Logo

காய்கறிக்காரி நாராயணி

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 7857
Kaikarikari Narayani

வாழைக்குலை, முருங்கைக்காய், வெண்டைக்காய், கீரை, கரிசலாங்கண்ணி, தாழம்பூ, ரோசாப்பூ, தேங்காய், இளநீர்- இப்படி பலவகைப்பட்ட விஷயங்கள் நாராயணியின் கூடையில் இருக்கும். அவளின் வழக்கமான வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கக் கூடியவைதான் அவை எல்லாம்.

காலையில் கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் பழைய கஞ்சி கொடுத்து விட்டு, எஞ்சியிருப்ப தைத் தான் சாப்பிட்டுவிட்டு, தலைமுடியை வாரி கட்டி, ப்ளவ்ஸுக்குமேலே ஒரு மேற்துண்டை எடுத்து அணிந்து, கூடையை எடுத்து தலைமீது வைத்துக் கொண்டு, அவள் நகரத்தை நோக்கிப் புறப்பட்டாள். பக்கத்து வீட்டுக்காரிகளான பங்கஜாக்ஷியும் ஜானகியும் மாதவியும் அவளின் சினேகிதிகள். காய்கறிகளின் விலை, பெரிய வீடுகளுக்குள் நடக்கும் உள் நாடகங்கள், கணவர்களும் சகோதரர்களும் வீட்டுக்குள் கொண்டு வரும் நாட்டு விஷயங்கள், காதல், திருமணம், பிரசவம், குடும்பச் சண்டை போன்ற பலவிதப்பட்ட விஷயங்களைப் பற்றி தங்களுக்குள் வாதம், எதிர்வாதம் செய்தவாறு அவர்கள் நகரத்திற்குள் நுழைவார்கள். பிறகு, நான்கு பேரும் நான்கு வேறு வேறு வழிகளில் பிரிவார்கள். சில நேரங்களில் மீண்டும் ஒன்று சேர்வார் கள். பிறகு மீண்டும் பிரிவார்கள். வியாபாரத்தில் பெரிய போட்டி இருக்கும் அவர்களுக்குள்.

நாராயணி எல்லா வீடுகளிலும் ஏறுவாள். ஆனால், சில வீடுகள் அவளுடைய நிரந்தர வாடிக்கையாக இருக்கும். அந்த வீடுகளுக்கு தன் சிநேகிதிகள் செல்வதை அவள் விரும்ப மாட்டாள். அப்படி யாராவது அந்த வீடுகளைத் தேடி வந்தால், மீண்டும் அவர்கள் அங்கு வராமல் இருக்கவும் அவர்களை சம்பந்தப்பட்ட வீட்டுக்காரர்கள் படி ஏற்றாமல் இருக்கவும் சில தந்திரங்களை அவள் பயன்படுத்துவாள்.

பங்கஜாக்ஷி தேங்காய் வியாபாரம் செய்பவள். அவள் அழைக்காமல் எந்த வீட்டுப் படியிலும் ஏற மாட்டாள். ஒவ்வொரு வீட்டு கேட்டிலும் நின்று அவள் உரத்த குரலில் சத்தமிடுவாள்:

“தேங்காய் வேணுமா, தேங்காய்?”

வீட்டுக்காரர்கள் அழைத்தால், அவள் கேட்டுக்குள் நுழைவாள். இல்லாவிட்டால் அடுத்த கேட்டில் நின்று மீண்டும் கத்துவாள். வீடுகளில் விற்று மீதியிருக்கும் தேங்காய்களை அவள் மார்க்கெட்டிற்குக் கொண்டு போய் விற்பாள்.

ஜானகி வாழைக்குலை விற்பவள். தேநீர் கடைகளிலும் வெற்றிலை பாக்கு கடைகளிலும்தான் அவளுக்கு வியாபாரம். வீடுகளில் அழைத்தால் மட்டுமே அவள் செல்வாள்.

மாதவி வெறும் காய்கறி விற்பவள்தான். பூசனிக்காய், வெள்ளரிக் காய், கீரை, வெண்டைக்காய், முருங்கைக்காய் போன்ற நாட்டு காய்கறிகளை மட்டுமே அவள் விற்பனை செய்வாள். அவள் எல்லா வீடுகளிலும் ஏறி இறங்குவாள். காய்கறி வாங்கினாலும் வாங்க வில்லையென்றாலும் தன் கூடைகளில் இருக்கும் எல்லா காய்கறிகளையும் அவள் எடுத்துக் காட்டுவாள். விலை கூறுவாள். மிகவும் களைப்பாக இருக்கும்பொழுது வீடுகளில் கஞ்சி நீர் இருக்குமா என்று கேட்பாள். சில வீடுகளில் கஞ்சி நீர் மட்டும் தருவார்கள். சிலர் கஞ்சி நீரில் கொஞ்சம் சாதத்தையும் போட்டு, அதனுடன் கூட்டும் சேர்த்துத் தருவார்கள்.

நாராயணிக்கு இரண்டு வகை வியாபாரமும் உண்டு. காலையில் மார்க்கெட்டுக்குப் போகும்வரை ஒரு வியாபாரம். மார்க்கெட்டிலிருந்து இங்கிலீஷ் காய்கறிகளை வாங்கிக் கொண்டு வீடு வரும்வரை அவளின் இரண்டாவது வியாபாரம் நடக்கும். நாட்டு காய்கறிகள் வகையைச் சேராத காய்கறிகளை இங்கிலீஷ் காய்கறிகள் என்று அழைப்பார்கள்.

நாராயணியின் வியாபாரத்தை வியாபாரம் என்றே சொல்ல முடியாது. அவள் எந்த காய்கறிக்கும் விலை கூற மாட்டாள். விலை சொல்லாமலே இரண்டு மடங்கு காசு வாங்குவது எப்படி என்ற விஷயம் அவளுக்குத் தெரியும். வழக்கமாக செல்லும் வீடுகளுக்குத் தேவையான காய்கறிகளைக் கொடுத்துவிட்டு அவள் சொல்லுவாள்:

“விலையை பிறகு சொல்றேன் சின்னம்மா. இதை முதல்ல எடுத்து வைக்கச் சொல்லுங்க...”

பெரிய பதவியில் இருப்பவர்களின் வீடுகள்தான் நாராயணியின் வாடிக்கையான வீடுகள். அரசாங்க காரியாலயத்தில் சூப்பிரண்டாக இருப்பவர்கள், உதவி செக்ரட்டரிகள், செக்ரட்டரிகள், எஞ்சினியர் கள்,  காவல் துறை அதிகாரிகள் போன்றவர்களின் வீடுகள்தான். நாராயணியின் வாடிக்கையான வீடுகள். அந்த வீடுகளுக்குத் தேவையான காய்கறிகளை அவள் கொண்டு போய் கொடுக்கிறாள் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், அதை ஒரு வியாபாரமாக அவர்கள் கருதக்கூடாது என்ற கொள்கையையும் அவள் கொண்டிருந்தாள். அவள் கூறுவாள்:

“சின்னம்மா, உங்களுக்கு என்ன வேணுமோ அதைச் சொல்லுங்க. அதைக் கொண்டு வந்து தர்றது என் பொறுப்பு.”

