Logo

ஆள் இல்லாத வீடு

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 6624
All Illadha Veedu

'நான் உறங்கிக் கொண்டிருக்கிறேன். நான் மிகவும் களைப்பாக இருக்கிறேன். தயவு செய்து என்னை யாரும் எழுப்ப வேண்டாம்' என்றொரு ஆச்சரியமான அறிவிப்பு, அடைக்கப்பட்டிருக்கும் ஜன்னலின் நீல நிறக் கதவில் சிவப்பு எழுத்துக்களில் எழுதப்பட்டிருப்பதை இப்போது கூடப் பார்க்கலாம்.

ஆனால், தட்டி எழுப்புவதற்கு அந்த வீட்டில் யார் இருக்கிறார்கள்?

பல வருடங்களாக அந்த வீட்டில் யாருமே வசிக்கவில்லை என்பதே உண்மை.

சொல்லப்போனால் தைரியமாக அந்த வீட்டில் வசிக்க யாருமே முன்வரவில்லை என்று சொல்வதுதான் பொருத்தமானதாக இருக்கும். வாசலில் புற்களும், காட்டுச் செடிகளும் வளர்ந்து மண்டிக் கிடக்கின்றன. வீட்டுச் சுவர்களின் நிறம் கூட மிகவும் மங்கிப்போய் விட்டது. வீடு முழுக்க சிலந்தி வலை பின்னிவிட்டிருக்கிறது. வீட்டிற்குள் ஒரே அமைதி நிலவுகிறதோ என்னவோ...வெளியில் ஒரு ஒலிகூடக் கேட்கவில்லை. பயத்தைவிட அந்த வீட்டைப் பார்க்கிறபோது ஒருவித மர்மமும், புரிந்து கொள்ள முடியாத புதிரும்தான் பார்ப்போர் மனதில் உண்டாகிறது. எத்தனையோ வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட - பிரமாண்டமான ஒரு பழைய தேவாலயத்தின் முன் நிற்கிற உணர்வுதான் அந்த வீட்டின் முன் நிற்கிறபோது ஒருவருக்கு உண்டாகும்.

அந்த ஆள் இல்லாத வீட்டைப் பற்றி ஏகப்பட்ட கதைகள் கூறப்படுவதுண்டு.

உலகப் புகழ்பெற்ற ஒரு பெரிய ஓவியன் அந்த வீட்டில் வாழ்ந்திருக்கிறான். அவனுடன் வேறு யாருமே இல்லை. வாழ்க்கை என்றால் என்ன என்று மனிதர்களுக்குச் சொல்லித் தருவதற்கென்றோ அல்லது வாழ்க்கை என்றால் என்ன என்பதைத் தன் அனுபவங்கள் மூலம் தெரிந்துகொண்டு கூறுவதற்காகவோ அவன் நிறைய ஓவியங்கள் வரைந்தான்.

ஓய்வு நேரங்களில் இசை கேட்டுக்கொண்டிருப்பது அவனுக்கு மிகவும் பிடிக்கும். யாரையாவது பாடச்சொல்லிக் கேட்பதற்கு அங்கு யாரும் இல்லையே! ஒரு கிராமஃபோன் அவனிடம் இருந்தது. அதோடு நிறைய நல்ல இசைத் தட்டுகளும்.

நள்ளிரவு நேரத்தில் கூட அந்த வீட்டிற்குள் இனிமையான இசையும், பாடல்களும் கேட்டுக்கொண்டிருக்கும்.

அந்தக் காலகட்டத்தில் அவன் உலகப் புகழ்பெற்ற ஓவியனாக இல்லை. இருந்தாலும்... அவனைப் பின் நாட்களில் உலகப் புகழ்பெற்ற மனிதனாக ஆக்கிய பல ஓவியங்களை அப்போதே அவன் வரைந்திருந்தான்.

