Logo

மீசை

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 7113
meesai

ஸோல்ஸ் வில்லா ஜூலை 30, 1883.

என்னுடைய பிரியமான லூஸி,

புதிதாக ஒன்றுமில்லை. மழை பெய்வதைப் பார்ப்பதற்காக நாங்கள் முன்னாலிருக்கும் அறையில் காத்திருக்கிறோம். இந்த இருண்ட கால நிலையில் வெளியே போவது என்பது சாதாரண விஷயமல்ல. நகைச்சுவையாக ஏதாவது நடித்துக்காட்ட மட்டுமே எங்களால் முடியும்.

வரவேற்பறை என்று முன்னாலிருக்கும் அறையில் வைக்கப்பட்டிருக்கும் அந்தப் பொருட்கள் எந்த அளவிற்கு முட்டாள் தனமானவை! கட்டாயப்படுத்தப்பட்டவை, சுமையானவை, முரட்டுத்தனம் கொண்டவை... தமாஷ்கள் துப்பாக்கியிலிருந்து வெளியே வரும் குண்டுகளைப்போல. அவை எப்போதும் யாருடைய உடலிலாவது விழுந்து கொண்டேயிருக்கும். எதுவும் பிரகாசம் கொண்டவையோ, இயற்கையானவையோ, அழகானவையோ, அமைதியானவையோ அல்ல. இந்த எழுத்தாளர்களுக்கு உலகத்தைப் பற்றி எதுவும் தெரிவதில்லை. நமக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்கள் எப்படி சிந்திக்கின்றார்கள், பேசுகின்றார்கள் என்பதைப்பற்றி அவர்கள் முற்றிலும் தெரியாமல் இருக்கிறார்கள். நம்முடைய பாரம்பரியங்களையோ, மரியாதைகளையோ, கிண்டல் பண்ணுவதற்காக என்னால் அவர்களை எளிதில் மன்னித்துவிட முடியும். ஆனால், அவர்களைப் பற்றி எதுவும் தெரியாது என்று காட்டிக் கொண்டால் அவர்கள் மன்னிக்கத் தயாராக இல்லை. பட்டாளத்தில் இருப்பவன் தண்டிக்கத் தயாராவதைப்போல அவர்கள் வார்த்தைகளைக் கூர்மைப்படுத்த இறங்கி விடுகிறார்கள். சந்தோஷப்படுத்துவதற்காக பொலிவார்டில் ஐம்பது வருடங்களாக ஒரே விரும்பத்தகாத ஆபாசங்களைத் திரும்பத் திரும்ப அள்ளி விட்டுக் கொண்டிருக்கிறார்கள். கலைஞர்கள் என்று அழைக்கப்படும் அந்த மனிதர்களின் பீர் கடைகளில் கேட்டு வெறுப்படைந்த தமாஷ்கள் முன்னால் நின்று கொண்டிருக்கின்றன.

ஆமாம்... நாங்கள் தமாஷாக விளையாடிக் கொண்டிருக்கிறோம். மொத்தம் இரண்டு பெண்களே இருக்கிறார்கள் என்பதால், என் கணவர் தாசியின் வேடத்திற்காகத் தன் முகத்தைச் சவரம் செய்து கொண்டிருக்கிறார். என் லூஸி, அது அவரை எந்த அளவிற்கு மாற்றிவிட்டிருக்கிறது என்பதை உன்னால் நினைத்துப் பார்க்கக்கூட முடியாது. அவரை என்னாலேயே அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. அது பகலில் ஆனாலும் சரி... இரவில் ஆனாலும் சரி. அவருடைய மீசை உடனடியாக வளரவில்லையென்றால், அதோடு எனக்கு இருக்கும் வெறுப்பைப் போல நானே அவலட்சணமாகி விட்டதைப்போல உணர்கிறேன்.

