Logo

பட்டாளத்துக்காரன்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 6143
pattalathukaaran

காவல் நிலையத்தில் ஆட்கள் கூட்டமாக நின்றிருப்பதைப் பார்த்து அவன் அங்கு சென்றான். அங்கு ஒவ்வொருவரின் உயரத்தையும் எடையையும் பார்த்தார்கள். வீட்டின் பெயர்களைக் கேட்டார்கள். அதற்கு அவன் எந்த பதிலும் கூறவில்லை. அன்று நூற்றைம்பது பேரை அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள். அந்தக் கூட்டத்தில் அவனும் இருந்தான்.

அன்றே அவர்கள் அனைவரையும் அழைத்துச் சென்றார்கள். உற்சாகமான பயணமாக இருந்தது அது. மூன்று நேரமும் நல்ல உணவு கிடைத்தது. பழகுவதற்கு நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள்.

புகைவண்டி பல புதுப்புது இடங்களையும் தாண்டி சென்று கொண்டிருந்தது. பல பெரிய நகரங்களையும் அவன் பார்த்தான். எட்டு நாட்கள் கடந்த பிறகு அவர்களை ஒரு இடத்தில் கொண்டு போய்விட்டார்கள்.

பயிற்சிக்காலம் சிறிது சிரமம் உள்ளதாகவே இருந்தது. எனினும், மூன்று நேரமும் உணவு கிடைக்கிறது என்பது எவ்வளவு பெரிய நிம்மதியான ஒரு விஷயம்! அது மட்டுமல்ல- வாழ்க்கை படிப்படியாக விசாலமடைந்து கொண்டும் புதிய புதிய அனுபவங்கள் அதை முழுமையாக்கிக் கொண்டும் இருந்தன. ஆதரவற்ற அனாதை என்ற எண்ணம் முழுமையாகப் போய்விட்டிருந்தது. பாய் விரித்துப் படுத்தால்தான் தூக்கமே வந்தது. தலைக்கு கட்டாயம் தலையணை வேண்டும். நாக்கிற்கு ருசி என்றால் என்னவென்பது தெரிந்தது.

செய்வதற்கு என்னவோ இருக்கிறது என்ற எண்ணத்தால் வாழ்க்கை மீது ஒரு பிடிப்பும் கனமும் அவனுக்கு உண்டானது. அவனுக்கும் சில கடமைகள் இருந்தன; உரிமைகள் இருந்தன.

அந்தப் படையை இரண்டாயிரம் மைல் தூரத்தில் இருக்கும் ஒரு இடத்திற்கு மாற்றினார்கள். பிறகு இன்னொரு இடத்திற்குப் போனான். மூன்றாவதொரு இடத்திலும் சிறிது நாட்கள் இருந்தான். இப்போது அவனுக்கு இந்தி நன்றாகத் தெரியும். இந்தியாவில் இருக்கும் எல்லா பெரிய நகரங்களையும் அவன் பார்த்துவிட்டான். வாழ்வது எப்படி என்பதையும் தெரிந்துகொண்டான். கையில் பணம் இருக்கிறது. அரசாங்கத்திடமிருந்து வரவேண்டியதும் இருக்கிறது.

ஒருநாள் உயர் அதிகாரிகள் அறிவித்தார்கள்- விருப்பப்படுபவர்கள் ஒரு மாத விடுமுறையில் தங்களின் வீடுகளுக்குச் சென்று பார்க்க வேண்டியவர்களைப் பார்த்துவிட்டு வரலாமென்று. அப்படிப் போகப் பிரியப்படுபவர்கள் உடனடியாக அதைத் தெரிவிக்க வேண்டுமென்று அவர்கள் சொன்னார்கள். அந்தப் படை இருந்த இடத்தில் அன்று உண்டான உற்சாகத்தை வார்த்தையால் விவரித்துச் சொல்ல முடியாது. அவனும் அந்த உற்சாகத்தில் பங்கு கொண்டான். ஆனால், அவனுடைய உற்சாகத்தில் ஏதோ ஒரு குறை இருக்கவே செய்தது. அவனுடைய உற்சாகம் வெறுமனே ஒரு மேலோட்டமானது என்பதே உண்மை.

