Logo

காற்றினிலே வரும் கீதம்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 6496
Kattrinile Varum Geetam

"இங்க பாருங்க... நான் தான்... சுஹாசினி..."

'காற்றினிலே வரும் கீதம்' - அதில் தீவிரமாக மூழ்கிப் போயிருந்தேன். ராக்கிங் நாற்காலிக்குப் பக்கத்திலேயே ஸ்டீரியோ ரெக்காடிங் பிளேயர். இதில் எம்.எஸ். சுப்புலட்சுமி தன் இனிய குரலால் பாடிக் கொண்டிருந்தார். முன் பக்கம் நான்கு பிரம்பு நாற்காலிகள். வெள்ளை மணல் பரப்பிய மரத்தடி. சுற்றிலும் செடிகளும் கொடிகளும் மரங்களும் பல்வேறு வகைப்பட்ட பூக்களும் மலர்ந்து மணம் பரப்பிக் கொண்டிருக்கின்றன. நல்ல பகல் நேரம். ஒரே அமைதிச் சூழ்நிலை. பக்கத்து வீட்டில் ஆட்கள் இருக்கிறார்கள். கேட் வழியே வருபவர்களை இங்கிருந்து பார்க்க முடியாது. சாய்வு நாற்காலியில் சாய்ந்தவாறு பாட்டுக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். சுப்புலட்சுமியின் இளமைக் காலத்தில் அவர் பாடிய இனிமையான பாடல்-

"காற்றினிலே வரும் கீதம்..."

"இங்க பாருங்க... நான்தான்... சுஹாசினி..."

நான் பார்த்தேன். பார்ப்பதற்கு முன்பே... அருமையான வாசனை! பூக்களின் மணம் இல்லையே! பார்த்தேன்.

முடி "பாப்" செய்யப்பட்ட ஓர் அழகான இளம் பெண் - இளம் பெண்கூட இல்லை - இளம் சிட்டு. வனப்பான உடல் கட்டு. ஆரஞ்சு நிறத்தில் இறுக்கமாக அணிந்திருந்த ப்ளவுஸ், முழங்காலுக்கு மேலே நிற்கும் அடர்த்தியான நீல வர்ணத்தில் பாவாடை. வெளுப்பான - எடுப்பான தொடைகள். பாதங்களில் எதுவும் இல்லை. வெறுமையாக இருந்தன. இளம் சிட்டின் உடலில் நகை என்று எதுவுமே இல்லை. "பாப்" செய்யப்பட்ட அடர்த்தியான முடி, சற்று நீண்ட முகம். துடிப்பான, பிரகாசமான கண்கள்.

மொத்தத்தில் - எதிரில் நின்றிருந்த அந்த இளம்பெண்ணை கட்டிப்பிடித்து நெஞ்சோடு சேர்த்து முத்தம் கொடுக்க வேண்டும் போல் இருந்தது. ஒரு முத்தம் அல்ல. ஏகப்பட்ட முத்தங்கள். எல்லா இடங்களிலும். பாட்டின் ஒலியைக் குறைத்தேன்.

"பார்த்தேன்... உட்காரு சுஹாசினி."

சுஹாசினி உதடுகளில் மெல்லிய புன்னகையைத் தவழவிட்டவாறு என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

இரண்டு டம்ளர்களில் தேநீர் ஊற்றி, ஒன்றை சுஹாசினியிடம் கொடுத்தேன். சுஹாசினி தேநீரை அருந்தியவாறு, தங்கப் புன்சிரிப்புடன் என்னையே பார்த்தாள்.

"என்னைப் பற்றி என்ன நினைக்கிறீங்க?"

"நீ இப்போ என்ன செய்யிறே?"

"படிக்கிறேன் - காலேஜ்ல. நான் புரட்சியை விரும்புகிறேன். நக்ஸல் - அதைவிடப் பெரிய ஒரு புரட்சியை!"

