Logo

தங்கமாலை

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 6595
thangamaalai

ழமையான ஒரு தங்கமாலை அது. இருபத்தொன்றேகால் பவுன் எடை கொண்டது. மனைவியின் கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த மாலை அது. மனனவி நீர் இறைக்கும்பொழுது அந்த மாலை ஆழமான கிணற்றுக்குள் விழுந்து விட்டது. மிகவும் பழமையான - பெரிய அந்தக் கிணற்றில் சொல்லிக் கொள்கிற மாதிரி இடைவெளிகள் எதுவும் கீழே இல்லை. வாய்ப்பகுதி மட்டும் வட்ட வடிவில் பெரிதாக இருக்கும்.

வீட்டையும் நிலத்தையும் விலைக்கு வாங்கும்போது கிணறு இருக்கும் பகுதியெங்கும் காட்டுச் செடிகள் அடர்ந்து கிடந்தன.

கிணற்றைச் சுற்றிலும் பாக்கு அளவிற்குச் சிறுசிறு கற்கள் நிறைய கிடக்கும். ஒரு நாள் ஒரு செடியில் பாம்பு படம் எடுத்துக் கொண்டிருப்பதைப் பார்க்க நேர்ந்தது. அவ்வளவுதான்-சிமெண்டை இடித்து மிகவும் கஷ்டப்பட்டு நிறைய மனிதர்களின் கடுமையான உழைப்பைக்கொண்டு கிணறு சுத்தம் செய்யப்பட்டது. கிணறு உண்டாகி முந்நூறு வருடங்கள் இருக்கும். தெளிந்த நீர் அதற்குள் இருந்தது. மதியநேரத்தில் நீரின் ஆழத்தில் தங்கமாலை மஞ்சள் வண்ணத்தில் கிடப்பது நன்றாகவே தெரிந்தது.

கணவர் தன்னுடைய கண்ணாடி வழியாக அதை நன்றாகப் பார்த்தார். கணவருடைய அன்னையின் கழுத்தில் அவர் தந்தை கட்டியது அது. அந்த மாலையைத் திருமணத்தின்போது கணவர் தன்னுடைய மனைவியின் கழுத்தில் அணிவித்து எத்தனை வருடங்களாகிவிட்டன! எல்லாம் இப்போது நடந்ததைப்போல் இருக்கிறது.

இப்போது அந்த மாலையை எப்படி எடுப்பது?

ஊரில் கிணற்றுக்குள் இறங்கக்கூடிய ஒரு பெரிய மனிதன் இருக்கிறான். அவன் ஒரு திருடன். அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து அவன் நடப்பான். ஹோட்டல்களுக்குள் நுழைந்து பலகாரங்களைக் கொள்ளையடித்துத் தின்பான். தோட்டங்களில் நுழைந்து வாழைக்குலை, தேங்காய், பலாப்பழம் போன்றவற்றைத் திருடுவான். ஏராளமாக அடியும் உதையும் வாங்கியதன் காரணமாக ஆள் மிகவும் தளர்ந்து போய் சயரோகம் பிடித்த மனிதனைப் போல் ஆகிவிட்டான். ப்ளேடின் உதவியால் கிணற்றிலிருந்து நீர் இறைப்பதற்கான கயிறை மெதுவாக அறுத்து விடுவான். குழந்தைகளுக்கு மிட்டாய் வாங்கிக் கொடுத்துவிட்டு, அவர்களிடமிருந்து அவன் ஏதாவது திருடுவான். பல் துலக்குவது, குளிப்பது என்பது அவனிடத்தில் இல்லாத ஒன்று. அவனுடைய உடல் சொறிபிடித்ததைப் போல் இருக்கும்.

அவனுக்கு இருப்பது ஒரு கண்தான். அம்மைநோய் வந்து அவனுக்கு ஒரு கண் போய்விட்டது. அம்மைநோய் வந்து பீடிக்கப்பட்ட ஒரு வீட்டுக்குள் திருடுவதற்காக நுழைந்து பயந்துபோய் பிடிப்பட்டவன் அவன் என்பது வரலாறு.

