Logo

ஒரு கிறிஸ்துமஸ் கதை

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 6811
oru christhumas kathai

சித்தார்த்தனும் பத்ரோஸும் சேர்ந்து அம்மிணி என்ற விபச்சாரியை ஒரு லாட்ஜ் அறைக்கு அழைத்துக்கொண்டு வந்தார்கள். அடுத்த அறையில் உள்ளவர்கள் அவளை பயன்படுத்திவிட்டு வெளியே அனுப்பிய பிறகு, வராந்தாவில் அவளைப் பார்த்தான் சித்தார்த்தன்.

"எனக்கு பிராந்தியும் பிரியாணியும் வேணும்"- அவள் சொன்னாள். சொன்ன மறுகணமே சித்தார்த்தனின் கட்டில் மேல் ஏறி போர்வையை இழுத்துப் போர்த்தி கண்களை மூடி படுத்துக் கொண்டாள்.

சித்தார்த்தனும் பத்ரோஸும் சில நிமிடங்கள் அவளையே பார்த்துக் கொண்டிருந்தனர். பத்ரோஸ் பிராந்தியும் சாப்பாடும் வாங்கப் போனவுடன், சித்தார்த்தன் மெதுவாக போர்வையை நீக்கி அவளைப் பார்த்தான்.

பிராந்தி குடித்து, பிரியாணியும் சாப்பிட்டு முடித்தபிறகு, அவள் மீண்டும் கட்டிலில் போய் போர்வையை மூடி படுத்துக்கொண்டாள். சித்தார்த்தனும் பத்ரோஸும் பிராந்தியின் போதையில் இலேசாகத் தலையை ஆட்டியவாறு அவளையே பார்த்தார்கள். பத்ரோஸ் அவளை மெல்லத் தொட்டு அழைத்தான்: "நீ என்ன, இங்க உறங்குறதுக்கா வந்தே? நாங்க ரெண்டுபேரும் உன்னைச் சும்மா வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்கவா இருக்கோம்?"

அம்மிணி சுவரைப் பார்த்தவாறு திரும்பிப் படுத்தாள். சித்தார்த்தன் சொன்னான்: "இவள் நம்மள ஏமாத்திட்டா." அம்மிணி சுவரைப் பார்த்தவாறு சொன்னாள்: "நான் இதுவரை யாரையும் ஏமாத்தினது இல்ல. சொல்லப்போனா நான் சரியா தூங்கி ரெண்டு நாட்களாச்சு. என்னோட கஷ்டமும், கவலையும் உங்களுக்குத் தெரியணும்னு அவசியம் இல்ல... நான் கொஞ்சம் முதல்ல உறங்கிக்கிறேன்..."

"உனக்கு அவ்வளவு களைப்பா இருந்துச்சுன்னா, நாங்களும் கொஞ்ச நேரம் உறங்குறோம்"-என்று சொல்லியவாறு பத்ரோஸும் சித்தார்த்தனும் அடுத்த கட்டிலில் ஏறி படுத்துத் தூங்க ஆரம்பித்தார்கள். சாயங்காலம் ஆன பிறகுதான் அவர்கள் உறக்கம் நீங்கி எழுந்தார்கள். அப்போது அம்மிணி கட்டிலில் அமர்ந்து தலைமுடியை வாரிக் கொண்டிருந்தாள். அவளின் உதடுகள் ஏதோ ஒரு சினிமா பாட்டை முணுமுணுத்துக் கொண்டிருந்தன.

"என்ன, உன் உறக்கம் போயிடுச்சா?"- பத்ரோஸ் கேட்டான். சித்தார்த்தன் அவள் பாட்டு பாடுவதைக் கேட்டுக்கொண்டிருந்தான்.  "ஒரு கிண்ணம் சந்தனம் கொண்டு நடக்கும் வெண்ணிலாவே!" -என்றவள் மெதுவான குரலில் பாடினாள். அதற்கு அடுத்த இரண்டு வரிகளை சித்தார்த்தன் தன் மனதிற்குள் பாடினான். அந்தப் பாட்டு அவனுக்கு மிகவும் பிடித்த ஒன்று.