"ரொம்ப சந்தோஷம். ஹெட் ஹண்டிங். மொத்தத்தில் நீ ஒரு தலை வேட்டைக்காரின்னு சொல்லு."

"தலையையும் வெட்டுவேன்."

"யாருடைய கழுத்தும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீலால ஆனது இல்லையே! வெட்டினால் யாரோட தலையும் தனியா கீழே விழத்தான் செய்யும். அழகான பொண்ணான உன்னோட ஆசையும் கட்டாயம் நிறைவேறும்."

"என் தலையை நீங்க வெட்டுவீங்களா?"- அழப்போகும் குரலில் கேட்டாள்.

"நான் ஒண்ணும் தலை வேட்டைக்காரன் இல்லியே! சுஹாசினி, உன்னை ஒண்ணு கேக்குறேன். ஆளை வெட்டிக் கொன்னுட்டு உன்னோட அழகான உள்ளங்கையை இரத்தத்துல முக்கி வெள்ளைச் சுவர்ல அதைப் பதிக்கணும்ன்ற ஆசை உனக்கு இருக்கா?"

"எனக்கு அப்படியெல்லாம் ஆசை கிடையாது."

"பிறகு என்ன ஆசை?"

"சொல்றேன். எனக்கொரு பூ தருவீங்களா?"

"முல்லை பூ... பிச்சிப் பூ... சாமந்திப் பூ... ரோஜாப் பூ... இதுல உனக்கு எந்தப் பூ வேணும் சுஹாசினி?"

"எனக்கு ஒரு சிவப்பு ரோஜாப் பூ வேணும். எந்திரிச்சிப் போய்ப் பறிச்சுக் கொண்டு வந்து எனக்குத் தரணும்."

"எனக்கே இலேசா மூச்சுவிடக் கஷ்டமா இருக்கு. ரெண்டடி நடந்தா நெஞ்சுல வலி வருது. மூச்சே நின்னுடும் போல இருக்கும். பிறகு ஒரு நிமிஷம் பலமா மூச்சை இழுத்து இழுத்துவிட்டு நார்மலுக்கு கொண்டு வரணும். பிறகு..."

"எனக்குத் தெரியும். கண்கள்ல காட்ராக்ட். மெதுவா எந்திரிச்சுப் போய் ஒரு பூ..."

மெல்ல எழுந்து சென்று ஒரு சிவப்பு ரோஜா மலரைப் பறித்துக் கொண்டு வந்து அதன் காம்பு சகிதமாக அவளிடம் நீட்டினேன்.

"அதுல முத்தத்தைப் பதிச்சிட்டுக் கொடுங்க."

முத்தத்தைப் பதித்துக் கொடுத்தேன். சுஹாசினி அதில் முத்தத்தைத் தந்து, ப்ளவுஸீக்குள் இரு மார்பகங்களுக்கும் இடையில் வைத்தாள். பிறகு என்ன நினைத்தாளோ, அதை எடுத்து என்னிடம் நீட்டினாள்.

"இன்னொரு தடவை அழுத்தி முத்தம் கொடுத்திட்டு தாங்க."

நானும் அவள் கேட்டுக் கொண்டபடி அழுத்தமாக முத்தத்தைப் பதித்து, மலரை அவள் கையில் தந்தேன். சுஹாசினியும் அழுத்தமான முத்தம் ஒன்றைப் பதித்து, அந்தப் பூவை இரண்டு மார்பகங்களுக்கும் நடுவில் ப்ளவுஸீக்குள் வைத்தாள்.

"நான் இந்தப் பூவை பத்திரமாக வச்சிருப்பேன்."

"எப்படி இருந்தாலும் வாடிப் போகுமே!"

"வாடத்தான் செய்யும். எனக்கு இஸ்லாம் மதம்னா ரொம்பவும் பிடிக்கும்."

"நல்லது. அந்த அளவுக்கு பிடிக்கிறதுக்குக் காரணம்?"

