Logo

ரகசியம்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 6666
rahasiyam

யநாட்டிலிருக்கும் 'க' எஸ்டேட்டிலிருந்து நிறைய காப்பி மூட்டைகள் ஏற்றப்பட்டிருந்த லாரியுடன் குஞ்ஞிராமன் டிரைவர் வைத்திரி பஜாருக்கு வந்தபோது நேரம் நள்ளிரவைத் தாண்டி விட்டிருந்தது. அவர் லாரியை நிறுத்திவிட்டு, அப்பு நாயரின் தேநீர்க் கடைக்குள் நுழைந்தார். அப்பு நாயரின் மனைவி டிரைவருக்கு ஒரு கோப்பை தேநீரைக் கொண்டு வந்து கொடுத்தாள்.

"வேலுக்குட்டி வரவில்லையே?" டிரைவர் தேநீரை ஊதிக் குடித்துக் கொண்டே கேட்டார்.

"இல்லை. அவன் இன்று வரலைன்னு சொல்லி அனுப்பியிருக்கான். அவனுடைய அம்மாவிற்கு கடுமையான காய்ச்சலாம்."

குஞ்ஞிராமன் டிரைவர் சற்று அமைதியற்ற மனதுடன் தேநீர் குவளையைக் கையில் பிடித்தவாறு நான்கு பக்கங்களிலும் பார்த்தார். வேலுக்குட்டியின் தாய்- 'காட்டி' என்ற கிண்டலான பெயரைக் கொண்டிருக்கும் ஒரு வதவை- சில வருடங்களுக்கு முன்னால் குஞ்ஞிராமன் டிரைவரின் கள்ளக் காதலியாக இருந்தாள். அவளுக்கு கடுமையான காய்ச்சலாம். அந்த பழைய காதல் காட்சிகளில் அவருடைய சிந்தனைகள் சிறிது நேரம் மூழ்கிவிட்டன. அவ்வளவுதான். அவரை அதிகமாகக் கவலை கொள்ளச் செய்தது. காட்டியின் எதிர்பார்த்திருக்கும் மரணம் அல்ல. அவளுடைய மகன் வேலுக்குட்டி வராமல் போனதுதான். வேலுக்குட்டிதான் லாரியின் க்ளீனர். அவன் இல்லாவிட்டால் டிரைவர் தனியாக மலையிலிருந்து கீழே இறங்க வேண்டியதிருக்கும்.

தேநீர்க் கடையை ஒட்டியிருந்த அறையிலிருந்து ஒரு குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்டது. அது மாதவியின் குழந்தையின் அழுகைச் சத்தம் என்பது குஞ்ஞிராமன் டிரைவருக்குப் புரிந்தது. அப்பு நாயரின் மகள் மாதவியும் டிரைவருக்கு மிகவும் பிடித்த ஒருத்தியாக இருந்தாள். இரண்டு வருடங்களுக்கு முன்னால். இப்போது அவள் மலேரியா ஒழிப்பு சங்கத்தில் க்ளார்க்காக பணியாற்றும் குமாரன் நாயரின் மனைவி. ஆனால், தன்னுடைய பழைய காதல் விஷயங்களைப் பற்றி நினைத்துப் பார்க்க அவர் விரும்புவதில்லை. மிருணாளினி அவருடைய வாழ்க்கையில் அந்த அளவிற்கு ஒட்டிச் சேர்ந்து விட்டிருந்தாள்.

குஞ்ஞிராமன் டிரைவரின் திருமணம் முடிந்து ஆறு மாதங்கள்கூட முடிவடையவில்லை. ‘‘அது ஒரு காதல் திருமணம்.’’ உதட்டை இடது பக்கமாக சாய்த்தவாறு, ஒரு மெல்லிய புன்சிரிப்பை மேலோட்டமாக தவழ விட்டவாறு டிரைவர் கூறுவதுண்டு. அது உண்மைதான். மிருணாளினி டீச்சர் நகரத்திலிருந்து அந்த கிராமத்தின் உட்பகுதியில் இருந்த உயர்நிலைப் பள்ளிக் கூடத்திற்குச் செல்லும்போது பெரும்பாலும் அவர் ஓட்டக் கூடிய பேருந்தில்தான் பயணம் செய்வாள். பேருந்தில் இடம் இல்லாமல் பலநேரங்களிலும் அவள் நடந்து செல்வதையும் அவர் பார்த்திருக்கிறார். வெயில் பட்டு டீச்சரின் முகம் வாடி கருமை படர்ந்து விட்டிருப்பதைப் பார்த்து அவர் பரிதாப்பட்டிருக்கிறார். ‘‘டீச்சர்களுக்கு வடீடின் கிழக்கு திசையில்தான் பள்ளிக்கூடம் இருக்கிறது என்றால் பெரிய சங்கடம்தான். காலையில்  பாகும்போது கிழக்கு திசையிலிருந்து முகத்தில் வெயில் விழும். சாயங்காலம் திரும்பி வரும்போது, மாலை வெயில் மேற்கு திசையிலிருந்து அடித்துக் கொண்டிருக்கும். முகம் வறுத்த சேனைக் கிழங்கைப் போல ஆகிவிடும்’’ இப்படி ஒருநாள் அவர் டீச்சரின் வாடிய முகத்தைப் பார்த்தபோது, தனக்கு அருகில் அமர்ந்து பயணம் செய்து கொண்டிருந்த மனிதனிடம் அனுதாபத்துடனும் தமாஷாகவும் கூறியதை பேருந்தில் உட்கார்ந்திருந்த இன்னொரு ஆசிரியை கூர்ந்து கேட்டு, அதை மிருணாளினி டீச்சரின் காதுகளில் கொண்டு போய் சேர்த்தாள்.

