Logo

வத்சராஜன்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 7203
vathsarajan

த்சராஜன் என்ற சிறுவனைப் பார்க்கும்போதெல்லாம் என் மனதிற்குள் அவனுக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்துவிடுவேன். 'வத்சராஜா'  உன்னை எப்போதும் கடவுள் காப்பாற்றட்டும்!'

இந்த பிரார்த்தனை என் மனதின் அடித்தளத்திலிருந்து வருவது. இது வருவதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது.

நாங்கள் இந்த ஊருக்கு வந்து வசிக்க ஆரம்பித்து பல வருடங்களாகி விட்டன. மகளும், தாயும் நானும் மட்டும் முதலில் இருந்தோம். பிறகு மகன் வந்தான். அனீஷ்பஷீர். எங்களுக்கு அதாவது- எனக்கு பொதுவாக யாரையுமே தெரியாது. எங்களைச் சுற்றிலும் இருப்பவர்களில் அதிகம் இந்துக்கள்தான். மகளின் தாய்க்கு பக்கத்து வீட்டுக்காரர்களையும் மற்றவர்களையும் ஓரளவுக்குத் தெரியும். இந்து மதத்தைச் சேர்ந்த பெண்களும் ஆண்களும் இந்த வீட்டைத் தேடி வருவார்கள். அப்படி வரும் சிலரை எனக்கு அறிமுகமுண்டு.

நான் வீட்டை விட்டு கீழே இறங்கி ஒற்றையடிப் பாதை வழியாக நடந்து பிரதான சாலையை அடைந்து பஸ்ஸில் ஏறி ஐந்தாறு மைல் தூரத்தில் இருக்கும் நகரத்திற்குச் செல்வேன். அங்கு வாங்க வேண்டிய பொருட்களை வாங்கிக் கொண்டு பார்க்க வேண்டியவர்களைப் பார்த்துவிட்டு மீண்டும் வீட்டுக்குத் திரும்பி விடுவேன். மொத்தத்தில் என்னுடைய வாழ்க்கை எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக ஓடிக் கொண்டிருந்தது. விசாலமான நிலப்பரப்பில் மரங்களும் பறவைகளும். சுருக்கமாகச் சொல்லப்போனால் நாங்கள் இருக்கும் வீடு ஒரு பர்ணசாலையைப் போல இருக்கும். என் வாழ்க்கை வண்டி இதில்தான் ஓடிக் கொண்டிருக்கிறது. ஏதாவது எழுதத் தோன்றுகிறபோது எழுதுவேன். இல்லாவிட்டால் படிப்பேன். சில நேரங்களில் ரேடியோ கிராமை எடுத்து வைத்துக் கொண்டு அதிலிருந்து வரும் இசையை மெதுவாக வைத்து கேட்டுக் கொண்டிருப்பேன். அதுவும் இல்லாவிட்டால் நிலத்தில் இறங்கி ஏதாவது செய்து கொண்டிருப்பேன். எங்கள் வீட்டைத்தாண்டி இரண்டு வீடுகள் தள்ளி பொது சாலையை ஒட்டி இருக்கும் ஒரு சிறு வீட்டில்தான் வத்சராஜன் இருக்கிறான். வீட்டின் பெயர் மாதேத்து வீட்டில். கூலி வேலை செய்யும் இரண்டு மூன்று சகோதரர்களும் ஒரு சகோதரியும் அவனுடன் இருக்கிறார்கள். தாய், தந்தை இருவரும் இல்லை. சித்தி இருக்கிறாள். அவளுக்கு வேறு குழந்தைகள் கிடையாது. அவன் தந்தை ஒரு பீடி சுற்றும் தொழிலாளியாக இருந்தான். வத்சராஜன் ஏதோ கொஞ்சம் படித்திருந்தான். மெயின் ரோட்டின் அருகில் இருக்கும் பஞ்சாயத்துக்குச் சொந்தமான வாசகசாலையில் தான் வத்சராஜன் வேலை பார்க்கிறான். லைப்ரேரியன் வேலை மாதமொன்றுக்கு அவனுக்கு அறுபது ரூபாய் சம்பளம். குறைந்த சம்பளம்தான். கடைசியில் வாங்கும் பொருட்களின் விலையோ மிக மிக அதிகமாகி விட்டது. வாழ்க்கை நடத்துவது என்பது பொதுவாகவே கஷ்டமான ஒரு விஷயம்தான். அறுபது ரூபாயை வைத்து எப்படி வாழ்க்கை நடத்த முடியும்? இப்படிப்பட்ட ஒரு மனிதனுக்கு எதிர்பாராத வகையில் ஒரு தொகை கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவன் என்ன செய்வான்?

வத்சராஜன் என்ன செய்தான் என்பதை நான் கூறுகிறேன். தனிப்பட்ட சில சிறப்பு குணங்கள் சில மனிதர்களுக்கு எங்கேயிருந்து கிடைக்கின்றன? பிறக்கும்போதே அது அவர்களுக்குக் கிடைத்து விடுகிறதா? இல்லாவிட்டால் மனிதர்களுடன் பழகுவது மூலம் கிடைக்கிறதா? வத்சராஜனைப் பற்றி எனக்கொன்றும் அதிகமாகத் தெரியாது. ஒரு விஷயம்- நாங்கள் இந்த ஊரில் வந்து குடியேறிய பிறகு அவனை நான் எப்போதாவது பார்த்ததாக ஞாபகத்தில் இல்லை. ஒரு வேளை பார்த்தாலும் பார்த்திருக்கலாம். சரியாக கவனிக்காமல் இருந்திருப்பேன். ஏதாவதொரு விதத்தில் அவனுடன் தொடர்பு உண்டாகும் போதுதானே, நமக்கே அவனைப் பற்றிய பல விஷயங்களும் தெரிய வருகின்றன!

