Logo

பெண்ணின் பெருமை

Category: சிறுகதைகள்
Published Date
Written by sura
Hits: 6574
Pennin Perrumai

கரத்தைத் தாண்டி அமைதியாக இருக்கும் ஒரு பகுதியில் ஒரு சிறு பாதையில் நடந்து போன பிறகு இருக்கிறது அந்தச் சிறுவீடு. முற்றத்தில் துளசிச் செடிகள் வளர்ந்திருக்கின்றன. செத்திப் பூவும் மஞ்சள் மந்தாரமும் அங்கு நிறையவே இருக்கின்றன. முன் பக்க் கதவு அடைக்கப்பட்டிருக்கிறது. ஒரு சிறு ஓசை கூட இல்லை. வீடு பயங்கர அமைதியில் ஆழ்ந்திருக்கிறது.

ஒரு வேளை பாதை தவறி வந்து விட்டோமா? அவன் ஒரு நிமிடம் மனதிற்குள் எண்ணிப் பார்த்தான். அப்படி இருக்க வாய்ப்பே இல்லை. அந்த வீட்டுக்கு எப்படிப் போவது என்பதைச் சொல்லிக் கொடுத்த ஆள் குறித்துக் கொடுத்த பேப்பரைப் பாக்கெட்டிற்குள்ளிருந்து எடுத்து அவன் பார்த்தான். பிரதான சாலையில் இருந்து கீழே இறங்கிச் செல்லும் சிறு பாதை வழியாக நேராக நடந்து சென்றால் ஒரு சந்திப்பு வரும். அந்த இடத்தில் இரண்டு பக்கங்களாக பாதை பிரியும். இடது பக்கம் போகும் பாதையில் நடந்து சென்றால் மூன்றாவதாக இருக்கிறது அந்த வீடு. கேட்டில் வெள்ளை தான் பூ செடி அடர்த்தியாக படர்ந்து கிடந்தது. வீட்டின் முகப்பில் 'ஓம்' என்ற வாசகம் செதுக்கப்பட்டிருக்கிறது. நாம் தேடி வந்த வீடு இதுதான் - சந்தேகமே இல்லை என்று அவன் மனதிற்குள் முடிவு செய்தான். அவன் தயங்கித் தயங்கி வாசல் கதவைத் தட்டினான். உள்ளேயிருந்து எந்தவித சலனமும் தெரியவில்லை. ஒருவேளை உள்ளே யாருமே இல்லையோ?

இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு வந்து விட்டு ஆளைப் பார்க்காமலே போவதா என்பதை நினைத்துப் பார்த்தபோது அவனுக்கு மனதில் மிகவும் வருத்தமாக இருந்தது. இப்போது விட்டு விட்டால் பிறகு எப்போதுதான் பார்ப்பது? பார்க்கத்தான் முடியுமா? நாளை காலையில் ஒன்பது மணிக்கு விமானத்தில் போக பயணச் சீட்டு வாங்கியாகி விட்டது. பூமியின் இன்னொரு எல்லையில் இருக்கும் ஒரு இடத்திற்கு அவன் போகப் போகிறான். மறுபடியும் அவன் எப்போது திரும்பி வருவான் என்பது அவனுக்கே தெரியாது. அப்படியே திரும்பி வந்தாலும் அப்போது மிஸஸ் தலத் இருப்பாளோ என்னவோ? இப்போதே அவளுக்கு வயது எழுபத்தைந்தைத் தாண்டியிருக்குமே!

காலிங் பெல் இருக்கிறதா என்று அவன் தேடிப் பார்த்தான். இல்லை. இப்போது என்ன செய்வது? ஒன்றுமே புரியாத குழப்ப நிலையில் அவன் கையைச் சுருட்டி வைத்துக் கொண்டு கதவை மேலும் பலமாக தட்டினான். அழைத்தான்:

'இங்கே யாரும் இல்லியா?'

உள்ளே கட்டில் இலேசாக நகரும் சத்தம் கேட்டது. யாரோ நடந்து வரும் சத்தமும் மெதுவாகக் கேட்டது. கதவின் தாழ்ப்பாள் மெதுவாக நீங்கியது. நரைத்த ஒரு தலை தெரிந்தது. தளர்ந்து போன ஒரு உருவம். நெற்றியில் விபூதி. கழுத்தில் ருத்திராட்ச மாலை.