பிறகு... ஒரு ஆள் வெளியே நாற்காலியில் அமர்ந்து தெருவைப் பார்த்துக்கொண்டிருக்க, இன்னொருவன் அம்மிணியுடன் உடல் உறவு கொண்டான். சித்தார்த்தனுக்கு என்ன காரணத்தாலோ மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.

இரவு சாப்பாடு நேரம் ஆனபோது, பத்ரோஸ் மீண்டும் போய் பிராந்தியும் பிரியாணியும் வாங்கிக்கொண்டு வந்தான். குடியும் சாப்பாடும் முடிந்ததும், அம்மிணி ஒரு நாற்காலியில் அமர்ந்து கட்டில்மேல் கால் நீட்டி வைத்தவாறு சொன்னாள்: "எனக்கு தூக்கம் வரமாட்டேங்குது. என்னோட கவலை என்னன்னு நீங்களும் தெரிஞ்சுக்க வேண்டாமா? ஒரு தேவடியாளோட வாழ்க்கைன்னா அது எப்படி இருக்கும்? என் விஷயத்தையே எடுத்துக்கோங்களேன். எனக்கு புருஷனும் ரெண்டு குழந்தைகளும் இருக்காங்க. அப்பாவும், அம்மாவும், அண்ணன்மார்களும், அக்கா தங்கைமார்களும், மாமாக்களும், அத்தைகளும்- எல்லாருமே இருக்காங்க. நான் ஒரு விபச்சாரி. அப்படின்னா இதன் அர்த்தம் என்ன? எங்கோ இருந்து வந்த நான் உங்களோட கட்டில்ல படுத்துக்கிடக்கேன்னா, நீங்களும் என்னைப் பார்த்து கேட்கணும்ல இதன் அர்த்தம் என்னன்னு! நான் இப்போ தேவடியாளா இல்லாமலிருந்தா, வேறு என்னவா இருப்பேன்? எனக்கு இது புரியவே இல்ல... நான் உண்மையில் என்ன? மனைவியா, மகளா, அம்மாவா, தங்கச்சியா, அக்காவா, காதலியா, விபச்சாரியா?"

சித்தார்த்தன் அம்மிணியின் பாதங்களை இரு கைகளாலும் இறுகப் பிடித்தவாறு சொன்னான்: "உன்னைப் பார்க்குறப்போ உண்மையிலேயே பாவமா இருக்கு. ஆமா... உன்னோட பேரு என்ன?"

"என் பேரை இப்போ நீங்க தெரிஞ்சு என்ன ஆகப்போகுது? என்னோட பேரு-  விபச்சாரி. என்னோட வேலை ஆண்களை வசீகரிக்கிறது..."- அம்மிணி இதைச் சொல்லிவிட்டு தேம்பித் தேம்பி அழுதாள்: "இப்பத்தான் என் பேரை உங்களுக்குக் கேட்கணும்னு தோணிச்சா? இவ்வளவு நேரம் நீங்க யார்கூட பேசிக்கிட்டு இருந்தீங்க? இவ்வளவு நேரமா யார்கூட நீங்க படுத்துக் கிடந்தீங்க?"

சித்தார்த்தனும் பத்ரோஸும் குற்ற உணர்வு குடிகொள்ள கூறினார்கள்: "சரி... மன்னிச்சுக்கோ. உன்னை எங்களுக்கு ரொம்பவும் பிடிச்சிருக்கு. நீ இன்னைக்கும் நாளைக்கும் கூட இங்கே தங்கிட்டுப்போகலாம். நாங்க உனக்கு எந்தத் தொந்தரவும் தரமாட்டோம்."

