Logo

யமுனைக் கரையில்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 6395
yamunai karaiyil

ங்காங்கே சுருக்கங்கள் விழுந்து, கோடையின் வெள்ளை விரிப்பைப் போல கிடக்கும் யமுனைக் கரையின் வழியாக, ஒரு மாலை நேரத்தில் நான் அப்படியே நடந்து கொண்டிருந்தேன். கிராமத்தின் அமைதியில் ஊர்ந்து கொண்டிருக்கும் தெளிவற்ற சிந்தனைகளுடன், இலக்கே இல்லாமல், எங்கு போகிறோம் என்ற தீர்மானமே இல்லாமல் நான் நடந்து கொண்டிருந்தேன். அழகான காளிந்தி என்னுடன் இருந்தது என்பதைத் தவிர, நான் புறப்பட்டு வந்த தில்லி நகரம் நான்கைந்து மைல்கள் பின்னால் இருக்கிறது என்ற உண்மையை நான் நினைக்கவே இல்லை.

காய்கறித் தோட்டங்கள், புல்வெளிகள், உழுது முடித்த வயல்கள், தலையில் நீர் குடத்துடன் நதியில் இருந்து திரும்பி வரும் கிராமத்துப் பெண்கள், கன்றும் கரியுமாக நடந்து போய்க் கொண்டிருக்கும் தலையில் துணி சுற்றியிருக்கும் விவசாயிகள்- இப்படி ஒரு காட்சி தொடர்ந்து கண்ணில் பட்டது. மாற்றத்தின் ஆரவாரத்தை நோக்கிக் கண்விழிக்காமல் கிடக்கும் பழைய பாரதத்தின் ஒரு அம்சம்!

நான் ஒரு சிறிய படகுத் துறையை அடைந்தேன். தூரத்திலிருந்து நான் வருவதைப் பார்த்து, படகோட்டி எனக்காகக் காத்துக்கொண்டு நின்றிருந்தான். அந்தக் கிழவனை ஏமாறச் செய்வது எனக்கு என்னவோ போல இருந்தது. கொஞ்சம் மறுகரைக்குப் போய்விட்டுத் திரும்பித்தான் வருவோமே என்று நான் முடிவெடுத்து படகில் ஏறி உட்கார்ந்தேன். அந்தச் சிறிய படகு, காளிந்தி நதியின் நீரோட்டத்தைக் கிழித்துக்கொண்டு மறு கரையை அடைந்தது.

கரையில் இரண்டு பேர் படகில் ஏறுவதற்காகக் காத்து நின்றிருந்தார் கள்- சிவப்புநிறக் கீரைக்கட்டைத் தலையில் வைத்துக்கொண்டு ஒரு இளம் பெண்ணும், சிவப்பு நிறத்தில் பட்டுத் தலைப்பாகை அணிந்த ஒரு நடுத்தர வயது மனிதனும்.

நான் படகிலேயே உட்கார்ந்திருப்பதைப் பார்த்து படகோட்டி சந்தேகத்துடன் என்னையே கொஞ்ச நேரம் பார்த்தான். நான் பாக்கெட்டிற்குள் இருந்து ஒரு அணாவை எடுத்துப் படகோட்டியிடம் நீட்டியவாறு சொன்னேன்:

“எனக்கு இறங்குவதற்கு நேரமில்லை. திரும்பிச் செல்கிறேன். சாயங்காலத்திற்கு முன்பே நான் தில்லி நகரத்திற்குத் திரும்பிச் செல்லணும்.''

