Logo

சித்திக்கி

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 6503
siththiki

ன்னுடைய ஆப்ரிக்க பயணத்திற்கு மத்தியில் உண்டான சில சுவாரசியமான அனுபவங்களுக்குள் அடங்கிய ஒரு கதை இது.

தெற்கு ரொடேஸியாவில் இருக்கும் "புலாவாயோ”வில் இருந்து போர்த்துக்கீசிய கிழக்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் "பைரா”விற்கு திரும்பிச் சென்ற பயணத்தின்போது, புகைவண்டியில் நான் மிஸ்டர் சித்திக்கியுடன் அறிமுகமானேன். வழியில் ஏதோ ஒரு மலைச்சரிவில் இருந்து புகைவண்டி நிலையத்திலிருந்து சற்று கரடுமுரடாக குள்ளமாக இருந்த மனிதர், தனக்குப் பின்னால் ஒரு கறுப்பின மனிதன் ஆறு பெட்டிகளையும் தூக்கிக் கொண்டு வர, என்னுடைய அறைக்குள் நுழைந்தார்.

ஒரே பார்வையில் அவர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்பதைத் தெரிந்துகொண்டேன்.

நீண்ட ஆப்ரிக்க புகைவண்டிப் பயணங்களில் சக பயணியாக ஒரு இந்தியாவைச் சேர்ந்த மனிதரைச் சந்திப்பது என்பது நல்ல ஒரு விஷயமாகப்பட்டது. பெரும்பாலும் அப்படி வழியில் இருக்கும் புகை வண்டி நிலையங்களில் ஏறக்கூடிய இந்தியர்கள் ஆங்கிலத்தில் உரையாடவோ நாகரீகமான முறையில் நடக்கவோ செய்யாத குஜராத்தி வர்த்தகர்களாக இருப்பார்கள். ஒரு மூலையில் தனியாக உட்கார்ந்து கொண்டு தாளையும் பென்சிலையும் வைத்துக்கொண்டு கணக்கு கூட்டிக் கொண்டிருப்பார்களே தவிர, உடன் பயணம் செய்யும் பயணிகளுடன் உரையாட வேண்டும் என்று அப்படிப்பட்டவர்கள் விரும்புவதில்லை. ஆனால், உள்ளே நுழைந்த மனிதரோ நல்ல உயர்தரமான சூட்டும் தொப்பியும் அணிந்து, சுறுசுறுப்பாக ஒரு

பாடலை விஸிலடித்தவாறு நுழைந்தார். என்னைப் பார்த்ததும் அவர் சலாம் செய்து புன்னகைத்தார். சிறிய அளவில் இருந்த சில பற்களே அவருடைய வாயில் இருந்தன.

தன்னுடைய பெட்டிகள் அனைத்தையும் மேலே இருந்த சுமைகளை வைக்கக் கூடிய பலகையில் வைத்த அவர் எனக்கு அருகில் வந்து அமர்ந்தார்.

"என்ன ஒரு வெப்பம்!'' அவர் கழுத்தில் கட்டப்பட்டிருந்த டையை சற்று அவிழ்த்து தளர்த்திவிட்டு, கோட்டைக் கழற்றி ஆணியில் மாட்டிவிட்டு, பேன்ட் பாக்கெட்டிற்குள்ளிருந்து பிரகாசித்துக் கொண்டிருந்த ஒரு சிகரெட் பாக்கெட்டை வெளியே எடுத்துத் திறந்து, அதிலிருந்து ஒரு சிகரெட்டை எடுக்கும்படி சைகை செய்து கேட்டுக் கொண்டார். நான் ஒரு சிகரெட்டை தொட்டு எடுத்தேன். இன்னொரு சிகரெட்டை அவர் எடுத்தார்.

"நீங்கள் எங்கே போகிறீர்கள்?'' தீக்குச்சியை எடுத்து உரசி, என்னுடைய சிகரெட்டிற்கு நெருப்பு பற்ற வைத்துக் கொண்டே அவர் இந்தியில் உரையாடலை ஆரம்பித்தார்.

"நான் பைராவிற்குச் செல்கிறேன்.''

"பைராவிற்கா? பூ! மிகவும் மகிழ்ச்சி. நானும் அங்குதான் போகிறேன். எனக்கு புகைவண்டி நிலையத்திற்கு வருவதற்கு, சற்று தூரம் ஓடிவர வேண்டியதிருந்தது. வண்டி எங்கே கிடைக்காமல் போய் விடுமோ என்று நான் பயந்தேன். இந்தப் பெட்டிகள் என்னுடன் இருந்ததுதான் சிரமமே.''

அவர் தன்னுடைய பெட்டிகளை வைத்திருந்த இடத்தைப் பார்த்து, எல்லாம் சரியாக வந்து சேர்ந்திருக்கின்றனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக விரலை நீட்டி எண்ண ஆரம்பித்தார்.

நானும் அவருடைய பெட்டிகளை நோக்கி கண்களைச் செலுத்தினேன். பல அளவுகளிலும் நிறங்களிலும் இருந்த ஆறு பெட்டிகள். மூன்று பெட்டிகள் உறுதியான தோலால் செய்யப் பட்டவை. இரண்டு பெட்டிகள் உருக்கு கொண்டு உண்டாக்கப் பட்டவை. ஒரு பெட்டி ஃபைபரை வைத்து செய்யப்பட்டதாக இருக்க வேண்டும்.

அவர் ஒரு பெட்டி வியாபாரியாக இருப்பாரோ?

"சலூனில் பார் பூட்டப்பட்டு விட்டதா?'' அவர் சற்று பெரிய ஒரு சிரிப்புடன் என்னிடம் விசாரித்தார். அந்த சிரிப்பில் அவருடைய முகத்தில் இருந்த அவலட்சணம் முழுவதும் தெளிவாகத் தெரிந்தது. ஓரமும் மூலையும் தகர்ந்து அசிங்கமாக இருந்த சிறிய பற்கள் அவருடைய ஈறுக்குள்ளிருந்து எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தன. வாய்க்கு மேலே இருந்த பகுதி அசிங்கமாக இருந்தது. இப்போது பிதுங்கி விழப் போகின்றன என்று தோன்றுகிற மாதிரி இருந்த வெறித்துக் கொண்டிருந்த தவளைக் கண்களும் அவற்றுக்கு நடுவில் அசிங்கமாக இருந்த ஒரு மூக்கும். அந்த மூக்கிற்கும் சப்பிப் போன உதட்டிற்கும் நடுவில் ஒரு துண்டு மீசையையும் அவர் வைத்திருந்தார்.

