Logo

லைஃப், அன்ட் நத்திங் மோர்…

Category: சினிமா
Published Date
Written by சுரா
Hits: 5696
Life, and Nothing more…

என்னை கவர்ந்த திரைப்படங்கள்சுரா (Sura)

Life, and Nothing more…

(ஈரானிய திரைப்படம்)

ரானிய பட உலகில் குறிப்பிடத்தக்க மிகச் சிறந்த படங்கள் பலவற்றை இயக்கி உலக அளவில் தனக்கென்று ஒரு அருமையான பெயரைப் பெற்று வைத்திருப்பவர் Abbas Kiarostami. மக்களின் வாழ்க்கையை, மிகவும் யதார்த்தமாக, உயிரோட்டத்துடன் படமாக எடுக்கக் கூடிய அபார ஆற்றல் பெற்ற அவருக்கு உலகமெங்கும் கோடிக் கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அவர் இயக்கிய மிகவும் வித்தியாசமான ஒரு படமிது. இது ஒரு கதை கொண்ட முழு நீள படமா அல்லது ஒரு ஆவணப் படமா என்று மனதில் சந்தேகப்படுகிற அளவிற்கு, ஒரு மாறுபட்ட கதைக் கருவை இதற்கென தேர்ந்தெடுத்திருக்கிறார் இயக்குநர்.

95 நிமிடங்கள் ஓடக் கூடிய இந்தப் படம் 1991ஆம் ஆண்டு திரைக்கு வந்தது. 1992ஆம் ஆண்டு நடைபெற்ற Cannes Film Festivalஇல் இப்படம் திரையிடப்பட்டு, எல்லோரின் பாராட்டையும் பெற்றது.

1990ஆம் ஆண்டில் ஈரானில் நடைபெற்ற பூகம்பத்தில், 30,000 மக்கள் மரணமடைந்து விட்டார்கள். அதற்குப் பின்னால் உள்ள மக்களின் வாழ்க்கை நிலையை, உள்ளது உள்ளபடியே படம் பிடித்துக் காட்டுகிறது இப்படம்.

தன்னையே படத்தின் பிரதான கதாபாத்திரமாக ஆக்கிக் கொண்டார் Abbas Kiarostami. ‘Where is my friend’s Home?’என்றொரு படத்தை இயக்கினார் Abbas. அந்தப் படத்தின் தொடர்ச்சியே இப்படம். பூகம்பத்தில் பாதிக்கப்பட்ட இடங்களில்தான் முன்பு அப்படத்தின் படிப்பிடிப்பை இயக்குநர் நடத்தினார். அந்த இடங்களில் வாழ்ந்த பல மனிதர்களும், பெண்களும், சிறுவர்களும், சிறுமிகளும் அந்த படத்தில் நடித்திருந்தார்கள்.

‘பூகம்பத்தால் அவர்கள் என்ன ஆனார்கள்? உயிருடன் இருக்கிறார்களா? இல்லாவிட்டால்… இறந்து விட்டார்களா?’ என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார் இயக்குநர். அதற்காக அவர் தன்னுடைய ஒரு பழைய காரில் பயணம் கிளம்புகிறார். புறப்படும்போது, தன்னுடன் தன் மகனையும் அழைத்துக் கொள்கிறார்.

தன்னை மையமாக கொண்ட கதை என்றாலும், Abbas Kiarostami இதில் நடிக்கவில்லை. தன்னுடைய வேடத்தில் அவர் Farhad Kheradmand என்ற நடிகரை நடிக்க வைத்திருக்கிறார்.

இயக்குநரும், அவருடைய மகனும் காரில் பயணிக்கிறார்கள். சாலையின் இரு பக்கங்களிலும் பூகம்பத்தால் இடிந்த கட்டிடங்கள்… கீழே விழுந்து கிடக்கும் மரங்கள்… தரையோடு பெயர்ந்து கிடக்கும் வீடுகள்… அவற்றுக்கு மத்தியில் தங்களின் இழந்த பொருட்களைத் தேடிக் கொண்டிருக்கும் ஆயிரக் கணக்கான ஆண்கள், பெண்கள்… சுற்றிலும் பூகம்பம் உண்டாக்கிய பாதிப்புகள்… அவலங்கள்… துயரங்கள்.