அவன் வந்து கிணற்றைப் பார்த்தான். உள்ளே கிடக்கும் தங்க மாலையைப் பார்த்தான். பிறகு சொன்னான்:

“கிணறு ரொம்பவும் பயங்கரமாக இருக்கு. இதைப்போல ஒரு கிணற்றை வேற எங்கேயும் நான் பார்த்ததே இல்ல. கிணறு எவ்வளவு ஆழமா இருக்கு! இறங்குறது, மேல ஏறி வர்றது ரெண்டுமே ரொம்பவும் கஷ்டம்தான். தண்ணிவேற நிறைய இருக்கு. நான் உள்ளே கிடக்கிறற தங்க மாலையை எடுத்துத் தர்றேன். ஆனா, அதற்கு எனக்கு கூலியா இருபத்தஞ்சு ரூபாய் தரணும்.”

அந்த அழுக்குப்பிடித்த மனிதன் இருபத்தைந்து ரூபாய்க்கு கிணற்றுக்குள் இறங்கி தங்கமாலையை எடுத்துத்தர தயாராக இருக்கிறான். தண்ணீருக்குள் இறங்கினால் யாராக இருந்தாலும் சிறுநீர் கழிப்பார்கள். அந்தத் தண்ணீரைத்தான் நாம் குடிக்கவேண்டும். ஒரு ரூபாயை அவனிடம் கொடுத்துவிட்டு அவர் சொன்னார்:

“போயி தேநீர் குடி. தண்ணி கொஞ்சம் குறைஞ்ச உடனே நான் சொல்லி அனுப்புறேன்.”

அவன் அந்த இடத்தை விட்டு அகன்றான். அப்போது அவருடைய மனதில் சிறு சந்தேகம் எழுந்தது. இரவு நேரத்தில் கிணற்றுக்குள் இறங்கி அவன் தங்க மாலையை யாருக்கும் தெரியாமல் எடுத்துக் கொண்டு போய்விட்டால்...? ஆனால் அவன் எப்படி கிணற்றுக்குள் இறங்குவான்? மீசைக்கு ‘டை’ அடித்து, கறுப்பாக்கி முடித்து, மனைவி கூந்தலைக் கறுப்பாக்கிக் கொண்டிருந்தபோது. கணவர் சொன்னார்:

“அந்த ஆளுக்கு நான் ஒரு ரூபாய் கொடுத்து அனுப்பிவிட்டேன். கிணற்றுல அவன் மூத்திரம் இருப்பான். அந்தத் தண்ணிய நாம குடிக்கவேண்டியது வரும்!”

மனைவி சொன்னாள் :

“அவன் இந்த ஊரையே விட்டுப் போகப் போறான். அந்த ஆளோட பொண்டாட்டியும் குழந்தைகளும் எங்கோ இருக்கிற ஒரு தோட்டத்தில இருக்குறாங்க. அங்கே அந்த ஆளுக்கு வேலை இருக்கு. அதனால அவன் நிரந்தரமா இங்கேயிருந்து போறான். அதற்குப் பிறகு கிணற்றுல இறங்குறதுக்கு யார் இருக்கா?”

சிறிதுநேரம் சென்றபிறகு கணவர் சொன்னார்:

“அடியே, கிணற்றுல நான் இறங்குறேன்...”

“அவ்வளவு பெரிய ஆழத்துலயா? வேண்டாம்...”

“போடி... நீ பிறக்குறதுக்கு முன்னாடி நான் எவ்வளவோ கிணற்றுக்குள்ளே இறங்கியிருக்கேன். தென்னை மரத்துல ஏர்றது... கயிறை மரத்தோட சேர்த்துக் கட்டிட்டு, பிடிச்சுக்கிட்டே கிணற்றுக்குள்ள இறங்குறது...”

“அதெல்லாம் அந்தக் காலம்!”

“இந்தக் காலத்துல என்ன?”