எந்த வீட்டுக்கும் தேவையே படாத ஒரு பொருள் நாராயணியின் கையில் வந்துவிட்டால், அதை அவள் எப்படியும் நல்ல விலைக்கு விற்று விட்டுத்தான் மறுவேலை பார்ப்பாள். ஒருநாள் அவளுடைய கணவன் எங்கிருந்தோ கரிசலாங்கண்ணி கொண்டு வந்தான். அதிலிருந்து கொஞ்சத்தைக் கூடையில் எடுத்து வைத்துக்கொண்டுதான் அவள் அடுத்த நாள் நகரத்திற்கே புறப்பட்டாள். போலீஸ் இன்ஸ்பெக்டரின் வீட்டுப் படியில் கால் வைத்தபோது அங்கிருந்து சின்னம்மா கேட்டாள்:

“எதற்கு நாராயணி கரிசலாங்கண்ணி?”

“இதை நான் சூப்பிரண்ட் எஜமானோட வீட்டுக்குக் கொண்டு போறேன். அங்கே இருக்குற சின்னம்மாவும் பிள்ளைகளும் கரிசலாங்கண்ணி சாறுல எண்ணெய்யைக் கலந்து காய்ச்சி உடம்புல தேய்ச்சுக்கிறாங்க. அந்தச் சின்னம்மாவோட முடியை சின்னம்மா, நீங்க பார்த்திருக்கீங்களா? கன்னங்கரேர்னு பனங்குலை யைப்போல அது தொங்குறதைப் பார்க்கணுமே! வக்கீல் எஜமான் வீட்டுக்கும் நான்தான் கரிசலாங்கண்ணி கொடுக்குறேன். மூத்த மகளோட முடி முன்னாடி செம்பட்டையா இருந்துச்சு. கரிசலாங் கண்ணி சாறுல எண்ணெய்யைக் கலந்து காய வச்சு உடம்புல தேய்க்க ஆரம்பிச்சாங்க. இப்போ அவங்க முடியைப் பார்க்கணுமே...”

“அப்படின்னா எனக்கும் கொஞ்சம் கரிசலாங்கண்ணி கொண்டு வந்து தர முடியுமா, நாராயணி?”

“அது கிடைக்குறது ரொம்பவும் கஷ்டம் சின்னம்மா. என் புருஷன் நேத்து முழுசும் நடந்து இதைக் கொண்டு வந்தாரு. இன்னைக்குக் காலையில எதுவும் சாப்பிடாமலே மனுஷன் கிளம்பிப் போனாரு. கரிசலாங்கண்ணி தேடித்தான். கிடைச்சா சின்னம்மா உங்களுக்குக் கொடுத்துட்டுத்தான் மத்தவங்களுக்கு நான் கொடுப்பேன்.” என்னவோ தீவிரமாக யோசிப்பதைப்போல் முகத்தை வைத்துக்கொண்டு அவள் கூறுவான்:

“இல்லாட்டி ஒரு காரியம் செய்வோம் சின்னம்மா. சூப்பிரண்டு வீட்டுக்கு வேணும்னா நாளைக்கு நான் கொடுத்துக்கிறேன். இப்ப இருக்குறதை சின்னம்மா நீங்க எடுத்துக்கோங்க.”

“இதற்கு நான் என்ன தரணும் நாராயணி?”

“அதைப் பிறகு சொல்றேன் சின்னம்மா. இதை இப்போ உள்ளே எடுத்து வைக்கச் சொல்லுங்க.”

ஒவ்வொரு வீட்டிலும் காய்கறிகளைக் கொடுத்து முடித்து விட்டால், நாராயணி புறப்படுவதற்கு மிகவும் அவசரப்படுவாள்.

“சரி... புறப்படட்டுமா சின்னம்மா? சின்னப் பிள்ளைங்க வீட்டுல பட்டினியா இருக்குதுங்க. கடைசி பிள்ளைக்கு கடுமையான காய்ச்சல். நான் போய்த்தான் ஏதாவது சாப்பாடு தயார் பண்ணணும்.”


கொடுத்த காய்கறிகளுக்கு காசு எதுவும் வாங்கவில்லை. விலை என்னவென்றுகூட கூறவில்லை. வீட்டில் பிள்ளைகள் பட்டினி கிடப்பதாகக் கூறி அவள் உடனே செல்ல வேண்டுமென்று வேறு கூறுகிறாள். காய்கறி வாங்குபவர்கள் உண்மையாகவே மனம் பதைபதைப்பார்களா இல்லையா? என்ன செய்ய வேண்டும் என்பது புரியாமல் வருத்தப்பட்டு நிற்பவர்களைப் பார்த்து நாராயணி சொல்லுவாள்:

“நேற்று பங்கஜாக்ஷிக்கிட்ட ரெண்டு ரூபா கடன் வாங்கினேன். புருஷன்கிட்ட மருந்து வாங்கிட்டு வரச் சொல்லி கொடுத்தேன். செக்ரட்டரி எஜமான் வீட்டுல கொடுத்த படி அரிசியை வாங்கிட்டுப் போய் கஞ்சி வச்சேன். இன்னைக்கு என்ன செய்யப் போறேனோ தெரியல.. பங்கஜாக்ஷிக்கிட்ட வாங்கின பணத்தைத் திருப்பித் தரலைன்னா, அவ கயிறை எடுத்துட்டு வரப்போறா. தூக்குப்போட்டு சாகப் போறதா சொல்லிக்கிட்டு...”

தான் கொடுத்த பொருட்களுக்கு பணம் வாங்காத நாராயணியின் வீட்டில் பங்கஜாக்ஷி தூக்குப்போட்டு சாக அனுமதிக்க முடியுமா? செக்ரட்டரியின் வீட்டில் படி அரிசி கொடுத்திருக்கும்பொழுது, எஞ்சினியரின் வீட்டிலிருந்தும் படி அரிசியாவது கொடுத்தால் தானே நன்றாக இருக்கும்? அரை ரூபாயோ முக்கால் ரூபாயோ விலை வருகின்ற சாமான்களைத் தந்துவிட்டு, நாராயணி இரண்டு ரூபாயும் படி அரிசியையும் வாங்கிக்கொண்டு திரும்புவாள்.