அவன் ஒரு நிமிடம் அதிர்ச்சியடைந்து நின்று விட்டான்.

இப்படியொரு உருவத்தைப் பார்ப்பதற்காகவா நாம் இவ்வளவு தூரம் பயணம் செய்து வந்தோம் என்று மனதிற்குள் நினைத்தான். இந்த கிழவி... இந்த சாமியார் கோலத்தில் இருக்கும் வயதான பெண்...? மரியாதைக் குறைவு என்று தோன்றுகிற விதத்தில் அவன் அந்த வயதான கிழவியையே உற்று பார்த்துக் கொண்டிருந்தான்.

கிழவியும் ஒன்றுமே புரியாமல் நின்றிருந்தாள். கொஞ்சமும் சம்பந்தமே இல்லாமல் இங்கு வந்து நின்றிருக்கும் இந்த மனிதன் யார் என்று அவள் மனம் அசை போட்டுப் பார்த்தது.

தோற்றத்தைப் பார்க்கும்போது வெளிநாட்டிலிருந்து வந்திருக்கும் ஒரு இளைஞனைப் போல் தெரிகிறது... தான் மறந்து போன யாராவது ஒரு ஆளாக இருக்குமோ என்ற எண்ணத்துடன் அவள் ஞாபகப்படுத்திப் பார்ப்பது மாதிரி நெற்றியைத் தடவினாள்.

அவன் தயக்கத்துடன் சொன்னான் :

"அம்மா... மன்னிக்கணும். மிஸஸ் தலத்தோட வீடு இதுன்னு ஒருத்தர் சொன்னாரு. அவுங்க இங்க இல்லியா? இல்லாட்டி மன்னிக்கணும்...'

அடுத்த நிமிடம் கிழவியின் இதயத்தின் அடித்தளத்தில் இருந்து ஒரு ஆச்சரியக்குரல் புறப்பட்டு வந்தது.

'சுதீர் நீயா? நீ... நீ... இங்கே... இப்போ...'

கண்களில் நீர் அரும்ப கிழவி முன்னோக்கி நடந்து வந்து அவனை இறுக அணைத்துக் கொண்டாள். உருவத்தைப் பார்த்து அடையாளம் தெரியாவிட்டாலும், குரலை வைத்து அடையாளம் கண்டு கொண்ட அவனும் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றிருந்தான்.

கிழவியின் கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன. அவள் இறுக கட்டிப் பிடித்ததில் அவனால் மூச்சு விடவே முடியவில்லை. எங்கே கையை எடுத்து விட்டால் இங்கிருந்து ஓடிப் போய் விடுவானோ என்பது மாதிரி அவள் அவனைப் பலமாகப் பிடித்திருந்தாள். அவளின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து அவனின் தலை மேல் விழுந்து கொண்டிருந்தது. அவன் கண்களிலிருந்து வழிந்த நீர் கிழவியின் தோளில் விழுந்தது. தங்கள் இரண்டு பேரின் அன்புக்கும் பாத்திரமானவரும், தங்களைப் பிணைத்திருந்தவருமான ஒரு மனிதரைப் பற்றிய ஞாபகம் அந்த கண்ணீரில் கலந்து வழிந்தது.

அவர் உயிரோடு இருந்த அந்த நல்ல காலத்தில் இந்த அளவிற்குக் கிழவியுடன் நெருக்கம் உண்டாகாமற் போனதற்குக் காரணம் என்னவாக இருக்கும் என்று அவன் மனம் எண்ணிப் பார்த்தது.

'நான் முன்கூட்டியே வந்திருக்கணும், மேடம்... " - அவன் மனதில் குற்றவுணர்வு உண்டாக சொன்னான். 'ஆனா, நான் வரணும்னு நினைச்சிருந்தாலும் முடியாது. அவருக்குப் பின்னாடி எனக்கும் இடம் மாற்றம் உண்டாயிருச்சு. முதல்ல சிட்னிக்கு மாத்தினாங்க. பிறகு ஐப்பானுக்கு... பிறகு ஜெர்மனி... எட்டு வருடம் கழிச்சு இப்பத்தான் சொந்த ஊருக்கே என்னால வர முடியாது...'