உண்மையாகச் சொல்லப் போனால் மீசை இல்லாத ஆண் ஒரு ஆணே அல்ல. தாடி மீது எனக்கு அந்த அளவிற்கு விருப்பம் இல்லை. அது எப்போதும் அலட்சியத்தை வெளிப்படுத்தும் வடிவமாக இருப்பது. ஆனால், மீசை... ஓ... உதட்டுக்கு மேலே இருக்கும் அந்த ரோமத்தைக் கொண்டிருக்கும் ப்ரஷ். ஒரு ஆணின் முக அழகிற்கு விலக்க முடியாத ஒன்று. கண்களுக்கு மேலேயிருக்கும் புருவத்தைப்போல, திருமணமானவர்களுக்கிடையே இருக்கும் உறவைப் போல எந்த அளவிற்குப் பயனுள்ளது அது என்பதை யாரால் நினைத்துப் பார்க்க முடியும்? இந்த விஷயத்தில் எனக்கு ஏராளமான நினைவுகள் இருக்கின்றன. ஆனால், அவை அனைத்தையும் உனக்கு எழுத எனக்கு சக்தி இல்லை. எனக்கு எல்லாவற்றையும் உன்னிடம் மிகவும் எளிதில் கூறிவிட முடியும். மெதுவான குரலில் கூறிவிட முடியும்.  ஆனால், சில விஷயங்களை வெளிப்படுத்துவதற்குப் பொருத்தமான சொற்கள் கிடைப்பதில்லை. தாளில் அவற்றைப் பற்றி வினோதமான எழுத்துக்களை எழுதி எழுதிக் கூறுவது என்பது மிகவும் சிரமமான ஒரு விஷயமே. அதனால்

அவற்றைப்பற்றி மிகவும் அரிதாகவே நான் எழுதுகிறேன். இந்த விஷயம் மிகவும் குழப்பமானதும், கொடுமையானதும், அவலட்சணம் கொண்டதும் என்பதால், யாருக்கும் பாதிப்பு உண்டாகாத வகையில் அதை அணுக அளவற்ற அறிவு கட்டாயம் தேவைப்படுகிறது.

சரி... இது எதையும் நீ புரிந்து கொள்ளவில்லையென்றால், அது அந்த அளவிற்கு ஆபத்தாகிவிடும். என் தங்கமே... இனியாவது நீ வரிகளுக்கிடையில் இருப்பதைக் கொஞ்சம் படிக்கப் பழகு.

என் கணவர் சவரம் செய்துவிட்டு வந்தபோது, ஒரு பாதிரியாரைப் போலவோ, அலட்சியமாக சுற்றித்திரியும் பயணியைப்போலவோதான் அவர் எனக்குத் தெரிந்தார். அவர்களில் மிகவும் அதிகமாக காம இச்சையை உண்டாக்கியவர் அந்தப் பாதிரியார்தான். பிறகு நான் அவருடன் (என் கணவர்) ஒன்று சேர்ந்தபோது அதுதான் மிகவும் மோசமான அனுபவமாக இருந்தது.

ஓ... என் பிரியமுள்ள லூஸி, மீசையே இல்லாத ஒரு ஆணிடமிருந்து எந்தச் சமயத்திலும் ஒரு அணைப்பு கிடைக்காமலே இருக்கட்டும். எப்படிப் பார்த்தாலும் அந்த மனிதரின் உதடுகளுக்கு எந்தவொரு சுவையும் இருக்காது. அந்த அழகோ மென்மையோ எரிச்சலோ... ஆமாம்... சரியான முத்தத்தில் இருக்கும் அந்த எரிச்சலோ அதில் இல்லை. மீசை தான் அதன் வாசனைப் பொருள். வரண்டுபோயோ ஈரமாகவோ இருக்கும் ரோமங்கள் நம்முடைய உதடுகளில் செயல்படுவதைப் பற்றி நீ சிறிது நினைத்துப் பார். சவரம் செய்யப்பட்ட ஒரு மனிதரின் கொஞ்சல் அதுதான். உண்மையாகவே யாருக்கும் அப்படிப்பட்ட கொஞ்சல்கள் மீது ஆர்வமே உண்டாகாது.

