Logo

தூங்கச் செல்லும் பறவைகள்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 6196
thunga-chellum-paravaigal

சாயங்காலத்திற்கு சற்று முன்பு ஒரு வெள்ளை நிற அம்பாசிடர் கார் அந்த மிகப் பெரிய  மாளிகையின் வாசலுக்கு வந்தது.

உண்ணிராஜா தனியாக உட்கார்ந்திருந்தார். அவருடைய மனைவியும் பிள்ளைகளும் பேரப் பிள்ளைகளும் அவர்களுடைய பூர்வீக வீட்டுக்கு ஓணம் பண்டிகையைக் கொண்டாடுவதற்காகச் சென்றிருந்தார்கள். வேலைக்காரர்களின் ஆரவாரம் வீட்டின் பின்பகுதியில் அவ்வப்போது கேட்டுக் கொண்டிருந்தது.

காரிலிருந்து இறங்கி தன்னை நோக்கி நடந்துவரும் பெண்ணைப் பார்த்து உண்ணிராஜா ஆச்சரியப்பட்டார். உமாவா? முப்பது வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அவர் அவளைப் பார்க்கிறாரோ? அவள் முற்றிலும் மாறி விட்டிருந்தாள். தேய்ந்து போய்விட்ட நிலவைப்போல உமா ஆகிவிட்டாளே! முன்பிருந்த பெண்மைக்கே உரிய அழகு எங்கு போனது? மெலிந்து, வெளிறிப்போய் காணப்படும் இந்தப் பெண்ணா ஒரு காலத்தில் அவருடைய காதல் சின்னமாக இருந்த உமாதேவி?

“உமா, உனக்கு வழி தவறிவிட்டதா? இங்கே வரவேண்டுமென்று எப்படித் தோன்றியது?'' அவர் கேட்டார்.

வாசலில் இருந்த படியின்மீது நின்று கொண்டு அவள் அவரையே வெறித்துப் பார்த்தாள். நரை ஏறிவிட்டிருந்த தலைமுடி, சவரம் செய்ய மறந்துவிட்டிருந்தார். தாடிமீது வளர்ந்திருந்த சிறுசிறு உரோமங்கள், காய்ந்து வறண்டுபோய் காணப்பட்ட சந்தனக்குறி, அழுக்கடைந்த பூணூல்... அவள் கண்களை சுருக்கிக் கொண்டு புன்னகை புரிந்தாள்.

“தம்புரான், உங்களிடம் மாறுதல் எதுவுமில்லை.'' அவள் சொன்னாள்.

“உமா, எப்போதிருந்து உனக்கு நான் தம்புரானாக ஆனேன்? என்னை "உண்ணீ' என்று அழைக்கக்கூடிய ஒரே நாயர் பெண் நீதான். ஞாபகத்தில் இல்லையா?'' அவர் கேட்டார்.

அவள் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள். அவளுடைய அந்தச் சிரிப்பிற்கு முப்பது வருடங்களாக எந்தவொரு மாறுதலும் உண்டாகவில்லை. ஒரு காலத்தில் அவளுடைய அந்த குலுங்கல் சிரிப்பைக் கேட்டு தான் எந்த அளவிற்கு பொறாமைப் பட்டிருக்கிறோம் என்பதை அவர் நினைவுப்படுத்திப் பார்த்தார். நகரத்திலிருந்து கோடை விடுமுறைக்கு மட்டும் கிராமத்திலிருந்த பூர்வீக வீட்டுக்கு வரும் வசதி படைத்த சிறுமி எப்போதும் சிரித்துக் கொண்டேயிருந்தாள். உலகத்தை சிரிக்கச் செய்வதற்காகவே தெய்வம் தன்னைப் படைத்திருக்கிறது என்பதைப்போல அவளுடைய செயல் இருக்கும். தன்னுடைய அரண்மனையைப் போன்ற மாளிகைக்குள் வேட்டைக்காரன் பாட்டு நடந்து கொண்டிருந்தபோதுகூட, அவற்றைக் கிழித்துக்கொண்டு உமா சிரித்தாள். அவளுடைய பாட்டி திட்டிய போது, அவள் சொன்னாள்: "எனக்கு சிரிப்பு வருகிறது. நான் என்ன செய்வது?'