"பார் பூட்டப்பட்டிருக்குமா?'' அவர் குழப்பமான மனதுடன் கேள்வியைத் திரும்பவும் கேட்டார்.

"பூட்டப்பட்டிருக்கும். மணி பத்தரை ஆகிவிட்டதே?'' நான் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே பதில் சொன்னேன்.

"இன்று மொத்தத்தில் மிகவும் மோசமான நாளாகிவிட்டது.'' அவர் ஏமாற்றத்துடன் தனக்குத் தானே கூறிக்கொண்டார்: "இனி நாளை காலையில் பைராவை அடைந்த பிறகுதான் ஏதாவது சாப்பிடுவதற்கு கிடைக்கும்.''

"உங்களுக்கு வியாபாரம் பைராவிலா?'' அவர் என்னை நோக்கி திரும்பி உட்கார்ந்து கொண்டே கேட்டார்.

"நான் வியாபாரி அல்ல. ஆப்ரிக்காவைச் சற்று சுற்றிப் பார்க்கலாம் என்று வந்திருக்கும் ஒரு சாதாரண மனிதன்.''

"சுற்றிப் பார்ப்பதற்காக மட்டுமா?''

"ஆமாம்.''

"அப்படியென்றால் அது ஒரு புதிய செய்தி ஆயிற்றே? இந்தியாவிலிருந்து புறப்பட்டு வந்திருக்கும் இப்படிப்பட்ட ஒரு மனிதரை நான் ஆப்ரிக்காவில் முதல் தடவையாகப் பார்க்கிறேன். அப்படியென்றால் மிஸ்டர்... நான் ஒரு கேள்வி கேட்கட்டுமா? போர்த்துக்கீசிய ஆப்பிரிக்காவின் இந்த மலைச்சரிவில் உங்களுக்கு பார்ப்பதற்கு என்ன இருக்கிறது? காட்சிகளைப் பார்க்க வேண்டுமென்றால், நீங்கள் என்னுடைய "ஜோனாஸ்பர்க்”கிற்கு வர வேண்டும்.''

"நீங்கள் அங்குதான் வசிக்கிறீர்களா?''

"தங்குமிடமும் என்னுடைய தொழில்களுக்கான மையமும் ஜோனாஸ்பர்க்தான்.''

"என்ன வியாபாரம்?''

"பல வியாபாரங்கள் இருக்கின்றன. முக்கியமாக துணி இனங்கள். ஜோனாஸ்பர்க்கில் மட்டுமல்ல. கிழக்கு ஆப்ரிக்காவில் இருக்கும் பல நகரங்களிலும் எனக்குச் சொந்தமான கடைகள் இருக்கின்றன. நான் அவற்றையெல்லாம் மேற்பார்வை பார்ப்பதற்காகப் புறப்பட்டிருக்கிறேன்.''

"பைராவிலும் உங்களுக்குச் சொந்தமான கடை இருக்கும். இல்லையா?''

"தற்போதைக்கு பைராவில் இல்லை. பைராவிற்கு சில நாட்கள் ஓய்வு எடுக்கலாம் என்பதற்காகச் செல்கிறேன். சற்று பொழுதுபோக்கு விஷயங்களில் கவனம் செலுத்துவதற்காகவும். பைராவில் குளிர்ந்த நீரை விட பீருக்கு விலை குறைவு என்று கூறிக்கொள்கிறார்களே? பிறகு... நல்ல வெள்ளைக்கார இளம் பெண்களை இறுகப் பிடித்துக் கொண்டு தெருக்களின் வழியாக எந்தவித தயக்கமும் இல்லாமல் நடந்து போகலாம்.''

அவர் கூர்மையான வாளைப் போல இருந்த வாயைத் திறந்து சிரித்தார்.

"அப்படியென்றால்... மிஸ்டர், உங்களுடைய பெயர்?''

"சித்திக்கி''.

"அப்படின்னா... மிஸ்டர், சித்திக்கி... நீங்கள் பைராவிற்குப் போவது "மஜா அடிப்பதற்கு”த்தான். அப்படித்தானே?'' நானும் உரையாடலுக்கு சுவாரசியம் சேர்த்துக்கொண்டு கேட்டேன்.

"மஜாவும்... மஜாவுடன் சேர்ந்து சிறிது வியாபாரமும். இதே... இதை தனிப்பட்ட முறையில் உங்களிடம் மட்டும் கூறுகிறேன். துணி வியாபாரத்தில் நினைத்த அளவிற்கு லாபம் கிடைக்கவில்லை. அதனால் பைராவிற்குச் சென்று யானைத் தந்தங்களின் மொத்த வியாபாரத்தை ஆரம்பிக்கலாம் என்ற ஒரு எண்ணம் இருக்கிறது.''


சித்திக்கி மேலும் ஒரு சிகரெட்டை எடுத்து நெருப்பைப் பற்ற வைத்தார்.

யானைத் தந்த வர்த்தகத்திற்காகப் புறப்பட்டிருக்கும் அந்தப் பெரிய பணக்கார மனிதரை, ஒரு பெட்டி வியாபாரியாக நினைத்து விட்ட என்னுடைய அறிவுக் குறைவைப் பற்றி நான் மனதிற்குள் வருத்தப்பட்டேன்.

"யானைத் தந்த வர்த்தகத்தில் எந்தச் சமயத்திலும் இழப்பு உண்டாகாது. அது கெட்டுப் போகாத, விலை குறைப்பு இல்லாத ஒரு பொருள். தங்கத்தைவிட நாம் தந்தத்தை நம்பலாம்.'' சித்திக்கி தலையை வெளியே நீட்டிக்கொண்டு சொன்னார்.

"அது மிகவும் உண்மை.'' நானும் அவர் சொன்னதை ஒப்புக் கொண்டு சொன்னேன்.

வண்டி ஏதோ ஒரு புகைவண்டி நிலையத்தில் நின்றது. ப்ளாட் ஃபாரத்தில் இருந்த பயணிகளைப் பார்த்துக் கொண்டிருந்த சித்திக்கி, "சோட்டு பாயி.. சோட்டு பாயி...'' என்று அழைத்தவாறு வேகமாக எழுந்தார்.

