Logo

பாதி இரவு நேரத்தில்...

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 6485

த்திரிகை அலுவலகத்தில் பாதி இரவு தாண்டி விட்டது. ஆட்கள் யாரும் இல்லாத மேஜைகளின் மேல் மின் விசிறிகள் வீசிக் கொண்டிருந்தன. கீழே சிதறிக் கிடந்த பேப்பர் துண்டுகள் இங்குமங்குமாய் காற்றில் அலைந்தன. செய்தித் துண்டுகள் தரையில் இலட்சியமே இல்லாமல் அலை பாய்ந்து கொண்டிருந்தன. அவை மேஜைக் கால்களை இறுக கட்டிப் பிடித்தன. சுவர்களில் ஏற முயற்சித்தன. அலமாரியின் அடியில் போய் ஒளிந்தன. மூலை முடுக்குகளில் காற்றில் விறைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் நின்று கொண்டிருந்தன.

அவற்றில் ஒன்றும் ருத்யுஞ்ஜயனின் காலைச் சுற்றி வளைத்தபோது, அவன் நடுங்கிப்போய் காலை விட்டு அதை விடுவித்து உட்கார்ந்திருந்த நாற்காலியை விட்டு படு வேகமாக எழுந்தான். தான் எழுதிக் கீழே போட்ட செய்தி டெலிபிரிண்டருக்குக் கீழே போவதைப் பார்த்துக் கொண்டிருந்த ம்ருத்யுஞ்ஜயன் சொன்னான்: “டெலிபிரிண்டர்ல இருந்து வந்தது. டெலிபிரிண்டர்க்கே போகுது. இது இனி பிறக்காம இருக்கட்டும். கடவுளே!” மீண்டும் நாற்காலியில் வந்து அமர்ந்து கால்களை நீட்டிக் கொண்டு கைகளைத் தலைக்குப் பின்னால் கோர்த்தவாறு அவன் தூரத்தில் எங்கோ பன்னிரெண்டு மணி அடிப்பதைக் கேட்டுக் கொண்டிருந்தான். ஜன்னல்களில் திரண்டு நின்றிருந்த இருட்டைக் கடந்து வந்த காலத்தின் மணியோசை ம்ருத்யுஞ்ஜயனை என்னவோ செய்தது. இதுவரை அமைதியாக இருந்த டெலிபிரிண்டர் திடீரென்று ஒரு இயந்திரத் துப்பாக்கி வெடிப்பதைப்போல மீண்டும் செய்திகளைத் தயார் பண்ண ஆரம்பித்தது. ம்ருத்யுஞ்ஜயன் என்னதான் காதுகளைத் தீட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தாலும் நள்ளிரவு மணியோசை அந்தச் சத்தத்தில் கேட்க முடியாமலே போய்விட்டது. செய்திகள் பிறப்பெடுப்பதன் ஓசை. மனிதகுலத்திற்கு சொந்தப் பிறப்புகளைப் பற்றி எவ்வளவுதான் செய்திகளைக் கேள்விப்பட்டாலும், போதுமென்றே தோன்றாது. கேள்வியின் ஆரவாரத்தில் காலத்தின் தாளங்கள் கரைந்து மறைந்து கொண்டிருக்கின்றன. மேஜைமேல் செய்திகள் நெளிந்தன. தரையில் அவை நெளிந்து ஓடின. அபலைகளைப்போல அலைந்தன. ‘செய்திகளுக்கு இன்னைக்கு சுறுசுறுப்பு அதிகம்தான்’ - ம்ருத்யுஞ்ஜயன் தனக்குத் தானே சொல்லிக் கொண்டான். ஒரு செய்தி மின் விசிறி காற்றால் தரையை விட்டு மேலே கிளம்பி அறைக்குள் சுற்றித் சுற்றித் திரிந்து மின் விசிறியின் சிறகுகளில் பட்டு அடித்து அடித்து சத்தம் உண்டாக்கி ஜன்னல் வழியே பறந்து போனது. "எங்கே போற?" - ம்ருத்யுஞ்ஜயன் அதைப் பார்த்துக் கேட்டான். “எங்கே போனாலும் பாதுகாப்பு இல்ல...” அப்போது திறந்திருந்த ஜன்னலுக்கு அப்பால் இருந்து இருட்டைக் கிழித்துக் கொண்டு கேன்டீனைச் சேர்ந்த பூனை சொன்னது: “ம்யாவ்!”

