Logo

கௌரி

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 7068
கௌரி

கௌரி பாரம்பரிம் மிக்க வசதியான குடும்பத்தில் நன்கு கவனம் செலுத்தி வளர்க்கப்பட்ட அழகான பெண். அவளுடைய கணவர் பரேஷ் தன்னுடைய சொந்த முயற்சிகளால் தன்னுடைய சூழ்நிலைகளை அமைத்து கொண்டு வாழ்க்கையில் முன்னேறியவர்.

அவர் ஏழையாக இருந்த காலத்தில், கௌரியின் பெற்றோர்கள், தங்களின் மகளை வீட்டிற்குள்ளே வைத்திருந்தார்கள். வெளியே போவதற்கே அவளை அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். அவள் ஒன்றும் சிறுமி இல்லையே! இறுதியில் அவள் தன் கணவரின் வீட்டிற்குச் சென்று விட்டாள். தனக்குப் பொருத்தமானவள் அவள் என்பதை எந்த சமயத்திலும் பரேஷ்நினைத்துப் பார்த்ததே இல்லை. மேற்கிலிருந்த ஒரு சிறிய நகரத்தில் அவர் ஒரு வழக்கறிஞராக இருந்தார். அவருக்கென்று நெருக்கமான நண்பர்கள் யாரும் இல்லை. அவருடைய சிந்தனை எப்போதும் மனைவியைப் பற்றியே சுற்றிக் கொண்டிருக்கும். சில நேரங்களில் நீதிமன்றம் தொடங்குவதற்கு முன்பே கூட அவர் வீட்டிற்கு வந்துவிடுவார். அவர் ஏன் திடீரென்று வீட்டிற்கு வருகிறார் என்பதை ஆரம்பத்தில் கௌரி புரிந்து கொள்ளாமல் இருந்தாள். சில நேரங்களில் காரணமே இல்லாமல் அவர் வேலைக்காரர்களில் ஒருவரைவேலையை விட்டு போகும்படி கூறுவார். யாரும் நீண்ட நாட்களுக்கு அவருக்கு ஏற்றபடி இருக்க முடியாது. யாராவதொரு வேலைக்காரனை நல்லவன் என்று கௌரி கூறிவிட்டால் போதும், அது ஒன்று போதும் அவனை அவர் வேலையை விட்டு வெளியே அனுப்புவதற்கு. எப்போதும் உற்சாகமாக இருக்கும் கௌரி அதற்காக பெரிதும் கவலைப்பட்டாள். ஆனால் அவளுடைய கவலை அவளின் கணவரின் நடத்தையை மேலும் அதிகமாக்கியது.

இறுதியில், அதற்கு மேலும் பொறுமையாக இருக்க முடியாத பரேஷ், யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வேலைக்காரியிடம் கௌரியைப் பற்றி கேள்விகள் கேட்டு விசாரிக்க ஆரம்பித்தார். அந்த விஷயங்கள் அனைத்தும் அவருடைய மனைவியின் காதுகளில் போய் சேர்ந்தது. அவள் சில சொற்களையே பேசக் கூடியவள். அந்த அவமதிப்பான செயல்கள் காயம்பட்ட சிங்கத்தைப்போல அவளுடைய நன்னடத்தையைச் சோதித்துப் பார்த்தன. அந்த பைத்தியக்காரத்தனமான சந்தேகம் ஒரு பகைவனின் வாளைப் போல அவர்களுக்கு நடுவில் நின்று கொண்டிருந்தது. தன்னுடைய மனதிற்குள் இருக்கும் எண்ணத்தை தன் மனைவி தெரிந்து கொண்டு விட்டாள் என்று எப்போது நினைத்தாரோ, அதற்குப் பிறகு பரேஷ், கௌரியிடம் நேருக்கு நேராகப் பேசுவதைத் தவிர்த்தார். அவருடைய மனைவி அதை அமைதியான வெறுப்பாக நினைத்து நடந்து கொள்ள, அவருடைய பொறாமைத் தீ மேலும் அதிகமானது.

திருமண வாழ்க்கையின் சந்தோஷம் எதுவும் இல்லாமல், குழந்தை பாக்கியம் இல்லாத கௌரி மத விஷயங்களில் ஈடுபட்டு ஆறுதல் தேட ஆரம்பித்தாள். மத சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பற்றி வழிபாட்டு மன்றத்தில் சொற்பொழிவு ஆற்றும் வயது குறைந்த பரமானந்த சுவாமிகளுக்கு அவள் கடிதம் எழுதினாள். அதில் அவரைத் தன்னுடைய ஆன்மிக குரு என்று அவள் குறிப்பிட்டிருந்தாள். பகவத் கீதையைப் பற்றி தனக்கு விளக்கும்படி அவள் அதில் கூறியிருந்தாள். அவளுடைய இதயத்தில் இருந்து வீணாகிக் கொண்டிருந்த அன்பையும் பாசத்தையும் வெளியேற்றிய அவள் அதை தன் குருவின் கால் பாதத்தில் சமர்ப்பித்தாள்.