ஆனால், மீசையின் காம இச்சையைத் தூண்டும் விஷயங்கள் எங்கிருந்து வருகின்றன என்று நீ என்னிடம் கேட்டாய் அல்லவா? எனக்கு அது எப்படித் தெரியும்? முதலில் சந்தோஷம் உண்டாகிற மாதிரி அது கிச்சு கிச்சு மூட்டும். வாய்க்கு முன்னால் நாம் அது தொடுவதை உணர்கிறோம். அது நம்முடைய உடலில் இன்பமான ஒரு சிலிர்ப்பைப் படர விடுகிறது. கால்விரல் வரைக்கும்கூட.அதுதான் அந்தக் கொஞ்சல். நம்முடைய உடலில் இருக்கும சதையைச் சிலிர்க்க வைக்கும். கிளர்ச்சி உண்டாக்கும். நரம்புகளுக்கு அசாதாரணமான எழுச்சியை உண்டாக்கும். ‘ஆஹ்’ என்ற சத்தத்தை நம்மிடம் எழச் செய்யும் சிறிதும் எதிர்பார்த்திராத ஒரு குளிரின் கிளர்ச்சியூட்டல்.

இனி கழுத்தில்... ஆமாம்... எப்போதாவது ஒரு மீசை உன் கழுத்தில் தொட்டதை நீ நினைத்திருக்கிறாயா? அது உன்னைப் பைத்தியம் பிடிக்கச் செய்யும். சிலிர்ப்படையச் செய்யும். அந்த அனுபவம் உன்னுடைய முதுகெலும்பு வழியாகப் பரவி விரல் நுனியை அடைகிறது. நீ திரும்பிப் பார்க்கிறாய். தோள்களை அசைக்கிறாய். தலையை வெட்டுகிறாய். எங்கேயும் போகாமல் அங்கேயே நின்றிருக்க நீ ஆசைப்படுகிறாய். அது ஒரே நேரத்தில் வழி படக்கூடியதாகவும் துன்பப்படுவதாகவும் இருக்கிறது. ஆனால், அது இனிமையான அனுபவம்தானே!

இனி மீண்டுமொருமுறை - உண்மையாகவே, மீண்டும் ஒருமுறை நான் அதைக் கூற வேண்டுமா? உன்னைக் காதலிக்கும் கணவருக்கு முத்தங்களை மறைத்து வைத்திருக்க வேண்டிய இடங்கள் எவையெவை என்பது நன்றாகவே தெரியும். ஆமாம்... மீசை இல்லாத அந்த முத்தங்களுக்கு அவற்றின் கிளர்ச்சி இல்லாமல் போகிறது என்பதைக் கூறாமல் இருக்க முடியாது. அதைப் பற்றி உனக்கு உன் விருப்பம்போல் விளக்கிக் கூறலாம். என் விஷயத்தில் நான் கண்டுபிடிக்கும் காரணம் இதுதான். மீசை இல்லாத உதடு நிர்வாணத்தைப் போன்றது.


ஆடைகள் இல்லாத உடலைப் போன்றது. ஆடைகள் அவசியம் வேண்டும். உன் விருப்பப்படி இருந்துகொள். ஆனால், கொஞ்சமாவது ஆடைகள் வேண்டும்.

காதலையும் காமத்தையும் மறைத்து வைத்துக் கொண்டு, சதையின் அரிப்பையும் மார்பகங்களையும் மறைத்து வைக்க வேண்டியது அவசியமானது என்று படைத்தவன் (இப்படிப்பட்ட விஷயங்களைப் பற்றிக் கூறும்போது வேறெந்த சொல்லையும் என்னால் பயன்படுத்த முடியவில்லை) நினைக்கிறான். மனிதர்களின் தாகத்தைத் தணிப்பதற்கு, உபயோகமாக இருந்த ஒரு நீர் தடாகத்தை தன்னகத்தே பாதுகாத்து வைத்திருக்கும் மனிதர்களின் வசிப்பிடமாக இருந்த ஒரு காட்டை வெட்டி நிர்மூலமாக்கியதைப்போல, எனக்கு அந்த சவரம் செய்யப்பட்ட முகம் தெரிந்தது.