சில நேரங்களில் நாராயணி மிகுந்த பதைபதைப்புடன் சில வீடுகளின் படிகளில் ஏறுவாள்.

“இங்க பாருங்க சின்னம்மா... நீங்க கேட்டதையெல்லாம் நான் கொண்டு வந்திருக்கேன். இது எல்லாத்தையும் உள்ளே கொண்டு போய் வைக்கச் சொல்லுங்க. நான் போறேன் சின்னம்மா. என் புருஷன் ஆஸ்பத்திரியில இருக்காரு.”

“உன் புருஷன் உடம்புக்கு என்ன?”

“க்ஷயம் சின்னம்மா, க்ஷயம். நேத்து சாயங்காலம் நான் போறப்போ, போர்வையை மூடி மனுஷன் படுத்திருக்காரு. குழந்தைங்க அழுதுக் கிட்டு இருக்கு. நான் பக்கத்துல இருந்த ஆளுங்களையெல்லாம் வரவழைச்சு, கட்டில்ல படுக்கப் போட்டு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போனேன். இப்ப அங்கேதான் கிடக்குறாரு சின்னம்மா. சாப்பாடு கொண்டு போயி கொடுக்கணும். மருந்து வாங்கணும். ஆஸ்பத்திரி யில மருந்து இருந்தாலும், அவங்க கொடுக்க மாட்டேங்குறாங்க சின்னம்மா. நாமதான் பணம்தந்து வெளியேயிருந்து மருந்து வாங்கணும். நேத்து ஊசி போடுறதுக்கு மருந்து வாங்குறதுக்காக அஞ்சு ரூபா வேணும்னு நான் எங்கெல்லாம் அலஞ்சேன்றீங்க! கடைசியில மாதவியோட அண்ணன்கிட்ட போய் வாங்கினேன். அந்த ஆளோட பொண்டாட்டி நிறைமாசமா நின்னுக்கிட்டு இருக்கா. பிரசவத்துக்கு வச்சிருந்த பணத்துல இருந்து அஞ்சு ரூபாயை எடுத்து என் கையில தந்தாரு. இது எல்லாத்தையும் உள்ளே எடுத்து வைக்கச் சொல்லுங்க சின்னம்மா. நான் புறப்படுறேன். நான் போயி மருந்து வாங்கித் தந்தாத்தான் இன்னைக்கு ஊசி போட முடியும்.”

அவள் கூடையை எடுத்து தலையில் வைப்பாள். பொருட்களைக் கொடுத்துவிட்டு அதற்கான பணத்தை வாங்காமல் அவசரத்தில் போக இருக்கிறாள் அவள். எதற்கு? க்ஷயரோகம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் கிடக்கும் தன்னுடைய கணவனுக்கு ஊசி போடுவதற்கான மருந்து வாங்குவதற்குத் தேவையான பணத்தைச் சம்பாதிப்பதற்காக. எந்த சின்னம்மாவாக இருந்தாலும், மனம் இளகிப் போவார்களா இல்லையா? நாராயணி பணத்தை வாங்கிய பிறகுதான் அந்த இடத்தை விட்டே நகர்வாள்.

சில நாட்களுக்கு அவள் தன் கணவனின் க்ஷயரோகத்தைக் காரணம் காட்டி பலரிடமும் பணம் பறிப்பாள். வழக்கமாக தான் செல்லும் வீட்டைச் சேர்ந்தவர்கள் கேட்கும் பொருட்களைக் கொண்டு போய் கொடுக்கவும் செய்வாள். அவள் வக்கீல் வீட்டுப் படியில் மிகவும் களைத்துப் போய் இருப்பதைப்போல் காட்டியவாறு சென்று தன் தலையிலிருந்த கூடையைக் கீழே இறக்கி வைத்துவிட்டு கூறுவாள்.

“கொஞ்சம் தண்ணி தரச் சொல்லுங்க சின்னம்மா. தலை சுத்துறது மாதிரி இருக்கு.”

“உனக்கு என்ன ஆச்சு நாராயணி?”

“நேத்து எதுவும் சாப்பிடல, தூங்கவும் இல்ல. சின்னம்மா, பிள்ளைகளும் தளர்ந்து போய் படுத்துக் கிடக்குதுங்க. கடவுள்கிட்ட ஒப்படைச்சிட்டுத்தான் நான் வந்தேன். சின்னம்மா, நீங்க தாழம்பூவும் நெல்லிக்காயும் வேணும்னு சொன்னீங்கல்ல? இந்தாங்க... கொண்டு வந்திருக்கேன். இதை உள்ளே எடுத்து வைக்கச் சொல்லுங்க சின்னம்மா. நான் புறப்படட்டுமா? தன்னால முடியிறப்போ வேலை செஞ்ச மனுஷன்தானே! இப்ப அந்த ஆளுக்கு என்னை விட்டா வேறு யாரு இருக்குறது?” தன் கணவனின் க்ஷயரோகத்தைப் பற்றி கூறிவிட்டு நாராயணி தொடர்ந்து சொல்லுவாள்:

“நேத்து எஞ்சினியர் எஜமானோட வீட்டுல அந்தச் சின்னம்மா தந்த அஞ்சு ரூபாவை வச்சுத்தான் நான் மருந்து வாங்கினேன். இன்னைக்கு பணத்துக்கு நான் எங்கே போவேன்? யார்கிட்ட கேட்பேன்?” இதற்கிடையில் வேலைக்காரி கொண்டு வந்து தரும் கஞ்சியைக் குடித்து விட்டு, போவதற்கான ஆயத்தத்தில் இருப்பாள் நாராயணி.

“ஊசி போடலைன்னா ஆளு செத்துப் போகும்னு டாக்டர் சொல்லிட்டாரு. அப்படி சாகுறதா இருந்தா என்னைப் பார்த்துக்கிட்டே சாகட்டும். நான் பக்கத்துலயே இருக்கப் போறேன். நான் புறப்படுறேன் சின்னம்மா.”

அவள் அந்த சின்னம்மா தரும் ரூபாயை வாங்கிக் கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்வாள்.

நாராயணி தான் வழக்கமாகச் செல்லும் வீடுகளைப் பற்றி மிகவும் மோசமான கருத்துகளையே தன்னுடைய சினேகிதிகளிடம் கூறுவாள்.  ஒரு சின்னம்மா அறுத்த கைக்கு உப்பு தர மாட்டாள் என்பாள். இன்னொரு சின்னம்மா தான் தந்த பொருட்களுக்கு மிகவும் குறைவாகவே பணத்தைத் தருவாள் என்பாள். இன்னொரு சின்னம்மா மிகவும் திமிர் பிடித்தவள் என்பாள். இன்னொரு சின்னம்மா சமையல்காரி சொல்வதைக் கேட்டு செயல்படக் கூடியவள் என்பாள். இப்படி ஒவ்வொரு சின்னம்மாவைப் பற்றியும் கெட்டதாக ஏதாவது கூறி, தான் வழக்கமாகச் செல்லும் அந்த வீடுகள் பக்கம் தன் சினேகிதிகள் தலை காட்டாத மாதிரி அவள் பார்த்துக்கொள்வாள்.

