
தனியாக உணவு சாப்பிட்ட பிறகு ஜாக்வஸ் ரான்டல் தன்னுடைய வேலைக்காரனைப் போகும்படி கூறினார். அதற்குப் பிறகு அவர் கடிதங்கள் எழுத ஆரம்பித்தார்.
கடந்த புது வருடத்திலிருந்து நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களைப் பற்றியும், முடிந்துபோன காரியங்களைப் பற்றியும் திரும்பத் திரும்ப மனதில் நினைத்துப் பார்த்தும், கனவுகள் கண்டும், அவற்றைப் பற்றி எழுதியும் அவர் ஒவ்வொரு வருடத்தையும் முன்னோக்கி நகர்த்திக் கொண்டிருந்தார்.
அதே மாதிரி அவருடைய நண்பர்களின் முகங்கள் அவரின் மனதில் தோன்றின. ஜனவரி முதல் தேதியின் விடியலை வாழ்த்தி அவர் தன் நண்பர்களுக்குக் கடிதம் எழுத ஆரம்பித்தார்.
மேஜையை இழுத்துத் திறந்து, அதிலிருந்த ஒரு பெண்ணின் புகைப்படத்தை வெளியே எடுத்தார். சிறிது நேரம் பார்த்த அவர், அதை முத்தமிட்டார். அந்தப் புகைப்படத்தை மேஜைமீது வைத்துவிட்டு, அவர் எழுத ஆரம்பித்தார்.
‘என் அன்பிற்குரிய ஐரீன்,
இதற்குள் நான் அனுப்பிய பரிசு உனக்குக் கிடைத்திருக்கலாம். உன்னிடம் கூறுவதற்காக மட்டுமே நான் இந்த மாலை நேரத்தில்...’
அங்கிருந்து பேனா முன்னோக்கி நகர மறுத்தது. ஜாக்வஸ் எழுத்து அறையில் இங்குமங்குமாக நடக்க ஆரம்பித்தார்.
கடந்த ஆறு மாதங்களாக அவருக்கு ஒரு காதலி இருக்கிறாள். வேறு பலருக்கும் இருப்பதைப்போல ஒரு தாசியாகவோ, உடல் சுகத்தை அளிப்பதற்கென்றே இருக்கக் கூடிய பெண்ணாகவோ அவள் இருக்கவில்லை. உண்மையாகவே காதலித்து, காதலிக்கப்பட்ட ஒரு உறவு அது. உண்மையாகச் சொல்லப் போனால், அவர் ஒரு இளைஞனாக இல்லை என்றபோதும், இளமை விட்டுப் போயிராத ஒரு ஆணாக இருந்தார். சிந்தனைகளிலும் செயல்களிலும் ஆவேசத்துடனும் தீவிரத்தன்மையுடனும் அவர் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தார். தனி நபர்களுக்கும் சூழ்நிலைகளுக்கும் ஏற்றபடி தன் வாழ்க்கைக்குள் நுழைந்தும், முடிந்தும் கொண்டிருந்த நட்பின் ஒரு ‘பேலன்ஸ் ஷீட்’டை ஒவ்வொரு வருடமும் தயார் பண்ணுவது என்பது அவருடைய வழக்கமாக இருந்தது. தன்னுடைய உணர்ச்சியின் வெப்பம் குறைந்தபோது ஒரு வியாபாரியின் கடமை என்பதைப்போல அவளுடன் உறவுகொண்டு தன்னுடைய இதயத்தின் நிலை எப்படி இருக்கிறது என்பதையும், எதிர்காலத்தில் அது எப்படி இருக்க வேண்டும் என்பதையும் அவர் தனக்குத் தானே கேட்டுக்கொண்டார். மென்மைத்தனமும் ஆழமான நன்றியுணர்வும் நெருக்கமான நட்பும் நிறைந்த பலம் கொண்ட உறவே அது என்பதை அவர் கண்டுபிடித்தார்.