கீழுதடு நடுங்க கிழவி மெதுவான குரலில் சொன்னாள் : 'என் கணவர் என்னை விட்டுட்டு கண் காணாத இடத்துக்குப் போயிட்டாரு. ஆனா, போறப்போ என்னைக் கூட்டிட்டுப் போகல. யாரும் என்னை அழைச்சிட்டுப் போகல. இப்பவும் நான் வாழ்ந்துக்கிட்டு இருக்கேன். நீதான் பார்க்குறியே!'


சுதீர் பரிதாபம் மேலோங்க அந்த வயதான கிழவியைப் பற்றி நினைத்துப் பார்த்தான். கிழவியின் கணவர் இந்த உலகை விட்டு நீங்கி விட்டார். அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகள் நான்கு திசைகளாகப் பிரிந்து போய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் ஏற்*னவே இருந்தாலும் மிஸஸ் தலத் இப்போதும் தனக்குத் தானே எஜமானியாகத்தான் இருக்கிறாள். பிறவியிலேயே அவள் ஒரு சக்கரவர்த்தினிதான் போலிருக்கிறது. யார் முன்பும் அவள் எந்தக் காலத்திலும் தலை குனிவதில்லை.

கண்ணீரை அடக்கிக் கொண்டு முகத்தைத் துடைத்தவாறு மிஸஸ் தலத் சொன்னாள்: 'உட்காரு சுதீர்... நான் புலம்புறதுக்காக என்னை மன்னிச்சுடு. உன்னைப் பார்த்ததும் நான் அவரைப் பற்றி நினைக்க ஆரம்பிச்சிட்டேன். இனியொரு தடவை நாம பார்ப்போம்னு நான் கொஞ்சம் கூட நினைக்கல.'

மிஸஸ் தலத்திற்கு நேர் எதிராக பெஞ்சில் அமர்ந்து கொண்டு அவன் சொன்னான் : 'அப்படிச் சொல்லாதீங்க, மேடம், என்னைப் பொறுத்தவரை அவரை என் தந்தையை விட பெருசா நினைச்சேன். எனக்கு வேலை தந்தது அவர்தான். எவ்வளவு நாட்கள் அவர்கிட்ட நான் வேலை பார்த்தேன்! அவரை என்னால மறக்க முடியுமா?'

மிஸஸ் தலத் ஒன்றுமே பேசவில்லை. அவள் ஜெபம் சொல்வதைப் போல உதடுகளை இலேசாக அசைத்தவாறு விரல்களால் என்னவோ கணக்கு போட்டுக் கொண்டிருந்தாள். கடந்து வந்த வாழ்க்கையின் பக்கங்களை நோக்கி அவளின் மனம் சென்று விட்டது போலும்! அவளிடம் ஏதாவது பேச வேண்டுமே என்ற ஒரே காரணத்திற்காக அவன் கேட்டான் :

'ரமேஷ் இப்போ எங்கே இருக்குறாரு?'

'பாரிஸ்ல...'

'ரவி?'

'இந்தோனேஷியாவுல இருக்கான். ஆஷா டெல்லியிலயும் ப்ரேமா குஜராத்துலயும் இருக்காங்க. எல்லோரும் எந்தப் பிரச்னையும் இல்லாம நல்ல சுகத்தோட இருக்காங்க!'

சிறிது நேரம் இருவரும் ஒன்றும் பேசவில்லை.

அவன் சொன்னான் : ' மேடம், நீங்க டெல்லியில இருப்பீங்கன்னுதான் நான் முதல்ல நினைச்சேன். அவர் இறந்து போன பிறகு நீங்க ஆஷா கூடத்தானே இருந்தீங்க! ஆனா, இடையில நான் உண்ணியைப் பார்த்தேன். அப்பத்தான் நீங்க இங்க இருக்குற விஷயமே எனக்கு தெரிய வந்துச்சு. இங்கே வந்ததுல இருந்து நான் வீட்டைத் தேடிக்கிட்டே இருக்கேன். நேத்துத்தான் இந்த முகவரியே கிடைச்சது. அப்பவே வீட்டைக் கண்டு பிடிச்சாகணும்ன்ற முடிவுக்கு வந்துட்டேன். இங்கே வந்த பிறகு கூட என் சந்தேகம் தீரல... மேடம், இப்படியொரு இடத்துல... இந்த மாதிரி...'