கடந்த மூன்று மாதங்களாக என் மூளைக்குள் குடியிருக்கும் ஒரு வாசகத்தை, ஒரு அரசியல்வாதியின் வாசகத்தை அது என்னை ஞாபகம் கொள்ளச் செய்கிறது. ஒவ்வொரு நாளும் எனக்கு பத்திரிகையை வாசித்துக் காட்டும் கணவர், அப்போதைய விவசாய அமைச்சராக இருந்த எம். மெலினின் ஒரு சொற்பொழிவை எனக்கு வாசித்துப் காட்டினார். மெலின் என்ற பெயரில் வேறு ஒரு மனிதரும் அந்த காலகட்டத்தில இருந்திருப்பாரோ? எனக்குத் தெரியவில்லை.

நான் அதைச் சரியாக கவனிக்கவில்லை. ஆனால் மெலின் என்ற அந்தப் பெயர் என்னைக் கவர்ந்துவிட்டது. என்ன காரணம் என்று எனக்குத் தெரியவில்லை. ‘ஸின்ஸ் ஆஃப் தி பொஹிமியன் லைஃப்’ என்பதைப்பற்றி நான் நினைத்துப் பார்த்தேன். அவர் ஒரு க்ரிஸற்றெ (சாதாரண விலைமாது)யுடன்தான் வசித்தார் என்பதை நான் நம்பினேன். அதில் இருந்த சிறிய விஷயங்கள் தான் என் ஞாபகத்தில் இருக்கின்றன. ஆனால், அமியன் தீவில் வசிக்கும் மனிதர்கள் மத்தியில் மெலின் நடத்திய சொற்பொழிவின் அர்த்தம் எனக்கு அப்போதுதான் புரிந்தது. சொற்பொழிவு இப்படி இருந்தது: ‘விவசாயம் இல்லாமல் சொந்த நாட்டுப்பற்று இல்லை.’ நான் இப்போது கண்டுபிடித்த அதன் இன்னொரு அர்த்தம் இதுதான்: ‘மீசை இல்லாமல் காதல் இல்லை.’ இதை யாராவது அவரிடம் கூறினால், அது அசாதாரணமானதாக இருக்கும். அப்படித்தானே?

‘மீசை இல்லாமல் காதல் இல்லை.’

‘விவசாயம் இல்லாமல் சொந்த நாட்டுப்பற்று இல்லை’ - எம். மெலின் கூறுகிறார். அந்த அமைச்சர் கூறியது சரிதான். இப்போது எனக்கு அது புரிகிறது.

மற்றொரு கோணத்தில் பார்த்தால் மீசை கட்டாயம் தேவையான ஒன்று. அது முக அழகைத் தீர்மானிக்கிற ஒரு விஷயமாக இருக்கிறது. அது இனியையும், அழகையும், கள்ளங்கபடமற்ற தன்மையையும், தைரியத்தையும், செயலாற்றலையும் தந்து உற்சாகம் நிறைந்த ஒரு சூழ்நிலையை உண்டாக்குகிறது. எப்போதும் தன்னுடைய ரோமக் காடு (ஓ... அதுதான் அந்தக் கெட்ட பெயர்) கொண்டு நடந்து திரியும் தாடி உள்ளவர்களால்... சரியான தாடியைக் கொண்டவர்களால் தங்களுடைய எண்ணத்தை எந்தச் சமயத்திலும் வெளிப்படுத்த முடியாது. அவர்களுடைய எண்ணங்கள் அனைத்தும் ரோமக்காட்டிற்குள்ளேயே மறைந்து கிடக்கின்றன.

