Logo

ஒரு ரூபாய் கடன்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 6444
oru rubai kadan

ட்டு வருடங்களுக்கு முன்பு அது நடந்தது. ஆனால், இப்போதும் அந்த சோகம் கலந்த ரகசியம் என்னைத் துன்பப்படுத்திக் கொண்டேயிருக்கிறது.

1934-ஆம் வருடம் மே மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமை. மங்காளபுரத்திலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு வாரத்திற்கு இரண்டு முறை பாம்பாய்க்குச் செல்லக் கூடிய கப்பல் மழைக் காலம் வந்து விட்டால் ஓடுவதில்லை.

மழைக் கால ஆரம்பத்தின் இறுதிப் பயணம் அது. அதனால் எப்போதையும்விட அதிகமான பயணிகள் கப்பலின் "டெக்"கில் இடம் பிடித்திருந்தார்கள். "டெக்"கில் நிறைந்திருந்த பயணிகளுக்கு மத்தியில், வேலை தேடியும் புதிய அனுபவங்களைச் சுவைத்துப் பார்க்கத் தயார்படுத்திக் கொண்டும் யாரிடமும் கூறாமல் வீட்டை விட்டு ரகசியமாக ஓடி வந்த மாணவனான இந்த கட்டுரை எழுதுபவனான நானும் இருந்தேன். அதற்கு முன்பு ஒரு நீண்ட பயணம் செய்த அனுபவம் எனக்கு இல்லை. முன்பு ஒரு கப்பலைப் பார்க்கக் கூட செய்திராத எனக்கு இந்தக் கப்பல் பயணம் மிகப் பெரிய புத்துணர்ச்சியை அளிப்பதாகத் தோன்றியது. தாய்- தந்தையையும் வீட்டையும் நன்கு அறிமுகமான இடங்களையும் விட்டுப் பிரிந்து, ஆபத்துக்கள் நிறைந்த அனுபவங்களைப் பெறவேண்டும் என்ற இளைஞர்களுக்கே உரிய ரசனையின் வேகமான வெளிப்பாட்டுடன் தயாராகிப் புறப்பட்ட விகேகமற்ற அறிவைக் கொண்ட எனக்கு முன்னால், இருட்டும் தெளிவற்ற தன்மையும் உள்ள வழியின் இன்னொரு எல்லையில் ஒன்றை மட்டும் நான் மங்கலாகத் தெரிவதைப் பார்த்தேன். மிக மதிப்பு மிக்க அழகுணர்வுடன் இருந்த

கட்டிடங்கள் வரிசையாக நின்றிருந்த மிகப் பெரிய ஒரு நகரமான "பாம்பாய்".

பயணிகளின் பேச்சு சத்தங்களும், பாய் விரிப்பதும், பொருட்களைத் தேடுவதும், உரத்த குரல்களும், ஆரவாரங்களும் ஒரு விதத்தில் அடங்கின.

நான் ஒவ்வொரு இடமாக சவுகரியமாக இருப்பதற்காகத் தேடிப் பார்த்தேன். "டெக்"கின் நடுவில் எனக்கு மிகுந்த சிரமத்திற்குப் பிறகு போர்வையை விரிப்பதற்கு மட்டும் ஒரு இடம் கிடைத்தது. என்னுடைய சூட்கேஸையும் சுமையையும் விரிப்பின் தலைப்பகுதியில் பத்திரமாக வைத்துவிட்டு நான் சற்று சாய்ந்து படுத்தேன். கப்பலும் சற்று அசைந்து, சாய்ந்து, "தக்...தக்" என்ற சத்தத்தை எழுப்பியவாறு சிறிது நேரம் நின்றது. தொடர்ந்து ஒரு முறை கூவியவாறு மெதுவாக நகர்ந்தது.

கடல் அமைதியாக இருக்கவில்லை. வானம் கறுத்து மேகங்களுடன் இருந்தது. அவ்வப்போது ஒரு காற்றும் வீசிக் கொண்டிருந்தது. கடல் மேலும் கீழுமாக ஆடிக் கொண்டிருந்தது. அலைகள் குட்டிக் கரணம் அடித்துக் கொண்டிருந்தன. குலுங்கிக் கொண்டும் சாய்ந்து கொண்டும் "பத்ராவதி" நகர்ந்து கொண்டிருந்தது.

பத்து மணி அடித்தபோது மங்களாபுரம் துறைமுகம் பார்வையிலிருந்து முழுவதுமாக மறைந்தது. தென்னை மரங்களால் பச்சைக் கரை போட்ட கடற்கரையைப் பார்த்துக் கொண்டே, கரையிலிருந்து மிகவும் தூரத்தில் கப்பல் நீங்கிக் கொண்டிருந்தது. துறைமுகத்திலிருந்து நீங்க நீங்க என்னுடைய இதயமும் அந்தக் கப்பலைப்போல அமைதியற்றதாக ஆகிவிட்டது. வீட்டையும் வீட்டிலிருக்கும் சுக சவுகரியங்களையும் தாய்- தந்தையின் பாசமும் அன்பும் அடங்கிய பாதுகாப்பையும் விட்டுவிட்டு, இளமைப் பருவத்திற்கும் வாலிபப் பருவத்திற்குமிடையே

உண்டான போராட்டத்தின் விளைவாக மன தைரியம் என்ற ஒன்றை மட்டுமே கருவியாக வைத்துக் கொண்டு, வாழ்க்கையின் புதிய ஒரு போராட்ட களத்தை நோக்கி பாய்ந்து செல்வதற்குத் துணிச்சல் கொண்டு இந்த அளவிற்கு வந்து விட்டாலும், இந்த நிலையில் இடையில் அவ்வப்போது ஒரு கவலையும் இனம் புரியாத ஒரு பயமும் என்னை அசைக்க ஆரம்பித்தது. பயம், கவலை ஆகியவற்றின் ஓட்டம் அதிக நேரம் நீடிக்கவில்லை. கப்பல் அடுத்த துறைமுகத்தை அடைந்தபோது, புதிய காட்சிகளில் என்னுடைய மனம் மூழ்க ஆரம்பித்தது. படிப்படியாக நான் எல்லாவற்றையும் மறந்து விட்டு, காட்சிகளைப் பார்த்து ரசிக்க ஆரம்பித்தேன்.