ஒருநாள் என்றைக்கும் போல இல்லாமல் சீக்கிரமே படுக்கையை விட்டு எழுந்தேன். வேகமாக குளித்து முடித்தேன். தேனீர் குடித்து, ஆடைகளை அணிந்தேன். குடையைக் கையில் எடுத்துக் கொண்டு வாசக சாலையத் தாண்டி சாலையில் இறங்கி பஸ்ஸுக்காக காத்து நின்றேன். என் கையில் சிவப்பு வண்ணத்தில் ஒரு நோட்டுப் புத்தகம் இருந்தது. அது நான் பென்ஷன் வாங்குவதற்கான புத்தகம். என் நம்பர் எஃப் எஃப் 699.

அதை நான் என்னுடைய இடது பக்க கை இடுக்கில் இறுக்கமாக இருக்குமாறு வைத்திருந்தேன். பஸ் வருகிறதா என்று பார்த்தவாறு நான் நின்றிருந்தேன். பஸ்ஸில் ஏறி நகரத்திற்குச் சென்று தூரத்தில் இருக்கும் சப் ட்ரெஷ்ஷரிக்குப் போய் பென்ஷன் பணத்தைக் கையெழுத்துப் போட்டு வாங்க வேண்டும். வைக்கம் முகம்மது பஷீர் என்ற எனக்கு பென்ஷன் கிடைக்கிறது என்பதே ஒரு தமாஷான விஷயம்தான். தமாஷ் என்று கூறுவதை விட ஆச்சரியமான ஒரு விஷயம் என்று சொல்வதே பொருத்தமானது. உண்மையாகவே அது ஒரு ஆச்சரியமான விஷயமாகத்தான் என் மனதிற்குப் படுகிறது. நான் ஒன்றும் அரசாங்க ஊழியன் இல்லை. அமைதியாக எழுதிக் கொண்டிருக்கும் ஒரு எழுத்தாளர். எனக்கு எதற்கு பென்ஷன் கிடைக்கிறது?

பல வருடங்களுக்க முன்னால் நம்முடைய தாய்நாடான இந்தியா ஒரு அடிமை நாடாக இருந்தது. எங்கேயோ இருக்கும் பிரிட்டிஷ் அரசாங்கமும் இங்கேயே இருந்த சில நாட்டு ராஜாக்களும் இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருந்தார்கள். பிரிட்டிஷ் அரசாங்கம் ஒழிய வேண்டும். இந்தியா விடுதலை பெற வேண்டும். இந்தியா இந்தியர்களால் ஆளப்பட வேண்டும். மஹாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, மவுலானா அபுல்கலாம் ஆஸாத்- இப்படி எத்தனை எத்தனையோ விடுதலை வீரர்கள் தோன்றினார்கள். இந்தியா முழுக்க போராட்டம் உண்டானது. ஆண்களும் பெண்களும் எத்தனையோ லட்சம்பேர் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டார்கள். அவர்களுக்கு அடியும், இடியும், சிறைத் தண்டனையும், தூக்குத் தண்டனையும் கிடைத்தன. கடைசியில் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. பிரிட்டிஷ் அரசாங்கமும், நாட்டு ராஜாக்களும் நாட்டை விட்டுப் போனார்கள். மக்களாட்சி மலர்ந்தது. இந்தியர்கள் தேர்ந்தெடுத்த இந்தியர்கள் ஆட்சி செய்ய ஆரம்பித்தார்கள். எல்லா விஷயங்களுமே நல்ல முறையில் போய்க் கொண்டிருந்தன. இப்படியே நாட்கள் கடந்தோடி விட்டன. இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தை கிட்டத்தட்ட புதிய தலைமுறை மறந்தேபோனது. இந்தியா சுதந்திரமடைந்து வருடங்கள் எவ்வளவோ ஆகிவிட்டன அல்லவா? சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்களில் கொஞ்சம் பேராவது உயிருடன் இருப்பார்கள் அல்லவா? அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று ஜவஹர்லால் நேருவின் மகள் இந்திராகாந்திக்குத் தோன்றியது. அப்போது அவர் சுதந்திர இந்தியாவின் பிரதம மந்திரியாக இருந்தார். ஆறு மாதங்களுக்கும் மேலான அரசியல் குற்றத்திற்காக சிறைத்தண்டனை பெற்றவர்களுக்கு மாதமொன்றுக்கு முந்நூறு ரூபாய் வீதம் அரசியல் பென்ஷன் தர கேரளா அரசாங்கம் தீர்மானித்தது. அப்போது கேரளத்தின் முதலமைச்சராக இருந்தவர் சி.அச்சுதமேனன்.