மிஸஸ் தலத் சிரித்தாள் : 'என்னோட அப்பாவும் அம்மாவும் இதைவிட மோசமா இருந்த வீட்டுலதான் வாழ்ந்தாங்க. அங்கேதான் நான் வளர்ந்தேன்..."

திடீரென்று எதையோ நினைத்துக் கொண்டு அவள் எழுந்தாள் : 'ஓ... நீ ரொம்ப தூரம் நடந்து வந்திருக்கே! உனக்கு ஒண்ணுமே நான் தரலியே! இரு... இப்போ வந்திர்றேன்!'

மிஸஸ் தலத் ஒரு குடும்பத் தலைவி என்ற எண்ணத்தை நிலை நாட்டும் வண்ணம் உள்ளே நடந்தபோது பல வருடங்களுக்கு முன்னால் லண்டனிலும் நியூயார்க்கிலும் தான் பார்த்த மிஸஸ் தலத்தை அவன் அப்போது மனதிற்குள் நினைத்துப் பார்த்தான். அவளின் வீட்டில் இருக்கும் வரவேற்பறையைப் போல் ஆடம்பரமான ஒன்றை அவன் வேறு எந்த வீட்டிலும் பார்த்ததே இல்லை. ஆடை அலங்காரங்களும், விருந்தோம்பலின் நவநாகரீகத் தன்மையும், உரையாடும் முறையும், தலையை உயர்த்திக் கொண்டு கையை ஆட்டியவாறு பேசுவதும் - ஒரு முறை பார்த்தால் மிஸஸ் தலத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. உத்தியோகம் சம்பந்தமான விருந்துகளிலும் பொது நிகழ்ச்சிகளிலும் மிஸஸ் தலத்தைப் பார்ப்பவர்கள் இந்திய பெண்மையின் சின்னம் என்றுதான் அவளைக் குறிப்பிடுவார்கள். அவளின் ஆடை அணியும் விதத்திலும் நடந்து கொள்ளும் முறையிலும் ஒரு மகாராணியின் மிடுக்கு தெரியும். தான் முதன் முதலாக அவளைச் சந்தித்த நிகழ்ச்சியை அவன் அப்போது நினைத்துப் பார்த்தான். டாக்டர் தலத்தின் செக்ரட்டரியாக அவன் சார்ஜ் எடுத்துக் கொண்ட நாளன்று மாலை நேரம். அமைதியான குணத்தைக் கொண்டவரும், நிறைய படித்த பண்டிதரும், நல்ல இதயத்துக்குச் சொந்தக்காரருமான டாக்டர்... தலத் தன்னுடைய மனைவியை அழைத்தார் :

'இங்க பாரு... நமக்கு அஞ்சாவது ஒரு பிள்ளை கிடைச்சிருக்கான். ஒரு மகன்... ஆனா, ஒரு வித்தியாசம்... இவன் கொஞ்ச நாட்கள் நம்ம கூடவே இருப்பான்.'

மிஸஸ் தலத் ஒரு எஜமானியின் இடைவெளியை வெளிப்படுத்தியவாறு புன்னகைத்துக் கொண்டே கையை நீட்டினாள். ஆனால், அவளின் அந்தக் கைகளைப் பற்றியபோது இப்போது அனுபவித்த உஷ்ணம் அப்போது அவற்றில் இல்லை என்பதை அவன் நினைத்துப் பார்த்தான்.

மிஸஸ் தலத்தின் நான்கு பிள்ளைகளும் இப்போது இருப்பதைப் போலவே அப்போதும் நாலு வெவ்வேறு இடங்களில் தான் இருந்தார்கள். மூத்தவர்கள் கல்லூரி விடுதிகளிலும், இளையவர்கள் போர்டிங்கிலும். விடுமுறை இருக்கிறபோது எப்போதாவது வருவார்கள், போவார்கள். அவ்வளவுதான்.