"எங்கள் வீட்டுக்குப் பக்கத்துல முஸ்லீம்கள் இருக்கிறாங்க. அவங்க அருமையா தயார் பண்ணி அப்பமும் கோழிக்கறியும் தருவாங்க. ரொட்டியும் இறைச்சியும் தருவாங்க. நான் அதை ரொம்ப விரும்பிச் சாப்பிடுவேன்."

"கிறிஸ்தவர்கள் கேக்கும் புட்டிங்கும் தருவாங்க. அப்போ...?"

"அவர்களுக்கு பிரியாணியும் இருக்கா? எனக்கு பிரியாணியும் தருவாங்க. அதுவும் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்."

"சுஹாசினி... உனக்கு இப்போ என்ன வயசு?"

"19. ஆனா... பாக்குறதுக்கு அப்படித் தோணுதா? சல்வார், கம்மீஸ், புடவைன்னு நிறைய வச்சிருக்கேன். சின்ன பொண்ணா தெரியணும்ன்றதுக்காக இந்த ட்ரெஸ்ஸைப் போட்டுட்டு வந்தேன்."

"வீட்ல யாரெல்லாம் இருக்காங்க?"

"அப்பா. பேங்க் மேனேஜர். அம்மா. வீட்டு வேலைகளைப் பாக்குறது அவங்கதான். தங்கச்சி படிக்கிறா. டெரஸ் பில்டிங். டி.வி, ரேடியோ எல்லாம் இருக்கு. கார் இருந்ததை வித்தாச்சு. புதிய ஒரு காருக்கு ஆர்டர் கொடுத்திருக்கு. அது வந்திருச்சுன்னா நான் இங்கே கார்லேயே வந்திடுவேன். வீட்டுக்குப் பக்கத்துல ஒரு மலை இருக்கு. நான் அதோட உச்சியில் போய் உட்காருவேன். எவ்வளவு அழகா இருக்கும் தெரியுமா? நாம அந்த மலை மேலே போய் ஒரு நாள் உட்காருவோம்!"

"என்னால மலை மேலே ஏற முடியாது!"

"பெரிய மலை ஒண்ணும் இல்ல. சின்ன குன்றுதான். நான் கையைப் பிடிச்சு ஏற வைக்கிறேன்!"

"கீழே விழுந்து செத்துப் போயிட்டேன்னு வச்சுக்கோ..."

"சும்மா இருங்க. நான் தாங்கிப் பிடிச்சுக்குவேன்!"

"சுஹாசினி, உங்க வீட்டோட பரப்பளவு எவ்வளவு?"

"ஒரு ஏக்கர். தென்னை மரங்கள், மாமரங்கள், பலா எல்லாமே அங்கே இருக்கு..."

"டி.வி. யில செய்தி வாசிக்கிற பொண்ணு தலைமுடியைப் "பாப்" செய்திருக்கிறதைப் பார்த்துத்தானே நீ முடியை "பாப்" வெட்டியிருக்கே?"

"அதெல்லாம் ஒண்ணுமில்லை... புரட்சி..."

"என்ன புரட்சி?"


"உண்மையிலேயே புரட்சிதான். அதாவது சரிநிகர் சமத்துவம்."

"அறிவு, அழகு, பலம் எல்லாமே சமத்துவமா இருந்தா உண்மையிலேயே நல்லதுதான். அதுக்கு முன்னாடி சுஹாசினி... உன்னைத் தூண்ல கட்டி வச்சுத் தொடையில 12 அடிகள் தரணும். அடிபட்ட இடத்துல மிளகையும் உப்பையும் அரைச்சுத் தேய்க்கணும்."

"பார்க்குறப்போ அந்த அளவுக்குக் கடின இதயம் உள்ள ஆளாத் தெரியலியே!"

"நான் ஒரு பாவப்பட்ட மனுஷன்"

"பிறகு எதற்கு என்னை அடிச்சுக் கொல்லணும்னு சொன்னீங்க?"

