Logo

வெள்ளப்பெருக்கு

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 7755
vellaperukku

கிராமத்திலேயே சற்று மேடான இடம் கோவில் இருக்கும் இடம்தான். அங்கு கழுத்து வரை இருக்கும் நீருக்குள் கடவுள் நின்றிருந்தார். வெள்ளம்! கடவுளைச் சுற்றிலும் எங்கு பார்த்தாலும் நீர் மயம்! ஊரில் இருந்த ஒவ்வொருவரும் கரையைத் தேடிப் போய்விட்டார்கள். வீட்டுக் காவலுக்கு என்று ஒரு ஆளை வைத்துவிட்டுப் போய்விட்டார்கள். வீட்டில் படகு இருக்கிறதா என்றால் இருக்கிறது. கோவிலைச் சேர்ந்த மூன்று அறைகள் கொண்ட கட்டடத்தில் 67 குழந்தைகள் இருந்தார்கள். 356 ஆட்கள் இருந்தார்கள். நாய், பூனை, ஆடு, கோழி போன்ற வளர்ப்புப் பிராணிகளும்தான். எல்லாம் ஒற்றுமையாக இருந்தன. ஒரு சிறு சண்டைகூட இல்லை.

சேன்னப் பறையன் ஒரு இரவும் ஒரு பகலும் நீரிலேயே நின்றிருந்தான். அவனிடம் படகில்லை. அவன் முதலாளி உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு முன்கூட்டியே கரையைத் தேடிப் போய்விட்டார். முதலில் வீட்டுக்குள் தண்ணீர் புகத் தொடங்கும் போதே தென்னங்கீற்றையும் கம்பையும் வைத்து அவன் பரண் உண்டாக்கினான். நீர் எப்படியும் இறங்கிவிடும் என்று நினைத்து இரண்டு நாட்கள் அதிலேயே உட்கார்ந்து நேரத்தைப் போக்கினான் அவன். போதாக்குறைக்கு, நான்கைந்து வாழைக்குலைகள் வேறு அங்கு இருந்தன. அங்கிருந்து அவன் போய்விட்டால் அவற்றை நிச்சயம் ஆட்கள் திருடிக்கொண்டு போய்விடுவார்கள்.

இப்போது பரணுக்கும் மேலே முழங்கால் வரை நீர் நிறைந்திருந்தது. உள்ளே இருந்தவாறு சேன்னன் அழைத்தான். அவன் அழைப்பதை யார் கேட்பது? கேட்பதற்குத்தான் பக்கத்தில் யார் இருக்கிறார்கள்? கர்ப்பமாக இருக்கும் ஒரு பறைச்சி, நான்கு குழந்தைகள், ஒரு பூனை, ஒரு நாய்- இத்தனை உயிர்களும் அவனை நம்பித்தான் இருந்தன. வீட்டுக்கு மேலே நீர் வர இன்னும் சிறிது நேரமே ஆகும் என்பதையும்  தன் குடும்பத்தின் இறுதி நிமிடம்  நெருங்கிவிட்டது என்பதையும் அவனால் உணர முடிந்தது. பலமாக மழை பெய்ய ஆரம்பித்து இன்றோடு மூன்று நாட்கள் ஆகிவிட்டன. கூரையின் ஓலையைப் பிரித்து கீழே இறங்கிய சேன்னன் சுற்றிலும் பார்த்தான். வடக்கு திசையில் ஒரு படகு போய்க் கொண்டிருந்தது. உரத்த குரலில் சேன்னன் பறையன் அழைத்தான். அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். அவன் அழைத்தது படகில் இருந்தவர்களுக்குக் கேட்டது. அவர்கள் படகைக் குடிசை இருக்கும் பக்கம் திருப்பினார்கள். குழந்தைகளையும் மனைவி யையும் நாயையும் பூனையையும் வீட்டினுள்ளிருந்து ஒவ்வொருத் தராக சேன்னன் வெளியே இழுத்தான். அவர்கள் வெளியே வரவும் படகு வந்து சேரவும் சரியாக இருந்தது.

