Logo

ஓநாய்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 4208

ஓநாய்
எம். முகுந்தன்
தமிழில்: சுரா

னம் முற்றிலும் நல்ல நிலைமையில் இல்லை. கவலை, விரக்தி, குழப்பம் நிறைந்த தன்மை, களைப்பு... வீட்டில் இருக்கும்போது அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும் என்று தோன்றும். அதனால் ஒழுங்காக அலுவலகத்திற்குச் செல்கிறேன். பதினைந்து, முப்பது நிமிடங்களுக்கு முன்பே போய் விடுகிறேன். நேரத்தைப் பார்ப்பதில்லை. அலுவலகத்திற்குச் சென்ற பிறகு, பணிகளைச் செய்வதில்லை.

வேலை செய்வதற்குத்தான் அலுவலகம் என்ற ஒன்றே இருக்கிறது. வேலை செய்ய வேண்டும். அது தெரியாமல் இல்லை. முடியவில்லை. அறையில் படுக்கையில் கால்களை நீட்டி, நன்கு விரித்து படுத்துக் கிடப்பதை நினைத்துப் பார்க்கிறேன். தூங்குவதையும் நினைத்துப் பார்க்கிறேன். அலுவலகம் விடுவதற்கு முன்பே வெளியேறுகிறேன். நேராக வீட்டிற்குச் செல்கிறேன். படுக்கிறேன். தூங்குகிறேன். தூங்க வேண்டும்... தூங்க வேண்டும்... வேறு எதுவுமே வேண்டாம். தூங்காவிட்டால் கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாக வேண்டியதிருக்கும். பழிக்குப் பழி, பைத்தியம், தற்கொலை போன்ற சிந்தனைகள்....

விருப்பங்கள் இல்லாமற் போயிருக்கின்றன. முழுமையாக அல்ல. ஒரே ஒரு விருப்பம் மீதமிருக்கிறது. ஒன்று மட்டுமே.... தூக்கம். தூங்க முடிவது என்பது... மிகப் பெரிய பாக்யம் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஒரு 'காக்டெய்ல்' பார்ட்டிக்கு அழைப்பு வருகிறது. அழைத்திருப்பவர் உயர் அதிகாரி. போக வேண்டியதுதான். போகவில்லை. ஆனால், இறுதியில் 'எட்வேர்ட் தேர்ட்' வருகிறது. பார்க்க வேண்டும், பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஃபிலிம் க்ளப்பில் உறுப்பினர். ஒவ்வொரு வருடமும் இருபத்தைந்து ரூபாய் கொடுக்கிறேன். வெறுமனே பார்க்கலாம். எனினும், போகவில்லை. ஒரு ஜோக்கர் கிடைத்தும், தொடர்ந்து விளையாடக் கூடிய சூழ்நிலையை உண்டாக்க முடியவில்லை. இரண்டு ஜோக்கர்கள் இருந்தும், டிக்ளேர் செய்ய முடியவில்லை. ரம்மி போகட்டும்... 56 ஜாக்கியையும் ஒன்பதையும் கையில் வைத்துக் கொண்டு ப்ளஸ் ஒன் கூறினேன். சீட்டுக்களை வீசி எறிந்தேன். பார்ட்னர் வெற்றிப் பாட்டு பாட ஆரம்பித்தார். நாற்காலியிலிருந்து எழுந்தேன். சீட்டுக்களைத் தாழ்த்திய பார்ட்னர் வற்புறுத்தினார். முடியாது... விளையாட முடியாது. வேண்டுமென்றால் எல்லோருக்கும் வெறுமனே கொஞ்சம் காசு தரலாம்.

எனக்கு என்ன ஆனது? என்ன என்று அவர் ஆச்சரியப்பட்டார். ஒவ்வொரு நாளும் நான் நொறுங்கிக் கொண்டிருக்கிறேன். தகர்ந்து முடிந்து விட்டேன் நான்.

கண்ணாடிக்கு முன்னால் போய் நின்றேன். அவர் பார்த்தார். மெலிந்து போன முகம். ஒட்டிப் போன நெஞ்சு. சுருக்கங்கள் விழுந்த பெரிய நெற்றி. என்னுடைய கண்கள் என்னை பயமுறுத்தின. ஆனால், நான் எப்போதும் இப்படித்தான் இருந்தேன். எப்போதும்... கல்லூரியில் போராட்டங்கள் உண்டாக்கியபோது, சத்தியாக்கிரகம் செய்தபோது, நூல் நிலையத்திற்கு நெருப்பு வைத்தபோது இப்படித்தான் இருந்தேன். இளம் பெண்களை 'போர்' அடிக்கச் செய்து நடந்து திரிந்த காலத்திலும் இப்படித்தான் இருந்தேன். அப்போது காரணம் இதுவல்ல. ஆரோக்கியக் குறைவால் அல்ல. ஆரோக்கியக் குறைவு உள்ள அனைவரும் இந்த என்னைப் போல அல்ல. அப்படியென்றால் காரணம் என்ன?

காரணமா?

நீ நிறைய குடிக்கிறாய். குதிரை பருகும் மது. மனிதன் பருகுவது அல்ல. தேவையில்லாமல் சிந்திக்கிறாய். யோசிக்கிறாய். நிறைய வாசிக்கிறாய். உனக்கு விருப்பப்பட்ட விஷயம் காதல் அல்ல. க்ரைம் அல்ல. உன்னுடைய புத்தகத்தில் மனோதத்துவம், மாஸ்டர்பேஷன், மந்திரவாதம் ஆகியவை இருக்கின்றன. பிறகு உன் மனதிற்கு எப்படி அமைதி கிடைக்கும்? புட்டிகளை யமுனை நதியில் வீசி எறி. புத்தகங்களை அடுப்பில் எரியச் செய்.