அந்த ஓவியங்கள் அனைத்தும் அப்போது ஏன் உலகப்புகழ் பெற்றவையாக ஆகவில்லை? அதைப் பார்க்க வேண்டியவர்களும் உலகப்புகழ் பெற்ற பலரும்கூட அன்றே அவற்றைப் பார்த்திருக்கிறார்கள் என்பதே உண்மை.

ஆனால், அப்போது அவர்கள் செய்தது என்ன? அந்த ஓவியங்களைப் பாராட்டுவதை விட குற்றமும், குறையும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். என்ன குற்றம், என்ன குறை என்று அவர்களுக்கே தெரியாது. ஒரு வேளை புதிய எண்ணங்களைப் பற்றியும், புதிய கலை வெளிப்பாடுகள் பற்றியும், புதிய கலை வடிவங்கள் குறித்தும் அவர்கள் கொண்ட பயம் அதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். பழையவை எப்போதுமே மக்களின் முழுமையான வரவேற்பைப் பெற்றவையாக இருக்கும். புதிய முயற்சிகள் மீது அப்படி என்ன விரோதமும், நம்பிக்கை இல்லாமையும்!

மக்கள் குற்றப்படுத்தினார்கள். எதிர்க்கருத்துக்கள் சொன்னார்கள். படைப்புகளைப் பற்றி மட்டுமல்ல-படைத்தவனையும். அவனால் எப்போதும் அமைதியாகவே இருக்க முடியவில்லை. இரவும் பகலும் அவனுக்குள் ஒரே போராட்டம்தான். கூட்டம் கூட்டமாக மக்கள் பைத்தியம் பிடித்த மாதிரி அவனைப் பற்றி என்னென்னவோ கூறிக்கொண்டிருந்தார்கள். பத்திரிகைகள், மத நிறுவனங்கள், அரசியல் இயக்கங்கள்- எல்லாமே அவனைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லின. அந்த ஓவியனை ஒரு பேய் என்றார்கள்! கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள், அந்த நம்பிக்கை இல்லாதவர்கள்- எல்லோரும் கூக்குரலிட்டனர்.

வாழ்க்கை மீது கொண்டிருக்கும் நம்பிக்கைக்கு அவன் உலை வைக்கிறான்! அன்றாட மனித வாழ்க்கைக்கு எதிராக அவன் ஆயுதம் தூக்குகிறான்! சமூகத்திற்கு எதிராக அவன் நிற்கிறான்! - அவன் மீது அவர்கள் கூறிய குற்றச்சாட்டுகள் இவை!

அவர்கள் கூறிய இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் கேட்டு அந்த ஓவியன் தனக்குள் சிரித்துக்கொண்டான். அவனுக்கு விளையாடிப்பார்ப்பது என்றால் மிகவும் பிடிக்கும். இருந்தாலும் விருந்தினர்கள் வருவதை அவன் பொதுவாக விரும்புவதில்லை.

இந்த விவரங்கள் அனைத்தையும் அந்த ஓவியன் தனக்கு மிகவும் பிடித்தமான அந்தக் கவிஞரிடம் கூற, கவிஞர் தான் எழுதிய அந்த ஓவியனின் வாழ்க்கைச் சரித்திரத்தில் எல்லாவற்றையும் எழுதி இருக்கிறார். ஒருநாள் அந்தக் கவிஞரிடம் ஓவியன் சொன்னான்:

"அந்த ஜன்னலில் எழுதப்பட்டிருக்கிற வாசகங்களைப் பற்றி எதுவும் நினைக்க வேண்டாம். மனிதர்களைப் பார்த்தாலே எனக்கு என்னவோ போல் இருக்கு. மூச்சே அடைப்பது போல் இருக்கு. வாசல் கதவையும், ஜன்னலையும் பூட்டி வச்சாக்கூட... உள்ளேயிருந்து பாட்டு கேட்கலைன்னாகூட நான் வீட்டுக்குள்ளதான் இருப்பேன். ஒரு பேனாக் கத்தியை உள்ளே விட்டு ஜன்னலோட தாழ்ப்பாளை விலக்கி உங்க விருப்பப்படி நீங்க உள்ளே வரலாம்!"