இரவு வேலையை எடுத்த பிறகு இன்றுதான் செய்திகள் இந்த அளவிற்கு தன்னைப் பாடாய் படுத்திக் கொண்டிருக்கின்றன என்பதாக உணர்ந்தான் ம்ருத்யுஞ்ஜயன். இரவு நேர வேலையில் அமர்ந்து அவன் செய்திகளின் துடிப்பையும் தவிப்பையும் தினமும் அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறான். அவன் அவற்றின் வாழ்க்கையைச் சின்னதாக்கி, நீட்டி, அவற்றிற்கு புதிய பரிமாணங்கள் தந்து, வேண்டாம் என்று ஒதுங்கி - எல்லாமே அவன் செய்தான். டெலிபிரிண்டர் இரவு முழுக்க பேச்சை நிறுத்தாத ஒரு பைத்தியக்காரனைப்போல உலகச் செய்திகளைக் கொடுத்துக் கொண்டே இருந்தது. பேப்பர் சுருள் சுருளாக வந்து தொங்கிக் கொண்டிருப்பதைப் பற்றி கவலைப்படாமல் ம்ருத்யுஞ்ஜயன் ஈவு இரக்கமே இல்லாத ஒரு சக்திக்கு கீழ்ப்பட்டவனைப் போல அவற்றை எது பற்றியும் கவலைப்படாமல் வெட்டவும், கிழிக்கவும், வடிவத்தை மாற்றவும் செய்து கொண்டிருந்தான். தரையிலும், மேஜை மேலும் அவை உண்டாக்கிய ஆர்ப்பாட்டங்களையும் அட்டகாசப் பார்வைகளையும் அவன் கவனிக்கவே செய்தான். மீதி நேரத்தில் தன்னுடைய கடந்து போன முன்பிறவிகளைப் பற்றிய நினைப்பில் அவன் ஆழ்ந்து போனான். பாம்பாகவும், புழுவாகவும், மரமாகவும், மானாகவும், பெண்ணாகவும் கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிராகவும் தான் கோடிக்கணக்கான வருடங்களாக நடத்திய பயணத்தின் வழிகளில் இந்த பூமியின் மண்ணில் எங்கெல்லாம் தன்னுடைய தகர்ந்துபோன கல்லறைகளும் கரையான் அரித்த நினைவுச் சின்னங்களும் இப்போதும் யாருக்குமே தெரியாமல் மறைந்து கிடக்கும் என்பதையும் அவன் நினைத்துப் பார்த்தான். தன்னுடைய சாம்பல் கலசங்களும், மிச்ச எலும்புகளும் இந்த மண்ணுக்கடியில் எப்படியெல்லாம் உருமாறிப்போய் கிடக்கும் என்பதையும் அவன் நினைத்துப் பார்த்தான். தன்னுடைய சாம்பல் கலசங்களும், மிச்ச எலும்புகளும் இந்த மண்ணுக்கடியில் எப்படியெல்லாம் உருமாறிப்போய் கிடக்கும் என்பதையும் அசைபோட்டுப் பார்த்தான். இரவு முழுக்க டெலிபிரிண்டர் செய்திகளை வெளியே தள்ளிக் கொண்டே இருக்கும். மிருத்யுஞ்ஜயன் திரும்பத் திரும்ப அவற்றைத் தேர்ந்தெடுப்பான். மாற்றி எழுதுவான், சுருக்குவான், சுருட்டி வீசி எறிவான். பிறகு அவன் தூங்க முயல்வான். ஆனால் தூக்கம்தான் வராது. தான் நடந்துவரும் தெருக்களில் எப்போதும் பசியாலும் களைப்பாலும் தாகத்தாலும் வாடி நடந்து கொண்டிருக்கும் குழந்தைகளைப் பற்றிய நினைப்பு அவனின் மூடியிருந்த கண்களில் கவலைகளை உண்டாக்கும் படங்களாகப் பதியும். கசப்பும் உப்பும் நிறைந்த கண்ணீர் துளிகள் அவன் கண்களில் அரும்பி உறக்கத்தையே இல்லாமல் ஆக்கும். “அவர்களின் உலகமும் என்னுடைய உலகமும் முடிவுக்கு வரட்டும், கடவுளே...” - ம்ருத்யுஞ்ஜயன் முணுமுணுப்பான். இளம் தளிர்களை நசுக்குகின்ற இந்த ராட்சச சக்கரங்களின் சுழற்சி நிற்கட்டும். குழந்தைகளின் கண்ணீர் கடல்கள் முழுமையாக வற்றட்டும். பூமியின் மண்ணில் முடிவே இல்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கின்ற கல்லறைகளின் அணிவகுப்பு முடியட்டும். டெலிபிரிண்டர் செய்திகளைப் பிறப்பித்து அலறும். செய்திகள் போகும் இடங்கள் தேடி அலையும். ம்ருத்யுஞ்ஜயன் உலகத்தின் முடிவைப் பற்றிய சிந்தனையில் மூழ்கிப் போயிருப்பான்.