அனைத்துக்கும் மத்தியில் அன்றாட வாழ்க்கைகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. சாலையில் சாரை சாரையாக கார்களும், லாரிகளும், இரு சக்கர வாகனங்களும் விரைந்து கொண்டிருக்கின்றன. அந்த வாகனங்களுக்கு மத்தியில் இயக்குநரின் காரும் போய்க் கொண்டிருக்கிறது.

இரண்டு பக்கங்களிலும் பல கிலோ மீட்டர்கள் தூரம் வரை நூற்றுக் கணக்கில் தரையோடு பெயர்ந்து கட்டிடங்கள் கிடப்பதால், வாகனங்கள் மிகவும் சிரமத்துடன், மெதுவாகவே ஊர்ந்து கொண்டிருக்கின்றன. சிறுவன் தன் தந்தையிடம் ஏதாவது கேள்விகள் கேட்டுக் கொண்டே வருகிறான். அவன் ஆர்வத்துடன் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் பொறுமையுடன் பதில் கூறிக் கொண்டே வருகிறார் இயக்குநர்.

வெளியே தாங்க முடியாத அளவிற்கு வெயில் தகித்துக் கொண்டிருக்கிறது. சிறுவன் ‘கூல் ட்ரிங்’ கேட்கிறான். அதற்காக போகும் பாதையில், குளிர்பானக் கடை ஏதாவது கண்களில் படுமா என்று பார்க்கிறார் இயக்குநர். நீண்ட தூர பயணத்திற்குப் பிறகு ஒரு கடை கண்ணில் படுகிறது. அதில் ஒரு குளிர்பானத்தை சிறுவனுக்கு வாங்கித் தருகிறார் இயக்குநர்.

போகும் வழியில் சாலையின் ஓரத்தில் நடந்து கொண்டிருக்கும், நின்று கொண்டிருக்கும் மனிதர்களிடம் வழியைக் கேட்டுக் கொண்டே போகிறார்கள்.

ஒரு இடத்தில் பயங்கர ட்ராஃபிக் ஜாம். நூற்றுக் கணக்கில் வாகனங்கள் அணி வகுத்து நின்று கொண்டிருக்கின்றன. ‘இந்தச் சாலையில் பயணிப்பது சிரமம்… குறுக்கு வழிகளில் செல்லுங்கள்’ என்று சாலையில் நிற்கும் மனிதர்கள் கூறுகிறார்கள். அதற்கேற்றபடி பயணத்தின் பாதை மாறுகிறது. சிறிய சிறிய சாலைகளின் வழியாக, பல கிராமங்களையும் தாண்டி புழுதி பறக்க, அவர்களின் பயணம் தொடர்கிறது. ஒவ்வொரு ஊரிலும் பூகம்பத்தின் பாதிப்புகள்… இடிந்து போன கட்டிடங்களுக்கு முன்னால் ஆண்களும், பெண்களும், சிறுவர்களும், சிறுமிகளும் கவலை தோய்ந்த முகங்களுடன் அமர்ந்திருக்கிறார்கள். தங்களின் பொருட்களையும், சந்தோஷங்களையும் இழந்து விட்ட சோகம் அவர்களின் முகங்களில் தெரிகிறது.

மொத்தத்தில் –

ஈரானின் கிராமங்களை நமக்கு சுற்றிக் காட்டுகிறார் இயக்குநர் அப்பாஸ்.

படத்தில் இயக்குநராக வருபவரும், மகனும் பழைய காரில் ஒவ்வொரு கிராமத்தையும், கிராமத்து மனிதர்களையும் கடந்து போய்க் கொண்டே இருக்கிறார்கள். போகும் வழியில் ஆங்காங்கே காரை நிறுத்தி, மக்களிடம் பூகம்பத்தைப் பற்றியும், அவர்களுடைய வாழ்க்கைகளில் உண்டான பாதிப்புகளைப் பற்றியும் விசாரிக்கிறார் இயக்குநர். அவர்கள் தங்களின் துயரம் நிறைந்த வாழ்க்கைகளைப் பங்கு வைக்கின்றனர். தாங்கள் பயணம் செய்யும் பாதைகளை பலமுறை மாற்றிய பிறகு, அவர்கள் ஒரு கிராமத்தை அடைகிறார்கள். அங்கு ‘Where is my friend’s home?’ என்ற Abbas Kiarostamiயின் படத்தின் படப்பிடிப்பு முன்பு நடைபெற்றிருக்கிறது. அங்கு அதில் நடித்த ஒரு வயதான மனிதர் இருக்கிறார். அவரின் வீட்டிற்குச் சென்று அவரை பார்க்கிறார் இயக்குநர். அவர் நலமுடன் இருப்பதை அவர் தெரிந்து கொள்கிறார். அங்கேயே அமர்ந்து சில நிமிடங்கள் அந்த மனிதருடன் இயக்குநர் உரையாடிக் கொண்டிருக்க, அவரின் மகன் பக்கத்து வீடுகளில் இருக்கும் சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறான்.