அதன்படி அந்தக் கவிஞர் இரவு நேரமாக இருந்தாலும் பகல் நேரமாக இருந்தாலும் எந்த நேரத்திலும் தன் விருப்பப்படி உள்ளே புகுந்து அந்த ஓவியனுடன் பேசிக்கொண்டிருப்பார்.

அந்த ஓவியனுடைய வாழ்க்கையை ஒட்டித்தான் கவிஞரின் வாழ்க்கையும் இருந்தது.

எல்லா விவரங்களையும் மிக மிகத் தெளிவாகத் தான் எழுதிய நூலில் எழுதியிருந்தார் கவிஞர். கடைசியாக அவர் கூறியிருந்த ஒரு சம்பவம் உண்மையிலேயே பயங்கரமான ஒன்றுதான்.

அந்த ஆள் இல்லாத வீட்டிலிருந்து தூரத்தில் நடந்த இன்னொரு விஷயம் இது-

2

ந்த ஓவியன் உலகத்தைப் பார்த்து தனக்குத்தானே சிரித்துக் கொண்டிருந்தான். அவனல்ல. அவனின் ஒரு பெரிய சிலை. நகரத்தின் மையத்தில் இருக்கும் ஒரு பூங்காவில் அது இருந்தது.

அந்த சிலை அப்படித்தான் அமைக்கப்பட்டிருந்தது. தலையில் வெள்ளை நிறத்தில் என்னவோ ஒழுகி காய்ந்து கிடந்தது. பறவைகள் பறந்துவந்து எப்போதும் ஓவியனின் தலையில் உட்காருவதுண்டு.

அதைப் பார்க்கிறபோது தன்னையும் மீறி அந்தக் கவிஞருக்கு சிரிப்புத்தான் வரும்.

அந்த ஊர்க்காரர்கள் அமைத்த சிலையே அது.

அதைப் பற்றி அந்த ஓவியனின் வாழ்க்கை  வரலாற்றில் இப்படி எழுதி இருக்கிறார் அந்தக் கவிஞர்:

'இல்லாமற்போவது என்பது ஒரு அசாதாரண விஷயமல்ல. அதை ஒரு பிரிவு என்றும் கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது. நான் மறைந்தால்... அந்த இழப்பை ஈடுகட்டி விட முடியுமா? 'நான்' என்று நான் இங்கு குறிப்பிடுவது என்னைப் பற்றி அல்ல. மனித சமுதாயத்தின் ஆரம்பம் முதல் இப்போதிருக்கும் உங்கள் வரை இருக்கும் 'நான்' இருக்கிறதல்லவா? அதைச் சொல்லுகிறேன். உதாரணத்திற்கு - உங்களையே எடுத்துக் கொள்ளுங்கள்.


உங்களின் கதைதான் இது என்று எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஒரு கவிஞனாக இருக்கலாம். இல்லாவிட்டால் ஒரு ஓவியனாக இருக்கலாம். அதுவும் இல்லாவிட்டால் ஒரு அரசியல் சிந்தனையாளனாக இருக்கலாம். இல்லாவிட்டால் நீங்கள் ஒரு பாடகனாக இருக்கலாம். அதுவும் வேண்டாம். நீங்கள் வயதான ஒரு பத்திரிக்கையாளனாக இருக்கலாம். எது வேண்டுமானாலும் இருக்கட்டும். நீங்கள் மக்களுடன் ஒருவராக இருக்கிறீர்கள். மக்களுக்காக உங்களின் திறமையைப் பயன்படுத்தி இருக்கிறீர்கள்.

ஆனால், நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்ற சமயத்தில் உங்களிடம் நல்ல வார்த்தைகள் பேச இங்கு ஆள் இல்லை என்பதே உண்மை. சரி அதுவும் போகட்டும். பாராட்டுவதற்கு அவர்களுக்கு நேரமில்லை என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். ஆனால், உங்களை வேதனைப்படுத்துவதற்கு மட்டும் அவர்களுக்கு நேரம் இருக்கிறது. உங்களைக் கண்டபடி திட்டிப் பேசுவதற்கு அவர்களுக்கு நேரம் இருக்கிறது. சொல்லப்போனால் - மக்கள் எல்லோருமே உங்களுக்கு எதிராக இருக்கிறார்கள்.