நானும் ஒரு பழைய சுதந்திரப் போராட்டக்காரன்தானே! அரசியல் பென்ஷன் வாங்க எனக்குத் தகுதி இருக்கிறது. ஆனால், விடுதலைப் போராட்டத்தின் போது சிறையில் கிடந்தேன் என்று சொன்னால் மட்டும் போதாது. சிறைத்தண்டனை அனுபவித்ததற்கான தெளிவான சிறைச் சான்றிதழ்களைத் தயார் பண்ணித் தர வேண்டும். ஆனால், சிறைகளில் அதற்கான அடையாளங்கள் இருக்குமா என்ன? வருடங்கள் எவ்வளவோ கடந்து ஓடிவிட்டனவே! இருந்தாலும் சிறை அதிகாரிகளைப் பாராட்டத்தான் வேண்டும். ஒவ்வொருவரும் சிறையில் இருந்ததற்கான அத்தாட்சிகளை அவர்கள் சரியாக வைத்திருக்கவே செய்கிறார்கள். சிறைச் சான்றிதழ்கள் எந்தவித பிரச்சினையுமில்லாமல் கிடைத்தன.

கோழிக்கோடு மாவட்ட சிறையில் நான் 1930 ஆம் ஆண்டு இருந்திருக்கிறேன். என்னுடைய எண்: 8962.

கண்ணூர் சிறையில் நான் இருக்கும் போது என்னுடைய எண்: 6012.

திருவனந்தபுரம் சிறையில் இருக்கும்போது என்னுடைய எண் 5091.

நான் மேலே சொன்ன சிறைகளில் பல வருடங்கள் கடுங்காவல் தண்டனைகள் அனுபவித்திருக்கிறேன். இது இல்லாமல், கணக்குப்பார்க்க முடியாத அளவிற்கு எத்தனையோ முறை போலீஸ் லாக்கப்பில் இருந்திருக்கிறேன். ஒன்பது மாதத்திற்கும் மேலாக கொல்லம் கஸ்பா போலீஸ் லாக்கப்பில் கிடந்த ஞாபகம் இப்போது கூட தெளிவாக இருக்கிறது. போலீஸ் லாக்கப்பிலும் சிறையிலும் இருந்து நான் கதைகள் எழுதியிருக்கிறேன். டைகர், போலீஸ்காரனின் மகன், கிழவன் பணிக்கர் ஆகிய கதைகள் நான் கஸ்பா போலீஸ் ஸ்டேஷன் லாக் அப்பில் அடைக்கப்பட்டு கிடக்கும்போது எழுதியவையே. திருவனந்தபுரம் மத்திய சிறைச்சாலையில் இருக்கும்போது எழுதியதுதான் நகைச்சுவை நிறைந்த ‘காதல் கடிதம்’. மலபார் போலீஸ் மட்டுமே என்னைத் தாக்கியிருக்கிறது. தாக்கினர் என்றால் அடித்தும், இடித்தும் கால்பந்தை உதைப்பது மாதிரி போலீஸ்காரர்கள் அங்குமிங்குமாய் உதைத்தும், பிடித்துத் தள்ளியும் விளையாடினார்கள். கடைசியில் குனிந்தவாறு நிறுத்தி இரண்டு கைகளையும் சுருட்டி வைத்துக் கொண்டு ஓங்கி ஓங்கி ஆவேசமாகக் குத்தினார்கள். அவர்கள் அப்படிச் செய்ததற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. முதல் காரணம்: முஸ்லிம். இந்த இரண்டு காரணங்களுக்காகவும் என்னை அவர்கள் ஒரு வழி பண்ணிவிட்டார்கள். இந்த விவரங்கள் அனைத்தையும் நான் ‘அம்மா’ என்ற கதையில் முழுமையாகக் கூறியிருக்கிறேன். இந்தியாவைச் சேர்ந்த போலீஸ்காரர்களுக்கும் எதிராளிகளுக்கும் இந்தியா நிச்சயம் விடுதலை அடையும் என்ற நம்பிக்கை சிறிதுகூட இருந்ததில்லை என்பதே உண்மை. அதைப் போலவே இங்கிருந்த பெரும்பாலான அறிவாளிகளுக்கும் பெரும்பாலான இலக்கியவாதிகளுக்கும்கூட இந்தியா விடுதலை பெறும் என்ற நம்பிக்கையே கிடையாது. தம்புரான்மார்களும், மகாராஜாக்களும் இந்தியாவை ஆளுவார்கள் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள். அப்படியொரு நம்பிக்கையும் கொண்ட ஒரு அறிவாளி நண்பன் எனக்கும் இருந்தார். அவர் ஒரு பத்திரிகையை நடத்திக் கொண்டிருந்தார். அதில் மஹாத்மா காந்தியை எதிர்த்து பல கட்டுரைகளையும் அவர் எழுதிக் கொண்டிருப்பார். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடக் கூடியவர்கள் முழுமையாக பைத்தியக்காரர்கள். பையத்திக்காரர்களின் தலைவர் தான் மிஸ்டர் காந்தி என்றெல்லாம் அவர் எழுதிக் கொண்டிருப்பார். இதையெல்லாம் தாண்டித்தான் இந்தியா சுதந்திரம் என்ற ஒன்றை அடைந்தது. எல்லா இடங்களிலும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அரசாங்கங்கள் உருவாயின. அப்போது நம்முடைய அறிவாளி நண்பர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து கதர் உடை அணிந்து அமைச்சராகவும் ஆனார். அதைப் பார்த்து உண்மையிலேயே நான் எரிச்சல் அடைந்து விட்டேன். சொல்லப்போனால் 1929 ஆம் ஆண்டிலிருந்து நான் கதராடை அணிந்து வருகிறேன். அந்தக் காலத்தில் கதராடை அணிந்த மனிதர் யாரையாவது பார்த்தால், அவரை அடித்து உதைத்து விட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்கள் நம்முடைய போலீஸ்காரர்கள். எல்லாம் முடிந்து இந்தியா சுதந்திரம் அடைந்தபோது நம்முடைய அறிவாளி, கேலியும், கிண்டலும் செய்த கதராடையை அணிந்து அமைச்சராகி விட்டார். இதைப்போல எத்தனையோ சந்தர்ப்பவாதிகள் கதராடை அணிய ஆரம்பித்தனர். அதனால் நான் கதராடை அணிவதை நிறுத்தி விட்டேன்.