"பைராவில் நான் பார்க்கப் போகும் என்னுடைய நண்பர் இதோ இங்கே இருக்கிறார். நான் இங்கு இறங்குறேன். நீங்கள் தயவு செய்து என்னுடைய பெட்டிகளை சாளரத்தின் வழியாக வெளியே தள்ளுவதற்கு கொஞ்சம் உதவ வேண்டும்.''

சித்திக்கி வேகமாக வெளியேறினார். நான் அவருடைய பெட்டிகளை ஒவ்வொன்றாக எடுத்து வெளியே நீட்டினேன். அந்தப் பெட்டிகள் எடையே இல்லாமல் இருந்தது என்னை ஆச்சரியப்படச் செய்தது. அனைத்தும் எதுவுமே இல்லாத பெட்டிகளாக இருக்குமோ என்று ஒரு தோணல். ஒரு பெட்டி மட்டுமே கொஞ்சம் கனமாக இருந்தது.

"தேங்க் யூ வெரி மச். குட்பை'' என்று கூறியவாறு, ஒரு கருப்பின சுமை தூக்கும் மனிதனை பெட்டிகளை எடுக்கச் செய்து சித்திக்கி ஓடுவதை பிறகு நான் பார்த்தேன்.

நான் படுக்கையை விரித்து, தூங்குவதற்காக படுத்தேன்.

மறுநாள் காலையில் வண்டி பைராவை அடைந்தது. நான் என்னுடைய சூட்கேஸை எடுத்துக்கொண்டு ப்ளாட்ஃபாரத்தில் கால் வைத்தபோது, ஆச்சரியம் என்றுதான் கூற வேண்டும். சித்திக்கியும் அவருக்குப் பின்னால் ஆறு பெட்டிகளையும் தூக்கிக்கொண்டு ஒரு கறுப்பின மனிதனும் வேகமாக வெளியே ஓடிக்கொண்டிருக்கும் காட்சியைப் பார்த்தேன்.

சித்திக்கியை பைராவில் அதற்குப் பிறகும் நான் இரண்டு முறை பார்த்தேன். துறைமுகத்திற்குச் சமீபத்தில் இருக்கும் "பாவலியோன்” பீர் கடையில் அவர் பீர் அருந்திக் கொண்டிருந்தபோது, நான் உள்ளே நுழைந்தேன். அவர் வாயில் கூர்மையான வாளைப் போல இருந்த பற்களைக் காட்டி சிரித்தவாறு என்னை வரவேற்று, ஒரு புட்டிக்கு ஆர்டர் கொடுத்தார்.

நான் வேண்டாம் என்று கூறிவிட்டுச் சொன்னேன்: "நான் மது அருந்த விரும்பவில்லை. உங்களைப் பார்த்ததால் இங்கு வந்தேன். யானைத் தந்த வியாபாரம் எப்படி இருக்கிறது?''

சித்திக்கி ஏமாற்றத்தை வெளிப்படுத்தியவாறு தலையை ஆட்டிக் கொண்டே சொன்னார்: "இங்கே இருக்கும் கொலைகாரர்களான சிந்தி வியாபாரிகளுடன் போட்டியிடுவது என்பது முடியாத விஷயம். யானைத் தந்தம் வியாபாரத்தை முழுமையாக அவர்கள் தங்களின் கைகளில் வைத்திருக்கிறார்கள்.''

"அப்படியென்றால் நீங்கள் அந்த முயற்சியைக் கைவிட்டு விட்டீர்கள். அப்படித்தானே?'' நான் பரிதாபத்தை வெளிப்படுத்திய வாறு கேட்டேன்.

"எதுவும் கூறுவதற்கில்லை... பிறகு, நீங்கள் மது அருந்தவில்லையென்றால்... சரி... நாம் பிறகு பார்ப்போம்.''

சில நாட்கள் கடந்தன.

நான் "பைரா”விலிருந்து "ஸ்டேலன்டயரி”க்கு ஏறிய புகைவண்டி "வில்லெமச்சாதோ” நிலையத்தை அடைந்தபோது, மாலை நேரம் கடந்துவிட்டிருந்தது. வண்டி நிலையத்தை விட்டுக் கிளம்பியபோது, ஒரு மனிதர் மேலும் கீழும் மூச்சு விட்டவாறு ஓடி வருவதைப் பார்த்தேன். கவனமாகப் பார்த்தபோது, நம்முடைய சித்திக்கி. பின்னால் ஒரு குள்ளமான கறுப்பின மனிதனின் தலையிலும் தோளிலும் அந்த அரை டஜன் பெட்டிகள் நகர்ந்து வந்து கொண்டிருந்தன.

பெட்டிகள் அனைத்தையும் காரிடாரில் இறக்கி வைத்துவிட்டு, சித்திக்கி தயக்கத்துடன் அங்கேயே நின்றிருந்தார். சிறிது நேரம் கடந்ததும், அவர் என்னுடைய அறையைச் சற்று எட்டிப் பார்த்தார். என்னைப் பார்த்ததும் வித்துவானுக்கு ஆச்சரியத்தைவிட சிரிப்புத்தான் அதிகம் உண்டானது. "ஓ... நீங்களும் ஏறியிருக்கிறீர்களா?'' என்று கேட்டவாறு சித்திக்கி என்னுடைய அறைக்குள் நுழைந்தார். பிறகு அறையில் இருந்த பயணிகளின் முகங்கள் அனைத்தையும் சற்று கூர்ந்து பார்த்தார்.

"இரண்டாவது வகுப்பு கிடைக்கவில்லை.'' அவர் கவலை கலந்த குரலில் தாடியைச் சொறிந்து கொண்டே சொன்னார்: "இடம் இல்லையாம். நாளை நான் ந்யாஸாலன்டிற்குப் போய் சேராமல் இருக்க முடியாது. அதனால் மூன்றாவது வகுப்பு டிக்கெட் வாங்கியிருக்கிறேன்''.

எங்களுக்குச் சற்று முன்னால் இருக்கும் அறைதான் மூன்றாவது வகுப்பு. ந்யாஸாலன்டிற்குச் செல்லும் புகைவண்டியில் மூன்றாவது வகுப்பு என்று சொன்னால், கறுப்பின மக்கள் ஏறக்கூடிய ஒரு மாட்டுத் தொழுவம்தான் அது. வெளிச்சமும் நீரும் இல்லாத- சுத்தமே இல்லாத ஒரு கூடு. அதற்குள் இருக்கும் நாற்றத்தைத் தாங்கிக் கொள்ளவே முடியாது. அங்கு உட்கார்ந்து கொண்டு மிகப்பெரிய மனிதரான சித்திக்கி இரவு நேரத்தைக் கழிக்கப் போகிறார் என்பதைக் கேட்டவுடன்,

நான் அதிர்ந்து போய்விட்டேன். அவசரச் செயல்கள் உண்டாகும்போது, மனிதன் எதையும் சகித்துக் கொள்வதற்குத் தயாராகி விடுவானே?

"என்னுடைய பெட்டிகளில் ஒன்றிரண்டை இங்கு எங்காவது வைப்பதற்கு இடமிருக்கிறதா?'' சித்திக்கி ஒரு கெஞ்சுகிற குரலில் கேட்டார்.

எங்களுடைய அறையில் இருந்த நான்கு பெர்த்களிலும் ஆட்கள் இருந்தார்கள். அறை முழுவதும் சாமான்கள் வைக்கப்பட்டிருந்தன.

"இரண்டு மூன்று பெட்டிகளை வைக்கலாம் என்று தோன்றுகிறது.'' -சித்திக்கி சில காலி இடங்களைப் பார்த்து என்னைப் பார்த்துக் கூறினார்.

"வைக்க முடிந்தால், வையுங்கள்.'' நான் அந்த இந்திய நண்பருக்கு சம்மதம் அளித்தேன்.

அவர் இரண்டு தோல்பெட்டிகளை இரண்டு இடங்களில் திணித்து வைத்துவிட்டு, மீதமிருந்த பெட்டிகளுடன் காரிடாரிலேயே நின்று கொண்டிருந்தார்.

வண்டி பயணத்தைத் தொடர்ந்தது. அருகில் இருந்த மூன்றாவது வகுப்பு கறுப்பின மனிதர்களின் கூட்டத்திற்குள் இருந்து பாட்டுகளும் கறுப்பினப் பெண்களின் "ஹை- ஹெஹேய்'' என்ற உரத்த சிரிப்புச் சத்தங்களும் குழந்தைகளின் அழுகைச் சத்தமும் பல வகைப்பட்ட ஆரவாரங்களும் கேட்டுக் கொண்டிருந்தன. இடையில் அவ்வப்போது பழைய பிணக் குழியைத் தோண்டும்போது, வெளியே பரவுவதைப் போன்ற நாற்றம் காற்றில் எங்களுடைய அறைக்குள் நுழைந்து வந்து கொண்டிருந்தது.

இரண்டு மணி நேரங்கள் கடந்தன. நான் இடைவெளியைப் பார்த்தபோது, அங்கு சித்திக்கி இல்லை. வெளியே சென்று திரும்பிப் பார்த்தபோது, வித்துவான் இடைவெளியில் இருந்த தோலால் ஆன

வாசலின் வழியாக மூன்றாவது வகுப்பிற்குள் நுழைந்து, அங்கிருந்த ஒரு பெஞ்சில் மிடுக்குடன் உட்கார்ந்திருந்தார். அவருக்கு மிகவும் அருகில் ஒரு வெளுத்த கறுப்பினப் பெண் உட்கார்ந்திருந்தாள்.


சித்திக்கிக்கு சுகமான ஒரு இடம் கிடைத்திருக்கிறதே என்று நான் நிம்மதி அடைந்தேன்.

வண்டியில் இருக்கும் கறுப்பினப் பணியாள் உள்ளே வந்து, எங்களுடைய விரிப்புக்களை விரித்து தயார் பண்ணி விட்டு, கொசு வலையை விரித்துக் கட்டிவிட்டு, தூங்குவதற்கான ஏற்பாடுகளை முழுமை செய்து, கதவை அடைத்துவிட்டுச் சென்றான். நான் எனக்கென்று மேலே இருந்த பெர்த்தில் ஏறிப் படுத்து, ஒரு மாத இதழை விரித்து வாசிக்க ஆரம்பித்தேன்.

என்னுடைய அறையில் இருந்த சக பயணிகளில் இரண்டு பேர் எதுவும் பேசாத குஜராத்தி வியாபாரிகளாக இருந்தார்கள். மூன்றாவது மனிதர் மடகாஸ்கரைச் சேர்ந்த ஒரு வெளுத்த கறுப்பின மனிதர். பெரிய துரையைப் போல ஆடை அணிந்து எப்போதும் பேசிக்கொண்டே இருக்கும் ஒரு வாயாடி. மடகாஸ்கரில் தனக்கென்று சொந்தமாக எஸ்டேட்டும் வீடும் இருக்கிறது என்றும்; ஒரு உல்லாசப் பயணத்திற்காக ஆப்ரிக்காவிற்கு வந்திருப்பதாகவும் அவர் என்னிடம் சொன்னார்.

அந்த மனிதர் மிகப் பெரிய தீனி சாப்பிடுபவராகவும் இருந்தார். பொறித்த கோழியையும், வேக வைத்த செம்மீனையும், ரொட்டியையும், பீர் புட்டிகளையும் அவர் கூடைக்குள் வைத்து கொண்டு வந்திருந்தார். அவை ஒவ்வொன்றையும் அவர் அவ்வப்போது ருசி பார்த்துக் கொண்டே நேரத்தைச் செலவிட்டுக் கொண்டிருந்தார். அதில் பங்கு பெறுவதற்கு இடையில் அவ்வப் போது எங்களையும் அழைத்துக் கொண்டிருந்தார். ஆனால், அந்த வேக வைத்த செம்மீனின் நாற்றத்தை உணர்ந்தவுடன், இரவு நேர உணவே வேண்டாம் என்ற நிலையை நான்

அடைந்து விட்டிருந்தேன். மீன், மாமிசம் போன்றவற்றிற்கு எதிரான அந்த குஜராத்திகள் சற்று முன்பே பெர்த்களில் ஏறிப் படுத்து உறங்கியவாறு "சாந்தம் பாவம்'' என்று மூச்சு விட்டுக் கொண்டிருந்தார்கள்.

அடுத்த அறைக்குள் இருந்து பாட்டும் கூப்பாடுகளும் ஆரவாரமும் கேட்டுக் கொண்டிருந்தன. கறுப்பின மனிதர்கள் அல்ல. அடுத்து பின்னாலிருந்த அறைக்குள்ளிருந்து அவை கேட்டன. மூக்கு முனை வரை மது அருந்தியிருந்த வெள்ளைக்காரர்களான போர்த்துக்கீசிய பயணிகள்தான் ஆரவாரம் செய்கிறார்கள் என்பதை நான் புரிந்து கொண்டேன். அவர்களில் இரண்டு பேர் பல வித்தைகளையும் காட்டிக் கொண்டு காரிடார் வழியாக உலாத்திக் கொண்டிருப்பதை நான் சற்று முன்பு பார்த்தேன்.

