Logo

கோட்டை நிழல்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 8222
Kottai Nizhal

டந்து நடந்து கடைசியில் நான் வந்து சேர்ந்தது பரந்து கிடக்கும் ஒரு மைதானத்தில். எனக்கு முன்னால் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோட்டை இருந்தது.

குளிர்ந்த காற்று வீசிக் கொண்டிருந்தது. வெயில் சற்று குறைவாக இருந்த மாலை நேரம். மைதானத்திலிருந்த வானொலியில் சோகம் நிறைந்த ஒரு இனிமையான பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. சோகம் ததும்பும் காதல் உணர்வு கொண்ட பாடல்களென்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், அதில் ஒரு கஷ்டம் இருக்கிறது. பாடலைக் கேட்டு முடித்தவுடன் நான் அழ ஆரம்பித்து விடுவேன்.

சிறிது நேரம் ஓய்வெடுக்க வேண்டும். கான்க்ரீட் பெஞ்சுகளிலும் புல்வெளிமீதும் ஆட்கள் நிறைய உட்கார்ந்திருந்தார்கள். கூட்டத்திலிருந்து விலகி, கோட்டையின் மேற்குப் பகுதியில் இருந்த உயரமான ஒரு புல்மேட்டில் போய் நான் உட்கார்ந்தேன்.

பன்னிரண்டு வருடங்களுக்குப் பிறகு நான் இந்த நகரத்திற்கு மீண்டும் வந்திருக்கிறேன். ஆறு வருடங்கள் இதே நகரத்தில் நான் வாழ்ந்திருக்கிறேன். அப்போதெல்லாம் தினந்தோறும் மாலை நேரங்களில் இந்த வழியில் நான் செல்வதுண்டு. சில நேரங்களில் தலைக்குள் ஆயிரம் யோசனைகளை வைத்துக்கொண்டு மைதானத்தில் நான் சுற்றித் திரிவதுண்டு. அழியாத ஒரு கடந்த கால நினைவுச் சின்னத்தைப்போல கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் இந்தக் கோட்டையின்மீது எனக்கு எப்போதும் ஒரு உயர்ந்த மரியாதை உண்டு. முதல் முறையாக இந்த நகரத்திற்கு ஒரு கல்லூரி மாணவனாக வந்த நாளன்றே நான் இந்தக் கோட்டைக்கு வந்திருக்கிறேன்.

அந்த நாளை நான் நினைத்துப் பார்க்கிறேன். கோட்டைக்குள் சுற்றி நடந்தேன். பட்டாளக்காரர்களும் படைகளும் இருந்த இடங்களில் அரசாங்க அலுவலகங்கள் இயங்கிக் கொண்டிருந்தன. சிவப்பு வண்ண சாயம் பூசிய கனமான மதில்களைக் கொண்ட கட்டடம் அது. அதைச் சுற்றி நடக்கும்போது உள்ளேயிருந்து குரல்கள் கேட்கும். உள்ளே இன்னொரு உலகம்- சிறை. முதல் முறையாக அதைச் சுற்றி நான் நடந்த நாளன்று ஒரு நீண்ட அலறல் சத்தம் கேட்டது. அதற்குமேல் அங்கு என்னால் நிற்க முடியவில்லை.

பன்னிரண்டு வருடங்களுக்குப் பிறகு நான் இங்கு வந்திருக்கிறேன். அந்த நாட்களை மனதில் நினைத்துப் பார்க்கும் போது என்னுடைய கண்களில் நீர் நிறைந்து விடுகிறது. வாழ்க்கை அப்போது ஒரு இனிய பயணமாக இருந்தது. கலைஞனும் காதலனுமான இளைஞன் நான். சிறிதும் குறையாத எதிர்பார்ப்புகள் வாழ்க்கையை வண்ணமயமாக்கி விட்டிருந்தன. கடந்துபோன இனிய நாட்களே, உங்களின் கல்லறையில் நான் இன்று என்னுடைய கண்ணீரால் மலர் அர்ச்சனை செய்கிறேன்.

வாழ்க்கையின் கசப்பையே பின்னால்தான் நான் உணர்ந்தேன். கால வெள்ளத்தின் போக்கில் அடிபட்டு நான் எங்கோ போய்ச் சேர்ந்தேன். இப்போது நரம்புகளில் இளம் ரத்தம் ஓடவில்லை. இதயத்தில் இனிமையான கனவுகள் தோன்றுவதில்லை. உறவினர்கள், நண்பர்கள் என்று யாருமே இல்லாமல், சொந்தத்தில் இருப்பதற்கு ஒரு வீடுகூட இல்லாமல், அன்புக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் ஒரு ஆத்மாவாக மணலில் நடந்து கொண்டிருக் கிறேன்.

