Logo

யாருக்குத் தெரியும்?

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 6594
Yaarukku Theriyum

ஹெரோதேஸ் மன்னரின் காலத்தில் யூதத்தில் பெத்லஹேமில் இயேசு பிறந்தபோது கிழக்கிலிருந்து வந்த ஞானிகள் ஜெருசலேமிற்கு வந்து கேட்டார்கள். “யூதர்களின் ராஜாவாக பிறந்தவன் எங்கே?” இதைக் கேட்டு ஹெரோதேஸ் மன்னரும் ஜெருசலேம் மக்களும் பதைபதைத்து நின்றார்கள்.

(2:2-4)

...கடவுளின் புண்ணிய ஆவி யோசேப்பின் கனவில் தோன்றி சொன்னது: “எழுந்திரு. குழந்தையையும் தாயையும் அழைத்துக் கொண்டு எகிப்துக்கு உடனே ஓடப் பார்... இந்தக் குழந்தையை அழிக்க ஹெரோதேஸ் உடனடியாக விசாரணைகளைத் தொடங்குவார்.

(2:13)

...ஹெரோதேஸ் தன் வேலைகளை ஆரம்பித்தார். அவர் பெத்லஹேமிற்கும் பக்கத்து ஊர்களுக்கும் அனுப்பி வைத்த ஆட்கள் இரண்டு வயது அல்லது அதற்குக் கீழே வயதுள்ள ஆண் குழந்தைகள் அனைவரையும் கொன்றனர்.

(2:16)

(மத்தாயி எழுதிய சுவிசேஷம்)

பட்டாளக்காரன் வாசல் கதவைத் திறந்து உள்ளே வந்தான். அவன் மிகவும் களைத்துப் போயிருந்தான்.

பயங்கரமாக வேதனை தந்து கொண்டிருந்த கால்களுடன் ஒரு கட்டிலில் சாய்த்து அவன் கண்களை மூடினான்.

உள்ளேயிருந்த அறையின் கதவு இலேசாகத் திறந்தது. பின்னர் மூடியது. அதை யாரோ தாழ்ப்பாள் போட்டார்கள்.

பட்டாளக்காரனின் செருப்பில் படிந்திருந்த உலர்ந்துபோன இரத்தத்தை ஈக்கள் மொய்த்தன. எங்கோ ஒரு மூலையில் இருந்து ஒரு ஆந்தை இடைவிடாது அலறிக் கொண்டிருந்தது. வாசலில் கோழிகள் வெயிலில் நின்றவாறு சிலிர்த்துக் கொண்டிருந்தன. தூரத்தில் இருந்து வந்த அழுகைக் குரல்கள் திறந்து கிடந்த ஜன்னல் வழியே உள்ளே வந்து கொண்டிருந்தன. சிறிது நேரம் கழித்து கோழிகள் எங்கேயோ போய் மறைந்தன. ஆந்தை அலறுவதை நிறுத்தியது. பட்டாளக்காரன் உறங்கிய கட்டிலை தூரத்தில் இருந்து வந்த அழுகைக் குரல்கள் ஒரு வலையைப் போல வளைத்துக் கொண்டிருந்தன.

பட்டாளக்காரன் தூக்கம் கலைந்து எழுந்தபோது, வெயில் குறைந்திருந்தது. அவன் படுக்கையை விட்டு எழுந்தான். தன்னுடைய கைகளையும் அணிந்திருந்த ஆடைகளையும் பார்த்த அவன் சொன்னான்: “நான் உடனடியா குளிக்கணும்!”

விலைமாதர்கள் இல்லத்தின் சொந்தக்காரி உள்ளே வந்து சொன்னாள்: “தண்ணி சுட வச்சிட்டா போச்சு. ஆமா... என்ன வாசனைத் திரவியம் அதுல கலக்கணும்?”

பட்டாளக்காரன் தலையை இரண்டு கைகளையும் நோக்கி குனிந்தவாறு சொன்னான்: “எது வேணும்னாலும்...” அவன் முணுமுணுக்கும் குரலில் சொன்னான்: “இரத்த வாடை அவ்வளவு சீக்கிரம் போயிடாது...”