குழந்தைகள் படகில் ஏறிக் கொண்டிருந்தார்கள். “சேன்னச்சா... இங்க பாருங்க.'' மேற்குப் பக்கத்திலிருந்து யாரோ அழைத்தார்கள். சேன்னன் திரும்பிப் பார்த்தான். “இங்க வாங்களேன்.'' அழைத்தது மடியத்தரை குஞ்ஞேப்பன். அவன் தன்னுடைய வீட்டின் முன்னால் நின்று உரத்த குரலில் அழைத்தான். மிகவும் வேகமாகத் தன்னுடைய மனைவியைப் படகில் ஏற்றினான் சேன்னன். அதே நேரத்தில் பூனையும் படகுக்குள் தாவிக் குதித்தது. நாயை எல்லாருமே மறந்துவிட்டார்கள். அது வீட்டின் மேற்குப் பக்கம் இங்குமங்குமாய் முகர்ந்து பார்த்தவாறு நடந்து கொண்டிருந்தது.

படகு நகர்ந்து போய்க்கொண்டே இருந்தது.

நாய் குடிசையின் மேல் பகுதிக்கு வந்தது. சேன்னன் இருந்த படகு தூரத்தில் போய்க் கொண்டிருந்தது. அது படுவேகமாக நீங்கிக் கொண்டிருந்தது. மரண வேதனையுடன் அந்த அப்பிராணி நாய் ஊளையிட ஆரம்பித்தது. ஆதரவில்லாமல் அனாதையாக நின்று கொண்டிருக்கும் ஒரு மனிதனின் குரலையொட்டி ஒற்றுமை இருக்கக் கூடிய ஒருவித சத்தத்தை அந்த நாய் உண்டாக்கியது. அதைத் கேட்பதற்கு அங்கு யார் இருக்கிறார்கள்? வீட்டின் நான்கு பக்கங்களிலும் அது ஓடியது. ஆங்காங்கே முகர்ந்து பார்த்தது.

குடிசையின் மேல் பாதுகாப்பாக அமர்ந்திருந்த ஒரு தவளை சிறிதும் எதிர்பார்க்காமல் ஒலித்த இந்தச் சத்தத்தைக் கேட்டு பயந்துபோய் நாயின் முன்னால் நீரில் நகர்ந்தது. அதைப் பார்த்த நாய் பயந்துபோய் நடுங்கியவாறு பின்னோக்கி குதித்து நீரில் உண்டான சலனத்தையே பார்த்தவாறு சிறிது நேரம் நின்றிருந்தது.

உணவுக்காக அந்த நாய் அங்குமிங்குமாய் ஓடி பரிதவித்தது. ஒரு தவளை நாயின் மூக்கில் சிறுநீர் கழித்துவிட்டு, நீருக்குள் குதித்தது. தர்மசங்கடமான நிலைக்கு ஆளான நாய் ஒருவித சத்தத்தை உண்டாக்கியவாறு தும்மியது. தலையை ஆட்டியவாறு குரைத்தது. முன்னங்கால்களில் ஒன்றால் மூக்கைத் துடைத்தது.

பயங்கரமான பேய் மழை மீண்டும் பெய்யத் தொடங்கியது. ஒரு மூலையில் தன் உடலைச் சுருக்கிக்கொண்டு அமர்ந்திருந்தது அந்த நாய். அதன் எஜமானன் அம்பலப் புழையைச் சேர்ந்து விட்டிருந்தான்.

இரவு நேரம் வந்தது. பெரிய பாம்பொன்று நீருக்குள் பாதி மூழ்கிய நிலையில் இருக்கும் அந்தக் குடிசையையொட்டி மெதுவாக ஊர்ந்து வந்து கொண்டிருந்தது. பயந்துபோன நாய் வாலைத் தாழ்த்திக் கொண்டு குரைத்தது. அதைப் பற்றி சிறிதும் கவலைப்படாத பாம்பு ஊர்ந்து போய் மறைந்தது.

கூரையின்மேல் போய் அமர்ந்து கொண்ட அந்த ஆதரவற்ற நாய் சுற்றிலும் சூழ்ந்திருந்த இருட்டைப் பார்த்து ஊளையிட்டு அழுதது. அந்த நாயின் வேதனை நிறைந்த அழுகைச் சத்தம் தூரத்தில் இருந்த இடங்கள் வரை கேட்டது. அந்த நாயின் நிலையைப் பார்த்து பரிதாபப்பட்ட வாயு பகவான் அந்த ஊளைச் சத்தத்தை எல்லா பகுதிகளிலும் கேட்கும் வண்ணம் எடுத்துச் சென்றான். வீடுகளைக் காவல் காக்கும் காவலாளிகளில் இரக்க குணம் கொண்ட சிலர், “அய்யோ... வீட்டுமேல இருந்து நாய் ஊளையிடுது'' என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள். கடற்பகுதியை அடைந் திருக்கும் நாயின் எஜமானன் இப்போது இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருப்பான். வழக்கம்போல சாப்பிடும்போது இன்றும் ஒரு உருண்டை சோற்றை அவன் அந்த நாய்க்காக உருட்டிக் கொண்டிருப்பான்.

உரத்த குரலில் சிறிதுகூட இடைவெளியின்றி சிறிது நேரம் அந்த நாய் ஊளையிட்டு அழுது கொண்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக சத்தம் குறைந்து பின்னர் இல்லாமலே ஆனது. வடக்கில் எங்கோ ஒரு  வீட்டில் அமர்ந்து அந்த வீட்டின் காவல் காரன் இராமாயணம் படித்துக் கொண்டிருந்தான். அதைக் கேட்பது மாதிரி எந்தவித சத்தமும் எழுப்பாமல் நாய் வடக்கு நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தது. பிறகு  சிறிது நேரம் கழித்து தொண்டையே கிழிந்து விடுகிற மாதிரி நாய் மீண்டும் ஊளையிடத் தொடங்கியது.

அந்த அமைதியான இரவு நேரத்தைக் கிழித்துக் கொண்டு இராமாயணம் படிப்பது மீண்டும் காற்றில் தவழ்ந்து வந்து எல்லா பக்கங்களிலும் கேட்டது.


நம்முடைய அப்பிராணி நாய் காற்றில் மிதந்து வந்த அந்த மனிதக் குரலைக் கேட்டு பல நிமிடங்கள் காது களைக் கூர்மையாக வைத்துக் கொண்டு சிறிதுகூட அசையாமல் நின்றிருந்தது. இராமாயணத்தின் வரிகள் பாடலாக காற்றோடு கரைந்து எல்லா திசைகளிலும் கேட்டது. காற்றின் ஓசையும் நீரின் அலைகள் எழுப்பும்  சத்தமும் தவிர வேறு எந்த சத்தமும் கேட்கவில்லை.

வீட்டின் மேற்கூரைமேல் ஏறி நாய் படுத்திருந்தது. "புஸ் புஸ்” என்று அது சத்தமாகக் கேட்கிற மாதிரி மூச்சு விட்டுக் கொண்டிருந்தது. அவ்வப்போது விரக்தி தோன்ற அது முணுமுணுக்கவும் செய்தது. அப்போது ஒரு மீன் நீரில் துடித்தது. வேகமாக எழுந்த நாய் அதைப் பார்த்து குரைத்தது. மற்றொரு இடத்தில் தவளை குதித்தது. ஒரு மாதிரி ஆகிவிட்ட நாய் மெதுவான குரலில் முனகியது.

பொழுது புலர்ந்தது. மெதுவான குரலில் அது அழுதது. தொடர்ந்து இதயத்தையே பிழிகிற மாதிரியான ஒரு குரலில் அந்த நாய் ஊளையிட்டது. தவளைகள் நாயையே உற்றுப் பார்த்தன. நீருக்குள் குதித்து, அதன் மேற்பரப்பில் நீந்திக் கொண்டிருக்கும் தவளைகளையே பார்த்தவாறு நாய் நின்றிருந்தது.