நம்முடைய மடகாஸ்கரைச் சேர்ந்த மனிதர் உணவுக் கூடையில் இருந்தவை அனைத்தையும் வயிற்றுக்குள் போகும்படி செய்துவிட்டு, மது புட்டிகளை காலி பண்ணிவிட்டு, தூங்குவதற்காக மேலே இருந்த பெர்த்தில் போய் படுத்தார். சிறிது நேரம் சென்றதும், யாரோ எங்களுடைய கதவைத் தொடர்ந்து தட்டிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டது. போர்த்துக்கீசிய குடிகாரர்களின் குறும்புச் செயலாக அது இருக்கும் என்பதை நான் புரிந்து கொண்டேன். நான் அசையவே இல்லை.

கதவைத் தட்டும் சத்தம் தொடர்ந்து கொண்டேயிருந்தது. மடகாஸ்கரைச் சேர்ந்த மனிதருக்கு அந்தத் தொல்லையைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று தோன்றியது. "யார் இந்த போக்கிரிகள்?'' என்று கேட்டுக் கொண்டே, அவர் மெதுவாகக் கீழே இறங்கி வந்து கதவைத் திறந்து முகத்தைக் காட்டியதும், வெளியே இருந்து அந்த முகத்தில் முஷ்டியால் "ட்ரூம்” என்றொரு குத்து விழுந்ததும் ஒரே நேரத்தில் நடந்தன என்று கூறினால் போதுமே!

மடகாஸ்கரைச் சேர்ந்த மனிதர் மூக்கையும் வாயையும் அழுத்திப் பிடித்துக் கொண்டு மெதுவாக முனகியவாறு மேலே போய் படுத்துக்கொண்டார்.

காரிடார் வழியாக மிடுக்குடன் நடந்து கொண்டிருந்த போர்த்துக் கீசிய இளைஞர்களில் ஒருவன்தான் நம்முடைய மடகாஸ்கர்காரரின் மூக்கைச் சேதப்படுத்தி இருக்கிறான். வெறுமனே, கண்ணில் படும் கதவைப் போய் தட்டி அழைப்பது, கதவைத் திறந்து பார்க்கும் அதிர்ஷ்டமற்ற மனிதனின் மூக்கைக் குறி வைத்து முஷ்டியைச் சுருட்டி குத்திவிட்டு வேகமாக ஓடிவிடுவது... இப்படி புதிய ஒரு பொழுதுபோக்கில் அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்.

அறையின் கதவு திறந்து கிடப்பதைப் பார்த்தபோது, எப்படிப் பார்த்தாலும் அது பாதுகாப்பற்றது என்று நினைத்து நான் கீழே இறங்கி, கதவை அடைத்துத் தாழ்ப்பாள் போட்டு விட்டு, விளக்கை அணைத்து விட்டு, தூங்குவதற்காகப் படுத்தேன். மடகாஸ்கரைச் சேர்ந்த மனிதர் ""துப்... துப்...'' என்று துப்பிக் கொண்டிருந்தார்- ரத்தமாக இருக்க வேண்டும். இடையில் அவ்வப்போது பரிதாபத்தை வரவழைக்கிற மாதிரி ஒரு முனகல் சத்தமும் கேட்டுக் கொண்டிருந்தது.

கால்மணி நேரம் கடந்தது. கதவை மீண்டும் தட்டும் சத்தம். நான் அசையவில்லை. மடகாஸ்கர்காரர் அந்த முனகல் சத்தத்தைக்கூட அடக்கிக் கொண்டு, பிணத்தைப் போல படுத்துக் கிடந்தார்.

மீண்டும் கதவைத் தட்டும் சத்தம். கதவு கிடுகிடு என்று ஆடிக்கொண்டிருந்தது. நான் பொறுமையாக இருந்தேன். கதவைத் தட்டும் சத்தம் தொடர்ந்து கொண்டேயிருந்தது. அடுத்தடுத்து தட்டும்

சத்தம். இதற்கொரு வழி கண்டு பிடிக்காமல் இருக்கக்கூடாது என்று எனக்குத் தோன்றியது. இல்லாவிட்டால் அன்று இரவு தூங்குவது என்பது நடக்காத விஷயம்.

நான் விளக்கைப் பற்ற வைத்து, மெதுவாகக் கீழே இறங்கி, மடகாஸ்கர்காரரின் கூடையில் காலியாக இருந்த பீர் புட்டிகளில் ஒன்றை கையில் எடுத்து, வலது கையில் அந்த புட்டியைப் பிடித்துக்கொண்டு கதவிற்கு அருகில் போய் நின்றேன். இன்னொரு கையால் மெதுவாகத் தாழ்ப்பாளை நீக்கி கதவைத் திறந்தேன். குத்துவதற்காக முஷ்டியைச் சுருட்டி வைத்துக்கொண்டு வெளியே காத்து நின்றுகொண்டிருந்த போர்த்துக்கீசிய மனிதன், அடிப்பதற்காக பீர் புட்டியைக் கையில் வைத்துக்கொண்டு நின்று கொண்டிருக்கும் புதிய ஒரு மனிதனைப் பார்த்ததும் திரும்பி ஒரு ஓட்டம் ஓடினான். சித்திக்கியின் பெட்டிகள் தட்டி, வித்துவானுக்கு நல்ல ஒரு வீழ்ச்சி கிடைத்தது. பிறகு எங்களுடைய அறைக்குள் அந்த தட்டும் வித்துவானின் தொந்தரவு உண்டாகவில்லை. அவன் வேறு அறைகளில் மூக்குகளைத் தேடிப் போயிருக்க வேண்டும். நாங்கள் நிம்மதி யாகப் படுத்து உறங்கினோம்.

இரவு ஒரு மணி தாண்டியிருக்கும். வண்டி மலைச்சரிவில் இருந்த ஒரு புகை வண்டி நிலையத்தில் திடீரென்று நின்றது. மெயில் வண்டி நிற்கக் கூடிய நிலையம் அல்ல அது. யாரோ சங்கிலியை இழுத்து நிறுத்தியிருக்கிறார்கள். ஆரவாரத்தைக் கேட்டு நான் கண் விழித்தேன். எங்களுடைய அறைக்கு முன்னால் அந்த ஆரவாரம் கேட்டது.