ம்ருத்யுஞ்ஜயன் கேன்டீன் பூனையைக் கண்டு பிடிப்பதற்காக நாற்காலியை விட்டு எழுந்தான். திடீரென்று குழல் விளக்குகள் அணைந்தன. மின்விசிறிகள் நின்றன. செய்திகளின் நர்த்தனம் நின்றது. டெலிபிரிண்டர் ஊமையானது. ஜன்னலுக்கு அப்பால் இருந்தவாறு பூனை சொன்னது: “ம்யாவ்!” ம்ருத்யுஞ்ஜயன் இருட்டைக் கிழித்துக் கொண்டு அவளிடம் சொன்னான்: “வா... என்னைப் போலவே உறங்காமல் இருப்பவளே... இன்னைக்கு நாம ஒண்ணா இருந்து காத்திருப்போம்...” ஒரு மெழுகுவர்த்தியை எடுத்து எரிய வைத்து மேஜை மேல் அதை நிறுத்திவிட்டு அவன் நாற்காலியில் மீண்டும் அமர்ந்தான். மெழுகுவர்த்தியின் வெளிச்ச வட்டத்திற்கு அப்பால் இருந்த இருட்டு முழுமையான மவுனத்தைக் கடைப்பிடித்தது. ம்ருத்யுஞ்ஜயன் ஆடிக் கொண்டிருந்த நெருப்பின் விளிம்பையே வைத்த கண் எடுக்காது பார்த்துக் கொண்டிருந்தான். உலகத்தின் இறுதியையும் குழந்தைகளின் கஷ்டத்தையும் அவர்களின் முடிவையும் மக்களின் மரணத்தையும் சிந்தித்துக் கொண்டிருந்த தன்னுடைய பிறக்காத குழந்தைக்காக தான் ஒரு முறை கண்ணீர் விட்டு அழுததை அவன் நினைத்துப் பார்த்தான்.


அப்படி அழுதது எதற்காக? அது தான்தானே? ம்ருத்யுஞ்ஜயன் நினைத்தான். அவனின் மனைவி கர்ப்பம் கலைந்த அன்று அந்த பிறக்காத குழந்தையின் நின்றுபோன பயணத்தை நினைத்து தேம்பித் தேம்பி அழுதான் அவன். “பிறக்காத குழந்தையே... என்னுடைய உயிரின் வளர்ச்சியே... உன்னுடைய இறுதிப் பயணம் நல்லபடி முடியட்டும்” - அவன் மனதிற்குள் வேண்டினான். “பரிணாம வளர்ச்சியின்படி பிறவி எடுத்து வந்த நீ பிறப்பு, இறப்பு எதையுமே நிறைவு செய்ய முடியாமல் இந்த உலகத்தைவிட்டு போகிறாயே! நீ யார்? உன்னுடைய பயணத்தின் முடிவற்ற நிலையில் இருந்தும், அதன் அரவணைப்பில் இருந்தும் உன்னை பலவந்தமாகப் பறித்து எறிந்தபோது நீ மனதிற்குள் என்ன சொல்லியிருப்பாய்? என்னுடன் சேர்ந்து வாழ்வதற்காக பயணம் புறப்பட்ட அறிமுகமில்லாதவனே, எத்தனையோ துக்கங்களும், சந்தோஷங்களும், அன்பும், நினைவுகளும் மருத்துவமனையின் குப்பைத் தொட்டியில் வீசி எறியப்பட்ட உன்னுடைய உடம்பின் ஒவ்வொரு அணுவிலும் குடியிருந்து அதோடு சேர்ந்து அழிந்து மண்ணோடு மண்ணாக மக்கிப் போனதே!” - ம்ருத்யுஞ்ஜயனின் கன்னத்தின் வழியே திரண்டு வழிந்து கொண்டிருந்த ஒரு துளி கண்ணீரும் உதடுகளில் விறைத்துக் கொண்டிருந்த அழுகையும் பயணத்தை முடிக்காத ஒரு குழந்தை அவன் மீது மீண்டும் அன்பு செலுத்தவும், கவலை கொள்ளச் செய்யவும் செய்தது.

அப்போது இருட்டைத் தாண்டி மெழுதுவர்த்தியின் வெளிச்சத்திற்கு அப்பால் ஜன்னல் படியில் கேன்டீன் பூனை தெரிந்தது. படியில் இருந்து இறங்கிய அந்தப் பெண் பூனை செய்திச் சங்கிலியைக் கடந்து நடந்து ம்ருத்யுஞ்ஜயனின் மேஜைமேல் ஏறி இருந்தது. பிரகாசமாக எரிந்து கொண்டிருந்த இரண்டு கண்கள் அவனைப் பார்த்தன. பூனை சொன்னது: “ம்யாவ்!” அவன் அந்தப் பூனையின் குளிர்ந்த மூக்கில் தன்னுடைய சுட்டுவிரலை வைத்தவாறு கேட்டான்: “என்ன நீ சொல்ற? நேரமாயிடுச்சா?”