மிஸஸ் தலத் பிள்ளைகளைப் பெற்றார் என்பது மட்டும்தான். அவர்களுக்கு அவள் தாய்ப்பால் கொடுக்கவில்லை. தாலாட்டு பாடல் பாடவில்லை. பிடிவாதம் பிடித்து அழும்போது அவர்களைக் கொஞ்சி சமாதானப்படுத்தவோ உடல் நலம் கெடும்போது அதை குணப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபடவோ அவன் செய்யவில்லை. அலங்கரிக்கப்பட்ட பொம்மைகளைப் போல எண்ணி அவ்வப்போது அவள் முத்தம் கொடுக்க மட்டும் வருவாள்.

வரவேற்பறையிலும் க்ளப்பிலும் நாடக அரங்குகளிலும் கம்பீரமாக நடந்து திரியும் இந்த நவநாகரீக 'லேடி' யைப் பார்த்து யாரும் பிரசவம் ஆன பெண் என்று சொன்னால் நம்பவே மாட்டார்கள். தன்னுடைய கலாச்சாரத்தையே அவள் மறந்து விட்டாள் என்றுதான் சொல்லவேண்டும். முன்கூட்டியே தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ளாமல் அவளால் சிரிக்கவோ அழவோ முடியுமா என்று கூட அவன் சந்தேகப்பட ஆரம்பித்தான். அப்படிப்பட்ட மேடம் தலத்தான் இப்போது... அந்த கம்பீரமான பெண்தான்...

ஒரு பீங்கான் டம்ளரில் ஆவி பறக்கும் காப்பியையும், ஒரு பீங்கான் தட்டில் நெய்யப்பத்தையும் எடுத்துக் கொண்டு மிஸஸ் தலத் மெதுவாக நடந்து வந்தாள். முன்பு தன் தாய் நடந்து வருவதைப் போல் அவனுக்கு அப்போது தோன்றியது. கொண்டு வந்த பலகாரத்தை அவனுடைய கைகளில் மிஸஸ் தலத் தந்தாள். காப்பியை ஆற்றியவாறு அவள் சொன்னாள் :

'சுதீர்... உனக்கு அனேகமா இதைப் பிடிக்காது. ருசி இல்லாதது மாதிரி இருக்கலாம். நான் பண்ணியது இது... நைவேத்தியத்துக்காகப் பண்ணிய நெய்யப்பம்... வேலைக்காரி வெளியே போயிருக்கா...'


அவன் அப்பத்தைப் பிய்த்து வாய்க்குள் போட்டவாறு சொன்னான் : 'என் தாய் எனக்கு எப்பவும் பண்ணித் தந்தது இந்த நெய்யப்பம்தான். அவுங்க தன் கைகளால இதைத் தயார் பண்ணி பக்கத்துல உட்கார்ந்து என்னைச் சாப்பிடச் சொல்லுவாங்க. எனக்கு நெய்யப்பம்னா உயிர்! மேடம், உங்க கையால எனக்கு இது கிடைச்சிருக்கே!’

மிஸஸ் தலத் பெஞ்சில் அவனுக்கு அடுத்து உட்கார்ந்து காப்பியை ஆற்றிக் கொண்டிருந்தாள். கொஞ்சம் கொஞ்சமாக காப்பியை அவன் கையில் தர, அவன் குடித்தான். இலேசாக சிரித்தவாறு அவன் சொன்னான் : 'மேடம், நீங்க உங்க கையால எனக்கு எவ்வளவோ தடவை காப்பி தந்திருக்கீங்க. ஆனா, இவ்வளவு ருசியான காப்பியை இதுக்கு முன்னாடி நீங்க தந்து நான் குடிச்சதே இல்ல. எவ்வளவு ருசியா இருக்கு!'

மிஸஸ் தலத் தலை குனிந்தவாறு சொன்னாள் : 'நானும் என் கையால தயார் பண்ணி இவ்வளவு பிரியமா இதுவரை வேற யாருக்கும் தந்தது இல்லை...'