நான் இந்தியாவின் விடுதலைக்காகப் போராடி இருக்கிறேன். உதை வாங்கியிருக்கிறேன். சிறைவாசம் அனுபவித்திருக்கிறேன். கதைகள் எழுதியிருக்கிறேன். நான் வாங்கிய அடி, உதைகளையும் சிறை வாழ்க்கையையும் இப்போது நடந்த மாதிரி நினைத்துப் பார்க்கிறேன்.

இந்திய அரசாங்கம் ஒவ்வொரு மாதமும் எழுநூறு ரூபாய் எனக்குப் பென்ஷனாக அனுப்பிக் கொண்டிருந்தது. கேரளா அரசாங்கம் மாதந்தோறும் முந்நூறு ரூபாய் தருகிறது. இதற்கு மேலாக தாமிர பத்திரங்கள். முதல் தாமிர பாத்திரம் தேசிய சாகித்ய அகாடமி ஃபெல்லோஷிப் என்ற முறையில் எனக்கு தரப்பட்டது. அதாவது இலக்கியத்திற்கு இரண்டாவது தாமிரப் பத்திரம் இந்தியா என்ற என் தாய்நாட்டின் விடுதலைக்காகப் போராடிய வீரர் என்பதற்காகத் தரப்பட்டது. அதை வாங்குவதற்காகச் சென்றிருந்தபோது முன்பு சுதந்திரத்திற்காகப் போராடிய எத்தனையோ வீரர்களை நான் பார்த்தேன். எத்தனையோ பேரைப் பார்க்க முடியவில்லை. எத்தனையோ பேர் அடியும் உதையும் வாங்கி சிறையிலேயே கிடந்து இறந்து போனார்கள். பலர் தூக்குமரத்தில் தொங்கவிடப்பட்டார்கள். உயிரோடு இருப்பவர்கள் கிழவர்களாகவும் கிழவிகளாகவும் ஆகிவிட்டார்கள். அந்தக் கூட்டத்திலேயே இளைஞனாக இருந்தவன் நான்தான்.

மத்திய அரசாங்கம் ராஷ்ட்ரீய பென்ஷன் தருவதாகச் சொன்னபோது ஒரு பென்ஷன் புத்தகம் தந்தது.

அதைத்தான் நான் என்னுடைய இடது கையின் இடுக்கில் இறுகப் பிடித்தவாறு வைத்திருந்தேன். லைன் பஸ் வந்தபோது நான் அதில் ஏறி நகரத்தில் இறங்கி வெயிலில் நடந்து சப் ட்ரெஷ்ஷரிக்குச் சென்றேன். ட்ரெஷ்ஷரியில் பென்ஷன் வாங்க வந்த கிழவிகளும் கிழவர்களும் ஏராளமாக நிறைந்திருந்தார்கள். ராஷ்ட்ரீய பென்ஷன் வாங்க வந்தவர்கள் மிகச்சிலரே. இளம் வயது பள்ளி ஆசிரியர்கள் சிலரும் அங்கு இருந்தார்கள். பள்ளிக் கூடத்திற்குத் தேவையான சம்பளப் பணத்தை வாங்குவதற்காக அவர்கள் வந்திருந்தார்கள். மொத்தத்தில் படு ஆரவாரமாகச் சூழல் இருந்தது. குண்டுகள் நிறைந்த துப்பாக்கிகளைக் கையில் வைத்த போலீஸ்காரர்கள், ட்ரெஷ்ஷரியில் பணம் செலுத்த வந்தவர்கள் எல்லாருமே அங்கு இருந்தார்கள். பென்ஷன் ஃபாரத்தில் ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டி, அதன்மேல் கையெழுத்துப் போட்டு முத்திரை அடிக்கும் ஆட்களின் முன்னால் பென்ஷன் வாங்க வந்தவர்களும் மற்றவர்களும் கூட்டமாக நின்றிருந்தார்கள். முத்திரை அடித்து விட்டார்கள் என்றால் அதற்குப் பிறகு ஒரே ஓட்டம்தான். பென்ஷன் புத்தகத்தையும் ஸ்டாம்ப் ஒட்டி கையெழுத்துப் போட்டு முத்திரை அடித்த ஃபாரத்தையும் தந்து ஒரு ஓட்டையைப் போல் இருக்கும் ஜன்னல் வழியாக டோக்கன் வாங்க வேண்டும். ஆனால், ஆட்கள் என்ன குறைவாகவா இருக்கிறார்கள்? எல்லோரும் வரிசையில் நின்றிருக்கிறார்கள். க்யூ மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கிறது. அப்போது ஒரு வயதான மனிதர் நிற்க முடியாமல் களைத்துப்போய் க்யூவிற்கு அருகில் வராந்தாவில் சுவரோடு உட்கார்ந்தார். வரிசையில் நின்றிருந்த ஒரு ஆள் கேட்டார்.