முட்டாள்தனம்.... தவறான சிந்தனை... காரணத்தைத் தேட வேண்டாம். காரணம் - காரணமே இல்லை. இருந்தால், காரணங்கள் மட்டுமே இருக்கின்றன. உன்னுடைய மனம்... வெப்பம் உள்ள, வெப்பம் இருந்த இரத்தம்.... பைசா, யுங் கப்ரியல் மார்ஸல், சிமோன் த் புவர்... மனிதனையும் பிசாசையும் படைத்த மனிதன்... அனைவரும். அதனால் உற்பத்தியையும், மூலதனத்தையும் தேடி அலைய வேண்டாம். இப்போது தேவை மன அமைதியும் சந்தோஷமும்தான். தேவை உற்சாகம்தான். சத்தம் போட்டு பாட்டு பாட வேண்டும். ஒரே சிந்தனையுடன் சீட்டு விளையாட வேண்டும். முன்பு செய்ததைப் போல அருமையான ட்ராஃப்ட்களைத் தயார் பண்ணுவதற்கும், ஒரு நிமிடத்திற்கு நாற்பது சொற்களை 'டைப்' செய்வதற்கும் இயல வேண்டும். எதற்கு இந்த அமைதியற்ற தன்மை? துக்கம்? விரக்தி? நான் சந்தோஷமாக இருக்க வேண்டும். ஒரு நாளாவது. ஒரு மணி நேரமாவது. ஒரு நிமிடமாவது. அது என்னால் முடியாதா?

முன்பு அவனுக்கு நிறைய மன ரீதியான பிரச்னைகள் இருந்தன. மனம் முழுவதும் ஓநாய்கள். மஞ்சள் நிற கண்கள். வாயிலிருந்து எச்சிலை வழிய விடுகின்றன. ஓடுகின்றன. தரையில் கிடந்து நெளிகின்றன. இரவு பகல் என்றில்லாமல் ஊளை இடுகின்றன. அவன் கல்லை எடுத்து எறிந்து கத்தினான். ஓநாய்கள்.... நாய்கள் அல்ல, ஓடிப் போவதற்கு. ஜாக் லண்டனின் 'பலம் கொண்ட, பயங்கரமான' ஓநாய்கள், அவற்றைத் தோல்வியடையச் செய்வதற்கு, கண்டு பிடித்த வழி ஹிப்னாட்டிஸத்தைப் போல பலன் தரக் கூடியதாக இருந்தது. எந்தவித உணர்ச்சியும் இல்லாமல். எதைப் பற்றியும் சிந்திக்காமலே இருந்தான். விருப்பங்கள் தலையை உயர்த்தாமலிருக்கும்படி கவனமாக பார்த்துக் கொள்கிறான். வேதனை தவிர்க்க முடியாதது. ஒவ்வொருவனுக்கும் அவனுக்கென்று நேரம் இருக்கிறது. எனக்கான நேரம் இதோ வந்திருக்கிறது. புகார் இல்லை. கோபம் இல்லை. எதுவுமில்லை. அவனுடைய மனதில் ஆரவாரமில்லை. சலனமில்லை. இருட்டு இல்லை. வெளிச்சமில்லை. அவன் கடுக்காய் தின்று, பாலுறவு கொள்ளும் அளவிற்கு பலசாலியாக ஆனான். கஞ்சா தீனியாக ஆனது. துறவியாக ஆனான். தன்னுடைய சொந்த அன்னை இறந்தால் கூட, கண்களில் ஒரு துளி நீர் வராது என்று தோன்றியது.

உறக்கம்தான் சாத்தியம். உறக்கம்தான் எனக்கு நாசம் விளைவிப்பது. அவன் நினைத்தான். உறங்கக் கூடாது. உறங்காத நேரம் அதிகமாக இருந்தது. அதனால் அதிகமான கெட்ட பழக்க வழக்கங்களுக்கு ஆளானான். குடிக்காத சாயங்கால வேளை முற்றிலும் இல்லவே இல்லை என்றானது. நள்ளிரவிற்கு முன்பு திரும்பி வரும் இரவுகள் இல்லாமற் போயின. இது எலியைக் கொல்வதற்கு வீட்டை நெருப்பிற்கு இரையாக்குவதைப் போன்றது. அவன் நினைத்தான். மேலும் அதிகமான கவலைகளுக்கு உள்ளான மனிதனாக ஆனான். மேலும் ஏமாற்றங்களைச் சந்தித்தவனாக ஆனான்.

'உனக்கு பித்தம்...'

ஒருவன் சொன்னான். அவன் உள்ளங்கையை நீட்டிக் காட்டச் சொன்னான். நீட்டி காட்டிய உள்ளங்கையில் கையைச் சுருட்டி வைத்துக் கொண்டு குத்தினான். உடனே கையை மூடிக் கொள்ளும்படி கூறினான். மூடினான். திறக்கும்படி கூறினான். திறந்தான். உள்ளங்கை மஞ்சள் நிறத்தில் இருந்தது. அவன் சொன்னான்:


'இதோ... ஆதாரம். உனக்கு பித்தம்.'