நான் கீழே இறங்கி சாளரத்தைத் திறந்து வெளியே பார்த்தேன். வண்டியில் இருந்த வெள்ளைக்காரரான கார்டும் கண்டக்டரும் ஆர்வத்தால் உந்தப்பட்ட சில கறுப்பின மனிதர்களும் அவர்களுக்கு மத்தியிலிருந்து ஒரு மனிதனின் உரத்த குரலும்.


"வண்டியில் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்யும் இரண்டு போர்த்துக்கீசியர்கள் என்னை அடித்துக் கொல்லப் பார்த்தார்கள். என்னுடைய பணப் பையை அவர்கள் பிடுங்கிக் கொண்டார்கள். நான் ஒரு பிரிட்டிஷ் குடிமகனான வியாபாரி. பிரிட்டிஷ் கவுன்சிலுக்கு தந்தி அடித்து என்னைப் பற்றிய தகவலை தெரிவித்த பிறகு அல்லாமல் வண்டியை விடுவதற்கு நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்.''

சித்திக்கியின் அசைக்கக் கூடிய குரல்தான் அங்கு காதில் விழுந்தது. ஆங்கிலமும் போர்த்துக்கீசிய மொழியும் கலந்த ஒரு மொழியில் தைரியத்துடனும் மிடுக்குடனும் இருந்த ஒரு கம்பீரமான சொற்பொழிவு.

"உங்களை யார் தொந்தரவு செய்தது?'' கார்டின் கேள்வி.

"இரண்டு போர்த்துக்கீசியர்கள்.''

"அவர்கள் எங்கு போனார்கள்?''

"எங்கும் போகவில்லை. இந்த வண்டியில் இரண்டாம் வகுப்பு அறைகளில் எங்கோ மறைந்திருக்கிறார்கள்.''

"உங்களுக்கு ஏதாவது காயம் உண்டானதா?''

"காயமா? என்னை அவர்கள் குத்தி ஒரு வழி பண்ணியிருக்கிறார்கள். பாருங்கள்... என்னுடைய ஆடையை.''

கிழிந்து போயிருந்த சட்டையையும் ஸ்வெட்டரையும் காட்டிய வாறு சித்திக்கி ஆண்மைத்தனம் நிறைந்த குரலில் சொன்னார்:

"உங்களுடைய போர்த்துக்கீசிய நாட்டில் எங்களுக்குப் பாதுகாப்பு இல்லை. பிரிட்டிஷ் கவுன்சிலுக்கு இதை நான் தெரிவிக்காமல் விட மாட்டேன்.''

சித்திக்கி பிடிவாதம் பிடித்தவாறு அங்கேயே நின்றிருந்தார்.

கார்டு கவலைக்குள்ளானார். போர்த்துக்கீசிய எல்லையில் வைத்து இப்படி ஒரு பிரிட்டிஷ் குடிமகன் தொல்லைக்குள்ளானார் என்பது பெரிய ஒரு விஷயம்தான் என்று கார்டிற்கும் தோன்றியது. அவர் எல்லாவற்றையும் விசாரித்து தேவையானதைச் செய்வதாகவும், தற்போதைக்கு வண்டியில் ஏற வேண்டுமென்றும் சித்திக்கியிடம் கூறினார். சித்திக்கி காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை.

"என்னுடைய ஐந்தாறு பெட்டிகள் வண்டியில் எங்கெங்கோ கிடக்கின்றன. அவற்றைச் சற்று கீழே இறக்கிக் கொடுத்தால் போதும். வண்டியில் அல்ல. நான் மருத்துவமனைக்குப் போக வேண்டும். நீங்கள் இவற்றுக்கெல்லாம் பதில் கூற வேண்டியிருக்கும். ஞாபகம் இருக்கட்டும்.'' சித்திக்கி கார்டைப் பார்த்து எச்சரித்தார்.

கார்டின் அமைதியான போக்கும் சித்திக்கியின் பிடிவாதமும் சிறிது நேரம் நீடித்தது. இறுதியில், அடுத்த பெரிய ஸ்டேஷனில் "தீவிரமான ஒரு குற்றத்தை விசாரணை செய்வதற்காக வரும்படி” அங்குள்ள போலீஸ் கமிஷனருக்கு கார்டு தொலைபேசி மூலம் அறிவித்த பிறகுதான் சித்திக்கி வண்டியில் ஏறவே சம்மதித்தார்.

அடுத்த ஸ்டேஷனில் போலீஸ் கமிஷனர் வந்தார். அக்கிரமக் காரர்களான அந்த இரண்டு போர்த்துக்கீசிய இளைஞர்களையும் போலீஸ் தேடிப்பிடித்து கமிஷனருக்கு முன்னால் கொண்டு வந்து நிறுத்தியது.

"இவர்கள்தான் உங்களுக்கு தொல்லைகள் கொடுத்தார்களா?'' -கமிஷனர் சித்திக்கியிடம் கேட்டார்.

"ஆமாம்... இவர்கள் இருவர்தான்.'' சித்திக்கி அவர்களை வெறுப்புடன் சுட்டிக்காட்டியவாறு சொன்னார்.

"நீங்கள் எங்கே இருந்தீர்கள்?''

"எனக்கு இரண்டாவது வகுப்பு டிக்கெட் கிடைக்கவில்லை. அதனால் மூன்றாவது வகுப்பு அறையில் பயணம் செய்து கொண்டிருந்தேன்.''

"இவர்கள் எதற்காக அங்கே வந்தார்கள்?''

"அதை இவர்களிடமே கேளுங்கள். நான் பெஞ்சில் ஏறி படுத்திருந்தேன். இவர்கள் திடீரென்று உள்ளே நுழைந்து என்னை கீழே பிடித்து இழுத்து, ஒரு நூறு முறை குத்து விட்டிருப்பார்கள். பிறகு என்னுடைய சட்டையையும் ஸ்வெட்டரையும் பிடித்துக் கிழித்து, நான் ஸ்வெட்டருக்குள் வைத்திருந்த பணப் பையை எடுத்துக் கொண்டார்கள். இறுதியில் எனக்கு ஒரு மீதியைத் தந்துவிட்டு, இவர்கள் பாட்டு பாடிக் கொண்டே திரும்பிச் சென்றுவிட்டார்கள். இதுதான் நடந்தது.''

போலீஸ் கமிஷனர் அந்தப் போர்த்துக்கீசிய இளைஞர்களை நோக்கித் திரும்பினார். "இவை எல்லாம் நீங்கள் செய்தவைதானா?''