அழைப்பு மணியின் ஓசை அவரை அதிர்ச்சியடையச் செய்தது. கதவைத் திறப்பதா வேண்டாமா என்று அவர் யோசித்தார். ஒருவேளை, புது வருடத்திற்கு முந்தின இரவில் அந்த வழியாகக் கடந்து போய்க் கொண்டிருக்கும் அறிமுகமில்லாத மனிதனாக அவன் இருக்கலாம். யாராக இருந்தாலும் சரி, கதவைத் திறக்க வேண்டியது தன் கடமை ஆயிற்றே என்று அவர் நினைத்தார்.
அவர் மெழுகுவர்த்தியைத் தேடி எடுத்துக்கொண்டு கூடத்தைக் கடந்து சாவியை நுழைத்துக் கதவைத் திறந்தார். கதவைத் திறந்தபோது தன்னுடைய காதலி ஒரு இறந்த பிணத்தைப்போல, வெளிறிப்போய் சுவரில் சாய்ந்து நின்றிருப்பதை அவர் பார்த்தார்.
அவர் நடுங்கிக் கொண்டே கேட்டார்: “உனக்கு என்ன ஆச்சு?”
அவள் பதிலுக்கு ஒரு கேள்வியைக் கேட்டாள்:
“நீங்க தனியாகவா இருக்கீங்க?”
“ஆமா...”
“வேலைக்காரர்கள் இல்லையா?”
“இல்ல.”
“நீங்கள் வெளியே போகலையா?”
“இல்ல...”
அந்த வீட்டிற்குள் மிகவும் பழக்கம் கொண்டவள் என்பதைப்போல அவள் நடந்து சென்றாள். வரவேற்பறையை அடைந்த அவள் அங்கிருந்த ஸோஃபாவில் சாய்ந்தாள். தொடர்ந்து தன் கைகளால் முகத்தை மூடிக்கொண்டு அவள் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள்.
அவர் அவளுக்கு முன்னால் முழங்காலிட்டு அமர்ந்தார். அவளுடைய முகத்திலிருந்த கைகளைப் பிடித்து விலக்க முயற்சித்த அவர் உரத்த குரலில் கேட்டார்:
“ஐரீன்... ஐரீன், உனக்கு என்ன ஆச்சு? உனக்கு என்ன நடந்ததுன்னு தயவுசெய்து என்கிட்ட சொல்லு. நான் உன்னிடம் கெஞ்சிக் கேட்டுக்குறேன்.”
தன்னுடைய அழுகைக்கு மத்தியில் அவள் மெதுவான குரலில் சொன்னாள்: “இப்படியே நீண்ட காலம் என்னால வாழ முடியாது.“
அவரால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை.
“இப்படியே என்றால் நீ என்ன சொல்ல வர்ற?”
‘’ம்... இப்படியே நீண்ட காலம் என்னால வாழ முடியாது... நான் அந்த அளவுக்கு இதுவரை பொறுமையா இருந்துட்டேன். இன்னைக்கு அவர் என்னை அடிச்சிட்டாரு.”
“யாரு? உன் கணவரா?”
“ஆமா... என் கணவர்தான்.”
“அப்படியா?”
அவளுடைய கணவர் இந்த அளவிற்குக் கொடூரமாக நடந்து கொள்வார் என்று சிறிதுகூட எதிர்பார்க்காத காரணத்தால், அவர் அதிர்ச்சியடைந்துபோய் விட்டார். நல்ல குணங்களைக் கொண்ட, க்ளப்பிற்குச் செல்லும், குதிரைகள்மீது ஈடுபாடு கொண்ட, நாடகங்கள் பார்ப்பதற்கு தினமும் போகக்கூடிய, சிறந்த ஒரு வாள் பயிற்சி வீரரான, பொதுவாக நல்ல ஒரு குடும்பத் தலைவருமான அருமையான மனிதராக அவர் இருந்தார். ஆனால் முறையான கல்வி இல்லாததாலும், நாகரீகமாக எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று தெரியாததாலும், உயர்ந்த நிலையில் சிந்திக்கத் தெரியாத மனிதராக அவர் இருந்தார்.