அவன் ஒரு பெரிய கோமாளி. அவன் நார்மன் விஸ்டம் தொடங்கி நாகேஷ் வரை உள்ள அனைவரையும் கொண்டவன். அவன் காட்டக் கூடிய ஏராளமான தமாஷ்களில் ஒன்றாக அதை நினைத்தான். எனக்கு பித்தம் வராது. சயரோகம்தான் வரும். உஷ்ண நோயே வரும்.

பித்தம் வந்தால் சந்தோஷம் தோன்றுமா? சயரோகமும் உஷ்ண நோயும் வந்தால் தோன்றுமா? அப்படியென்றால், பித்தம் வரட்டும். சயரோகம் வரட்டும். உஷ்ண நோய் வரட்டும். இயலாது. ஓநாய்களின் சத்தத்தைக் கேட்க இயலாது. கடுக்காய் தின்றால், துறவியாக ஆகவும் முடியாது.

ஒருநாள் திடீரென்று தோன்றியது - கிராமத்திற்குப் போனால் என்ன? அங்கு போய் நான்கைந்து வருடங்களாகி விட்டன. விருப்பம் இல்லாமலில்லை. அதை விட பெரிய விருப்பங்கள் வேறு இருப்பதால்தான். குளு, சிம்லா ஆகிய இடங்களைச் சுற்றிச் சுற்றி வந்தான். வசந்த விழா நடத்தினான். மிருகத்தனமான ஆர்வம் இருந்தது. அதனால் இதுவரை ஊருக்குப் போக முடியவில்லை. இதோ... இப்போது போகலாம். போக வேண்டும். வேண்டாம் என்று வைத்திருக்கிறான். இந்த முறை வசந்த விழா சோர்வையும் வெறுப்பையும் எரிச்சலையும் தந்தது.

ஊருக்குச் செல்கிறான். உற்சாகத்தால் மூச்சு விட முடியவில்லை. இந்த வாசலை என்ன காரணத்தால் நீ இதுவரை பார்க்கவில்லை? சந்தோஷம் நிறைந்த வாசல் இது. உனக்கு முன்னால் திறந்து கிடந்தது. எனினும், நீ பார்க்கவில்லை. ஆச்சரியம்தான்.

ஊரைப் பற்றிய சிந்தனைகள் நிறைய தோன்றுகின்றன. தலையில், நறுமணம் நிறைந்த சிந்தனைகள். அழகான சிந்தனைகள். வேதனை தரும் சிந்தனைகள். வாசலில் அமர்ந்திருக்கிறான். தாய் பழைய கதைகளைக் கூறுகிறாள். பள்ளிக் கூடம் விட்டு பிள்ளைகள் தெருவின் வழியாக சிதறி நடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். வெளுத்த சீருடை அணிந்த ஆண் பிள்ளைகள். நீலமும், வெள்ளையும் உள்ள சீருடை அணிந்த பெண் பிள்ளைகள். பவுலோஸின் காபிக் கடை, வீனஸ் திரையரங்கம். ப்ரண்ணன் கல்லூரி.... சிறகுகள் இருந்திருந்தால், நான் இப்போது பறந்திருப்பேன். நான் இந்த நகரத்தை வெறுக்கிறேன். வாட் 69, விலைமாது, கேடு கெட்ட மனிதர்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் இந்த நகரத்தை. நீ முட்டாள். நான்கைந்து வருடங்களாகியும், போகவில்லை. ஒரு தடவை கூட. மகா முட்டாள்....

பரபரப்பான அலுவலகத்திற்குச் சென்றான். ப்யூனை மணியடித்து அழைத்தான். பணத்தை எடுத்துக் கொடுத்தான். 'போய் டிக்கெட் புக் செய். உடனே... உடனே...' என்றான். அரை மணி நேரம் கடந்ததும், ப்யூன் திரும்பி வந்தான். டிக்கெட் இல்லை. டீலக்ஸும் ஜீடியும் சதர்ன் எக்ஸ்ப்ரஸ்ஸும்... அனைத்தும் ஃபுல். டிக்கெட் வேண்டுமென்றால், பதினைந்து நாட்கள் காத்திருக்க வேண்டும். அட்வான்ஸ் புக்கிங்....

இனி என்ன செய்வது? பதினைந்து நாட்கள் எப்படி காத்திருப்பது? சாத்தியமில்லை. இறந்து விடுவான். பதினைந்து நிமிடம் காத்திருக்க முடியாது.

மேஜைக்கு உள்ளிருந்து செக் புத்தகத்தைத் தேடி எடுத்தான். மேஜையின் மீது குறிப்பை எழுதி வைத்து விட்டு, வெளியேறினான். வாடகைக் காரில் ஏறி வங்கிக்குள் வேகமாக நுழைந்தான். வங்கியிலிருந்து அடியில் இருந்தது வரை தோண்டியெடுத்து விட்டு, திரும்பி வந்தான். இனி உனக்கும் எனக்குமிடையே எந்தவொரு உறவுமில்லை.

கேரவனில் இருக்கை முன்பதிவு செய்து கொண்டிருந்தார்கள். சென்னைக்கு 24 ரூபாய். பரவாயில்லை. பணம் எதற்காக? வாழ்வதற்குத்தானே! பணத்தின் விலை, மதிப்பு ஆகியவற்றைப் புரிந்து கொள்கிறான். ஆனால், ஒரு மிகச் சாதாரண சுகத்தைக் கூட அடிமைப்படுத்த நீ தயாராக இல்லை.