ஒருநாள் எஞ்சினியரின் மனைவி தேங்காய்காரி பங்கஜாக்ஷியை அழைத்து பத்து, பன்னிரெண்டு தேங்காய்களை வாங்கினாள். அதற்கான நியாயமான விலையையும் கொடுத்தாள். நாராயணிக்கு அந்த விஷயம் தெரிய வந்தது. அடுத்த நிமிடம் அவள் எஞ்சினியரின் வீட்டைத் தேடி வந்தாள்.

“சின்னம்மா, பங்கஜாக்ஷிக்கிட்ட இருந்து தேங்காய் வாங்கினீங் களா?” அவள் கேட்டாள்.

“இங்கே அவசரமா தேங்காய் தேவைப்பட்டது. அப்போ பங்கஜாக்ஷி கேட் பக்கத்துல இருந்து கூப்பிட்டுக்கிட்டு இருந்தா. அவக்கிட்ட பன்னிரெண்டு தேங்காய்கள் வாங்கினேன். அதுக்கு என்ன நாராயணி?”

“எதுவும் இல்லாம நான் கேட்பேனா சின்னம்மா? அவ சொன்னா- உங்களுக்கு அதிகமான விலைக்கு தேங்காய்களை வித்துட்டதா.”

“அப்படி ஒண்ணுமில்ல நாராயணி. நீ தர்றதைவிட குறைவான விலைக்கு அவ தேங்காய்களைத் தந்தான்றதுதான் உண்மை.”

“அவ அப்படி குறைவான விலைக்கு தேங்காய்களைத் தர்றதுக்கு காரணம் என்ன தெரியுமா சின்னம்மா?”


“என்ன?”

“அவளோட புருஷன் ராத்திரி நேரத்துல திருடிட்டு வர்ற தேங்காய்கள்தான் அது. கிடைக்கிற விலைக்கு அதைத் தர வேண்டியதுதானே!”

“அவ புருஷன் திருடனா?”

“திருடினதுக்காக ஒரு வருடம் சிறைக்குப் போயிட்டு வந்தவன் அவன். பிறகு கள்ளச்சாராய கேஸ்லயும் சிறைக்குப் போயிட்டு வந்திருக்கான். குறைவான விலைக்குக் கிடைக்குதுல்ல? சின்னம்மா, தாராளமா வாங்குங்க. ஆனா, சில நேரங்கள்ல போலீஸ்காரங்க பின்னாடி வந்தாலும் வருவாங்க.”

அதற்குப் பிறகு எஞ்சினியரின் மனைவி பங்கஜாக்ஷியிடம் தேங்காய் வாங்கவேயில்லை. பங்கஜாக்ஷியின் கணவன் கள்ளச்சாராய வழக்கில் சிறைக்குப் போய் விட்டு வந்தவன் என்பது உண்மைதான். ஆனால், அவன் தேங்காய் திருடன் அல்ல. பங்கஜாக்ஷி விற்கும் தேங்காய் யாரும் திருடியதுமில்லை.

ஒருநாள் வக்கீலின் மனைவி ஜானகியிடம் ஒரு குலை பூவன்காயும், ஒரு குலை மலை வாழையும் வாங்கினாள். அதற்கான பணத்தையும் தந்தாள். வயிறு நிறைய கஞ்சியும் கொடுத்தாள். ஜானகி அந்த விஷயத்தை நாராயணியிடம் சொன்னாள்.

“நீ சொன்னியேடி நாராயணி? வக்கீல் எஜமானோட பொண்டாட்டி யாருக்கும் எதுவும் கொடுக்க மாட்டாங்கன்னு?”

“நான் உண்மையைத்தான் சொன்னேன். அதுக்கு என்ன?”

“நான் இன்னைக்கு அவங்களுக்கு ரெண்டு குலை கொடுத்தேன். எனக்கு பணத்தையும் தந்தாங்க. வயிறு நிறைய கஞ்சியும் தந்தாங்க.”

“பணமும் தந்தாங்க. வயிறு நிறைய கஞ்சியும் தந்தாங்க. ஆனா, இனி குலையைக் கொண்டு அங்கே போனா உனக்குத் தெரியும்.”

“ஏன்? என்ன நடக்கும்?”

“என்ன நடக்கும்னு கேக்குறியா? யானைக்கு அரைப் பணம் பாக்குற சின்னம்மா அவங்க. கஞ்சி தந்து உன்னை மயக்கிட்டாங்க. இனிமேல் நீ விலை சொல்றதைக் கேட்டாங்கன்னா... நீ இனி குலையை எடுத்துட்டுப் போ. அப்போ தெரியும்.”

நாராயணி நேராக வக்கீலின் வீட்டுக்குச் சென்றாள். அவள் முகத்தை ஒரு மாதிரி தூக்கி வைத்துக்கொண்டு சொன்னாள்:

“சின்னம்மா, நான் இனிமேல் இங்கே வரமாட்டேன்.”

“ஏன் நாராயணி?”

“நாங்க ஏழைங்க, சின்னம்மா. அன்னன்னைக்கு வேலை செஞ்சி சாப்பிட்டுக்கிட்டு இருக்குறவங்க. ஒரு நேரம் பட்டினி கிடந்தா உங்கக்கிட்ட உண்மையைச் சொல்லுவேன். பட்டினி கிடக்கிறோம், படி அரிசிதாங்கன்னு. திருடி, ஏமாத்தி பிழைக்கிறவங்க இல்ல நாங்க....”

“நாராயணி, உன்னை திருடின்னு யார் சொன்னது?”

“யாரும் சொல்லை, சின்னம்மா. இனிமேல் அப்படி நீங்க சொல்லிடக் கூடாதேன்னு பாக்குறேன்.”

“சொல்ல வர்றதை தெளிவா சொல்லு, நாராயணி.”

“அவ இங்கே வந்தாளா, சின்னம்மா?”

“யாரு?”

“ஜானகி...”

“வாழைக்குலை கொண்டு வந்தவளா?”

“அவளேதான்... ஒரு மாதிரி கொழைஞ்சிருப்பாளே! அவதான்.”

“அவ இங்கே வந்தா. அவகிட்ட நான் ஒரு பூவன் குலையும் ஒரு மலை வாழைக் குலையும் வாங்கினேன். அதுக்கு என்ன?”