மிருணாளினி டீச்சர் இளம்பெண்ணாக இல்லையென்றாலும், நல்ல ழகும் சுறுசுறுப்பும் உள்ள ஒரு நாகரீகப் பெண்ணாக இருந்தாள். வெள்ளக்காரியின் நிறம். கருத்து சுருண்ட தலைமுடி. கண்கள் சற்று நரைத்திருந்தன. ஆனால் எப்போதும் கண் மை பூசப்பட்டு அந்த பூனைக் கண்கள் ‘காமோ ஃப்ளாஷ்’ செய்யப்பட்டிருக்கும். பற்கள் சற்று நீல நிறத்தில் இருப்பவை என்ற குறை மட்டுமே அவளுடைய அழகிற்கு இருந்தது. கோவைப் பழம் போன்ற உதடுகள் அந்தப் பற்களின் ரகசியத்தை காத்து காப்பாற்ற முயற்சித்துக் கொண்டிருந்தன.

பிரகாசமான வர்ணத்தைக் கொண்ட மெல்லிய புடவையை அணிந்து, தலைக்குப் பின்னால் ஒரு சிவப்புநிற ரோஜாப்பூவை வைத்துக் கொண்டு, யாரிடம் என்றில்லாமல் வெட்கப்பட்டவாறு, வளைவில் திரும்பி சாலையோரத்தில் இருக்கும் மரத்திற்குக் கீழே பேருந்திற்காகக் காத்து நின்றிருக்கும் அந்த ஆசிரியையை குஞ்ஞிராமன் நாயர் தன் மனதில் வைத்து வழிபட ஆரம்பித்தார். ‘‘இடம் இருக்கிறதா?’’ என்று பின்னால் இருக்கும் கண்டக்டரிடம் கேட்காமலேயே, அவர் மிருணாளினியின் புடவைத் தலைப்பு கண்களில் பட்ட அந்தக் கணத்திலேயே பேருந்திற்கு ப்ரேக் போட ஆரம்பித்தார். ஆசிரியையை பேருந்தில் ஏற்றுவது என்பது தனக்கும் ஆர்வமான விஷயம்தான் என்றாலும், டிரைவர் தன் விருப்பப்படி முந்திக் கொண்டு செயல்படுவதை கண்டக்டர் குமாரன் எதிர்த்தான். ஒன்றிரண்டு முறை, ‘‘இடமில்லை போகலாம் பீ..பீ...’’ என்று அதிகார தொனியில  விசில் சத்தத்தை எழுப்பி, அவன் பேருந்தை ஓட்டும்படி டிரைவரிடம் கூறவும் செய்தான். பிறகு, பேருந்து புறப்படும் நேரத்தில் ஒரு ஆளுக்கு இடம்போட்டு வைக்கும்படி டிரைவர் கண்டக்டரிடம் கூறினார். அந்த இடம் டிரைவருக்கு அருகிலிருந்த இருக்கைதான் என்று ஆக ஆரம்பித்தது. அந்த வகையில் குஞ்ஞிராமன் நாயரின் பரிதாப உணர்ச்சி நெருக்கமானது... காதலானது... பக்தியானது. இறுதியில் திருமணத்தில் போய் முடியவும் செய்தது.

