கோபம் நிறைந்த குரலில். அதைக் கேட்டு ஆத்திரத்தின் உச்சிக்கே சென்று விடுகிறாள் மஷித்.

ஓவியக் கண்காட்சியில் தன்னை எல்லோரும் மனம் திறந்து பாராட்டியதும், தன்னுடைய ஓவியங்களை நல்ல விலை கொடுத்து வாங்கியதும் அவனுக்குப் பிடிக்காமல் போய் விட்டது என்றும், அதனால் தன் மீது அவனுக்குப் பொறாமை உண்டாகி விட்டது என்றும், தன்னுடைய வளர்ச்சி அவனுக்குப் பிடிக்காத விஷயமாகி விட்டது என்றும் அவள் குற்றம் சுமத்துகிறாள். அத்துடன் நின்றால் பரவாயில்லை- அவனை தான் விவாகரத்து செய்ய தீர்மானித்து விட்டதாகவும் கூறுகிறாள். இனிமேல் அவனுடன் தான் ஒரு நிமிடம் கூட வாழ விரும்பவில்லை என்று திடமான குரலில் கூறுகிறாள் அவள். அதைக் கேட்டு ஹமூன் அதிர்ச்சியடைந்து விடுகிறான். அவளின் மீது அவனுக்கு இப்போதும் அன்பு இருக்கத்தான் செய்கிறது. அதை அவன் அவளிடம் திரும்பத் திரும்ப கூறவும் செய்கிறான். ஆனால், அவள்தான் அதைக் காது கொடுத்து கேட்காமலே இருக்கிறாள். 'நீ இல்லாத வாழ்க்கையை என்னால் நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை' என்கிறான் அவன். அவளோ 'நான் எடுத்த முடிவில் மாற்றமே இல்லை. நீங்கள் எனக்கு தேவையே இல்லை. விவாகரத்து செய்யப் போவது உறுதி'  என்கிறாள் அவள். தன் மனைவிக்கு சிறிது கூட தன் மீது அன்பு என்ற ஒன்று இல்லாமற் போய் விட்டதே என்று நினைத்து அவன் கவலைப்படுகிறான். அதைப் பற்றியெல்லாம் சிறிதும் கவலைப்படாமல் மஷித் விவாகரத்துக்கு மனு போடுகிறாள்.

இதுவரை நாம் வாசித்தது அனைத்தும் 'ஃபிளாஸ் பேக்' காட்சிகள். ஹமூன்- மஷித் இருவரின் வாழ்க்கையிலும் இதற்கு முன்பு நடைபெற்ற சம்பவங்கள்.

படத்தின் ஆரம்ப காட்சியில் ஒரு வக்கீலின் வீட்டு மொட்டை மாடியில் அழுக்கு பேன்ட்டுடனும், பனியனுடனும் அமர்ந்திருக்கிறான் கவலையே உருவான ஹமூன். அவன் மஷித்திடமிருந்து வெளியேற்றப்பட்டு விட்டான். தற்போது வக்கீல் வீட்டு மொட்டை மாடிதான் அவனுடைய இருப்பிடம். அவனைச் சுற்றிலும் தாள்கள். அனைத்தும் பிஎச்டி. ஆய்வுக்காக அவன் எழுதிய ஆராய்ச்சி கட்டுரைகள். காற்று பலமாக வீச, அந்த தாள்கள் பறக்கின்றன. அவன் சில தாள்களை ஓடி ஓடி பிடிக்கிறான். சில வானத்தில் பறந்து கீழே இருக்கும் சாலையில் போய் விழுகின்றன. அமைதியற்ற மனதுடன் தவித்துக் கொண்டிருக்கிறான் ஹமூன். அப்போது வக்கீல் வருகிறார். 'உன்னை இங்கு பத்திரமாக நான் பார்த்துக் கொண்டிருப்பதே பெரிய விஷயம்' என்னும் வக்கீல் தொடர்ந்து 'உன் மனைவி மஷித் உன்னை விவாகரத்து செய்வதில் மிகவும் பிடிவாதமாக இருக்கிறாள். நீ பணக்காரப் பெண் வேண்டும் என்று ஆசைப்பட்டாய் அல்லவா? நன்கு அனுபவி' என்கிறார். அதற்கு ஹமூன் 'நான் எந்தக் காலத்திலும் அவளின் வசதி மீது ஆசைப்பட்டதில்லை. நான் அவளின் மீது உண்மையான அன்பு வைத்திருந்தேன். அவளின் மீது எனக்கு அளவற்ற அன்பு இருக்கிறது' என்கிறான். அதற்கு வக்கீல் 'இனி அதைப் பற்றி கூறி பிரயோஜனமே இல்லை. நீ மஷித்தைத் திருமணம் செய்ததை அவளுடைய பெற்றோர் எந்தக் காலத்திலும் விரும்பியது இல்லை. இப்போது, உன் மனைவியை வேறொரு பணக்கார இளைஞனுக்கு திருமணம் செய்து கொடுப்பது என்று அவளுடைய பெற்றோர் முடிவு செய்திருக்கிறார்கள்' என்று கூறுகிறார். அதைக் கேட்டு மிகவும் கவலைப்படுகிறான் ஹமூன்.


