Logo

காதலின் வார்த்தைகள்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 6697
kadhalin varthaigal

நீ எனக்கு எழுதுவதில்லை. நான் உன்னைப் பார்ப்பதில்லை. நீ ஒருமுறைகூட வருவதில்லை. அதனால் நீ என்னைக் காதலிக்கவில்லை என்று நான் நினைக்க வேண்டி இருக்கிறது. ஆனால், என்ன காணரத்திற்காக இப்படியெல்லாம் நடக்கிறது? நான் உனக்கு என்ன துரோகத்தைச் செய்துவிட்டேன்? நீ கூற வேண்டும்.

கூறியே ஆகவேண்டும். நான் உன்னை அந்த அளவிற்குக் காதலிக்கிறேன். அந்த அளவிற்கு! நீ எப்போதும் எனக்கு அருகில் இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். என்னுள் தோன்றும் காதலின் பெயர்களை, வார்த்தைகளைக் கூறி அழைக்கும்போது நாள் முழுவதும் உன்னை முத்தமிட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்று எனக்கு ஆசை உண்டாகிறது. நான் உன்னை வழிபடுகிறேன். துதிக்கிறேன். என் அழகான சேவலே, காதல் வயப்பட்ட உன்னுடைய இணை உன்னை வழிபடுகிறது.

ஸோஃபி

திங்கட்கிழமை.

'என் பிரிய தோழியே,

நான் கூறப்போகும் விஷயத்தைப் பற்றி உனக்கு எதுவுமே புரியாது. ஆனால், அது ஒரு பிரச்சினையே இல்லை. அதே நேரத்தில் வேறொரு பெண் நான் எழுதிய இந்தக் கடிதத்தைப் படிக்கக்கூடிய சூழ்நிலை உண்டானால், அவளுக்கு அது பயனுள்ளதாக இருக்கும்.

நீ ஊமையாகவும் செவிடாகவும் இருந்தாலும், கொஞ்ச காலமாக நான் உன்னைக் காதலிக்கிறேன் என்ற விஷயத்தில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. அதன் விளைவாக நடந்த ஒரே ஒரு விஷயத்தை நீ பேச ஆரம்பித்திருக்கிறாய். அவ்வளவுதான்.

உனக்குத் தெரியுமா ? காதல் காலத்துக் கனவுகள் எப்போதும் பாடல்களைப் பாடிக்கொண்டே இருக்கும். ஆனால், அவை அப்படிச் செய்யும்போது யாரும் அவற்றைத் தொல்லைக்கு உள்ளாக்கவோ, குழப்பங்கள் உண்டாக்கவோ கூடாது. இரண்டு முத்தங்களுக்கு இடையில் பேசும்போது சொற்கள் உயிர்ப்புடன் இல்லையென்றால், அவன் அல்லது அவள் அந்த உணர்ச்சிமயமான கனவுகளை அலங்கோலப்படுத்துகிறார்கள் என்றுதான் அர்த்தம். அழகிய இளம் பெண்களின் உதடுகளில் இருந்து உணர்ச்சியற்ற சத்தங்கள் எப்போதும் புறப்படாது.

என்னை உன்னால் புரிந்துகொள்ள முடியவில்லையா? அப்படியென்றால், அந்த அளவிற்கு நல்லதுதான். நான் என்னுடைய வார்த்தைகளைத் தொழலாம் அல்லவா? நான் இதுவரை சந்தித்த இளம் பெண்களிலேயே அழகானவளும், ஆராதனை செய்யக் கூடியவளுமாக இருப்பவள் நீதான்.

உனக்கு இருப்பதைவிட அதிகமான கனவுகளும், அதிகமான புரிந்துகொள்ள முடியாத வாக்குறுதிகளும், அதிகமான ஆழம் கொண்ட காதலும் நிறைந்த கண்கள் இந்த உலகத்தில் வேறு எங்கு இருக்கின்றன? இருக்கிறது என்று நான் நினைக்கவில்லை. அழகான உதடுகளை விரித்து, வரிசையான பற்களைக் காட்டி நீ புன்னகையை வெளிப்படுத்தும்போது, அந்த அழகான வாய்க்குள்ளிருந்து வார்த்தைகளால் கூற முடியாத இசை எழுகிறது - விளக்க முடியாத இனியதாக ஏதோ ஒன்று புறப்படுகிறது என்றெல்லாம் கூற யாருக்கும் ஆர்வம் உண்டாகும்.