பல் துலக்கி முடித்து, குளியல் முடித்து, தேநீர் குடித்து முடித்து, ஒரு சிகரெட்டைப் புகைத்தவாறு கணவர் கிணற்றின் கரையில் நின்று கொண்டிருக்கிறார். மனைவியின் தங்கை, மனைவி, பள்ளி இறுதி வகுப்பில் படித்துக்கொண்டிருக்கும் மகள், நர்சரிப் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் மகன் எல்லோருமே அங்கு கூடி நின்றிருக்கிறார்கள். சிறுநீர் கழித்து முடித்துவிட்டு வந்த கணவர் தன் மனைவியைப் பார்த்து சொன்னார்:

“நீ போய் பசுவைக் கட்டுற நீளமான கயிறைக் கொண்டுவா...”

“எதுக்கு?”

“கிணற்றுல இறங்கி உன்னோட தாலியை எடுத்துட்டு வர்றதுக்கு...”

“நினைக்கிறப்பவே என் உடம்பு நடுங்குது.”

“இதுல நடுங்குறதுக்கு எதுவுமே இல்ல..”

“எனக்கு பயமா இருக்கு.

மகள் சொன்னாள்:

“டாட்டா, நீங்க கிணத்துல இறங்கவேண்டாம்.”

மகனும் மகளும் தந்தையை ‘டாட்டா’ என்றுதான் அழைக்கிறார்கள்.

“பிறகு எப்படி மாலையை எடுக்கிறது?”

சிறிது நேரம் கழித்து கணவர் சொன்னார்: “அடியே. நான் ரொம்பவும் தைரியமா இருக்கேன். நான் கிணத்துல இறங்கி மாலையை எடுக்கிறேன்...”

மனைவி நடந்துபோய் மிகவும் நீளமான ஒரு கயிறைக் கொண்டு வந்தாள். கணவர் அதன் ஒரு முனையைக் கிணற்றுக்குப் பக்கத்திலிருக்கும் தென்னை மரத்தில் கட்டிவிட்டு இன்னொருமுனையை கிணற்றுக்குள் எறிந்தார். அது நீரில் விழுந்து கிடந்தது.

கணவர் துண்டைக் கட்டிக்கொண்டு கண்ணாடி அணிந்தவாறு கிணற்றின் மேற்சுவரில் ஏறினார்.

மனைவி கேட்டாள்:

“கண்ணாடி வேணுமா?”

“பார்க்கணும்ல! கட்டாயம் வேணும்...”

கணவர் கயிறைப் பிடித்தவாறு மெதுவாகக் கிணற்றுக்குள் இறங்கினார். பக்கவாட்டுச் சுவரை  காலால் மிதித்தவாறு கீழே இறங்கினார். குளிர்ச்சியான பெரிய பாதாளத்தில் இறங்குவதைப்போல அவர் இறங்கினார். காற்றே இல்லாமற்போனதைப் போல் இருந்தது.


பலமான தன்னுடைய இரண்டு கைகளாலும் கயிறை இறுகப் பற்றியவாறு பக்கவாட்டுச் சுவரை மிதித்துக்கொண்டே கிணற்றின் அடியை நோக்கி நீரை நெருங்கி அவர் போய்க்கொண்டிருந்தார். நீர் கண்ணீரைப் போல கீழே கிடந்தது. அதற்குக் கீழே தங்கமாலை பிரகாசமாகத் தெரிந்தது. இப்போது எதைப்பற்றியும் நினைத்துப் பார்க்கும் நிலையில் அவர் இல்லை. தைரியத்துடன் பிடியை விட்டவாறு அவர் நீருக்குள் இறங்கினார். நீர் எவ்வளவு இருக்கிறது என்பதைப் பற்றி அவருடைய மனதில் ஒரு கணக்கு இருந்தது. கால்களால் நீரைத் துழாவிக் கொண்டே அவர் நீருக்குள் மூழ்கிச் சென்றார். அவருடைய கணக்குத் தவறிவிட்டது. அவர் மனதில் கற்பனை பண்ணியிருந்ததைவிட நீரின் அளவு இரண்டு மடங்காக இருந்தது. மூச்சை அடக்கிக்கொண்டார். கால்களில் நீரைத் துழாவியவாறு மீண்டும் கீழே சென்றார். அடிப்பகுதியை இன்னும் அவர் அடையவில்லை. மூச்சை அடைப்பது போல் அவருக்கு தெரிந்தது. அதற்குப்பிறகும் அவர் கீழே சென்றார். தலைக்குள் மணியடிப்பதைப் போல் அவருக்குத் தோன்றியது. மூச்சு ஒரேடியாக நின்றுவிடுமோ? சங்கு வெடிக்கப்போகிறதோ? நீரின் அடிப்பகுதியை அவர் அடைந்தார். மாலையைக் கையில் எடுத்துக் கொண்டு மேல்நோக்கி வந்தார். கயிற்றைப் பிடித்துக்கொண்டு மூச்சை விட்டார். மேலும் கீழும் மூச்சு வாங்கியது. உடம்பு மிகவும் தளர் வடைந்துவிட்டதைப் போல் இருந்தது. மாலையை வாயில் கடித்துக் கொண்டு இடுப்பில் கட்டப்பட்டிருந்த துண்டைப் பிழிந்தார். தலையை துவட்டினார். பிறகு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கச் சொன்னார் :

