Logo

கடைசி இரவு

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 6936
kadaisi iravu

ன்னைவிட உயர்ந்தது வேறெதுவுமில்லை என்று அறிவிக்கிற மாதிரி கம்பீரமாக நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நிற்கும் மலை. அதில் வளைந்து வளைந்து இரண்டு பக்கமும் மரம் செடி கொடிகள் அடர்ந்து கிடக்கச் செல்லும் மலைப்பாதை. அடிவாரத்தில் மலை மேலிருந்து ஓசை எழுப்பிப் பாய்ந்து விழும் அருவி. அருவியிலிருந்து புறப்பட்டு மேல் நோக்கி எழுந்து நாலு திசைகளிலும் வியாபித்து அந்தப் பிரதேசமெங்கும் ஒரு வகையான குளிர் நிலையைப் பரவச் செய்யும் பனிப்படலம்.

காசநோயாளியின் இளைப்பைப் போன்று மாறி வருகிற குளிரும் உஷ்ணமும் மலையின் பின் சூரியன் கண்ணயர வேண்டித் தன் முகத்தை மறைத்துக் கொள்வதற்கு முன்பே, போர்வையைப் போர்த்து அவனியின் மேல் தன் ஆதிக்கத்தைச் செலுத்த வரும் இரவு.

சாலையோரத்தில் பனையோலை வேய்ந்த சோதனைச் சாவடி முன் மினுக் மினுக்கென்று அரிக்கன் விளக்கு மங்கலாக எரிந்து கொண்டிருக்கிறது. அதனால் இருள் கலந்த பனிப்படலத்தின் ஆதிக்கத்தைக் கிழித்துக்கொண்டு தன்னை மிகப் பெரிதாய்க் காட்டிக் கொள்ள முடியாத நிலை!

சாலையின் குறுக்கே இரண்டு மரக்கம்புகளை ஊன்றி ஒரு நீண்ட தடி செருகப்பட்டிருக்கிறது. ஒரு மூலையில் தொங்க விடப்பட்டிருக்கும் அறிவிப்புப் பலகையின் எழுத்துக்கள் கூடக் காலச் சக்கரத்தின் சுழற்சியில் சற்று அழிந்து மங்கலாகக் காணப்படுகின்றன. ‘வண்டிகள் இங்கே நிறுத்தப்பட வேண்டும். ஃபாரஸ்ட் செக்கிங் ஸ்டேஷன்.’

சோதனைச் சாவடியின் ஒரு மூலையில் குத்துக் காலிட்டு அமர்ந்திருக்கும் காவல் அதிகாரி (கார்டு) கேசவன் குளிர் தாங்காமல் தன் உடலைப் போர்த்தியிருக்கும் கம்பளியை மேலும் கொஞ்சம் இழுத்துக் கால்முதல் தலைவரை அதனுள் அடக்கிக் கொண்டார். தலையைச் சுற்றியிருக்கும் மஃப்ளரை இழுத்துக்கட்டி அதன் ஒரு பகுதியைக் காதுப் பக்கம் அழுத்தமாகச் செருகிவிட்டுக் கொண்டார்.

நேரம் செல்லச் செல்ல தன் ஆதிக்கத்தை மிகவும் அதிகமாகவே வியாபிக்கச் செய்தது நாலு பக்கமும் பரவிக் கிடக்கும் பனிப் படலத்தை, வைத்த கண் எடுக்காமல் பார்த்தார். அவரும் எத்தனை வருஷங்களாக இந்தப் பனிப் படத்தைப் பார்த்து வந்திருக்கிறார்! இருந்தாலும் மற்ற நாட்களைவிட இன்று அது அவருக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகத் தோன்றியது.

சோதனைச் சாவடியின் மற்றொரு பகுதி பிரப்பம் பாயால் தடுத்துப் பிரிக்கப்பட்டிருக்கிறது. அங்கே தம்மை மறந்து உறங்கிக் கொண்டிருக்கும் நீலகண்ட பிள்ளையின் குறட்டைச் சத்தம் ஒலித்தது. உறங்கட்டும்! நாளை முதல் தன்னந்தனியாக இந்தச் சோதனைச்சாவடி, அதைச் சுற்றியிருக்கும் மரம் செடி கொடிகள், எங்கும் பரவிக்காணும் பனிப்போர்வை, குளிர் எல்லாவற்றிலுமிருந்தும் கேசவன் என்றென்றும் விடை பெற்றுக் கொள்ளப் போகிறார்.

வைத்த கண் எடுக்காமல் நோக்கியவாறு எவ்விதச் சலனமுமின்றி அமர்ந்திருந்தார் கேசவன். தம் வாழ்க்கையில் ஒவ்வொரு நிகழ்ச்சியுமே அந்தப் பனிப்படலத்தில் எழுதப்பட்டிருப்பது போன்ற ஒரு பிரமை ஏற்பட்டது அவருக்கு.

மலைமேல் இருக்கும் ஊர்களுக்குச் செல்கிற பஸ்கள் பயணிகளுடன் சோதனைச்சாவடி முன் வந்து நின்றன. தூக்க முடியாத சுமையைத் தலைமேல் சுமந்து இரைக்க இரைக்க வரும் கிழவனைப் போல் ‘ங்... ங்...’ என்று முக்கி முனகிக் கொண்டு மலைமேல் ஏறிவரும் வண்டி மாடுகளும், பஸ்களும், லாரிகளும், குதிரைகளும் தங்கள் களைப்பைப் போக்கிக் கொள்ளும் இடமும் இதுதான்.

சோதனைச் சாவடியிலிருந்து சிறிது தூரத்தில் சாலையை ஒட்டி ஒரு டீக்கடை. பனையோலை வேய்ந்த அந்தக் கடையை நோக்கிப் பயணிகள் படையெடுத்த அதே சமயம் டிரைவரும், கண்டக்டரும் மேஜை மேல் இருக்கும் நோட்டுப் புத்தகத்தில் கையெழுத்திடச் சோதனைச் சாவடியை நோக்கி வந்தார்கள். மேஜைக்கு இந்தப்புறம் அமர்ந்திருக்கும் காவல் அதிகாரியிடம் வழக்கமான குசலம் விசாரித்துவிட்டு சிறிது நேரத்தில் தாங்களும் டீக்கடையை நோக்கி போய்விடுவார்கள். பிறகு அங்கிருந்து காற்றைக் கிழித்துக்கொண்டு பெரிதாய் ஒலிக்கும் கூக்குரல்களுக்கும், சிரிப்புகளுக்கும், ஆரவாரத்துக்கும் எல்லையே இல்லை! சிகரெட்டை உதட்டில் வைத்து ‘குப் குப்’ என்று இழுத்தபடி பஸ்ஸைச் சுற்றிலும் இங்குமங்குமாய் நின்று கொண்டிருந்தார்கள் பயணிகள். சீக்கிரம் புகை இழுத்து எஞ்சி இருக்கும் சிகரெட் துண்டுகளை வீசி எறிந்து பஸ்ஸினுள் ஏறி அமர வேண்டும் என்ற அவசரம் ஒவ்வொருவரிடமும். பஸ்ஸின் ‘பானெட்’டைத் திறந்து அதன் ‘தாக’த்தைத் தீர்த்தானதும், ‘ங்... ங்...’ என்று முனகிக் கொண்டு மலைப்பாதையில் மேல்நோக்கிச் செல்ல ஆரம்பித்தது பஸ். சற்றுத் தொலைவில் இருக்கும் வளைவு திரும்பியவுடன், அதுவும் பார்வையிலிருந்து கொஞ்சங் கொஞ்சமாய் மறைந்து போனது. பஸ் செல்வதையே வைத்த கண் எடுக்காது நோக்கியபடி  அமர்ந்திருக்கும் காவல் அதிகாரி கேசவன் தமக்குள் மெல்லக் கூறிக்கொண்டார்.