பரமானந்தாவின் புனிதத்தைப் பற்றி யாரிடமும் எந்த சந்தேகமும் இல்லை. எல்லோரும் அவரை வழிபட்டார்கள். அவருக்கு எதிராக எந்தவித சந்தேகக் கேள்விகளையும் கேட்க முடியாது என்பதால், பரேஷின் பொறாமை அவருடைய இதயத்திற்குள் ஒரு மறைமுக புற்று நோயைப் போல ஒளிந்திருந்தது.

ஒருநாள் சில அற்பமான சூழ்நிலைகள் விஷத்தை அதிகமாக்கியது. பரேஷ் தன் மனைவியிடம் பரமானந்தாவை ஒரு கயவன் என்று சொன்னார். அவர் சொன்னார்: ‘‘துறவி என்று சொல்லிக் கொண்டு திரியும் அந்தக் கொக்கிடம் உனக்கு காதல் இல்லை என்று சத்தியம் பண்ணி சொல்ல முடியுமா?’’

கௌரி பாம்பைப் போல சீறி எழுந்தாள். அவருடைய சந்தேகப் புத்தியால் வெறி பிடித்தவளைப் போல ஆன அவள் கிண்டலும் கசப்பும் கலந்த குரலில் சொன்னாள்: ‘‘அப்படி நான் இருந்தால் என்ன?’’ அடுத்த நிமிடம் பரேஷ் வெளியேறி கதவை அவள் முகத்தில் வேகமாக படும்படி அறைந்தார்.

இறுதியாக நடந்த அந்த மோதலில் சூடான கௌரி எப்படியோ கதவை திறந்து வீட்டை விட்டு வெளியேறினாள்.

பரமானந்தா தன்னுடைய தனி அறையில் மதிய வேளையின் அமைதியில் இருந்துகொண்டு நூலில் இருந்த வார்த்தைகளை வாய்விட்டுக் கூறிக் கொண்டிருந்தார். மேகங்களே இல்லாத வானத்தில் திடீரென்று மின்னல் அடிப்பதைப்போல, கௌரி அவர் படித்துக் கொண்டிருப்பதற்கு இடையில் புகுந்தாள்.

‘‘நீ இங்கேயா?’’ - ஆச்சரியத்துடன் கேள்வி கேட்டார்.

‘‘என்னைக் காப்பாற்றுங்க குருவே...’’ - அவள் சொன்னாள்: ‘‘என் இல்லற வாழ்க்கையின் அவமானங்களில் இருந்து என்னைக் காப்பாற்றுங்க. உங்க பாதங்களில் என்னை நானே ஒப்படைக்க என்னை அனுமதியுங்கள்.’’

அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பரமானந்தா கௌரியை வீட்டிற்குத் திரும்பிப் போகும்படி கூறினார். மூடப்பட்ட நூலில் இருந்த கயிறை மீண்டும் அவர் தொடுவாரா என்று ஆச்சரியம் எனக்கு உண்டானது.

வீட்டிற்குத் திரும்பி வந்து, கதவு திறந்திருப்பதைப் பார்த்த பரேஷ் கேட்டார். ‘‘இங்கே யார் வந்தது?’’

‘‘யாரும் இல்ல...’’ அவருடைய மனைவி பதில் சொன்னாள்: ‘‘என்னுடைய குருவின் வீட்டிற்கு நான் போயிருந்தேன்.’’

‘‘எதற்கு?’’- பரேஷ் கேட்டார். அதைக் கேட்கும்போது வெளிறியும் சிவந்தும் அவர் இருந்தார்.

‘‘நான் போகணும்னு நினைச்சேன்.’’

அந்த நாளில் இருந்து வீட்டைக் கண்காணிப்பதற்கு ஒரு ஆளை பரேஷ் நியமித்தார். அவருடைய நடவடிக்கைகள் மிகவும் மோசமாக இருந்தன. அவருடைய பொறாமை பற்றிய கதை நகரம் முழுக்க எல்லோராலும் பேசப்பட்டது.

தன்னுடைய சிஷ்யை மீது தினந்தோறும் குவிக்கப்படும் வெட்கப்படத்தக்க அவமானங்கள் பற்றிய செய்திகள் பரமானந்தாவின் ஆன்மிக தியானங்களை மிகவும் தொந்தரவு செய்தன. உடனடியாக அங்கிருந்து கிளம்ப வேண்டும் என்று அவர் நினைத்தார். அதே நேரத்தில் தொல்லைகளை அனுபவித்துக் கொண்டிருக்கும் அந்தப் பெண்ணைக் கைவிடவும் அவர் தயாராக இல்லை. அந்த பயங்கரமான பகல்களையும் இரவுகளையும் அந்த அப்பிராணித் துறவி எப்படிக் கழித்தார் என்று யாரால் சொல்ல முடியும்?