அவனும் ஒரு மனுவைப் பூர்த்தி செய்து அனுப்பி வைத்தான்.

அன்று இரவு உணவு சாப்பிட்டு முடித்தவுடன் நான்கைந்து பேர்களாக கூட்டம் கூட்டமாக உட்கார்ந்து பல விஷயங்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தார்கள். ஒரு மைசூர்க்காரன் திருநெல்வேலிக்காரனைப் பார்த்துக் கேட்டான்: “நாம ஒண்ணா போகலாமே!”

“ஆனா, நான் நாளைக்கு சாயங்காலம்தான் போகணும்.”

“நானும் அப்படித்தான் நினைச்சிருக்கேன். பரவாயில்ல... என் மகளைப் பார்த்து எவ்வளவு நாட்களாச்சு!”

அந்த மைசூர்க்காரன் சிறிது நேரம் எதையோ நினைத்தவாறு உட்கார்ந்திருந்தான். மகளைக் கண் முன்னால் பார்த்துக் கொண்டிருப்பதைப்  போல அவனுடைய முகத்தில் ஒரு பிரகாசம் தெரிந்தது.

திருநெல்வேலிக்காரன் சொன்னான்: “என்னோட வயசான அம்மா... அவங்களுக்குத் தெரியாமத்தான் நான் இங்கே வந்தேன். நான் அவங்களுக்கு ஒரே ஒரு பிள்ளை...”

அவனுக்கும் நினைத்துப் பார்க்க எவ்வளவோ இருந்தன. தனக்குத்தானே அவன் சொல்லிக் கொண்டான்.

‘பாவம்! அந்தச் சின்ன கட்டில்ல மகன் வருவான்னு எதிர்பார்த்து அம்மா தனியா படுத்திருப்பாங்க!’

பாலக்காட்டைச் சேர்ந்த ஒருவன் அப்போது ராமனிடம் கேட்டான்: “நீங்க எப்போ போறீங்க? நாம ஒண்ணா சேர்ந்து போகலாமே?”

ராமன் நாயர் இயந்திரத்தனமாக பதில் சொன்னான்: “போகலாமே!”

சென்னையைச் சேர்ந்த மற்றொருவன் எல்லாரிடமும் ஒரு பதிலை எதிர்பார்த்து மெதுவான குரலில் கேட்டான்:

“முப்பது நாட்களுக்கு மேலாகத் தங்கியிருக்கறதுக்கு ஏதாவது வழி இருக்கா?”

அதற்கு பாலக்காட்டுக்காரன் பதில் சொன்னான்: "உடம்புக்கு சரியில்லைன்னு சொல்லி தந்தி அடிக்க வேண்டியதுதான். அப்படிச் செய்ய நானும் திட்டம் போட்டிருக்கேன். வீட்டுக்குப் போயிட்டா ஆயிரம் வேலைகள் இருக்கு செய்யறதுக்கு..."

மற்றொரு ஆள் அப்போது சொன்னான் :  “அதெல்லாம் நடக்கும்ன்ற நம்பிக்கை எனக்கு இல்ல. இப்போ எதுக்கு நமக்கு இந்த விடுமுறை தர்றாங்க தெரியுமா? வீட்டைப் பார்த்துட்டு திரும்பி வரணும். இதுக்கு மேலும் நமக்கு அதிர்ஷ்டம்னு ஒண்ணு இருந்தாத்தான் நம்ம தாயையும் பிள்ளைகளையும் நாம பார்க்க முடியும். நம்மளைப் போருக்கு அனுப்பப் போறாங்க.”

அதற்கு யாரும் எந்த பதிலும் பேசாமல் அமைதியாக இருந்தார்கள். அந்தச் சூழ்நிலையே திடீரென்று ஒளி குறைந்ததாக ஆனது. ஒரு நீண்ட பெருமூச்சை விட்டவாறு மைசூர்க்காரன் சொன்னான்: “என் மகளுக்கு ஆயிரம் ரூபா கிடைக்கும். அதுபோதும்.”