மிஸஸ் தலத் சிறிது நேரம் என்னவோ யோசனையில் ஆழ்ந்தாள். பிறகு சொன்னாள்: 'வீட்டைப் பற்றி நினைச்சுப் பார்க்குறதுன்றது டாக்டர் தலத்துக்கு ரொம்பவும் பிடிக்கும். தன்னோட அம்மா... தன்னோட பாட்டி... அதுக்குப் பிறகு அவர் அடிக்கடி சொல்லுவாரு : 'டாலி, பாரதப் பெண்கள் எவ்வளவு கொடுத்து வச்சவங்களா இருந்திருக்காங்க! அவுங்களுக்குக் கொடுக்க மட்டும்தான் தெரிஞ்சிருக்கு. கொடுத்துக் கொடுத்து அதுனால கிடைச்ச சந்தோஷத்தை அவங்க அனுபவிச்சிருக்காங்க. அதுனாலதான் அவங்க வாழ்க்கையில முழு திருப்தியோட வாழ்ந்திருக்காங்க... உனக்குத் தெரியுமா?ன்னு. எனக்கு அப்போ அதைப் பற்றியெல்லாம் ஒண்ணும் தெரியாது. எவ்வளவோ வருடங்கள் கழிச்சு இப்பத்தான் எனக்கு அதோட அர்த்தமே புரியுது!'

சுதீர் எதுவும் பேசாமல் அந்த வயதான கிழவியின் சுருக்கங்கள் விழுந்த முகத்தையே பார்த்தவாறு அப்பத்தைத் தின்று கொண்டிருந்தான். இருவரையும் பார்த்தால் அப்பத்தின் ருசியை மிஸஸ் தலத்தான் அனுபவிப்பது போல் தோன்றும்.

மிஸஸ் தலத் பழைய ஞாபகங்களில் முழுமையாக மூழ்கி விட்டிருந்தாள். அவள் கேட்டாள் :

'நியூயார்க்ல இருந்தப்போ நம்ம வீட்டுக்கு முன்னாடி இருந்த பார்க்ல வெயில் காயுறதுக்காக வந்து உட்கார்ந்திருக்குற அந்த வயசான கிழவனை ஞாபகத்துல இருக்கா? உயரமா மெலிஞ்சு போய் இலேசா கூன் விழுந்து நடுங்கிக்கிட்டு இருக்குற கிழவன்...பாவம்...அந்த ஆளை அப்போ எனக்குப் பார்த்தாலே பிடிக்காது. எப்போ பார்த்தாலும் மூக்கை உறிஞ்சுக்கிட்டு... காது கூட அந்த ஆளுக்குக் கேட்காது. கிழிஞ்சு போன பேண்ட்டும் தொப்பியும்... ஒரு நாள் அந்த ஆளு என் பக்கத்துல வந்து கேட்டாரு : 'மேடம், உங்களைப் பார்த்து ஒண்ணு கேட்கட்டுமா? உங்க இந்தியாவுல அப்பா, அம்மாவைத் தெய்வத்தைப் போல நினைப்பாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். நான் கேள்விப்பட்டது உண்மையா?'ன்னு. நான் அப்படி மனசுக்குள் நினைச்சேனான்னு எனக்குத் தெரியாது. இருந்தாலும் 'ஆமா'ன்னு தலையை ஆட்டி வச்சேன். அப்போ அந்த ஆளு சொன்னாரு - 'மேடம், இந்தியா எவ்வளவு அருமையான நாடு!'ன்னு'.

சுதீர் அதற்கு எந்த பதிலும் கூறவில்லை. மிஸஸ் தலத் தொடர்ந்து சொன்னாள் : 'நான் இந்தியாவுல பிறந்தேன். ஆனா, வாழ்ந்தது இங்கே இல்லியே! என்னோட அப்பா, அம்மாவை நான் கடவுளா நினைக்கல. கடைசி காலத்துல அம்மா அடுத்தடுத்து எழுதியும் ஊர்ல வந்து வசிக்குறதுக்குப் பிடிக்காம இங்கே வராமலே இருந்துட்டேன். நாம என்ன கொடுத்தமோ, அதுதானே நமக்குக் கிடைக்கும்? இல்லையா சுதீர்? நான் யாருக்கும் ஒண்ணும் கொடுக்கலையே!'