"அப்படின்னா முதல்ல என்னோட கதையைக் கேளுங்க. என்னோட காதலன் ஒரு வேளை இங்கே என்னைத் தேடி வந்தாலும் வரலாம். என் புருஷன் கூட என்னை இங்கே தேடி வரலாம். என்னோட அப்பாவோ, அம்மாவோ என்னைத் தேடி வரமாட்டாங்க. அப்படி ஒரு சூழ்நிலை வந்தா நீங்க என்ன செய்வீங்க? ஆச்சரியப்படாம இருக்கணும்னா என்னோட முழு கதையையும் கேளுங்க. நான் விபச்சாரியா ஆனதே என்னோட புருஷன் சொல்லித்தான். அந்த ஆளுக்கு தண்ணி போட பணம் வேணும். இன்னொரு பொம்பளையை வைப்பாட்டியா வச்சிருக்கவும் அவனுக்கு அதிக பணம் தேவைப்பட்டதுன்னு பின்னாடிதான் எனக்கே தெரிய வந்துச்சு. என் புருஷன் கூட்டிக்கிட்டு வந்த ஆளுங்ககூட நான் படுப்பேன். அந்தச் சமயத்துல அவன் திண்ணையில உட்கார்ந்து, பீடி பிடிச்சிக்கிட்டு இருப்பான். கொஞ்ச நேரத்துல ரூபாய்களை எண்ணுவான். நானும் அவனும் தனியா இருக்குறப்போ என்னை எல்லா இடங்கள்லயும் தொட்டும், மோந்தும் பார்ப்பான். நான் பாதி ராத்திரி ஆனாக்கூட, குளிச்சிட்டு என் குழந்தைகள் கூட போய்ப் படுத்துக்குவேன். என் புருஷனை அப்பவும் எனக்குப் பிடிக்கும். அதுக்குக் காரணம் என்ன? புருஷன்னா என்ன? எதுக்காக நான் அந்த ஆளை விரும்பணும்? அந்த ஆளு எனக்குத் தந்த குழந்தைகள்மேல எனக்கு விருப்பம் இருந்ததால, அவன் மேலயும் அது தொடர்ந்திருக்குமோ? இல்லாட்டி ஒரு காலத்துல என்னை மனப்பூர்வமா பிரியப்பட்ட மனிதன்னு என் மனசுல நினைச்சதால இருக்குமோ? அவனோட பணம் எண்ணும் பழக்கமும், மோந்து பார்க்குறதும் எனக்கே வெறுப்பு தந்தபிறகு, எனக்கு ஒரு காதலன் கிடைச்சான். அவன் ஒரு டிரைவர். பிராந்தியும் பிரியாணியும் வாங்கிட்டு வருவான். என் பிள்ளைகளுக்கு நல்ல ஆடைகளும் விளையாட்டுப் பொருள்களும் வாங்கிட்டு வருவான். பசங்களைப் பள்ளிக்கூடத்துல கொண்டு போய் விடுவான். என்னை லாரியில அவனுக்குப் பக்கத்துல உட்கார வச்சுக்கிட்டு, எம்.ஸி.ரோட்ல படுவேகமா போவான். என்னை படம் பார்க்க கூட்டிட்டுப் போவான். என்னோட வாழ்க்கையிலேயே முதல் தடவையா எனக்கு முத்தம் தந்தது அவன்தான்.


உங்களுக்குத் தெரியுமா?"- அம்மிணி வேகமாக எழுந்து நின்றுகொண்டு கேட்டாள்: "நான் இன்னைக்கு முழுவதும் உங்ககூட இருந்திருக்கேன். உங்க ரெண்டு பேர்ல யாராவது எனக்கு முத்தம் தந்தீங்களா? எனக்கு உதடுகள் இருந்தாலும் உங்களுக்கு அதைப் பற்றிய ஞாபகம் இருந்துச்சா? எனக்கு முத்தம் தர்றதுன்னா ரொம்பவும் பிடிக்கும்."

சித்தார்த்தனும், பத்ரோஸும் ஒருவகை குற்ற உணர்வுடன் சுவரையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். சித்தார்த்தன் சொன்னான்: "எங்களுக்கும் யாரும் இதுவரை முத்தம் தந்தது இல்ல... நாங்க போயி இன்னும் கொஞ்சம் பிராந்தியும் பிரியாணியும் வாங்கிட்டு வர்றோம். நீ எங்களுக்கு முத்தம் தருவியா?"