இருட்டு பரவிக் கொண்டிருக்கிறது. ஆட்கள் கொஞ்சம் கொஞ்சமாக இடத்தை விட்டுப் போய்க் கொண்டிருக்கிறார்கள். இப்போது நான் பார்த்துக் கொண்டிருக்கும் மனிதர்கள் ஒவ்வொருவரும் எங்கே திரும்பிப் போகிறார்கள்? தந்தையும் தாயும் மனைவியும் குழந்தைகளும் உள்ள தங்களின் வீடுகளுக்கு. வாழ்க்கை என்பது ஒரு மாலை நேர சவாரி என்று சொல்லலாம். மகிழ்ச்சியுடன் காணப்படும் மனிதர்கள் தங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இருப்பிடங்களுக்கு விரைந்து கொண்டிருக்கிறார்கள்.

வானொலி சோகம் கலந்த இனிய பாடல்களை மீண்டும் பாடிக்கொண்டிருக்கிறது.

நேரம் என்னவாகியிருக்கும்? நகராட்சி அலுவலகத்தின் மணிக்கூண்டில் இருக்கும் கடிகாரத்தைப் பார்த்தேன். ஏழரை தாண்டியிருக்கிறது. அப்படியென்றால் நான் வந்து எவ்வளவு நேரமாயிற்று? சரியாக என்னால் ஞாபகப்படுத்திப் பார்த்துச் சொல்ல முடியவில்லை. கடந்த பல நாட்களாகவே அறிவு சரியாக வேலை செய்ய மாட்டேன் என்கிறது என்றொரு சந்தேகம் எனக்கு. அவ்வப்போது தலைக்குள் ஒரே குழப்பமாக இருப்பதுபோல் தோன்றும். மது எதுவும் அருந்தாமலே தலை கிறுகிறுப்பதைப் போல் சில நேரங்களில் இருக்கும். இப்போது நான் மது அருந்துவதில்லை. மூன்று வருடங்களாக அதை கையால்கூட தொடுவதில்லை.

மைதானத்திலிருந்து மெல்லிய நிலவொளியை மின்சார விளக்குகள் விரட்டியடித்தன. நிலவு என்பது இயற்கையின் புன்னகை. மனிதர்களால் அந்தப் புன்னகையைக்கூட மறக்க முடிகிறது. இப்போது நான் சொன்னது ஒரு தத்துவ ஞானத்திற்குள் அடங்கியதா என்ன? நான் ஒரு தத்துவ ஞானியாக ஆனால் என்ன?

திரும்பிப் போக வேண்டும்போல் இருக்கிறது. இரவில் ஹோட்டல் அறையில் இருக்க வேண்டும். நேற்று இரவு ஒரு தனியார் நிறுவனத்தில் தங்கினேன். நினைத்துப் பார்க்கும்போது மனதில் வெறுப்புதான் உண்டாகிறது. அவளுக்கு... இருக்கட்டும். அவளுடைய பெயர் என்ன? ஜமீலா... அவளுக்கு இருப்பது சதை மட்டும்தான். இதயம் என்ற ஒன்று அவளுக்கு இல்லவே இல்லை என்று தோன்றியது.

அதற்குப் பிறகும் என்னென்னவோ நினைத்தேன். நடந்து முடிந்த காட்சிகள். நிமிடங்கள் கடந்து போனதே தெரியவில்லை. சுற்றிலும் பார்த்தபோது மைதானம் ஆட்களே இல்லாமல் வெறிச்சோடிக் கிடந்தது. மின் விளக்குகள் எரிந்துகொண்டிருந்த வெற்று மைதானமும், சற்று தள்ளி இருக்கும் கோட்டையும் ஒரு கனவு உலகத்தை ஞாபகப்படுத்துகின்றன. கோட்டையின் இருண்ட நிழலில்தான் நான் இப்போது அமர்ந்திருக்கிறேன். நானிருக்கும் இடத்திலிருந்து சில அடி தூரத்தில் ஆழமான அகழியொன்று இருக்கிறது.

கோட்டையையும் அகழியையும் கட்டுவதற்கு ஆயிரக்கணக்கான மனிதர்கள் கடுமையாக உழைத்திருப்பார்கள். அந்த கருங்கற்களில் அவர்களின் கைரேகைகள் பதிந்திருக்கும். அவர்களைப் பற்றி ஒன்றுமே தெரியவில்லை.