ஆனால், நீங்கள் பட்டினி கிடக்கிறீர்கள். பட்டினி கிடந்தவாறு நீங்கள் இரவும், பகலும் வேலை செய்கிறீர்கள். சாப்பிட ஒன்றுமே இல்லை என்கிற நிலை வருகிறபோது, பச்சைத் தண்ணீரைக் குடித்து வயிறை நிரப்பிக்கொண்டு நீங்கள் கிராமஃபோனில் பாட்டைக் கேட்டுக்கொண்டே ஆனந்தமடைந்து கொண்டிருக்கிறீர்கள்.

அப்போதும் நாடு முழுக்க உங்களைப் பற்றித்தான் பேச்சாக இருக்கிறது. எல்லாப் பத்திரிகைகளும் உங்களைப் பற்றி எழுதுகின்றன. எல்லா மேடைகளிலும் உங்களைப் பற்றித்தான் எல்லோரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் உங்களுக்கு எதிராகத் திரண்டு நிற்கிறார்கள். கடவுள் இருக்கிறது என்று கூறுபவர்களும் உங்களை எதிர்க்கிறார்கள். கடவுள் இல்லை என்று பேசுபவர்களும் உங்களுக்கு எதிராகவே இருக்கிறார்கள். உங்களைப் பற்றி அவர்கள் ஒவ்வொருவரும் எவ்வளவு மோசமாக அபிப்ராயம் கூற முடியுமோ, அந்த அளவுக்கு கருத்து தெரிவிக்கிறார்கள். கெட்ட பழக்கங்கள் உடையவர், பெண்களிடம் சல்லாபம் புரிபவர், மது மயக்கத்தில் சிக்குண்டவர் - இப்படி உங்களைப் பற்றி எத்தனையோ குற்றச்சாட்டுகள். மொத்தத்தில் அவர்கள் பார்வையில் - நீங்கள் ஒரு சமூக விரோதி!

அவர்கள் சொல்வதை எல்லாம் ஏற்றுக்கொண்டு நீங்கள் பட்டினி கிடந்து ஒரு இரவிலோ பகலிலோ வெறுமனே யாருக்குமே தெரியாமல் செத்துப்போகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதோடு உங்களின் எல்லா கஷ்டங்களும் தீர்ந்துவிட்டன என்றுதானே நீங்கள் நினைக்கிறீர்கள்! அப்படி நீங்கள் நினைப்பதுதான் தவறு. உங்களிடம் கஷ்டம் எதுவுமே தீராது. ஆர்ப்பாட்டம்... ஓட்டம்... சாடுதல்... பொதுக்கூட்டம்... எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும், எல்லா பத்திரிகையாளர்களும், எல்லா அரசியல் இயக்கங்களும், கடவுள் நம்பிக்கை கொண்டவர்களும், நம்பிக்கை இல்லாதவர்களும்... எல்லோரும் ஒன்றுசேர்ந்து கூப்பாடு போடுவார்கள்...கதறுவார்கள்...நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுவார்கள்.

"அய்யோ...! போயிட்டீங்களே!... எங்களைத் தவிக்கவிட்டுப் போயிட்டீங்களே!"

இப்படியே கொஞ்ச நாட்கள் ஓடும். அதற்குப் பிறகு உங்களை நினைவு கூர்ந்து ஞாபகச் சின்னங்கள் எழுப்புவார்கள். கூட்டங்கள் நடத்துவார்கள்... உங்களை நினைவுபடுத்தும் விதமாகப் பாடுவார்கள். கவிதைகள் இயற்றிப் படிப்பார்கள்.

இவர்கள் பேசுவதையும், பாடுவதையும் கேட்டால் அல்லது படித்தால் நீங்கள் இந்த உலகத்தில் மக்களுடன் வாழ்ந்த ஒரு மனிதன்தான் என்ற எண்ணமே உண்டாகாது.