“பயணம் நல்லா நடக்கட்டும். இனித் திரும்பி வந்தால் பார்ப்போம்.”

மலை மேலிருந்து கீழ்நோக்கி வரும் பஸ்கள் ஒன்றன்பின் ஒன்றாய் சோதனைச் சாவடியின் முன் காத்து நின்றன. சில சமயங்களில் அவற்றில் சட்டத்துக்கு விரோதமாக மரக்கட்டைகள் கடத்திச் செல்லப்படுவதும் உண்டு. அதனால் கொஞ்ச நேரம் ஆனாலும் அவற்றை முழுமையாகச் சோதனையிட வேண்டும். வண்டியின் மேற்பகுதி, இருக்கையின் கீழ்ப்பகுதி, டிரைவரின் அருகே இருக்கும் உபகரணப் பெட்டி, சில நேரங்களில் ‘பானெட்’டின் உள்பாகம் எல்லாவற்றையும் ஒன்று விடாமல் சோதனையிட வேண்டும். அதற்காகத்தான் காட்டிலாக்காவினால் இந்தச் சோதனைச் சாவடி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

தூக்கத்திலிருந்து விழித்த நீலகண்ட பிள்ளை, வண்டியைப் பரிசோதிக்க வேண்டி சாலையை நோக்கிப் போனார். பஸ்ஸின் மேற்பகுதியிலுள்ள வாழைக் குலைகளினூடே கொஞ்சமும் தயக்கம் இல்லாமல் கால் வைத்து நடந்து போவார் அவர். கேசவன் பஸ்ஸினுள்ளே கேசவன் சோதனையிட்டார். பெரிய ஒரு சோதனை என்றுதான் சொல்ல வேண்டும். பயணிகளின் தோல் பைகளிலும், கோணிகளிலுங்கூட ஏதாவது மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம்- குறுந்தோட்டி, கோலரக்கு, கலைமான் கொம்பு, மான் இறைச்சி, தேன், கஞ்சா, இப்படி ஏதாவது!

சட்டத்துக்குப் புறம்பாக இப்படிக் கடத்திக் கொண்டு வரும் பொருள்கள் பறிமுதல் செய்யப்படுவதோ, சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படுவதோ இல்லை! எப்படியோ ஏதோ ஒரு வகையில் சமரசமாகப் போய், நல்ல ஒரு முடிவும் ஏற்பட்டுவிடும். சோதனைச் சாவடியின் மேஜைமேல் இருக்கும் டப்பாவில் நாணயங்களும் நோட்டுகளும் போடப்படும். அதன்பின், சிறிது நேரத்துக்கு ஒரே நிசப்தம்.

மாலை நேரம் வந்துவிட்டால் சாவடியின் குறுக்கே தடியால் மறித்து, வரும் வண்டிகளை நிறுத்தச் செய்ய வேண்டும். சோதனைச் சாவடியினுள்ளும் வெளியே அறிவிப்புப் பலகை இருக்கிற இடத்திலும் அரிக்கன் விளக்கு ஏற்ற வேண்டும்.


சோதனைச் சாவடியினுள் இருக்கும் விளக்கின் சிம்னி தெளிவானது! வெளியே இருக்கும் விளக்கின் சிம்னியோ சிவப்பு வண்ணம் கொண்டது.

ஒரு சில நிமிஷ நேரந்தான் சென்றிருக்கும். மீண்டும் ஆரவாரம் உண்டாகத் தொடங்குகிறது. பாரம் ஏற்றிய லாரிகள் மேலிருந்து கீழ்நோக்கி மெல்ல ஓசை எழுப்பியபடி ஒன்றன்பின் ஒன்றாய் வந்துகொண்டிருந்தன. இரண்டு கைகளுக்குள் அடங்காத மரக்கட்டைகளை ஏற்றி, அவற்றை மிகப்பெரிய கயிறுகளால் பிணைத்துக் கட்டியிருக்கிறார்கள். மரக்கட்டைகளின் ஒரு பக்கம் எண்கள் எழுதப்பட்டிருக்கின்றன. ஏலம் எடுத்த கான்ட்ராக்டர்கள் ஏற்றி அனுப்புபவை அவை. சோதனைச் சாவடியில் முன் ஓர் ஓரமாக மெல்ல வந்து நிற்கிறது லாரி. ப்ரேக் போடும் போது வரும் ‘கரகர’ சத்தம் அந்த அமைதியைக் கிழித்துக் கொண்டு ஒலிக்கிறது. அதனுடன் மரக்கட்டைகளின் பாரம் தாங்காமல் முனகும் கயிறுகளின் சத்தமும் சேர்ந்து ஒலிக்கிறது.

தலையையும் காதுகளையும் ‘மஃப்ளர்’ கொண்டு மூடியிருக்கும் லாரி டிரைவர் சோதனைச் சாவடியினுள் நுழைந்து, மரத்தின் பெயர், அது சம்பந்தமான விவரங்கள் எழுதப்பட்டிருக்கும் சான்றிதழை மேஜையின் மேல் வைக்கிறார். அதன்பின், தம் ஜேபியிலிருந்த பீடி ஒன்றைப் பற்ற வைத்து உதடுகளுக்கிடையே வைத்துப் புகைக்கிறார்.

காவல் அதிகாரி கேசவன் டார்ச் விளக்கு ஒன்றைக் கையில் எடுத்துச் சாலையில் இறங்குகிறார். லாரியில் ஏற்றியிருக்கும் மரக்கட்டைகளை டார்ச் விளக்கு வெளிச்சத்தில் சோதனை செய்து பார்க்கிறார். காட்டிலாக்காவிலிருந்து தமக்கு ஏற்கனவே கிடைத்திருக்கும் மரம் சம்பந்தமான விவரங்களும், சான்றிதழில் குறித்திருக்கும் விவரமும் சரியாக இருக்கின்றனவா என்று ஒரு முறை ஒப்பிட்டுப் பார்க்கிறார். மரங்களின் எண்ணிக்கை, அளவு எல்லாம் சரியாக இருந்ததால் இரண்டு இடங்களில், ‘பரிசோதனை செய்தாகிவிட்டது. சட்ட விரோதமான கடத்தல் எதுவுமில்லை’ என்று எழுதினார்.