அப்போது நீ என்னிடம் பேசுகிறாய். அதுதான் என்னை சிரமத்துக்குள்ளாக்குகிறது. நீதான் பார்க்கிறாயே! என் நாக்கால் விளக்க முடிவதைவிட, அது என்னைத் துன்பத்திற்குள்ளாக்குகிறது. உன்னை ஒருமுறைகூட பார்க்காமல் இருந்தால் என்ன என்று நான் நினைக்கிறேன்.

எதுவுமே புரியவில்லை என்று நீ நாடகம் ஆடுகிறாய்... அப்படித்தானே? ஆனால், நான் அதை எப்போதோ கணக்கிட்டுவிட்டேன்.

முதல் தடவையாக நீ நான் வசித்துக் கொண்டிருந்த இடத்திற்கு வந்ததும், என்னைச் சந்தித்ததும் உனக்கு ஞாபகத்தில் இருக்கிறதா? எவ்வளவு சந்தோஷத்துடன் நீ வீட்டிற்குள் வந்தாய்? உன் பாவாடையில் ஒட்டியிருந்த ஒரு காட்டு மலரின் நறுமணம் நீ வருவதை முன்கூட்டியே எனக்கு உணர்த்தியது. ஒரு வார்த்தைகூடப் பேசாமல் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டே நாம் நீண்ட நேரம் நின்றிருந்தோம். பிறகு இரண்டு முட்டாள்களைப்போல, ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துக் கொண்டோம். அந்த நிமிடத்திலிருந்து கடைசிவரை ஒரு வார்த்தையைக்கூட நாம் ஒருவரோடொருவர் பரிமாறிக்கொள்ளவில்லை.

நம்முடைய உடல் பிரிந்போது, நம்முடைய நடுங்கிக் கொண்டிருந்த கைகளோ, கண்களோ எதையும் கூறவில்லை. எப்படிப்பட்ட மொழி ஊடகத்தாலும் அதை விவரிக்க முடியாது. மிகவும் குறைவாக நான் அப்படி யோசித்துப் போய்க் கொண்டிருப்பதற்கு மத்தியில் நீ மெதுவான குரலில் சொன்னாய். "தாமதிக்காமல் நாம் மீண்டும் சந்திப்போம்."

அதுதான்... அது மட்டும்தான் நீ சொன்னது என்றால், நீ இங்கு விட்டுப்போன சந்தோஷம் தரும் கனவுகளைப் பற்றி, அவற்றின் ஒவ்வொரு நிமிட ஒளியைப் பற்றி உன்னால் கற்பனை பண்ணிக்கூட பார்க்க முடியாது.

முட்டாள்களாக இல்லாத ஆண்களுக்குக் காதல் என்பது ஒரு விளையாட்டு அல்ல என்பதும், காதலின் ஒரு சிறு அடையாளம்கூட அவர்களைத் தலைகீழாகப் புரட்டிவிடும் என்பதும் உனக்குத் தெரியாது பெண்ணே. பெண்களாகிய நீங்கள் காதலிப்பதற்கு மத்தியில் அதன் பரிதாபத்திற்குரிய விஷயங்களைப் பற்றி எங்கு நினைக்கிறீர்கள்? அவலட்சணம் பிடித்த அம்சங்களைப் பற்றி நீங்கள் எங்கு தெரிந்து கொள்வீர்கள்?

ஒல்லியான ஒரு இளம் பெண்ணின் வாயிலிருந்து உதிரும் வார்த்தைகள் இனிமையாக இருக்கின்றன என்று தோன்றும்போது, அதே வார்த்தைகள் ஒரு தடிமனான பெண்ணின் வாயிலிருந்து உதிரும்போது அவ்வளவு இனிமையாக இல்லை என்று படுவது ஏன்? ஒருத்திக்கு இனிமையாக இருப்பது இன்னொருத்திக்கு இனிமையாக இல்லாமற்போவது எப்படி?

