Logo

கீறல்கள்

Category: சிறுகதைகள்
Published Date
Written by sura
Hits: 6628
Keeralgal

நேற்று முழுவதும் 'பார்க்க வந்தவர்கள்' கூட்டம் தான். நகரத்திலிருந்து வெளிவரும் காலைப் பத்திரிகைகளில் செய்தி வந்ததுதான் தாமதம், அதற்குள் நகரத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் செய்தி பரவிவிட்டது. 'அகில இந்திய ரேடியோ' வின் செய்தி அறிக்கையில் கூட விஷயத்தை விடவில்லை.

அவளைக் கண்டு பாராட்டு தெரிவிக்கத்தான் எத்தனை பேர்! "இந்த 'அவார்டு' பல வருஷங்களுக்கு முன்னாடியே உங்களுக்குக் கிடைச்சிருக்க வேண்டியது. இந்தப் பள்ளிக்கூடம் செய்த பாக்கியம் இந்த ஊரு செய்த பாக்கியம்!" என்று வருவோர் போவோரெல்லாம் மனதிற்குத் தோன்றியபடியெல்லாம் அவளைப் புகழ்ந்தார்கள். சிலர் அவளுக்கு ஏற்கனவே பழக்கம் ஆனவர்களாகவும், வேறு சிலர் அவளுடைய முகத்தை ஒரு முறையேனும் பார்த்தறியாதவர்களாகவும் இருந்தார்கள். அப்படி வந்த சிலரில் அவளைப் பொறாமைக் கண்களுடன் நோக்கியவர்களும் இல்லாமற் போய்விடவில்லை. இந்த விஷயத்தில் ஆசிரியையான வனஜா மற்றவர்களைக் காட்டிலும் ஒரு படிமேல் என்று கூட சொல்லலாம். ஒரு பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியை என்ற முறையில் வனஜாவைப் பல்வேறு சமயங்களில் பல்வேறு காரணங்களுக்காக அவள் தண்டித்ததுண்டு; இடித்துக் காட்டியதுண்டு; மேலிடத்தில் புகார் செய்ததுண்டு. அதற்காக தன் மீது மனதில் வெறுப்பு கொண்டு வனஜா நடந்து திரிவதையும் கௌரி அறிந்து கொள்ளாமல் இல்லை. தன்னைப் பற்றிய சிறிதும் பொருத்தமற்ற பொய்யான செய்திகளைக் கண்ணில் காணும் மற்றவர்களுடைய செவிகளில் வனஜா ஓதிக்கொண்டு திரிவதும் அவளுக்கு வெட்ட வெளிச்சமாக புரியத்தான் செய்தது. என்றாலும், எல்லா வகையான வெறுப்புணர்ச்சியையும் உள்ளத்தின் அடித்தளத்திலேயே பூட்டி வைத்துக் கொண்டு அவளைப் பாராட்டுவதற்காக வனஜாவும் வரத்தான் செய்தாள்.

தன்னைப் பார்க்க வருபவர்களின் கூட்டம் நேற்றோடு முடிந்து விட்டது என்று அவள் நினைத்திருந்த சமயத்தில் வேலைக்காரி ஜானகி வந்து, அவளைப் பார்ப்பதற்காக வெளியே யாரோ காத்து நிற்பதாகத் தெரிவித்தாள்.

'ம்... ம்... யாராக இருந்தால் என்ன? அதற்காகப் பாதிக் குளியலோடு பாத்ரூமை விட்டு வெளியே வர முடியுமா?’

உடம்பில் கமகமக்கும் வாசனை சோப்பைத் தேய்த்து அவன் மீண்டும் குளிப்பதில் ஈடுபட்டாள்.

