Logo

குட்டிச்சாத்தானும் ரொட்டியும்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 6313
kutti chathanum, rottiyum

ரு ஏழை விவசாயி ஒரு அதிகாலை நேரத்தில் உழுவதற்காக கிளம்பினான். போகும்போதே தன்னுடன் சாப்பிடுவதற்காக ஒரு ரொட்டியையும் எடுத்துச் சென்றான். உழுவதற்கான ஆயத்தங்களை அவன் செய்தான். ரொட்டியைத் தன் கோட்டிற்குள் சுருட்டி அதை ஒரு புதருக்குள் வைத்துவிட்டு, வேலை செய்ய ஆரம்பித்தான்.

சில மணி நேரம் கழித்து, உழுதுகொண்டிருந்த குதிரை மிகவும் களைப்படைந்து விட்டது. அவனுக்கும் பசி எடுக்கத் தொடங்கியது. கலப்பையை ஒரு இடத்தில் நிறுத்திய விவசாயி குதிரையை அவிழ்ந்து புல் மேயவிட்டான். தன் கோட்டை மறைத்து வைத்திருந்த இடத்தை நோக்கி அவன் சென்றான்.

அவன் கோட்டை எடுத்தான். ஆனால், அதற்குள் இருந்த ரொட்டியைக் காணவில்லை. அவன் கோட்டுக்குள் எல்லா இடங்களிலும் தேடினான். அதை நன்கு உதறினான். அப்போது கூட ரொட்டி அங்கு இல்லை. விவசாயியால் அதைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

"என்னடா வியப்பா இருக்கு!"- அவன் தனக்குள் சொல்லிக் கொண்டார். "நான் யாரையும் பார்க்கல. ஆனா, யாரோ இங்கேயிருந்து நான் வச்சிருந்த ரொட்டியை எடுத்துட்டுப் போயிருக்காங்க."

விவசாயி நிலத்தில் உழுதுகொண்டிருந்த பொழுது, அந்த ரொட்டியை எடுத்துக்கொண்டு போனது ஒரு குட்டிச்சாத்தான். இப்போது அது புதருக்குப் பின்னால்தான் ஒளிந்து கொண்டிருந்தது. விவசாயி ரொட்டி காணாமல் போனதற்காக புலம்பப் போவதையும், சாத்தானை அழைக்கப் போவதையும் கேட்கும் ஆவலுடன் அங்கு அது உட்கார்ந்திருந்தது.

தன் உணவு காணாமல் போனதற்காக விவசாயி மிகவும் கவலைப்பட்டான். அதே நேரத்தில் "அதை ஒண்ணும் செய்ய முடியாது”- என்று அவன் தனக்குள் சொல்லிக் கொண்டான். அவன் மேலும் சொன்னான்: "நான் சாப்பிடாம போனா, செத்தா போயிடப் போறேன்? யார் ரொட்டி வேணும்னு எடுத்தாங்களோ, அவங்களுக்கு அது தேவைப்பட்டிருக்கு. அந்த அளவுல ரொட்டி அவங்களுக்காவது பிரயோஜனமா இருக்கட்டும்!"

பிறகு அவன் கிணற்றை நோக்கிச் சென்றான். அங்கு கொஞ்சம் நீரைக் கையால் அள்ளிப் பருகிவிட்டு, சிறிது நேரம் ஒரு இடத்தில் உட்கார்ந்து ஓய்வு எடுத்தான். பின்னர் குதிரையை அழைத்துக் கொண்டு ஏரில் பூட்டி மீண்டும் அவன் உழ ஆரம்பித்தான்.

விவசாயியைப் பாவம் செய்யவைக்கலாம் என்று திட்டமிட்டிருந்த குட்டிச்சாத்தான் உண்மையிலேயே ஏமாற்றமடைந்துதான் விட்டது. அது நடந்த விஷயத்தை தன்னுடைய எஜமான் சாத்தானிடம் விவரிப்பதற்காகச் சென்றது.