அந்தப் படகோட்டி மேலும் சந்தேகத்துடன் என்னைப் பார்த்துக் கொண்டே நாணயத்தைக் கையில் வாங்கினான். அதற்குள் கரையில் நின்றிருந்த இரண்டு பேரும் படகில் ஏறிவிட்டிருந்தார்கள். அந்த கீரைக் கட்டுப் பெண் படகின் ஓரத்தில் ஒரு சேவலைப் போல நின்றிருந்தாள். சிவப்புத் தலைப்பாகை அணிந்திருந்த மனிதன் எனக்கு அருகில் படகில் குறுக்காக இணைக்கப்பட்டிருந்த பலகைமீது உட்கார்ந்திருந்தான். மொத்தத்தில் மிகவும் அழுக்கடைந்து காணப்பட்ட அந்த மனிதன் மீது எனக்கு ஒரு வெறுப்பு தோன்றியது. சேறும் கறையும் ஒட்டிக் கொண்டிருந்த ஒரு வேட்டியையும் கிழிந்து போயிருந்த ஒரு நீளமான சட்டையையும் அணிந்து, தாடி ரோமங்கள் தாறுமாறாக வளர்ந்திருந்த நீண்ட முகத்துடன் இருந்த அந்த மனிதனின் கண்களில் மட்டுமே ஒரு புனிதம் தெரிந்தது.

துடுப்பை நீருக்குள் செலுத்திப் படகை ஓட்டியவாறு படகோட்டி என்னைப் பார்த்துச் சொன்னான்: “நீங்கள் எப்படி சாயங்காலத்திற்கு முன்பே தில்லி நகரத்தை அடைய முடியும்? சூரியன் மறைய ஆரம்பித்து விட்டது. தில்லி நகரம் ஆறு மைல்களுக்கு அப்பால் இருக்கிறது.''

நான் பதில் சொல்லவில்லை. ஒரு முட்டாளைப் போல எதுவும் பேசாமல் இருந்தேன்.

“நீங்கள் தில்லி நகரத்திற்கா செல்ல வேண்டும்?'' - எனக்கு அருகில் அமர்ந்திருந்த பயணி முகத்தை உயர்த்தியவாறு கேட்டான். “நானும் அங்குதான் போகிறேன். பயப்பட வேண்டாம்.''

நான் பேசவில்லை. அந்த நட்பை நான் விரும்பவில்லை.

அவன் தொடர்ந்து சொன்னான்: “சிறிது நேரம் கடந்தால், நிலவு உதயமாகும்.''

பிறகு அந்த மனிதன் மிகவும் இனிமையாக ஒரு இந்தி மொழிக் கவிதையைப் பாடினான். அதன் அர்த்தம் இதுதான்:

"குளிர்கால நிலவு தலையில் சந்தனச் சாறை ஊற்றும்போது,

காளிந்தியின் மணல் மேடுகள்

கால் பாதங்களை வருடும்போது,

நீர்வஞ்சிக் கொடிகளில் இருந்து

வெள்ளிப் பறவைகளின் காதல் முனகல்கள்

காதல் சிணுங்கல்களைக் கேட்டவாறு,

தோழியே, நாம் சந்தோஷத்துடன் பயணிப்போம்'

அவன் சொன்ன கவிதையில் இருந்த விஷயமும் இசை இனிமையும் என்னை வசீகரித்தன.

அவனுடைய கண்கள் பிரகாசித்தன. அந்த முக ரோமங்களுக்கு மத்தியில் ஒரு புன்னகை நீந்தி வந்தது.

“சகோதரா! இதோ இந்தக் கவிதையைத்தான் அப்படிப் பாடினேன்.''

“அப்படியென்றால் நீங்கள் ஒரு கவிஞரா?'' - ஆச்சரியத்துடன் கேட்டேன்.

அந்த மனிதன் தலையைக் குனிந்து கொண்டு, கையிடுக்கில் இருந்து ஒரு துணிப் பொட்டலத்தை எடுத்து மெதுவாக அதை அவிழ்த்தான். ஒரு நீளமான புத்தகம் வெளியே வந்தது. அந்த நூலை என்னுடைய கையில் நீட்டியவாறு அவன் சொன்னான்: “இது என்னுடைய புதிய நூல். நான் இப்போது கூறிய வரிகள் இதில் இருக்கு.''

நான் அந்த நூலைப் பிரித்துப் பார்த்தேன். அது ஒரு கையெழுத்துப் பிரதியாக இருந்தது.

"சிதையின் தீப்பொறிகள்' -கவிஞர்: "தர்மபால் மிஸ்ரா' என்று முதல் பக்கத்தில் எழுதப்பட்டிருந்தது.

“இது அச்சாகவில்லையா?'' - நான் கேட்டேன்.