"உலகத்துல இருக்கிற எல்லோருக்கும் வீடும், உணவும், ஆடைகளும் வேணும். வாழ்க்கை மொத்தத்துல சமத்துவமாகவும் அழகாகவும் இருக்கும்னு சொல்ல முடியுமா என்ன? இந்தப் பெரிய பிரபஞ்சத்தில் எது சமத்துவம்? எது அழகு? சுஹாசினி, உன்னைப் போல பெண் உலகம் அழகானதா என்ன? கோணப் பார்வை உள்ளவளும், பல்லு நீண்டவளும், அழகில்லாத முகத்தைக் கொண்டவளும் இங்கு இருக்கத்தானே செய்கிறார்கள்!"

"அதையெல்லாம் சரி பண்ணிடலாமே! ப்ளாஸ்டிக் சர்ஜரி இருக்கே!"

"இருக்குல்ல... அறிவையும், பலத்தையும், அழகையும் ப்ளாஸ்டிக் சர்ஜரி மூலம்..."

"பயங்கரமான எண்ணம்..."

"நிச்சயமா. சர்வதேச அளவு கற்பனை இல்ல... சாதாரண கற்பனைதான்..."

"சரி... நான் போய் உங்க மனைவியைக் கொஞ்சம் பார்த்துட்டு வர்றேன். அவுங்க என்னைக் கொல்லுவாங்களா என்ன?"

சுஹாசினி உள்ளே போனாள். காற்றினிலே வரும் கீதத்தை மீண்டும் ஆரம்பத்திலிருந்து வைத்தேன். அது முடிந்தபோது சுஹாசினி வந்தாள்.

"அவங்க ரொம்ப நல்லவங்க.... எனக்குப் பிடிச்சுப் போச்சு. சாப்பாட்டுல உப்பு பார்க்கச் சொன்னாங்க. ஒரு துண்டு இறைச்சியையும் ஒரு துண்டு உருளைக்கிழங்கையும் தந்தாங்க. இறைச்சியையும் ரொட்டியையும் இங்கே கொண்டு வந்து தருவாங்க. எனக்கும் தருவாங்க. நல்லா சமைச்சிருக்காங்க."

"நீ ஒரு சாப்பாட்டுப் பிரியைன்னு தெரியுது!"

"நான் வயிற்றுக்கு வஞ்சகம் செய்யாதவ. அதே நேரத்துல நான் ஒரு இலக்கியவாதியும் கூட. நல்லா மேடை ஏறிப் பேசுவேன். என்னோட திறமைகள் எல்லாத்தையும் அவங்கக்கிட்டே சொன்னேன்."

"அப்போதான் உனக்கு உப்புப் பார்க்க தந்தாங்களா?" - நான் கேட்டேன்:" இலக்கியவாதின்னு சொன்னது...?"

"கவிதை எழுதுவேன். நிறைய எழுதி இருக்கேன். சிறுகதைகளும் நாவலும் எழுத எண்ணம் இருக்கு. என்னோட கவிதை - என்னோட காதலன்" என்று சொன்ன சுஹாசினி தலையைச் சாய்த்துப் புன்னகைத்தவாறு பார்த்தாள்.

"நான் ஒரு விஷயம் சொல்லட்டுமா? வெறும் சாதாரணக் காதல் இல்ல. படு அழகான காதல். அந்த அளவுக்கு உங்களைக் காதலிக்கிற அந்தப் பெண்ணை நீங்கள் கல்யாணம் பண்ணிப்பீங்களா? அந்தப் பெண்ணை மனைவியா ஆக்கிக்குவீங்களா?" - சுஹாசினி கேட்டாள்.

"அந்தப் பெண் யார்?"

"இதோ முன்னாடியே நிற்கிறேனே! நான் தான் - சுஹாசினி!"