கோட்டையைக் கட்டிய சுல்தானைப் பற்றி சரித்திர நூல்களிலிருந்து பலவற்றையும் படித்திருக்கிறேன்.

இந்த பரந்து கிடக்கும் மைதானத்தில் ஒரு காலத்தில் படைகள் நிறைந்து நின்றிருக்கும். வெடிகுண்டுகளின் சீற்றமும் புகையும் குதிரைக் குளம்புகளின் ஓசையும் இப்போதும் இந்த காற்றில் கலந்திருக்கும் என்று தோன்றுகிறது. இந்தப் புற்களின் இலைகளில் ரத்தம் சிந்தியிருக்க வேண்டும். ஆழமான இந்த அகழியில் மனித உடல்கள் கூட்டம் கூட்டமாகக் கிடந்திருக்க வேண்டும். அதிலிருக்கும் சேறு கலந்த நீரில் ரத்தத்தின் சுவை இப்போதும் இருக்குமோ என்னவோ!

மூடுபனி படிப்படியாக சுற்றிலும் வந்து மூடிக்கொண்டிருக்கிறது. அடர்த்தி அதிகமாகி அதிகமாகி வருகின்ற மூடுபனி. இங்கு இந்தக் காலத்தில் மூடுபனி இருப்பது வழக்கத்தில் இல்லாத ஒன்றாயிற்றே! யோசிக்கிறேன். இது டிசம்பர் மாதம்தானே! என்னால் எதையும் நினைவுபடுத்திப் பார்க்க முடியவில்லை. எல்லாம் தெளிவற்ற ஒரு ஞாபகத்தில் மூடிக் கிடக்கின்றன. மின் விளக்குகள் அவ்வப்போது ஒளி குறைவதாகவும் கூடுவதாகவும் இருக்கின்றன. மைதானம் திடீரென்று இருளில் மூழ்கிக் கிடக்கிறது.


இருண்ட அமைதி. லேசாக பயம் தோன்றுகிறது. கோட்டையின் தெற்குப் பகுதியில் பைத்தியம் பிடித்தவர்கள் தங்கியிருக்கும் ஒரு இடமிருக்கிறது. ஆனால், எனக்கு பயமில்லை. எதற்கும் பயப்படாதவன் நான்.

அமைதியைக் கிழித்துக் கொண்டு ஒரு சத்தம் காற்றில் மிதந்து வந்தது. ஒரு குருவிக் குஞ்சின் அழுகைச் சத்தம் மாதிரி தெரிந்தது. இல்லை. காதைத் தீட்டிக்கொண்டு கேட்டேன். ஒரு மனிதக் குரலே அது. பாடலாக மிதந்து வந்தது. அந்தப் பாடல் வரிகள் இதயத்திற்குள் நுழைந்து என்னவோ செய்தன.

“ஸுபைதா...”

எனக்கு அருகிலிருந்து யாரோ அழைத்தார்கள்.

“யார் அது?”

நான் அதிர்ச்சியடைந்து விட்டேன்.

“நான்தான் ஸுபைதா. நீ எங்கே இருக்கே?”

“டேய்! நீ தேடுற பெண் இங்கே இல்ல...” என்று உரத்த குரலில் சொல்ல வேண்டுமென்று முதலில் நினைத்தேன். ஆனால் நான் சொன்னது இப்படித்தான்.

“நண்பரே, இது ஸுபைதா இல்ல... ஒரு சாதாரண மனிதன்.”

அந்த மனிதர் எனக்கு மிகவும் நெருக்கமாக வருவதுபோல் தோன்றியது.

இரவின் மறைவில் காதல்வயப்பட்ட இரண்டு ஆன்மாக்கள் சந்திக்க தேர்ந்தெடுத்த இடம் இதுவாக இருக்கலாம்.

“ஸுபைதா...”

அவர் இன்னும் சற்று உரத்த குரலில் அழைத்தார்.

நான் கேட்டேன்.

“உங்க தலையில மூளை இல்லையா?”

“ஸுபைதா எங்கே?”

“ஸுபைதான்னா யாரு?”

“பாவம்... அவளால் நடக்க முடியாது. அவ எங்கே?”

நான் மீண்டும் கேட்டேன்:

“யாரு ஸுபைதா?”

“தெரியாதா? அன்வர்கானோட மகள்.”