ஒரு புதிய சூட்கேஸை அவன் வாங்கினான். புடவையும் மேற் துண்டும், ரசகுல்லாவும் வாங்கினான். புடவை நளினி அக்காவிற்கு. மேற் துண்டு அம்மாவிற்கு. ரசகுல்லா பிள்ளைகளுக்கு. சாயங்காலம் அலுவலகத்திலிருந்து வந்த பிறகு, பேக்கிங் செய்ய ஆரம்பித்தான். அவனுடைய உதட்டில் முனகல் பாட்டு வந்தது. என் உதட்டில் முனகல் பாட்டா? அவன் ஆச்சரியப்பட்டான்.

அமைதியாக இருந்த மனதில் தாளம் நிறைந்த சலனங்கள். வெளிச்சம்... குளிர்ந்த காற்று....

இரண்டு மாதங்கள் விடுமுறை. திரும்பி வரும்போது வேறொரு மனிதனாக இருக்க வேண்டும். சந்தோஷங்கள் நிறைந்த, பலமும் உற்சாகமும் கொண்ட வேறொரு மனிதன்.... நல்லவன்.... கெட்ட பழக்க வழக்கங்கள் இல்லாத, துறவியாக இல்லாத வேறு ஒருவன். ஆமாம்... உண்மையிலேயே. இப்போது எனக்கு நல்ல நம்பிக்கை இருக்கிறது. நான் காண்பவை அனைத்தும் பல வர்ணங்களும், பிரகாசமான வெளிச்சமும் நிறைந்தவையே.

முற்றிலும் மரியாதையே இல்லாமல் உள்ளே நுழைந்து வந்தாள். கதவைத் தட்டாமல். திறந்து, திரும்பி நின்று கதவை அடைத்து தாழ்ப்பாளைப் போடும்போது கோபத்துடன் சொன்னாள்:

'ஒரு மணி நேரமாக காத்திருக்கிறேன்.'

'ஸாரி.... மன்னிக்கணும் குழந்தை....'

நீண்ட நாட்களுக்குப் பிறகு அவன் 'குழந்தை' என்று அழைக்கிறான். அன்பு தோன்றும்போது மட்டுமே 'குழந்தை' என்று அழைப்பான். அப்படி இல்லாத வேளைகளில் மிஸ். ரேணு மேனன், ரேணு, அன்னிஹோத்ரி, ரேணு குப்தா, ரேணு ஹுஸைன்....

'ஏன் 'பேக்' செய்றீங்க?'

பதில் கூறவில்லை. யோசித்துக் கொண்டிருந்தான். நேற்று வரை அவள் மீது எந்தவொரு ஈடுபாடும் இருந்ததில்லை. வெறுப்புதான் இருந்தது. அவளைப் பார்க்காமலே, விலகி இருந்தான்.

'புடவை... யாருக்கு?'

'உனக்கு இல்ல.'

'என்னைக்காவது வாங்கி தந்திருக்கீங்களா?'
நாற்காலியை அருகில் நகர்த்திப் போட்டு, அமர்ந்து கொண்டே சொன்னாள்.

'நான் சொந்த ஊருக்குப் போறேன். நாளைக்கு....'

அவளுடைய கண்களிலும் மூக்கின் மீதும் உதடுகளிலும் ஆச்சரியம்.

'என்ன விசேஷம்?'

'எதுவுமில்லை. உனக்கு தேநீர் வேணுமா?'

'பசிக்குது.'

'சாப்பிடலையா?'

'இல்ல...'

'வா...'

சூட்கேஸை மூடி வைத்தான். அறையைப் பூட்டினான். முனகல் பாட்டு, பாடலாக மாறியது.

ரெஸ்ட்டாரெண்டிற்குள் இருந்த செயற்கை மரத்திற்குக் கீழே அமர்ந்தார்கள் - ஒருவரையொருவர் பார்த்தவாறு. புலாவ் சாப்பிட்டார்கள். அவள் வேக வேகமாக அள்ளித் தின்றாள். நல்ல பசி இருக்கிறது. அப்படித்தானே?

அவள் நள்ளிரவு வரை அறையில் இருந்தாள். 'பேக்' பண்ணுவதற்கு உதவியாக இருந்தாள். தேநீர் தயாரித்தாள். குலுங்கிக் குலுங்கி சிரித்தாள். நள்ளிரவில் வாடகைக் கார் நிறுத்தத்தில் கொண்டு போய் விட்டான். விளக்குக் கால்களுக்குக் கீழே அவளுடைய வாடகைக் கார் ஓடி மறைந்தது. ஒரு காலத்தில் உன் மீது எனக்கு பைத்தியமாக இருந்தது. தொலைபேசியில் உன்னுடைய குரலைக் கேட்க வேண்டும். உன்னைப் பார்க்க வேண்டும். உன்னுடைய கண்களையும் மூக்கையும் கூந்தலையும் பார்க்க வேண்டும். தொட வேண்டும். கடிகாரமோ வளையலோ இல்லாத உன் கையைப் பார்க்க வேண்டும். தொட வேண்டும். எப்போதும் பருத்தியால் ஆன புடவையை அணியும், நீளமான கைகளைக் கொண்ட ரவிக்கையை அணியும் நீ... உன்னை ஒரு காலத்தில் எனக்கு உயிராக இருந்தாய். இப்போது யாருமில்லை. கவலை இருக்கிறது. மனம் முழுக்க ஓநாய்கள்.... உனக்கு இருந்த இடத்தை அவை பிடித்துக் கொண்டு விட்டன.


காலையில் அவன் சூட்கேஸை எடுத்துக் கொண்டு விமான நிலையத்திற்குச் சென்றான்.