திருநெல்வேலிக்காரன் தொடர்ந்தான்: “ஆயிரம் ரூபா கிடைக்கிறதால என் தாயைக் கடைசி காலத்துல பாத்துக்கறதுக்கு யாராவது கிடைப்பாங்க.”

நீண்ட பெருமூச்சுகள் காரணமாக இறுக்கமாகிப் போன அந்த இரவில் யாருக்கும் தூக்கம் வரவில்லை. அந்த முப்பது நாட்களுக்குள் செய்து முடிக்க வேண்டிய வேலைகளையெல்லாம் அவர்கள் செய்தாக வேண்டும்.

விடுமுறையின்போது தான் என்னென்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி ஒரு திட்டம் தீட்ட ராமன் நாயரும் முயற்சித்தான். ஆனால், செய்வதற்கு எதுவுமே இல்லாததால் அவனால் எந்தச் செயலைப் பற்றியும் தெளிவாக எண்ண முடியவில்லை. முக்கிய செயல்கள் என்று எதுவுமே இல்லாமல் வெறுமனே அவன் முன்னால் முப்பது நாட்கள் விரிந்து கிடந்தன.

பக்கத்தில் படுத்திருந்த பாலக்காட்டுக்காரன் ராமன் நாயரைப் பார்த்துக் கேட்டான்: “உங்க வீட்டுல யாரெல்லாம் இருக்காங்க!”

“யாருமில்ல...”

“அப்படின்னா விடுமுறையப்போ எங்கே போவீங்க?”

அதற்கு அவன் எந்த பதிலும் கூறவில்லை.

மீண்டும் அந்த ஆள் கேட்டான்: “உங்க ஊரு திருவனந்தபுரம்தானே?”

ராமன்நாயருக்கு மீண்டும் குழப்பம். அதனால் இந்தக் கேள்விக்கும் பதில் சொல்லவில்லை.

“என்னை திருவனந்தபுரத்துலதான் எடுத்தாங்க.”

“அப்போ ஊரு?”

“நான் போறதா இல்ல. எனக்கு விடுமுறை எதுவும் வேண்டாம்.” -ராமன் நாயர் கோபத்துடன் கூறுவதைப்போல் இருந்தது.

பாலக்காட்டுக்காரன் கேட்டான்: “இதுக்கு எதுக்கு கோபிக்கணும்? நீங்க வீட்டுல இருந்து கோபப்பட்டு இங்கே வந்திருந்தா, அதுக்கு நான் என்ன செய்ய முடியும்?”

அவர்களுக்கிடையே நடந்த உரையாடல் அத்துடன் முடிவுக்கு வந்தது.


பின்னிரவு ஆகிவிட்ட பிறகும்கூட, அங்கு சிறிது நேரம்கூட தூங்காமல் ஒரு ஆள் மட்டும் இருந்தான். அவன்தான் ராமன். தனக்கு இந்தப் பெயரை வைத்தது யார் என்று அவன் வியப்புடன் நினைத்துப் பார்த்தான். நாயர் என்ற பட்டம் தனக்கு எப்படி வந்தது? தெருத் தெருவாக பிச்சையெடுத்து சுற்றிக் கொண்டிருந்த இளம் வயதில் அந்தப் பெயரைச் சொல்லி அவனை யாரும் அழைக்கவில்லை. வாழ்க்கையில் எப்போதிருந்து தனக்கு அந்தப் பெயர் வழங்க ஆரம்பித்தது என்று அவன் யோசிக்க ஆரம்பித்தான்.

“நான் வரல... எனக்கு விடுமுறை எதுவும் வேண்டாம்.”