“இல்லை. ஏதாவது பிரசுரகர்த்தாவுக்கு விற்பதற்காகக் கொண்டு போய்க் கொண்டிருக்கிறேன்.

“இதில் என்ன விஷயம் இருக்கு? காதலா?''

“ஆமாம்... காதலின் கண்ணீரும் பெருமூச்சுகளும் உணர்த்திய கவிதை. சூடு குறையாத அனுபவங்கள் மற்றும் இதயகாயங்கள் ஆகியவற்றின் வாய்க்கால்கள்தான் இதில் இருக்கும் ஒவ்வொரு வரியும்.''

“சில பகுதிகளை வாசித்துக் காட்ட முடியுமா?''

“முடியும். ஆனால், என்னுடைய வாழ்க்கைக் கதையின் சில பகுதி களைக் கேட்டு முடித்தால், உங்களுக்கு இந்தக் கவிதையை மேலும் அதிகமாக சுவைக்க முடியும். யமுனைக் கரையின் வழியாக நடக்கும் போது, நான் உங்களுக்கு அதைக் கூறுகிறேன். படகு கரைக்கு வந்து விட்டது. நாம் இறங்குவோம்.''

நானும் கவிஞனும் கீழே இறங்கினோம். அந்த சேவலும் கரையில் இறங்கியது. முன்னால் தூரத்தில் போய்க் கொண்டிருந்த இன்னொரு பெண் உருவத்தை அழைத்தவாறு உரத்த குரலில் கூவியது.

பூ நிலவும் நீர்வஞ்சிக் கொடிகளின் நிழல்களும் படர்ந்து கிடந்த நதியின் கரை வழியாக நாங்கள் நடந்து கொண்டிருந்தபோது, கவிஞன் தர்மபால் தன்னுடைய காவியத்தின் கருப்பொருளுக்கு பாதிப்பும் பின்புலமும் தந்த அந்த அந்த சம்பவங்களை ஒவ்வொன்றாக என்னிடம் சொன்னான்.

யமுனைக் கரைக்கு அருகில் இருந்த என்னுடைய குடிசைக்குள், அந்தக் காதல் பொக்கிஷம் மணமகளாக நுழைந்தது நேற்றுத்தான் நடந்ததைப் போல இருக்கிறது. உண்மையிலேயே மூன்று வருடங் களுக்கு முன்பு ஒரு முழு பௌர்ணமி நாளன்று எங்களுடைய திருமணம் நடந்தது. சாந்தாவிற்கு அப்போது பதினேழு வயது நடந்து கொண்டிருந்தது.


சாந்தாவின் அழகு, என்னுடைய கவித்துவம், எங்கள் இருவருக்குமிடையே இருந்த காதல்- இவை மூன்றும் ஒன்று சேர்ந்த ஒரு வாழ்க்கையை நீங்கள் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.

பூ நிலவு உள்ள இரவுகளில், காளிந்தியின் கரைகளில் கிருஷ்ணனும் ராதாவும் போல நாங்கள் விளையாடிக்கொண்டிருப்போம். மாலை நேரங்களில் நான் கடலின் முற்றத்தில் அமர்ந்து கவிதை இயற்றும் போது, சாந்தா யமுனையிலிருந்து நீர் குடத்தைத் தலையில் வைத்துக் கொண்டு ஏறி வரும் அந்தக் காட்சியை நான் எப்படி வர்ணிப்பேன்?

அப்படியே இரண்டு வருடங்கள், இரண்டு நீர்ப் பறவைகள் யமுனையின் மறுகரையில் இருந்து இந்தக் கரைக்குப் பறந்து வருவதைப் போல, அவ்வளவு வேகமாக கடந்து போய்விட்டன.

நான் "சீதையின் தியாகம்’’ என்ற புதிய ஒரு காவியத்தை இயற்றும் வேலையில் ஈடுபட்டு, அதன் முதல் சுலோகத்தைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தபோது, சாந்தா நாணம் கலந்த ஒரு புன்சிரிப்புடன் எனக்கு முன்னால் வந்து நின்றாள். அவளை அந்த அளவிற்குப் பேரழகுடன் முன்பு எந்தச் சமயத்திலும் பார்த்ததில்லை என்று எனக்குத் தோன்றியது.