நீர் பரப்பிற்கு மேலே தெரிந்து கொண்டிருக்கும் ஓலையாலான கூரைகளை அது ஆவலுடன் பார்த்தது. எல்லாமே வெறுமையாய் கிடந்தன. ஒரு இடத்திலும் நெருப்பு புகைவது மாதிரி தெரிய வில்லை. தன்னுடைய உடலைக் கடித்து சுகம் காணும் ஈக்களை நாய் கடித்துத் தின்றது. தன்னுடைய பின்னங்கால்களால் தாடைப் பகுதியைச் சொறிந்து ஈக்களை விரட்டியது.

சிறிது நேரத்தில் சூரியன் தெரிய ஆரம்பித்தது. அந்த இளம் வெயிலில் நாய் படுத்து உறங்க ஆரம்பித்தது. குடிசையின் ஒரு பக்கம் வாழை இலையொன்று உரச, அந்தச் சத்தத்தைக் கேட்டு எழுந்த நாய் உரத்த குரலில் குரைத்தது.

கருமேகங்கள் சூழ, சூரியன் மறைந்தது. சுற்றிலும் இருள் வந்து படர்ந்தது. காற்று அலைகளை உண்டாக்கியது. நீரின் மேற்பரப்பில் இறந்துபோன உயிரினங்கள் மிதந்து வந்தன. நீரில் ஆடி அசைந்து வரும் அவை எல்லாப் பக்கங்களிலும் அலை பாய்ந்து போய்க் கொண்டிருந்தன. அவற்றை ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருந்த நம்முடைய நாய் முனகியது.

சற்று தூரத்தில் ஒரு சிறு படகு படுவேகமாக போய்க் கொண்டிருந்தது. நாய் எழுந்து நின்று தன்னுடைய வாலை ஆட்டியது. அந்தப் படகையே வைத்த கண் எடுக்காது பார்த்தது. சிறிது நேரத்தில் அந்தப் படகு தென்னந் தோப்புக்குள் நுழைந்து மறைந்தது.

மழை பெய்யத் தொடங்கியது. பின்னங்கால்களை மடக்கி வைத்துக் கொண்டு முன்னங்கால்களைத் தரையில் ஊன்றி உட்கார்ந்தவாறு அந்த நாய் நான்கு பக்கமும் பார்த்தது. அதன் கண்களில், பார்ப்போர் யாரையும் அழ வைக்கும் வண்ணம் ஒரு ஆதரவற்ற நிலை தெரிந்தது.

மழை நின்றது. வடக்குப் பக்கம் இருந்த வீட்டிலிருந்து வந்த ஒரு சிறு படகு மெதுவாக நகர்ந்து ஒரு தென்னை மரத்திற்குக் கீழே வந்து கொண்டிருந்தது. நம்முடைய நாய் வாலை ஆட்டிய வாறு கொட்டாவி விட்டவாறு முனகியது. படகுக்காரன் தென்னை மரத்தின்மேல் ஏறி கள்ளை எடுத்துக்கொண்டு கீழே இறங்கினான். அவன் படகில் அமர்ந்து கள்ளைக் குடித்து விட்டு, துடுப்பைப் போட்டவாறு அந்த இடத்தை விட்டு நீங்கினான்.

சற்று தூரத்திலிருந்த மரக்கிளையில் இருந்து காகம் ஒன்று பறந்து வந்து, நீரில் மிதந்து வந்து கொண்டிருந்த செத்துப் போன எருமை மாட்டின் அழுகிப்போன உடல்மீது வந்து உட்கார்ந்தது. அதைப் பார்த்து சேன்னனின் நாய் பயங்கரமாகக் குரைத்தது. அதைப் பற்றியெல்லாம் சிறிதும் கவலைப்படாத காகம் எருமையின் உடலைத் தன்னுடைய அலகால் கொத்தி மாமிசத்தைத் தின்று, பறந்து போனது.