யாரிடமும் முன்கூட்டி கூறவில்லை. யாரும் வரவில்லை. வர வேண்டிய அவசியமில்லை. திடீரென்று வந்து நிற்கிறான். தெய்வத்தைப் போல. எல்லோரும் திகைத்துப் போவார்கள். குறிப்பாக அம்மா திகைப்படையட்டும். கவலைகள் நிறைந்த திகைப்பு அல்ல. சந்தோஷம் நிறைந்த திகைப்பு. அது நல்லதுதான். சிவப்பு நிற தலைப்பாகைகள் நகர்ந்து செல்கின்றன. ஆட்கள்... சத்தங்கள்... சுட்டுக் கொண்டிருக்கும் வெயில்... வெயில் நிலா வெளிச்சத்தைப் போல இருந்தது. சுமை தூக்குபவர்கள் அவனை ஆக்கிரமித்தார்கள். சூட்கேஸைத் தட்டிப் பறித்தார்கள்.

தார் போடப்பட்டிருந்த தெரு உருகுகிறது. கொதிக்கிறது. மரங்கள் தளர்ந்து கிடந்தன. வெப்பத்தால் பாதிக்கப்பட்ட மரங்கள். நிழல்கள் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன. பிச்சைக்காரர்கள்... குஷ்ட நோயாளி இருக்கிறான். கண் பார்வை தெரியாதவன் இருக்கிறான். ஒரு கால் இருப்பவன் இருக்கிறான். எல்லோரும் இருக்கிறார்கள். முன்பு இவர்கள் அங்கு இல்லை. எப்போது வந்தார்கள்... என்னுடைய ஊருக்கு? எதற்காக வந்தார்கள்?

நடந்து செல்லும்போது எண்ணற்ற கைகள் நீண்டு கொண்டு வந்தன. விரல்கள் அற்ற கைகள்.... எல்லோருக்கும் பணம் கொடுத்தான். இது குவைத்தின் எண்ணெய் வயலிலிருந்து வரும் இஸ்மாயில். நான்.... தங்கத்தால் ஆன கைக்கடிகாரம், தங்கத்தால் ஆன டாலர், தங்கத்தால் ஆன பல், பெட்டி நிறைய தங்கம்! தின்பதும் குடிப்பதும் தங்கத்தைத்தான்! ஆமாம்... இஸ்மாயில் நான்தான். தங்கத்தின் மீது ஆர்வம் இல்லாத, மனதின் சந்தோஷத்திற்காக தங்கத்தைத் தருவதற்கு தயாராக இருப்பவன்....

அவன் வாசலுக்கு வந்தான். நளினி அக்கா முற்றத்தில் இருந்தாள். கையில் தடியுடன் நின்று கொண்டு கூறுகிறாள்:

'நீ இங்கே வா.... காட்டுறேன். இன்னைக்கு உன்னை நான் கொல்றேன்.'
அவனைக் கண்டதும் பையன் பதைபதைப்புடன் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். நளினி அக்காவின் கையிலிருந்து தடி கீழே விழுந்தது. ஆச்சரியத்துடன் அவள் சொன்னாள்:

'இது யாரு என் குருவாயூரப்பா?'

ஒரு நிமிடம் வீடு திகைத்துப் போய் நின்றது. தொடர்ந்து ஆரவாரம். அம்மா குலுங்கிக் குலுங்கி அழுதாள். அவன் முதலில் பதைபதைப்புடன் காணப்பட்டான். பிறகு சிரிப்பு வந்தது. அவனுடைய உதட்டில் சந்தோஷத் துளிகள்!

'என் மகன் வந்துட்டானே! இனி இறந்தாலும், பரவாயில்ல. என் குருவாயூரப்பா!'

கண்களிலிருந்து வழிந்து கொண்டிருந்த கண்ணீர்... உலர்ந்து போன கன்னத்தின் வழியாக.

'இப்பவாவது உனக்கு வரணும்னு தோணுச்சே! வயசான அம்மா இங்கே இருக்கான்ற நினைப்பு இப்பவாவது உனக்கு வந்ததே!'

அதற்குப் பிறகும் அழுதாள் அம்மா.

கண்ணீரில் புன்னகை. கண்ணீர் உலர்கிறது. சமையலறையில் பரபரப்பு ஆரம்பமாகிறது.

குளிக்கிறான். சாப்பிடுகிறான். சாய்வு நாற்காலியில் வந்து சாய்கிறான். சிகரெட் பற்ற வைக்கிறான்.

அறை முழுவதும் குழந்தைகள். அவர்கள் எல்லாம் யார்? அவர்கள் அனைவரும் யாருடைய குழந்தைகள்? ஒரு குழந்தையைக் கூட தெரியவில்லை. பலரும் கடந்த நான்கு வருடங்களுக்குள் வெளிச்சத்தைப் பார்த்தவர்கள். மற்றவர்கள், பார்த்தால் அடையாளம் கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு மாறிப் போய் விட்டார்கள். அம்மா சொன்னாள்:

'நல்ல கதை! உன் கூட பிறந்தவர்களையும், மருமக்களையும் பார்த்தால் யாரென்று தெரியலையா?'

வாசற்படியில் திகைத்துக் கொண்டு நிற்கும் மூன்று சிறிய பெண் பிள்ளைகளைப் பார்த்து அவன் கேட்டான்:

'யாரு நளினி அக்காவின்...?'

'மூணுமே நளினியின் பிள்ளைகள்தான்.'

