Lekha Books

A+ A A-

ஜானு சொன்ன கதை - Page 3

Janu Sonna Kathai

அதைக் கேட்டு லட்சுமி அம்மாவோட முகம் ஒரு மாதிரி ஆயிடுச்சு. இருந்தாலும் அவ சொன்னா, “நீ சொல்றது சரிதான். எங்க எல்லாருக்கும் கவரிங் நகைகள் அணியிற அளவுக்குத்தான் வசதி இருக்கு. நாங்க யாரோ ஒருத்தன் நிலத்தை சீர்படுத்துற வேலைக்குப் போறது இல்ல”ன்னு.

“யாரோ ஒருத்தனோட நிலத்தை சீர்செய்யப் போறதை நானே மனப்பூர்வமா ஏத்துக்கிட்டுத்தான் போறேன். அதுனால உங்களுக்கு ஏதாவது கேடு வந்ததா என்ன?”ன்னு நான் கேட்டேன். “எங்களுக்கு சரியான தொழில் கிடைக்கல. அதுக்காக நிலத்தை சரிசெய்ய  போனது உண்மைதான்”னு நான் சொன்னதைக் கேட்டு லட்சுமி அம்மாவோட முகம் போன போக்கைப் பார்க்கணுமே! அவ ஒரு மாதிரி ஆயிட்டான்றதை நான் சொல்லணுமா என்ன? “என் தொழில் என்னன்னு சொல்லு, ஜானு...”ன்னு அவ என்கிட்ட கேட்டா. அதுக்கு, “அதை இப்போ சொல்ல மாட்டேன்”னு நான் சொன்னேன். பாரு அப்போ சொன்னா, “சண்டை போட்டுக்கிட்டு இருக்காம சீக்கிரமா குளிச்சு முடிங்க”ன்னு. அந்த நேரத்துல அங்க வந்த சங்குண்ணி என் முகத்தையே வெறிச்சுப் பார்த்துக்கிட்டு இருந்தான். இப்படிப்பட்ட ஒரு மனிதனை நான் பார்த்ததே இல்ல. இந்த அளவுக்கு வெட்கமில்லாமலா ஒரு மனிதன் இருப்பானா! கடவுள் முன்னாடி கைகளால் தொழுது நின்னப்போ, என்னை யாரோ தள்ளினது மாதிரி இருந்துச்சு. அவ்வளவுதான்- எனக்கு பலமா கோபம் வந்திருச்சு. “இப்படியா ஆளுங்களைத் தள்ளுறது”ன்னு நான் கேட்டேன். திரும்பிப் பார்த்தப்போ நம்ம சங்குண்ணி நின்னுக்கிட்டு இருக்கான். “உங்களுக்கு வெட்கமில்லையா சங்குண்ணி? பெண்களை இப்படியா தள்ளுறது?”ன்னு நான் கேட்டேன். அதுக்கு அந்த ஆளு என் முகத்தைப் பார்த்து சிரிக்கிறான். கமலாக்ஷி அந்தக் காட்சியைப் பார்த்துக்கிட்டு இருந்தா. அவ “நாராயணா நாராயணா”ன்னு முணுமுணுத்துக்கிட்டு கடவுளுக்கு முன்னாடி நின்னுக்கிட்டு இருந்தா. ஆனா, அவ பார்வை முழுவதும் இந்தப் பக்கம்தான்... லட்சுமி அம்மா அப்போ சொன்னா, “இங்க பாரு... இந்த கூடல், குலவல்லாம் கோவிலுக்குள்ள வேணாம்”னு. அதுக்கு நான் பதிலுக்குக் கேட்டேன். “யார் இங்கே கூடுறது குலவுறது?”ன்னு. “என் மகளைச் சொல்றியா? என் மகள் பேரைச் சொல்லு பார்ப்போம்”னா லட்சுமி அம்மா. “ஏன்... சொன்னா என்னை யாராவது கொன்னுடுவாங்களா என்ன?”ன்னு நான் கேட்டேன்.