இந்த வார்த்தைகள் ஒரு சாபத்தைப் போல அவனுடைய காதுகளுக்குள் எதிரொலித்துக் கொண்டே இருந்தன. தான் அப்படிச் சொல்லியிருக்க வேண்டாம் என்று இப்போது அவன் நினைத்தான். கேரளத்தில் எங்காவது ஒரு மூலையில் அந்த அதிர்ஷ்டமில்லாத பெண் இருப்பாள்- அம்மா! இல்லாவிட்டால் அந்த ஆண்- தந்தை! இல்லாவிட்டால் தான் கிடந்த வயிற்றில் தனக்கு முன்போ பின்போ பிறந்த யாராவது ஒரு ஆள்! இப்படித் தன்னைப் பற்றி எண்ணிப் பார்க்க ஒரு ஆள் உலகத்தில் இல்லாமலா இருக்கும்? ஒருவேளை முயற்சி செய்து பார்த்தால் அப்படி ஒருவரைப் பார்க்க நேர்ந்தாலும் நேரலாம்.

அவன் பல ஊர்களைப் பார்த்தான். பல இனத்தைச் சேர்ந்தவர்களுடனும் பழகினான்- பல மொழிகளையும் பேசக் கேட்டான். ஆனால், கேரளத்தில் தெருத்தெருவாகப் பிச்சையெடுத்து சுற்றினால்கூட, உடம்பில் சோர்வு என்ற ஒன்றே இருக்காது. அங்குள்ள பச்சைத் தண்ணீருக்குக்கூட ஒரு சிறப்பு இருக்கவே செய்கிறது. அங்குள்ள உச்சி வெயில்கூட அவனைத் தளர்வடையச் செய்யாது. மலையாளிகளின் சிரிப்பு மட்டுமே இதயபூர்வமானது. அந்த மொழிக்கு அன்பை மேம்படுத்த மட்டுமே தெரியும்.

பிறந்த மண் பெற்ற தாயைப்போல அவனை ‘வா வா’ என்று அழைத்தது. கேரளத்தில் சுகமான காற்று வீசிக் கொண்டிருக்கும். தென்னைமர நிழலில் படுத்துறங்க வேண்டும். பரந்து கிடக்கும் வெளிகளில் அலைந்து திரியவேண்டும். கேரளத்தில் ஒரு பிடி சோறாவது சாப்பிட வேண்டும்.

அதிகாலையில் மற்ற எல்லாரையும்விட அவன் முன்னால் எழுந்துவிட்டான். மற்றவர்கள் எழுந்தபோது, அவன் பயணம் புறப்படுவதற்குத் தயாராக இருந்தான்.

ஆலப்புழை நகரத்தின் எல்லா சாலைகளிலும், சாலை முனைகளிலும் ஒரு பட்டாளக்காரனை மூன்று நான்கு நாட்களாகப் பலரும் பார்த்தார்கள். நகரத்தின் எல்லாப் பகுதிகளிலும் மூன்று நான்கு தடவை அவன் தென்பட்டான். இரவு நேரங்களில்கூட அவன் நடந்து கொண்டேயிருந்தான். ஒரு இரவு படகுத்துறையில் நின்றிருந்த போலீஸ்காரனிடம் ஒரு வயதான சுமை தூக்கும் முஸ்லீம் கிழவர் அவனைப் பற்றி என்னவோ சொன்னார். அவன் எங்கு தங்கியிருக்கிறான் என்பதோ எங்கிருந்து வந்திருக்கிறான் என்பதோ யாருக்கும் தெரியாது.

ஒரு நாள் அவன் காணாமல் போனான். மறுநாள் காலையில் கொல்லத்தில் ஆனந்தவள்ளீஸ்வரம் கோயிலுக்குப் பக்கத்தில் அடைக்கப்பட்டிருந்த ஒரு வீட்டின் படி வாசலில் அவன் நின்று கொண்டிருப்பதைப் பலரும் பார்த்தார்கள். கையில் ஒரு இரும்புப் பெட்டியைத் தூக்கிப் பிடித்திருந்தான். சாலையில் நடந்துபோன ஒரு சிறுவன் அந்த வீட்டில் யாரும் வசிக்கவில்லை என்று அவனைப் பார்த்துச் சொன்னான்.