“வாளியை கீழே இறக்கு...”

வாளி கீழே வந்தது. அதில் தங்க மாலையையும் கண்ணாடியையும் போட்டார். மாலையுடனும் கண்ணாடியுடனும் வாளி உயர்ந்து மேலே வந்தது.

பதைபதைப்பு, தளர்ச்சி கைகள் வலித்தன. கயிற்றில் பிடித்திருந்த பிடி விடுவதைப்போல் இருந்தது.

“நீ ஓடிப்போயி நம்ம ஏணியைக் கொண்டுவா.”

அடுத்த நிமிடம் மரத்தில் செய்யப்பட்ட ஏணியை மனைவி அங்கு கொண்டுவந்தாள். மெதுவாக அதை அவள் கிணற்றுக்குள் இறக்கினாள். அதன் உச்சியிலிருந்த ஒரு பலகை மட்டும் நீருக்கு மேலே நீட்டிக் கொண்டிருந்தது. கயிற்றைப் பிடித்தவாறு அவர் அந்தப் பலகை மீது கால்வைத்து நின்றிருந்தார். கால்கள் பயங்கரமாக நடுங்கின. உடம்பெல்லாம் வலித்தது. மூச்சுவிடவே மிகவும் கஷ்டமாக இருந்தது. மேலே அண்ணாந்து பார்த்தார். ஒரு பெரிய குழாய்க்கு அடியில் தான் நின்று கொண்டிருப்பதைப் போல் அவருக்குத் தோன்றியது. ஆகாயம் எங்கோ உயரத்தில் இருந்தது. கிணற்றின் மேற்பகுதிக்கு மேல் மனைவியின் தங்கையும் மனைவியும் மகளும் நின்றிருந்தார்கள். மகனின் தலையும் தெரிந்தது.

ஒரே பதைபதைப்பு. ஏறி இங்கிருந்து தப்புவதற்கு முடியாதுபோல் தோன்றியது. மேலே ஏறுவதற்கு வழியேயில்லை. தப்பிப்பதற்கு வழியே இல்லை என்று அவருடைய மனம் சொன்னது.

நிமிடங்கள் வேகமாக ஓடிக்கொண்டிருந்தன. நிமிடங்கள் மணிகளாக மாறும். மாலைநேரம் வரும். இரவு வரும்... இரவு... கிணற்றுக்குள் எப்படி இருப்பது? நடுங்கி விரைத்துப்போய் நீருக்குள் விழ வேண்டியதுதான்!

இறுதி நிமிடம் நெருங்கிவிட்டது. மரணத்தைத் தழுவுவதற்காக நேரம் வந்து விட்டது. மரணம்!

“அடியே!” - அவர் மெதுவான குரலில் அழைத்துச் சொன்னார்: “என்னால மேல வரமுடியாது. ரொம்பவும் தளர்ந்து போயிட்டேன்.”

அடுத்த நிமிடம் மனைவியும் மகளும் கூப்பாடு போடத் துவங்கி விட்டார்கள். அவர்களின் சத்தத்தைக் கேட்டு மகனும் அழத் தொடங்கினான். மனைவியின் தங்கையும் அழுதாள்.