ம்ருத்யுஞ்ஜயன் எழுந்து சென்று ஜன்னல் வழியே வெளியே பார்த்தான். வெளியே ஒன்றுமில்லை. இருட்டு மட்டுமே இருந்தது. கண்களுக்கு வெளியே யாரோ கைகளில் இறுக மூடியதைப் போன்ற இருட்டு. ம்ருத்யுஞ்ஜயன் மீண்டும் தான் ஏற்றி வைத்த மெழுகுவர்த்தியின் வெளிச்ச வளையத்தைத் தேடினான். அது சுருங்கி இருட்டில் ஒரு சிறு துண்டாக மாறியிருந்தது. அந்தச் சிறு வெளிச்சத்தில் இரண்டு பெரிய கண்கள் தெளிவாகத் தெரிந்தன. ம்ருத்யுஞ்ஜயன் இருட்டினூடே மேஜை மேல் இருந்த வெளிச்சத்தின் கரையைத் தேடி நீங்கிக் கொண்டிருக்க, திடீரென்று அவனே நடுங்கும் வண்ணம் இருட்டைக் கிழித்துக் கொண்டு டெலிபிரிண்டர் அலறியது. நெருப்பைப் போல பிரகாசமாக ஒளிர்ந்தபடி தன்னுடைய வடிவத்தைக் காட்டும் அந்த டெலிபிரிண்டரையே பார்த்தவாறு நின்றிருந்தான் ம்ருத்யுஞ்ஜயன். அதன் இதயத் துடிப்பைக் கேட்டவாறு அவன் அதையே வெறித்துப் பார்த்தான். அப்போது படுவேகமாக மந்திர சக்தியால் நடப்பதைப்போல அதன் முகத்திலிருந்து வார்த்தைகள் தொடர்ந்து புறப்பட்டு வந்தன. உலோகத்தின், இயந்திரத்தின் கடினத் தன்மையுடன் அது அலறியது. “உலகம் முடிவுற்றது. உலகம் முடிவுற்றது. உலகம் முடிவுற்றது. உலகம் முடிவுற்றது. உலகம்...” இருட்டிற்கு கனம் ஏறிக் கொணடு வந்தது. ம்ருத்யுஞ்ஜயன் இருட்டினூடே நடந்து மீண்டும் ஜன்னலை நோக்கி நடந்தான். முடிவுக்கு வந்த தன்னுடைய உலகத்தை ஒருமுறை பார்க்க வேண்டும் என்பதற்காக ம்ருத்யுஞ்ஜயன் இருட்டில் தடவிக் கொண்டிருந்தான். ஆனால், ஜன்னலின் இருட்டில் அவனால் எதையும் பார்க்க முடியவில்லை. அவன் மீண்டும் திரும்பி வந்தான். இருட்டு அவனை முழுமையாக ஆக்கிரமித்து விட்டிருந்தது. டெலிபிரிண்டரும் அதன் அலறலும் முற்றிலுமாக அடங்கிப்போய் விட்டிருந்தது. மேஜையும் அதன்மேல் இலேசாக தெரிந்து கொண்டிருந்த வெளிச்ச வட்டமும் இருட்டில் கலந்து காணாமல் போயிருந்தன. ம்ருத்யுஞ்ஜயன் அந்த இருட்டுக்கு மத்தியில் தெரிந்த இரண்டு கண்களையும் உற்று பார்த்தான். அந்தக் கண்களின் ஒளியைத் தன் மார்பில் படும்படி செய்தான். பிறகு... மறைந்து போய்க் கொண்டிருக்கும், முடிவுக்கு வந்திருக்கும் தன்னுடைய காலத்தைப் பார்த்துச் சிரித்தான். பூனையின் கன்னத்தில் முத்தம் கொடுத்த அவன் சொன்னான்: “நேரமாயிடுச்சு...” இருட்டு எல்லாவற்றையும் விழுங்கியபோது தூரத்தில் இருந்து, கோடி யுகங்களுக்கு அப்பால் இருந்து ஒரு மென்மையான குரல் இருட்டின் இதயத்திலிருந்து கிளம்பி வந்தது: “ம்யாவ்!” பிரபஞ்சங்கள் அழிவதையும் மறுபிறவி எடுப்பதையும் ஆச்சரியத்துடன் நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்த ம்ருத்யுஞ்ஜயன் என்ற பத்திரிகைப் பணியாளன் தன்னுடைய பிறப்புகளைப் பற்றியும் மரணங்களைப் பற்றியும் நினைப்பதில் மூழ்கிப் போனான்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.