பணக்காரர்களும் படித்தவர்களுமாக இருப்பவர்கள் செய்வதைப்போல அவரும் தன் மனைவியை வழிபட்டார். அவருடைய விருப்பங்களைப் பற்றியும் ஆடைகளைப் பற்றியும் உடல்நலத்தைப் பற்றியும் அவர் தேவைக்கும் அதிகமாக ஆர்வம் காட்டினார். அதையும் தாண்டி அவர் அவளுக்கு முழுமையான சுதந்திரத்தைத் தந்திருந்தார்.
ஐரீனின் நண்பராக இருந்த ஜாக்வஸ் ரான்டலுக்கு அவளுடைய கணவரின் அன்பு நிறைந்த கை குலுக்கல் கிடைத்தது. சிறிது காலம் ஐரீனின் நல்ல நண்பராக இருந்த ரான்டல் அவளுடைய காதலராக ஆனார். அதைத் தொடர்ந்து அவளுடைய கணவருடன் அவர் கொண்டிருந்த நெருக்கம் மேலும் அதிகமானது.
அவர்களுடைய குடும்பத்தில் இப்படியொரு சூறாவளி வீசும் என்று ஜாக்வஸ் கனவில்கூட நினைத்ததில்லை. சிறிதும் எதிர்பாராத அந்த நிகழ்ச்சி அவருக்குள் பயத்தை உண்டாக்கியது.
அவர் அவளிடம் கேட்டார்:
“அது எப்படி நடந்தது? என்கிட்ட சொல்லு.”
அந்த இடத்திலேயே தன்னுடைய வாழ்க்கையின் நீளமான வரலாற்றை, தன்னுடைய திருமண நாளில் இருந்து இருக்கும் தன்னுடைய வரலாற்றை அவள் விளக்கமாகக் கூறினாள். சாதாரண விஷயங்களில் உண்டாகும் சண்டையிலிருந்து மாறுபட்ட குணங்களைக் கொண்ட இரண்டு பேருக்குமிடையே கருத்து வேறுபாடு ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டிருப்பது வரை அவள் எல்லாவற்றையும் கூறினாள்.
தொடர்ந்து சண்டைகள்... முழுமையான, தெளிவற்று இருந்தாலும் உண்மையான பிரிதல்... சமீப காலமாக அவளுடைய கணவர் தீவிரமாக தன் எதிர்ப்பைக் காட்டினார். சந்தேகம் கொண்ட மனிதராக அவர் ஆனார். அவளை அடிக்கும் நிலைக்கு மாறினார்.
அவர் இப்போது பொறாமை கொண்டவராகவும் ஆகிவிட்டார். ஜாக்வஸ் ரான்டல்மீது அவருக்குப் பொறாமை... இன்றும் அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையை உண்டாக்கிய பிறகு, அவர் அவளை அடித்திருக்கிறார்.
தன்னுடைய முடிவு என்ன என்பதையும் அவள் அப்போது கூறினாள்: “நான் அவர்கிட்ட திரும்பிப் போகப் போறது இல்ல. நீங்க உங்க விருப்பப்படி என்னை எது வேணும்னாலும் செய்துக்கலாம்.”
ஜாக்வஸ் அவளுக்கு நேர் எதிரில் உட்கார்ந்தார். அவருடைய முழுங்கால்கள் அவளுடைய முழங்கால்களுடன் உரசின. அவர் அவளுடைய கைகளைச் சேர்த்துப் பிடித்தார்.
“என் அன்பான ஐரீன், நீ ஒரு பெரிய முட்டாள்தனமான காரியத்தை செய்யப் போற. நீ உன் கணவரை வேண்டாம்னு உதறிவிட்டு வர்றதா இருந்தா, ஒரு பக்கம் மட்டும் குற்றம் சுமத்து. அந்த வகையில் ஒரு குடும்பப் பெண் என்ற உன் ஸ்தானத்தைக் காப்பாற்றிக் கொள்ளணுமே!”
அவரை அமைதியற்ற மனதுடன் பார்த்தவாறு அவள் கேட்டாள்:
“அப்படின்னா நீங்க எனக்கு என்ன அறிவுரை சொல்ல விரும்புறீங்க?”