தனி மலையாளி பாணியில் ஆடைகள் அணிந்த ஒரு இளைஞன் எனக்கு அருகில் நின்று கொண்டிருந்தான். உரையாடுவதற்கு ஒரு ஆள் கிடைக்காமல் கவலைப்பட்டுக் கொண்டிருந்த நான் புன்சிரிப்பைத் தவழவிட்டவாறு அவனிடம் கூறினேன்: "பார்க்கும்போது ஒரு மலையாளி என்று தோன்றுகிறதே!'' அவன் என்னுடைய வார்த்தைகளைக் கேட்டது மாதிரியே காட்டிக் கொள்ளவில்லை.

நான் அவனையே கூர்ந்து பார்த்தேன். வாலிபத்திற்குள் இன்னும் நுழையவில்லை. இளம் பிராயத்தைச் சேர்ந்தவனாகவும் இல்லை. வெளுத்த அழகான உடலைக் கொண்டிருந்தான். கறுத்து அடர்த்தியாக வளர்ந்திருந்த சந்தேகப்படுகிற அளவிற்கு சுருள்களைக் கொண்ட தலை முடி... கறுத்த, அகலமான, கவலைகள் நிறைந்த விழிகள்... வெள்ளை நிற வேட்டியையும் மெல்லிய கோடுகள் போட்ட அரைக்கை சட்டையையும் அணிந்திருந்தான். "டெக்"கின் பலகையைப் பிடித்துக் கொண்டே அவன் கடலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

"ஏய் மிஸ்டர்... சொந்த ஊர் எது'' நான் ஆங்கிலத்தில் கேட்டேன்.

அவன் முகத்தைத் திருப்பி என் முகத்தையே வெறித்துப் பார்த்தான். அவனுடைய பேரமைதியையும் சந்தேகம் கலந்திருந்த பார்வையையும் பார்த்து நான் மிகவும் தர்மசங்கடமான நிலைக்குள்ளாகி விட்டேன். என்றாலும், ஒரு நண்பன் கிடைக்க வேண்டும் என்ற ஆவல் என்னுடைய நாக்கிற்கு மீண்டும் பலத்தை அளித்தது. "அங்கு அப்படி கவலைப்பட்டுக் கொண்டு நிற்க வேண்டாம். இங்கே உட்காரலாம்.''

அவன் தயங்கியவாறு ஒரு சிலையைப்போல அங்கேயே நின்றிருந்தான். எந்தவொரு அசைவுமில்லை.

"நாயர்... உட்காருவதற்கு ஒரு மேற்துண்டுகூட எடுக்காமல் கப்பலில் ஏறியாச்சு.''

பின்னாலிருந்து ஒரு முஸ்லிம் அதைக் கூறினார். பம்பாயில் இருக்கும் ஒரு மேஜை, நாற்காலிகள் தயாராகும் இடத்தில் பிரம்பு வேலைகள் செய்யும் மனிதர்.

"ஏய் மிஸ்டர்...'' நான் அவனை அன்புடன் மீண்டும் அழைத்தேன். "அங்கே அப்படியே நின்று கொண்டிருந்தால், கப்பல் குலுங்குவதால் தவறி விழுந்து விடுவீர்கள். ஆட்சேபணை இல்லையென்றால், இந்த விரிப்பில் வந்து உட்காருங்க.''

முஸ்லிம் என்னுடைய காதில் சொன்னார்: "பாவம், எதுவுமே தெரியாத ஒரு அப்பிராணி நாயர் பையன்... நீங்கள் அவனுக்குத் தேவையான உதவியைச் செய்து தரணும். சரியா?''

என்னுடைய வற்புறுத்தலின் காரணமாக அவன் என்னுடைய விரிப்பின் தலைப் பகுதியில் வந்து உட்கார்ந்தான். ஆனால், அந்த மவுன விரதத்திற்கு எந்தவொரு குறைவும் உண்டாகவில்லை.

சிறிது நேரம் அதே நிலை நீடித்தது. நான் என்னுடைய பலகாரப் பொட்டலத்தை அவிழ்த்து விரிப்பில் பிரித்து வைத்தேன். அந்தக்

கப்பலில் பயணம் செய்து பழக்கமான ஒரு மனிதரின் அறிவுரையின்படி மங்களாபுரம் கடை வீதியில் வாங்கிய அவல் பழம், பேரீச்சம் பழம், ஆரஞ்சு போன்ற தின்னும் பொருட்கள் நிறைந்த பொட்டலம் அது.

"சாப்பிடுவோம்...'' நான் என்னுடைய புதிய நண்பனை அழைத்தேன். அவன் தயங்கினான். நான் மீண்டும் வற்புறுத்தியபோது, அவன் ஒரு பேரீச்சம் பழத்தை எடுத்தான்.


"உங்களுடைய சொந்த ஊர் எது?'' நான் தின்று கொண்டிருப்பதற்கு மத்தியில் கேட்டேன்.

"சொச்சி மாநிலம்.'' மென்மையான குரலில் அவன் பதில் கூறினான்.

"எங்கே போறீங்க?''

பதில் இல்லை.

எங்கு போகிறோம் என்பதைப் பற்றி அவனுக்கே உறுதியாகத் தெரியவில்லை போலிருக்கிறது என்று, அந்த முகத்தின் தெரிந்த உணர்ச்சிகளைப் பார்த்தால் தோன்றும்.

அவனுடைய தயக்கத்தைப் பார்த்து நான் மெதுவான குரலில் கேட்டேன்: "டிக்கெட் இருக்கிறதா?''

அவன் பாக்கெட்டிலிருந்து ஒரு டிக்கெட்டை எடுத்துக் காட்டினான். "கம்ப்டா"விற்குச் செல்லக் கூடிய ஒரு கப்பல் சீட்டு.

"அங்கு உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாரும் இருக்கிறார்களா?''

"யாருமில்லை.''