“என்ன ஆச்சு?”

“வாழ்க்கை முடியப் போகுது” - வயதானவர் கண்ணீர் மல்கக் கூறினார். “ஒண்ணுமில்ல... கஷ்டப்பட்டு நடந்து அஞ்சு மாசமா நான் வந்துக்கிட்டு இருக்கேன். அதை எடுத்துக்கிட்டவனுக்கு அதுனால என்ன லாபம் கிடைக்கப் போகுது? தெய்வம் அவனுக்கு அதற்கான தண்டனையைத் தரட்டும்.”

“என்ன விஷயம்?” வரிசையில் நின்றிருந்த ஒரு பென்ஷன்காரர் கேட்டார்.

“பாவம்... இவரோட பென்ஷன் புத்தகம் தொலைஞ்சு போச்சு. இந்த ட்ரெஷ்ஷரியில் வச்சுத்தான் அது காணாமல் போனது. ஏதோ ஒரு பென்ஷன்காரர் கையில் அது கிடைச்சிருக்கு. கிடைச்ச ஆளு துரோகம் செஞ்சிட்டு இருக்காரு. இந்த ஏழை மனிதனுக்கு அந்த பென்ஷன் பணம் மட்டுமே ஆகாரம். பென்ஷன் புத்தகத்தைக் காட்டாம இனிமேல் பென்ஷன் தரமாட்டாங்க!”

“வே பென்ஷன் புத்தகம் வாங்க முடியாதா?”

“அஞ்சு மாசமா முயற்சி பண்றார். ஆனா இதுவரை கிடைக்கலை. மனு கொடுத்தார். பணம் கட்டினார். கடிதங்கள் எழுதினார். கெஸட்டில் விளம்பரப்படுத்தினாங்க. அந்தப் பென்ஷன் புத்தகத்துல திருட்டுக் கையெழுத்துப் போட்டு வேறு யாராவது பணத்தை வாங்க வந்தாங்களான்னு பார்த்துக்கிட்டு இருக்காங்க. நாட்கள் இப்படி போய்க்கிட்டு இருக்கு. பாவம்... இந்த மனிதர் கஷ்டப்படுறார்...”

“உலகத்துல இருந்து உண்மை, தர்மம், நீதி, எல்லாமே இல்லாமப் போச்சு. என்னை நஷ்டப்படுத்துறவனுக்கு கடவுள் கூலியைத் தரட்டும்!”

பாவம் இந்த மனிதரை யார் இப்படி கஷ்டத்திற்குள்ளாக்குவது? கையில் அப்படியே கிடைத்திருந்தாலும், அதை உடனடியாக அதன் சொந்தக்காரரிடம் திருப்பிக் கொடுக்காமல் அதை எதற்கு அவர்கள் கையில் வைத்திருக்கிறார்கள்? பென்ஷன்காரர் ஒரு அரசாங்க ஊழியர். இதற்கு முன்பு அவர்களுக்குள் ஏதாவது முன் விரோதம் இருக்குமோ? என்ன இருந்தாலும் கையில் கிடைத்த பென்ஷன் புத்தகத்தைத் திருப்பிக் கொடுக்காமல் இருப்பது என்பது உண்மையிலேயே பெரிய தவறுதான். க்யூ மெதுவாக நகர்ந்து நகர்ந்து நான் சிறிய ஜன்னலருகில் வந்து விட்டேன். உள்ளே அமர்ந்திருக்கும் அலுவலரின் கையில் நான் என்னுடைய பென்ஷன் புத்தகத்தையும் கையெழுத்துப் போட்ட ஃபாரத்தையும் கொடுத்து டோக்கன் வாங்கினேன். ட்ரெஷ்ஷரியின் உலோக வலையைத் தாண்டி இருந்த இரண்டு ஓட்டைகளுக்கு அருகில் நின்றிருந்த கூட்டத்தில் நானும் ஒருவனாகக் காத்திருந்தேன். முதன் முதலாக எனக்கு பென்ஷன் கிடைத்தபோது இந்தியப் பெரும் நாடு முழுக்கக் கேட்கிற மாதிரி “மஹாத்மா காந்தி கீ ஜே!” என்று உரத்த குரலில் கத்தவேண்டும் போல் இருந்தது. கதராடை அணிந்த லட்சக்கணக்கான ஆண்களும் பெண்களும் ஒரு காலத்தில் அந்த கோஷத்தை எழுப்பினார்கள். அன்று அது ஒரு புரட்சி கீதமாக இருந்தது. அன்று கதர் புரட்சியின் சின்னமாக இருந்தது. இன்று கதரின் புனிதம் போய்விட்டது. காந்திஜியை இந்தியர்கள் மறந்து விட்டார்கள். இந்தியா வளர்ச்சியை நோக்கி நடைபோடுகிறது. நான் காத்து நிற்கிறேன். என் பெயரை இப்போது அழைப்பார்கள், இப்போது அழைப்பார்கள்! நேரம் போய்க் கொண்டேயிருந்தது. கடைசியில் என் பெயரை அழைத்தார்கள். டோக்கனைக் கொடுத்து என்னுடைய பென்ஷன் புத்தகத்தையும் பணத்தையும் வாங்கினேன். ரூபாய் நோட்டுக்களை பென்ஷன் புத்தகத்திற்குள் வைத்து, அந்த பென்ஷன் புத்தகத்தை மிகவும் பாதுகாப்பாக இடது கையிடுக்கிற்குள் இறுகப் பிடித்துக் கொண்டு, குடையை விரித்து நடந்தேன். ஒரு மைல் தூரம் நடந்தவுடன்- நான் மைல் என்று சொல்வது புதிதாக வந்திருக்கும் கிலோமீட்டர் என்பதைப் பற்றி மனதில் நினைக்காததே காரணம்- ஒரு ஹோட்டலுக்குள் நுழைந்து அரை பிரியாணி சாப்பிட்டு முடித்து தேநீர் அருந்தினேன். வீட்டில் ஃபாபி பஷீர், ஷாஹினா பஷீர், அனீஷ் பஷீர் - எல்லோரும் எனக்காகக் காத்திருப்பார்கள். அவர்களுக்கு ஒரு முழு பிரியாணியை பார்சலாக வாங்கினேன். இரண்டு வயதான அனீஷ் பஷீருக்கு தனியாக அவித்த பழம் வாங்கினேன். எல்லாவற்றுக்கும் சேர்த்து ஒரு பத்து ரூபாய் நோட்டைக் கொடுத்து மீதி சில்லரையை வாங்கி சட்டைப் பாக்கெட்டிலிட்டேன். மீதி பணம் முழுவதும் பென்ஷன் புத்தகத்திற்குள்தான் இருந்தது. மிகவும் பாதுகாப்பாக அதை இடது கையிடுக்கிற்குள் இறுக்கிக் கொண்டேன்.