“அன்வர்கான்! அது யாரு?”

“இதுகூட தெரியலியா? நீங்க புதுசா இங்கே வந்திருக்குற ஆளா என்ன?”

“இன்னைக்குத்தான் வந்தேன். முன்னாடியும் இங்கே இருந்திருக்கேன்.”

“பட்டாளத்திலயா?”

“எந்தப் பட்டாளம்?”

“நீங்க பட்டாளக்காரர்தானே?”

“இல்ல.”

“அதுனாலதான் உங்களுக்கு தெரியல. அவ வருவா... அவளால் நடக்க முடியாது. இருந்தாலும் அவ வராம இருக்க மாட்டா.”

அவர் மேலும் சற்று நெருங்கி வந்தார். இருட்டில் அவருடைய வெண்மையான ஆடைகளும் ஒளி வீசிக் கொண்டிருந்த இடுப்புப் பட்டையும் தெளிவாகத் தெரிந்தன.

“நீங்க யாரு?”

அது காதில் விழாததைப்போல அவர் கேட்டார்.

“அப்போ நீங்க அவளைப் பார்க்கல?”

“உங்களுக்கு பைத்தியம்தான் பிடிச்சிருக்கு.”

“அவள் சிதார் வாசிக்கிறதை நான் கேட்டேன். அவளுக்கு நல்லா பாடத் தெரியும்.”

காதலில் தோல்வி அடைந்த ஒரு காதலன். மூளையில் சமநிலை பாதித்து விட்டிருக்கிறது. ஸுபைதா அவரை ஏமாற்றியிருக்க வேண்டும்.

ஸுபைதா! நல்ல பெயர். ஜமீலாவும் ஸுபைதாவும். ஜமீலாவிற்கு உடல் மட்டுமே இருந்தது. இதயம் இல்லை. ஒருவேளை எந்தப் பெண்ணுக்கும் இதயம் என்பது இருக்கவே இருக்காதோ? அழகான தசை மட்டுமே அவர்களிடமிருப்பது.

அமைதியான நிமிடங்கள்!

அவர் மெதுவாகப் பாடத் தொடங்கினார்.

“இரவு இருட்டானது.

அன்புள்ள ஸுபைதா. நான் தனியாக இருக்கிறேன்.

என் இதயம் நாளை துடிக்காது.

இருட்டின் மடியில் நான் நிரந்தரமாக உறங்கப் போகிறேன்... வாழ்க்கையில் நிலவாய் வந்த என் சினேகிதியே,நீ வர மாட்டாயா?”

அந்தப் பாடல் வரிகள் என் இதயத்திற்குள் நுழைந்து என்னென்னவோ செய்தன. கடவுளே, நோய் வாய்ப்பட்ட எத்தனை ஆன்மாக்கள் உலகத்தில்!

“சொல்லுங்க... ஸுபைதா உங்களை வேண்டாம்னு ஒதுக்கிட்டாளா?”

“அவ உலகத்தையே வேண்டாம்னு ஒதுக்கிட்டா. அவளால் என்னை மறக்க முடியாது. அவள் சிதார் வாசிக்கிறதை ஒவ்வொரு நாளும் நான் கேட்டுக்கிட்டு இருக்கேன்.”

அவர் அந்தக் கதையைச் சொன்னார்.

அவர் ஒரு பட்டாளக்காரர். ஊரையும் வீட்டையும் விட்டு வந்து எத்தனையோ வருடங்கள் ஆகிவிட்டன. படையில் சேர்ந்து தன்னுடைய இளமையின் ஒளிமயமான நாட்களை அவர் செலவிட்டார். பலமுறை அவர் மரணத்தைச் சந்தித்திருக்கிறார். குருதியையும் பிணங்களையும் பார்த்துப் பார்த்து சலித்துப்போன கண்களுக்குச் சொந்தக்காரர் அவர்.

சுல்தானிடமும் அவருடைய படைத் தலைவரான அன்வர் கானிடமும் அவருக்கு எந்தவித பகையும் கிடையாது. அவர் வெள்ளைக்காரர்களின் பட்டாளத்தில் சேர்ந்தது அவரின் குற்றமா? பட்டாளக்காரனாக இருந்தால், அவர் மனித ரத்தத்தைச் சிந்தச் செய்யவே வேண்டும். எதிரிகளின் எண்ணிக்கையைக் குறைப்பது அவரின் தொழிலாகிப் போனது.