டிரைவர் தம் ஜேபியிலிருந்து ஒரு ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து மேஜைமேல் வைக்க, அதை எடுத்து டப்பாவினுள் போட்டார் காவல் அதிகாரி.

இது இன்று நேற்று நடைபெறும் ஒரு சம்பவமன்று. எத்தனையோ வருஷங்களாகத் தொன்று தொட்டு நடந்து வரும் ஒன்று.

ஒவ்வொரு மாத இறுதியிலும் டப்பாவில் இருக்கும் அந்தத் தொகையை வெளியே எடுப்பதுடன் தலைக்கு இவ்வளவு என்று பிரித்துக் கொள்வதும் வழக்கம். சோதனைச் சாவடிக் காவல் அதிகாரிகள், காடுகளைப் பார்வையிடும் காட்டிலாக்கா அதிகாரிகள், ரேஞ்சர் இவர்கள்தாம் பங்குதாரர்கள். மாதக் கடைசியில் எப்போதாவது காட்டிலாக்கா அதிகாரியும் ரேஞ்சரும் சோதனைச் சாவடியில் வேலை ஒழுங்காக நடைபெறுகிறதா என்று பரிசோதனை செய்ய வருவார்கள். சம்பந்தப்பட்ட தொகை அவர்களின் கையை அடைந்து விட்டால், சோதனையாவது மண்ணாவது!

பரிசோதனை முடிந்துவிட்டால் சாலையின் குறுக்கே போடப்பட்டிருக்கும் மரத் தடியை நீக்குவார் கேசவன். அடுத்த நிமிஷம் லாரி முனகிக்கொண்டு கீழ்நோக்கிச் செல்லத் தொடங்கும். வளைந்து வளைந்து செல்லும் சாலையில், ‘ங்... ங்...’ என்று இரைச்சலிட்டுக்கொண்டு செல்லும் லாரி நாலு திசைகளிலும் பரவியிருக்கும் பனிப்படலத்தினூடே மறைந்து போவதைப் பார்க்கும்போது கேசவனது மனத்தின் அடித்தளத்தில் ஒருவித அச்சம் இழைவிடத் தொடங்கும்.

இரவு முழுவதும் கொஞ்சமேனும் உறக்கம் வர வேண்டுமே! லாரிகள் ஒன்றன்பின் ஒன்றாய்ச் சோதனைச் சாவடியின் ஓரமாக நிற்கின்றன. பரிசோதனை செய்யாமல் ஒரு லாரியையும் விட முடியாது. ஏற்றப்பட்டிருக்கும் மரக்கட்டைகளின் எண்ணிக்கை தவறுவதையோ, டப்பாவில் விழும் நாணயம் குறைவதையோ கொஞ்சமும் அனுமதிக்க மாட்டார் கேசவன்.

காவல் அதிகாரிகள், பொதுவாக இரவு நேரங்களில் சற்றேனும் கண்ணயர மாட்டார்கள். என்னதான் உடலில் அசதி இருந்தாலும் கண்ணைத் திறந்து கொண்டிருப்பார்கள். நீலகண்டபிள்ளை வந்தபிறகுதான் இந்த நிலையிலும் ஒரு மாற்றம் உண்டாயிற்று. இரவு, தன் பார்வையை உலகின்மீது விரிக்க ஆரம்பித்து விட்டாலே, காலை நீட்டத் தொடங்கிவிடுவார் நீலகண்டபிள்ளை. அவருடைய தகரப்பெட்டியிலே கார்க் போட்டு மூடிய பச்சை வண்ணப் புட்டியில் எப்போதும் பட்டைச் சாராயம் இருக்கும். மாலை நேரம் வந்து விட்டால் இரண்டு மடக்காவது சாராயம் தொண்டைக்குள் இறங்கி ஆக வேண்டும். அது முடிந்துவிட்டால் நீலகண்ட பிள்ளைக்கு உறக்கம் ஓடி வந்து அவரை இருகரம் நீட்டி அணைத்துக் கொள்ளும். சாராயம் தீர்ந்து விட்டால் அடுத்த நிமிஷமே அண்டையிலுள்ள ஊர்வரையில் போய், மீண்டும் புட்டியை நிரப்பி வைத்த பிறகுதான் மறுவேலை பார்ப்பார்!

நீலகண்ட பிள்ளையின் நித்திரையை ஒருபோதும் கேசவன் தடுத்ததில்லை. பாவம், அவர் உறங்கட்டுமே. ஒவ்வொரு மாத இறுதியிலும் பணம் பங்கு வைக்கும்போது நீலகண்ட பிள்ளை அதற்காகவெல்லாம் கவலைப்பட மாட்டார்.

பொழுது புலரும் நேரத்தில் கேசவனின் கண்கள் மெல்லச் செருக ஆரம்பிக்கும். கண்ணைச் சுற்றியுள்ள தசைப்பகுதிகள், இரவு முழுவதும் தூக்கமில்லாததால் சற்று வீங்கிப்போய் காணப்படும். அப்போது சில நேரங்களில் அயர்வு அதிகமானால், கொஞ்சங்கூட எழாமல் பகல் நேரம் முழுவதும் அடித்துப் போட்ட பிணம் மாதிரி உறங்குவார் கேசவன். சோதனைச் சாவடியைப் பொறுத்தவரை பகல், இரவு இரண்டுமே ஒன்றுதான். அதற்குமேல் விசேஷமாகச் சொல்ல அங்கே என்ன இருக்கிறது?

எப்படியோ, வருஷங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஓடிக் கடந்து கொண்டிருக்கின்றன. இதோ, இந்தப் பகலும் போய் இரவின் ஆதிக்கத்தில் அடங்கிக் கிடக்கிறது உலகம்.

கேசவன் தன் உடலை மூடியிருக்கும் கம்பளியை மேலும் சற்று நன்றாக இழுத்து விட்டுக்கொண்டார். அவர் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்து போய்விட்டது போல் தோன்றியது. பனிப்படலத்தினூடே சாவடியில் கட்டியிருக்கும் அரிக்கன் விளக்கின் ஒளி மங்கலாகத் தெரிந்தது.

நேரம் இப்போது என்ன இருக்கும்? முண்டக்கயத்திலிருந்து புறப்படும் கடைசி பஸ் போய் எவ்வளவு நேரம் ஆகியிருக்கும்?

தன் கால்களை நாற்காலியின் மேல் முடக்கி அமர்ந்த கேசவன், பீடி ஒன்றை எடுத்து இழுக்க ஆரம்பித்தார்.

இதுதான் அவருடைய உத்தியோக வாழ்க்கையின் கடைசி இரவு. இதுவரை பார்த்து வந்த வேலையினின்று நாளை முதல் ஓய்வு பெற்றுக் கொள்ளப் போகிறார். அடுத்த மாதத்திலிருந்து பென்ஷன் தொகை வர ஆரம்பிக்கும். அதன்பின்... அதன்பின்? இனம் புரியாத ஒரே சூனியம்! உறக்கமில்லாமல் இருக்கும் சுகம்... ஊஹும்.