குஞ்ஞிராமன் டிரைவரைப் பொறுத்தவரையில் அந்தத் திருமணம் ஒரு மிகப் பெரிய விஷயம்தான். நான்காவது வகுப்பு வரை படித்திருந்த ஒரு கிராமத்து மனிதருக்கு ஒரு செக்கன்டரி பயிற்சி பெற்ற டீச்சர் மனைவியாகக் கிடைக்கிறாள் என்பது பெரிய விஷயம்தானே? மிருணாளினி டீச்சரைப் பொறுத்தவரையில் அதையே தான் கூற வேண்டும். தான் போவதையும் வருவதையும் பார்த்துக் கொண்டிருப்பதற்கு தரிசிப்பதற்கும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து புன்சிரிப்பு பெட்டகத்தைவெளியே எடுப்பதற்கும், வாய் வலிக்கப் பேசுவதற்கம், இடையில் காதல் கடிதங்களை அனுப்புவதற்கும் ஏராளமான பேர் இருந்தாலும், திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் ஒருவன்கூடஅவளை அணுகியதில்லை. தனக்குத் தெரிந்த பல பெண்களையும் போல தானும் முதிர்கன்னியாகவே இருக்க வேண்டிய சூழ்நிலை வந்துவிடுமோ என்ற கவலை மிருளாளினியை பாடாய்ப்படுத்திக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில்தான் குஞ்ஞிராமன் நாயரின் திருமண வேண்டுகோள் வந்து சேர்ந்தது. அவள் அதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டாள்- சிறிய அளவில் அதை ஒரு காதல் இல்லை, என்று கூறிவிட முடியாது. இளைஞனாக இல்லையென்றாலும் டிரைவர் பார்ப்பதற்கு ஒரு கம்பீரமான மனிதராக இருந்தார். கன்னத்தில் ஒரு நீண்ட தழும்பு இருந்தது. அந்தத் தழும்பைப் பார்த்தால், மிகப் பெரிய போரில் பெற்ற விழுப்புண் என்பதைப் போல் தோன்றும்.


உண்மையாக சொல்லப் போனால், அது ஒரு முகப்பரு உண்டாக்கிய தழும்பு. அந்தத் தழும்புதான் அவளை அவரை நோக்கி இழுத்தது. ஆனால், மிருனாளினி டீச்சர் அது எதையும் வெளியே காட்டிக் கொள்வதில்லை. ‘‘குஞ்ஞிராமன் டிரைவரை எதற்குத் திருமணம் செய்தாய்’’ என்று யாராவது கேட்டாள், அவள் அலட்சியமாகக் கூறுவாள். ‘‘ஓ... அது அப்படி நடந்திருச்சு!’’

மாதவியின் குழந்தை மீண்டும் அழுகிறது. ‘‘குட்டிக் கண்ணா... ஓ...ஓ...ஓ...’’ என்று மாதவி குழந்தையைத் தூங்க வைக்க முயற்சித்தாள். குஞ்ஞிராமன் டிரைவரின் மனம் மிருனாளினியின் வெளிறிப் போன வயிற்றை நோக்கித் தாவியது. அவள் தற்போது கர்ப்பமாக இருக்கிறாள். நான்கு மாதம் கடந்தால், அவளும் தன்னுடைய குழந்தையை இப்படி தாலாட்டு பாடி கொஞ்சித் தூங்க வைத்துக் கொண்டிருப்பாள். அந்தக் காட்சி அவருடைய இதயத்தில் ஒரு புத்துணர்ச்சியை உண்டாக்கியது.

டிரைவர் எழுந்தார். எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாக வீட்டிற்குச் சென்று, மிருணாளினியின் முகத்தைப் பார்க்க வேண்டும் என்று அவர் ஆவல் கொண்டார். க்ளீனர் பையன் இல்லையென்றாலும், தான் மட்டும் தனியாக மலையை விட்டு இறங்கி காலையில் வீட்டை அடைய வேண்டியதுதான் என்று முடிவெடுத்து, அவர் லாரியில் ஏறி என்ஜினை ஸ்டார்ட் பண்ணினார்.

நல்ல நிலவு வெளிச்சம் வயநாட்டின் பள்ளத்தாக்குகள் நிலவு வெளிச்சத்தில் மறக்க முடியாத ஒரு அழகைப் படைத்துக் கொண்டிருநந்தன. அதை ரசிப்பதற்கு அவருக்கு கண்கள் இல்லை. நேரமும் இல்லை. டிரைவரின் அழகுணர்வு கண் விழிப்பது. மிருணாளினியின் முகத்தைப் பார்க்கும்போது மட்டும்தான். நெற்றியின்மீது சிதறி விழுந்திருக்கம் சுருள் முடியுடன் அவள் மெத்தையில் படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கும் காட்சியைத் தான் தனக்கு முன்னால் தெரிந்த பள்ளத் தாக்குகளின் காட்சிக்கு பதிலாக அவர் கண்டார்.