"பிறகு... அங்கு எதற்காகப் போகிறீர்கள்?''

மவுனம்.

"உங்கள் கையில் பெட்டி, பொருட்கள் எதுவும் இல்லையா?''

அவன் "இல்லை" என்ற அர்த்தத்தில் தலையை ஆட்டினான்.

"உங்களுடைய பெயர் என்ன?''

சிறிது தயக்கத்துடன் அவன் சொன்னான்: "நாராயண மேனன்...''

நாராயண மேனன் என்று அவன் சொன்னான். அவனுடைய பெயர் அதுதானா என்ற உண்மை எனக்கு இப்போதும் தெரியாது.

அவனுடைய பாக்கெட்டில் இருந்த ஒரு சிவப்பு நிறத் தாளைப் பார்த்து நான் கேட்டேன். "என்ன அது? திரைப்பட நோட்டீஸா?''

அவன் அந்தத் தாள்களை வெளியே எடுத்தான். "எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு வினாத்தாள்கள்.''

நான் அவற்றை ஒவ்வொன்றாகப் புரட்டிப் பார்த்தேன். கணக்குத் தாளில் இருந்த கேள்விகளுக்கு நேராக அவன் பதில்களைக் குறித்து வைத்திருந்தான். கூர்ந்து பார்த்தபோது, பதில்கள் பெரும்பாலும் சரியாக இருப்பதை நான் பார்த்தேன்.

தேர்வு முடிந்தவுடன், வீட்டிலிருந்து ஓடி வந்திருக்கும் ஒருவனாக அவன் இருக்க வேண்டும் என்று நான் மனதில் நினைத்தேன்.

என்னுடைய அன்பான உரையாடலையும் நட்பு கலந்த நடவடிக்கைகளையும் பார்த்தபிறகு நாராயண மேனனுக்கு என்மீது ஒரு நம்பிக்கை உண்டானது. தான் வீட்டிலிருந்து யாருக்கும் தெரியாமல் ஓடி வந்துவிட்ட விஷயத்தை அவன் இறுதியில் ஒப்புக் கொண்டான். ஆனால், எவ்வளவு தடவைகள் கேட்ட பிறகும், அதற்கான காரணத்தை அவன் கூறவே இல்லை. அவனிடமிருந்து கேட்டுத் தெரிந்து கொண்ட மீதி விஷயங்களின் சுருக்கம் இதுதான். கைவிரலில் அணிந்திருந்த மோதிரத்தையும் தங்க பொத்தான்களையும் விற்பனை செய்ததன்

மூலம் பயணச் செலவிற்கான பணம் கிடைத்தது. முதலில் கோழிக்கோட்டிற்கு வந்து வேலை தேடி சில நாட்கள் சுற்றித் திரிந்திருக்கிறான். ஒரு வாரம் கடந்ததும். தலசரிக்கு வந்திருக்கிறான். அங்கு நான்கைந்து நாட்களைச் செலவிட்டிருக்கிறான். பிறகு மங்களாபுரத்திற்கு வந்து மிகவும் சிரமப்பட்டிருக்கிறான். பம்பாய்க்குச் செல்வதுதான் சரி என்று யாரோ ஒருவர் அறிவுரை கூறியிருக்கிறார். அங்கிருந்து பம்பாய்க்கு கப்பல் கட்டணம் 9 ரூபாய் 8 அணா. மேனனின் கையில் மூன்று ரூபாய்கள் மட்டுமே மீதியிருந்தது. மங்களாபுரத்தை விட்டு உடனடியாக வெளியேறி ஆகவேண்டும் என்ற அவசரமும் பம்பாயை அடைய வேண்டும் என்ற ஆவலும் அவனை குழப்பத்திற்குள்ளாக்கியது. இறுதியில் தன் கையில் இருந்த பணத்திற்கு எவ்வளவு தூரம் பயணம் செய்ய முடியுமோ, அந்த தூரத்திற்கு ஒரு சீட்டு வாங்கி, கப்பலில் ஏறி உட்கார்ந்திருக்கிறான்.

ஒரு பெரிய சிந்தனையற்ற, முட்டாள்தனத்துடன் அவன் செயல்பட்டிருக்கிறான் என்ற விஷயத்தை வெளிப்படையாக அவனிடம் கூறுவதற்கு நான் தயங்கினேன். இதோ ஒரு பயணி... கம்ப்டாவிற்குச் செல்லக் கூடிய ஒரு கப்பல் டிக்கெட், பாக்கெட்டில் இரண்டு மூன்று தேர்வு வினாத்தாள்கள், அணிந்திருக்கும் சட்டையும் வேட்டியும்... இவ்வளவுதான் கையில்!

அவனை காலிலிருந்து தலை வரை ஒரு பரிதாப நிலை ஆக்கிரமித்துவிட்டிருந்தது. மன தைரியம் என்ற விஷயம் அவனைச் சிறிதுகூட தொட்டுப் பார்க்கவில்லை. பயம் கலந்த எண்ணங்கள் காரணமாக இருண்டு போன மனதுடன், கடலுக்கு அப்பால் தெரிந்த வெற்றிடத்தையே உணர்ச்சியே இல்லாமல் பார்த்துக் கொண்டு, என்னுடைய விரிப்பில் அவன் உட்கார்ந்திருந்த அந்த காட்சியை நான் இப்போதும் தெளிவாக கண்களுக்கு முன்னால் பார்க்கிறேன். அவன் ஒரு புன்னகையின் சிறு அடையாளத்தைக்கூட வெளிப்படையாகக்

காட்டியதாக எனக்கு ஞாபகத்தில் இல்லை. கரையிலிருந்து கடலுக்கு வந்த அவன், கடலிலிருந்து பிடித்துக் கரையில் போடப்பட்ட மீனைப் போல தனியாக உட்கார்ந்து தேம்பிக் கொண்டும் முனகிக் கொண்டும் இருந்தான்.