வருடத்திற்கொருமுறை அவள் வரும்போது மட்டுமே தான் உயிருடன் இருப்பதைப் போன்ற தோணல் அவருக்கு உண்டாகும். அவளுடைய பட்டாடைகள்... அவளுடைய ஆங்கில வார்த்தைகள்... அவற்றுடன் கலந்த கொஞ்சல்கள்... அவளுடைய குலுங்கல் சிரிப்புகள்... அவை அவருடைய வாழ்க்கைக்கு மெருகு சேர்த்தன. அவளுக்காகக் காத்திருக்கக்கூடிய ஒன்றாக அவருடைய வாழ்க்கை மாறியது.

“உண்ணி, நீங்கள் ஏன் என்னை உட்காரும்படிக் கூறவில்லை? மனைவி கோபித்துக் கொள்வாள் என்ற பயமிருக்கிறதா என்ன?'' உமா கேட்டாள்.

“இல்லை... நான் கூறாவிட்டாலும்... உமா, உனக்கு இங்கே உட்காருவதற்கு உரிமை இருக்கிறது. இங்கு யாருமில்லை. அவளுடைய வீட்டுக்குப் போயிருக்கிறாள். மூன்று ஓணங்களுக்குப் பிறகு திரும்பி வருவாள்.'' அவர் சொன்னார்.

“நான் குருவாயூர் பஜனைக்காக வந்தேன். ஒரு ஹோட்டலில் அறை எடுத்தேன். ஏழு நாட்கள் மனதில் நினைத்துக்கொண்டு கடவுளைத் தொழும்படி எல்லாரும் சொன்னார்கள்.'' அவள் சொன்னாள்.

அவளுடைய புன்னகை நம்பமுடியாதவளின் புன்னகையாக இருந்தது. எதையும் எப்போதும் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கும் ஒரு அறிவாளியின் புன்னகை.

“உமா, உனக்கு கோவில்களில் நம்பிக்கை இல்லையென்று நான் பத்திரிகைகளில் வாசித்திருக்கிறேன்.'' அவர் சொன்னார்.

“எனக்கு புற்றுநோயின்மீதும் நம்பிக்கை இல்லாமல்தான் இருந்தது- அது என்னை பாதிக்கும் வரை...'' அவள் சொன்னாள். அந்த நிமிடத்தில் அவளுடைய சிரிப்பு மிகவும் வேதனை உண்டாக்கக் கூடியதாக இருப்பதைப் போல அவர் உணர்ந்தார். தனக்கு புற்றுநோய் இருக்கிறது என்று கூறும்போது அவள் அழுதிருக்கலாம். அந்த அழுகை அவருடைய இதயத்தை இந்த அளவிற்கு வேதனை கொள்ளச் செய்திருக்காது.

“உமா, நான் உனக்காக நாளை ஒரு ஹோமம் நடத்தப்போகிறேன். உனக்கு சுகம் கிடைக்கும். என்னால் உறுதியாக அதைக் கூறமுடியும்.'' அவர் சொன்னார்.

“இறந்தாலும் ஒருவகையான சுகம் கிடைக்கும் உண்ணீ!'' உமா சொன்னாள்.

“இறக்க வேண்டிய வயதாக வில்லை.'' அவர் சொன்னார்.

அவள் தன்னைச் சுற்றிலும் அலட்சியமாக கண்களை ஓட்டினாள். தென்னந்தோப்புகளையும் வயல்களையும் தாண்டி வானத்தின் விளிம்பு சிவந்து காணப்பட்டது. பாம்புப் புற்றுக்கு அருகிலிருந்த இலஞ்சி மரத்திற்கு மேலே வெளிறிப் போன ஒரு நட்சத்திரம் உதயமாயிருப்பதை அவள் பார்த்தாள்.

“முதல் நட்சத்திரம்...'' அவள் முணுமுணுத்தாள்.

“ஆமாம்... வியாழன்...'' அவர் சொன்னார்.