யாரையாவது அழைத்தால் என்ன? யாரை அழைப்பது? பக்கத்தில் மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்கள் வந்து அவரை எப்படி கிணற்றை விட்டு வெளியே கொண்டுவருவார்கள்? அவர்கள் வருவதுவரை பிடியை விடாமல் நின்றுகொண்டிருக்க முடியுமா? உடல் பயங்கரமாக நடுங்கிக் கொண்டிருந்தது. கீழே விழுந்துவிடுவோமோ என்று அவர் பயந்தார்.

வாழ்க்கையில் இதைப்போல இதற்கு முன்பு ஆபத்தில் சிக்கியிருக்கிறோமா என்பதை அவர் நினைத்துப் பார்த்தார். முன்பு இளைஞனாக இருந்த காலத்தில் ஒவ்வொரு இடமாக அவர் சுற்றிக் கொண்டிருப்பார். உயர்ந்து நிற்கும் மலைகளில் அவர் ஏறியிருக்கிறார். ஆபத்தான குகைகளுக்குள் நுழைந்திருக்கிறார். வெள்ளத்தில் சிக்கி நீந்தித் தப்பியிருக்கிறார். மைசூர்... மைசூரில் எங்கே? சிக்பெல்லாப்பூர், ஹாஸன், ஷிமோகா... இவற்றில் எங்கே? நகரத்திலிருந்து இரண்டு மூன்று மைல்கள் தள்ளியிருக்கும் தன்னந்தனியான ஒரு மலை. அந்த மலையில் ஒரு உருண்டையான பெரிய பாறை. பிரம்மாண்டமான ஒரு பெரிய கறுப்பு முட்டை அது. வானத்தைத் தொட்டுக்கொண்டு கம்பீரமாக நின்றிருந்தது அந்தப் பாறை. அதன் உச்சியில் சிறிய கோவில். அந்தக் கோவிலைப் பார்ப்பதற்காக அவர் மலைமீது ஏறினார். தனியாகத்தான். பிற்பகல் நேரம். மலைமீது ஏறுவதற்காகக் கீழேயிருந்து பாறைகளில் படிகள் உண்டாக்கியிருக்கிறார்கள். வளைந்து வளைந்து போய்க்கொண்டிருந்த அந்தப்படிகள் வழியே அவர் ஏறினார். மேலே சென்றபிறகு அந்த உருண்டையான பாறையை உணரமுடிந்தது. யானையின் உடலைப் போல அது இருந்தது. உச்சியில் கோவில். அங்கு பூஜை எப்போது நடக்கும்? கண்ணுக்கெட்டிய தூரம்வரை அவரால் சுற்றிலும் பார்க்க முடிந்தது. ஒரு இடத்திலும் ஒரு மனிதனைக்கூட பார்க்க முடியவில்லை. தூரத்தில் கண்ணாடியைப் போல ஏராளமான குளங்கள் பிரகாசித்துக் கொண்டிருந்தன. சிறிதுநேரம் சென்றதும் மலையைவிட்டு கீழே இறங்க அவர் தீர்மானித்தார். பார்த்தால் படிகளைக் காணவில்லை.

படிகள் எங்கே?

அவர் எல்லா இடங்களிலும் பார்த்தார். படிகளைக் காணவில்லை. எப்போதாவது பூஜை பண்ணுவதற்காக ஆட்கள் வரும்போது மலையைவிட்டுக் கீழே இறங்கலாம். ஆட்கள் யாரும் வரவேயில்லையென்றால்? ஒரு சிகரெட்டைக் கொளுத்திக்கொண்டு மீண்டும் தேடிப் பார்த்தபோது... அதிர்ஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும்! படிகள் கண்களில் தெரிந்தன. மகிழ்ச்சியுடன் இறங்கிக் கீழே வந்தார்.