ஒரு ஆண் தன் மீசையில் ஒரே நேரத்தில் தன்னுடைய வசீகரத்தையும் புத்திசாலித்தனத்தையும் பாதுகாத்து வைக்கிறான்.

இந்த மீசைகளுக்குத்தான் எப்படி எப்படியெல்லாம் மாறுபட்ட வடிவங்கள் இருக்கின்றன! சில மீசைகள் வளைந்து இருக்கின்றன என்றால், சில மீசைகள் சுருண்டும், வேறு மீசைகள் காம உணர்வுகளை வெளிப்படுத்தும் சேட்டைகள் கொண்டவையாகவும் இருக்கின்றன. எவற்றையும்விட அவை பெண்களைக் காதலிக்கின்றன!

சில மீசைகள் ஊசிகளைப்போல கூர்மையாக இருக்கும். அவற்றுக்கு மது, குதிரை, போர் ஆகியவற்றின் மீது விருப்பம் அதிகம்.

சில மீசைகள் பெரியதாகவும், கீழ்நோக்கி இறங்குவதாகவும், பயப்படச் செய்வதாகவும் இருக்கும். அந்தப் பெரிய மீசைகள் நல்ல குணநலன்களை மறைத்துவிடுகின்றன. பலவீனத்திற்கு அருகில் நின்றிருக்கும் நன்மையையும், வெட்கத்தை எல்லையாகக் கொண்டிருக்கும் அடக்கத்தையும் அது வெளிப்படுத்துகிறது.

இவற்றையெல்லாம்விட நான் மீசையை மதிப்பதற்குக் காரணம் அது ஒரு ஃப்ரெஞ்ச் சாயலும் பழக்கமும் கொண்டிருப்பதுதான். அது எங்களுடைய முன்னோர்களிடமிருந்தும், சிறையறைகளிலிருந்தும் வெளியே வந்த பாரம்பரியம் என்பதே உண்மை. அது எங்களுடைய தேசிய அடையாளமாகத் தொடர்கிறது. அது காதல், வீரம், தைரியம் ஆகியவற்றின் சின்னமுமாக இருக்கிறது.

அது ருசியாக இருக்கும் மதுவில் தன்னைத்தானே மூழ்க வைத்துக் கொண்டு எழுகிறது எப்படி அழகாகத் தடவி விடுவது என்பது அதற்கு தெரியும். பெரிய ரோமக் காடுகளைக் கொண்ட தாடிகள் அவை செய்வதைப் பின்பற்றுகின்றன.

மன்னிக்க வேண்டும்! மீசைகளை நினைத்துக் கண்ணீர் விடவும், மீசைகளைக் காதலிக்கவும் என்னைத் தூண்டிய சம்பவத்தை நான் இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன்.

போர்க் காலத்தில் நடைபெற்றது அந்தச் சம்பவம். அப்போது நான் என் தந்தையின் வீட்டில் இருந்தேன். அப்போது நான் ஒரு சிறிய பெண்ணாக இருந்தேன். ஒருநாள் எங்களுடைய வீட்டிற்கு அருகில் இருந்த வயலில் போர் வீரர்களுக்கு இடையே ஒரு மோதல் உண்டாகி விட்டது. காலையில் இருந்தே பீரங்கி, துப்பாக்கி ஆகியவற்றின் சத்தத்தை நான் கேட்டுக்கொண்டே இருந்தேன். சாயங்காலம் ஆன போது, ஒரு கர்னல் எங்களுடைய வீட்டிற்கு வந்து வராந்தாவில் நின்றிருந்தார். மறுநாள் அவர் அங்கிருந்து கிளம்பிவிட்டார். வெளியே வயலில் ஏராளமான ராணுவ வீரர்கள் இறந்து கிடக்கிறார்கள் என்று என் தந்தையிடம் கூறுவதற்காக வந்திருந்தார். அந்த ராணுவத்தில் பணிபுரியும் அதிகாரி. அவர்களை எங்களுடைய வீட்டிற்குக் கொண்டு வந்து ஒன்றாக அடக்கம் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் அவர் அங்கு வந்தார். அந்த பைன் மரங்கள் நிறைந்திருந்த பாதையில், ஸ்ட்ரெச்சரின் இரு பக்கங்களிலும் அவர் பிணங்களை அடுக்கினார். அவை அழுகிப்போய் கெட்ட நாற்றம் எடுத்ததால், ஒரு பெரிய குழியை வெட்டும்வரை அவற்றின் தலையைத் தவிர பிற பாகங்களை மண்ணைப் போட்டு மூடியிருந்தார். அவர்களுடைய தலைகள் மண்ணுக்குள்ளிருந்து வெளியே குதிக்கத் தயாராக இருப்பதைப்போல இருந்தன. அவற்றின் கண்கள் மூடியிருந்தன.

