Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

ஓர் இரவு - Page 3

அவர்கள் அழகாக ஆடைகள் அணிந்திருந்தார்கள். அலங்கரித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், மனைவிக்கான அழகில்லை. எனினும், என்னுடைய நண்பர்கள், தங்களுடைய மனைவிமார்கள் வரும்போது இந்த அளவிற்கு ஆர்வத்தை வெளிப்படுத்த மாட்டார்கள். அவர்களுக்கு என்ன ஒரு ஆவேசம் என்கிறீர்கள்!

அந்த பெண்கள் எந்தவித கூச்சமும் இல்லாமல் அறைக்குள் நுழைந்து வந்தார்கள்.

ஒருத்தி கேட்டாள்:

‘என்ன ஜோணிக்குட்டி அண்ணா, இந்த புட்டி திறக்கப்படாமல் இருக்கிறது?’

வேறொருத்தி சொன்னாள்:

‘நாம வந்த பிறகு, பருகலாம் என்று வைத்திருக்கலாம்.’

அவர்களுடைய குரலும் மொழியும் தெரு பெண்களுக்குச் சொந்தமானவை போல எனக்கு தோன்றியது. இங்கு என்ன நடக்கப் போகிறது? என் பழைய பாவங்கள், புதிய சூழலில் செயல்படப் போகின்றனவோ?

ஜோணிக்குட்டி, அவர்களில் ஒருத்தியிடம் கூறினான்:

‘நீ அந்த புட்டியைத் திறந்து, கொஞ்சம் ஊற்றி அங்கு அமர்ந்திருக்கும் ஆளுக்குக் கொடு.’

அவள் என்னையே சற்று கூர்ந்து பார்த்தாள். அவள் மட்டுமல்ல – எல்லோரும்தான். நான் என்ன செய்ய வேண்டுமென்று தெரியாமல், திகைத்துப் போய் நடுங்கியவாறு அமர்ந்திருந்தேன்.

அந்த பெண் புட்டியைத் திறந்து ஒரு குவளையில் கொஞ்சம் ஊற்றினாள். பிறகு அந்த குவளைக்குள் சோடாவையும் ஊற்றினாள். அவள் அந்த குவளையை எடுத்து என் உதட்டுடன் சேர்த்து வைத்தாள். நான் சொன்னேன்:

‘எனக்கு வேண்டாம்... நான் குடிக்க மாட்டேன்.’
ஜோணிக்குட்டி குலுங்கிக் குலுங்கி சிரித்தவாறு அந்த பெண்ணிடம் கூறினான்:

‘உங்களுடைய திறமையைப் பார்க்கிறேன். அவனை குடிக்க வையுங்கள்.’

இன்னொருத்தி வேகமாக அருகில் வந்து என்னுடைய தாடையைப் பிடித்து உயர்த்தியவாறு கேட்டாள்:

‘இந்த கூச்சம் எதுக்கு?’

**********

நான் கண் விழித்தபோது, என் கட்டிலுக்குக் கீழே அந்த தெரு பெண்களில் ஒருத்தி தரையில் கிடந்தாள். அவள் தூங்கிக் கொண்டிருந்தாள். அவளுடைய சரீரத்தில் சில கீறல்களோ அடையாளமோ இருந்தன. நேற்று என்னவெல்லாம் நடந்தன? எனக்கு ஞாபகத்தில் இல்லை. நிச்சயமாக நான் என் மனைவிக்கு துரோகம் செய்திருக்க மாட்டேன். அவள் இப்போது என்னை எதிர்பார்த்து... எதிர்பார்த்து கலக்கத்தில் இருப்பாள்.

நான் வேகமாக எழுந்தேன். மணி பதினொன்று கடந்து விட்டிருந்தது. அலுவலகத்திற்குச் செல்ல வேண்டிய நேரம் கடந்து விட்டது. என்னை நகரமெங்கும் தேடி, விசாரித்திருப்பார்கள். நான் பைத்தியம் பிடித்தவனைப்போல அந்த பங்களாவின் ஒவ்வொரு அறைக்குள்ளும் ஓடினேன். ஜோணிக்குட்டி தூங்கிக் கொண்டிருந்தான். அந்த அறையிலும் ஒரு பெண் இருந்தாள். கதவிற்கு அருகில் சென்று நான் திகைப்படைந்து நின்று விட்டேன். எனினும், நான் உள்ளே சென்று ஜோணிக்குட்டியைத் தட்டி அழைத்தேன். அவன் கண்களைத் திறந்தான். நான் கூறினேன்:

‘நான் அலுவலகத்திற்குப் போகணும்.’

‘அனுப்புகிறேன்.’

ஜோணிக்குட்டி ஓட்டுநரை அழைத்தான்.

அப்பாடா! எனக்கு என்ன நிம்மதி தெரியுமா? எப்படியாவது இரண்டு மணிக்கு முன்பு நகரத்தை அடைந்து விடலாம்.

ஓட்டுநர் கதவிற்கு அருகில் வந்தான். அப்போது அந்த பெண் அவள் படுத்திருந்த இடத்திலேயே படுத்து தூங்கிக் கொண்டிருந்தாள். ஜோணிக்குட்டியும் அப்படித்தான் இருந்தான்.

ஜோணிக்குட்டி ஓட்டுநரிடம் கூறினான்:

‘இவரை கோட்டயத்தில் கொண்டு போய் விடு.’

என் வாழ்க்கை பிரச்னைகள் எனக்கு முன்னால் தோன்றின. பதினைந்து ரூபாய்! அதை இங்கிருந்து கொண்டு போகவில்லையென்றால், மனைவிக்கு எப்படி மருந்து வாங்குவேன்? குழந்தைக்கு எப்படி கட்டணம் கட்டுவேன்?

நான் கேட்டேன்:

‘எனக்கு பதினைந்து ரூபாய் வேண்டும். மனைவிக்கு உடல் நலமில்லை. மருந்து வாங்குவதற்கு....’

நான் கூறி முடிப்பதற்கு முன்பே ஜோணிக்குட்டி கூறினான்:

‘இங்கு என் கையில் காசு இல்லை.’

தொடர்ந்து அவன் கட்டிலில் விழுந்தான். ஜோணிக்குட்டியின் கை அந்த பெண்ணை வளைத்துக் கொண்டிருந்தது.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version