பம்பாய் பல்கலைக் கழகம் நடத்தும் மெட்ரிகுலேஷன் தேர்விற்காகப் போய்க்கொண்டிருக்கும் சில கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் மங்களாபுரத்திலிருந்து எங்களுடைய கப்பலில் ஏறியிருந்தார்கள். காஷ்மீரைச் சேர்ந்த ஒரு குங்கும வியாபாரி, பம்பாயில் க்ளார்க்காகப் பணியாற்றும் ஒரு மனிதன்- இப்படி நாங்கள் சிலர் நண்பர்களாக ஆனோம். நாங்கள் தமாஷாகப் பல விஷயங்களையும் பேசிக் கொண்டும் நேரத்தைச் செலவிட்டுக் கொண்டிருந்தாலும், நாரயண மேனன் சோகத்தில் மூழ்கியவாறு ஒரு தனிமை உலகில் இருந்துகொண்டு அசையாமல், எதுவும் பேசாமல் விழித்துக் கொண்டு ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டிருந்தான். நாங்கள் எவ்வளவு முயற்சி செய்து பார்த்தும், அவனுடைய நடவடிக்கைகளில் ஒரு பிரகாசத்தை சிறிதுகூட உண்டாக்குவதற்கு எங்களால் முடியவில்லை.

மிகவும் வற்புறுத்தினால் ஏதாவது பேசுவான். ஆங்கிலத்தில் உரையாடி அதிகப் பழக்கமில்லை. சைகையால் பதில் கூறுவான். தந்தையும் தாயும் மிகவும் அருமையாக வளர்த்த, வீட்டையும் பள்ளிக்கூடத்தையும் மட்டுமே பார்த்துப் பழகிய ஒரு குழந்தை... பரந்து கிடந்த உலகம் அவனை பதைபதைப்பு கொள்ளச் செய்தது. இருள் மூடியிருந்த எதிர்காலம், அறிமுகமில்லாத மனிதர்கள், சிறிதும் தெரிந்திராத கன்னட மொழி- இவை அவனை சிரமத்திற்குள்ளாக்கின. வீட்டைப் பற்றிய நினைவுகள் கனவு வடிவத்தில் அவனைச் சந்தித்துக் கொண்டிருந்தன. சந்தேகப் பார்வை இல்லாமல் எதையும் பார்க்க அவனால் முடியவில்லை.

காற்றும் மழையும் மிகவும் பலமாக இருந்தன. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளியைப்போல கப்பல் நீங்கிக் கொண்டிருந்தது. பயணிகளில் சிலர் வாந்தி எடுக்க ஆரம்பித்தார்கள். கடலைப் பார்த்தால், கடலுக்கு பயங்கரமான வாந்தி வந்து விட்டிருக்கிறதோ என்பதைப்போல தோன்றும்.

நாங்கள் வாந்தி வராமல் இருக்க வேண்டும் என்பதற்காகப் படுத்தோம். திடீரென்று நாராயண மேனன் மிகுந்த சத்தத்துடன் வாந்தி எடுத்தான். நாங்கள் அவனுடைய உடலைப் பிடித்துத் தடவி, முடியக் கூடிய முதலுதவிகளைச் செய்தோம். சிறிது வாந்தி எடுத்த பிறகு, அவன் ஒரு பிணத்தைப்போல படுத்துக் கிடந்தான். அவனுடைய முகம் தாளைப்போல வெளிறிப் போய், முழுமையாக வியர்வையில் குளித்திருந்தது.

"என்ன வேண்டும்?'' நான் கனிவாகக் கேட்டேன்.

"எதுவும் வேண்டாம்" என்ற அர்த்தத்தில் அவன் தலையைக் குலுக்கினான்.


"இந்த நண்பர் எங்கே போகிறார்!'' கர்நாடகாவைச் சேர்ந்த மாணவர்களில் ஒருவன் கேட்டான்.

நான் நாராயண மேனனின் நிலைமையைச் சுருக்கமான அவர்களிடம் கூறித் தெரிய வைத்தேன்.

"கம்ப்டாவிற்கா? அய்யோ... அங்கு போய் இவர் என்ன செய்யப் போகிறார்? வறுமையின் பிடியில் சிக்கிய ஒரு இடம் அது. புகைவண்டி பாதை இல்லாததால் ஒரு சிறிய துறைமுகமாக இருக்கும் அந்த இடத்தில், கையில் காசு இல்லாமல், மொழி தெரியாமல், தெரிந்த மனிதர்கள் யாருமில்லாமல், சாதாரண ஒரு குழந்தையைப்போல இருக்கும் இவர் எப்படி இருக்க முடியும்? அங்கே கிடந்து சாவதைத் தவிர வேறு வழியே இல்லை. தப்பித்துச் செல்வதற்குக்கூட வழியில்லை.

அப்படிக் கூறப்பட்டதில் ஒரு பகுதியை நாராயண மேனனும் கேட்டிருக்க வேண்டும். அவன் மெதுவாகத் தலையைத் தூக்கி, அந்த மாணவனை நோக்கிப் பரிதாபமாக ஒரு பார்வை பார்த்தான்.

எங்களுக்கு மேனனின்மீது மிகுந்த பரிதாபம் உண்டானது. மாணவர்களுக்கு எல்லா இடங்களிலும் இரக்கம் கிடைக்கும். அவனுக்கு பணத்தைக் கொண்டு உதவக் கூடிய நிலைமை எங்கள் யாருக்கும் இல்லாமலிருந்தது.

இன்னொரு மாணவன் சொன்னான்:

"நாம் இவரை இப்படி விட்டுவிடக் கூடாது. பாருங்க... கடல் எந்த அளவிற்கு ஆரவாரித்துக் கொண்டிருக்கிறது? கப்பல் நள்ளிரவு நேரத்திற்குள் அங்கு போகும். படகிலேயே இவருடைய வேலை முடிந்து விடும்.''

"இவரை எப்படிக் காப்பாற்றுவது?''

"நாம் ஆலோசனை செய்து முடிவு எடுக்க வேண்டும்.''

நாங்கள் நீண்ட நேரம் ஆலோசித்தோம். ஆனால், ஒரு முடிவையும் எடுக்கவில்லை.