“சண்டை போட வேண்டாம். சீக்கிரமா கடவுள்கிட்ட வேண்டிக்கிட்டு கிளம்பு”ன்னு அப்போ பாரு சொன்னா. எது எப்படியோ, கடவுள் வழிபாடு முடிஞ்சு கோவிலை விட்டு வெளியே வந்தப்போ நடுப்பகல் நேரமாகியிருந்தது. “ஒரு தேநீர் கடையைத் தேடிப் போயி ஏதாவது பலகாரம் சாப்பிடலாம்”னு பாரு சொன்னா. “பலகாரமும் சாப்பிட வேண்டாம். தேநீரும் குடிக்க வேண்டாம். கொஞ்சம் சாதம் சாப்பிடலாம்”னு சங்குண்ணி சொன்னான். “குருவாயூர்ல இருக்குற ஹோட்டல்கள் மாதிரி நல்ல ஹோட்டல் களை வேற எங்கேயும் பார்க்க முடியாது”ன்னு சங்குண்ணி சொன்னான். அந்த ஆளு போகாத ஊரே இல்ல. காசி, ராமேஸ்வரம், பழனி, திருவில்வாமலை... இதெல்லாம் எதுக்கு சொல்லணும் மாதவிக்குட்டி அம்மா? ஒரு இடத்தைக்கூட அந்த ஆளு மீதி வைக்கல. தமிழ்ல பேசுறதைக் கேட்டா, அந்த ஆளு தமிழனா இருப்பானோன்னு யாருக்கும் தோணும். என்கிட்ட தமிழ்ல பேசினானான்னு கேக்குறீங்களா? என்கிட்ட பேசல. வேட்டிக்கார செட்டிக்கிட்ட... செட்டி மேற்குப் பக்கம் ஒரு கடையில உட்கார்ந்திருந்தாரு. சங்குண்ணியைப் பார்த்ததும் செட்டி ஓடி வந்து அவனோட சட்டையைப் பிடிச்சு உலுக்கி கேள்வி மேல கேள்வி கேட்டாரு. “போன வாரம் வர்றதா சொல்லிட்டு ஏன் வரலை?”ன்னு அவர் கேட்டாரு. அப்போ சங்குண்ணி அவர்கிட்ட தமிழ்ல பேச ஆரம்பிச்சிட்டான். மன்னிக்கணும் கின்னிக்கணும்னு  என்னென்னவோ சொன்னான். கேக்குறதுக்கு ரொம்பவும் சுவாரசியமா இருந்தது. எனக்கு தமிழ் தெரியுமான்னு கேக்குறீங்களா? எனக்கு தமிழ் தெரியாது. அதைத் தெரிஞ்சிக்கவும் வேணாம். எனக்கு கோயம்புத்தூருக்குப் போயி வசிக்கணும்ன்ற ஆசையெல்லாம் கொஞ்சம்கூட இல்ல. நான் இந்த ஜாதிக்காரங்களைப் பார்க்கவே விரும்பல. இந்த செட்டிச்சிகளை நான் பார்க்கவே விரும்பல. சனிக்கிழமை வாசல்ல ஒவ்வொருத்தரா வந்து நிக்கறதைப் பார்க்கணுமே! குழந்தையை இடுப்புல வச்சிக்கிட்டு, அம்மா அம்மான்னு தொல்லை கொடுத்துக்கிட்டு... சரியான நேரம் பார்த்து சிறைக்குள்ளே கொண்டுபோய் போடணும். காக்கா குறத்திங்க... கண் அசந்துட்டா அவ்வளவுதான்... பொருள்களைத் திருடிட்டுப் போயிடுவாங்க. என் எண்ணெய் கிண்ணத்தை கிணற்றுக் கரையில வச்சிட்டு நான் கொஞ்சம்தான் திரும்பியிருப்பேன். அதுக்குள்ள ஒருத்தி அதை எடுத்து தன் மூட்டைக்குள்ள வச்சிக்கிட்டா....

என்ன.. கதையா? கதையைச் சொல்லிச் சொல்லி இப்போ எண்ணெய்  கிண்ணம் வரை வந்தாச்சு. அதுதான் என் அறிவு! அப்போ... நாங்க கடவுளை வேண்டிக்கப் போயிட்டு, எல்லாம் முடிஞ்சு ஹோட்டலுக்குள்ள நுழைஞ்சு சந்தோஷமா சாப்பிட்டோம். அதுக்கான காசை நாங்க எல்லாரும் பங்கு போட்டுக் கொடுத்தோம். கடைசியில என் கையில மூணரை ரூபாய் மீதி இருந்துச்சு. அந்தப் பணத்துல ஒரு புடவை வாங்கலாம்னு நினைச்சு ஒரு கடையைத் தேடிப் போனா கமலாக்ஷி சொல்றா, “மூணரை ரூபாய்க்கு என்ன புடவை கிடைக்கும்? இப்போ புடவைகளோட விலை அதிகம்”னு. “ஏதாவது கிடைக்குமான்னு பார்க்குறேன்”னு நானும் சொன்னேன். பல வகைகள்ல புடவைகளைப் பரப்ப விட்டு அதைப் பார்த்துக்கிட்டு இருக்குறப்போ, நம்ம சங்குண்ணி சொல்றான், “ஜானும்மா... நீங்க என்ன சென்ட் உபயோகிக்கிறீங்க? எனக்கு தலையைச் சுத்துற மாதிரி இருக்கு”ன்னு. “நான் சென்ட் உபயோகிச்சா உங்களுக்கு எதுக்கு தலை சுத்தணும்”னு நான் கேட்டேன். என் பக்கத்துல அந்த ஆளு வராம இருந்தாலே போதுமே! “பக்கத்துல வர்றதுக்கு எனக்கு என்னவோ மாதிரி இருக்கு...” அந்த ஆள் சொன்னான். என் மாதவிக்குட்டி அம்மா. இந்த அளவுக்கு வெட்கமும் மானமும் இல்லாத ஒரு மனிதனை நான் பார்த்ததே இல்ல.

 

+Novels

Popular

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

உறவுகள் பிரிவதில்லை

March 22, 2013,

நிராசை

May 24, 2012,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel