Logo

க்ரயோஜனிக் எஞ்சின்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 6917
cryogenic engine

.எஸ்.ஆர்.ஓ திருட்டு வழக்கில் உங்கள் யாருக்குமே தெரியாத ஒரு மனிதன் சிறைக்குப் போயிருக்கிறான். அந்த ஆளின் கதைதான் இது. அந்த மனிதனின் பெயர் குட்டிகிருஷ்ணன். நம்பி நாராயணனையும், மரியம் ரஷீதையும், மற்றவர்களையும் காறித் துப்பவும், திட்டவும், முறைத்துப் பார்க்கவும் நீங்கள்கூட நினைத்திருக்கலாம். எதுவாக இருந்தாலும் உங்களுக்கு சாந்தி... ஓம் சாந்தி... சாந்தி! உங்களுக்கு இப்பொழுது பைத்தியம் எதுவுமில்லை அல்லவா? நமக்குள் பிசாசு ஓடிக்கொண்டிருந்த அந்த நாட்களில்தான் திருவனந்தபுரத்துக்காரனான குட்டிகிருஷ்ணன் என்ற நாவிதன் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் நடந்தது.

நம்பி நாராயணனின் முடியை வெட்டிக் கொண்டிருந்தது- திருவனந்தபுரம் கிழக்கு கோட்டையில் சலூன் வைத்து நடத்திக் கொண்டிருந்த குட்டிகிருஷ்ணன் என்ற மனிதன். முடி வெட்டுவதற்காக என்ற போர்வையில் நம்பி, குட்டிகிருஷ்ணனைத் தேடி அவனின் சலூனுக்கு அடிக்கடி வந்து கொண்டிருந்ததாகவும், குட்டிகிருஷ்ணனின் சவரக் கத்தியைப் பயன்படுத்தி அங்கே க்ரயோஜனிக் எஞ்சினைச் சிறுசிறு துண்டுகளாக நறுக்கி மாலி பெண்களுக்கு விற்பனை செய்ததாகவும், அதற்கு குட்டிகிருஷ்ணன் உடந்தையாக இருந்ததாகவும், தன்னுடைய வாழ்க்கை நிலைக்கு மேல் பல மடங்கு அதிகப் பணம் அவன் தவறான வழிகள் மூலம் சம்பாதித்திருக்கிறான் என்பதாகவும் அவனின் மேல் குற்றம் சாட்டப்பட்டது. ஒருநாள் ஒரு வேன் நிறைய போலீஸ்காரர்கள் குட்டிகிருஷ்ணனின் சலூன்முன் வந்து இறங்கினார்கள். கையில் துப்பாக்கிகளை உயர்த்திப் பிடித்தபடி கடைக்குள் நுழைந்தார்கள். உதவி கமிஷனர் தன் கையில் இருந்த துப்பாக்கியை நீட்டியவாறு கேட்டார்: "எங்கேடா நாயே, அந்த க்ரயோஜனிக் எஞ்சினோட மீதி பாகங்கள்?''

குட்டிகிருஷ்ணன், கணபதி கோவிலில் தேங்காய் விற்பனை செய்யும் மனிதனுக்கு அப்போது முடிவெட்டிக் கொண்டிருந்தான். போலீஸ்காரர்களைப் பார்த்ததும் பதறிப்போன தேங்காய் வியாபாரி, விழுந்தடித்துக்கொண்டு ஓடி கணபதி கடவுளின் காலில் சரணம் புகுந்தான். அதனால் அவனுக்கு எந்தவித கேடும் உண்டாகவில்லை. குட்டிகிருஷ்ணன் "கிடுகிடு"வென்று நடுங்கியவாறு சொன்னான்: "எஜமான், நீங்க சொல்ற மாதிரி அப்படி ஒரு இயந்திரம் எதுவும் இங்கே இல்ல...'' அடுத்த நிமிடம் உதவி கமிஷனர் ஒரு போலீஸ்காரனின் துப்பாக்கியை வாங்கி, அதை ஓங்கி சலூனில் இருந்த கண்ணாடி மேலும், குட்டிகிருஷ்ணனின் தலையிலும் அடித்தார். பிறகு அவர் சொன்னார்: "ராஜத்துரோகி, நீ இன்னைக்குப் பத்திரிகை படிச்சியா இல்லியா?'' ஒரு மூலையில் என்னவோ பாடிக்கொண்டிருந்த மர்பி ரேடியோவைச் சுட்டிக் காட்டியவாறு ஒரு கான்ஸ்டபிள் சொன்னான்: "தப்பான வழிகள்ல பணம் சம்பாதிச்சதுல வாங்கினதாகத்தான் இருக்கும் இந்த ரேடியோவும்.''

"அந்த ரேடியோவை இங்கே எடு.'' ஏ.ஸி. உரத்த குரலில் சத்தமிட்டார்.

அவ்வளவுதான். அந்த கான்ஸ்டபிள் ஓடி வந்து அந்த மர்பி ரேடியோவைத் தூக்கினான். குட்டிகிருஷ்ணன் அதற்கு அத்தாட்சியாக கைநாட்டு வைத்தான்.

ஐந்தாம் நாள் மேஜிஸ்ரேட் நீதிமன்றத்திற்கு குட்டிகிருஷ்ணனை அழைத்து வந்தபோது, அவன் கை- கால், நகங்கள், புருவங்கள், முலைக்கண்கள், பிறப்பு உறுப்பு, மலத்துவாரம்- எல்லா இடங்களிலும் காயங்கள். நம்பிநாராயணன், சசிகுமாரன்- இரண்டு பேருடனும் கூட்டுச் சேர்ந்து க்ரயோஜனிக் இயந்திரத்தைத் துண்டு துண்டாகப் பிரித்து மாலி பெண்கள் மூலமாக பாகிஸ்தானுக்கு தான் விற்றதாக தானே குற்றத்தை ஒப்புக்கொண்டு கையெழுத்துப் போட்டிருந்தான் குட்டிகிருஷ்ணன். அதற்கு விலையாக தனக்குக் கிடைத்த ஏழு கோடி ரூபாயில் வாங்கியதுதான் நான்கு வால்வுகள் கொண்ட மர்பி ரேடியோ என்று குட்டிகிருஷ்ணன் ஒப்புக்கொண்டிருந்தான். மீதிப்பணத்தை வைத்து திருவனந்தபுரத்தில் ஒரு பால் பண்ணையும், பல் மருத்துவக் கல்லூரியும், திருநெல்வேலியில் காற்றாடி மின் உற்பத்தி நிலையமும், டெல்லியில் டிஸ்கொத்தேவும் ஆரம்பிக்கத் திட்டமிட்டிருந்ததாகக் குட்டிகிருஷ்ணன் சொன்னான். பிறகென்ன? அவனை சிறைக்குக் கொண்டு போனார்கள்.

ஆனால், பிரபல மலையாளப் பத்திரிகைகளில் பணிபுரியும் பலருக்கும் குட்டிகிருஷ்ணன் காசு எதுவும் வாங்காமல் இலவசமாக சவரம் செய்திருப்பதால், அவர்கள் அவன் கைது செய்யப்பட்டதையோ, சிறைத்தண்டனை பெற்றிருப்பதையோ தங்களின் அன்றாட திரைக்கதைகளில் சேர்க்கவில்லை. நன்றி உணர்வு கொஞ்சம் இருந்ததால், குட்டிகிருஷ்ணன் விஷயத்தை அவர்கள் வேண்டுமென்றே கண்டுகொள்ளவில்லை. குட்டிகிருஷ்ணன் ஒரு போராளி என்று ஒரே ஒரு பத்திரிகை மட்டும் கட்டுரை எழுதியிருந்தது. அந்தப் பத்திரிகை குட்டிகிருஷ்ணன் உறுப்பினராக இருக்கும் கட்சிக்கென்று இருக்கும் பத்திரிகை. அந்தப் பத்திரிகையும் கருணை மனம் கொண்டு அவனின் கைது படலத்தையும், சிறை வாசத்தையும் பொதுமக்கள் பார்வையில் படாமல் பார்த்துக் கொண்டது. விளைவு- குட்டிகிருஷ்ணன் ஒரு கதாநாயகனாக நான்கு பேருக்குத் தெரிகிற மாதிரி இல்லாமல் போனான். அதனால் குட்டிகிருஷ்ணனை அடிப்பதற்கோ, உதைப்பதற்கோ, திட்டுவதற்கோ, முறைத்துப் பார்ப்பதற்கோ, கல்லைவிட்டு எறிவதற்கோ உங்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.

தான் அடைக்கப்பட்டிருந்த சிறை அறையின் ஒரு மூலையில் சுருண்டு படுத்தவாறு குட்டிகிருஷ்ணன் தன் உடம்பில் காயம் பட்டு மரத்துப் போயிருக்கும் உறுப்புகளைத் தொட்டுப் பார்த்தான். தன்னை இவர்கள் இனியும் உயிரோடு விட்டு வைப்பார்களா என்று ஒரு நிமிடம் அவன் சிந்தித்துப் பார்த்தான். "இனியும் நான் கத்திரியையும் சீப்பையும் கையில வச்சுக்கிட்டு கைரளி கட்டிங் சலூன்ல நிற்க வாய்ப்பு இருக்கா? என்னோட மனைவியும், குழந்தைகளும் இப்போ என்ன பண்ணிக்கிட்டு இருப்பாங்க? அந்த ரேடியோ இப்போ எங்கே இருக்கும்? என்னோட அப்பா ஐம்பது வருஷங்களுக்கு முன்னாடி வரதட்சணை வாங்குறப்போ கொண்டு வந்த ரேடியோ அது. கண்ணாடியை போலீஸ்காரங்க அடிச்சு உடைச்சிட்டாங்க. அதே மாதிரி ஒரு கண்ணாடியை இப்போ வாங்குறதுக்கு கையில காசு இல்லியே! ஆனால், நான் சலூனுக்கு இன்னொரு முறை போவேனா?" இப்படிப்பட்ட பலவித சிந்தனைகளுடன் இருந்த குட்டிகிருஷ்ணன் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டவாறு தன் கண்களை மூடினான்.

குட்டிகிருஷ்ணன் ஒரு கனவு கண்டான். அந்தக் கனவில், அவன் சலூனில் இருக்கும் நாற்காலியில் தங்கத்தாலான ஒரு இயந்திரம் இருக்கிறது. அதில் குழாய்களும், பற்களாலான சக்கரங்களும், ஓட்டைகளும், நீளமான கண்ணாடிக் குழாய்களும், கண்சிமிட்டிக் கொண்டிருக்கும் வண்ண விளக்குகளும் இருக்கின்றன. அந்த இயந்திரம் இப்போது அழுகிறது. தேம்பித் தேம்பி அழுதவாறு இயந்திரத்தை பச்சை, சிவப்பு வண்ணங்களில் உள்ள தன் கண்களால் குட்டிகிருஷ்ணன் பார்க்கிறான். அடுத்த நிமிடம் அவன் கத்திரியையும் சீப்பையும் கீழே வைத்துவிட்டு, அந்த இயந்திரத்தைக் கட்டிப்பிடித்துக் கொண்டு முத்தம் தருகிறான். "அழாதே மகனே...'' குட்டிகிருஷ்ணன் சொல்கிறான். அப்போது அறை முழுக்க ஒரு தங்க நிற வெளிச்சம் பரவுகிறது. இயந்திரம் குட்டிகிருஷ்ணனிடம் சொல்கிறது: "நான் உன்னில் கலந்திருக்கிறேன்.''


சொல்லிவிட்டு ஜன்னல் வழியாக ஆகாயத்தை நோக்கி அது பறந்துபோகிறது. சற்று தூரத்தில் "சொர்க்கம்" என்று எழுதப்பட்டிருக்கும் கதவுகள் தானே திறப்பதையும், இயந்திரம் அந்த வாசல் வழியே நுழைந்து மறைவதையும் குட்டிகிருஷ்ணன் இங்கிருந்தபடியே பார்க்கிறான். திடீரென்று ஒரு சத்தம். என்னவென்று அவன் திரும்பிப் பார்த்தால், அறை நிறைய போலீஸ்காரர்கள். குட்டிகிருஷ்ணன் சொர்க்கத்தின் வாசலை நோக்கி இரண்டு கைகளையும் மேல் நோக்கி உயர்த்தியவாறு உரத்த குரலில் சத்தமிடுகிறான்: "என்னைக் காப்பாத்துங்க...'' இயந்திரம் சொர்க்கவாசல் அருகில் மீண்டும் தெரிகிறது. ஒரு நீளமான கதிர் அதில் இருந்து புறப்பட்டு குட்டிகிருஷ்ணன் மேல் பட்டு, அது அவனை சொர்க்கத்தை நோக்கி அழைத்துக் கொண்டு போகிறது.