“உண்ணி, நான் வியாழன் நட்சத்திரத்தைப் பார்த்து ஒரு சுலோகம் சொல்லுவேனே? அது உங்களுக்கு ஞாபகத்தில் இருக்கிறதா? நினைப்பவை நடக்க வேண்டும் என்பதற்காக நான் அந்த சுலோகத்தை நாற்பத்தொரு நாட்கள் கூறினேன். மனதோடு ஒன்றிப்போய் கூறினேன். இருந்தும்....? எனக்கு எதுவுமே கிடைக்கவில்லை...'' உமா சொன்னாள்.

“உமா, உனக்கு என்ன கிடைக்கவில்லை? அனைத்தும் கிடைத்திருக்கின்றனவே! வேண்டிய அளவிற்கு செல்வம், புகழ்... இனி என்ன வேணும்?'' அவர் கேட்டார்.

உமா மேற்கு திசையைப் பார்த்தவாறு எந்த விதமான சலனமும் இல்லாமல் அமர்ந்திருந்தாள். அவளுடைய கண்களில் சூரியன் மறையும்போது காணப்படும் சிவப்பு, மாலை மயங்கும் நேரத்தில் ஏற்றப்படும் திரியைப்போல பிரகாசமாகத் தெரிந்தது. அந்த தளர்ச்சியடைந்த கண்கள் விளக்கு வைக்கப்பட்ட மாடங்களாக மாறின. பேசுவதற்கு முயற்சித்த போது அவளுடைய தொண்டை தடுமாறியது.

“இந்த அளவிற்கு ஏராளமான புகழ்மாலைகளும் பெருமைகளும் கிடைத்த ஒரு பெண் எழுத்தாளர் கேரளத்தில் இருக்கிறாளா?'' அவர் கேட்டார்.

"ரத்னாஷ்டாவத வஸ்த்ரராசிமமலம்

தக்ஷால்கிரந்தம் கரா

தாஸீனம் விபணவ்கரம் நிததநம்

ரத்னாதிராசவ் பரம்

பீதாலேபன புஷ்பவஸ்த்ரமகிலா

லங்கார ஸம்புஷிதம்

வித்யாஸாகர பாரகம் ஸுரகுரும்

வந்தே ஸுவர்ணப்ரபாம்...'

உமா மென்மையான குரலில் கூறினாள்.

“உமா, நீ எதையும் மறக்கவில்லை. படித்த சுலோகங்கள், வழிபாட்டு வார்த்தைகள்... எதையும் நீ மறக்கவில்லை. ஆச்சரியம் தான்...'' அவர் சொன்னார்.

“அர்த்தம் புரியாமலேயே கூற ஆரம்பித்தேன். அனைத்தும் மனப்பாடம் ஆயின. அர்த்தம் தெரிந்துகொள்ளாத சொற்களின் விளையாட்டாக என்னுடைய வாழ்க்கை ஆகிவிட்டது. நான் ஒரு இயந்திர பொம்மையாக ஆகிவிட் டேன்.'' உமா சொன்னாள்.


“இந்த கிராமத்தில் வாழவேண்டும் என்றுதான் நான் ஆசைப்பட்டேன். கிரியத்தெ நாயர்களின் பரம்பரையாகத் தொடர்ந்து இங்கேயே இருக்க வேண்டுமென்று நான் விரும்பினேன். எங்களுடைய வம்சத்தைச் சேர்ந்த இளம்பெண்கள் பூணூல் அணிந்திருப்பவர்களை மட்டுமே கணவர் களாக ஏற்றுக்கொண்டார்கள். சமூகம் எங்களுக்கு அளித்த வாழ்க்கை எனக்கு சந்தோஷம் அளிக்கக் கூடியதாகவே இருந்தது. மதிய நேரத்தில் தூங்குவது, மாலை நேரத்தில் நான்கு திசைகளிலும் திரிகள் ஏற்றி வைப்பது, பிள்ளைகளைப் பெற்றெடுப்பது, பொழுது புலர்வதற்கு முன்னால் கணவனை அனுப்பி வைப்பது... அந்த வாழ்க்கை முறை எனக்குப் போதும்...'' உமா தொடர்ந்து சொன்னாள்.