தந்தையும் மகனும் பூகம்பத்தால் சின்னாபின்னமாகிக் கிடக்கும் கிராமத்தைச் சுற்றி பார்க்கிறார்கள். பிழைத்திருப்பவர்களிடம் அவர்களின் துயரக் கதைகளைக் கேட்கிறார்கள். அப்படி சந்தித்தவர்களின் ஒரு இளம் திருமண ஜோடியும் இருக்கிறது. அவர்கள் தங்களின் உறவினர்கள் அனைவரையும் பூகம்பத்தில் இறந்து விட்டார்கள். இறந்து போனவர்களுக்கு தாங்கள் இறந்து விடுவோம் என்ற விஷயம் தெரியாது என்றும், அதனால் தாங்கள் திருமணம் செய்து கொண்டு வாழ்வது என்று தீர்மானித்து விட்டதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.

மீண்டும் பயணம் தொடர்கிறது. வழியில் முன்பு படமாக்கப்பட்ட படத்தில் நடித்த ஒரு சிறுவனை அவர்கள் பார்க்கிறார்கள். அவனை வண்டியில் ஏற்றிக் கொண்டு, அந்த கிராமத்தில் தங்களின் சொந்த வீடுகளை இழந்து, கூடாரங்களில் தங்கியிருக்கும் நூற்றுக் கணக்கான மக்களை அவர்கள் போய் பார்க்கிறார்கள்… அவர்கள் பூகம்ப அனுபவங்களையும், அதனால் அவர்களின் வாழ்க்கையில் உண்டான பாதிப்புகளையும் கேட்கிறார்கள்.

இயக்குநரின் மகன் உலகக் கோப்பையை வெல்வதற்காக நடைபெறும் இறுதி கால்பந்து விளையாட்டை தொலைக்காட்சியில் தான் பார்க்க விரும்புவதாக கூறுகிறான். அதனால், அவனை அந்த ஊரின் சிறுவர்கள் மத்தியில் இருக்கும்படி விட்டு விட்டு, தான் திரும்பி வரும்போது அவனை வந்து அழைத்துக் கொள்வதாக இயக்குநர் கூறுகிறார்.

பூகம்பத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்கள் தாங்கிக் கொள்ள முடியாத நிலையில் இருப்பதையும், அவர்கள் நம்பிக்கையுடன் வாழ்க்கையில் இருப்பதையும் பார்த்து இயக்குநருக்கு உண்மையிலேயே ஆச்சரியம் உண்டாகிறது.

இதற்கிடையில் ‘Where is my friend’s Home?’ படத்தின் பிரதான கதாபாத்திரத்தில் நடித்த சிறுவனுக்கு பூகம்பத்தால் பாதிப்பு இல்லை, அவன் உயிருடன் நலமாக இருக்கிறான் என்ற தகவல் இயக்குநருக்கு கிடைக்கிறது. எனினும், அவனை நேரில் பார்த்துவிட வேண்டும் என்று நினைக்கிறார் இயக்குநர்.

அந்தச் சிறுவன் இருக்கும் ஊரை அடைய வேண்டுமென்றால், ஒரு உயரமான மலையைக் கடந்து செல்ல வேண்டும். இயக்குநரின் பழைய கார் மலையின் மீது ஏறுகிறது. வளைந்து வளைந்து செல்லும் பாதையில் பயணிக்கும் கார், இப்போது செங்குத்தான மலைப் பாதையில் ஏற வேண்டிய நிலை. அந்தக் கார் மேலே ஏற சிரமப்பட்டு, பின்னாலேயே வருகிறது. இயக்குநர் எவ்வளவு முயன்றும், கார் முன்னோக்கி நகர்வதாக இல்லை.