அம்மா பெருமூச்சு விடுகிறாள். மூன்று பெண் பிள்ளைகளும், இரண்டு ஆண் பிள்ளைகளும்!

'இது நளினியின் நான்காவது பையன். வயசு இரண்டு, இரண்டரை கடந்திடுச்சு. பார்த்தால் தோணுதா?'

உண்மையிலேயே தோன்றவில்லை. ஒரு தளர்ந்து போன நாய்க் குட்டியைப் போல இருந்தான்.

'பெயர் என்ன?'

'ப்ரவீண்.'

'நல்லது. பெயரிலாவது ஆரோக்கியம் இருக்கிறதே!'

'பார்க்கலைன்னாலும் எப்பவும் மாமன்... மாமன்னு சொல்லிக்கிட்டே இருப்பான்' நளினி அக்கா தொடர்ந்து சொன்னாள்:

'மகனே, இது உன்னோட மாமன். போ.... ஒரு நமஸ்தே சொல்லு.'

நாய்க்குட்டி மெதுவாக அவனை நோக்கி நடந்து வந்தது. எலும்புடன் காணப்பட்ட கைகளைக் கூப்பி சொன்னது: 'நமஸ்தே!' கண்கள் பயத்தால் வெடிக்கப் போகிறது. அவனுடைய மனதிற்குள் அந்தக் காட்சி தோன்றியது. அவன் சூட்கேஸைத் திறந்தான். பிஸ்கட் டின்களையும் ரஸகுல்லா டின்களையும் வெளியே எடுத்தான். நாய்க்குட்டியின் கண்கள் பிரகாசமாக ஆயின. பிஸ்கட்டின் வாசனை பரவியதும் அம்மாமார்களின் இடுப்பிலிருந்தும் நாற்காலிகளுக்குப் பின்னாலிருந்தும் ஆர்வம் நிறைந்த சிறிய கண்கள் முன்னோக்கி வந்தன. எல்லா குழந்தைகளும் ஒரே தோற்றத்தில் இருந்தன. மெலிந்து போன கை, கால்கள். கண்களில் ஆர்வம். அவன் கேட்டான்:

'இந்த குழந்தைகளுக்கு தின்பதற்கும் குடிப்பதற்கும் எதுவும் கொடுக்குறது இல்லையா?'

'இங்கே இருக்குற நிலைமை உனக்கு என்னடா தெரியும்?'

'நான் ஒவ்வொரு மாதமும் நூறு ரூபாய் அனுப்புறேன்ல?'

'நூறு ரூபாய்! அரிசியோட விலை என்னடா? மண்ணெண்ணெய்யோட விலை என்னடா? புட்டிக்கு? சர்க்கரை கிடைக்குதா?'

அவன் எழுந்து வாசலுக்கு நடந்தான். குழந்தைகள் அவனுக்கு வழி உண்டாக்கிக் கொடுத்தன. வெயில் எரிந்து கொண்டிருந்தது. பலமாக பற்றி எரிந்து கொண்டிருந்தது. தெரு ஆள் அரவமற்று இருந்தது. வாசலில் விழுந்து கிடந்த நிழலில் ஒரு நாய் படுத்து உறங்கிக் கொண்டிருந்தது. இடுப்பு எலும்புகள் உயர்ந்து கொண்டும், தாழ்ந்து கொண்டும் இருந்தன.

சாவதானமாக நளினி அக்கா கிடைத்தபோது, அவன் கேட்டான்:

'என்ன நளினி அக்கா இது? ஐந்து குழந்தைகளா?'

'தெய்வம் தர்றதுதானே? வாங்கிக்காம இருக்க முடியுமா?'

குற்றம் கடவுளுடையது. அவனுக்கு வெறுப்பு உண்டானது. அஸ்தமனம் கடந்து போன கண்கள். மஞ்சள் நிற கன்னங்கள். என் மனதில் இருந்த நீங்கள் இதுவல்ல. தலையில் சங்கு புஷ்பங்கள். கன்னத்தில் பவுடர். விரல் நுனியில் பிரகாசமான ஒரு குழந்தை. ஒன்றே ஒன்று மட்டும்....

வெயில் குறைந்ததும், வெளியேறினான். வெறுமனே சற்று நடப்பதற்கு. நடக்க நடக்க பதைபதைப்பு அதிகமாகிக் கொண்டு வந்தது. பதைபதைப்பு அல்ல... வெறுப்பு. கையற்ற நிலை. கிரகணத்தால் பாதிப்பு உண்டாகி வீங்கிய வயிறு. மெலிந்து போன கை, கால்கள். வெறுமை நிறைந்த சிறிய கண்கள். ஏக்கம் - எல்லா இடங்களிலும் இதேதான்... இதேதான்... வேறெதுவுமில்லை. ஏன் அது? அங்கு வசிப்பது பன்றிகளா?

மிகவும் ஆசைப்பட்டான் - அழகான ஆடை அணிந்த, கூர்மையும் குறும்புத்தனமும் நிறைந்த ஒரு குழந்தையைப் பார்ப்பதற்கு.

தின்பதற்கு இல்லை. பட்டினி. எப்படி அழகான ஆடைகளை அணிவார்கள்? கூர்மையான அறிவும் பிரகாசமும் உண்டாகும்? ஒவ்வொருவருக்கும் நான்கோ ஐந்தோ குழந்தைகள் இருக்கிறார்கள். பட்டினி எப்படி விலகிச் செல்லும்? தின்பதற்கு எப்படி இருக்கும்?