வழக்கத்தை விட அவள் சீக்கிரமாகவே இன்று குளித்துவிட்டாள் என்றுதான் சொல்ல வேண்டும். தன்னைக் காணவந்த ஒரு மனிதரை எவ்வளவு நேரந்தான் வெளியிலேயே நிற்க வைப்பது? குளித்து முடித்த உடம்பை டர்க்கி துவாலையால் இதமாக ஒற்றினாள். பள்ளிக்கு செல்லும்போது அணியக் கூடிய வெள்ளை வெளேரென்று காட்சியளிக்கும் ஆடைகளை எடுத்து அணிந்து கொண்டாள். அவளுடைய மென்மையான மேனிக்கு அந்தக் கதர் சேலையும் ப்ளவுஸீம் மிகவும் பொருத்தமாக இருந்தன. மிருதுவான கூந்தலை இரண்டு கைகளாலும் அள்ளி கழுத்துக்குப் பின்புறம் கோதி ஒதுக்கினாள். நீண்டு தொங்கும் கூந்தலின் நுனியில் முடிச்சிட்டாள். மீதி அலங்காரங்களைத் தொடர்ந்து செய்து முடித்தாள். இடையில் இங்கும் அங்குமாக இழையோடி விட்டிருந்த நரைத்த முடிகளை வெளியே தெரியாமல் கறுப்பு முடிகளால் மூடியபடி வேகமாக வெளியே வந்தாள்.

வெளியே தன்னைத் தேடி வந்திருக்கும் மனிதருடைய முகத்தைக் கண்டபோது கௌரியால் சிறிதுகூட நம்ப முடியவில்லை. தான் காண்பது கனவா இல்லை நனவா என்று ஒரு நிமிடம் அவளே சந்தேகப்பட்டாள்.

மெலிந்து போய், இன்றோ நாளையோ என்றிருக்கும் உருவம், சதைகளைத் துருத்திக் கொண்டு வெளியே தெரியும் எலும்புகள், ஒட்டி உலர்ந்து போன முகம். நரையோடிப் போன தலையிலிருந்து நேர் கீழாக கன்னத்தின் வழியே வழிந்து கொண்டிருந்த வியர்வையை, கண்களில் அணிந்திருந்த கண்ணாடியைக் கழற்றியபடி மேல் துண்டால் துடைத்துக் கொண்டிருந்தார் அந்த மனிதர். அவருடைய உதடுகளில் புன்சிரிப்பு தவழ்ந்து கொண்டிருந்தது. சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடி கேட்டார்:

"டீச்சருக்கு என்னை யாருன்னு அடையாளம் தெரியுதா?"

சிறிது நேரம் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்த கௌரி உள்ளே தலையை நீட்டியபடி உரத்த குரலில், "ஜானகி, காபி போட்டுக் கொண்டு வா" என்றாள்.

"நான் காபி குடிப்பதை நிறுத்தி எவ்வளவோ நாளாயிடுச்சு." - அவர் சொன்னார். நாளொன்றுக்கு டம்ளர் டம்ளராக காபி குடித்துக் கொண்டிருந்த மனிதரா இப்படிக் கூறுகிறார்! அவள் மெதுவாக கேட்டாள்:

"உடம்புக்கு ஏதாவது...?"

"ஆமாம்... உடம்புக்கு எல்லாந்தான் வந்து சேருது" - இதைச் சொல்லும்போது அவருடைய குரலில் கொஞ்சமாவது வருத்தத்தின் அறிகுறிகள் தெரிய வேண்டுமே! மாறாக, ஏதோ தமாஷ் ஒன்றைக் கூறுவதுபோல் சிரித்துக் கொண்டே கூறினார். அதிகமாகச் சிரித்ததாலோ என்னவோ, தொடர்ச்சியாக அவருக்கு இருமல் வந்தது. ஏதோ ஒரு விவரிக்க முடியாத உள்ளுணர்வால் உந்தப்பட்ட கௌரி அவருடைய நெஞ்சைத் தன் மென்மையான கரங்களால் மெல்ல தடவி விட்டாள்.