மத்தியானம் கடந்தது. உணவு சாப்பிட வேண்டும். கப்பலில் ஒரு போற்றியின் ஹோட்டல் இருந்தது. சாப்பாட்டுக்கு 6 அணா கட்டணமாக வாங்கப்பட்டது. நான் இரண்டு சாப்பாட்டுக்கு ஆர்டர் கொடுத்தேன். மேனன், சாதத்தில் குழம்பை ஊற்றிக் குழைத்து ஒரு கைப்பிடி அளவை எடுத்து வாய்க்குள் போட்டான். அதை மென்று உள்ளே இறக்க அவனால் முடியவில்லை. குழம்பின் ருசி அவனுக்கு வாந்தியை வரவழைத்தது. சாதம் இருந்த தட்டைத் தூரத்தில் நகர்த்தி வைத்துவிட்டு, அவன் தலையைக் குனிந்து கொண்டு உட்கார்ந்திருந்தான். அழ ஆரம்பித்தான்.

என்னுடைய வற்புறுத்தலால் அவன் கொஞ்சம் வெறும் சாதத்தையும் ஊறுகாயையும் சாப்பிட்டான். எஞ்சியிருந்த சாதத்தையும் குழம்பையும் நாங்கள் கடலுக்குள் ஏறிந்தோம்.

இரவிலும் அதேதான் நடந்தது. ஒரு பிடி சோறுகூட வயிற்றுக்குள் போகவில்லை. நான் மேனனை பாசத்துடன் தட்டினேன்: "நீங்கள் எதையாவது சாப்பிட வில்லையென்றால், சோர்வு காரணமாக உடல் நலக்கேடு உண்டாகும். கவனமாக இருக்க வேண்டும்.''

அவன் தலையைக் குலுக்கியவாறு "முடியவில்லை" என்று மட்டும் சொன்னான். இறுதியில் நான் அவனுக்கு ஒரு ரொட்டியை வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தேன். அவன் கொஞ்சமாகப் பிய்த்துத் தின்ன ஆரம்பித்தான்.

மிகவும் பலமாக வீசிக் கொண்டிருந்த ஒரு காற்றின் வேகத்துடன் சேர்ந்து கப்பல் கம்ப்டாவை அடைந்தது. இருள் சூழ்ந்த கடலின் ஓரத்தில் ஊஞ்சலாடிக் கொண்டிருந்த படகுகளில் இருந்த சிவப்பு நிற வெளிச்சம் மட்டுமே கண்களில் தெரிந்தது.

கப்பலில் இருந்து பயணிகளையும் பொருட்களையும் ஏற்றிக் கொண்டு போவதற்கான கம்பெனியைச் சேர்ந்த படகு, காற்றின் காரணமாக தாமதமாக அங்கு வந்து சேர்ந்தது. கப்பலில் இருந்து படகிற்கு ஏணி இறக்கப்பட்டது.

ஆனால், யுத்தம் செய்து கொண்டிருந்த அலைகளில் சிக்கி படகு எந்தவிதத்திலும் கப்பலுடன் சேர்ந்து வந்து நிற்கவில்லை. படகு, கப்பலுடன் சேர்ந்து ஒட்டி நின்றபோது, ஏணியின் இருபக்கங்களிலும்

நின்று கொண்டிருந்த கப்பல் பணியாட்கள், பயணிகளை, ஆண்- பெண் வேறுபாடே பார்க்காமல், வெறும் பொருட்களைப்போல படகிற்குள் தள்ளி விட்டுக் கொண்டிருந்தார்கள். பெண்களின் கூப்பாட்டையும் குழந்தைகளின் பயங்கரமான ஓலத்தையும் காதிலேயே வாங்கிக் கொள்ளாமல் அவர்கள் தங்களுடைய செயலை நிறுத்தாமல் செய்து கொண்டிருந்தார்கள். நாங்கள் அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தோம். நாராயண மேனன் அங்குதான் இறங்க வேண்டும். அவன் எங்களுடைய முகத்தையே பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.

"இங்கே இறங்க வேண்டாம். உங்களை எப்படியாவது பம்பாயில் கொண்டு போய் விடுகிறோம்.'' மாணவர்கள் கூறினார்கள்.

நாராயண மேனன் சந்தேகத்துடன் நின்றிருந்தான். பேரிரைச்சலுடன் புரண்டு கொண்டிருந்த கடல் அவனை பயமுறுத்தியது. அவன் ஏணியின் பக்கமாக நடந்தான். குதித்துப் புரண்டு ஆராவரித்துக் கொண்டிருந்த கடலைப் பார்த்து பின்னோக்கித் திரும்பி வந்தான்.

"நீங்கள் தைரியமாக அங்கே உட்காருங்கள்.'' நான் மேனனை ஒரு இடத்தில் பிடித்து உட்கார வைத்தேன்.

ஒரு மணி நேரம் கடந்தது. கப்பல் அந்தச் சிறிய துறைமுகத்தை விட்டு நகர்ந்தது. நாராயண மேனன் எங்களுடன்தான் இருந்தான்.

இரவில் அவனுக்குச் சிறிதுகூட தூக்கம் வரவில்லை. கம்ப்டாவிலிருந்து கிளம்பியதிலிருந்து டிக்கெட் இல்லாத ஒரு குற்றவாளியைப் போல அவன் பயணம் செய்து கொண்டிருந்தான்.

மறுநாள் காலையில் அவன் ஒரு குழந்தையைப்போல அழுது கொண்டே என்னிடம் சொன்னான்: "எனக்கு என்ன நடக்கப் போகிறது என்று தெரியாது. நீங்கள் என்னைக் காப்பாற்ற வேண்டும்.''

நான் பலவற்றையும் கூறி மேனனைச் சமாதானப் படுத்தினேன். நானும் அவனைப் போலவே வீட்டை விட்டு வெளியே வந்திருக்கிற ஒருவன்தான் என்றும், தன்னம்பிக்கையும் பொறுமை குணமும் தைரியமும்தான் அப்படிப்பட்டவர்களுக்கு வேண்டும் என்றும், பம்பாயை அடைந்து விட்டால் அனைத்தும் நல்லதில் போய் முடியும் என்றும் ஒரு பணியில் இருக்கும் மனிதனாக சொந்த ஊருக்குத் திரும்பி வரலாம் என்றும் நான் கூறியதைக் கேட்டு, அவன் மனதில் சமாதானமடைந்தான்.