ஒரு பச்சைக் கிளி குடிசைக்குப் பக்கத்திலேயே நின்றிருந்த வாழை மரத்தில் வந்து உட்கார்ந்து கத்தியது. அதைப் பார்த்து எரிச்சலான நாய் குரைக்க, கிளி அடுத்த நிமிடம் அங்கிருந்து பறந்து போனது.

வெள்ளத்தில் மிதந்து வந்த ஒரு எறும்புக்கூடு அந்த குடிசையில் பட்டு ஒதுங்கி எப்படியோ தப்பித்துக்கொண்டது. ஏதோ உணவுப் பொருள்தான் மிதந்து வருகிறது என்று நினைத்த நம்முடைய நாய் அதற்கு ஒரு முத்தம் கொடுத்தது. அடுத்த நிமிடம் அது தும்ம ஆரம்பித்துவிட்டது. அதன் மென்மையான மூக்கு சிவந்து தடித்தது.

பிற்பகல் நேரமானபோது ஒருசிறு படகில் இரண்டு ஆட்கள் அந்த வழியே வந்தார்கள். அவர்களைப் பார்த்து நாய் நன்றியுடன் குரைத்து தன்னுடைய வாலை ஆட்டியது. மனிதர்களின் மொழியுடன் மிகவும் நெருக்கமான மொழியில் அது என்னவோ சொல்வதைப்போல் இருந்தது. அடுத்த நிமிடம் நீருக்குள் இறங்கி படகுக்குள் குதிக்க அது தயாராக நின்றது. “அதோ ஒரு நாய் நிக்குது.'' படகில் இருந்த ஒருவன் சொன்னான். அவன் சொன்னதைப் புரிந்து கொண்டதைப்போல நன்றியை வெளிப்படுத்தும் விதத்தில் நாய் லேசான முனகியது. “அது அங்கேயே இருக்கட்டும்.'' -இன்னொரு ஆள் சொன்னான். என்னவோ சொல்ல வருவதைப்போல நாய் தன்னுடைய வாயைத் திறந்து மூடியது. ஒரு மாதிரி முனகியது. பிரார்த்தித்தது. இரண்டு முறை அது படகில் குதிக்க முயற்சி செய்தது.

படகு நாயைத் தாண்டி போய்க் கொண்டிருந்தது. நாய் மீண்டும்  ஊளையிட்டு அழுதது. படகில் இருந்த ஒருவன் திரும்பிப் பார்த்தான்.

“அய்யோ!''

அது படகில் இருந்த மனிதன் சொன்னதல்ல. நம்முடைய நாயின் குரல்தான்.

“அய்யோ!''

இதயத்தை நெகிழ வைக்கும் அந்த வேதனைக் குரல் காற்றில் மிதந்து எதிரொலித்தது. மீண்டும் நிற்காத அலைகளின் சத்தம். யாரும் அதற்குப் பிறகு திரும்பிப் பார்க்கவில்லை. அதே இடத்தில் படகு மறையும் வரை பார்த்தவாறு நாய் நின்றிருந்தது. உலகத்திடமிருந்து இறுதியாக விடை பெற்றுக் கொள்வது மாதிரி, மெதுவான குரலில் முணுமுணுத்தவாறு அது மீண்டும் குடிசையின் மேல் ஏறியது. இனியொரு முறை மனிதர்கள் மேல் அன்பு செலுத்துவதில்லை என்று அது தனக்குள் தீர்மானித்திருக்கலாம்.

குளிர்ந்த நீரை அது நக்கிக் குடித்தது. மேலே வானத்தில் பறந்து போய்க் கொண்டிருந்த பறவைகளை அந்த அப்பிராணி நாய் பார்த்தது. அலைகளோடு சேர்ந்து ஒரு தண்ணீர்ப் பாம்பு வேகமாக வந்து கொண்டிருந்தது. அவ்வளவுதான்- பயந்துபோன நாய் மீண்டும் குடிசையின் மேல்பகுதி நோக்கி ஓட ஆரம்பித்தது. சேன்னனும் குடும்பமும் வெளியேறிய பிரிக்கப்பட்ட பகுதி வழியாக அந்தத் தண்ணீர் பாம்பு உள்ளே நுழைந்தது.


நாய் அந்த ஓட்டை வழியாக உள்ளே எட்டிப் பார்த்தது. கோபத்திற்கு ஆளான அந்த நாய் குரைக்கத் தொடங்கியது. தொடர்ந்து அது மெதுவான குரலில் முனகியது. வாழ்க்கையைப் பற்றிய அச்சமும் பசியும் அந்த முனகல் சத்தத்தில் கலந்திருந்தன. எந்த மொழி பேசக் கூடிய மனிதனுக்கும் ஏன், செவ்வாய் கிரகத்திலிருந்து வருபவனுக்குக்கூட நன்றாகப் புரியக்கூடிய மொழி அது. யாருக்குத்தான் நாயின் அந்த மொழியைப் புரியாது?

இரவு வந்தது. பயங்கரமான காற்றும் மழையும் ஆரம்பித்தன. குடிசையின் மேற்கூரை அலைகள் மோதி இப்படியும் அப்படியுமாய்  ஆடியது. இரண்டு முறை நாய் உருண்டு கீழே விழப் பார்த்தது. ஒரு நீளமான தலை நீருக்கு மேலே தெரிந்தது. அது ஒரு முதலை. நாய் மனவேதனையுடன் பயங்கரமாகக் குரைத்தது. சிறிது நேரத்தில் கோழிகள்  கூட்டம் கத்தும் சத்தம் கேட்டது.

“எங்கோ நாய் குரைக்குதே! இங்கேயிருந்தவங்கதான் போயிட்டாங்களே!'' வாழை மரத்திற்குக் கீழே வைக்கோல், தேங்காய், வாழைக்குலை ஆகியவற்றை ஏற்றிக்கொண்டு ஒரு படகு வந்து கொண்டிருந்தது.

“நாய் படகில் இருக்கும் மனிதர்களுக்கு நேராகத் திரும்பி நின்று குரைக்க ஆரம்பித்தது. பயங்கர கோபத்துடன் வாலை உயர்த்திக் கொண்டு நீருக்கு அருகில் வந்து நின்று மீண்டும் குரைத்தது. படகில் இருந்த ஒருவன் வாழை மரத்தின் மேல் ஏறினான்.

“நாய் வரும்னு நினைக்கிறேன்.''

நாய் முன்னோக்கி குதித்தது. அடுத்த நிமிடம் வாழை மரத்தில் ஏறியவன் பயந்துபோய் நீருக்குள் விழுந்தான். இன்னொரு ஆள் அவனைக் கையால் பிடித்துத் தூக்கினான். படகில் ஏற்றினான். நாய் குடிசையின் கூரையின்மேல் ஏறி உடம்பைக் குலுக்கியவாறு கோபத்துடன் குரைத்தது.

திருடர்கள் வாழைக்குலை அனைத்தையும் வெட்டினார்கள். “உனக்கு வச்சிருக்கோம்பா.'' தொண்டையே கிழிகிற மாதிரி குரைத்துக் கொண்டிருந்த நாயைப் பார்த்து அவர்கள் கூறினார்கள்.

தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து வைக்கோல் முழுவதையும் படகில் ஏற்ற ஆரம்பித்தார்கள். கடைசியில் ஒருவன் குடிசையின் மேற்பகுதியில் ஏறினான். அவன் காலை நாய் கடித்தது. ஒரு வாய் நிறைய நாய்க்கு மாமிசம் கிடைத்தது. அவன் “அய்யோ!'' என்று கத்தியவாறு குதித்து மீண்டும் படகில் ஏறினான். படகில் இருந்த இன்னொருவன் கையில் இருந்த துடுப்பால் நாயை ஓங்கி அடித்தான். “ம்யாவ்! ம்யாவ்! ம்யாவ்!'' நாயின் குரல் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து ஒரு முனகலாக முடிந்தது. நாயால் கடிக்கப்பட்ட மனிதன் படகில் கிடந்து அழுதான். “பேசாம இருடா.'' இன்னொரு ஆள் சொன்னான். படகு நகர்ந்தது.