இருமல் நின்றபோதுதான் அவளுக்கு நிம்மதியே வந்தது. தான் அவருடைய நெஞ்சைத் தடவி விட்டது தவறாக இருந்தால்... அதன் விளைவு என்னவாக இருக்கும்? என்ன இருந்தாலும் ஆபத்துக்குப் பாவமில்லை அல்லவா? அவராக இல்லாமல் இதே இடத்தில் வேறு யார் இருந்தாலும் அவள் இப்படித்தான் நடந்து கொண்டிருப்பாள்! இதைப் போய் தவறாக யார் நினைக்கப் போகிறார்கள்? மேலும், இந்தக் காரியத்தை அவள் செய்ய முடியாத அளவுக்கு அவர் அந்நியரா என்ன? அவர் அவளுக்கு எத்தனை நெருக்கமானவர்!

"ம்...ம்... இன்னைக்குக் காலை பேப்பர்ல செய்தியைப் பார்த்தேன்" - தளர்ந்து போன குரல்.

கௌரி அப்போதும் ஒன்றும் பேசாமல் புன்சிரிப்பு தவழ நின்று கொண்டிருந்தாள். அவள் அப்படியே பேச நினைத்தாலும் எதைப் பற்றி பேசுவாள்? ஒரு வேளை அவள் ஏதாவது கூறப் போய், அதுவே ஒரு பெரிய பிணக்குக்கு ஆரம்பமாக ஆகிவிட்டால்....? தான் வேலைக்குப் போவது கூட முன்பு அவருக்கு விருப்பமில்லாத ஒன்றுதான். எழுதிக் கொண்டிருப்பதையும் படித்துக் கொண்டிருப்பதையும் தவிர வாழ்க்கையில் வேறு எதன் மீதும் சிறிதும் பிடிப்பில்லாத அவருடைய போக்கு அவளுக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. எங்கேயோ ஆரம்பித்த அந்தப் பிணக்கம் போய் முடிந்தது.

நினைவு அலைகள் காலப் புத்தகத்தின் ஒவ்வோர் ஏட்டிலும் உருண்டோடி எதையோ தேடிக் கொண்டிருந்தன. அந்த நினைவுச் சக்கரத்தின் மாயச் சுழற்சியில் அவள் வீழ்ந்துதான் போனாள்.

"காபி வேண்டாம்னா, வேற ஏதாவது....?"

"கட்டாயம் ஏதாவது சாப்பிட்டுத்தான் ஆகணும்னா, கொஞ்சம் பால் குடுங்க... சாப்பிடுறேன்."


'கட்டாயம் ஏதாவது சாப்பிட்டுத்தான் ஆக வேண்டுமா?' என்றல்லவா கேட்கிறார்? அவர் எப்போதுமே இப்படித்தான். பல வருடங்களுக்கு முன்னால் ஒரு முறை இதே மாதிரி தான் கூறினார். அன்று நடந்த அந்தச் சம்பவத்தை ஒரு முறை நினைவு படுத்திக் கொண்டாள் கௌரி. வாழ்வில் எதிலுமே அவருக்குப் பற்றில்லை. காபி பருகுவது, சாப்பிடுவது, உறங்குவது, வெளுத்த ஆடைகளை அணிவது - இவை ஒவ்வொன்றையும் தனக்காக அன்றி, ஏதோ காரியத்தைச் செய்வதாக இருந்தாலும், பச்சைக் குழந்தை மாதிரி அவரைக் கையைப் பிடித்துச் செய்ய வைக்க வேண்ட்டியிருந்தது. எழுதுவதிலும் வாசிப்பதிலும் மூழ்கி விட்டாரானால் தான் இருக்கும் உலகத்தையே மறந்து விடுவார். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் அவரை யாராவது இடைமறிந்து விட்டால் போதும், அடுத்த நிமிடமே சம்ஹார மூர்த்தியாக மாறி விடுவார்.