நான் அதைப் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன் ஆனால், இரண்டு வரிசைகளாகக் கிடக்கும் பரிதாபமான அந்த முகங்கள் என்னை மயக்கமடையச் செய்து விடுமோ என்று நான் பயப்பட்டேன்.

அவை ஒவ்வொன்றும் எந்த நாட்டுக்குச் சொந்தமானது என்பதைத் தெரிந்து கொள்வதற்காக நான் அவை ஒவ்வொன்றையும் கூர்ந்து பார்க்க ஆரம்பித்தேன். அவற்றின் சீருடைகள் மண்ணுக்குக் கீழே இருந்தன. ஆனால், உடனடியாக... ஆமாம்- உடனடியாக... அவர்கள் ஃப்ரெஞ்ச் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை நான் புரிந்து கொண்டேன்.

இறுதி நிமிடத்திலும் அவர்கள் அழகானவர்களாக இருக்கட்டும் என்று நினைத்து அந்தப் போராட்ட நாளன்று, அவர்களுடைய முகங்கள் முழுமையாக சவரம் செய்யப்பட்டிருந்தன. எனினும், அவர்களுடைய தாடி ரோமங்கள் வளர்ந்திருந்தன.


மரணத்திற்குப் பிறகும் அவை சிறிய அளவில் வளரும் என்று உனக்குத் தெரியுமல்லவா? மற்றவர்கள் ஒரு வாரம் வரைக்கும் சவரம் செய்யதாவர்களாக இருந்தார்கள். ஆனால், அவர்கள் எல்லோருக்கும் ஃப்ரெஞ்ச் மீசைகள் இருந்தன. ‘என் குழந்தை... அந்த தாடியுள்ள நண்பர்களுடன் என்னைக் குழிக்குள் போட்டு மூடி விடாதே! நான் உன்னுடைய அண்ணன்...’ என்று அவர்கள் ஒவ்வொருவரும் என்னிடம் கூறுவதைப் போல எனக்குத் தோன்றியது.

நான் அழுதேன். ம்ஹா! அவர்களை... அந்த இறந்துபோன அப்பிராணி மனிதர்களை எனக்குத் தெரியும் என்றாலும்கூட, அவர்களுக்காக நான் அழுதேன்.

உன்னிடம் இந்தக் கதையைக் கூறுவதன் மூலம் நான் ஒரு தவறைச் செய்துவிட்டேன். கவலை வயப்பட்டு, அதிகமாக எதுவும் பேச முடியாமல், நான் இதோ... இங்கே உட்கார்ந்திருக்கிறேன். என் பிரியமான லூஸி ஸ்வஸ்தி, நான் உன்னை இதயப்பூர்வமாக அணைக்கிறேன். மீசை நீண்ட காலம் வாழட்டும்!

ஜூன்.

கய்தெ மாப்பசானுக்கு சமர்ப்பிக்கிறாள்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.