“திரும்பிப் போயி வாழ்க்கையுடன் இரண்டறக் கலக்கப் பாரு. ராணுவத்துல பாராட்டு மெடல் கிடைக்கிற மாதிரி, விவாகரத்து கிடைக்கும் அந்த நாள் வரும்வரை, கணவருடன் இருக்கும் உன் வாழ்க்கையைத் தொடர்ந்து நடத்து.”
“கோழைத்தனமான ஒரு காரியத்தைச் செய்யச் சொல்லியா என்னை நீங்க அறிவுறுத்துறீங்க?”
“அப்படி இல்ல. புத்திசாலித்தனமான, அறிவுப்பூர்வமான ஒரு காரியம் அது. உன்னைக் காப்பாத்திக்க உயர்ந்த பதவி இருக்கு. நல்ல பேர் இருக்கு. நண்பர்கள் இருக்காங்க. உறவினர்கள் இருக்காங்க. அறிவில்லாமல் செயல்பட்டு நீ அது எதையும் பாழாக்கிக்கொள்ளக் கூடாது.”
அவள் எழுந்து கோபத்துடன் கொன்னாள்:
“சரி... வேண்டாம்! எனக்கு இனிமேல் எதுவுமே தேவையில்லை. எல்லாவற்றையும் நான் முடிவுக்குக் கொண்டு வர்றேன்!”
தொடர்ந்து இரண்டு கைகளாலும் தன் காதலரின் தோளைப் பற்றிக்கொண்டே அவருடைய முகத்தைப் பார்த்து அவள் கேட்டாள்:
“நீங்க என்னைக் காதலிக்கிறீங்களா?”
“ஆமா...”
“உண்மையா... சத்தியமா...”
“ம்...”
‘’அப்படின்னா, என்னை ஏத்துக்கங்க.”
அவர் அதற்கு மறுப்பு சொன்னார்.
“உன்னை ஏத்துக்கறதா? இங்கேயா? என்ன, உனக்குப் பைத்தியம் பிடிச்சிருக்கா? அப்படி நடந்தால், உன்னை நீ முழுமையா இழுந்திடுவே. திரும்பி வராத அளவுக்கு இழப்பு உண்டாயிடும். உனக்கு உண்மையிலேயே பைத்தியம்தான் பிடிச்சிருக்கு.”
மெதுவாக, அதே நேரத்தில் கம்பீரமான குரலில் தன்னுடைய வார்த்தைகளின் பாதிப்பு என்ன என்பதை அறியக்கூடிய ஒரு பெண்ணைப்போல அவள் அதற்கு பதில் சொன்னாள்.
“இங்கே பாருங்க ஜாக்வஸ். உங்களை நான் பார்க்கக் கூடாதுன்னு அவர் சொல்றாரு. உங்களைப் பார்ப்பதற்காக இப்படி பொய் சொல்லிட்டு நடத்துற தமாஷான நாடகத்தை இனிமேல் நடத்த நான் தயாராக இல்லை. ஒண்ணு - நீங்க என்னை இழக்கணும். இல்லாட்டி - நீங்க என்னை உங்களுக்குச் சொந்தமா ஆக்கிக்கணும்.”
“என் அன்பிற்குரிய ஐரீன், விஷயம் அப்படிப் போகுதுன்னா, நீ விவாகரத்து வாங்க பாரு. நான் உன்னைத் திருமணம் செய்துக்குறேன்.”
“ஆமாம்... நீங்க என்னைத் திருமணம் பண்ணுவீங்க. அதாவது - இரண்டு வருடங்கள் கழிச்சு... உங்களோடதுதான் பொறுமையான காதலாச்சே! என்ன, நான் சொல்றது சரிதானா?”
“இங்கே பாரு ஐரீன்! நீ கொஞ்சம் சிந்திச்சுப் பாரு. நீ இங்கே வந்து வசித்தால், அவர் நாளைக்கே இங்கேயிருந்து உன்னைத் தூக்கிக்கொண்டு போயிடுவாரு. அவர் உன்னோட கணவர். அவருக்கு அதற்கான உரிமை இருக்கு என்பதால் நீயும் அவர் கூடத்தான் இருப்பே.”