இந்த இரவில் கழியும் ஒவ்வொரு மணித் துளியும் அவரைப் பொறுத்தவரை விலை மதிக்க முடியாதது. வாழ்க்கையின் மிகப் பெரிய பகுதியைச் செலவிட்டார், அந்த இடத்தில் அவர். இனி அங்கே இருக்கப் போவதோ ஒரு சில மணிகள்தாம். நாளை முதல் இந்தப் பனிப் போர்வை, காட்டாறு, மரக்கட்டைகள் எல்லாமே அவரைப் பொறுத்த வரை நினைவுச் சின்னங்கள்தாம்.


சோதனைச் சாவடியின் மேற்கூரையிலிருந்து பனித் துளிகள் விழுந்து கொண்டிருந்தன. நிமிஷம் செல்லச் செல்ல காலம்தான் எவ்வளவு வேகமாய் ஓடிக் கொண்டிருக்கிறது என்று கேசவனுக்கு வியப்புத் தோன்றியது.

முப்பத்தைந்து வருஷங்களுக்கு முன்னால் சாதாரணமான ஒரு காவலாளாகக் கேசவன் தம் உத்தியோக வாழ்வில் காலடி எடுத்து வைத்தார். அவர் ஆறாம் வகுப்பில் இருக்கும்பொழுதே, தந்தை இந்த உலகைவிட்டு விடை பெற்றுக் கொண்டார். எஸ்.எஸ்.எல்.ஸி. தேறிப் பள்ளிக்கூடத்துக்கு ஆசிரியராக வரவேண்டுமென்பதுதான் ஆசை. ஆனால், நடைமுறை என்று வரும்போது அது சாத்தியமில்லாமல் போயிற்று. வீட்டைப் பீடித்த தரித்திரத்தால், ஆறாம் வகுப்பைக் கூட கேசவனால் முழுமையாக முடிக்க முடியாமல் போயிற்று. தோட்ட வேலைக்குப் போனார். கட்டிடம் கட்டும் வேலையில், சிமென்ட் கலவை எடுத்துக் கொடுக்கும் ஆளாக இருந்தார். படித்த பள்ளிக்கூடத்துக்கே மண் சுமக்கச் செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமையும் ஏற்பட்டது அவருக்கு. தம்முடன் படித்த நண்பர்கள் கேரள பாணினீயத்தையும், சம்புப் பிரபந்தங்களையும், துர்க்கேச நந்தினியையும் சத்தமிட்டுப் படித்துக் கொண்டிருந்தபோது, கேசவனோ பள்ளி முற்றத்தில் சிமென்டை மணலுடன் சேர்த்துக் குழைத்துக் கொண்டிருந்தார்!

கடைசியில் அங்ஙாழக்கல் என்ற இடத்தைச் சேர்ந்த ஒரு ரேஞ்சர்தான் கேசவனைக் காவலாள் வேலையில் சேரச் செய்தார்.

ஆசிரியராக வரவேண்டும் என்று கேசவன் ஆசைப்பட்டதெல்லாம் போய், ஆறு ரூபாய்ச் சம்பளம் வாங்குகிற அரசாங்க ஊழியர் ஆனார்.

வீட்டில் தாயுடன், நான்கு சகோதரிகள் இருந்தார்கள். சகோதரிகள் ஒவ்வொருவருக்கும் மணமுடித்து, புக்ககம் அனுப்பி வைத்து, ‘அப்பா... பாரத்தை இறக்கியாச்சு’ என்று நினைக்கும்போது, அவருடைய தலைமுடி முழுமையாக நரைத்து விட்டிருந்தது. அவருடைய வாழ்வில் மார்தட்டிக்கொண்டு சொல்லும் அளவுக்கு அப்படி ஒன்றும் நிகழ்ந்ததில்லை. அதற்காக விரக்தி அடைந்து அவர் மூலையில் போய் உட்கார்ந்து விடவுமில்லை.

காலச் சக்கரத்தின் சுழற்சியில் காவலாள் கேசவன் காவலதிகாரி (கார்டு) என்ற நிலைக்கு உயர்ந்தார். ஏழாம் வகுப்பாவது தேர்ச்சி பெற்றிருந்தால் ஒரு படி மேலே போய் அவர் காட்டிலாக்கா அதிகாரி ஆகியிருக்கலாம். வருமானத்தில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுவிட்டது என்று கூற முடியாவிட்டாலும், சிறிய சம்பளக்காரர்களுக்கிடையே சிறு உயர்வுகூட மதிப்பில் ஒரு பெரிய மாற்றத்தை உண்டாக்கிவிடுகிறது. இந்த மதிப்பு நிச்சயம் அவருடைய பதவி உயர்வுக்காகக் கிடைத்ததல்ல. உத்தியோகத்தில் காட்டும் நேர்மைதான் எல்லாவற்றுக்கும் காரணம்.

நீலகண்ட பிள்ளை அடிக்கொருதரம் என்று இருமிக்கொள்கிறார். மனைவி, மக்கள் எல்லாம் இருக்கும் அவர் எவ்விதக் கவலையும் இல்லாமல் நிம்மதியாய் உறங்கிகொண்டிருக்க, ஏகாங்கியான கேசவனோ குளிரையும் பொருட்படுத்தாமல் அமர்ந்து ஏதோ சிந்தனையில் இருந்தார்.

மேலதிகாரிகளுக்கு கேசவன் மீது எப்போதுமே ஒரு தனிப்பிரியம் என்றுதான் சொல்ல வேண்டும். ஒளிவு மறைவில்லாத அவருடைய போக்கும் வேலையில் அவர் காட்டும் சிரத்தையும் அவர்களுக்குப் பிடித்திருந்தது, அவருக்குப் பழக்கமில்லாத இடமே இந்தக் காட்டுப் பகுதியில் இல்லை.

மலையாற்றூர்ப் பகுதியில் பணியாற்றும்போதுதான் மாவட்ட காட்டிலாக்கா அதிகாரியான மேனன் அவருக்கு அறிமுகம் ஆனார். கேசவனின் வாழ்க்கையில் அது குறிக்கப்பட வேண்டிய ஒரு நாள். பரிசோதனையின் பொருட்டு மேனன் அந்தப் பகுதிக்கு வந்திருந்தார். போகும்போது, “கேசவன்! நாளைக்கு நீங்க கோட்டயம் ஜில்லா ஆபீஸுக்குக் கொஞ்சம் வாங்க” என்று கூறிவிட்டுப் போனார்.

அதைக் கேட்டவுடன் உண்மையிலேயே நடுங்கிப் போனார் கேசவன். கோட்டயத்துக்குக் கூப்பிட வேண்டிய அளவுக்கு உத்தியோகத்தில் அவர் என்ன தப்புச் செய்துவிட்டார்? வாழ்க்கையில் இதுவரை வெளியே கூறிக்கொள்கிற அளவுக்கு ஒன்றும் பெரிதாக அவர் சம்பாதித்து விடவில்லை. இரண்டாம் தங்கையின் இரண்டு குழந்தைகள் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஆக வேண்டிய செலவை கேசவன்தான் கவனித்துக் கொண்டார். தமக்குத்தான் சொந்தம் என்று கூற ஒரு குடும்பம் அமையும் பாக்கியம் இல்லாமல் போய்விட்டாலும், தாம் பிறந்த குடும்பத்திலாவது பட்டதாரிகள் உருவாகட்டுமே என்று கனவு கண்டு கொண்டிருந்தார் கேசவன். நிலைமை இப்படி இருக்க, அவருக்குக் கோட்டயத்துக்கு வர வேண்டும் என்று ஆணை வந்தால்...?