சிறிது நேரம் கழித்து படகு போகும் திசையைப் பார்த்து கோபம் மேலோங்க நாய் உரத்த குரலில் குரைத்தது.

நள்ளிரவு நேரம் ஆனது. பெரிய பசுவொன்று செத்துப் போய் நீரில் மிதந்து வந்தது. அது குடிசையின் மேல் வந்து இடித்தது. நாய் மேலே நின்றவாறு அதைப் பார்த்தது. கீழே அது இறங்கி வரவில்லை. அந்த செத்துப் போன பசு, கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து கொண்டிருந்தது. நாய் அதைப் பார்த்து முனகியது. குடிசையின் ஓலையை வாயால் அகற்றி, வாலை ஆட்டியவாறு, மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த பசுவின் இறந்தபோன உடலை நோக்கி நாய் மெதுவாக இறங்கிக் கீழே வந்தது. பசுவின் உடலைத் தன்னுடைய விருப்பப்படி அது தின்ன ஆரம்பித்தது. அதன் கடுமையான பசிக்கு விரும்பும் அளவுக்கு உணவு கிடைத்தது.

"டே!” ஒரு அடி! நாயே காணாமல் போனது. செத்துப் போன பசு நீரில் மிதந்து வேகமாகப் போக ஆரம்பித்தது.

காற்று வீசும் சத்தமும் தவளைகளின் ஓசையும் அலைகளின் சத்தமும் தவிர வேறு எந்த ஒலியும் அந்த இரவு நேரத்தில் கேட்கவில்லை. ஒரே நிசப்தம். இதயமுள்ள வீட்டுக் காவல்காரன் அதற்குப் பிறகு நாயின் அவலக் குரலைக் கேட்கவில்லை. அழுகிப் போன பிணங்கள் அந்த நீர்ப்பரப்பில் ஆங்காங்கே மிதந்து வந்து கொண்டிருந்தன. காகங்கள் சில பிணங்களின்மேல் அமர்ந்து அவற்றைக் கொத்தித் தின்றன. அவற்றின் செயலை எந்த ஓசையும் கெடுக்கவில்லை. திருடர்களும் தங்கள் தொழிலை எந்தவித தொந்தரவும் இல்லாமல் செய்ய முடிந்தது. அமைதி... பயங்கர அமைதி!

சிறிது நேரம் கழித்து அந்தக் குடிசை கீழே விழுந்தது. அது நீரில் மூழ்கியது. பரந்து கிடந்த நீர்ப் பரப்பிற்கு மேலே எதுவும் தெரியவில்லை. தன்னுடைய எஜமானனின் வீட்டை தான் மரணம் அடையும் வரை அந்த நன்றியுள்ள நாய் காத்து நின்றது. அது மரணத்தைத் தழுவிவிட்டது. அந்த நாய்க்காக- அது முதலையிடம் கிடைக்கும் வரை அந்தக் குடிசை நீருக்கு மேலேயே நின்றிருந்தது. சிறிது நேரத்தில் அந்தக் குடிசை நீருக்குள் மூழ்கிக் காணாமலே போனது.

நீர் இறங்கத் தொடங்கியது. சேன்னன் நீந்தியவாறு நாயைத் தேடி  குடிசையை நோக்கி வந்து கொண்டிருந்தான். ஒரு தென்னை மரத்திற்குக் கீழே நாயின் செத்துப் போன உடல் கிடந்தது. அலைகள்  அதை அவ்வப்போது வந்து தொட்டு அசைத்துக் கொண்டிருந்தன. நாயையே உற்று பார்த்தான் சேன்னன். அது தன்னுடைய நாய்தானா என்று அவனுக்கே சந்தேகமாக இருந்தது. நாயின் ஒரு காது கிழிந்து போயிருந்தது. உடல் அழுகிப் போயிருந்ததால், அதன் நிறம் என்னவென்பது சரியாகத் தெரியவில்லை.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.