அவர் திடீரென்று ஒருமாதிரி ஆகிவிட்டார். உமா என்ன கூறிக்கொண்டிருக்கிறாள்? அவளை நம்பு வதற்கான தைரியம்கூட தனக்கு இல்லை என்பதைப் போல அவருக்குத் தோன்றியது.

“ஒரு காலத்தில்... உமா, உனக்கு இந்தச் சிறிய கிராமத்தின்மீது ஆழமான வெறுப்பு இருந்தது அல்லவா? கழிவறைக்குச் செல்லாமல் நிலத்தில் செடிகளுக்கு நடுவில் உட்கார்ந்துகொண்டு மலம் கழித்துக் கொண்டிருப்பவர்களைப் பற்றிக் கூறி நீ சிரிப்பாய் அல்லவா?''

“சிரித்திருக்கலாம். ஆனால், அந்தச் சிரிப்பு கிண்டல் நிறைந்த சிரிப்பல்ல. என் ஆன்மாவை வளர்த்த தாய் என்றென்றைக்கும் இந்த கிராமம்தான் என்றே நான் மனதிற்குள் நினைத்தேன். நான் ஒரு நாகரிகப் பெண்ணாக வாழவேண்டும் என்று பிடிவாதமாக ஆசைப்பட்டது என் தந்தைதான். என் தந்தை எனக்காக தேர்ந்தெடுத்த கணவருக்கும் அதுதான் விருப்பமாக இருந்தது. நான் நடித்து... நடித்து... எல்லாரிடமும் நல்ல பெயர் வாங்கினேன்.'' உமா சிரித்துக்கொண்டே சொன்னாள். அவள் சிரிக்கும்போதும் உரையாடும் போதும் மேலும் கீழும் மூச்சு விடுவதைப்போல அவருக்குத் தோன்றியது. அந்த மூச்சு அவளுடைய குரலை ஆக்கிரமித்து பாதிப்படையச் செய்தது.

“உமா, உனக்கு பருகுவதற்கு சீரக நீர் தரட்டுமா? இல்லாவிட்டால்... மோர் வேண்டுமா? எலுமிச்சை இலையை அரைத்துப் போட்டு தயார் பண்ணிய மோரை... உமா, நீ சிறு பிள்ளையாக இருந்தபோது தினமும் பருகுவாய். அதையெல்லாம் நான் மறக்க வில்லை.'' அவர் சொன்னார்.

“மோரையும் சீரக நீரையும் இந்த நேரத்தில் நான் பருகுவதில்லை.'' அவள் சொன்னாள்.

“அப்படியென்றால்... உமா, இந்த நேரத்தில் என்ன பருக வேண்டுமென்று நீ விரும்புகிறாய்?'' அவர் கேட்டார்.

“நான் சாயங்கால நேரத்தில் ஷெரி பருகுவேன். வானத்தில் பறவைகள் கூடுகளுக்கு வேகமாக பறந்து செல்வதைப் பார்க்கும்போது, நான் கவலையில் மூழ்கி விடுவேன். இரவில் சென்று படுப்பதற்கு எனக்கு இடமில்லையே! காமத்திற்காக அல்லாமல் கட்டிலில் ஓய்வு எடுப்பதற்கு என்னால் முடிந்ததில்லை. மாலை நேரத்தில், நான் ஷெரி குடிக்க வேண்டும். இல்லா விட்டால் வெள்ளை ஒயின்...'' உமா சொன்னாள்.

அவர் மீண்டும் ஒரு மாதிரி ஆகிவிட்டார். தன்னுடைய முகத்தை இருட்டில் வைத்துக்கொண்டு அவர் இப்படியும் அப்படியுமாக நடக்க ஆரம்பித்தார்.

“உமா, உனக்கு என்ன உதவி வேண்டுமென்றாலும், நான் செய்து தர தயாராக இருக்கிறேன்.'' அவர் சொன்னார்.