ரேஞ்சர் செரியன் சிரித்துக் கொண்டே இறங்கி வந்தார். “கேசவன், மேனன் சார் உன்னைப் பார்க்கத்தான் வந்தார். தம் சொந்த வேலைகளை நம்பிக்கையாக ஒப்படைப்பதற்கு அவருக்கு விசுவாசமான ஒரு கார்டு வேணுமாம்! உன்னைப் பற்றி நல்ல விதமா எல்லாரும் மேனன் சாரிடம் சொல்லியிருக்காங்க. எங்ககிட்டயும் கேட்டார். நாங்களும் சொன்னோம். நாளைக்குக் காலையிலேயே போய்ப் பாரும். இல்லாட்டி... இப்பவே போ மேன்!” என்றார்.

அவ்வளவுதான், கேசவனின் இரண்டு கண்களிலும் கண்ணீர் அரும்பிவிட்டது! காவல் உத்தியோகம் பார்க்கும் தம்மைப் போய் அவ்வளவு பெரிய அதிகாரி தேர்ந்தெடுத்ததை எவ்வளவுதான் முயற்சி செய்து பார்த்தும் கேசவனால் நம்பவே முடியவில்லை!

பனிப்படலத்தினூடே ஒளியின் இழைகள் தெரிந்தன. லாரி ஏதாவது வந்துகொண்டிருக்கும்.

லாரி ஒன்று வளைவு திரும்பி முனகியபடி சோதனைச் சாவடியின் முன் வந்து நின்றது.

மேஜையின் மேல் சான்றிதழை வைத்த டிரைவர் ஓர் ஓரத்தில் பீடி புகைக்க ஆரம்பித்தார்.

சாலையின் குறுக்கே போடப்பட்டிருக்கும் மரத்தடியை எடுத்து மாற்றும்போது, மேலும் இரண்டு லாரிகள் வந்து நின்றன. ஒன்றில் கட்டைகள் ஏற்றப்பட்டிருந்தன. மற்றொன்றில் மரவள்ளிக் கிழங்கு மூட்டைகள் அடுக்கப்பட்டிருந்தன. வண்டன்மேடு என்ற இடத்திலிருந்து வருகிறது அந்த லாரி. சங்ஙனாச்சேரிச் சந்தைக்குப் போகிறது. மலையின் அடிவாரத்திலுள்ள நகரப் பிரதேசத்து மக்களுக்கு, மலைச் சாரலிலிருந்துதான் உணவுப் பொருள் போயாக வேண்டும்.

கேசவன் லாரியைச் சுற்றி சென்று டார்ச் விளக்கினால் பரிசோதித்துப் பார்த்தார். நீண்ட ஒரு கம்பியினால் மரவள்ளிக்கிழங்கு மூட்டைகளைச் குத்திப் பார்த்தார். மரவள்ளிக்கிழங்கு மூட்டைகளினூடே திருட்டுத்தனமாகக் கடத்திக் கொண்டு வரப்படும் கட்டைகள் இல்லை.

டிரைவர் நீளமான ஒரு புத்தகத்தில் லாரியின் எண்ணை எழுதிக் கையெழுத்திட்டார். அடுத்து என்ன நினைத்தாரோ, ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து மேஜை மேலிருந்த மசிப்புட்டியின் அடியில் வைத்தார்.

லாரிகள் போனவுடன், மீண்டும் கம்பளியை இழுத்துவிட்டுக் கொண்டு சிந்தனையில் ஆழ்ந்துவிட்டார் கேசவன்.

மேனனுடன் கழித்த அந்த நாட்கள்! கேசவன், மேனனின் வீட்டில் ஓர் உறுப்பினர் என்கிற அளவுக்கு அந்தக் குடும்பத்துடன் தம்மை நெருக்கமாக ஐக்கியப்படுத்திவிட்டிருந்தார். மேனனின் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் கேசவன் என்றால் உயிர்! காலொன்று சூம்பிப்போன பிரசன்னகுமாரைத் தோளில் உட்கார வைத்து கேசவன் நடக்கும்போது, தன்னையும் மேலே ஏற்ற வேண்டும் என்று அடம் பிடிப்பான் துடுக்குப் பையனான மோகனசந்திரன்.


‘இப்போ அவங்கள்ளாம் எங்கே இருக்காங்களோ? என்னை நினைச்சுப் பார்ப்பாங்களா?’ என்று சிந்திக்கலானார் கேசவன். மேனன் எங்கே போனாலும் கேசவனையும் உடன் அழைத்துக் கொண்டுதான் போவார். கார்டிடம் இந்த அளவுக்கு உயிரினும் மேலாக அன்பு செலுத்திய ஒரு மனிதனைத் தம் வாழ்வில் கேசவன் கண்டதேயில்லை. பரந்து கிடக்கும் காட்டுப் பகுதியில் மானைப் போன்று துள்ளிப் போகும் மேனனுடன் ஒரு குட்டி யானையைப் போல் போக கேசவனுக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கும் தெரியுமா?

இன்று அந்தக் காடுகளெல்லாம் எங்கே போயினவோ! அன்று அவர்கள் நடந்து திரிந்த அந்த வனாந்தரப் பகுதிகளெல்லாம் இன்று ஜன சமுத்திரத்தால் நிரம்பி வழிந்துகொண்டிருக்கின்றன. கொஞ்ச நஞ்சம் எஞ்சி நிற்பது கூட கால ஓட்டத்தில் சீரழிந்து வந்தன. மரங்கள், செடிகள், கொடிகள், பறவைகள், பிராணிகள் எல்லாமே கொஞ்சங் கொஞ்சமாய் இருந்த இடம் தெரியாமல் அழிந்து கொண்டிருக்கின்றன. அவற்றின் பெயர்களை அறிந்தவர்கள்கூட இன்று நம்மிடையே அதிகமாக இல்லை.

மேனன் டேராடூனில் நடைபெற்ற மாநாட்டுக்குச் சென்ற போதும் கேசவனைத் தம்முடன் அழைத்துச் செல்ல மறக்கவில்லை. புகைவண்டியில் முதல் வகுப்பில் பயணம் செய்த அவர் மூன்றாம் வகுப்பில் பயணம் செய்த கேசவனைக் காண ஒவ்வொரு ஸ்டேஷனிலும் இறங்கி வருவார். அவருக்கு ஏதாவது வேண்டுமா என்று கேட்கத்தான்! மொழி தெரியாத இடத்தில் தம்முடன் வரும் ஆளுக்கு கஷ்டம் ஏதேனும் உண்டாகிவிடக்கூடாது என்று மேனன் நினைத்திருக்க வேண்டும். உடன் வரும் ஊழியனின் சௌகரியங்களில் அக்கறை காட்டும் மேல் அதிகாரி அவர்.