ஒரு பெண்ணுக்கு இன்பம் அளிப்பதாய் தோன்றக்கூடிய அணைப்பு வேறொரு பெண்ணுக்கு வெறுப்பை உண்டாக்குவது ஏன்? எதற்காக? எல்லா விஷயங்களிலும், குறிப்பாக காதல் விஷயத்தில் முழுமையான பொருத்தம் - வார்த்தைகளிலும் பார்வையிலும் குரலிலும் அசைவிலும் செயல்களிலும் - காதலை வெளிப்படுத்துவதில் முன்னால் நின்றிருக்கும் மனிதனுக்கு அவசியம் தேவைப்படுகிற ஒரு விஷயம் இது. வயது விஷயத்திலும், உயரம் பற்றிய விஷயத்திலும், தலைமுடியின் நிறம் பற்றிய விஷயத்திலும், அழகு பற்றிய விஷயத்திலும் ஒரு பொருத்தம் கட்டாயம் வேண்டும்தான்.

ஆவசேத்துடன் இருக்கும், உணர்ச்சிகளின் சூறாவளியைச் சந்தித்து நின்றிருக்கும் முப்பத்தைந்து வயதுப் பெண் இருபத்தைந்து வயதுப் பெண்ணின் காதல் வயப்பட்ட அணைப்புகளின், கொஞ்சல்களின் மகிழ்ச்சியைத் தன்னிடம் கொண்டிருக்க வேண்டும். ஆனால், தான் வித்தியாசமாக முத்தமிட வேண்டும் என்றோ, வித்தியாசமாக நடந்துகொள்ள வேண்டும் என்றோ, ஒரு ஜூலியட்டைவிட தந்திரம் கொண்ட பெண்ணாக ஆகவேண்டும் என்றோ அவள் புரிந்துகொள்ள வேண்டும் என்றில்லை. பத்து பேர்களில் ஒன்பது காதலர்களை ஒரு தவறுகூட செய்யாமல் அவள் வெறுப்படையச் செய்வாள். நான் கூறுவது உனக்குப் புரிகிறதா? இல்லை? நான் அப்படி நினைக்கிறேன்.

உன் அழகிற்கு நீயே கடிவாளம் போடுகிற நேரத்திலிருந்து என்னைப் பொறுத்தவரையில் எல்லாமே முடிந்துவிட்டன. எப்போதும் முடிவே இல்லாதது என்பதைப் போன்றிருக்கும் ஒரு முத்தத்தில் ஈடுபட்டுக்கொண்டு, கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்கள் நீளக்கூடிய ஒரு அணைப்பிற்குள் நாம் நுழைகிறோம்.


மேகங்களைப் போன்ற ஆன்மாக்களுக்கு மத்தியில் அவை எங்கே தப்பித்துப் போய்விடப் போகின்றனவோ என்று பயந்து அப்படிப்பட்ட முத்தங்கள், காதலர்களைக் கண்களை மூடிக்கொள்ளும்படிக் கூறுகின்றன. உதடுகள் பிரியும்போது நீ என்னிடம் இப்படிக் கூறுவாய்:

'அது இனிமையாக இருந்தது என் தடி நாயே!'

சமையல் நூல்களிலும், தோட்ட வேலையைப் பற்றிய புத்தகங்களிலும் இருக்கும் பலதரப்பட்ட உயரினங்களைப் பற்றியும், காய்கறிகளைப்பற்றியும் நீ என்னிடம் புலம்பிக் கொண்டிருந்த அந்த நிமிடங்களில் எனக்கு உன்னை உதைக்க வேண்டும்போல் இருந்தது. ஆனால், அதனால் எந்தவொரு பிரயோஜனமும் இல்லை.

காதலில் அணைப்புகள் முரட்டுத்தனமும் மிருகத்தனமும் கொண்டவை. அதிகமாக சிந்திப்பதாக இருந்தால், அது ஒரு மோசமான வேலை என்பதே உண்மை. என் சிறு பெண்ணே! காம உணர்ச்சியின் எந்த தேவதை உன் கடிதத்தின் இறுதி வார்த்தைகளை எழுத உன்னைத் தூண்டியது? நான் அவற்றைச் சேகரித்து வைத்திருக்கிறேன். ஆனால், உன்மீது கொண்ட காதல் காரணமாக நான் அதை உன்னிடம் காட்ட மாட்டேன்.