அப்போது கோவிலிருந்து வெளியே வந்த ஒரு படித்த மனிதரைப் பின்பற்றி அவன் நடந்தான். சிறிது தூரம் சென்ற பிறகு அந்த மனிதர் ஒரு வாசலை நோக்கி திரும்பினார்.

“நான்... ராமன்...”

அந்தக் குரலைக் கேட்டு அந்த மனிதர் திரும்பிப் பார்த்தார். பெட்டியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு சிலையைப் போல அந்தப் பட்டாளக்காரன் நின்றிருந்தான்.

“ராமனா? எந்த ராமன்?”- அந்த மனிதர் கேட்டார்.

அதற்குமேல் என்ன பேசுவது என்று தெரியாமல் சிறிது நேரம் அதே நிலையில் நின்றிருந்த அவன் மீண்டும் தன் நடையைத் தொடர்ந்தான். தூரத்தில் சாலையின் திருப்பத்தில் அவன் மறையும் வரை அந்த மனிதர் பார்த்தவண்ணம் நின்றிருந்தார். ராமன்! அப்படிப்பட்ட ஒரு ஆளை அவருக்கு ஞாபகத்திலேயே இல்லை.

சின்னக்கடையிலிருந்த ஒரு ஹோட்டல் கதவில் ‘ராமன்’ என்ற பெயர் கத்தி நுனியால் எழுதப்பட்டிருந்தது. அந்தப் பட்டாளக்காரன் ஹோட்டல் சொந்தக்காரனிடம் சொன்னான்:

“அதை நான்தான் எழுதினேன்.”

அதற்கு அந்த உரிமையாளர் எதுவும் சொல்லவில்லை.

யாராவது கண்ணில் படமாட்டார்களா என்ற எண்ணத்துடன் அவன் திருவனந்தபுரத்தில் அலைந்து திரிந்தான். யாராவது கண்ணில் பட்டால்தானே!

இப்படியே பதினைந்து நாட்கள் ஓடி முடிந்துவிட்டன. பழக்கமான ஒரு புன்னகையை அவன் எந்த இடத்திலும் பார்க்கவில்லை. ‘எப்போ வந்தே?’ என்ற கேள்விக்காக அவன் கேரளத்தில் ஒவ்வொரு நகரமாக அலைந்து திரிந்தான். யாராவது தன்னிடம் பேசமாட்டார்களா என்று ஏங்கினான். ஐந்து, ஆறு, ஏழு என்று நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன. கண்ணில் பார்ப்பவர்களையெல்லாம் பார்த்து அவன் பேசினான். சிலர் மட்டுமே அவனைத் ‘தம்பி’ என்று அழைத்தார்கள். கண்ணில் காண்பவர்களையெல்லாம் பார்த்து அவன் சிரித்தான். ஒரு ஆளைக்கூட அவனால் ஞாபகத்தில் வைத்திருக்க முடியவில்லை. பார்த்தவர்களில் ஒரு ஆள்கூட அவனை நினைத்துப் பார்க்கக் கூடியவராக இல்லை. கோழிக்கோடு முதல் நாகர்கோவில் வரை அவன் பறவை வேகத்தில் பயணம் செய்தான். இப்படியே இருபத்தெட்டு நாட்கள் ஓடிவிட்டன. இனி இருப்பதே இரண்டு நாட்கள்தான். இப்போதும் எங்கேயாவது சாப்பிட்டு முடித்தால், பணத்திற்காக கையை நீட்டுகிறார்கள். ஒரு பெயர் சொல்லி அவனை யாரும் அழைப்பதில்லை. இந்த பெயர் என்பது எதற்காக வந்தது?