டேராடூனில் நேர்ந்த ஓர் அனுபவத்தை நினைத்துப பார்த்தார் கேசவன்.

காலையில் அறையைவிட்டுப் போனாரானால் பின்பு மாலையில் தான் மேனன் திரும்பி வருவார். பாரதத்தின் பல பகுதிகளிலுமிருந்து வந்திருக்கும் பெரிய அறிவியல் அறிஞர்களுடன் சர்ச்சைகள் செய்துகொண்டிருப்பார் மேனன் பகல் நேரம் முழுவதும். மாலையில் அவர் திரும்பும் வரை கேசவனுக்கு வேலை ஒன்றும் இல்லை.

வெயில் பட்டு வெள்ளியாக மின்னும் இமயத்தைக் காண ரம்மியமாய் இருக்கும். வானளவு உயர்ந்து நிற்கும் அந்த மலையின் முன், தாம் இதுவரை கண்டு வந்த மலைகள் எவ்வளவு சாமான்யமானவை என்ற உண்மை அப்போதுதான் தெரிந்தது கேசவனுக்கு.

வனவியல் கல்லூரியைச் சேர்ந்த அந்தப் பகுதியில் பலதரப்பட்ட காய்கறிச் செடிகள் பயிரிடப்பட்டிருந்தன. உலகத்தின் பல பகுதிகளிலிருந்தும் கொண்டு வந்த சிறிதும் பெரிதுமான இனங்கள் அவற்றில் இடம் பெற்றிருக்கின்றன. அவற்றைப் பார்த்தபடியே நடந்து சென்றால் நேரம் போவதே தெரியாது கேசவனுக்கு.

ஒரு நாள் எதிர்பாராத வகையில் மேனனே முன்னால் நின்று கொண்டிருந்தார். அவர் ஏதோ முக்கியமாகச் சிலருடன் விவாதித்துக் கொண்டிருந்தார். சிறிது தூரத்தில் இருந்த ஒரு மரத்தின் உச்சியில் அடிக்கொரு தரம் சுட்டிக் காட்டியவாறு என்னவோ சொல்லிக் கொண்டிருந்தார்.

கேசவனைக் கண்ட மேனன், அவரை அழைத்தார். “கேசவா, இங்கே வா...”

கேசவன் பணிவுடன் அருகே போய் நின்றார். அவரிடம் மரக்கிளை ஒன்றைக் கொடுத்தார் மேனன்.

“இதென்ன மரம்னு சொல்லு, பார்ப்போம்!”

அருகில் இருந்த மரத்தின் மேல் பகுதியைப் பார்த்தார் கேசவன். பின்பு கையில் இருந்த அந்தக் கிளையையே ஒரு நிமிஷம் ஆராய்ந்தார். இலை, பூ, தளிர், அளவு ஒவ்வொன்றையும் ஆராய்ச்சி செய்து பார்த்தார். இதற்கு முன் நன்கு பழக்கமாயிருக்கும் இனம் போன்று தோன்றியது. ஆனால் அவரால் தீர்க்கமான ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. என்ன இனத்தைச் சேர்ந்ததாக அது இருக்கும் என்று அவர் நினைக்கிறாரோ, அதற்கும் இதற்கும் அளவில் சற்று வித்தியாசம் தெரிந்தது. அது எப்படி என்று தெரியாமல் அவரால் எப்படி ஒரு முடிவுக்கு வர முடியும்?

மேனனும் அவருடன் நின்ற ஆட்களும் கேசவனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

“என்ன, ஒனக்கும் தெரியல்லியா?”

“கரி மருது மாதிரி தெரியுது!” தயங்கித் தயங்கிக் கூறினார் கேசவன்.

“போடா... நீயும் உன் கரிமருதும்” கேசவனைக் கேலி செய்தார் மேனன்.

தமக்குத் தெரிந்ததைக் கூறினார் கேவசன். இலை, பூக்களின் அமைப்பு அளவு... பிறகு... பிறகு... புதியதாகச் சில பாகங்கள் இருந்தாலும் அளவில் கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருந்தது.

“சரிதான்... நீ சொன்னது சரி” கேசவனின் தோளில் தட்டியபடி கூறினார் மேனன். “ஒரு விஷயம் தெரியுமா? நம்ம பகுதியிலிருந்து எத்தனையோ வருஷங்களுக்கு முன்னாடி இதைக் கொண்டு வந்து வச்சிருக்காங்க. இங்கே இருக்கிற ரிக்கார்டுகளிலேயும் அதை எழுதி வச்சிருக்காங்க. உனக்கு எங்கே தெரியுதான்னு பார்த்தேன். சீதோஷ்ண நிலை மாற்றத்துக்கு ஏற்ற மாதிரி இலையின் அளவு மாறிப் போயிருக்கு; அவ்வளவுதான்!”

அடக்கத்தால் தலை குனிந்து கொண்டார் கேசவன். உலகப் பெரும் அறிவியல் அறிஞர்கள் வைத்த அந்தத் தேர்வில் கேசவனைப் பொறுத்தவரை ஓர் அனுபவப் பாடம் கிடைத்தது. அதில் அவர் தோற்கவில்லை.

மேனன் அவர்களிடம் என்னவோ ஆங்கிலத்தில் கூற, அவர்கள் கேசவனைப் பார்த்தபடி சிரித்தார்கள். தன் ஊழியனின் திறமையில் மேனனுக்கும் பெருமை உண்டாகியிருக்க வேண்டும். அதன் அறிகுறி அவருடைய விழிகளில் தெரிந்தன.

தமக்குக் கீழே பணியாற்றுபவர்களுக்கு ஊக்கம் தருவதிலும், அவர்களின் திறமையைக் கண்டு பாராட்டுவதிலும் மேனனுக்கு எப்போதுமே ஆர்வம் உண்டு. அவருடன் கழிந்த இன்பமயமான அந்த நாட்கள்... எப்போதும் அப்படியே இருக்கக் கூடாதா?

சாலையில் லாரியின் ப்ரேக் சத்தம் கேட்டதும் கேசவனின் சிந்தனைத் தொடர் அறுபட்டது. அரிக்கன் விளக்கின் வெளிச்சம் மேலும் குறைந்துவிட்டிருந்தது.

“என்ன சேட்டா, விளக்கிலே மண்ணெண்ணெய் இல்லை போல இருக்கே!” - சோதனைச் சாவடியினுள் வந்த டிரைவர் கேட்டார்.

கம்பியில் தொங்கிக் கொண்டிருந்த அந்த விளக்கை எடுத்துக் கொண்டு பிரம்புத் தடுப்புக்கு அப்பால் போனார் கேசவன். அங்கே வாய் பிளந்து உறங்கிக் கொண்டிருந்தார் நீலகண்ட பிள்ளை. அவரைச் சுற்றிலும் சாராயத்தின் நெடி வீசியது. கட்டிலின் அடியில் இருந்த மண்ணெண்ணெய் புட்டியிலிருந்து எண்ணெயை ஊற்றினார் கேசவன். பின்பு, திரியை நீட்டிவிட்டு மேஜையை நோக்கி வந்தார்.