அதைப்போல இதைச் சொல்லமுடியாது. இது ஒரு ஆழமான கிணறு. அவர் இருப்பது கிணற்றுக்கு உள்ளே அடிப்பகுதியில். மரணம் மிகவும் நெருங்கி வந்துவிட்டிருக்கிறது. அப்படிச் சொல்வதுகூட தவறு. மரணம் எப்போதும் நமக்கு மிகவும் அருகில்தான் நின்று கொண்டிருக்கிறது. நேரம் செல்லச்செல்ல பதைபதைப்பு அதிகமாகிக் கொண்டிருக்கிறது. வாயில் நீர் வற்றிவிட்டது. குனிந்து கையால் சிறிது நீரை அள்ளிக் குடித்தார். ஒரு உண்மை தெரிந்தது. அவருக்கு வயதாகி விட்டது. அவர் ஒரு கிழவன். இளைஞன் அல்ல.

கடவுளே, தப்பிப்பதற்கான வழியைக் காட்டு!

மேலே இருந்து அழுதவாறு மனைவி சொன்னாள்:

“கொஞ்சம் மேலே ஏறி வாங்களேன்...”

“கடவுளே!” சிந்தித்தார்.

அதற்குப்பிறகு நடந்ததெதுவும் அவரின் சுயநினைவோடு நடந்ததல்ல. அவரே கயிற்றின் நுனியை எடுத்து ஏணியின் பலகையில் கட்டினார். பிறகு இரண்டு கைகளாலும் கயிற்றைப் பிடித்தவாறு மிதித்து மிதித்து ஏறினார்.


கிணற்றின் மேற்பகுதிக்கு வந்து வட்டமான சுவரில் ஏறி இறங்கியவாறு நடுங்கிகொண்டு அங்கு நின்றிருந்த மனைவியையும் பிள்ளைகளையும் முத்தமிட்டவாறு ஏணியை மேலே தூக்கி கிணற்றிற்கு வெளியே போட்டுவிட்டு மூச்சு வாங்க தளர்ந்து போய் கிணற்றின் மேற்பகுதியில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு மனைவியைப் பார்த்துச் சொன்னார்: “சிகரெட்...”

மனைவி சிகரெட்டை எடுத்து அவருடைய உதட்டில் வைத்து, அவளே அதைக் கொளுத்தினாள். புகையை ஊதியவாறு பார்ததபோது இடதுகாலில் மூன்றாவது விரல் வேதனை தந்தது.

கிணற்றில் இறங்கும் அழுக்கடைந்த அந்த மனிதரிடம் அவர் சொன்னார்: “மாலையை எடுத்தாச்சு!”

“யார் கிணத்துக்குள்ள இறங்கியது?”

“நான்தான்...”

“இன்னைக்கு நான் இந்த ஊரைவிட்டுப் போறேன். திரும்ப வரப்போறது இல்ல. என் பெண்டாட்டியும் குழந்தைகளும் தோட்டத்துல இருக்காங்க. அங்கே எனக்கு ஏதாவது வேலை கிடைக்கும். நான் புறப்படுறேன். அரை ரூபா தாங்க...”

அரை ரூபாயை அவர் தந்தார்.

நாட்கள் நகர்ந்தன. பல சம்பவங்களும் அடுத்தடுத்து வருகின்றன. கிணற்றில் இறங்கியதற்கான பின் விளைவுகள்.

ஒருநாள் மனைவி தேநீர் கொண்டுவந்து தந்தாள். குடித்துப்பார்த்தார் மிகவும் காட்டமாக அது இருந்தது. கொஞ்சம் கூட இனிப்பாக இல்லை. சர்க்கரையே அதில் போடப்படவில்லை. கசப்பாக இருந்த அந்தத் தேநீரை ஒரே மூச்சில் குடித்து முடித்தார். தேநீர் குடித்த மாதிரியே இல்லை.

மனைவி சொன்னாள்:

“ஒரு நாளைக்கு எவ்வளவு சர்க்கரைதான் சாப்பிடுவீங்க! குறைஞ்சது ஒவ்வொரு நாளும் முப்பது தம்ளர் தேநீர் குடிக்கிறீங்க. ஒரு நாளைக்கு உங்க ஒரு ஆளுக்கு மட்டும் ஒருகிலோ சர்க்கரை தேவைப்படுது. நாங்க காப்பிக்கு வெல்லத்தைப் பயன்படுத்துறோம். இனிமேல் தேநீருக்கு சர்க்கரை போடுறதா இல்ல...”