“உண்ணி, எனக்கு என்ன உதவியை நீங்கள் செய்து தரமுடியும்? கடந்து சென்ற இளமை திரும்பவும் கிடைக்காதே! கணவரின் விருப்பத்திற்கு எதிராக நான் எந்தச் சமயத்திலும் நடந்தது இல்லை. கட்டளை என்ற கயிறைக் கொண்டு அவர் என்னுடைய செயல்களை இயக்கிக் கொண்டிருந்தார். சந்தோஷப்படுத்த வேண்டியவர்களை நான் சந்தோஷப்படுத்த வேண்டி இருந்தது. காமம் அதிகமாகி பைத்தியம் பிடித்த நிலையில் இருப்பவர்களிடமும் நான் காதல் உணர்வு எழச்செய்தேன். அப்படிப்பட்ட முக்கிய மான நிமிடங்களில் நான் என் கணவரின் எண்ணங்களிலிருந்து சற்று விலகிச் சென்றிருக்க லாம்.'' உமா சொன்னாள்.

“உமா, நிறுத்து. இவற்றையெல்லாம் கேட்கக்கூடிய மன பலம் எனக்கு இல்லை. நான் ஒரு அப்பிராணி கிராமத்து மனிதன். உமா, நான் உன்னை உயிருக்கும் மேலாக காதலித்து வளர்ந்தவன். ஒரு திருமண ஆலோசனை நடத்துவதற்கு தைரியம் இல்லாதவன்...'' அவர் தழுதழுத்த குரலில் கூறினார்.

“வாங்க... எனக்கு அருகில் வாங்க...'' அவள் அழைத்தாள்.

அவர் அவளின் அருகில் சென்று வெறும் தரையில் அமர்ந்தார். அவள் அவருடைய நரை ஏறியிருந்த தலைமுடிகளை ஒதுக்கி விட்டாள்.

“தைரியம் இல்லாமல் போனதும் நல்லதுதான். உண்ணி, என் தந்தை உங்களுக்குக் கொடுத்திருக்க மாட்டார். என்னை நகர நாகரிகத்திற்கு பலி கொடுப்பதற்கு என் தந்தை எப்போதோ உறுதியாகத் தீர்மானித்து விட்டிருந்தார்.'' அவள் சொன்னாள்.

“உமா, உன்னைப் பற்றி பத்திரிகைகளிலும் வார இதழ்களிலும் அச்சடித்து வரும் விஷயங்களை  நான் ஆர்வத்துடன் படித்தேன். ஆச்சரியத்துடன் படித்தேன். உன் வாழ்க்கை ஒரு மிகப் பெரிய வெற்றி என்று நான் நினைத்தேன். இப்போது நான் இந்த விஷயங்களைப் பார்த்து கவலைப்படுவதற்கு அதுதான் காரணமாக இருக்க வேண்டும்.'' அவர் சொன்னார்.

“பரம்பரை பரம்பரையாக இருந்து வந்திருக்கும் ஒரு வாழ்க்கை முறையை சமூகம் நமக்கு தயார் பண்ணி வைத்திருக்கும். அதை ஏற்றுக்கொள்ளாமல் வேறொன்றை ஏற்றுக்கொண்டால், வாழ்க்கை வெற்றி பெறாது. எனக்கு பணமோ, புகழோ தேவையில்லை உண்ணீ!'' அவள் மெதுவான குரலில் சொன்னாள்.

காரில் அமர்ந்தவாறு ஓட்டுனர் ஃபோன் செய்தான்.

“வாடகைக் காரின் ஓட்டுனருக்கு பொறுமை இல்லாமல் போயிருக்க வேண்டும். நான் கிளம்பட்டுமா? நாளை முதல் பஜனை... பக்தி இல்லாதவளின் பஜனையைக் கொண்டு குருவாயூரப்பன் திருப்திப்படுவாரா?''

உமா குலுங்கிக் குலுங்கி சிரித்துக்கொண்டே காரை நோக்கி நடந்து சென்றாள். அவளுடைய கால்கள் தடுமாறின. வானத்தில் நட்சத்திரங்கள் வந்து நிறைந்திருப்பதை அவர் புரிந்துகொண்டார்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.