அது சாத்தானிடம் சென்று தான் விவசாயியின் ரொட்டியைத் திருடியதையும், ரொட்டி காணாமல் போனதற்காக திட்டுவதற்குப் பிதலாக அந்த விவசாயி 'ரொட்டி அதை எடுத்தவங்களுக்குப் பிரயோஜனமா இருக்கட்டும்' என்று சொன்னதையும் சொன்னது.

அதைக் கேட்டு சாத்தான் பயங்கர கோபத்திற்கு ஆளாகி விட்டான். அவன் சொன்னான்: "அந்த மனிதன் நீ எதிர்பார்த்த மாதிரி நடக்காம, நல்ல மனிதனா நடந்திருந்தான்னா, அது உன் தப்புதான். நீ உன் வேலையை சரியா புரிஞ்சி செய்யல. விவசாயிகளும், அவங்களோட பொண்டாட்டிகளும் இந்த மாதிரி நல்லவங்களா நடந்தாங்கன்னா, நமக்கு என்ன வேலை? நாம இதை இப்படியே விட்டுடக் கூடாது. திரும்பவும் நீ அங்கே போ. நல்லா கவனிச்சு ஒவ்வொண்ணையும் செய். மூணு வருஷத்துக்குள்ள நீ அந்த விவசாயியை வேறமாதிரி நடக்க வைக்கல, நான் உன்னை ஒரேயடியா புனித நீர்ல மூழ்கடிக்கிறதைத் தவிர வேற வழியில்ல..."

அவ்வளவுதான். குட்டிச்சாத்தான் பயந்து நடுங்க ஆரம்பித்துவிட்டது. அது மீண்டும் பூமியை நோக்கி வந்தது. தன் தவறை எப்படி சரி பண்ணுவது என்று நீண்ட நேரம் ஆலோசித்தது. யோசித்து யோசித்து கடைசியில் ஒரு தெளிவான முடிவுக்கு வந்தது.

அந்தத் திட்டப்படி அது ஒரு தொழிலாளியாக வடிவமெடுத்து, அந்த ஏழை விவசாயியுடன் சேர்ந்து வேலை செய்தது. முதல் வருடம்  புதிதாக வேலையில் சேர்ந்திருந்த மனிதன் விவசாயியிடம் சதுப்பு நிலத்தில் சோளக்கதிர்களை விதைக்கும்படி சொன்னான். விவசாயி அவன் சொன்னதை ஏற்றுக்கொண்டு அதன்படி சோளத்தை சதுப்பு நிலத்தில் விதைத்தான். அந்த வருடம் எங்கு பார்த்தாலும் ஒரே வறட்சியாக இருந்தது. மற்ற விவசாயிகளின் பயிர்கள் எல்லாம் சூரியனின் வெப்பம் தாங்காமல் கருகிப் போயின. ஆனால், அந்த ஏழை விவசாயியின் தானியக் கதிர்கள் மட்டும் அடர்த்தியாகவும் உயரமாகவும் நல்ல விளைச்சலுடனும் இருந்தன. அந்த வருடத்திற்குத் தேவையானது போக, மீதமாகவும் நிறைய இருந்தன.

அடுத்த வருடம் குட்டிச்சாத்தான் விவசாயியிடம் விதைகளை மலைப்பகுதியில் விதைக்கும்படி சொன்னது. அந்த வருடம் கோடை காலம் முழுவதும் பயங்கரமாக மழை பெய்ய ஆரம்பித்தது. மற்ற விவசாயிகளின் தானியக் கதிர்கள் மழையில் சாய்க்கப்பட்டு அழுகத் தொடங்கின. அதில் விளைச்சல் என்று எதுவுமே எடுக்க முடியாமற் போனது. ஆனால், அந்த விவசாயியின் தானியக் கதிர்களோ மலைப் பகுதியில் கம்பீரமாக வளர்ந்து நின்றன. முன்னால் இருந்ததை விட அவனிடம் நிறைய தானியங்கள் சேர்ந்தன. அவற்றை என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தான் அவன்.