'ஓ.... சாரா? எப்போ வந்தீங்க?'

'இன்னைக்கு. நலம்தானே?'

'நலம்! அந்நிய நாட்டில் வாழும் நீங்கள்லாம் கொடுத்து வைத்தவர்கள்!'

கேட்க வேண்டிய என்னிடம் எதிர்த்துக் கூறுவதற்கு இருந்தது. இரண்டாயிரம் கிலோ மைல்கள் தூரத்திலிருந்து வருவது அதற்காக அல்ல.

'திருசூரில்தான் அதிகம். ஒவ்வொரு நாளும் பத்து, பதினைந்து பேர் இறந்து கொண்டே இருக்கிறார்கள்.'

'ஒரு வாந்தியும் பேதியும். முடிஞ்சது...!'

'இரண்டு நாட்களில் மக்கள் அனைவரும் ஊசி போடப் போறாங்க.'

'ஊசி போட்டால் காலரா வராதா? கலிகாலம். வர வேண்டியது வரும். எதைக் கொண்டும் தடுக்க முடியாது.'

'எவற்றையெல்லாம் பார்க்க வேண்டியதும், கேட்க வேண்டியதும் இருக்குமோ! தெரியவில்லை.... குருவாயூரப்பா!'

நகரம் வரை நடந்தான். நகரத்திற்கும் மாறுதல் இருந்தது. முகம் வாடியிருந்தது. தலையில் நாகத்தின் படத்துடன் நடந்து திரிந்து கொண்டிருந்த சேவல்களின் கண்களிலும் தளர்ச்சி காணப்பட்டது. வறுமை. பவுலோஸின் காபி கடைக்குள் நுழைந்தான். தெருவைப் பார்த்துக் கொண்டு அமர்ந்தான் எப்போதும் இருப்பதைப் போல. எத்தனையெத்தனை மாலை வேளைகளை நான் இங்கே அமர்ந்து கொன்றிருக்கிறேன்! எத்தனையெத்தனை சிகரெட்டுகளை நான் இங்கே அமர்ந்து சாம்பலாக ஆக்கியிருக்கிறேன்! கண்ணாடி அலமாரியில் பலகாரங்கள் எதுவுமில்லை. உலர்ந்து போன ஐந்தாறு வறுத்த காய் மட்டும்!

'சார்... எப்போ வந்தீங்க?'

'இன்னைக்கு.'

'வியாபாரம் ரொம்பவும் மோசம் சார். இந்தக் காலத்துல வியாபாரம் பண்ணி பிழைக்கவே முடியாது.'

பிழைக்க முடியாது என்று யார் சொன்னது? பிழைக்க வழி மட்டுமே இருக்கிறது. மூலதனம் மட்டுமல்ல. ஒரு 'ரிஸ்க்'கிற்குத் தயாராக்கிக் கொண்டு இருக்க வேண்டும். அர்ப்பணிப்பும் வேண்டும். இந்த விஷயம் இனியும் உங்களுக்குத் தெரியாதா?

பவுலோஸின் கடையை விட்டு வெளியே வந்தபோது, வானத்தில் மின்னல். இடி. குளிர்ந்த காற்று. நல்லது! மழை பெய்யட்டும். அதுவும் இனி தேவைதான்.

வழியில் குட்டப்பனைப் பார்த்தான். வாசலில் நின்றிருந்தான். ஓடி வந்தான். பழைய நன்றி. தலை முழுவதும் நரைத்திருந்தது. நெற்றியில் வெற்றிலை நாக்கை ஒட்டி வைத்திருக்கிறான். புகார்கள் ஆரம்பித்தன. வியாபாரம் மிகவும் மோசம். மா, பலா மரங்களுக்கு அடியில் மூலதனம் திரவ வடிவத்தில் புட்டிகளில் கிடக்கிறது. யாரும் வரவில்லை. திரும்பிப் பார்க்கக் கூட இல்லை. பட்டினி கிடக்கும்போது எப்படி சாராயம் குடிக்க முடிகிறது குட்டப்பா?

குட்டப்பன் கண்களால் அழைக்கிறான். கெஞ்சுகிறான். வேண்டாம் குட்டப்பா. இப்போது வேண்டாம். கவர்ச்சிகளுக்கு நான் இரையாக மாட்டேன். திரும்பி நடந்தேன். குட்டப்பன் பரிதாபமாக பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.

அரிசிக்கு பஞ்சம் என்று கேள்விப்பட்டான். ஆனால், பணத்தைக் கொடுத்தவுடன், பத்து நிமிடங்களுக்குள் அரிசி வந்து சேர்ந்தது. பணியாள் குட்டி தலையில் வைத்துக் கொண்டு வந்தான். கோணியில் தும்பைப் பூவைப் போன்ற அரிசி.

நளினி அக்காவின் குழந்தைகள், தாஸ் அண்ணனின் குழந்தைகள் ஆகிய எல்லா குழந்தைகளுக்கும் புதிய ஆடைகள் வாங்கிக் கொடுத்தான். அவர்களுடைய தந்தைகளுக்கும், தாய்களுக்கும் வாங்கிக் கொடுத்தான். புடவை வேண்டியவர்களுக்கு புடவை. மேற் துண்டு வேண்டியவர்களுக்கு மேற் துண்டு. சட்டை வேண்டியவர்களுக்கு சட்டை. குழந்தைகளுக்கு பந்தும், கோலிகுண்டுகளும் வாங்கிக் கொடுத்தான். பெண் பிள்ளைகளுக்கு வளையல்களும் ரிப்பனும்.