வக்கீலுடன் சேர்ந்து நீதிமன்றத்திற்கு வருகிறான் ஹமூன். அங்கு மன நல நிபுணர் ஒருவர் வருகிறார். 'ஹமூனுக்கு மன நிலை பாதிக்கப்பட்டு விட்டது' என்று கூறுகிறாள் மஷித். அதே குற்றச்சாட்டை அவள் மீது அவன் கூறுகிறான். மன நல நிபுணர் மஷித்தின் மனதைச் சோதித்துப் பார்ப்பதற்காக பல கேள்விகளைக் கேட்கிறார். எல்லாவற்றுக்கும் உடனடியாக பதில் கூறுகிறாள் மஷித். 'நான் இந்த மனிதரை விவாகரத்து செய்வதில் மாற்றமே இல்லை. நான் இவருடன் வாழவே முடியாது. இவர் ஒரு முரட்டுத்தனமான மனிதர். உடல் பலம் இருக்கிறது என்பதை பயன்படுத்தி, மென்மையான ஒரு பெண்ணை நசுக்கி அமுக்கப் பார்க்கும் காட்டுத்தனமான குணம் கொண்ட ஒரு மனிதருடன் ஒரு பெண் எப்படி வாழ முடியும்? முடியவே முடியாது....' என்கிறாள்  அவள். ஆனால் ஹமூனோ 'நான் இவள் மீது உயிரையே வைத்திருக்கிறேன்' என்கிறான். இருவரில் யார் கூறுவது சரி, யார் பக்கம் நாம் நிற்பது என்று குழம்பிப் போய் நிற்கின்றனர் நீதிமன்றத்தில் இருப்பவர்களும், மன நல மருத்துவரும்.

குடும்ப வாழ்க்கையில் உண்டான பிரச்னைகளால் அமைதியற்ற சூழ்நிலைக்கு ஆளாகிறான் ஹமூன். அதனால் பகல் நேரங்களில் கூட அவன் பல நினைத்துப் பார்க்க முடியாத கனவுகளைக் காண்கிறான். ஒன்றோடொன்று சம்பந்தமில்லாத கனவுகள். அவனுடைய அன்றாடச் செயல்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றன. செய்ய வேண்டியவற்றைச் செய்யாமல் இருக்கிறான். செய்யக் கூடாததைச் செய்கிறான். தினமும் தன் அலுவலகத்திற்கு தாமதமாகவே செல்கிறான். அதனால் அங்கு அவனுக்கு மிகவும் கெட்ட பெயர் உண்டாகிறது. 'நீதிமன்றம், மன நல மருத்துவமனை என்று அலைந்து கொண்டிருக்கிறேன். அதனால்தான் தாமதம்...' என்கிறான். அலுவலக வேலை காரணமாக ஒரு மருத்துவமனைக்குச் செல்லும் அவன், ஏதோ ஒரு உணர்ச்சியால் உந்தப்பட்டு தன் கையிலிருந்து அதிகமான இரத்தத்தை தானே எடுத்து மயக்கமடைந்து, ஆடை முழுவதும் இரத்தம் படிந்திருக்க விழுந்து கிடக்கிறான். அவனுடைய நிலையைப் பார்த்து எல்லோரும் அவனின் மீது பரிதாபப்படுகின்றனர்.