மலைக்கு மேலே முதல் திருப்பத்தை அடைந்தபோது ஒரு மனிதன் லாரிக்கு முன்னால் வந்து நின்று கொண்டு கையை நீட்டினான். டிரைவர் லாரியை நிறுத்தினார்.

‘‘எங்களை கொஞ்சம் மலைக்குக் கீழே விட முடியுமா? லக்கிடி மூலையைத் தாண்டி காட்டு யானைகள் இறங்கியிருக்கின்றன என்று கொஞ்ச நேரத்திற்கு முன்னால் கடந்து சென்ற லாரிக்காரர்கள் சொன்னாங்க. நாங்க தாமரைச் சேரிக்கு நடந்து போய்க் கொண்டிருக்கிறோம்.’’

ஒரு முஸ்லீம். அந்த மனிதனுடன் இன்னொரு முஸ்லீமும் இருந்தான். துணைக்கு ஆட்கள் வந்து சேர்ந்தது மாதிரியும் ஆனதே என்று நினைத்து டபிரைவர் அவர்களை லாரியில் ஏற்றுவதற்கு ஒப்புக் கொண்டார். ‘‘அப்படின்னா... பின்னால்... காப்பி மூட்டைகளுக்கு மேலே ஏறி படுத்துக்கோங்க.’’

அந்த நடந்து செல்லும் மனிதர்கள் இருவரும் காப்பி மூட்டைகளுக்கு மேலே பற்றிக் கொண்டு ஏறினார்கள். ‘‘ஏறியாச்சா? லாரியை விடட்டுமா?’’ டிரைவர் அழைத்துக் கேட்டார். ‘‘விடுங்க...’’ ஒருவன் பதில் சொன்னான். லாரியில் மலையில் இறங்க ஆரம்பித்தது.

பின்னால் ஏறிப் படுத்திருந்த அந்த இரண்டு மனிதர்களும் உரத்த குரலில் பேசிக் கொண்டிருந்தார்கள். டிரைவர் சிறிதுநேரம் அவர்களுடைய உரையாடலை கவனித்துக் கேட்டுக் கொண்டிருந்தார். அவர்களுடைய முதலாளி ஒருநாள் ஏதோ ஒரு பெண்ணை அழைத்துக் கொண்டு வந்து, அவளை அனுபவித்த ஒரு சம்பவத்தைப் பற்றி அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்தக் கதையின் முதல் பகுதியை அவர் கேட்கவில்லை. அந்தப் பெண்ணைத் தன்னுடைய ரகசிய இல்லத்திற்கு வரைவைப்பதற்காக அந்த விடாக்கண்டனான முதலாளி எப்படிப்பட்ட தந்திரத்தை பயன்படுத்தினார் என்ற விஷயம் அவருக்குத் தெரியாது.

‘‘முதலாளிக்கு அந்த டீச்சரிடம் இந்த அளவிற்கு அதிகமான ஈடுபாடு தோன்றியதற்கு காரணம் என்னவென்று தெரியுமா அபுபக்கர்?’’

அவர்களில் ஒருவனின் கேள்வி.

‘‘நல்ல நிலவு வெளிச்சத்தில் வெள்ளரிக்காயைப் போன்ற ஒரு பெண் ஆச்சே அவள்! நான் பார்த்திருக்கிறேன்.’’ அபுபக்கரின் பதில்.

‘‘அவளை சும்மால்ல முதலாளிக்குப் பிடிச்சது... ஒரு விஷயம் தெரியுமா அபுபக்கர்? அவளுக்கு ஒரு விசேஷம் இருக்கு. முதலாளிதான் சொன்னார். அவளுடைய மார்பகங்களில் ஒண்ணு சின்னதாகவும் ஒண்ணு பெரியதாகவும் இருக்குமாம். ஒண்ணு பாக்குக்காயின் அளவு. இன்னொண்ணு தேங்காய் அளவு. ஹ... ஹ... ஹ... அந்த வித்யாசம்தான் நம்ம முதலாளிக்கு ரொம்பவும் பிடிச்சுப் போச்சு.’’

குஞ்ஞிராமன் டிரைவரின் இதயத்தில் ஒரு குண்டு வெடித்ததைப் போல இருந்தது. ஸ்டியரிங் சக்கரத்தில் இருந்த அவருடைய பிடி நழுவி விலகிச் சென்றது. அந்த ஆபத்து நிறைந்த வளைவில் இருந்து அவர் லாரியை எப்படியோ ஓட்டிக் காப்பாற்றினார்.