விலைமாதர்கள் இல்லத்தின் சொந்தக்காரி நல்ல உயரத்தைக் கொண்டவளாக இருந்தாள். அழகின் நிழல்கள் இன்னும் உயிரோட்டத்துடன் இருக்கிற ஐம்பது வயது நிறைந்த பெண் அவள். அவளின் முகத்தில் இனம் புரியாத ஒரு உணர்ச்சி வெளிப்பட்டு அவன் தலையை உயர்த்தியவுடன் இல்லாது போனது. அவள் சொன்னாள்: “குழந்தைகளின் இரத்தம்தானே எல்லாமே...”

பட்டாளக்காரன் தன் கைகளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அவள் கேட்டாள்: “நீங்க எந்தத் தெருவுல இருந்தீங்க?”

பட்டாளக்காரன் ஒன்றும் பதில் பேசவில்லை.

வீட்டுச் சொந்தக்காரி ஒய்யாரமான ஒரு நடை நடந்து பட்டாளக்காரனுக்கு முன்னால் வந்து அமர்ந்தாள். அவள் கேட்டாள்: “நீங்க கொன்ன குழந்தைகளுக்கு நீங்க அவர்களைக் கொல்லப் போறீங்கன்னு முன்கூட்டியே தெரியுமா?”

பட்டாளக்காரன் எதிர் திசையில் இருந்த சுவரையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அவள் அவனின் முகத்தையே பார்த்தவாறு அவன் என்ன பதில் சொல்லப் போகிறான் என்பதற்காகக் காத்திருந்தாள்.

அவன் சொன்னான்: “நான் உடனடியா குளிக்கணும்...”

வீட்டுச் சொந்தக்காரி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவன் சொன்னான்: “எனக்குத் தெரியாது. குழந்தைகளுக்கு மரணம்ன்ற ஒண்ணு இருக்கா?  அவர்களுக்கு மரணத்தைப் பற்றி சிந்திக்கத் தெரியுமா என்ன?”

அவள் பதில் எதுவும் கூறாமல் அமைதியாக இருந்தாள்.

அவன் சொன்னான்: “என் காதுல விழுந்ததெல்லாம் தாய்மார்களோட அழுகைச் சத்தம்தான்...”

வீட்டுச் சொந்தக்காரி எழுந்து உள்ளே போனாள்.

பட்டாளக்காரன் தன்னுடைய இடுப்புப் பகுதியிலிருந்து இரத்தம் தோய்ந்திருந்த உறையில் இடப்பட்டிருந்த ஒரு வாளை உருவி தரையில் வைத்தான். இடுப்பு வாரையும் கழற்றி அதற்கருகில் வைத்தான். பிறகு கைகளில் படிந்திருந்த காய்ந்த இரத்தத்தை நகத்தால் சுரண்டினான்.

வீட்டுச் சொந்தக்காரி திரும்பி வந்து மீண்டும் அவனுக்கு முன்னால் அமர்ந்தாள். “தண்ணி சுட வச்சிருக்கு” - அவள் சொன்னாள். தொடர்ந்து சற்று முன்னால் நகர்ந்து உட்கார்ந்தவாறு அவனிடம் கேட்டாள்: “நீங்க எத்தனை குழந்தைகளைக் கொன்னீங்க?”

பட்டாளக்காரன் எதுவும் பேசவில்லை.

முகத்தில் ஒரு செயற்கையான சிரிப்பை வரவழைத்துக் கொண்டு அவள் சொன்னாள்: “நீங்க ஒரு நல்ல பட்டாளக்காரர்தான்... நூறு குழந்தைகளைக் கொல்றதுக்கும் அதே அளவு பட்டாளக்காரர்களைக் கொல்றதுக்குமிடையே என்ன வித்தியாசம் இருக்கு?”

பட்டாளக்காரன் பதில் கூறாமல் மவுனமாக இருந்தான்.

அவள் சொன்னாள்: “குழந்தைகளுடன் உங்களுக்கு போர் செய்ய வேண்டிய அவசியம் இல்ல... இல்லியா? விஷயமே அதுதான்...”

பட்டாளக்காரன் சொன்னான்: “பட்டாளக்காரர்களுக்கு யாருடன்தான் போர் இருக்கு?”

வீட்டுச் சொந்தக்காரி தரையில் இருந்த வாளையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் சொன்னாள்: “யாருடன் இந்த வாளுக்கு போர் இருக்கு?”

இலேசாக முன்னோக்கி நகர்ந்து தன் தலையை பட்டாளக்காரனுக்கு மிகவும் நெருக்கமாக வைத்துக்கொண்டு குரலைச் சற்று தாழ்த்திக் கொண்டு அவள் கேட்டாள்: “ஹெரோதேஸின் பகைவன் யார்? அப்படி யார் இங்கே பிறந்திருக்கிறது? ஒரு குழந்தையைப் பார்த்து எதுக்கு ஹெரோதேஸ் பயப்படணும்?”