“நீங்க என்னை இங்க தங்க வைக்கணும் என்று நான் சொல்லல. நீங்க என்னை எங்கே வேணும்னாலும் கொண்டு போங்க... அதைச் செய்யும் அளவிற்கு மனதின் ஆழத்தில் நீங்கள் என்னைக் காதலிக்கிறீங்கன்னு நான் நம்புறேன். நான் ஒரு தப்பு பண்ணிட்டேன். குட்பை.”
அவள் எழுந்து அறையின் வாசலை நோக்கி நடந்தாள். அவர் அப்போதே அவளுக்குப் பின்னால் சென்றதால், கதவிற்கு வெளியிலாவது அவளைப் பிடிக்க அவரால் முடிந்தது.
“இங்கே பாரு ஐரீன்.”
அவர் கூறுவதை கேட்க ஆர்வம் இல்லாமல், அவள் அவரை விட்டு விலகி நின்றாள். அப்போது அவளுடைய கண்கள் நீரால் நிறைந்திருந்தன. அவளுடைய உதடுகளிலிருந்து இந்த வார்த்தைகள் வெளியே வந்தன.
“என்னைத் தனியா விடுங்க! தனியா விடுங்க!”
அவர் அவளைப் பிடித்து உட்கார வைத்தார். அவளுக்கு முன்னால் முழுங்காலிட்டு அமர்ந்துகொண்டு அவள் கூறுவது மாதிரி செயல் வடிவில் நடந்தால், அதனால் உண்டாகக்கூடிய ஆபத்தான விளைவுகளைப் பற்றியும் அதற்குள் இருக்கும் முட்டாள்தனத்தைப் பற்றியும் கூறி, அவற்றை அவள் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் அறிவுரை கூறிக்கொண்டிருந்தார் அவர். அவளுடைய மிகப்பெரிய நோக்கமே தன்னுடைய காதல்தான் என்பதை நன்கு அறிந்திருந்த அவர், அவள் ஏற்றுக்கொள்வதற்காக ஒரு விஷயத்தைக்கூட, தான் கூறும்போது விடாமல் பார்த்துக்கொண்டார்.
அவளுடைய கோபம் சற்று அடங்கியபோது, அவள் அமைதியாக ஆனபோது, தன்னுடைய அறிவுரையைக் காதுகொடுத்துக் கேட்கும்படி, தான் கூறுவதை அக்கறையுடன் கவனிக்கும்படி, தன்னை நம்பும்படி அவர் அவளிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்.
அவர் பேசி முடித்ததும், அவள் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சொன்னாள்.
“என்னைக் கை விட்டுடறதுன்னு நீங்க முடிவு பண்ணிட்டீங்களா? அப்படின்னா, நீங்க உங்க கைகளை எடுத்தால், நான் எழுந்திருக்க முடியும்.”
“நான் சொல்றதைக் கேளு ஐரீன்..”
“நீங்கள் என்னைப் போக விடுறீங்களா?”
“ஐரீன்... உன் முடிவை மாற்றிக்கொள்ள முடியாதா?”
“என்னைப் போகவிடுங்க.”
“உன்னோட இந்த முட்டாள் தனமான, உறுதியான முடிவை, எதிர்காலத்தில் உன்னைக் கவலைகொள்ள வைக்கப்போகும் இந்த முடிவை மாற்றிக் கொள்ள நீ தயாராக இல்லைன்னா சொல்ற?”
“ஆமாம்... என்னைப் போக விடுங்க.”
“அப்படின்னா, நில்லு. இங்கே பாதுகாப்பு இருக்குன்னு உனக்கு தெரியும்ல... நாளைக்குக் காலையில நாம் எங்கேயாவது போவோம்.”
அவர் அதைக் கூறி முடித்த பிறகும், அவள் எழுந்து தன்னுடைய குரலைக் கடுமையாக வைத்துக்கொண்டு சொன்னாள்:
“இல்ல... மிகவும் தாமதம் ஆயிடுச்சு. ஒரு தியாகத்தை நான் விரும்பல... வழிபடுறதைத்தான் நான் விரும்புறேன்.”