கையில் இருந்த பார்சல்களுடன் பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்தேன். பல பஸ்களும் வந்தன. நான் செல்ல வேண்டிய பஸ் வந்தபோது, அதற்குள் பயங்கர கூட்டம் இருந்தது. பயங்கர நெருக்கடிக்குள் சிக்கி எப்படியோ நான் பஸ்ஸுக்குள் ஏறி விட்டேன். நல்ல வேளை எனக்கு ஒரு இருக்கை கிடைத்தது. பஸ் முழுமையாக நிறைந்து வழிந்தபோது பஸ் புறப்பட்டது.

நான் பென்ஷன் வாங்கிக் கொண்டிருக்கும் ஒரு அரசியல் போராளி. முந்நூறு வருடங்களுக்கும் மேலாக இந்தியாவை அடக்கி ஆண்ட வெள்ளைக்காரர்களை எதிர்த்துப் போராடியவன் நான். இந்த உண்மையை என்னால் நம்ப... என்னைப் போல லட்சக்கணக்கான பேர் இருந்தார்கள். அவர்களையெல்லாம் மக்கள் மறந்துவிட்டார்கள். இந்தியாவின் சுதந்திரப் போராட்டம்... எல்லாம் முழுமையாக மறக்கப்பட்டு விட்டன. யாரும் யாரைப் பற்றியும் கவலைப்படவில்லை. இந்திய விடுதலைக்காகப் பாடுபட்ட போராளிகளைப் பற்றி இவ்வளவு நாட்கள் கழித்து நினைத்துப் பார்த்தது யார்? ஜவஹர்லால் நேருவின் மகள் இந்திரா காந்திதான். என்ன இருந்தாலும், இது ஒரு நல்ல விஷயம்தான். விடுதலைக்காகப் பாடுபட்ட எவ்வளவோ பேர் மரணத்தைத் தழுவி விட்டார்கள். இருந்தாலும் அவர்களின் வழித்தோன்றல்களுக்கு பென்ஷன் அனுமதித்திருக்கின்றனர். இந்திராகாந்திக்கு தெய்வம் அருள் செய்யட்டும். அந்தக் காலத்தில் இளைஞனாக இருந்த காலத்தில் நான் வைக்கம் இங்கிலீஷ் பள்ளியில் படிக்கும்போது என்னைப் பெற்ற அன்னையின் கையிலிருந்து ஒரு டம்ளர் தண்ணீரை வாங்கிக் குடித்து விட்டு யாரிடமும் ஒரு வார்த்தைகூட கூறாமல் வீட்டை விட்டு ஓடி மிகவும் தூரத்தில் இருந்த கோழிக்கோட்டிற்கு வந்து உப்பு சத்தியாகிரகத்தில் பங்கு கொண்டு பிரிட்டிஷ் அரசாங்கத்தின் சட்டத்தை மீறி நாட்டு விடுதலைக்காக நடந்த போராட்டத்தில் பங்கு பெற்று அடியும் இடியும் வாங்கி சிறைத்தண்டனை அனுபவித்தேன். அப்போது எதிர்காலத்தில் இப்படியொரு பென்ஷன் கிடைக்கும் என்று நான் நினைத்ததில்லை. எதையும் எதிர்பார்க்காமல் ஈடுபட்ட செயல் அது. தாய் நாட்டின் விடுதலை. அதற்காக நான் போராடினேன். அவ்வளவுதான். எது எப்படியோ இப்போது இந்த பென்ஷன் கிடைத்திருப்பது உண்மையிலேயே நல்ல விஷயம் தான். இதை பிள்ளைகளின் படிப்புக்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம். மகள் ஷாஹினாவை ஒருபோர்டிங் ஸ்கூலில் சேர்த்திருக்கிறேன். ஒவ்வொரு மாதமும் நூறு ரூபாய் செலவழிக்க வேண்டி வருகிறது. மகன் அனீஸை பள்ளிக்கு அனுப்பும் போது அவனையும் படிக்க வைக்கலாம். எல்லாம் நான் உயிரோடு இருந்தால் மட்டுமே. கடவுளே, எனக்கு நீண்ட ஆயுளையும் நல்ல உடல் நலத்தையும் தந்து அருள் செய்ய வேணடும்.