அவன் உணர்ச்சி மேலோங்க சொன்னான் :

'அப்படிச் சொல்லாதீங்க மேடம். காலத்துக்கும் தேசத்துக்கும் ஏற்றபடிதான் மனிதர்கள் வாழ வேண்டியதிருக்கு. அன்னைக்கு இருந்த சூழ்நிலையே வேற. அதுல நீங்க பிரகாசமா ஒளி  வீசினதை நாம மறுக்க முடியாது. டாக்டர் தலத் அடிக்கடி ஒண்ணு சொல்வாரு... அது உங்க ஞாபகத்துல இல்லியா? 'டாலி மட்டும் இல்லைன்னா நான் வெறும் நிழல்தான். பெரிய பெரிய பிரச்னைகளெல்லாம் அவளோட ஒரு சிரிப்புல மறைஞ்சு போகுது. உண்மையிலேயே பார்க்கப் போனா சூழ்நிலையைப் புரிஞ்சு நடக்குறவ அவதான்...'னு அவரு சொல்வதை நீங்க மறந்துட்டீங்களா?'

மிஸஸ் தலத் அதைக் கேட்டு தலையைக் குலுக்கினாள் : 'ஆமாம்மா... நீ சொல்றது சரிதான்.. அவருக்காக உண்டாக்கிக்கிட்டது தான் என்னோட வாழ்க்கை. வேற யாருக்குமே அந்த வாழ்க்கையில இடமில்ல. அதனாலதான் நான் தனியா வாழ பிரியப்பட்டதே. ஆஷா கூப்பிட்டா. ப்ரேமா கூப்பிட்டா. ரவியும் வரச் சொல்லி கட்டாயப்படுத்தாம இல்ல. எவ்வளவு போலித்தனமான அலங்கார வார்த்தைகள்! அவங்களுக்கு நல்லாவே தெரியும் காலப் போக்குல இந்தக் கிழவி தங்களுக்கு ஒரு சுமையா மாறிக்கிட்டு இருக்கான்னு. என்னோட வாழ்க்கை முறை அவங்களுக்குப் பிடிக்காமப் போகலாம். அவங்களோட விருப்பு வெறுப்புகளில் நான் தலையிட வேண்டியது வரலாம். சொல்லப்போனா அவங்களுக்கு உறவுன்னு சொல்லிக்கிறதுக்கு நான் மட்டும்தான் இருக்கேனா என்ன? மகளுக்கு அவளோட கணவன் சம்பந்தப்பட்ட சொந்தங்கள் இருக்கு. மகனுக்கு அவனோட மனைவி வகையில சொந்தக்காரங்க இருக்காங்க. வேண்டாம் சுதீர்... வேண்டாம்... நான் இன்னொருத்தரை நம்பி வாழ விரும்பல... எதுவுமே இல்லைன்னாக் கூட நான் நானாகவே சாகத்தான் விரும்புறேன். ஒரு சொந்தமும் எனக்கு வேண்டாம்...'

சுதீரால் அந்த வயதான கிழவியைப் புரிந்து கொள்ள முடிந்தது. அவளைப் பார்க்கும்போது அவனுக்குப் பெருமையாகக் கூட இருந்தது. இந்தத் தள்ளாத வயதிலும் மேடம் தலத் மேடம் தலத்தான் என்று பட்டது அவன் மனதில். அந்த சுய கவுரவம். அந்த மன உறுதி...

அவன் கடிகாரத்தைப் பார்த்தான். நேரம் அதிகமாகி விட்டிருந்தது.

எக்ஸ்பிரஸ் ட்ரெயினில் போனால்தான் உரிய நேரத்திற்கு அவன் விமான நிலையத்தை அடைய முடியும்.

அவன் எழுந்தான். விடைபெற்றுக் கொள்வதற்காக அவன் தலையைக் குனிந்தான் : 'மேடம்...'

மிஸஸ் தலத் அழுதவாறு அவனை மீண்டும் இறுக கட்டிப் பிடித்தாள்.