பைத்தியம் பிடித்த நகரங்களைவிட்டு நீண்ட தூரம் தாண்டி அமைதி நிறைந்திருக்கும் கிராமப் பகுதி. மலைச்சரிவில், வயல் பகுதியில், பசும் மரங்களுக்கு மத்தியில் ஒரு சிறு வீடு. அந்த வீட்டு வாசலிலிருந்த ஒரு குத்து விளக்கிற்கு முன்னால் அமைதியாக அமர்ந்து அந்தப் பட்டாளக்காரன் உணவருந்திக் கொண்டிருக்கிறான். அவன் சாப்பிட உட்கார்ந்து நீண்ட நேரமாகிவிட்டது. ஒரு வயதான கிழவி சாதத்தையும் குழம்பையும் அவனுக்கு அருகில் கொண்டுவந்து வைத்து அவனுக்குப் பரிமாறுகிறாள். ஏதோ சொல்லிக்கொண்டே அவனுக்கு அவள் சாப்பாடு போடுகிறாள்.

அவன் அந்தக் கிழவியை ‘அம்மா’ என்று அழைக்கிறான். அம்மா! அந்தக் கிழவி அவனை ‘மகனே’ என்று கூப்பிடுகிறாள். அவர்கள் பேசிக் கொண்டிருப்பது கூட வீடு சம்பந்தப்பட்ட விஷயம்தான்.

அந்தத் தாய் கூறுகிறாள்:

“என் மகனே! எல்லாம் ஒழுங்கா நடக்கணும். நல்ல துணி உடுத்தணும். சாப்பிடணும். இந்த இடம் நம்ம இடம்தான். போன வருஷம் நல்ல கப்பை விளைச்சல்... கொஞ்சம் குழம்பு ஊத்துறேன். நல்லா சாப்பிடு மகனே... பிறகு மோர் ஊற்றி சாப்பிடலாம்.” - கிழவி அவனுக்குக் குழம்பை ஊற்றினாள்.


“சோறு போதும்மா. நான் இன்னைக்கு நிறைய சாப்பிட்டிருக்கேன். ஒரு படி அரிசி சாப்பிட்டிருப்பேன். அப்படித்தானேம்மா?”

“பேச்சைப் பாரு! நான் உனக்கு வச்சதே கொஞ்சம்தானே?”

மீண்டும் கிழவி தன் பேச்சைத் தொடர்ந்தாள்.

ராமன் நாயர் கேட்டான்: “அம்மா, அப்போ உங்களுக்குக் குழந்தை இல்லியா?”

ஒரு நீண்ட பெருமூச்சை விட்டவாறு கிழவி சொன்னாள்: “ஒரு ஆண் குழந்தையை தெய்வம் தந்துச்சு. பிறகு அதை அதுவே கொண்டு போயிடுச்சு. இப்போ அவன் உயிரோட இருந்திருந்தா, அவனுக்கு இருபத்து மூணு வயசு நடக்கும். என் நாணிக்கு இளையவன். அவன் அவனைவிட அவளுக்கு ரெண்டு வயசு அதிகம்.”

கிழவி மேலும் கொஞ்சம் சாதத்தை பரிமாறினாள். வேண்டாம் என்று அவன் சொன்னதை அவள் பொருட்படுத்தவேயில்லை.

“நீ என் கையை விடு மகனே.”

“போதும்மா... எனக்கு மூச்சுவிட முடியல...”

வாழ்க்கையில் இப்படிப்பட்ட ஒரு சுவையான உணவை அவன் சாப்பிட்டதேயில்லை. அவன் சரியாகச் சாப்பிடவில்லை என்று யாரும் இதுவரை சொன்னதில்லை.

அந்த இரவு அந்த சிறு வீட்டின் முற்றத்தில் எந்தவித கவலையுமில்லாமல் அவன் நடந்து கொண்டிருந்தான். எங்கோ ஒரு மூலையிலிருக்கும் அந்த வீட்டோடு அவனுக்கு வாழ்க்கையில் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு உறவு இப்படித்தான் உண்டானது. இப்போது மகிழ்ச்சியுடன் தன்னுடைய இதயம் துடித்துக் கொண்டிருப்பதை அவன் உணர்ந்தான். மனதில் உண்டாகும் சிந்தனைகள் தெளிவாக இருக்கின்றன. அவனுக்கு ஒரு தாய் கிடைத்து விட்டாள்.