அவள் சொன்னதைக் கேட்டு எனக்கு அதிர்ச்சி ஒன்றும் உண்டாகவில்லை. மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது. காற்றினிலே வந்த கீதம்! இதை 60 வருடத்திற்கு முன்னால் நான் கேட்டிருக்க வேண்டும். காற்றில் தவழ்ந்து வந்த இனிய கீதமே நமஸ்காரம்! கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு இடத்திலிருந்தே நீ வந்தாய். எங்கோ போகவும் போகிறாய். இந்த யாத்திரை சுகமான யாத்திரையாக அமையட்டும். சுஹாசினி, உன் இந்த யாத்திரை சுகமான ஒரு யாத்திரையாக அமையட்டும்.

"பிரியமுள்ள சுஹாசினி... உன் வயது பத்தொன்பது. எனக்கு வயது எண்பதுக்கு மேலே. உடல்ரீதியாகத் தளர்ந்தவன், நோயாளி... புரியுதா? எந்த நேரத்திலும் நான் இறக்கலாம். பிரியமான பெண்ணே, கருணை வடிவமான தெய்வம் எல்லா வசதிகளையும் தந்து உனக்கு அருள் புரியட்டும்."

அப்போது மனைவி இரண்டு பிளேட்டையும், ரொட்டியையும், இறைச்சியையும் எடுத்துக்கொண்டு வருகிறாள். தொடர்ந்து தண்ணீரும், தேநீரும்.

இரண்டு பிளேட்டுகளில் இறைச்சியை எடுத்து, ரொட்டியையும் வைத்து இரண்டு பேரும் சாப்பிட்டோம். தண்ணீர் குடித்தோம். கை கழுவினோம். தேநீர் அருந்தினோம். பாத்திரங்களை எடுத்துக் கொண்டு மனைவி போனாள்.

சுஹாசினி சொன்னாள்:

"எனக்கு ஒரு புத்தகம் தரணும்."

"கடிதம் தர்றேன். எல்லாப் புத்தகங்களையும் புத்தகக் கடைசியில் வாங்கிக்கோ- காசு எதுவும் இல்லாமல்."

"புத்தகங்கள் எல்லாம் என்கிட்ட இருக்கு. ஒரே ஒரு புத்தகத்தில "அன்புடன் சுஹாசினிக்கு"ன்னு எழுதி கையெழுத்துப் போட்டுத் தரணும்."

"அதே மாதிரி எழுதி புத்தகத்தைத் தபால்ல அனுப்பி வைக்கிறேன்."

"வேண்டாம். நான் வருவேன். வர்றப்போ உங்களுக்குப் பிடித்தமானது எதுவோ, அதை நான் கொண்டு வர்றேன்."

"சுஹாசினி... நீ இங்கே வந்தாலே போதும். வர்றதுக்கு முன்னாடி கார்டு போடணும்."

சுஹாசினியின் கண்களில் இருந்து இரண்டு துளி கண்ணீர் புறப்பட்டு வழிந்தது.

"நான் அவங்கக்கிட்ட சொல்லிட்டு வந்திர்றேன்."

சிறிது நேரத்தில் வந்து சொன்னாள்:

"சொல்லுங்க. உங்களுக்கு என்ன பிடிக்கும்? நான் வர்றப்போ கொண்டு வர்றேன்."

"சுஹாசினி அருகில் வந்து நின்றாள். அப்போது அவளை மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டு, ஆசை தீரும் வரை முத்தங்கள் தர வேண்டும் போல் இருந்தது.

வலது கையை சுஹாசினியின் தலையில் வைத்தவாறு சொன்னேன்:

"எல்லா வசதிகளையும் தந்து தெய்வம் உனக்கு அருள் செய்யட்டும், சுஹாசினி...!"

இரண்டு பாதங்களையும் தொட்டு தலையில் வைத்தவாறு "நான் வருவேன்" என்று கூறியவாறு புறப்பட்டாள் சுஹாசினி. அவளின் இனிய "கம கம" வாசனை!

"குஸர்கயா லோ எஸமானா கைஸா கைஸா” - பங்கஜ் மல்லிக்கின் இனிய குரல் காற்றில் தவழ்ந்து வந்தது.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.