“செல்லமே, அங்கேயே அப்படியே நில்லு. கணவனுக்கு அருகில் வந்து சீதை நின்று கொண்டிருக்கும் கோலமும், முக வெளிப்பாடும் அப்படியே! நான் என்னுடைய காவியத்தின் முதல் சுலோகத்தில் அதைக் கொண்டு வரட்டுமா? கர்ப்பிணியாக இல்லை என்ற ஒரு குறை மட்டுமே உனக்கு இருக்கிறது.''

“அப்படியென்றால் அதுவும் நடந்த பிறகு இந்த சுலோகத்தை எழுதினால் போதும். இன்னும் எட்டு மாதங்கள் காத்திருக்கக் கூடாதா?''

அர்த்தம் நிறைந்த அந்த வார்த்தைகளைக் கேட்டு, ஆச்சரியத்தாலும் ஆனந்தத்தாலும் நான் சிறிது நேரம் அதிர்ந்து போய்விட்டேன். நான் பேனாவைக் கீழே வைத்துவிட்டு அவளுடைய கண்களையே அமைதியாகப் பார்த்தேன். எங்களுடைய திருமண வாழ்க்கையை ஆசீர்வதிப்பதற்காக ஒரு பைங்கிளி பறந்து வந்துகொண்டிருக்கிறதா என்ன?

நான் அவளுடைய மார்பின் கீழ்ப் பகுதியை அர்த்தம் நிறைந்த ஒரு திருட்டுப் பார்வையுடன் பார்த்தேன். அவள் புடவையைச் சரி செய்துவிட்டு, முன்னோக்கி வந்து என் கழுத்தைக் கட்டிப் பிடித்தாள். என் மார்பின்மீது தன் தலையை வைத்து ஒரு நீண்ட பெருமூச்சை விட்டாள்.

"நீ ஒரு அப்பா ஆகிவிட்டாய்... நீ ஒரு அப்பா ஆகி விட்டாய்” - என் இதயம் அப்படி உரத்த குரலில் கூறுவதைப் போல எனக்குத் தோன்றியது. அந்த இளம் அன்னையின் கன்னத்தில் நான் தொடர்ந்து முத்தமிட்டேன். சாந்தாவின் ஆனந்தக் கண்ணீர்த் துளிகள் என் மார்பை நனைத்தன.

கர்ப்ப சுமையைச் சுமந்துகொண்டு நடக்கும் அவளை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளும் அந்தப் புதிய ஆனந்தத்தில் நான் எல்லாவற்றை யும் மறந்துவிட்டேன். வசந்த நிலவைப் போல அவளுடைய கர்ப்பம் வளர்ந்தது. அந்தப் பௌர்ணமியை எதிர்பார்த்தவாறு நான் மன அமைதி இல்லாமல் வாழ்ந்து கொண்டிருந்தேன். அன்றொரு நாள் சாந்தா என்னுடைய வலக் கையைப் பிடித்து மெதுவாக அவளுடைய வயிற்றின் இடப் பக்கத்தைத் தொடும்படிக் கூறியவாறு சொன்னாள். “இதோ... இங்கே தொட்டுப் பாருங்க. அந்த கில்லாடி பொடிப்பயல் கால்களை அசைக்கிறான். இவன் ஒரு மகா குறும்புக்காரப் பயல்தான்.''

நான் சாந்தாவின் வீங்கிய, மென்மையான, வெள்ளியைப் போல பிரகாசித்துக் கொண்டிருந்த வயிற்றைப் பாசத்துடன் மெதுவாகத் தடவினேன். அவள் வயிற்றுக்குள் உணர்ந்த குழந்தையின் அசைவை என்னால் உணர முடியவில்லை. அவளுடைய மலர்ந்த, நாணத்துடன் இருந்த, அழகான கண்களையே பாசத்துடன் பார்த்துக்கொண்டே நான் கேட்டேன். “அன்பே, அது ஒரு "இவன்” என்று நீ எப்படி தெரிந்து கொண்டாய்?''