ஆனால், அந்த மனிதரின் சக்தி மிக்க, அர்த்தம் பொருந்திய அந்த மவுனத்தின் முக்கியவத்துவத்தை அறிந்து கொள்ளும் நிலையில் கௌரி அன்று இல்லை. இளமை கொழிக்கும் சாதாரண பெண்ணைப் போல அவள் அப்படிப்பட்ட சமயங்களில் அவரை எதிர்த்துப் போராடுவாள். அதன் விளைவு - அவர்கள் இருவருடைய வாழ்விலும் மகிழ்ச்சி என்ற ஒன்றுக்கே இடம் இல்லாமல் போய்விட்டது. அந்தத் திருமண பந்தத்திலிருந்து எப்படியேனும் தான் விடுபட்டு விட வேண்டும் என்று ஒவ்வொரு நிமிடமும் நினைக்கத் தொடங்கினாள் கௌரி. அந்தப் பிரிவினால் நஷ்டம் அடையப் போவது யாருமே இல்லை என்ற நிலை. இது ஒன்றும் அப்படிப்பட்ட பெரிய பிரச்னையாக இருவருக்குமே தோன்றவில்லை; விவாகரத்து பெறுவதற்காக அவர்கள் நீதிமன்ற வாசலில் மாதக் கணக்கில் காத்துக் கிடக்கவும் இல்லை. நீரிலிருந்து ஒரு குமிழ் அதன் மேற்பரப்பில் தோன்ற எவ்வளவு நேரமாகுமோ, அந்த சிறிய கால அளவுக்குள்ளேயே அவர்களுடைய திருமண பந்தமும் முடிவுக்கு வந்தது.

ஆனால் பல வருடங்களுக்குப் பிறகு பலரும் புகழக்கூடிய எழுத்தாளராக மாறிய அவரது அர்த்தம் பொருந்திய மவுனத்தின் மகத்துவத்தை அவள் அறிய நேரிட்டபோது காலம் கடந்து போய்விட்டது என்பதை மட்டும் அவளால் உணர முடிந்தது.

அதன்பிறகு அவர் புகழ்க் குன்றின் உச்சியை நோக்கி உயர்ந்து கொண்டேயிருந்தார். பெரிய பெரிய இடங்களிலிருந்தெல்லாம் அவருக்குப் பரிசுகளும், பாராட்டுக்களும், நன்கொடைகளும் வந்து குவிந்தவண்ணம் இருந்தன. எந்தப் பக்கம் பார்த்தாலும் அவரைப் பற்றிய பேச்சாகவே இருந்தது. இரண்டாவது மனைவி, குழந்தைகளுடன் காட்சியளிக்கும் அவருடைய புகைப்படங்கள் பத்திரிக்கைகளில் வந்ததைக் காண நேர்ந்த சமயங்களில் கௌரி பெருமூச்சுவிடுவாள். கடந்து போன எதை எதையோ நினைத்து அவள் ஏங்கினாள். ஏதோ விலை மதிக்க முடியாத ஒன்றை, தன் தவறு காரணமாக தான் இழந்து விட்டதற்காக வருந்துவாள்.

இத்தனை பெரிய உலகத்தில் அவளுக்கு சொந்தம் என்று உரிமையுடன் கூற யார் இருக்கிறார்கள்?  பெற்றோரும் இல்லை; குழந்தைகளும் இல்லை; கூடப் பிறந்த அண்ணன் - தம்பிகளும் இல்லை. இந்த உலகில் அவள் மட்டும் தனி. சொந்தம் என்று இத்தனை வருடங்களாக அவள் கர்வத்துடன் கட்டிக் காத்துக் கொண்டிருந்த இளமைகூட நாள் ஆக ஆக அழிந்து கொண்டே வந்தது. தன் வயதான காலத்தில் தன்னைப் பார்த்துக் கொள்ளப் போவது யார் என்ற கேள்வி அவளது உள்ளத்தின் அடித்தளத்தில் எழும் நேரங்களில் தன்னையும் மீறி அவள் அழ ஆரம்பித்து விடுவாள்.

உடலெங்கும் ஒரு வகையான தளர்ச்சி. அவளுடைய வாழ்க்கையில் இப்படியெல்லாம் நிகழ்ச்சிகள் நடந்ததற்கு அவள் மட்டுமே காரணம் இல்லை. எல்லாம் விதியின் விளையாட்டு என்றில்லாமல் வேறு எதைச் சொல்வது?