குட்டிச்சாத்தான் விவசாயியிடம் தானியத்தைக் காய்ச்சி, அதிலிருந்து எப்படி மது தயாரிக்கலாம் என்பதைச் சொல்லித் தந்தது. அதன்படி விவசாயி போதை அதிகமாக இருக்கும் மதுவைத் தயாரித்தான். அதைத் தானும் பருகி, தன் நண்பர்களுக்கும் பருகத் தந்தான்.

இப்போது குட்டிச் சாத்தான் தன் எஜமானான சாத்தானிடம் சென்றது. தான் செய்த தவறை இப்போது சரி செய்துவிட்டதாக அது சொன்னது. எப்படி குட்டிச்சாத்தான் தன் வேலையைச் செய்திருக்கிறது என்பதை தானே நேரில் வந்து பார்க்கப் போவதாகச் சொன்னான் சாத்தான்.


சாத்தான் விவசாயியின் வீட்டிற்குச் சென்றான். அவன் சென்றிருந்த நேரத்தில் விவசாயி தன்னுடைய வசதி படைத்த பக்கத்து வீட்டுக்காரர்களை அழைத்து அவர்களை மது அருந்தச் செய்து கொண்டிருந்தான். அவனுடைய மனைவி விருந்தாளிகளுக்கு மதுவைப் பரிமாறினாள்.அப்படி பரிமாறியபோது, ஒரு மேஜையில் பட்டு அவள் தடுமாறி கீழே விழுந்தாள். அப்போது ஒரு குவளை முழுக்க இருந்த மது கீழே கொட்டிவிட்டது.

அதைப் பார்த்து விவசாயி பயங்கர கோபத்திற்கு ஆளானான். அவன் தன் மனைவியைப் பார்த்து திட்டினான். "நீ மனசுல என்ன நினைச்சுக்கிட்டு இருக்கே, நாசம் பிடிச்சவளே? இது என்ன சாதாரண வாய்க்கால் நீர்னு நினைச்சிட்டு இருக்கியா? இதன் மதிப்பு என்னன்னு தெரிஞ்சிருந்தா நீ இதை தரையில கொட்டுவியா?"

இப்போது குட்டிச்சாத்தான் தன் எஜமானான சாத்தானைப் பார்த்துச் சொன்னது: "பார்த்தீங்களா? இந்த மனிதன்தான் ரொட்டி காணாமப்போனதுக்காக கொஞ்சம் கூட கவலைப்படாம இருந்தவன்!"

இப்போதும் விடாமல் தன் மனைவியைக் கடுமையான வார்த்தைகளால் திட்டிக் கொண்டிருந்த விவசாயி மதுவைத் தானே கையில் எடுத்துக்கொண்டு போய் பரிமாறினான். அப்போது யாரும் அழைக்காமலே ஒரு ஏழை விவசாயி தன் வேலையை முடித்துவிட்டு அங்கு வந்தான்.அவன் அங்கிருந்த கூட்டத்தைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தவாறு அங்கு உட்கார்ந்து, எல்லாரும் மது அருந்திக் கொண்டிருந்ததைப் பார்த்தான். அன்று முழுவதும் மிகவும் கஷ்டப்பட்டு வேலை செய்ததால், தனக்கும் கொஞ்சம் மது அருந்தினால் நன்றாக இருக்கும் என்பதாக அவன் நினைத்தான். அவன் அதே இடத்தில் உட்கார்ந்திருந்தான். அவனுடைய வாயில் எச்சில் ஊறியது. ஆனால், விவசாயி அந்த மனிதனுக்கு எதுவும் தரவில்லை. அதற்குப் பதிலாக "வர்றவங்களுக்கெல்லாம் மது தர்றதுக்கு நான் எங்கே போவேன்?" என்று அவன் முணுமுணுத்தான்.

அதைக் கேட்டு சாத்தான் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். அப்போது குட்டிச்சாத்தான் சொன்னது. "கொஞ்சம் இருங்க. இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகுதுன்னு பாருங்க".