அவர் சொன்னார்:

“டாக்டர் பரிசோதனை செஞ்சி எதுவும் சொல்லலியே! பரிசோதனை செய்தபிறகு வேணும்னா, சர்க்கரையை நிறுத்திக்கோ.”

“எனக்குத் தெரியும். உடம்புல கட்டாயம் சர்க்கரை இருக்கும்.”

சர்க்கரை இருக்குமா? அவருக்கு ஒரே குழப்பமாக இருந்தது. இதற்கெல்லாம் காரணம் உடலில் இருந்த ஒரு புண்தான். கிணற்றுக்குள்ளிலிருந்து ஏறியபோது விரலில் உண்டான சிறு காயம்.

இடது காலின் நடுவிரலின் ஓரத்தில் உராய்ந்ததால் உண்டான காயம் அது. சிறிது நாட்கள் சென்றபிறகு அந்த இடம் பயங்கரமாக வலிக்க ஆரம்பித்தது. அந்தப்புண் பழுக்கத் தொடங்கியது. டாக்டரிடம் அதைக் காண்பித்தார். அவர் அன்புடன் அதைத் துடைத்து சுத்தம் செய்து பழுத்திருந்ததை உடைத்தார். பிறகு பிரகாசமாக இருந்த வளைந்த ஒரு கத்திரி நுனியில் கொஞ்சம் பஞ்சை எடுத்து அதை புட்டிக்குள் இருந்த ஒரு திரவத்திற்குள் நுழைத்து புண்ணின் மேல் தடவினார். வலி தாங்க டியாமல் அவர் இப்படியும் அப்படியுமாக அசைந்தார். மூன்று, நான்கு முறை பஞ்சைஅந்த திரவத்தில் நனைத்து கழுவி அந்தக் காயத்தை முழுமையாக டாக்டர் சுத்தம் செய்தார். புண்ணின் வாய்ப்பகுதியில் ஏதோ ஒரு தூளை வைத்து அதைத் துணியால் நன்றாகக் கட்டிவிட்டார்.

“நனைஞ்சிடக்கூடாது...”

பிறகு சில மாத்திரைகளைத் தந்தார்.

பத்து, பதினாறு நாட்கள் சிறு வாய்க்காலில் ஓடிக்கொண்டிருந்த நீரில் புண்ணைக் கழுவிச் சுத்தப்படுத்துவதும், மாத்திரை சாப்பிடுவதுமாக இருந்தார். ஆனால், புண் பெரிதாகிக்கொண்டே வந்தது. பழுப்பதும் அதிகமாகிக் கொண்டிருந்தது. புண் ஏன் ஆறவில்லை?

“சிறுநீர் கொண்டுவாங்க. உடம்பில் சர்க்கரை இருக்கான்னு பார்ப்போம்...”

அவ்வளவுதான் ஒரு மாதிரி ஆகிவிட்டார் அவர்.

“டாக்டர்... அப்படி ஒருவேளை உடம்பில் சர்க்கரை இருந்தா...?”

“தானியங்களை இனிமேல் உபயோகிக்கக் கூடாது. சோறு சாப்பிடமுடியாது. இனிப்பை முழுமையாக நீக்கணும். தேநீர்,காப்பி எதுலயும் சர்க்கரை போடக்கூடாது. பழங்கள் சாப்பிடக்கூடாது. கொழுப்பைக் குறைக்கணும்.”

கடவுளே, வாழ்க்கையின் சுகத்திற்கு இனிமேல் நான் எங்கு போனேன்?

கிணற்றிலிருந்து தப்பித்து வெளியே வந்தபிறகு இப்படியொரு நிலை அவருக்கு. கட்டாயம் உடம்பில் சர்க்கரை இருக்கும். வயதும் அதிகம் ஆகிவிட்டது. அதனால்தான் கிணற்றுக்குள் நான் சோர்வடைந்து போயிருக்கிறேன்.