“அதுக்கு என்னவா? சின்னம்மா, ஒரு விஷயத்தை நீங்க கேக்குறீங்களா? வக்கீல் எஜமானோட வீட்டுக்கு நான்தான் காய்கறி கொடுக்க வேண்டியவ. இப்பவும் நான்தான் கொடுத்துக்கிட்டு இருக்கேன். இதற்கிடையில ஒரு நாளு ஜானகி என்கூட வந்தா, வாழைக்குலையை எடுத்துக்கிட்டு. நான் சின்னம்மாக்கிட்ட பேசிக்கிட்டு இருக்குறப்போ அவள் கொஞ்சிக்கிட்டே குழந்தைக் கிட்ட போயி நிக்கிறதைப் பார்த்தேன். குழந்தை யார்னு கேக்குறீங் களா? வக்கீல் எஜமானோட மூத்த மகளோட குழந்தை...”

“பிறகு?”

“பிறகு என்ன நடந்துச்சுன்றீங்க? நான் சாயங்காலம் வீட்டுக்குப் போய் பாத்திரம் தேய்ச்சு, அடுப்பு பத்த வச்சு, சீனிக் கிழங்கை அறுத்துக்கிட்டு இருந்தேன். பிள்ளைங்களோட அப்பா எங்கேயோ வெளியே போயிருந்தாரு. அப்போ போலீஸ்காரன் ஏறி வீட்டுக்குள்ளே வர்றான். உடனே என்னை போலீஸ் ஸ்டேஷனுக்கு வரச் சொன்னான். போகாம இருக்க முடியுமா சின்னம்மா?”

“எதுக்கு உன்னை அழைச்சிட்டுப் போனாங்க?”

“சின்னம்மா கேளுங்க... நான் போனப்போ வக்கீல் எஜமானோட சமையல்காரியும் வேலைக்காரனும் அங்கே நின்னுக்கிட்டு இருந்தாங்க. ஜானகியும் அங்கே இருக்கா. விஷயம் என்ன தெரியுமா? குழந்தையோட இடுப்புல இருந்த தங்கக் கொடியைக் காணோம். எங்க எல்லாரையும் அங்கே நிக்க வச்சுட்டு, போலீஸ்காரங்க ஜானகியை மட்டும் கொஞ்சம் தள்ளி அழைச்சிட்டுப் போனாங்க. ஒரு அலறல் சத்தம் கேட்டது. கொஞ்சம் நேரம் போனதும், போலீஸ்காரங்க தங்க இடுப்புக் கொடியைக் கொண்டு வந்தாங்க. அவங்களுக்குப் பின்னாடி ஜானகி வர்றா.”

“அவளா அதை எடுத்தா?”

“பிறகு யார்ன்றீங்க?”

“எடுத்து எங்கே வச்சிருந்தா?”

“அதை எப்படி சொல்லுவேன். சின்னம்மா? சொல்ல முடியாத இடத்துல வச்சிருந்தா.”

நடந்த சம்பவம் என்னவோ உண்மைதான். ஆனால், இடுப்புக் கொடியை எடுத்தவள் ஜானகி அல்ல. நாராயணி சொன்னாள்:

“இங்கேயிருந்து அவ எதையாவது திருடிட்டுப் போனாலும் போவா. நீங்க தேவையில்லாம என்மேலே சந்தேகப்படலாம். போலீஸ்காரங்க கூப்பிட்டா, நானும்தானே போகணும்? அதனாலதான் சொல்லுறேன், நான் இனிமேல் இங்கே வரலைன்னு...”

அதற்குப் பிறகு ஜானகியை அந்த வீட்டில் ஏற விட்டால்தானே!

இதற்கிடையில் வக்கீலின் வீட்டுக்குக் கிழக்குப் பக்கம் இருந்த வீட்டுக்கு புதிதாக ஒரு குடும்பம் வந்தது. ஒரு அசிஸ்டென்ட் செக்ரட்டரியும் அவரின் மனைவியும் இரண்டு குழந்தைகளும் அந்த வீட்டில் குடியிருக்க வந்தார்கள். சமையல்காரியும் இருந்தாள். செக்ரட்டரியின் மனைவி இரண்டு குழந்தைகளைப் பெற்றிருந்தா லும், பார்க்க மிகவும் அழகாகவே இருந்தாள். வந்த நிமிடத்திலேயே ஜன்னல் அருகில் போய் நின்று வக்கீல் வீட்டை ஒரு பார்வை பார்த்தாள். வாசலில் ஒரு கொடியைக் கட்டி அதில் சில பட்டுப் புடவைகளையும் ப்ளவ்ஸ்களையும் எடுத்து விரித்துப் போட்டு விட்டு, ஜன்னலருகில் சென்று நின்று பார்த்தாள். தான் செய்வதை வக்கீல் வீட்டிலிருக்கும் யாராவது பார்க்கிறார்களா என்று பார்த்தாள். உடல் முழுக்க நகைகளை அணிந்த வண்ணம் வாசலில் இங்குமங்குமாய் நடந்தவாறு தன்னை யாராவது கவனிக்கிறார்களா என்று பார்த்தாள்.

அதைப் பார்த்த வக்கீலின் மனைவி தன்னிடமிருந்த நகைகள் அனைத்தையும் எடுத்து அணிந்தாள். சில புடவைகளையும் ப்ளவ்ஸ்களையும் எடுத்து வாசலிலிருந்த கொடியில் கொண்டு போய் போட்டாள். பிறகு சமையலறைக்குள் சென்று மறைந்து நின்று பார்த்தாள்- புதிதாக வந்திருப்பவர்கள் தன்னைப் பார்க்கிறார்களா என்று. செக்ரட்டரியின் மனைவி வானொலியை "ஆன்” செய்தாள். வக்கீலின் மனைவியும் வானொலியை "ஆன்” செய்தாள்.

இப்படி இரண்டு வீட்டைச் சேர்ந்த பெண்களுக்கிடையே போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, நாராயணி வக்கீலின் வீட்டைத் தேடி வந்தாள். வக்கீலின் மனைவி அவளைப் பார்த்து கேட்டாள்.

“அதைப் பார்த்தியா, நாராயணி?”

“என்ன, சின்னம்மா?”


“அங்கே வாசல்ல என்ன தொங்கிக்கிட்டு இருக்கு பார்த்தியா? எல்லாம் தன்கிட்ட இருக்குன்னு காண்பிக்கிறதுக்குத்தானே எல்லாத்தையும் எடுத்து தொங்க விட்டிருக்கு?”

“பிறகு எதுக்கு சின்னம்மா பெட்டிக்குள்ள இருக்கிற துணிகளை யெல்லாம் எடுத்து வாசல்ல தொங்க விடணும்? பெரிய உத்தி யோகத்துல இருக்குறதையும் பணக்காரங்கன்றதையும் காண்பிக்குற துக்குத்தான் எல்லாம்...”