பள்ளிக் கூடத்தில் படிக்கும் தன் மகனைப் பார்ப்பதற்காக ஒரு நாள் அவன் செல்கிறான். தன் மகனுடைய ரிப்பேர் ஆன சிறிய சைக்கிளை அவன் சீர் செய்து கொண்டிருக்க, அப்போது அங்கு வந்த அவனுடைய மனைவி மஷித், சிறுவனை தன் காரில் அழைத்துக் கொண்டு சென்று விடுகிறாள். அதைப் பார்த்து மனம் நொறுங்கிப் போய் விடுகிறான் ஹமூன்.

தொடர்ந்து விவாகரத்து வழக்கு நடக்கிறது. 'எந்தக் காரணத்தைக் கொண்டும் நான் விவாகரத்து தரவே மாட்டேன்' என்பதை ஒவ்வொரு தடவையும் திரும்பத் திரும்ப கூறுகிறான் ஹமூன்.

ஒருநாள் அவனைத் தேடி வரும் மஷித்தின் தாய் 'உனக்குத் தேவை பணம்தானே!ஸ எவ்வளவு வேண்டும்? சொல்லு... நான் காசோலையில் கையெழுத்துப் போட்டு தருகிறேன். நீ என் மகளை விவாகரத்து செய்து விடு' என்று கூறுகிறாள். 'உங்கள் பணம் எனக்கு தேவையே இல்லை. நான் பணத்திற்காகவா உங்களின் மகளைத் திருமணம் செய்தேன்? நான் அவளின் மீது இப்போதும் அன்பு வைத்திருக்கிறேன். அதனால் விவாகரத்து தர முடியாது' என்று ஊறுதியான குரலில் கூறுகிறான் ஹமூன்.

பின்னர் ஒருநாள் தன் வயதான பாட்டியைச் சந்தித்து, தன் தாத்தாவிற்குச் சொந்தமான நீளமான துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வருகிறான். காவலாளியை ஏமாற்றி விட்டு, இரவு வேளையில் மாடியிலிருக்கும் வீட்டிற்கு முன்னால் ஹமூன் மறைந்திருக்கிறான். அப்போது அங்கு வரும் மஷித்தைச் சுட முயற்சிக்கிறான். குறி தவறி விடுகிறது. மஷித் தப்பித்து விடுகிறாள். துப்பாக்கியுடன் அமர்ந்திருக்கும் அவனை மஷித் பார்த்து விடுகிறாள். அவள் சத்தம் போட, காவலாளி விரட்டுகிறான். ஹமூன் பயந்து ஓடுகிறான். போகும் வழியில், ஒரு பள்ளத்தில் துப்பாக்கியை வீசி விட்டு அவன் ஓட, அதை காவலாளி கையில் எடுக்கிறான்.

தான் நினைத்தது எதுவும் நடக்காமல் போய் விட்டதே என்ற விரக்தி நிறைந்த எண்ணத்திற்கு ஆளான ஹமூன். தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் கடலுக்குள் இறங்குகிறான். அப்போது அவனுக்கு ஒரு கனவு- கனவில் அவனைச் சுற்றி அவன் எப்போதும் மனதில் உயர்வாக நினைத்து வழிபடும் அவனுடைய குருநாதரான அலி, அவனுடைய நண்பர்கள், அவனுக்கு நன்கு தெரிந்தவர்கள், அவனுடைய தாய், மனைவி மஷித் அனைவரும் நின்று அவனைத் தேற்றிக் கொண்டிருக்கிறார்கள். தன்னுடைய பிரச்னைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டு விட்டன என்று அவன் கனவு காண்கிறான். கனவு முடியும்போது, அவன் ஒரு படகில் அமர்ந்திருக்கிறான். அவனை உயரத்திலிருந்து வலை போட்டு, காப்பாற்றியவர் அவன் எப்போதும் பெரிதாக நினைக்கும் அவனுடைய குருநாதர் அலி.

வாழ்க்கையில் எது நடந்தாலும்- அதை விரும்புகிறோமோ, இல்லையோ- எல்லாவற்றையும் நாம் சந்தித்துத்தான் ஆக வேண்டும். அவற்றுடன் போராடித்தான் ஆக வேண்டும்... இதுதான் 'Hamoun' படம் கூறும் செய்தி.

படகில் ஹமூன் ஈர ஆடைகளுடன் நடுங்கிக் கொண்டே அமர்ந்திருக்க, படம் முடிவடைகிறது. கனமான விஷயத்தை மிகவும் அருமையாக கையாண்ட இயக்குநரை நாம் கட்டாயம் பாராட்ட வேண்டும்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.