சுல்தானின் படையைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து வருவதற்காக அவரைத்தான் வெள்ளைக்காரன் அனுப்பி வைத்தான். காட்டின் எல்லையில் அவரை சுல்தானின் ஆட்கள் பிடித்து விட்டார்கள். தவறு எதுவும் நடக்காமல் காரியத்தில் கண்ணாக இருந்திருக்க வேண்டும். ஆனால், எப்படியோ அப்படியொரு சம்பவம் நடந்துவிட்டது. கீழ்ப்படிவதைத் தவிர அவருக்கு வேறு வழியே இல்லை.

தன் தலையில் குன்டடி பட்டது அவருக்கு நன்றாக ஞாபகத்தில் இருக்கிறது. அவருக்கு சுயநினைவு வந்தபோது, அவர் இருட்டு நிறைந்திருந்த ஒரு அறைக்குள் இருந்தார். சுவர்கள் கருங்கற்களால் கட்டப்பட்டிருந்தன.

தான் எங்கு இருக்கிறோம்? அறிவு மங்கலானதுபோல் அவருக்குத் தோன்றியது. எதையும் ஞாபகத்தில் கொண்டுவர அவரால் முடியவில்லை.

சிதாரின் இனிய ஓசையை அவர் முதல் முறையாகக் கேட்டது அந்த அறையில் இருக்கும்போதுதான். இருண்டு கிடந்த அந்த அறைக்குள் நீர்ப் பாம்புகளைப்போல் அந்த இனிமையான இசை காற்றில் மிதந்து வந்தது.

மீண்டும் அவருக்கு மயக்கம் வருவதைப்போல் இருந்தது. சிறிது நேரம் கழித்து கண்களைத் திறந்து பார்த்தபோது, அவருக்கு முன்னால் அன்வர்கான் நின்று கொண்டிருந்தான். கரி படர்ந்த லாந்தர் விளக்கைப் பிடித்துக்கொண்டு ஒரு சிப்பாயும் அவருடன் நின்றிருந்தான். அன்வர்கானின் குரல் அந்த அறைக்குள் உரத்துக் கேட்டது. என்னென்னவோ கேள்விகளை அவன் கேட்டான். அவரின் படையைப் பற்றியும் அவர்கள் எப்படி போரை நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள் என்பதைப் பற்றியும் தெரிந்து கொள்வதுதான் அவனுடைய லட்சியம்.

அவர் ஒன்றுமே சொல்லவில்லை.

அன்வர்கானின் முகபாவம் மாறியது. கோபத்தால் அவனுடைய சிவந்த தாடி விரைப்பானது. சிப்பாய் அந்த மனிதரின் ஆடைகளை அகற்றினான். நிர்வாணமான உடம்பின்மீது அன்வர்கான் தன்னுடைய இடுப்பிலிருந்து வேகமாக எடுத்த தோலாலான வாரால் அடித்தான்.

ஒவ்வொரு அடி தன்மீது விழும்போதும் அவர் இப்படியும் அப்படியுமாய் தெளிந்தார். ஒன்று... இரண்டு... மூன்று... எத்தனை அடிகள் விழுந்தன என்பது தெரியாது... பயங்கரமாக வலித்தது. எனினும், அவர் வாய் திறக்கவில்லை.

அன்வர்கான் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.

அவ்வப்போது வந்து அடிகள் கொடுத்தான். பலரும் அவரைச் சோதித்துப் பார்த்தார்கள். அவர் எதுவும் சொல்லவில்லை.

ஒரு பெரிய படையின் முழு அழிவே அவரின் நாக்கின் நுனியில் இருக்கிறது. வேதனையைப் பல்லைக் கடித்துக் கொண்டு தாங்கியவாறு அவர் படுத்திருந்தார். குளிர்ந்த கருங்கல்மீது அவரின் ரத்தத் துளிகள் சொட்டு சொட்டாக விழுந்தன.


அந்தக் கல்லாலான அறையின் வாசல் கதவை அடைந்தபிறகு அவர் கருங்கல்மீது முகத்தை வைத்துக் கொண்டு தேம்பித் தேம்பி அழுவார். ஒரு ஆயுதம் மட்டும் அப்போது அவர் கையில் கிடைத்திருந்தால்... கூர்மையான ஏதாவதொன்று... அதை மகிழ்ச்சி யுடன் தன்னுடைய இதயத்திற்குள் நுழைத்திருப்பார் அவர்.