‘அம்மா! அம்மா! ஒரு கவளம் சோறு போடுங்க அம்மா. குழம்பை ஊற்றுங்க’- அவன் இப்படிச் சொல்லும்போது அந்த வயதான கிழவியின் உதட்டில் தெரியும் புன்னகையை அவனால் எப்போதும் மறக்க முடியாது. தான் நன்கு சாப்பிட வேண்டும் என்று அவள் ஆசைப்பட்டாள். அவள் ஆசைப்படுவது மாதிரி அவன் உண்ணவில்லையென்றால்...? இரவில் தூக்கம் வராத அளவிற்கு அவளை அது நிம்மதியில்லாமல் ஆக்கிவிடும். சோற்றை ஆக்கி வைத்துக்கொண்டு விளக்கை அணைக்காமல் தனக்காக அந்த வயதான கிழவி காத்திருக்க வேண்டிய அவசியமென்ன? பிரசவ வலியை அனுபவித்து அவனைப் பெற்ற தாயா என்ன அவள்?

இல்லை... யாரும் யாருக்காகவும் காத்திருக்கக் கூடாது. கடல்களைத் தாண்டி போர்க்களத்தில் இந்த உடல் துண்டு துண்டாகச் சிதறிப் போனால், அதனால் யாருக்கும் எந்தவித இழப்பும் இருக்கப் போவதில்லை. அப்படி ஒரு சூழ்நிலை வராமல் இருக்க வேண்டும் என்று யாரும் அவனுக்காகக் கடவுளிடம் வேண்டப்போவதும் இல்லை.

மறுநாள் காலையில் அந்தக் கிழவியிடம் அவன் சொன்னான்: அம்மா, நான் ஒரு விஷயம் சொல்லட்டுமா?

“சொல்லு மகனே.”

“நான்... நான் ஒரு நாயர்ம்மா...”

“அதை நேற்றே நீ சொன்னியே மகனே!”

“எனக்குன்னு ஊரு... வீடு எதுவும் இல்ல. எனக்குன்னு சொந்தம்னு சொல்ல யாருமே இல்ல.”

“சாப்பிட்டுக்கிட்டு இருக்கறப்போ அதையும் நீ சொல்லிட்டியே!”

“எனக்குன்னு யாருமே இல்ல...” - அவன் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தான்.

அந்தக் கிழவி திகைப்படைந்து நின்றுவிட்டாள்.

அன்று மதியம் ஒரு எளிமையான திருமணம் அந்த வீட்டில் நடந்தது. இப்படித்தான் தன்னுடைய இருபத்தைந்தாவது வயதில் நாணிக்கு ஒரு கணவன் கிடைத்தான்.

அழகான ஒரு மாலை நேரமாக இருந்தது அது. அறுவடை முடிந்த அந்த வயல் மாலை நேர வெயில்பட்டு பொன்னென ஜொலித்துக் கொண்டிருந்தது. காற்று சுகமாக வீசிக் கொண்டிருந்தது. காளைகளை அடித்து விரட்டியவாறு ஏரைத் தோளில் வைத்துக் கொண்டு நன்கு பழக்கமான ஒரு விவசாயி நடந்து போய்க் கொண்டிருந்தான். அவன் அந்த மனிதனைப் பார்த்துக் கேட்டான்: “என்ன இங்கே நிக்கிற?”

“சும்மாதான்...”- ராமன் நாயர் பதில் சொன்னான். அவனுக்கு உறவுகள் உண்டாயின!

“இன்னைக்கு ஏன் போகணும்?” - என்றொரு கேள்வியைக் கேட்டு அவன் திரும்பிப் பார்த்தான். அவள் அவனுக்குப் பின்னால் நின்றிருந்தாள். அவளை அவன் உற்று பார்த்தான். அவள் ஒரு மாதிரி ஆகிவிட்டாள்.

“நான் உடனடியா போகணும். நான்... நான்... விதின்னு ஒண்ணு இருந்தா நாம மறுபடியும் பார்ப்போம். நீ கன்னியாவே இரு...”