அதோடு அவர்களின் வேலைகள் நிற்காது. உங்களின் போதாத காலம் என்றுதான் சொல்ல வேண்டும்! வாசகசாலைகள், அகாடமிகள், சாலைகள், ஹோட்டல்கள், சந்தைகள், பஸ்கள், நாடகக் கொட்டகைகள், பூங்காக்கள் - எல்லாவற்றுக்கும் உங்களின் பெயரை வைப்பார்கள். 'உங்கள்' முகவரி பூங்கா! 'உங்கள்' முகவரி சந்தை!

அதோடு உங்களின் கஷ்ட காலம் முடிகிறதா என்ன? உங்களின் சிலைகள் உருவாக ஆரம்பிக்கின்றன. நான்கு சாலைகள் சந்திக்கின்ற இடங்களில்...பூங்காக்களில்... காற்றையும், மழையையும், வெயிலையும் தாங்கிக்கொண்டு நீங்கள் வெறுமனே சிலைவடிவில் வாடி, வதங்கிப்போய் நின்றுகொண்டிருக்க வேண்டும். பறவைகளின் நிரந்தரக் கழிப்பிடம் உங்களின் தலைதான்!

உலகமே! எதற்கு இந்த காதல்மயமான முட்டாள்தனங்கள்! எதற்கு இந்த ஜீரணிக்க முடியாத பொய்த் தனங்கள்!

ஓ...இதையெல்லாம் நினைத்துப் பார்க்கிறபோது உங்களுக்குச் சிரிக்க வேண்டும்போல் இருக்கிறது அல்லவா? ஒரு வேளை - நான் நினைக்கிறேன், இதையெல்லாம் நினைத்துப் பார்த்துத்தான் நமது பூங்காவில் நின்று கொண்டிருக்கும் சாதனைச் சிற்பியான அந்த ஓவியனின் சிலை புன்னகை சிந்திக் கொண்டிருக்கிறதோ என்று.

அதோடு விஷயம் முடிந்துவிடவில்லை. அந்தக் காட்சியைக் கவிஞர் பார்த்தது ஓவியனின் வீட்டில்தான்.

3

ப்போது அது ஆள் இல்லாத வீடல்ல. முற்றத்தில் புற்களும், காட்டுச் செடிகளும் வளர்ந்திருக்கவில்லை. பயத்தின் அல்லது அழிவின் அடையாளம் எதுவும் அங்கு ஆக்கிரமித்திருக்கவில்லை. பாராட்டிப் பேசவோ அல்லது எதிர்வாதம் புரியவோ பலரும் அங்கு வந்துகொண்டிருப்பார்கள். இல்லாவிட்டால் அங்கு நிலவும் மயான அமைதியைக் கிழித்துக் கொண்டு இனிய இசை முழங்கிக்கொண்டிருக்கும்.

இப்படிக் காலம் படு வேகமாக ஓடிக் கொண்டிருந்தது.

ஒரு இரவு, அந்த வீடு இருளில் மூழ்கிப்போய் இருந்தது. வாசல் கதவுகள், ஜன்னல்கள் எல்லாமே அடைக்கப்பட்டிருந்தன். ஒரு சிறு அசைவு கூட இல்லை. இருந்தாலும், அந்த ஓவியன் வீட்டிற்குள்தான் இருக்கிறான் - விளக்கு உள்ளே எரிந்து கொண்டிருக்கிறது என்பதெல்லாம் அந்தக் கவிஞருக்கு நன்றாகவே தெரியும்.

ஜன்னல் கதவின் இடுக்கு வழியே பார்த்தபோது உள்ளே விளக்கு எரிந்து கொண்டிருப்பது நன்றாகவே தெரிந்தது.