சாந்தா என் உள்ளங்கையைப் பிடித்து அழுத்தியவாறு, வயிற்றைப் பார்த்துக்கொண்டே சொன்னாள்: “அதுதான் என் நம்பிக்கை''.

நான் அவளுடைய வெளிறிய வயிற்றையே கண்களை இமைக்காமல் பார்த்துக்கொண்டு நின்றிருந்தேன். அதற்குள்ளே வெளிச்சத்தைப் பார்க்க ஏங்கியவாறு படுத்திருக்கும் ஒரு பச்சைக் குழந்தையின் உருவத்தை, ஒரு கனவில் பார்ப்பதைப் போல நான் பார்த்தேன். பிரசவமாகி வெளியே வந்த பிறகு அவன் கண்களைச் சிமிட்டிக் கொண்டு அழுவதையும், சாந்தாவின் மடியில் ஒரு தாமரை மலரைப் போல படுத்திருப்பதையும், என் சட்டையில் தேன் சொரியும் வாயிலிருந்து சாறை ஒழுக விட்டவாறு என்னுடைய மார்பில் படுத்து விளையாடுவதையும் நான் பார்த்தேன். கர்ப்பப்பையின் இருண்ட அறையில் அவனுக்கு நிலை கொள்ள முடியாமல் இருக்கலாம். உயிரின் முதல் அசைவுகளும், வாழ்க்கையின் என்னவென்று தெரியாத இனிய விஷயங்களும் அவனை அமைதி இல்லாமல் ஆக்கியிருக்கலாம். பாவம்- அவன் சாந்தாவின் கர்ப்பப்பைக்குள் அல்லவா கிடக்கிறான்? அப்படி ஒரு நிம்மதி மட்டுமே எனக்கு இருந்தது.

நான் அவளுடைய வயிற்றை முத்தமிட்டவாறு சொன்னேன்: “அவனுக்கு முதல் முத்தத்தை நானே தருகிறேனே!''

ஒரு புதிய அன்னையின் பெருமையை முகத்தில் காட்டியவாறு சாந்தா சொன்னாள்: “உங்களுடைய மீசை ரோமங்கள் குத்தி அவன் வயிற்றுக்குள் இருந்து கொண்டு அழாமல் இருந்தால் போதும்.''

நாங்கள் இருவரும் விழுந்து விழுந்து சிரித்தோம். திரைச்சீலைக்கு அப்பால் சுருண்டு படுத்திருந்த அந்த அருமைக் குழந்தை, குழந்தைப் பிரியர்களான எங்களுடைய வேடிக்கையான பேச்சுக்கள் எதையும் கேட்டிருப்பானா?

ஆனால், சகோதரரே! மனிதனின் கனவுகள் விதியின் சுடுகாட்டில் சாம்பல் குவியல்களாக மாறுகின்றன. விதியின் தூதனான "நாளை' ஒரு மகா வஞ்சகன்தான்.

அன்று இரவு உணவு சாப்பிட்டு முடித்து நாங்கள் வாசலில் இருந்த மாமரத்திற்குக் கீழே பூ நிலவின் பிரகாசத்தில் சந்தோஷத்துடன் இருந்தோம். களைப்புடன் சாந்தா என்னுடைய மடியில் சாய்ந்தாள்.

“தலைவலி... கடுமையான தலைவலி...'' -அவள் என் மார்பில் நெற்றியை வைத்துக்கொண்டு சொன்னாள்.

நான் மெதுவாக அவளுடைய முகத்தைப் பிடித்து உயர்த்தி நெற்றியைத் தடவினேன்.

“அய்யோ... தாங்க முடியவில்லை. என் தலை இப்போது வெடித்துச் சிதறிவிடும். நீங்கள் எங்கே? நீங்கள் எ...ங்...கே?''

“சாந்தா... சாந்தா...'' - நான் பதைபதைப்புடன் அழைத்தேன். பதில் இல்லை.