பஸ் ஏகப்பட்ட இடங்களில் நின்றது. நிறைய ஆட்கள் இறங்கினார்கள். ஏறினார்கள். என் அருகில் இருந்தவர்கள் யார் யார் என்பதைக் கவனம் செலுத்தி நான் பார்க்கவில்லை. ஏதாவது நடக்கும். ஏதாவது நடக்கும் என்று மனதில் தோன்ற வேண்டிய அவசியமில்லை அல்லவா? இருந்தாலும் நடக்கக் கூடாதது நடக்கப்போகிறது. அதைப் பற்றி எந்தவிதமான முன்னெச்சரிக்கையும் இல்லை. நான் ஏதோ சிந்தனையில் இருந்தேன். அப்போது பஸ் எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் வாசக சாலைக்கு அருகில் நின்றது. இறங்குவதற்கு நான் மட்டுமே இருந்தேன். இறங்கினேன். சாலையில் ஆட்களே இல்லை. பள்ளி விடுகிற நேரமாக இருந்தால் சாலை முழுக்க பள்ளிச் சிறுவர்களின் கூட்டம் நிறைய இருக்கும். நான் இடது கையிடுக்கை இறுகப் பிடித்துக் கொண்டு பார்சல்களையும் குடையையும் கையில் வைத்துக் கொண்டு நடந்தேன். வீட்டுக்குப் போகும் ஒற்றையடிப் பாதையில் இறங்கினேன். திடீரென்று எனக்குள் ஒரு நடுக்கம். ஏதோ ஒரு உணர்வால் உந்தப்பட்டு கையிடுக்கில் இருந்த பென்ஷன் புத்தகத்தை எடுக்கலாம் என்று பார்த்தால்... பென்ஷன் புத்தகம் அங்கு இல்லை!

உண்மையிலேயே நான் அதிர்ச்சியடைந்து நின்று விட்டேன். அது எங்கே போனது? பஸ்ஸில் விழுந்திருக்குமோ? யாராவது எடுத்திருப்பார்களோ? எது எப்படியோ நிச்சயம் அது பஸ் ஸ்டாண்டில் இருக்கும். அது திரும்பி நிச்சயம் என்னிடம் வரும். வேறெங்கும் போகாது. இங்கிருந்து பஸ் நிலையம் சிறிது தூரத்தில் இருக்கிறது. நான் மீண்டும் சாலைக்கு வந்தேன். ஒரு நண்பரைப் பார்த்து விவரத்தைச் சொன்னேன். இனி என்ன செய்வது? உடனே பஸ் இருக்கும் இடத்திற்குப் போக வேண்டும். நடந்தே போனால் என்ன? அது எங்கு போயிருக்கும்? கையிடுக்கை இறுக்கமாகத்தானே பிடித்திருந்தேன்? பென்ஷன் புத்தகத்தை மடிக்காமல் பாக்கெட்டிற்குள் வைக்க முடியாது. அதை மடிப்பதற்கு மனம் வரவில்லை. இறுகப் பிடித்திருந்த கையிடுக்கை விட்டு அது எப்படிப் போனது? அதைப் பார்த்த ஆள் பென்ஷன் புத்தகத்தைத் திறந்து பார்த்தால் என்னுடைய பெயர் இருக்கும். அதில் பணமும் இருக்கும். பஸ் நிலையத்திற்குப் போய் பஸ்காரர்களிடம் கேட்போம். நடந்து சென்றால் பஸ் அதற்குள் இந்தப் பக்கமாய் புறப்பட்டாலும் புறப்பட்டு விடலாம். ஒரு கார் நின்றிருப்பதைப் பார்த்தேன். யாருடைய கார் என்று விசாரித்துப் பார்த்தால், அது என்னுடைய நண்பர் ஒருவரின் கார்தான். அந்தக் காரில் பஸ் நிலையத்தை நோக்கி விரைந்தேன். கிடைக்குமா? அதைப் போன்ற ஒரு பொருள் என் கையில் கிடைத்திருந்தால் நான் என்ன செய்வேன்? சிறிதுகூட சந்தேகம் வேண்டாம்- நான் அந்தப் பொருளின் சொந்தக்காரரிடம் ஒப்படைத்து விடுவேன். நாங்கள் பஸ் நிலையத்தை அடைந்தோம். பஸ்ஸில் ஏறி ஓட்டுனரிடமும் நடத்துனரிடமும் விவரத்தைச் சொன்னோம். அவர்கள் அதைப் பற்றி தெரியவே தெரியாது என்று கையை விரித்தார்கள். பஸ்ஸில் நிறைய ஆட்கள் இருந்தார்கள் அல்லவா? கையிடுக்கில் இருந்து பென்ஷன் புத்தகம் கீழே விழுந்திருக்க வேண்டும். அது கிடைத்த மனிதன் அதைத் திறந்து பார்த்து பணத்தை எடுப்பான். புத்தகத்தை கிழித்து தூரத்தில் எறிவான். நேர்மையானவர்களைச் சோதித்துப் பார்க்க அதில் பணம் இருக்கிறது. அதை இப்போது தேடி பிரயோஜனமே இல்லை!