மத்தியானம் நாங்கள் கோவா துறைமுகத்தைத் தொட்டோம். கப்பல் அங்கு ஆறு மணி நேரம் தங்கி நிற்கும் என்பதால், கப்பல்காரர்களும் பயணிகளும் கோவா நகரை சுற்றிப் பார்ப்பதற்கும் உணவு சாப்பிடுவதற்கும் அங்கு இறங்குவார்கள். வரலாற்றுப் புகழ் பெற்ற அந்தப் பழமையான போர்த்துக்கீசிய நகரத்தின் அழகான காட்சிகளைப் பார்க்க வேண்டும் என்று நாங்கள் தீர்மானித்தோம். ஆனால், நாராயண மேனனை எங்களுடன் அழைத்துச் செல்ல எங்களுக்கு முடியவில்லை. காரணம்- கப்பலில் இருந்து பந்தருக்குச் செல்லும்போது, அங்கு ஒரு டிக்கெட் பரிசோதனையாளர் நின்று கொண்டிருப்பார். நோய் இருப்பதாகக் காட்டிக் கொண்டு மேனன் கப்பலிலேயே படுத்திருந்தான். நாங்கள் ஒரு வாடகைக் காரில் கோவா நகரம் முழுவதையும் சுற்றிப் பார்த்து விட்டு, ஹோட்டலில் சுகமான உணவையும் சாப்பிட்டு முடித்து விட்டு, சாயங்காலம் ஐந்து மணிக்குத் திரும்பி வந்தோம்.

நான் நாராயண மேனனுக்கு கொஞ்சம் பிஸ்கட், பழம், வறுத்த வேர் கடலை, ஆரஞ்சுப்பழம் ஆகியவற்றை வாங்கி கையில் வைத்திருந்தேன்.


சாயங்காலம் ஆறு மணிக்கு கப்பல் கோவா துறைமுகத்தை விட்டுப் புறப்பட்டது. மிகவும் குறைவான விலையில் வெளிநாட்டு மது வகைகளும் உள்நாட்டு மது வகைகளும் கிடைக்கக் கூடிய ஒரு இடம்

கோவா. மதுவை விரும்பக் கூடிய பயணிகள் எல்லாரும் தங்களால் முடிந்த அளவிற்கு மதுவை உட்கொண்டு விட்டுத்தான் கப்பலுக்கே வந்தார்கள். கப்பல்காரர்களின் கதையைப் பற்றிக் கூறவே வேண்டாம். மாலுமிகளிலிருந்து கூலி வேலை செய்பவர்கள் வரை மூக்கு முனைவரை குடித்துவிட்டு மதி மறந்த நிலையில்தான் திரும்பியே வந்தார்கள். போதையில் மூழ்கி இருந்த பயணிகள், பாட்டு பாடிக்கொண்டும் ஒவ்வொன்றையும் கூறிப் புலம்பிக் கொண்டும் தங்களுக்குள் ஆரவாரம் எழுப்பியவாறு கூத்தாடிக் கொண்டிருந்தார்கள்.

கோவாவை விட்டுப் புறப்பட்டவுடன், சூழ்நிலை மிகவும் அமைதியாகவும் பிரகாசமானதாகவும் மாறியது. கருமேகங்கள் இல்லாத வானத்திலிருந்து மறைந்து கொண்டிருந்த சூரியன் கடலின் மீது தங்க ஊசிகளைப் பொழிந்து கொண்டிருந்தது. கடலின் மேற்பகுதி நீலப்பட்டையைப்போல மின்னிக் கொண்டிருந்தது. நாங்கள் இரண்டு குழுக்களாக அமர்ந்து சீட்டு விளையாடிக் கொண்டிருந்தோம். விளையாட்டில் பங்கு பெறாத நாராயண மேனன் என்னுடைய விரிப்பில் கண்களை மூடிக் கொண்டு தூக்கத்தில் இருப்பதைப்போல படுத்திருந்தான். திடீரென்று எங்களின் கூட்டத்திலிருந்த ஒரு இளைஞன் ஓடி வந்து சொன்னான்: "டிக்கெட்டை சோதித்துப் பார்க்கிறார்கள்!''

நாராயண மேனன் வேகமாக எழுந்தான். "கப்பல் இதோ மூழ்கப் போகிறது!'' என்று கூறினால்கூட, ஒரு மனிதனின் முகம் அந்த அளவிற்கு கலவரம் நிறைந்ததாகவும், பார்க்க சகிக்க முடியாத அளவிற்கும் இருக்காது. அவனுடைய முகத்தில் தெரிந்த உணர்ச்சி வெளிப்பாடு மிகவும் பயங்கரமாக இருந்தது.

நாங்கள் விளையாட்டை நிறுத்திவிட்டு ஒன்றாக உட்கார்ந்து தீவிரமாக ஆலோசனை செய்வதில் ஈடுபட்டோம். "நாம இப்போ என்ன செய்வது?''

மாணவர்களில் ஒருவன் சொன்னான்: "அந்த டிக்கெட் பரிசோதகரின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு தப்பிப்பது என்பது மிகவும் சிரமமான விஷயம். கப்பலின் இரண்டு "டெக்"க்கும் சந்திக்கக் கூடிய இடத்திலிருந்து இரண்டு டிக்கெட் பரிசோதகர்கள் ஆளுக்கொரு வழியில் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய வலையில் இவர் சிக்கி விடுவார். பிடித்து அழைத்துக் கொண்டு சென்றால், அவர்கள் என்னவெல்லாம் செய்வார்கள் என்று தெரியாது. குடித்து போதையில் இருக்கும் அந்த முரட்டுத்தனமான மனிதர்கள் கேப்டனின் அறைக்குள் அடைத்து வைக்கவோ, அடுத்த துறைமுகத்தில் இறக்கி விடவோ செய்யலாம். இரண்டில் எது நடந்தாலும் கஷ்டம்தான்.''