“நில்லு... நான் செய்ய வேண்டியதைச் செய்து முடிச்சிட்டேன். சொல்ல வேண்டியதை நான் சொல்லி முடிச்சிட்டேன். உன் விஷயத்தில் இதற்குமேல் பொறுப்புகள் இருப்பதை நானே விரும்பல. என் மனசாட்சிக்கு இப்போ சமாதானம் உண்டாயிடுச்சு. இனி உனக்கு என்ன வேணும்னு சொல்லு. நீ எதைச் சொன்னாலும் அதன்படி நடக்குறேன்.”
அவள் மீண்டும் ஸோஃபாவில் அமர்ந்தாள். நீண்ட நேரம் அவரையே கண்களை எடுக்காமல் பார்த்தாள். பிறகு மிகவும் அமைதியான குரலில் அவள் கேட்டாள்: “அப்படின்னா, விளக்கமா சொல்லுங்க.”
“அது எப்படி? நான் எதை விளக்கிச் சொல்லணும்னு நீ சொல்ற?”
“எல்லாவற்றையும்...! இந்த முடிவுக்கு வர்றதுக்கு முன்னாடி நீங்கள் சிந்திச்ச ஒவ்வொன்றையும்! நான் என்ன செய்யணும்னு அப்போத்தான் முடிவு செய்ய முடியும்.”
“ஆனால், எதைப்பற்றியும் நான் சிந்திக்கல. நீ முட்டாள்தனமான காரியத்தைச் செய்யப் போறேன்ற விஷயத்தைக் கூற வேண்டியது என் கடமை. ஆனால், நீ அந்த விஷயத்தில் பிடிவாதமா இருக்கே. அதே நேரத்தில், நானும் இப்போது அந்த முட்டாள்தனமான செயலில் பங்கு கொள்கிறேன்னு சொல்றேன். நான் அதில் உறுதியாகவும் இருக்கேன்.”
“இவ்வளவு சீக்கிரமா ஒரு ஆள் தன்னுடைய கருத்தை மாற்றிக் கொள்வது என்பது அவ்வளவு இயற்கையா தெரியல...”
“நான் சொல்றதைக் கொஞ்சம் கேளு ஐரீன். தியாகமோ, வழிபாடோ சம்பந்தப்பட்ட ஒரு விஷயமில்லை இது. உன்னைக் காதலிக்கிறேன்ற விஷயத்தைப் புரிஞ்சிக்கிட்ட நாளன்று, நான் இதை என்கிட்டயே சொல்லிக்கிட்டேன். இந்த விஷயத்தில் எல்லா காதலர்களும் தங்களுக்குள் கூறிக்கொள்வது இதுவாகத்தான் இருக்கும். ஒரு பெண்ணைக் காதலிக்கும் ஆண், அவளுடைய
காதலை அடைவதற்காக முயற்சி செய்பவன்... இதில் ஆண் சம்பந்தப்பட்டிருந்தாலும் சரி... பெண் சம்பந்தப்பட்டிருந்தாலும் சரி... பொதுவான ஒரு ஒப்பந்தம் உண்டாகத்தான் செய்யுது. ஒரு விஷயத்தை நீ கவனிக்கணும். இது உன்னைப் போன்ற ஒரு பெண்ணின் விஷயத்தில்தான்... மாறாக, துள்ளிக் குதிக்கும் ஒரு பெண்ணின் விஷயத்தில் அல்ல...”
“மிக உயர்ந்த சமூகத்தின் அங்கமாவும், சட்ட ரீதியான கூறுகள் கொண்டதாகவும் திருமணம் இருந்தாலும், அது நடக்கும் சூழ்நிலைக்கேற்றபடி மதிப்பிட்டுப் பார்க்கும்போது, என் கண்களில் அதற்குப் பல நேரங்களில் தார்மிகத் தன்மை மிகவும் குறைவாகவே இருக்கிறது.”