ஆமாம்- அவைதான் அவளுடைய இறுதி வார்த்தைகள். "நீங்கள் எங்கே?' மரணத்தின் கண்ணுக்குத் தெரியாத கைகள் அவளை கண்களுக்குப் புலப்படாத இருட்டுக்குள் இழுத்துக் கொண்டு போனபோது, எதுவும் செய்ய முடியாமல் அவள் உரத்த குரலில் கத்தினாள்: "நீங்கள் எங்கே? நீங்கள் எங்கே?'

என்னுடைய மடியில், வாழ்க்கை உறவு இல்லாமல் கிடந்த அந்தக் காதல் கொடியை வைத்துக்கொண்டு நான் நேரத்தைக் கடத்தினேன்... பிறகு நடைபெற்ற சம்பவங்களைத் தெளிவாக நினைத்துப் பார்க்க என்னால் முடியவில்லை.


கிராமத்து மக்கள் அவளுடைய பிணத்தை எடுத்துக்கொண்டு போய், யமுனையின் கரையில் ஒரு சிதையை உண்டாக்கி அங்கு வைத்தார்கள். அவளுடைய பிரசவ காலத்திற்காக சேர்த்து வைத்திருந்த விறகும், எண்ணெய்யும் அந்த சிதைக்கு அதிக உதவியாக இருந்தன. அந்த சிதையிலிருந்து சிதறித் தெறித்த நெருப்புப் பொறிகள் என்னுடைய மூளையைத் தட்டி எழுப்பின. வெளிச்சத்தைப் பார்ப்பதற்காக ஏங்கிக் கொண்டு கிடந்த அந்தக் குழந்தை, சிதையின் சிவந்த நெருப்பு ஜூவாலைகளில் வெந்து கரிந்து கொண்டிருக்கும் காட்சி என்னைப் பைத்தியம் பிடிக்கச் செய்தது... உடம்பு முழுவதும் காயம் பட்ட நிலையில், என்னுடைய பக்கத்து வீட்டுக்காரனான கிஷோரி லாலின் வீட்டின் முன்னறையில் படுத்திருந்த கோலத்தில்தான் பிறகு நான் என்னைப் பார்த்தேன். அந்தச் சமயத்தில் அந்த சிதை அணைந்து உடல் சாம்பலாகி விட்டிருந்தது.

காளிந்தியின் அழகும் குளிர் வெண்ணிலாவும் சந்தித்த அந்தக் கனவு உலகத்தின் வழியாகக் கதை கூறிக்கொண்டு சென்ற எங்களுக்கு முன்னால், தூரத்தில் பழைய தில்லியின் மின் விளக்குகளின் வெளிச்சம் தெரிந்தது. வெண்ணிலாவில் சந்தன அரண்மனைகளைப் போல தோன்றிய அந்த மணல் மேடுகளைக் கடந்த நாங்கள், போலித்தனமும் அசுத்தமும் நிறைந்த பிரதான சாலைக்குள் நுழைந்தோம்- கனவில் இருந்து உண்மைக்கு.

நான் கவிஞனிடம் கேட்டேன்: “இந்தக் காவியத்தை பிரசுரகர்த்தாக் களிடம் விற்றால், உங்களுக்கு எவ்வளவு பணம் கிடைக்கும்?''

அவன் வருத்தத்துடன் சொன்னான்: “இருபத்தைந்து ரூபாய் கிடைத்தால் நான் அதிர்ஷ்டசாலி. கனவு உலகத்திலிருந்து கண்விழிக்கும்போது, நான் வயிறு உள்ள ஒரு மனிதப் பிறவி என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். வயிற்றுப் பிழைப்பிற்காக சிதையில் கிடந்து எரிந்துகொண்டிருக்கும் என்னுடைய அன்பு மனைவியையும், பிறக்காத குழந்தையையும் கவிதை மூலம் விற்கும் கட்டாயத்தில் நான் இருக்கிறேன். சகோதரரே, வாழ்க்கை என்பது அப்படித்தான்...''

நான் கவிஞனிடம் விடை பெற்றேன்.

பட்டினியைப் போக்குவதற்காக போலித்தனமும் கபடமும் நிறைந்த நகரத்துடன் நட்பு கொள்ளச் செல்லும் கிராமத்தின் அந்தக் கனவுப் புதையல் என் கண்களில் இருந்து மறைந்தது.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.