“அவளைப் பார்க்குறப்போ தோணும்- உயர்நீதிமன்ற நீதிபதி யோட பொண்டாட்டியோன்னு. இதுவரை வாசல்ல நின்னுக்கிட்டு இருந்தா, நாராயணி- மாலைகளையும் வளையல்களையும் நான் பார்க்கணும்னு. எந்த காட்டுல இருந்து வந்தவளோ இவ?”

“நான் போயி தெரிஞ்சிட்டு வரட்டுமா, சின்னம்மா?”

“ம்... போயி எல்லாத்தையும் தெரிஞ்சிட்டு வா நாராயணி. இந்த வீட்டைப் பற்றி ஏதாவது கேட்டால், எதுவுமே தெரியாதுன்னு சொல்லிடு.”

“நான் அப்படிச் சொல்லாம வேற என்னத்தைச் சொல்லுவேன்?”

நாராôயணி கிழக்குப் பக்கமிருந்த வீட்டின் கேட்டில் நின்று அழைத்தாள்.

“காய்கறி வேணுமா.”

“இங்கே வா” அந்தப் பெண் அழைத்தாள்.

நாராயணி வாசலை நோக்கி நடந்தாள். அந்தப் பெண் மிடுக்கான குரலில் கேட்டாள்:

“என்ன காய்கறி இருக்கு?”

“வெண்டைக்காய், பூசணிக்காய், வெள்ளரிக்காய், புடலங்காய், முருங்கைக்காய்...” நாராயணி மூச்சு விடாமல் சொன்னாள்.

“இது எதுவும் எனக்கு வேண்டாம். நாங்க இது எதையும் சாப்பிடுறது இல்ல...” -அந்தப் பெண் உரத்த குரலில் சொன்னாள். தான் சொன்னது வக்கீல் வீட்டிலிருப்போரின் காதில் விழுமா என்று பார்த்தாள்.

“பிறகு என்ன வேணும் சின்னம்மா? இங்கிலீஷ் காய்கறி கொண்டு வரட்டுமா?” நாராயணி வாசலோடு சேர்ந்து  நின்றவாறு கேட்டாள்.

“நாங்க இங்கிலீஷ் காய்கறிகளைத்தான் சாப்பிடுவோம். கேபேஜ், பீன்ஸ், பொட்டட்டோஸ், டொமாட்டோஸ்... இந்த காய்கறிகளை தினமும் கொண்டு வந்தா நான் வாங்கிக்கிறேன்.”

“கொண்டு வந்து தர்றேன், சின்னம்மா. ஜட்ஜ் எஜமானோட வீட்டுக்கும் நான்தான் இங்கிலீஷ் காய்கறி கொடுக்குறேன்.” அவள் தன்னுடைய கூடையை வாசற்படியில் இறக்கி வைத்தவாறு சொன்னாள்.

“வேற எந்த வீட்டுலயும் இங்கிலீஷ் காய்கறிகளை வாங்குறது இல்ல சின்னம்மா. பெரிய உத்தியோகத்துல இருக்குறவங்களோட வீட்டுல மட்டும்தான் இதை வாங்குவாங்க.”

“என் கணவர் கவர்மெண்ட் செக்ரட்டரியா இருக்காரு.”

நாராயணி மரியாதை மேலோங்க சற்று ஒதுங்கி நின்றாள். சின்னம்மா முன்பிருந்ததைவிட அதிகமான மிடுக்கை வரவழைத்துக்கொண்டு கேட்டாள்:

“அந்த வீட்டுல யாரு இருக்காங்க?”

“ஒரு வக்கீல்...”

“கேஸ் எதுவும் இல்லாத வக்கீலா இருக்கும்னு நினைக்கிறேன்.”

“பாவம் அவங்க... எப்போதாவது கீரையோ, பூசணிக்காயோ, வெள்ளரிக்காயோ வாங்குவாங்க. அதைக் கொடுக்குறதுக்குத்தான் நான் அங்கே போவேன்.”

“பாவம்னு சொல்ற... பார்க்குறப்போ அப்படி தெரியலியே! என்ன பந்தான்ற! நான் புடவையை எடுத்து கொடியில போட்டா, அந்தப் பொம்பளையும் கிழிஞ்சுபோன துணிகளைக் கொண்டு வந்து கொடியில போடுது. நான் வானொலியை வச்சா, அந்தப் பொம்பளையும் வானொலியை வைக்குது.”

“ஒண்ணும் இல்லாதவங்கதான் எல்லாம் இருக்குறது மாதிரி காட்டிக்குவாங்க.”

“சரி... உன் பேரு என்ன?”

“நாராயணி.”

“எப்போ இங்கிலீஷ் காய்கறிகளைக் கொண்டு வருவே?”

“மதியத்துக்குப் பின்னாடி கொண்டு வர்றேன் சின்னம்மா.” கூடையிலிருந்து கொஞ்சம் கீரையை எடுத்து வாசலில் வைத்துவிட்டு அவள் சொன்னாள்:

“இது நானே நட்டு வளர்ந்த கீரை. சின்னம்மா, இது இங்கே இருக்கட்டும். நான் மதியத்துக்குப் பிறகு இங்கிலீஷ் காய்கறிகளைக் கொண்டு வர்றேன்.” அவள் கூடையை எடுத்து தன் தலையில் வைத்தாள் விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டான்.

அவள் மீண்டும் வக்கீலின் வீட்டுக்குச் சென்றாள். வக்கீலின் மனைவி ஆர்வத்துடன் கேட்டாள்:

“அவங்க யாரு நாராயணி?”

“கவர்மெண்டு செக்ரட்டரியாம். அந்த பொம்பளை என்ன திமிரா நடக்குறாங்க தெரியுமா சின்னம்மா? இங்கிலீஷ் காய்கறிகள் மட்டும்தான் சாப்பிடுவாங்களாம். அவங்க பேசறப்போ நமக்கு தோணும்- அவங்க ஏதோ அரண்மனையில இருந்து வந்திருக்கவங்க போலன்னு. மதியத்துக்குப் பின்னாடி இங்கிலீஷ் காய்கறிகளைக் கொண்டு வர்றதா சொல்லிட்டு நான் இங்கே வந்துட்டேன். நான் கொஞ்சம் கீரையைத் தந்தேன். அவங்க வாங்கிக்கிட்டாங்க.”

“புடவைகளைப் பார்த்தியா?”