பட்டாளக்காரன் கேட்டான்: “உனக்கு இன்னும் தெரியலியா?”

வீட்டுச் சொந்தக்காரி சொன்னாள்: “இல்ல...”

பட்டாளக்காரன் சொன்னான்: “யூதர்களோட தலைவன் இங்கே பெத்லஹேமில் பிறந்திருக்கிறதா அவனைத் தேடி வந்த ஞானிகள் ஹெரோதேஸ்கிட்ட சொல்லிட்டாங்க. அவ்வளவுதான் - ஹெரோதேஸ் பயப்பட ஆரம்பிச்சிட்டாரு. ஞானிகள் குழந்தையை யாருக்கும் தெரியாம ரகசியமா பார்த்து வணங்கிட்டுப் போயிட்டாங்க. அந்தக் குழந்தையைத்தான் இப்போ நாங்க தேடிக்கிட்டு இருக்கோம். அவனைக் கொல்றதுதான் எங்களோட நோக்கம்!”

அவன் தன்னுடைய இரண்டு கைகளையும் சேர்த்து வைத்துக் கொண்டு அவற்றைப் பார்த்தவாறு சொன்னான்: “யாருக்குத் தெரியும்? ஒருவேளை என்னோட இந்தக் கைகளாலேயே யூதர்களோட ரட்சகன் இன்னைக்கு இறந்திருக்கலாம்...”

வீட்டுச் சொந்தக்காரி சொன்னாள்: “நீங்க சொல்றது உண்மையாகக்கூட இருக்கலாம். யாருக்குத் தெரியும்?”

பட்டாளக்காரன் சற்று முன்னோக்கி நகர்ந்து உட்கார்ந்து கொண்டு கேட்டான்: “இத்தனை ஆயிரம் குழந்தைகளின் இரத்தத்தைத் தாண்டியா ஒரு ரட்சகன் வரணும்?”

அவள் ஒன்றும் அதற்கு பதில் பேசவில்லை.

அவன் தலையைக் கைகளை நோக்கி குனிந்து கொண்டு விரல்களால் கண்களையும் முகத்தையும் மூடிக் கொண்டு சொன்னான்: “உனக்கு இது புரியல. உனக்கு குழந்தை கிடையாதுல்ல! நான் கொன்ன குழந்தைகள் முகத்தில் தெரிந்த பதைபதைப்பை நீ பார்க்கலையில்ல...!”


சிறிது நேரம் அவர்கள் இருவரும் பேசாமல் அமைதியாக இருந்தார்கள். பிறகு வீட்டுச் சொந்தக்காரி சொன்னாள்: “பாவம்...”

பட்டாளக்காரன் ஒரு அதிர்ச்சியுடன், அதே நேரத்தில் ஆசை மேலோங்க அவளின் முகத்தை உற்றுப் பார்த்தவாறு கேட்டான்: “யார். யாரைச் சொல்ற?”

அவள் சொன்னாள்: “அந்தக் குழந்தையைச் சொல்றேன். அதாவது - யூதர்களின் தலைவனா வரப்போற குழந்தையை. இந்த மாதிரி விதிகளை உண்டாக்கினது யார்? நான் விபச்சாரியா ஆனதும் அவனோட வருகை குழந்தைகளின் இரத்தத்தின் மூலமான்றதும் ஒரே விதிப்படிதான் நடக்கிறதா?”

சிறிது நேரம் கழித்து அவள் சொன்னாள்: “ஒரு ரட்சகன் பெருமைகளோடு  அல்லவா வரணும்? அந்தக் குழந்தை இந்த இரத்தத்துக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டாமா? அவன் இந்தக் கடனை எப்படி தீர்ப்பான்?”

பட்டாளக்காரன் சொன்னான்: “அவன் உயிரோட தப்பிச்சாத்தானே?”

வீட்டுச் சொந்தக்காரியும் பட்டாளக்காரனும் மீண்டும் அமைதியானார்கள்.

“யாருக்குத் தெரியும்?” - பட்டாளக்காரன் மீண்டும் சொன்னான்: “ஒருவேளை எனக்கு அடையாளம் தெரிஞ்சிருந்தா நான் அவனைக் கொல்லாமக்கூட விட்டிருப்பேன்.”