அவளுக்குத் தொண்டை அடைப்பதைப்போல் இருந்தது.

“நான் இருப்பேன். இருந்தாலும் நாளைக்கு...”

அவன் ‘முடியாது’ என்பது மாதிரி இப்படியும் அப்படியுமாகத் தலையை ஆட்டினாள்.

இரவு வந்தது. முழு நிலவு உதித்து மேல்நோக்கி நகர்ந்தது. அந்த வயல் வழியாகப் பெட்டியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு நடந்து போகும் உருவத்தைப் பார்த்தவாறு அவள் நின்றிருந்தாள். அருவி தன்னுடைய வாழ்க்கைப் பாடலைப் பாடிக் கொண்டிருந்தது.

அங்கு ஒரு பட்டாளக்காரனின் குடும்பத்திற்காக வீடு கொடுக்கப்பட்டிருக்கிறது. மாதம் நாற்பது ரூபாய் மணியார்டர் வரும். ஒரு அண்டா, இரண்டு செப்புக் குடங்கள், மூன்று பாத்திரங்கள் ஆகியவற்றை அவள் வாங்கினாள். அவற்றில் அவள் தன்னுடைய பெயரைப் பொறித்தாள். அந்த வீட்டை மேலும் அவள் புதுப்பித்தாள். நிலத்தைச் சுற்றி வேலி போட்டாள். நிலம் முழுக்க நேந்திர வாழைதான். இப்போது அவள் அந்த ஊரில் மிகவும் முக்கியமானவள். தாய் கூட அவள் கூறுவதைத்தான் கேட்பாள்.

தினமும் கோவிலுக்குச் சென்று அவள் என்னென்னவோ சொல்லி பிரார்த்திப்பாள். அங்கு எப்போதும் ஒரு ஆள் உண்ணக்கூடிய சாதம் இருந்து கொண்டேயிருக்கும். இரவில் ஏதாவது சத்தம் கேட்டால் தாய் ‘யார் அது?’ என்று கேட்பாள். அதைக் கேட்டு அவள் அடித்து பிடித்துக்கொண்டு எழுந்திருப்பாள். ‘உன் நாயர் எப்போ வருவாரு?” என்று சினேகிதிகள் கேட்கும் பொழுது மட்டும் அவள் என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் நின்றிருப்பாள்.

ஒருநாள் தபால்காரன் ஒரு பெரிய கவரைக் கொண்டு வந்து கொடுத்தான். அதற்கு அந்தப் பட்டாளக்காரனின் புகைப்படம் இருந்தது. அன்று முதல் அந்த வீட்டின் மண் சுவரை ஒரு படம் அலங்கரித்துக் கொண்டிருந்தது.

மூன்று மாதங்கள் கடந்த பிறகு ஒவ்வொரு மாதமும் நூறு ரூபாய் அவளுடைய முகவரிக்கு வந்து கொண்டிருந்தது. ஆறு மாதங்கள் ஆனவுடன், அது மேலும் கூடியது.

ஒருநாள், அந்த ஊரின் காவல் நிலையத்திலிருந்து மூன்று பெரிய இரும்புபு பெட்டிகளை வந்து வாங்கிக் கொள்ளும்படி தகவல் அனுப்பினார்கள். அந்தப் பெட்டிகள் நிறைய உயர்ந்த தரத்திலுள்ள பட்டாளக்காரனின் ஆடைகள் இருந்தன. ஒரு பெட்டியில் அவள் அவனுடைய கழுத்தில் அணிவித்த திருமண மாலை இருந்தது. அது கருகிப் போயிருந்தது.

நாணி காரணம் தெரியாமல் அழுதாள்.

ஒரு வாரத்திற்குப் பிறகு பத்தாயிரம் ரூபாய்க்கான ஒரு காசோலை அவளுக்குக் கிடைத்தது. பிறகு ஒவ்வொரு மாதமும் வந்து கொண்டிருந்த மணியார்டர்களும் வராமற் போயின.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.