“பார்த்தேன் சின்னம்மா. நெறம் மட்டும்தான் இருக்கு. இங்கே தெருவுல வச்சிக்கிட்டு விற்பாங்கள்ல? அந்த மாதிரி புடவைகள்தான். நாலு ரூபாயோ அஞ்சு ரூபாயோ கொடுத்தா கிடைக்கக்கூடிய புடவைங்கதான் அது.”

“நகைகள் என்னென்ன இருக்கு?”

“மாலையும் வளையல்களும் இருக்கு. ஆனா, அது எதுவும் தங்கம் இல்ல சின்னம்மா. வெறும் கவரிங் நகைங்க எல்லாம்.”

அன்று வக்கீலின் மனைவி நாராயணிக்கு கஞ்சியும் கொடுத்தாள். ஒரு ரூபாயும் கொடுத்தாள். புறப்படும் நேரத்தில் நாராயணி சொன்னாள்:

“இனிமேல் நான் காய்கறிகள் கொண்டு போறப்போ இங்குள்ள விசேஷங்களை அவங்க கட்டாயம் கேட்பாங்க.”

“இப்ப போனப்பவும் கேட்டிருப்பாளே?”

“என்கிட்ட கேட்டாங்க நகைகள் எவ்வளவு இருக்குன்னு. ஒரு கண்ணாடி அலமாரி நிறைய நகைகள் இருக்குன்னு நான் சொன்னேன். காதுல போட்டிக்குற கல்லு வச்ச கம்மலோட விலை ஆயிரத்தைந்நூறு ரூபாய்னு நான் சொன்னேன். நான் புறப்படட்டுமா சின்னம்மா? மீதி உள்ளதை நான் வந்த பிறகு சொல்றேன்.”

“நாராயணி, நீ கட்டாயம் வரணும். உனக்கு நான் சாதம் எடுத்து வைக்கிறேன்.”

மாலை நேரம் நாராயணி இங்கிலீஷ் காய்கறிகள் கொண்டு வந்தாள். வக்கீலின் மனைவி காலையில் நிறைய காய்கறிகள் வாங்கினாலும், செக்ரட்டரியின் மனைவியுடன் போட்டி போட வேண்டும் என்பதற்காக கொஞ்சம் இங்கிலீஷ் காய்கறிகளும் வாங்கினாள். பிறகு வேலைக்காரியைப் பார்த்து நாராயணிக்கு சாதம் கொண்டு வந்து தரும்படி சொன்னாள். வேலைக்காரி மெதுவான குரலில் முணுமுணுத்தாள்:

“நாராயணி பாடு இனிமேல் கொண்டாட்டம்தான் - பக்கத்து வீட்டுல புதுசா வந்திருக்குற அம்மாவை வச்சு...”

நாராயணியின் காதில் வேலைக்காரி சொன்னது விழுந்தது. வக்கீலின் மனைவியின் காதில் அது விழவில்லை. அவள் கேட்டாள்:

“என்னடி, முணுமுணுக்குற?”

“நான் எதுவுமே சொல்லலையே சின்னம்மா...”

நாராயணி சொன்னாள்:

“சின்னம்மா, உங்க சமையல்காரிக்கு நான் இங்க வர்றதும், எனக்கு நீங்க ஏதாவது தர்றதும் பிடிக்கல.”

“அவளோட விருப்பத்தை அவ வீட்டுல வச்சிக்கட்டும். இங்கே நான் என்ன விரும்புறேனோ, அதுதான் நடக்கும்.”

வேலைக்காரி சாதத்தை எடுத்துக்கொண்டு வந்தாள். நாராயணி சொன்னாள்:

“வீட்டுல பிள்ளைங்க பட்டினி கிடக்குது சின்னம்மா. நான் இதை வீட்டுக்கு எடுத்துட்டுப் போறேன்.”


ஒரு பாத்திரத்தில் சாதமும், கூட்டும், குழம்பும் கொடுக்கப் பட்டது. நாராயணி அதை கூடையில் வைத்துக்கொண்டு கிழக்குப் பக்கம் இருக்கும் வீட்டை நோக்கி நடந்தாள். அங்கு போனதும் சமையலறைத் திண்ணையில் தன்னுடைய கூடையை இறக்கி வைத்தாள். அந்த வீட்டு அம்மா நாற்காலியில் உட்கார்ந்திருந்தாள். நாராயணி வாசற்படியில் உட்கார்ந்தாள். கூடையின் மேற்பகுதியில் இருந்த பாத்திரத்தைப் பார்த்த செக்ரட்டரியின் மனைவி கேட்டாள்:

“இது என்ன நாராயணி?”

“சாதம் சின்னம்மா, பிள்ளைங்களுக்கு கொடுக்குறதுக்காக எடுத்துட்டுப் போறேன். வக்கீல் எஜமானோட பொண்டாட்டி ஒவ்வொரு நாளும் இப்படி ஏதாவது தருவாங்க. நான் பிள்ளைங்களுக்கு கொண்டு போயி கொடுப்பேன். இளகிய மனசு உள்ள சின்னம்மா அவங்க...” கூடையில் இலையில் கட்டி வைத்திருந்த ஒரு பிச்சிப்பூ மாலையை எடுத்து செக்ரட்டரியின் மனைவியின் கையில் தந்துவிட்டு நாராயணி சொன்னாள்:

“சின்னம்மா, இந்த மாலையை இப்பவே தலையில வச்சிக்கோங்க. காலையில உங்க தலைமுடியைப் பார்த்தப்பவே நான் நினைச்சேன்- பிச்சிப்பூ மாலை வாங்கிக்கொண்டு வரணும்னு. இவ்வளவு அழகான தலைமுடியை நான் வேற எங்கேயும் பார்த்தே இல்ல, சின்னம்மா. ஒவ்வொரு நாளும் பிச்சிப்பூ வச்சாத்தான் அந்த முடியோட அழகு முழுசா ஆகும்.”

“நான் முன்னாடி இருந்த வீட்டுல ஒவ்வொரு நாளும் ஒரு பையன் பிச்சிப் பூவும் முல்லைப்பூவும் கொண்டு வந்து தருவான்.”

“இனிமேல் ஒவ்வொரு நாளும் நான் கொண்டு வந்து தர்றேன் சின்னம்மா.”

“அந்த வீட்டுல அவளுக்கு தலையில் முடி நிறைய இருக்கா?”

“ச்சே... பூனை முடியைப் போல அஞ்சாறு முடி இருக்கு. அதைக் கட்டியிருக்கிறதைப் பார்த்தா, சீரகத்தை முடிஞ்சு வச்சிருக்கிற மாதிரி இருக்கும்.”

“ஒவ்வொரு நாளும் தவறாம பிச்சிப்பூ கொண்டு வரணும் நாராயணி...”