வீட்டுச் சொந்தக்காரி சொன்னாள்: “அதே நேரத்துல அவனை நீங்க அடையாளம் கண்டுபிடிச்சு... நீங்க முதல்ல கொன்னதே அவனைத்தான்னு இருந்தா...? மற்ற குழந்தைங்க மரணத்தைத் தழுவ வேண்டிய அவசியம் இல்லையே!”

“ஆனா, அப்போ...” - பட்டாளக்காரன் சொன்னான்: “ரட்சகனோட வருகை நடக்காமலே போயிடும். இனி நடக்குறது நடக்கட்டும், ரட்சகன் உயிரோட இருந்தாலும் இருக்கலாம். இல்லையா?”

வீட்டுச் சொந்தக்காரி சொன்னாள்: “நீங்க சொல்றது சரிதான்!”

அவள் கையை நீட்டி அவனின் முழங்காலைத் தொட்டவாறு சொன்னாள்: “நமக்கு கட்டாயம் ரட்சகர்கள் வேணும். இரத்தத்தின் மூலமாகவோ பெருமைகளோடவோ அவர்கள் வரட்டும். பட்டாளத்துக்காரனுக்கும் விபச்சாரிக்கும் ரட்சகர்கள் கட்டாயம் வேணும்...”

“ஆமா...” - பட்டாளக்காரன் சொன்னான்.

அவன் கேட்டான்: “தண்ணி இன்னும் சூடாகலியா?” - உள்ளே தாழ்ப்பாள் போட்டிருந்த அறையில் இருந்து ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது. அந்த அழுகையை யாரோ நிறுத்தினார்கள். பட்டாளக்காரனின் முகத்தில் இலேசான ஒரு புன்சிரிப்பு நிழலாடியது. “விபச்சாரம் நடக்குற வீட்டுக்கு யாரும் ரட்சகனைத் தேடி வரல. இல்லியா? அந்தக் குழந்தை யாரோடது? அது... ஆண் குழந்தையா? இதுவரை அந்தக் குழந்தையை யார்கிட்டயாவது விற்கலியா?”

வீட்டுச் சொந்தக்காரி முகத்தில் எந்தவித உணர்ச்சி மாறுபாடையும் காட்டிக் கொள்ளாமல் சொன்னாள்: “அது என் பூனையோட குட்டி. குழந்தை அழுறது மாதிரியே இருக்குல்ல அது அழறது?”

பட்டாளக்காரன் புன்சிரிப்பு தவழ சொன்னான்: “நீ தேவையில்லாம பொய் சொல்ல வேண்டாம். அந்தக் குழந்தை யூதர்களின் ரட்சகனாகவே இருந்தாக்கூட எனக்கென்ன? நான் இங்கே குளிக்க வந்திருக்கேன். வேலை முடிஞ்சு ஓய்வெடுக்க வந்தவன் நான். சரி... தண்ணி சூடாயிருச்சா?” - அவன் காலணிகளை நீக்கி ஒரு ஓரத்தில் வைத்தான். விலைமாதர்கள் இல்லத்தின் சொந்தக்காரி தன்னுடைய முகத்தில் எந்தவித உணர்ச்சியையும் காட்டிக் கொள்ளாமல் அமைதியாக இருந்தாள். செயற்கையான உயிரோட்டமில்லாத ஒரு புன்சிரிப்பை வரவழைத்தவாறு அவள் கேட்டாள்: “குளிச்சு முடிஞ்சவுடனே, நான் என்கிட்ட இருக்குற புது பெண்ணை உங்கக்கிட்ட அனுப்பி வைக்கட்டுமா?”

“வேண்டாம்...” - பட்டாளக்காரன் சொன்னான்: “நீ எனக்கு குளிக்கிறதுக்கு தண்ணி தா. இரத்தம் இல்லாத ஒரு ஆடையும் வேணும். எனக்குத் தேவை இவ்வளவுதான்” - அவன் முணுமுணுத்தான்: “குளிக்கணும்...” வீட்டுச் சொந்தக்காரி எழுந்து உள்ளே போனாள்.