ஒரு சிறு புட்டியில் சிறுநீருடன் மனைவி வந்தபோது, அவள் கழுத்தில் தங்கமாலை பிரகாசித்துக் கொண்டிருந்தது.

என்ன வரலாறு படைத்த தங்கமாலை அது!

சிறுநீரை வாங்கிய கம்பவுண்டர் சொன்னார்:

“நாளைக்கு ரிசல்ட் என்னன்றதை சொல்றோம். பத்து மணிக்கு உங்க மனைவி இங்கே வரட்டும். பெனிடிக்ஸ் சொல்யூஷன் இங்கே தீர்ந்து போச்சு. நகரத்தில் இருந்து வாங்கிட்டு வரணும்.”

எல்லாம் முடிந்து கணவரும் மனைவியும் கிளம்பினார்கள். இரவு முழுவதும் கணவர் உறங்கவேயில்லை. ரிசல்ட் எப்படி இருக்கும்? வாழ்க்கை ஒரு முடிவில் வந்து நின்றுகொண்டிருக்கிறது. இனிமேல் இருக்கும் வாழ்க்கை..?

கிணற்றுக்குள் நடைபெற்ற சம்பவத்தை அவர். நினைத்துப் பார்த்தார். எப்படிப் பார்த்தாலும் இதுவரை வாழ்க்கை மகிழ்ச்சியானதாகவே இருந்திருக்கிறது. எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம். எதை வேண்டுமானாலும் குடிக்கலாம் என்ற நிலை இதுவரை இருந்தது. இனிமேல் இனிப்புள்ளதையும் கொழுப்பு உள்ளதையும் நீக்க வேண்டும். சுவாரசியமில்லாத வாழ்க்கை! ம்... வரும்போது வரட்டும். பார்ப்போம். அதுதானே வாழ்க்கையின் சட்டம்!

மறுநாள் காலையில் பத்துமணிக்கு ரிசல்ட் என்ன என்பதைத் தெரிந்து கொள்வதற்காக மனைவி சென்றாள்.

கணவர் குழப்பமான மனநிலையுடன் காத்திருந்தார். புண்ணைக் கட்டியிருந்த கட்டை அவிழ்த்துப் பார்த்தார். காயம் ஆறி வருவதைப் போல் தோன்றுகிறதே! அது வெறும் தோணல் மட்டும்தானோ?

மனைவி வந்து சொன்னாள்:

“ரிசல்ட் தெரிஞ்சிடுச்சு. நிறைய சர்க்கரை உடம்புல இருக்கு.”

அவ்வளவுதான். மனம் மரத்துப்போனதைப்போல் ஆகிவிட்டது. உடம்பும் மரத்துப் போகத் தொடங்கியது. இனிமேல் உள்ள வாழ்க்கை...?

சிறிதுநேரம் சென்றதும் மனைவி பணிவாக வந்து தேநீர் தந்தாள்.

கணவர் குடித்துப் பார்த்தார். ஆச்சரியம் ! தேநீர்! குளு குளு இனிப்பு!

“என்ன சர்க்கரை போட்டிருக்கே?”

மனைவி சிரித்தாள்:

“நான் சும்மா சொன்னேன். ரிசல்ட் தெரிஞ்சுடுச்சு. உடம்புல சர்க்கரை கொஞ்சம்கூட இல்ல...”

கடவுளுக்கு நன்றி!

இருந்தாலும்...

“என்னடி!”

மகிழ்ச்சியுடன் பார்த்த அவர் அதிர்ந்துபோய் விட்டார். மனைவியின் கழுத்தில் தங்கமாலை இல்லை.

அது எங்கு போனது?

நேராகச் சென்று கிணற்றுக்குள் பார்த்தார். சந்தோஷம்! கிணற்றுக்குள் மிகவும் ஆழத்தில் தெளிவான நீருக்கடியில் மஞ்சள் நிறத்தில் குசாலாகப் பிரகாசித்துக் கொண்டிருந்தது தங்கமாலை!

மங்களம்

சுபம்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.