'மேடம் தலத் செத்துப் போயிட்டா, மகனே. டாக்டர் தலத் எப்போ செத்தாரோ, அப்பவே அவளும் போயிட்டா. நீ பார்க்குற இவ ஒரு அம்மா. தாழத்து குஞ்ஞிக்குட்டியம்மா. அப்படிச் சொன்னாத்தான் இங்க உள்ளவங்களுக்குத் தெரியும்.'


அதைக் கேட்டு சுதீரின் கண்களில் கண்ணீர் நிறைந்து விட்டது. அவன் கிழவியின் கால்களில் விழுந்து வணங்கினான் : 'அம்மா, உங்களைப் பார்க்காம போயிருந்தா வாழ்க்கையில ஒரு மிகப் பெரிய பகுதியை நான் இழந்தது மாதிரி ஆகியிருக்கும். நான் மீண்டும் வருவேன். இது என்னோட வீடு. நீங்க என்னோட தாய். இப்போ எனக்குப் போக அனுமதி தாங்கம்மா...'

மிஸஸ் தலத் அவனின் தலையில் கையை வைத்து ஆசிர்வதித்தாள் : 'உனக்கு நல்லது நடக்கட்டும், சுதீர்! மிஸ்டர் தலத் அடிக்கடி சொல்லுவாரு தன்னோட வாரிசா வரப் போறவன் இந்தப் பையன்தான்னு. அவர் சொன்னது பலிக்கட்டும்.'

அவள் தான் சொல்லிக் கொண்டிருந்ததைச் சிறிது நிறுத்தினாள். பின்னர் தொடர்ந்தாள் : 'ஆனா, ஒரு விஷயத்தை ஞாபகத்துல வச்சுக்கோ. உனக்கு வரப்போற மனைவிக்கிட்ட சொல்லு... குழந்தைகளை எந்தக் காரணத்தைக் கொண்டும் போர்டிங்கிற்கு அனுப்பக் கூடாதுன்னு... பெத்த தாய்தான் தன் பிள்ளைகளை வளர்க்கணும். அவங்களைக் கொஞ்சுறதோ தாலாட்டுறதோ எதுன்னாலும் அவதான் செய்யணும். அப்படின்னாத்தான் தாய் குழந்தைகளோட ஒரு பாகமாகவும், குழந்தைகள் தாயோட ஒரு பாகமாகவும் ஆக முடியும். புதுசா வரப்போற உன் மனைவிக்கிட்ட இதைத் தவறாம சொல்லு. அப்படின்னாத்தான் அவ சுகமா இருக்க முடியும்.'

சுதீர் இப்போதுதான் உண்மையிலேயே அதிர்ச்சியடைந்தான். அவன் கிழவியையே வைத்த கண் எடுக்காது பார்த்தான். அவள் தொடர்ந்தாள் :

'ஒண்ணுமே இல்லைன்னாக்கூட எல்லாம் போக சுகமான சில நினைவுகளாவது நம்ம கூட இருக்குமே! நினைவுகள்... வயசான காலத்துல அவை மட்டுமே நமக்கு ஆறுதலா இருக்கும். சுதீர்... நீ இன்னொரு தடவை வர்றப்போ, நான் உயிரோட இருப்பேனான்னு சொல்ல முடியாது. ஆனா, உன் மனசுலயாவது நான் வாழணும்...'

சுதீர் படிகளை விட்டு இறங்கிய பிறகு பின்னால் திரும்பிப் பார்த்தான். வாசலில் நின்று கொண்டிருக்கும் அந்த வயதான கிழவி... அவளின் உண்மைத் தோற்றத்தை அவன் இன்றுதான் பார்த்திருக்கிறான். அவன் பார்த்தது மேடம் தலத்தை அல்ல... லேடியை அல்ல... சமூக சேவகியை அல்ல... ஒரு தாயை... வெறும் ஒரு தாயை!

எந்த அளவிற்கு வயது காரணமாக தளர்ந்து போய் விட்டாள் அந்தத் தாய்! எப்படி மிடுக்காக ஒரு காலத்தில் இருந்த உருவம் அது! அம்மா! ஒரு வகையில் பார்க்கப் போனால் அவள் கொடுத்து வைத்தவள்தான். கடைசி காலத்திலாவது பெண்ணின் பெருமையை அந்தத் தாயால் உணர முடிந்ததே!

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.