“கட்டாயம் கொண்டு வர்றேன் சின்னம்மா. உங்களுக்கு என்ன வேணும்னாலும் இந்த நாராயணிக்கிட்ட சொல்லிட்டா போதும். ஆனா, பிச்சிப்பூ வாங்கணும்னா கொஞ்ச தூரம் என் நாத்தனார் வீடு வரை போகணும். சின்னம்மா. அங்கே போறதுன்னா கிழிஞ்சுபோன துணியைப் போட்டுக்கிட்டு போனா நல்லாவா இருக்கும்? நான் பெரிய அளவுல வாழ்ந்துக்கிட்டு இருக்கேன்- பெரிய பெரிய உத்தியோகத்துல  இருக்குறவங்களோட வீட்டு அம்மாக்களோடதான் எனக்கு பழக்கம்னு அங்கே முழுவதும் பேச்சு. அப்படி இருக்குறப்போ இந்த கிழிஞ்சு போன துணியை அணிஞ்சிக்கிட்டு நான் எப்படி போவேன்?”

அவ்வளவுதான்- அடுத்த நிமிடம் சின்னம்மா எழுந்து உள்ளே போனாள். ஒரு புடவையையும் ப்ளவ்ஸையும் எடுத்துக்கொண்டு வந்து நாராயணியிடம் தந்தாள்.

“இப்போ இதைக் கொண்டு போ. நாராயணி. சலவைக்குப் போட்ட துணிகளைக் கொண்டு வர்றப்போ உனக்கு வேற ஒரு புடவையும் ப்ளவ்ஸும் தர்றேன்.”

“எனக்கு எதுவுமே இல்லைன்னாலும் நான் அதைப் பெரிசாகவே எடுக்க மாட்டேன். பிள்ளைங்களோட அப்பா போடுறதுக்கு துணியில்லாம நடக்குறதைப் பார்த்தாத்தான்...”

சின்னம்மா மீண்டும் உள்ளே போய் ஒரு சலவை செய்த வேஷ்டியை எடுத்துக்கொண்டு வந்தாள்.

“இது என் கணவரோட வேஷ்டி. ரெண்டு தடவையோ மூணு தடவையோதான் சலவைக்கே போயிட்டு வந்திருக்கு. இதைக் கொண்டு போயி பிள்ளைங்களோட அப்பாவுக்குக் கொடு நாராயணி.”

நாராயணி காய்கறிகளை எடுத்துப் பரப்பினாள். சின்னம்மா கேட்டாள்:

“இது ஒவ்வொண்ணோட விலை எவ்வளவு?”

“விலையை எல்லாம் பிறகு பார்த்துக்கலாம் சின்னம்மா. இதை முதல்ல கொண்டு போய் உள்ளே வைக்கச் சொல்லுங்க.”

“இதை உள்ளே எடுத்து வைடி...” சின்னம்மா வேலைக்காரிக்குக் கட்டளையிட்டாள்.

வேலைக்காரி முகத்தை ஒரு மாதிரி வைத்துக்கொண்டு வந்தாள். அவள் முகத்தை ஒரு வெட்டு வெட்டிவிட்டு காய்கறிகளை உள்ளே எடுத்துக்கொண்டு போனாள்.

“நாராயணிக்கு சாதம் கொடுடி...” சின்னம்மா கட்டளை பிறப்பித்தாள்.

“நான் வீட்டுக்கு எடுத்துட்டுப் போயிடுறேன் சின்னம்மா. பிள்ளைங்களோட அப்பாவுக்கும் இன்னைக்கு கொஞ்சம் சாதம் கொடுத்தது மாதிரி இருக்கும்...”

வேலைக்காரி முணுமுணுத்துக் கொண்டே சமையலறைக்குள் போனாள். அவள் முணுமுணுத்ததை யாரும் கேட்கவில்லை. ஒரு பாத்திரத்தில் சாதம், குழம்பு, கூட்டு எல்லாவற்றையும் கொண்டு வந்து அவள் நாராயணியிடம் தந்தாள். அவள் அதை கூடையில் வைத்துக்கொண்டு கிளம்பினாள்.

அடுத்த நாள் காலையில் நாராயணி வேகமாக அசிஸ்டெண்ட் செக்ரட்டரியின் வீட்டுக்குச் சென்றாள். வாழையிலையில் கட்டிய பிச்சிப் பூவையும், கொஞ்சும் கீரையையும் எடுத்து சமையலறை திண்ணையில் வைத்து விட்டு வருத்தமான குரலில் அவள் சொன்னாள்:

“இனிமேல் இங்கே வரமுடியுமோ என்னமோ?”

“ஏன் நாராயணி அப்படிச் சொல்ற? வேற எங்கேயாவது போறியா என்ன?”

“ஒண்ணு அவ... இல்லாட்டி நான்... ரெண்டு பேர்ல ஒருத்தி சாகுறது நிச்சயம் சின்னம்மா.”

“அவள்னு யாரைச் சொல்ற? எதற்கு சாகணும்?”

“சின்னம்மா, நான் சொல்றதைக் கேளுங்க. பிள்ளைங்களோட அப்பா க்ஷயரோகம் பாதிச்சு ஆஸ்பத்திரியில கிடக்குறப்போ பங்கஜாக்ஷிக்கிட்ட நான் பத்து ரூபாய் கடன் வாங்கினேன்.”

“எந்த பங்கஜாக்ஷி?”

“என் வீட்டுக்கு தெற்குப் பக்கத்துல இருக்குறவ அவ. என்னைப் போல அவளும் ஒரு வியாபாரிதான். ஆனா, அவளோட புருஷன் திருடப் போவான். என் புருஷன் திருடப் போறது இல்ல. அவகிட்ட நான் கடன் வாங்கி ஒரு மாசமாச்சு. அவ இப்போ வந்து என் வீட்டு திண்ணையில உட்கார்ந்துக்கிட்டு இருக்கா. ரூபாயை உடனே தரலைன்னா தூக்குல தொங்கிடுவேன்றா. அவ புருஷன் வாசல்ல வந்து  உட்கார்ந்துக்கிட்டு இருக்கான். அவ செத்துப் போயிட்டா என்னைக் கொன்னுடுவேன்றான் அவன். ரூபா என் கையில இருந்தா நான் கொடுக்காம இருப்பேனா சின்னம்மா? தண்ணி இல்லாத இடத்துல முங்குன்னா எப்படி! சின்னம்மாகிட்ட கடன் வாங்கி கொடுடின்னு பிள்ளைங்களோட அப்பா சொன்னாரு. நான் யார்கிட்ட கேட்குறது சின்னம்மா?”

என்னென்னவோ சொல்லி பத்து ரூபாயை வாங்கிக்கொண்டு போனாள் நாராயணி. வேலைக்காரி சொன்னாள்:

“அவ சரியான திருடி, சின்னம்மா...”

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.