வசதி படைத்த விவசாயிகள் மத அருந்தியிருந்தார்கள். அவர்களை அழைத்திருந்த விவசாயியும் நன்கு மது அருந்தியிருந்தான். இப்போது அவர்கள் ஒருவரோடொருவர் பொய்யாகப் பேச ஆரம்பித்தார்கள்.

சாத்தான் அவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டே இருந்தான். முடிவில் அவன் குட்டிச்சாத்தானைப் பார்த்து பாராட்டினான்.

அவன் சொன்னான்: "மது இவங்க எல்லாரையும் குள்ளநரியா ஆக்கிடுச்சு. ஒருத்தரையொருத்தர் ஏமாற்றப் பாக்குறாங்க. இவங்க எல்லாரும் ரொம்ப சீக்கிரமே நம்ம கைக்கு வந்திடுவாங்க."

"கொஞ்சம் காத்திருங்க. அடுத்து என்ன நடக்குதுன்னு பார்ப்போம்"- குட்டிச்சாத்தான் சொன்னது. "இவங்க எல்லாரும் இன்னொரு குவளை மது அருந்தட்டும். இப்போ இவங்க ஒவ்வொருவரும் நரியா மாறியிருக்காங்க. வாலை ஆட்டிக்கிட்டு ஒருத்தரையொருத்தர் வளைச்சுக்கப் பாக்குறாங்க. சீக்கிரமே இவங்களை நீங்க ஓநாயா பார்க்கலாம்."

விவசாயிகள் இன்னொரு குவளை மது அருந்தினார்கள். இப்போது அவர்களின் பேச்சு உரத்தும் கடுமை நிறைந்ததாகவும் இருந்தது. வெறுமனே பேசிக்கொண்டிருந்ததற்கு மாறாக அவர்கள் திட்டுவதும் ஒருத்தரையொருத்தர் பல்லைக் கடித்துக் கொண்டு உறுமுவதுமாக இருந்தார்கள். சிறிது நேரத்தில் அவர்கள் ஒருவரோடொருவர் சண்டை போட ஆரம்பித்தார்கள். ஒருவர் மூக்கில் ஒருவர் குத்தினார்கள். மது அருந்த அழைத்திருந்த விவசாயியும் அந்தச் சண்டையில் கலந்து கொண்டான். அவனும் நன்றாக உதை வாங்கினான்.

சாத்தான் நடந்து கொண்டிருந்த காட்சிகளைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்தான். "நல்ல விஷயம்தான்!" என்று சொன்னான்.

அதற்கு குட்டிச்சாத்தான் சொன்னது: "கொஞ்சம் இருங்க. இன்னும் முக்கியமான ஒண்ணு நடக்க வேண்டியதிருக்கு. இவங்க எல்லாரும் மூணாவது குவளை மது அருந்துறதுவரை காத்திருப்போம். இப்போ இவங்க ஒருத்தரோடு ஒருத்தர் ஓநாய் மாதிரி சண்டை போட்டதைப் பார்த்தோம். இன்னொரு குவளை மது உள்ளே போனபிறகு இவங்க ஒவ்வொருத்தரும் பன்றியா மாறப் போறாங்க. பாருங்க."