எஃகுக் கெட்டிலில் பாலையும் டம்ளரையும் கையில் எடுத்துக் கொண்டு வாசலுக்கு வந்த கௌரி தன் சேலைத் தலைப்பால் கவலை படர்ந்த தன் முகத்தைத் துடைத்துக் கொண்டாள்.

"ஸ்கூலுக்குப் போற நேரத்துல நான் வந்து டீச்சரைத் தொந்தரவு செய்றேன்னு நினைக்கிறேன்"

கடவுளே, இதுவா தொந்தரவு? இவர் ஏன் இப்படியெல்லாம் பேசுகிறார்? அவளுடைய உள்ளத்தை வேதனைப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடனேயே அவளைத் தேடி அவர் வந்திருக்கிறாரா? அல்லது எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு அவருடைய உள்ளத்தில் அவள் ஏற்படுத்திய வடுக்கள் முழுமையாக மறைந்து போய்விட்டன என்பதை அவளுக்கு அவர் காட்ட முயல்கிறாரா?

முகத்தில் சிரமப்பட்டு தெளிவை வரவழைத்துக் கொண்டு டம்ளரையும், கெட்டிலையும் அவருக்கு முன்னால் வைத்தபோது கௌரிக்குத் தன் கண்கள் இருண்டு கொண்டு வருவதைப் போல் தோன்றியது. ஒரு நிமிடத்தில் முகம் முழுவதும் வியர்வைத் துளிகள் அரும்பி விட்டன. சேலைத் தலைப்பால் அவற்றை அழுத்தித் துடைத்தாள் அவள்.

பாலைப் பருகி முடித்தவர் எழுந்து நின்றபடியே சொன்னார்: "ம்... ம்... ம்...  இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே பொறுத்துக்கிட்டு இருக்க முடியும்? நல்ல ஒரு டாக்டரைப் போய்ப் பார்க்கணும். அதுக்குப் பிறகு செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கு. தினமும் கஷ்டங்களுக்கு மத்தியில வாழும் என்னை மாதிரி ஏழை எழுத்தாளனுக்கு அரசாங்கம் ஏதாச்சும் மானியம் கீனியம் தருமோ என்னமோ... ம்.... கொஞ்சம் முயற்சி பண்ணித்தான் பார்ப்போமே!"

"எனக்கு ஸ்கூலுக்குப் போகணும்னு ஒண்ணும் அவசரமில்லை. அதிகமாப் போனா, ஒரு நாள் லீவு போட்டா போச்சு!" என்றாள் கௌரி.

அவள் கூறியதைக் கேட்காதது மாதிரி படிகளில் நின்றபடியே அவர் சொன்னார் : "விருது கிடைச்சிருக்கிற செய்தியைப் பேப்பர்ல தான் நான் தெரிஞ்சுக்கிட்டேன். அப்பவே நினைச்சேன், வந்து ஒரு வார்த்தை பாராட்டிட்டுப் போவோம்னு. என்ன இருந்தாலும் நாமெல்லாம் மனுஷப் பிறவிகளா பிறந்துட்டோம் பாருங்க. நாம ரெண்டு பேரும் இனி ஒரு நாள் இப்படி நேருக்கு நேரா சந்தித்துப் பேசுவோம்னு என்ன நிச்சயம்...?"

அதற்குப் பிறகும் அவர் என்னவோ பேசத்தான் நினைத்தார். ஆனால் பாழாய்ப் போன இருமல் அவரைப் பேச விட்டால்தானே! அதனால்தானோ என்னவோ, விடைபெறும் போதுகூட அவளிடம் கையால் ஆட்டிக் கொண்டுதான் அவரால் போக முடிந்ததே தவிர, வாயால் எதுவும் பேச முடியவில்லை.

ஒன்றுமே பேச முடியாமல் நடந்து போகும் அந்த வயோதிக உருவத்தையே, கண்களில் நீர் மல்க வீட்டின் முற்றத்தில் கற்சிலைபோல பார்த்தவாறு நின்றிருந்தாள் கௌரி டீச்சர்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.