அம்மிணி வேகமாக நடந்து சென்று இரண்டு பேரின் நெற்றியிலும் உதட்டைப் பதித்து முத்தம் தந்தாள். "பிள்ளைகளுக்கு இது போதும்"- அவள் சொன்னாள்.

"நாங்க பிள்ளைங்க இல்ல..." - பத்ரோஸ் சொன்னான்: "நீ எங்கக்கிட்ட விளையாட வேண்டாம். அம்மா முத்தம் தர்ற மாதிரி இருந்துச்சு நீ தந்தது."

"அப்போ நீங்க சொன்னது பொய்" - அம்மிணி அவர்களுக்கு அருகில் சென்று அவர்கள் இருவரின் முகங்களையும், இலேசாகத் தடித்திருந்த தன்னுடைய வயிற்றின் மேல் வைத்தவாறு சொன்னாள்: "உங்களோட அம்மாமார்களாவது உங்களுக்கு முத்தம் தந்திருக்காங்கள்ல? நானும் உங்களுக்கு அம்மாதான். உங்களோட தம்பிப் பயலோட இதயத் துடிப்பை நீங்க கேக்குறீங்களா?"

அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு அம்மிணியின் கைகளில் இருந்து தங்களின் தலைகளை வெளியே எடுத்தார்கள். அவளின் புடவைக்கும் ரவிக்கைக்குமிடையில் காணப்பட்ட வயிற்றுப் பகுதியை உற்றுப் பார்த்தார்கள். ஒரு இதயத்துடிப்பைத் தாங்கள் கேட்டதையும், அதைக் கேட்டதும் அவர்களுக்கு என்னவோ போல் ஆகிவிட்டதையும் அவர்கள் உணராமல் இல்லை.

"என்னோட காதலனோட மகன் அது"- அம்மிணி சொன்னாள்: "அவன் பேரு என்ன தெரியுமா...? சித்தார்த்தன்..."

இதைக் கேட்டதும் சித்தார்த்தன் அதிர்ச்சியடைந்தான்.

பத்ரோஸ் கேட்டான்: "உள்ளே இருக்குறது மகன்தான்னு உனக்கு எப்படித் தெரியும்?"

"அவன் என்னை எட்டி எட்டி உதைக்கிறானே! அவன் என் வயித்துல இஷ்டப்படி விளையாடுறான். ஆண் குழந்தைகள்தான் இப்படியெல்லாம் செய்யும். அவனோட இதயத்துடிப்பை இன்னொரு தடவை நீங்க கேக்குறீங்களா?"

சித்தார்த்தனும் பத்ரோஸும் கட்டிலை விட்டு வேகமாக எழுந்துநின்று சொன்னார்கள்: "வேண்டாம்... நீ எங்களை ஏமாத்திட்டே!"

அம்மிணி கேட்டாள்: "எதை வச்சு நான் உங்களை ஏமாத்திட்டேன்னு சொல்றீங்க?"

"நீ கர்ப்பமா இருக்கிறதா எங்கக்கிட்ட நீ சொல்லவே இல்லியே!"

இதைக் கேட்டதும் விழுந்து விழுந்து சிரித்த அம்மிணி அவர்களுக்கு நேராக ஓடிச் சென்று, அவர்கள் இருவரின் கன்னத்திலும் முத்தமிட்டாள்: "நான் கர்ப்பமா இருந்தா என்ன? இல்லாட்டி என்ன? இதைப்பத்தி உங்களுக்கு என்ன கவலை? உங்களுக்கும் எனக்கும்தான் தொடர்பு? என் வயித்துல இருக்கிற குழந்தைக்கும் உங்களுக்கும் எந்தவிதத்துல தொடர்பு இருக்கு? அவன் உங்களை என்ன பண்ணப் போறான்?"