அவன் உள்ளே ஓவியம் வரைந்து கொண்டிருப்பான். கவிஞர் சிந்தித்தார் - எதற்கு வீணாக அவனைத் தொந்தரவு செய்ய வேண்டும்? தான் புதிதாக எழுதிய கவிதை நூலை வாசல் கதவு அருகில் வைக்கப்பட்டிருந்த தபால் பெட்டியில் - நன்றாக வெளியே இருந்து பார்க்கத்தக்க விதத்தில் வைத்துவிட்டு அந்தக் கவிஞர் கிளம்பினார்.

இது நடந்து கிட்டத்தட்ட இருபத்து ஒன்றோ அல்லது இருபத்து இரண்டோ நாட்கள் ஆகிவிட்டன!

அதுவும் ஒரு இரவுதான். கவிஞர் அந்த வீட்டிற்கு வந்தார். அன்று அவர் வரும்போது இரவு வெகு நேரமாகி இருந்தது. அன்று இரவு அங்கேயே - ஓவியனுடன் தங்கிவிட  வேண்டியதுதான் என்ற தீர்மானத்துடன் வந்திருந்தார் கவிஞர்.

ஆனால், அங்கே போனபோது ஒரே மயான அமைதி! கையில் இருந்த எலெக்ட்ரிக் விளக்கை எரிய விட்டவாறு அவர் வராந்தாவில் ஏறினார். தபால் பெட்டியில் கடிதங்கள் நிறைந்து, வெளியேயும் சிதறிக் கிடந்தன. கவிஞர் முன்பு வைத்து விட்டுப்போன கவிதை நூல் இப்போதும் அதே பெட்டியில் அப்படியே இருந்தது.

அவர் விளக்கை அணைத்துவிட்டு, அங்கேயே நின்றார். இரண்டு முறை ஓவியனின் பெயரை சொல்லி அழைத்தார். வாசல் கதவைத் தட்டினார். ஜன்னல் இடுக்கு வழியே உள்ளே பார்த்தார்.

உள்ளே -

விளக்கு எரிந்து கொண்டிருந்தது.


அறைக்குள் சில அசைவுகளும், ஒலிகளும் கேட்டன. எதையுமே கவிஞரால் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர் மனதில் இலேசாக சந்தேகம் உருவெடுத்தது. கொஞ்சம் மனதில் கலவரமும் உண்டானது. அவர் பேனாக் கத்தியை ஜன்னல் இடுக்கு வழியே நுழைத்து ஒரு பக்க கதவைக் திறந்தார். உள்ளே தாங்க முடியாத நாற்றம்! அப்போதும் அந்த விளக்கு வெளிச்சம் அங்கு இருக்கவே செய்தது. எலிகள் 'கீச் கீச்' சென்று கத்தியவாறு இங்குமங்குமாய் ஓடின.

மேஜை மேல் கிராமஃபோன் திறந்தே கிடந்தது. அதில் ஒரு இசைத்தட்டும் இருந்தது. அந்த இசைத்தட்டின் இறுதியில் ஒலிப்பேழையின் ஊசி நின்று கொண்டிருந்தது. ஒரே நொடியில் கவிஞர் கவனித்த விஷயங்கள் இவை.

அறையில் மத்தியில் மேலே மின்சார பல்பு எரிந்து கொண்டிருந்தது. ஓவியன் எப்போதும் படுக்கும் படுக்கையைக் கவிஞர் பார்த்தார். அடுத்த நிமிடம் - பயந்து விறைத்துப்போய் ' அய்யோ!' என்று அவர் கத்தினார்.

படுக்கையில், கால் நீட்டியவாறு படுத்துக் கிடந்தது ஒரு எலும்புக்கூடு!

அப்போதும் அந்த ஜன்னலின் நீல நிறக் கதவில் சிவப்பு எழுத்துக்களால் எழுதப்பட்டிருந்த அந்த வாசகம் விளக்கொளியில் நன்கு தெரியவே செய்தது:

'நான் உறங்கிக் கொண்டிருக்கிறேன். நான் மிகவும் களைப்பாக இருக்கிறேன். தயவு செய்து என்னை யாரும் எழுப்ப வேண்டாம்.'

சுபம்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.