அந்த அறைக் கதவு இடைவெளி வழியாக சிதாரின் இனிய ஓசை அப்போதும் மிதந்து வந்து கொண்டிருந்தது. பாட்டும் வேதனையும்! சம்மட்டியும் சிதாரும்! இனி எப்போது வாசல் கதவைத் திறப்பார் கள் என்பதை எதிர்பார்த்துக் கொண்டு அவர் படுத்திருந்தார்.

அப்போதும் சிதார் இசை கேட்டுக் கொண்டுதானிருந்தது.

அன்வர்கான் இறுதியாக எச்சரித்தான். மறுநாள் அதிகாலைக் குள் வாயைத் திறந்து உண்மையைச் சொல்லவில்லையென்றால், அவர் உலகத்திடமிருந்து இறுதி விடை பெற்றுக்கொள்ள வேண்டியதுதான்.

மரணம் ஆறுதலாக இருந்தது.

மிகவும் கொடூரமான தண்டனையை அவருக்காக ஏற்பாடு பண்ணியிருந்தான் அன்வர்கான். அவருடைய கால்களை படைக் குதிரைகளின் காலில் கட்டி இரு பக்கங்களிலும் அவற்றை ஓட விட்டு அவரைச் சின்னாபின்னமாக்குவது. இதுதான் அவன் திட்டம்.

நிமிடங்கள் ஒவ்வொன்றாகக் கடந்து போய்க் கொண்டிருந்தன. அவர் சிறிது சிறிதாக மரணத்தை நெருங்கிக் கொண்டிருந்தார்.

நள்ளிரவு நெருங்கியிருக்கும் நேரம். கோட்டையின் உட்பகுதி ஆழ்ந்த அமைதியில் மூழ்கியிருந்தது. பகல் நேரத்தில் பட்டாளக் காரர்களின் உரையாடலும், காலடிச் சத்தமும், போர்க் கருவிகளின் ஓசையும், குதிரைகளின் குளம்புச் சத்தமும் கேட்டுக் கொண்டே யிருக்கும். இரவில் எல்லாம் அடங்கிப் போயிருக்கும்.

இருபத்து நான்கு வருடங்கள் மட்டும் பார்த்த ஒரு வாழ்க்கை பொழுது புலரும் நேரத்தில் முடியப் போகிறது. வாழ்க்கை இனிதாக இருந்தது. அதிகாலைத் துடிப்பும் மாலை நேரத்து சிவப்பும் நிலவும் நட்சத்திரங்களும் உள்ள பிரபஞ்சத்திடமிருந்து விடை பெற முடியாது... வாழ வேண்டும்! மனதில் அதற்கான ஆசை நேரம் செல்லச் செல்ல அதிகரித்துக் கொண்டிருந்தது.

இருட்டில் ஒரு இடைவெளி உண்டாக்கிக் கொண்டு வாசல் கதவு மெதுவாகத் திறந்தது... ஒரு மெல்லிய வெளிச்சம் அறைக்குள் படர்ந்தது. அந்த வெளிச்சத்தில் ஒரு வெள்ளை நிற உருவம் தெரிந்தது. தான் காண்பது கனவு அல்ல என்பது தெரிந்தது. காண்பது உண்மை. ஒரு பெண். வெள்ளை நிறத் துணியால் உடலையும் தலை யையும் மறைத்துக் கொண்டிருக்கும் ஒரு பெண். வெண் மேகங்களுக் குப் பின்னால் மறைந்திருக்கும் நிலவை அவளுடைய முகம் நினைவு படுத்தியது. கதவை மூடிவிட்டு அவள் உள்ளே வந்தாள்.

அப்போதுதான் அவர் அதை கவனித்தார். அவளால் நடக்க இயலவில்லை. ஒரு கால் ஊனமாகி விட்டிருந்தது. ஊன்று கோலின் உதவியுடன்தான் அவள் நடந்துகொண்டிருந்தாள்.

“யாரு அது?”

“ஒரு அப்பாவிப் பெண்.”

“சொல்லுங்க... நீங்க யாரு?”

“என் பேரு ஸுபைதா. அன்வர்கானோட மகள்.” அன்வர்கானின் பெயரைக் கேட்டதும் அவர் அதிர்ச்சியடைந்து விட்டார்.

“பயப்பட வேண்டாம். நான் உங்களுக்கு உதவுறேன்.”