சாயங்காலம் ஆனபிறகும் குட்டிகிருஷ்ணன் சுருண்டு படுத்திருப்பதைப் பார்த்து மைலாடி பாப்பன் என்ற கார் திருடன் அவனைத் தட்டி எழுப்பினான். குட்டிகிருஷ்ணன் எழுந்ததும், அவனைப் பார்த்துச் சொன்னான்: "அடி கிடைக்கிறப்போ இந்த மாதிரிதான். ஒண்ணு செய். கொஞ்சம் உன்னோட மூத்திரத்தைக் குடிச்சுப் பாரு. உடம்பெல்லாம் மூத்திரத்தைத் தேய்ச்சுவிடு. உடம்பு வலிக்கு அதுதான் சரியான மருந்து.''

குட்டிகிருஷ்ணன் உட்கார்ந்து உள்ளங்கையில் சிறுநீர் கழிக்க முயன்றான். அவன் முகம் வேதனையால் அஷ்டகோணலாகியது. மூத்திரத்திற்கு பதிலாக கொஞ்சம் இரத்தத் துளிகள்தான் கையில் வந்து விழுந்தன. பாப்பன் அவனைப் பார்த்துப் பரிதாபப்பட்டு தலையை ஆட்டினான். பிறகு அவன் சொன்னான்:

"இங்க வா... நான் மூத்திரம் தர்றேன். வாழ்க்கையில நாம வாழ்றதே ஒரே ஒரு முறைதான்...''

மூத்திர சிகிச்சை முடிந்தபிறகு, குட்டிகிருஷ்ணனுக்கு கொஞ்சம் உற்சாகம் வந்தது மாதிரி இருந்தது. மைலாடி பாப்பனும், தோப்பும் படி குட்டப்பனும், ரட்சகன் அப்புவும், பிணம் தின்னி ஸ்ரீனியும் சேர்ந்து குட்டிகிருஷ்ணனைப் பார்த்துக் கேட்டார்கள்: "எப்படி நீ உள்ளே வந்தே? சரியான அடி கிடைச்சிருக்கும்போல இருக்கே! சரி... உன்னோட பேர் என்ன?''

குட்டிகிருஷ்ணன் பேசுவதற்காக வாயைத் திறந்தான். ஆனால், முகத்திலும், தலையிலும் இருந்த நரம்புகள் அறுந்துவிடுகிற அளவிற்கு முறுக்கேறி நின்றன. அவனால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. மயக்கமடைந்து "மடார்" என கீழே விழுந்தான். பாப்பன் நண்பர்களைப் பார்த்துச் சொன்னான்: "சரியான அடி விழுந்ததுதான் காரணம். காலையில பிணத்தை எடுக்குறதுக்கு தயாரா இருந்துக்கோ...''

அன்று இரவு தங்கத்தால் செய்யப்பட்ட இயந்திரம் மீண்டும் குட்டிகிருஷ்ணன்முன் தோன்றியது. அவன் அடைக்கப்பட்டிருந்த சிறை அறையின் இரும்புக் கம்பிகள் வழியே அது ஒளி வீசிக்கொண்டு உள்ளே வந்தது. அது குட்டிகிருஷ்ணனைப் பார்த்துச் சொன்னது: "உன்னை நான் காப்பாத்துறேன். நீ பயப்படாதே. எல்லா விஷயங்களையும் உனக்கு நான் சொல்லித் தர்றேன். நான் என்ன சொல்றேனோ அதை செஞ்சா போதும்.'' இதைக் கேட்டதும் குட்டி கிருஷ்ணன் மகிழ்ச்சியுடன் தலையை ஆட்டினான். இயந்திரம் சொன்னதையெல்லாம் காது கொடுத்துக் கேட்டான்.