அந்த இளைஞர்கள் முட்டாள்களைப் போல ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு பேந்தப் பேந்த விழிக்க முயற்சித்தார்கள். தாங்கள் என்ன செய்தோம் என்பதைப் பற்றி அவர்களுக்கே தெளிவாகத் தெரியவில்லை. அவர்களுடைய மூளையிலும் கண்களிலும் மதுவின் போதை மறையாமல் இருந்தது.

"இந்த இந்தியாக்காரன் என்னை பீர் புட்டியால் அடிப்பதற்காக ஓங்கியதால்தான் நாங்கள் இவனைக் குத்தினோம்.'' இளைஞர்களில் ஒருவன் சித்திக்கியைச் சுட்டிக் காட்டியவாறு தாழ்வான குரலில் சொன்னான்.

"பீர் புட்டியால் நான் அடிப்பதற்காக ஓங்கினேனா? வெறும் பொய்... என் கையில் சிறு புட்டிகூட இல்லை. இதோ... இங்கே கூடி நிற்பவர்களிடம் கேளுங்க... வெறுமனே அமர்ந்திருந்த என்னை யார் கீழே பிடித்து

இழுத்து அடித்தார்கள் என்பதை...'' சித்திக்கி சற்று முனகியவாறு சொன்னார்.

பீர் புட்டியின் கதையைக் கேட்டதும், எனக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. அவர்கள் சித்திக்கியைப் பிடித்து இழுத்து அடித்ததன் ரகசியம் எனக்கு மட்டும் தெரிந்துவிட்டது.

"உங்களுடைய பணப் பையில் எவ்வளவு பணம் இருந்தது?'' -கமிஷனரின் கேள்வி.

"பன்னிரண்டு பவுனும் இருபது எஸ்க்யூடோஸும் (போர்த்துக்கீசிய கிழக்கு ஆப்பிரிக்கா நாணயம்) இருந்தன. என்னுடைய பணப் பையை அவர் எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள். ஒரு கோப்பை தேநீர் பருகுவதற்குக்கூட இனி என் கையில் காசு இல்லை.'' -சித்திக்கி கோபத்துடன் கூறினார்.

கமிஷனர் அங்கிருந்த பயணிகளில் சிலரிடம் விசாரணைகள் நடத்தினார். அந்த இரண்டு இளைஞர்களும் மது அருந்தி கட்டுப்பாடே இல்லாமல் பல அட்டகாசச் செயல்களையும் செய்ததாக பலரும் வாக்குமூலம் தந்தார்கள்.

கமிஷனர் அந்த இளைஞர்களை நோக்கித் திரும்பினார்: "நீங்கள் இவருக்கு இந்த இடத்திலேயே பன்னிரண்டு பவுனையும் இருபது எஸ்க்யூடோஸையும் கொடுத்துவிட வேண்டும் என்று நினைக்கிறீர்களா? இல்லாவிட்டால் சிறைக்குப் போகத் தயாராக இருக்கிறீர்களா?''

அந்தப் போர்த்துக்கீசிய இளைஞர்கள் முதலில் கூறிய நிபந்தனையை ஏற்றுக்கொண்டு, எதுவும் கூறாமல் பன்னிரண்டு பவுனையும் சில்லரையையும் எடுத்துக் கொடுத்தார்கள். கமிஷனர் தொகையை சித்திக்கியிடம் நீட்டினார். அவர் அதை வாங்கத் தயாராக இல்லை.

"எனக்கு கிடைத்த அடியைப் பற்றி...''

கமிஷனர் நல்ல வார்த்தைகள் கூறி சித்திக்கியைச் சமாதானப் படுத்தி, ஒரு விதத்தில் பணத்தை அவரைப் பெற்றுக்கொள்ளும்படி செய்தார்.

"இவர்கள் பிடித்து இழுத்துக் கிழித்த என்னுடைய புதிய ஸ்வெட்டருக்கான விலையையாவது எனக்குத் தராமல் இருக்க கூடாது.'' சித்திக்கி கிழிந்த ஸ்வெட்டரைச் சுருட்டி அவர்களுக்கு முன்னால் எறிந்தார்.

இறுதியில் கமிஷனர் அதற்கான விலையாக மேலும் ஒரு பவுனையும் அக்கிரமங்கள் செய்தவர்களிடமிருந்து வற்புறுத்தி வாங்கிக் கொடுத்தார்.

அந்த வகையில் எல்லா விஷயங்களும் ஒரு மாதிரி சமாதானமாக முடிந்தவுடன், வண்டி பயணத்தைத் தொடர்ந்தது.

வண்டி நகர்ந்து சிறிது நேரம் ஆனவுடன், யாரோ வந்து கதவைத் தட்டுவது கேட்டது.

"யார் அது?'' நான் அழைத்துக் கேட்டேன்.

"நான்தான்... சித்திக்கி.''

நான் கதவைத் திறந்தபோது, சித்திக்கி குலுங்கிக் குலுங்கி சிரித்தவாறு என்னை இறுகப் பிடித்துக் கொண்டார்.

"ஹும்? என்ன இது? பணம் திரும்பக் கிடைத்த மகிழ்ச்சியா?'' -நான் கேட்டேன்.


"கையைவிட்டுப் போகாத பணம் திரும்பக் கிடைத்த சந்தோஷம்.'' சித்திக்கி நடனம் ஆடியவாறு சொன்னார். "சுவாரசியத்தைக் கேட்கிறீர்களா? என்னுடைய பணப் பையைத் தவிர, பணம் என்று ஒரு எஸ்க்யூடோகூட கையை விட்டுப் போகவில்லை. பணப் பையும் போகவில்லை. நான் வீசி எறிந்து விட்டேன். என்ன நடந்தது

தெரியுமா? நான் மூன்றாவது வகுப்பில் அந்த வெளுத்த கறுப்பின பெண்ணுக்கு அருகில் உட்கார்ந்திருந்தேன். அந்த போர்த்துக்கீசிய குடிகாரர்களுக்கு அதைப் பார்த்ததும் ஒரு பெறாமையோ கோபமோ ஏதோவொன்று உண்டாகிவிட்டது. அவர்கள் என்னிடம் வந்து வேறு இடத்தில் போய் அமரும்படி சொன்னார்கள். நான் ஒப்புக் கொள்ளவில்லை. அப்போது அவர்கள் என்னைக் கீழே பிடித்து இழுத்து ஒரு குத்து விட்டு, அங்கிருந்து கிளம்பிப் போய்விட்டார்கள். அது மட்டும்தான் நடந்தது. பிறகு எல்லாவற்றையும் மனதில் நினைத்தபடி செய்தது நான்தான். நான் பணப்பையிலிருந்து பணம் எல்லாவற்றையும் எடுத்து என்னுடைய ஷூக்களுக்குள் திணித்து வைத்துவிட்டேன். பணப்பையை வெளியே எறிந்து விட்டேன். போலீஸ் என்னைப் பிடித்து எங்கே சோதனை செய்து விடுவார்களோ என்றொரு முன்னெச்சரிக்கையால்தான் அதைச் செய்தேன்.