அவள் ஊன்றுகோல் உதவியுடன் விந்தி விந்தி நடந்தவாறு அவருக்கருகில் வந்தாள். அவரின் உடலோடு ஒட்டி இருந்தவாறு அவள் அமர்ந்தாள். அவரின் உடம்பில் இருந்த காயங்களைப் பார்த்து அவளுடைய கண்களில் நீர் நிறைந்துவிட்டது. தன்னு டைய நீளமான மெல்லிய விரல்களால் அந்தக் காயங்களைத் தடவியவாறு அவள் சொன்னாள்.

“எனக்கு எல்லா விஷயங்களும் தெரியும்.”

அவர் அவளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள விரும்பினார். அவள் சொன்னாள். அன்வர்கானின் கூடாரம் பக்கத்தில்தான் இருக்கிறது. படை இருக்கும் இடத்திற்கு தங்களின் குடும்பத்தைச் சேர்ந்த யாரையும் அழைத்து வரக்கூடாது என்பது சுல்தானின் உத்தரவு. அன்வர்கானுக்கு மட்டும் சிறப்பு அனுமதி தந்திருக்கிறார். ஸுபைதா பிறக்கும்போதே, அவளுக்கு ஒரு கால் ஊனமாக இருந்தது. அவளின் உம்மா அவள் சிறு குழந்தையாக இருந்தபோதே இந்த உலகை விட்டுப் போய்விட்டாள். அன்வர்கான் எங்கேயிருந்தாலும் அவருடன் ஸுபைதாவும் இருப்பாள்.

கடந்த பதினாறு வருடங்களாகவே போர்க் கருவிகளுக்கு மத்தியிலும் மரணத்திற்கு மத்தியிலும்தான் அவளின் வாழ்க்கை வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. தனிமைதான் அவளுக்கு இருக்கும் ஒரே தோழி. சிதார் வாசித்துக் கொண்டு பகல் முழுவதும் அவள் இருப்பாள். இரவில் உறக்கம் வருவது வரை அழுது கொண்டே இருப்பாள். அதற்கான காரணத்தை அவர் கேட்கவில்லை.

அவள் மீண்டும் சொன்னாள்:

“என்மீது நம்பிக்கை இல்லையா? நான் உங்களைக் காப்பாத்துறேன்.”

அவர் அவளுடைய முகத்தையே பார்த்தார். நிலவொளி விழுந்திருக்கும் ஒரு ஆம்பல் மலரைப்போல அழகாக இருந்தாள் அவள். பார்ப்பதற்கு அவள் ஒரு தேவதையைப்போல் இருந்தாள். சொர்க்கத்திலிருந்து வெண் மேகங்கள் வழியாக சிறகுகளை விரித்துக் கொண்டு இறங்கி வரும் ஒரு தேவதை...

“ஸுபைதா, உங்க வாப்பாவுக்கு இந்த விஷயம் தெரிஞ்சதுன்னா...”

“என்னைக் கொன்னுட்டுத்தான் மறுவேலை பார்ப்பாரு. ஆனா, என் வாப்பாவுக்குத் தெரியாது.”

“ஸுபைதா.”

அவரின் கண்களிலிருந்து சூடான கண்ணீர் அவளின் ஊனமுற்ற கால் பாதத்தில் விழுந்தது.

“இப்போது தப்பிக்கணும்.”

“எப்படி?”

“சாவி என் கையில இருக்கு. கோட்டைச் சுவருக்குப் பக்கத்துல பாதை இருக்கு. சுவத்துல ஏர்றதுக்கு கயிறு எடுத்து வச்சிருக்கு.”

அவள் அவரைக் காப்பாற்றுவதற்காக தன்னுடைய உயிரையே பணயம் வைக்கிறாள். அவர் வாழ்வதால் அவளுக்கு என்ன லாபம்?

“வாங்க.... தாமதம் செய்ய வேண்டாம்.”

அவள் சொன்னதை அவர் அமைதியாகப் பின்பற்றினார். இருட்டாக இருந்த அந்த அறையைத் தாண்டி கற்படிகளில் இறங்கி அவர் வெளியே வந்தார். அவரின் தோள்மீது சாய்ந்தவாறு அவள் நடந்தாள். வெடி மருந்துகள் தேக்கி வைக்கப்பட்டிருந்த இடத்தின் நிழலில் அவள் சுருட்டி வைத்திருந்த கயிறு இருந்தது. வெளியே வந்த அவர்கள் மெதுவாக முன்னோக்கி நடந்தார்கள்.

வானத்தில் நிலவு காய்ந்து கொண்டிருந்தது. அவர்களின் நிழல்கள் ஒன்றோடொன்று இணைந்தன.