மறுநாள் பாப்பனும் அவனது நண்பர்களும் பிணத்தைப் பார்க்கப் போகிறோம் என்ற எண்ணத்துடன் தூக்கத்தை விட்டு எழுந்திருக்க, குட்டிகிருஷ்ணன் சிறைக்கம்பிகள் வழியாக வெளியே பார்த்தவாறு நின்றிருந்தான். அவன் திரும்பி நின்று அவர்களைப் பார்த்துச் சொன்னான்: "நான் நீங்க தூக்கம் கலைஞ்சு எந்திரிக்கிறதுக்காகக் காத்திருந்தேன். இங்கே இருந்து தப்பிக்க என்கிட்ட ஒரு வழி இருக்கு. நான் உண்மையில் யார்னு உங்களுக்குத் தெரியுமா?''

அவர்கள் சொன்னார்கள்: "இல்ல..''

குட்டிகிருஷ்ணன் சொன்னான்: "இந்தியாவுல எல்லா ராக்கெட்டுகளையும் கட்டுப்படுத்துற விஞ்ஞானி நான். ஒரு ரகசிய தேடலுக்காக நாவிதனா நான் நடிச்சுக்கிட்டு இருக்க, என்னோட விரோதிகள் எப்படியோ அதைக் கண்டுபிடிச்சு, இங்க கொண்டுவந்து சேர்த்துட்டாங்க. என்னைக் காப்பாத்துறதுக்கு இன்னைக்கோ இல்லாட்டி நாளைக்கோ நிச்சயம் ஒரு ராக்கெட் வரும். தங்கத்தாலான இயந்திரத்தைக் கொண்ட ராக்கெட். நான் அதுல ஏறிப் பறந்து போயிடுவேன். நீங்க யாராவது என்கூட வர்றதா இருந்தா இப்பவே சொல்லிடுங்க. மூத்திரம் தந்து என்னைக் காப்பாத்தினதுக்கு நான் உங்கமேல என்றைக்குமே நன்றி உள்ளவனா இருப்பேன்.''

அவர்களுக்கு குட்டிகிருஷ்ணன் சொன்ன விஷயம் சரியாக மனதில் ஏறவில்லை. மைலாடி பாப்பன் கேட்டான்: "தங்கத்தாலான இயந்திரத்துக்கு பெட்ரோல் போடுறீங்களா இல்லாட்டி டீஸலா?''

குட்டிகிருஷ்ணன் சொன்னான்: "ரெண்டுமே இல்ல... பண்ணையிலிருந்து கொண்டு வர்ற பால்தான் அதுல ஊத்தப்படுது. தங்கத்துக்கு அதுதான் சரியா இருக்கும்.''

பாப்பன் வாகனங்களைப் பற்றிய தன்னுடைய அறிவை வைத்துக் கொண்டு கேட்டான்: "ஆமா... இது என்ன எஞ்சின்? மெட்டடோரா? இல்லாட்டி மஹேந்திராவா?''

குட்டிகிருஷ்ணன் சொன்னான்: "கரையிற எஞ்சின் அப்படின்னு தான் இதை எல்லாரும் சொல்றாங்க. இதோட உண்மையான பேரு யாருக்கும் தெரியாது. அது விஞ்ஞான ரகசியம்...''

குட்டிகிருஷ்ணனை போலீஸ்காரர்கள் மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றபோது பாப்பன் மற்றவர்களிடம் கேட்டான்: "நாமளும் இது என்னன்னு பார்த்திடுவோமா?''

அவர்கள் அரை சம்மதத்துடன் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தார்கள். ரட்சகன் அப்பு சொன்னான்: "பிடிபட்டா ரெண்டு அடி கிடைக்கும். இல்லாட்டி நாம பறந்துபோயிடலாம்...''

"இந்த ஆளு போகிற இடத்துக்கு நம்மளையும் அழைச்சிட்டுப் போவாரா? இல்லாட்டி பாதி வழியிலேயே இறக்கிவிட்டுடுவாரா?''