பட்டாளக்காரன் தன்னுடைய இரத்தம் தோய்ந்த அங்கியைக் கழற்றி கீழே போட்டான். குளியலறையில் பாத்திரங்கள் உரசும் ஓசையும், தண்ணீர் ஊற்றும் சத்தமும் கேட்டது. பட்டாளக்காரன் குளியலறையை நோக்கி நடந்து போனான். அவனின் ஆடைகளையும் காலணிகளையும் அவன் படுத்துறங்கிய விரிப்பையும் ஒரு வேலைக்காரி மனதில் வெறுப்பு மேலோங்க கையால் இழுத்துக் கொண்டு போனாள்.

பாதி இரவு தாண்டிய பொழுது பட்டாளக்காரன் குறட்டை விட்டு உறங்கிக் கொண்டிருந்தான். உள்ளேயிருந்து தாழ்ந்த குரலில் யாரோ பேசினார்கள்.

உள்ளேயிருந்த கதவு மெதுவாகத் திறந்தது. இருட்டினூடே இரண்டு பெண்களும் ஒரு ஆணும் பட்டாளக்காரன் படுத்திருந்த கட்டிலைத் தாண்டி நடந்தார்கள். ஒரு பெண் தன் நெஞ்சோடு சேர்த்து எதையோ பிடித்திருந்தாள். அவர்கள் வாசல் கதவைத் திறந்தார்கள். நட்சத்திரங்கள் கண் சிமிட்டிக் கொண்டிருக்க தெருவில் இறங்கினார்கள். அங்கே ஒரு கோவேறு கழுதை அவர்களுக்காக காத்து நின்றிருந்தது.

விலைமாதர்கள் இல்லத்தின் சொந்தக்காரி தனக்குப் பக்கத்தில் நின்றிருந்த பெண்ணிடமிருந்து அவள் நெஞ்சோடு சேர்த்து பிடித்திருந்த குழந்தையை வாங்கினாள். அதன் முகத்தில் நட்சத்திரத்தின் ஒளி படும் விதத்தில் இரு கைகளையும் உயர்த்தி முகத்தை உற்று பார்த்தவாறு அவள் சொன்னாள்: “பாவம்... பாவம்... ரட்சகன்...” பிறகு குனிந்து குழந்தையின் நெற்றியிலும் சின்ன பாதங்களிலும் அவள் முத்தம் கொடுத்தாள். அந்தப் பெண் அதற்குள் கழுதை மேல் ஏறியிருந்தாள். வீட்டுச் சொந்தக்காரி குழந்தையை அந்தப் பெண்ணின் கையில் திரும்பக் கொடுத்தாள். அவள் மீண்டும் அதை வாங்கி தன் மார்புடன் சேர்த்து அணைத்துக் கொண்டாள். வீட்டிற்குள்ளிருந்து மூன்று நான்கு பெண்கள் இருட்டினூடே அமைதியாக நடந்து வெளியே வந்தார்கள்.  அந்த ஆண் கழுதையின் மூக்கணாங் கயிறைப் பிடித்தான். கழுதை மேல் அமர்ந்திருந்த பெண் எல்லோரையும் பார்த்துச் சொன்னாள்: “நன்றி. எங்களுக்கு பாதுகாப்பு தந்ததுக்கு நன்றி. என் குழந்தையோட நன்றி. உங்களுக்கு பதிலுக்குப் பதில் உபகாரம் செய்ய எங்களால முடியல...”

வீட்டுச் சொந்தக்காரி சொன்னாள்: “ம்... உன் மகன் வளர்ந்து ராஜாவா ஆகுறப்போ எங்களையும் காப்பாற்றச் சொல்லு. நாங்க விபச்சாரிகள். ஆனா, அம்மாவோட வார்த்தைகளை அவன் கட்டாயம் கேட்பான்...”

கோவேறு கழுதை நடக்க ஆரம்பித்தது.

விலைமாதர்கள் இல்லத்தின் சொந்தக்காரி முன்னால் ஓடிச்சென்று சொன்னாள்: “அந்தப் பட்டாளக்காரனையும் காப்பாற்றணும். உங்களுக்கு நல்லது நடக்கட்டும்!”

அடுத்த வளைவு திரும்பி ஒற்றையடிப் பாதை வழியாக அந்த ஆணும் கோவேறு கழுதையம் அந்தத் தாயும் குழந்தையும் இருட்டுக்கு மத்தியில் மறைந்தே போனார்கள்.

விலை மாதர்கள் இருட்டினூடே பட்டாளக்காரனைத் தாண்டி வீட்டிற்குள் போனபோது அவன் உறக்கத்தில் முணுமுணுத்துக் கொண்டிருந்தான்: “தண்ணி சூடாயிருச்சா?”

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.