பிறகு நான் என்னுடைய பழைய ஸ்வெட்டரைப் பிடித்து இழுத்துக் கிழித்தேன். அந்தச் சிறிய புகை வண்டி நிலையம் நெருங்கியவுடன் வண்டியின் அபாயச் சங்கிலியை இழுத்து வண்டியை நிறுத்தியும் விட்டேன். அதற்குப் பிறகு நடந்தவை அனைத்தும் உங்களுக்குத்தான் தெரியுமே!''

"சரியான புத்திசாலிதான்!'' நான் சித்திக்கியின் முதுகைத் தட்டியவாறு அவருடைய திறமையைப் பாராட்டினேன்.

சித்திக்கி குனிந்துகொண்டு தன்னுடைய ஷூக்களுக்குள்ளிருந்து நோட்டுகளை வெளியே எடுத்துக்கொண்டே சொன்னார்: "இந்த போர்த்துக்கீசிய போக்கிரிகளிடம் பிரச்சினை உண்டாகாமல் இருக்க, இப்படிப்பட்ட பல வழிமுறைகளைப் பின்பற்றுவதைத் தவிர வேறு வழியில்லை. அவர்களுடைய நாடாயிற்றே!''

"ஆமாம்... ஒரு அடி கிடைத்தது போனால் போகட்டும். பன்னிரண்டு பவுனை பிடுங்கி விட்டீர்களே?'' "பன்னிரண்டு பவுன் எனக்கு புல் மாதிரி.'' சித்திக்கி பழைய யானைத் தந்த வியாபாரியாக மாறியவாறு சொன்னார்: "அவர்களுக்கு நல்ல ஒரு பாடம் கற்பிக்க முடிந்ததே! அதுதான் நான் செய்த நல்ல காரியம். அது இருக்கட்டும். நான் என்னுடைய பெட்டிகளை எடுப்பதற்காகவும் உங்களிடம் விடை பெறுவதற்காகவும்தான் வந்தேன். நான் அடுத்த ஸ்டேஷனில் இறங்கப் போகிறேன்.''

அவர் அதைக் கூறி முடிப்பதற்குள், வண்டி அடுத்த ஸ்டேஷனை நெருங்கிவிட்டிருந்தது.

"அப்படியென்றால்... பிறகு பார்க்கலாம்... குட்பை'' என்று கூறியவாறு சித்திக்கி இரண்டு பெட்டிகையும் எடுத்துக் கொண்டு வேகமாக வெளியேறினார்.

அப்படியென்றால், அந்தச் சம்பவத்திற்குப் பின்னால் ஒரு பீர் புட்டி அல்லாமல் ஒரு வெளுத்த நீக்ரோ பெண்ணும் இருக்கிறாள் இல்லையா? நான் அதை நினைத்து ரசித்துக் கொண்டே தூங்குவதற்காகப் படுத்தேன்.

மறுநாள் காலையில் போர்த்துக்கீசிய எல்லையைக் கடந்து, ந்யாஸாலென்டின் முதல் புகைவண்டி நிலையமான "போர்ட் ஹெரால்”டை அடைந்தது. பயணிகளின் சாமான்களைச் சோதனை செய்து பார்ப்பதற்காக எல்லாரும் அந்த சோதனை நிலையத்தில் இறங்க வேண்டும்.

பெட்டிகள் எல்லாவற்றையும் திறந்து வைக்க வேண்டும் என்ற உத்தரவு கிடைத்ததும், நாங்கள் ஒவ்வொருவராக பெட்டிகளை எடுத்து தயார் பண்ணி வைக்க ஆரம்பித்தோம். வீங்கிய உதட்டையும் புடைத்த மூக்கையும் காட்டியவாறு மடகாஸ்கர்காரரும் கீழே இறங்கி, தன்னுடைய பெட்டிகளைத் தேடி எடுக்க ஆரம்பித்தார்.

அவர் தவிட்டு நிறத்தில் இருந்த ஒரு தோலால் ஆன பெட்டியைத் தேடி எடுத்து முன்னால் வைத்து திறக்க நினைத்தார். சாவியை எடுத்து திறக்க முயன்றார். சாவி பொருந்தவில்லை. அவர் சந்தேகப்பட்டு பெட்டியைக் கூர்ந்து கவனித்தார்.

"அய்யோ... இது என்னுடைய பெட்டி இல்லையே!'' என்று கூறியவாறு அவர் பதைபதைப்புடன் அறை முழுவதையும் அலச ஆரம்பித்தார். அதே மாதிரியான இன்னொரு பெட்டி அங்கு யாரிடமும் இல்லை.

"அய்யோ... என் பணப்பெட்டி போயிடுச்சே!'' மடகாஸ்கர்காரர் தலையில் அடித்துக்கொண்டு கூப்பாடு போட்டார். "இதே மாதிரியான ஒரு தோல் பெட்டி இருந்தது. இது என்னுடையதல்ல.''

அவர் அந்த தோல் பெட்டியைத் தூக்கி குலுக்கிப் பார்த்தார். "இது காலி பெட்டியாக இருக்கிறதே, கடவுளே! என் பெட்டியில் நிறைய நகைகளும் பணமும் இருந்தன.''

சித்திக்கி பல வகைப்பட்ட ஆறு பெட்டிகளை எப்போதும் தன்னுடன் வைத்துக்கொண்டு திரிவதன் ரகசியம் அப்போதுதான் எனக்குப் புரிந்தது. மடகாஸ்கர்காரரின் சிரமமான நிலைமையைப் பார்த்து பரிதாபப்படுவதா, சித்திக்கியின் சாமர்த்தியத்தை நினைத்து சிரிப்பதா... என்ன செய்வது என்று தெரியாமல் நான் அறையை விட்டு எழுந்து வெளியே சென்றேன்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.