"ஆமா...இந்த ஆளு எங்கே போறாரு?'' ஸ்ரீனி கேட்டான்.

"என்ன இருந்தாலும் போறது ராக்கெட்ல ஆச்சே! அமெரிக்கா இல்லாட்டி ரஷ்யாவுக்கா இருக்கும்! இல்லாட்டி டெல்லியாகூட இருக்கலாம்.'' மைலாடி பாப்பன் சொன்னான்.

"இருந்தாலும்... பாலை ஊத்தி எஞ்சினை ஓட வைக்க முடியுமா என்ன?'' அப்பு கேட்டான்.

"ராக்கெட்டைப் பத்தின விஷயமா இருக்குறதால அதைப்பத்தி எனக்கு சரியா தெரியாது. என்ன இருந்தாலும் எவ்வளவு பெரிய விஞ்ஞானி! சும்மா சொல்வாரா என்ன?'' கார் திருடன் சொன்னான்.

"போற இடம் அமெரிக்காவா இருந்தா, நல்லா இருக்கும்...'' பிணம் தின்னி சொன்னான்.

"பாகிஸ்தான்லயோ இல்லாட்டி அது பக்கத்துல இருக்குற ஏதாவதொரு நாட்லயோ போய் விழாம இருந்தா நம்ம அதிர்ஷ்டம். நீ பாட்டுக்குப் பெருசா கனவு காணாதே!'' ரட்சகன் சொன்னான்.

"நாம இந்த ஆளுக்கு மூத்திரம் தந்தது எவ்வளவு நல்லதாப் போச்சு.'' மைலாடி பாப்பன் சொன்னான்.

அது சுய தம்பட்டம் என்றாலும்கூட, மற்றவர்கள் "ஆமாம்" என்று தலையாட்டி வைத்தார்கள். மருத்துவப் பரிசோதனை முடிந்து குட்டிகிருஷ்ணன் திரும்பி வந்தபோது, அவனை இரண்டு போலீஸ்காரர்கள் தாங்கிப் பிடித்திருந்தார்கள். மூக்கிலும் வாயிலும் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. உடம்பில் பல இடங்களில் காயங்களும், சிராய்ப்புகளும் இருந்தன. அவனது ஒரு கை ஒடிந்து தொங்கிக் கொண்டிருந்தது.


"இங்குள்ள வைத்தியர்கள்தான் பரிசோதனை செஞ்சிருக்காங்க...'' பாப்பன் சொன்னான்.

யாருமே ஒன்றும் பேசாமல் மவுனமாக நின்றிருந்தார்கள்.

அவர்கள் ராக்கெட் வருமா வராதா என்பதைப் பற்றி ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்த்தார்கள். பிறகு என்ன நினைத்தார்களோ, அந்தச் சிந்தனையை விட்டு அகன்றார்கள்.

பிணம் தின்னி சொன்னான்: "மூத்திரத்தைக் கொடுத்துப் பார்ப்போமா? ஒருவேளை ஆயுள் பலமா இருந்தா பிழைச்சுக்கலாம்ல...''

அவர்கள் நான்கு பேரும் மூத்திரத்தைப் பெய்து தங்களாலான விதத்தில் குட்டிகிருஷ்ணனுக்குச் சிகிச்சை செய்தார்கள்.

சிறிதுநேரம் சென்றதும், குட்டிகிருஷ்ணன் எழுந்து உட்கார்ந்தான். வெளியே தள்ளிக்கொண்டிருந்த வலது கண்ணாலும், ரத்தம் கட்டிக் கொண்டிருந்த இடது கண்ணாலும் அவர்களை அவன் பார்த்தான். பிறகு என்ன நினைத்தானோ, கஷ்டப்பட்டு தானாகவே அவன் எழுந்து நின்றான்.

"எப்படியோ ஆள் பிழைச்சாச்சு...!'' பாப்பன் சொன்னான்.

ஆனால், குட்டிகிருஷ்ணன் அவர்களைக் கண்டுகொள்ளவே இல்லை. அவன் பறக்கப் போவதைப்போல இரண்டு கைகளையும் இருபக்கங்களிலும் நீட்ட முயற்சித்தான். ஒடிந்து போயிருந்த கை அசைக்கவே முடியாமல் தொங்கிக் கொண்டிருந்தது. இன்னொரு கையை நடுங்கியவாறு நீட்டினான்.