அம்மிணி அகல விரிந்து- மகிழ்ச்சியுடன் காணப்பட்ட கண்களுடன் அவர்கள் இருவர் கண்களையும் உற்றுப் பார்த்தாள்.

பத்ரோஸ் சொன்னான்: "அதுக்கு இல்ல... அறையில நம்மகூட, இன்னொரு ஆளும் சேர்ந்து இருக்குறது மாதிரி ஒரு தோணல்..."

சித்தார்த்தன் கேட்டான்: "சரி... அவனுக்கு ஏன் என்னோட பெயரை வச்சே?"

அம்மிணி சிரித்தவாறு கட்டிலில் போய் படுத்து போர்வையை எடுத்து மூடிக் கொண்டாள். அவள் சுவர் பக்கம் சாய்ந்து படுத்தவாறு பேசினாள்: "நீங்க ஏன் என் மகனைப் பார்த்து பயப்படுறீங்க? அவன் ஒரு அப்பாவி... பாவம்... என்னோட அன்பு மகன். நானும் அவனும் ஒரு மூலையில உறங்கிக்கிறோம்..."

சித்தார்த்தனும் பத்ரோஸும் இரவு நேரத்தில் சிறிதுநேரம் வெளியே போய் நடந்துவிட்டு வரலாம் என்று புறப்பட்டார்கள். நீண்ட நேரம் கடற்கரையில் அமர்ந்து படகுகளின் வெளிச்சம் கடல் நீரில் பிரதிபலிப்பதையே பார்த்துக் கொண்டிருந்தனர். தூரத்தில் கப்பல்கள் எழுப்பும் ஒலி கேட்டது. எத்தனையோ வருடங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் ஒரு மகன் பிறந்த ஞாபகமாக நள்ளிரவு நேரத்தில் மணிகள் தொடர்ந்து ஒலித்தபோது பத்ரோஸ் சொன்னான்: "சித்தார்த்தா..."

"என்ன?"

"இன்னைக்கு கிறிஸ்துமஸ்..."

"ஆமா..."- சித்தார்த்தன் சொன்னான்:

"உண்மைதான்."

இரவு நேரத்தில் மேகங்கள் சூழ காணப்பட்டட ஆகாயத்தைப் பார்த்தவாறு சித்தார்த்தன் மெல்லிய குரலில் ஏதோ ஒரு பாட்டை முணுமுணுத்தான்.

சிறிது நேரத்தில் அவர்கள் திரும்பவும் அறைக்கு வந்தார்கள். அம்மிணியை உறக்கத்தைவிட்டு எழுப்பாமல் மெதுவாகக் கதவைத்திறந்து- எந்தவித ஓசையும் கேட்காதபடி அங்கு இருந்த இன்னொரு கட்டிலில் திறந்த கண்களுடன் சிலைகளைப்போல், இருவரும் போய் படுத்துக் கொண்டனர். அவர்களின் காதுகளில் பெரும் பறை என ஒலித்துக் கொண்டிருந்தது தங்களின் இதயத்துடிப்பா அல்லது அம்மிணியின் வயிற்றில் இருக்கும் பையனின் இதயத் துடிப்பா என்று அவர்களுக்கே புரியவில்லை. பின்னிரவு நேரத்தில் அம்மிணி உறக்கத்தில் ஏதோ உளறிக்கொண்டிருந்தாள். தொடர்ந்து அவளின் நிம்மதியான மூச்சு சத்தத்தை அவர்கள் கேட்டுக்கொண்டே படுத்துக் கிடந்தார்கள். "தெய்வமே..."- சித்தார்த்தன் அழைத்தான். பத்ரோஸ் கேட்டான்: "நீ என்ன சொல்ற?"

"ஒண்ணுமில்ல"- சித்தார்த்தன் சொன்னான்.

சிறிது நேரத்தில் அவர்களின் கட்டில், ஒரு தொட்டிலாக மாறி, கனவுகள் இல்லாத ஒரு உறக்கத்திற்கு அவர்கள் இருவரையும் அழைத்துச் சென்றது.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.