இன்னொரு மாணவன் முன்னோக்கி நகர்ந்து வந்து சொன்னான்: "நான் ஒரு வழியைக் கண்டிருக்கிறேன். கிழக்கு பக்க "டெக்"கில் பயணிகள் குறைவாக இருப்பார்கள். அங்கு டிக்கெட் பரிசோதகர் "டெக்"கின் பகுதியைக் கடந்து சென்ற பிறகு, நான் வந்து கூறுகிறேன். அப்போது இவர் என்ஜின் அறைக்குள் போகட்டும். (கப்பலின் மத்தியில் எஞ்ஜின் அறை இருக்கிறது). இரண்டு "டெக்" குகளையும் இணைத்துக் கொண்டு ஒரு இடைவெளி இருக்கிறது. அங்கு யாரும் நுழைய முடியாது. எனினும், காரியத்தைச் சாதிக்க அதுதான் வழி. அங்கு சென்று ஃபயர்மேனிடம் கொஞ்சம் நெருப்பு வேண்டும் என்று கேட்க வேண்டும். அவர் திட்டி, வெளியே போகும்படி கூறுவார். அப்போது கிழக்குப் பக்க வாசல் வழியாக கிழக்கில் இருக்கும் "டெக்"கிற்குள் நுழைந்து தப்பித்துவிட முடியும்.''

அப்படிச் செய்வது என்று நாங்கள் தீர்மானித்தோம். நான் மேனனிடம், அவன் நடிக்க வேண்டிய பகுதியைத் தெளிவாகச் சொல்லிக் கொடுத்தேன். டிக்கெட் பரிசோதகர் கிழக்குப் பக்க வாசலின் எல்லையைக் கடந்து போய் விட்டார் என்று அந்த மாணவன் வந்து

கூறியவுடன், நாங்கள் மேனனின் கையில் ஒரு பீடியைக் கொடுத்து அவனை எஞ்ஜின் அறைக்குள் தள்ளி விட்டோம்.

எங்களுடைய நோக்கம் சரியாகவே செயல்பட்டது. எஞ்ஜின் அறையில் கரி புரண்ட ஒரு உருவம் மேனனை என்னவோ கூறியது. இந்தியில் கூறியதால், மேனனுக்கு எதுவும் புரியவில்லை. இறுதியில் அந்த உருவம் நிலக்கரி கரண்டியை எடுத்து தூக்கி மேனனை நோக்கி நெருங்கியபோது, மேனன் யாரும் கூறாமலேயே கிழக்கு வாசலுக்குள் பாய்ந்து தப்பித்து விட்டான். அங்கு இருந்த டிக்கெட் பரிசோதகர், சோதனை செய்து முடித்து பத்து நிமிடங்களுக்கு முன்பே அந்த இடத்தை விட்டுச் சென்றிருந்தார்.

மறுநாள் பொழுது விடிந்தது. கடலின் நடுவில் பிரதிபலித்த புலர் காலைப் பொழுதின் வெளிச்சத்திற்கு ஒரு தனிப்பட்ட புதுமை இருந்தது. சிறிது நேரம் சென்றதும், பம்பாய் துறைமுகம் முன்னால் தெரிய ஆரம்பித்தது. மிகப் பெரிய கட்டிடங்களும், கம்பெனிகளின் மிக உயரமான கட்டிடங்களும், மில்களின் புகைக் குழாய்களும் அருகில் தெரிய ஆரம்பித்தவுடன், வார்த்தைகளால் கூற முடியாத ஒரு ஆச்சரியமும் பெருமையும் என் இதயத்தில் பெருகி வந்தது. ஆனால், நாராயண மேனனின் இதயத்தில் ஒரே ஒரு உணர்ச்சிதான் இருந்தது- பயம்.

நான் நண்பர்களிடம் கேட்டேன்: "இனி பம்பாய் துறைமுகத்திலிருந்து இவரை தப்பிக்க வைப்பதற்கு என்ன வழி இருக்கிறது?.''

"அது சிரமமான விஷயமில்லை...'' ஒரு மாணவன் சொன்னான்: "இவருடைய கையில் லக்கேஜ் என்று எதுவுமில்லையே! கப்பல் நின்றவுடன் நீங்கள் வெளியே செல்ல வேண்டும். புக்கிங் அலுவலகத்திற்குச் சென்று இரண்டு பார்வையாளர்கள் டிக்கெட்கள்

வாங்கிக் கொண்டு திரும்பவும் கப்பலுக்கு வந்தால், இவரைக் காப்பாற்றி விடலாம்.''

"அப்போது என்னுடைய பொருட்களை வெளியே எங்கே வைப்பேன்?'' நான் கேட்டேன்.

"நாங்கள் யாராவது பத்திரமாகப் பார்த்துக் கொள்வோம்'' மாணவர்கள் கூறினார்கள்.

அந்த தந்திரச் செயலை நான் நாராயண மேனனிடம் சொன்னேன். கப்பல் துறைமுகத்தின் "டெக்"கில் போய் நின்றது. நாரயண மேனன் என்னைத் தனியாக அழைத்தான். தன்னுடைய வேட்டியின் முனையிலிருந்த ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து என்னுடைய கையில் தந்தான். "இது நான் மாற்றாமல் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் இறுதிக் காசு. ஒருவேளை, கப்பலின் டிக்கெட் பரிசோதகர்கள் என்னை பரிசோதித்தால் இதை எடுத்துக் கொண்டு போய்விடுவார்கள். அதனால் இது உங்களிடம் இருக்கட்டும். நீங்கள் செய்யும் உதவிகளை நான் மறக்க மாட்டேன்'' அவனுடைய கண்களிலிருந்து நீர் வழிந்தது. அவன் ஒரு குழந்தையைப்போல அழ ஆரம்பித்தான்.