குட்டிகிருஷ்ணனின் நசுங்கிப்போயிருந்த கண்களில் ஒரு பிரகாசம் தெரிந்தது.

"ராக்கெட் வந்திருச்சு...!'' குட்டிகிருஷ்ணன் சொன்னான்: "கரையிற இயந்திரம் என்னைக் கூப்பிடுது!''

மைலாடி பாப்பனும், அவனின் நண்பர்களும் ஆர்வத்துடன் சிறைக்கூடத்தைச் சுற்றிலும் பார்த்தார்கள். குட்டிகிருஷ்ணன் அடுத்து என்ன செய்யப்போகிறான் என்பதை எதிர்பார்த்து அவர்கள் காத்திருந்தார்கள். தூரத்தில் இருந்து ஏதாவது ஒலியோ, இரைச்சலோ கேட்கிறதா என்று தங்களின் காதுகளைத் தீட்டிக்கொண்டு அவர்கள் நின்றிருந்தார்கள்.

குட்டிகிருஷ்ணன் நெஞ்சம் நிறைய புன்னகைத்தவாறு தங்கத்தாலான ராக்கெட்டில் பறக்க ஆரம்பித்தான்.

பாப்பனும், அவனது நண்பர்களும் ஓடிச்சென்று பிடிப்பதற்குள் குட்டிகிருஷ்ணன் ராக்கெட்டில் பறக்கிறேன் என்று முன்னோக்கிப் பாய்ந்தான். அடுத்த நிமிடம் தலை குப்புற விழுந்து இறந்தான்.

"கஷ்டம்...'' ரட்சகன் அப்பு சொன்னான்: "இந்த ஆளு உண்மையிலேயே நல்ல ஆளுன்னு நினைக்கிறேன்...'' பாப்பன் பாரா பார்க்கும் ஆளைக் கூப்பிடுவதற்காகப் போனான்.

கடவுள் நம்பிக்கை கொண்ட பிணம் தின்னி சொன்னான்: "ஓம் சாந்தி... சாந்தி... சாந்தி...!''

"இந்த ஆளைத் தேடி ராக்கெட் இனிமேல் வருமோ?''  தோப்பும்படி குட்டப்பன் பொதுவாகக் கேட்டான்.

"ஏய்... அந்தப் பிரச்சினையே இப்போ இல்ல... இந்த ஆளு செத்துப்போன விஷயம் ஏற்கெனவே அவங்களுக்குத் தெரிஞ்சு போயிருக்கும். எல்லாமே ரகசிய காரியங்கள்தானே?'' ரட்சகன் சொன்னான்.

குட்டிகிருஷ்ணன் உறுப்பினராக இருக்கும் பத்திரிகையின் முதல் பக்கத்தில் ஒரு வாரம் கழித்து இப்படியொரு செய்தி பிரசுரமாகியிருந்தது: "கிழக்குகோட்டை கைரளி கட்டிங் சலூன் உரிமையாளரான தோழர் குட்டிகிருஷ்ணன் (வயது 49) காலமானார். அவர் கட்சியின் ஆயுள் உறுப்பினராக இருந்தார். அவருக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள். அவரின் தந்தை கொச்சு நாராயணன் (வயது 78) கட்சியின் ஆரம்ப காலத் தொண்டராக இருந்தவர். உடல் அடக்கம் நடந்து முடிந்தது."

மற்ற பத்திரிகைகள் குட்டிகிருஷ்ணன் மரணமடைந்த விஷயத்தை அறிந்திருக்கவே இல்லை. இலவச சவரம் செய்வதற்காகப் போன பத்திரிகையாளர்கள், எந்நேரமும் பூட்டப்பட்டுக் காணப்பட்ட சலூனைப் பார்த்து ஒருவித கேள்விக்குறியுடன் திரும்பிப்போவது அன்றாடம் நடந்து கொண்டிருக்கும் ஒரு காட்சியாக இருந்தது.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.