கடைசியில் ஒருநாள் சிறைக் கைதியைப்போல இருந்த கௌரிக்கு ஒரு கடிதம் வந்தது. ‘என் குழந்தையே...’- கடிதம் இப்படி ஓடியது: ‘ஏராளமான புனிதப் பெண்கள் தங்களை முழுமையாக கடவுளிடம் அர்ப்பணித்துக் கொள்வதற்காக உலக வாழ்க்கையைத் துறந்திருக்கிறார்கள் என்பது உண்மைதான்.


உலகச் செயல்கள் கடவுளிடமிருந்து உங்களுடைய சிந்தனைகளை விரட்டும் பட்சம், கடவுளின் உதவியுடன் அவருடைய பாதத்தின் புனித சேவைக்காக அவருடைய பக்தையை நிச்சயம் காப்பாற்றிக் கொண்டு வருவேன். நீங்கள் விரும்பினால், உங்களின் தோட்டத்திற்கு அருகில் இருக்கும் குளத்திற்குப் பக்கத்தில் நாளை பிற்பகல் இரண்டு மணிக்கு என்னைச் சந்திக்கலாம்.’

கௌரி கடிதத்தைத் தன் கூந்தலின் மடிப்புகளுக்குள் மறைத்து வைத்தாள். மறுநாள் மதியம் குளிப்பதற்கு முன்னால் அவள் தன் கூந்தலை அவிழ்த்தபோது, அந்தக் கடிதம் அங்கு இல்லாமல் இருப்பதைப் பார்த்தாள். அது படுக்கையில் விழுந்து, தன் கணவனின் கையில் சிக்கியிருக்குமோ என்று அவள் நினைத்தாள். அது அவரைக் கோபம் கொள்ளச் செய்யும் என்பதை நினைத்தபோது முதலில் அவளுக்க ஒரு இனம் புரியாத ஆனந்தத்தைத் தந்தது. அதே நேரத்தில் தன் தலைமீது அருள்மயமான கிரீடத்தைப்போல் சூட்டப்பட்ட அந்தக் கடிதம் அசிங்கம் பிடித்த கைகளால் தொடப்படுவதா என்பதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

வேகமாக நடந்து அவள் தன் கணவரின் அறையை அடைந்தாள். கண்கள் பின்னோக்கி திரும்பியிருக்க, வாயில் நுரை வர, அவர் தரையில் கிடந்தார். அவர் இறுகப் பிடித்திருந்த அவருடைய கையிலிருந்து கடிதத்தைப் பிடுங்கி முடித்து, ஒரு டாக்டரை வேகமாக அழைத்து வரும்படி ஆளை அனுப்பினாள்.

வலிப்பு நோயால் அது உண்டானதாக டாக்டர் சொன்னார். அவர் வருவதற்கு முன்பே, நோயாளி மரணமடைந்து விட்டார்.

அதே நாளில் அது நடந்தது. வீட்டிற்கு வெளியே பரேஷ் ஒரு முக்கியமான ஆளைச் சந்திப்பதாக இருந்தது. பரமானந்தாவிற்கு அந்த விஷயம் தெரிந்து, அதற்கேற்றாற்போல் அவர் கௌரியைச் சந்திக்க நேரம் குறித்திருந்தார். அப்படிப்பட்ட ஒரு ஆழமான பள்ளத்தில் அவர் விழுந்துவிட்டார்!

குளத்தின் சுவரோரத்தில் தன்னுடைய குரு ஒரு திருடனைப் போல மறைந்திருப்பதை சாளரத்தின் வழியாகப் பார்த்த விதவைப் பெண்ணான கௌரி, மின்னலடித்தபோது தன் கண்களைத் தாழ்த்திக் கொண்டாள். அந்த மின்னல் வெளிச்சத்தில், அவர் எந்த அளவிற்கு கீழே விழுந்திருக்கிறார் என்பதை அவளால் தெளிவாகப் பார்க்க முடிந்தது.

குரு அழைத்தார்: ‘‘கௌரி....’’

‘‘நான் வர்றேன்’’- அவள் பதில் சொன்னாள்.

பரேஷின் நண்பர்கள் அவருடைய மரணச் செய்தியைக் கேள்விப்பட்டு இறுதிச் சடங்குகளில் உதவுவதற்காக வந்தபோது, தன் கணவரின் இறந்த உடலுக்கு அருகில் கௌரியின் இறந்த உடல் கிடப்பதைப் பார்த்தார்கள். அவள் தனக்குத்தானே விஷம் குடித்துக் கொண்டாள். தன்னுடைய ‘சதி’மூலம் அவள் வெளிப்படுத்திய மனைவியின் ஒழுக்கம் எல்லோராலும் புகழப்பட்டதில் எல்லா விஷயங்களும் காணாமல் போயின. அந்த நேர்மை இந்த அழிவு காலத்தில் மிகமிக அபூர்வமான ஒன்றே.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.