“ஒங்க ஃப்ரெண்ட் எங்கே, காணோம்!”- டிரைவர் கேட்டார்.

கேசவன் ஒன்றும் பதில் கூறவில்லை. சாலையில் இறங்கி டார்ச் விளக்கை அடித்துப் பார்த்தார்.

"சில்லறை ஒண்ணும் எடுத்திட்டு வரல்லே, சேட்டா. நாளை தந்தா போதுமா?" டிரைவர் பின் கழுத்தைச் சுரண்டியபடி கேட்டார்.


“ம்...” மெல்ல முனகினார் கேசவன்.

நாளை... நாளை என்று எங்கே இருக்கிறது? அவரைப் பொறுத்தவரை இனி எல்லாமே நேற்றுத்தான்!

“கேசவன்! உத்தியோகத்தை வச்சு ஏதாவது சம்பாதிச்சிருக்கியா?”- ஒரு நாள் மேனன் கேட்டார்.

அவரிடம் உண்மையை மட்டுமே கூற முடியும்.

“கடைசித் தங்கச்சியோட ரெண்டு புள்ளைங்க வேலையிலே இருக்கு.” கேசவனைப் பொறுத்தவரை மருமக்கள்மாரின் படிப்பும், வேலையுந்தான் பெரிய சம்பாத்தியம்.

“நான் அதைக் கேட்கல்லே. பணமோ, பூமியோ ஏதாவது தேடி வச்சிருக்கியா?” -மீண்டும் கேட்டார் மேனன்.

“இல்லை, நான் ஒரே ஓர் ஆள்தானே? எனக்கெதுக்குப் பணமும் பூமியும்?”

“போடா மடையா! ஒரே ஆளாம், ஒரு ஆள்! கொஞ்ச நாள் ஆனா உனக்கு உதவி செய்ய ஓர் ஆள் இல்லாம நீ மட்டும் தனியா நின்னுக்கிட்டிருப்பியா? அதுக்குப் பெறகு ஒரு நாள் மூச்சு அடங்கிப்போய்க் கிடப்பே.” - அவரை மேனன் கேலி செய்வதுபோல் பார்த்தார்.

அது நடந்து ஒரு மாதம் கழித்த பிறகு இந்த இடத்துக்குக் கேசவனுக்கு மேனன் வேலை மாற்றம் வாங்கிக் கொடுத்தார். உத்தியோகத்தைக் கொண்டு ஏதாவது சம்பாதிக்கும் வகையில் அவ்வப்போது தேவைப்பட்ட சலுகைகளும் அளித்து வந்தார் மேனன். அறிந்த நல்ல மனிதரிடமிருந்து பிரிந்து வரவே மனமில்லை கேசவனுக்கு.

“போடா. இதுக்கா போய்க் கலங்கி நிற்கிறே? அன்பு, உறவு இந்த இரண்டையும் மாத்திரம் நினைச்சுக்கிட்டிருந்தா வாழ்க்கையில் ஒண்ணும் சம்பாதிக்க முடியாது. உனக்குன்னு ஒரு காலம் இருக்கு. அன்னிக்கு உன்னைக் காப்பாத்த இந்தப் பரந்த உலகத்திலே ஓர் ஆத்மாகூட இருக்காது. அதனால்...” மேனன் சொல்ல வந்ததை முழுமையாக முடிக்கவில்லை.

பிரியும்போது மேனன் கூறினார். “வாழ்க்கை என்பது எப்பவுமே இப்படித்தான். எல்லாரும் எப்போதும் சேர்ந்திருக்கவே முடியாது. சரி; போய் வா!” அவருக்கும் தம்முடன் இதுவரை இருந்த ஊழியனைப் பிரிய வருத்தமாக இருந்திருக்குமோ?

அதன்பிறகு கேசவன் மேனனைப் பார்க்கவே இல்லை.

இந்தச் சோதனைச் சாவடிக்குக் கேசவன் வந்து சுமார் ஒரு மாதம் ஆகியிருக்கும். அப்போதுதான் கொஞ்சமும் எதிர்பார்த்திராத அந்த நிகழ்ச்சி நேர்ந்தது. மேனன் கோடநாட்டில் நடைபெற்ற யானை ஏலத்துக்காகப் போயிருக்கிறார். அங்கே அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது அவருக்கு நெஞ்சுவலி வந்திருக்கிறது. அது அதிக நேரம் அவரைத் துன்பப்படுத்திக் கொண்டிருக்கவில்லை. காட்டுப் பிரதேசத்தை தம் உயிரினும் மேலாகக் கருதி அன்பு செலுத்திய அந்த மாமனிதர் காட்டு மண்ணுடனேயே ஐக்கியமாகிவிட்டார்.

அதை நினைத்துப் பார்த்தபோது கேசவனின் நெஞ்சம் கனப்பது போல் தோன்றியது. கண்களைச் சுற்றிலும் ஒரு வகையான இருள்போர்வை போர்த்திக்கொண்டு வருவது போல் தோன்றியது. கேசவனுக்கும் மேனனுக்குமிடையே அப்படியென்ன நெருக்கமான உறவு? தம்மை வெறும் வேலைக்காரன் என்றா நினைத்து நடத்தினார் மேனன்!

இந்தச் சோதனைச் சாவடிக்கு வந்து கிட்டத்தட்ட ஆறு வருஷங்கள் ஆகிவிட்டன. இங்கு வந்தால் கிடைக்கக்கூடிய அனுகூலங்கள் அவர்கள் எல்லாருக்குமே நன்கு தெரியும். ஆறு மாதத்துக்கு மேல் இங்கே நிரந்தரமாக யாரும் வேலை பார்த்ததில்லை. ஒருவர் பின் ஒருவராக இங்கே வேலைக்கு வரப் போட்டி போட்டுக் கொண்டிருப்பார்கள். கேசவனின் நெருங்கிய நண்பர்கள் பலரும் வந்து, வந்த மாதிரியே பின்னொரு நாளில் போகவும் செய்திருக்கிறார்கள். புதிது புதிதாக எத்தனையோ முகங்கள் அங்கு வந்தன! ஆனால், கேசவனை மட்டும் இடமாற்றம் செய்ய இதுவரை எந்த மேலதிகாரியும் முன் வரவில்லை. மேனனின் அன்புக்குக் கட்டுப்பட்ட ஆள் கேசவன் என்பது பொதுவாக எல்லாருக்கும் நன்கு தெரியும். இன்று அவர் இல்லை; இருந்தாலும், அவருடைய புகழ் நிலைத்து நிற்கிறது.

இதோ, நேரம் கொஞ்சம் கொஞ்சமாய்க் கடந்து கொண்டிருக்கிறது. எஞ்சி நிற்பதோ ஒரு சில நிமிஷங்கள்தான். இன்னும் சிறிது நேரத்தில் கேசவன் தான் பல வருஷங்களாகப் பழகி வந்த இந்த இடத்திலிருந்து என்றென்றைக்கும் விடை பெற்றுக் கொள்ளப் போகிறார்.

லாரிகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டிருந்தன. சான்றிதழைப் பரிசோதித்த கேசவன் வழக்கம்போல் சரியாக இருக்கிறதா என்று ஒப்பிட்டுப் பார்த்தார். டப்பாவில் நாணயங்களும், நோட்டுகளும் நிறைந்து கொண்டிருந்தன. அரிக்கன் விளக்கு சிம்னி கரி படிந்து, விளக்கொளியை முழுமையாக மறைத்து விட்டிருந்தது. மர உச்சியிலிருந்து சோதனைச் சாவடியின் மேற்கூரை மேல் பனித்துளிகள் ‘சொட் சொட்’ என்று விழுந்து கொண்டிருந்தன.

நீலகண்ட பிள்ளையின் குறட்டை ஒலி பெரும்பாலும் நின்று போயிருந்தது.

சாலையோரம் தொங்கவிடப்பட்டிருந்த அரிக்கன் விளக்கு எப்போது அணைந்ததோ தெரியவில்லை.

லாரிகளின் வரவு கொஞ்சங் கொஞ்சமாய் நின்று போயிருந்தது.

பொழுது புலரப் போகிறது.

ஐயப்பன் கோயிலிலிருந்து அதிகாலை ஐந்தரை மணிக்கு முண்டக்கயம் செல்கிற பஸ், வளைவு திரும்பி வந்து கொண்டிருக்கவே, பனிப்படலத்தினிடையே பஸ்ஸின் விளக்கொளி இழையோடிக் கொண்டிருந்தது.

டிரைவர் இறங்கி வந்தார். சிகரெட் ஒன்றை உதட்டில் பொருத்தியபடி, “இன்னிக்கு மற்ற நாட்களைவிடக் குளிர் கொஞ்சம் அதிகம்... உங்களுக்குச் சிகரெட் வேணுமா?” என்றார்.

“வேண்டாம்.” இதைச் சொல்லும்போது கேசவனின் சிந்தனை வேறொன்றைப் பற்றியதாக இருந்தது. இந்தக் குளிரின் கடைசி நிமிஷங்களை முழுமையாகத் தாம் அனுபவிக்க வேண்டும் என்று விரும்பினார் கேசவன். இன்னும் ஒரு சில மணித்துளிகள் சென்றால், இந்தக் குளிர், பனிப் போர்வை எல்லாம் அவரைப் பொறுத்தவரை நினைவுச் சின்னங்கள் மட்டுந்தான்!

அருகில் இருந்த மர உச்சியில் கூடு கட்டியிருந்த குருவி ஒன்று மெல்லச் சலசலத்தது. அதன் சத்தத்தில் உறக்கமிழந்த காட்டுக்கோழி ஒன்று அலறியது.

நீலகண்ட பிள்ளை சோம்பல் முறிக்கும் சத்தம் கேட்டது.

இரண்டு கைகளையும் தேய்த்தபடி தட்டி மறைவுக்கு அந்தப் புறத்திலிருந்து வந்தார் அவர்.

“சார், எப்போ புறப்படணும்?” வரும்போதே வினவினார் நீலகண்ட பிள்ளை.

“கோட்டயம் போற முதல் பஸ்ஸுக்கு. ஜில்லா ஃபாரஸ்ட் ஆபீஸுக்குப் போகணுமில்லே?” பட்டென்று கூறினார் கேசவன். கூறியிருக்க வேண்டியதில்லை என்று மனத்தின் ஓர் ஓரத்தில் பட்டது. பொழுது புலர்ந்த பிறகு போனால் போதுமே என்று கூடத் தோன்றியது.

நீலகண்ட பிள்ளை சோதனைச் சாவடியின் பின் பகுதிக்குப் போனார். ஸ்டவ்வின் ‘உஸ்’ என்ற ஒலி அங்கிருந்து கேட்டது.

ஆவி பறக்கும் காபியைக் கேசவனின் முன் மேஜை மேல் வைத்தார் நீலகண்ட பிள்ளை.

“சார், குளிச்சிட்டுத்தானே போறீங்க? வேணும்னா தண்ணி சூடாக்கட்டா?” - நீலகண்ட பிள்ளை தம் முகத்தையே பார்ப்பதுபோல் தோன்றியது கேசவனுக்கு.


“வேண்டாம்! அங்கே வீட்டுலே போய்க் குளிச்சிக்கிறேன்.”- தாம் அப்படிக் கூறியிருக்க வேண்டியது இல்லை என்று மறுபடியும் தோன்றியது கேசவனுக்கு. பேசாமல் குளித்து முடித்துவிட்டே போகலாம். அப்படியாவது சற்று அதிக நேரம் இங்கே தங்கலாமில்லையா?

கம்பளியையும், மஃப்ளரையும் மடித்துத் தகரப் பெட்டியினுள் வைத்தார் கேசவன். ‘இவையும் தங்கள் கடமைகளை ஒழுங்காகச் செய்து முடித்திருக்கின்றன’ என்று அப்போது அவருக்குத் தோன்றியது. இனி அவற்றுக்கும் நிலையான ஓய்வுதான்!

டீக்கடைக்காரனிடம் விடை பெற்றுக்கொள்ள வேண்டும். கடந்த ஆறு வருஷ காலமாகச் சாப்பாடு போட்டவன் அவன்.

டீக்கடைக்குப் போய் கேசவன் திரும்பி வரும்போது, நீலகண்ட பிள்ளை தயாராகப் படுக்கைகளை மடித்துக் கட்டி வைத்திருந்தார். பெட்டி, படுக்கைகளைச் சோதனைச் சாவடியின் முன் இருந்த திண்ணைமேல் எடுத்து வைத்ததும் அவர்தான்.

டப்பாவில் இருந்த பணத்தை ஒரு பொட்டலமாகக் கட்டிக் கேசவனிடம் நீட்டியபடி நீலகண்ட பிள்ளை சொன்னார். “வண்டிக் கூலிக்கு இதை வச்சுங்குங்க.”

மேஜையின் மேல் அந்தப் பொட்டலத்தைத் திரும்பவைத்தார் கேசவன்.

“வேண்டாம்! இன்னிக்குத்தான் டிக்கெட் எடுக்காமலே கோட்டயம்வரை போகலாமே!”

கேசவன் நீலகண்ட பிள்ளையின் கண்களை உற்று நோக்கினார். ஏதோ ஒரு வகையான சோகம் அங்கே நிழல் பரப்பிவிட்டிருந்தது.

சோதனைச் சாவடியின் முன் நின்றிருந்த கோட்டயம் பஸ் வளைவு திரும்பியபோது, பின் இருக்கையில் அமர்ந்திருந்த கேசவன் பின் பக்கமாய்த் திரும்பிப் பார்த்தார். சோதனைச் சாவடி தெரியவில்லை. பனிப் படலத்தில் அது மறைந்துவிட்டிருந்தது.

பனிப் படலத்தினூடே வழக்கமாகத் தெரியும் மங்கலான அரிக்கன் விளக்கொளிகூடத் தெரியவில்லை. ஓ... அதைத்தான் எப்போதோ கேசவன் எடுத்து உள்ளே வைத்துவிட்டாரே!

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.