என்னுடைய மனம் மிகவும் இளக ஆரம்பித்தது. அந்த மாணவன் மீது சகோதரன்மீது பிறக்கக் கூடிய ஒரு அன்பும் இரக்கமும் எனக்கு தோன்ற ஆரம்பித்தது. நான் அவனைச் சமாதனப்படுத்தினேன்: "கால் மணி நேரத்தில் திரும்பி வருகிறேன்'' என்று மட்டும் கூறிவிட்டு, விடை கூட பெற்றுக் கொள்ளாமல் நான் வெளியே சென்றேன்.


கப்பல் நின்றவுடன் என்னுடைய நண்பர்கள் எல்லாரும் ஆரவாரம் உண்டாக்கியவாறு வெளியேறி பல வழிகளிலும் சிதறிக் காணாமல் போனார்கள். சுங்க அதிகாரிகள் என்னுடைய பெட்டிகளையும் சுமைகளையும் கூர்மையாக சோதனை செய்து முடிப்பதற்குச் சற்று

நேரம் ஆனது. சுங்க இலாகா கட்டிடத்தை விட்டு வெளியே வந்தபோது, என்னுடைய பொருட்களை எங்கே வைப்பது என்று தெரியாமல் நான் தவித்தேன். எது எப்படி இருந்தாலும், பார்வையாளருக்கான டிக்கெட் வாங்குவது என்று தீர்மானித்து, நான் புக்கிங் அலுவலகத்தை நோக்கிச் சென்றேன்.

"ஒரு மணி நேரம் ஆனபிறகுதான், பார்வையாளருக்கான டிக்கெட் கொடுப்போம்'' என்று அதற்குள்ளிருந்து பதில் கிடைத்தது.

நான் காத்திருப்பது என்று தீர்மானித்தேன். முக்கால் மணிநேரம் ஆன பிறகு, கப்பலில் என்னுடைய நண்பர்களில் ஒருவன் ஒரு சிறிய பெட்டியுடன் அந்த வழியே வந்தான். நாராயண மேனனை எஞ்ஜின் அறையின் வழியாகக் காப்பாற்றிய வித்தையைச் சொல்லித் தந்த அந்த இளைஞன்.

அவன் என்னைப் பார்த்ததும், "ஹலோ மிஸ்டர்... உங்களுடைய நண்பர் தப்பித்து விட்டாரா?'' என்று கேட்டான்.

நான் எல்லா விஷயங்களையும் அவனிடம் சொன்னேன்.

"சரி... பொருட்களை நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் இரண்டு பார்வையாளர்களுக்கான டிக்கெட்டுகளை வாங்கி, நேரம் வந்ததும் கப்பலில் சென்று பாருங்கள்.''

ஒரு மணி நேரம் ஆனவுடன், நான் இரண்டு டிக்கெட்டுகளை வாங்கிக் கொண்டு கப்பலுக்குள் நுழைந்தேன். அங்கு ஒரு மனிதப் பிறவியும் வெளியே தெரியவில்லை. ஒன்றிரண்டு கூலி வேலை பார்ப்பவர்கள் மட்டும் ஒரு மூலையில் தூங்கி வழிந்து கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். நான் கப்பல் முழுவதும் சோதித்துப் பார்த்தேன். நாராயண மேனன் இருப்பதற்கான ஒரு சிறிய அடையாளம்கூட அங்கு எந்த இடத்திலும் இல்லை.

ஏமாற்றத்துடன், கவலையுடன், பதைபதைப்புடன் நான் திரும்பி, என்னுடைய பொருட்களும் நண்பனும் இருந்த இடத்திற்கு வந்தேன். என்னுடைய பொருட்களோ அந்த "உதவி செய்வதில் விருப்பம் கொண்ட" கர்நாடகத்தைச் சேர்ந்த மாணவ நண்பனோ அங்கு இல்லை. நான் பதைபதைப்புடன் பல இடங்களையும் போய் பார்த்தேன். ஒரு பிடியும் கிடைக்கவில்லை- இன்று வரை.

பொருட்கள் மட்டுமே போய்விட்டன என்ற ஒரு சமாதானம் எனக்கு உண்டானது. பணத்தை என்னுடைய கோட் பாக்கெட்டிற்குள் பத்திரமாக வைத்திருந்தேன். அதனால் சிறிதும் அறிமுகமில்லாத அந்த நகரத்தில் பட்டினி கிடந்து கஷ்டப்பட வேண்டிய நிலை வரவில்லை என்பது மட்டுமே...

ஆமாம்... அந்த சம்பவங்கள் நடந்து எட்டு வருடங்களாகிவிட்டன. இன்று வரை நாராயண மேனனைப் பற்றிய எந்தவொரு தகவலும் எனக்குக் கிடைக்கவில்லை. பம்பாயில் பல மாதங்கள் நான் அவனைத் தேடிப் பார்த்தும், ஒரு பலனும் உண்டாகவில்லை.

அவனுக்கு என்ன நடந்தது? பல நேரங்களிலும் அந்தக் கேள்வி என்னை கவலைக்குள்ளாக்கியிருக்கிறது. கப்பல்காரர்கள் அவனைக் கொண்டு போய் சிறையில் அடைத்திருப்பார்களோ? இல்லாவிட்டால், வெறுமனே விட்டிருப்பார்களோ? அப்படி எதுவும் இல்லையென்றால், விரக்தியின் காரணமாக அவன் ஏதாவது செய்யக் கூடாததைச் செய்திருப்பானோ? எதையும் தீர்மானிக்க முடியவில்லை. ஒருவேளை அவன் இப்போதும் ஒரு நல்ல நிலையில்- ஏதாவது பெரிய நகரத்தில்- பம்பாயிலே கூட- ஒரு உயர்ந்த நிலையில் இருந்து கொண்டிருக்கலாம். எது எப்படியோ, இந்தக் கட்டுரையை அவன் வாசிக்க நேர்ந்தால், அவனுக்கு ஒரு ரூபாய் கடன்பட்டிருக்கும் ஒரு மனிதன் மலபாரில் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்பதையும், அந்த மனிதன் இன்றைய கப்பல் பயணத்தின் அனுபவங்களை இப்போதும் மனதில் நினைத்துப் பார்த்து

ரசிப்பதும் கவலைப்படுவதும் உண்டு என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.