இதயம் வேகமாகத் துடித்துக் கொண்டிருந்தது. யாராவது பார்த்துவிட்டால்! இல்லை... யாருமில்லை. கோட்டைச் சுவர்மீது ஏறும் இடத்தை அடைந்தபோது அவள் நின்றாள்.

“ம்... போங்க...”

அவள் கயிறை எடுத்து அவருடைய தோளில் போட்டாள்.

அவளின் கைகளைத் தன் மார்புமீது வைத்துக்கொண்டு அவர் அழைத்தார்.

“ஸுபைதா...”

அவர்கள் பிரியப் போகிறார்கள்.

“ஸுபைதா...”

அவருடைய மார்பின்மீது தன்னுடைய முகத்தைச் சாய்த்தவாறு அவள் நின்றாள். மார்பு கண்ணீரால் நனைந்தது.

காவல் காக்கும் அறையிலிருந்து ஏதோ சத்தம் கேட்டது.

“போங்க... வேகமா... வேகமா...”


அவளின் நெற்றியில் தன் உதடுகளால் முத்தம் தந்த அவர் கோட்டைச் சுவரின்மேல் ஏறினார்.

இரவு நேரத்தின் குளிர்ந்த அமைதிக்கு பங்கம் ஏற்பட்டது. சலனங்கள்... கோபம் நிறைந்த வார்த்தைகள்... தூரத்தில் ஒரு தீப்பந்தம் தெரிந்தது. மரணம் மீண்டும் தலையை உயர்த்திப் பார்க்கிறது. வேகம்... வேகம்... கயிறைக் கட்டிய பிறகு அவர் மெதுவாக கீழ் நோக்கி இறங்கினார். அந்தப் பக்கம் சுதந்திரமான உலகம் அவருக் காகக் காத்திருந்தது.

அந்தப் பக்கம் கால்களை வைத்த பிறகுதான் அவருக்கு நிம்மதியே வந்தது. இனிமேல் அகழியை நீந்திக் கடக்க வேண்டும். அது பிரச்சினையில்லை. சுவருக்கு அந்தப் பக்கம் உரத்த குரல்கள் கேட்டன. ஸுபைதா தன்னுடைய கூடாரத்திற்குப் போய்ச் சேர்ந்திருப்பாளா? காற்றைக் கிழித்துக் கொண்டு இரண்டு முறை மறுபக்கத்தில் குண்டு வெடித்தது... அப்போது உண்டான ஆரவாரத்திற்கு மத்தியில் எழுந்த ஒரு மெல்லிய சோகக் குரலை அவர் கேட்டிருப்பாரா?

திடீரென்று அவர் ஸுபைதாவை நினைத்தார். மூளையில் நெருப்பு பற்றியதைப்போல் இருந்தது. இறங்கிப் போன கயிறு மூலம் அவர் மீண்டும் கோட்டைச் சுவரின்மேல் ஏறினார். அவரின் நரம்புகளில் ரத்தம் கொதித்தது. இதயம் பற்றி எரிகின்றதோ?

கோட்டைச் சுவர்மீது ஏறி நின்று கொண்டு அவர் எதிரிகளைப் பார்த்து சவால் விட்டார்.

மீண்டும் துப்பாக்கி முழங்கியது.

“ஸுபைதா...”

அவர் இருட்டின் ஆழத்திற்குள் இறங்கி நடந்தார்.

அதற்குப் பிறகு அவர் ஸுபைதாவைப் பார்க்கவில்லை. அவள் சிதார் இசைத்துக் கொண்டு அவரைத் தேடி நடந்து கொண்டிருக் கலாம். பார்க்காமல் இருக்க வாய்ப்பில்லை.

தூரத்திலிருந்து மீண்டும் அந்த மெல்லிய இசை காற்றில் மிதந்து வந்தது.

அவர் இருட்டுக்குள் பாய்ந்து ஓடினார்.

“ஸுபைதா...”

அவரைப்பின் தொடர்ந்து சென்றால் என்ன? அவரைப் பார்த்து ஒன்று கேட்க மறந்துவிட்டேன். அவருடைய பெயர் என்ன?

“நில்லுங்க...”

பார்க்கும்போது அவர் இல்லை. இருள் முழுமையாக விலகி விட்டிருந்தது. மைதானமும் கோட்டையும் ஒரு கனவைபோல வெறிச்சோடிக் காட்சியளித்தன.

தூரத்திலிருந்து அந்த இனிய பாடல் காற்றில் மிதந்து வந்தது.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.