சில நேரங்களில் சூழ்நிலைக்குப் பொருத்தமில்லாத பல விஷயங்களையும் நீ கூறியிருக்கிறாய். உதாரணத்திற்கு 'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்ற வார்த்தையை நீ பல நேரங்களில் உச்சரிப்பதை நான் கேட்டிருக்கிறேன். அத்தகைய சில சந்தர்ப்பங்களிலாவது என் விருப்பத்தை ஒரு சிரிப்பில் ஒதுக்கிக்கொள்ள நான் மிகவும் சிரமப்பட்டிருக்கிறேன். 'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்ற வார்த்தைகளைக் கூறுவதற்குப்

பொருத்தமில்லாத, எத்தனையோ சந்தர்ப்பங்கள் உண்டாகி இருக்கின்றன. நான் அதை உன்னிடம் கூறாமல் இருக்க முடியாது.

ஆனால், உனக்கு என்னைப் புரிந்துகொள்ள முடியவில்லை. வேறு பல பெண்களுக்கும் என்னைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர்கள் என்னை ஒரு முட்டாளாக நினைக்கலாம். ஆனால், அது எனக்கு ஒரு பிரச்சினையே இல்லை. அதிகமாக பசியுள்ளவர்கள் ஆசை அதிகமாகி எல்லாவற்றையும் வாரித்தின்பார்கள். ஆனால், நாகரீகமாக இருக்கும் மனிதர்கள் மனக்கட்டுப்பாட்டுடன் இருப்பார்கள். அவர்கள் மிகவும் சாதாரண விஷயம் என்பதைப்போல உணவை நினைப்பார்கள். இந்த விஷயத்தில் சமையலைப் போலத்தான் காதலும்.

ஒரு விஷயம்தான் எனக்குப் புரியாமல் இருக்கிறது. மிகவும் அழகான பின்னல் வேலைப்பாடுகள் கொண்ட காலுறைகள்மீதும், அசாதாரண நிறங்கள்மீதும், உள்ளாடைகளின் அடியில் இருக்கும் லேஸ்கள் மீதும், மறைத்து வைத்திருக்கும் பெண்மையின் ஆவேசங்கள் மீதும் ஈடுபாடு வைத்திருக்கும் பெண்களுக்குத் தாங்கள் பொருத்தமில்லாத நேரத்தில் பயன்படுத்தும் கொஞ்சல்கள் தாங்க முடியாத வெறுப்பை உண்டாக்குகின்றன என்ற விஷயம் எப்படிப் புரியாமலே போகிறது?

சில சந்தர்ப்பங்களில் ஆண்மைத்தனமான - முரட்டுத்தனமான செயல்பாடுகள் ஆச்சரியங்களை உண்டாக்குகின்றன. அவை கற்பனைகளை உண்டாக்கவும், இதயத்துடிப்பை அதிகரிக்க வைக்கவும் செய்கின்றன. போராடும் சந்தர்ப்பங்களில் அவை அவசியம்தான். காம்ப்ரோனின் வார்த்தைகள் முக்கியத்துவம் கொண்டவை தானே?

சரியான நேரத்தில் நடக்கக் கூடியது எதுவும் நம்மை நடுங்கச் செய்வது இல்லை. ஆனால், சில நேரங்களில் தேவையற்ற வார்த்தைகளை உச்சரிப்பதில் இருந்து நம்முடைய நாக்கைப் பின்வாங்கச் செய்ய நமக்கு உரிமை இருக்கிறது.

நீ எதையும் மறுத்துக் கூறமாட்டாய் என்ற நம்பிக்கையுடன் ஆவேசத்துடன் நான் உன்னை இறுக அணைக்கிறேன்.

ரெனே.

வாட்டர் லூ போருக்கு மத்தியில் ஜெனரல் காம்ப்ரோன் இப்படிக் கூறினார்: 'இறந்து விழுந்தாலும், ஒரு போர்வீரன் எந்தச் சமயத்திலும் அடிபணிந்துவிடக்கூடாது.'

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.