எல்லோருக்கும் மிகவும் சந்தோஷம்.

சோறு சாப்பிட்டு உற்சாகமான குழந்தைகள் வாசலில் பந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். பெண் பிள்ளைகளின் கண்களில் மை. கைகளில் வளையல்கள்.

சந்தோஷம் தோன்றுகிறது. பாக்கெட்டின் அடிப்பகுதி தெரிகிறது. கண்களை மூடிக் கொண்டு, அந்த உண்மையை நிராகரித்தான். நிராகரிக்க முயற்சித்தான். உங்களுடைய சந்தோஷம் என்னுடைய சந்தோஷமும்....

எல்லா நாட்களிலும் சாயங்கால வேளைகளில் குட்டப்பனைப் போய் பார்க்கிறான். அழுக்கு பெண் அழுக்கு பெண்ணாக ஆவாள். ஆக வேண்டும். குட்டப்பனின் குழந்தைகளும் நன்றாக உணவு சாப்பிடட்டும். அவர்களும் புதிய ஆடைகள் அணியட்டும். குட்டப்பா, நீயும் உன்னுடைய மனைவியும் உன்னுடைய குழந்தைகளும் சாப்பிடும் சோற்றில் என்னுடைய இரத்தமும் இருக்கிறது. பரவாயில்லை. ஆனால், நகரத்தில் கனாட் சர்க்கஸ். கொட்லா, முபாரக்பூர் ஆகிய இடங்களில் உள்ள ஏராளமான குட்டப்பன்கள் என்னுடைய இரத்தத்தைக் குடித்திருக்கிறார்கள். இனியும் குடிப்பார்கள். நீ ஒரு குட்டப்பன் மட்டுமல்ல - எத்தனையோ குட்டப்பன்மார்கள்....

மழை. இடி இடிக்கிறது. காற்றில் மரங்கள் வேர் பெயர்ந்து விழுகின்றன.

பாக்கெட்டின் அடிப் பகுதியைப் பார்த்து விட்டான். கடன் வாங்க ஆரம்பிக்கிறான். திரும்பிச் செல்லும்போது மாட்டு வண்டியில் ஏற வேண்டிய சூழ்நிலை உண்டாகுமோ? கேரவனில் மதிப்புடன் வந்தவன். தேற்றிக் கொள்ள முயற்சிக்கிறான். காசு ஒரு பிரச்னை இல்லை. பணம் வருகிறது. போகிறது. நிரந்தரமற்றது. தாள் துண்டு.... நிரந்தரமானது சந்தோஷம். தாள் துண்டு அல்லாதது. நான் சந்தோஷமாக இருக்க வேண்டும்.

ஓநாய்கள் ஊளையிடுகின்றன. இரவு பகல் வேறுபாடு இல்லாமல் சத்தமிட்டுக் கொண்டிருக்கும் ஓநாய்கள். சந்தோஷம் நீங்குகிறது. உற்சாகம் குறைகிறது. உறங்குவதற்கு இயலவில்லை. நடப்பதற்கு முடியவில்லை. சிரிக்க முடியவில்லை. ஓநாய்கள்.... ஓநாய்கள்.... குட்டப்பன் மட்டுமே ஆறுதலுக்கு இருக்கிறான். அவனுக்கு இப்போது பணம் தேவையில்லை. நகரத்திற்குச் சென்று அனுப்பினால் போதும். குட்டப்பன் தெய்வம். மழை, காற்று எதைப் பற்றியும் பொருட்படுத்தாமல் அவனைப் பார்ப்பதற்காக செல்கிறான். மழை நிற்காத நாளில் அங்கேயே படுத்து உறங்குகிறான்.

கண்ணாடியில் பார்க்கும்போது கன்னத்தின் எலும்புகள் வெளியே தெரிகின்றன. கண்களில் குழிகள். இனி என்ன செய்வது? செய்யாமல் இருப்பது? போதும்.... சந்தோஷமாக இருந்தது. போதும்... உண்ணாவிரதத்தை ஆரம்பி. தாடியை வளர்.... பாத்திரத்தைத் தயார் பண்ணு.

'பேக்' பண்ண ஆரம்பிக்கிறான். பேக் செய்வதற்கு எதுவுமில்லை. எல்லாம் குறைந்து போயிருக்கின்றன. எட்டு சட்டைகள் இருந்தது நான்காக ஆகியிருக்கிறது. செருப்பு இல்லை. தாஸ் அண்ணன் ஷீ அணியாதது அதிர்ஷ்டம். எல்லாம் போகட்டும். உங்களுடைய சந்தோஷமே என்னுடைய சந்தோஷமும். ரிஸர்வேஷன் இல்லை. மூன்றாம் வகுப்பு பெட்டியில் பயணம் செய்ய வேண்டும். பூரம் திருவிழா நடைபெறும் இடத்தைப் போல இருக்கும். பரவாயில்லை. இங்கேயிருந்து தப்பிக்க வேண்டும். முடிந்த அளவிற்கு சீக்கிரமாக...

இன்னும் விடுமுறை இருக்கிறது. முப்பத்தைந்து நாட்கள். கேன்சல் செய்யலாம். பாஸீக்கு சந்தோஷம் உண்டாகட்டும்.

நான் செல்கிறேன்.

கடுக்காய் தின்ன போகிறேன். கஞ்சா தீனியாக ஆகப் போகிறது. துறவியாக ஆகப் போகிறேன்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.