தான் காதலிக்காத ஒரு ஆணுடன் சட்ட ரீதியாக இணைக்கப்படும் ஒரு பெண், சுதந்திரமான இதயத்தைக் கொண்ட ஒரு பெண் தன்னைக் காதலிக்கும் ஒரு ஆணைச் சந்திக்கிறப்போ, வேறு எந்தவித தொடர்புகளும் இல்லாத அந்த ஆணுடன் இல்லற வாழ்க்கையைத் தொடர்வது சட்டப்படி இல்லையென்றாலும், சமூகத் தன்மை கொண்ட ஒன்றுதான் அதுவும். மேயருக்கு முன்னால் முழுமையான சம்மதத்துடன் உண்டாக்கப்படும உறவைவிட பலமானதாக இருக்கும் அது.
அந்த ஆணும் பெண்ணும் முழுமையான உண்மைத் தன்மையுடன் இருப்பார்களேயானால், அந்த உறவு ஆழமானதாகவும், நலம் விளைவிக்கக் கூடியதாகவும், உண்மையான உணர்வு கொண்டதாகவும் இருக்கும்.
ஆனால், அந்தப் பெண் எல்லாவற்றையும் புரிந்து கொள்கிறாள். அவள் தன்னுடைய எல்லாவற்றையும்... இதயம், மனம், ஆன்மா, உடல் எல்லாவற்றையும் அந்த ஆணுக்கு சமர்ப்பணம் செய்வதாலும், எதையும் தியாகம் செய்ய அவள் தயாராகிறாள் என்பதாலும், எதையும் நேருக்கு நேர் சந்திக்கக் கூடிய தைரியம் அவளிடம் இருப்பதாலும் - அவளைக் கொல்வதற்கு உரிமை இருக்கும் கணவரையும், கண்டிக்க உரிமை கொண்ட சமூகத்தையும் - அந்தப் பெண் எல்லா ஆபத்துகள் நிறைந்த சாத்தியங்களையும் தன் கையில் எடுக்கிறாள். அதனால் தான் தன்னுடைய இல்லற நம்பிகையில், அவள் இந்த அளவிற்கு தைரியம் உள்ளவளாக இருக்கிறாள். அதனால்தான் அவளுடைய காதலன், அவளை வரவேற்கிற அதே நேரத்தில், எதிர்காலத்தில் நடக்கலாம் என்று இருக்கும்
பிரச்சினைகளைக்கூட முன்கூட்டியே பார்க்கிறான். எனக்கு இதற்குமேல் கூறுவதற்கு எதுவும் இல்லை. ஒரு பக்குவப்பட்ட மனதைக்கொண்ட மனிதனைப் போல நான் உனக்கு முன் கூட்டியே எச்சரித்தேன்... அது என்னுடைய கடமையாக இருந்தது. இனி... இப்போது ஒரு ஆண் மட்டுமே எனக்குள் எஞ்சி இருக்கிறான் - உன்னைக் காதலிக்கும் காதலன். சொல்லு... நான் என்ன செய்யணும்?”
சந்தோஷம் பளிச்சிடும் முகத்துடன் எழுந்து, தன்னுடைய உதடுகளால் அவருடைய உதடுகளைக் கவ்விய அவள் மெதுவான குரலில் சொன்னாள்:
“அது உண்மையில்லை டார்லிங்! அப்படியொரு சம்பவமே நடக்கல... என் கணவருக்கு என்மீது எந்தவொரு சந்தேகமும் இல்லை. ஆனால், நீங்க எனன் சொல்வீங்கன்னு, செய்வீங்கன்னு தெரிஞ்சிக்க நான் ஆசைப்பட்டேன். உங்களிடமிருந்து நான் ஒரு புத்தாண்டு பரிசை விரும்பினேன். உங்களுடைய இதயத்திலிருந்து வரக்கூடிய பரிசு... நீங்கள் சமீபத்தில் எனக்குத் தந்த வைர மாலை இல்லாமல் இன்னொரு பரிசு... நீங்க எனக்கு அதைத் தந்துட்டீங்க... நன்றி! நன்றி! நீங்க எனக்கு அளித்த சந்தோஷத்திற்கு கடவுளுக்கு நன்றி சொல்லியே ஆகணும்!”