அதே நேரத்தில் ஒரு கிராமத்து மனிதன் தன் தலையில் சுமையை வைத்துக் கொண்டு மேல் நோக்கி நடந்து போய்க் கொண்டிருக்கிறான். காரின் இயந்திரம் வெப்பமாகி, கார் நின்று விடுகிறது. இயந்திரத்தை மீண்டும் ‘ஸ்டார்ட்’ பண்ணுவதற்கு சுமையுடன் இருக்கும் மனிதன் உதவுகிறான். தொடர்ந்து அவன் எந்தவித சிரமமும் இல்லாமல் மேல் நோக்கி நடந்து போய்க் கொண்டே இருக்கிறான்.

அந்த மனிதனின் விடா முயற்சியும், தன்னம்பிக்கையும், இலக்கை அடைய வேண்டும் என்ற வேட்கையும் இயக்குநருக்கு ஒரு தூண்டுகோலாக இருக்கிறது. வண்டி நின்று போய், அனேகமாக இனி மலை மேல் ஏறுவது சாத்தியமே இல்லாத ஒன்று என்று நம்பிக்கையற்றிருந்த இயக்குநருக்கு ஒரு புதிய நம்பிக்கை பிறக்கிறது. இவ்வளவு தூரம் பயணித்து வந்து விட்டோம் – படத்தில் நடித்த அந்தச் சிறுவனின் ஊருக்குச் சென்று, அவனைப் பார்க்காமல் திரும்ப கூடாது என்ற முடிவுக்கு அவர் வருகிறார். கார் மேலே செல்வதும், கீழே மீண்டும் திரும்பி வருவதுமாக இருக்கிறது.

இப்போது- Extreme Long shot.

தூரத்தில் மலையும், மலைப் பாதையும் தெரிகிறது. இயக்குநரின் கார் மெதுவாக திணறியபடி மலைப் பாதையில் மேல் நோக்கி ஏறுகிறது. சிறிது சிறிதாக ஏறி… மலையின் உச்சியை நோக்கி கார் பயணித்துக் கொண்டிருக்கிறது! ‘இனி பிரச்னையில்லை…. கார் எப்படியும் மலையின் உச்சியை அடைந்து, தன்னுடைய பயணத்தைத் தொடர்ந்து விடும்’ என்ற நம்பிக்கை நம் மனதில் உண்டாகிறது. படத்தில் நடித்த சிறுவனை இயக்குநர் மிக விரைவில் சந்திக்கப் போகிறார் என்னும் எண்ணமும் நம் மனதின் அடித்தளத்தில் ஆழமாக உண்டாகிறது.

அத்துடன் படம் முடிவடைகிறது.

கதை… கதை… என்று இங்கிருக்கும் இயக்குநர்கள் அலைந்து கொண்டிருக்கிறார்களே… இதெல்லாம் கதை இல்லையா என்று நமக்கு கூறாமல் கூறுகிறார் Abbas Kiarostami.

இப்படியெல்லாம் கூட படம் எடுக்கலாம் என்பதை உலகிற்கு காட்டுகிறார் அப்பாஸ்.

படத்தின் ஆரம்ப காட்சியிலிருந்து இறுதி காட்சி வரை, ஒரு நிமிடம் கூட சோர்வு உண்டாகாத அளவிற்கு ஒரு படத்தை இயக்குவது எவ்வளவு பெரிய விஷயம்! அதில் மிகப் பெரிய பெற்றியைப் பெற்றிருக்கிறார் இயக்குநர்!

ஒரு கார் பயணத்தையே முழு நீள படமாக எடுப்பது என்பது எத்தகைய புதுமையான முயற்சி! அத்துடன் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட ஈரானின் கிராமங்களையும், மக்களையும், அவர்களின் துயரம் நிறைந்த வாழ்க்கைகளையும்…

இதற்காகவே Abbas Kiarostami ஐ நாம் சிம்மாசனத்தில் உட்கார வைத்து, பாராட்டிக் கொண்டே இருக்கலாம்.

இன்று உலக திரைப்பட ரசிகர்களால் அவர் பெரிய அளவில் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறார் என்றால், அதற்கு காரணம் என்ன என்பதை அவரின் இத்தகைய படங்களிலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.