மிருணாளினி டீச்சரின் மார்பகங்களின் அமைப்பும் அந்த முஸ்லீம் கூறியதைப் போலத்தான் இருந்தன. அவளுடைய மார்பகங்களின் அளவு சமமாக இருக்காது. ஆனால், அது அவளுக்கும் அவருக்கும் மட்டுமே தெரிந்திருக்கக் கூடிய ஒரு மிகப்பெரிய ரகசியம் என்று அவர் நினைத்திருந்தார்.

டிரைவரின் மனதிலும் கண்களிலும் இருட்டு நுழைந்தது- ஆபத்தான ஒரு பதைபதைப்பு கலந்த இருட்டு. அவருக்கு முன்னால் வழி திரும்பவில்லை. திடீரென்று தோன்றிய கடுமையான திருப்பங்களில் அவர் சக்கரத்தைத் திருப்பி ஓட்டுகிறார். லாரி முரண்டு பிடிக்கிறது. அலறுகிறது, குதிக்கிறது - கீழே இருக்கும் ஆழமான பள்ளத்தாக்குகளை நோக்கிச் சாய்கிறது. திடீரென்று நிமிர்ந்து திரும்புகிறது.

‘அது அவளாக இருக்காது.’ டிரைவர் தனக்குத்தானே சமாதானம் கூறிக்கொள்ள முயற்சித்தார். இரண்டு அளவுகளில் உள்ள பெண்கள் வேறு சிலரும் இருக்கக்கூடாது என்றில்லையே!

ஆனால், நிலவு வெளிச்சத்தில் வெள்ளரிக்காயின் நிறம்- அப்படி ஒரே மாதிரி இருக்குமா? அவர் ‘ஹ்ர’ போல இருந்த ஒரு திருப்பத்திலிருந்து சக்கரத்தை ஒரு மரணப் பிடி பிடித்தார்.

‘அந்த முஸ்லீம்களிடைமே கேட்டு விடுவோம்- அந்தப் பெண் யார் என்று, அடிவாரத்தை அடையட்டும்.’ இப்படி மனதில் நினைத்துக் கொண்டே அவர் மலைப்பாதை வழியாக மிகவும் வேகமாக இறங்க ஆரம்பித்தார்.

லாரி தாமரைச்சேரி பஜாரை அடைந்தபோது, நான்க மணி ஆகிவிட்டிருந்தது. குஞ்ஞிராமன் டிரைவர் ஒரு தேநீர்க் கடைக்கு முன்னால் லாரியை நிறுத்தினார். அந்த முஸ்லீம்களுக்கும் ஒவ்வொரு கோப்பை சூடான தேநீரை வாங்கிக் கொடுத்து, அவர்களிடமிருந்து அந்த ரகசியத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டுமென்று முடிவு செய்து அவர் பின்னால் திரும்பி அழைத்தார். ‘‘ஏ காக்கா... தாமரைச் சேரி வந்திருச்சு இறங்குங்க...’’

பதில் இல்லை.

‘‘இன்னும் என்ன தூக்கம்?’’ டிரைவர் மட்கார்டின் மீது மிதித்து நின்று கொண்டு, சற்று எட்டிப் பார்த்தார்.

அந்த மூட்டைகளின் மீது ஒரு உயிரும் இல்லை.


குஞ்ஞிராமன் டிரைவர் லாரியைத் திருப்பி மலையின் மேல் நோக்கிச் செலுத்தினார். நான்கு மைல்கள் மலையில் ஏறியபோது, ஒரு திருப்பத்தின் மத்தியில் இரண்டு மூன்று லாரிகளும் ஐந்தாறு மனிதர்களும் கூட்டமாக நின்று கொண்டிருப்பதை அவர் பார்த்தார். லாரியை நிறுத்தினார்.

இரண்டு பிணங்களைச் சுற்றி அந்த ஆட்கள் நின்றிருந்தார்கள்.

‘‘என்ன இங்கு?’’ குஞ்ஞிராமன் டிரைவர் இதயத்தின்மீது தன்னையே அறியாமல் கையை வைத்துக் கொண்டு கேட்டார்.

‘‘இரண்டு முஸ்லீம்களின் இறந்த உடல்கள்... நேற்று இரவு ஏதோ லாரியின் மேலிருந்து தவறி விழுந்து இறந்திருக்கிறார்கள்.’’

அங்கு கூடி நின்றவர்களில் ஒருவன் அந்த இறந்த உடல்களைச் சுட்டிக் காட்டிக்கொண்டு பரிதாபத்துடன் சொன்னான்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.