விவசாயிகள் மூன்றாவது குவளை மதுவை அருந்தினார்கள். அடுத்த நிமிடம் அவர்கள் மிருகத்தைப் போல் மாறினார்கள். அவர்கள் முணு முணுத்தார்கள்; பற்களைக் கடித்தார்கள்; கூச்சல் போட்டார்கள். எதற்கு இப்படியெல்லாம் செய்கிறோம் என்பதே தெரியாமல் செய்தார்கள். ஒருவர் பேசுவதை இன்னொருவர் கேட்கத் தயாராக இல்லை. இப்போது அந்த விருந்து முடிவுக்கு வந்தது. சில விவசாயிகள் தனியாகச் சென்றார்கள். சிலர் இரண்டு பேராகச் சேர்ந்து சென்றார்கள். சிலர் மூன்று நபர்களாகச் சென்றார்கள். எல்லாரும் தெருவில் ஆடியபடி சென்றார்கள். விருந்திற்கு அவர்களை அழைத்திருந்த விவசாயி விருந்தினர்களாக வந்திருந்த விவசாயிகளை வழியனுப்புவதற்காக வெளியே சென்றான். ஆனால், அவனே போதையில் தேங்கியிருந்த தண்ணீரில் தடுமாறி விழுந்துவிட்டான். அதே இடத்தில் எழுந்திருக்க முடியாமல் அவன் பன்றியைப் போல் உறுமியவாறு கிடந்தான். அதைப் பார்த்து சாத்தான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

அவன் சொன்னான்: "நீ ரொம்பவும் அருமையான மதுவை உண்டாக்கியிருக்கிற. ரொட்டி விஷயத்துல நீ பண்ணின தப்பை இப்போ சரி பண்ணிட்ட. இப்போ எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சாகணும். இந்த மதுவை நீ எப்படி உண்டாக்கின? முதல்ல நீ நரியோட இரத்தத்தை அதுல போட்டிருக்கணும். அதனாலதான் அந்த விவசாயிகள் எல்லாரும் நரி மாதிரியே நடந்துக்கிட்டாங்க. அதுக்குப் பிறகு நீ ஓநாயோட இரத்தத்தை சேர்த்திருக்கணும். அதனாலதான் அவங்க ஓநாய் மாதிரியே நடந்தாங்க. கடைசியில நீ பன்றியோட இரத்தத்தை சேர்த்திருக்கணும். அதுனாலதான் அவங்க பன்றி மாதிரி நடந்திருக்கணும்..."

"இல்ல..."- குட்டிச்சாத்தான் சொன்னது: "நீங்க சொன்ன மாதிரி நான் அந்த மதுவை உண்டாக்கல. அந்த விவசாயிக்கு எவ்வளவு தேவையோ அதைவிட அதிகமா தானியம் கிடைக்கிற மாதிரி செஞ்சேன். மிருகத்தோட இரத்தம் எப்பவும் மனிதன்கிட்ட இருக்கத்தான் செய்யுது. தன் தேவைக்கு எவ்வளவு தானியம் தேவையோ, அந்த அளவு மட்டும் கிடைக்கிறவரைக்கும் அவன் ஒரு கட்டுப்பாட்டுக்குள் அடக்கமா இருக்குறான். அந்த நிலையில இருந்ததால், அந்த விவசாயி ரொட்டி காணாமப் போனதுக்காக கொஞ்சம்கூட முணுமுணுக்கல. அதே நேரத்துல கொஞ்சம் தானியம் அதிகமா வந்தவுடனே, அவன் சந்தோஷத்துக்கான வழிகளைத் தேட ஆரம்பிக்கிறான். அதுனாலதான் நான் அந்த சந்தோஷத்தை அவனுக்குக் காட்டினேன்- மது! அவன் கடவுளோட நல்ல பரிசுகளை தன்னோட சொந்த மகிழ்ச்சிக்காக எப்போ மதுவா மாற்ற ஆரம்பிச்சானோ அப்பவே அவனுக்குள்ளே ஏற்கெனவே இருக்குற நரி இரத்தமும், ஓநாய் இரத்தமும், பன்றி இரத்தமும் வெளியே வர ஆரம்பிக்குது. இப்படியே மது அருந்திக்கிட்டே இருந்தான்னா அவன் எப்பவும் மிருகமாகவேதான் இருப்பான்."

சாத்தான் குட்டிச்சாத்தானைப் பாராட்டினான். அது முதலில் செய்த தவறை அவன் மன்னித்ததுடன் நிற்காமல், குட்டிச்சாத்தானுக்கு ஒரு உயாந்த பதவியைக் கொடுத்து உயர்த்தியும் விட்டான்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.