நாங்கள் காரில் திரும்பினோம். எனக்கு பெரிய தர்ம சங்கடமாகப் போய் விட்டது. இப்போது ஒரு பென்ஷன் புத்தகத்தை எப்படி வாங்குவது?

பென்ஷன் புத்தகத்தைத் தொலைத்து விட்டு ட்ரெஷ்ஷரியில் உட்கார்ந்திருந்த அந்த வயதான மனிதரை மனதிற்குள் நினைத்துப் பார்த்தேன். நான்கைந்து மாதங்களாக புதிய பென்ஷன் புத்தகத்துக்காக அவர் அலைந்து கொண்டிருக்கிறார். நான்கைந்து மாதங்களாக அவருக்கு பென்ஷனும் கிடைக்கவில்லை. நானும் அவரைப் போல ஒவ்வொரு மாதமும் போய் அலைய வேண்டும்.

அந்தப் பென்ஷன் புத்தகம் எங்கே போயிருக்கும்? என்னால் எந்த முடிவுக்குமே வரமுடியவில்லை. உடம்பில் உயிரே இல்லாதது மாதிரி நான் காரை விட்டு இறங்கினேன். பிரியாணி பார்சலை வீட்டில் கொடுத்து விட்டு ட்ரெஷ்ஷரிக்கு மீண்டும் போய் விவரத்தை சொல்ல வேண்டியதுதான். மொத்தத்தில் கவலையும்- களைப்பும். நான் ஒற்றையடிப் பாதையில் இறங்கி சிறிது தூரம் நடந்திருப்பேன்… கடவுளின் அருள் என்றுதான் சொல்ல வேண்டும். என்னாலேயே நம்ப முடியவில்லை. ஒரு கொடியைப் போல பென்ஷன் புத்தகத்தைக் கையில் வைத்துக் கொண்டு என் மகள் ஷாஹினா எனக்கு எதிரில் வந்து கொண்டிருக்கிறாள். பென்ஷன் புத்தகத்தை அவள் உயர்த்திப் பிடித்திருக்கிறாள். அவளுக்குப் பின்னால் மகனைத் தூக்கிக் கொண்டு அவளின் தாய். அவர்களுக்குப் பின்னால் மெலிந்து, உயரமாக இருக்கும் ஒரு பையன். சந்தோஷத்துடன் நான் மகளின் கையில் பிரியாணி பார்சலைக் கொடுத்துவிட்டு, பென்ஷன் புத்தகத்தை வாங்கித் திறந்து பார்த்தபோது நான் வைத்திருந்த பணம் முழுவதும் அப்படியே இருந்தது!

“இது எங்கே இருந்து கிடைச்சது மகளே?”

மகளின் தாய் சொன்னாள்.

“வத்சராஜன் வீட்டுல கொண்டு வந்து தந்தான்.”

“வத்சராஜன்!”

பக்கத்தில் நின்றிருந்த பையனைச் சுட்டிக் காட்டிய மகளின் தாய் சொன்னாள்.

“இதுதான் வத்சராஜன். காலையில நீங்க பென்ஷன் புத்தகத்தைக் கையில வச்சுக்கிட்டு பஸ்ல ஏர்றதுக்காக நின்னுக்கிட்டு இருந்ததை வத்சராஜன் வாசக சாலையில் இருந்து பார்த்திருக்கிறான். இவர் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வாசக சாலையை விட்டு கிளம்பி வெளியே வந்தா பென்ஷன் புத்தகம் தரையில கிடக்குது! அதை அவன் திறந்து பார்த்திருக்கான். பேரையும் பணத்தையும் பார்த்திருக்கான். உடனே வீட்டுக்கு ஓடிவந்து தந்துட்டான்...”

கடவுளுக்கு வணக்கம்! மாதம் அறுபது ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் கஷ்டப்பட்ட வாழ்க்கை வாழும் பையன். யாருக்குமே தெரியாமல் பணம் அவன் கையில் கிடைக்கிறது... நான் பணத்தை எடுத்து வத்சராஜனிடம் நீட்டினேன்.

“வேண்டாம் சார்.”

“இதைக் கொண்டு வந்து கொடுக்கணும்னு எப்படி உனக்கு தோணுச்சு?”

“சார், இது உங்களோடதுதான்னு எனக்கு நல்லா தெரியும். கொண்டுவந்து இதை உங்க கையில கொடுக்கலைன்னா தெய்வத்தோட கோபத்துக்கு நான் ஆளாகணும் சார்.”

நான் சிறிது தூரம் அந்த இந்து பையனையே பார்த்தேன். தர்மம், நீதி, உண்மை- எதுவும் உலகை விட்டு காணாமல் போகவில்லை. வலது கையை உயர்த்தியவாறு வத்சராஜனிடம் சொன்னேன்.

“வத்சராஜா, உனக்கு எல்லாக் காலத்திலும் கடவுள் அருள் செய்யட்டும்!”

சுபம்

மங்களம்

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.